-மேகலா இராமமூர்த்தி

உழைப்பின் உயர்வை உலகுக்குணர்த்தும் உழைப்பாளர் சிலையைக் கலைநயத்தோடு படம்பிடித்து வந்திருக்கின்றார் திரு. வெங்கட்ராமன். எம். இதனைப் படக்கவிதைப் போட்டிக்குத் தெரிவுசெய்து தந்திருக்கின்றார் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவ்விருவருக்கும் என் நன்றி உரித்தாகுக!

”காடுகொன்று நாடாக்கிக் குளந்தொட்டு வளம்பெருக்கியும்
கல்பிளந்து மலைபிளந்து கனிகள்வெட்டித் தந்தும்
ஆலைகள் மலர்ச்சோலைகள் கல்விச்சாலைகள் அமைத்தும்
நாட்டையும் வீட்டையும் நலமடையச் செய்வோர் உழைப்பாளிகள்!”

அவர்தம் பெருமையை மேலும் தம் கவிதைகளில் விரித்துரைக்கக் கவிஞர்களை அன்போடு அழைக்கிறேன்!

”பாட்டாளிக் கூட்டத்தால் உருவானோரே பெரும் பணக்காரர்கள்! ஆகவே வீட்டுக்கு வீடு கூட்டாய் உழைப்போம்; சோம்பல் எனும் கேட்டை ஒழிப்போம்!” என்று பாட்டாளிகளின் பலத்தைத் தன் பாட்டால் விளக்குகின்றார் ஏ.ஆர். முருகன் மயிலம்பாடி.

பாட்டாளிகளே பலம்!!!!

எட்டாத தூரமந்த இமயமலை _ அதைக்
கிட்டால கொண்டுவர தொடர்ந்து உழை!
பட்டாளத்தார் பணியில் நாட்டின் எல்லை
கெட்டியாயிருப்பதினால் ஏது தொல்லை!
வெட்டி முறித்தபின்பு கரம் விரித்தால்
கொட்டிக்கிடக்கிறது கமல வண்ணம்!!
சட்டங்களைப் போடுகிற அரசாங்கமும்
சிட்டாயாயுழைப்போரால் பேறுபெரும்!
விட்டாத்திரும்பிடாத நேரங்காலத்தை
முட்டாளாயில்லாமல் செயலாற்றினால்
துட்டு ஏராளம் சம்பாத்தியம் பெற்று
இட்டு நிரப்பிடலாம் இல்லச் சுமையை!!
எட்டும் அறிவினில் ஆணும்பெண்ணும்
கூட்டாயியங்கையிலே வெற்றிபெறலாம்!
காட்டைவெட்டி நிலமாக்கிப் பயிரிடுவோர்!
ராட்டைநூத்துத் தறியாலே நெய்திடுவோர்!
போட்டிபோட்டுத் தொழிற்சாலைதோறும்
ஈட்டுகிற பொருள்களை அள்ளிவழங்கி
நாட்டுக்கு வளம்தரும் தொழிலாளிகள்!!
டாட்டா பிர்லாக்கள் நிறையப் பேர்கள்
பாட்டாளிக் கூட்டத்தால் உருவாகுவார்!!
ஓட்டாண்டி இல்லாத உலகமைப்போம்
வீட்டுக்கு வீடு உழைப்பாலுயர்வோம்!!!
சூட்டிடுவோம் மகிழ்வினை மக்களுக்கே!

”ஊழலை ஒழிக்க ஏற்றவழி உழைப்பவர் குரலை மதிப்பதே! உழைக்கும் கரங்கள் மன்பதைக்குக் கிடைத்த வரங்கள்!” என்று உழைப்பாளிகள் புகழ்பாடுகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

உழைக்கும் கரங்கள்…

உழைக்கும் கரங்களை உழைக்கவிடு
உதவிக் கரங்களாய்ச் சேர்ந்துவிடு,
மழையைத் தந்திடும் மேகம்போல்
மன்பதை காத்திடும் கரங்களவை,
உழைப்பைச் சுரண்டிடும் கூட்டத்தினர்
உண்மை நிலையைக் காட்டிவிடு,
உழைப்பவர் குரலதை மதித்திருந்தால்
ஊழல் உலகினில் வாராதே…!

”வாய்ப் புரட்டை வெட்டிப்போடு! ஊழல்செய்யும் திருடர்களைத் தட்டிக்கேளு! உழைக்கும்வர்க்கம் ஆளவும், ஆளும்வர்க்கம் உழைக்கவும் வழிதேடு!” என்று நடைமுறைப்படுத்தவேண்டிய நல்ல மாற்றங்களைத் தன் கவிதையில் பட்டியலிடுகின்றார் திருமிகு. அவ்வைமகள்.

பெயர்த்துப்போடு புரட்டிப்போடு புரட்டியதை வகுத்துப்போடு
வகுத்துப்போட்ட தத்தனையும் வாரிவாரி நிரவிப்போடு – நீ
மேடறுத்துச் சமனம் நாட்டு! மேடறுத்துச் சமனம் நாட்டு!வீழ்ந்தவற்றை நிமிர்த்திப்போடு நிமிர்ந்தவற்றைப் பதித்துப்போடு
பதிப்புகளை மாற்றியாக்கி ஏழை மதிப்புயர வாய்ப்புச் சேரு – நீ
வாய்ப்புரட்டை வெட்டிப்போடு! வாய்ப்புரட்டை வெட்டிப்போடு!
தளங்கள் போட்டுக் களங்கள் கூட்டு களங்களிலே மக்கள் கூட்டு

கூட்டம் போட்டு அத்தனைக்கும் காட்டமான திட்டம்போடு – நீ
திட்டங்களை முழுச் செயலிலாக்கு! திட்டங்களை முழுச் செயலிலாக்கு!
உழைப்பவர்க்கு ஊதியத்தை உண்மையாக வழங்கலாக்கு

வழங்கலிலே ஊழல் செய்யும் திருடர்களைத் தட்டிக்கேளு – நீ
தட்டும் தடைகள் இடித்துப்போடு! தட்டும் தடைகள் இடித்துப்போடு!
வாட்டம் போக்கு கட்டம் போக்கு வேலைவாய்ப்பு பெருகலாக்கு

பெருத்தப் பணமுதலைகளை, ஈனர்களை வளைத்து வீழ்த்து – நீ
வீழ்த்தும் சூழ்ச்சிவலை சுருட்டி வீசு! வீழ்த்தும் சூழ்ச்சிவலை சுருட்டி வீசு!
அரசியலைப் புரட்டிப்போட்டு புரட்டி அதை நிறுத்திப்போடு
நிறுத்திப்போட்டு உழைக்கும் வர்க்கம் ஆளுமாறு மாற்றிப்போடு – நீ
ஆளவந்தார் உழைக்கக் கோரு! ஆளவந்தார் உழைக்கக் கோரு!
எஃகு உடல் வைரமனம் மானுடர்க்கு நல்பாடம் காட்டு
காட்டுமாறு கட்டுடலை வாட்டமாக வளர்க்கக்காட்டு – நீ
வளர் நலவாழ்வை வளமையாக்கு! வளர் நலவாழ்வை வளமையாக்கு!
பாறைகாத்து தரையைக் காத்து, மேகம் காத்து, மாரி காத்து

மாரிசேரும் நீர் நிலைகள் காத்து – நீ
காத்துத் தூய்மை பாதுகாப்புச் சேரு! காத்துத் தூய்மை பாதுகாப்புச் சேரு!

தன் பிறிதொரு கவிதையில், ”உழைப்பின் கானமே உதிர கானம்! உழைப்பாளர் உறுதிமுன்னே பெரும்பாறையும் பணியுது; கருங்கடலும் கைத்தட்டுது! இத்தகு உழைப்பாளர் வாழ்வுயர உதவிகள் புரிந்திடுவோம்!” என்று நன்மொழிகள் பகர்ந்திருக்கின்றார் அவர்.

ஏஏய்———! ய்—–ஏஏய் –! ம்ம்ம்ம்ம்!
இன்னும் போடு! வலிடா! இசுடா! டேய் நிறுத்து!

உழைப்பின் கானம் உதிர கானம்
வேர்வை ஊற்றம் நாற்றம் பாடுது
பாரம் தூக்குமவர் கானம்தானே
பாரைக்கூட நகர்த்தி இயக்குது

உடலின் உரமும் மனதின் பலமும்
இணைந்தசைந்திசைந்தோர் அபிநயம்
எலும்பு தசை நரம்பு சிரைதமனி
புருவ கண்நெளிவின் சுருதிலயம்

நெம்புகோல்கள் நெட்டித்தள்ள
அவர் மூச்சு சுவாசம் தேங்குது
விலாக்குள்ளே முணுக்குமிதயம்
நொடித்தவாறுயிரும் சேர்ந்தியங்குது

பெரும்பாறையங்கே பணியுது
பெருங்கடலும் கைதட்டி மகிழுது
சேர்ந்தியக்கும் அவர் தவநிலையைக்
கருடன் சேர்ந்து வந்து வணங்குது

அமர்ந்தவாறு பணமுதலையங்கே
பல குட்டிபோட்டுப் பெருக்குது
சிம்மாட்டு கோவணாண்டியாக இவர்
மறைவர் நீதியெங்கிருக்குது?

உழைப்பு மட்டும் மூலதனம்
உடைக்கலமாய்ப் போகவிடுவதா?
உழைக்கும் மாந்தர் வாழ்வினிக்க
மேலும் பெருக்கிடுவோம் உதவிகள்!

”வாழ்வில்சூழ் தீவினைகளை ஊழ்வினை என்றெண்ணி மருளாமல், உடலுழைப்பால் உயரவேண்டும்! புல்லர்களின் பேச்சால் பொன்னான வாழ்வை இழக்கக்கூடாது” என்று உழைப்பின் உயர்வைச் சிறப்பாய் உரைக்கின்றார் பெருவை திரு. பார்த்தசாரதி.

உழைப்பின்றி இல்லை உயர்வு..!

சூழ்ந்திருக்குது நம்மைச் சுற்றி வட்டமாய்
……சூழ்ச்சி வலைகளெங்கும் சிதறிக் கிடக்குது..!
வாழ் வனைத்தும் துன்பங்கள் வினைகள்
……வஞ்சனை நிறைந்த வழியாகவே தெரியுது..!
ஊழ்வினை இதெல்லாம் என்று நினையாது
……உடலுழைப்பால் உயரும் வகை அறிவீர்..!
ஏழ்பிறப்பும் மனிதனாய்ப் பிறந்து வாழ்வில்
……ஏற்றமுற நித்தமுமே உழைக்கமுன் வருவீர்..!

இரும்புக் கரங்களால் உழைத்து உருவாகி
……எழுந்து நிற்கிறது விண்முட்டும் கோபுரம்..!
இருநூறடிக்கு மேல் எண்பதாயிரம் கிலோ
……எடையை உழைப்பிலே காணும் அதிசயம்..!
அரும் பெரும் உழைப்பால் உருவானது
……ஆயிர மாண்டாக அதிசயமாய்த் திகழ்கிறது..!
பெரு வுடையார் கோவிலின் புகழாலதற்குப்
……பெரிதாய் உழைத்த வரின்றும் வாழ்கிறார்..!

எல்லாமிங்கே இனாமாகக் கிட்டும் போது
……எதற் குழைக்க வேணுமென எண்ணாதே..!
புல்லர்களின் பயனற்ற பேச்சில் மயங்கிப்
……பொன்னான வாழ்வையும் நீஇழந் திடாதே..!
பொல்லாப்பு யாரிடமும் வேணாம் தம்பி
……பொறுப்பாக நடந்து கொள்ள முயலுவாய்..!
நல்லொழுக்கம் ஒன்றுதான் நாமுயர வழி
……நாட்டில் இன்றிது முக்கியத் தேவையப்பா..!

பாட்டாளியின் உழைப்பே முதலாளியின் உயர்வு! ஆதலால் உழைக்கும் கரங்களே! நீங்கள் உங்கள் உரிமைக்குக் குரல்கொடுங்கள்! வெற்றியைப் பெற்றிடுங்கள்!” எனப் பாட்டாளி மக்களின் உழைப்பைத் தன் கவிதையில் உருக்கமாய் உரைத்திருக்கின்றார் திரு. ரா.பார்த்தசாரதி. 

பாட்டாளி மக்கள்!

நான்குபேர் சேர்ந்து கல்லை நகர்த்துவது
நம் மனதில் அவன்படும் துன்பத்தைக் காண்கின்றோம்
மூச்சைப் பிடித்து கல்லை நகர்த்துவதும் மிக கஷ்டம்
நான்காம் நெம்புகோல் கொண்டு நிமிர்த்துவதும் தெரிகின்றதே
அவன் உழைப்பை உறிஞ்ச சமுதாயமும் சற்றே நினைப்பதில்லை
உழைப்பிற்கேற்ற ஊதியமும் அவன் என்றும் பெறுவதில்லை
பாட்டாளி உழைப்பே முதலாளியின் உயர்வு
பணத்தாலே உழைப்பை உறிஞ்சும் ஒரு கூட்டம்
படிப்பு அறிவில்லாத பாட்டாளி என்றும்
நேரம் காலமின்றிக் கடுமையாக உழைக்கின்ற கூட்டம்
உழைத்தால்தான் ஊதியம் பெறமுடியும்

உழைப்பாளியின் வேர்வைக்கு என்ன பலன்?
[…]
அறிவுத்திறன் கொண்டு உழைப்பவனுக்கு ஊதியம் அதிகம்

உடல் உழைப்பைக் கொண்டு உழைப்பவனுக்கோ ஊதியம் குறைவு
இமயமலைப் பனிமலையில் நின்று
அயல்நாட்டு ஊடுருவலைத் தடுத்து நிறுத்தும்

பட்டாளத்துப் பாட்டாளி மக்களையும் நினைவு கொள்ளுங்கள்
நம் பசியைத் தீர்க்கும் விவசாயியும் ஒரு பாட்டாளிதான்

அவன் அருமை தெரியாமல் நசுக்க முற்படுவதும் அரசுதான்!
உழைக்கும் கரங்களே, உரிமைக்குக் குரல் கொடுங்கள்

அடக்குவோரை எதிர்த்துநின்று வெற்றி வாகை சூடுங்கள்! 

”விதிக்கே விதி செய்த தேசம்; இன்று விக்கித் திணறுவது மோசம்! கறுப்புப்பணமே நாம்கண்ட வளர்ச்சி; அதைவைத்துச் செய்கிறாரே வெற்றுப் புரட்சி!” என்று நாட்டுநடப்பைத் தன் கவிதையில் போட்டுடைத்திருக்கின்றார் திரு. சத்தியமணி. 

தடைக்கல் த‌டைகளைப் புறம் சாய்ப்போம் – அது
சாயாதிடின் உடைத்தெறிவோம்!
உடைகல் உடைகளை உடன்கிழித்தால் – அது
கரையும்வரை வியர்த்துழைப்போம்!

கரிகள் பூசி நமைச் சேர்ப்பார் – பெரும்
வரிகள் விதித்து நலம் கேட்பார்
நரிக ளாளும் இந்த நாட்டில் – எங்கு
நியாயம் தர்மங்களைப் பார்ப்பார்?
உழைக்கும் சிலையதற்கு மாலை, பின்னர்
ஊழல் அணிவகுப்பில் சாலை!
விதிக்கும் விதிசெய்த தேசம் – இன்று
விக்கித் திணறுகிற மோசம்!

வானங் கறுக்கவில்லை வறட்சி – சிலர்
மனத்தில் கற்பழிக்கும் உணர்ச்சி!
கறுப்புப் பணக்குவியல் வளர்ச்சி அதைக்
காட்டி நடத்தும் இவர் புரட்சி!
தனக்குத் தேவை வருமானம் அதை
மடக்கிப் பிடுங்கும் அவமானம்!
கிடைத்த பேர்க்கு வெகுமானம் – அது
கிட்டாவிடின் ஏது பிரமாணம்?

”ஏர்முனைக்கு நேர் இங்கே எதுவுமே இல்லை; வேளாண்மை இல்லையேல் வாழ்வே இல்லை. ஆதலால் கனிவுமிக்க மனிதராய்க் கழனிகளில் பயிர்த்தொழில் செய்து உயிர்கள் காப்போம்” என்று உழவின் பெருமையை உரக்கப் பேசுகின்றார் திரு. சி. ஜெயபாரதன். 

ஏர் முனைக்கு நேரில்லை

அங்கிங்கு எனாதபடி எங்குநாம்
நோக்கித் தொழிற்துறைச்
சாதனங்களைச்
சீர்தூக்கிப் பார்த்தால்
ஏர் முனைக்கு நேராக
எதுவுமே இல்லே!
வேளாண்மை இல்லையேல்
வாழ்வே இல்லை
தலை அறுக்கும் கூரிய
வாளை எல்லாம் நெளித்து
ஏர் முனை ஆக்கு!
வேலை எல்லாம் வளைத்து
ஏர் முனை ஆக்கு!
மடிவெடித் தட்டி அப்பாவிக்
குடிகளைத் துண்டாக்கும்
மூர்க்கரைப் பற்றிச் சிறையில்
சேர்க்காது,
ஏர்முனை பிடித்து, நிலம்
உழுது பயிரிட்டு
உயிர்களை வளர்க்கும்,
கனிவு மனிதராய் ஆக்கு!
இனிமேல் அதுவே
பணி நமக்கு! பாசம் நமக்கு!
பாதை நமக்கு!

உழைப்பாளர் சிறப்பை உயரிய வகையில் விதந்தோதியிருக்கும் கவிஞர்கள் குழாத்துக்கு என் கனிவான பாராட்டு!

இவ்வாரத்தின் சிறந்த கவிதையாய்த் தெரிவுசெய்யப்பட்டிருப்பது இனி…

வெற்றியின் வேதம்

முடிவதில்லை எதுவும் முயலாமல் தன்னாலே
முடியாததில்லை எதுவும் முயன்றாலே
முடியுமென்று முன்னேறு – உன்னாலே
முடிந்து உடையும் தடைகள் பல பின்னாலே

கடமையை மட்டும் செய் கவனமாய்
கடுமையின் கொடுமைகள் கட்டளையிடும்
கடைசி வாய்ப்பாயினும் கைவிட்டுவிடாதே
கடினமாய்ப் போராடி வாழ்வை உனதாக்கி உயர்வுகொள்!

வெம்மை காட்டும் சுடுபொழுதில் உடல்
வெளியேற்றிய உப்புக்கரிக்கும் வியர்வைக்கிடையில்
வளைந்த முதுகின் வலிமையால்
விளைந்த வெற்றியே உழைப்பின் பெருமை!

காடு மலை மேடு எல்லாம் உன்
கடும் உழைப்பால் காட்சிபெறும்!
கழனியாய், காய் கனி விளையும் சோலையாய்க்
காலம் கடந்தும் நிற்கும் உன் உழைப்பு வெற்றி மாலையாய்!

நெம்புகோல் தத்துவமே வாழ்க்கை
தெம்புகொண்டு எழுந்து நட நம்பிக்கையோடு!
நம்பு நீ ஒரு நெருப்புக்கோள் – சிற்றுளி
அம்புகள் பிளக்கும் பெருமலைப் பாறைகள் ஏராளம்!

உழைத்துக் களை! உடல் இளைக்க உழை! யாருக்கும்
சளைத்தவனல்ல நீ – உன்னால் முடியாது என்றதை எல்லாம்
விளைவித்துக் காட்டு என்னாலும் முடியும் என்று – ஓங்கி உயர்ந்த உழைப்பாளர் சிலை போதிக்குமே உனக்கு வெற்றியின் வேதத்தை!

”நெம்புகோல் தத்துவமே வாழ்க்கை! தெம்புகொண்டு போராடினால் உப்புக் கரிக்கும் வேர்வைக்கிடையில் வெற்றிகள் வேர் வைக்கும்! ஓங்கி உயர்ந்த உழைப்பாளர் சிலை வெற்றியின் வேதத்தை மேதினிக்குப் போதிக்கும்!” என்று உழைப்பினால் கிட்டும் உறுதிகளைச் சுவைபடத் தன் கவிதையில் இழைத்துத் தந்திருக்கும் திரு. சு. பாஸ்கரனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞர் என அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.