( எம் . ஜெயராமசர்மா …. மெல்பேண் …. அவுஸ்திரேலியா )

பொருள்தேடும் நோக்கத்தில் புதைகுழிகள் தோண்டுகிறார்
வருவாயை மனமிருத்தி மாயம்பல செய்கின்றார்
இரைதேடும் விலங்குகள்போல் இரக்கமதை அழிக்கின்றார்
அளவின்றி ஆசைப்பட்டு அனைத்தையுமே அள்ளுகிறார் !

ஆட்சியிலே அமர்ந்திருப்பார் அறந்தொலைத்து நிற்கின்றார்
அதிகாரம் இருப்பதனால் அலட்சியமாய் நடக்கின்றார்
காவல்செய்யும் துறையினரும் கடமையினை மறக்கின்றார்
காலந்தோறும் மக்களெலாம் கவலையிலே உழலுகின்றார் !

பொதுநோக்கம் எனும்நோக்கை பொசுக்கியே விடுகின்றார்
பூமியின் வளமனைத்தும் காசாக்க விளைகின்றார்
மேடையேறி வாய்கிழிய விதம்விதமாய் பேசுகிறார்
பாதகத்தை மனம்முழுக்க பதுக்கியே வைக்கின்றார் !

சாதிகூறிச் சாதிகூறி தமக்குலாபம் தேடுகிறார்
சமயத்தை பலமாக்கி தன்பக்கம் ஆக்குகின்றார்
நீதிகூட நடக்காமல் கொடுக்கின்றார் பணத்தையெல்லாம்
நிம்மதியை அவர்பெற்று நிம்மதியை அழிக்கின்றார் !

சாமியினை நம்பிநின்று சனங்களெல்லாம் அழுகின்றார்
சாமிவரம் கொடுப்பதிலே தாமதமே ஆகிறது
ஆர்வந்து காத்திடுவார் என்றுமக்கள் நோக்குகிறார்
ஆண்டவனே மக்களது அவலக்குரல் கேட்கலையா !

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “அவலக்குரல் கேட்கலையா !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *