எம் மண்ணை எங்கே புதைப்பாய் …
தொலைக்காட்சியில்
தொலைந்து போன
சொந்தங்களுக்கு
பதினோரு வயது
பாலசந்திரனின்
மடல்….
எம் குலம்
எம் பிறப்பு
மானமும் வீரமும்
மண்டியிடாது
பகைவனிடம்…
எம் வீரம்
பீரங்கி செல்களுக்கு
மார்பு காட்டும்….
நாங்கள்
போராளிகள்
மண்ணிற்கும்
மானத்திற்குமான
போராட்டம்…
சொந்தமென்று
நினைத்ததுண்டு
உங்களை
நேற்றுவரை…
சிங்களக் காடையர்கள்
சிதைத்தார்கள்
சிரித்துக் கொண்டிருந்தீர்கள்
எம் இனத்தின் எதிரிகளாய்…
இதுவா
இனமானம்?
இதுவா
இனப்பற்று?
துரோகம்
இனத்துரோகம்…
கல் தோன்றி
மண் தோன்றாக் காலத்தே
தோன்றிய தமிழினம் – ஈழத்தோடு
இறுதிப் பயணம்…
தமிழக மக்களே…
எம் இனம்
எம் மக்களென்ற
வாய்ப் பேச்சு
வீரத்தை நிறுத்துங்கள்
மரணத்திலும்
என் ஆன்மா
மன்னிக்காது
மரணத்தின் முன்
மண்டியிடவில்லை
மரணம் தான் என்னிடம்
மண்டியிட்டுருக்கிறது
போராளியின் பிள்ளை
வீராதி வீரன்
என் மார்பில்
துப்பாக்கித்
தோட்டாக்கள்
உங்கள்…?
வீரன் என்பதை
என் சாவு சொல்லும்
நீங்கள்…
கோழை என்பதை
வரலாறு சொல்லும்…
மண்ணைக் காப்பதற்காக
இனமானத்தைக் காப்பதற்காக
மரணத்தை முத்தமிட்டு
மண்ணில் புதைந்தோம்
மண் அபிமானிகளாய்….
அபிமானமின்றி
அலைகழிந்தவர்களாய்
பண வெறிகொண்டு
பண்பிழந்து
பக்குவமிழந்து
தரணியில்
பவனிவரும்
பதர்களே….
கவனமாக இருங்கள்
உங்கள் மண்ணும்
களவாடப்படும்…
சாபமல்ல…
சத்தியம்…
வரலாற்றின் மறுபக்கம்….
வரலாற்றின் அடையாளமாய்
இறுதியாய்
சிங்களக் காடையனே
என்னை மண்ணில் புதைப்பாய்
எம் மண்ணை
எங்கே புதைப்பாய்
பி. பாலசந்திரன்
புலவர் இரா.முரளி கிருட்டினன்,
உதவிப்பேராசிரியர்,
தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி,
திருச்சிராப்பள்ளி