-த. சிவக்குமார்

கருத்தாடலில் நாம் பயன்படுத்தும் உரைத்தொடர்கள் கேட்போர் அல்லது வாசிப்போருக்கு எத்தகைய நோக்கத்தை அல்லது செயலை உணர்த்த கையாளப்படுகிறதோ அதனையே உரைக்கோவையின் உரைசெயல் எனலாம்.

இவற்றில் மறைமுக உரைசெயல் என்பது ஒரு கருத்தை நேரடியாகக் கூறாமல் பிரிதொன்றன் மூலம் தன் உள்ளக்கருத்தை உணர்த்த முனையும் செயலை மறைமுக உரைசெயல் எனலாம். ஐங்குறுநூற்றுச் செயுள்களில் தோழி, செவிலி மற்றும் நற்றாயிடம் அறத்தோடு நிற்கும் சூழலில் மறைமுக உரைசெயல் நிகழ்த்தித் தலைவியின் காதலை எவ்வாறெல்லாம் வெளிப்படுத்தினாள் என்பதை இக்கட்டுரை ஆய்கிறது

மறைமுக உரைசெயல்

அறத்தொடு நிற்றல் துறைசார்ந்த சில பாடல்களும் வரவுரைத்த துறையில் அமைந்த சில பாடல்களும் மறைமுகமாகக் கருத்தை உணர்த்தும் நோக்கில் அமைந்து கருத்துப் புலப்பாட்டை நிறைவு செய்கின்றன.

நேரடி உரைசெயல்

உரைக்கோவை உருவாக்கத்தில் கருத்தைத் தெரிவிப்போர் கருத்துப் பெறுபவரிடம் நேரடியாகப் பொருள் உணர்த்தும் நோக்கில் அமைக்கும் உரைசெயலை நேரடி உரைசெயல் என்பர்.

தோழி நேரடியாக உரைத்தல்

தலைவியைப் பெண்கேட்டு வரும் சூழலில் தோழி, தலைவியின் காதலை நேரடியாகவே நற்றாய், செவிலித்தாய்க்கு வெளிப்படுத்துவது நேரடி உரைசெயல் வகையில் அமைக்கப்பட்டள்ளது. பொன்னிறமுடைய பூக்கள் விரியும் துறையை உடையவனே நம் தலைவன் என்றும், தலைவியின் மெலிவிற்குக் கடவுள் காரணம் அல்ல தலைவனே என்றும், தலைவனின் பெயரைக் கூறியும் தலைவனுடனான களவுப் புணர்ச்சியினை வெளிப்படுத்தியும் தலைவியின் காதலை வெளிப்படுத்துவதை ஐங்குறுநூற்றுப் பாடல்களில் காணமுடிகிறது.

துறைவன் என் தலைவன்

நொதுமலர் வரவின்கண் தோழி செவிலிக்கு அறத்தொடு நிற்கும் சூழலில் அன்னையே! முன்பு தலைவன் தலைவியைக் கூட்டுவித்த ஊழே மீண்டும் கூட்டுவிக்கும்; மேலும் புன்னை பொன்னிறம் விரியும் பூக்கெழு துறைவனே என் தலைவன். இது அறியாமல் இவர்கள் பெண்கேட்டு வந்தனர் எனும்பொழுது,

அன்னை, வாழி! வேண்டு அன்னை! – புன்னை
பொன்னிறம்
விரியும் பூக்கெழு துறைவனை
என்னை என்றும், யாமே; இவ்வூர்
பிறிது
ஒன்றாகக் கூறும்,
ஆங்கும் ஆக்குமோ வாழிய பாலே!” (ஐங் – 110)

’ஆங்கும் ஆக்குமோ பாலே’ ஊழானது பிரிக்குமோ பிரிக்காது என்று நொதுமலர் வரவைத் தடுக்கும் பொருட்டுத் தலைவியின் காதலை நேரடியாகப் போட்டு உடைத்து விடுகிறாள் தோழி. இங்கு ஊழைக் குறிக்கப் ‘பால்’ என்னும் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளதும் நோக்கத்தக்கதாகும்.

தலைமக்களை ஊழே கூட்டுவிக்கும் எனும் போது,

பால் வரைந்து அமைத்த வல்லது அவர்வயின்
சால்பு
அளந்து அறிதற்கு யாம் யாரோ” (குறுந் – 366) என்கிறது குறுந்தொகை.

அணங்கு அல்ல தலைவன்

தலைவியின் மெலிவுக்குக் காரணம் நீர்த்துறையில் உறையும் அணங்கே காரணம் என்று நினைத்து பூசனை செய்ய முற்பட்டனர். அப்பொழுது தோழி இவள் மெலிவுக்குத் தெய்வம் காரணமல்ல ஒரு மனிதனே காரணம். அவன் தான் அணங்கியது என்கிறாள்.

இதனை,

“…………………………….

கைபுனை நறுந்தார் கமழும் மார்பன்
அருந்திறக்
கடவுள் அல்லன்
பெருந்துறைக்
கண்டு இவள் அணங்கியோளே” (ஐங் – 182)

என்று வெளிப்படையாகவே கூறிவிடுகிறாள். இதில் தலைவன் அருந்திறக் கடவுள் அல்லன் அருந்திறல் கொண்ட மனிதனே என்று தலைவனின் சிறப்பையும் உணர்த்துகிறாள்.

தலைவன் மார்பில் துயில் கொள்ள விரும்புகிறாள்

நொதுமலர் வரவறிந்த தலைவி வருத்தப்பட, அக்காரணத்தை செவிலி வினவுகிறாள். தலைவியின் காதலை உணர்த்தி அறத்தொடு நிற்கும் பொழுது, என் தோழியானவள் மிகுதியான நாணமுடையவள்; மேலும் நின்பால் அச்சமும் கொண்டுள்ளாள். மேலும் அவள் விரும்புவது மலைநாடனின் மார்பில் துயில் கொள்வதையே. நானும் அவள்பால் வருந்தி இதை உனக்கு உரைக்கின்றேன் என்று கூறுகிறாள்.

இது,

“…………………………………………….
ஒலி வெள்ளருவி ஓங்குமலை நாடன்
மலர்ந்த
மார்பிற் பாயல்
தவநனி
வெய்யள் நோகோ யானே” (ஐங் – 205)

என்று சுட்டப்படுகிறது. உனக்கு அஞ்சுவதால் அவள் கூறவில்லை; நான் கூறுகிறேன் என்றாள். இதனை, அகநானூறு 52-வது செய்யுளும் உணர்த்துகிறது.

அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில் என்ற குறளுக்கேற்பத் தலைவியின் செயல் உள்ளது.

நொதுமலர் வரவறிந்த தோழி தலைவி கற்புக்கடம் பூண்டதைச் செவிலிக்கு உணர்த்த,‘இவள் முன்பே பலகாலும் மலைநாடனின் மார்பை முயங்கி இன்புற்றாள். அவ்வாறு முயங்காத நாட்களில் கண்கள் நீர் சொரியும். இதை உணர்ந்து செயல்படுங்கள்  என்று நேரடியாகவே தலைவியின் களவுப் புணர்ச்சியை உணர்த்தி விடுகிறாள்.

இதனை,

“………………………………..
முயங்காது கழிந்த நாள், இவள்
மயங்கு
இதழ் மழைக்கண் கலிழும்” (ஐங் – 220) என்கிறாள் தோழி.

தலைவியின் களவுப் புணர்ச்சியை வெளிப்படுத்தல்

நொதுமலர் வரவின்கண் தலைவியின் காதலை செவிலிக்கு உணர்த்தப் புகும் தோழி இவள் உயிரானது, கான்யாற்று வெள்ளத்தில் மெய்தொட்டுக் காப்பாற்றியவன் பேரொடு சென்றுவிட்டது எனும் பொழுது,

“……………………..
விரவு மலர் அணிந்த வேனில் கான்யாற்றுத்
தேரொடு
குறுக வந்தோன்
பேரொடு
புணர்ந்தன்று – அன்னை இவள் உயிரே” (ஐங் -367)

என்ற தலைவியின் காதலை உணர்த்துகிறாள் தோழி.

இதில் ‘தேரொடு குறுக வந்தான்’என்பதால் முன்பின் அறியாதவன் என்ற பொருளும் இவள் உயிர் அவன் பேரொடு புணர்ந்தது என்பதால் உயிரை மீட்டுத் தந்தவன் என்ற பொருளும் தருகிறது. இச்செய்யுள், இதனை புனல்தரு புணர்ச்சி என்பர்.

வெள்ளத்தினின்று மீட்ட தலைவனை, தலைவிப் புணர்ந்தாள் என்று செவிலியிடம் கூறும் பாங்கை, ‘காமர் கடும்புனல் கலந்தெம் மோடாடுவாள்’(39) என்கிறது கலித்தொகை.

தோழி மறைமுகமாக உரைத்தல்

தலைவியின் மெலிவு கண்டு வருந்திய நற்றாய் அவளுக்கு வேலனைக் கொண்டு வெறியாட்டு நடத்தும்பொழுது தலைவி அறத்தொடு நிற்கிறாள். மேலும், தலைவியின் காதலை நற்றாய் மற்றும் செவிலித்தாய்க்கு அறிவிக்கும் வகையில் தோழி, தலைவனின் தண்ணந்துறை, மலை, கடல், நாடு, களவுப்புணர்ச்சி போன்றவற்றையும் தலைவனுடனான பூத்தரு புணர்ச்சியினை கோங்க மலரோடு தொடர்புபடுத்தித் தலைவியின் காதலை மறைமுகமாக தெரிவிக்கிறாள்.

தலைவனின் நீர்த்துறையை கூறுதல்

நொதுமலர் வரவை அறிந்த தலைவி உணவும் உறக்கமும் இன்றி மெலிய அதுகண்ட செவிலி தோழியை வினவுகிறாள். அப்பொழுது தோழி தலைவியின் காதலை மறைமுகமாகச் செவிலிக்கு உணர்த்த அறத்தொடு நிற்றல் என்ற உத்தியைக் கையாள்கிறாள். அப்பொழுது,

“………………………….
தண்ணந் துறைவன் நல்கின்
ஒண்நுதல்
அரிவைபால் ஆரும்மே” (ஐங் – 168)

என்கிறாள். இதன்மூலம் தண்ணந்துறைவனாகிய தலைவன் அருள் செய்தால் பாலாவது அருந்துவாள். இல்லையெனில் இறந்துபடுவாள் என்பதும் இதன்மூலம் பெறப்படுகிறது. மேலும் தலைவி கொண்ட காதல்நோயின் மிகுதியும் புலப்படுத்தப்படுகிறது.

களவுப் புணர்ச்சியினை கூறுதல்

தலைவியின் மெலிவு கண்டு வருந்தி அவளுக்கு வெறியாட்டு நிகழத்த ஏற்பாடு செய்தனர் செவிலியும் நற்றாயும். அப்பொழுது தலைவியின் காதலை மறைமுகமாக உணர்த்தி வெறியாட்டை தடுத்தற் பொருட்டு,

“……………………….
கழனி ஊரன் மார்பு உறமரீஇ
திதலை
அல்குல் நின்மகள்
பசலை
கொள்வது எவன்கொல்” (ஐங்– 29)

தலைவனது மார்பைத் தழுவி இன்புற்ற பிறகும் இவள்பசலை கொள்வது எதனாலோ? என வினவி மறைமுகமாக அவள் காதலையும் களவில் புணர்ந்த நிலையையும் எடுத்துரைக்கிறாள்.

மேலும், ஐங்குறுநூறு 30-வது செய்யுளும் இதே கருத்தை உணர்த்துகிறது.

தலைவனின் சிறப்பினை எடுத்துரைத்தல்

அறத்தொடு நின்றதற்குத் தலைவன் தலைவியை மணக்காமல் பிறிதொரு பெண்ணை மணந்தால் என் செய்வது என்று ஐயுற்று வருந்திய செவிலியின் குறிப்பை உணர்ந்த தோழி,

“………………. தண்கடற் சேர்ப்பன்
எம்தோள்
துறந்தனன் ஆயின்
எவன்கொல்
மற்று அவன் நயந்த தோளே?”  (மே – 108)

எம்தோளைப் புணர்ந்த சேர்ப்பன் எம்மை விடுத்து மற்றொரு பெண்ணினை மணக்கமாட்டான் என்பதையும், அவ்வாறு மணந்தால் (தோள் துறந்தால்) தலைவி இறந்துபடுவாள் என்பதையும் இதன்மூலம் குறிப்பால் உணர்த்துகிறாள். ‘எவன்கொல் மற்று அவன் நயந்த தோளே’என்பது அத்தோள்கள் என்னாகும், அழியும் என்று மறைமுகமாகச் சுட்டப்படுகிறது.

தலைவனின் கடலைக் கூறுதல்

தலைவியின் மெலிவுகண்டு வருந்திய செவிலி அதற்கு என்ன காரணம் ஏதேனும் நோயுற்றாளோ? என வினவ,

“…………………………….
தண் கடற் படுதிரை கேட்டொறும்
துஞ்சாள்
ஆகுதல் நோகோ யானே” (ஐங்– 107)

அதற்குக் கடலலையே காரணம் அதனாலேயே உறக்கமின்றி நோயுற்றாள். நானும் வருந்துகிறேன் என்கிறாள். இதன்மூலம் தண்கடல் படுதிரைக்குரியவனே நோய்க்குக் காரணம் என்று மறைமுகமாக உணர்த்தப்படுகிறது.

தலைவனின் குன்றைக் கூறுதல்

தலைவி இற்செறிக்கப் படுவதோடு அவளின் மெலிவுகண்டு இது தெய்வத்தால் ஆனது என்று கூறி அன்னையர் வெறியாட்டு ஏற்பாடு செய்ய அதனைத் தடுக்கும் பொருட்டுத் தோழியானவள் மெலிவுக்குக் காரணம் காதல் நோயே என்பதையும், அது தணியும் விதத்தையும்,

“……………………….

புலவுசேர் துறுகல் ஏறி, அவர்நாட்டுப்
பூக்கெழு
குன்றம் நோக்கி நின்று
………………………………..
தணிதற்கும் உரித்து அவள் உற்ற நோயே” (ஐங்– 210)

இங்குத் தலைவனின் சிறப்பைப் பற்றி உணர்த்த ‘பூக்கெழுகுன்றம்’என்ற சொல்லும் தலைவியின் துயரை வெளிப்படுத்த ‘புலவுசேர் துறுகல்’ என்ற சொல்லும் மேலும் அவனைச் சேர்ந்தால் நோய்தீரும் என்று தலைவியின் காதலை உணர்த்த ‘தணிதற்கும் உரித்து அவள் உற்ற நோயே’என்று ஒவ்வொன்றையும் மறைமுகமாக உணர்த்தும் பாங்கு பாராட்டுக்குரியது.

தலைவனின் குன்றம் கண்டால் தலைவி நலம் பெறுவாள் என்று குறுந்தொகைத் தலைவியின் காதலை வெளிப்படுத்தும் தோழியும் இவ்வாறு மறைமுகமாக கூறுகிறாள்.

இதனை,

அவர்நாட்டுக் குன்றம் நோக்கினென் தோழி
பண்டை
யற்றோ கண்டிசின் நுதலே” (குறுந் – 249)

தலைவனின் மலையைக் கூறுதல்

வெறியாட்டைத் தடுத்து தலைவியின் காதலை உணர்த்தும் தோழி தலைவியின் நோய்க்கான காரணத்தை மணங்கமழும் மலைநாட்டுத் தலைவனிடம் கொண்ட நட்பு என்பதை வேலன் அறிவானா? என்கிறாள்.

இதனை,

“……………. அவ்வேலன்
வெறிகமழ்
நாடன் கேண்மை
அறியுமோ
தில்ல
……………………………..”
               (ஐங் – 241)

என்று தொடர்புபடுத்துகிறது. மேலும் அன்னையின் இவ்வறியாமையால் மேலும் துயரமே. தலைவியின் மழைக்கண் புலம்பு நோய்க்கு வெறியே சிறந்தது என்று நீ கருதினால் உன்னைப்போல் அறியாமையுடையோர் எவரும் இலர் என்கிறாள் தோழி.

இதனை,

“…………………………
அறியா வேலன் வெறி எனக்கூறும்
அதுமனம்
கொள்குவை, அனை இவள்
புதுமலர்
மழைக்கண் புலம்பிய நோய்க்கே” (ஐங் – 243)

என்கிறாள். இதற்குக் காரணம் அவள்கொண்ட களவொழுக்கமே என்பதை மறைமுகமாக உணர்த்தும் தோழியின் பாங்கு சிறப்புக்குரியது.

இதுபோலவே அன்னையின் அறியாமையைக் கூறி தலைவியின் களவை மறைமுகமாக உணர்த்தும் போது,

அறியா வேலன் அன்னைக்கு வெறியென
வேலன்
உரைக்கும் என்ப” (நற் – 273) என்று நற்றிணையும்,

வெறியென உணர்ந்த வேலன் நோய் – மருந்தறியான்” (குறுந் – 360) என்று குறுந்தொகையும் உணர்த்தி நிற்கின்றன.

தலைவியின் மெலிவிற்குக் கூர்மலை நாடன் காரணம் என்றறியாமல் ‘முருகு’ காரணம் என்று மணலில் கழற்சிக்காயைப் பரப்பிக் கூறிய வேலன் வாழ்க என்று வேலனின் பொய்யுரையையும், அவன் மெய் கூறினால் தாயின் சினத்திற்கு ஆளாக நேரிடும் என்பதையும், தலைவியின் காதலையும் புலப்படுத்தும் நோக்கில்,

“…………………………….
பெய்ம்மணல் வரைப்பில் கழங்குபடுத்து அன்னைக்கு
முருகு
என மொழியும் வேலன்; மற்றுஅவன்
வாழிய –
இலங்க ருவி
சூர்மலை
நாடனை அறியாதோனே!” (ஐங் – 249)

வேலன் நோய் மருந்து அறியான் எனும்பொழுது,

வெறியே உணர்ந்த வேலன் நோய் மருந்து
அறியா
னாகுதல் அன்னை காணிய” (குறுந் – 360)

என்று குறுந்தொகையிலும் மற்றும் அகநானூற்றில் 242-வது செய்யுளிலும் வேலனின் பொய்யுரையும் தலைவியின் காதலும் மறைமுகமாகச் சுட்டப்பட்டுள்ளது. பெய்மணலில் கழங்கு படுக்கும் முறைதான் சோழி பரப்பி எண்ணிக்கூறும் முறையாகத் தொன்மமாக இன்றும் நம்மிடையே எஞ்சி நிற்கிறது.

தோழி அறத்தொடு நிற்கும் சூழலில் மறைமுக உரைசெயல் நிகழ்த்தி எவ்வாறெல்லாம் தன் கருத்தைப் புலப்படுத்தினாள் என்பதைச் சுருக்கமாக இக்கட்டுரையில் ஆய்ந்தோம்.

*****

பயன்படுத்திய நூல்கள்

  1. உரைக்கோவை பண்பும் பயனும் (கி.கருணாகரன், சோ.சுப்பிரமணி)
  2. ஐங்குறுநூறு
  3. அகநானூறு
  4. நற்றிணை
  5. குறுந்தொகை

*****

கட்டுரையாளர் – முனைவர் பட்ட ஆய்வாளர் (ப.நே)
பாரதியார் பல்கலைகழகம்
தமிழ்த்துறை
கோவை-46.

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *