Blog

  • மார்கழி மணாளன் (மூன்றாம் பகுதி) – 28

    க. பாலசுப்பிரமணியன்

     

    திருக்கண்டமென்னும் கடிநகர் (தேவப்ரயாகை)

    images (1)

    பத்துத்தலை கொய்த பாவம் நீங்கிடவே

    பக்தியுடன் இரகுவரனும் தவம் செய்தான்

    பார்காக்கும் பரந்தாமன் பாதங்கள் போற்றிடவே

    பார்துறந்த சங்கரனும் ஆலயத்தை அமைத்தான்!

     

    அங்கமெல்லாம் தூய்மையுடன் அமைதியாய் அலகானந்தா

    பங்கமின்றி பாய்ந்துவரும் பனிமலையிருந்து  பாகீரதி

    சங்கமமாய் சரஸ்வதியும் சேர்ந்துவிடும் சத்தமின்றி

    தங்கிடவே தேவர்களும் தேடிவரும் தேவப்பிரயாகை !

     

    ஆலிலையில் படுத்து  வந்தாய் ஊழ்ப்பெருக்கில்

    ஆலிலையில் வாசம் கொண்டாயே  ஆனந்தனே

    ஆகமங்கள் ஏதுமில்லை அரவணைத்தால் போதும்

    ஆருயிர்கள் காப்பவனே அயோத்தியின் ரகுராமா !

     

    காவிரிக்கரையினிலே  கால்நீட்டி படுத்தாயே அமரேசா

    களிப்புடனே யமுனைக்கரையில் காலாற நடந்தாயே

    கருணையுடன் ஏழுமலை நின்றவனே கார்மேகா

    கடமைக்கென தேர்முனையில் சாரதியான சீதரனே !

     

    பாதங்கள் பட்டவுடன் அகலிகைக்கு விமோசனமே

    பாதங்கள் பார்த்தவுடன் அனுமனுக்கோ பரவசமே

    பாதுகைகள் அரசாள பரதனுக்கோ ஆனந்தமே

    பாதங்களை போற்றிடவே பாடலிலே தேடுகின்றேன் !

     

    பனிமலையில் வாழுமுன்னை நினைத்தாலே போதும்

    பனித்துளியாய் உருகிவிடும் பக்கம்வரும் துயரெல்லாம் !

    கனியுண்ட களிப்பாக  மனமெல்லாம் மகிழ்வுறுமே

    இனிதான உன்பெயரை ஒருமுறையே சொல்லிடவே !

    Share
  • மனிதர்கள் எதனால் வாழ்கிறார்கள்?—(What Men Live By) (1)

    லியோ டால்ஸ்டாய் (Leo Tolstoy)

    தமிழாக்கம்- சற்குணா பாக்கியராஜ்

    20170002697_20171011_002

     பிரியமானவர்களே, ஒருவரிலொருவர் அன்பாயிருக்கக்கடவோம்; ஏனெனில் அன்பு தேவனால் உண்டாயிருக்கிறது; அன்புள்ள எவனும் தேவனால் பிறந்து, அவரை அறிந்திருக்கிறான்.  அன்பில்லாதவன் தேவனை அறியான், தேவன் அன்பாகவே இருக்கிறார்.  பரிசுத்த வேதாகமம், 1. யோவான் 4: 7-8

    சைமன் ஒரு செருப்புத் தைக்கும் பரம ஏழை. அவனுக்கு மனைவி, குழந்தைகள் தவிர வேறு ஒரு சொத்தும் கிடையாது. ஒரு குடிசையில் தன் குடும்பத்துடன் வாழ்ந்து வந்தான். அன்றாடம் வேலை செய்து கிடைக்கும் கூலி ஆகாரத்திற்கே போதுமானதாக இருந்தது. குளிர்காலத்தில் போர்த்திக்கொள்ள ஆட்டுத் தோலில் தைக்கப்பட்ட ஒரு கோட்டை, கணவனும் மனைவியும் மாற்றி மாற்றி அணிந்து கொண்டனர். அதுவும் இப்போது கிழிந்து கந்தலாகி விட்டது. அடுத்த குளிர் காலம் தொடங்கும் முன் புது ஆட்டுத் தோல் வாங்கிக் கோட்டுத் தைக்கக் கொஞ்சம் கொஞ்சமாகப் பணம் சேர்க்கத் தொடங்கினான். இதுவரையிலும் மனைவியின் பெட்டியில் ரகசியமாக அவர்கள் சேமித்து வைத்திருந்த மூன்று ரூபிள்கள் இருந்தன. ஊரில் அவனுடைய வாடிக்கையாளர்கள் ஐந்து ரூபிள்களும், இருபது கோபெக்குகளும் கடன்பட்டிருந்தனர்.

    ஒரு நாள் காலை ஆகாரத்திற்குப் பின்பு, ஊருக்குள் சென்று கடன் பட்டவர்களிடமிருந்து பணத்தைச் சேகரித்து, ஆட்டுத்தோல் வாங்கப் புறப்பட்டான். தன்னுடைய கோட்டிற்கு மேல் மனைவியின் பழைய கோட்டும், அதற்கும் மேல் இன்னும் ஒரு கோட்டும் அணிந்து கொண்டு சட்டைப் பையில் மூன்று ரூபிள் நோட்டுகளைப் பத்திரமாக வைத்துக் கொண்டான். புதியதாக ஒரு கம்பை வெட்டி ஊன்று கோலாக வைத்துக் கொண்டு புறப்பட்டான்.

    முதல் வாடிக்கையாளன் வீட்டில் இல்லை.  அவன் மனைவி, சைமனை, அடுத்த வாரம் வந்தால் பணம் கிடைக்கும் என்று சொல்லி அனுப்பி விட்டாள். இரண்டாவது வாடிக்கையாளன் “என்னிடம் இப்போது பணம் கிடையாது, இருபது கோபெக்குகள்தான் இருக்கிறது, மீதியைப் பின்பு தருவேன்” என்றான். சைமன் ஆட்டுத்தோல் வியாபாரியிடமிருந்து தோலைக் கடனாக  வாங்க விரும்பி, தோல் விற்கும் கடைக்குச் சென்றான். சைமன் ஏழையானதால் கடைக்காரன் தோல் கொடுக்க மறுத்து விட்டான். அங்கும் ஏமாற்றம். சைமன் மிகவும் மனமுடைந்து கையிலிருந்த இருபது கோபெக்குகளுக்கும் மது வாங்கி அருந்தி விட்டு, ஒரு குடியானவன் பழுது செய்யக் கொடுத்த ஒரு சோடி பழைய செருப்புகளையும் கையில் ஏந்திக் கொண்டு வீட்டை நோக்கி நடந்தான்.

    கொஞ்சம் குடித்திருந்ததால் சைமனுக்கு குளிர் அதிமாகத் தெரியவில்லை. தன்னுடைய ஏழ்மை நிலையைப் பற்றித் தானாகப் பேசிக்கொண்டு நடந்தான். “வீட்டில் மனைவி, நான் கோட்டுத் தைக்கத் தோல் கொண்டு வருவேனென்று காத்துக் கொண்டிருப்பாள். நான் என்ன செய்ய முடியும்? ஒருவரும் பணம் கொடுக்கவில்லையே? உணவு வாங்குவதற்கே பணம் சரியாக இருக்கிறது”.

    சைமன் ஊர் எல்லையை நெருங்கிய போது, அங்கிருந்த ஆலயத்தின் பின் பக்கம் ஏதோ வெண்மையாக இருப்பதைப் பார்த்தான். மங்கிய மாலை ஒளியில் அது என்னதென்று அவனால் கண்டு பிடிக்க முடியவில்லை. “இதற்கு முன்னால் இங்கு ஒரு வெள்ளைக் கல் கிடையாதே? ஏதோ மிருகமா?  ஆனால் இதற்கு வெண்மையான மனிதத் தலை இருக்கிறதே! இங்கே ஒரு மனிதன் என்ன செய்கிறான்?” என்று பலவாறு சிந்தித்துக்  கொண்டு அந்த உருவத்தின் அருகில் சென்று பார்த்தான். அங்கு ஒரு மனித  உருவம் ஆடைகளின்றி நிர்வாணமாகத் தலை குனிந்து கொண்டிருப்பதைப் பார்த்து சைமன் மிகவும் பயந்து “இவனை யாரோ கொன்று, நிர்வாணமாக்கி இங்கு விட்டுச் சென்று விட்டார்கள். இவனை நான் தொட்டால், ஆபத்தில் மாட்டிக் கொள்வேன்” என்று எண்ணி அந்த இடத்தை விட்டுக் கடந்து சென்றான்.

    சிறிது தூரம் சென்ற பின் திரும்பி அந்த உருவத்தை நோக்கினான். அதே சமயம் அந்த உருவமும் சுவரிலிருந்து விலகி தலையை உயர்த்தி சைமனைப் பார்த்தது. சைமன் அந்த உருவத்தின் அருகில் போகவா வேண்டாமா என்று யோசித்தான். அருகில் போனால், அந்த உருவம் தன்னைத் தாக்கினால் எப்படி தப்பித்துக் கொள்ள முடியும்? அவனுக்குக் கொடுப்பதற்கு என்னிடம் வேறு ஆடை இல்லையே, இறைவன்தான் என்னை இங்கிருந்து காக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டு தன் வழியே  வேகமாக நடக்கத் துவக்கினான். ஆனால் அவனால் அதிகத் தூரம் செல்ல முடியவில்லை. “சைமன், என்ன செய்கிறாய்? அந்த மனிதனுக்கு என்ன தேவையோ? இறந்து விடுவானோ? கொள்ளைக்காரர்களைக் கண்டு பயப்பட உன்னிடம் என்ன இருக்கிறது? சைமன், உனக்கு வெட்கமாக இல்லையா?” என்று மனச்சான்று இடித்தது.

    தொடரும்

    Share
  • வீணையின் நாதம்..!

     

    120

    ======================

     

    பல்லவியே பாடலில் முதல்நிலையாய் முகம்காட்டும்..

    ……….பக்கவாத்யமும் அதனுடன் சேர்ந்தாலதுவே இன்னிசை.!

    உல்லாசமாய் ஊதுகின்ற நெடுங்குழல்நாத ஸ்வரத்துடன்..

    ……….உருளைத்தவிலும் மேளமுமொருங்கே சேர்மினது கச்சேரி.!

    புல்லாங்குழலெழுங் காற்றும்…பொங்கியெழும் அருவிப்..

    ……….புனலெழுப்பும் நீரோசையும் நமக்கொரு மெல்லிசையே.!

    வில்லுமிழ்ந்து சீறிப்பாயும் கூரான அம்பினொலியும்..

    ……….வீணையின் நாதம்போல காதுக்கினிய இசையொலியாம்.!

     

     

    நெல்கதிர்கள் தலைவணங்கி யசைந்தாடி இசைக்கும்போது..

    ……….நற்பாவலரும் கவிஞரும் பாடுவராம் முல்லைப்பண்ணில்.!

    பல்முளைக்காப் பாலகன்தன் பவளவாய்த் திறந்ததன்..

    ……….பல்வித மழலைப்பேச்சே பெற்றதாய்க்கு இன்னிசையாம்.!

    மெல்லிய இரட்டைக் குழல்மகுடியின் மயக்குமொலிக்கு..

    ……….மகாதேவன் முடிமேல் தவழும்நல்ல பாம்புமேயடங்கும்.!

    வல்லமை பொருந்திய இராவணனின் பண்ணிசையான..

    ……….வீணையின் நாதவொலிக்கந்த ஈஸ்வரனே மகிழ்ந்தானே.!

     

     

    பரந்த பசுமைக்காட்டில் குலைநடுங்கும் குரல்கேட்டு..

    ……….பலவிதவிலங்கும் பதுங்குகுழி தேடுமதுவே “சிங்கநாதம்”!

    பரமாத்மா பகவான் கிருஷ்ணனெழுப்பிய நாதமாம்..

    ……….பாரதத்போர் வீரரைக் கலக்கியததுவே “சங்கொலிநாதம்”!

    பரமனைத் திருப்திப்படுத்த முனிவர்களும் யோகிகளும்..

    ……….பல்குரலில் இனிதாய்வரும் நான்மறையே “வேதநாதம்”!

    சரஸ்வதியின் திருக்கரத்தில் வீற்றிருக்கும் வாத்தியஒலியே..

    ……….சகலஜீவியும் கேட்டறிவு பெறுமற்புத “வீணையின்நாதம்”!

    ==================================================================

    நன்றி:: தினமணி கவிதைமணி::07-01-18

    நன்றி:: கூகிள் இமேஜ்.

    Share
  • பொங்கலே வருக

    download

     

    பொங்கலே வருக புதுப்பொலிஉ தருக

    அக்குப்பையையும் புறகுப்பையையும்

    அழகாக தீயிட்டு போக்க வேண்டும்

    ஆகாத செயலெல்லாம்அணுகாது இருக்க

    ஆதரவு தந்து அபயம் அளிக்க வேண்டும்

    இதமிலா பிணி நோய் அகற்றிட செய்து

    இதயத்திலே சாந்தி நீ தர வேண்டும்

    உண்மைகள் பேசி நன்மைகள் செய்ய

    உயிரெல்லாம் உயர்வுற உதவிட வேண்டும்

    ஊக்கத்தோடுமக்களெல்லாம் உழைக்க

    ஊருக்கே நல் வழி காட்டவேண்டும்

    எல்லை இல்லாத அன்புடன் ஊரெல்லாம்

    என்றும் விளங்கிட வழி செய்யவேண்டும்

    ஏர் உழவன் துன்பம் தீர்ந்து விவசாயம்

    ஏற்றமுற செய்து உழவு தழைக்கவேண்டும்

    பொய்மைத்தனம் புறந்தள்ளி பொசுக்கவேண்டும்

    பொய்ய்யை மெய்யாக்கும் மோசடி போக வேண்டும்

    எல்லாத் தீமைகளும் ஒழிந்து நாட்டில்

    நல்லவைகளே பொங்க வேண்டும் இப்பொங்கல்

    நன்னாளில்பொங்கும் மங்களம் எங்கும் தங்கவேண்டும்

    சரஸ்வதி ராசேந்திரன்

    Share
  • வங்கிக்கணக்கின் பாதுகாப்பு!

    பவள சங்கரி

    தலையங்கம்

    ஆதார் அட்டை பயன்பாட்டை வலியுறுத்துகின்ற இக்காலகட்டத்தில் சமீப காலங்களில் இது தொடர்பாக வரக்கூடிய செய்திகள் நன்மையளிக்கக் கூடியதாக இல்லை. ஆதார் அட்டையின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டிருக்கவில்லை என்றே கருதமுடிகின்றது. தற்போது இரண்டடுக்குப் பாதுகாப்பு செய்யப்பட்டிருப்பதாகவும், பாதுகாப்பான அட்டைகள் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டாலும் இது காலங்கடந்த அறிவிப்பாகவேக் கொள்ளமுடிகின்றது. இந்தச் சூழலில் வங்கிக் கணக்குகளில் ஆதார் எண்ணை இணைக்கவேண்டும் என்று கட்டாயப்படுத்துவது மேலும் குழப்பம் விளைவிக்கக்கூடியதாகவே உள்ளது. கோவை மாவட்டத்தில் சமீப நாட்களில் வங்கிக் கணக்குகளிலிருந்து பல இலட்சம் உரூபாய் இந்த முறையில் கையாடல் செய்யப்பட்டதாக வங்கிகளே அறிவித்து அவரவர் கணக்குகளை பாதுகாப்பாக வைத்திருக்கும்படி அறிவுறுத்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இது மோசமானதொரு பின் விளைவுகளை ஏற்படுத்தக்கூடியதாகும். இப்பொழுதெல்லாம் சர்வ சாதாரணமாக ஒருவரது கைபேசி எண்களைப்பெற்று வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிகின்றது. அதே கைபேசி எண்ணையும் ஆதார் எண்ணையும் கொண்டு வங்கிக் கணக்குகளை எளிதில் கையாள முடியும் என்பதும் உண்மை. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் தனி நபர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் வகையறிந்து நமது நாட்டிலும் அதற்கேற்ப ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியம். சமீபத்தில் ஒரு பிரபல நிறுவனத்தின் அனைத்துத் தொடர்புகளும் செயலிழக்கச் செய்யப்பட்டு பல இலட்சம் டாலர்கள் பரிவர்த்தனைக்குப் பிறகே அதனுடைய வணிக இரகசியங்கள் பாதுகாக்கப்பட்ட செய்திகள் கருத்தில் கொள்ளத்தக்கது. இதுபோன்று தவறுகள் மேலும் நடக்காதவாறு அரசு உடனடி நடவடிக்கை எடுத்து நமது ஆதார் எண்ணின் உள் குறியீடுகள் பாதுகாப்பிற்கான உறுதி அளிப்பதன் மூலமாக மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த வேண்டியது அவசியம்.

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     

    ‘’கூடாரவல்லி திருவாதிரையன்று….அரி, அரன், அம்பாள் மூவரும் ஒன்று….!

    180111 - Tiruppavai 27 -Koodarai vellum, seer (rectifier) Govinda. lr. #watercolour #24x32cms Saayujyam.
    180111 – Tiruppavai 27 -Koodarai vellum, seer (rectifier) Govinda. lr. #watercolour #24x32cms
    Saayujyam.

     

    ’’கூடாரை வெல்வார், கடைசிவரை கூடுபவர்
    வாடாது காத்திடும் வைணவம்: -மூடநெய்
    ஆதிரை ஈசனவர், அக்காரக் கண்ணனவர்,
    பாதியிறைப் பங்கருளம் பாள்’’….!

    பாதி இறை பங்கு அருளம்பாள்….!

    ’’ஆண்டாள் -27”….
    ————————————–

    ”கூடாரை வெல்லும்சீர் கோவிந்தன் முப்பதைப்
    பாடாத வாயெல்லாம் பாழ்வாயே, -ஆடா(து)
    அசங்கா(து) அவனே அவள்பாடல் கேட்க,
    விஷம்காதுக்(கு) அன்றோஊர் வம்பு”….

    ”கூடாரம் போல்குவிந்து, மூடாத பாத்திரத்தில்,
    சூடாறும் பொங்கலை சேவித்து -கூடார
    வல்லியில் உண்பவர்க்கு, இல்லை டயாபடீஸ்,
    வில்லியூர் செல்வியின் வாக்கு”….

    “மெட்டி அணிவித்து, மெய்யில் தாலியிட்டு
    கட்டி அணைக்கின்றான் கோவிந்தன்: -சுட்டியவள்,(சிறுமி ஆண்டாள்)
    நம்பாமல் பார்க்கின்றாள் நந்தகோபன் மைந்தனினி
    நம்பாள் கணவரா! நேக்கு” ….!கிரேசி மோகன்….!

     

    கேசவ் முன்பு வரைந்த ‘’கோவர்த்தனகிரி தாரிக்கு’’ முன்பு எழுதியது….மறுபகிர்வு….!
    ”சோ’’வர்த்த மானச் சிரிப்புடன் ஸ்ரீதரன்
    கோவர்த் தனக்குன்றால் காக்கின்றான் -’’ஆ’’வர்த்த
    மானத்தை: கர்வ மடங்கிட ஆனையுடன்(இந்திரன்)
    வானத்தை விட்டு வரவு’’….

     
    கரதூ ஷணர்கள் பரலோகம் செல்ல
    நரவேஷம் இட்டாய்கண் ணர்க்குமுன் -வரவர்ஷம்(வர மழை)
    அண்டர்கோன்(இந்திரன்) கர்வமாய், ஆவினம் காத்திட
    சுண்டுவிரல் கொண்டாய்கல்(கல் -கோவர்த்தன கிரி) KEY….!

     
    “மறையவரைப் பார்க்கின்றாள் மாதவள் கோதை,
    கரைந்துருகி கானக்கண் கொண்டு; -உறைந்தபனி
    நெஞ்சிலே பக்தி நெருப்பைக் கொளுத்திவிட,
    மஞ்செழில் வண்ணன் மெழுகு”….கிரேசி மோகன்….!

    Share
  • துப்புரவில் சாதனை!

    பவள சங்கரி

    மைசூர் மாநகரத் துப்புரவுப் பணியாளர்கள் ஒன்று சேர்ந்து சாதனை படைத்து இன்று நாட்டிற்கே வழிகாட்டிகளாக ஆகியுள்ளனர்! இன்று இந்தியாவிலேயே மைசூர் மாநகரம் மிகவும் சுத்தமான நகராக மாறியுள்ளது மட்டுமல்லாமல் இதன் மூலமாக ஒவ்வொரு மாதமும் பல இலட்சங்களை வருமானமாகப் பெற்று வருகின்றனர். நகர் முழுவதையும் பல பிரிவுகளாகப் பிரித்து ஒவ்வொரு பிரிவிற்கும், ஒரு குழுவை அமைத்து, அவரவர்க்குரிய தேவையான இயந்திரங்களைக்கொண்டு சரியானத் திட்டமிடல், மறுசுழற்சி முறை, தொய்வில்லாத செயல்பாடுகள் மூலமாக சாத்தியமாக்கி சாதனைப் படைத்துள்ளார்கள்! தூய்மைப்பணியில் இரட்டை வருமானம் பார்க்கும் சாதுர்யமான நண்பர்களை உளமாரப் பாராட்டுவோம்!

    Share
  • மார்கழி மணாளன் (மூன்றாம் பகுதி) – 27

    க. பாலசுப்பிரமணியன்

    திருக்காட்கரை

    vaithamanidhi-perumal-temple

    அருள்மிகு காட்கரையப்ப பெருமாள் கோவில்

     

    முப்புரி நூலோடும்  மூன்றடி உயரத்தோடும்

    முன்மழித்த சடையும் மழைக்காக்கும் குடையும்

    முன்செல்லும் அறமும் முடிவில்லா அருளும்

    முன்னிருக்க அளந்தாயே மூவுலகும் வாமனனே !

     

    வாமனனாய் வந்தவனே வானெல்லாம் அளந்தவனே

    வாழையெல்லாம் வீழ்ந்திடவே வாழ்விழந்த மக்களுக்கு

    வாழ்வளித்தாயே வளமான தங்கவண்ண வாழைதந்து

    வாழியவே! வேங்கடவா வருந்துயரைக் காப்பவனே !

     

    மலைநாட்டில் குடிகொண்ட மாதவனே மாயவனே

    மடைதிறந்த வெள்ளமென அருள்சுரக்கும் அச்சுதனே

    மனம்கட்டும் கோவில்களில் மறக்காமல்  இருப்பவனே

    மகுடங்கள் தேவையில்லை மலர்ப்பாதம் போதுமய்யா !

     

    மண்ணுண்ட வாயினில் அண்டங்கள் காட்டினாய்

    மனமயர்ந்த பார்த்தனுக்கோ மூவுலகும் காட்டினாய்

    மன்றத்திலே கௌரவர்க்கோ வானுயர்ந்து நின்றாய்

    மாயவனே தூயவனே மனமெல்லாம் நிற்பவனே !

     

    ஒருபருக்கை உண்டவுடன் பசிதீர்த்தாய் பலருக்கு

    ஒருபிடியை உண்டதுமே விடைகொடுத்தாய் வறுமைக்கு

    ஒருபழத்தைத் தந்தவுடன் அருள்தந்தாய் சபரிக்கு

    ஒருமுறை அழைத்ததும் ஓடிவந்தாய் ஆதிமூலமே !

     

    கரைகாணாத் துயர்நீக்கக் கைகொடுக்கும் காட்கரையப்பா

    கலையான வாழ்விற்குக் கருத்தான மலையப்பா !

    நிலையில்லா உணர்வெல்லாம் எனைவாட்டும் நேரத்தில்

    சிலையாக நில்லாமல் சீக்கிரமே வருவாயோ ?

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180110 - Tiruppavai 26- wm -watercolour 24x32 cms -MAlae ManivaNNa - ‘where we tread the unwritten path shown by our elders from time immemorial.’
    180110 – Tiruppavai 26- wm -watercolour 24×32 cms -MAlae ManivaNNa – ‘where we tread the unwritten path shown by our elders from time immemorial.’

    ”குண்டு கிருஷ்ணவிஷ்ணு,”வை குண்டம்” வஸிப்பதைக்
    கண்ட திருவில்லிக் கோதையார், -தெண்டனிட்டு,
    செப்பிய முப்பதை சொல்வோர்க்(கு) எமனேது,
    இப்புவியில் கொள்ளார் இறப்பு(இறவா வரம்தரும் இறை)’’….கிரேசி மோகன்….!

    ‘’மாலே மணிவண்ணன் மீதுகந்த முப்பதும்,
    நீலோத் பலர்ஆலில் நீந்தியோன் -தாலேலோ,
    தாலாட்டுப் பாடல், துயிலெழுப்பி வைகுண்ட,
    மேலோட்ட மாய்செல் மழை’’….கிரேசி மோகன்…

    Share
  • மார்கழி மணாளன் (மூன்றாம் பகுதி) – 26

    க. பாலசுப்பிரமணியன்

    திருப்புளியன்குடி

    images

    அருள்மிகு காசினிவேந்தர் பெருமாள் திருக்கோவில் (கள்ளபிரான் திருக்கோவில்)

    பார்போற்றும் வேதங்களைப்  பிரம்மனும் இழந்துவிடப்

    பதுக்கிவைத்த  சோமகனைப் பிடித்தவனே பாண்டுரங்கா !

    பாற்கடலும் வைகுந்தமும் விட்டுவந்தாய் புவினோக்கி

    படைத்தாயே பூவுலகில் புதியதோர் வைகுந்தமே !

     

    கறந்திடவே பாலனைத்தும் கண்மறைவில் பசுவொன்றும்

    கலங்கிட்ட மன்னவனும் களம்காண வந்திடவே

    கண்மறைவில் காலமெல்லாம் வாழ்ந்தவனே வைகுந்தா

    கள்ளனன்றோ கார்மேகா கனிந்துவந்தாய் காட்சிதர !

     

    கள்வனென்ற பெயரெடுத்தாய் வெண்ணையுண்டு கோகுலத்தில்

    கள்ளபிரான் பெயர்கொண்டாய் கள்வனின் உடைதன்னில்

    கள்ளத்தனம் எத்தனையோ கோபியர்கள் கூட்டத்தினில்

    கள்ளமனம் ஏதுமின்றி கருணைசெய்வாய் என்னிடத்தில் !

     

    கோலாட்ட போதையிலே நிலைமறைந்த கோபியரின்

    போராட்ட மனத்தினிலே தேரோட்டம் விட்டவனே  !

    மாறாட்டம் செய்யாமல் ஆடினாயே அனைவரோடும்

    பாராட்ட வார்த்தையில்லை பரமாத்மா நீயன்றோ !

     

    சரணமென்று வந்தவுடன் சங்கடங்கள் தீர்ப்பவனே

    மரணமென்ற பயத்தினையே மனதிலிருந்து நீக்கிடுவாய்

    கரணமிடும் வாழ்கையைக்  கலக்கமின்றி மாற்றிடுவாய்

    சரணமென்றே வந்துவிட்டேன் சந்நிதியே திறந்திடுவாய் !

     

    ஓரடியை முன்வைத்தால் ஓடிவரும் பரந்தாமா

    ஈரடியை வைத்தவுடன் ஈகையுள்ளம் கொள்பவனே

    மூவடியால் உலகளந்து முக்திதந்த முகுந்தா

    நாலடியில் உனைப்பாட நற்கதியே தந்திடுவாய் !

     

    Share
  • தமிழ் உருபனியல் பகுப்பாய்வி (Tamil Morphological Parser) உருவாக்கம்

    -முனைவர் ஆர். சண்முகம்  

    கட்டுரைச் சுருக்கம்

     தமிழ் இன்று கணினியில் உலா வரத் துவங்கியுள்ளது என்பது மிகவும் வரவேற்கத்தகுந்த ஒன்றாகும். ஆயினும் அது ஆங்கிலத்தை அரவணைத்துக்கொண்டே உலா வருவது நாம் அனைவரும் சற்றுச் சிந்திக்க வேண்டிய ஓன்றாகும். தனித்து இயங்கல் என்பது செம்மொழியாக அறிவிக்கப்படுவதற்கு உள்ள தகுதிகளுள் ஒன்றாகும் அதை ஒருங்கே பெற்றதால் தமிழ் அத்தகுதியைப் பெற்றது. தமிழ்க் கணினியில் தனித்து இயங்க வேண்டுமெனில் அதற்கென மொழிக்கருவிகள் உருவாக்கப்படுவதென்பது மிகவும் அவசியமாகும் இதற்காக மேற்கொள்ளப்படும் ஆய்வை இயற்கை மொழி ஆய்வு என்கிறோம் அதாவது மனித மூளை போன்று கணினியும் மொழியைப் புரிந்து கொள்ளும் விதத்தில் அதனை வடிவமைப்பதாகும். இப்பணியை நாம் மேற்கொள்ள சில அடிப்படைக் கருவிகளை உருவாக்குவது தவிர்க்க இயலாத ஓன்று. அத்தகைய அடிப்படைக் கருவிகளுள் உருபனியல் பகுப்பாய்வி (Morphological Parser) ஒன்றாகும். இவ்வுருபனியல் பகுப்பாய்வியை எவ்வாறு தமிழுக்கு உருவாக்கலாம் என்பதும் அதற்குத் தேவையானவை எவை என்பதையும் விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

    அறிமுகம்

    தமிழின் இன்றைய வளர்ச்சி அதனைப் பல்வேறு துறைகளுக்கு அழைத்துச் சென்றுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. கலைகள் மற்றும் இலக்கியங்கள் வாயிலாக வாழ்ந்துவந்த தமிழ் தற்போது இணையம் மூலம் உலகெங்கும் பயணிக்கத் துவங்கியுள்ளது. குறிப்பாகத் தகவல் தொழில்நுட்பத் துறையில் தினமும் முன்னேற்றம் காண ஆரம்பித்துள்ளது. மொழித் தொழில்நுட்பத்திலும் (Language Technology) தமிழ் முத்திரை பதிக்கத் தவறவில்லை. அத்தகைய மொழித் தொழில்நுட்பத்திற்கு வலு சேர்க்கும் ஆய்வுகளில் ஒன்று இயற்கை மொழி ஆய்வு (Natural Language Processing). அதாவது மனிதனைப் போலவே கணினியானது, மொழியைக் கையாளும் விதத்தில் அதனை மேம்படுத்துவதை இயற்கை மொழி ஆய்வு என்கிறோம். இயற்கை மொழி ஆய்வின் முதல் நிலையாக உருபனியல் பகுப்பாய்வியைக் கூறலாம்.  ஏன் எனில் நாம் பயன்படுத்துகிற அனைத்து வாக்கியங்களுக்கும் அடிப்படை அது கொண்டுள்ள சொற்களும் அச்சொற்களுக்கிடையே அமைந்துள்ள பொருண்மைத் தொடர்புகளுமே  (Semantic Relationship between words) ஆகும்.  இதனைப் பொறுத்தே ஒரு முழுச் வாக்கியத்தின் பொருள் அமைகிறது. எனவே சொற்களைப் பற்றியும் அவற்றுக்கிடையே உள்ள பொருண்மை தொடர்புகளைப் பற்றியும் அறிவது அவசியமாகிறது. சொற்களைப்பற்றி அறிய உருபனியல் பகுப்பாய்வியும் (Morphological Parser) , அவற்றுக்கிடையே உள்ள பொருண்மைத் தொடர்பறிய தொடரியல் பகுப்பாய்வியும் (Syntactic Parser) துணைபுரிகின்றன. இதனை உருவாக்கத் துணைபுரியும் அறிவியலைக் கணினி மொழியியல் (Computational Linguistics) என்கிறோம். அதாவது மொழியில் உள்ள கணினி மூலம் கையாளத் தகுந்த மொழியியல் கூறுகளை (Linguistic Properties)   படிக்கப் பயன்படும் அறிவியலாக இதைக் கூறலாம். 

    உருபனியல்  பகுப்பாய்வி

    ஒரு சொல்லில் உள்ள விகுதிகளைக் கண்டறிந்து அதன் இலக்கணக் குறிப்பையும் அச்சொல்லின் முழு இலக்கணக் குறிப்பையும் வெளியிடும் கருவியை உருபனியல் பகுப்பாய்வி என்கிறோம். 1958-ஆம் ஆண்டு பெர்க்கோ என்ற அறிஞர் முதன்முதலில் மக்களின் உருபன் பற்றிய அறிவையும் இரு வெவ்வேறு சொற்களுக்கிடையே உள்ள ஒற்றுமைக்கான காரணங்களைப் பற்றியும் உளவியல் மொழியியல் நோக்கில் (psycho linguistics) ஆராய்ந்தார். இச்சோதனைகளின் முடிவில் அவர் மனிதர்களுக்கு இரு வேறு சொற்களுக்கு இடையே உள்ள உறவுகளைக் கணிப்பதில் மிகுந்த சிரமம் இல்லாததை உணர்ந்தார். இவரைத் தொடர்ந்து  டெர்விங் (1976) மற்றும் ஸ்மித்(1977) ஆகியோரும் இதே போன்று பல சோதனைகளை மேற்கொண்டு உருபன் அறிதலின் (Morpheme Recognition) முக்கியத்துவத்தை உணர்ந்தனர். இதன் விளைவாகக் கர்ட்டுனன் , ஆண்ட்வொர்த்  மற்றும் கொஸ்க்கினிமி (1983) ஆகியோர் இதைக் கணினிவழி மேற்கொள்ள ஏதுவாகச் சில கோட்பாடுகளை நிறுவினர். இரட்டை நிலை உருபனியல் (two-level Morphology)மற்றும் கிம்மோ உருபன் பகுப்பாய்வியும் (Kimmo parser) இதற்குத் தக்கச் சான்றுகளாகும். இதனால் தமிழுக்கும் இதைச் செயல்படுத்த தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன , மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சென்னைப் பல்கலைக்கழகம் , அண்ணாமலைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் மொழியியல் பிரிவுகள் இதில் பெரும் ஆர்வம் செலுத்தின. அண்ணா பல்கலைக்கழகமும் இதில் ஆர்வம் காட்டியது. இன்றளவும் உருபன் பகுப்பாய்வியைச் செவ்வனே உருவாக்குவதற்கான முயற்சிகள் தொடர்ந்து பல்வேறு நிறுவனங்களின் மூலம் நடைபெற்று வருகிறது.

    உருபன்  பகுப்பாய்வியை   உருவாக்கத்  தேவையானவைகள்

    ஒரு மொழிக்கென உருபன் பகுப்பாய்வியை உருவாக்கிடக் கீழ்க்கண்டவை மிகவும் முக்கியமானவை,

    1.தரவுத்தளம் (Database)

    2.சந்தி விதிகள (Morphophonemics Rules)

    3.உருபன்கள் (Morphemes)

    4.உருபன் வரிசைமுறை (Morphotactics)

    5.கணினி மொழியியல் கோட்பாடுகள் மற்றும் நிரல் மொழி.

    தரவுத்தளம்

    கணினியால் மனித மூளை போன்று ஒரு சொல் தன்னுடைய மொழியைச் சார்ந்ததா அல்லது இல்லையா என்பதை கண்டறிய இயலாது. பூஜ்ஜியமும் ஒன்று என்ற எண்ணுமே அதற்குப் பரிச்சயம். இதனைச் செயல்படுத்தத் தரவுத்தளம் மிகவும் உதவிகரமாக இருக்கும். பொதுவாகத் தரவுத்தளம் என்பது ஒரே வகையைச் சார்ந்த சொற்களின் பட்டியல் ஆகும். இதை இரண்டாகப் பிரிக்கலாம் வேர்ச்சொல் தரவுத்தளம் மற்றும் விகுதித் தரவுத்தளம். வேர்ச்சொற்களின் பட்டியல் அடங்கிய கோப்பைத் வேர்ச்சொல் தரவுத்தளம் என்கிறோம். பொதுவாக உருபனியல் பகுப்பாய்வுக்கென முதன்மை இலக்கண வகைகளான பெயர்ச்சொல், வினைச்சொல், வினையடை மற்றும் பெயரடை ஆகியவற்றைப் வேர்ச்சொல் தரவுத்தளத்திற்குப் பயன்படுத்தலாம். விகுதித் தரவுத்தளம் என்பது விகுதிகளின் பட்டியல் அதாவது பெயர்ச்சொல்லுக்குரிய பன்மை, வேற்றுமை விகுதிகள் மற்றும் பின்னொட்டுக்கள், வினைச்சொல்லுக்குரிய கால இடைநிலைகள், திணையெண்பால் விகுதிகள் வினைப்பாங்கு மற்றும் வினைநோக்கு விகுதிகள் ஆகியவற்றைக் கூறலாம். இத்தரவுத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம் கணினியால் பயனாளர் மூலம் உள்ளிடப்பட்ட சொல்லையும் அது கொண்டுள்ள விகுதிகளையும் சரியானவை எனத் தீர்மானிக்க முடியும். இத்தரவுத்தளத்தில் இடம்பெற்றுள்ள சொற்களின் எண்ணிக்கையைப் பொறுத்தே உருபனியல் பகுப்பாய்வியின் தரம் அமையும் எனலாம்.

    சந்தி விதிகள்

    வேர்ச்சொல்லோடு விகுதிகளோ அல்லது விகுதிகளுடன் விகுதிகளோ சேரும்போது அவைகளுக்கிடையே தோன்றல்,திரிதல்,கெடுதல் ஆகியவற்றை உள்ளடக்கிய மாற்றங்கள் நிகழும் இவற்றைத் தக்க விதிகளைக் கொண்டு நிறுவ முடியும் காட்டாக அம் இறுதிப்பெயர்ச்சொற்கள் ஓரசையாக இல்லாதவிடத்து விகுதிகளோடு குறிப்பாக வேற்றுமைகளோடு சேரும்போது அத்துச்சாரியை பெறுவதைக் கூறலாம் (மரம்+ஐ = மரத்தை). இதுபோல ஒவ்வொரு மாற்றங்களையும் தக்க விதிகள் மூலம் நிறுவுவதால் சொற்களைப் விகுதிகளில் இருந்து பிரிக்க முயலும்போது மிகச்சில இடங்களைத் தவிர பெரும்பாலும் பிரிப்பது சாத்தியமாகிறது. மிகச்சில இடங்கள் என இங்குக் குறிப்பிட்டது பொருள் மயக்கம் தரும் இடங்களாகும். காட்டாக “காலை” என்னும் சொல் காலை வேளையையும் கால் + ஐ வேற்றுமை விகுதியை உள்ளடக்கிய சொல் போலவும் தோன்றும் இதுபோன்ற இடங்களில் கணினியால் பகுப்பாய்வைச் செவ்வனே மேற்கொள்ள இயலாது. அச்சொல் பயின்று வந்துள்ள சூழலைப்பொறுத்தே இதனை நம்மால் முடிவு செய்ய இயலும். நம் தமிழ் இலக்கணத்தில் உள்ள சந்தி விதிகள் அனைத்தையும் கணினிக்குப் புரியும் விதத்தில் விதிகளாக மாற்றியமைப்பது சொற்களை எளிமையாகப் பிரிப்பதற்குத் துணைபுரியும்.

    உருபன்கள்

     நாம் பொதுவாக விகுதிகளை உருபன்கள் என்கிறோம். காட்டாக வேற்றுமை விகுதிகள், (-ஐ,-ஆல்,-கு,-இன்,-அது,-கண்) கால இடைநிலைகள்(நிகழ்,இறந்த,எதிர் கால இடைநிலைகள்), பின்னொட்டுக்கள் (விட,பற்றி), மிதவை ஒட்டுக்கள் (மட்டும்,மாத்திரம்) ஆகியவற்றைக் கூறலாம். இவையனைத்தும் தனித்தியங்கும் ஆற்றலற்றவை என்பதால் இவற்றை கட்டுருபன்கள் என்கிறோம். பெயர், வினை, வினையடை, பெயரடை ஆகியவை தனித்தியங்கும் ஆற்றலுள்ளவை என்பதால் அவற்றை தனித்தியங்கும் உருபன்கள் என்கிறோம்.ஒரு உருபன் பகுப்பாய்வியை உருவாக்க அந்த குறிபிட்ட மொழியிலுள்ள மொத்த உருபன்களைப் பற்றிய விவரங்கள் மிகவும் இன்றியமையாததாகும்.

    உருபன்  வரிசைமுறை

    உருபன் வரிசைமுறை என்பது ஒவ்வொரு விகுதிக்குப் பின்னும் எவ்விதமான விகுதிகள் வர வேண்டும் என்று வரிசைப்படுத்துவதாகும். காட்டாக ஒரு பெயர்ச்சொல் உடனடியாகப் பன்மையையும் அதன்பிறகு வேற்றுமையையும் அதற்குப்பிறகு பின்னொட்டு மற்றும் மிதவை ஒட்டுக்களைக் கொண்டு அமையலாம். இந்த அமைப்பு சீராகவே இருக்கும் மிதவை ஒட்டுக்களையும் சாரியைகளையும் தவிர எந்த ஒரு விகுதியும் தன்னுடைய வகையைச் சார்ந்த மற்றொரு விகுதியுடன் சேர்ந்து வராது. (கடலைப்பற்றிமட்டுந்தானாடா , மரத்தினைக்கூட). இதைப்போலவே வினைச்சொல்லும் வினையடிச்சொல்லுக்குப் பிறகு கால இடைநிலைகளையும், திணையெண்பால் விகுதிகளையும் அதன் பிறகு மிதவை ஒட்டுக்களையும் கொண்டு வரலாம். இவ்வுருபன் வரிசை முறையைப் பயன்படுத்தி உருபன் பகுப்பாய்வியை வடிவமைப்பது சற்று எளிதாகிறது காட்டாக, உருபன் பகுப்பாய்வி எந்த உருபை முதலில் கையாளவேண்டும் போன்ற பல்வேறு செயல்முறைகளுக்கு இது மிகவும் பயன்படுகிறது இதனால் பகுப்பாய்வியின் வேகத்தையும் குறிப்பிட்ட அளவு அதிகரிக்க முடியும். மேலும் உள்ளீடு செய்யப்பட்ட சொல்லில் எந்தெந்த உருபன்கள் இடம்பெற்றுள்ளன என்பதையும் அவற்றின் இலக்கணக்குறிப்பையும் எளிதாக நம்மால் அறிய முடியும். 

     கணினி மொழியியல்   கோட்பாடுகள்   மற்றும்   நிரல் மொழி

    இக்கோட்பாடுகள் கணினிக்கு ஏற்ற வகையில் நம் இலக்கண விதிகளை மாற்றியமைக்கவும், கணினிக்கு உணர வைக்கவும் மிகவும் பயன்படுகின்றன. காட்டாகக் குறிப்புத் தொடர்கள் (Regular Expression) மற்றும் FSA ஆகியவற்றைக் கூறலாம். இவை கணினிக்கு ஒரு சொல்லையோ அல்லது அதன் பகுதியையோ கண்டறிய பெரிதும் உதவுகின்றன. பகுப்பாய்விக்குச் சொல்லையும் அதன் பகுதியாகிய அது கொண்டுள்ள விகுதியையும் உணர்ந்து அறிவது அவசியமாகிறது நாம் இத்தகைய கோட்பாடுகளைப் பயன்படுத்துவது அதனை எளிமைப்படுத்துகிறது. காட்டாக, தமிழில் உள்ள மொத்த கால இடைநிலைகளையும் கணினி உணர வேண்டும் எனில் கீழ்க்கண்ட ஒரு குறிப்புத் தொடர் வாக்கியம் போதுமானது.

    நிரல் மொழி என்பது கணினியுடன் நாம் ஊடாடுவதற்கு உதவக்கூடிய ஒன்று இதனைக் கணினிக்கும் நமக்கும் இடையே உள்ள ஒரு மொழிப்பெயர்ப்பாளர் என்று சொன்னால் மிகையாகாது. குறிப்பாக இயற்கை மொழி ஆய்வுகளுக்கு பெரும்பாலும் நிரலாளர்கள் பைத்தான், பேர்ல், ஜாவா, சி++ போன்ற நிரல்களைத் தேர்வு செய்வார்கள். இவற்றுள் பைத்தான் நிரல் மொழி மிகவும் நெகிழ்வுடன் இருக்கும். ஏன் எனில் இந்நிரல் மொழியில் ஏற்கனவே இயற்கை மொழி ஆய்வுக்கென பல வல்லுனர்கள் வடிவமைத்த நிரல்திட்டங்கள் பயன்படுத்தும் வடிவத்தில் கிடைக்கின்றன. எனவே மேற்கூறிய தலைப்புகளில் கவனம் செலுத்துவதன்மூலம் ஒரு மொழிக்கு உருபனியல் பகுப்பாய்வியை உருவாக்குவது எளிதாகிறது. இவ்வாறு உருவாக்கப்படும் உருபனியல் பகுப்பாய்வியின் வெளியீடு (output) தொடரியல் பகுப்பாய்வி (Syntactic Parser)எனப்படும் கருவிக்கு உள்ளீடாக வழங்கப்பட்டு இயந்திர மொழிபெயர்ப்பை (Machine Translation) மேற்கொள்ள மிகவும் துணைபுரியும். இதுபோன்ற கருவிகளைத் தமிழாசிரியர்களும் , மொழியியல் வல்லுனர்களும் , கணினி வல்லுனர்களும் இணைவதன்மூலம் மட்டுமே துல்லியமாகச் செய்ய இயலும்.

    துணைநூற்பட்டியல்

    1.Chomsky, Noam. Logical syntax and Semantics – Their linguistic Relevance- Language Volume 31. No.1 (Jan-Mar 1995).

    2.Cook, Vivian – Mark Newson. Chomsky’s Universal grammar- Blackwell Publications

    3.Daniel , Jurafsky – James H. Martin Speech and Language Processing – 2000, A Simon & Schuster Company

    4.DeivaSundaram N. கணினித்தமிழ் வளர்ச்சிக்கான அடிப்படைத்திட்டப் பணிகள் – An article presented in infitt conference 2010.

    5.Kothandaraman-.Pon. A grammar of contemporary literary Tamil.  IITS -1997.

    6 Kothandaraman-.Pon. Tamil studies selected papers. Ambuli Publication-2001.

    7.Kothandaraman-.Pon. ‘நீங்களும் தவறின்றித் தமிழில் எழுதலாம்’. Ambuli Publication-2001.

    8.Krishnamoorthy, Badriraju. The Dravidian Languages. Cambridge University Press -2003

    9.Verma S.K, N. Krishanaswami. Modern Linguistics -An Introduction- Oxford University Press – 1989.

     

     

     

    Share
  • கூடார வல்லி!

    -நிலவளம் கு.கதிரவன்

    முன்னுரை :-

    வேயர் குலக்கொடியாம் ஆண்டாளும், மற்ற தோழியர்களும் பாவை நோன்பிற்காகத் தேவைப்படும் சங்கம், பறை, பல்லாண்டிசைப்பார், கோல விளக்கு, கொடி, விதானம் போன்றவற்றைக் கேட்டவர்கள் 27ஆம் பாடலான இப்பாசுரத்தில் நோன்பை முடித்தபின் தேவையானவற்றைக் கண்ணனிடம் கேட்கிறார்கள். 26 பாசுரங்கள் வரை மார்கழி நோன்பு, அதன் சிறப்பு, நோன்பு காலத்தில் கடைபிடிக்கப்பட வேண்டிய வழிமுறைகள்,மற்றும் நோன்பு காலத்தில் செய்யத் தகாத செயல்கள் எவையெவை? என்பது  விரிவாக விளக்கப்பட்டது.  ” கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா ” என்னும் இப்பாசுரம் பாவை நோன்பினை பாவையர்கள் முடித்துக் கொள்வதையும், முடித்துக் கொண்டதன் பயனாக கோரும் சம்மானங்களைப் பற்றியும் விரிவாக பேசுகிறது.

    கூடாரவல்லி:-

    ”கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா”  – என்னும் பாசுரத்திற்கு போகும் முன்னர் கூடார வல்லி நாளின் சிறப்பினைப் பற்றி சுருக்கமாக காண்போம்.

    கூடாரை வெல்லும் என்பது மருவிக் கூடார வல்லியானது.  கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா என்னும் பாசுரத்தைப் பாடியதும் திருமால் கோதைக்குத் திருமண வரம் தந்ததாக ஐதீகம்.  கூடார வல்லி என்ற நாளில் கோதை தன்னை கோபிகையாகப் பாவித்துக் கண்ணனை வேண்டி மற்ற கோபியர்களுடன் மாதம் முழுவதும் நோன்பிருந்த ஆண்டாள் அந்தக் குறை ஒன்றும் இல்லாத கோவிந்தனுடன் கூடிய நாள். தன்னிடத்தில் பக்தியில்லாதவர்களைக் கூட வெற்றி கொள்பவன் கோவிந்தன்.  தன்மேல் பக்தி கொண்டவர்களிடம் தோற்பவனும் அவனே.  மற்ற பாசுரங்களில் மார்கழி நோன்பிருக்கும் நியமங்களையும், செய்யத் தக்க, செய்யத் தகாத செயல்கள் யாது? என்பதைப் பற்றி பேசிய ஆண்டாள், இப் பாசுரத்தில் நோன்பை முடித்துக் கொள்ளும் முகத்தான், கண்ணனாகிய கோவிந்தனிடம் சன்மானம் கேட்கிறாள்.  எப்படிப்பட்ட சன்மானம்? இந்த உலகத்தில் உள்ளவர்கள் எல்லாம் மெச்சும் வண்ணம் கண்ணனையே சம்மானமாக கேட்கின்றாள்.  பரமனும் மனம் மகிழ்ந்து தூய்மையான பக்தையான கோதைக்கு தன்னையே அர்ப்பணிக்கின்றார்.

    ருக்மணி, சீதா, ஆண்டாள் கல்யாண வைபவங்களில் ஆண்டாள்-அரங்கர் கல்யாணம் உயர்வானது. கண்ணன் ருக்மணியையும், ராமன் சீதாப் பிராட்டியையும் தத்தம் அவதாரங்களில் முறையே திருமணம்  செய்து கொண்டனர்.  ஆனாள் இப்பூவுலகில் மானிடராக அவதரித்த ஆண்டாள், தெய்வத்தையே திருமணம் செய்து கொள்வதற்கு எவ்வளவு கடுமையான பக்தி வேண்டும்?  அதனால்தான் ஆண்டாள்-அரங்கர் கல்யாணம் மிகவும் உயர்வானது என பூர்வாசிரியர்கள் கூறுகின்றனர்.

    இன்றைய நாளில் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் சன்னிதியில் ஆண்டாள் சிம்மாசனத்தில் ஸ்ரீதேவி-பூதேவியுடன் ஸ்ரீபெரியபெருமாள் எழுந்தருளி, அவருடன் ஸ்ரீ ஆண்டாள், ரங்கமன்னார், கருடாழ்வார், மற்ற ஆழ்வார்கள், ஆசாரியர்கள் எழுந்தருளி சேவை சாதிப்பர்.

    கூடார வல்லியான இந்தச் சிறப்பான நன்னாளில் பெருமாளுக்கு அக்கார அடிசில் என்ற பால்சோறு நைவேத்யம் செய்யப்படுகிறது.  திருமண வரம் வேண்டும் கன்னிப் பெண்கள் விரதமிருந்து இன்று ஆண்டாள்-அரங்கரை சென்று சேவித்தால் திருமண  வரம் கைகூடுவது உறுதியாகும்.

    பாசுரம் :-

    கூடாரை வெல்லும்சீர் கோவிந்தா உந்தன்னைப்
    பாடிப் பறைகொண்டு யாம்பெறும் சம்மானம்
    நாடு புகழும் பரிசினால் நன்றாகச் சூடகமே
    தோள்வளையே தோடே செவிப்பூவே
    பாடகமே என்றனைய பல்கலனும் யாம்அணிவோம்
    ஆடை உடுப்போம் அதன்பின்னே பாற்சோறு
    மூடநெய் பெய்து முழங்கை வழிவாரக்
    கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்.

    பாசுரத்தின் பொருள் :-

     தன் அடி பணியாதவர்களையும் வெற்றி கொள்ளக் கூடிய சீர்மையான கல்யாண குணங்களைக் கொண்ட கோவிந்தனே!! உன்னை  வாயாரப் பாடி, வாய் படைத்த பயன் பெற்றமையால் நாங்கள் பெறும் வெகுமாதியானது யாதெனில், இந்த உலகமே புகழக் கூடிய பரிசினை உன்னிடமிருந்து பெற்று, எங்களை நாங்களே கை வளை, தோள் வளை, காதுகளுக்கு அணிந்து கொள்ளும் தோடும், செவிப்பூவான கர்ணப்பூவினையும், கால்களில் அணியக்கூடிய பாடகமாகிய பாத கடகத்தையும், இது போன்ற பல ஆபரணங்களையும் அணிந்து கொள்வோம்.  அதன் பின்னர் புதிய ஆடையை உடுத்திக் கொண்டு, நெய்யினால் மூடப்பட்ட பால் சோற்றினை உன்னோடும், நப்பின்னை பிராட்டியோடும், மற்ற தோழியர்களோடும்  சேர்ந்து, கூடியிருந்து குளிர்ந்து உண்போம். வந்திடுவாய் கண்ணா என்று கோதைப் பிராட்டி கூறுகிறாள்.

    விளக்கவுரை:-                         

    இப் பாசுரத்தில் கோவிந்த நாமத்தினையும், அத்தகையை கோவிந்தனுக்கு கூடியவர் யார்? கூடாதார் யார்?, பாவையர்கள் அணிந்து கொள்ளும் பல்கலன்கள், நோன்பை முடிப்பதற்கு கண்ணனிடம் கேட்கும் வெகுமதிகள், விரதம் முடித்த பின்னர் கூடியிருந்து உண்ணும் அக்கார அடிசிலாகிய பாற்சோறு போன்ற பல்வேறு செய்திகளை ஆண்டாள் விளக்குகிறார்.

    கூடாரை வெல்லும் சீர்மை:-

    தம்மோடு மாற்றுக் கருத்து கொண்டவர்களை, தன்னோடு இல்லாதவர்களை, தன்னை ஏற்றுக் கொள்ளாதவர்களைக் கூட எதிரி, பொல்லாதவர் என்று கடுமையாகக் கூறாமல் கூடாரை என்று மென்மையான சொல்லை ஆண்டாள் கையாளுகிறார். மாற்றாறை மாற்றழிக்க வல்லானை என்று பாடியவள் அல்லவா?  அப்படிப்பட்ட சர்வேஸ்வரனான நாராயணன் நாமத்தினை சங்கீர்த்தனம் செய்யாதவர்கள், அவன் திவ்ய கல்யாண குணங்களை பாடிப் புகழாதவர்கள் என அனைவரையும் தன்னுடைய சீர்மைக் குணங்களால் எளிதில் வெற்றி கொள்பவன் கோவிந்தன்.  அதாவது கூடாரை வெற்றி கொண்டு அருள்  பாலிப்பான்.  கூடினவர்களிடம் தான் தோற்று அருள் புரிவான்.  அரக்கர்களை வதம்செய்து திருத்துவான்.  அடியவர்களிடம் தோற்று மகிழ்விப்பான். அம்பினால் தோற்கச் செய்வான். அன்பினில் வசப்படுவான்.  அவனே அரங்கன்.  அவனே கோவிந்தன்.  அவனே பரமேஸ்வரன்.

    இப்படி அடியார்களை வதைக்கும் பகைவர்களையும், அரங்கனின் அருமை தெரியாமல் எதிர்க்கும் விரோதிகளையும் வெற்றி கொள்வான்.  பள்ளி கொண்ட அரங்கனின் திருமுற்றத்து அடியார்கள், மால்கொள் சிந்தையரான மெய்யடியார்கள், பேராளன் பேரோதும் பெரியோர்களை  ஒருக்காலும் பிரிய மாட்டேன் என்றிருக்கும் அடியார்களிடம் தோற்று மகிழச் செய்வான்.

    கோவிந்தன் நாமம் :-

    ஸ்ரீ ஆண்டாள் முந்தைய இருபத்தாறு பாசுரங்கள் வரை, பரமாத்மாவின் பல்வேறு திருவவதாரங்களைப் பற்றி பேசி பரவசப் பட்டவள், இப் பாசுரத்தில் மட்டும் கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா என்று கோவிந்த நாம சங்கீர்த்தனத்தை கூறுகிறார். இதைத் தொடர்ந்து இருபத்தெட்டாவது பாசுரத்தில் ” குறைவொன்றுமில்லாத கோவிந்தா ”, என்றும், இருபத்தொன்பதாவது பாசுரத்தில் ” இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா”, எனவும் தொடர்ந்து மூன்று பாசுரங்களில் கோவிந்தன் புகழ் பாடுகிறார்.  காரணம் பாவை நோன்பு முடிந்துவிட்டது.  பறை என்கின்ற கைங்கர்ய ஞானத்தைப் பெற வேண்டும்.  ஆடை அணிகலன்களைப் பெற வேண்டும்.  தவிரவும் நோன்பு முடித்த பின்னர் கண்ணனோடும், நப்பின்னை பிராட்டியோடும் சேர்ந்து பாற்சோறு உண்ண வேண்டும்.  இவற்றை அளிப்பவன் சர்வேஸ்வரனான பகவான் கோவிந்தன் மட்டுமே.  அவனால் மட்டுமே முடியும். அளிப்பவனும் அவனே. அளித்துக் காப்பவனும் அவனே.

    கோ- என்றால் உயிர்கள், விந்தன்- என்றால் காப்பாற்றுபவன். நம்மை எல்லாம் அருகில் இருந்து காப்பவனே கோவிந்தன். மேலும், கோவிந்தா என்றால் எல்லா இடத்திலும், எல்லா காலத்திலும் நம்மோடு நீக்கமற நிறைந்திருப்பவன் என்று பொருள்.  இதைத்தான் ஸர்வத்ர கோவிந்த நாம சங்கீர்த்தனம் என்று கூறும்பொழுது, அனைவரும், கோவிந்தா, கோவிந்தா என்று அவன் நாமத்தைக் கூறுகின்றனர்.  கோவிந்தா என்பதற்கு பல பொருள் உண்டு. பகவானின் தசாவதாரங்களை குறிப்பது கோவிந்தா.  கோவிந்தா என்றால் வாக்கு, பசு,மாடு, கன்று, பூமி, மோட்சம் அளிப்பவர், நீர், ஆயுதம், பர்வதம் என்னும் மலை, புலன்கள், புலன்களை அடக்கி ஆள்பவர், வேதமோதுவதால் அடையக் கூடியவர்., கூப்பிடு தூரத்தில் இருப்பவர், துதிக்கும் அல்லது துதிக்கப்படுபவர் என்று பல அர்த்தங்களை பூர்வாசிரியர்கள் கூறுகின்றனர்.

    ஆதிசங்கரர் தனது பஜகோவிந்தத்தில், கோவிந்தா என்ற திருநாமம், மனிதன் வாழ வேண்டிய முறை, அது ஒரு தத்துவ உபதேசம், நமக்கு விவேகத்தையும், வைராக்கியத்தையும் அளிக்கும் ஞானச் சொல் என்று கூறுகிறார்.  எனவே கோவிந்தா என்றால் பாவம் விலகும். மோட்சத்திற்கான தடைகள் விலகும்.

    கலியுகத்தில் பகவானை தரிசிப்பதற்கு ஒரே வழி நாம சங்கீர்த்தனம் இசைப்பதுதான். அவன் நாமம் இசைக்கும்போது நமக்கு மிக அருகில் வருகின்றான் கோவிந்தன்.  இப்படி பகவானின் பஞ்ச நாமாக்களான, ராமா, கிருஷ்ணா, கோவிந்தா, நாராயணா, நரசிம்மா என்பதில் நடுநாயகமாக இருக்கும் கோவிந்த நாமத்தை ஆண்டாள் சிறப்பித்துக் கூற காரணம் நாமெல்லாம் அவன் திருநாமத்தை கூறி உய்வடைய வேண்டும்.  தினசரி நாம சங்கீர்த்தனத்தை இசைத்து அவன் அன்பைப் பெற வேண்டும் என்பதற்காகத்தான்.

    நாடு புகழும் பரிசு:-

    ”உன்றன்னைப் பாடிப்பறை கொண்டு யாம்பெறு சம்மானம், நாடு புகழும் பரிசினால் நன்றாக” – என்று பாடுகிறார் ஆண்டாள். வாயினால் பாடி, கேசவனைப் பாட, முகில்வண்ணன் பேர்பாட, மைத்துனன் பேர்பாட என்று மற்ற பாசுரங்களில் நாம சங்கீர்த்தனத்தில் பாடி மகிழ்ந்தவள் கோதை.  அப்படிப் பாடிய நானும், தோழியரும் உன்னிடமிருந்து  கைங்கர்ய ஞானம் என்ற பறையை பெற்றுக் கொண்ட பின்னர்,  இந்த உலகமே புகழும் வண்ணம், எவ்வித அபிப்ராய பேதமும் இல்லாமல், எல்லோரும் ஏற்கும்படியான உயர்ந்த சபையில் பெறப்படும் பரிசினை பெறப் போகிறேன் கண்ணா என்கிறாள் ஆண்டாள்.

    உலகமே ஆமோதிக்கும்படியான, புகழும்படியான பரிசு எப்படிப்பட்டதாக இருக்கும்? அப்பரிசு எவ்வகையில் உயர்ந்ததாக இருக்கும்? ராமர் பட்டாபிஷேகத்தின்போது, சீதாப்பிராட்டி அனுமனுக்கு அளித்த முத்து மாலையைப் போன்றோ, பலராமனாக இருக்கின்றபோது ராமர் பட்டாபிஷேக காட்சியைக் காண்பதற்காக, அனுமனை அழைத்து வர பெரிய திருவடியான கருடாத்மனையே தனது தோளில் சுமந்து வர அனுப்பினாரே பரமாத்மா. அப்படிப்பட்ட ஒன்றாக இருக்குமா? திரௌபதிக்கு தக்க சமயத்தில் வஸ்திரம் தந்து காத்தாரே அப்படிப்பட்டதா? பஞ்ச பாண்டவர்களுக்கு யுத்த வெற்றி வழங்கி தர்மத்தை நிலைநாட்டினாரே அப்படிப்பட்ட பரிசா? அல்லது அதற்கும் மேலானதாகவா? என்று  நாம் ஆச்சர்யிக்கும் வகையில் கேட்கிறாள் கோதை.

    பல்கலனும் யாமணிவோம் :-

    பரமாத்மாவிடம் நாடு புகழும்படியான பரிசினை தந்தருள வேண்டும் என்று கேட்ட ஆண்டாள் தொடர்ந்து, இந்த நோன்பு முடிந்த பின்னர் நாங்கள் அணியத் தக்க புதிய ஆடைகளை நீ தந்து நாங்கள் அணிய வேண்டும். அதோடு கையில் அணியக் கூடிய காப்பும், தோளில் அணியக் கூடிய வளைகள், காதுகளில் அணிந்து கொள்ளும் தோடு, காதின் மேலே அணியும் செவிப்பூ என்னும் கர்ணப்பூ,  காலுக்கு அணியக் கூடிய பாத கடகம் என்னும் பாடகம் இவற்றோடு மேலும் புதுப்புது அணிகலன்களை கிருஷ்ணனாலும், நப்பின்னை பிராட்டியாலும் வழங்கப்பட்டு அவைகளை நாங்கள் அணிந்து கொள்வோம் என்று பூரிக்கிறார்கள்.

    அக்கார அடிசில் :-

    “ஆடையுடுப்போம், அதன்பின்னே பாற்சோறு, மூடநெய் பெய்துமுழங்கை வழிவார ”-  இதுகாறும் இயம நியமங்களோடு பாவை நோன்பு இருந்தாகிவிட்டது.  இன்று நோன்பை முடித்துக் கொள்ளும் நாள். இன்றைக்கு விரதத்தை முடிப்பதற்காக ஸ்ரீ கிருஷ்ணனுக்கு நைவேத்யம் செய்து பின்னர் நாம் பிரசாதத்தை உண்ண வேண்டும்.  எப்படிப்பட்ட பிரசாதம்? அதை எப்படி உண்பதாம்? சொல்கிறாள் ஆண்டாள்.  அதாவது அரிசி ஒருமடங்கும், பால் இரண்டு மடங்கும் சேர்த்து வேகவைத்து, பாலிலே வெந்த சோறு மறையும் வண்ணம், ”நெய்யிடை நல்லதோர் சோறும்” என்றாரே பெரியாழ்வார், அப்படி நெய்மிதக்க இனிப்புச் சோறு தயாரித்து, படையலிட்டு பின்னர் அதை அள்ளி, நெய்யெல்லாம் முழங்கையில் ஒழுகும் வண்ணம் ரசித்து, சுவைத்து  உண்பார்களாம்.  ஸ்ரீ ஆண்டாளுக்கு மிகவும் உவப்பான இப்பாற் சோறுதான் அக்கார அடிசில் என்றழைக்கப்படுகிறது.  நூறுதடா அக்கார அடிசில் உனக்கு சமர்ப்பிப்பேன் என்று திருமாலிருஞ்சோலை பெருமானிடம் வேண்டிக் கொண்ட ஆண்டாள், அது நிறைவேறுவதற்குள் ரங்கமன்னாருடன் இரண்டறக் கலந்ததனால் அவ்வாக்கு ஆண்டாள் மானிடராய் இருக்கும் வரை நிறைவேறவில்லை.  பின்னர் வந்த ஸ்ரீ ராமானுஜர்தான் நூறுதடா அக்கார அடிசிலைப் பெருமாளுக்கு படையலிட்டு ஆண்டாள் வாக்கை நிறைவேற்றியவர்.  இதனால் ராமானுஜர், கோதை பிராட்டியால் ” எங்கள் அண்ணலே வாரும் ” என்று அழைக்கப்பட்டார்.

     கூடியிருந்து குளிர்வோம் :- 

    ”நைவேத்யம் பகவானுக்கு இல்லை, பக்தருக்கத்தான் “ – என்று கூறுவார் காஞ்சி மஹாப் பெரியவர். அதனால் விரதம் இருந்தாலும் பிரசாதத்தை மறுக்கக் கூடாது என்று கூறுவார்கள்.  அதனால் கண்ணன் கொடுத்த பரிசை ஆண்டாள் உண்டு நோன்பை நிறைவு செய்து கொள்கிறாள்.  தான் மட்டும் தன்னிச்சையாக உண்ணவில்லை.  கண்ணனை அழைக்கிறாள், நப்பின்னைப் பிராட்டியை அழைக்கிறாள். கூடியுள்ள தோழிமார்களை எல்லாம் அழைத்து, நாமே கண்ணனின் சோறாகவும், கண்ணனே நமக்கு சோறாகவும் கூடியிருந்து உண்டு பேரின்பம் காண்போம்!!  வாருங்கள் என்று   கூட்டத்தை அழைக்கிறாள். சமபந்தி போஜனா முறையை அன்றே நமக்கு அறிமுகப்படுத்தியவள் கோதை நாச்சியார்.  இப்படி கூடியிருந்து குளிர்ந்து நோன்பை முடித்த பின்னர், கோதைக்கு தன்னையே பரிசாக, இவ்வுலகம் ஏற்கும் வண்ணம் அளித்தாராம் அரங்கன்.

    பாசுர உள்ளுறை :-

    மேலோட்டமாகப் பார்த்தால் நோன்பு முடித்தல், பாவையர் அணிந்துகொள்ளும் அணிகலன்கள், பாற்சோறு என்பதாகத்தான் நம்மால் அறிய முடிகிறது.  ஆனால் உள் பொருளாக, மறையாக ஞான தத்துவத்தை நமக்கு போதிக்கிறாள் ஆண்டாள்.

    1. பல்கலன் என்று சொல்வது ஞானம், பக்தி, வைராக்யத்தைக் குறிக்கும்.
    2. சூடகம் என்பது நம்மையெல்லாம் ரட்சித்துக் காக்கும் கடவுளை காப்பாக உருவகப்படுத்துகிறது.
    3. ஸ்ரீவைஷ்ணவர்கள் தங்கள் தோளில் அணியும் சங்கு, சக்கர முத்திரைகள் தோள்வளையாக கூறப்படுகிறது.
    4. த்வயம் என்று சொல்லக் கூடிய பக்தி செவிப்பூவாக உணர்த்தப்படுகிறது.
    5. காலுக்கணியும் பாடகம் என்பது சரணாகதியை போதிக்கிறது.
    6. அடியார்கள் பரமனுக்கு உரிமையானவர் என்பதைக் கூறுகிறது ஆடை என்ற சொல்.
    7. பகவத் கைங்கர்யத்தைப் பாங்காய் விளக்குகிறது பாற்சோறு.
    8. மூட நெய்பெய்து என்ற சொல்லாடலால், ஆத்மார்த்தமாக அகந்தையின்றி செய்யப்படும் பகவத் சேவையை வலியுறுத்துகிறது.
    9. இறுதியில் கூடியிருந்து குளிர்வோம் என்பதன் மூலம் மோட்ச சித்தியை அடைவோம் வாருங்கள் என அழைக்கும் வண்ணத்தில் உள்ளுறையாக உணர்த்தப்பட்டுள்ளது.

    முடிவுரை :-

    ஸ்ரீ ஆண்டாளின் திருப்பாவை முப்பது பாசுரங்களில், இப்பாசுரம் மிகவும் தனித்துவம் வாய்ந்ததாகும். இதை பக்தி சிரத்தையுடன் பாராயணம் செய்தால் பக்திச் செருக்கு, ஞானச் செருக்கின்றி வைராக்யத்துடன் வாழலாம்.  மேலும் திருமணமாகாத பெண்கள் விரதமிருந்து, இப்பாடலை பாராயணம் செய்தால் விரைவில் திருமணம் கைகூடும்.  அவர்களுக்கு எவ்விதத் தடைகளும், எதிரிகளும் இருக்கமாட்டார்கள். வாருங்கள் நாமும் அரங்கனுக்கு அக்கார அடிசில் நைவேத்யம் செய்து ஸ்ரீஆண்டாள்-அரங்கன் பேரருளைப் பெறுவோம்.

                                      ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்!!

    Share
  • திருமந்திரத்தில் சில சிந்தனைத் துளிகள் 43

    க. பாலசுப்பிரமணியன்

    பற்றற்ற நிலைக்கு எப்படிச் செல்வது?

    திருமூலர்

    எல்லா உறவுகளையும் விலக்கிவிட்டு இறைவனோடு சிந்தனையால் ஒன்றாகி இருப்பது என்பது விரும்பத்தக்க ஒன்றுதான். ஆனால் ஒரு குடும்பத்தில் ஒரு சமூகத்தில் அங்கத்தினராக இருக்கின்ற நாம் எவ்வாறு அனைத்தையும் துறந்து வாழமுடியும்? உலகம் என்பது அனைத்து மக்களோடும் சேர்ந்து இருப்பது தானே என்ற எண்ணம் நமக்குள் எழுகின்றது. எல்லோராலும் உண்மையான துறவு என்ற நிலைக்குச் செல்லமுடியாது. அதற்கான அவசியமும் இல்லை. இறைவனை உணருவதற்கு நாம் இந்த சமூகத்தில் அங்கத்தினராக இருப்பதில் எந்தத் தவறுமில்லை. ஆனால், இந்த உறவுகளுக்குள் ஏற்படும் பற்றுக்களை ஆசாபாசங்களை நாம் அறிந்து கொண்டு அவைகளுக்கு அடிமையாகாமல் இருப்பது அவசியம். உறவுகள் அன்பை வளர்க்கவும் செய்யும். ஆனால் அதே உறவில் அளவற்ற பற்று வைத்துவிட்டால் அதுவே துன்பத்திற்கு அடிப்படையாக அமையவும் வாய்ப்புக்கள் உண்டு. அதனால்தான் முன்காலத்தில் நமது பெரியோர்கள் “தாமரையிலைத் தண்ணீர் போல் வாழக் கற்றுக்கொள்ள வேண்டும்” என்று அறிவுறுத்தினார்கள்.

    இந்த சம்சார வலைக்குள் விழுந்து துயரப்பட்ட பட்டினத்தாரோ இவ்வாறு புலம்புகின்றார்:

    மெய்வாழ்வை நம்பி விரும்பிமிக வாழாமல்

    பொய்வாழ்வை நம்பிப் புலம்பினேன் பூரணமே

     பெண்டுபிள்ளை தந்தைதாய் பிறவியுடன் சுற்றமிவை

    உண்டென்று நம்பி யுடலழிந்தேன் பூரணமே

    உறவு என்னும் பந்தத்தில் இருந்து ஆசைக்கு அடிமையாகி பிறப்பு-இறப்பு என்னும் சக்கரத்தில் மாட்டிக்கொண்டு படுகின்ற துயரை தனக்கே உரிய பாணியில் மாணிக்கவாசகர் கூறுகின்றார்

    எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்

    மெய்யே உன் பொன்னடிக் கண்டின்று வீடுற்றேன்

    இந்தத் துயரை நாம் வள்ளலாரிடமும் காண்கின்றோம்.

    தாயா ரிருந்தென்ன தந்தையு மிருந்தென்ன

    தான்பிறவி யுறவு கோடி

    தனமலை குவித்தென்ன கனபெயரெடுத்தென்ன

    தாரணியை யாண்டுமென்ன …

    …,,,,,,,,,,,,,,

    யார் மீது உன்மன மிருந்தாலு முன்கடைக்

    கண்பார்வை யது போதுமே…

    இதனை அறிந்தபின்பும் கூட நாம் வாழ்க்கை என்ற மாயச்சக்கரத்தில் விழுந்து ‘எனக்கு இது வேண்டும் அது வேண்டும்” என்றும் “இது இல்லாமல் நான் எப்படி உயிர் வாழ்வது’ என்பது போன்ற தவறான கருத்துக்களை வாழ்க்கைக்கு முதலீடாக்கி வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.  இதை விளக்கும் வகையில் அமைந்துள்ளது திருமூலரின் ப்பாடல்

    மனத்தில் எழுந்ததோர் மாயக்கண்ணாடி

    நினைப்பின் அதனில் நிழலையும் காணார்

    வினைப்பயன் போக விளக்கியும் கொள்ளார்

    புறக்கடை இச்சித்து போகின்ற வாறே

    மனப் பக்குவம் அடையாதவருக்கு நமது மனம் ஒரு மாயக்கண்ணாடியாகத் தான் விளங்கும். இந்த மாயையை அறிந்துகொள்வதும், அதன் நிழலிலிருந்தும் விடுபட்டிருப்பதும்தான் வாழ்க்கையின் சீரிய நோக்கம்

    இந்த உடல் சார்ந்த, உள்ளம் சார்ந்த, உறவு சார்ந்த  மாயப் பற்றினை அறிந்திட   முயற்சித்தல் மிக்க அவசியம். பற்றற்றவர்களாகத் திரிந்த ஞானியர்கள் யோகிகள் இந்தக் கருத்தைப் பின்பற்றியது மட்டுமின்றி அதே குறிக்கோளுடன் வாழ்ந்து வந்தார்கள். அவர்களுக்கு இருந்த ஒரே பற்று இறைவனின் திருவடி ஒன்றுதான். இதை விளக்கும் வகையில் அமைந்துள்ளது திருமூலரின் கீழ்கண்ட பாடல்

    பற்றற் றவர்பற்றி நின்ற பரம்பொருள்

    கற்றற் றவர்கற்றுக் கருதிய கண்ணுதல்

    சுற்றற் றவர்சுற்றி நின்றாய் சோதியைப்

    பெற்றுற் றவர்கள் பிதற்றொழிந் தாரன்றே

    இந்தப் பற்றற்ற நிலையை அடைவதற்கு அந்த இறைவனின் தாள்களையே சரணடைய வேண்டும். இந்தக் கருத்தை வள்ளுவரும் அழகாக வலியுறுத்துகின்றார்

    பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்

    பற்றுக பற்று விடற்கு

    ஆனால் நிஜ வாழ்க்கையில் பலர் பற்றற்றவர்கள் போல் நடித்து உள்ளத்தில் பற்றுக்களை பேணிக்கொண்டும் வளர்த்துக்கொண்டும் வருகின்றனர். இதைவிடக் கொடிய செயல் ஒன்றுமில்லை என்பது வள்ளுவர் கருத்து

    நெஞ்சின் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து

    வாழ்வாரின் வன்கணா ரில்

    பற்றற்ற நிலையை அடைவதற்கு இறைவன் அருள் தேவைப்படுகின்றது. ஆனால் இறைவனிடம் நம்பி சரணடைந்தால் நமக்கு அவனுடைய பரவச நிலையின் அடையாளம் தெரிகின்றது. அந்தப் பரவச நிலையை நம்மிடையே மாணிக்க வாசகர் தெளிவாக்குகின்றார்

    வினைப்பிறவி என்கின்ற வேதனையில் அகப்பட்டுத்

    தனிச்சிறிதும் நினையாதே தளர்வெய்திக் கிடப்பேனை

    எனைப்பெரிதும் ஆட்கொண்டென் பிறப்பறுத்த இணையிலியை

    அனைத்துலகத் தொழுந்தில்லை  அம்பலத்தே கண்டனே …

    (தொடருவோம்)

    Share
  • உணர்ச்சி சிதையாதே

     

    சரஸ்வதிராசேந்திரன்

     

    அருமை மகனே அன்புருவே

    ஆசைமகனே கேளாயோ

    உடலில் பலமே இருந்தென்ன

    உள்ளத்தில் திறமே வேண்டுமடா

    நடையில் பணிவுடன் நற்குணமும்

    நாவில் நற்சொல் நல்மனமும்

    கொண்டால் அல்லவா நீ மனிதன்

    உறக்கம் போக்கு வையத்தில்

    ஊக்கம் பிறக்க பாடுபடு

    தேடும் வாழ்வில் வெற்றிதனை

    சேர்க்கும் மணக்கும் நல்லுணர்வே

    நல்லோர் ஏற்க நன்மைசெய்

    உயர்ச்சிஅடைய வழி சொன்னேன்

    உணர்ச்சி சிதைந்தால் வாழ்கையில்லை

    சரஸ்வதிராசேந்திரன்

    Share
  • இந்த வார வல்லமையாளர் (256)

    இந்த வார வல்லமையாளராக இளமுனைவர் திரு பொன்.சரவணன் அவர்களை தேர்ந்தெடுப்பதில் வல்லமை மகிழ்ச்சி அடைகிறது.

    திருத்தம் சரவணன் எனும் பெயரில் வலைபதிவுகளில் எழுதிவரும் சரவணன், கல்லூரியில் தமிழ் பேராசிரியராக பணியாற்றுகிறார். தமிழ் இலக்கியங்களை புதுமையான பார்வையில் திருத்தி எழுதும் இவரது வழிமுறையை ஒட்டி தன் பெயரை ‘திருத்தம் சரவணன்’ என மாற்றிக்கொண்டதாக குறிப்பிடுகிறார்.

    சங்க இலக்கியத்தில் கழுதை, சங்க இலக்கியத்தில் குதிரை எனும் இவரது கட்டுரைகளை பாராட்டி இவரை வல்லமையாளராக அறிவிக்கிறோம்.

    1

    கட்டுரையில் இவர் குறிப்பிடுவதாவது

    “கழுதை – என்றாலே தெருக்களில் ஆங்காங்கே திரிந்தவாறு காகிதங்களையும் சுவரொட்டிகளையும் தின்றவாறும் கண்ட இடங்களில் படுத்துக்கொண்டும் இருப்பதான அந்த ‘பாவப்பட்ட’ விலங்குதான் அனைவருக்கும் நினைவுக்கு வரும். இப்போது காகிதங்களுக்குப் பதிலாக நெகிழிப்பைகள் பெருகிவிட்டதால் பாவம் இந்தக் கழுதைகள் அறியாமல் அவற்றைத் தின்று செரிக்கமுடியாமல் மரணத்தைத் தழுவிக் கொண்டிருக்கின்றன. விளைவு? துணியை வெளுக்கும் தொழிலைச் செய்வோரிடம் தவிர வேறெங்கும் கழுதைகளையே பார்க்கமுடியாத நிலை தோன்றிவிட்டது. கழுதைப்பாலுக்கு அவ்வப்போது மவுசு கூடுவதால் கழுதைகளை இன்னும் உயிருடன் நடமாட விட்டிருக்கின்றார்கள். ஒருகாலத்தில் பொருள் போக்குவரத்துக்கு மிகவும் உதவியாய் இருந்துவந்தது கழுதை இனம் தான். மாடுகளும் உதவும் என்றாலும் அதற்கு வண்டி கட்டவேண்டும். கழுதைக்கு மட்டும் தான் வண்டியே தேவையில்லை. எவ்வளவு பெரிய பாரத்தினையும் தாங்கிக்கொண்டு செல்லும். பொதி சுமப்பதற்கென்றே பிறந்த இந்த விலங்கினைப் பற்றிச் சங்க இலக்கியங்கள் கூறும் செய்திகளை இங்கே விரிவாகக் காணலாம்.

    கழுதை – வேறு பெயர்களும் காரணங்களும்:

    கழுதை என்னும் விலங்கினைக் குறிக்க கழுதை என்னும் பெயரைத் தவிர, அத்திரி, வேசரி ஆகிய பெயர்களையும் சங்க இலக்கியங்கள் பதிவு செய்துள்ளன. இவற்றுள் அத்திரியும் வேசரியும் கோவேறு கழுதையைக் குறிக்கவே பயன்படுத்தப் பட்டுள்ளன.

    கோவேறு கழுதை என்பது கழுதைக்கும் குதிரைக்கும் கலப்பினமாகப் பிறந்ததாகும். அத்துதல் என்பது தனித்தனியான இரண்டு பொருட்களை இணைத்து ஒன்றாக்குதல் என்னும் பொருளைத் தரும். கழுதை இனத்தையும் குதிரை இனத்தையும் கலந்து உருவாக்கிய இனம் என்பதால் கோவேறு கழுதைக்கு ‘அத்திரி’ என்ற பெயர் ஏற்பட்டிருக்கலாம்.

    சங்க இலக்கியத்தில் கழுதை:

    சங்க இலக்கியங்களில் கழுதையைப் பற்றியும் கோவேறுகழுதையைப் பற்றியும் சில பாடல்களில் கூறப்பட்டுள்ளன. கழுதைளைப் பற்றிக் கூறும்போது அதன் செவிகள் நீளமானவை என்றும் உட்குழிந்த நிலையில் இருப்பவை என்றும் கூறப்பட்டுள்ளது. கழுதைகளின் வாயானது வெளுப்பாக இருந்ததாகச் சங்க இலக்கியம் கூறுகிறது. உப்பளங்களில் விளைந்த உப்பின் மூட்டைகளையும் மிளகுப் பொதிகளையும் கழுதைகளின்மேல் ஏற்றிக்கொண்டு வணிகர்கள் சென்றதைப் பதிவுசெய்துள்ளன. போரில் வெற்றிபெற்ற மன்னர்கள், தோற்ற மன்னர்களின் ஊர்களில் இருந்த தெருக்களில் எல்லாம் கழுதைகளைப் பூட்டி உழுது அவர்களை அவமானப்படுத்திய செய்திகள் சங்க இலக்கியங்களில் காணப்பெறுகின்றன. கோவேறுகழுதைகளைப் பற்றிக் கூறுமிடத்து, கடற்கழிகளிலும் கடற்கரைகளிலும் அத்திரி பூட்டிய தேரில் தலைவன் தலைவியைச் சந்திக்க வந்துசென்ற நிகழ்வுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வையை ஆற்றில் புனலாட்டு விழாவின்போது அத்திரிகளைப் பயன்படுத்திய செய்தியும் கூறப்பட்டுள்ளது. இனி கழுதைகளைப் பற்றியும் கோவேறுகழுதைகள் ஆகிய அத்திரிகளைப் பற்றியும் சங்க இலக்கியங்கள் கூறுகின்ற செய்திகளைத் தனித்தனித் தலைப்புக்களின் கீழ் விரிவாகக் காணலாம்.

    கழுதை:

    இந்தியாவில் குறிப்பாகச் சங்ககாலத் தமிழர்களால் வளர்க்கப்பட்ட கழுதைகளின் விலங்கியல் பெயர் ஈகூஸ் ஆப்ரிகானஸ் அசினஸ் ( ஏஃஊச் ஆfரிcஅனுச் ஆசினுச் ) ஆகும். கழுதைகளில் கருப்பு, பழுப்பு, வெளுப்பு உட்பட பல்வேறு நிறங்கள் உண்டென்றாலும் உடலமைப்புக் கூறுகளும் பயன்பாடும் அனைத்துக்கும் பொதுவானவையே. இதைப்பற்றிய சில செய்திகளைக் கீழே காணலாம்.

    கழுதையின் உடலமைப்பு:

    கழுதையின் செவிகள் குதிரைகளைக் காட்டிலும் நீளமானவை. சொல்லப்போனால், குதிரைக்கும் கழுதைக்கும் இருக்கும் முதல் வேறுபாடே செவிகள் தான். கீழ்க்காணும் சங்க இலக்கியப் பாடல் கழுதையின் நீண்ட செவிகளைப் பற்றிக் கூறியுள்ளது.

    நெடும் செவிக் கழுதை – அகம். 343

    கழுதையின் செவிகளைப் பற்றிக் கூறுமிடத்து, அவை உட்குழிந்து காணப்படும் என்று கீழ்க்காணும் பாடல் கூறுகிறது.

    அணர் செவிக் கழுதை – பெரும்.80

    இப்பாடலில் வரும் அணர்தல் என்ற சொல் உட்குழிதல் என்ற பொருள்படும்.

    கழுதையின் வாயைப் பற்றிக் கூறுமிடத்து, அவை வெண்மை நிறத்துடன் இருந்ததாகக் கீழ்க்காணும் பாடல்களில் பதிவு செய்துள்ளனர் சங்கப் புலவர்கள்.

    வெள் வாய்க் கழுதை – புறம். 15, 350.

    கழுதையின் பயன்பாடு:

    சங்ககாலத்தில் தமிழர்கள் பொதிசுமந்து செல்வதற்கே கழுதைகளைப் பெரிதும் பயன்படுத்தி இருக்கின்றனர். பெரும்பாலும் உப்பளங்களில் விளைந்த உப்பினை மூட்டைகளாகக் கட்டிக் கழுதையின் முதுகில் ஏற்றிப் பல இடங்களுக்குக் கொண்டு சென்றுள்ளனர். கடுமையான வெயிலைப் பொறுத்துக்கொண்டு கரடுமுரடான நிலங்களில் உப்புமூட்டைகளைச் சுமந்துகொண்டு கழுதைக் கூட்டம் சென்ற காட்சியினைக் கீழ்க்காணும் அகநானூற்றுப் பாடல் அப்படியே நம் கண்முன்னால் கொண்டுவந்து நிறுத்துவதைப் பாருங்கள்.

    அணங்கு உடை முந்நீர் பரந்த செறுவின்
    உணங்கு திறம் பெயர்ந்த வெண்கல் அமிழ்தம்
    குட புல மருங்கின் உய்ம்மார் புள் ஓர்த்து
    படை அமைத்து எழுந்த பெரும் செய் ஆடவர்
    நிரை பர பொறைய நரைப்புறக் கழுதை
    குறை குளம்பு உதைத்த கல் பிறழ் இயவின்
    வெம் சுரம் போழ்ந்த அஞ்சுவரு கவலை – அகம். 207

    கிழக்குக் கடலோரங்களில் கடல்நீர் பரந்த உப்பளங்களில் காய்ச்சலால் உண்டான வெண்கல் அமிழ்தமான உப்பினை மேற்குப் பகுதிகளுக்குக் கொண்டுசெல்ல வேண்டி, நல்நிமித்தம் பார்த்து, படைகொண்ட ஆடவர்கள் சூழ, உப்புமூட்டைகளைச் சுமந்தவண்ணம் வரிசையாகச் செல்கின்ற வெண்ணிற முதுகினை உடைய கழுதைகள் உதைத்ததால் பிறழ்ந்த கற்களையும் கடுமையான வெப்பத்தையும் உடைய அச்சந்தரும் வழியில்… என்று அந்த வழியைப் பற்றி விவரிக்கிறது மேற்காணும் பாடல்வரிகள்.

    உப்பு மட்டுமின்றி பல்வேறு விளைபொருட்களையும் கழுதைகளின் முதுகில் ஏற்றிக்கொண்டு சென்றுள்ளனர். மஞ்சள்நிறத் துணிகளில் மிளகுகளைப் பெரும்பொதிகளாகக் கட்டிக்கொண்டு அவற்றைக் கழுதைகளின் முதுகில் ஏற்றிக்கொண்டு வணிகர்கள் வேறிடம் நோக்கிச் செல்கின்றனர். அப்போது அந்தப் பொதிமூட்டைகள் பார்ப்பதற்குப் பழுத்த பலாப்பழங்களைப் போலத் தோன்றியதாகக் கீழ்க்காணும் பாடல் கூறுகிறது.

    தடவுநிலைப் பலவின் முழுமுதல் கொண்ட
    சிறுசுளைப் பெரும்பழம் கடுப்ப மிரியல்
    புணர்ப்பொறை தாங்கிய வடுவாழ் நோன்புறத்து
    அணர்செவிக் கழுதைச் சாத்தொடு வழங்கு – பெரும்.80

    பரந்து விரிந்து வளர்ந்திருந்த பலாமரத்தின் அடியில் காய்த்திருந்த பல சுளைகளையுடைய பெரிய பலாப்பழத்தின் மேற்புறம் போலத் தோன்றுகின்ற மிளகுப்பொதியினைத் தாங்கியதும் முதுகில் வடுக்களையுடையதும் உட்குழிந்த செவிகளையுடையதும் ஆன கழுதைக்கூட்டம் செல்கின்ற காட்சியை மேற்பாடல் வரிகள் விளக்குகின்றன.

    கழுதைகளைப் பொதிசுமப்பதற்கு மட்டுமின்றி உழவுக்கும் பயன்படுத்துவது பொதுவான வழக்கமே. ஆனால், சங்க காலத்தில் உழவர்கள் கழுதைகளைக் கொண்டு தமது விளைநிலங்களில் உழவு செய்ததாகப் பதிவுகள் இல்லை. காரணம், மாடுகளைப் பூட்டி உழுதல் என்பது பெருமைக்குரியதாகவும் கழுதைகளைப் பூட்டி உழுதல் என்பது பெருமையற்றதாகவும் அக்காலத்தில் கருதப்பட்டது. போரில் வெற்றிபெற்ற மன்னர்கள், தோற்றுப்போன மன்னர்களை அவமானப்படுத்துவதற்காக, அம்மன்னர்களின் கோட்டைக்குட்பட்ட நிலங்களில் கழுதைகளைப் பூட்டி உழுது வெள்ளைவரகு, கொள்ளு போன்றவற்றை வித்தியதாகக் கீழ்க்காணும் புறநானூற்றுப் பாடல்கள் கூறுகின்றன.

    உரு கெழு மன்னர் ஆர் எயில் கடந்து
    நிணம் படு குருதி பெரும் பாட்டு ஈரத்து
    அணங்கு உடை மரபின் இரும் களம்தோறும்
    வெள்வாய்க் கழுதைப் புல்இனம் பூட்டி
    வெள்ளை வரகும் கொள்ளும் வித்தும்
    வைகல் உழவ வாழிய பெரிது என – புறம். 392

    கடும்தேர் குழித்த ஞெள்ளல் ஆங்கண்
    வெள்வாய்க் கழுதைப் புல்இனம் பூட்டிப்
    பாழ் செய்தனை – புறம். 15

    கோவேறு கழுதை:

    கோவேறுகழுதை என்பது கழுதைக்கும் குதிரைக்கும் கலப்பினமாகப் பிறந்தது என்பதால் இரண்டின் குணங்களையும் கொண்டிருக்கும். எனவே இதன் விலங்கியல் பெயர் ஈகுஸ் அசினஸ் x ஈகுஸ் கபாலஸ் ( ஏஃஊச் அசினுச் x ஏஃஊச் cஅபல்லுச் ) ஆகும். கழுதைகள் பொதிசுமக்கும் திறன் கொண்டவை; ஆனால் கழுதைகளால் வேகமாக ஓடவோ நெடுந்தூரம் ஓடவோ இயலாது. குதிரைகள் வேகமாக நெடுந்தூரம் ஓடும் திறன் கொண்டவை. ஆனால், அவற்றால் பொதிசுமக்க இயலாது. குதிரை மற்றும் கழுதைகளின் கலப்பினமான கோவேறு கழுதைகளால் பொதிசுமக்கவும் முடியும்; நன்கு வேகமாக ஓடவும் முடியும். சங்க இலக்கியங்களில் அத்திரி என்றும் வேசரி என்றும் இவை குறிப்பிடப்பட்டுள்ளன.

    கடற்கரை மணற்பரப்பிலும், கடலின் கழிமுகப் பகுதிகளில் காணப்படும் சேற்றுநிலங்களிலும் நீரிலும் கூட அத்திரிகள் பாய்ந்தோட வல்லவை. அதனால் தலைவன் தலைவியைச் சந்திக்க அத்திரி பூட்டிய தேரில் வந்து செல்வது வழக்கம். இதைப்பற்றிக் கூறும் சில சங்கப்பாடல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

    கொடு நுகம் நுழைந்த கணைக்கால் அத்திரி
    வடி மணி நெடும் தேர் பூண ஏவாது …. – அகம். 350

    கழிமுகப் பகுதியில் இருந்த சேற்றின்மேல் ஓடிவந்ததால், அத்திரியின் உடலெல்லாம் சேறுபூசி இருந்ததாகவும் அதன் குளம்புகளின் கீழே செந்நிற இறால்கள் சிக்கி இருந்ததாகவும் கூறும் பாடல்வரிகள் கீழே:

    கழி சேறு ஆடிய கணைக்கால் அத்திரி
    குளம்பினும் சேஇறா ஒடுங்கின – நற். 278

    கழிமுகப் பகுதியில் இரவிலே தலைவன் அத்திரியின்மீது ஏறி வரும்போது கடற்கழி நீரில் இருந்த சுறாக்கள் அத்திரியின் காலைக் கடித்துப் புண் உண்டாகியதால் அது தளர்வாகச் சென்றதைக் கூறும் பாடல்வரிகள் கீழே:

    கழிச்சுறா எறிந்த புண் தாள் அத்திரி
    நெடு நீர் இரும் கழி பரி மெலிந்து அசைஇ – அகம். 120

    வையை ஆற்றில் புதுப்புனல் வந்தபோது புனலாட்டுத் திருவிழாவிற்கு ஆடவரும் பெண்டிரும் கூட்டம் கூட்டமாகச் செல்கின்றனர். அப்போது அவர்களுடன் குதிரைகளும் யானைகளும் கோவேறுகழுதைகளும் மக்களையும் பொருட்களையும் சுமந்துகொண்டு ஆற்றின்கரையே இடிந்துவிழுவதைப் போலச் செல்கின்றன. இதைப்பற்றிக் கூறும் பரிபாடல் வரிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

    மாவும் களிறும் மணி அணி வேசரி
    காவு நிறைய கரை நெரிபு ஈண்டி – பரி. 22

    முடிவுரை:

    கழுதைகள் மற்றும் கோவேறுகழுதைகளைப் பற்றிச் சங்க இலக்கியங்கள் பதிவுசெய்துள்ள செய்திகளை மேலே கண்டோம். சங்ககாலத்தில் மட்டுமின்றி இன்றுவரையிலும் கழுதைகள் தொடர்பான செய்திகள் தொடர்ந்து பதிவுசெய்யப்பட்டே வந்துள்ளன. கழுதைகள் தொடர்பாக வழங்கப்பட்டுவரும் பழமொழிகளே இதற்கொரு சான்றாகும். கழுதை கெட்டால் குட்டிச்சுவர், கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனது ஆகியவை அப்பழமொழிகளில் சிலவாகும். இப்பழமொழிகள் உணர்த்தும் உண்மையான பொருட்களை அறிந்துகொள்ள ‘கழுதையும் கட்டெறும்பும் குட்டிச்சுவரும் ‘ என்ற ஆய்வுக்கட்டுரையினைப் படிக்கலாம்.”

    வல்லமையாளர் பொன்.சரவணன் அவர்களுக்கு நம் நல்வாழ்த்துகள்.

    (இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், vallamaiselva@gmail.comvallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 

    Share