மார்கழி மணாளன் (மூன்றாம் பகுதி) – 26
க. பாலசுப்பிரமணியன்
திருப்புளியன்குடி
அருள்மிகு காசினிவேந்தர் பெருமாள் திருக்கோவில் (கள்ளபிரான் திருக்கோவில்)
பார்போற்றும் வேதங்களைப் பிரம்மனும் இழந்துவிடப்
பதுக்கிவைத்த சோமகனைப் பிடித்தவனே பாண்டுரங்கா !
பாற்கடலும் வைகுந்தமும் விட்டுவந்தாய் புவினோக்கி
படைத்தாயே பூவுலகில் புதியதோர் வைகுந்தமே !
கறந்திடவே பாலனைத்தும் கண்மறைவில் பசுவொன்றும்
கலங்கிட்ட மன்னவனும் களம்காண வந்திடவே
கண்மறைவில் காலமெல்லாம் வாழ்ந்தவனே வைகுந்தா
கள்ளனன்றோ கார்மேகா கனிந்துவந்தாய் காட்சிதர !
கள்வனென்ற பெயரெடுத்தாய் வெண்ணையுண்டு கோகுலத்தில்
கள்ளபிரான் பெயர்கொண்டாய் கள்வனின் உடைதன்னில்
கள்ளத்தனம் எத்தனையோ கோபியர்கள் கூட்டத்தினில்
கள்ளமனம் ஏதுமின்றி கருணைசெய்வாய் என்னிடத்தில் !
கோலாட்ட போதையிலே நிலைமறைந்த கோபியரின்
போராட்ட மனத்தினிலே தேரோட்டம் விட்டவனே !
மாறாட்டம் செய்யாமல் ஆடினாயே அனைவரோடும்
பாராட்ட வார்த்தையில்லை பரமாத்மா நீயன்றோ !
சரணமென்று வந்தவுடன் சங்கடங்கள் தீர்ப்பவனே
மரணமென்ற பயத்தினையே மனதிலிருந்து நீக்கிடுவாய்
கரணமிடும் வாழ்கையைக் கலக்கமின்றி மாற்றிடுவாய்
சரணமென்றே வந்துவிட்டேன் சந்நிதியே திறந்திடுவாய் !
ஓரடியை முன்வைத்தால் ஓடிவரும் பரந்தாமா
ஈரடியை வைத்தவுடன் ஈகையுள்ளம் கொள்பவனே
மூவடியால் உலகளந்து முக்திதந்த முகுந்தா
நாலடியில் உனைப்பாட நற்கதியே தந்திடுவாய் !