Blog

  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்…(259)

    அன்பினியவர்களே!

    அன்பான வணக்கங்கள். புத்தம்புது ஆண்டில் கிடைத்த வெற்றுத்தாளில் உங்களுடன் எனது மனக்கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ளும் மடலை வரையும் சந்தர்ப்பம் கிட்டியது ஓர் ஆனந்த அனுபவமே! எதைப் பேசுவது? எதை கிரகித்துக் கொள்வது? எதைப் பகிர்ந்துகொள்வது என்பது இன்றைய சமூக ஊடகவியலின் முன்னேற்றமா? இன்றி ஒரு தடைக்கல்லா? என்பது நிச்சயம் தர்க்கிக்கப்பட வேண்டிய ஒரு விடயமே!

    அரசியல், வியாபாரம் இவையிரண்டுமே சமூகத்தின் இருவேறு தூண்கள் எனும் நிலை பல சகாப்தங்களாக இருந்து வந்துள்ளது. அரசியலும், அரசியல்வாதிகளும் வகுக்கும் கொள்கைகள் ஒவ்வொரு நாட்டினதும் வியாபாரக் கூற்றைப் பாதிக்காமல் அதை வளர்ப்பதன் மூலம் சமூகத்தின் வாழ்வாதாரத்தைக் கூட்டும் வகையில் செயற்பட வேண்டும் என்பது ஜனநாயக மரபுகளின் கோட்பாடாக இருந்து வந்தது என்பது உண்மையே! ஒரு ஜனநாயக ஆட்சிமுறையில் வியாபாரம் அரசியலிலும், அரசியல் வியாபாரத்திலும் மூக்கை நுழைக்கக்கூடாது என்பது எழுதப்படாத சட்டமாகவே இருந்து வந்துள்ளது.

    ஆனால் இன்றோ?

    அரசியலே ஒரு வியாபாரமாக மாறிவிட்டதோ எனும் ஒரு நிலை எமது மனங்களில் ஓர் அச்ச உணர்வுடன் கூடிய நிலைப்பாட்டை தோற்றுவித்துள்ளது. இதை ஏதோ எமது பின்புல நாட்டு அரசியல் களங்களின் நிலைப்பாட்டின் அடிப்படையில் கூறுகிறேனோ என்று நீங்கள் எண்ணினால் அது ஒரு தவறான கண்ணோட்டமாகும். ஏனென்கிறீர்களா? நியாயமான கேள்விதான்… இன்றைய மேலைநாட்டு அரசியல் போக்குகளை நோக்கும் போது அதைப்பற்றிய விளக்கம் ஒரு புதுப்பாதையில் அரசியல் ஓடுகிறது என்பது புரிகிறது. காலங்காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் அரசியல் கோட்பாடுகளைப் புறந்தள்ளி இன்றைய சமூகப் பின்னணியோடு கலந்த ஒரு புதுவகையிலான அரசியல் பிறப்பெடுக்கிறதோ என்று எண்ணத்தோன்றுகிறது.

    அரசியல் பின்னணியில் பலகாலமாக அரசியல் களத்தினில் பயின்று ஒரு நிலையான அரசியல்வாதி என்று பெயர் பெற்றவர்களை நோக்கிய வாக்களர்களின் பார்வைகள் ஒரு புதிய திசையில் பரிணமிக்க ஆரம்பித்துள்ளது என்று கூறவேண்டும். இத்தகைய ஒரு நிலை தோன்றியதன் காரணம்தான் என்ன என்பதை எண்ணிப் பார்க்க வேண்டிய ஒரு நிலையில் நாம் இருக்கிறோம். அரசியல்வாதிகள் எனப் பெயர்பெற்றவர்கள் மக்கள் தம்மீது வைத்த நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்களாக நடந்து கொண்டார்களா என்பது கேள்விக்குறியே! தேர்தல் பிரசாரமேடைகளிலே தாரளாமாக மக்கள் மனங்களைக் கவரும் வகையில், அப்போதைய மக்களின் மனநிலைக்கு உகந்தவாறு ஏதோ பலவிதமான நிறைவேற்றமுடியாத, அன்றி நிறைவேறும் சாத்தியமே அல்லாத வாக்குறுதிகளை அள்ளி வீசிவிட்டுப் பின்பு பதவிக்கு வந்ததும் ஏதோ பல காரணங்களுக்கு அரசியல் சாயம்பூசி மக்களின் அபிலாஷைகளை முற்றிலும் நிராகரிப்பது அரசியல் நடைமுறை வழக்கமாகியதே மக்கள் அரசியல்வாதிகள் என்று வகுக்கப்பட்டவர்களின் மீது தமது நம்பிக்கையை இழந்ததற்கு முக்கிய காரணம்.

    அடுத்து அதிகாரம்பெற்று ஆட்சி அமைத்தவர்கள் நாட்டின் நன்மைக்காக எடுக்கும் நடவடிக்கைகளின் உண்மையான தரத்தை ஆராயாமல் அனைத்தையும் எதிர்க்கும் மனப்பான்மையில் எதிர்க்கட்சிகளில் இருப்பவர்கள் நடந்துகொள்வதும், மக்களுக்கு நன்மை பயக்கும் சில வியுக்திகளை எதிர்க்கட்சியில் உள்ளவர்கள் பிரஸ்தாபிக்கும்போது கொள்கைகளின் அடிப்படியில் நாட்டின் நன்மையைப் புறந்தள்ளிவிட்டு ஆட்சியில் உள்ளோர் அநாயசமாக நடந்து கொள்வதும் மக்களின் மனங்களில் விரக்தி ஏற்பட வழிவகுக்கிறது.

    இத்தகைய நிலைமைகளின் விளைவை இன்று நாம் அமெரிக்க நாட்டின் அரசியல் களத்தில் பார்க்கிறோம். அரசியல்வாதிகளில் நம்பிக்கையிழந்த மக்கள் அரசியல் அனுபவம் ஏதுமற்ற ஒரு வியாபார முதலாளியின் கைகளில் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்திருப்பது அரசியல் இன்று வியாபாரத்தளமாக மாறியிருக்கிறது என்பதற்கு அத்தாட்சியாகிறது. அதற்காக நான் வியாபரத்தில் ஈடுபட்டவர்கள் ஒரு நாட்டை ஆள்வதற்கு தகுதியற்றவர்கள் என்று கூறவில்லை. எதுவித அரசியல் அனுபவமுமின்றியவர்கள் ஒருநாட்டின் தலைவராகும்போது அரசியல் நாகரிகத்தை மீறும் வகையில் நடந்து கொள்ளும் ஒரு நிலை ஏற்படுகிறது. அது குறுகியகால வெற்றியை அவர்களுக்கு நல்கலாம், அதுவே அவர்களுக்கு மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்கைப் பெற்றுக் கொடுப்பதைப் போன்ற குறுகியகால அரசியல் லாபத்தை அவர்கள் ஈட்டலாம். ஆனால் தொலைநோக்கான தீர்க்கதரிசனம் கொண்டவர்களின் பார்வையில் இது விளைவிக்கக்கூடிய எதிர்மறையான தாக்கங்களின் வலிமை புரியும். எத்தனையோ வருடங்களாக நாடுகளுக்கிடையே ஏற்படுத்தப்பட்ட புரிந்துணர்வுகள் ஒரு சிறிய கால அவகாசத்தினுள் சிதறிப்போகும் நிலை ஏற்படலாம். தீவிரவாதப்போக்குக் கொண்டவர்களின் ஆதிக்கம் வலுப்பெறுவதன் மூலம் மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகள் மீறப்படலாம்.

    பரந்துபட்ட உலகளாவிய ஒற்றுமையும், கூட்டுறவும் சட்டென சிதைந்து போகும்நிலை உருவாகலாம். இனத்துவேஷம், மதத்துவேஷம், நிறத்துவேஷம் என்பனவற்றிக்கு அரசியல் முலாம் பூசப்பட்டு சாதாரண அரசியல் பிரசாரங்களாக மாறலாம். அத்தகைய ஒரு நிலை சிறிதுசிறிதாகப் புரிந்துணர்வு மிக்க மேலைநாடுகளின் அரசியல் அரங்கினுள் உட்புகுவதை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. தேசியவாத அரசியல் எனும் போர்வையில் தீவிரவாத அரசியல் நடத்தப்படுக்கிறது.

    நல்லதோர் அரசியல் செயற்பாட்டால் வியாபாரம் செழிக்கலாம் ஆனால் அரசியலே வியாபாரமாக்கப்பட்டால் ?

    மீண்டும் அடுத்த மடலில்…

    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    Share
  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 104

    கோத்தே (Goethe) அருங்காட்சியகம், டூசல்டோர்வ், ஜெர்மனி

    முனைவர் சுபாஷிணி

    தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார்
    தோன்றலின் தோன்றாமை நன்று.
    (திருக்குறள்)

    உலகில் மனிதர்கள் பிறக்கின்றோம். வாழ்கின்றோம். மறைகின்றோம். மனிதன் தான் வாழும் இப்பூமிக்கு தன் வாழ்வின் பயனாக விட்டுச் செல்லும் படைப்புக்கள் தான் உலகில் நிகழும் அடுத்தடுத்த நிகழ்வுகளுக்கு வித்தாகின்றன. உலகுக்கு நற்காரியங்களைச் செய்து நன்மைகள் படைத்துச் செல்வோரால் தான் பூமி செழிக்கின்றது. அறிவியல் கண்டுபிடிப்புக்களையும், கலைப்படைப்புக்களையும், இலக்கியப் படைப்புக்களையும், அரசியல் நகர்வுகளையும் முன்னெடுத்துச் செல்வோரே இவ்வுலகம் மேன்மையை நோக்கிச் செல்ல உதவும் கருவிகளாக இயங்குகின்றனர். அத்தகையோரில் ஒருவர் தான் கோத்தே (Johann Wolfgang von Goethe).

    as1

    யோஹான் வோல்வ்காங் கோத்தே 1749ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 28ம் நாள் ஜெர்மனியின் ப்ராங்பர்ட் நகரில் பிறந்தவர். கவிஞர், இலக்கியவாதி. தத்துவ அறிஞர், அரசியல் பிரமுகர், அறிவியல் ஆய்வறிஞர், தாவரவியல் அறிஞர் என்ற பன்முக ஆளுமையாகத் திகழ்ந்தவர். ஜெர்மனி மட்டுமல்லாது, உலக நாடுகள் பலவற்றில் பரவலாக அறியப்பட்டவர் இவர். ஆம், கோத்தே கல்விக்கழகம் (Goethe Institute) என்ற பெயரில் உலக நாடுகள் பலவற்றில் ஜெர்மானிய மொழி பாடங்களை நடத்தும் நிறுவனத்தைப் பற்றி பலர் அறிந்திருக்கலாம். மொழித்துறை என்று மட்டுமல்லாது உலகளாவிய அளவில் இலக்கியப் படைப்புக்களை அங்கீகரிக்கும் செயல்பாடுகளைச் செயல்படுத்தி வரும் ஒரு நிறுவனமாகவும் Goethe Institute செயல்பட்டு இன்று செயல்பட்டு வருகின்றது.

    as2

    தனது 25வது வயதிலேயே இளம் படைப்பாளியாக அறிமுகம் பெற்று சிறப்பு பெற்றவர் கோத்தே. இவரது முதல் நாவல் The Sorrows of Young Werther இன்றளவும் இலக்கிய உலகில் மிக உயர்வாகப் பேசப்படும் ஒரு படைப்பாகத் திகழ்கின்றது.

    ஆரம்பக் காலத்தில் கோத்தே லைப்ஸிக் பல்கலைக்கழகத்தில் ஒரு சட்டத்துறை பட்டதாரியாக 1768ம் ஆண்டு தேர்ச்சி பெற்றவர். சட்ட நுணுக்கங்களை அறிந்ததில் இருந்த நாட்டம் போலவே கவிதை எழுதுவதிலும் அவருக்குத் தீவிர நாட்டம் இருந்தது. லைப்ஸிக் பல்கலைக்கழகத்தில் கல்வியை முடித்து பிரான்சின் எல்ஸாஸ் பகுதியில் உள்ள ஸ்ட்ராஸ்புர்க் பல்கலைக்கழகத்தில் இவர் கல்வியைத் தொடர்ந்தார். எல்ஸாஸ் நகரம் அவருக்கு விரிவான உலகத்தைக் காட்டியது. இவரது இலக்கியப் படைப்புக்கள் இக்காலகட்டத்தில் செம்மை பெற்றன. பல கவிதைகளை எழுதினார். பல கவிஞர்களின் நட்பும் இவருக்கு ஏற்பட்டது.

    வைமாருக்குச் சென்று அங்கே அந்த நகரத்தின் பிரபுவினது அமைச்சகத்தில் உயர் நிலை அதிகாரியாகப் பணியாற்றினார். உலகப்பிரசித்தி பெற்ற யேனா பல்கலைக்கழகத்தைச் சீரமைக்கும் முயற்சியில் பங்கெடுத்து கொண்டு சீரமைப்புக்குத் திட்டங்களை அறிமுகப்படுத்திச் செயல்படுத்தினார். வைமார் நகரின் தாவரப் பூங்கா அமைப்பில் இவரது பங்களிப்பு மிகப்பெரிது. இன்று இந்தப் பூங்கா ஐக்கிய நாடுகள் சபை அங்கீகரித்திருக்கும் புராதனச் சின்னங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டுப் பாதுகாக்கப்படுகின்றது என்பதும் இவரது சிறப்பை உலகுக்கு எடுத்துக் கூறும் சான்றாக அமைகின்றது.

    as3

    கோத்தே அவர்களின் மிகப்பெரிய பங்களிப்பு ”தாவரங்களின் பரிணாமம்” ( Metamorphosis of Plants) என்ற தலைப்பில் அவர் எழுதி வெளியிட்ட தாவரவியல் ஆய்வு நூலாகும். இத்தாலியில் ஆய்வுப் பயணம் மேற்கொண்டு வந்ததன் பின்னணியில் இந்த நூலை எழுதி 1788ம் ஆண்டு வெளியிட்டார். தாவரவியல் அறிவியலில் ஈடுபட்டதைப் போல நிறங்களைப் பற்றிய ஆய்விலும் உடற்கூறு ஆய்விலும் இவருக்கு நாட்டமிருந்தது. இத்துறைகளில் ஆய்வுகள் மேற்கொண்டு அவற்றைப் பதிப்பித்து வெளியிட்டிருக்கின்றார். வைமார் நகரில் இவர் நாடக சபையின் இயக்குநராகவும் பொறுப்பேற்றுக் கொண்டார். இதன் வழி அவருக்கு ஜெர்மனியின் மிகப் பிரசித்ஹ்டி பெற்ற கவிஞராகிய ஃப்ரெடெரிக் ஷில்லர் அவர்களது நட்பு கிட்டியது. இந்த நட்பு நெடுங்காலம் நீடித்தது. வைமார் அரும்பொருள் பாதுகாப்பு மையத்தில் வைக்கப்பட்டுள்ள கல்லறையில் கோத்தேயின் சவப்பெட்டிக்குப் பக்கத்தில் ஷில்லரின் சவப்பெட்டி உள்ளது என்பதைக் கவனிக்கும் போது இந்த இரு பெரும் ஆளுமைகளும் கொண்டிருந்த நல்ல நட்பை நாம் உணர முடியும்.

    கோத்தே அவர்கள் தனது நெடுநாள் காதலியான கிறிஸ்டினாவை 1806ம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார். இவர்கள் 18 ஆண்டுகள் இணைந்தே வாழ்த்து பின்னர் திருமணம் முடித்துக் கொண்டனர். திருமணத்திற்கு முன்னரே இவர்களுக்கு 5 குழந்தைகள் பிறந்தனர். அவர்களில் 4 குழந்தைகள் இறந்து போயினர்.

    1793க்குப் பிறகுத் தனது வாழ்க்கையை முழுமையாக இலக்கியப் பணிகளுக்காகவே அர்ப்பணித்தார் கோத்தே. பல துறைகளில் சீரிய பணியாற்றிய இவர் 1832ம் ஆண்டு வைமார் நகரில் மாரடைப்பு ஏற்பட்டுக் காலமானார்.

    உலக அரங்கில் ஜெர்மனிக்குச் சிறப்பு சேர்க்கும் கோத்தே அவர்களைச் சிறப்பிக்கும் வகையில் ஜெர்மனியின் டூசல்டோர்வ் நகரில் ஒரு அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகத்தின் முகவரி:
    Jacobistrasse 2, Schloss Jägerhof, 40211 Düsseldorf . இந்த அருங்காட்சியகத்தின் அதிகாரப்பூர்வ வலைப்பக்கத்தை
    http://www.goethe-museum.com/de என்ற இணையமுகவரியில் காணலாம்.

    as4

    இன்று நாம் காணும் கோத்தே அருங்காட்சியகம், பெரூசிய பேரரசுக்கு (ஜெர்மனியின் கிழக்குப் பகுதியில் தொடங்கிப் பரவலான பகுதிகளை உள்ளடக்கிய பேரரசு இது) சொந்தமான ஒரு அரண்மனை கட்டிடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியின் புகழ்பெற்ற பதிப்பாசிரியர்களுள் ஒருவரான ஆண்டோன் கிப்பன்பெர்க் சேகரித்த கோத்தேயின் படைப்புக்கள், சேகரிப்புக்கள் அனைத்தும் இந்த அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்தச் சேகரங்கள் ஒவ்வொன்றும் கோத்தேயின் வாழ்க்கை, அவர் மேற்கொண்ட பயணங்கள், ஈடுபட்ட ஆய்வுகள், அரசில் அவர் ஆற்றிய பணி, எழுத்துலகில் அவர் எழுதி வெளியிட்ட படைப்புக்கள், அறிவியல் ஆய்வுகள், அவரது சிறந்த படைப்புக்கள் என எல்லாவற்றையும் உள்ளடக்கியுள்ளது.

    as5

    இங்குள்ள அறைகள் ஒவ்வொன்றிலும் தனித்தனியாக அவரது ஆரம்பக்கால வாழ்க்கையின் நிகழ்வுகளைச் சொல்லும் நிகழ்வுகள் கொண்ட அறை, வைமார் நகரில் அவரது வாழ்க்கை நிகழ்வுகள், இத்தாலி பயணம் அளித்த அனுபவங்கள் சொல்லும் ஆவணங்கள் கொண்ட அறை என தனித்தனியாக அமைக்கப்பட்டுள்ளன. முன் பகுதியில் அவரது எழுத்துப்படைப்புக்கள் கண்ணாடி அலமாரிகளுக்குள் வைக்கப்பட்டு காட்சி படுத்தப்பட்டுள்ளன. இந்த அருங்காட்சியகத்தில் கோத்தே அவர்களின் சேகரிப்புக்கள், மற்றும் அவரது ஆய்வுப்பணி, இலக்கியப்பணி தொடர்பான ஏறக்குறைய 35,000 அரும்பொருட்கள் சேகரிக்கப்பட்டுப் பாதுகாக்கப்படுகின்றன. இந்த அருங்காட்சியகத்தின் நூலகத்தில் 25,000 நூல்களும், ஏறக்குறைய 35,000 ஆவணங்களும் பாதுகாக்கப்படுகின்றன.

    ஜெர்மனி உலகுக்குப் பல அறிஞர்களையும், தத்துவ ஞானிகளையும், இசைக்கலைஞர்களையும், வரலாற்று ஆய்வாளர்களையும் இலக்கியவாதிகளையும் வழங்கிய நாடு. அத்தகைய அறிஞர்களுள் ஒருவராய் உலகில் ஜெர்மனியின் புகழை உயர்த்தும் ஆளுமையாகக் கோத்தே அவர்கள் திகழ்கின்றார்கள். உலக நாடுகளில் 159 இடங்களில் இன்று கோத்தே கல்விக்கூடம் செயல்பட்டு வருகின்றது. உலகின் பல நாடுகளில் ஜெர்மானிய மொழியைப் பயிற்றுவிக்கும் கல்விக்கூடமாகவும், கலை, இலக்கிய பண்பாட்டு புரிதல்களுக்காகவும் இந்த அமைப்பு பங்காற்றி வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது!

    Share
  • குறுந்தொகை நறுந்தேன் – 18

    -மேகலா இராமமூர்த்தி

    தலைவனைப் பிரிந்த தலைவியின் துயர் எல்லை கடந்ததாயிற்று. ஆகவே கலங்கிச் சோர்வதும் அருகிருந்த அருமைத் தோழியிடம் புலம்பித் தீர்ப்பதுமாகவே அவளுடைய பொழுதுகள் கழிவதாயின.

    ”தோழி! பகல் நீங்க, முல்லைக்கொடிகள் மலர, சூரியனது dark seaவெம்மை தணிந்த செயலறுதற்குரிய மாலைக் காலத்தை இராப்பொழுதின் எல்லையாக எண்ணி நீந்தினோமானாலும் அதைத் தொடர்ந்துவரும் இரவெனும் வெள்ளம் கடலைவிடப் பெரியதாயிருக்கின்றதே…அதனை நீந்திக் கடப்பது எவ்வாறு?” என்று வருந்தினாள் அவள்.

    எல்லை கழிய முல்லை மலர
    கதிர்சினந்
    தணிந்த கையறு மாலையும்
    இரவரம் பாக
     நீந்தினம் ஆயின்
    எவன்கொல்  வாழி தோழி
    கங்குல் வெள்ளம் கடலினும் பெரிதே(குறுந்: 387 – கங்குல்வெள்ளத்தார்)

    பசிய கால்களையுடைய கொக்கின் புல்லிய புறத்தைப் craneபோல் ஆழமான நீர்நிலையில் வளர்ந்த ஆம்பலின் மலர்களும் கூம்பின; இதோ மாலைக்காலம் வந்துவிட்டது. அது வாழ்க! அது தனியாகவா வந்தது? அதனைத் தொடர்ந்து கங்குலும் வருமே… என் செய்வேன்?! என்று தலைவி பொழுதுகண்டு இரங்கும் மற்றொரு குறுந்தொகைப் பாடலும் இதே கருத்தை நவிலக் காணலாம்.

    பைங்காற்  கொக்கின்  புன்புறத்  தன்ன
    குண்டுநீ
     ராம்பலுங்  கூம்பின  இனியே
    வந்தன்று
     வாழியோ  மாலை
    ஒருதான்
     அன்றே  கங்குலு  முடைத்தே.  (குறுந்: 122 – ஓரம்போகியார்)

    கொக்கின் தோற்றம் ஆம்பல் மலரை ஒத்திருத்தலைக்lily
    குறுந்தொகைப் பாடல் 117-உம், ”மாரி ஆம்பல் அன்ன கொக்கின்…” என்று சுட்டிச் செல்கின்றது. இயற்கை யைக் கூர்ந்துநோக்கி ஒன்றோடொன்றை ஒப்புமைப்படுத்தும் அன்றைய புலவோரின் திறன் சங்கப் பாடல்கள் பலவற்றிலும் சிறப்பாய் வெளிப்படுகின்றது.

    இரவின் வரவை எண்ணிக் கழிவிரக்கம் கொண்ட தலைவியின் துயர்நிலை தோழியின் உளத்தையும் வாட்டியது. யாது சொல்லியேனும் இப்பாவையைத் தேற்றுதலே இப்போதைய தேவை என்பதைத் தெற்றென உணர்ந்த தோழி தலைவியின் தலையை ஆதுரத்தோடு கோதி,

    ”தோழி! ஒன்றோடொன்று உராய்ந்து ஒலிக்கின்ற மூங்கில்கள் ஓங்கி வளர்ந்த உயர்ந்த மலைப் பக்கத்தில், புலி தனக்குரிய உணவைத் திணித்துவைத்திருந்த புலால் நாற்றம் வீசும் கற்குகையினிடத்து, வழிச் செல்லும் மனிதர் தங்கும், சிகரங்கள் உயர்ந்த விளக்கத்தை உடைய மலைகளைக் கடந்துசென்ற தலைவர் நின் துயரைக் கேளா நிலையில் இருக்கின்றார்; அவர்மட்டும் கேட்டாராயின் சிறந்த பொருள் (தனைவிட்டு) நீங்குவதாக இருப்பினும், நெகிழ்ந்த நூலால் கட்டிய மலர் மாலைகள் சேர்ந்த படுக்கையினிடத்தே இருந்து வருந்தி  நினது பேரழகு நீங்கிய இத்துயரமானது கெடும்படித் தாமதியாது வந்திருப்பார்!” என்றாள்.

    கேளா  ராகுவர்  தோழி  கேட்பின்
    விழுமிது  கழிவ  தாயினு  நெகிழ்நூற்
    பூச்சேர்
     அணையிற்  பெருங்கவின்  தொலைந்தநின்
    நாள்துயர் கெடப்பின்  நீடலர்  மாதோ
    ஒலிகழை
     நிவந்த  வோங்குமலைச்  சாரற்
    புலிபுகா
     வுறுத்த  புலவுநாறு  கல்லளை
    ஆறுசெல்
     மாக்கள்  சேக்கும்
    கோடுயர்
     பிறங்கல்  மலையிறந்  தோரே. (குறுந்: 253 – பூங்கண்ணன்)

    பிரிந்துசென்ற தலைவனையும் பழிக்காது, அவன் பிரிவாற்றாமையால் வாடும் தலைவிக்கும் இதமளிக்கும் வகையில் பதமாய்ப் பேசும் தோழியின் பேச்சுக்கலை நச்சவும் மெச்சவும் உகந்ததாய் இருக்கின்றது.

    தாம் தேடிச்சென்ற அரும்பொருளைத் தேடித் தொகுக்க முடியாவிட்டாலும் நின் துயரறிந்தால் தலைவர் உடனே வந்துவிடுவார் என்று தலைவியைத் தேற்றும் தோழியை நற்றிணையிலும் காணமுடிகின்றது.
    அரும்பொருள் முடியா தாயினும் வருவர் (நற்: 208)

    ஈதொப்ப, ”நின் அருந்துயர் அறிந்தால் நந்தன் என்பான் (நந்த குலத்தைச் சேர்ந்த மன்னன்) தொகுத்து வைத்த செல்வத்தையே எய்துவதாயினும் தலைவர் அங்கே தங்கமாட்டார், விரைந்து வந்துறுவார் உனைக் காண!” என்று தலைவன் பிரிவால் வாடும் தலைவியைப் பரிவொடு தேற்றும் தோழி அகநானூற்றிலும் காணக் கிடைக்கின்றாள்.

    …நந்தன் வெறுக்கை எய்தினும் மற்றவண்
    தங்கலர் வாழி தோழி…
    (அகம்: 251)

    தோழியின் இடைவிடாத் தேறுதல் மொழிகளால் ஒருவாறு ஆறுதல் அடைந்தாள் தலைவி.

    பொருள்தேட வேற்றுப்புலம் சென்ற தலைவன், தான் தேடவேண்டிய பொருளைத் தேடினான். கார்காலத்தில் வினைமுற்றித் திரும்புவதாய்ச் சொல்லிச் சென்றோம்; இப்போது கார்கழிந்து கூதிரும் வந்துவிட்டது என்பதை உணர்ந்த அவனுள்ளம் தலைவியை உடனே காணவேண்டும் எனும் வேணவா கொண்டது. இதுகாறும் பதுங்கியிருந்த காதல் உணர்வு வீறுகொண்டெழுந்தது!

    ”அசைகின்ற மூங்கிலை யொத்த அழகினையும், பருத்த தோளையும், பெரிய அமர்த்தலையுடைய கண்ணையும் பெற்ற தலைவி இருந்த ஊரானது நெடுந்தூரத்தின்கண் அடைதற்கரிய இடத்தில் உள்ளது. எனது நெஞ்சமோ ஈரம் உண்டாகிய செவ்வியையும், பசிய புனத்தையுமுடைய
    வனாய் ஒற்றை ஏரை மட்டுமே வைத்திருக்கும் உழவனைப்போல் அவளைக் காணுதற்குப் பெரிதும் விரைகின்றது” என்று தன்னுள் கூறி வருந்தினான்.

    ஓரேருழவன், ஈரம் வீணாகாமல் உழுதற்கு விரைதலைப் போல என் நெஞ்சமும் தலைவியை உரிய பருவத்தே கண்டு அளவளாவ விரைகின்றதென்கிறான் தலைவன்.

    பல ஏருடையவன் சிறிது சோம்பியிருப்பினும் ஏவலாளர் உதவிகொண்டு குறுகிய காலத்தில் நிலத்தை உழுதுவிடக் கூடும்; ஆனால் ஓரேருழவனோ அவ்வொரே ஏரைக் கொண்டு ஈரம் வீண்படாமல் உழவேண்டிய கட்டாயத்தினை உடையவனாயிருப்பதால் விரைவானாகலின் அவனை ஈண்டுத் தனக்கு உவமை கூறினான் தலைவன்.  

    ஆடமை  புரையும்  வனப்பின்  பணைத்தோள்
    பேரமர்க்
     கண்ணி  யிருந்த  வூரே
    நெடுஞ்சேண்
     ஆரிடை  யதுவே  நெஞ்சே
    ஈரம்
     பட்ட  செவ்விப்  பைம்புனத்து
    ஓரே
    ருழவன்  போலப்
    பெருவிதுப்பு
     உற்றன்றால்  நோகோ  யானே. (குறுந்: 131 – ஓரேருழவனார்)

    வினைமுற்றித் திரும்பும் வேளையில், நாணொடு செறிந்த கற்பினையும், ஒளிபொருந்திய நுதலையும், இன்மொழிகளையும் உடைய மெல்லியலாளைக் காணத் தன்னைக் காட்டிலும் விரையும் தன்னெஞ்சை நமக்குத் திறந்துகாட்டுகின்றான் மற்றொரு தலைவன் அகநானூற்றில்!

    எம்மினும் விரைந்துவல்  லெய்திப்  பன்மாண்
    ……..நாணொடு
     மிடைந்த  கற்பின்  வாள்நுதல்
    அந்தீங்
     கிளவிக்  குறுமகள்
    மென்றோள்
     பெறநசைஇச்  சென்ற என்  நெஞ்சே.  (அகம்: 9)

    தேடிய தனத்தோடும், காதல் மனைவியைக் காணத் chariotheroதுடிக்கும் மனத்தோடும் தேரில் அமர்ந்திருக்கும் தலைவனின் உள்ளத்துணர்வைத் துல்லியமாய் உய்த்துணர்ந்த, தலைவனின் நெடுநாளைய தோழனான, தேர்ப்பாகன், குறுக்குவழியில் விரைந்து செலுத்தினான் தேரை. அதனால் விரைந்து இல்லத்தை அடைந்த தலைவன், தேர்வலவனின் சாதுரியத்தைத் தேர்ந்த சொற்களால் பாராட்டத் தொடங்கினான்…

    ”நெடுந்தூரமாகிய வழியைக் கடந்து செல்வோமாயின் துன்பமின்றி பெருந்தோளையுடைய தலைவியின் காமநோயைக் களையமாட்டேமென்று நன்குணர்ந்து, நன்மையை விரும்பிய மனத்தையுடையவனாகி, பருக்கையையுடைய மேட்டு நிலம் உடையும்படிக் குதிரையை ஏவிக் கரம்பை நிலத்திலே புதிய குறுக்குவழியை உண்டாக்கிய தேர்ப்பாகனே! நோயினால் வருந்தி உறையும் தலைவியை இறந்துபடாமல்தருதற்குக் காரணமாயினமையின் இன்றைக்கு நீ தேரையா தந்தனை? இல்லை… என் தலைவியையே (உயிரொடு) தந்தனை!” என்று கூறித் தேர்வலவனை ஆரத் தழுவினான் தலைவன்.

    சேயாறு  செல்லா  மாயின்  இடரின்று
    களைகலங்
     காமம்  பெருந்தோட்  கென்று
    நன்றுபுரிந்
     தெண்ணிய  மனத்தை  யாகி
    முரம்புகண்  ணுடைய  ஏகிக்  கரம்பைப்
    புதுவழிப்
     படுத்த  மதியுடை  வலவோய்
    இன்று
     தந்தனை  தேரோ
    நோயுழந்து
     உறைவியை  நல்க  லானே.  (குறுந்: 400 – பேயனார்)

    ”தலைவியின் துயர் உன்னால் நலிந்தது” எனும் தலைவனின் பாராட்டைப் பெற்ற தேர்ப்பாகனின் முகத்தில் பெருமிதம் பூத்துப் பொலிந்தது!  

    [தொடரும்]

     

     

     

    Share
  • மார்கழி மணாளன் (மூன்றாம் பகுதி)-21

    க. பாலசுப்பிரமணியன்

     

    திருகொடித்தானம் அருள்மிகு மகாவிஷ்ணு திருக்கோவில்

     

    அருள்மிகு அற்புத நாராயணப் பெருமாள்

    venkateswara-swamy-8

    பாற்கடலில் படுத்துறங்கும் பத்மநாபன் அற்புதமே

    படுத்திருக்கும் பரந்தாமன் பாம்பணையம் அற்புதமே

    பக்கத்தில் துணையிருக்கும் பங்கயவல்லி அற்புதமே

    பதுமத்தில் அமர்ந்திருக்கும் பிரம்மனும் அற்புதமே !

     

    சங்கோடு சக்கரமும் கைகளில் அற்புதமே

    மங்காத அழகென்றும் மனதிற்கு அற்புதமே

    பாங்கான திருநாமம் முகத்தினிலே அற்புதமே

    பாதங்கள் தொட்டவுடன் பலனளிக்கும் அற்புதமே !

     

    பாரெல்லாம் காக்கின்ற பண்பென்றும் அற்புதமே

    பாவங்கள் அழித்திடவே பிறப்பெடுத்தாய் அற்புதமே

    பாயிரங்கள் நாலாயிரமும் பேர்சொல்லும் அற்புதமே

    பாவையர்கள் உள்ளத்திலே உருவெடுத்த அற்புதமே !

     

    வாமனனாய் உருவெடுத்து வந்ததும் அற்புதமே

    வானளாவி நின்றிருந்த விஸ்வரூபம் அற்புதமே

    வான்மழைக்கு மலைதூக்கி நின்றதுவும் அற்புதமே

    வந்தவினை தீர்த்துவிடும் அற்புதமே நாரணனே !

     

    தேரோட்டி வந்தாய் பார்த்தனுக்கே அற்புதமே

    தேரமர்ந்து தந்தாய் கீதையென்றும் அற்புதமே

    தேடிவரும் அடியார்கள் குறைதீர்க்கும் அற்புதமே

    தீதில்லா வாழ்க்கைக்கு நினைவென்றும் அற்புதமே !

     

    மூவடியால் உலகளந்த மூதறிவும் அற்புதமே

    சேவடியால் அகலிகைக்கு அருள்தந்த அற்புதமே

    பூவிழியாள் மார்பினிலே வைத்திருக்கும் அற்புதமே

    பூந்தமிழில் உனைப்பாடும் பாடலெல்லாம் அற்புதமே !

     

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180104 Tiruppavai 20-lr -watercolour Muppathumoovar — Andal hails Krishna, the protector of the 33 Devathas  - the one who vanquishes the one who troubles his devotees. She asks his consort to give them the honour of eternal service to the Lord.
    180104 Tiruppavai 20-lr -watercolour
    Muppathumoovar — Andal hails Krishna, the protector of the 33 Devathas – the one who vanquishes the one who troubles his devotees. She asks his consort to give them the honour of eternal service to the Lord.

    “பிள்ளை பிரகலாதர் உள்ள இடத்தினில் –
    கிள்ளைக் கரகோதை குந்தினாள்: -உள்ளன்
    புடனே நரசிம்மம் பாவையை ஏந்தி –
    உடனே அள்ளித்தார் உயர்வு”….

    ”சிம்மா சனமமர்த்தி ஸ்ரீவில்லி மங்கைக்கு
    நம்மாள்கல் யாண நலங்கிடல்: -சும்மாவா!
    ஆண்டாள் திருப்பாவை ஐயா(று) உரைப்போர்கள்
    வேண்டார் கரவரம் வேறு’’….
    ‘’மாரி மலைச்சிங்கம் மீது திருப்பாவை
    கூறிய கோதையார் காப்பிருக்கு, -தேரினில்
    ஆகுலம் தீர்க்கவன்று அர்சுனர்க்கு கீதைசொல்
    கோகுலத்தான் காப்பதற்கு காப்பு’’….

    “வேண்டாத மூப்பினை வாலிபத்தில் ஏற்றுப்புள்
    கீண்டானைக் காதலிக்க கோதையாய் -ஆண்டாளாய்,
    ஆனாளோ அவ்வை அதனால்தான் பாசுரங்கள்
    தேனாய் இனிக்கின்ற தோ”!….

    பக்தீயில் மூழ்கும் பிராட்டிஅச்(கோதை பிராட்டி), சிங்கத்தை
    பத்தி எரியும்தீ பூவாகி -சுத்திவர,
    மீறிய நஞ்சும் மிதமாய் அமிழ்தாகும்
    சூரியன்மேல் வைப்பாரோ சூடு !….கிரேசி மோகன்….!

    Share
  • மார்கழி மணாளன் (மூன்றாம் பகுதி ) 20

    க. பாலசுப்பிரமணியன்

     

    திருமொழிக்குளம் அருள்மிகு லட்சுமணஸ்வாமி திருக்கோயில்

    download

    வேள்வியில் சிறந்த வேதியன் அரீசன்

    வேண்டிய நேரத்தில் விஷ்ணுவும் வந்தான்

    வந்திடும் கலியில் வாழ்ந்திடும் வழியை

    வரமெனத் தந்தான் திருமொழி சொன்னான் !

     

    இறைவனின் திருமொழி இன்னல்கள் நீக்கிடும்

    இடைவரும் தடைகள் எளிதினில் நீங்கிடும்

    இதயத்தில் இராமனை இனிதே வைத்தால்

    இன்பங்கள் அருளிடும் திருமொழிக் கூடம் !

     

    இரகுகுலம் தழைத்திட இரகுவரன் நினைவை

    இதயத்தில் ஏந்தியே  பரதனும் வந்தான்

    இலக்குவன் சினத்தை இராமனே தணித்திட

    இளையவர் இருவரும் அண்ணலைப் பணிந்தார் !

     

    கோசலை மைந்தன் கோதண்ட இராமன்

    குலத்தின் பெருமைக்கே கலங்கரை விளக்கம் !

    குணத்தின் குன்றாய் குடிகளின் நெஞ்சில்

    கானகம் இருந்தும் கடமைகள் ஆற்றினான் !

     

    பாதுகை அருளிட பரதனின் ஆட்சி

    பார்த்ததும் வியந்ததே அண்டங்கள் அனைத்தும் !

    பாதங்கள் பணிந்த அனுமனை அணைத்து

    பாவங்கள் அழித்தான் பண்புடை மன்னன் !

     

    சினத்தால் செய்த சிறிதொரு பாவத்தை

    மனத்தால் உணர்ந்தே இலக்குவன் படைத்தான்

    குணத்தால் உயர்ந்த இராகவன் கோவில்

    நினைத்தால் விலகும் பாவங்கள் அனைத்தும் !

    Share
  • அன்றும் இன்றும் [3]

    -இன்னம்பூரான்
    ஜனவரி 3, 2018

    அன்பினால் இவ்வுலகத்தை ஆட்படுத்தவேண்டுமானால், முதல் படியில் கால் வைப்பது மக்கள்தான். அரசனோ, யதேச்சதிகாரியோ, ஜனநாயகத்தின் தலைவனோ, யாராக இருந்தாலும், அவன் ஒரு கருவிதான்.  ‘யதா ராஜா ததா பிரஜா’/ ‘யதா பிரஜா ததா கூஜா’/ ‘யதா கூஜா ததா பூஜா’  போன்ற பொன்வாக்குகள் ‘ஈயத்தை பாத்து இளித்ததாம் பித்தளை’ என்ற மாதிரி பொலிவு இழந்து பல நூற்றாண்டுகள் கடந்து போயின; இறந்தும் போயின, அண்ணாகண்ணன். ‘தெய்வாம்சம்’ பொருந்திய வம்சாவளி அரசர்களின் கரகாட்டம், தற்காலம் கூடுவிட்டுக்கூடு பாய்ந்து, அரசியல்வாதிகளின் குடும்பநிதிசேகரம் பொருட்டு, மக்கள் நலம் என்ற ‘தோண்டியை போட்டுடைத்த’ கம்பங்கூத்தாடியாகப் பேயாட்டம் ஆடுகிறது. மஹாகவி பாரதியார் பாடிய வகையில் ‘பாப்பானுக்குத் தொப்பை சுருங்கியதோ இல்லையோ’ பிரதிநிதித்துவம் என்ற ஜனநாயகத்தூண் உடைந்தே போனமாதிரி தான் நாடகங்கள் நடந்தேறுகின்றன. இவ்விடம் ‘நாடகமே உலகம்’ என்று கூறினால், அது அடக்கி வாசிப்பது எனலாம். பித்தலாட்டமே நம் உலகம் என்றால் அது மிகையல்ல.

    இந்தியா விடுதலை அடைந்தபோது நான் பாலகன். தந்தையின் நாட்டுப்பற்று எனக்கு ஒரு வழிகாட்டியாக அமைந்தது. அவர்தான் என் தகவல் மையம். சில நிமிடங்களுக்கு முன்னால் தமிழ்த்தாத்தா உ.வே.சா. அவர்கள் ஏப்ரல் 28, 1942 அன்று தேகவியோகம் ஆனது பற்றிப் படித்தபோது, அந்த நிகழ்வை என்னிடம் 9 வயதில் என் தந்தை சொன்னது நினைவில் இருப்பதை கவனித்தேன். தேகவியோகம் என்ற சொல் பசுமரத்தாணி அடித்தது போல் நினைவில் இருக்கிறது. தமிழ்த்தாத்தாவின் பெயர் நினைவில் இல்லை. ஒரு காரணத்துடன் தான் நான் இதைச் சொல்கிறேன். பெற்றோர்களும், ஆசிரியப் பெருமக்களும் பசுமரத்தாணி அடிக்கக் கற்றுக்கொள்ளவேண்டும். சிலவரிகள் கல்வியைப் பற்றி இப்போதைக்கு. பெற்றோர்களுக்குள் கல்வி, திரவியம் ஆகியவை ஒரே மாதிரியாக அமைவதில்லை. திரவியம் இல்லாதவர்களுக்கு நிதி உதவி செய்யலாம். கல்வி இல்லாத பெற்றோர்களுக்கு யார் வழிகாட்டமுடியும்? சில கிராமங்களில், பள்ளி ஆசிரியர், தபாலதிகாரி, கோயில் அர்ச்சகர் போன்றோர் ஓரளவு வழி காட்டமுடியும்; செய்யவும் செய்தார்கள். தற்காலம் ஏராளமான பள்ளி மாணவர்கள்; ஏராளமான படித்து முன்னேறிய மனிதர்கள்.ஒவ்வொரு மாணவருக்கும் ஒவ்வொரு வழிகாட்டி/மார்க்கபந்து அமைவது நடக்கக்கூடியதுதான். அதற்கு பிறகு வருவோம்.

    அன்பு ஒரு தளை. அது எல்லா ஜீவராசிகளிடமும் தென்படும் நற்பண்பு. காக்கைக்கு தன் குஞ்சு பொன்குஞ்சு. புலியோ, சிங்கமோ, நம் வீட்டு நாயோ தன் குட்டிகளைப் பொத்திப் பாதுகாப்பதை நாம் அறிவோம். அது தான் அன்புத் தளை. நமது சமுதாயத்தில் மக்கள் அன்பினால் பிணைக்கப்பட்டால், கட்டப்பஞ்சாயத்தும் வராது; கந்து வட்டியும் மிரட்டாது. ஆனால், அவையும், சாதி மத பேதமும், இன பேதமும், நிற பேதமும், பாலியல் கொடுமைகளும் புதியவை அல்ல; அவை காலம்காலமாக கொடுமை நிகழ்த்தியுள்ளவை என்பதை நினைக்கும்போது, என் மனம் மிரண்டு போகிறது. அன்பு ஒரு மாயையா? அல்லது அன்பும், காழ்ப்புணர்வும் உடன் பிறந்தவர்களோ? இன்பமும் துன்பமும் மாங்காய்ப் பச்சடியாக கலந்து வருவதுதான் வாழ்வின் இயல்போ என்ற கவலைகள் எழுகின்றன.

    அன்பே சிவம் என்று இயங்கும் நிகழ்வுகளையும் காண்கிறோம், அவை சொற்பமாக இருந்தாலும். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.ஸேரா கியரிங் (Sarah Gearing) என்பவருக்கு ஓர் அரிய வியாதி ~ சிதறிக்கொண்டிருக்கும் மூளை. பல அறுவை சிகிச்சைகள் செய்ய வேண்டிய அத்தியாவசியம். இல்லையேல் அவருடைய உயிருக்கு ஆபத்து. அவரை முன்பின் அறியாத ஆயிரக்கணக்கான சராசரி மனிதர்கள் மொத்தமாக 12 கோடி ரூபாயை, எறும்பு போல் சிறுகச்சிறுகச் சேமித்துக் கொடுத்தார்கள். அவரும் சில அறுவை சிகிச்சைகள் முடிந்து, புன்சிரிப்புடன் நன்றி கூறுகிறார் என்று இண்டிபெண்டண்ட் என்ற ஆங்கில இதழ் கூறுகிறது. எங்கிருந்து வந்தது அந்த அன்பு?

    (தொடரும்)

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    _Tiruppavai 19 -Divya dampati lr -watercolour 24x32  Sometimes the Krishna and his consort compete with each other to rush to grace the devotee and in that haste, there is a delay in blessing them.
    _Tiruppavai 19 -Divya dampati lr -watercolour 24×32
    Sometimes the Krishna and his consort compete with each other to rush to grace the devotee and in that haste, there is a delay in blessing them.

    கண்ணாடிப் பொய்கையில், கட்டிய மாலையை
    முன்னாடி சூடி மகிந்தவள்நான், -என்னாடி!(விளிச்சொல் -சக்களத்தி போல்)
    ’’பள்ளிகொள்ள ரங்கனுக்கு பாம்பிருக்கப்(ஆதி சேடன்) பாய்மடியா!’’
    கிள்ளை(கிளி)கொள் கோதையின் காண்டு(கோபம்)’’….
    ”நப்பின்னை போலவே நானும் அழகுதான்
    அப்பெண் அகமுடையாள் ஆனாற்போல், -இப்பெண்நான்
    பின்னாடி வந்தாலும் ”ப்ரோச்சேவா”, பக்தியில்
    முன்னாடி நின்றேன் முகுந்து(செல்லமாய்)”….கிரேசி மோகன்….!

    ”பாஸுரமுக கரிராஜுலு(யானை கஜேந்திரன்) ப்ரோச்சின(காப்பாத்தின)
    த்யாகய்யர் கீர்த்தனை” ப்ரோச்சேவா எவருரா” வாசித்ததில்….!ஆண்டாள்
    தன்னை மணம்புரிந்து காப்பாத்துமாறு கண்ணனிடம் கோருகிறாள்….
    தான் பத்தினி நப்பின்னையைப் போல் அழகானவள் என்பதை கண்ணாடி காட்டி
    CONFIRM செய்கிறாள் கோதை….!

    Share
  • திருமந்திரத்தில் சில சிந்தனைத் துளிகள் 42

    க. பாலசுப்பிரமணியன்

    இறைவனின் தியானத்தில் இருந்தபோது 

    திருமூலர்-1-1

    இராமகிருஷ்ண  பரமஹம்சர் மற்றவர்களுக்குப் புரியும் வகையில் எளிதாக சிறிய கதைகளைக் கூறியிருக்கின்றார்.  ஒருமுறை காட்டில் ஒரு ஒதுங்கிய இடத்தில் தன்னுடைய குடிலை அமைத்து இறைவனை வணங்கி வந்தார் ஒரு முனிவர். அவருக்கு சில சீடர்கள் உண்டு.  தங்களுடைய குருவிற்குத் தேவையான பொருட்களை அவர்கள் சேகரித்து வந்தார்கள். அந்த முனிவரும் அமைதியாக தியானத்தில் ஈடுபட்டு வந்தார். ஒரு நாள் அவருடைய குடிலுக்கு நேர் எதிரில் ஒரு புதிய குடில் அமைக்கப்பட்டிருப்பதை அவர் கவனித்தார். சில நாட்களில் அந்தக்  குடிலுக்கு சில பேர்கள் நித்தம் வந்து செல்வதையும் அவர் கவனித்தார். தன்னுடைய சீடர்களை அழைத்து அந்தக் குடிலுக்கு வந்திருப்பவர்களைப் பற்றி விசாரிக்கச் சொன்னார்.

    சீடர்கள் தகவல் தெரிந்து குருவிடம் வந்து ” குருவே, உங்களிடம் இதை எப்படி சொல்வதென்றே தெரியவில்லை. அங்கே புதிதாக வைத்திருப்பது ஒரு பெண். அவள் வேசியாக இருக்கின்றாள். நித்தம் அவளுக்காக பலர் வந்து செல்கின்றனர்.”

    இதைக்கேட்ட முனிவரின் மனம் துயரமுற்றது. அடுத்த நாள் அவர் பூசையில் அமரும் பொழுது அவர் உள்ளத்தில் இப்பொழுது அந்த வேசி என்ன செய்து கொண்டிருப்பாள்? எப்படியெப்படியெல்லாம் இருப்பாள் என்ற சிந்தனை வளர அவருடைய முழுக்கவனமும் பூசையில் செல்லவில்லை. ஆனால் அந்த வேசியோ தன்னுடைய தொழிலில் ஈடுபட்டிருந்தாலும் “இப்பொழுது அந்த முனிவர் எப்படி எப்படியெல்லாம் இறைவனை போற்றிக்கொண்டிருப்பர் என்று நினைத்துக் கொண்டிருந்தாள். அவள் மனம் முழுவதும் அந்த இறைவனின் பூசையில் நின்றது. இறைவன் யாருக்கு அருள் புரிவான் என்பதே கேள்வி..

    ஆகவே, சிந்தையைச் சிதறாமல் வைத்து ஒன்றே குறிக்கோளாக இறைவனை நினைப்பதும் அவனை வழிபடுவதும் உண்மையான பூசையாகும்.

    எப்படி இந்த ஒருநிலைப்படுத்திய தியானத்தை வளர்ப்பது?  திருநாவுக்கரசர் தேவாரத்தில் வெகு அழகாகச் சொல்லுகின்றார்

    காயமே கோயிலாகக் கடிமனம் அடிமையாக

    வாய்மையே தூய்மையாக மனமணி இலிங்கமாக

    நேயமே நெய்யும்பாலா நிறை நீரமைய வாட்டிப்

    பூசனை ஈசனார்க்குப் போற்றவிக் காட்டி னோமே .

    திருமூலரோ சிந்தையுள் திருவடி இருந்தால் எப்படி இருக்கும் என்பதற்கு பதில் அளிக்கும் வண்ணம் கூறுகின்றார்

    சிந்தையி னுள்ளே எந்தை திருவடி

    சிந்தையும் எந்தை திருவடிக்கு கீழது

    எந்தையும் என்னை யறியகி லானாகில்

    எந்தையும் யானும் அறிகிலேன்

    திருவடியைச் சிந்தையில் வைத்தால்  எப்படி இருக்கும் ? என்னென்ன உணர்வுகள் நமக்குக் கிடைக்கும்? இதோ மாணிக்கவாசகரின் வார்த்தைகள் நம்மை உணரவைக்கின்றன.

    இணையார் திருவடி என்றலைமேல் வைத்தலுமே

    துணையான சுற்றங்க ளனைத்தையும் துறந் தொழிந்தேனே .

    சிந்தையில் இறைவன் இருக்கும் வரையில் சொந்தங்களும் பந்தங்களும் அவர்களின் நினைவுகளும் நமக்கு ஏற்படுவதில்லை. அவற்றின் பாதிப்புக்கள் நம்மைக் கட்டுப்படுத்துவதில்லை

    சுற்றத்தில் எத்தனை பேர் இருந்து என்ன பயன்? எப்பொழுது இறைவன் நெஞ்சினில் இல்லையோ, அப்பொழுது இந்தச் சுற்றங்களுக்கெல்லாம் பொருளேது

    ஊரிருந் தென்னநல் லோரிருந் தென்னுப காரமுள்ள

    பேரிருந் தென்பெற்ற தாயிருந் தென்மடப் பெண்கொடியாள்

    சீரிருந் தென்ன சிறப்பிருந் தென்னவித் தேயத்தினில்

    ஏரிருந் தென்வல்ல வாவிறை வாகச்சி யேகம்பனே !

    என்று பட்டினத்தார் தன்னுடைய மனக்கவலையை வெளிப்படுத்துவது ஒரு உண்மையான பக்தியின் வெளிப்பாடகத் தெரிகின்றது

    எல்லா உறவையும் சுற்றத்தையும் விளக்கி இறைவனோடு மட்டும் இருக்கும் பொழுது உடல், பொருள், ஆவி அனைத்தும் அவனையே சார்ந்திருக்கும். அவனையே நாடியிருக்கும். அந்தப் பரவச நிலை எப்படி இருக்கும் ?

     மாணிக்கவாசகர் அந்தப் பரவச நிலைக்கு நம்மை எடுத்துச் செல்லுகின்றார்

    அன்பினால் அடியேன் ஆவியோ டாக்கை

    ஆனந்த மாய்க்கசிந் துருக

    என்பரம் அல்லா என்னருள் தந்தாய்

    யானிதற் கிலனோர் கைம்மாறு

    முன்புமாய் பின்பு முழுதுமாய் பரந்த

    முத்தனே முடிவிலா முதலே

    தென்பெருந் துறையாய் சிவபெரு மானே

    சீருடைச் சிவபுரத் தரசனே !

    அவனோடு ஒன்றி இருக்கும்பொழுது எப்படிப்பட்ட ஆனந்தநிலை நமக்கு கிடைக்கின்றது !

    (தொடருவோம்)

    Share
  • ஆகாயக் கடல்

     

     

    எத் திசையிலும் எப்போதும்

    சுழன்றடிக்கலாம் காற்று

    அதன் பிடியில்

    தன் வேட்கைகளையிழந்த

    ஓருருவற்ற வானம்

    மேகங்களையசைத்து அசைத்து

    மாறிக் கொண்டேயிருக்கிறது
    விதவிதமாக வர்ணங்களைக் காட்சிப்படுத்தும்

    தொடுவானத்தினெதிரே

    ஒற்றை நிறம் நிரப்பிப் பரந்து கிடக்கிறது கடல்
    ஆகாயத்தைப் போலவன்றி

    சமுத்திரத்தின் இருப்பு

    ஒருபோதும் மாறுவதில்லை

    எவ்வித மாற்றமுமற்ற
    கடலின் அலைப் பயணம்

    கரை நோக்கி மாத்திரமே
    பருவ காலங்களில்
    வானின் நீர்ச் செழிப்பில்

    கடல் பூரித்து

    அலையின் வெண்நுரையை

    கரை முத்தமிடச் செய்கிறது
    இராக் காலங்களில்
    தூமகேதுக்களின் வழிகாட்டலின்றி

    கடற்பயணங்களில்லையென்றபோதும்
    ஒன்றுக்கொன்று நேரெதிர்
    ஆகாயமும் கடலும்

     

    நேரெதிராயினும்

    இப் புவியில்

    ஆகாயமின்றிக் கடலேது

     

    கரை

    கால் நனைக்கக் கால் நனைக்கக் கடல்

     

    – எம்.ரிஷான் ஷெரீப்

    Share
  • மார்கழி மணாளன் (மூன்றாம் பகுதி )- 19

    க. பாலசுப்பிரமணியன்

     

    திருக்கடிகை (சோளிங்கர் )

     

     அருள்மிகு லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோவில் 

    165382_168349703210073_100001051325299_395411_1321745_n

    சிந்தையிலே சினமெடுத்துச் சிங்கமென வந்தவனே

    விந்தையென வானவரும் பார்த்திருந்த நரசிம்மா !

    அகந்தையிலே தானென்று தலைவிரித்த இரணியனை

    கந்தையெனப் பிரித்தெடுத்துக் கதைமுடித்த காருண்யா !

     

    மலையமர்ந்து அருள்செய்யும் மங்கலனே மாதவனே

    மாருதியை துணைவைத்து மனமெல்லாம் ஆள்பவனே

    மலையான துயர்நீங்க மலையேறி வந்தவர்க்கு

    மடைதிறந்த வெள்ளமென அருள்செய்யும் அச்சுதனே !

     

    பயத்தோடு பலமிழந்து தன்வாழ்வைத் தானிழந்து

    பலனில்லாக் கோள்களின் பார்வையிலே பரிதவித்துப்

    பகடையென உருள்கின்ற வாழ்வினையே காப்பவனே

    பகலவனின் பேரொளியாய் அருள்கின்ற அழகியசிங்கா !

     

    நிலைகுலைந்த மனம்கொண்டு பித்தான உள்ளங்களில்

    நிழலாகத் தானமர்ந்து நினைவெல்லாம் நிறைந்தவனே

    நிறைவான நலம்தேடி நின்தாள்கள் அடைந்தவரை

    நிழலாகப் பின்தொடர்ந்து விதிமாற்றும் வல்லவனே !

     

    ஏழுமலை எறிவந்தால் என்துயர்கள் நீங்கிடுமோ ?

    நூறுமுறை பெயர்சொன்னால் நூலிழையாய் மறைந்திடுமோ ?

    சாத்துமுறை எதுவென்று யானறியேன் சடகோபா !

    சத்தியனே! சரணமென வந்திட்டேன் சந்நிதியில் !

     

    சோதனைகள் விலகிவிடும் சோகங்கள் அழிந்துவிடும்

    சோர்ந்திட்ட உள்ளங்களில் சுதர்சனின் அருள்பிறக்கும்

    சுமைகளெல்லாம் இறங்கிவிடச் சூழ்வினைகள் மறைந்துவிட

    சுவையான வாழ்விற்கு சோளிங்கர் நலம்பெருக்கும் !

    Share
  • ‘இறுதி மணித்தியாலம்’ மொழிபெயர்ப்புக் கவிதைத் தொகுப்பு குறித்து ஒரு திறனாய்வு

    – எழுத்தாளர் மேமன்கவி

    உலக மொழிப் படைப்புகளைத் தமிழில் மொழிபெயர்க்கும் முயற்சிகள் ஈழத்தில் 1950 ஆம் ஆண்டு தொடக்கம் நடைபெற்று வருகின்றன. ஆனால் சிங்கள இலக்கியப் படைப்புக்களை சிங்களத்திலிருந்து நேரடியாக தமிழில் மொழிபெயர்க்கும் முயற்சி என்பது 1970 ஆண்டுகளின் மத்தியம் தொடக்கம் பரவலாகியது எனலாம்.

    சமீபத்தில் சமகால நவீன சிங்களக் கவிஞர்கள் பத்துப் Writer Memon Kaviபேரின் சுமார் 70 கவிதைகள் அடங்கிய தொகுப்பாக எம். ரிஷான் ஷெரீப்பின் மொழிபெயர்ப்பில் வம்சி வெளியீடாக ‘இறுதி மணித்தியாலம்’ எனும் தலைப்பில் ஒரு தொகுப்பு இக் காலகட்டத்தில் நமக்குக் கிடைத்திருக்கிறது. இத் தொகுப்பில் அடங்கியிருக்கும் கவிதைகள் அனைத்தும் நேரடியாக சிங்களத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்ட கவிதைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

    இத் தொகுப்பின் முதல் சிறப்பு என்று சொல்வதானால், irudhi manithiyalam final copyஇத் தொகுப்புக்கு இவர் தெரிவு செய்திருக்கும் கவிஞர்கள் அனைவரும் சிந்தனையில் ஒன்றுபட்டவர்களாக இருக்கிறார்கள் என்பதுதான். மேலும் மாற்றுக் கருத்தாளர்களாக இவர்கள் அடையாளப்படுத்தப்பட்டவர்கள். மனித உரிமைகள் பேணுதல், சகல இனங்களுக்கான உரிமைகளை மதித்தல், மேலும் இனம், மதம், சாதி, மொழி பேதமற்ற நிலையில் சகல இனங்களுடன் ஊடாட விரும்புகின்றவர்களாக இக் கவிஞர்கள் இருக்கிறார்கள். அத்தோடு தாம் சார்ந்த சமூகக் கட்டமைப்பைக் கடுமையாக விமர்சிக்கின்றவர்களாகவும் இருக்கிறார்கள்.

    இத் தொகுப்பில் அமைந்துள்ள கவிதைகள் மேலும் இரு விதங்களிலும் சிறப்பு பெறுகின்றன.

    முதலாவது, அவற்றை மொழிபெயர்த்திருக்கும் முறைமை. அக் கவிதைகளைத் தமிழ் மயப்படுத்தாமல், தமிழில் சிங்களக் கவிதையை வாசிக்கிறோம் என்ற உணர்வினை ஏற்படுத்தும் வகையில் அவற்றை மொழிபெயர்த்திருக்கும் முறைமை. மூலமொழிக் கவிதைகளில் வெளிப்பட்ட இருண்மையைக் கூட அதே சொற்களுடன்  மொழிபெயர்த்திருப்பது என்பதை ஒரு சிறப்பாக நான் பார்க்கிறேன்.

    இரண்டாவது, அக் கவிதைகளில் கவிஞர்கள் பேசியிருக்கும் விடயங்கள். மேலெழுந்தவாரியாகப் பேசும்பொழுது இந்த நாட்டின் சிங்களம் – தமிழ்மொழி பேசும் மக்கள் பிரச்சினைகள் பொதுவானவை என்று சொல்லப்படுவதுண்டு. இக் கருத்து போர்க்காலச் சூழலில், உயிர் -உடைமை இழப்பு, காணாமல் போனவர்கள், விதவைகள், அநாதைகள்   போன்றவற்றின் உருவாக்கம் என்ற வகையில் பொதுவானவையாக இருக்கலாம். ஆனால் மேலும் சில அம்சங்களில் மூவின மக்களின் பிரச்சினைகள் வெவ்வேறானவை என்பது தெரியவரும். அவை ஒரே மாதிரியாகத் தெரிந்தாலும், அந்தப் பிரச்சினைகளுக்குக் காரணமான காரணிகள் எதிர்நிலையாகவும், தாம்சார்ந்த சமூகத்தை மட்டுமே சார்ந்தவையாகவும் அமைந்திருப்பதைக் காணலாம். அத்தகைய கவிதைகள் இத் தொகுப்பில் நிறைந்தே காணப்படுகின்றன.

    ஈழத்துச் சூழலைப் பொறுத்தவரை மேலும் பல பிரச்சினைகள் பற்றி அவை சார்ந்த அனுபவங்களைக் கொண்டு சிங்களக் கவிஞர்கள் பேசி வந்துள்ளார்கள் என்பது இத் தொகுப்பின் கவிதைகள் மூலம் தெரிகிறது.  1977ஆம் ஆண்டின் சிங்கள இளைஞர்களின் கிளர்ச்சி, பொருளாதாரக் கொள்கை மாற்றங்கள், அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் அதன் காரணமாக ஏற்பட்ட விளைவுகள் பற்றியெல்லாம் கலைத்துவமாகவும், தர்க்கபூர்வமாவும் சிங்கள நவீன கவிஞர்கள் பேசி வந்துள்ளார்கள் என்பது  இத் தொகுப்பின் கவிதைகள் மூலம் தெரிகிறது.

    அத்தோடு பெண்ணியம் சார்ந்த குரலையும், அழகாகவும், ஆழமாகவும் நுண்ணிய முறையில் சிங்களக் கவிதைகள் பேசியிருக்கின்றன என்பதை எடுத்துக்காட்டும் வகையிலான கவிதைகளும் இத் தொகுப்பில் அடங்கியிருக்கின்றன. இத்தகைய பல அனுபவங்களை வெளிப்படுத்தும் சிங்களம் மற்றும் தமிழ்ச் சிறுகதைகள், நாவல்கள் என பலவற்றை நாம் வாசித்திருப்பினும், அந்த அனுபவங்கள் தரும் உணர்ச்சிகளையும், உணர்வுகளையும் கவிதைகளில் வாசிக்கின்ற பொழுது, சிலிர்ப்பான ஒரு வாசிப்பு அனுபவத்திற்கு ஆளாக்கப்பட்டு, அப் பிரச்சினைகளைப் பற்றி நம்மை ஆழ்ந்து சிந்திக்க வைக்கிறது.

    சம கால நவீன சிங்களக் கவிதையின் போக்கையும், வளர்ச்சியையும் தெரிந்து கொள்ளும் சந்தர்ப்பத்தையும் இத் தொகுப்பு தந்திருக்கிறது. இத் தொகுப்பில் அமைந்துள்ள வீச்சுமிக்க ஒவ்வொரு கவிதையைப் பற்றியும்  தனித்தனியாகவும் விரிவாகவும் பேசலாம். பேசவேண்டும் போல் தோன்றுகிறது. ஆனால் விரிவஞ்சி இரண்டு கவிதைகளைப் பற்றி அதுவும் சுருக்கமாகப் பேசலாம் என நினைக்கிறேன்.

    ஒன்று, இத் தொகுப்பில் அமைந்துள்ள தக்ஷிலா ஸ்வர்ணமாலியின் அயல்வாசிஎனும் கவிதை. இக் கவிதை இரு மொழி சமூகத்தின் இடையிலான உறவாடல், இருப்பு நிலை பற்றியெல்லாம் பேசுகிறது. ஒரு சிங்களப் பெண்ணின் குரலில் வெளிப்படும் இக் கவிதை இப்படித் தொடங்குகிறது.

    ”நுரை நிறக் கண்களுடைய ரகு
    ஆழப் புதைந்த விழிகள்’   எனத் தொடங்கி இடையில், 

    பணம் வேண்டாமெனச் சொன்ன மாதம்
    வாங்கி வந்தான் ரகு

    சிறு வண்ணப் பூக்களிட்ட சேலையொன்றையும்
    நிறைய வளையல்களையும்

    சேலை உடுக்கத் தெரியாதென்றதும்
    அணிவித்து விட்ட ரகு

    அழகு பார்த்தான் வளையல்களையுமிட்டு
    ‘பொட்டு?’ நான் கேட்டேன்.

    ‘இல்லாவிட்டாலும் பரவாயில்லை’ என்றான் ரகு”   என நகரும் அக் கவிதை இப்படி முடிகிறது.

    பிறக்கக் காத்திருந்த குழந்தையின் தந்தை
    தோடம்பழ பெட்டியினைத் தலையில் வைத்தபடி
    அன்றாட உழைப்புக்காக நடந்து கொண்டிருக்கையில்
    புறக்கோட்டையில் வெடித்த குண்டில்
    மரித்துப் போன நாளன்று
    துயருற்ற அளவுக்கு
    கவலை தோன்றியது
    இறுதியாக ரகு
    என்னைப் பார்த்தபோது.

    இக் கவிதை என்ன பேசியது? எதைப் பற்றிப் பேசியது? என்ற கேள்விகளுக்கு உதாரணமாகக் காட்டிய மேற்குறித்த வரிகள் பதில் அளிக்கின்றன.

    அடுத்து இத் தொகுப்பில் அமைந்த கவிதையான  டீ. திலக பியதாஸவின் யுத்த களமொன்றின் இறுதிக் கணம் எனும் கவிதையைப் பற்றி பார்க்கலாம். இக் கவிதைக்கான முதல் வாசிப்பின்பொழுது உடனடியாக எனக்கு, புலம்பெயர் சூழலில் இயங்கும் ஈழத்தவரான ஆங்கிலத்தில் எழுதும் சுரேஷ் கனகராஜா அவர்கள் எழுதிய கவிதை ஒன்று நினைவுக்கு வந்தது. அதன் தலைப்பு கோப்ரல் பிரேமரத்னாவின் அஞ்சலிப்பா‘. அக் கவிதை இறந்து போன ஒரு கோப்ரலுடன் ஒரு தமிழர் பேச, பியதாஸாவின் இக் கவிதை ஓர் இராணுவ வீரர் அவருடன் போரிடும் எதிரிப் படைவீரனைப் பற்றியும், அத் தருணத்தில் நிகழப் போகும்  மரணத்தைப் பற்றியும் சிந்திக்கும் வகையில் அமைகிறது.

    இக் கவிதையின் சில வரிகளை மாத்திரம் உதாரணம் காட்டினால் மட்டும், இக் கவிதை வெளிப்படுத்தும் மனோநிலையை முழுமையாக வெளிப்படுத்தியதாக இருக்காது என்பதனால் முழுக் கவிதையையும் இங்கே தருகிறேன்.

    ”எனக்கு முன்னால்
    என்னைக் குறிபார்த்தவாறு
    ஆயுதமொன்றை  நீட்டியிருக்கும்
    எதிரிப்படை வீரனை நோக்கி
    நானொரு துப்பாக்கிக் குண்டை
    விடுவிக்கவே வேண்டுமா?
    அவ்வாறு நான் செய்யாதுவிடின்

    துப்பாக்கி ரவையொன்று வரும்
    என்னுடலைத் தேடி
    துளைத்துச் செல்லும் முகமாக 

    ஆகவே வெற்றி அவனுக்கா, எனக்கா?
    அவன் முந்திக் கொண்டால்

    நாளைச் செல்லக் கூடும்
    அவனது பெற்றோரைப் பார்த்து வர
    அல்லது அவன் வரும் வரைக்கும்
    கண்ணீர் சிந்திக் கொண்டிருக்கும்
    மனைவி பிள்ளைகளிடம். 

    அவ்வாறாயின், உடனடியாக
    இந்த ஆயுதத்தை இயக்க வேண்டியது நானா?
    அப்பொழுதுதான் எனக்கு நாளை

    சம்பளத்தோடு சில மாதங்கள்
    விடுமுறை கிடைக்கும்
    செல்ல முடியும்

    நான் வரும் வரை
    கண்ணீர் சிந்திக் கொண்டிருக்கும்
    பெற்றோர், மனைவி, பிள்ளைகளை
    பார்த்து வர நாளை
    ஆகவே முந்திக் கொள்ளும்
    முதல் துப்பாக்கி ரவையில்
    எழுதப்பட்டிருப்பது அவனது பெயரா
    அல்லாதுவிடின் எனது பெயரா? 

    இக் கவிதையில் எங்கும் இன அடையாளச் சொல்லாடல்கள் இல்லை என்ற வகையில் உலகப் பொதுவான போர்க் கலாசாரத்தின் இக்கட்டான தருணங்களைப் பேசுவதாகத் தெரியும். ஆனால் ஆழ்ந்து கவனித்தால் சில சொல்லாடல்கள் மூலம் இக் கவிதையில் ஒலிக்கும் குரலுக்குரியவர் யார்  என்றும் அவர் முன்னால் நிற்கும் எதிரிப் படைவீரன் எவர் எனவும் தெரிய வரும்.

    ஆக, தமிழில் சிங்களக் கவிதைகள் படிக்கிறோம் என்ற உணர்வினை ஏற்படுத்தும் வகையில் சிறப்பான முறையில் இக் கவிதைகளைத் தமிழில்  தந்திருக்கும் எம்.ரிஷான் ஷெரீப்பின் இம் முயற்சியானது, ஈழத்தில் சிங்கள மொழிக் கவிதைகளின் நேரடி மொழிபெயர்ப்பு முயற்சிகளில்  மிகக் கவனத்திற்குரிய முயற்சியாக இத் தொகுப்பு அமைகிறது.

    ஈழத்துக் கவிதை (கவனிக்க – ஈழத்துத் தமிழ்க் கவிதை மட்டுமல்ல) வளர்ச்சியினைப் பற்றி (இந்தியக் கவிதை என்றால் மலையாளம், தெலுங்கு என அனைத்து மொழிகளையும் இணைத்துப் பேசுவது மாதிரி) பேசுவதற்காகவும் இத் தொகுப்பு பயன்படும் என்பதோடு ஈழத்துக் கவிதை முயற்சிகளை (தமிழ் மட்டுமல்ல) ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க முயலும் மொழிபெயர்ப்பாளர்களுக்கும் இத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள ரிஷான் ஷெரீப்பின் மொழிபெயர்ப்புக் கவிதைகள் பயன்படும் என்று சொல்வதோடு, பயன்படவேண்டும். பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்பதே எனது அவாவாகவும் இருக்கிறது.

    இறுதியாக, தமிழக – ஈழத்து நவீன, பின்-நவீன கவிஞர்களுக்கு ஒரு வேண்டுகோள் அல்ல உத்தரவு.

    கட்டாயமாக இத்தொகுப்பினை வாசியுங்கள்!

     

     

    Share
  • அன்றும் இன்றும் [2]

    இன்னம்பூரான்

    ஜனவரி 2, 2018

    அகஸ்மாத்தாக என் நண்பர் ஒருவரை சந்திக்க நேர்ந்தது. அவர் ஒரு முன்சாக்கிரதை மனிதர். வயது 92 என்பதால் எல்லாம் முன்கூட்டியே செய்து விடுவார். அடுத்த க்ஷணம் யார் கண்டா என்பார். 2019 வருட வாழ்த்துக்களை இப்போதே அளித்து விடுவார். அவர் எழுதும் எழுத்து ஒவ்வொன்றும் கம்பீரமாக நின்று நம்மை எடை போடும். அத்தனை அழகிய கையெழுத்து. ஆடாமல் அசையாமல் வாடா என்பார். வந்து கட்டியம் கூறும். அவர் எனக்கு பொங்கல் வாழ்த்துக்களை இன்றே எழுதி கொடுத்து விட்டார். அதற்கு பிறகு வருவோம். ‘கொற்றையருள்’ என்ற தன் புனைப்பெயரால் எழுதிய கவிதை ஒன்றை நீட்டினார். நம்ம ருத்ரனே அசந்து போகிறமாதிரி நீரோட்டம். இந்த தொடருக்கு உகந்த கருத்துக்கள்:

    “இன்னாளில்

    அன்பினால் இவ்வுலகம் ஆட்படவேண்டும்

    அறநெறி ஓங்க வேண்டும் பிறநெறி நீங்கவேண்டும்

    தன்னலம் காத்தலோடு பொதுநலம் பேணவேண்டும்

    பழியிலாப் பொருளீட்டிப் பயனுற வழங்கவேண்டும்

    நல்லன எண்ணிடில் நல்லன விளைந்திடும்

    நல்லன மொழிந்திடில் நட்பது மிகுந்திடும்

    நல்லன ஆற்றிடில் நானிலம் உய்யுமால்

    நல்லன எண்ணி, நல்லன மொழிந்து நல்லன ஆற்றுக!

    நலமோங்க வாழ்க! நாடொறும் வாழ்க!”

    கொற்றவையருள்

    எளிய தமிழில் வழங்கப்பட்ட கவிதை தான். எனினும், உள்ளே தொக்கி நிற்கும்

    பொருட்களஞ்சியம் கண்டு களித்து பேணத்தக்கது. சாங்கோபாங்காமாக அடுத்தத் தொடரில் அலசலாம்.

    (தொடரும்)

    Share
  • நினைவுப் பெட்டகம்-2017

    பெருவை பார்த்தசாரதி

    download (53)

     

     

    அனைத்துலக நிகழ்ச்சிகளும் ஆடி அமருமிடமாம்..

    ……….அருமைப் பெட்டகமதுவே நம்மரிய நினைவாகும்.!

    அனைவரிடமும் இருக்குமிந்த அரும் பொக்கிஷம்..

    ……….அதி லமிழ்ந்திருக்கும் ஆயிரமாயிரம் இன்பதுன்பம்.!

    எனையது உறக்கத்தில் தட்டியெழுப்பும் அதுநாம்..

    ……….ஈட்டிய சாதனைகளும் கூடவேசில சோதனையும்.!

    சுனையாய் மனதிலென்றும் மகிழ்வுடனே சுழலுவது..

    ……….சீறிப்பாய்ந்த செயற்கைக் கோளதற்கே முதலிடம்.!

     

     

    தினைவிளையும் புலமதில் வினைவிதைத்த செயல்..

    ……….தனைப்போல் துயரமுமப் பெட்டகத்துள் உண்டு.!

    பனைமரம் வேரொடு சாய்வதைப்போல்…சாய்த்து..

    ……….படுகுழி பறிக்கும்வரியும் வட்டியும்.!…குருதியில்

    நனைந்து நாடுகாக்கும் வீரரின் உயிர்த்தியாகமும்..

    ……….நாற்புரமும் நாளும் நடந்தேறிய சோகக்கதைகள்.!

    நினைவகலா மல்லுக்கட்டிய சல்லிக்கட்டு சடுத்தம்..

    ……….நினைவில் கடலலைபோல தினமும் புதைந்தெழும்.!

     

     

    கருங்குயிலின் முட்டையோ காக்கை கூட்டிலதுபோல..

    ……….கருப்புப்பணம் ஒளிந்து கொண்டது அயல்நாட்டில்.!

    கருடப் பார்வையால் கண்விழித்துப் பார்த்தாலும்..

    ……….கடந்துவிடு மெல்லை தாண்டிய தீவிரவாதச்செயல்.!

    பெருவினை புரிந்தபுயலும் இயற்கைப் பேரிடரும்..

    ……….திரும்பிநமைப் பார்க்கச் சொல்லும் விரும்பாமல்.!

    வருங்காலத்தில் கடந்த நிகழ்வுகள் ஒவ்வொன்றும்..

    ……….வரிசையாய் இடம்பெறும் நினைவுப் பெட்டகத்தில்.!

     

     

    பதவியிலே அமர்வதற்குப் பலவித போட்டிகளாம்..

    ……….பந்தாடும் அரசியலில் அரங்கேறும் சூழ்ச்சிகளாம்.!

    உதவிடும் மனப்பான்மை இல்லாத உள்மாநிலத்துள்..

    ……….உப்புக்கடலில் வீணேசேரும் நீருக்கு அடிதடியாம்.!

    எதற்கிந்த ஏவுகணை என்பதைநாம் அறியுமுன்னே..

    ……….ஏனிந்த உலகையழிக்கும் அணுவாயுத அச்சுறுத்தல்.!

    பதற்றமே நிறைந்தயிந்தப் பாருலகு வாழ்க்கையில்..

    ……….பதியுமாம் பல்நிகழ்வுகள் நினைவில்….பெட்டகமாக.!

    ==============================================

    நன்றி:: தினமணி வெளியீடு:: 30-12-17

    நன்றி:: கூகிள் இமேஜ்

    ============

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180102 -Tiruppavai 18- lr Purushakaratva .watercolour KrishnaforToday- seeking the recommendation to attain the supreme goal of Krishna through his consort. The guru is the mahout, where the elephant, happy to be under his control, gives the chain to bind himself with.
    180102 -Tiruppavai 18- lr Purushakaratva .watercolour KrishnaforToday- seeking the recommendation to attain the supreme goal of Krishna through his consort. The guru is the mahout, where the elephant, happy to be under his control, gives the chain to bind himself with.

    ”ஒருகாதில் சங்கு, மறுகாதில் ஆழி(சுதர்ஸன சக்கிரம்)
    பெருகாது ஆனைத்தோல் போர்த்தி , -திருவா
    திரைநாளில் தாய்க்குப்பின் தாரம்தான் என்று
    அறைகூவல் விட்டான் அனந்து’’….!

    ’’ நாச்சியார் ஆண்டாள் நவனீத ரங்கனைக்
    காய்ச்சினாள் பாசுரத்தால் காலையில், -பூச்சொரிந்து
    சில்லென்று மாலையில், சூடிக் கொடுத்தவள்
    இல்லாளாய் ஆனாள் இறைக்கு’’….கிரேசி மோகன்…

    Share