Blog

  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180101 - Tiruppavai 17 - lr  (Baladeva | Seshatvam Nandagopala - Acharya Yashoda - The moola mantra - Water from the Bhagavan’s foot - hints at Avichchinna dara- Vamana avatar - blessing to all. Seeking the meanings of the rahasyatrayam.
    180101 – Tiruppavai 17 – lr
    (Baladeva | Seshatvam Nandagopala – Acharya Yashoda – The moola mantra – Water from the Bhagavan’s foot – hints at Avichchinna dara- Vamana avatar – blessing to all. Seeking the meanings of the rahasyatrayam.

    ”மத்தாண்டு போலத்தான் புத்தாண்டும் வந்திருக்கு,
    பத்தாண்ட(தஸாவதாரம்) கண்ணன் ,பரந்தாமர் -கொத்தாண்டு(மாலைக் கொத்து)
    சூடிக் கொடுத்த சுடர்கொடி போலெமக்கு
    பாடும் பரிசளிகோ பா(நந்தகோபன் செல்லமாய் ‘’கோபா’’)’’….கிரேசி மோகன்….!

     

    Share
  • மார்கழி மணாளன் (மூன்றாம் பகுதி ) 18

    க. பாலசுப்பிரமணியன்

     

    திரு பரமேஸ்வர விண்ணகரம்  அருள்மிகு வைகுந்தப் பெருமாள் கோவில்

    26165798_759459714238180_188493417537423249_n

    கைலாசனின் அருளாலே களிப்புற்றான் விரோசனனும்

    கையிரண்டில் தவழ்ந்தனவே காவல் தெய்வங்களே

    கைகூப்பிக் கண்ணனையே காலமெல்லாம் தொழுதிடவே

    கைலாயனின் கண்ணருகில் கண்ணனின் விண்ணகரம் !

     

    பரமசிவன் கருணையினால் பரமபதம் வந்தது

    பாரெல்லாம் போற்றிடவே பேரருளைத் தந்தது

    பல்லவனின் பேரன்பால் பரமேஸ்வரம் அமர்ந்தது

    பரவசத்தில் அடியார்களுக்கு அருட்சுனையாய் அமைந்தது !

     

    ஆழ்கடலின் நடுவினிலே அமைதியாய் அயர்ந்தவனே

    பாழ்மனமே அலைபாய நிலைக்காக்க வருவாயோ ?

    ஊழ்வினையே ஒன்றாகி உள்ளமெல்லாம் உலுக்கிவிட

    யாழிசையாய் வந்திடுவாய் என்னுயிரை மீட்டுவிட !

     

    அன்னையவள் சொல்காக்கக் கானகத்தில் நடந்தாய்

    அரியணையின் நலம்காக்கத் தூதுவனாய் நடந்தாய்

    அடியவர்கள் மனம்காக்க அகிலமெல்லாம் நடந்தாய்

    அண்டமெல்லாம் காத்திருக்கும் உன்னடிகள் எதிர்நோக்கி !

     

    தூணொடித்து நடுவாயிலில் அமர்ந்த நரசிம்மா !

    வில்லொடித்து வைதேகி கைப்பிடித்த காகுந்தா !

    சொல்லெடுத்து நான்வந்தேன் சுவையாக உனைப்பாட

    மண்ணெடுத்த பிறவியிலே வைகுந்தா! வாழ்வளிப்பாய் !

     

    வைகுந்தம் எங்கென்று யாரேனும் அறிந்தாரில்லை

    வைகுந்தன் வடிவழகை யாரேனும் கண்டாரில்லை

    வைகுந்தன் பெயர்சொல்ல யாரேனும் மறந்தாரில்லை

    வைகுந்தா ! வையகத்தில் உன்னருளிருக்க வீழ்ந்தாரில்லை!

    Share
  • படக்கவிதைப் போட்டி 141-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    வல்லமை வாசகர்கள், படைப்பாளிகள் அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்! 

    elephant with guide

    மஞ்சுசூழ் நீர்நிலையில் தந்தங்களைப் பாகன் வருடிக்கொடுக்க, குளித்துக் களிக்கின்றதோ இந்தக் களிறு? கண்கவர் காட்சியிதனைத் தன் புகைப்படக்கருவியில் பதிவாக்கி வந்திருக்கும் திரு. ராம்குமார் ராதாகிருஷ்ணனுக்கும், போட்டிக்கு இதனைத் தேர்வுசெய்து தந்த வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பனுக்கும் என் நனிநன்றியைக் கனிவோடு தெரிவிக்கின்றேன்.

    மதங்கொண்டால் ஊரையே நடுங்கவைக்கும் கொல்களிறு, பாகனிடம் பச்சைக் குழந்தைபோலச் சாதுவாய்ப் பழகுவதைப் பார்க்கையில்,

    ”பெரும! ஊரில் உள்ள சிறுவர்கள் தனது வெண்மையான தந்தத்தைக் கழுவுதற்கு நீர்த்துறையில் பொறுமையாக அமர்ந்திருக்கும் பெருங்களிற்றைப் போல நீ (புலவர்களாகிய) எமக்கு இனியவன்; ஆனால், உன் பகைவர்க்கு, நெருங்குதற்கு அரிய மதங்கொண்ட யானையைப் போல் இன்னாதவன்” எனும்  சங்கப்புலவர் ஔவையின் புறப்பாடல் நினைவுக்கு வருகின்றது.

    ஊர்க்குறு மாக்கள் வெண்கோடு கழாஅலின்,
    நீர்த்துறை படியும் பெருங்களிறு போல
    இனியை பெரும எமக்கே; மற்றதன்
    துன்னருங் கடாஅம் போல
    இன்னாய் பெருமநின் ஒன்னா தோர்க்கே. (புறம்: 94)

    இனி கவிதைகளுக்குச் செல்வோம்!

    *****

    ”பருத்த யானை தன் திறன்உணராது பாகனுக்கடங்கிச் சேவகம் செய்வதுபோல், மாந்தரும் தம் ஆற்றல் அறியாது அயலானிடம் அஞ்சி அஞ்சிச் சாவது வேதனைக்குரியது” என்று விளம்புகின்றார்  திரு. ஆ. செந்தில் குமார். 

    யானைப் பாகனும் யானையும்

    மரகதப் பச்சைக் கம்பளம் போன்று 
    மரங்க ளடர்ந்து மலை காட்சியளிக்க
    பளிங்கு நீரை மிகுதியாய்க் கொண்ட
    பரந்தத் தடாகம் அதனடியை வருட
    பாகனொருவன் தான் அழைத்து வந்த
    பருத்த யானையின் தந்தத்தைப் பிடித்து
    பரிவுடன் அதையே நீராட்டி மகிழ்ந்தான்!

    கார்மேகம் போன்ற கரிய உருவமும்
    குறுகுறு வெனவே விழிக்கும் கண்களும்
    தூரிகைப் போன்றொரு சிறிய வாலும்
    கூரிய வெள்ளைத் தந்தங்க ளிரண்டும்
    தூணினைப் போன்று கால்கள் நான்கும்
    தன் சிறப்பெனக் கருதும் தும்பிக்கையோடு
    தண்ணீரில் அமர்ந்து யானை இருந்தது!

    கனிவுடன் உணவை யானைக் களித்து
    கடின வேலைகள் பலவும் சொல்லி
    அங்குசம் ஒன்றின் துணைக் கொண்டு
    ஆனைப் பாகன் அதைப் பயிற்றுவிப்பான்!
    தன்வாயால் பாகன் கட்டளை இடவே
    தன்வலிமை என்ன வென்பதை மறந்து – அதை
    தலையாயச் செயலெனச் செய்து வாழும்!

    மானிடர் பலரும் இவ்வானையைப் போன்று
    மூளையின் ஆற்றலை அறவே மறந்து
    தன் தோள்களின் வலியை உணர மறந்து
    தன்னை விடவும் ஆற்றல் குறைந்த
    அயலான் ஒருவன் பாதம் பணிந்து
    அஞ்சி அஞ்சி வாழ்வைக் கழித்து
    அடிமைச் சேவகம் செய்து மறைவர்!!!

    *****

    ”வலிமிகு யானை தன் ஆற்றல் மறந்து இரந்துண்டு வாழும் நிலையடையச்செய்த பாகனின் செயல் மனம் நோகச்செய்வது” என்கிறார் திரு. செண்பக ஜெகதீசன்.

    பிச்சையெடுக்க விட்டவன்…

    தும்பிக் கையினை நம்பிநல்ல
    துணிச்சல் கொண்ட யானையது
    வம்பே யின்றிச் சுதந்திரமாய்
    வலமாய் வந்ததைப் பிடித்தேதான்,
    தந்த மதனின் வலிமையையும்
    தானே மறக்கப் பழக்கியதைச்
    சொந்த நலனில் இரந்திடவே
    செய்து விட்டான் மனிதனவனே…!

    *****

    ”கணபதிக்கு முகம் தந்தவன்; கடின உழைப்புக்கு இலக்கணம் ஆனவன்; சைவ உணவின் மகத்துவத்தைச் சகத்துக்குச் சாற்றியவன்; பாரதக் கதை மாற்றிய அஸ்வத்தாமன்; பார்ப்பவர் வியந்திடும் கம்பீர உருவுடையான்” என்று யானையின் பீடுதனைப் பாடுபொருளாக்கியிருக்கின்றார் திரு. பழ.செல்வமாணிக்கம்.

    கம்பீரத்தின் வீழ்ச்சி

    கணபதிக்கு முகம் தந்த அன்பின் விளக்கம் நீ!
    இந்திரனுக்கு பெருமை சேர்த்த ஐராவதம் நீ!
    கடின உழைப்பிற்கு இலக்கணம் ஆனாய் நீ!
    ஆலய வாசலின் அனைவரையும் வரவேற்கும் அன்புத் தோழன் நீ!
    போரில் முன் நின்று சண்டையிடும் இணையில்லா வீரன் நீ!
    நீ நடந்து வரும் அழகை வர்ணிக்க வார்த்தையில்லை !
    உனைப் பார்த்து மகிழாத பிள்ளை யாருமில்லை!
    உருவத்தால் மட்டுமில்லை! பாசத்திலும் பெரியவன் நீ!

    குழந்தையை தாய் சுமக்கும் காலமோ பத்து மாதம்!
    உன் குட்டியை நீ சுமப்பாய் இரு பத்து இரண்டு மாதம்!
    கூட்டமாய் வாழும் கொள்கை உடையவன் நீ!
    பெண் யானைக்கு மட்டும் தான் தலைமைப் பதவி!
    மனித இனத்தில் மட்டுமல்ல !யானை இனத்திலும்
    பொறுப்பானவர்கள் பெண்களே! எனவே இப்பதவி!
    உனைப் பற்றிச் சொல்ல எத்தனை செய்திகள்!
    உன் நினைவாற்றல் அரியது!
    மோப்ப சக்தியால் நீர் நிலைகளை அறியும் அற்புத ஆற்றல்
    வியப்புக்குரியது!
    சைவ உணவின் சக்தியை உலகிற்கு உணர்த்தியது!
    உனக்கோ பல பெயர்கள்!
    வேழம், வாரணம், மாதங்கம், களபம்
    குஞ்சரம், மதகயம். போதகம்
    எண்திசை காக்கும் அஷ்ட திக் கஜங்கள் ஆனாய்!
    அஸ்வத்தாமாவாய் நீ வந்து பாரதக் கதை மாற்றினாய்!
    அளப்பரிய ஆற்றல் இருந்தாலும், அங்குசத்திற்கு அடி பணிவாய்!
    அடக்கம் அமரருள் உய்க்கும் என்பதை அழகாய்ப் புரிய வைத்தாய்!
    பாகன் கட்டளைக்கு அடி பணிந்து, வேலை பல விரைந்து முடித்திடுவாய்!
    நீர் நிலையைப் பார்த்து விட்டால் குளித்து மகிழ்ந்திடுவாய்!
    தும்பிக்கையில் நீர் எடுத்து உன் மேல் ஊற்றிடுவாய்!

    நின்றபடி தூங்கிடுவாய்!
    யானைக்கு மொழி உண்டாம்! ஆய்வில் கண்ட உண்மை!
    பிளிறல் கேட்கையிலே ஏதோ புரிகிறது!
    ஆண் யானைகள் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது!
    தந்ததத்தை எடுப்பதற்கு, யானைகளை கொல்கின்ற
    அவலம் நெருப்பாய் சுடுகிறது!
    கம்பீரமாய் வலம் தந்த யானை கனவாய்க் போகலாமா!

    *****

    ஆகம சாத்திரத்தில் தடம்பதித்தாய்; ஆலய சிற்பத்திலும் இடம்பிடித்தாய்; வாகனமாய்க் கடவுளுக்கு ஆனாய்; பாகனின் பாகுமொழிகளுக்குப் பணிந்தாய்; சண்டை மட்டுமன்று சர்க்கஸும் நீயின்றிச் சிறக்காது” என்று யானையின் அருஞ்சேவைகளைக் கோவையாக்கியிருக்கின்றார் பெருவை திரு. பார்த்தசாரதி.

    யானை வரும் முன்னே..அதன் பெருமை வரும் பின்னே.!

    கோட்பாடு கொண்ட பாலூட்டும் பாசக்குடும்பம்..
    ……….கோட்டுக்காக வேட்டைக் கிரையாகுமோர்க் களிறு.!
    வேட்டஞ் செய்மனிதரும் போற்றும் வகையில்நீ..
    ……….வேகமின்றி நிதானமாய் அற்புதச் செயல்புரிவாய்.!
    ஆட் கொண்டானுனை வாகனமாய் இறைவனும்..
    ……….அறிவிற் சிறந்து விலங்கில்நீ வேறுபட்டதாலே.!
    காட்சிப் பொருளாய் இன்றும்நீ காண்பதற்கரிய..
    ……….கண்ணுக்கு விருந்தளிப்பாய் சிலையாய் உயிராய்.!.

    .ஆகம சாத்திரத்தில் ஆனையும் ஓரங்கமாகும்..
    ……….ஆலய சிற்பங்களில் சிந்தனைக்கு விருந்தாகும்.!
    ஏகபோகம் எல்லாம் அனுபவிக்கும் ராஜாவும்தன்..
    ……….எதிர்பகை வெல்வானுன் படைத் துணைகொண்டு.!
    மேகவாகனுன் கரியநிறத்தை வெள்ளை யாக்கி..
    ……….மேல்சவாரி செய்ததால் மேலுலகத்திலும் புகழ்.!
    தேகப்பயிற்சி இலாமலே திரண்ட உடலமைப்பும்..
    ……….திகைக்கும் திறன்மிகு உன்தும்பிக்கை அதிசயம்.!.
    ..
    வாகனமாய்க் கடவுளுக்குப் பணி செய்வாய்..
    ……….வேழமுக வினையகனாக வடிவ மெடுப்பாய்.!
    ஊகத்துடன் பாகனின் சைகையறிந்து செயலை..
    ……….உறுதியுடன் செய்வாய்!ஒன்றாகக் கூடிவாழ்வாய்.!
    பாகனிடம் பரிவுண்டு! ஆனால் மதம்பிடித்தால்..
    ……….பந்தாடி பரலோகம் அனுப்பிடுவாய் அறியாது.!
    சோகத்தை நிகழ்த்துகின்ற இச்செயலாலே உன்..
    ……….சாதனைக்கு இழுக்காக இதுவொரு பங்கம்தான்.!.

    லோகத்தை இரட்சிக்கும் பரந்தாமனும் உன்மீது..
    ……….லாவகமாய்ப் பவனிவந் தவனியைக் காப்பான்.!
    சாகசத்தில் சர்க்கஸில் சறுக்கி விளையாடினும்..
    ……….சற்றுதுள்ளிக் குதிக்கத் தெரியாத அப்பாவியாம்.!
    பாகனின் அரையடி அங்குசமுனை அடக்கும்..
    ……….படுத்து எழுந்திருப்பதற்கு படுங்கஷ்ட மதிகம்.!
    வாகாக வளைத்துதன் தும்பிக்கைக் கொண்டுனை..
    ……….வணங்கும் பக்தருக்கு ஆசிர்வாதம் செய்வாய்.!

    *****

    களிற்றின் நிறைகுறைகளைக் கருத்தொடு தம் கவிதையில் பொதிந்து தந்திருக்கும் கவிஞர்களுக்குப் பாராட்டுக்கள்!  

    இவ்வாரத்தின் சிறந்த கவிதையாய்த் தேர்வாகியிருக்கும் கவிதை இது!

    காக்கக் காக்க களிற்றினந் தன்னை…

    ”சிங்க மராட்டியரின் கவிதை கொண்டு
    சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம்”
    என்று அருங் கவிஞன் எங்களது பாரதியின்
    தங்கத் தமிழ் வாய் தவறி உரைத்ததனால்
    ஆத்திரத்தை யானை அவன்மீது காட்டியதோ!

    என்று மனங்கலங்கி-

    அழிகின்ற ஆனைகள் மேல்
    அனுதாபம் காட்டாத
    பழிவந்து சேராமல்,
    பாரதியென் சொற்குருவின்
    ஓடித் தவறிவிட்ட ஓர்கவிதைக் கீடாக

    ஓர் கால்-

    ”ஈழத்து வேழநிரை பல பிடித்தே
    ஏற்றன்பு செய்பவர்க்கே அனுப்பி வைப்போம்
    பாழும் பணத்தினுக்காய் அவற்றைக் கொன்றே
    பல்லைப் பிடுங்கி விற்கும் கொடுமை செய்யோம்”

    என்று கவி பாடிட வே என்னை மனம் தூண்டியது.

    இங்கே
    நல்ல பெறுமதி என்றுள்ளூர எண்ணி
    பல்லைத் தடவும் பாகனிடம்
    கொல்ல நினையாதே என்னையென்று
    சொல்லத் தெரியா, வாய்
    இல்லா மிருகம்
    மெல்லத் தன் கை கூப்பி
    வேண்டுகிறகிற காட்சியிதா?
    அல்லாவிடிற் தன் அழகு மிகு தந்தத்தை
    பாலிஷ் செய்கின்ற பாகன் மேல் அன்பு வைத்து
    கையுயுாத்தி நன்றிதனைக் காட்டுகிற காட்சியதா!

    எப்படியா யிருந்தாலும் –

    காட்டில் சுதந்திரமாய்க் கட்டற்று வாழ்கின்ற
    ஆனைகளைப் பிடித்து அங்குசத்தாற் குத்தி
    வேதனைக்கு உள்ளாக்கி வேலை பல வாங்கி
    பாதகங்கள் செய்யாதீர் பாவமந்த ஜன்மங்கள்!

    ”சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம் என்று வெள்ளந்தியாய்ச் சொன்னதற்கா எங்கள் செந்தமிழ்ப் புலவனின் ஆருயிரை நீ கவர்ந்திட்டாய்?” என்று ஆனையை ஆற்றாமையோடு கேட்கும் கவிஞர், ” ”பல்லைத் தடவும் பாகனிடம் என்னைக் கொல்ல நினையாதே என்று களிறு கைகூப்பும் காட்சியோ இஃது? என்று கேட்பதும், களிறுகளும் நம் சொந்தங்களே! தந்தங்களுக்காக அவற்றைக் கொன்றழிக்கும் பாவத்தைச் செய்யாதீர் மானுடரே!” என்று  முடித்திருப்பதும் சிறப்பு.

    சிந்தனைக்கு விருந்தாகும் நற்கவிதை படைத்தமைக்காக, திரு.  எஸ். கருணானந்தராஜாவை இவ்வாரத்தின் சிறந்த கவிஞர் என்று அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

     

     

    Share
  • இந்த வார வல்லமையாளர் (255)

    இந்த வார வல்லமையாளராக திரு கவுதம சன்னா அவர்களை தேர்ந்தெடுப்பதில் வல்லமை மகிழ்ச்சி அடைகிறது

    கவுதம சன்னா ஒரு சிறந்த சமூக- அரசியல் எழுத்தாளர் ஆவார். அரசியல் சமூகப்பணிகளில் ஈடுபட்டு வரும் இவர் பல நூல்களையும், படைப்புகளையும் எழுதியுள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொள்கைபரப்பு செயலாளராக மக்கள் தொண்டாற்றி வருகிறார். வசிப்பிடம் சென்னை ஆகும்.

    இவர் பேராசிரியர் யூகோ கொரிங்கே அவர்களுக்கு அளித்த பேட்டி சவுத் ஆசியனிஸ்ட் பத்திரிக்கையில் வெளியிடபட்டு உலகெங்கும் தமிழ் பேசும் பட்டியல் இன மக்களின் உரிமைப்போரின் வரலாற்றை கொண்டு செல்லும் வண்ணம் அமைந்தது. அதில் பல புரட்சிகரமான முற்போக்கு கருத்துக்களை சன்னா முன்வைக்கிறார்.

    அம்பேத்கர் நூற்றாண்டு விழாவின் போதுதான் பட்டியல் இன மக்களின் உரிமைப்போர் தமிழகத்தில் தொடங்கியது எனும் பொதுக்கருத்தை உடைத்து, அயோத்தி தாச பண்டிதர் காலத்தில் 19ம் நூற்றாண்டிலேயே பட்டியல் இன மக்களின் விடுதலைக்குரல் தமிழகத்தில் முழங்க துவங்கியதை சன்னா அப்பேட்டியில் சுட்டிக்காட்டுகிறார். பட்டியல் இன மக்களின் தலைவர் சிவராஜை பற்றி பின்வருமாறு கூறுகிறார்

    “சிவராஜ் (குடியரசு கட்சி தலைவர்) ஒரு முக்கியமான தலைவர். அவர் அம்பேத்கருக்கு அடுத்த நிலையில் அவருடன் இருந்தவர். ஆனால் அவரைப்பற்றி யாருக்கு என்ன அக்கறை சொல்லுங்கள்? அவர் அம்பேத்கரை விட ஒரு வருடம் மட்டுமே மூத்தவர், ஆனால் அவரைப்பற்றி எழுதுபவர்கள் யாருமே இல்லை. அம்பேத்கரின் மறைவுக்கு பின் அவர் அமைக்க விரும்பிய குடியரசுக் கட்சியை என் சிவராஜ் அமைத்தார். அம்பேத்கர் இந்திய குடியரசு கட்சியை அமைக்க விரும்பி அதற்கான விதிகளையும், கொள்கைகளையும் எழுதினார். ஆனால் அக்கனவு நனவாகும் முன்னரே மறைந்தார். குடியரசுகட்சியை உருவாக்கி அகில இந்திய அளவில் கொண்டு சென்றதில் பெரும்பங்கு என். சிவராஜுக்கு உண்டு. அப்போது அதிகம் புகழ் பெற்ற தலைவர்கள் தமிழகத்தில் பலர் இருந்தார்கள். அம்பேத்கர் 1956ல் இறந்தார். குடியரசுக்கட்சி 1957ல் உதயமாகிறது. 1962 தேர்தலில் திமுக குடியரசுக் கட்சியுடன் கூட்டணி சேர்கிறது. கூட்டணி உருவாகும் சமயத்தில் தமிழகத்தில் இருந்த முக்கிய தலித் தலைவர் ஆர்ய சங்கரன் ஆவார். அவருக்கு பின் பள்ளிகொண்டா எம். கிருஷ்ணசாமி, ஜி.மூர்த்தி, சக்திதாசன், சேப்பன், எல். இளையபெருமாள், வை.பாலசுந்தரம் மற்றும் பல தலைவர்களும் பிற்காலத்தில் வந்த இயக்கங்களுக்கு வழிகோலினார்கள். இந்த தலைவர்களை யாருமே அங்கீகரிக்கவில்லை. திமுகவுடன் கூட்டு சேரும் அளவுக்கு அக்காலகட்டத்தில் குடியரசுக்கட்சி வலுவானதாக இருந்தது. என்.சிவராஜ் வேலூரில் போட்டியிட்டு இரண்டாமிடத்தை பிடித்தார்”

    தமிழ் தேசியம் குறித்து பின்வரும் கருத்தை முன்வைக்கிறார்

    “தமிழகத்தில் மக்கள் ஒரு குறுகிய வட்டத்துக்குள்ளேயே சிந்திக்கிறார்கள். விடுதலை சிறுத்தைகள் என்றால் தலித் கட்சி என மட்டுமே நினைக்கிறார்கள். அம்பேத்கரின் எழுத்தை பார்த்தால் அவர் தலித்துகளை “பெரும்பான்மை, ஆனால் சிதறிய பெரும்பான்மை” என குறிப்பிடுகிறார். நாடு முழுக்க பார்த்தால் அவர்கள் பெரும்பான்மையாக இருக்கிறார்கள். ஆனால் (தொகுதி, ஊர், நகரம்) என்பது போன்ற சிறிய வட்டங்களில் பார்த்தால் அவர்கள் சிறுபான்மையாக இருக்கிறார்கள். ஆக தொகுதி என வருகையில் அவர்கள் சிறுபான்மையாகவே இருக்கிறார்கள். இந்திய அளவில் தலித்துகள் மிகப்பெரும் எண்ணிக்கையில் இருந்தாலும் ஒவ்வொரு பகுதியிலும் அவர்கள் சிறிய கட்சிகளாகவே இருக்கமுடியும். இத்தகைய ஒட்டுவங்கியை வைத்துக்கொண்டு தலித் கட்சிகள் ஆட்சியை பிடிக்க முடியாது. இது நடக்கவேண்டுமெனில் மேலும் பல வேலைகளை நாம் செய்யவேண்டும். அதே சமயம் தலித்துகள் பெரும்பான்மை சமூகத்தில் அங்கீகாரத்தை பெற்றால் அவர்கள் வெற்றிபெற முடியும் என்ற நம்பிக்கையும் இருக்கிறது. உதாரனமாக அம்பேத்கர் துவக்கிய “சுதந்திர தொழிலாளர் கட்சியில்” தலித்துகளும், தலித் அல்லாதவர்களும் இருந்தார்கள். அதன்பின் அவர் அதை “எஸ்.சி தொழிலாளர் அமைப்பாக” மாற்றுகிறார். எஸ்.சி அரசியல் செய்யவேண்டும் என்ற நிலை வந்தவுடன் அவர் தலித்துகளை ஒரு அரசியல் சக்தியாக மாற்றியபின்னரே மற்றவர்களுடன் அவர்களை இணைந்து பணியாற்றவைக்க முடியும் என நம்பினார். இதன்பின் இந்திய குடியரசுகட்சிக்கான ஆலோசனையை அவர் முன்வைக்கிறார்.

    இந்த வேறுபாடுகளை பார்க்கவும்: முதலில் சுதந்திர தொழிலளர் கட்சி. அதன்பின் எஸ்.சி தொழிலாளர் அமைப்பு, அதன்பின் இந்திய குடியரசுக்கட்சி. ஆக அவர் முதலில் ஒரு பொதுவான அடையாளத்தை அமைக்க முயன்றார். அது வெற்றியடையவில்லை. அதன்பின் சாதி அடையாளத்தை உருவாக்குகிறார். அது ஒரு அளவு வெற்றியும் பெறுகிறது. ஆனால் சாதிய அடையாளத்தை மட்டும் வைத்த்க்கொன்டிருந்தால் அதுவே ஒரு தடைக்கலாக மாறும் என்பதை உணர்ந்து இந்திய குடியரசுக்கட்சி எனும் ஜனநாயக அமைப்பை உருவாக்குகிறார். இதுபோன்ற சிந்தனைகளை அனைத்து இந்திய கட்சிகளிலும் காணலாம். பலவிதங்களில் அவர்கள் இதேபோன்ற உத்திகளை கையாண்டார்கள். தமிழ்நாட்டில் முதலில் ரிபப்ளிக்கன் கட்சி உருவானது, அதன்பின் ஆதிதிராவிடர் கட்சிகள் உருவாகின, அதன்பின் பள்ளர்களுக்கான இயக்கம், பறையர்களுக்கான இயக்கம், அருந்ததியினருக்கான இயக்கம் ஆகியவை உருவாகின. இப்படி உருவானபின் கொஞ்ச காலம் இயக்கங்களாக் அவை தொடர்கின்றன. ஆனால் சாதி அடிப்படையிம் மட்டுமே அவற்றால் இயங்கமுடியாது என வருகையில் அவை விடுதலை சிறுத்தைகள். புதிய தமிழகம், பாட்டாளி மக்கள் கட்சி என்பது போன்ற கட்சிகளாக உருவெடுக்கின்றன. பொதுவான பெயர்களில் கட்சிகளை துவக்கி, பொதுமக்களை திரட்ட முயலுகையில் பொதுவான ஒரு காரணியை வைத்தே அணுக முடிகிறது. இதுவே நல்ல வாய்ப்பு என்பதால் தமிழ் தேசியம் என்பது மக்களை திரட்டும் மிக நல்ல ஒரு அடித்தளமாக அமைகிறது. இதனால் பல தலித் கட்சிகள் தமிழ் தேசியத்தை முன்வைக்கின்றன. பொதுவான அடையாளத்தை தேடும் முயற்சியின் ஒரு பகுதியே இது என கூறலாம். அதே சமயம் இலங்கையில் தமிழர்கள் ஒடுக்கபட்ட போது அனைவரும் அவர்களுக்காக குரல் கொடுத்தாலும், ஒடுக்கபட்டவர்கள் எனும் அடிப்படையில் தலித்துகள் அவர்களுக்கு குரல் கொடுத்தபோது அதில் இருந்த உணர்ச்சிகரமான பிணைப்பு மற்ற கட்சிகள் குரல் கொடுத்தபோது இல்லாமல் போனது. இங்கே ஒடுக்குமுறையை அனுபவித்தவர்கள் தலித்துகள், அங்கே ஒடுக்குமுறையை அனுபவித்தவர்கள் தமிழர்களில் 80% என கூறலாம்.புலிகள், புலிகள் அல்லாதவர்கள் என அனைத்து தமிழருமே அங்கே ஒடுக்குமுறையை அனுபவித்தார்கள்.

    சிங்கள ஒடுக்குமுறைக்கு எதிராக அவர்கள் பொதுவான தமிழ் அடையாளத்தை முன்வைத்தபோது அதேபோன்ற ஒரு பொதுவான அடையாளத்தை தமிழ்தேசியம் இங்கேயும் பெற்றுக்கொடுக்கும் என நம்புகிறோம். இந்த நம்பிக்கையின் அடிப்படையில் தான் தலித்துகள் தமிழ் தேசியத்தை கையில் எடுக்கிறார்கள். தமிழ் தேசியம் தலித்துகளுக்கு விடுதலையை பெற்றுக்கொடுக்குமா என்ற கேள்வி இருந்தாலும் அது பொதுவான அடையாளத்தை நோக்கி நகரும் ஒரு முயற்சியே ஆகும். இது ஒப்புக்கொள்ளபட்டு ஏற்றுக்கொள்ளபப்ட்டால் சாதி உணர்வுகள் குறைந்து, சாதிய அரசியலும் குறைந்து உண்மையான ஜனநாயகம் மலரும். இந்த அடிப்படையிலேயே தமிழ் தேசிய அரசியலை நாங்கள் கையில் எடுத்துள்ளோம்.”

    தலித் அல்லாதவர்களுக்கு கட்சியில் பொறுப்புகள் அளிப்பது பற்றி கீழ்க்கண்டவாறு கூறுகிறார்

    ” நாங்கள் தலித் அல்லாதவருக்கு கட்சியில் பதவிகளை கொடுப்பது பிற கட்சிகளுக்கும், சாதியினருக்கும் “நீங்களும் இக்கட்சியின் ஒரு அங்கம்” எனும் செய்தியை அளிக்கிறது. இதுவரை மற்ற சாதியினர்க்கும், கட்சிகளுக்கும் நெருக்கமாகும் வாய்ப்பு எங்களுக்கு மிக குறைந்த அளவிலேயே இருந்துவந்தது. பிற சாதிக்கட்சி தலைவர்களுடன் எங்களால் நேரடியாக பேச முடியவில்லை. அந்த தலைவர்களுக்கும் தலித் தலைவர்களுடன் பேசும் மனநிலையும் இல்லை. இத்தகைய மனத்தடை நீடித்து வந்தது. ஆக இம்மாதிரி சமயங்களில் கூட்டணி பற்றி பேசுவதற்கும், தொகுதிகளை பற்றி பேசுவதற்கும் எங்கள் கட்சியில் உள்ள தலித் அல்லாதோர் பெருமளவு உதவியாக இருக்கிறார்கள். இதன் இன்னொரு பலனும் என்னவெனில் எங்காவது ஜாதிக்கலவரம் நிகழ்ந்தால் எங்கள் கட்சியில் உள்ள தலித்-அல்லாத தலைவர்கள் களத்தில் உள்ள தலித் அல்லாதவருடன் எளிதில் பேச முடிகிறது. இது அமைதியை உருவக்கவும், பிரசனைகளை தீர்க்கவும் உதவுகிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சியில் உள்ள தலித் அல்லாதோர் இதில் பெரும்பங்கு வகித்துள்ளார்கள். அவர்கள் பங்கை அங்கீகரிப்பதன் மூலமும், மதிப்பதன் மூலமும் இதுவும் ஒற்றுமை நிலவும் சமூகத்தை உருவாக்கும் முயற்சியே என்பதை புரிந்து கொள்ளலாம்.”

    தமிழக பட்டியல் இன மக்களின் போராட்ட வரலாற்றை இத்தனை தெளிவாக உலக மக்களுக்கு எடுத்துரைத்த சன்னா அவர்கள் பல்வேறு சமூக, மக்கள் நல போராட்டங்களில் கலந்துகொண்டும் தமிழ் பவுத்தத்தின் மீட்டெடுப்பில் ஆர்வம் செலுத்தியும் பங்காற்றி வருகிறார். இத்தகைய கூர்ந்த சிந்தனையாளரை வல்லமையாளராக அறிவிப்பதில் வல்லமை பெருமகிழ்ச்சியும், உவகையும் அடைகிறது.

    வல்லமையாளர் கவுதம சன்னாவுக்கு நம் நல்வாழ்த்துகள்.

    (இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், vallamaiselva@gmail.comvallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

    Share
  • படக்கவிதைப் போட்டி (142)

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    26058118_1516491791738348_1614789308_n

    அனிதா சத்யம் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (06.01.2018) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்

    Share
  • புத்தாண்டே நீ வருக !

     

    எம். ஜெயராமசர்மா ….. மெல்பேண் … அவுஸ்திரேலியா 

     

    banner_countdown

    புத்தாண்டே நீவருக
    புதுத்தெம்பை நீதருக
    எத்திக்கும் நடக்கின்ற
    இடர்களைய நீவருக
    சொத்துக்காய் சுகத்துக்காய்
    சூழ்ச்சிகளைச் செய்வாரின்
    புத்தியினை மாற்றிவிட
    புத்தாண்டே நீவருக !

    அரசியலில் குழப்பங்கள்
    அத்தனையும் அறவேண்டும்
    ஆன்மீகம் மக்களது
    அகமதனில் அமரவேண்டும்
    குறைபேசும் குணமெல்லாம்
    குழியதனுள் விழவேண்டும்
    குவலயத்தில் அமைதிவர
    குதித்துவா புத்தாண்டே !

    மழைவளம் பெருகவேண்டும்
    மாநிலமும் செழிக்கவேண்டும்
    அழுகின்றார் வாழ்க்கையெலாம்
    ஆனந்தம் நிலைக்கவேண்டும்
    வழுவின்றி நீதித்துறை
    வழங்கவேண்டும் நற்சேவை
    பழுதகற்ற வந்திடுவாய்
    பாரினிலே புத்தாண்டே !

    மூத்தோரை மதிக்கின்ற
    முழுமனது வரவேண்டும்
    ஆத்திரத்தால் அழிவுசெய்யும்
    அரக்ககுணம் அகலவேண்டும்
    சாத்திரத்தை சடங்குகளை
    சரியாகப் புரியவேண்டும்
    சன்மார்க்கம் தனையுணர்த்த
    வந்திடுவாய் புத்தாண்டே !

    ஆத்தீகம் பேசுவார்
    ஆண்டவனைப் போற்றட்டும்
    நாத்தீகம் பேசுவார்
    நல்லவற்றை நினைக்கட்டும்
    இல்லறமே நல்லறமாய்
    இலங்கட்டும் இவ்வுலகில்
    நல்லதொரு புத்தாண்டாய்
    நலம்பயக்க வந்திடுக !

    Share
  • வாழ்ந்து பார்க்கலாமே – (1)

    க. பாலசுப்பிரமணியன்

    வாழ்க்கைக் கல்வி

    வாழ்ந்து பார்க்கலாமே!

    புத்தாண்டு பிறக்கின்றது! இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்ற பாடல் எங்கிருந்தோ காதில் ஒலித்துக் கொண்டிருக்கின்றது. நித்தமும் பிறப்பதா? வேடிக்கையாக இல்லை…? பிறப்பு என்பது ஒரு முறைதானே ?

    தத்துவ மேதை ரஜ்னீஷ் கூறுகின்றார் – “நாம் உள்ளிழுக்கும் ஒவ்வொரு மூச்சும் பிறப்புத்தான்; நாம் வெளியிடுகின்ற ஒவ்வொரு மூச்சும் இறப்பின் அறிகுறிதான்”. அறிவியல் கருத்தாக நாம் அலசிப்பார்த்தாலும் நாம் வாழுகின்ற ஒவ்வொரு நொடியிலும் பல்லாயிரக்கணக்கான உயிரணுக்கள் பிறந்துகொண்டிருக்கின்றன; அதே நேரத்தில் பல்லாயிரக்கணக்கான உயிரணுக்கள் இறந்துகொண்டிருக்கின்றன. அதே போல் நம்முடைய மனதில் ஆயிரக்கணக்கான எண்ணங்கள் பிறந்துகொண்டும் மடிந்துகொண்டும் இருக்கின்றன. எனவே வாழ்க்கையில் நாம் ஒவ்வொரு நாள் மட்டுமல்ல, ஒவ்வொரு கணத்திலும் புதிதாய்ப் பிறந்துகொண்டுதான் இருக்கின்றோம்.

    இந்த வாழ்க்கையை நாம் எப்படி வாழவேண்டும்? இதற்கு ஏதேனும் வழிமுறைகள் இருக்கின்றனவா என்று சற்று அலசிப் பார்த்தால், வாழ்க்கை என்பது  சமூக, பொருளாதார, சூழ்நிலை சார்ந்த ஒரு வழிமுறை. காலந்தொட்டு பல சமுதாயங்கள், பல நாடுகளில் தங்கள் தட்ப வெட்ப சூழ்நிலைகளுக்கேற்ப தங்கள் வாழ்க்கை முறைகளை வகுத்துக்கொண்டு வந்தது மட்டுமின்றி அதற்குத் தகுந்தவாறு வாழ்க்கை பற்றிய தங்கள் நோக்கங்களையும் கருத்துக்களையும் கோட்பாடுகளையும் மாற்றிக்கொண்டும் வந்திருக்கின்றன.

    வாழ்க்கையைப் பற்றி பல கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன?

    வாழ்க்கை என்பது ஒரு போராட்டமா?

    வாழ்க்கை என்பது ஒரு விளையாட்டா ?

    வாழ்க்கை என்பது ஒரு முயற்சியா ?

    வாழ்க்கை என்பது ஒரு வியாபாரமா ?

    பல அறிஞர்கள் வாழ்க்கையின் கோட்பாடுகளைப் பற்றி பலவித கோணங்களில் பல கருத்துக்களை அள்ளி வீசியிருக்கின்றனர். இத்தனை கருத்துக்களுக்கு நடுவிலும், அறிவுரைகளுக்கும் வழிகாட்டுதல்களுக்கு நடுவிலும் வாழ்க்கையைப் புரிந்துகொள்ள நாம் பல முயற்சி செய்துகொண்டிருக்கின்றோம். வாழ்க்கைக் கல்வி என்பது காலந்தொட்டு வீடுகளிலும் சமுதாய மேடைகளிலும் பேசப்பட்டும் அலசப்பட்டும் வரப்பட்டுள்ளன. இருந்தும் இன்றைய சமுதாயத்தில் வாழ்க்கைக்கு கல்வியின் அவசியத்தை மிக அதிக அளவில் நாம் இன்றியமையாததாகக் கருதுகின்றோம்.  காரணம் ?

    சில தோல்விகளைச் சந்திக்க முடியாமல் இளைய சமுதாயம் தற்கொலையைத் தானமாகப் பெற்றுக்கொண்டிருக்கின்றது.

    சில ஆசைகளுக்காக இந்தச் சமுதாயம் தங்கள் நேர்மையை விலை பேசிக்கொண்டிருக்கின்றது.

    சில முன்மாதிரிகளால் தவறான தலைமையைப் போற்றிக்கொண்டிருக்கின்றது.

    சில சுயநலங்களுக்கு முன்னே மனிதநேயம் மண்டியிட்டுக்கொண்டிருக்கின்றது.

    இந்தச் சூழ்நிலையில் கல்விச்சாலைகளில் வியாபர நோக்கம் பரவலாகப் பரவியிருக்கும் நேரத்தில் கல்வி என்பது மாணவர்களை வெறும் தேர்வுகளுக்குத் தயாரிப்பதற்காக மட்டும் கருதப்படுகின்றது. கல்வியின் சீரிய நோக்கமான மனித நேயம், நாட்டுப் பற்று, திறன் வளர்த்தல், கலாச்சாரப் பண்புகள் ஆகியவற்றை ஓரம்கட்டி மாணவர்களைத் தேர்வுக்குத் தயாரிக்கும் வியாபாரம் பெருகிக் கொண்டிருக்கின்றது. இதில் கல்விச்சாலைகளை மட்டும் குறைகூறிப் பயனில்லை. வீடுகளில் பெற்றோர்களின் பங்கும் நுட்பமாக கவனிக்கப்படவேண்டியது அவசியம்.

    வாழ்க்கையின் இலக்கு வெறும் உணவு, உடை மற்றும் இருக்கும் இடத்திற்காகவும், பணத்தை ஈட்டி சேமிப்பதற்காக மட்டுமின்றி பல சீரிய கருத்துகளை உள்ளடக்கி உள்ளது. வருங்காலத்தில் மாறி வரும் சமுதாயச் சந்தையில் நமது இளம் சந்ததியினர் வெற்றி பெறுவார்களா? அவ்வாறு வெற்றி பெற வேண்டுமானால் என்னென்ன வாழ்க்கைத் திறன்கள் தேவைப் படுகின்றன? அவைகள் எங்கெங்கு கிடைக்கும் ? அவைகளை அடைய நாம் என்னென்ன முயற்சிகள் செய்ய வேண்டும்?  இவற்றைக் கருத்தில் கொண்டு இளம் சந்ததியினருக்காக எழுதப்படும் இந்தத் தொடர் முந்தய “கற்றல் ஒரு ஆற்றல் ” என்ற தொடரின் பின்னோடியாக வளர்கின்றது. இதன் அடிப்படைக் கருத்து  “கற்றல்” பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் மட்டும் நடப்பதல்ல : வாழ்க்கையின் ஒவ்வொரு படிகளிலும் கற்றல் நடந்து கொண்டிருக்கின்றது என்பதை உறுதிசெய்வதே. இன்றைய மூளை நரம்பியல் வல்லுனர்களின் ஆராய்ச்சியின்படி “கற்றலின் தொண்ணூறு விழுக்காடு பள்ளிகளுக்கு வெளியே நடந்துகொண்டிருக்கின்றது.” அது முறைசாராக் கற்றலாகவே நடந்து வருகின்றது. இது நம்முடைய வாழ்க்கையின் வெற்றிக்கு மிகப்பெரிய அடித்தளமாக அமைகின்றது. இதன் பல கோணங்களையும் உலகளாவிய பல கருத்துக்களையும் நாம் தொடர்ந்து பார்க்கலாம்.

    தொடர்வோம் ..

    Share
  • அகநானூற்றில் அழுகையெனும் மெய்ப்பாடு! (தொல்காப்பிய மெய்ப்பாட்டியலை முன் வைத்து…)

    -பேரா.பீ. பெரியசாமி  

    முன்னுரை

    தொல்காப்பியப் பொருளதிகாரத்தின் ஆறாவது இயலாக மெய்ப்பாட்டியல் அமைந்துள்ளது. இலக்கிய மாந்தர்கள் periyasamiஉள்ள உணர்ச்சியால் தூண்டப்படும்போது எவ்வாறு சொற்படுத்த வேண்டும் என்பதை அறிய மெய்ப்பாட்டியல் துணைபுரியும். மெய்ப்பாட்டியல் என்றால் என்ன என்பது பற்றிய விளக்கப் பொருண்மை நூற்பாவைத் தொல்காப்பியர் அமைக்கவில்லை. மெய்ப்பாட்டியல் அகவொழுக்கத்திலும், புறவொழுக்கத்திலும் புலப்படும் மெய்ப்பாடுகளைக் கூறுகிறது. செய்யுளுக்குரிய உறுப்புகளுள் இன்றியமையாதது மெய்ப்பாடு ஆகும்.  தொல்காப்பியனார் “உணர்ச்சி” என்னாது “மெய்ப்பாடு” எனச் செய்யுள் உறுப்பைக் குறித்ததன் நோக்கம் நுட்பம் வாய்ந்தது.  உணர்ச்சி என்ற சொல்லைத் தொல்காப்பியனார் யாண்டும் குறிக்கவில்லை.  பாடலில் உணர்ச்சியைக் குறித்தால் அதைப் படிப்போர் எளிதில் அறிதல் இயலாது.  ஒருவர் உணர்ச்சியுறுகின்றார் என்றால் அவர் உற்ற உணர்ச்சியை அவரால் மட்டுமே எளிதில் உணரமுடியும்.  காண்போர் அறிய இயலாது.  மெய்ப்பாடுகளால் மட்டுமே உணார்ச்சியை எளிதில் அறிந்துகொள்ள இயலும். அவற்றுள் அழுகை எனும் மெய்ப்பாடு அகநானூற்றில் இடம்பெற்றுள்ளவிதத்தை இக்கட்டுரை ஆராயவுள்ளது.

    அழுகை மெய்ப்பாடு

    மனித மனத்தின் ஆழமான, நீங்காத உணர்வு அழுகை ஆகும். அழுகை பிறர் தன்னை எளியன் ஆக்குதலாற் பிறப்பது. உயிரானும், பொருளானும் இழத்தல், தளர்ச்சி, தன்நிலையிற் தாழ்தல், நல்குரவு என்ற பொருண்மையில் அழுகை எனும் மெய்ப்பாடு தோன்றும். இதனை, நாவலர். பண்டித ந.மு. வேங்கடசாமி நாட்டார் அழுகை மெய்ப்பாட்டைப் பற்றிக் குறிப்பிடுமிடத்து, “அவலச்சுவை என்பது வடமொழியில், “சோகரஸம்” என்று குறிப்பிடப்படும். அவலம் எனினும் அழுகை எனினும் ஒக்கும்” (கட்டுரைத் திரட்டு, ப.107) எனப் பேராசிரியர் வழி நின்று அவலச் சுவைக்கு விளக்கம் தருகின்றார். படிப்பவரது உள்ளத்தை உருக்கும் தன்மையதாய் அமைவது அழுகை எனும் மெய்ப்பாடாகும். இம்மெய்ப்பாடு கேட்போரை எளிதில் ஈர்க்கச் செய்யும் தகுதியுடையது. இதனை, “வாழ்க்கையில் கவலையை வளர்க்கும் துன்பம் கலையுலகில் கவலையைத் தீர்க்கும் மருந்தாக உள்ளது என்னும் அவலம் உள்ளச் சுமையைக் குறைப்பதற்கு உறுதுணையாகிறது” (இலக்கிய ஆராய்ச்சி, ப – 69) என்று  மு. வரதராசனார் கூறுவார்.

    கி. ஈஸ்வரி அவர்கள் அழுகையின் தோற்றுவாயினை, “அவலத்தை இரக்கம், துன்பம் எனப் பகுத்துப் பார்க்கும்போது, இரக்கத்தின் அடிப்படையில் தோன்றுவது ‘அவலம்’ என்றும், துன்பத்தின் அடிப்படையில் தோன்றுவது ‘அழுகை’ என்றும் தெரிகிறது.” (இலக்கிய மணிகள், ப.52) என்கிறார்.  இதனை, “துன்பத்தின் இன்பமே கவிதைக்கும் கற்பார்க்கும் அவைக்கும் ஆதலின், சங்கச் சான்றோர்கள் பாலைத் துறைகளை விரும்பிப் பலர் பாடினர்” (தமிழ்க்காதல், ப – 98) என வ.சு.ப. மாணிக்கம் கூறுவார். அழுகையானது தனிமனித வாழ்வில் ஏற்படுவதுடன் முடிவெடுக்க இயலாத தன்மையும் கொண்டது. அழுகையெனும் மெய்ப்பாடானது இளிவு, இழவு, அசைவு, வறுமை ஆகிய காரணங்களால் பிறக்கும். இதனை தொல்காப்பியர்,

    இழிவே இழவே அசைவே வறுமையென
    விளிவில் கொள்கை அழுகை நான்கே”(நூ.5) என்பார்.

    இவற்றுள், இளிவு, வறுமை என்பது சங்க இலக்கியங்களில் ஓரளவிலேயே சுட்டப்படுகின்றன. வறுமை என்பது களைய வேண்டிய தொன்றே எனச் சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. இளிவு வரினும் அவை மாறும் தன்மையைக் கொண்டதெனலாம். இதனை, “உணர்ச்சிகள் தோன்றுவதற்குச் சூழலும் மனமும்தான் காரணமாக அமைகின்றன. உயிர்கள் அனைத்தும் இன்புற்றிருக்கவே விழைகின்றன.  இவ்விழைவிற்கு மாறாக எழும் நிகழ்ச்சிகள் அவலத்தைத் தோற்றுவித்தன. அவலத்தை மிகுவிக்கவோ குறைக்கவோ மனநிலையும் சூழலும் காரணமாக அமைகிறது.” (குறுந்தொகையில் அவலச்சுவை, ப.6) என துரைராஜி கூறியுள்ளார்.

    ஆய்வாளர்களின் பார்வையில் அழுகை

    மேலைநாட்டு ஆய்வாளர்கள் அழுகையினை அவலம், டிராஜடி என்பர். இதனை, “துன்ப உணர்வைத் தருகின்ற கருணைரசம், அதன் தன்மையினின்று நீங்கிச் சுவையை ஊட்டுகிறது என்பர் அவிநவகுப்தர். இங்ஙனம் அது சுவையைத் தருவது இலக்கியத்திலும் நாடகத்திலும் எனலாம்.” (Comparative Aesthetics, Vol.I, P.215 ) என்பர்.

    “நிலையற்ற மானிட வாழ்வில் உயர்ந்த நிலையில் அவலத்தைப் பற்றிச் சிந்திக்கையில் மதிப்பிற்குரிய, மிக நெருங்கிய அன்புடையவர் தம் இழப்பும், விபத்துக்கள் ஆகியனவும் அவலமாகும் எனவுரைப்பர்.” (Tragedy and Sanskrit Drama, P – 1) “அறியாமையாலும் ஓரளவு அவலம் ஏற்படுவதுண்டு. சான்றாக ஒரு பித்தனால் அமைதியும் மரியாதைக்குரிய ஒருவன் எதிர்பாராமல் சொல்லப்படுவது அவலத்தை விளைவிப்பதாகும்.” (The Harvest of Tragedy, PP.18-19) “இரண்டாவதாக அவலமாவது நல்வினைப் பயன் தீவினையாக மாறுவதாகும். காண்போரும் இரக்கமும், அச்சமும் மிகுந்த நிலையினை மனதிற் கொண்டே அதனைக் காண்கின்றனர்.” (Principles of Tragedy, p.37)  “அவலத்தைப் படைக்கும் கவிஞன் தனது ஆன்மாவினின்றும் உறும் எல்லா மனிதருக்கும் ஏற்புடையதாக அதனை அமைக்கின்றான். அது மகிழ்ச்சியைத் தரத்தக்கதல்ல எனினும் சிந்திக்க இன்பத்தைத் தருவதாகும்” (The harvest of Tragedy, P – 201)  என்பார்.  ஹேனன் என்பவார், “தவிர்க்க இயலாத வகையில், மிக உயர்ந்த நிலையிலிருந்து மனிதனது வீழ்ச்சியும், இழப்பும் அவலமென்று கூறுவர். அந்நிலை மிகச் சாதாரணமாக ஏற்படுவதன்றென்பர். மேலும், அது ஒருவனுக்கு எளிதாய் ஏற்படுவதில்லை. பிறரால் உண்டாக்கப்படுவதுமில்லை. அது மனிதனுடைய செயல்களினால் தாமே விளைவதாகும்.” (Shakespearean Tragedy, p.6) என்பர்.

    அழுகை என்பது தன்னிலையிலிருந்து தாழ்வதனால் ஏற்படுகின்றது. இது இயல், இசை, நாடகம் எனும் அனைத்திலும் வெளிப்படக் கூடியது. மேலும், மற்றவர்களின் மீது நாம் அன்புகொண்டு பழகும்போது அவர்களை இழக்க நேரிட்டாலோ அல்லது அவர்கள்  இறந்துவிட்டாலோ நம்மிடம் அழுகை எனும் மெய்ப்பாடு இயல்பாகவே வெளிப்படுகின்றது.

    உளவியலார் பார்வையில் அழுகை

    அழுகை ஏற்படுவதற்கான காரணமாக, “ஒருவனுடைய நெருங்கிய தோழன் காட்டிக் கொடுக்கும் போதோ மிகவும் நெருங்கிய ஒருவன் இறக்கும்போதோ ஒருவன் முழுவதும் நிலைகுலைவதைக் காணலாம்.” (Psychology and Effective Behaviour, p.176) என கோலிமேன் கூறியுள்ளார்.

    அழுகை என்னும் சொல்லுக்கு அகராதி விளக்கம்

    மதுரைத் தமிழ்ப் பேரகராதி “அவலத்திற்கு ஓரலங்காரம், அஃது துயரத்  தோன்றக் கூறுவது எனவும் கிலேசம், கேடு, நோய், மிடி, வருத்தம், பயன்படாதொழிவது, பலவீனம், மாயை, வறுமை, துக்கமாய் முடிவது, கவலை எனவும் பொருள் விளக்கம் கூறும்.” (ப.156.) பிங்கலர் “அழுகையைப் பற்றிக் குறிப்பிடுமிடத்துள் கலக்கம், உரோதனம், கலுழ்ச்சி, அரற்றல், இரங்கல், விம்மல், பொருமல், ஏங்கல், இராவனம் ஆகியவற்றை அழுகையின் கூறுகளாகக் கொள்வர். நோய்க்குரிய பல சொற்களில் அவலத்தையும் ஒன்றெனச் சுட்டுகிறது.” (ப.394) “சதுரகராதியில் அவலம் என்ற சொல்லிற்கு, “நோய், வருத்தம்” என்ற பொருள் அமைகிறது.” (ப.13) 

    அகநானூற்றில் அழுகை

    இளிவு

    இளிவு என்பது ‘தாழ்நிலை’. அதாவது, பிறரால் இகழப்பட்டு எளியராகும் தன்மை என்பர். இதனை, “வென்றிகொள் வீரர் ஆர்ப்பினும் பெரிதே”(அகம். 36(23)) எனும் அகநானூற்று பாடலில் தலைவன் பரத்தையர் சேரியில் தங்கியிருந்து ஒருநாள் மீண்டு இல்லம் வந்தான். அப்போது தலைவி அவனிடம் ஊடல் கொண்டு, தன் வெற்றிப்புகழ் எங்கும் பரவுமாறு  பகைவர் படைகளைக் கொன்று களவேள்வி செய்த காலத்துச் செழியன் வெற்றிவீரர்கள் எழுப்பிய ஆரவாரத்தினைக் காட்டிலும், உன் பரத்தைமை பற்றி ஊரார் பேசும் அல் பெரியதாக இருந்தது என தலைவனை இகழ்கிறாள். இதனால் தலைவனின் ‘தாழ்நிலை’ புலப்படுகின்றது. இதன்வழி இளிவு எனும் மெய்ப்பாடு வெளிப்படுகின்றது.  மேலும், 71(13-15), 73(5-8), 146(13), 340, 189(14-15) ஆகிய வரிகள் இளிவு குறித்த அழுகை மெய்ப்பாடு அமைய பெற்றுள்ளன.

    இழவு

    இழவு என்பது ‘இழத்தல். அதாவது தாய், தந்தை முதலாய சுற்றத்தாரையும், இன்பம் விளைவிக்கும் நுகர்ச்சி முதலியவற்றையும் இழத்தல். இதனை,

    மாண்நலம் நுகரும் துணை யுடையோர்க்கே”(அகம். 37 (18)) எனும் அகநானூற்று பாடல், தலைவன் வினைவயின் பிரிந்தான்; சென்றவன் குறித்த பருவத்தில் திரும்ப வரவில்லை. ஆதலால், தலைவி பிரிவாற்றாது வருத்தமுற்றாள்; அதனைக் கண்ட தோழி தலைவன் வருமளவும் ஆற்றியிருத்தலே நன்று என்று வற்புறுத்திய பொழுது தலைவி தன் நெஞ்சிற்கு,  அழகிய இந்த இளவேனில் காலம் மாண்புடைய பெண்மை நலத்தினைத் துய்க்கும் துணையைப் பிரியாதோர்க்கே உரியது; அது கழிந்ததே! நம்முடைய தலைவன் நம்மை மறந்து அங்கே தங்கியிருப்பவர் அல்லர்; ஆயினும், அதனால் நாம் பெற்றது என்ன? இப்பருவத்தில் பிரிந்து வாழ்பவர் ஆற்றியிருத்தல் கூடுமோ? எனக் கூறுகின்றாள். இதில் பருவத்தை (நுகர்ச்சியை) இழந்ததை நினைத்து தலைவி அழுவதினால் இஃது இழவின் பாற்பட்டது. மேலும், 19(9-19), 176(21-26), 73(16 -17), 120 (8-9), 192(12-13), 208(14-16), 338(6-10) ஆகிய பாடல் அடிகள் இழவு குறித்த அழுகைமெய்ப்பாடு அமைய பெற்றுள்ளன. 

    அசைவு

    அசைவு என்பது ‘தன்நிலை தாழ்தல்’. அதாவது, முந்தைய நல்ல நிலைமையிலிருந்து வேறுபட்டு வருந்துதல் அசைவு. இதனை,

    “……………..  ……….. என் உயிர்
    விலங்கு வெங் கடு வளி எடுப்பத்
    துளங்கு மரப் புள்ளின் துறக்கும் பொழுதே?” (அகம். 71(15 -18)) எனும் அகநானூற்று பாடல் தலைவன் பொருள்தேடிப் பிரிந்து சென்றுள்ளான். பிரிவாற்றாது தலைவி வருந்தினாள்; தலைவியை ஆற்றுவிக்கும் தோழி ‘ நீ இவ்வாறு ஆற்றாது வருந்தினால் ஆற்றுவித்தற்கரிய யான் என் கடமையை ஆற்ற இயலாது போகும்; நீ உயிர்விடும் முன்னர் என் உயிர் தானே என் உடம்பை விட்டுப் பிரிந்து போதற்குரிய காலம் வந்து விட்டது என்றே கருதுகிறேன்’ எனத் தோழி தலைவியை நோக்கிக் கூறுகின்றாள். இதில் தன்நிலையான ஆற்றுவித்தல் என்பதிலிருந்து தாழ்ந்து தலைவியின் ஆற்றாமையைக் கருதி தன் உயிரும் போகும் காலம் வந்துவிட்டது என தோழி கூறுவதில் ‘அசைவு’ எனும் மெய்ப்பாடு வெளிப்படுகின்றது. மேலும், 32(11-12), 69(12-20), ,95(3-5), 175(18), 233(1-2), 299 ஆகிய வரிகள் அசைவு குறித்த அழுகைமெய்ப்பாடு அமைய பெற்றுள்ளன. 

    வறுமை

    வறுமை என்பது ‘போகம் துய்க்கப் பெறாமை’. அதாவது இயலாமை. இதனை,
    மென்தோள் பெறநசைஇச் சென்ற என் நெஞ்சே” (அகம்.9(26)) எனும் அகநானூற்று பாடல் வினைமேற் சென்ற தலைவன் வினை முடித்து மீண்டு வரும்போது, விரைந்துச் செல்லும் தேரினை மேலும் விரைவு படுத்துவதற்காகத் ‘தன் நெஞ்சம் தனக்கு முன்பே தன் தலைவிபாற் சென்று விட்டது’ என்று தேர்ப்பாகனிடம், நாணொடு செறிந்த கற்பினையும் ஒளி பொருந்திய நெற்றியினையும் அழகிய இனிய சொல்லினையும் இளமையையும் உடையாளது மெல்லிய தோளை அடைவதற்கு விரும்பி விரைந்து சென்றது என்று கூறுகின்றான். இதிலிருந்து தலைவியைக் காண இயலாத இயலாமையில் தலைவன் இருக்கின்றான் என்பது புலப்படுகின்றது. இதில் வறுமை (தலைவியை அடைய இயலாத நிலை) எனும் மெய்ப்பாடு வந்துள்ளது. மேலும், 19(9-19), 28(14), 123(7), 161(9-14), 164(9), 200(1-3), 337(12) ஆகிய வரிகள் வறுமை குறித்த அழுகைமெய்ப்பாடு அமைய பெற்றுள்ளன. 

    முடிவுரை

    மெய்ப்பாடு என்பது செய்யுள் உறுப்புக்களில் ஒன்று. உள்ளத்து நிகழ்ச்சி புறத்தே வெளிப்படுதல் மெய்ப்பாடு. மெய்ப்பாட்டியல் என்பது உளவியலோடு தொடர்புடையது. மெய்ப்பாடே உலக மக்களின் முதல்மொழி. தொல்காப்பியம் பொதுவான மெய்ப்பாடுகள் எனச் சுட்டிய நகை முதலான எட்டையும் முதலில்வைத்துப் பிறகு அவை தோன்றும் களங்கள் குறித்துப் பேசுகிறது. எட்டு மெய்ப்பாடுகள் ஒவ்வொன்றிற்கும் நான்கு நான்கு உணர்ச்சிகளைக் குறிப்பிடுகின்றார் தொல்காப்பியர்.  நானான்கு எனத் தொல்காப்பியனார் கூறுவது, ஒவ்வொரு மெய்ப்பாடும் நான்கு நான்கு உணர்ச்சிகளால் தோன்றும் என்பதையே; இது முப்பத்து இரண்டாய் விரிகின்றது. மனித மனத்தின் ஆழமான, நீங்காத உணர்வு அழுகை ஆகும். அழுகை பிறர் தன்னை எளியன் ஆக்குதலாற் பிறப்பது. உயிரானும், பொருளானும் இழத்தல், தளர்ச்சி, தன்னிலையிற் தாழ்தல், நல்குரவு ஆகியவற்றால் அழுகை எனும் மெய்ப்பாடு தோன்றுகின்றது.

    *****

    கட்டுரையாசிரியர்
    தமிழ்த்துறைத்தலைவர்
    DLR கலை மற்றும் அறிவியல் கல்லூரி
    விளாப்பாக்கம்

     

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் (88)

    நிர்மலா ராகவன்

    ஏமாறாதே, ஏமாற்றாதே

    நலம்

    விழாக்காலங்களில் துணிக்கடைகளிலும் பேரங்காடிகளிலும் `மலிவு விற்பனை’ என்று பிரமாதமாக விளம்பரப்படுத்துவார்கள். 70% தள்ளுபடி என்று போட்டிருந்தால், யாருக்குத்தான் ஆசை எழாது? கூட்டம் அலைமோதும்.

    சாப்பாட்டுச் சாமானாக இருந்தால், இன்னும் எத்தனை நாட்களுக்கு அல்லது மாதங்களுக்குப் பயன்படுத்த முடியும் என்று பார்க்கத் தோன்றினால் பிழைத்தோம். இல்லாவிட்டால், `ஏமாத்திட்டான் கடங்காரன்!’ என்று திட்டுவதோடு திருப்தி அடைய வேண்டியதுதான். இப்படி ஏமாறுவதும், ஏமாற்றுவதும் பேராசையால்தானே!

    சே! இவ்வளவுதானா இவ்வுலகம்!

    உலகில் எல்லாருமே நல்லவர்கள் இல்லை என்று ஒப்புக்கொள்வது ஆரம்பத்தில் வருத்தத்தை விளைவிக்கலாம். நாளடைவில், இந்த உண்மையை ஏற்கும்போது ஏற்படும் அறிவு முதிர்ச்சியால் பிறரைச் சமாளிக்கும் வழிகள் புலப்படுகின்றன. இருந்தாலும், நாம் ஏமாறுவதை அறவே தவிர்க்க முடிவதில்லை.

    தர்மம் தலைகாக்கும்

    `அறம் செய்ய விரும்பு’. நமக்குக் கற்பிக்கப்பட்ட முதல் பாடம். இதைத்தான் சுயநலக்கார்கள் எப்படியெல்லாம் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள்! கோயில்களுக்கு வெளியே வரிசையாக அமர்ந்திருக்கும் பிச்சைக்காரர்கள் இதற்குச் சாட்சி.

    கோலாலம்பூரில் ஒரு தைப்பூசத் திருவிழாவின்போது, அங்கக் குறைபாடுள்ள பிச்சைக்காரர்கள் கிட்டத்தட்ட நூறுபேர் இருந்தார்கள். இதற்கென சில தீய அமைப்புகளால் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவர்கள்!

    கதை

    குண்டர் கும்பலுக்குத் தகுதியான ஆளைச் சிறு வயதிலேயே இனம் கண்டுகொள்கிறார்கள்.

    ஒரு பதின்ம வயதுப்பையன் தன் அனுபவத்தை என்னிடம் விவரித்தான்: “எங்க வீடு புறம்போக்கில இருன்ச்சு. எப்பவும் வீட்டு வாசல்ல வ்ளாடிட்டிருப்பேன். ஒருக்கா நாலஞ்சு பசங்க என்னை அடிக்க ஆரம்பிச்சாங்க. பக்கத்து டீக்கடையில ஒரு தமிளாள் இருந்தாரு. நான் `அண்ணே! அடிக்கிறாங்கண்ணே!’ன்னு கூவினேன். அவரு, `டேய்! சின்னப்பய, பாவம்! அவனை விடுங்கடா!’ன்னு சத்தம் போட்டாரு. அவங்க பயந்து ஓடிட்டாங்க. எனக்கு அப்போ புது பலம் வந்தாப்போல இருன்ச்சு. அப்றமேல அவரு சொன்னதையெல்லாம் கேக்க ஆரம்பிச்சேன்!”

    ஏழைப்பையன். படிப்பிலும் நாட்டமில்லை.

    அவனுக்குப் பத்து வயதிலேயே மதுப்பழக்கத்தை ஏற்படுத்தி, பிறரை அடித்துத் தன் வழிக்குக் கொண்டுவருவதையெல்லாம் கற்பித்தார் அந்த `அண்ணன்’. அவருடைய ஆணைப்படிதான் முதலில் தன்னை அடித்தார்கள் என்பது அவனுக்குப் புரியவேயில்லை.

    “குடிச்சா, வீட்டுக்குத் தெரியாதா?” என்று கேட்டேன்.

    “பேசாம போய் படுத்துத் தூங்கிடுவேன். `என்னடா இப்படித் தூங்கறே?’ன்னு அம்மா கேப்பாங்க. அவ்வளவுதான்!”

    ஐந்து வருடங்களுக்குப்பின், ஒரு பாதிரியாரின் உரை கேட்டுத் திருந்தியதாகச் சொன்னான்.

    “சின்னப்பிள்ளையா நான் இருந்த காலமே போச்சு. நாங்க சம்பாதிச்சுக் குடுத்ததிலே, பாஸ் பென்ஸ் கார்ல போறாரு!” என்றவனின் குரலில் பெருங்கசப்பு.

    தான் இப்படி ஏமாந்துவிட்டோமே, தன்னை இப்படியுமா ஏமாற்றுவார்கள் என்ற ஆத்திரம் அவனுக்கு அடங்கவேயில்லை. காவல் துறையினரிடம் தண்டனை பெற்றிருக்கிறான். பேச்சு குளறுகிறது. மந்தமாக இருக்கிறான்.

    பெற்றோரிடம் நடந்ததை வருத்தத்துடன் கூறி, தான் திருந்தி வாழ விரும்புவதாகத் தெரிவித்ததும், அவர்கள் அவனை மறுபேச்சின்றி ஏற்றார்கள்.

    “நல்லவேளை, ஒன்னைத் திட்டலியே!” என்றேன்.

    “என்னோட கூட்டாளி ஒத்தனுக்கு அப்படி ஆயிடுச்சு. `நீ எங்க புள்ளையே இல்ல!’ன்னு வீட்டில வெரட்டிட்டாங்க. அவன் திரியும் (திரும்பவும்) அந்தக் கும்பல்லே சேர்ந்துட்டான்!” என்றான், யதார்த்தமாக.

    தந்தை இவனை ஒரு வேலையில் சேர்த்தார். ஆனால், ஏமாற்றமும், நாட்பட்ட மதுப்பழக்கத்தால் மூளையில் ஏற்பட்ட பாதிப்பாலும், கார் ரிப்பேர் செய்யும் இடத்தில் முதலாளியின் மண்டையை ஒரு பெரிய ஆயுதத்தால் தாக்கி இருக்கிறானாம். இதைச் சொல்லிவிட்டு, எதையோ சாதித்ததுபோல் அவன் சிரித்தபோது, எனக்குப் பெரும் அதிர்ச்சியாக இருந்தது.

    ஏன் ஏமாந்தான்?

    இப்பையன் உலகம் அறியாதவன். பழக்கமே இல்லாத ஒரு புதிய நபர் தனக்குப் பரிந்து ஒரு நன்மை செய்தபோது, அவரை முழுமையாக நம்பலாம், நமக்குக் கெடுதல் செய்யமாட்டார் என்று தோன்றிவிட்டது.

    வீட்டிலும் அவன்மேல் அதிக கவனம் செலுத்தவில்லை. பத்து வயதுச் சிறுவன் சிறுவன் இரவில் நேரங்கழித்து வீட்டுக்கு வந்து, தூங்கியபடியே இருந்தால், உடலில் ஏதோ கோளாறு இருக்கலாம் என்று மருத்துவரிடம் அழைத்துப் போயிருக்கமாட்டார்களா?

    நம்மைப்போலவே பிறரும் நல்லவர்களாக இருப்பார்கள் என்ற நம்பிக்கை ஒருவருக்கு இருக்கும்வரை ஏமாறத்தான் செய்வார்.

    `பணக்காரர் ஆவது எப்படி?’ என்பதுபோன்ற புத்தகங்களை வெளியிடுவோர்தாம் பணக்காரர் ஆகிறார்கள். அவைகளைப் படித்து எத்தனைபேர் செல்வந்தர்களாக ஆகியிருக்கிறார்களோ!

    குழப்பத்தால் நமக்குத் தெரியாததை நம்புகிறோம். மனோதிடம் இல்லாதவர்களை அச்சுறுத்தி, அதனால் ஏமாற்றி, தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்வர் பலர்.

    பள்ளிக்கூடக் கதைகள்

    1 எங்கள் பள்ளியில் உதவித் தலைமை ஆசிரியையாக இருந்தவள் எல்லாரையும் படாதபாடு படுத்தினாள்.அவளுக்கு மேலதிகாரியாக வேறொருத்தி வரவிருந்ததைத் தடுக்கப் பெருமுயற்சி செய்தாள்.

    “வரப்போகிறவள் புலிமாதிரி – கொடுமைக்காரி! உங்களுக்குத் தெரியுமா?” என்று பயமுறுத்திவிட்டு, “எனக்கும்தான் பதவி உயர்வு கிடைத்தாக வேண்டும்,” என்று தன்னிரக்கத்துடன் கூற, பயந்த அனைவரும் கல்வி இலாகாவிற்கு ஒரு மனு அனுப்பினார்கள் – இவளேதான் தலைமை ஆசிரியையாக வேண்டும் என்று. நான் மட்டும் கையெழுத்துப் போட மறுத்துவிட்டேன்.

    `நாம் இவளை வேண்டாம் என்று சொல்லி, அப்புறம் இவளே பதவிக்கு வந்தால், இன்னும் கஷ்டப்படுத்துவாளே! வரப்போகிறவள் இன்னும் மோசமாக இருந்தால்?’ என்று சில ஆசிரியைகள் கூற, எனக்கு ஒரே ஆத்திரம். மனிதர்கள் ஏன் இவ்வளவு பயந்த சுபாவமாக இருக்கிறார்கள்!

    (நல்ல வேளை, அவளை வேலை மாற்றம் செய்துவிட்டு, பதவி உயர்வு கொடுத்தார்கள். புதிய இடத்தில் அவள் அதிகாரம் செல்லவில்லை, ஆசிரியர்கள் அவளை மிரட்டிவைத்தார்கள் என்று அறிந்து மகிழ்ந்தோம்).

    2 ஒரு நோட்டுப் புத்தகத்தைத் திருத்துகையில், என் கையெழுத்து வேறுமாதிரி போடப்பட்டிருப்பதுகண்டு சந்தேகம் எழுந்தது. பல பக்கங்களில் இதேபோன்று இருந்தது. அட்டையில் மாணவனின் பெயரைப் பார்த்துவிட்டு, அவன் இருந்த திசையை நோக்கினேன். அவன் – ரசாலி –கண்கொட்டாமல், என்னையே சற்று பயத்துடன் பார்த்துக்கொண்டிருப்பது தெரிந்தது.

    அவனை அழைத்து, “இது உன் கையெழுத்துதானே?” என்று கேட்டதுமே ஒப்புக்கொண்டான், அழுகையுடன். (அதிகம் ஏமாற்றிப் பழகவில்லை!)

    “ஏன் இப்படிச் செய்தாய்?” என்று துருவ, “எல்லாரும் கொடுத்தபோது, நான் எழுதி முடிக்கவில்லை!” என்று பதிலளித்தான் ரசாலி.

    நான் அவனிடம் மேற்கொண்டு எதுவும் பேசாது, வகுப்பில் பொதுவாக, `ஏமாற்றினால் எப்போதாவது மாட்டிக்கொள்வீர்கள்,” என்று எச்சரித்தேன்.

    3 கமலா, விமலா என்ற இரு மாணவிகள் தம் மதிப்பெண் அட்டைகளைத் திறந்து வைத்துக்கொண்டு, மாடிப்படி அருகே நின்றுகொண்டிருந்தார்கள் – மணிக்கணக்கில்.

    “எதற்குத் தண்டனை?” என்று வேறோரு ஆசிரியையிடம் விசாரித்தேன்.

    “குறைந்த மதிப்பெண்களை வாங்கி, அவைகளை வெள்ளை மை (correction liquid) உபயோகித்து அழித்து, தேர்ச்சி பெற்றதுபோல் வீட்டில் காட்டியிருக்கிறார்கள் – வசவுக்கும், அடிக்கும் பயந்து!” என்றாள் சிரிப்புடன்.

    ஏமாற்றத் தோன்றும் அறிவை நல்லபடியாகப் பயன்படுத்தி இருக்கலாமே!

    ஏமாற்றப் பழக்குவது

    நாம் முதலில் ஏமாற்றுவது குழந்தைகளை. சில சமயம் பயமுறுத்துகிறோம். நம்மைப் பிறர் புகழ்ந்தாலும், அவரை நமக்குப் பிடித்துப்போக, அவர் சொற்படி நடக்க முற்படுகிறோம்.

    `சமர்த்தா சாப்பிடு. இல்லாட்டா, பூச்சாண்டிகிட்ட பிடிச்சுக் குடுத்துடுவேன்!’ என்று பயமுறுத்துவதை குழந்தை நம்பலாம். ஆனால் எந்தத் தாயாவது குழந்தையைப் பிறர் பிடித்துக்கொண்டு போவதை அனுமதிப்பாளா? மனமறிந்து பொய் சொல்கிறாள். உலகப்போக்கை உணரும் வயது வராத குழந்தையும் தாயின் பேச்சை நம்புகிறது.

    கதை

    எனது இடைநிலைப் பள்ளிநாட்களில் சொல்லிவைத்தாற்போல், பல ஆசிரியைகள், கேட்பார்கள்: “உலகிலேயே மிகச் சிறந்த நாடு எது?”

    “இந்தியா!” என்று மகிழ்ச்சியுடன் கோரஸ் ஒலிக்கும். நான் மட்டும் மௌனமாக இருப்பேன். ஏனெனில், எனக்குப் பல நாடுகளில் வாழ்ந்த பழக்கம் இருக்கவில்லை. அவைகள் எப்படி இருக்கும் என்றே தெரியாத நிலையில், எப்படி நம் நாட்டுடன் ஒப்பிட முடியும் என்று என் அறிவு விவாதித்தது.

    அடிக்கடி இப்படிக் கேட்பதால் பள்ளிச்சிறுமிகளின் நாட்டுப்பற்று வளர்ந்துவிடும் என்று ஆசிரியைகள் நினைத்திருப்பார்கள். ஆனால், நமக்குப் போதிக்கப்பட்டபடி நாடு அப்படி ஒன்றும் மேன்மையானது இல்லை என்று புரியவந்ததும் விளையும் ஏமாற்றம் கசப்பில் முடிகிறது. எவர் சொல்வதையும் நம்பிவிடக்கூடாது என்ற உறுதி பிறக்கிறது.

    எவரையும் நம்பாது இருப்பது ஏமாற்றத்தைத் தவிர்க்கலாம். ஆனால், இக்குணம் ஒருவரைத் தனித்துவிடும். இல்லையேல், தாமும் பிறரை ஏமாற்றும் வழிகளை ஆராய்வார்.

    கூடியவரை, பிறர் சொல்வதில் உண்மை இருக்கிறதா என்று ஆராய்ந்து, புகழ்ச்சிக்கு மயங்காது இருத்தல் ஏமாறுவதை ஓரளவு தவிர்க்கும்.

    தொடருவோம்

    Share
  • இனவரைவியல் நோக்கில் லக்ஷ்மி சரவணக்குமாரின் கானகன் நாவல்

    -ம. சசிகலா

    இனவரைவியல் என்பது குறிப்பிட்ட ஓர் இனத்தைப் பற்றி முழுமையாக அறிந்துகொள்ள உதவும் துறையாகும். இது பண்பாட்டு மானுடவியலின் ஒரு பிரிவாக இருந்து, பின்னர் தனித்தன்மை கொண்ட புலமாக வளர்ந்துள்ளது. மானுடவியல் அறிஞரான மாலினோஸ்கி (Bronisław Malinowski) “குறிப்பிட்ட இன மக்களின் உறவு நிலைகள், அவர்களுடைய வாழ்க்கை, அவர்களின் சிந்தனை உலகம் ஆகியவற்றை அவ்வினத்தாரின் உணர்வோடு வெளிப்படுத்துவதே இனவரைவியல்” என்கிறார். தமிழ் மானுடவியலாளர் பக்தவத்சல பாரதி “ஒரு தனித்த சமூகத்தின் பண்பாட்டைப் பற்றி மானுடவியலாளர்கள் அச்சமூகத்தாரோடு நீண்டகாலம் ஒன்றி வாழ்ந்து ஆய்வு செய்து அதனை எழுத்தில் எழுதியளிக்கும் தனிவரைவு நூலே இனவரைவியல்” என்று விளக்கமளிப்பார்.

    சமகாலத்தில் பலவிதமான கலைக் கோட்பாடுகளும் அறிவியல் சிந்தனைகளும் இலக்கியத்தோடு ஒப்பிட்டு ஆய்வு செய்யப்படுவதுபோலவே இனவரைவியலும் இலக்கியத்தோடு ஒப்பிட்டு ஆய்வு செய்யப்படுகிறது. இத்தகைய இருதுறை ஒப்பீட்டு ஆய்வுகள் வாசகருக்கு ஒரே நேரத்தில் இரண்டு புலங்கள் குறித்த புரிதலை ஏற்படுத்த வல்லவை. மேலும் இலக்கியம், இனவரைவியல் இரண்டுமே மானுட வாழ்வியல், பண்பாட்டுக்கூறுகளைப் பேசுபொருளாகக் கொண்டுதான் இயங்குகின்றன. இந்த வகையில் இவை இரண்டும் தமக்குள் நெருக்கம் கூடிய துறைகளாகும். அதேசமயம் தற்காலத் தமிழிலக்கியத்தில் இனவரைவியல் நாவல்களின் பங்களிப்பும் கணிசமான அளவில் இருந்துவருகிறது.

    இக்கட்டுரையில் இனவரைவியல் ஆய்வுக்கு உட்படுத்தப்படும் கானகன் நாவலை எழுதிய லக்ஷ்மி சரவணக்குமார் நீலநதி, வசுந்தரா என்னும் நீலவர்ணப் பறவை, யாக்கை, மச்சம் ஆகிய நான்கு சிறுகதைத் தொகுப்புகளையும் மோக்லியைத் தொலைத்த சிறுத்தை என்னும் ஒரு கவிதைத் தொகுப்பையும் உப்புநாய்கள், கானகன் என்னும் இரண்டு நாவல்களையும் எழுதிய எழுத்தாளராவார். இதுவன்றி, 2012ஆம் ஆண்டு வெளிவந்த அரவான் மற்றும் தற்போது வெளிவரவிருக்கிற காவியத்தலைவன் ஆகிய படங்களுக்கு உதவி இயக்குநராகவும் அவர் பணியாற்றியிருக்கிறார்.

    மிகச் சமீபத்தில் வெளிவந்த லக்ஷ்மி சரவணக்குமாரின் கானகன் நாவல் கதைப்போக்கில் பளியர் என்னும் இனத்தைப் பற்றிப் பேசுவதாக அமைந்துள்ளது. அந்நாவலின் முன்னுரையில் பளியர் இன மக்களுடனான சந்திப்புகள் மற்றும் தகவல் சேகரிப்புகள் மூலமே பளியர் சமூகம் பற்றிய விவரணைகளைப் பதிவு செய்திருப்பதாக நாவலாசிரியர் குறிப்பிடுகிறார். இந்தக் கூற்று தன்னளவில் இந்த நாவலை இனவரைவியல் நாவல் என நாவலாசிரியர் உரிமை கோரிக்கொள்ளும் கூற்றாக அமைகிறது. இந்நிலையில் இந்த நாவல் உண்மையிலேயே இனவரைவியல் நாவல்தானா என்பதைக் கண்டறிய முற்படுவதாக இக்கட்டுரை அமைகிறது. ஏற்கனவே கள ஆய்வின் மூலம் பளியர் சமூகம் பற்றிய தரவுகளைத் திரட்டிய பிற அறிஞர்களின் கருத்துக்களை இந்நாவலில் பயின்றுவரும் பளியர் பற்றிய குறிப்புகளுடன் ஒப்பிடுவதன்மூலம் இவ்வாய்வு மேற்கொள்ளப்படுகிறது.

    கானகன் நாவல் ஒரு வருடத்திற்குள்ளாக நிகழ்ந்துமுடியும் சில வேட்டைகளைப் பற்றிய நாவல். இந்நாவலில் மூன்று கூறுகள் முக்கியத்துவம் பெறுவனவாக அமைகின்றன. அதில் ஒன்று: தங்கப்பன். இரண்டாவது: வாசி, மூன்றாவது: அரசியல், வாழ்நிலை மற்றும் சூழலியல் மாற்றத்தின் நெருக்கடிகளை எதிர்கொள்ளும் பளியக்குடி. வேட்டையாடியான தங்கப்பனுக்கும் தன்னை வனம் காக்கும் குடியிலிருந்து வந்தவன் என நம்பிக்கொண்டிருக்கும் பளியனான வாசிக்கும் இடையிலான போராட்டம்தான் இந்தக் கதை.

    காடு பற்றிய கதைக் களம் கொண்ட நாவல்களுக்குத் தமிழில் முன்னுதாரணங்கள் உண்டு என்றபோதும் பளிகர் இனம் பற்றிய கவனத்தைக் கோரும் கானகன் நாவல் தனக்கென தனித்துவமான சில வாழ்வியல் அனுபவங்களைக் கொண்டதாக இருக்கிறது. பட்டாம்பூச்சிகளைத் துர்ச்சகுனத்தின் குறியீடாகப் பார்ப்பது, பளியக்குடிப் பெண்கள் மருத்துவச்சியின் துணையை விரும்பாது தமக்குத் தாமே பிரசவம் பார்த்துக்கொள்வது, புலி வழிபாடு, பளிச்சி வழிபாடு, பிரத்யேகமான உணவுப் பழக்கவழக்கங்கள் போன்ற பல வழக்காறுகளையும் இந்நாவல் தன் கதைப் போக்கினூடாகப் பதிவு செய்கிறது.

    பளியர் தமிழ்நாட்டிலுள்ள மேற்குத் தொடர்ச்சி மலைகளின் உயர்ந்தப் பகுதிகளில் வாழும் மக்கள் ஆவார். தென்னிந்தியாவின் மிகப் பழமையான சமூகங்களில் பளியர் சமூகமும் ஒன்று. இவர்கள் தமிழ் மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்களாவர். பளியர் வாழிடத்தின் ஒவ்வொரு குடியிலும் 40 முதல் 50 குடும்பங்கள் வசிப்பதான குறிப்புகளை ஆய்வாளர்கள் தருகின்றனர். லக்ஷ்மி சரவணக்குமார் தன் சொந்த ஊரான மதுரைக்குப் பக்கத்தில் உள்ள தேனி அகமலைப் பளியக்குடியை, அதிலும் குறிப்பாக அப்பகுதியில் வாழும் மொக்கநிலைப் பளியக்குடியைத் தன் நாவலின் களமாகக் கொள்கிறார். அதைச் சுற்றியுள்ள தேனி, அகமலை, கொடுவிலார்பட்டி, தவளைநாடு, மேல்நாயக்கன் பட்டி, கீழ்நாயக்கன்பட்டி போன்ற பிற பளியக் குடிகள் பற்றிய குறிப்புகளைத் தருவதோடு அவற்றிடையே நிலவும் சமூகவியல் தொடர்புகளையும் சில குறிப்புகள் மூலம் உணர்த்திச் செல்கிறார். உதாரணமாக, பளியர் தம்முடைய தெய்வமாக வழிபடும் புலியைத் தங்கப்பன் வேட்டையாடியதான செய்தியை மொக்கைநிலை பளியக்குடியிலிருந்து எல்லா பளியக்குடிக்கும் தகவல் சொல்லிவிடும் பகுதியைக் குறிப்பிடலாம். அப்பகுதி பின்வருமாறு:

    “மொக்கநிலை பளியக்குடிதான் அகமலை வட்டத்தில் பெரிய பளியக்குடி.  இன்னய தேதியில் நாப்பத்திரண்டு குடும்பங்கள் வாழும் அந்தக் குடி ஆட்கள் இந்தக் குளிர்காலத்தில் நிகழ்ந்த முதல்பெரும் வேட்டையை முந்தையப் பின்னிரவில் தெரிந்து கொண்டதிலிருந்து கலக்கத்துடனிருந்தனர். அகமலை, நவமலை, நாகமலை, வெள்ளி மலை என தவளைநாடு முழுக்க இருக்கும் பளியக்குடிக்கு தகவல் அனுப்ப அதிகாலையிலேயே மூத்த பளியன் பூசணியின் பேரன் கட்டையன் கிளம்பி போய்விட்டான்.” (ப.30)

    கானகன் நாவல் இவ்வினத்தாரைப் பளியர் என்றே குறிப்பிடுகிறது என்றபோதும் நாவலின் முன்னுரையில் நாவலாசிரியர் இவ்வினத்தைப் பளிகர் என்னும் சொல்லால் குறிப்பிடுகிறார். ஆனாலும் பளியர் என்னும் உச்சரிப்பே சரியானதாகும். இந்தப் பளியர் என்னும் சொல் பழையர் என்னும் சொல்லிலிருந்து வந்ததாகவும் பழனியர் என்னும் சொல்லிலிருந்து வந்ததாகவும் வெவ்வேறு குறிப்புகள் கிடைக்கின்றன.

    இக்குடி வெளியுலகத் தொடர்புகளை அறுத்துக்கொண்டு அடர்ந்த மலைவனங்களில் வாழ்ந்து வந்ததற்கான ஆய்வாளர்களின் குறிப்புகள் உண்டு. ஆனாலும் கடந்த ஐம்பது வருடங்களுக்கும் மேலான அரசியல் மற்றும் சூழலியல் மாற்றங்கள் இவர்களை வெளியுலகத் தொடர்பு கொண்டவர்களாகவும் தம்முடைய வாழ்வாதார அடையாளங்களை இழந்துவிட்டவர்களாகவும் மாற்றியிருக்கிறது. அரசு மற்றும் தன்னார்வ நிறுவனங்கள் அவர்களுக்கென சில குடியிருப்புகளை அமைத்துத் தந்திருக்கின்றன. இந்தச் சூழலில் வெளியுலகோடும் ஒட்ட இயலாமல் தமது பூர்வ அடையாளத்தையும் காத்துக்கொள்ள முடியாமல் திண்டாடும் இனமாக இக்குடி தத்தளித்துக் கொண்டிருப்பதை ‘நாம் பளியர்’ என்னும் ஆவணப்படம் விளக்குகிறது. இத்தகைய வாழ்நிலை மற்றும் புவிச் சூழலியல் மாற்றம், அதன் பின்னணி அரசியல் ஆகியவற்றை இந்நாவல் தன் புனைவினூடாகப் பதிவு செய்துள்ளது.

    ஜே.இ.டிராசி பளியர்களுக்கு வேட்டை பற்றியும் பயிர்த்தொழில் பற்றியும் ஏதும் தெரியாது என்று பதிவு செய்கிறார். ஆனாலும் அவர்களுக்கு வேட்டைத் தொழில் தெரியாது என்பது நம்பும் தன்மையதாக இல்லை. ஆயிரமாயிரமாண்டுகளாய் வனத்திற்குள்ளேயே வாழ்ந்த இனத்துக்கு வேட்டையாடுதலைக் குறித்துத் தெரியாமலிருக்க வாய்ப்பில்லை. இவருடைய கருத்துக்கு மாறாக ஜெனரல் பார்டன் பளியர்கள் வேட்டை விலங்குகளைத் தேடிக் காண்பதில் திறமை படைத்தவர்கள் என்கிறார். மேலும் அவர் ஆங்கிலேய ஆட்சிக் காலத்திலேயே பளியர்கள் துப்பாக்கி வைத்திருந்ததாகப் பதிவு செய்கிறார். ஆனாலும் நாவலில் வேட்டைக்காரனான தங்கப்பனிடம் துப்பாக்கி இருப்பததாகவும் அவனுடன் வந்து சேர்வதற்கு முன்பு பளியக்குடியில் இருந்த காலம்வரை அவனுடைய மனைவியான செல்லாயியேகூட துப்பாக்கியை அறியாதவளாக வில் அம்பு வைத்துக்கொண்டு தான் வேட்டைக்குப் போனாள் என்றும் குறிப்பிடப்படுகிறது. மேலும் இந்நாவல் அத்யாவசியத் தேவை ஏற்பட்டாலன்றி வேறு எதற்காகவும் வேட்டையை மேற்கொள்ளாதவர்களாக, இயல்பில் வேட்டைக்கு எதிரானவர்களாக, வனக் காவலர்களாகப் பளியர்களைச் சித்திரிக்கிறது. வேட்டையாடுதல் குறித்த பளியர்களின் இத்தகைய நடவடிக்கைகளைப் புவனராஜன் என்பவரும் உறுதி செய்கிறார்.

    கொட்டைகள், வேர்கள், மலைச்சரிவுகளின்மேலே திரட்டும் பிசின் ஆகியவற்றைச் சேகரித்தல் பளியர்களின் தொழிலாக ஆய்வாளர்களின் குறிப்புகளில் காணக்கிடைக்கின்றன. தேனெடுத்தல் அவர்களின் பிரதானத் தொழிலாக இருக்கிறது. இத்தகைய குறிப்புகளை நாவலிலும் காணமுடிகிறது. அதேசமயம் எட்கர் தர்ஸ்டனின் நூலில் பளியர்கள் பயிர்த் தொழில் செய்வதில்லை என்பதான குறிப்பு உண்டு.  இதற்கு மாறாக விக்கிபீடியா தகவல் களஞ்சியம் மிகச் சமீப காலத்தில் பளியர்கள் மற்றவர்களைப் போலவே மாறி வனப்பொருட்களை விற்றும் விவசாயம் செய்தும், தேனீக்கள் வளர்த்தும் வாழ்ந்து வருவதான குறிப்பைத் தருகிறது. நாவலில் அவர்கள் தினை முதலான சிறு பயிர்களைப் பயிரிடுபவர்களாகச் சித்திரிக்கப்படுகின்றனர். மேலும் கஞ்சாத் தோட்டங்களுக்கு வேலைக்குப் போக ஆரம்பித்த காலச் சூழல் நாவலில் பதிவு செய்யப்படுகிறது. ஆய்வாளர்கள் பளியர்கள் மீன்பிடித் தொழிலிலும் ஈடுபட்டதாகக் குறிப்பிடுகின்றனர். நாவல் பளியக்குடியில் பெண்கள் மட்டும் மீன்பிடிப்பதான குறிப்பைப் பதிவுசெய்கிறது.

    பளியர்கள் காலநிலை மற்றும் சூழ்நிலைக்கேற்ப குடிசைகளிலும் பொடவுகளிலும் வாழ்வதாக நாவல் பதிவு செய்கிறது. மழை வரும்போது பொடவுக்கு ஓடுவதும் மழை இல்லாத நாட்களில்  குடிசையில் படுத்துக் கொள்வதுமாய் அவர்களின் இரவுகள் கழிந்து கொண்டிருந்தன.”(ப.226) என்னும் குறிப்பை நாவலில் காணமுடிகிறது. மேலும் பொடவுகளில் ஓவியம் வரையப்பட்டிருப்பதான குறிப்புகளையும் அது முன்வைக்கிறது. பொடவு என்பது தங்குவதற்கு ஏதுவான குகை போன்ற வளைந்த அமைப்பை உடைய பாறைப் பகுதி ஆகும்.

    இந்தப் பொடவு என்பதை ஆய்வாளர்கள் புடவு என்னும் சொல்லால் குறிக்கின்றனர். புவனராஜன் பளியர்களின் குடியிருப்பில் குகைப் பாறை ஓவியங்கள் இருப்பதை உறுதி செய்கிறார். இத்தகைய குகைப்பாறை ஓவியங்கள் உள்ள புடவு சிற்பக்கல் புடவு என்னும் பெயரால் அழைக்கப்படுவதாக அவர் குறிப்பிடுகிறார்.

    பளியர்கள் தினை மாவு, தேன், வாழைப்பழம், கிழங்கு, கஞ்சி முதலானவற்றை உணவாக உட்கொள்வதாக நாவல் பதிவுசெய்கிறது. அதிலும் குறிப்பாகத் தேன் உணவு அவர்களுக்கு விருப்பமான ஒன்று என்னும் குறிப்பு நாவலில் உண்டு. காட்டு வள்ளிக்கிழங்கு, இலை, தேன் முதலானவற்றைப் பளியர்கள் உணவாக உட்கொள்வதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். தேன் பளியர்களின் பெருவிருப்பிற்குரிய உணவு என்பதையும் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். …….. ”மரப்பொந்து ஒன்றில் தேன் கூட்டினைக் காண நேர்ந்தால் அது இவர்களுக்குச் சிறந்த சுவை விருந்தாகும். புகையூட்டித் தேனீக்களை ஓட்டிய உடனே அவர்கள் வெறி கொண்டவர்களாகத் தேன் கூட்டினைப் பறித்து அவ்விடத்திலேயே மெழுகு முதலியவற்றோடு கூட விழுங்கத் தொடங்குவர்.”(ப.468) என்று குறிப்பிடுகிறார். மேலும் இறைச்சியைப் பொருத்தவரை மிளா, மான் ஆகியனவற்றைப் பளியர்கள் புசிப்பதை நாவல் பதிவு செய்கிறது. பளியர்கள் மாட்டுக் கறியை உண்பதில்லை என்னும் குறிப்பை ஆய்வாளர்களின் தரவுகளின்மூலம் அறியமுடிகிறது. பளியக்குடி பெண்ணான செல்லாயியைத் தன்னுடன் சேர்த்துக் கொண்டதுபோலவே தங்கப்பன் சேர்த்துக் கொண்ட இன்னொரு மனைவியான சகாயமேரி மாட்டுக் கறி உண்பதான குறிப்பு நாவலில் உண்டு என்றபோதும் பளியர்கள் மாட்டுக்கறி உண்ணுதல் அல்லது உண்ணாமை குறித்த தெளிவான குறிப்பேதும் நாவலில் இல்லை.

    ஜெ.இ.டிராசி பளியர்கள் வீட்டு விலங்குகளை வளர்ப்பதில்லை என்னும் குறிப்பைத் தருகிறார். இதற்கு மாறாக, ஜி.எஃப்.டிபென்ஹ என்னும் ஆய்வறிஞர் ஓரிரு தெரு நாய்களைத் தவிர வேறு விலங்குகள் எதையும் பளியர்கள் வளர்ப்பதில்லை என்பதாகப் பதிவு செய்கிறார். இதற்கு மாறாகக் கானகன் நாவல் பளியக்குடி மக்கள் நாய், ஆடு முதலான வீட்டு விலங்குகளை வளர்ப்பதான செய்தியைப் பதிவு செய்கிறது.

    பளியர்களின் முருக வழிபாடு, கறுப்புசாமி வழிபாடு முதலான ஆண் தெய்வ வழிபாடுகளை ஆய்வாளர்கள் பதிவு செய்கின்றனர். இவை பற்றி நாவலில் குறிப்புகள் ஏதுமில்லை. இடத்திற்கு இடம் இத்தகைய வழிபாடுகள் மாறும் தன்மையனவாய் இருப்பது இதற்கான காரணமாயிருக்கிறது எனத் துணியலாம். அதேசமயம் புவனராஜன் பளிச்சியம்மன் என்னும் பெண் தெய்வ வழிபாடும் முன்னோர் வழிபாடும் பளியர்களிடம் இருப்பதைப் பதிவு செய்கிறார். மேலுமவர் சித்திரை மாதத்தில் நடக்கும் பளிச்சியம்மன் திருவிழா பற்றியும் பதிவு செய்கிறார். இத்தகைய பளிச்சியம்மன் வழிபாடு மற்றும் திருவிழா பற்றி நாவல் பின்வருமாறு பதிவு செய்கிறது:

    “தவளை நாட்டுப் பளியக் குடியின் கட்டுப்பாட்டிலிருக்கும் முப்பது பளியக்குடிக்கும் குலசாமி கோயில் கம்பத்திற்கு மேலாகக் காட்டுக்குள்ளிருக்கிறது, பளிச்சியின் வீடு. கண்ணகியை வணங்க வரும் அத்தனை பேரும் பளிச்சியைத் தாண்டித்தான் போக வேண்டும். எங்கும் ஆதரவன்றி திக்கற்றுப் போனவளை வனமகள் பளிச்சி அரவணைத்துக் கொண்டாளென பளியர்களின் கதைகள் சொல்கின்றன. கண்ணகி அவளுக்குத் தத்துப் பிள்ளை. சித்திரை மாதத்தில் பளிச்சிக்கும் வழிபாடு நடக்கும். கொலசாமியைக் கும்பிடக் கூடும்போதுதான் பெரும்பாலும் அவர்கள் சமூகத்து முக்கிய சமாசாரங்கள் குறித்து முடிவெடுப்பார்கள்.”

    இதன்மூலம் பளிச்சியம்மன் திருவிழா பளியக்குடியின் பண்பாட்டுக் கூறாக மட்டுமின்றி பல்வேறு இடங்களில் வாழும் பளியக் குடிகளின் சமூக உறவை நீட்டித்துக் கொள்வதற்கான கண்ணியாகவும் விளங்குவதை நாவல் பதிவுசெய்கிறது. இதுவன்றி, பளியர்களின் முன்னோர் வழிபாடு குறித்தும் நாவல் பதிவு செய்வதாயுள்ளது.

    மறைத்திரு எஃப். டஹ்மன் அவர்கள் பளியர்களின் சேவல் பலியிடும் சடங்கு குறித்துக் கூறுகிறார். அத்தகைய சடங்கு நாவலில் பதிவு செய்யப்படுகிறது. அதனை, டஹ்மன் கூறுவது போலவே அறிவாளால் வெட்டி நிகழ்த்தப்படுவதாக இல்லையென்றாலும் பளிச்சியேறிய வாசி அதன் குரல்வளையைக் கடித்து பலியை நிகழ்த்துவதாக நாவல் பதிவு செய்கிறது. மறைத்திரு எஃப். டஹ்மனின் கருத்தை ஒப்புநோக்கும்போது இந்நாவல் பளியர்களின் சேவல் பலியிடும் சடங்கை நேர்மையாகப் பதிவு செய்யும் அதேநேரம் சேவலின் குரல்வளையைக் கடிப்பதான நிகழ்வு பளியர்களின் நடைமுறையாக அன்றி நாவலின் சுவாரஸ்யம் கருதி இணைக்கப்பட்ட ஒன்றாக இருக்கலாம் எனக் கருத இடமுண்டு. பளியர்கள் பில்லி, சூன்யம், மாந்திரீகம் ஆகியவற்றில் தேர்ந்தவர்கள் என்பதாகச் சுற்றியுள்ள குடிகள் நம்புவதாக ஆய்வாளர்கள் பதிவு செய்கின்றனர். அதுபற்றிய குறிப்புகள் ஏதும் நாவலில் இல்லையெனினும் பளியர்களின் குறி சொல்லும் வழக்காறு பற்றி இது பதிவு செய்கிறது. பளியர்கள் தனித்துவமான மூலிகை மருத்துவத்தைக் கைக்கொண்டிருப்பதை ஆய்வாளர்கள் பதிவு செய்கின்றனர். நாவலுக்குள் வனமிருகமொன்று அடித்துக் காயப்படுத்திய வேட்டையாடியைப் பளியர் இனத் தலைவர் மூலிகைச் சாறு போட்டு வைத்தியம் பார்ப்பதான குறிப்பு காணப்படுகிறதேயன்றி மூலிகை மருத்துவம் குறித்து தெளிவான விவரணைகள் ஏதுமில்லை. அம்மூலிகை பளிச்சி மரத்தின் இலை என்பதாகச் சொல்லி இந்நாவல் அந்த வைத்திய நிகழ்வைக் கடந்துவிடுகிறது.

    வனத்திலுள்ள புலி, யானை முதலான விலங்குகள் பளியர்கள் செல்லும் பாதையிலேயே வந்தாலும் கூட அவர்களை ஒன்றும் செய்வதில்லை என்பதான குறிப்பு நாவலில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. புவனராஜன் தன் கட்டுரையில், நூற்றுக்கணக்கான ஏக்கரில் தாண்டிக்குடி மலையில் வசிக்கும் வேறு குடிமக்கள் செய்துவரும் வெள்ளாமைகள் விலங்குகளால் அழிவைச் சந்திக்கும். அதற்காக, தாண்டிக்குடி மக்கள் தனித்த திறன்மிக்க பளியர்களை அழைத்து காவலிற்கு நியமிக்கும்போது எந்த விலங்கினாலும் வெள்ளாமைச் சேதம் ஏற்படுவதில்லை என்பதாகப் பதிவு செய்யப்படும் செய்தி இவ்விடத்தில் ஒப்புநோக்கத்தக்கது.

    பளியக்குடியினர் எதிர்ப்பு குணம் குறைந்த இனமாக அடிமையாக இருக்கும் மனோபாவம் கொண்ட இனமாகக் காலம் காலமாக இருந்துவந்ததை நாவல் பதிவு செய்கிறது. ஆய்வாளர்களும் பளியர்கள் பிற இனத்தாருக்கு அடிமையாகவே இருந்து பழகிப் போனவர்கள் என்பதைப் பதிவு செய்கின்றனர். பளியர்களின் திருமணம் பெரிய அளவிலான திருமணச் சடங்குகள் ஏதுமின்றி உறவினர்கள் அனைவரையும் விருந்துக்கு அழைத்து மணமக்கள் இணையப் போவதைத் தெரிவிக்கும் எளிய நிகழ்வாக நிகழக்கூடியது. வாசியின் திருமண முன்னேற்பாடுகள் குறித்த பகுதியில் இத்தகைய பளியர் திருமண நிகழ்வின் எளிய வழக்கை நாவலாசிரியர் பதிவு செய்கிறார்.

    பளியக்குடிப் பெண்கள் பிற இரண்டாம் மனிதரை உடன் சேர்க்காமல் தம்முடைய பிரசவத்தைத் தாமே பார்த்துக் கொள்வதான வழக்கை நாவல் பதிவு செய்கிறது. மேலும் பிள்ளை பிறப்பதற்கு மூன்று நாளும் பிள்ளை பிறந்ததற்குப் பிறகு மூன்று நாளும் பளியக் குடிப் பெண்கள் தம்முடைய உடலை இரண்டாம் மனிதர் தொட அனுமதிப்பதில்லை என்பதாகவும் நாவலுக்குள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதுகுறித்து ஆய்வாளர்களின் தரவுகளில் ஏதும் குறிப்புகளில்லை. அதேசமயம் பளியக்குடி பெண்கள் பிரசவத்திற்கென எந்த மருத்துவமனைக்கும் செல்வதில்லை என்பதான குறிப்பை நாம் பளியர் என்னும் ஆவணப்படத்தின்மூலம் அறியமுடிகிறது.

    நாவலில் வேட்டையாடியான தங்கப்பனின் மூன்று மனைவிகள் குறித்து விலாவாரியான குறிப்புகள் தரப்பட்டுள்ளபோதும் பளியர் தலைவனின் மனைவி பற்றித் தெளிவான குறிப்புகளேதுமில்லை. அதேசமயம் ஆய்வாளர்கள் பளியர் இனத்தில் தலைவர் மட்டும் இரண்டு மனைவியரைத் துணையாகக் கொள்ளும் வழக்காறு உண்டு என்பதைப் பதிவுசெய்கின்றனர். இதுவன்றி, இரவு நேரங்களில் பளியர் குடியில் விலங்குகளிடமிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ளவேண்டி நெருப்பு மூட்டி இரவு முழுக்க அது அணையாமல் ஒருவர் மாற்றி ஒருவராக அதைக் கவனித்துக்கொள்ளும் வழக்காறும் உண்டு என்பதையும் ஆய்வாளர்களின் தரவுகளிலிருந்து அறியமுடிகிறது. இதுவும் நாவலில் காணக் கிடைக்கவில்லை.

    இவ்விடத்தில் கவனிக்க வேண்டியது ஒன்றுண்டு. இவ்வாய்வின் துணைமை ஆதாரமாக அமைந்த தர்ஸ்டனின் தென்னிந்தியக் குலங்களும் குடிகளும் நூல் ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் தொகுக்கப்பட்டது. அதற்கு முந்தைய ஆண்டுகளில் ஆய்வு செய்த ஆய்வறிஞர்களின் கருத்துக்களைத் தொகுப்பதாக அது அமைந்துள்ளது. அவற்றுக்கு நேர்மாறாக, புவனராஜனின் கட்டுரையோ சென்ற ஆண்டு பதிவிடப்பட்டதாக இருக்கிறது. மேத்யூ மேக்லெனின் நாம் பளியர் ஆவணப்படமேகூட 2009 ஆம் ஆண்டு ஆவணப்படுத்தப்பட்டதாகத்தான் இருக்கிறது. அதை விடவும் முக்கியமாக நாவலாசிரியர் பளியர்கள் வாழும் களத்திற்குச் சென்றது 2010ஆம் ஆண்டுக்குப் பிறகு. ஆனால் இந்நாவலின் கதை நிகழும் காலம் 1980களின் முற்பகுதி. இத்தகைய காலம்சார் கூறுகளைக் கருத்தில் கொண்டுதான் நாவலில் சித்திரிக்கப்படும் செய்திகளின் தன்மையை நம்மால் உணர முடியும்.

    ஒரு குறிப்பிட்ட இனத்தின் வழக்காறுகளைப் பதிவுசெய்ய முற்படும் நாவல் அவ்வினத்தின் எல்லா வழக்காறுகளையும் ஒன்று விடாமல் பதிவு செய்ய வேண்டுமென எதிர்பார்ப்பது சாத்தியத்திற்கு அப்பாற்பட்ட ஒன்று. ஒரு நாவல் தன்னளவில் பேச எடுத்துக்கொண்ட வழக்காறுகளை நேர்மையாகப் பதிவு செய்திருக்கிறதா என்பது இவ்விடத்தில் நமக்கு முக்கியமாகிறது. அதன்படி, பெரும்பகுதி நேர்மையாகவே கானகன் நாவலாசிரியர் பளியக் குடியின் வழக்காறுகளைப் பதிவு செய்துள்ளதை அறிய முடிகிறது. மேற்குறித்த கருத்துக்களைக் கவனத்தில் கொண்டு நோக்கினோமானால் கானகன் நாவல் ஓர் இனவரைவியல் நாவலாகக் கருதத்தக்க தகுதியை உடையது என்னும் முடிவுக்கு வரலாம்.

    *****

    கட்டுரையாளர்
    முனைவர் பட்ட ஆய்வாளர்
    சுப்பிரமணிய பாரதியார் தமிழியற்புலம்
    புதுவைப் பல்கலைக்கழகம்

    Share
  • மார்கழி மணாளன் (மூன்றாம் பகுதி ) 17  

    க.பாலசுப்பிரமணியன்

     

    நிலாத்திங்கள் துண்டம் பெருமாள் கோவில்  அருள்மிகு சந்திரசூடேஸ்வரர் பெருமாள்

    cg103p007405

    மலைமகள் மனத்தை சோதிக்க மகேசனும்

    நிலைகுலையாத் தவம் நிறுத்தத் துணிந்தே

    தலைவைத்த கங்கையினைத் தவழ விட்டான்

    அலைபாய்ந்தே கங்கை பெருகி வந்தனளே !

     

    கயல்விழியும் காத்திடவே வாமனனை வேண்டிட

    கருணையுடன் வந்தான் சங்கோடு சக்கரமாய்

    மலைமகளின் தவம்காத்துத் தனியாக நின்றான்

    மண்வடித்த சிவத்தினை மாதங்கியும் அணைத்தாளே !

     

    அரனுடைய தலையிருந்து பறித்த அழகியபிறையை

    அன்னையின் தவம்காக்க முன்வைத்தான் அரியுமே

    ஆமையாகிக் கடல்கடைந்து உடல் கருத்தவனே

    மதியணிந்து ஒளிர்ந்தானே மங்கலமாய் சந்திரசூடனே !

     

    கருமேனி உனக்கென்று புறக்கண்கள் சொல்லிவிட

    திருமேனி வண்ணங்களை அகக்கண்கள் அறிந்துவிட

    ஒருமேனி உனக்கேது உலகளந்த உத்தமனே !

    உலகறியாப் பொருளேல்லாம் உன்மேனி அடங்கையிலே !

     

    கீழ்வாயில் கற்பூரம் கண்திருஷ்டி கழிந்துவிடும்

    கருவிழிகள் கருணையோ காலனையும் விரட்டிவிடும்

    கருந்துளசி நெஞ்சினிலே காதலிலே கனிந்துவிடும்

    கார்மேக வண்ணமென்றும் காந்தமென இழுத்துவிடும் !

     

    மேலிருந்து பார்த்தாலோ முகமெல்லாம் பேரழகு

    கீழிருந்து பார்த்தாலோ நிகரில்லாத தாளழகு

    உடனின்று பார்த்தாலோ உனையன்றி ஏதழகு

    உவமைக்குச் சொல்லிடவே உலகிலில்லை வேறழகு!

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

    Share
  • குறளின் கதிர்களாய்…(198)

    செண்பக ஜெகதீசன்

    இடுக்கண் வருங்கால் நகுக அதனை
    அடுத்தூர்வது அஃதொப்பது இல். (திருக்குறள் -621: இடுக்கண் அழியாமை)

    புதுக் கவிதையில்…

    துன்பம் வருகையில்
    துவண்டிடாது
    உவந்திடுக உள்ளத்துள்…
    துன்பமதை
    ஏதிர்த்து அழிக்கவல்லது
    உவகையிதுபோல்
    வேறொன்றுமில்லை…!

    குறும்பாவில்…

    மகிழ்க துன்பத்தில்,
    மகிழ்ச்சியிதுபோல் துன்பத்தை அழிக்கவல்லது
    வேறொன்றுமில்லை…!

    மரபுக் கவிதையில்…

    வாழ்வில் துன்பம் வருகையிலே
    -வருத்தம் ஏதும் கொள்ளாமல்
    ஆழ்ந்த மனத்தில் உவகையுடன்
    -அமைதி யுடனே ஏற்றிடுவாய்,
    தாழ்வு யெதுவும் இதிலில்லை
    -துன்ப மிதனை அழித்தொழித்தே
    வாழ்வில் இன்பம் தரவல்லது
    -உவகை யிதுபோல் வேறிலையே…!

    லிமரைக்கூ…

    துன்பத்திலே மகிழ்ச்சிமுகம் காட்டு,
    மகிழ்ச்சி இதுபோல் வேறெதுவுமில்லை
    துன்பமதை அழிக்கவல்ல வேட்டு…!

    கிராமிய பாணியில்…

    சிரிச்சுக்கோ சிரிச்சிக்கோ
    செரமம் வந்தாலும் சிரிச்சிக்கோ,
    தும்பத்தப் பாத்து
    தொவண்டு போவமலே
    சிரிச்சுக்கோ சிரிச்சிக்கோ…

    புரிஞ்சிக்கோ புரிஞ்சிக்கோ
    தும்பமித அழிச்சிடவே
    தகுந்த ஆயுதம்
    இந்த
    சிரிப்பப்போல வேறயில்ல…

    அதால
    சிரிச்சுக்கோ சிரிச்சிக்கோ
    செரமம் வந்தாலும் சிரிச்சிக்கோ…!

     

     

    Share
  • அன்றும் இன்றும் [1]

    இன்னம்பூரான்

    ஜனவரி 1, 2018

    இன்றைய உலகின் ஜனத்தொகையில் மூன்றில் ஒரு பங்கு 30 வயதுக்கு உட்பட்டவர்கள். வருங்காலம் அவர்கள் கையில் தான் இருக்கிறது. அவர்களுக்கு வாழும் கலையை கற்றுக்கொடுக்கும் ஆற்றல், கணிசமான அளவுக்கு, நம்மிடமும், நமது மூதாதையரிடமும் இருக்கிறது. புத்தாண்டு வாழ்த்துக்கள் தத்துவரீதியில் அமைவதும், வாழ்க்கையின் அனுபவத்தை பகிர்ந்துகொள்வதுமாகவும், தோழமையுடன் அளவளாவுதலாகவும் அமைவதும் நலம் பயக்கும். அத்துடன் நிற்காமல், பேராசிரியர் மு.வரதராசன் எழுதிய ‘நல்வழி’ ராஜபாட்டையில் தொன்மை, புதுமை, நவீனம், எத்திசையிலிருந்து தென்றலாக வீசும் சான்றோர் வாக்கை சிந்தனையில் அடை காக்கவைத்து தெளிவடைவது போன்ற செயல்பாடுகள் தொடர்ச்சியாகவும், பெருமளவிலும் நடக்கவேண்டும் என்ற அவா எழுத்திலக்கியத்திலும், சொற்பொழிவுகளிலும், மற்ற ஊடகங்களிலும் தென்படுகிறது. நானும் அதற்கு விலக்கல்ல.

    2018 வருடத்தை வரவேற்கும் தருணத்தில், இந்தியா பல நல்வழிகளில் முன்னேறவேண்டும், தமிழ்நாடு ஒரு முன்மாதிரி மாநிலமாக அமையவேண்டும் என்ற ஆர்வம் மேலோங்கி நிற்கவேண்டும், மக்களிடம். வரலாற்றையும், அது அளித்த இன்பதுன்பங்களை மறப்பது எளிதல்ல என்றாலும், அதன் பாடங்களை நாம் இனம் காணமுடியும்; எச்சரிக்கையாக இயங்கமுடியும். அலை ஓசை ஓய்வதில்லை. ஆக்கபூர்வமான கருத்துக்களை நாம் பகிர்ந்து கொள்வதற்கு எல்லையும் இல்லை.

    அருவமான மனம் வடிவியல் ( ஜீஆமட்ரீ ) சாத்திரத்துக்கு அப்பாற்பட்டது. மெய்ஞானத்திற்கும், விஞ்ஞானத்திற்கும், அஞ்ஞானத்திற்கும், ஏன் ? ஞானத்திற்கே அப்பாற்பட்டது. மூளையோ ஒரு அற்புதமான அவயவம். அவை இரண்டுடன், நினைவாற்றல், சிந்தனை, அசை போடுதல், மாற்றி யோசிப்பது, பிரஞ்ஞை போன்ற ஏழு குதிரைகளை பூண் பூட்டிய ரதமாக அமையட்டும், 2018. ஆதவன் அத்தகைய ரதத்தில் தான் ஒளி மயமாக ஜொலித்துக்கொண்டே பிரபஞ்சத்தில், நாள் தவறாமல் பவனி வருவதாக ஐதிகம் கூறுகிறது. வானவியல் அந்த பவனியை பறை சாற்றுகிறது. அந்த உவமை இங்கு ஒத்துத்தான் போகிறது. சுருங்கச்சொல்லின், இந்த பூவுலகத்து வாசிகளான சகல ஜீவராசிகளையும் சகலவித போஷாக்குடன் வளர்த்து உய்விக்கும் திறன் கொண்ட வழிமுறைகளை பகிர்ந்து கொள்ள நாட்தோறும் எழுதினாலும், ஒரு வருடம் போதாது; மாமாங்கமும் போதாது. ஆகவே புத்தாண்டை வரவேற்க, உலகில் மிகவும் எடுத்துக்காட்டப்பட்ட ஒரு வரியை மட்டும், இன்று எடுத்துக்கொள்கிறேன்.

    “The arc of the moral universe is long, but it bends towards justice.” என்றார் தியோடர் பார்க்கர் (1810 -1860) என்ற மத போதகர். விவிலியத்தின் கூற்றுக்கள் யாவற்றையும் ஏற்றுக்கொள்ளாதவர். அதனால் ஏற்பட்ட இன்னல்களை சகித்துக்கொண்டார். அதுவே முதல் பாடம் என்க. அவர் மேற்கல்வி கட்ட விதமே அலாதியானது. வறுமையின் காரணத்தால் அவருக்கு ஹார்வேட்டில் படிக்க இடம் கிடைத்தபோதிலும் அங்கு சேரமுடியவில்லை. தந்தையின் பண்ணையில் ஊழியம் செய்து கொண்டே வீட்டிலிருந்து படித்து, மூன்று வருட தேர்வுகளை முதல் வருடமே கெலித்த 19 வயது இளைஞனவர். இந்த எடுத்துக்காட்டு 65 வருடங்களுக்குப் பின் என் கண்களில் இப்போது தென்படுகிறது. இன்று என் அறையை சுத்தம் செய்தேன். என்னை வியப்பில் ஆழ்த்திய ஒரு ஆவணம் தற்செயலாக கிட்டியது. அதில் ஆழ்ந்து விட்டேன். அது நான் ஜனவரி 1, 1953 முதல் ஓரிண்டு வருடங்கள் எழுதிய நாட்குறிப்பு. நான் அதை எடுத்துப்பார்த்த ஞாபகம் சில மாமாங்களுக்கு முன்னால். அக்காலம் டைரி கிடைப்பது குதிரை கொம்பு. பெண்ட் செய்யப்பட்ட நோட்டுப்புத்தகம் வாங்கவே காசு இல்லை. தினசரி இதழ்கள் வரும் சாணிப்பேப்பர் எனப்படும் மலிவான காகிதம் வாங்கி அதை நோட் புத்தகமாக தைத்து எழுதியிருக்கிறேன். அடிக்கடி முனைந்து படிக்கவேண்டும், நேரம் வீணாக்கலாகாது, வெட்டிப்பேச்சு வேண்டாம் என்றெல்லாம் எழுதியிருக்கிறேன். நான் அப்படித்தான் நாட்தோறும் இயங்கினேன் என்று சொல்வதற்கில்லை. ஆனால் முதலுக்கு மோசம் போகவில்லை என்று இப்போது ஞானோதயம் உதிக்கிறது! இது நிற்க.

    நான் அடிக்கடி சுய விசாரணைக்கு உட்படுத்தும் எடுத்துக்காட்டு, அடிக்கடி அப்ரஹாம் லிங்கனாலும், மார்ட்டின் லுதர் கிங் என்ற அமெரிக்காவின் காந்தியினாலும் அடிக்கடி கூறப்பட்டது. அவர்கள் இருவரின் புரட்சிகரமான சிந்தனைகளுக்கும், செயல்களுக்கும் வித்திட்டது. அது தான்:

    “The arc of the moral universe is long, but it bends towards justice.”

    பொருட்கூறப்போனால் ‘வில் போல் வளையும் தருமத்தின் நீளம் அதிகம்; எனினும் அது நீதியை நாடும் எனலாம்.

    சொற்களை மாற்றி பிரயோகித்தாலும் பொருள் மாறப்போவதில்லை. பொழிப்புரை என்று சொன்னால் பலரும் பலவிதமாக கூறலாம். ‘சத்யமே ஜயதே’ என்று தலை மேல் அடித்து ஆணையிட்டு விட்டு, பொய்யுரைப்பதையே வாழ்விலக்கணமாக அமைத்துக்கொள்பவர்களும் இருக்கிறார்கள், இருந்திருக்கிறார்கள், இனியும் இருப்பார்கள். அவ்வாறு இப்போது பேசிக்கொண்டு போவது திசை மாறி விடும். அதை பிறகு பார்த்துக்கொள்ளலாம்.

    ‘வில் போல் வளையும் தருமத்தின் நீளம் அதிகம்; எனினும் அது நீதியை நாடும்.’

    எல்லா மனிதர்களுக்கும் எது நல்லது/ எது தீயது என்பது நன்றாக தெரியும். சிலர் அப்போது கூட தீயதையே செய்து தன்னலத்தை மட்டும் காபந்து செய்து கொள்வார்கள்; அதற்காக மற்றவர்களை வேரோடு சாய்த்து விட்டு, சுதாரித்துக்கொள்வார்கள். அதை நியாயப்படுத்துவார்கள். தியோடர் பார்க்கர் அவர்கள் இந்த அநீதி நிலைத்து நிற்க போவதில்லை. தருமம் தலை காட்டும் என்கிறார். காந்தி மஹானின் வாழ்க்கையே தியோடர் பார்க்கர் வாக்கை நிரூபிக்கிறது. மேலும் பார்க்கலாம்.

    (தொடரும்)

    -#-

    பி.கு. சென்னையில் பயணம் செய்யும் போதெல்லாம் எந்த நிமிடமும் விபத்தில் உயிர் இழக்க நேரிடலாம் என்று அச்சப்படும் அளவுக்கு எதிர்வாடையில் பயங்கரவேகத்தில் மோட்டார் சைக்கிளில் விவரம் தெரிந்த மூடர்கள் கூட வருகிறார்கள். டாணாக்காரர்களும் தூங்கி வழிகிறார்கள். இதை பார்க்கும் போது, இது கலிகாலம். நீதிக்கும் ஒரு வில் உண்டு. அது வளையாது; உடைந்து விடும் என்று தோன்றுகிறது. இது மக்களே மாற்றிக்கொள்ள வேண்டிய அசட்டுத்தனம் அல்லவோ? நீங்கள் என்ன சொல்வீர்களோ?

    அன்றும் இன்றும் [1]

    இன்னம்பூரான்
    ஜனவரி 1, 2018

    இன்றைய உலகின் ஜனத்தொகையில் மூன்றில் ஒரு பங்கு 30 வயதுக்கு உட்பட்டவர்கள். வருங்காலம் அவர்கள் கையில் தான் இருக்கிறது. அவர்களுக்கு வாழும் கலையை கற்றுக்கொடுக்கும் ஆற்றல், கணிசமான அளவுக்கு, நம்மிடமும், நமது மூதாதையரிடமும் இருக்கிறது. புத்தாண்டு வாழ்த்துக்கள் தத்துவரீதியில் அமைவதும், வாழ்க்கையின் அனுபவத்தை பகிர்ந்துகொள்வதுமாகவும், தோழமையுடன் அளவளாவுதலாகவும் அமைவதும் நலம் பயக்கும். அத்துடன் நிற்காமல், பேராசிரியர் மு.வரதராசன் எழுதிய ‘நல்வழி’ ராஜபாட்டையில் தொன்மை, புதுமை, நவீனம், எத்திசையிலிருந்து தென்றலாக வீசும் சான்றோர் வாக்கை சிந்தனையில் அடை காக்கவைத்து தெளிவடைவது போன்ற செயல்பாடுகள் தொடர்ச்சியாகவும், பெருமளவிலும் நடக்கவேண்டும் என்ற அவா எழுத்திலக்கியத்திலும், சொற்பொழிவுகளிலும், மற்ற ஊடகங்களிலும் தென்படுகிறது. நானும் அதற்கு விலக்கல்ல.

    2018 வருடத்தை வரவேற்கும் தருணத்தில், இந்தியா பல நல்வழிகளில் முன்னேறவேண்டும், தமிழ்நாடு ஒரு முன்மாதிரி மாநிலமாக அமையவேண்டும் என்ற ஆர்வம் மேலோங்கி நிற்கவேண்டும், மக்களிடம். வரலாற்றையும், அது அளித்த இன்பதுன்பங்களை மறப்பது எளிதல்ல என்றாலும், அதன் பாடங்களை நாம் இனம் காணமுடியும்; எச்சரிக்கையாக இயங்கமுடியும். அலை ஓசை ஓய்வதில்லை. ஆக்கபூர்வமான கருத்துக்களை நாம் பகிர்ந்து கொள்வதற்கு எல்லையும் இல்லை.

    அருவமான மனம் வடிவியல் (ஜீஆமட்ரீ) சாத்திரத்துக்கு அப்பாற்பட்டது. மெய்ஞானத்திற்கும், விஞ்ஞானத்திற்கும், அஞ்ஞானத்திற்கும், ஏன் ? ஞானத்திற்கே அப்பாற்பட்டது. மூளையோ ஒரு அற்புதமான அவயவம். அவை இரண்டுடன், நினைவாற்றல், சிந்தனை, அசை போடுதல், மாற்றி யோசிப்பது, பிரஞ்ஞை போன்ற ஏழு குதிரைகளை பூண் பூட்டிய ரதமாக அமையட்டும், 2018. ஆதவன் அத்தகைய ரதத்தில் தான் ஒளி மயமாக ஜொலித்துக்கொண்டே பிரபஞ்சத்தில், நாள் தவறாமல் பவனி வருவதாக ஐதிகம் கூறுகிறது. வானவியல் அந்த பவனியை பறை சாற்றுகிறது. அந்த உவமை இங்கு ஒத்துத்தான் போகிறது. சுருங்கச்சொல்லின், இந்த பூவுலகத்து வாசிகளான சகல ஜீவராசிகளையும் சகலவித போஷாக்குடன் வளர்த்து உய்விக்கும் திறன் கொண்ட வழிமுறைகளை பகிர்ந்து கொள்ள நாட்தோறும் எழுதினாலும், ஒரு வருடம் போதாது; மாமாங்கமும் போதாது. ஆகவே புத்தாண்டை வரவேற்க, உலகில் மிகவும் எடுத்துக்காட்டப்பட்ட ஒரு வரியை மட்டும், இன்று எடுத்துக்கொள்கிறேன்.

    “The arc of the moral universe is long, but it bends towards justice.” என்றார் தியோடர் பார்க்கர் (1810 -1860) என்ற மத போதகர். விவிலியத்தின் கூற்றுக்கள் யாவற்றையும் ஏற்றுக்கொள்ளாதவர். அதனால் ஏற்பட்ட இன்னல்களை சகித்துக்கொண்டார். அதுவே முதல் பாடம் என்க. அவர் மேற்கல்வி கட்ட விதமே அலாதியானது. வறுமையின் காரணத்தால் அவருக்கு ஹார்வேட்டில் படிக்க இடம் கிடைத்தபோதிலும் அங்கு சேரமுடியவில்லை. தந்தையின் பண்ணையில் ஊழியம் செய்து கொண்டே வீட்டிலிருந்து படித்து, மூன்று வருட தேர்வுகளை முதல் வருடமே கெலித்த 19 வயது இளைஞனவர். இந்த எடுத்துக்காட்டு 65 வருடங்களுக்குப் பின் என் கண்களில் இப்போது தென்படுகிறது. இன்று என் அறையை சுத்தம் செய்தேன். என்னை வியப்பில் ஆழ்த்திய ஒரு ஆவணம் தற்செயலாக கிட்டியது. அதில் ஆழ்ந்து விட்டேன். அது நான் ஜனவரி 1, 1953 முதல் ஓரிண்டு வருடங்கள் எழுதிய நாட்குறிப்பு. நான் அதை எடுத்துப்பார்த்த ஞாபகம் சில மாமாங்களுக்கு முன்னால். அக்காலம் டைரி கிடைப்பது குதிரை கொம்பு. பெண்ட் செய்யப்பட்ட நோட்டுப்புத்தகம் வாங்கவே காசு இல்லை. தினசரி இதழ்கள் வரும் சாணிப்பேப்பர் எனப்படும் மலிவான காகிதம் வாங்கி அதை நோட் புத்தகமாக தைத்து எழுதியிருக்கிறேன். அடிக்கடி முனைந்து படிக்கவேண்டும், நேரம் வீணாக்கலாகாது, வெட்டிப்பேச்சு வேண்டாம் என்றெல்லாம் எழுதியிருக்கிறேன். நான் அப்படித்தான் நாட்தோறும் இயங்கினேன் என்று சொல்வதற்கில்லை. ஆனால் முதலுக்கு மோசம் போகவில்லை என்று இப்போது ஞானோதயம் உதிக்கிறது! இது நிற்க.

    நான் அடிக்கடி சுய விசாரணைக்கு உட்படுத்தும் எடுத்துக்காட்டு, அடிக்கடி அப்ரஹாம் லிங்கனாலும், மார்ட்டின் லுதர் கிங் என்ற அமெரிக்காவின் காந்தியினாலும் அடிக்கடி கூறப்பட்டது. அவர்கள் இருவரின் புரட்சிகரமான சிந்தனைகளுக்கும், செயல்களுக்கும் வித்திட்டது. அது தான்:

    “The arc of the moral universe is long, but it bends towards justice.”

    பொருட்கூறப்போனால் ‘வில் போல் வளையும் தருமத்தின் நீளம் அதிகம்; எனினும் அது நீதியை நாடும் எனலாம்.

    சொற்களை மாற்றி பிரயோகித்தாலும் பொருள் மாறப்போவதில்லை. பொழிப்புரை என்று சொன்னால் பலரும் பலவிதமாக கூறலாம். ‘சத்யமே ஜயதே’ என்று தலை மேல் அடித்து ஆணையிட்டு விட்டு, பொய்யுரைப்பதையே வாழ்விலக்கணமாக அமைத்துக்கொள்பவர்களும் இருக்கிறார்கள், இருந்திருக்கிறார்கள், இனியும் இருப்பார்கள். அவ்வாறு இப்போது பேசிக்கொண்டு போவது திசை மாறி விடும். அதை பிறகு பார்த்துக்கொள்ளலாம்.

    ‘வில் போல் வளையும் தருமத்தின் நீளம் அதிகம்; எனினும் அது நீதியை நாடும்.’

    எல்லா மனிதர்களுக்கும் எது நல்லது/ எது தீயது என்பது நன்றாக தெரியும். சிலர் அப்போது கூட தீயதையே செய்து தன்னலத்தை மட்டும் காபந்து செய்து கொள்வார்கள்; அதற்காக மற்றவர்களை வேரோடு சாய்த்து விட்டு, சுதாரித்துக்கொள்வார்கள். அதை நியாயப்படுத்துவார்கள். தியோடர் பார்க்கர் அவர்கள் இந்த அநீதி நிலைத்து நிற்க போவதில்லை. தருமம் தலை காட்டும் என்கிறார். காந்தி மஹானின் வாழ்க்கையே தியோடர் பார்க்கர் வாக்கை நிரூபிக்கிறது. மேலும் பார்க்கலாம்.

    (தொடரும்)

    -#-

    பி.கு. சென்னையில் பயணம் செய்யும் போதெல்லாம் எந்த நிமிடமும் விபத்தில் உயிர் இழக்க நேரிடலாம் என்று அச்சப்படும் அளவுக்கு எதிர்வாடையில் பயங்கரவேகத்தில் மோட்டார் சைக்கிளில் விவரம் தெரிந்த மூடர்கள் கூட வருகிறார்கள். டாணாக்காரர்களும் தூங்கி வழிகிறார்கள். இதை பார்க்கும் போது, இது கலிகாலம். நீதிக்கும் ஒரு வில் உண்டு. அது வளையாது; உடைந்து விடும் என்று தோன்றுகிறது. இது மக்களே மாற்றிக்கொள்ள வேண்டிய அசட்டுத்தனம் அல்லவோ? நீங்கள் என்ன சொல்வீர்களோ?

    இன்னம்பூரான்

    http://innamburan.blogspot.co.uk

    http://innamburan.blogspot.de/view/magazine

    www.olitamizh.com

    Share
  • தீராத விளையாட்டுப் பிள்ளை

    நிலவளம் கு.கதிரவன்

    முன்னுரை :-

    இன்றைய தொழில்நுட்ப உலகத்தில் நமது தினசரி வாழ்க்கைமுறையானது எந்திர நுட்பவியலை அடிப்படையாகக் கொண்டே படிப்படியாக மாறிப்போனது. காலை எழுந்தது முதல் இரவு உறக்கத்திற்கு செல்லும்வரை நமது வேலையின் சரிபாதிக்கும் மேலான அளவினை திறன் கருவிகளைக் கொண்டும், எந்திரங்களை துணையாகக் கொண்டும் கட்டமைத்துக் கொண்டோம். கணிப்பொறி தொடங்கி திறன் பேசிகள் வரை இன்று சிறுவர்கள் முதற்கொண்டு பதின்ம வயதினரைத் தொடர்ந்து முதியோர் வரையில் பயன்படுத்துவது சர்வ சாதாரணமாகிவிட்டது. அதிலும் திறன்பேசிகளுக்கு அனைவரும் அடிமையாகவே ஆகிவிட்டனர். சிறுவர்களுக்கு விளையாட்டு என்பதே அருகிவிட்டது. சரி. இவையெல்லாம் காலத்தின் மாற்றங்கள். அதற்குத் தகுந்தாற்போல் நாம் நம்மையும், நம்முடைய குழந்தைகளையும் பயனுள்ள வழியில் எவ்வாறு மாற்றிக் கொள்வது என்பதைப் பற்றி விவாதிக்கிறது இக் கட்டுரை.

    aHR0cDovL3d3dy5saXZlc2NpZW5jZS5jb20vaW1hZ2VzL2kvMDAwLzA5Ny8zODQvb3JpZ2luYWwvcm9ib3QtaXBhZC5qcGc=

    தீராத விளையாட்டுப் பிள்ளை :-

    நான் வீட்டில் ஓய்வாக புத்தகம் படித்துக் கொண்டிருக்கும்போது, ”தீராத விளையாட்டுப் பிள்ளை – கண்ணன், தெருவிலே பெண்களுக் கோயாத தொல்லை” என்ற பாரதியின் பாடல் வரியைக் கேட்டு எட்டிப் பார்த்தால், பக்கத்து வீட்டு நண்பர் வீட்டிற்குள் வந்து கொண்டிருந்தார். என்னப்பா, ஒரே உற்சாகம் போல? என்று கேட்டேன். ஏம்பா, என்னோட வயித்தெரிச்சல கேட்கற? நாம படிக்கிற காலத்துல நம்ம அப்பா அம்மாக்கள் எல்லாம் நேரங்காலம் தெரியாம விளையாடற நம்மள கூப்பிட, விளையாடுற இடத்துக்கே வந்துடுவாங்க. இந்தக் காலத்து பசங்கள வெளியில போயி விளையாடுங்கடானு சொன்னாக் கூட போவேனானு இருக்கானுங்க. எப்பவும் போனும் கையுமாவே இருக்கானுங்கனு” சளித்துக் கொண்டார்.

    எந்த எதிர்மறை நிகழ்வையும் நேர்மறையாக மாற்றிக் கொள்வது நம்மோட கையிலதான் இருக்கு. திறன் பேசியை சதாசர்வ நேரமும் நோண்டிக்கிட்டு இருக்கான்னா, அதைக் கொண்டே பயனுள்ள விளையாட்டுக்களை விளையாட மடை மாற்றம் செய்யலாம் என்றேன். என்னப்பா சொல்ற? என்று வியந்த நண்பருக்கு விளக்கினேன்.

    ரோபோ கருவி கலப் பெட்டி( Robot Kits ):-

    நாம் அனைவரும் இந்த 21 ம் நுற்றாண்டில் நம்மை முன்னேற்றிக் கொள்ள தொழில் நுட்பத்தை பயன்படுத்தி வருகிறோம். படிக்கின்ற நமது பிள்ளைகளும் அத்தகைய தொழில் நுட்பத்தை பயன்படுத்தியே கல்வி கற்கின்றனர். விளையாடுகின்றனர். ஆனால் இன்றைய பெற்றோர்கள் நமது பிள்ளைகள் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதோடு அத்தகைய தொழில் நுட்பத்தை எவ்வாறு உருவாக்குவது, வளர்த்தெடுப்பது மற்றும் ஒரு ரோபோ செய்வதற்கு இணையாகவோ அல்லது அதைவிட ஒருபடி மேலே சென்று அந்த பணியை செய்ய வேண்டும் என நினைக்க வேண்டும். ரோபோக்கள் வந்த பின்னர் நமது வேலைகள் சுருங்கிவிட்டது. நமக்கு இணையாகவோ அல்லது அதற்கு மேலாகவோ ஒரு ரோபோட் செய்துவிடுகிறது.

    பெரிய பெரிய ரோபோக்கள் உருவாக்குவதற்கு உயர்படிப்பு படிப்பதற்கு முன்னரே இன்றைய சிறுவர்கள் முதல் பதின்ம வயதுடைய இளைஞர்களுக்கு திறன் பேசியைக் கொண்டே ரோபோக்களை உருவாக்கி, விளையாட ரோபோ கருவி கலப் பெட்டி ( Robot Kits ) வயதுக்கேற்றவர்களுக்கு உரிய விலையில் சந்தைக்கு வந்துவிட்டது.

    சோதனை மற்றும் ஆராய்ச்சியின் அடிப்படையில் பல்வேறு வயதினருக்கு பல்வேறு விலையில், திறன் நிலைக்கு ஏற்றவாறு ரோபோட் கருவிகளை நாம் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

    சில ரோபோ கிட்கள் மழலையர் பள்ளிக்கூட அளவில் போதுமானவை என்றாலும் முக்கியமாக பதின்ம வயதினரே இதற்கு இலக்கு. சந்தைக்கு வந்துள்ள ரோபோ கிட்கள் தடுப்பு அடிப்படையிலான நிரலாக்க மொழிகளை ( Block based programming language ) பயன்படுத்தப்படுகின்றன. இவ்வகை மொழியானது குழந்தைகளின் செயல்பாடுகளின் அடிப்படையில் கருத்துக்களை கற்றக் கொள்ள உதவுகிறது. வயதுக்கேற்ற நிலையில் குறியீட்டு மொழிகள் பயன்படுத்தப்படுவது இதற்கு அடிப்படையாகிறது.

    ஐந்து வயது முதல் பத்து வயதிலான குழந்தைகளுக்கு என தனியாக ரோபோட் கிட்கள் விற்பனை செய்யப்படுகிறது. பூனை வடிவ ரோபோட், கால்பந்து ஆடும் ரோபோட், பியானோ வாசிக்கும் ரோபோட் என அந்த வயதுக்கு ஒத்த நிலையில் தேர்ந்தெடுத்து கருவிகளை கட்டமைப்பு செய்து ரோபோக்களை உருவாக்கி, அதை இணைய இயங்குதள அமைப்புடன்( IOS) திறன் பேசி( Smart Phone ) வழியாகவோ அல்லது டேப்லெட்கள்( Tablet ) வழியாகவோ இயக்கும் விதமாக வடிவமைத்துக் கொள்ளலாம். குழந்தைகளே ரோபோ உதிரி பாகங்களைக் கொண்டு குறிப்பிட்ட ரோபோட்களை உருவாக்கி பயன்படுத்தும்போது அவர்களின் சிந்தனைத் திறன், படைப்பூக்கம் வளர உதவுகிறது.

    உதாரணமாக பத்து வயதுக்கு மேற்பட்டோருக்கு 291 வகையான பாகங்கள் கொண்ட ரோபோட் கிட்கள் விற்பனை செய்யப்படுகிறது. இதில் சிலந்தி வடிவிலான ரோபோட் பாகங்கள் தனித் தனியாக உள்ளது. உடல் பாகங்கள், 10 கால்கள் என அனைத்தையும் வழிமுறையோடு இணைத்து இதை உருவாக்கலாம். இதனோடு அகச்சிவப்பு சென்சார்கள்( Infrared Sensors ), தொடு திரை, ஸ்பீக்கர், போன்றவற்றை இணைத்துக் கொள்ளலாம். இந்த சிலந்தியிடம் சுடுவதற்கு உரிய பொம்மை துப்பாக்கியை இணைத்து நாம் உறங்கும் அறையில் உலாவ விட்டால் எதிர்ப்படும் தேவையற்ற வஸ்துக்களை சுடுகிறது.

    விளையாட்டு ரோபோட் கிட்கள் தவிர, கல்வி சம்பந்தமான ரோபோக்கள், இயற்பியல் மற்றும் உளவியல் ரீதியிலான கிட்களும் நமக்கு எளிதில் பல்வேறு விலையில் கிடைக்கிறது.

    இத்தகைய ரோபோட் கிட்களை மைக்ரோ சாஃப்ட், அமேஸான், ஐபிஎம் போன்ற நிறுவனங்கள் தயாரித்து குழந்தைகளின் அறிவியல் திறன் மேம்பட விற்பனை செய்கிறது.

    தீராத விளையாட்டுப் பிள்ளை என்ற பாடலில் கண்ணனின் பல்வேறு குறும்புகளைக் கூறும் பாரதியார், தொடர்ந்து வரும் வரியில், ”புல்லாங்குழல் கொண்டு வருவான்-அமுது பொங்கித் ததும்புநற் கீதம் படிப்பான்” என்றும் கண்ணனின் திறமையை சிலாகித்துக் கூறியுள்ளார் என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.

    முடிவுரை :-

    குழந்தைகள் என்றால் குறும்புகள் இருக்கத்தான் செய்யும். இன்றைய டிஜிட்டல் உலகத்தில் அனைத்துக் கருவிகளையும் கையாளும் திறனையும் இளைஞர்கள் பெற்றுள்ளார்கள். அறிவியல் முன்னேற்றத்தின் வழியாக கிடைக்கும் வசதிகளை நாம்தான் நன்மைக்கான தொடர்பில் பயன்படுத்த நமது குழந்தைகளை மாற்றம் செய்ய வேண்டும். அந்த வகையில் சிறு வயதிலேயே விளையாடுவதற்கு பொம்மைகள் வாங்கிக்கொடுப்பது போன்று, இது போன்ற சிந்தனைத் திறன் வளர்க்கும் கருவிப் பெட்டிகளையும் வாங்கிக் கொடுத்து சிறுவர்கள் மற்றும் இளைஞர்களின் படைப்பூக்கத்தை வளர்த்தெடுக்க ஒவ்வொருவரும் முன் வர வேண்டும்.

    Share
  • காத்திரு ! வருகிறேன் !

     

    unnamed

    காத்திரு ! வருகிறேன் !

    மூலம் : பீட்டில்ஸ் பாடகர்

    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

    +++++++++++

    நீண்ட காலம் கடந்த பிறகு,

    மீண்டும் இல்லம் நோக்கி வருகிறேன் !

    தற்போது நான்

    வெகு தூரம் போய் விட்டேன் !

    தனிமையில்

    தவிக்கிறேன் எப்படி தெரியுமா ?

    காத்திருப்பாய் எனக்கு

    மறுபடி உன்னருகே வரும்வரை ;

    மறப்போம் நாம்

    கண்ணீர் விட்டழுத காட்சியை !

    காத்திருக் காதே,

    உன்னிதயம் உடைந்தி ருந்தால் !

    என்னை விட்டுப்

    போய்விடு !

    உறுதியாய் இதயம் இருந்தால்

    பொறுத்திரு !

    தாமதிக்க மாட்டேன் !

    காத்திரு நான்

    திரும்பி உன் பக்கம் வரும்வரை !

    மறப்போம் நாம்

    கண்ணீர் விட்டழுத காட்சியை !

    உணர்கிறேன் நான்,

    உனக்கும் தெரிய வேண்டும்

    நல்லவனாய்

    நானிருந்தேன் கூடிய வரை;

    நீயும் உணர்ந்தால்

    நானும் உன்னை நம்பிடுவேன்,

    காத்திருப் பாய் நீ யெனக்கென

    களிப்படைவேன்;

    நீண்ட காலம் கடந்து, இன்று

    மீண்டும் இல்லம் நோக்கி வருகிறேன் !

    வெகு தூரம் போய் விட்டேன் !

    தனிமையில்

    தவிக்கிறேன் எப்படி தெரியுமா ?

    +++++++++++++++

    Share