க.பாலசுப்பிரமணியன்

 

நிலாத்திங்கள் துண்டம் பெருமாள் கோவில்  அருள்மிகு சந்திரசூடேஸ்வரர் பெருமாள்

cg103p007405

மலைமகள் மனத்தை சோதிக்க மகேசனும்

நிலைகுலையாத் தவம் நிறுத்தத் துணிந்தே

தலைவைத்த கங்கையினைத் தவழ விட்டான்

அலைபாய்ந்தே கங்கை பெருகி வந்தனளே !

 

கயல்விழியும் காத்திடவே வாமனனை வேண்டிட

கருணையுடன் வந்தான் சங்கோடு சக்கரமாய்

மலைமகளின் தவம்காத்துத் தனியாக நின்றான்

மண்வடித்த சிவத்தினை மாதங்கியும் அணைத்தாளே !

 

அரனுடைய தலையிருந்து பறித்த அழகியபிறையை

அன்னையின் தவம்காக்க முன்வைத்தான் அரியுமே

ஆமையாகிக் கடல்கடைந்து உடல் கருத்தவனே

மதியணிந்து ஒளிர்ந்தானே மங்கலமாய் சந்திரசூடனே !

 

கருமேனி உனக்கென்று புறக்கண்கள் சொல்லிவிட

திருமேனி வண்ணங்களை அகக்கண்கள் அறிந்துவிட

ஒருமேனி உனக்கேது உலகளந்த உத்தமனே !

உலகறியாப் பொருளேல்லாம் உன்மேனி அடங்கையிலே !

 

கீழ்வாயில் கற்பூரம் கண்திருஷ்டி கழிந்துவிடும்

கருவிழிகள் கருணையோ காலனையும் விரட்டிவிடும்

கருந்துளசி நெஞ்சினிலே காதலிலே கனிந்துவிடும்

கார்மேக வண்ணமென்றும் காந்தமென இழுத்துவிடும் !

 

மேலிருந்து பார்த்தாலோ முகமெல்லாம் பேரழகு

கீழிருந்து பார்த்தாலோ நிகரில்லாத தாளழகு

உடனின்று பார்த்தாலோ உனையன்றி ஏதழகு

உவமைக்குச் சொல்லிடவே உலகிலில்லை வேறழகு!

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.