மார்கழி மணாளன் (மூன்றாம் பகுதி ) 17
க.பாலசுப்பிரமணியன்
நிலாத்திங்கள் துண்டம் பெருமாள் கோவில் அருள்மிகு சந்திரசூடேஸ்வரர் பெருமாள்
மலைமகள் மனத்தை சோதிக்க மகேசனும்
நிலைகுலையாத் தவம் நிறுத்தத் துணிந்தே
தலைவைத்த கங்கையினைத் தவழ விட்டான்
அலைபாய்ந்தே கங்கை பெருகி வந்தனளே !
கயல்விழியும் காத்திடவே வாமனனை வேண்டிட
கருணையுடன் வந்தான் சங்கோடு சக்கரமாய்
மலைமகளின் தவம்காத்துத் தனியாக நின்றான்
மண்வடித்த சிவத்தினை மாதங்கியும் அணைத்தாளே !
அரனுடைய தலையிருந்து பறித்த அழகியபிறையை
அன்னையின் தவம்காக்க முன்வைத்தான் அரியுமே
ஆமையாகிக் கடல்கடைந்து உடல் கருத்தவனே
மதியணிந்து ஒளிர்ந்தானே மங்கலமாய் சந்திரசூடனே !
கருமேனி உனக்கென்று புறக்கண்கள் சொல்லிவிட
திருமேனி வண்ணங்களை அகக்கண்கள் அறிந்துவிட
ஒருமேனி உனக்கேது உலகளந்த உத்தமனே !
உலகறியாப் பொருளேல்லாம் உன்மேனி அடங்கையிலே !
கீழ்வாயில் கற்பூரம் கண்திருஷ்டி கழிந்துவிடும்
கருவிழிகள் கருணையோ காலனையும் விரட்டிவிடும்
கருந்துளசி நெஞ்சினிலே காதலிலே கனிந்துவிடும்
கார்மேக வண்ணமென்றும் காந்தமென இழுத்துவிடும் !
மேலிருந்து பார்த்தாலோ முகமெல்லாம் பேரழகு
கீழிருந்து பார்த்தாலோ நிகரில்லாத தாளழகு
உடனின்று பார்த்தாலோ உனையன்றி ஏதழகு
உவமைக்குச் சொல்லிடவே உலகிலில்லை வேறழகு!