Blog

  • இசைக்கவியின் இதயம் (பிப்ரவரி 16, 2023)

    இசைக்கவியின் இதயம் (பிப்ரவரி 16, 2023)

    வணக்கம்.

    இசைக்கவியின் இதயம் இரண்டாவது நிகழ்ச்சி. என் நலம் விரும்பிகள், என் இனிய நண்பர்கள் வியாசர்பாடி திரு குருமூர்த்தி ஐயாவும், மதுரத்வனி திரு ராமகிருஷ்ணன் அவர்களும் இணைந்து வழங்குகிறார்கள்.

    கவிதையும் கானமும் என் உயிரின் இயல்புகள். கவிஞன் என்னும் இந்த அடையாளம் எனக்குத் தமிழ் தந்தது. என் பராசக்தி அந்தத் தமிழைத் தந்தாள்.

    என் கவிதைகளும், கானங்களும் மணமற்ற மலர்களாக இருந்தாலும், அவை அவளுடைய தோட்டத்து மலர்கள் என்பதில் எனக்கு மகிழ்ச்சி.

    பிப்ரவரி 16, வியாழன், மாலை 6.30க்கு, சென்னை மயிலாப்பூர் லஸ் முனைக்கு அருகிலுள்ள ஆர்கே கன்வென்ஷன் சென்டரில், என் கவிதைப் பொழிவு நடைபெறும்.

    சென்றமுறை வ.வே.சு.வின் வாழ்த்துரை. இந்த முறை இளம் கவிப்புயல் விவேக் பாரதி!

    வாருங்களேன்!

    வரவியலாதவர்கள், நேரலையில் பாருங்களேன்: https://youtube.com/live/ZgtKvOxh9HY

    அன்புடன்,
    ரமணன்

    Share
  • தேன்சிட்டின் மெல்லிய நாக்கு

    தேன்சிட்டின் மெல்லிய நாக்கு

    தேன்சிட்டின் இரு அலகுகளை மட்டுமே பார்த்திருந்தேன். தேன்சிட்டிற்கு ஒரு மெல்லிய நாக்கு இருக்கிறது. அது அலகை விட நீளமாக இருக்கும் என்பதை இப்போதுதான் கவனித்தேன். இந்தப் பதிவில் தேன்சிட்டின் சுறுசுறு அசைவுகளுக்கு நடுவே அந்த நாக்கை நீங்கள் காணலாம்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • வெண்கொக்கின் வித்தியாசமான வேட்டை

    வெண்கொக்கின் வித்தியாசமான வேட்டை

    சில திரைப்படங்களில் வில்லன் வித்தியாசமாக ஏதேனும் செய்துகொண்டே ஆளைப் போட்டுத் தள்ளுவார், பார்த்திருக்கிறீர்களா? அதே போன்ற ஒரு சம்பவம்.

    தாம்பரத்தில் வீட்டின் மொட்டை மாடியில் நின்றிருந்தேன். ஏதாவது நல்ல காட்சி சிக்குமா எனச் சுற்றிலும் பார்த்துக்கொண்டிருந்தேன். மதிலில் தனியே நின்றிருந்த ஒரு பெரிய வெண்கொக்கைப் படம் பிடிக்கத் தொடங்கினேன். முதலில் அது நடந்தது. பிறகு வித்தியாசமான நடனம் ஆடிக்கொண்டே சென்று இரையை லபக் எனப் பிடித்தது. இந்த அரிய காட்சியைத் தற்செயலாகப் படம் பிடித்தேன். அடுத்து என்ன நடக்கப் போகிறது எனத் தெரியாமலே இதைப் பதிவு செய்தேன். செம்மையான அந்தக் காட்சி இதோ.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • காதல்!

    காதல்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர் 
    மெல்பேண் … ஆஸ்திரேலியா

    காதல் இல்லா வாழ்க்கை
    களை இழந்த வாழ்க்கை
    காதல் இல்லா வாழ்க்கை
    கருத் திழந்த வாழ்க்கை 
    காதல் என்னும் நினைப்பு
    களிப்பு தரும் நாளும்
    காதல் என்னும் உணர்வு
    களிப் பளிக்கும் மருந்து   !

    மனித மனம் இணைய
    மருந் தாகும் காதல்
    மனித குணம் சிறக்க
    வழி வகுக்கும் காதல்
    மனித குலம் செழிக்க
    வழி சொல்லும் காதல்
    வைய வாழ்வு மலர
    வழித் துணையே காதல்  !

    இளமை வரும் காதல்
    முதுமை வரை வளரும்
    இல்ல மெலாம் ஒளிர
    ஏற்ற துணை காதல்
    அன்பு அறன் கருணை
    அளிப்ப தென்றும் காதல்
    அகில வாழ்வில் என்றும்
    அருங் கொடையே காதல்   !

    காதல் என்று சொன்னால்
    களிப்பு அங்கே பெருகும்
    காதல் என்று நினைத்தால்
    கல கலப்பு குவியும் 
    காதல் இல்லா வாழ்க்கை
    பாலை வனம் ஆகும்
    காதல் அது நிறைந்தால்
    வசந்தம் அங்கு வீசும்  ! 

    Share
  • (Peer Reviewed) உள்ளடக்கம் : யாத்வஷேம், ஆயிரம் சூரியப் பேரொளி

    (Peer Reviewed) உள்ளடக்கம் : யாத்வஷேம், ஆயிரம் சூரியப் பேரொளி

    முனைவர் செ.ர. கார்த்திக் குமரன்

    தொடக்கமாக

    சமகால நவீனத் தமிழ் இலக்கியப் படைப்புகளில், மொழிபெயர்ப்புப் பிரதிகளானது, தொடர்ந்து சில பதிப்பகங்களால் வெளிவந்து கொண்டிருப்பதால்தான் தேசியம் மற்றும் உலகளாவிய நாடுகளில் நிகழ்ந்த/நிகழ்கின்ற சமூகப் பொருளாதார அரசியல் நிலைகளை அறிந்துகொள்ளவும் முடிகின்றன. இதன்வழி, வாசிப்புத் தளத்தின் பரப்பானது விரிவடைவதுடன், பல்வேறு விதமான மாற்றங்களுக்கும் சிந்தனைகளுக்கும் நம்மை இட்டுச்செல்கின்றன. இதனால் பல புதிய எழுத்தாளர்கள் வாசகர்களுக்கு அறிமுகமாவதோடு, அவர்களின் நிலம் சார்ந்த பிற படைப்பாளர்களின் படைப்புகளையும் வாசிக்க வேண்டிய தேவையையும் தூண்டுதலையும் ஏற்படுத்தி விடுகின்றன. தமிழில் எழுதப்படுகிற ஆழ்ந்த, மிகநுட்பமான கருத்தாக்கங்களை உள்ளடக்கங்களாகக் கொண்ட தரமிகு படைப்புகளை வாசிக்க நேரிடும்போது, அதன் உருவம், சூழல், இடம், காலம் போன்ற இலக்கண வரையறைகளை(புனைகதை) மீறியும் பாதிப்பினை உண்டாக்கியும் தனக்கான தனித்த இடத்தினை அப்பிரதி பெற்றுவிடுகிறது. இதேபோல மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய பிற மொழிகளிலுள்ள இலக்கியத் தரமான படைப்புகளைத் தேடி வாசிக்கவும் வழிவகுக்கிறது. மேலும், அந்தியமொழி சார்ந்த படைப்புகளும் தமிழில் வெளிவருவதன் பொருட்டு, அப்பிரதிகளையும் வாசிக்க வேண்டும் என்ற எண்ணமும் இயல்பாகவே தோன்றிவிடுகின்றன.

    தமிழ்ப் புனைகதைப் படைப்புத் தளத்தில் பெரும்பங்காற்றிய படைப்பாளர்கள் பலர் இருப்பினும் அவர்களில் குறிப்பிட்டத்தக்கவர்களே தங்களின் படைப்புகளினூடாக மாற்று கருத்தாக்கத்தினை புதியதொரு நடையில் எழுத்துருவாக்கியுள்ளனர். இத்தன்மையானது பிராந்திய மற்றும் அந்திய மொழிகளிலுமே தங்களின் படைப்புகளின் ஊடாகக் காணமுடிகின்றன. இப்படிப்பட்ட பிரதிகள் காலந்தோறும் ஒரு சில படைப்பாளர்களால் படைக்கப்பட்டு, அது உலகம் தழுவிய அளவில் கவனமும் அதற்கான அங்கீகாரமும் விருதுகளும் கிடைக்கப்பெறுகின்றன. இந்தியாவில் ஞானபீடம், சாகித்தி்ய அகாதெமியும் உலகயளவில் நோபல், புக்கர் போன்ற பரிசுகளும் படைப்புத் தடத்தில் இயங்கும் எழுத்தாளர்களுக்கு கிடைக்கும் ஒரு கௌரவமாகவும் பொருளாதார ரீதியில் அவர்களின் எழுத்துலக வாழ்க்கைக்கு சிறந்ததொரு பயனையும் தரவல்லதாக இருக்கின்றது. இத்துடன், இலக்கியம் குறித்த கவனத்தை, பொதுமக்களிடையேயும் கல்விசார் மக்களிடையேயும் ஏற்படச் செய்து, மற்ற படைப்பாளர்களை ஊக்குவிக்கவும் செய்கின்றது. இதனால், இப்படைப்புகள் மட்டுமே சிறந்தது என்று எண்ணுதலால் பயன்தராது. இப்பிரதிகளைப்போலவே அல்லது இதற்கும் மேம்பட்ட படைப்புகளைத் தேடியடைந்து வாசிக்கும் போதுதான் இலக்கியத் தரம் பற்றிய புரிதலை அறியமுடியும்.

    காலமாற்றித்திற்கேற்ற வகையில் இப்புனைகதை வடிவங்களும் மாற்றம்பெற்றே வந்துள்ளன என்பதை வாசிப்பினூடே உணர்ந்துகொள்ள முடியும். எனினும் கடந்தகாலத்தில் நிகழ்ந்த வரலாறுகளை, தற்காலச் சூழலோடு பொருத்திப் பார்க்கும் விதமாகவும் நிகழ்கால அரசியலின் தன்மைகளையும் அதன் தீவிரத்தினையும் எடுத்துரைக்கும் நடையிலும் படைப்புகள் படைக்கப்படுகின்றன. அந்தவகையில், கன்னட மொழிப் படைப்பான நேமிச்சந்த்ராவின் ‘யாத்வஷேம்’(yaad vashem) என்ற பிரதியும் ஆப்கான் எழுத்தாளரான காலித் ஹூசைனியின் ‘ஆயிரம் சூரியப் பேரொளி’(A Thousand Splendid Sons) ஆகிய இரு மொழிபெயர்ப்புப் படைப்புகளின் தனித்தன்மையை ஆராயும் நோக்கில் இக்கட்டுரை அமையப்பெற்றுள்ளன. தங்களின் அரசியல் ஆளுகைக்கு கீழ் நிகழ்த்தப்படுகின்ற வன்முறைகளையும் அதனால் அந்நிலப்பகுதிசார் மக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளை உள்ளடக்கங்களாகக் கொண்ட இவ்விரு படைப்புகளின் வழி காணலாகிறது. மேலும், இது சமகால பன்னாட்டு அரசியல் சார்ந்த செயல்பாடுகளின் நோக்கங்களையும் இதனால் இந்திய அரசியல் சூழலில் ஏற்படுகின்ற மாற்றங்களை அறிவதற்கும் இப்புனைவுகளை ஆராய்வது அவசியமாகின்றன.

    யாத்வஷேம் : நேமிச்சந்த்ரா

    கர்நாடக சாகித்ய அகாதமி விருதுபெற்ற ‘யாத்வஷேம்’ நேமிச்சந்த்ரா என்ற பெண் எழுத்தாளரால் படைக்கப்பட்டுள்ளது. இவருடைய ‘ஒளிக்கொரு கிரணம் மேரிக்யூரி’, ‘பெருவின் புனித பள்ளதாக்கில்’ ஆகிய நூல்களும் இந்த விருதினைப் பெற்றுள்ளது. பொறியியலாளரான இவர், இந்துஸ்தான் ஏரோனாடிகல் லிமிடெட், பெங்களூரில் டிசைன் எஞ்சினீயராகவும், ஜெனரல் மேனஜராகவும் பணியாற்றியவர். இலக்கியம், அறிவியல், பெண்களைப் பற்றிய ஆய்வு, பயணம் ஆகியவற்றில் முக்கிய விருப்பங்கள் கொண்ட இவர், முப்பது நூல்களை கன்னடத்தில் எழுதியுள்ளார். ‘தான சிந்தாமணி அத்திமப்பே’ விருது, ‘சிவராமகாரந்த’ விருது, ‘மாஸ்தி வெங்கடேச ஐய்யங்கார்’ விருது, ‘கிருஷ்ணானந்த காமத்’ விருது என இலக்கியத்திற்காக பல விருதுகளைப் பெற்றவர். இத்துடன், ‘சொசைட்டி ஆஃப் இண்டியன் ஏரோஸ்பேஸ் டெக்னாலஜி அண்ட் இண்டஸ்ட்ரீஸ்’ அளித்த ‘விமன் அச்சிவர் இன் ஏரோஸ்பேஸ்’ விருதும் கிடைத்துள்ளது.

    கே. நல்லதம்பி என்பவரால் இந்நாவலானது, தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு அக்டோபர் 2020இல் எதிர் வெளியீடாக வந்துள்ளதோடு, 2022ஆம் ஆண்டின் சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாதெமி விருதும் கிடைக்கப்பெற்றுள்ளது. உலகம் முழுமைக்கும் தன் ஆளுகைக்குள் கொண்டு வர நினைத்த ஜெர்மனியின் அதிபரான ஹிட்லர் பற்றிய வரலாற்றினை இப்பிரதி எடுத்துரைக்கிறது. ஜெர்மனியின் தலைநகரான பெர்லினில் வசித்துவரும் ஒரு யூத குடும்பம் ஹிட்லரின் ஆட்சியினால் அம்மண்ணிலிருந்து புலம்பெயர்ந்து காந்தியின் மண்ணிற்கு(பம்பாய்) வந்த குட்டி யூதச் சிறுமியின்(ஹ்யானா-அனிதா) கதைதான் யாத்வஷேம். யூதர்களின் உலகை திறந்துகாட்டும் விதமாக பன்னிரண்டு ஆண்டுகால உழைப்பின் உருவானது. ஜெர்மனி, நியூயார்க், இஸ்ரேல் ஆகிய நாடுகளில், ஹிட்லரால் வதைமுகாம்களில் கொல்லப்பட்ட யூதர்களின் பெயர்ப்பட்டியலோடு கூடிய அருங்காட்சியங்கள் பற்றிய தகவல்களையும் இன்னபிறவற்றையும் அகற்றமுடியாத வலியோடு இப்பிரதி புலப்படுத்தியுள்ளன.

    ஹிட்லர் தனது ஆட்சி அதிகாரத்தினூடாக அறிவியலாளர்கள், விஞ்ஞானிகள், பொறியியல் வல்லுனர்கள், மருத்துவர்கள் ஆகியவர்களின் துணைகொண்டு, ஆஷ்விட்ச் மற்றும் ஆர்ம்ஸ்டர்டாம் என்ற இரு வதைமுகாம்களை உருவாக்கினார். இதன் வழி யூதர்களை (ஆறு மில்லியன்) பேரழிவிற்குள்ளாக்கி, உலகிலுள்ள ஒட்டுமொத்த மனிதசமூகத்திற்கும் அச்சத்தை விளைவித்ததோடு, உலகையே தன்வசப்படுத்த நினைத்தார்.  அதனால் அன்று பற்றி எரிந்தது ஜெர்மனி; நின்று பார்த்தது உலகம். ஐரோப்பிய நாடுகளில் உருவாக்கப்பட்ட (மக்களின்) தேசிய அடையாள அட்டையின் தரவுகளால்தான் யூதர் என்ற இனமே தம்சொந்த மண்ணில் வாழமுடியாமல், பல்வேறு நாடுகளுக்குச் சென்று வாழநேர்ந்தது. இப்பிரதியும் ஒரு குடும்பத்தின் சீர்குலைவையும் அதில் உயிரோடிருக்கும் பெண்ணின் நினைவுத்தடமும் தேடலுமே இதன் உருவம்.

    பல சாதி, சமய, இனங்களையும் பன்முகப்பட்ட கலாச்சாரங்களையும் கொண்ட இந்தியாவில் பம்பாய்க்கு வரும் ஹ்யானா என்ற அனிதாவும் அவளுடைய தந்தையாரும் இங்கு காணநேரும் ஓர்மையுள்ள வாழ்வியலையும் தன்னுடைய நாட்டிற்குமான நிலையையும் ஒப்பிட்டுப் பார்க்கின்றனர். இத்துடன், அவர்கள் நம்பவேமுடியாத அளவிற்கு, ஆயிரம் சாதிகளுக்கு நடுவிலும் வாழக்கூடிய இந்தியாவின் ரகசியத்தை இம்மண்ணிலுள்ள குடும்பங்களின் வழி  கண்டுணர்கின்றனர். தன்னுடைய தந்தை, தாய், அக்கா(ரெபேக்கா), குட்டிதம்பி(ஐசாக்) ஆகியோருடன் ஹ்யானா இன்பமான வாழ்வியலை மேற்கொண்டார். 1933இல் ஹிட்லர் ஆட்சிக்கு வந்த பிற்பாடு, தன் குடும்பமே சிதைவுறுகிறது. தந்தையும் ஹ்யானாவும் தப்பித்து, நாட்டை விட்டு வெளியேற, மற்ற மூவரும் நாஜி காவலர்களால் கைது செய்யப்படுகிறார்கள். அவர்களின் நிலையை அறியவேண்டும் என்ற எண்ணம் ஹ்யானாவிற்குள் சதாகாலமும் எழுகிறது. அவள் விவேக்கை திருமணம் செய்து கொள்கிறாள். விசு என்ற ஆண் குழந்தையை பெற்றெடுக்கிறாள்.

    தன் சொந்த மண்ணை விட்டு வந்து, ஏறத்தாழ 55வருடங்களை கடந்த பின்னும் தன் குடும்ப நபர்களைத் தேடி ஆர்ம்ஸ்டர்டாம், டகாவ், நியூயார்க், வாஷிங்டன் டி.சி., டெல் அவிவ், ஜெரூசலம் ஆகிய நகரங்களுக்குச் செல்கிறாள். இதன்வழி அவள் அடைந்த உணர்வுகளையும் அத்தேடலினூடாக ரெபேக்காவை கண்டைந்ததையும் இப்பிரதி விவரிக்கிறது. இத்துடன், நாஜி ஹிட்லர் வதைமுகாம்களிலும் ஜெர்மனியில் உள்ள மக்களின் மீதும் செய்த கொடூரத்தினை, அவலங்களை ரெபேக்காவின் வழி உலகிற்கு எடுத்துரைத்துள்ளார் நேமிச்சந்த்ரா.

    “மனது எங்கோ ஓடியது. யார் மீதமிருக்கலாம், என் வம்சத்தில், அப்பாவின் இரண்டு அண்ணன்கள், ஒரு தங்கை, அம்மாவின் மூன்று தம்பிகள், அம்மா, அக்கா, சின்னத் தம்பி – என் இரத்தத்தைப் பகிர்ந்துகொண்ட யார் மீதமிருக்கலாம்? உயிருடன் இருப்பார்களா? தேடலாமா? என் வாழ்க்கையில் என்றாவது ஐரோப்பாவிற்குப் போவேனா. ஒவ்வொரு  கதவாகத் தட்டி இமா இருக்கியா? ரெபேக்கா எங்கே இருக்கே? ஐசாக், என் குட்டிக் கண்ணா எங்கே இருக்க? தேடமுடியுமா. என்றாவது தெரியவருமா, என்னவர்கள் என்ன ஆனார்கள் என்று, என் வம்சத்திக் கதை? என் பிள்ளைகளுக்கு, பேரக்குழந்தைகளுக்கு என் அத்தையைப் போலவே நானும் என் வம்சத்தின் கதைகளைச் சொல்லமுடியுமா?

    என்னவென்று சொல்வேன், பெர்லின் பால்யத்தின் இனிமையான நினைவுகளை இரத்தம் பொதிந்த இரவுகள் துரத்திக்கொண்டு வருகின்றன.”1 என்ற பதற்றமான, மனதிலிருந்து ஆறாத வலியுடன்கூடிய வாழ்வையே யூதர்கள் பெற்றுள்ளதை இது வெளிப்படுத்தியுள்ளது. சர்வதிகாரியின் ஆட்சியில் ஆயிரம் ஆயிரம் யூதர்கள், தங்களின் பூர்விகத்தை விட்டு, அவரச, அவசியமாக வெளியேறி, உயிரைத் தற்காத்துக்கொள்ள வேண்டியிருந்தது. இதற்கெதிராக யாரும் செயல்பட முடியாத சூழலையும் நாஜிகள் ஏற்படுத்தியிருந்தனர்.

    “அறுபது லட்சம் யூதர்களையும், கணக்கில்லாத கம்யூனிஸ்ட்களையும், உடல் ஊனமுற்றோரையும் கொடூரமாகக் கொன்று குவித்த போதிலும், நாஜி ஜெர்மனியில் ஹிட்லருக்கு எதிரான குரல் கேட்கவில்லை விவேக். மக்கள் வீதியில் இறங்கி மற்றொரு கூட்டத்து மக்களின் மீது நடக்கும் மனிதத்தன்மையற்ற சுரண்டலை எதிர்க்கவில்லை. வரலாற்றின் இரத்தம் தோய்ந்த பக்கங்கள் அன்றே முடிந்துவிட்டன என்று எனக்குத் தோன்றவில்லை விவேக். இது ஒரு ஹிட்லரின் மதி இழந்த நீதியால் நடந்த வரலாற்றுச் சோகச் சம்பவம் அல்ல. நன்கு யோசித்துத் திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலைகள் அவை…”2 என்கின்ற தன்மையில் ஹிட்லர், தான் ஆட்சி அதிகாரத்துக்கு வந்தவுடன் செய்த கொடூரங்களானவை, முன்கூட்டியே தீர்மானித்துவிட்டு, அதை நடைமுறைப்படுத்தியதே. 1935இல் ஹிட்லரின் நியூரெம்பர்க் சட்டமானது,  முக்கியமாக யூதர்களுக்கு எதிராக உருவாக்கப்பட்டது. யூதர்களின் நாகரிகம், சமுதாய, உத்தியோக உரிமைகளை முடக்குவதற்காகக் கொண்டுவரப்பட்ட சட்டம் அது. ஆரியர்கள் அல்லாத இனத்தவருக்கு அது அச்சுறுத்தலாக இருந்தது. அச்சட்டம் பலருக்கு வரும் துன்பவெள்ளத்திற்கான  முன் அறிவிப்பை தந்தது. இதனால், யூதர்கள் ஜெர்மனியை விட்டு வெளியேறும் வழிகளைத் தேடிக்கொண்டிருந்தார்கள். பல தலைமுறைகளாக வேர்விட்டு வளர்ந்த யூதர்களின் நிலத்தை திருடி, அவர்களை வேரோடு பெயர்த்துவிடும் பயங்கரத் திட்டமாக இருந்தது. இதன் விளைவே பின்னாட்களில் வதைமுகாம்களை உருவாக்கி, பல்லாயிரக்கணக்கான மக்களை கொன்று குவித்தார் என்பதை வேதனையுடன் அறியமுடிகிறது.

    தான் விரும்பியது எதையும் சாதிக்கமுடியாத சிறுவன் ஆடோல்ஃப். பள்ளியில் தேறாத, திருமணம் ஆகாதவர்களுக்குப் பிறந்தவன். தோல்வியின் யதார்த்தில் துவண்ட அவன் மனது, சகிப்பின்மை, கோபம், வெறுப்புக்களை மட்டுமே கொண்டு வளர்ந்துள்ளான். இதனால்தான் மரணமுகாம்களை எழுப்பி, தமக்குள் இருக்கும் இருள் நிறைந்த இரகசிய பாகத்தின் வழி, மற்றொருவரின் சாவை இத்தனை அமைதியாகச் செய்தான் போலும். எனினும் ஹிட்லர் மனித வரலாற்றில் தன்னந்தனியாக தோன்றியவன் இல்லை. மனித வாழ்க்கையில், பன்முகப்பட்ட எதிர்பாராக் கொடூரங்களைச் செய்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன என்பதற்கு ஒரு உதாரணம்தான் ஆடோல்ஃப் ஹிட்லர். இக்குணம் சமகாலத்தில் வாழும் மக்களின் உள்ளுணர்வுகளிலும் அதிகாரம் செய்வோரிடத்தும் மறைமுகமான தன்மையில் இருந்துகொண்டேதான் உள்ளன என்பதனையும் நேமிச்சந்த்ரா இப்படைப்பினூடாக எடுத்தியம்புகிறார்.

    ஆயிரம் சூரியப் பேரொளி : காலித் ஹூசைனி

    ஆப்கானிஸ்தான் எழுத்தாளரான காலித் ஹூசைனி எழுதிய நாவல்தான் ஆயிரம் சூரியப் பேரொளி(A Thousand Splendid Sons). தமிழில் ஷஜிதா என்பவரால் மொழிபெயர்க்கப்பட்டு, ஜனவரி 2020இல் (எதிர் வெளியீடு) இந்நாவல் வெளிவந்தது. 1965இல் காபூலில் பிறந்த காலித் ஹூசைனி, 1978இல் அங்கு உருவான மக்கட் புரட்சியைத் தொடர்ந்து நிகழ்ந்த ரஷ்யர்களின் ஊடுருவலுக்குப் பிறகு 1980இல் அவருடைய குடும்பத்தினர் அங்கிருந்து புலம்பெயர்ந்து அமெரிக்காவில் தஞ்சமடைந்தனர். 32 வருடங்களாக உலக அளவில் அதிகமான அகதிகளை உண்டாக்கும் நாடாக, ஆப்கானிஸ்தான் அறியப்பட்டிருக்கிறது. 2006இல், அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் முகமைக்கு அமெரிக்காவின் நல்லிணக்கத் தூதுவராக அவர் நியமிக்கப்பட்டார்.  தன்னுடைய தாய்நாட்டிற்காகத் தொடர்ந்து குரல் எழுப்பவும் எழுத்துப்பணியில் தீவிரமாக ஈடுபடவும் தாயகம் திரும்பும் மக்களுக்கு அடிப்படை வசதிகளைச் செய்து தரவும் தன் மருத்துவப்பணியையே கைவிட்டிருக்கிறார்.

    ஆப்கானில் தொடர்ச்சியான அந்தியப் படையெடுப்புகள், ஆட்சிக் கவிழ்ப்புகள் ஆகியவற்றால் அலைவுகளுக்குட்பட்ட நாட்டில் பல நூற்றாண்டுகளாக இரண்டாம்தரக் குடிமக்களாகவே நடத்தப்பட்டு வந்திருந்த அந்நாட்டின் பெண்களுக்கு, முஜாஹிதீன்கள் மற்றும் தாலிபன்கள் மதத்தின் பெயரால் நிகழ்த்திய வன்முறைகளைப் பதிவுசெய்யும் விதமாகவே இந்நாவல் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதற்கு முன் வெளிவந்த ‘பட்ட விரட்டி’ (The Kite Runner) என்ற நாவலும் ஆப்கானில் நிகழ்ந்த கொடூரங்களையும், இனவெறி, மதவெறி மற்றும் ஆதிக்கவுணர்வினால் ஏற்படும் சிக்கல்களையும் அமீர், ஹசன் என்ற இரு கதாபாத்திரங்களின் ஊடாக எழுத்துருவாக்கியுள்ளார். இத்துடன், ஆப்கானிஸ்தானின் முடியரசின் வீழ்ச்சி, சோவியத் படையெடுப்பு, பாகிஸ்தானுக்கும் அமெரிக்காவுக்குமான மக்கள் வெளியேற்றம் மற்றும் தாலிபன் ஆட்சியின் காலகட்டங்களை புலப்படுத்தும் விதமாக இக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. இவருடைய நாவல்கள் உலகெங்கிலும் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, கோடிக்களுக்கு மேல் விற்பனையாகியும் சிறந்த கதைசொல்லியாகவும் திகழ்கிறார். உலகில் உள்ள சிறந்த பத்திரிக்கைகள் இவருடைய கதை சொல்லும் திறனையும் நடை மற்றும் பாணியையும் நாவலுக்கான எல்லா நுணுக்களையும் தன் எழுத்தில் கொண்டிருப்பதாக கருத்துரைக்கின்றனர்.

    மரியம் மற்றும் லைலா என்ற இரு பெண் கதாபாத்திரங்களின் வழி தாலிபன்களின் கொடுங்கோலாட்சியில் பெண்கள் அனுபவித்த அல்லல்களை, நீக்கவொண்ணா துயரங்களை உலகிற்கு தன் ஆற்றல்மிக்க எழுத்தினால் வெளிப்படுத்தியுள்ளார். ஹெராத்திலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள குல்-தமானில் மரியம் ஹராமில்(முறைகேடாகப் பிறந்தவர்) பிறந்தவள். ஹெராத்தில் செல்வசெழிப்புடன் வசிக்கும் ஜலீல் தான் அவளுடைய தந்தை. மரியத்தை நாணா பிரசவித்த 1959இல் வசந்தத்தின் ஈரப்பதமான மழைநாளில், ராஜா ஜாஹிர் ஷாவின் மகாமோசமான 40 ஆண்டுகால ஆட்சியின் 26 ஆவது வருடத்தில் நிகழ்ந்தது. வலிப்புநோயின் காரணமாக நாணா இறந்துவிட மரியத்தை தன் வீட்டிற்கு அழைத்துச் செல்கிறார் ஜலீல். இதனைப் பொறுத்துகொள்ள முடியாத கதீஜா(ஜலீலின் முதல் மனைவி) மற்றும் அவருடைய குடும்பத்தினர் 15 வயதான மரியாவுக்கு, 45 வயதிலிருக்கும் ரஷீதை திருமணம் செய்வித்து, காபூலுக்கு அனுப்பப்படுகிறாள்.

    லைலா தன் பெற்றோர்களான ஹக்கீம், ஃபர்பீனுடனும் சகோதரர்களான அஹமத், நூருடன் காபூலில் வாழ்ந்து வருகிறாள். இராணுவத்தில் சேர்ந்த அவளுடைய சகோதரர்கள் போரில் இறந்துவிட, அதன் காரணமாக பெஷாவருக்கு செல்ல நினைக்கின்றனர். பயணத்திற்கு தயாராகும் நிலையில்,

    “லைலா புத்தகங்களைத் தன் பாதங்களின் கீழே போட்டாள். கண்களின் மீது ஒரு கையால் அரண் அமைத்தாள். மேலே நிமிர்ந்து வானத்தைப் பார்த்தாள்.

    பிறகு, ஒரு ராட்சத உறுமல் கேட்டது.

    அவளுக்குப் பின்னால், வெண்ணொளிச் சிதறல் ஒன்று எழுந்தது.

    அவளுடைய பாதங்களுக்குக் கீழே பூமி நழுவியது.

    சூடான, சக்திமிக்க எதுவோ ஒன்று, பின்னாலிருந்து பாய்ந்து அவளுக்குள் மோதியது. அவளுடைய செருப்புக்களை, அவளுடைய பாதங்களில் இருந்து அது உதறச்செய்தது. அவளை உயரே தூக்கியது. இதோ அவள் பறக்கிறாள், விண்ணில் சுற்றிச் சுழல்கிறாள், வானத்தைப் பார்க்கிறாள், பிறகு பூமியை, வானத்தை, பிறகு பூமியை. எரிந்துகொண்டிருந்த மரத்துண்டு ஒன்று அவளை உராய்ந்துகொண்டு பறந்தது. ஆயிரக்கணக்கான கண்ணாடிச்சில்லுகளும் அப்படியே பறந்ததில் அவளைச் சுற்றிப்பறந்த ஒவ்வொரு தனிச் சில்லையும் லைலா பார்த்தாள். மெல்லச் சுழன்று பறந்த அவற்றின் மீது சூரிய ஒளி பாய்ந்தது. சிறிய அழகான வானவில்கள் ஒளிர்ந்தன.

    பிறகு, லைலா சுவரில் மோதினாள், நொறுங்கித்தரையில் வீழ்ந்தாள், அவளுடைய முகத்திலும், கைகளிலும், மண்ணும், கண்ணாடிச்சில்லும், கற்களும் குவித்தன. கடைசியாக அவள் உணர்ந்தது அவளுக்கு அருகில், மண்ணில், சப்தத்துடன் ஏதோ விழுந்ததை. ரத்தக்களரியான ஏதோ ஒன்று. அதன் மீது, சிவப்பு பாலத்தின் முனை, கனத்த பனிக்குள்ளிருந்து எட்டிப்பார்த்தது தெரிந்தது.

    அவளைச்சுற்றி உருவங்கள் நகர்ந்தன. மேற்கூரையிலிருந்து மஞ்சள் விளக்கொன்று எரிகிறது. ஒரு பெண்ணின் முகம் தோன்றுகிறது. அவளிடம் குனிகிறது.

    லைலா மீண்டும் இருளுக்குள் கரைந்தாள்.”3  திடீரென நிகழ்ந்த ஏவுகணை தாக்குதலினால், தன் பெற்றோர்கள் இறக்க, மரணத்தின் விளிம்பிலிருந்து தப்பித்து, மரியத்திடம் உதவியைப் பெறுகிறாள். ரஷீத் அவளிடம் உறவுகொண்டு, அஸீஸைப் பெற்றெடுக்கிறாள். பிறகு, அவனின் நடவடிக்கைகள் பிடிக்காமல், இருவரும் பெஷாவருக்கு செல்ல திட்டமிடுகிறார்கள். அதனால் அவர்களுக்கு நிகழும் பிரச்சினைகளையும் தாலிபன்களால் ஆப்கானில் பெண்களுக்கு ஏற்படும் சிக்கல்களையும் சொல்வதாக கதை நகர்கிறது.

    ஆப்கானிஸ்தான் நிலத்தில் துப்பாக்கி குண்டுகள், ஏவுகணைத் தாக்குதல்கள், ரஷ்ய இராணுவம், தாலிபன்கள், அமெரிக்கா துருப்புகள் மற்றும் CIA, அரசு நடவடிக்கைகள், அரசியல் பூசல்கள், அல்கொய்தா போன்றவற்றால் மக்களின் இயல்பு வாழ்க்கையே(நொடிக்குநொடி) பெரும் இன்னல்களுக்கும் நெருக்கடிகளுக்கும் சிக்கல்களுக்கும் ஆளாவதை இப்பிரதி முழுமைக்கும் காலித் பதிவுசெய்துள்ளார். 1959ஆம் ஆண்டிலிருந்து 2011 வரை ஏறத்தாழ 52 வருடங்களில் ஆப்கானிய மண்ணில் நிகழ்ந்த அரசியல் வரலாற்றினை உலகிற்கு எடுத்துரைத்துள்ளார். இத்துடன், இந்நிலத்தை தங்களுக்கு ஏதுவான முறையில் பயன்படுத்திக்கொண்ட வல்லரசு நாடுகளின் சூழ்ச்சியினையும் இதனால் தங்கள் நாட்டிற்குள் நிகழ்ந்த வன்முறைகளை, இழப்புகளை (World Trade Center, New York, The Pentagon – Sep 11, 2011)  இந்நாவலினூடாக அறியநேர்கிறது.

    “ஏப்ரல் 27 அன்று மரியத்தின் கேள்விக்கு, பலத்த வெடிச்சதப்தமும், திடீரென்றெழுந்த கடுமையான முழங்கோசைகளும் பதிலாக வந்தன. வெறுங்கால்களோடு வரவேற்பறைக்கு ஓடியவள், ஏற்கனவே அங்கே கலைந்த தலையும், பனியனுமாக, சன்னல் கண்ணாடியில் உள்ளங்கைகளைப் பதித்துக்கொண்டு ரஷீத் நின்றிருப்பதைக் கண்டாள். அவனுக்கு அடுத்திருந்த சன்னலுக்கு அவள் ஓடினாள். வானத்தில் ராணுவ விமானங்கள் வடக்கு நோக்கியும் கிழக்குப்புறமாகவும் சீறிக்கொண்டு பறப்பதைப் பார்த்தாள். செவிடாக்கக்கூடிய அவற்றின் அலறல் அவளுடைய காதுகளை நோகச் செய்தது. தொலைதூரத்தில் பலத்த வெடியோசைகள் எதிரொலிக்க, திடீர் புகை மண்டலங்கள் கிளம்பி விண்ணுக்கு உயர்ந்தன.

    “என்ன நடக்கிறது ரஷீத்? என்ன இது?” அவள் கேட்டாள்.

    “இறைவனுக்குத்தான் தெரியும்.” அவன் முணுமுணுத்தான்.”4 யாரும் எதிர்பாராத சமயத்தில் நிகழும் ஏவுகணை தாக்குதல்களாலும் குண்டுவெடிப்புகளாலும் உயிர்கள் பலியாவதும் உடல் பாகங்கள் சேதமடைந்து ஊனமாவதும் தொடர்ந்து ஏற்படுகின்றன. தங்களுடைய வாழ்வே எவ்வித பிடிமானம் அற்று, எந்நேரமும் பதைபதைப்புடன்கூடிய சூழ்நிலை இருப்பதால்தான், அம்மக்கள் பெஷாவர், ஈரான், கனடா, அமெரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகளுக்கு புலம்பெயர்கின்றனர். பாகிஸ்தானில் மட்டும் ஏறத்தாழ 2 மில்லியன் ஆப்கானிய மக்கள் அகதிகளான வந்துள்ளதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர். மனிதனுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் கூடக் கிடைக்கப்பெறாமல், ஒரு பகுதி மக்கள் நாடோடிகளாக இருக்கும் நிலையில், உலகத்திலுள்ள பிறர் சகலவிதமான வசதி வாய்ப்புகளைப் பெறுகின்றனர். இதனை உலகம் தழுவிய பிரச்சினையாக அல்லாமல் தங்கள் தங்கள் நாடுகளுக்குரிய அரசியல் சார்ந்த பிரச்சினையாகவே பார்க்கப்படுகிறது. இதன் விளைவே தீவிரவாதம் உருவாவதற்கு ஒரு முக்கியக் காரணியாக அமைந்துவிடுகிறது.

    “சோவியத் யூனியன், திகைப்பூட்டும் விதத்தில் படுவேகமாக நொறுங்கியது. சில வாரங்களுக்கொருமுறை, முறையே, லித்துவேனியா, எஸ்டோனியா, உக்ரைன் போன்ற குடியரசுகளுக்குச் சுதந்திரம் வழங்கப்பட்ட, பாபி வீடு திரும்பும் போதெல்லாம் இப்படியான செய்திகளோட வருவதாக லைலா நினைத்தாள். க்ரெம்ளினின் மீது சோவியத்தின் கொடி தாழப்பறந்தது. ரஷ்யக் குடியரசு பிறந்தது. … 1978 இலிருந்து 1992 வரை பெண்கள் அனுபவித்துவந்த சுதந்திரமும் வாய்ப்புகளும் இப்போது மறந்துபோன விஷயங்களாகிவிட்டன. ஆஃப்கானிஸ்தானின் பெண்களுக்கு  இது ஒரு நல்ல காலம் லைலா என்று பாபி சொன்னது அவளுக்கு நினைவு வந்தது. 1992 ஏப்ரலில், முஜாஹிதீன்களின் கைகளுக்கு ஆட்சி மாறியது முதல், ஆஃப்கானிஸ்தான், ஆஃப்கானிஸ்தான் இஸ்லாமியக் குடியரசு என்று வழங்கப்பட்டது. … அவர்கள் கம்யூனிஸ்ட் ஆட்சிக்காலத்தின் விதிமுறைகளையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு, பெண்களை, முழுவதுமாக மூடிக்கொள்ளச் சொல்லும், உறவினரான ஒரு ஆணின் துணையில்லாமல் அவர்கள் பயணம் செய்வதைத் தடுக்கும், முறையற்ற தொடர்புகளுக்கு கல்லால் அடித்துக்கொலை செய்யும் தண்டனையை அளிக்கும், ஷரியத் மற்றும் கண்டிப்பான இஸ்லாமியச் சட்டங்களை இயற்றத்துவங்கினார்கள்.”5 உலக வல்லரசுகள் செய்த சூழ்ச்சியால், சோவியத் யூனியன் 1992இல் நொறுங்கியது. அதனைச் சார்ந்த பிற நாடுகள் சோவியத்துடனான தொடர்பை இழந்தன. இவ்வல்லரசுகளை எதிர்க்கும் விதமாகவும் தன்னுடான நாட்டை இணைக்க முயற்சிக்கும் போக்கிலேயே இன்றைய உக்ரைனூடான போரை ரஷ்யா தொடுத்துள்ளது எனலாம்.

    ஆஃப்கானில் பெண்களுக்கு முழுசுதந்திரம் கிடைக்கப்பெற்றுள்ளது. உயர்கல்வி வரையிலும் அவர்களுக்கு இலவச கல்வி வழங்கப்பட்டிருக்கிறது. பெண்கள் பல்கலைக்கழகங்களில் பேராசிரியர்களாகவும் மருத்துவர்களாகவும் பணிபுரிந்தார்கள். இதனைத்தான் காலித் ஹூசைனி தன் எழுத்துகளில் பதிவுசெய்கிறார். ஆனால், தற்போது(30.12.2022-பிபிசி) பெண்கள் கல்விகற்கும் உயர்கல்வி நிறுவனங்களில், தாலிபன்கள் உட்புகுந்து, கல்விகற்பதற்குத் தடையை ஏற்படுத்தியுள்ளனர். இவ்வாறு, உலகெங்கிலும் படைக்கப்படும் புனைகதை எழுத்துகளூடாக கடந்தகால மற்றும் சமகால பிரச்சினைகளை அறிந்துகொள்ள முடிகின்றன.

    இப்போது தொலைக்காட்சி பிபிசி அலைவரிசைக்கு மாற்றப்பட்டுள்ளது. திரையில் ஒரு கட்டிடம், ஒரு கோபுரம் தெரிகிறது, அதன் உச்சி மாடிகளிலிருந்து புகை அலைபோல் எழுகிறது. தாரிக் சயீதிடம் ஏதோ சொல்ல, சயீத் பதில் சொல்லிக்கொண்டிருக்கும் போதே திரையின் மூலையிலிருந்து ஒரு விமானம் தோன்றுகிறது. அடுத்திருக்கும் கோபுரத்தில் அது மோதி, லைலா அதுவரை பார்த்திருந்த அத்தனை நெருப்புப்பந்துகளையும் ஒன்றுமில்லாமல் செய்யும் நெருப்புக்குழம்பாக அது வெடிக்கிறது. …

    இரண்டு மணி நேரங்களுக்குள்ளாக இரண்டு கோபுரங்களுமே சிதிலமாயின.

    சிறிது நேரத்திலேயே எல்லாத் தொலைக்காட்சி நிலையங்களும் ஆஃப்கானிஸ்தானைப் பற்றியும், தாலிபானைப் பற்றியும், ஓசாமா பின் லேடனைப் பற்றியும் பேசலாயின.

    “பின் லேடனைப் பற்றி தாலிபன் சொன்னதைக் கேட்டாயா?” தாரிக் கேட்கிறான். …

    “கேட்டேன்” என்கிறாள்.

    பின் லேடன் ஆஃப்கானிஸ்தானில் அடைக்கலமாகியிருக்கும் ஒரு மெஹ்மான், விருந்தினன் என்றும் பாஷ்டூன்களின் சம்பிரதாயப்படி விருந்தினர்களைக் கைவிடக்கூடாதென்றும் தாலிபான் அநிவித்திருக்கிறார்கள்.”6 கடந்த 2011ஆம் ஆண்டில் அமெரிக்காவில் நிகழ்ந்த தீவிரவாதத் தாக்குதல் குறித்த பதிவும் அதற்கு சார்பாகச் செயல்பட்ட தாலிபன்களின் நிலையையும் இங்கு எடுத்தாளப்பட்டுள்ளது. உலகநாடுகளில் நிகழ்த்தப்படுகிற கொடூரமானத் தீவிரவாதத் தாக்குதல்கள் அனைத்தும் அரசியல் காரண, காரியங்களால் ஏற்படுகின்றது. இதன்வழி, அந்நாடு சில சாதக, பாதகங்களைச் சந்திக்க நேர்வதோடு, உலக அரசியலில் தன்னை நிலைநிறுத்திக் கொள்வதற்கான வழிவகைகளையும் ஆராய்கிறது.

    21ஆம் நூற்றாண்டில் அறிவியல் தொழில்நுட்பத்தின் அதிவேக வளர்ச்சியினூடாக, இதுபோன்ற எழுத்துருவாக்கப் படைப்புகளை வாசிப்பதன் மூலமாக உலகளாவிய நாடுகளின் இயங்கியல் தன்மையைப் புரிந்துகொள்ள முடிகின்றது. கடந்தகாலத்தில் ஜெர்மனியில் நடந்த ஹிட்லரின் சர்வதிகார ஆட்சிக்கும் தற்போது தத்தம் நாடுகளில் நடந்துகொண்டிருக்கும் அரசியல் ஆட்சிக்கும் இடையேயான இரட்டை எதிர்மறையை நேமிச்சந்த்ரா மற்றும் காலித் ஹூசைனியின் சாரமான எழுத்துகள் சிந்திக்கச் வைக்கின்றன. “அரசியலற்ற இலக்கியத்தைப் படைப்பவர்கள் கடமை தவறியவர்களாக, துரோகிகளாகக் கருதப்படுவதோடு, அவர்கள் ஆக்கிய கவிதையும் நாவலும் நாடகமும் புறக்கணிப்பு அபாயத்துக்கு ஆளாகின்றன. ஒரு கலைஞனாக, வெறும் கலைஞனாக மட்டுமே இருப்பது எங்கள் நாடுகளில் ஒரு அநியாயமான குற்றமாக, அரசியல் பாவமாகக் கருதப்படுவதுண்டு”7 என லத்தீன் அமெரிக்க எழுத்தாளரான ‘மரியோ வர்காஸ் யோசா’ கூறியிருப்பது, இக்காலகட்டத்தில் படைக்கப்படும் சில படைப்புகளுக்கு முற்றிலும் பொருந்தக்கூடியது. இதனை அடியொற்றியே ‘யாத்வஷேம்’, ‘ஆயிரம் சூரியப் பேரொளி’ என்ற இரு படைப்புகளும் தன்னளவிலும் உலகம்சார் அளவிலும் தனக்கான இடத்தைப் பெறுகின்றன.

    மேற்கோள் விளக்கக் குறிப்புகள்

    1. நேமிச்சந்த்ரா, ‘யாத்வஷேம்’, ப.109.
    2. மேலது., ப.127.
    3. காலித் ஹூசைனி, ஆயிரம் சூரியப் பேரொளி, பக். 232-233.
    4. மேலது., பக். 123-124.
    5. மேலது., பக். 191, 311.
    6. மேலது., பக். 459-460.
    7. மேலது., ப. 7.

     விளக்கப் படங்கள்

    Holocaust Museum  – New York

    Auschwitz Crematorium – Germany

    Holocaust Museum  – Israel

    Inside of Holocaust Museum   – Israel

    Their memorial is modeled after Berlin’s iconic Memorial to the Murdered Jews of Europe, which consists of 2,711 concrete slabs.

    Kabul – Afganistan

    Taliban fire in air to scatter hundreds of protesters in Kabul


    ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):

    முனைவர் செ.ர. கார்த்திக்குமரன் ஆய்வு ரீதியாக இந்தக் கட்டுரையை அளித்துள்ளார். ஆய்வுக் கட்டுரைகள் கொஞ்சம் உலர் தன்மையுடன் இருக்கும். ஆனால், இவரின் இந்தக் கட்டுரை உயிர்ப்புடன் உள்ளது. இரு படைப்புகள், அதிலும் மொழிபெயர்ப்பு, தமிழாக்கப் படைப்புகள், அவற்றைத் தனித்தனியான கட்டுரையாகவே அளிக்கலாம். அதைச் செய்யாமல், இரண்டையும் ஒப்பிட்டு மிக அழகாக அளித்துள்ளார். அந்த இடங்களின் அரசியல், சமூக, உளவியல், வரலாறு, வன்முறை எனப் பல்வேறு பிரச்சினைகளைக் குறித்துப் பேசும் படைப்புகளைத் தேர்ந்தெடுத்து ஒப்பிட்டும் எழுதியமையால் இது முக்கியத்துவம் வாய்ந்த கட்டுரையாக உள்ளது. மேலும், இரு படைப்புகளிலிருந்தும் சில பகுதிகளை, உரையாடல்களைப் பொருத்தமாக மேற்கோள் அளித்துக் கொடுத்திருக்கிறார். ஷஹிதா பெயர்  ஷஜிதா என்று கொடுக்கப்பட்டுள்ளது. மற்றபடி இந்த இரு புத்தகங்களை இதுவரையில் வாசிக்காத வாசகருக்கும், இந்தக் கட்டுரையின் மூலமாக, வாசிக்கும் ஆர்வத்தை அளிக்கிறது. மகிழ்ச்சி. வாழ்த்துகள்.


     

    Share
  • ஏழ்மைக் காப்பணிச் சேவகி (மூவங்க நாடகம்) I இரண்டாம் அங்கம் I பாகம் – 4

    ஏழ்மைக் காப்பணிச் சேவகி (மூவங்க நாடகம்) I இரண்டாம் அங்கம் I பாகம் – 4

    ஆங்கில மூலம்: ஜார்ஜ் பெர்னாட் ஷா
    தமிழாக்கத் தழுவல்: சி. ஜெயபாரதன், கனடா


    Share
  • படித்தேன்! சுவைத்தேன்! பகிர்ந்தேன்! – 26

    படித்தேன்! சுவைத்தேன்! பகிர்ந்தேன்! – 26

    முனைவர் ச. சுப்பிரமணியன்

    கவிஞர் சுப. வீரபாண்டியனின் ‘எதுவாக இருக்கும்?’ – கவிதை நூல் பற்றிய திறனாய்வு

    சமுதாயப் போர்க்களத்தில் எதிர் நீச்சல் போடுவது அவ்வளவு சாதாரணமானதன்று. சிலருக்கு அதுவே பிள்ளை விளையாட்டாகிவிடுகிறது.. அவர்களிடத்தில் மறைந்து கிடக்கும் பிற ஆற்றல்கள் அவ்வப்போது தோன்றி மறையும் அல்லது வந்து போகும். பேரறிஞர் அண்ணாவின் உள்ளம் கவிதை உள்ளம்;. யாராவது ‘கவிஞர் அண்ணா’ என்று கூறியதுண்டா? இது அவர் எழுதிய எழுபத்தோரு கவிதைகளிலிருந்து அறியக் கூடிய உண்மையாகும். ‘காதல் ஜோதி’ என்னும் திரைப்படத்தில் “உம்மேல கொண்ட ஆசை உத்தமியே மெத்த உண்டு” என்ற பாடல்தான் அண்ணா எழுதிய ஒரே திரையிசைப்பாடல். அந்தப் பாடலில் அவருடைய மென்மையான உள்ளத்தைக் காணலாம். கண்ணதாசன், கலைஞர், ஜீவா முதலியோரும் இந்த நிரலில் வருவார்கள். அவர்கள் ஓய்வெடுக்கிற மண்டபமாக அல்லது சோலையாக இருப்பது கவிதைப் பணியே. இந்த நிரலில் அண்மைக்காலத்தில் இணைந்திருப்பவர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்கள். அவர் எழுதித் தொகுத்த ‘எதுவாக இருக்கும்?’ என்னும் சிறு கவிதை நூலை நான் படிக்கும் வாய்ப்பு கிட்டியது. அந்த நூல் தந்த அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கிறது இந்தக் கட்டுரை.

    நூல் கட்டுமானம்

    அரசியல் கட்சித் தலைவர்கள், உலகத் தலைவர்கள், வாழ்க்கைச் சிக்கல்கள். தனிமனிதக் காதல் உணர்வுகள் முதலிய பாடுபொருள்களை உள்ளடக்கிய இந்தத் தொகுப்பு மூன்று பகுப்புக்களைக் கொண்டது. 1972 தனியாகவும் 2002 முதல் 2006 வரை அடுத்த பகுதியாகவும். 2006க்குப் பிறகு இறுதிப் பகுதியாகவும் அமைந்துள்ளது:.. பாரதிதாசன், கண்ணதாசன் முதலியோர்தம் பதிவுகளில் காணப்படும் முரண்களையும் அவற்றிற்கான காரணங்களையும் புரிந்து கொள்வதுபோல் இந்தக் காலமுறைப் பகுப்புக்கள் உதவும் என்று நான் நினைக்கவில்லை. காரணம் இவர் மாணவப் பருவத்திலிருந்தே முரண்படாத பகுத்தறிவுச் சிந்தனைவாதியாகவே வளர்ந்து வந்துள்ளார். மொழிநடை, பாடுபொருள் களம், கட்டுமானப் பரிமாணம் மற்றும் உத்திகளில் அமைந்திருக்கும் மாற்றங்களை அறிந்து கொள்ள இந்தப் பகுப்புக்கள் கொஞ்சம் உதவக்கூடும். உத்தி சிறக்காத எந்தக் கவிதையையும் நான் பொதுவாகத் திறனாய்வு செய்வதில்லை. காரணம் அவை என்னை அவ்வளவாகப் பாதிப்பதில்லை. எனவே பொதுவாக அமைந்த சில கவிதை வெளிப்பாடுகள் பற்றிய திறனாய்வு பின்வரும் பத்திகளில் சுருக்கமாக எடுத்துரைக்கப்படுகிறது..

    எதுவாக இருக்கும்?

    ‘எதுவாக இருக்கும்’ என்பது இந்த நூலின் இறுதிக் கவிதையாகக் கோக்கப்பட்டுள்ள்து.

    எதுவாக இருக்கும்
    என் கடைசிப் பயணம்?
    எதுவாக இருக்கும்
    என் கடைசி மேடை?
    எதுவாக இருக்கும்
    நான் படிக்கப் போகும் கடைசிப் புத்தகம்?
    சொல் தோழி!
    எதுவாக இருக்கும் நம் கடைசிச் சந்திப்பு?

    கவிஞர் அனைவரையும் போலவே சுபவீ அவர்களையும் காதல் அலைக்கழித்துத்தான் உள்ளது. ‘சீதையைக் கண்டேன்’ என்றால் அது உரைநடை. ‘கண்டணன் கற்பினுக்கு அணியைக கண்களால்’ என்றால் அது கவிதை. தொடரில் அமையும் ஒரு எளிய மாற்றம் இந்த ரசவாதத்தைச் செய்துவிடும். இந்த மாற்றம் இயல்பாக அமைதல் வேண்டும். இறுதியில்  நிற்கவேண்டிய வினை முன்னால் நின்று செயப்படுபொருள் தொடர்ந்து வந்தால் உரைநடை கவிதையாகி விடும்.. ‘சொன்னது நீதானா?’ என்றால் அது கவிதை. ‘நீதான் சொன்னாயா?’ என்றால் அது வினாத் தொடர். ‘நான்’ என்பது வேற்றுமையில் ‘என்’ என்று வேறுபடும். உவமங்களாக நின்று பொருளுணர்த்த வேண்டியவைகளை உணர்ச்சிவழி ஏக்கங்களாக வெளிப்படுத்தும் உத்தியினால் சிறக்கின்ற தொடர்கள். புத்தகங்களும் பயணங்களும் மேடைகளுமே வாழ்க்கையாகிப் பழகிப்போன  ஒருவனுக்குக்  கைகாட்டியாக எப்போதாவது தோன்றுவதுதான் காதல். அதனால்தான் பாட்டு தோழியைப் பார்த்துத்தான் அமைந்திருக்கிறது. மூன்று ஏக்கங்களைத் தன்னுள்ளே செறிததுக் கொண்டு கேட்க வேண்டிய இறுதி வினாவைத் தோழியைப் பார்த்துக் கேட்பதாக அமைந்துள்ளது. எதுவாக இருக்கும் ‘நம் கடைசிச் சந்திப்பு?’ என்பது எங்கே நடக்கும் அது என்பதையும் உள்ளடக்கி நிற்கிறது. ஒருமையில் மற்றவற்றைக் கேட்ட கவிஞன் ‘எதுவாக இருக்கும் என் சந்திப்பு? என்னாமல் ‘எதுவாக இருக்கும் நம் சந்திப்பு?’ என்பதால் காதல் உள்ளத்தின் பரிமாணம் புலப்படுகிறது. ‘நான்’  என்பது ‘நாம்’. ஆவதுதானே காதல்? ‘கடைசி’ என்பதனாலேயே இந்தப் பாட்டும் நூலின் கடைசியில் வைக்கப்பட்டிருக்குமோ?

    உம்மையும் உத்திதான்

    கவிதை இயற்கை. செயற்கையன்று. இயற்கை ஒரு புதிர் ஆதலின் நுண்ணியம் அதன் இயல்பு. இயல்பாக அமைந்துவிடும் கவிதைகளில் எல்லாமே நுட்பமாக அமைந்துவிடும். அறிவு நிலையிலிருந்து முற்றுமாக விலகி உணர்வு நிலையில் இருந்து படைக்கப்படும் எல்லாக் கவிதைகளுக்கும் இது பொருந்தும். தான் பெற்று வளர்த்து ஆளாக்கிய மகன் தன்னை முதியோர் இல்லத்தில் சேர்த்துவிடுகிறான். அந்தத் ‘தாய்மொழியில் ஒரு கவிதையை எழுதியிருக்கிறார் சுபவீ

    “அன்று
    உன் தொட்டிலை ஆட்ட
    எனக்கும்
    இன்று
    முதியோர் இல்லத்தில்
    வந்து பார்க்க
    உனக்கும்
    நேரமில்லாமல் போய்விட்டது”

    அன்றைக்குத் தன்னைச் சுற்றியிருந்த வாழ்க்கைச் சூழலை எண்ணி மருகுகிறாள். அந்தத் தாய். ஒரு வேளை பணிக்குச் சென்றிருந்த காலத்தில் அவள் பாடிய  ‘அவசரத் தாலாட்டு’ அவள நினைவுக்கு வந்திருக்கலாம். அதனைத் தற்போது எண்ணிப் பார்க்கிறாள். தனக்கு ஒரு நியாயம் தன் மகனுக்கு ஒரு நியாயம் எனக் கருதுவதற்கு அவள் மனம் ஒப்பவில்லை. இரண்டையும் ஒன்றாக்கித் தனக்குத் தானே சமாதானம் செய்து கொள்கிறாள். புதுக்கவிதையாக இருந்தாலும் வாய்விட்டுச் சொல்லிப் பாரத்தால் கவிதைக்குள் தாயின் வேதனை ஒடுங்கிக் கிடப்பதைக் காணலாம்.

    இந்தப் பாட்டில் ‘உம்’மை விடுபட்டுப் போனது அவலத்தின் ஆற்றலைக் குறைத்துவிடுகிறது. தொடர்வினைகள் கவிதைகளில் இடம்பெறும்போது உம்மைகள் வெளிப்பட நிற்பதுதான் முறை. கவிதையுள் அடங்கிக் கிடக்கும் உணர்ச்சி அப்போதுதான் முழுமையாக வெளிப்படும். சங்க இலக்கியத்தில் ஒரு காட்சி. தலைவியைக் காணும் தலைவன் பாடுவதாக அமைந்தது.

    “நீயும் தவறிலை, நின்னைப் புறங்கடைப்
    போதர விட்ட நுமரும் தவறு இலர்

    நிறைஅழி கொல்யானை நீர்க்குவிட் டாங்கு

    பறையறைந்து அல்லது செல்லற்க என்னா
    இறையே தவறுடையான்’”

    இந்தப் பாட்டில் தலைவியோ அவள உறவினரோ தவறு செய்யவில்லை. மதம் கொண்ட யானை தெருவில் நடப்பதை எச்சரித்துச் ‘செல்ல வேண்டாம்’ எனச் சொல்லாத மன்னனே தவறுடையான் என்று குறிப்பிடப்பட்டுள்ள்து. ‘நீயும்’ என்ற உம்மையும் ‘நுமரும்’ என்ற உம்மையும் பாட்டின் உணர்ச்சியை மேலும் ஆழப்படுத்துவதைக் காணலாம். ‘அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்’ என்பது கம்பன் தமிழ். ‘அண்ணலும் அவளும் நோக்கினர்’ என்று எழுதியிருந்தால் காட்சி கவிதையாகியிருக்காது.

    தந்தை பெரியாரைப் பற்றிய கவிதையொன்றில் பாவலர் பாலசுந்தரம் ஆதங்கத்தோடும் ஆர்வத்தோடும் இந்த உம்மைகளைப் பதிவு செய்திருக்கிறார்.

    “சங்குகள் நிறமும் மாறி
    சந்தனம் மனமும் மாறி
    செங்கதிர் திசையும் மாறி
    தெங்குநீர் குளிரும் மாறி
    திங்கள் தண் நிலையும் மாறி
    தெவிட்டமு தினிப்பும் மாறி
    சங்கமும் மாறி னாலும்
    தந்தை சொல் வாளும் நாளும்

    பின்னாலே வந்த திரையிசைப்பாடலில் இவற்றைத் தழுவி கண்ணதாசன் எழுதிய பாடல் ஒன்று இப்படி அமைந்திருக்கிறது.

    “உன்னைச் சொல்லிக் குற்றமில்லை!
    என்னைச் சொல்லிக் குற்றமில்லை”

    இப்படி அமைந்தால்தான் கவிதையின் உயிர்ப்பு நிலைக்கும். இதனை உன்னைச் சொல்லியோ என்னைச் சொல்லியோ குற்றமில்லை என்றால் வெறுந்தொடர்தான் நிற்கும். எனவே

    “அன்று
    உன் தொட்டிலை ஆட்ட
    எனக்கும்
    நேரமில்லை!
    இன்று
    முதியோர் இல்லத்தில்
    வந்து பார்க்க
    உனக்கும்
    நேரமில்லாமல் போய்விட்டது”

    என்று அமைந்திருந்தால் இன்னும் சிறந்திருக்கும். இப்படிச் சொல்வது  படைப்பாளனின் படைப்புரிமையில் தலையிடுவதாகாது. கரும்புச் சாறு பருகுகிறபோது கோது பல்லிடுக்கில் குத்தக்கூடாது அல்லவா? எளிய மக்கள் பேறு பெறுவதைப் போலவே எளிய கவிதைகளும் பேறு பெறுகின்றன. எதிரது தழுவியது, இறந்தது தழுவியது என்றெல்லாம் இலக்கணத்தில் குறியிடப்படும் இந்த உம்மை கவிதையில் ஏக்கத்தைத் தழுவி நிற்கும்.

    கவிதை நோக்கு

    எது பற்றிக் கவிதை வரும்? கொடுமுடியைப் பற்றியும் வரும். குண்டூசியைப் பற்றியும் வரும். கவிதை பொருளிலே இல்லை. பொருளைக் காண்பவனின் உள்ளத்தில் இருக்கிறது. ‘உள்ளத்தில் உள்ளது கவிதை’ என்பதன் பொருள் இதுதான். பலாப்பழத்தைப் பற்றிக் கசப்பான கவிதைகளும் உண்டு. பாகற்காய் பற்றி இனிப்பான கவிதைகளும் உண்டு.

    “சிறைகளைத் தாங்கும் ஆயுதம் கவிதை!
    சிறுகை அளாவிய கூழும் கவிதை!
    காதலைச் சொல்லும் கண்களை விடவும்
    சாதியைக் கொல்லும் காதல் நற்கவிதை!
    பிழைக்க வந்தவர் பொன்னிற மன்று
    உழைத்துக் கறுத்தவர் உடலே கவிதை!
    யாழின் இசையும் கவிதை என்றாலும்
    வாளும் வேலுமே களத்தில் கவிதை!
    கண்ணீர் கவிதை! புன்னகை கவிதை!
    கண்ணகி கொண்ட கோபமும் கவிதை!
    சின்ன ஊரின் அழகு மட்டுமா?
    சென்னை நகரின் நெரிசலும் கவிதை!
    கூடி வாழும் குடும்பமும் கவிதை!
    தேடிக் கொள்ளும் தனிமையும் கவிதை!
    கொஞ்சிப் பேசும் மொழியைக் காடடிலும்
    நெஞ்சில் தைக்கும் சொற்கள் கவிதை!
    அடிமைப் படாத வாழ்க்கை கவிதை!
    அடிமை வேண்டா மனம் உயர் கவிதை!
    நெஞ்சில் ஈரம் எதுவுமில் லாமல்
    வஞ்சக மாக வாழ்ந்து வாழ்ந்தே
    ஆகும் வரையில் அனுபவிப் போர்க்குச்
    சாகும் வரையில் கவிதை வராது!”

    கவிதைக்கு வரைவிலக்கணம் கிடையாது என்பதுதான் இந்தக் கவிதையின் உள்ளடக்கம்.. கவிதை உத்தியால் சிறப்பது. இலக்கிய வடிவங்களுள் கவிதை தனித்து நிற்பதற்கு இந்த உத்திச் சிறப்பே தலையாய காரணம். படைப்பாளனைப் பொருத்தவரையில் “வஞ்சகமாக வாழ்ந்து ஆகும் வரையில் அனுபவிப்போர்க்குச் சாகும் வரையில் கவிதை வராது” என்று சொல்லுவது நூற்றுக்கு இருநூறு விழுக்காடு உண்மை. ‘எது கவிதை’ என்று யார் யாரோ எத்தனையோ நூல்களில் எதையெதையோ எழுதியிருக்கிறார்கள். இந்தக் கவிதை அவற்றையெல்லாம் பின்னுக்குத் தள்ளி ஓர் ஆராய்ச்சிக் கவிதைபோல் அமைந்துள்ளது. கவிதை என்பது யாப்புக்குள் அமைவது என்னும் நெறியற்ற புரிதலைப் புறந்தள்ளிச் செழுமையான கவியுள்ளத்திலிருந்து பிறப்பதே கவிதை என்னும தெளிவை இந்தக் கவிதை தந்திருக்கிறது. ‘தேமா புளிமா வாய்பாட்டுக்குள் தேங்கி நிற்பது கவிதையாகும்” என்று சுபவீ சொல்லாதது எனக்கு சொல்லில் அடங்கா மகிழ்ச்சி!

    இந்த வாழ்க்கைதான் என்றைக்கும் உரிய்து .

    மரபுக்கவிதை என்றால் மரபார்ந்த சிந்தனைகளின் தொடர்ச்சியே. அது வெறும் யாப்புத் தொடர்ச்சியன்று. இந்த உண்மையைத் தெளிவாகப் புரிந்து கொண்ட சிலருள் சுபவீயும் ஒருவர். ‘இன்னாது அம்ம இவ்வுலகம் இனிய காண்க இதன் இயல்புணர்ந்தோரே’ என்பது பழந்தமிழர் பண்பாடு.  இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள் துன்பம் உறுதல் இலன்” என்பது வள்ளுவம்.

    “வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்.
    வாசல் தோறும் வேதனை இருக்கும்
    வந்த துன்பம் எதுவென்றாலும்
    வாடி நின்றால் ஓடுவதில்லை. !
    எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
    இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்”

    என்பது வாழ்வைப் பற்றிய கண்ணதாசன் பார்வை. இதுதான் மரபுக்கவிதை. ‘வாழ்வியல் துன்பங்களை இயல்பென்று உணர்வதும்’ அவற்றை மனஉறுதியால் புறங்கண்டு வெல்லுவதும் முள்ளுக்குள் மலராக வாழ்வைச் சுவைக்க முயல்வதுமான சிந்தனையே தமிழர் சிந்தனை. இந்தச் சிந்தனையை மீட்டுருவாக்கம் செய்து சுபவீ எழுதியிருக்கும் கவிதை இப்படி அமைகிறது.

    வாழ்க்கை முழுவதும்
    துன்பத்தின் சாயல் படிந்தே கிடக்கிறது!
    வாழ்நாள் முழுவதும்
    வலிகள் நிறைந்தே இருக்கின்றன!
    உறவுகள் சூழ வாழ்ந்தும்
    ஒரு தனிமை உள்ளே நிலைக்கிறது!
    வெளிச்சக் காட்டிலும்
    இருளின் அச்சம் இருக்கவே செய்கிறது.!
    இருந்தாலும் என்ன
    இந்த வாழ்க்கையைப் போல்
    இன்னொரு வாழ்க்கை உண்டா
    நாம் கொண்டாடுவதற்கு?

    இது ஆன்மீகத்தைப் பினபற்றும் ஒரு சனாதனக் கவிஞர் எழுதியதன்று.  நடப்பியலைப் புரிந்து கொண்டு எந்தத் தனிமனிதச் சிக்கலுக்கும் சமுதாயச் சிக்கலுக்கும்  போராடுவதுதான் ஒரே வழி என்னும் சிந்தனையை முன்னிறுத்தி எழுதப்பட்ட திராவிட இயக்கக் கவிஞர் ஒருவரின் அருமையான கவிதைப் பதிவு.

    விடைகளால் நிரம்பியிருக்க வேண்டிய இந்த வாழ்க்கை புதிர்களால் நிரம்பியிருக்கிறது.  முப்பத்திரண்டு பற்களால் சிரிப்பதைவிட இரண்டு கண்களால் அழுகிற நாள்களே அதிகம். நமக்கு நன்றி செலுத்துபவர்களைவிட நம்முடைய நன்றிக் கடன்களே அதிகம். இதயத்தில் நான்கு அறைகள்தாம். ஆனால்  நாலாயிரங்கோடி ஆசைகள். சுபவீ எழுதுகிறார்.

    “விடை தெரியாத கேள்விகளோடும்
    நிறைவடையாத ஆசைகளோடும்
    எழுதி முடிக்காத எண்ணங்களோடும்
    அடைபடாத நன்றிக் கடன்களோடும்தான்
    முடியப்போகிறது நம் வாழ்க்கை!
    இன்னும் பல்லாண்டுகள்
    இம்மண்ணில் நாம் வாழ்ந்தாலும்!

    தொடுவானமாய் வளரும் உணர்ச்சிகளும் உணர்வுகளும் தேவைகளும் ஆசைகளும் கடமைகளும் பிறவும் வரையறுக்கப்பட்ட வாழ்நாளை எகிறியடிக்கின்றன. எல்லா வினாக்களுக்கும் விடையெழுதிய மாணவன் இல்லை. எல்லா ஆசைகளையும் அனுபவித்தவனும் இலலை. துறந்தவனும் இல்லை. இதயத்து எண்ணங்களையெல்லாம் அப்படியே எழுத்தில் கொட்டிய எழுத்தாளன் எவனும் கிடையாது. விடுபட்டுப்போன நன்றிக் கடிதங்கள் எத்தனையோ? இந்த வாழ்க்கை முரண்களின் தொகுப்பு.

    “நாளது சின்மையும் இளமையது அருமையும்
    தாளாண் பக்கமும் தகுதியது அமைதியும்
    அன்பினது அகலமும் அகற்சியது அருமையும்
    இன்மையது இளிவும உடைமையது உயர்ச்சியும்
    ஒன்றாப் பொருள் வயின் ஊக்கிய பாலினும்”

    என்பார் தொல்காப்பியர். இந்த முரண்களுக்கிடையே ‘வந்து பிறப்பதும் வாழ முயல்வதும் வாழக் கற்றுக் கொள்ளுவதும் அவற்றுக்கான காரணங்களைத் தேடிய களைப்பிலேயே முடிந்துபோவதுமே வாழ்க்கை’ என்னும் இந்த வரிகளில் ஒருவகை ஏக்கமும் ஏமாற்றமும் தென்படுகிறது. ஒரு போராளி மனத்துள் புதைந்து கிடக்கும் ஆயிரம் எண்ணங்களுள் இதுவும் ஒன்று போலும்! போராளிக்கும் இதயம் உண்டுதானே!

    போய் வா மகளே!

    கண்ணதாசன் எழுதிச் சூலமங்கலம் சகோதரிகள் பாடிய ஒரு திரையிசைப் பாடலின் பல்லவி ‘போய் வா மகளே போய் வா’ எனத் தொடங்குகிறது.. அது பிறந்த வீட்டிலிருந்து புகுந்த வீட்டிற்குச் செல்லும் ஒருத்தியை வழியனுப்புவதாக அமைந்தது, அந்தப் பல்லவியில் மனம் பறிகொடுத்த கவிஞர் அதனைத் தான் எழுதிய ஒரு பாட்டுக்குத் தலைப்பாக வைத்துள்ளார்.

    சங்க இலக்கிய அகப்பாடல்கள் இலக்கியத் துறைகளை அடியொட்டித் திட்டமிட்டு எழுதப்பட்டன. ஆனால் புற இலக்கியங்கள் அவ்வாறின்றி வரலாற்று நிகழ்வுகளையும் சமுதாயத்து அன்றாட நிகழ்வுகளையும் சித்தரிக்கும் பான்மையுடையவை. ‘அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில் என்றால் அது கற்பனையன்று. பறம்பில் நடந்த ஒரு சோக நிகழ்வு. ‘வருவன் என்ற கோனது பெருமையும் அது பழுதின்றி வந்தவன் அறிவும் வியத்தொறும் வியத்தொறும் வியப்பிறந்தன்றே!’ என்றால் அது கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்த நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டது.

    இந்த நெடிய மரபில் வந்தவர் கவிஞர் சுபவீ. அதனால்தான் பொடா தடைச் சட்டத்தில் அவர் சிறையிலிடப்பட்டபோது தன்னைப் பார்க்கப் பேரனோடு வந்த மகளை வழியனுப்பி வைத்த நிகழ்ச்சியைக் கவிதையாக்கியிருக்கிறார்.

    கவிதைக்காக அந்த நிகழ்ச்சியன்று. நிகழ்ச்சி கவிதையாக வெளிப்பட்டுள்ளது.

    போய் வா மகளே புறப்படு மகிழ்ச்சியாய்!
    சிறைச்சாலையில் கைதியாக இருக்கும் போதுதான்
    கைக்குழந்தையாய்க் கண்டேன் உன் மகனை!
    வெளியில் நான் வருவதற்குள்
    நீங்கள் வெளிநாடு புறப்படுகின்றீர்கள்!

    நீ பெற்றிருக்கும் காதல் பரிசைக்
    கணவருக்குக் காட்ட வேண்டுந்தானே!

    இங்கே மகளைப் பிரியும் பெற்றோரைக் காட்டிலும்
    அங்கே மகனை எதிர்பார்த்திருக்கும்
    தந்தையின் தவிப்பு தனித்துவமானது

    என்னதான்
    உலகை நேசிக்கும் உள்ளம் விரும்பினாலும்
    என் பேரன், என் பேத்தி, என் சதை, என் இரத்தம்
    என்னும் உணர்வுகள்
    எம்மை ஆட்டித்தான் படைக்கின்றன
    போய் வா மகளே! புறப்படு மகிழ்ச்சியாய்!

    ஆழமான உணர்வுகளைக் கடினமான சொற்களால்தாம் வெளிப்படுத்த வேண்டும் என்று நியதி இல்லை. எளிய சொற்களும் ஆழமான உணர்வுகளை வெளிப்படுத்த்லாம் ஏழையின் கண்ணீர்போல!. இதற்கு இந்தக் கவிதை ஓர் எடுத்துக்காட்டு. உறவுகளில் ஊசலாட்டம் சமுதாயப் போராளிகளுக்கும் உண்டு என்னும் இயற்கையைப் பாடியிருக்கும் சுபவீ ஒரு சோக ராகத்தையே மீட்டியிருக்கிறார். மீண்டும் பதிவு செய்கிறேன். ஒரு திராவிட இயக்கக் கவிஞரின் படைப்பு வளையததிற்குள் வராத பாடுபொருள் இது. காரணம் அது மரபு சார்ந்து அமைந்ததுதான்.

    சிறைச்சாலையில் கவிதை எழுதியவர்கள் உண்டு. வரலாற்று நூல்கள் எழுதியவர் உண்டு. நிரம்பப் படித்தவர்கள் உண்டு. தன்னைச் சந்தித்தார் பற்றிய சரித்திர நிகழ்வுகளை சுபவீ போலக் கவிதையாக்கியிருப்பவர் சிலரே. கல்லுக்குள் ஈரம் என்பதைப் போலச் சொல்லுக்குள் சோகம் பாடியிருக்கிறார் சுபவீ. ஒரு நிமிடம் அந்தச் சிறைச் சூழலை எண்ணிப்பாருங்கள்! நொறுங்குவதற்கு ஒன்றுமில்லை என்ற அளவுக்கு இதயம் சுக்கு நூறாகிவிடும். போராளிகளின் புலம்பல் என்று புரியாதவர்கள் சொல்லக்கூடும். காரணம் அவர்கள் கவிஞனின் இதயத்தோடு உறவாடத் தெரியாதவர்கள்!

    மகள் வயிற்றுப் பேரனை வழியனுப்பிய கவிதை அப்படி அமைந்தது என்றால் இன்னொரு சிறைச் சூழலில் தன் மகன் வயிற்றுப் பேத்தியைக் கொஞ்சும் பேறும் அவருக்குக் கிட்டியது. தன பாட்டனைச் சிறையில் காணும் பேறுபெற்றவர்கள் அந்தப் பேரப்பிள்ளைகள். மெய்யால் தீண்டுதலும் இன்பம் மழலையர் சொல் செவியால் கேட்பதும் இன்பம் என்பதற்கேற்ப அவ்விரண்டையும் சில நொடிகள் சிறைவாசலில் அனுபவித்த கவிஞன் எழுதுகிறான்.

    கறுப்பென்ன வண்ணத்தில் தப்பா? – நீ
    கறுப்பில்லை என்பான் உன் அப்பா!
    கறுப்புத்தான் அழகென்று சொல்வோம்! – கட்டிக்
    கரும்பென்றே உன்னை அள்ளிக் கொள்வோம்!

    தாத்தாவைச் சிறைவந்து பார்த்தாய்! – என்
    தனிமையினைச் சில நிமிடம் தீர்த்தாய்!
    மூத்தாலும் வயதினிமேல் குறையும் – உன்
    முத்தத்தில் என் நெஞ்சம் கரையும்”

    இவ்விரண்டு கண்ணிகளும் முழுக்கவிதையின் பகுதிகள் ‘கறுப்புத்தான் அழகென்று சொல்வோம்!’ என்று தன் கொள்கைக் குண்டூசியைக் குழந்தைக்கு வலிக்காமல் குத்தியிருக்கிறார்.  குழந்தை என்றவுடன் யாப்பில் சிந்து முன் நிற்பது வள்ளலார் மரபு. பாரதியும் பாரதிதாசனும் வெற்றிபெற்றது மழலைச் சிந்துகளால். பெரும்பண்டிதர்கள் எழுதிய பிள்ளைத் தமிழ் எலலாம் படுதோல்வி அடைந்ததற்குக் காரணம் பிள்ளைகளுக்கே அவை புரியாமல் போனதுதான்!

    உப்பா? சர்க்கரையா?

    தனிமனிதக் குடும்ப வாழ்வின் அனுபவங்கள் வேறு. பொதுவாழ்வின் அனுபவங்கள் வேறு.  முரண்களால் முடையப்படடவையே அவ்விரண்டும்.  ‘இருவேறு உலகத்தியற்கை’ என்பது வள்ளுவம். முரண்கள் இயற்கை. செயற்கை அன்று. இந்த முரண்களில் ஒற்றுமையைப் பார்க்கிறவன்தான் கவிஞன். சிரிப்பவர் சிலர். அழுபவர் சிலர். இரண்டும் முரண்கள். ஆனால் கவிஞன் சிரித்துக் கொண்டே அழுகிறான். அல்லது அழுதுகொண்டே சிரிக்கின்றான். பொதுவாழ்க்கையிலும் முரண்களே முன்களப் பணியாளர்கள். பதவி வரும்., போகும். போராட்டத்தில் வெற்றியும் உண்டு. தோல்வியும் உண்டு.  எனவேதான போராளிகள் வெற்றி தோல்விகளைப் பற்றிக் கவலைப்படாமல் களப்பணி ஆற்றுவதையே கடமையாகக் கொள்கிறார்கள். பலமுறை பல காரணங்களுக்காகச் சிறை சென்றவர் சுபவீ. ஒரு காரணமும் சொந்தக் காரணம் அல்ல. சமுதாயக் காரணமே. சிறை தந்த சில அனுபவ முரண்களைக் கவிதையாக்கியிருக்கிறார் இந்த நூலில்.

    “சிறையிலும் உண்டு
    சுதந்திர நாள் கொணடாட்டம்!

    என் மனைவிக்கு எழுதினேன்!
    சிறை எனக்கு!
    தண்டனை உனக்கு!

    ஒரு புறம்
    பிரிவு, தனிமை, முடக்கம்!
    மறுபுறம்
    படிப்பு எழுத்து சிந்தனை!
    சிறை உப்பா சர்க்கரையா?”

    சுதந்திரத்திற்கு எதிர்ச்சொல் சிறை. ஆனால் சிறையிலும் சுதந்திரத் திருவிழா கொணடாடுகிறார்கள். எத்தகைய முரண்? புனல்கடந்து பொருள தேடச் செல்வான் தலைவன். ஆனால் பாலைத்திணை தலைவிக்குத்தான்!. தலைவியை எண்ணித் தலைவன் புலம்புவதாக ஒருபாடல் கூடத் தமிழில் இல்லை.

    என் மனைவிக்கு எழுதினேன்!
    சிறை எனக்கு!
    தண்டனை உனக்கு!

    என்றெழுதுகிறான் கவிஞன். மரபின் வேர் என்பது இதுதான். இதனையே சங்கப் புலவன் எழுதியிருந்தால்

    பிரிந்தவன் நான்!
    அழுதவள் நீ!

    என்றல்லவா எழுதியிருப்பான்? ஒரு புறம் தனிமனிதனை வாட்டும் தனிமை, பிரிவு, முடக்கம். மறுபுறம் ஒரு போராளியைச் செதுக்கும் படிப்பு, சிந்தனை, எழுத்து.  இந்த முரண்களால் ஆனது சிறை. இரண்டு வகை அனுபவங்களும் சிறை தருகிறது. இறுதியாக வினவுகிறார்

    “சிறை உப்பா? சர்க்கரையா?”

    படித்தவர்கள்தாம் சொல்ல வேண்டும், இந்தக் கவிதை உப்பா? சர்க்கரையா? என்று!

    நிறைவுரை

    எதுவாக இருக்கும்? என்னும் தலைப்பில் ஐம்பது கவிதைகளைக் கொண்ட இந்த நூலில் என்னைக் கவர்ந்த அத்தனைக் கவிதைகளையும் நான் இங்கே சுவைத்து ஆராய்ந்து பதிவிடவில்லை. கட்டுரையின் அளவு கருதியும் காலம் கருதியும் ஒரு சிலவற்றைப் பற்றி மிகச்சுருக்கமாகவே பதிவு செய்திருக்கிறேன். இவருடைய நூல்கள பலவற்றையும் நான் படித்து அவருடைய பன்முக ஆற்றலையும்  ஆழங்கால்பட்ட அறிவுத் தெளிவையும் அறிந்து கொண்டிருக்கிறேன். ஆனால் அவருடைய இரண்டாவது கவிதை நூலாகிய இதனை நான் மேலெழுந்த வாரியாகப் படித்தபோது ஒரு போராளிக் கவிஞனின் மறைவிடத்தை அறிந்த கொண்ட மன திருப்தி எனக்கு. எப்போதும் வருவது கவிதை அல்ல! எப்போதாவது வருவதுதான் கவிதை!. அவை கவிஞர் சுபவீயிடமிருந்தும் வந்திருக்கின்றன. பேராசிரியர் சுபவீ விருப்ப ஓய்வு பெற்றவர்.  கவிஞர் சுபவீக்கு விருப்ப ஓய்வு கிடையாது. காரணம் முன்னது பதவி. விருப்பம் போல் துறந்துவிடலாம்  பின்னது படைப்பு. அது ஒருவகைப் பாசப்பிணைப்பு. துறக்க முடியாது படடினத்தாரைப் போல!

    (தொடரும்)

    Share
  • நியூட்டன் இயக்கும் பிரபஞ்சம்

    நியூட்டன் இயக்கும் பிரபஞ்சம்

    சி. ஜெயபாரதன், கனடா

    சூரிய மண்டலத்தில்
    பூமி, நிலா,
    கடல், காற்று, கதிர்க்கனல்,
    புல்லினம், உயிரினம், புள்ளினம்,
    மானிடம் அனைத்தும்
    காரண நிகழ்ச்சி.
    ஆரம்பம் உள்ள நிகழ்வுகள்.
    இறுதி முறிவு
    எந்திராப்பி முடிவு.
    அதுவின்றி
    எதுவும் இயங்காது !
    அண்ட சராசரங்களைத்
    தொட்டிலில்
    ஆட்டுவது அன்னை.
    முற்பிறப்பு
    இருந்தால்தான்
    இப்பிறப்பு
    நிகழும்.
    இறப்பில் முடியும்
    இப்பிறப்பு.
    ஆன்மாவுக்குப்
    பிற்பிறப்பு உள்ளதென
    ஞானிகள் கூறுவர்.
    முற்பிறப்பு, இப்பிறப்பு
    பிற்பிறப்பு
    சூரியக் குடும்ப
    மானிடச் சுழற்சி !
    அணுவோ, அண்டமோ, அகிலமோ
    குயவன் கை தூண்டாது
    எதுவும்
    இயங்காது
    சுயமாய்ச் சுழலாது
    சூரியக் குடும்பத்தில் !
    பிரபஞ்ச இடுப்பு வளைவில்
    நியூட்டன்
    எட்டு வைத்து நடந்தால்
    புறப்பட்ட
    இடத்துக்கே
    தடம் பதிக்க மீள்வான் !

    Share
  • குறளின் கதிர்களாய்…(438)

    குறளின் கதிர்களாய்…(438)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்…(438)

    இழத்தொறூஉங் காதலிக்குஞ் சூதேபோற் றுன்பம்
    உழத்தொறூஉங் காதற் றுயிர்.

    – திருக்குறள் – 940 (சூது)

    புதுக் கவிதையில்…

    பொருளை வைத்துச் சூதாடி
    அதை இழக்கும் போதெல்லாம்
    அப்பொருள் மீது
    பற்று மிகக்கொண்டு விரும்பிடும்
    சூதாட்டம்போல்,
    பல்வேறு துன்பங்களை உடல்
    அனுபவிக்கும் போதெல்லாம்
    அவ்வுடலினையே
    உயிர்
    விரும்பிடும் தன்மையுடையது…!

    குறும்பாவில்…

    பொருள்வைத்துச் சூதாடி இழப்பினும்
    மேன்மேலும் அதன்மீது விரும்பவைக்கும் சூதுபோல்
    துன்புறினும் அவ்வுடலையே விரும்புமுயிரே…!

    மரபுக் கவிதையில்…

    பெரும்பொருள் வைத்ததைச் சூதினிலே
    பெரிதுமாய் இழப்பினும் மேன்மேலும்
    விருப்பொடு பொருளதை நாடவைக்கும்
    விடமதாம் சூதினைப் போலவேதான்
    இருந்திட விரும்பிடும் உயிரதுவும்
    இருந்திடும் உடலது தனிலேதான்
    வருத்திடும் இடர்களில் வீழ்ந்தவற்றால்
    வதைகளாய்ப் பலவுமே இருப்பினுமே…!

    லிமரைக்கூ…

    பொருள்பல இழந்தாலும் சூதில்,
    பொருளதை விரும்பவைக்கும் சூதுபோல் உயிர்நாடும்
    நலிந்தாலும் உடலின் மீதில்…!

    கிராமிய பாணியில்…

    ஆடாத ஆடாத
    சூதாட்டம் ஆடாத,
    அழிவத்தான் தருகிற
    சூதாட்டம் ஆடாத..

    கைப்பொருள எல்லாம்
    வச்சித் வெளையாடித் தோத்தாலும்
    அதுமேல உள்ள
    ஆச தீராது சூதாட்டத்தில..
    அதுபோலத்தான்
    மனுச ஒடம்பு
    எவ்வுளவுதான் துன்பப்பட்டாலும்
    அதுமேலவுள்ள ஆச
    உசிருக்கு
    ஒருநாளும் தீராது..

    அதால
    ஆடாத ஆடாத
    சூதாட்டம் ஆடாத,
    அழிவத்தான் தருகிற
    சூதாட்டம் ஆடாத…!

    Share
  • இது நியூட்டனின் பிரபஞ்சம்

    இது நியூட்டனின் பிரபஞ்சம்

    சி. ஜெயபாரதன், கனடா

    பிரபஞ்ச பெருவெடிப்பு
    நியதி
    பிழையாகப் போச்சு !
    ஒற்றை முடத்துவ
    முடிச்சு
    தானாய் வெடித்து
    விரியும்
    பிரபஞ்ச பலூன்
    பஞ்சர் ஆகிப் போச்சு !
    நியூட்டன் விதிகள்
    பிரபஞ்சத்தின் தோற்ற
    நியதிகள்.
    பெரு வெடிப்பு
    ஊகிப்பில்
    ஓசோன் ஓட்டைகள் !
    பியூட்டி இழந்து போச்சு !

    ஒற்றைத் திணிவை
    உடைக்க
    புற இயக்கி எங்கே ?
    எற்றி எழுப்பத் தூண்டும்
    பூட்டர் எங்கே ?
    உள் வெடிப்பு உசுப்பிட
    புற இயக்கி எங்கே ?
    பிரபஞ்சம் உருவாக நூறுக்கும்
    மேலான
    மூலகங்கள் பிணைந்து, பல்கோடி
    மூலக்கூறு
    செங்கற்களாய்
    கட்டமைக்க
    அக இயக்கிகள் எங்கே ?
    பாரினில் பயிரினம்
    பல்கோடி உயிரினம் தோன்ற
    உயிரியக்கி எங்கே ?

    பிரபஞ்ச வினைப்பாடு
    அனைத்துக்கும்
    பேராற்றல்  ஊட்டும்
    பிரமாண்ட
    இயக்கி எங்கே ?
    பெரு வெடிப்பு நியதிக்கு
    வித்தில்லை,
    ஆணி வேரில்லை  !
    விரியும்
    பிரபஞ்சத் தோற்றம், ஆட்டம்
    அனைத்தும்
    நியூட்டன் விதிகளால் !

    Share
  • Vaaniyamma

    Vaaniyamma

    Baskar Seshadri

    Vaaniyamma was financially comfortable and amid such a popularity and name her death makes me feel so upset.

    Had she remained with some assistance at least she could have been taken for treatment immediately after the fall and we might not have a lost a soul in a small accident.

    Aged People who can afford to pay for the assistance should use the opportunity for the sake of their interest and safety. This is just not for the celebrity but whoever feels that they can spend on this comfort should note this to have a 24×7 Assistance.

    Age matters and fall goes together always. This is my personal view.

    Share
  • பழ. கருப்பையாவுக்கு ஒரு மடல்

    பழ. கருப்பையாவுக்கு ஒரு மடல்

    அன்பார்ந்த அறிஞர் பழ. கருப்பையா அவர்களுக்கு,

    வணக்கம் கணக்கில. இன்று இந்திய அரசியல் என்பது ஏராளமான பணம் தேவைப்படும் தொழில். அதில், துணிவுடன் மக்களைக் கூட்டி வழிநடாத்தத் ‘தமிழ்நாடு தன்னுரிமைக் கழகம்’ தொடங்கியுள்ளீர்கள். வாழ்த்துகள் பல. தங்கள் கட்சிப் பெயரை, ஆங்கிலத்தில் எழுதும்போது கவனம் செலுத்தக் கோரி இம்மடல்.

    எனக்கு ஊர் பொள்ளாச்சி. 40 ஆண்டுகளாய் ஹூஸ்டன் (அமெரிக்கா) மாநகரில் வாழ்கிறேன். I am a senior scientist in Space Structures. நாசா ஜான்சன் விண்மையம் அனுப்பிய பல ஸ்பேஸ் ஷட்டில்களுக்கு Loads & Dynamics துறைத் தலைமைப் பொறியாளனாக இருந்துள்ளேன். தங்களை, என் நண்பர் அழ. ராம்மோகன் கூட்டத்தில், கானாடுகாத்தான் வளமனையில் சந்தித்தேன். அப்போது ஆச்சியும் இருந்தார். ராம்மோகன் வெளியிட்ட திருக்குறள் நூலில் உள்ள பல கட்டுரைகள் (Tamil Landscape) யானளித்தவை. Some photos of Al.R. https://nganesan.blogspot.com/2022/10/al-rammohan-tirukkural-book-chicago.html

    திராவிட மொழியியல், அதன் ஒப்பிலக்கணம் கால்டுவெல் பாதிரியார் தந்தமை, அண்ணா அதை அரசியலில் பயன்படுத்தினமை, … என நீங்கள் குறிப்பிடுவதைக் காணொளிகளில் கேட்டுள்ளேன். திராவிட மொழிகள் ஆகிய தெலுங்கு, கன்னடம் இரண்டும் இழந்துவிட்ட ஒரு ஒலி சிறப்பாக, நம் செந்தமிழிலே உண்டு. நன்கு இயங்குகிறது. விஜயநகர காலத்திலே இருந்து, ஐரோப்பாவில் இருந்து வந்தோருக்கு தமிழ் பற்றி அறிவிக்க, அந்நாள் ஆட்சிக்கட்டிலில் இருந்த பலருக்கும் தமிழ் தாய்மொழி அல்ல. மேலும், சென்னை, 1950களில் கூட தெலுங்கு பேசும் ஜனங்கள் பெரும்பான்மையாக இருந்த நகரம். மதறாஸ் மனதே என்ற இயக்கம் இருந்தாலும், உங்கள் மனங்கவர்ந்த ராஜாஜி போன்றோர், சிலம்புச்செல்வர், … எனப் பலரால் சென்னையைத் தமிழ்நாடு பெற்றது. சென்னையில் ஆங்கிலப் பத்திரிகைகளில் 100 ஆண்டு முன்னே எழுதுவோர் பலருக்கும் தமிழ் தாய்மொழி அன்று; தெலுங்கு, கன்னடம். எனவே, தமிழ் மொழியியல் அறிஞர்கள் சுவெலெபில். ஆஷர், ஹார்ட், பார்போலா, தனிநாயகம், வ. ஐ. சுப்பிரமணியன், கி. நாச்சிமுத்து, … எனப் பலர் சொல்லியுள்ள நுட்பம் அந்நாளைய பத்திரிகையாளர் அறியார். எனவே, Murugan, Alagappan, Tiruppugal, Kazhagam, Manimegalai … எனத் தவறுதலாக 100+ ஆண்டாய் எழுதப்படுகிறது.

    இன்று பல தமிழ் இளைஞர்கள் தமிழ்ச்சொற்களை ஆங்கில லிபியில் எழுதுகின்றனர். வாட்ஸப், ட்விற்றர், முகநூல், யுட்யூப் என்பவற்றில். தமிழின் 18 மெய்களில் தலையாயது க் என்னும் ககர மெய். இது தவறாக ஆங்கிலத்தில் எழுதி வாசித்தால், தமிழின் அழகான ஒலிப்புமுறை சிதைந்துவிடும். குழந்தைகள் ஆங்கில இலிபியில் எழுதிப் பாடும்போது தவறாக ஒலிக்கும். ஆனால், டிஎம்எஸ், சுசீலா, வாரியார், கண்ணதாசன், வைரமுத்து, … என யாருடைய பேச்சிலும் Murugan, Alagappan, Tiruppugal, Kazhagam, Manimegalai எனக் காதுகளில் கேட்காது. -g- இல்லாமல், ஒருவித -h- ஒலிப்பே இருக்கும். In Linguistics, this is called ‘intervocalic fricative’ sound, which is represented as ḫ (small letter h with breve sign below). இரு உயிரெழுத்தின் நடுவே க் இருக்குமானால், ḫ என்று எழுதவேண்டிய ஒரு விதமான உராய்சொலி தமிழ் உச்சரிப்பில் பிறக்கிறது. எனவே, இரு உயிரெழுத்தின் நடுவே க் உள்ள ḫ ஒலிப்பை ஆங்கில எழுத்தில் எவ்வாறு குறிப்பது? நிச்சயமாக, -g- எனப் போடுதல் பிழையானது. எனவே, Tamilnadu Thannurimai Kazhakam (or) Kazhaham எனப் பயன்படுத்த வேண்டுகிறேன். ஓர் உதாரணம் காட்டுகிறேன். ஈழத் தமிழர்கள் பல்லாயிரம் நூல்களை இணையத்தில் இலவசமாக வழங்குகின்றனர். அந்தத் தளம்: http://noolaham.org

    தமிழ் அல்லது எந்த மொழியையும் ரோமானிய எழுத்தில் எழுதும்போது இருவகையில் செய்யலாம்: (1) Transcription (ஒலிபெயர்ப்பு). உ-ம்: noolaham, kazhaham (2) Transliteration (எழுத்துப்பெயர்ப்பு (அ) இலிபிபெயர்ப்பு). உ-ம்: noolakam, kazhakam. தமிழின் மெய்களில் தலையெழுத்து -க்-, இது சரியாக ஆங்கிலத்தில் எழுதும் முறை உங்கள் கட்சியின் பெயரால் கோடிக்கணக்கான தமிழரை அடைய உதவுங்கள். தமிழ் சின்னங்களின் பெயர்களை எழுத்துப்பெயர்ப்பு முறையில் யூனிக்கோட் ISO 10646 ஸ்டாண்டர்டில் வைக்க முயற்சி செய்து வெற்றிகண்டேன்: https://unicode.org/charts/PDF/U11FC0.pdf#page=3

    Summary:
    Tamilnadu Thannurimai Kazhakam (or) Kazhaham எனப் பயன்படுத்த வேண்டுகிறேன்.

    வாழ்க வளமுடன், வளர்க தமிழுடன்!

    நனிநன்றி,
    நா. கணேசன்

    Share
  • குறளின் கதிர்களாய்…(437)

    குறளின் கதிர்களாய்…(437)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்…(437)

    அற்ற மறத்தலோ புல்லறிவு தம்வயின்
    குற்றம் மறையா வழி.

    -திருக்குறள் – 846 (புல்லறிவாண்மை)

    புதுக் கவிதையில்…

    சிற்றறிவு உடையவர்
    தம்
    குற்றங்களை அறிந்து
    அவற்றைப் போக்காமல்,
    ஆடையால்
    உடலுறுப்புகளை மட்டும்
    மறைத்துத் தம்மையும்
    ஒழுக்கமுடையவராய் எண்ணுதல்
    புல்லறிவே…!

    குறும்பாவில்…

    தமது குற்றமறிந்து நீக்காமல்
    தம்முடலில் மட்டும் ஆடைகளால் மறைத்தே
    தமையுயர்வாய் எண்ணுதல் புல்லறிவாம்…!

    மரபுக் கவிதையில்…

    தமது குற்றம் தனையறிந்தே
    தக்க வழியில் போக்காமல்,
    சுமையாய் உடைகள் பலவணிந்தே
    சொந்த உடலின் உறுப்புகளைத்
    தமதா யெண்ணி மறைத்திட்டுத்
    தாமே குணத்தில் உயர்வெனவே
    மமதை கொண்டே நடந்திடுதல்
    மாசாம் கொடிய புல்லறிவே…!

    லிமரைக்கூ…

    அறிந்தழிக்காமல் தமது குற்றம்,
    ஆடையணிந்தே தமதுடல் மூடியே தாமுயர்வெனும்
    அகந்தை புல்லறிவே முற்றும்…!

    கிராமிய பாணியில்…

    அறிவில்ல அறிவில்ல
    ஆராஞ்சி பாக்காமச் செஞ்சா
    அறிவில்ல அறிவேயில்ல..

    தங்கிட்ட முழுசா
    குத்தத்த வச்சிக்கிட்டு
    அதப் போக்காம,
    ஒடம்பு மேல
    ஒசந்த உடுப்பெல்லாம்
    போட்டுக்கிட்டு
    ஓசந்தவனுண்ண நெனப்பிருந்தா
    அது
    சுத்த அறிவில்லாத்தனமே..

    தெரிஞ்சிக்கோ
    அறிவில்ல அறிவில்ல
    ஆராஞ்சி பாக்காமச் செஞ்சா
    அறிவில்ல அறிவேயில்ல…!

    Share
  • மாதம் தோறும் மகாகவி (பிப்ரவரி 07, 2023)

    மாதம் தோறும் மகாகவி (பிப்ரவரி 07, 2023)

    வணக்கம்.

    “மாதம் தோறும் மகாகவி” பிப்ரவரி 07, 2023. சேவாலயாவும், மதுரத்வனியும் வழங்கும் தொடர் நிகழ்ச்சி.

    ஆர்கே கன்வென்ஷன் சென்டர், லஸ் முனை அருகில், மயிலாப்பூர், சென்னை 4. மாலை சரியாக 6.30 மணிக்கு.

    சென்ற மாத நிகழ்வின் தொடர்ச்சியாக, இந்த முறையும் பாரதியும் ஞாயிறும் என்னும் தலைப்பில் பேச விழைகிறேன்.
    அந்த மாகவியின் அற்புத வீச்சுகளை உங்களுடன் பகிர்ந்துகொள்ளும் ஆவல் மேலிட்டதால்தான் உங்களை அன்புடன் அழைக்கிறேன். பாரதியின் கவிதை என்பது தொடரும் பிரமிப்பாகவே இருக்கிறது.

    வரவியலாதவர்கள், இதை நேரலையாகக் காணலாம்: https://youtube.com/live/S6Qqv5VLAwA

    அன்புடன்,
    ரமணன்

    Share
  • ஏழ்மைக் காப்பணிச் சேவகி (மூவங்க நாடகம்) I இரண்டாம் அங்கம் I பாகம் – 3

    ஏழ்மைக் காப்பணிச் சேவகி (மூவங்க நாடகம்) I இரண்டாம் அங்கம் I பாகம் – 3

    ஆங்கில மூலம்: ஜார்ஜ் பெர்னாட் ஷா
    தமிழாக்கத் தழுவல்: சி. ஜெயபாரதன், கனடா


    Share