Blog

  • வலி நிவாரணி வேலை செய்யும் விதம்

     

    தேமொழி

    நம் காலில் ஒரு முள் குத்தினால் நமக்கு எவ்வாறு  தெரிகிறது?

    நாம்  முள்குத்தியதை அறியும் விதம் வலி என்ற உணர்வு தோன்றும் காரணத்தினால்தான். 

     

     

    வலி ஏன் ஏற்படுகிறது?

    வலி என்ற உணர்வு நம்மை ஆபத்தில் இருந்து காப்பதற்கு உதவுகிறது.  இது உயிர் காக்கும் ஒரு நட்பைப் போன்றது. வலியை நாம் உணராவிட்டால் நம் விரலைத் தவறுதலாக காய் வெட்டும்பொழுது வெட்டிக்கொண்டாலும் நமக்குத் தெரியப்போவதில்லை. நமக்கு நாமே தீங்கு செய்து கொண்டு இழப்பு ஏற்படுத்திக் கொள்ளும் வாய்ப்புகள் உருவாகும். அல்லது சுற்றுச் சூழலில் உருவாகும் ஆபத்தை உணராமல் நமக்கு தீங்கு நேரும், உயிருக்கும் ஆபத்து நேரும். வலி நமக்கு ஆபத்தைத் தவிர்க்க உடல் ஏற்படுத்தித் தந்த ஒரு முன்னெச்சரிக்கை  ஒலி.

    நாம் வளரும்பொழுது வலியை உணர்த்தும் நரம்பு செல்கள் நம் உடலில் ஆங்காங்கே பல பகுதிகளில் நிறுவப்படுகிறது. வலியை உணரும் நரம்பு செல்கள் சாதாரண நரம்பு செல்களில் இருந்து வேறுபட்டவை, மேம்பட்டவை. இவைகளை “நோசிசெப்டர்ஸ்”(nociceptors) எனக் குறிப்பிடுகிறோம்.

    இந்த நரம்பு செல்கள் தண்டுவடத்தில் இருந்து கிளம்பி தோல், தசை, எலும்பு, மூட்டுகள், உடலின் உள்ளுறுப்புகள் என பலப்  பாகங்களையும் மூளையுடன் இணைக்கிறது. மற்ற நரம்பு செல்களைப்போலவே வேலை செய்து  மின்சமிக்கைகள் மூலம் செய்திகளை மூளைக்கும் உடலுறுப்புகளுக்கும் பரிமாற்றம் செய்கிறது. ஆனால் உடலுக்கு சேதம் ஏற்படும் சூழல் ஏற்பட்டால் மட்டுமே இவை இயங்கத் தூண்டப்படும்.

    உதாரணமாக, ஒரு ஊசியின் முனையை மெதுவாகத் தொட்டவுடன் நமக்கு வலி தெரியாது, வழக்கமான உணர்வு அதைத் தொடுகிறோம் என மட்டுமே நமக்கு அறிவுறுத்தும்.  ஆனால் முனையை மேலும் அழுத்தினால் நோசிசெப்டர்ஸ் நரம்பு செல்களின் இயக்கம் தூண்டப்படும். உடலுக்கு சேதம் ஏற்படும் நிலை ஏற்படும் பொழுது அப்பகுதியில் உள்ள செல்கள் அராக்கிடானிக் அமிலம் (arachidonic acid) எனப்படும் வேதிப்பொருட்களை வெளியிட்டு நோசிசெப்டர்ஸ் நரம்பு செல்களை இயங்கத் தூண்டும். அந்த நரம்பு செல்கள் வலியின் தீவிரத்தை நமக்கு தெரியப்படுத்தும்.

    வலியின் தீவிரம் என்பதும்  நிலையான ஒன்றல்ல.  வேதிப்பொருட்களால் அதன் தீவிரத்தை மாறுபடுத்த முடியும்.  வேதிப் பொருட்களிலான மருந்துகளை நாம் வலிநிவாரணிகளாக  உபயோகப்படுத்துவதும்  அதனால்தான். இதனால் வலியின் தீவிரத்தை நாம் குறைக்கிறோம். “ஆஸ்ப்ரின்” மற்றும் “ஐபிப்ரோஃ பின்” மருந்துகள் வலியின் தீவிரத்தைக் குறைக்க உதவுகிறது. 

     

    வலியை உணர்வது எப்படி? 

    உடலுக்கு சேதம் ஏற்படும் நிலை தோன்றினால் அப்பகுதியில் உள்ள செல்கள் அராக்கிடானிக் அமிலத்தினை உற்பத்தி செய்யும். திசுக்களில் உள்ள “காக்ஸ்-1 மற்றும் காக்ஸ் – 2 என்ற நொதிப்பொருட்கள்” (COX-1 and COX-2 enzymes) இவ்வாறு வெளிக்கிளம்பும் அராக்கிடானிக் அமிலத்தினை “ப்ரோஸ்ட்டாகிலாண்டின்ஸ்” (prostaglandins-H2) எனப்படும் வேதிப்பொருளாக மாற்றும்.  தொடர்ந்து ப்ரோஸ்ட்டாகிலாண்டின்ஸ் வேறு பற்பல வேதிபோருட்களாக தொடர்ந்து மாறுதல்களை  அடைந்து உடலில் சுரம், அழற்சி, வீக்கம் ஏற்படுத்துவது எனப் பல வகையில் செயல் படத் தொடங்கும்.  

    ஒவ்வொரு நொதிப் பொருளுக்கும் வினையூக்கி பகுதி (active site) என்ற ஒரு பகுதி ஒன்று உண்டு. இந்தப் பகுதியில்தான் வேதியியல் வினைமாற்றங்கள் நிகழும்.  காக்ஸ்-1 மற்றும் காக்ஸ் – 2 என்ற நொதிப்பொருட்களின்  வினைப்பகுதியில், பாதிக்கப்பட்ட செல்கள் வெளியேற்றிய அராக்கிடானிக் அமிலம் கச்சிதமாக வந்து பொருந்தும். இதன் விளைவு, நோசிசெப்டர்ஸ் நரம்பு செல்கள்  இயங்கத் தூண்டப்பட்டு வலியை நாம் உணர்வது.

     

    Pain

    நியூரோபத்திக் வலி (Neuropathic pain) என்பது நரம்பு செல்களே சேதம் அடைந்தால் உண்டாவது. இந்த வலி உண்டாக உடலுக்கு வெளியில் இருந்து தூண்டப்படும் பாதிப்பு தேவையில்லை. 

     

    வலிநிவாரணிகள் எவ்வாறு வேலை செய்கிறது?

    ஆஸ்ப்ரின் மற்றும் ஐபிப்ரோஃ பின் மருந்துகள் உட்கொள்ளப்பட்டபின் அவை இரத்தத்தில் கலந்து உடலின் அனைத்துப் பகுதிகளுக்கும் செல்லும், அதுபோல பாதிக்கப்பட்ட உடலுறுப்பினையும் அடையும்.  அங்கு அது காக்ஸ்-1 மற்றும் காக்ஸ் – 2 என்ற நொதிப்பொருட்களின் வினைப்பகுதியினை அடைந்து அங்கு அராக்கிடானிக் அமிலம் பொருந்த விடாமல் அப்பகுதியை செயலிழக்கச் செய்யும்.

    இவ்வாறு செயலிழக்க செய்வதை ஆஸ்ப்ரின் மற்றும் ஐபிப்ரோஃ பின் மருந்துகள் வேறு வேறு விதமாக நிகழ்த்தும்.  ஆஸ்ப்ரின் வினைப்பகுதியின் இடத்தில் சிதைவடைந்து அந்த வினைப்பகுதியின் இடத்தையும் அடைத்துவிடும், அந்த நொதிகளை நிரந்தராமாக செயலிழக்கச் செய்யும்.

    ஐபிப்ரோஃ பின் அவ்வாறு சிதைவடையாவிட்டலும், காக்ஸ்-1 மற்றும் காக்ஸ் – 2 என்ற நொதிப்பொருட்களின் வினைப்பகுதியினை அடைந்து அந்த இடத்தில் அது இருக்கும் வரை அராக்கிடானிக் அமிலத்தினைப் பொருந்த விடாது தடை செய்யும். இந்த வினையில் காக்ஸ்-1 மற்றும் காக்ஸ் – 2 என்ற நொதிப்பொருட்களின் தன்மை மாறுபடாது ஆனால் தற்காலிகமாக செயலிழக்கும்.

    இவ்வாறு வலிநிவாரணிகள் வெவ்வேறு வகையில் செயல் பட்டு  நொதிப்பொருட்களை  வெவ்வேறு வகையில் செயலிழக்க செய்து,  நொதிப்பொருட்களை அராக்கிடானிக் அமிலத்துடன் வினை செய்வதை தடுப்பதன் மூலம் வலியின் தீவிரத்தைக் குறைத்து வலியில்  இருந்து நமக்கு நிவாரணத்தைத் தருகின்றன.

    வலியை உணர்வதிலும் அதைக் கட்டுப்படுத்துவதிலும் நமது மூளையும்  பெரும்பான்மையான பங்கு வகிக்கிறது. உதாரணத்திற்கு  வலியைப்பற்றியே அதே கவனத்தில் இருந்தாலோ அல்லது நாம் மிகவும் சிரமமான சூழ்நிலையில் இருந்தாலோ நாம் வலியின் தீவிரம் அதிகம் இருப்பது போல உணர்வோம் 

    ________________________________________

    நன்றி: TED Ed – How Do Pain Relievers Work?

    படம் உதவி: http://static3.businessinsider.com/image/4f3552766bb3f79b6c000050/headache.jpg

     

     

    Share
  • நல்வாழ்க்கை வாழ ‘வழிகாட்டிகள்’:: தொடர்-21

     

    பெருவை பார்த்தசாரதி

    வருடக்கணக்கில், இரவு, பகல் பாராமல், அதிகாலை முதல்  அந்தி சாயும் வரை, அரசியல் கலந்த அலுவலகத்தில் பணியாற்றுபவர்களுக்கு என்றைக்குமே மகிழ்ச்சியும், மனஅமைதியும் என்பது மற்றவர்களைவிட சற்று குறைவாகவே இருக்கும்.  ஏனென்றால் நகரங்களில் பெருகிவரும் மக்கள் கூட்டம், எந்திர வாழ்க்கை, எதையோ தேடிக்கொண்டு வாகன நெறிசலோடு ஓடிக்கொண்டேயிருக்கும் சாமானியர்கள், சம்பளத்திற்காக உழைத்தது போக, கிடைக்கும் சிறிது ஓய்வு நேரத்தையும் மறுபடி அலுவலகத்திலேயே செலவிட்டு (Overtime) மேன்மேலும் பொருள் ஈட்டுவது… ஒரு பக்கம். முழுநேரமும் அலுவலகத்தில் செலவிட்டு களைப்புடன் வீட்டுக்கு வரும்போது, தொலைக்காட்சிப் பெட்டிக்கு முன்பு மணிக்கணக்கில் மேன்மேலும் உடலுக்கு உபாதைகள் வரும் அளவில், குரோதம், சண்டை, வக்கிரங்கள் நிறைந்த மெகா சீரியல் பார்ப்பது… இன்னொரு பக்கம்.

     

    இப்படி நமக்கு அபூர்வமாகக் கிடைக்கும் மிகக் குறைந்த நேரத்தையும் பயனற்ற ஏதாவதொன்று சாப்பிட்டு விடுகிறது. ஆக ஒரு வகையில் நற்பொழுதுபோக்கு என்பது நம் வாழ்வில் அறவே இல்லாமல் போய்விடுகிறது. மனதுக்கு இதமளிக்கும் ஒரு விஷயத்தைத் தெரிந்துகொள்வதற்கோ, நல்ல விஷயங்களைப் படித்துப் பயன்பெறவோ, இன்றய அவசர உலகத்தில் நல்ல நேரம் பார்க்க வேண்டிய கட்டாயத்துக்கு நாம் தள்ளப் பட்டிருக்கிறோம் என்பதே உண்மை. மனதுக்கும் நாம் பின்பற்றுகின்ற ஒழுக்கத்துக்கும் நிறையவே சம்பந்தம் உண்டு, மனதைப் பின் தொடர்ந்துதான் நல்லொழுக்கமும், பண்பும் அமைகின்றன.

     

    தமிழ் இலக்கணத்தில் திணை என்பது ஒழுக்கத்தைக் குறிக்கும் என்பதை நம் பள்ளிப்  பருவத்தில் படித்திருக்கிறோம். உயரிணை, அஃறிணை என்ற பாகுபாடு நல்லொழுக்கத்தைத் அடிப்படையாகக் கொண்டு பிரிவு செய்யப்பட்டது. நல்லொழுக்கமுடைய மனித உயிருக்கு மட்டுமே உயரிணை, மற்ற உயிர்களெல்லாம் அஃறிணை. மனிதனுக்கு நல்லொழுக்கமே அடிப்படை. மனிதனிடத்தில் மறைந்து கிடக்கும் ஆக்க சக்திகளை பூரணமாக உபயோகப் படுத்திக் கொள்ள மனிதனுக்கு இன்றியமையாத துணை ஒழுக்கம். ஒழுக்கம் என்பது மனதோடு உறவாடுவது. மனதைக் கட்டுப்படுத்தி ஒழுக்கத்தில் சிறந்து விளங்குபர்வர்கள்தான் உத்தம சீலர்களாக உலகத்தால் போற்றப்படுகிறார்கள். விஞ்ஞானத்திலே வியத்தகு முன்னேற்றத்தைக் கொண்டுவந்த அறிஞர்கள், மனதை ஒரு சீரான நோக்கில் செலுத்தினால் மட்டுமே சாதனை புரிவதோடு மட்டுமல்லாமல் பிறருக்கும் வழிகாட்ட முடிகிறது. மண்ணில் தோன்றிய எந்த ஒரு உயிரினத்துக்கும் இயற்கையாகவே ஒரு ஆற்றல் பிறவியிலேயே அமைந்துள்ளது. சிந்தனை என்கிற ஒப்பிடமுடியாத ஆற்றலை மற்ற உயிரினங்களிலிருந்து வேறுபடுத்தி, மனிதனுக்கு அமைந்திருப்பதும் இயற்கையின் அற்புதமான படைப்புகளில் ஒன்று என்று கூறலாம். சாதாரண மனிதர்கள், அதை நெறிமுறைப்படுத்தும் போதுதான் “மாமனிதர்கள்” என்ற பட்டத்தோடு மற்றவரிடமிருந்து வேறுபடுகிறார்கள். இத்தகய வியத்தகு ஆற்றலைப் பெற முயற்ச்சிக்கும் போது, கடவுளின் அருளும் துணை நின்றால் எவ்வளவு பொருத்தமாக இருக்கும் என்பதை மஹாகவியின் சிந்தனையின் மூலமாக அறிந்து கொள்ளமுடியும்.

     

    மஹாகவி பாரதியின்  வாழ்க்கை வரலாற்றை அலசிப் பார்த்தோமானால், அவர் தன் மனது ஒரு நிலையில் இல்லாதபோது, அமைதியாக ஓரிடத்தில் அமர்ந்து சற்று நேரம் தியானித்த பின்பு சிந்தனையில் உதித்ததை உடனே ஒரு பேப்பரில் எழுதி விடுவாராம். அப்போது அவர் மனக்கண் முன்னே மாயக்கண்ணனே வந்துதிப்பானாம். மற்ற தோழர்களோடு, மாயக்கண்ணனையும் தன் நெருங்கிய தோழனாகக் கொண்டு, மனதால் நலிவுற்ற நண்பர்களுக்கு தமது பாடல்கள் மூலம், வலிமை சேர்க்கிறார். “கண்ணன் என் தோழன்” என்ற பாடலில்…. ஊனை வருந்திடு நோய் வரும் போதினில், உற்ற மருந்து சொல்வான், நெஞ்சம் ஈனக்கவலைகளைய்திடும் போதில் இதஞ்சொல்லி மாற்றிடுவான் பிழக்கும் வழி சொல்ல வேண்டுமென்றாலொரு, பேச்சினிலே சொல்வான், உழைக்கும் வழி வினையாளும் வழிபயன் உண்ணும்வழியுரைப்பான்……..என்று நமது மனம் எப்போதெல்லாம் சஞ்சலப்படுகிறதோ, அப்போதெல்லாம் மனதுக்கு இதமளிக்கின்ற செவிக்கும் சிந்தனைக்கும் விருந்தாக அமைந்த ஒரு பாடல் இது. மனம் ஒரு நிலையில் இல்லாதபோது, எண்ணிய முடிதல் வேண்டும், நல்லவே எண்ணல் வேண்டும், திண்ணிய நெஞ்சம் வேண்டும், தெளிந்த நல்லறிவு வேண்டும், பண்ணிய பாவம் எல்லாம் பரிதி முன் பனியே போல, நண்ணிய நின்முன் இங்கு நசித்திடல் வேண்டும் அன்னையே! என்றவாறு மனதில் நல்லெண்ணம் தோன்றிட மகாசக்தியை தியானிப்பது நமக்கும் நலம் பயக்கும் அல்லவா!…

     

    ஒரு நூற்றாண்டு கால கனவுக்குப் பின் தற்போதுதான்  ‘நாசா’ (NASA) விஞ்ஞானிகளுக்கு தங்கள் கனவு நனவாகியிருக்கிறது. சமீபத்தில் செவ்வாய்க் கிரகத்துக்கு ‘கியூரியாசிட்டி’ (CURIOUSITY) என்கிற செயற்கைக்கோள் விண்கலம் சென்றிறங்கியது விஞ்ஞான முன்னேற்றத்துக்கு மேலும் ஒரு மைல்கல்லாகக் கருதப்படுகிறது. பலகோடி மைல்களுக்கு அப்பால் பயணிக்கின்ற விண்கலத்தைக் தனது கட்டுக்குள் வைப்பது மனிதன். விண்கலத்தின் அத்துணை செயல்களையும் தனது கட்டளைகளாலும் சமிஞ்கைகளாலும் கட்டுப்படுத்தும் மனிதனுக்கு தன்னுடைய மனதைக் கட்டுப்படுத்துவது பெறும் சவாலகவே உள்ளது என்பதை வியந்து தெரிவித்திருந்தார்கள். மனத்த்தையும், மனநலத்தையும் பேணிக்காப்பதின் மூலம், தன்னம்பிக்கையோடு சுய ஆற்றலை வெளிக்கொணர முடியும் இவர்கள் கூற்று. முனிவர்களாலும், ரிஷிகளாலும் மட்டும்தான் மனதைக் கட்டுப்படுத்த முடியும், இதெல்லாம் நம்மைப் போன்ற சாமான்ய மனிதர்களால் முடியாது என்று ஒதுக்கி விடாமல் முயற்சித்தால் தெளிவான சிந்தனையை உறுதியாக அடையமுடியும் என்பதை நமது முன்னோர்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே நம்மை உணரச்செய்திருக்கிறார்கள்.

     

    மாமுனிகளும், சித்தர்களும், ஞானிகளும் தம்மை நாடி வருபவர்களுக்கு ஆசிர்வாதம் செய்வதைப் பார்க்கிறோம். சிரசைத் தொட்டு தங்களது பிராண சக்தியை பாதிக்கப்பட்டவர்கள் உடலில் செலுத்தும்போது ஆச்சர்யப்படும் வகையில் சில நோய்கள் பறந்தோடிவிடுவதாகப் படித்திருக்கிறோம். இது எவ்வாறு சாத்தியமாகிறது என்று சிந்தித்தோமானால், அவர்கள் தங்கள் மனதைத் தூய்மையாக வைத்திருந்து, ஒருநிலைப்படுத்தி, உயரிய சிந்தனையாலும், திண்மையான எண்ணத்தாலும் சேகரித்து வைத்துள்ள இத்தகய சக்தியை தக்க சமயங்களில் வேண்டுமென்னும்போது பயன் படுத்துவதால் வியத்தகு சாதனைகளைப் புரிய முடிந்ததை இதிகாசங்களில் படித்தாலும் பலர் இதை நம்ப மறுப்பதைக் காண்கிறோம். ஆனால் இன்றைய காலகட்டத்தில் இதே செய்முறையை சற்று வித்தியாசமாக “பிரானிக் ஹீலிங்” (Pranic Healing) என்று ஆங்கிலத்திலே பெயரிட்டு அற்புதங்களை நிகழ்த்துவதை நாம் அனுபவித்து உணரும்போது அதை எளிதாக நம்பி விடுகிறோம். இது எல்லாமே மனதோடு சம்பந்தப் பட்டது. இவை எல்லாவற்றிற்கும் மனது தான் மூலக்காரணம். மனம் தூய்மையாயிருந்தால் மட்டுமே இத்தகய சக்திகளைப் பெற்று பிறருக்கு உதவ முடியும். மனதில் எழுகின்ற அளவுக்கு மீறிய கோபம், காழ்ப்புணர்ச்சி, பந்த பாசம் இணக்கம் போன்றவை கூட நமது உடல் நலத்தைப் பாதிக்கிறது என்பதுதான் மனநல மருத்துவ மேதைகளால் சொல்லக்கூடிய முக்கிய காரணங்களாகும். மனதைப் பக்குவப்படுத்தி விட்டால் சவால் மிகுந்த உலகத்தில் வெற்றிபெற முடியும் என்பதை இன்று செயல்படும் யோக மையங்கள் தனது முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளன. ஆனால் எல்லாவற்றுக்கும் ஆதாரமான மனோசக்தியைப் பெறுவது எளிதல்ல என்பது யாவரும் அறிந்ததே.

     

    தற்போது மனநல மேம்பாட்டிற்காக பல ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. பாரத நாட்டின் பண்பாட்டிற்கு ஏற்றபடி யோகா, தியானம், ஆழ்நிலை தியானம் போன்றவை இன்றும் உலகெங்கிலும் நமது சிறப்பை எடுத்துக்காட்டுகின்றன. எண்ணற்ற ஒழுக்க சீலர்கள் இன்றும் நம்நாட்டிற்கு மட்டுமல்லாமல் உலகிற்கே வழிகாட்டியாக அமைந்திருப்பதை இன்று நடைமுறையில் நாம் கண்கூடாகப் பார்த்துவருகிறோம். மனதை உயர்ந்ததாக வைத்துக்கொண்டால் இலட்சியம் உயர்ந்ததாக அமையும். ஒருவரது வாழ்க்கை எவ்வாறு அமையுமென்றால் அவரது மனதைப் பொருத்தே அமையும். மனம் மகிழ்ச்சியோடு இருக்கும் போதுதான் வாழ்த்துகளும் பாராட்டுகின்ற மனமும் வரும். பண்டிகைக் காலத்தில், சிலரிடம் வாழ்த்து வாங்க எத்தனிக்கிறோம். சிலரிடம் ‘இவர் நல்ல உள்ளம் கொண்டவரல்ல’ என்று சொல்லி விலகிவிடுகிறோம். ஒருவரது மனதைப் பொருத்தே ‘நல்லவர்’, ‘கெட்டவர்’ என்ற பாகுபாடு ஏற்படுகிறது. எல்லாவற்றிற்கும் அடிப்படையாக அமைவது உளப்பாங்குதான் என்பதை இராமாயணத்தில் இராவணனின் மனநிலையும், விபீஷணனின் மனநிலையும், தருமரின் மனநிலை, துரியோதனன் மற்றும் திருதராட்டினனின் மனநிலையைக் கருத்தில் கொண்டு எளிதாக யூகிக்க முடியும்.

     

    மஹாகவியைப் போலவே  கண்ணன்மீது பேரன்புகொண்ட இன்னொருவர், 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வைணவ ஆச்சார்யர்களில் ஒருவரான ஸ்ரீகிருஷ்ணபாதர். இவருக்கு இன்னொரு பெயர் பெரியவாச்சான் பிள்ளை. ஆழ்வார் பாசுரங்களுக்குள் நுழைந்து ஆழமாக சிந்தித்து உரை எழுதியவர். வியாக்கியானத்தில் வல்லவர். இவருடைய வியாக்கியானத்தில் மனிதப் பிறவியின் சிறப்பை விளக்கியிருக்கிறார். மனிதன் மனிதனாக வாழவேண்டும் என்றால், தூய்மையான மனம், தெளிவான சிந்தனை, நேர்மறை எண்ணங்கள் இவை மூன்றும் ஒன்று சேரவேண்டும், அது மனிதனை உன்னதமான உயர்நிலைக்கு எடுத்துச் செல்லும் என்பதை பின்வரும் பாடல் மூலம் அர்த்தம் கொள்ளலாம். ஐந்தறிவு ஜீவிகளிலிருந்து மேம்பட்டு மனிதராக வேண்டுமெனில், சேவை மனப்பான்மையோடு எப்படி நமது மனதைப் பக்குவப்படுத்த வேண்டுமென்பதை மூன்று நிலைகளில் எடுத்துச் சொல்லுகிறார்.

     

    பிறரை இம்சித்துத் தன் வயிற்றை

    வளர்க்க வேணும் என்றிருக்குமவன்  அதமன்,

    பிறரும் ஜீவிக்க வேனும், நாமும் ஜீவிக்க

    வேணும்  என்றிருக்குமவன் மத்தியமன்

    தன்னை அழிய மாறியாகிலும் பிறர்  ஜீவிக்க

    வேனும்  என்னுமவர் உத்தமன்.

     
    சிறிய மற்றும் பெரிய பல்சக்கரங்களை ஒன்றுக்கொன்று தொடர்பு படுத்தி கடிகாரத்தை இயங்கச்செய்யும் மின்சக்தியைப் போல, எந்தப் பொருளையும் கண்ணால் பார்த்து களிப்படைவதும், வாயால் தின்பண்டங்களைச் சுவைத்து மகிழ்வதும், மூக்கால் வாசனை நுகர்ந்து முகம் மலர்வதும், மெய்யால் உற்றறிதலும், காதால் நன்னெறிகளைக் கேட்டலும் சரிவர நடைபெற வேண்டுமானால் “நமது உள்ளம்” அதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்பதே நாம் அனைவரும் கண்டுணரும் உண்மை.

    தொடரும்

    படத்திற்கு நன்றி :

    http://www.successories.com/categories/Motivational-Posters/14/1

     

    Share
  • தெரியாதது…

     

      செண்பக ஜெகதீசன்

    தென்றலின் வரவு

    தெரிகிறது

    தலைசாய்க்கும் இலை அசைவில்..

     

    கதிரவன் வரவுக்குக்

    கட்டியம் கூறும்

    கதிர்க் கரங்கள்..

     

    பருந்தின் வரவைப்

    பார்த்திடலாம்

    பறக்கும் தாய்க்கோழியின்

    பாசக் கண்களில்..

     

    மழை வரவின்

    முன்னோடியாய்

    மின்னலும் இடியும்..

     

    இறக்கும் மனிதனைக் காட்டிடும்

    இதயத் துடிப்பு..

     

    இருக்கும் மனிதனின்

    இதயத்தில்

    இருப்பதைத் தெரியத்தான்

    எதனாலும் முடியவில்லையே…!

    படத்துக்கு நன்றி

     http://www.reneedmd.com/american-heart-month/

         

    Share
  • தொல்லை காட்சி- லிட்டில் மாஸ்டர்ஸ்- சூப்பர் சிங்கர்- பள்ளிக்கூடம்

     

    மோகன் குமார்
     
    சூப்பர் சிங்கர் அடுத்த சீசன்

    ஒரு நிகழ்ச்சியை எப்படி பிரபலப்படுத்துவது என்று  விஜய் டிவியிடம் தான் கத்துக்கணும். சூப்பர் சிங்கர் ஜூனியர்  முடிந்து சிறு இடைவெளிக்கு  பின் சூப்பர் சிங்கர் சீனியர் துவங்க உள்ளது. இதற்கான ப்ரோமோ மிகவும் கவரும் வண்ணம் செய்துள்ளனர். சென்ற முறை பைனல் வரை சென்ற சந்தோஷ் சாய்சரண் உள்ளிட்டோர் இன்று திரை துறையில் பிரபலமாகி விட்டனர் என்பதை காட்டும் வண்ணம் அவர்கள் நால்வரும் பாடிய திரை பாடலை காட்டி, அது என்ன படம் என்று டைட்டிலும் போட்டு காட்டும் போது இசையில் ஈடுபாடு கொண்டோருக்கு நாமும் பைனல் வந்தால், பின்னணி பாடகராகி விடலாம் என்று ஈர்ப்பு வருவது இயற்கை தானே ! இந்த விளம்பரத்தை சாய் சரண் பாடிய பாடலின் வரியான ” நண்பா வா நண்பா ” என்று பாடி அடுத்த் சீசனுக்கு அப்ளிகேஷன் அனுப்புங்கள் என்று முடிப்பது ரசிக்கும் படி இருக்கு.

    முக நூல் கைது பற்றிய விவாதம்

    சன் செய்திகளில் முகநூலில்  பால் தாக்கரே பற்றி எழுதி  சிறைக்கு சென்ற இரு பெண்கள்  பற்றிய விவாதம் நடந்தது. அதில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ” லைக் பட்டனை அமுக்கியவர்களை கூட சிறையில் போடுவது சரியா? நூறு பேர் லைக் போட்டால், அந்த நூறு பேரையும் சிறையில் வைக்க முடியுமா?” என்று கேட்டார். அதற்கு பதில் சொன்ன வழக்கறிஞர், ” நூறு பேர் சட்ட மீறலான ஒரு முக நூல் செய்தியை லைக் செய்தால், அதனை சைபர் terrorism என கருதி அந்த நூறு பேரையும் கைது செய்ய முடியும் என்றார்.

    எப்படியெல்லாம் மிரட்டுறாங்கப்பா !

    அவசர சிகிச்சை  
     
    ஜெயா டிவியில் சனி காலை ஒன்பது மணி அளவில் அறுவை சிகிச்சையை நேரடியே காட்டுகிறார்கள். சதை பிய்த்து ரத்தம் தெரிகிற நிகழ்ச்சி பார்க்க சற்று பயமாய் தான் இருக்கிறது. ஆனால் எனக்கு தெரிந்த சிலர் இந்த நிகழ்ச்சி விடாமல் பார்க்கிறார்கள். “எந்தெந்த ஆப்பரேஷன் எப்படி செய்கிறார்கள்; என்ன காம்ப்ளிகேஷன் வரலாம்; எப்படி தவிர்க்கணும்” என்ற விஷயங்கள் தெரியும் என்கிறார்கள் அவர்கள். உங்களுக்கு தைரியமான மனது இருந்தால் இந்த நிகழ்ச்சி பாருங்கள். நிச்சயம் மருத்துவ துறையில் பல விஷயம் அறியலாம் !

    பிளாஷ்பேக்: பெண் – சீரியல்

    டிவிகளில் முதலில் சீரியல்  வர ஆரம்பித்த போது வாரம்  ஒன்று என்கிற அளவில் தான் வர ஆரம்பித்தது. ஒவ்வொரு  வாரமும் அரை மணிக்கு  ஒரு சீரியல் இருக்கும். அதே நாள் அடுத்த வாரம்  அதன் கதை தொடரும்.

     

    பல்வேறு நடிகைகள் இயக்கிய சீரியல் பெண். ஒவ்வொரு எபிசோடும் ஒவ்வொரு  ஹீரோயின் இயக்கினார். அந்த வகையில் சுகாசினி, ரேவதி, ரோகினி போன்றோருக்கு இது தான் இயக்கத்தின் முதல் படி என்று சொல்லணும். இதில் வந்த சில சிறுகதைகள் மிக அருமையாய் இருந்தது. சுஜாதா கதைகளும் இரண்டோ மூன்றோ வந்த நினைவு..

    டிவியில் பார்த்த  படம்: பள்ளிக்கூடம்

    சற்று மெலோ டிராமாவான  படங்கள் தான் அதிகம் எடுக்கிறார்  என்ற குற்றச்சாட்டு உண்மையாக இருந்தாலும், தங்கர் பச்சான் இயக்கிய படங்களில் அழகி, சொல்ல மறந்த கதை மற்றும் பள்ளிக்கூடம் ஆகிய மூன்றுமே எனக்கு பிடித்த படங்கள். சமீபத்தில் சன் டிவியில் பள்ளிக்கூடம் படம் மீண்டும் பார்த்தேன்.

    நாம் படித்த பள்ளிக்கு  ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்கிற கான்செப்ட் உண்மையில்  மிக அருமையான ஒன்று. படம் பார்த்து முடிக்கும் போது நமக்கும் நம் பள்ளியை பார்க்கவும், அந்த பள்ளிக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்றும் தோன்றுகிறது. ஆனால் எத்தனை பேர் அதனை அடுத்த கட்டத்துக்கு எடுத்து போகிறோம் என்பது கேள்விக்குறியே.

    தங்கர் படங்களில் நடிப்பதை முற்றிலும் நிறுத்தி விட்டு, பிற நடிகர்களை வைத்து இந்த மண்ணின் கதைகளை தொடர்ந்து இயக்க வேண்டும் என்பதே நம் விருப்பம்.

     
    லிட்டில் மாஸ்டர்ஸ்  
     
    ஜெயா டிவியில் நடக்கும் டான்ஸ் ஷோ- லிட்டில் மாஸ்டர்ஸ். நடன இயக்குனர் ரகுராம் மற்றும் நடிகை மும்தாஜ் தான் ஜட்ஜ்கள். இவர்களோடு பிரிதிவிராஜ் வேறு. நாங்கள் பார்த்த எபிசோடில் அவர் devil மாதிரி வேஷத்தில் வந்து மிரட்டினார். பிரிதிவிராஜை சாதரணமா பார்த்தாலே சற்று பயமாய் தான் இருக்கும் இதில் devil வேஷத்தில் கேட்கவே வேணாம் !
     
    இந்த நிகழ்ச்சியில் நிஜமா ஏழு அல்லது எட்டு வயது குட்டி பசங்க தான் ஆடுறாங்க (விஜய்யில் -பதிமூணு பதினாலு வரை ஜூனியர் என்பார்கள் ). ஜட்ஜ்கள் மார்க் போடாமல் சூப்பர், சுப்ரீம், சுமார் என்று கிரேட் சொல்றாங்க  
     
    பசங்க என்னவோ நல்லா தான் ஆடுறாங்க. ஆனா ஏனோ நிகழ்ச்சி தான் விஜய் டிவி ப்ரோகிராம்கள் அளவு பாப்புலர் ஆகலை.

     

     

     

    Share
  • நந்தியாவட்டை

    பர்வதம் பாட்டியின் தொணதொணப்பு நின்றபாடில்லை. நேற்று காலையில் இருந்து துவங்கிய இந்தத் தொணதொணப்பு நிற்காது போலிருக்கிறது.  வயதான காலத்தில் பாட்டிக்கென்று என்ன இருந்து விடப் போகிறது? உடல் நலம் பேணுவதில் ஏதாவது உதவி கேட்பாளாயிருக்கும்.

    “என்ன பாட்டி? இப்படித் தொந்தரவு குடுக்குற ஆளாயிருந்தா, நீ அத்தையோட வீட்லயே இருந்துக்க. இங்க வராத. இப்ப என்ன வேணும் உனக்கு?”

    “தங்கம், டேய்… இராசா, உங்க தாத்தன் நெனப்பைக் கூட்டியாறப் பொறந்த ஆளுடா நீ. பாட்டிக்குக் கண்ணு ரெண்டும் எதோ மசமசன்னு இருக்குடா.  விஜயம்மா வீட்டுக்குப் போயி நாஞ்சொன்னேன்னு சொல்லு, நந்தியாவட்டைப் பூ பறிக்க விடுவாங்க. கொஞ்சம் நிறையவே பறிச்சுட்டு வாடா!”

    பாட்டிக்காகப் பூப்பறிக்க விஜயம்மா வீட்டுக்குப் போனான். கம்பிகளாலான வாயிற்கதவு உள்பக்கமாகத் தாளிடப்பட்டு இருந்தது. திரும்பிப் போகலாமா, அல்லது உள்பக்கமாகக் கைவிட்டுத் திறந்து கொண்டு உள்ளே போகலாமா என யோசிக்க முற்பட்ட கணத்தில்தான் கவனித்தான். கைக்குழந்தையை இடுப்பில் வைத்தபடி நின்றிருந்தாள் அக்கா. கன்னத்தில் குழி விழச் சிரித்தது இடுப்பில் இருந்த அவளது குழந்தை.

    “நான்… வந்து… இரங்காச்சாரி கடைக்குப் பக்கத்துல இருக்குற சீதாராமய்யர் பையன் வசந்த்!”

    “தம்பி, உள்ள வாப்பா. உன்னை நல்லாத் தெரியும். உள்ள வாப்பா. உங்க அக்கா சந்திரா நல்லா இருக்காளா? பர்வதம் பாட்டி எப்படி இருக்காங்க? இப்பவெல்லாம் இராமர் கோயிலுக்கு வர்றதே இல்லை போல!”

    “பாட்டி, கொஞ்சநாள் சுசீலா அத்தை வீட்டுக்கு கும்பகோணம் போயிருந்தாங்க அக்கா!”

    “உட்காரு. வர்றேன்!”, முன்னறையில் இருந்த பிரம்பு இருக்கையைக் காட்டிச் சென்றிருந்தாள் அவள். இறக்கிவிடப்பட்ட குழந்தை அங்கிருந்த பந்தினை எடுத்து அவனை நோக்கி எறிந்தது. பதிலுக்கு அவனும் குழந்தையை நோக்கி உருட்டி விட்டான்.  சற்று நேரத்தில் விஜயம்மா பாட்டி வந்தாள், “வாப்பா! சங்கரூ…”

    “பாட்டி, நான் வசந்த். எங்கண்ணன் பேர்தான் சங்கர். அவன் சிந்தாமணியில அக்கவுண்டன்ட் வேலை பாக்குறான் பாட்டி!

    ”அட, சீதாராமனோட ரெண்டாவது பையனா நீயி? ஆளுகெல்லாம் ஒசரத்துக்கு வந்துட்டீங்கப்பா. ஆமா, சொர்க்க வாசல் திறப்புக்கு வந்ததுதான். அப்புறம் மேலு பர்வதத்தைப் பாக்கவே முடியலையே? உடம்புக்கு சொகமில்லையா கண்ணூ?”

    “சுசீலா அத்தையப் பார்க்கப் போயிருந்தாங்க பாட்டி!”

    “ஓ, அதான பார்த்தேன்!”, பாட்டி சொல்லி முடிக்கவும் தண்ணீர்க் குவளையுடன் நின்றிருந்தாள் அக்கா. “லோக்க போய்யி, பின்னாண்டிகி காப்பி ஏசி எத்திகினி ஒச்சேனு சுதா! மாட்டாடிகினு உண்டு நுவ்வு”, விறுக்கென எழுந்து சென்றாள் பாட்டி. பாட்டியின் மாட்லாடுதலில் இருந்து தெரிகிறது  அந்த அக்காவின் பெயர் சுதா என்று.

    “தம்பி, நீ எந்தப் பள்ளிக்கூடத்துல படிக்கிற? மணீஸ் ஸ்கூலா?”

    “சபர்பன்தானுங்க அக்கா. ப்ளஸ் ஒன்!”

    “அட, ஒட்டுமொத்த இராம்நகரே சபர்பன்தான் போலிருக்கு! உங்க அக்காவும் நானும் பத்து வருசம் ஒரே வகுப்புதாம்ப்பா. சரியான லொல்லு பிடிச்சவ அவ!”, சொல்லிச் சிரித்தாள் சுதா. என்னவென்று புரியாமலே அருகிலிருந்த குழந்தையும் வாய் விட்டுச் சிரித்தது. நடந்து கொண்டிருந்த அளவளாவலில் தன்னையும் இணைத்துக் கொண்டாள் புரூக்பாண்ட் காப்பியுடன் திரும்பி வந்த விஜயம்மா பாட்டி.

    சற்று நேரம் வீட்டு முன்னறையில் பேசிக் கொண்டிருந்த அவர்கள், வீட்டின் முன்புறமிருந்த பூக்காட்டில் இருக்கும் நந்தியாவட்டைப் பூக்களைப் பறித்துக் கொண்டிருந்தார்கள்.  சுதா, உள்ளே சென்று பொரி வாங்கி வந்த மழைக்காகிதப் பையில் பூக்களை இட்டு நிரப்பிக் கொடுத்தாள்.

    “வசந்த், எனக்கும் ஒரு உதவி வேணும். கல்கியில ஜெயலலிதா எழுதின உறவின் கைதிகள் தொடர்கதையச் சேகரம் செஞ்சி பைண்ட் போட்டு வெச்சிருக்கிறதா மங்களாதேவி சொன்னா. உங்க பக்கத்து வீடுதானே? நாளைக்கு இந்தப் பக்கம் நீ வந்தியானா, அதை வாங்கிட்டு வந்து தர முடியுமா வசந்த்?”

    ”சரிங்க அக்கா, கண்டிப்பா வங்கிட்டு வர்றேன்!”, அன்று துவங்கியது சுதா அக்காவுக்கும் அவனக்குமான பிணைப்பு.

    அக்காவுக்கு ஒரே மகள் சுமதி. சுமதிக்கு அப்பா இல்லை என்பதைவிட, அக்காவுக்குக் கணவன் இல்லை என்பதுதான் ஊராருக்கு முதன்மை.  சுதா அக்காவைப் பற்றி சுதா அக்காவிடமே கேட்டுத் தெர்ந்து கொள்ள மனம் வரவில்லை வசந்த்துக்கு. மயிலாடு துறையிலிருந்து அவ்வப்போது வரும் சந்திராக்கா சொல்லித்தான் தெரிந்து கொண்டான் நிறைய. விஜயம்மா பாட்டி, சுதா அக்கா,  சிறுமி சுமதி என அவர்கள் குடும்பத்தைப் பார்ப்பவர் எவர்க்கும் கனிவு பிறக்கும்.

    பின்னாளில் வசந்த்துடன் படிக்கும் காட்டூர் சேகரும் அவனுடன் சேர்ந்து கொண்டான். வசந்த்தும் சேகரும் அவ்வப்போது சுதா அக்காவைப் பார்க்கப் போவார்கள். குறிப்பாக, நூலகத்தில் இருந்து நாவல்கள் பலவற்றை எடுத்து வரச்சொல்வாள் அக்கா.  எடுத்துத்தருவதும், பிறகு கொண்டு போய் நூலகத்தில் சேர்ப்பதுமாகத் தொடர்ந்தது அவர்களது நட்பு. வசந்த் சி.ஐ.டியில் மெக்கானிக்கல் படிக்கப் போனான். சேகர், பி.எஸ்.ஜியில் டெக்ஸ்டைல்ஸ் படித்தான். தன் கணவன் விட்டுச் சென்ற மாவு அரைக்கும் இயந்திரங்களுக்கான உதிரிபாகங்களை வாங்கி விற்கும் தொழிலைப் புதுப்பித்திருந்தாள் சுதா அக்கா. இதன் நீட்சியாக, அவர்கள் மூவருக்குமிடையில் உண்டான போக்குவரத்தும் படிப்படியாக அருகிப் போனது.

    ஒருநாள் வசந்த், சேகர் இருவரையும் சாப்பிட அழைத்திருந்தார்கள் விஜயம்மா பாட்டியும் சுதா அக்காவும். இருவருமாகச் சேர்ந்து விருந்து பரிமாறி அசத்தினார்கள். விஜயம்மா பாட்டிதான் எதெதோ சொல்லிச் சிரிக்க வைத்துக் கொண்டே இருந்தாள். விடை பெறும் தருவாயில், சேகருக்கும் வசந்த்துக்கும் தனித்தனியாகப் பரிசொன்றைக் கொடுத்தாள் சுதா அக்கா.  சிவசங்கரி எழுதிய “அவன்” எனும் நாவல்தான் அது.  அவர்களிருவரும் அதைப் படித்தார்களா எனக் கண்டறிவதற்காய்,  பின்னாளில் வாய்வழித் தேர்வெல்லாம் நடத்தி அவர்களைச் சோதித்துப் பார்த்தாள் சுதா அக்கா. கல்லூரி மாணவர்கள் என்றாலே நடத்தை தவறக் கூடியவர்களெனும் மனோபாவம் வெகுவாகப் பரவியிருந்த காலகட்டமது.

    காலவெள்ளத்தில் ஆளுக்கொரு திசையாக அடித்துச் செல்லப்படுவார்கள் என்பதற்கு அவர்களும் விதிவிலக்காய் இருந்திருக்கவில்லை.  சுதா அக்கா இன்னும் அதே வீட்டில்தான் வசித்து வருகிறாள். சேகர், பட்டப்படிப்பை முடித்திருக்கவில்லை. அவ்வப்போது செய்யும் வேலைகளை மாற்றிக் கொண்டு வந்தவன், தற்போது நூற்பாலைகளுக்கான உதிரிபாகங்களை உற்பத்தி செய்து உள்ளூர்ச் சந்தையில் வணிகம் செய்கிறான்.  வசந்த் எனும் நாமகரணம் கொண்டவனாகிய அவனோ, சில பல நாடுகளைச் சுற்றி வந்து தற்போது அமெரிக்காவில் இருக்கிறான்.

    ”ஏங்க, தீவாளியன்னைக்கு என்ன தொணதொணன்னு போன்ல ஒரே பேச்சு? வந்து கொழந்தைகளைக் கவனிங்க!”, எப்போதும் போல அரற்றி மிரட்டினாள் அவனுடைய ஆத்துக்காரி.

    “இரு இன்னும் ஒன்னே ஒன்னு.  காட்டூர் தடியனுக்கு மட்டும் தீவாளி வாழ்த்து சொல்லிட்டு வந்திடுறேன் கண்ணம்மா!”

    பலமுறை அழைத்தும் சேகர் தொடர்புக்கு வருகிறான் இல்லை. அவனுடைய மனைவியின் அலைபேசி எண்ணைத் துழாவி எடுத்து அழைத்தான். “செல்வி, நமஸ்காரம்! தீவாளி எல்லாம் வந்துடுத்தா? சேகர் ஏன் போனை எடுக்க மாட்டேங்குறான்?”

    “அண்ணா, ஹேப்பி தீவாளி! அவர் மாடியில் இருக்கார். இருங்கோ குடுக்கறேன்!”

    “டே… ஹேப்பி தீவாளிடா! நல்லா இருக்கியா?”

    “இருக்கன்டா.  கொஞ்சம் மூடு அவுட், அதான்!”

    “ஏண்டா, சொல்லு, என்ன விசயம்?”

    “நம்ம விஜயாப் பாட்டி சுதா அக்கா இல்ல? அவங்க நேத்து இராத்திரி சூசைடு அட்டெம்ப்ட்டாம்டா! சபர்பன் ஸ்கூல் வட்டாரம் பூரா இதாம்பேச்சு”

    “என்னடா சொல்லுற? அவங்க மகள் எல்லாம் கல்யாண வயசுல இருப்பாங்களேடா இப்ப?”

    “ஆமாம். அவங்க சொந்தக்காரங்க தொல்லை இன்னும் தீர்ந்தபாடில்லை போலிருக்கு. என்ன செய்யுறதுன்னே தெரியலை. நான் அவங்க வீட்டுக்குப் போயி நாலஞ்சி வருசம் ஆச்சி. போனா, என்னையும் சேர்த்துக் கதை கட்டி வுட்றுவாங்கன்னு போறது இல்லை! ப்ச்!!”

    “சேகர் நாயே, நாம ஏதாவது செய்யணும்டா. சந்திராக்கா தீவாளிக்கு வந்திருக்காங்க. நான் கூப்பிட்டுச் சொல்லுறேன். நீ இப்ப காட்டூர்லதான இருக்க? போடா, சந்திராக்காவைக் கூட்டிட்டுப் போயி சுதாக்காவைப் பாருடா, ப்ளீஸ்!”

    ”பார்த்து என்னடா செய்ய முடியும்? ஆறுதல் சொல்லலாம். தீவாளி முடிஞ்சதும் எல்லாரும் கலைஞ்சி ஆளுக்கொரு திசையில ஓடப் போறோம்??”

    “இல்ல. நீ மொதல்ல என்ன காரண காரியம்னு தெரிஞ்சி வை. அக்காவோட ஒப்புதலின் பேரில், தற்கொலை முயற்சிக்குக் காரணமானவங்களை சட்டத்தின் முன்னாடி நிறுத்துறோம்! ’விடோ லேடீஸ்’னா இளப்பமா? உனக்கும் மகளுக இருக்காங்க. எனக்கும் இருக்காங்க. இதே நிலைமை நாளைக்கு நம்ம குழந்தைகளுக்கும் வரலாமில்லையா?”

    “இப்பத்தான்டா எனக்கு மனசு கொஞ்சம் நல்லா இருக்கு. இதா, இப்பவே போறன்!”

    சந்திரா அக்கா,  தேசிய வங்கி ஒன்றில் மேலாளர். வசந்த்தின் சுக துக்கங்கங்கள் அனைத்தையும் புரிந்து கொள்ளக்கூடிய ஒரு சிலருள் இவளுக்கும் தனியிடமுண்டு. எல்லாமும் சந்திராக்கா, சேகர் வழியாகவே நடந்தேறியது.

    சுதா அக்கா, மிகப் பெரிய வெற்றியை அடைந்திருக்கிறாள். கணவன் விட்டுச் சென்ற கடையை மீட்டுத் தானே நடத்தி வருகிறாள். ஆனாலும் ஊராருக்கு அவளொரு விதவை! யாரோடு வேண்டுமானாலும் இணைத்துப் பேசலாம்.  அக்கா, தங்கை எனும் உறவின் பேரில் எப்போது வேண்டுமானாலும் காசு, பணம் கேட்டு உருட்டி மிரட்டலாம். தன் வீட்டு வேலைகளுக்கு அவளையும் அவளது மகளையும் வந்திருந்து வேலை செய்யச் சொல்லலாம். தங்களுக்குச் சுமையாக இருக்கும் பெரியவர்களை அவளது வீட்டில் கொண்டு போய்த் தள்ளி விட்டு வரலாம்.  ஏனென்றால் அவளொரு விதவை.

    ”அக்கா, நான் அமெரிக்காவுல இருந்து சபர்பன் சந்திரகலாவோட தம்பி வசந்த் பேசுறன்க்கா!”

    “டேய், இன்னும் என்னை ஞாவகம் வெச்சிருக்கியாடா? சந்திரா, சேகர் எல்லாரும் இந்த ஒருவாரமா எங்கூடத்தான். இனிமே எனக்கு சாவே கிடையாதுடா.  எனக்கெதோ ஒரு புதுப்பிறவி எடுத்திருக்குறா மாதிரித்தான்டா இருக்கு. எப்படா வசந்த் ஊருக்கு வருவ? உன்னைப் பார்க்கணும் போல இருக்குடா. விஜயம்மா இருக்குற வரைக்கும் உன்னையும் உங்கண்ணன் சங்கரையும் அடிக்கடி நினைச்சுக்கும் தெரியுமா? கோவிச்சக்காதடா வசந்த்!  நீ…  ஒரு…, ஒரு மணி நேரங்கழிச்சுக் கூப்பிடுறியா? யாருன்னு தெரியலை, நந்தியாவட்டைப் பூ வேணுமின்னு கேட்டு அந்தப் பையன் வந்திருக்கான்னு நினைக்கிறேன். மறுபடியுந் தவறாமக் கூப்புடு, செரியா?!”

    “நந்தியா வட்டைப் பூக்கள் என்றென்றும் அக்காவைப் பார்த்துக் கொள்ளும்!”, தனக்குத் தானே பேசிக் கொண்டவன் சுற்றிலும் முற்றிலும் பார்த்தான்.  உவப்புக் கொண்டவனுக்கு உடனே தன் மகள்களையும் மனைவியையும் பார்க்க வேண்டும் போல இருந்தது. மிசிசிப்பி ஆற்றங்கரைக் காற்று அவன் முகத்தில் பட்டுத் தெறிப்பதை அனுபவித்தபடி, தன் குழந்தைகளை வாரிக் கொஞ்சியணைத்து முத்தமிடும் நோக்கில் மாடியிலிருந்து கீழே இறங்கிக் கொண்டிருந்தான் வசந்த்.

    அங்கே மற்றுமொரு நட்புக் கேடயமொன்று உருபெற்றுக் கொண்டிருந்தது; நந்தியாவட்டை மலர்கள் பூத்திருக்கும் விஜயம்மா வீட்டுப் பூக்காட்டில்!!

    Share
  • கூடங்குளத்தில் கட்டிய ரஷ்ய அணுமின் நிலையம் பற்றிய சில பாதுகாப்புரைகள்

     

     

     

                                                                               சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng (Nuclear), கனடா



    முன்னுரை:  1979 இல் அமெரிக்காவின் திரிமைல் தீவு அணுமின் உலையில் நேர்ந்த யுரேனிய எரிக்கோல்கள் உருகிய விபத்தும், 1986 இல் சோவியத் ரஷ்யாவில் நேர்ந்த செர்நோபிள் அணுமின் உலை வெடிப்பும் உலக மக்களுக்கு அச்சமூட்டி அதிர்ச்சிக்குள் தள்ளி விட்டுள்ளன.  பயங்கரச் செர்நோபிள் விபத்துக்குப் பிறகு 25 ஆண்டுகள் கடந்து ஜப்பானில் 2011 மார்ச் மாதம் 11 ஆம் தேதி 9.0 ரிக்டர் பேரழிவுப் பூகம்பமும் 30 அடி உயரப் பிரளயச் சுனாமியும் தூண்டி புகுஷிமாவில் அமைந்துள்ள நான்கு அணுமின் உலைகள் நிறுத்தமாகி அவற்றின் எரிக்கோல்கள் தணிப்பு நீரின்றி நீராவியில் ஹைடிரஜன் வாயு சேர்ந்து வெடிப்புண்டாக்கி அணு உலையின் இரண்டாம் கவசக் கட்டிடத்தின் மேற்தளங்கள் தூளாயின.  அதனால் ஓரளவு எரிக்கோல்கள் உருகிக் கதிரியக்கமும் வெளியேறிப் பணியாட்களும் சில பொதுநபரும் கதிரடி பெற்றர்கள்.  செர்நோபிள் விபத்து நிலை 7 (உச்சம்) என்றும் திரிமைல் தீவு விபத்து நிலை 5 என்றும் அகில உலக அணுசக்தி ஆணையகம் (IAEA – International Atomic Energy Agency) மதிப்பீடு செய்தது.  அந்த ஒப்பு நோக்கில் இப்போது ஜப்பான் புகுஷிமா அணுமின் உலைகளின் விபத்து நிலை 4 லிருந்து 5 ஆக உயர்த்தப் பட்டுள்ளது.

    இந்தியாவில் இப்போது 20 அணுமின் நிலையங்கள் (2011 மார்ச் வரை) இயங்கி 4780 MWe மின்சார ஆற்றலை மின்வடங்களில் பரிமாறி வருகின்றன.  அவற்றில் ஜப்பான் புகுஷிமா மாடல் அணுமின் உலைகள் போல் (BWR – Boiling Water Reactor) மேற்குக் கடற்கரை தாராப்பூரில் (மகாராஷ்டிரா) இரண்டு அணுமின் உலைகள், சுமார் 40 ஆண்டுகள் இயங்கி அவை ஓய்வெடுக்கும் காலம் நெருங்கி விட்டது.  தமிழ் நாட்டின் கிழக்குக் கடற்கரை ஓரம் இரண்டு கனநீர் அழுத்த அணுமின் உலைகள் 27 ஆண்டுகளாய் மின்சாரம் பரிமாறி வருகின்றன. தமிழகத்தின் தென்கோடி முனையில் கட்டுமானம் ஆகிவரும் கூடங்குளம் ரஷ்ய அணுமின் அணுமின் உலைகள் (VVER -1000) இரண்டில் ஒன்று ஓரிரு மாதங்களில் யுரேனிய எரிக்கோல்கள் இடப்பட்டு இயங்க ஏற்பாடுகள் துரிதமாய் நிகழ்ந்து வருகின்றன.

    ஜப்பான் வடகிழக்குக் கடற்கரையில் புகுஷிமாவில் நேர்ந்த அணு உலைகள் விபத்திலிருந்து இந்திய அணுசக்தித் துறையினர் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் பல இருக்கின்றன.  திரிமைல் தீவு, செர்நோபிள் விபத்துகளுக்குப் பிறகு இந்திய அணுமின் உலைகள் செம்மை ஆக்கப்பட்டன. அதைப் போல் முதலில் கடற்கரை அணுமின் நிலையங்களில் அபாயப் பாதுகாப்பு வெப்பத் தணிப்பு நீர் வசதிகள் இரட்டிப்பு அல்லது முப்புற முறைகளில் மேம்படுத்தப்பட வேண்டும்.  எல்லாவற்றுக்கும் மேலாக அணுமின் உலைகளைப் பற்றியும் கதிரியக்கப் பாதுகாப்பு பற்றியும் நகரங்கள் அனைத்திலும் பொதுமக்களுக்கு அறிவு புகட்டும் காட்சியகங்கள் அமைக்கப்பட வேண்டும்.  அணுமின் உலைக்கு 25 மைல் அருகில் வாழ்வோருக்கு அபாய காலப் பாதுகாப்புப் பயிற்சிகள் ஒவ்வோர் ஆண்டும் அளிக்கப் படவேண்டும்.

    அந்த கருத்தோட்டத்தில் முதன்முதல் கூடங்குளம் அணுமின் உலைகள் பாதுகாப்பு பற்றி எனது தனிப்பட்ட ஆய்வுக் கட்டுரை மீண்டும் வெளியாகிறது.

    +++++++++++++++++++++++++++++++

    1986 ஆம் ஆண்டு செர்நோபிள் அணுமின் உலை வெடித்துச் சீர்குலைந்த இரண்டு ஆண்டுக்குள் தேர்ந் தெடுக்கப் பட்ட ரஷ்யப் பூத அணுமின் உலை இது! சோவியத் யூனியன் கவிழ்ந்த பிறகு பனிரெண்டு ஆண்டுகள் நிதிவளம் வற்றி மறந்து போன மாடல் இது! மீண்டும் உயிர்த் தெழுந்து நெல்லை மாவட்ட நிலப் பிரச்சனைப் போராட்டத்தில் பிழைத்து, 2001 மார்ச் 31 இல் அடித்தள மிட்டுக் கூடங்குளத்தில் உருவாகப் போகும் 2000 MWe ஆற்றல் கொண்ட இரட்டை அணுமின் உலையில் புதிய முற்போக்குப் பாதுகாப்பு முறைகள் எவை எல்லாம் இணைக்கப் பட்டுள்ளன ? 45 ஆண்டுகள் அணு உலை இயக்கம், பராமரிப்பு, பயிற்சி, பாதுகாப்பு ஆகிய துறைகளில் பாரதத்திலும், கனடாவிலும் பணி ஆற்றிய எனது அனுபவத்தில் கூறிய தனிப்பட்ட ஆய்வுக் கருத்துக்கள் இவை.

    பாரதத்தின் மூன்றாவது அன்னிய அணுமின் நிலையம்!

    தமிழ்நாட்டின் தென் கோடியில் உள்ள கூடங்குளத்தில் ரஷ்யாவின் VVER-1000 என்னும் 1000 MWe ஆற்றலுள்ள இரட்டை அழுத்தநீர் அணு மின்சக்தி நிலையம் [Pressurised Light Water Reactor] உருவாகி வருகிறது! அழுத்த நீர் வெப்பக் கடத்தியாகவும், மிதவாக்கியாகவும் [Light Water Coolant & Moderator], செறிவு யுரேனியம் [(2%-4%) U235 Enriched Uranium] அணு எருவாகவும் பயன் படுத்தி  இயங்கும் இந்த வெப்ப அணு உலை [Thermal Reactor] பாரதம் வாங்கும் மூன்றாவது அன்னிய மாடல் அணுமின் உலையாகும்! தாராப்பூரில் முதல் மாடல் அமெரிக்க டிசைனிலும், ராஜஸ்தானில் இரண்டாவது மாடல் கனடா டிசைனிலும் அமைக்கப் பட்டன. இந்தியாவில் கட்டப் பட்ட அணுமின் உலைகள் யாவற்றிலும் மிகப் பெரும் ஆற்றல் கொண்டது VVER-1000 அணுமின் உலை! 1988 ஏப்ரலில் அங்கீகரிக்கப் பட்ட அத்திட்டம், சோவித் யூனியன் கவிழ்ந்த பிறகு போதிய நிதி உதவியின்றி ஒதுக்கி வைக்கப் பட்டது! மறுபடியும் அது உயிர்ப்பிக்கப் பட்டு, 2001 மார்ச் மாதம் 31 ஆம் தேதி கூடங்குளத்தில் அடித்தள வேலைப்பாடுகள் தொடங்கின! அதன் நிறுவக இயக்கப் பணிகள் யாவும் முடிந்து, 2007 ஆம் ஆண்டில் முதல் யூனிட்டும், 2008 இல் இரண்டாம் யூனிட்டும் மின்சக்தி பரிமாறும் என்று எதிர்பார்க்கப் படுகிறது!

    1986 ஏப்ரல் மாதம் சோவியத் ரஷ்யாவில் வெடித்துப் பேரதிர்ச்சி உண்டாக்கிய செர்நோபிள் அணுமின் உலை [1000 MWe, RMBK Model Unit.4] வேறொரு மாடல் ஆயினும், அதன் அணு மையக்கருவில் 1661 எரிக்கோல்கள் சூடேறி எரிந்துருகி, 80 மில்லியன் கியூரி கதிரியக்கம் சூழ்வெளி யெங்கும் வெளியேறிச் சுமார் 400,000 மாந்தர் பாதிக்கப் பட்டு அடுத்த பத்தாண்டுகளில் 15,000 பேர் மாண்டதாக அறியப்படுகிறது! அணுயுகத்தின் 60 ஆண்டு வரலாற்றிலே அணுமின் உலை விபத்தில் அழிவுப் புரட்சியை உண்டாக்கிய கடும் இதயப் புண்கள் ஆறுவதற்குள், 1988 ஆம் ஆண்டிலே ரஷ்யாவின் மேறொரு மாடல் [VVER-1000 Model] அணுமின் உலையை, இந்தியா தமிழ் நாட்டுக்குத் தேர்ந்தெடுத்தது மாபெரும் ஐயத்தையும் அச்சத்தையும் உண்டாக்குகிறது!

    இந்திய அரசு ரஷ்ய அணுமின் உலையை ஏன் தேர்ந்தெடுத்தது ?

    தொழிற் துறைகள் பன்மடங்கு பெருகி வரும் பாரதத்தின் மின்சக்தித் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதைப் பூர்த்தி செய்யும் முயற்சியில் அணுமின் சக்தி உற்பத்திப் பங்கை மிகையாக்க பாரதம், தற்போது இரண்டு 500 MWe அழுத்தக் கனநீர் அணுமின் உலைகளைத் தாராப்பூரில் கட்டி அவை இரண்டும் இயங்கி மின்சாரம் பரிமாறி வருகின்றன.  2020 ஆண்டுக்குள் 20,000 MWe ஆற்றல் அணுமின் சக்திப் பெருக்கத்தை உற்பத்தி செய்யும் எதிர்நோக்கத்தின் முதற்படியாக, 1000 MWe பூத அணு உலைகளை அமைக்கத் திட்டமிட்டு, அதை நிறைவேற்றி வருகிறது.

    1974 இல் பொக்ரான் அடித்தள அணு ஆயுத வெடிப்புக்குப் பிறகு அமெரிக்கா, கனடா, மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் இந்தியாவுக்கு அணுவியல் துறை விருத்திக்கு எந்த விதத் துணையும் புரிவதில்லை என்று வெளிப்படையாகவே அறிவித்து விட்டன! 220 MWe ஆற்றலுள்ள அழுத்தக் கனநீர் அணுமின் நிலையங்களை அடுத்தடுத்துக் கட்டிவரும் பாரதம் அலுப்படைந்து, மற்ற உலக நாடுகளைப் போல் தானும் அவற்றை விடப் பெரிய 500 MWe, 1000 MWe ஆற்றல் கொண்ட மின்சக்தி நிலையங்களை, நிறுவ வேண்டுமென வேட்கை கொண்டது! அந்த முயற்சியில் பேராற்றல் கொண்ட அணுமின் நிலையங்களுக்கு அன்னியக் கூட்டுறவு முறையில் டிசைன், நிறுவகம், இயக்கம் & பராமரிப்பு, நிதிப்பணம் [Design, Construction, Operation & Maintenance & Finance] ஆகிய நான்கு துறைகளில் கைகொடுக்கும் ஓர் அன்னிய நாட்டைப் பாரதம் பல்லாண்டுகளாகத் தேடிக் கொண்டிருந்தது!

    முன்வந்த பிரான்ஸ், சோவியத் யூனியன் ஆகிய இரண்டு தேசங்களில், முடிவாகச் சோவியத் ரஷ்யாவின் கூட்டு உடன்படிக்கை 1988 இல் வெற்றி பெற்றது! ஆனால் அத்திட்டம் முளைத்து எழுவதற்குள், சோவியத் யூனியன் கவிழ்ந்து சிதறிப் போனதால், எஞ்சிய ரஷ்யா பணமுடையில் தனியாய்த் தவித்தது! அமெரிக்க, ஐரோப்பிய உதவியில் மீண்டும் தலைதூக்கிய ரஷ்யா, 2001 ஆண்டில் தனது 1000 MWe ஆற்றலுடைய, புதுப்பிக்கப் பட்ட VVER-1000 மாடல் இரட்டை அணு மின் நிலையத்திற்கு நிதி யளித்துப் பாரதத்தில் கட்டி முடிக்க மறுபடியும் முன்வந்தது!

    அன்னிய உதவியில் அணு உலை, அணு உலைச் சாதனங்கள், முதல் முறை ஊட்ட எரிக்கோல்கள், நீராவி ஜனனிகள், அணு உலை ஆட்சிக் கருவிகள் போன்றவை ரஷ்யாவிலிருந்து வந்தாலும், பொதுத்துறை நீராவிச் சாதனங்கள், மின்சார ஜனனி, டிரான்ஸ்பார்மர்கள், [Conventional Power Equipment] முறுக்கப்பட்டு உறுதியான இரட்டைக் கான்கிரீட் அரண்கள் [Prestressed, Reinforced Concrete Double Containment] மற்றக் கட்டிட வேலைகள் யாவும் உள்நாட்டுத் தொழிற் துறை நிர்வாகங்கள் மூலம் அமைக்கப்படும்.

    பூத அணுமின் நிலையம் நிறுவக் கூடங்குளம் ஏன் தேர்ந்தெடுக்கப் பட்டது ?

    பாரதத்தின் தென்கோடி எல்லையான கன்னியா குமரி முனைக்கருகில் 15 மைல் வடகிழக்கே, திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் தாலுகாவில் உள்ளது, கூடங்குளம். அருகில் உள்ள பெரு நகரம் நாகர்கோயில் 21 மைல் தூரத்தில் அதற்கு மேற்கே இருக்கிறது. அகில நாட்டு அணுசக்திப் பேரவை [International Atomic Energy Agency, IAEA] வகுத்த வரையறைகளைப் பின்பற்றி இந்திய அணுசக்தித் துறையகம், 13 கடல்கரைத் தளங்கள், 5 உள்நாட்டுத் தளங்கள் ஆகியவற்றைத் தமிழ் நாட்டில் உளவுகள் செய்ததில், 2000 MWe ஆற்றல் அணுமின் நிலையத்தை அமைக்கக் கூடங்குளமே பலவகை நிபந்தனைகளைப் பூர்த்தி செய்தது! அணு உலைப் பாதுகாப்பு, சூழ்நிலைப் பராமரிப்பு, நிதிச் சிக்கனம், பொறி நுணுக்கம், சமூக வரவேற்பு போன்ற பிரச்சனைகளை முன்னோக்கி உளவுகள் செய்ததில், கூடங்குளம் மிக்க மதிப்பு பெற்றதாக அறியப் படுகிறது! ஏராளமானக் கொள்ளளவு நீர் கொண்ட கடலும், மக்கள் தொகை குன்றிய ஒதுக்குப் புற இட அமைப்பும், கூடங்குளத்தின் சிறப்பு அம்சங்கள்.

    கீழ்க்காணும் ஒப்புறவுப் பண்புகளில் கூடங்குளம் மிக்கத் தகுதியுள்ள தளமாகக் கருதப்படுகிறது:

    1. தேவைக்குரிய ஆழத்தில் கடும்பாறை கொண்ட தளம், உறுதியான அணு உலைக் கான்கிரீட் அரண் [Concrete Containment] அடித்தளத்திற்கு உகந்தது.

    2. பூகம்ப எழுச்சி எதிர்பார்ப்பில் குறைவாக எதிர்பார்க்கப் படும் பூகம்பக் களம்-2 [Seismic Zone II] வகுப்பைப் சார்ந்தது, கூடங்குளம். பூகம்பதைத் தூண்டி விடும் மாபெரும் ஏரிகள், நீரணைகள் போன்ற எந்தப் பழுதுத் தொல்லைகளும் அருகே இ ல்லை.

    3. சூறாவளி மழை யடிப்பு, கடல் பொங்கித் தாக்கல், கடல் அலைகளின் ஏற்ற இறக்கம் ஆகிய பிரச்சனை அங்கே யில்லை. கடல் வெள்ளம் 20 அடி உச்சத்தில் எழலாம் என்று எதிர்பார்க்கப் படுவதால், அணு உலைக் கட்டிடம் அந்த அளவுக்கு மேலாகவே அமைக்கப்படும்.

    4. கடல் நீரே டர்பைன் நீராவித் தணிப்பு நீராகப் பயன்படும். ரசாயனக் கழிவு நீர்களும், கதிர்வீசும் திரவங்களும் வடிகட்டப் பட்டு, கனிச அளவில் நலிந்து வெளியேற்றப் படத் [Dilution of Effluents] தேவைப் படும் ஏராளமான கொள்ளளவு நீரை அளிக்கக் கடல் அருகே உள்ளது.

    5. அணு உலைப் புறக்கணிப்புக் களத்திலிருந்து [Exclusion Zone] 1.2 மைல் ஆரத்தில் மாந்தர் நடமாட்டம் எதுவும் இல்லை. வேளாண்மைக்குத் தகுதியற்ற பொட்டல் காடான அந்த நிலங்களில், எந்த விதப் பயிர் விளைச்சலும் கிடையாது! 18 மைல் ஆரத்தில் மக்கள் தொகை நெருக்கமான எந்த ஊரும் அருகே இல்லை!

    6. கூடங்குளத்தை எப்போதும் அணுக நல்ல வீதி, ரயில் பாதை, கடல் மார்க்கம் அமைந்து இருப்பது சிறந்த அம்சங்கள். அகல் பாதை ரயில் நிலையம் கொண்ட கன்னியா குமரி 16 மைல் தூரம். அடுத்துக் கப்பல் துறைமுகம் உள்ள தூத்துக்குடி 60 மைல் தூரம்.

    7. மனிதர் ஏற்படுத்தும் விமான விபத்துகள், ரசாயன நஞ்சுகளால் ஏற்படும் விளைவுகள், ரசாயன ராணுவ அபாயங்கள் போன்றவை எவையும் நேர்ந்திட எந்த வித அமைப்புகளும் அருகே கிடையாது.

    ரஷ்ய அணுமின் நிலையத்தில் செய்த புதிய பாதுகாப்பு மாறுதல்கள்

    முற்போக்கான புதிய VVER-1000 அணு உலைகள் IAEA தயாரித்த பாதுகாப்புத் தத்துவங்களைப் பின்பற்றி, அகில நாட்டு அழுத்த நீர் அணு உலைகளின் [International Pressurised Water Reactors (PWR)] மேம்பாடுகளுக்கு இணையானவை என்று ரஷ்ய டிசைன் பதிப்பிதழ்களில் அறியப் படுகிறது. 2001 ஆண்டு வரை ரஷ்யா தனது புதிய VVER அணு உலை இயக்கத்தில் 1000 உலை ஆண்டு [1000 reactor years Operating Experience] அனுபவம் பெற்று இருப்பதாக இறுமாப்புக் கொள்கிறது! 1996 டிசம்பர் வரை இருபது VVER-1000 அணுமின் உலைகள் [ரஷ்யாவில் 7, பல்கேரியாவில் 2, யுக்ரேயனில் 11] இயங்கி வருவதாக அறியப் படுகிறது!

    VVER-1000 அணுமின் உலையில் ‘செறிவு யுரேனியம் ‘ [Enriched Uranium, (2%-4%)U235 rest U238] எருவாகவும், அதில் எழும் வெப்பத்தைத் தணிக்கும் முதல் கடத்தி நீராகவும் [Primary Coolant], நியூட்ரான் மிதவாக்கி [Neutron Moderator] நீராகவும், கொதிகலனில் வெப்பக் கடத்தி [Secondary Coolant] நீராகவும் தனித் தனியாக மூன்று பணிகளில் நீர் பயன்படுகிறது. VVER-1000 அணு உலைகளில் மாடல் 320, மாடல் 392 என்று இரண்டு விதம் உள்ளன. இரண்டில் VVER-1000 மாடல் 320 மிகவும் பிற்போக்கானது! அது செர்நோபிள் RMBK-1000 அணு உலை போல் கான்கிரீட் ஸ்டால் அரண் இல்லாதது! அபாய வெடி விபத்து எதுவும் நேர்ந்தால், மாடல் 320 அணு உலைக் கதிரியக்கப் பொழிவுகள் வெளியேறிச் சூழ்மண்டலக் காற்றில் பரவும் வாய்ப்புள்ளது!

    VVER-1000 மாடல் 392 இல் இருக்கும் ஒரே ஒரு வேறுபாடு, அது இரட்டைக் கான்கிரீட் அரண்களை உடையது. வெளி அரண் ஒன்றும் அடுத்துக் கதிரியக்கக் கசிவை முற்றிலும் தடுக்க ஓர் ஸ்டால் கவசமும், ஒரு மீட்டர் தடிமன் கொண்ட உள் அரணுடன் இணைக்கப் பட்டுள்ளது! இரண்டு அரண்களுக்கும் நடுவே உள்ள இடைவெளி சூன்ய மாக்கப் பட்டுக் கீழ் அழுத்தத்தில் [Negative Pressure (Partial Vacuum)] பராமரிக்கப் பட்டு வருகிறது! அவ்வித அமைப்பில் கதிர்வீச்சு வெளியேற்றம் முற்றிலும் தடுக்கப் படும்; அல்லது மிக மிகக் குறைந்த அளவு வெளியேறும்.

    முற்போக்கு VVER-1000 அணு உலையில் அடுத்த ஓர் மாறுபாடு, தீவிர அபாய விபத்து நேரும் சமயத்தில், அதைத் தடுத்துக் கையாளும் பராமரிப்பு ஏற்பாடுகள், அணு உலையோடு இணைக்கப் பட்டிருப்பது.

    விபத்து நேர்ந்த முதல் 24 மணி நேரம், நின்ற அணு உலைச் சூட்டைத் தணிக்க, இயக்குநர் குறுக்கீடு இல்லாமல் தானே நிகழும் ‘சுய இயக்க வெப்ப நீக்கும் முறைப்பாடு ‘ [Passive Heat Removal System] சேர்க்கப்பட்டுள்ளது.

    முற்றிலும் அணு உலையை நிறுத்த முதற் தடுப்பு செய்யும் தடைக் கோல்கள் யாவும் தானாக இயங்குபவை! [Automatic First Shutdown System]. ஆறும் பூரணத் தொடரிக்க விளிம்பை [Sub-criticality Margins] நிலைநாட்ட மிகையான அணு உலை ஆட்சிக் கோல்கள் அமைக்கப் பட்டுள்ளன. அடுத்து போரான் நஞ்சை உட்செலுத்தி [Boron Poison Injection] அணு உலை மீறலைத் நிறுத்த இரண்டாவது விரைவுத் தடுப்பு ஏற்பாடு [Second Quick acting Shutdown System] ஒன்றும் அமைக்கப் பட்டுள்ளது!

    அணு உலையில் மிஞ்சிச் சேமிக்கப் படும் ஹைடிரஜன் வாயு தீப்பிடிக்க வாய்ப்பில்லாமல், ‘மீள் இணைப்பிகள் ‘ [Hydrogen Recombiners] மூலம் ஆக்ஸிஜனுடன் சேர்க்க வைத்து, நீராக மாற்றப் படுகிறது!

    அணு உலையின் கதிர்வீசும் மையக்கருவில் [Radioactive Fuel Core] உலை இயங்கினாலும், அன்றி நிறுத்தப் பட்டாலும் தொடர்ந்து உண்டாகும் வெப்பம் எப்போதும் தணிக்கப்பட வேண்டும்! அபாயத் தடுப்பு மின்சாரம் பரிமாறாத [Emergency Power Supply] சமயத்தில் ‘வெப்பக் கடத்தி இழப்பு விபத்து ‘ [Loss of Coolant Accident (LOCA)] நேர்ந்தால், எரிக்கோல்களின் கனலை விரைவில் தணிக்க, ‘அணு உலை மையக்கரு நீர் வீழ்ச்சி ஏற்பாடு ‘ [Reactor Core Flooding System] இணைக்கப் பட்டுள்ளது!

    ஆரம்பத்தில் கட்டிய அன்னிய அணுமின் நிலையங்கள்

    முதல் அன்னியக் கொதிநீர் இரட்டை அணுமின் உலைகள் [160 MWe Boiling Water Reactor by General Electric Co. USA], பம்பாயிக்கு அருகே தாராப்பூரில் அமைக்கப் பட்டன. இரண்டாவது கனடாவின் ‘காண்டு ‘ அழுத்தக் கனநீர் இரட்டை அணு உலைகள் [200 MWe CANDU, Pressurized Heavy Water Reactor] ராஜஸ்தான் ராவட்பாட்டாவில் உருவானது. அவை நான்கும் இயங்கி வரும் போது, அடுத்து சென்னைக் கல்பாக்கத்தில் இந்திய வல்லுநரால் சிறிது மாற்றம் செய்யப் பட்ட இரட்டைக் ‘காண்டு ‘ கனநீர் அணு உலைகள் [170 MWe] நிறுவன மாயின.

    1974 மே மாதம் பொக்ரானில் பாரதம் செய்த அடித்தள அணு ஆயுத வெடிப்புப் பிறகு, அணுமின் நிலையங்களை இந்தியாவில் கட்டிய அமெரிக்கா, கனடா ஆகிய இரு நாடுகளும் தமது அணுவியல் தொடர்பை முறித்துக் கொண்டதோடு, மற்ற உலக நாடுகளும் பாரதத்திற்கு அணுவியல் சாதனங்களை விற்கா வண்ணம் வலுவாகத் தடை செய்தன!

    அழுத்தக் கனநீர் அணு உலைகளுக்கு வேண்டிய இயற்கை யுரேனியம், அதைச் சுத்திகரித்து எரிக்கோல் ஆக்கும் தொழிற் சாலைகள் [Rare Earth, Fuel Fabrication Plants] பாரதத்தில் அமைக்கப் பட்டதால், காண்டு அணுமின் உலைகள் தொடர்ந்து ஓடுவதில் எந்தப் பிரச்சனைகளும் இல்லை! ஆனால் கொதிநீர் அணுமின் உலைகளுக்குத் தேவையான, செறிவு யுரேனியத்தை அமெரிக்கா அனுப்ப மறுத்ததால், அவற்றின் இயக்கம் ஓரளவு பாதிக்கப் பட்டது! பாரதம் தனது பொறி நுணுக்கத்தால், செறிவு புளுடோனியத்தை [(2%-3%) Pu239 Enriched Fuel (PuO2)] எருவாய்ப் பயன்படுத்த விருத்தி செய்து, கொதிநீர் அணு உலைகளை இயக்கியது! அடுத்துச் சைனா இந்தியாவுக்குச் செறிவு யுரேனியத்தை விற்க முன் வந்தது!

    1974 ஆண்டு முதல் தனியே விடப்பட்ட பாரதம், ஏறக் குறைய எல்லாவித அணுவியல் சாதனங்களையும், அன்னிய நாடுகளின் உதவி யின்றி உள்நாட்டிலே உற்பத்தி செய்வதில் மகத்தான வெற்றியைக் கண்டுள்ளது! முன்னேறி வரும் நாடுகளில், பாரதமே முதலாக அணுமின் சக்தி உற்பத்தித் துறையில் டிசைன், தயாரிப்பு, நிறுவகம், இயக்கம், பராமரிப்பு, பாதுகாப்புக் கட்டுப்பாடு, பயிற்சி ஆகிய அனைத்திலும் திறமை பெற்றுத் தன் கால்களிலே நிற்கிறது! இந்தியப் பொறி நுணுக்கத் தொழிற் சாலைகள் பலவற்றின் பேரளவுப் பங்கெடுப்பால், அடுத்து பத்துக் [ஐந்து இரட்டை] கனநீர் அணுமின் நிலையங்கள், கல்பாக்கம் [சென்னை, 2X170 MWe], நரோரா [உத்திரப் பிரதேசம் 2X220 MWe], கக்ரப்பார் [குஜராத் 2X220 MWe], கைகா [கர்நாடகா 2X220 MWe], ராவட்பாட்டா [ராஜஸ்தான் 2X220 MWe] ஆகியவை நிறுவனமாகி, 1984 ஆண்டு முதல் அவை யாவும் இயங்கி வருகின்றன!

    பாரதம் 220 MWe கனநீர் அணுமின் நிலையங்களை அமைத்தபின், அடுத்து இந்தியாவின் முதல் 500 MWe இரட்டைக் கனநீர் அணுமின் நிலையங்களை டிசைன் செய்து, தாராப்பூரில் 1998 இல் கட்டத் துவங்கி 2002 டிசம்பர் வரை 60% வேலைப்பாடுகள் முடிந்துள்ளன.

    புதிய அணுமின் உலை டிசைனில் பாதுகாப்பு உறுதிப்பாடுகள்

    VVER-1000 அணு உலையை அபாய வெடிப்பிலிருந்து காக்கும் ‘உள்ளடங்கிய பாதுகாப்புத் திறமைப்பாடுகள் ‘ [Inherent Safety Features] முக்கியமாக இரண்டு:

    1. கீழ் நோக்கிக் குன்றிவிடும் மின்னாற்றல் பண்பு [Negative Power Coefficient]. இம்முறைப்படி, அணு மையக்கரு வெப்ப உயர்ச்சி எந்த முறையிலும் மீறிவிடாமல் தானாகத் தணிந்து அடங்கிவிடும் தன்மை கொண்டது! [Any abnormal increase in reactor power is self-terminating]. விளக்கமாகச் சொன்னால் ஏதாவது ஒரு சம்பவம் தூண்டி, மிகையான வெப்ப சக்தி கிளம்பி விபத்துக்கள் நேர்வதும், அதனால் அணு மையக்கரு [Reactor Core] உடைந்து போவதும் அபூர்வ நிகழ்ச்சிகள்!

    2. கீழ் நோக்கிக் குன்றிவிடும் வெற்றிடப் பண்பு [Negative Void Coefficient]. இம்முறைப்படி, அணு மையக்கருவுக்குப் பிரதம வெப்பக் கடத்தி நீரில்லாது போனால், மித வேக நியூட்ரான்கள் குன்றிப்போய், அணு உலைத் தானாக நின்றுவிடும். [Loss of Primary Coolant to the Fuel Core causes the Reactor to shutdown by itself due to lack of thermal neutron production]

    3. அபாய மின்சக்தி [Emergency Power Supply] இல்லாத சமயத்தில், நிறுத்தமான அணு உலையில் எழும் மிஞ்சிய வெப்பத்தைக் குறைக்க, அழுத்தவிசையில் 24 மணி நேரம் நீர் வெள்ளம் கொட்டும் பாதுகாப்பு ஏற்பாடு தானாக இயங்க அமைக்கப் பட்டுள்ளது.

    4. கதிரியக்க வெளியேற்றத்தை அடக்கிக் கொள்ளும், கசிவற்ற இரட்டைக் கான்கிரீட் அரண்கள் உள்ளன. [Prestressed Concrete Containment]. உள்ளரண் மட்டுமே 1 மீட்டர் [40 அங்குலம்] தடிமன் கொண்டது! அத்துடன் கதிர்வீச்சுக் கசிவுகளை முற்றிலும் தடுக்க அதன் உட்புறம் 8 mm தடிமன் ஸ்டால் கவசம் பூண்டது.

    செர்நோபில் விபத்துபோல் VVER அணுமின் உலையில் அபாயம் நிகழுமா ?

    சீர்குலைந்த செர்நோபிள் RMBK-1000 அணு உலை VVER-1000 அணு உலையைப் போலின்றி முற்றிலும் வேறுபட்டது! செர்நோபிள் அணு உலையில் நியூட்ரான் மிதவாக்கியாகப் பயன்பட்டது திரள்கரி [Graphite Moderator]. நிகழ்ந்த இரண்டு வெடிப்புகளில் ஒன்று சூடான திரள்கரியால் தூண்டப் பட்டது! திரள்கரிக்குச் சீர் கேடான ஓர் பண்பு உள்ளது. அணு உலைத் தொடர்ந்து இயங்கும் போது நியூட்ரான்கள் திரள்கரியைத் தாக்கி, ‘விக்னர் சக்தி ‘ விளைவால் [Wigner Energy Effect] அதன் உள் உஷ்ணம் ஏறிக் கொண்டே போகிறது. அணு உலை நிறுத்தப் பட்டாலும், திரள்கரியின் உஷ்ணம் குன்றுவதில்லை! ஆகவே அணு உலை விபத்தின் போது நீரிலிருந்து பிரிவு படும் ஹைடிரஜன் வாயு தீவிரத் தீப்பற்றி வெடிக்க ஏதுவாகிறது! ஆனால் VVER-1000 அணு உலையில் நீர் மிதவாக்கியாகப் பயன்படுவதால், அத்தகைய அபாயம் இல்லை!

    அடுத்துச் செர்நோபிள் அணு உலைக்கு கான்கிரீட் அரண் [Concrete Containment] இல்லாததால், வெடி விபத்தின் போது கதிரியக்கப் பொழிவுகள் எளிதாக வெளியே சூழ்மண்டலத்தில் பரவ வழி திறந்தது! VVER-1000 இல் இரட்டை அரண் உள்ளதால், கதிரியக்க விளைவுகள் வெளிக் காற்றில் கலப்பது அறவே தடுக்கப் படுகிறது!

    செர்நோபிள் வெடி விபத்து மனிதர் செய்த பல தவறுகளால் ஆரம்ப மானது! RMBK-1000 அணு உலை முதலிலே புறக்கணிக்கப் பட்ட பல டிசைன் பழுதுகளால் ஏற்பட்டது! சுய இயக்கப் பாதுகாப்பு முறைப்பாடுகள் சோதனை செய்யும் போது நீக்கப் பட்டு, விரைவாக மீறும் அணு உலையைக் கட்டுப்படுத்த மாந்தர் தாமாகக் கையாள முயன்றதால் நிகழ்ந்தது! அபாயத் தடுப்பு வெப்ப நீக்க ஏற்பாடுகளும் சோதனைக்காக ஒதுக்கப் பட்டதால் விபத்து நேர்ந்தது! நிச்சயமாக அந்தக் கோர விபத்து, பாரதத்தில் உருவாகும் ரஷ்யாவின் புதிய VVER-1000 அணுமின் உலையில் ஒருபோதும் நிகழவே நிகழாது!

    பூகம்ப அதிர்வால் எதிர்பார்க்கும் விபத்துகளும் அணு மையக்கருப் பாதுகாப்பும்

    2002 ஆம் ஆண்டு பிப்ரவரி 24 ‘திண்ணை ‘ அகிலவலை வார முகப்பில் டாக்டர் இரா. இரமேஷ் எம்.பி.பி.எஸ் ‘நிலவியல் பிரச்சனைகள் நிறைந்த நெல்லை மாவட்டமும், கூடங்குளம் அணுமின் நிலையமும் ‘ என்னும் அழுத்தமான ஓர் கட்டுரையை வெளியிட்டுள்ளார்! அவர் எழுதிய ‘கூடங்குளம் அணுமின் நிலையமும், தென் தமிழகத்தின் பூகம்பவியலும் ‘ என்ற நூலின் சுருக்கமே அந்தக் கட்டுரை. கூடங்குள அணுமின் உலை சம்பந்தமாக அணுவியல் துறையகம் செய்ய வேண்டிய பணிகளை அவர் சுட்டிக் காட்டியது யாவும் வரவேற்கத் தக்கதே! அவற்றில் VVER-1000 அணுமின் உலைப் பாதுகாப்பு பற்றிய பெரும்பான்மையான உளவுப் பதிப்பீடுகள் அணுசக்தி துறையகத்தில் உள்ளன என்பது ஆசிரியரின் கருத்து.

    பூகம்பத்தின் போது பிரதம வெப்பக் கடத்திக் குழாய்கள் உடைந்து போனால், அணு உலையின் கதி என்ன ஆகும் என்றொரு கேள்வி அதில் எழுந்துள்ளது! அதனால் அணு மையக்கருவின் வெப்பம் தணியாது, சூடேறி ஒரு கட்டத்தில் உருக ஆரம்பித்து ஒரு பெரு விபத்து ஏற்படச் சூழல் உருவாகுமே என்று டாக்டர் இரமேஷ் கேட்கிறார்.

    முதலில் பிரதம வெப்பக் கடத்தி நீர் இழப்பால் [Loss of Coolant Accident (LOCA)], அணு உலைத் தானாக நின்று, வெப்ப வளர்ச்சி குன்றுகிறது. இரண்டாவது உடனே ஆறும் மையக்கருவின் எஞ்சிய தொடர் வெப்பத்தைத் தணிக்க, 24 மணி நேர அழுத்த நீர் வெள்ளம் பாய்ச்சும் ஏற்பாடுகள், ஈர்ப்பியல் முறையில் [Gravity Flooding] இயங்க அரணுக்குள் அமைக்கப் பட்டுள்ளன. பூகம்ப ஆட்டத்தின் போது எவை உடையும், எப்படி உடையும், எங்கே உடையும் என்பதை உறுதியாக நிர்ணயம் செய்ய முடியாது. அபாயப் பாதுகாப்புக்கு அருகிலே கடல் வெள்ளம் கொட்டிக் கிடப்பதை நாம் மறக்கக் கூடாது! எந்த வித விபத்து நேர்ந்தாலும், அணு உலை வெப்பத்தைத் தணிக்க, கடல் வெள்ளம் கடைசியாகக் கை உதவிக்குக் கண் எதிரே நமக்காகக் காத்துக் கிடக்கிறது!

    செர்நோபிள் அணு உலை வெடித்து எரியும் போது, ஹெலிகாப்டரில் பறந்து கொண்டு டன் கணக்கில் கான் கிரீட்டைக் கொட்டித் தீயை அணைத்து கதிர்வீச்சைக் குறைத்தார்கள்! கூடங்குளத்தில் கடல் வெள்ளம்தான் கடைசி உதவி! பூத அணுமின் உலை இயங்க ஆரம்பிக்கும் முன்பு, பொது மக்களுக்கு அபாய விளைவுப் பயிற்சி முறைபாடுகள் [Emergency Preparedness] அறிவிக்கப் படும் என்றும், அதற்காகப் பயிற்சி அளிக்கப் படும் என்பது ஆசிரியரின் கருத்து.

    ரஷ்ய அணுமின் நிலையப் பராமரிப்பில் ஏற்படும் சில ஐயப்பாடுகள்

    இந்தியாவில் உள்ள அமெரிக்காவின் கொதிநீர் அணு உலை, கனடாவின் அழுத்தக் கனநீர் உலை, ரஷ்யாவின் அழுத்தநீர் அணு உலை ஆகிய மூன்று அன்னிய அணுமின் நிலையங்களில் எது சிறப்பாக, பாதுகாப்பாக இயங்கும் என்பது ஒரு முக்கிமான கேள்வி! எல்லாவற்றிலும் பிற்போக்கான, நிதி மிகச் செலவாகும், பழைய அணு உலை சந்தேக மின்றி, அமெரிக்காவின் கொதிநீர் அணு உலையே! எல்லாவற்றிலும் கதிரிக்கச் சிக்கல்களும், கதிர்த் தீண்டல் பிரச்சனைகளும் [Severe Radioactive Contamination] மிகையானது கொதிநீர் அணு உலையே! காரணம் நீராவி, ஜனனியில் [Steam Generator] உற்பத்தி யாகாமல், நேரடியாக அணு உலைக்கலனிலே [Reactor Vessel] உண்டாகிறது! அணு எரிபொருளில் ஒட்டிக் கொண்டுள்ள கதிரியக்கம் நீரில் கலந்து அணுக்கரு ஏற்பாடுகளிலும் [Nuclear Systems] டர்பைன், குளிர்கலம் போன்ற பொதுத்துறை அமைப்புகளையும் [Conventional Systems] கதிரியக்க சாதனங்களாகத் தீண்டி விடுகிறது. ஆகவே எரி பொருள் மாற்றும் பராமரிப்பு [Refueling Outage Maintenance] சமயத்தில் பணிகளை முடிக்க ஏராளமான நபர்களை வேலைக்கு அமர்த்த வேண்டிய தாகிறது! பாரதம் தாராப்பூர் கொதிநீர் அணு உலைகளில் பல ஆண்டுகளாக கதிரியக்க விளவுகளில் பட்ட சிரமத்திற்குப் பிறகு, அவற்றைக் கைவிட்டுக் கனடாவின் காண்டு அணுமின் உலைகளையே தற்போது அதிகரித்து வருகிறது!

    இயக்கம், பராமரிப்பு, பாதுகாப்பு, நிதிச் செலவு ஆகிய பண்புகளை ஒப்பிட்டால், எவ்வித ஐயமின்றிக் கனடாவின் காண்டு கனநீர் அணு உலைகளே எல்லாவற்றிலும் உயர்ந்தவை! இந்தியா, பத்து 200 MWe காண்டு நிலையங்களை நிறுவகம் செய்தபின், இப்போது தாராப்பூரில் இரட்டை 500 MWe காண்டு அணு உலைகளை முதல் முறை யாகக் கட்டி அவை இரண்டும் இயங்கி மின்சாரம் பரிமாறி வருகின்றன.

    பாரதம் முதன் முதல் 1000 MWe ஆற்றல் கொண்ட பூத அணுமின் நிலை ஆட்சி, பராமரிப்பு அனுபவம் பெறப் போகிறது! ரஷ்யாவின் அழுத்தநீர் அணு உலைகள் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் அழுத்தநீர் அணு உலைகளைச் சித்தாந்த முறையில் ஒத்தவை ஆயினும், VVER-1000 மாடல் 392 உலைகள் அமைப்பில் வேறானவை! எல்லாவித டிசைன் விளக்கங்கள், வரை படங்கள், இயக்கப் பராமரிப்பு, பாதுகாப்பு முறைகள், பயிற்சி அளிக்கும் வகைகள், விபத்துகளின் விளைவுகள் யாவும் ரஷ்ய மொழியிலிருந்து ஆங்கிலத்தில் எழுதப்பட வேண்டும்! அவற்றை மொழி பெயர்த்து, ஆங்கிலத்தில் அறிந்து கொள்வதில் சிரமங்கள் ஏற்படும்! ரஷ்ய நிபுணர்கள் கொச்சை ஆங்கிலத்தில் அளிக்கும் பயிற்சி முறைகளைப் பாரத வல்லுநர்கள் பின்பற்றுவதில் பிரச்சனைகள் உண்டாகும்!

    பயிற்சி பெறும் ரஷ்யாவின் VVER-1000 அணு மின் உலைகள் ரஷ்யாவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் உள்ளதால், பாரத எஞ்சினியர்களும், விஞ்ஞானிகளும் மொழிச் சிக்கலால், முழுப் பயிற்சி பெற முடியாது! மேலும் உலகில் உள்ள VVER-1000 அணு உலைகளில் இதுவரை நேர்ந்த விபத்துக்களும், அபாய நிகழ்ச்சிகளும் ஆங்கிலத்தில் எழுதப் பட்டிருப்பதாகத் தெரியவில்லை! VVER-1000 அணு உலைகளில் என்ன என்ன சிக்கல்கள் இயக்கத்தின் போது விளையப் போகின்றன ? என்ன என்ன சிரமங்கள் பராமரிப்பின் போது தாக்கப் போகின்றன ? புதிய, புரியாத, பூத அணு உலைகளில் என்ன என்ன மனிதத் தவறுகள் எதிர்பாராமல் நிகழப் போகின்றன ? பதில் கிடைக்காத இவை போன்ற வினாக்கள் இப்போது நம்மிடையே எழுகின்றன! பாதுகாப்பு அணு உலையாக மாற்றப் பட்ட ரஷ்யாவின் மர்ம அணு உலையை முதலில் தாமாக ஆட்சி செய்து பார்த்துத்தான், திறமையுள்ள நமது பாரத வல்லுநர்கள் தமது புதிய அனுபவங்களைக் கற்றுக் கொள்ள போகிறார்கள்!

    தகவல்:

    Picture Credits : NPCIL, India, The Hindu, Russian VVER-1000 Websites

    1. Nuclear News, The Russian Advanced VVER Reactor Designs [June 2002].

    2. Nuclear Europe Worldscan [Jan-Feb. 2001].

    3. Advance Light Water Reactors in Kudankulam by: S.K. Jain Chief Engineer, Kudankulam Project.

    4. Development of Improved Reactor Plant Safety with VVER by: Novak Valery, P.Alexander, Rogov Mikhail, Moscow.

    5. Chernobyl Accident Ten Years After. [Nov. 1995]

    6. Towards an Energy Independent India [1997] by: Dr.R. Chidambaram, Chairman Atomic Energy Commission.

    7. CMD ‘s Page by: V. K. Chaturvedi, Chairman & Managing Director, Nuclear Power Corporation of India Ltd. [2000]

    8. Nuclear Power Stations in Russia.

    9. VVER-1000 Plant Design & Safety Assessments.

    10.  http://jayabarathan.wordpress.com/kudankulam-vver-reactor/  (Opposition to Build VVER -1000)

    11.  http://en.wikipedia.org/wiki/VVER  (Russian VVER-1000 Reactor)

    12.  http://www.barc.ernet.in/publications/eb/golden/reactor/toc/chapter6/6_1.pdf  (Kudungulam VVER-1000 Reactor Analysis)

    ***************************

    S. Jayabarathan [http://jayabarathan.wordpress.com/]  November 24, 2012

     

    Share
  • யாருமற்ற ஒரு தனியிரவு

    வருணன்.

    துணையில்லா கணங்களின்
    வர்ணங்களை வரிந்து கொண்டு
    மெல்லப் பரவத் துவங்குகிறது இரவு
    அறை முழுமையும்

    உறைந்த வெம்மையாய்
    வெளியில் சிலுசிலுக்கும் குளிர்
    யன்னலிடம் மன்றாடுகிறது
    உள்ளே வர அனுமதி வேண்டி

    மௌன மரத்தின் கால்கள் உலுப்பி
    ஓசைப் பூக்களை உதிர்த்திட
    பிரயத்தனப்படுகிறது வாத்திய இசையை
    உமிழ்ந்திடும் குறுந்தகடு

    தளர்ந்த உடல் நாற்காலியில் நிறைந்திட
    தளராத பார்வையோ படர்கின்றது
    அறை முழுவதும்
    ஏழெழுபது முறையாக

    படர்ந்த பார்வை படிகின்றது
    ஓசையாய்ப் போன
    கணப்பு அடுப்பில் கிளர்ந்து நெளியும்
    தீயின் நிழலில்.

    படத்திற்கு நன்றி:

    http://www.artwizard.com.hk/UVPaintDemo.html

    Share
  • இவனுக்கு மட்டும்…

    செண்பக ஜெகதீசன்

    கடவுள் எழுதிய கவிதை,
    கையும் காலும் முளைத்து
    கவினுறு மரமாய்க்
    காட்சி தருகிறது..

    மண்ணில் அதன் நிழலோவியம்
    மனதைக் கவர்கிறது,
    கண்ணைப் பறிக்கிறது..

    கண்ணை உறுத்துகிறது அது
    மனிதனுக்கு-
    வெட்டி விறகாக்கிவிட்டு
    வேறுவேலை பார்க்கிறானே…!

    படத்துக்கு நன்றி

    http://www.123rf.com/photo_3556527_bundle-of-logs-stack-up-in-the-forest.html

                  

    Share
  • மனிதன் எனும் விருட்சம்

     

    திருமலைசோமு

    மனிதனுக்கு
    வரையறை வகுக்க
    எவரால் முடியும்

    எல்லைக்குள் கட்டுப்படவும்
    எளிதில் முற்று பெறவும்
    மண்ணில் கரையும்
    மழையின் துளியோ
    மனிதன்…

    இரவில் ஜனித்து
    பகலில் மரிக்கும்
    பனியின் துளியோ
    மனிதன்…

    இரு கரைக்குள் அடங்கி
    நடைகள் மாற்றி
    பயணம் போகும்
    நதியோ மனிதன்….

    இல்லை
    துளி விந்தின்
    விருட்சம் மனிதன்…

    தன்
    நெடும் பயணத்தில்
    நீண்ட வெற்றிகளை
    நெற்றிக்குள்
    குவியலிட்டுக் கொண்டவன்
    விரல் நுனிக்குள்
    உலகை இயக்கும்
    நூதனம் அறிந்தவன்

    மனிதன்
    மனிதனாய் மட்டுமல்ல
    இறைவனாகவும்
    அவதரிப்பவன்.

    படத்திற்கு நன்றி :

    http://www.livingpictures.org/trees.htm

     

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் … (33)

     

    சக்தி சக்திதாசன்

    அன்பினியவர்களே !

    காலவேகத்தின் பரிணாம மாற்றம் நாகரீகம் எனும் போர்வையில் உச்சத்தை எட்டிப்பிடிக்கின்ற ஒரு காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

    நாகரீகம் எனும் சொல்லின் அர்த்தத்தை ஒவ்வொரு சமுதாயமும் தனக்குப் பிடித்த  வகையில் மாற்றியமைத்து தமது கண்மூடித்தனமான நடத்தைகளை நாகரீக வளர்ச்சி என்று நியாயப்படுத்திக் கொண்டிருக்கும் ஒரு காலம் இது.

    ஒரு காலத்தின் நடைமுறை மற்றொரு காலத்திற்கு ஒவ்வாத நிலமை ஏற்படுவது சகஜம். காலத்திற்கேற்ப சில சில விடயங்களில் மனிதர்கள் தமது வாழ்க்கைமுறையை மாற்றியமைத்துக் கொள்ள‌ வேண்டிய தேவை இல்லாமல் இல்லை.

    ஆனால் கால மாற்றத்தினால் மாற்ற‌ப்படமுடியாத, மாற்ற‌ப்படக் கூடாத விடயங்கள் பலவுண்டு. குடும்ப உறவுமுறைகள், கலாச்சார விழுமியத்தின் அடையாளங்கள், திருமணம் போன்ற பந்தங்களின் முக்கியத்துவம், குடும்ப அமைப்புமுறை என்பன இவற்றுள் அடங்குவது யதார்த்தமானது.

    ஆனால் இந்த நூற்றாண்டிலே தனிமனித சுதந்திரம் எனும் போர்வையில் பல மனித வாழ்வின் அடிப்படைக் கலாச்சாரங்கள் கேள்விக்குறியாக்கப்படுகின்றன. குறிப்பாக திருமண வாழ்வின் முறிவுகள் மிகவும் சகஜமாகிப் போய்விட்டனவோ என்றொரு ஆதங்கம் மனதில் எழாமல் இல்லை.

    திருமணம் எனும் பந்தத்தில் புகுந்து விட்டோம் எனும் காரணத்தினால் தம்மீது கண்மூடித்தனமாக இழைக்கப்படும் கொடுமைகளைத் தாங்கிக் கொண்டிருக்க வேண்டும் எனும் எதிர்பார்ப்பு தவறானதே. இப்பந்தத்தை முறிப்பது சுலபமல்ல எனும் காரணத்தினால் தமது உறவு கொடுக்கும் அதிகாரத்தைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு கொடுமைகள் புரியும் ஆணிடமிருந்தோ அன்றிப் பெண்ணிடமிருந்தோ பிரிந்து செல்வதைத் தவறென்று வாதிடுவது என் நோக்கமல்ல.

    ஆனால் தனிமனித சுதந்திரத்தின் அர்தத்தை சரியாகப் புரிந்து கொள்ளாமல் விட்டுக் கொடுக்கும் மன்ப்பான்மையை அறவே மறந்து சட்டத்தின் துணை கொண்டு மணவாழ்வை அவசரமாக முறித்துக் கொள்ளும் பலரை அனுபவரீதியாகப் பார்த்துள்ளேன்.

    என்ன எங்கே செல்கிறது இந்த கருத்தாடல் ? என்று எண்ணுகிறீர்களா?

    இந்த வாரம் இங்கிலாந்து மகாராணியார் இரண்டாவது எலிசபேத் அவர்கள் தமது 65வது திருமணநாளை மிகவும் அமைதியாகக் கொண்டாடியுள்ளதை நினைத்துப் பார்க்கையில் அவரது அந்த வாழ்க்கையின் வெற்றி மனதில் ஏற்படுத்திய தாக்கத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்காகவே மேலே அலசியவை.

    திருமண வாழ்வு என்பது ஒரு ஆணுக்கும் , பெண்ணுக்கும் இடையில் நிகழும் ஒரு ஆயிரங்காலத்து பந்தம் என்பதே எமது ஆன்றோர்கள் எமக்கு போதித்த அனுபவக் கல்வி ( ஓ இப்போது ஆணுக்கும், ஆணுக்கும் அன்றி பெண்ணுக்கும், பெண்ணுக்கும் இடையில் கூட இப்பந்தம் ஏற்படுத்தப்படுகிறதே ! ஓ இதுதான் நாகரீக முன்னேற்றமோ ?)

    இம்மணவாழ்க்கை வெற்றியடையவதற்கு பல காரண்ங்கள் கைகொடுக்கின்றன. ஆனால் அவற்றில் முக்கியமானது  பரஸ்பரம் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்கும் மன்ப்பான்மையேயாகும்.

    இந்த 65 வருட கால மண்வாழ்க்கையில் எலிசபேத் மகாராணியாரும் அவரது கணவரான பிரின்ஸ் பிலிப் அவர்களும் ஒருவருக்கொருவர் எத்தகைய விட்டுக் கொடுப்புகளை செய்திருப்பார்கள் என்று எண்ணும் போது மெய்சிலிர்க்கிறது.

    எனது தந்தை இவ்வுலக வாழ்க்கையை நிறைவு செய்த போது எனது பெற்றோர் மண்வாழ்க்கையில் 54 வருடங்களைப் பூர்த்தி செய்திருந்தார்கள். தந்தை மறைந்து சரியாக ஆறு வாரங்களில் எனது அன்னையும் அவருடன் இணைந்து கொண்டார்.

    அவர்களது மணவாழ்வின் 54 வருடங்களும் அமைதியாக நடந்தது என்று சொன்னால் அது உண்மையாகாது. அவர்களுடைய மண்வாழ்வினிலே பல சமயங்களில் புயல் வீசத்தான் செய்தது ஆனால் ஒருவர் மீது ஒருவர் கொண்டிருந்த நம்பிக்கையும், திருமண்ம் எனும் பந்தத்தின் மீது அவர்கள் கொண்டிருந்த அசைக்க முடியாத நம்பிக்கையுமே அவர்களுக்கு கைகொடுத்தது என்பதை நான் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன்.

    எனது பெற்றோர்கள் சாதாரணமானவர்களே ! அவர்கள் மீது சமூகம் கொடுத்த எதிர்பார்ப்புகளினால் ஏற்படுத்தப்பட்ட அழுத்தங்கள் என்று பெரிய அள்வில் எதுவும் இருக்கவில்லை.

    ஆனால் இங்கிலாந்து மகாராணியாரும், அவரது கணவரும் ஒரு நாட்டின் மதிப்பிற்கும், மரியாதைக்குமுரிய கெள்ரவ பிரஜைகள் ஆவார்கள். அவர்களது நாட்டு மக்களின் பார்வையில்  உதாரணப் புருஷர்களாக வாழ வேண்டிய நிர்ப்பந்தத்திற்குள்ளாக்கப்பட்ட்ட ஒரு நிலையில் அவர்கள் வாழ்கிறார்கள்.

    அவர்களது அந்த வாழ்க்கையில் அவர்கள் 65 வருட காலம் மணவாழ்வில் நிலைத்திருப்பது என்பது ஒரு சாதனையான விடயம் என்றே சொல்ல வேண்டும்.

    இங்கிலாந்து மகாராணியார் இளவரசியாக இருந்த போது தனது கணவர் பிலிப் அவர்களை முதன் முதலில் 1934ம் ஆண்டும் பின்னர் 1937ம் ஆண்டும் சந்தித்தார். தனக்கு 13 வயதாக இருக்கும் போதே பிலிப் மீது தனக்குக் காதல் ஏற்பட்டதெனச் சொல்கிறார்.

    அபோதைய இங்கிலாந்து மன்னரான ஜார்ஜ் அவர்களுக்கு பிலிப் தனது மருமகனாக வருவதில் மகிழ்ச்சி இல்லாதிருந்ததாம். காரணம் அவர் பெயரளவில் இளவச‌ராக இருந்து அவருக்கென ஒரு அரசோ அன்றி நாட்டின் தலைமைப்பதவியோ கிடையாது என்பதுவேயாகுமாம்.

    பிபில் அவர்களின் தந்தை கிரேக்க நாட்டு இளவரசர்களில் ஒருவரான அன்ட்ரூவிற்கும், விக்டோரியா  மகாராணியாரின் மகள் வழி வந்த பேரப்பிள்ளையான இளவரசி லூயி அவர்களுக்கும் பிறந்த மகனாவார்.

    இளவயதினிலே பாரிசில் கல்வி பயின்ற பிலிப் அவர்கள் மிகவும் திறமையாக பிரெஞ்சு, ஆங்கிலம், ஜேர்மனி ஆகிய மொழிக்ளைப் பேசும் திறமை பெற்றவராவார்.

    இங்கிலாந்து பட்டத்து இளவரசியான இரண்டாவது எலிசபெத் அவர்கள் பிரின்ஸ் பிலிப் அவர்களை 1947ம் ஆண்டு நவம்பர் மாதம் 20ம் திகதி லண்ட்னில் உள்ள வெஸ்ட் மினிஸ்டர் அபே தேவாலயத்தில் மணமுடித்தார்,. திருமணத்திற்கு முன்னதாக பிலிப் அவர்கள் தனது கிரேக்க மதத் தழுவலை நிராகரித்து ஆங்கில கிறித்துவ மதத்தைத் தழுவிக் கொண்டார். இவருக்கு இங்கிலாந்தின் இளவரசர் எனும் பட்டத்தையும், டியூக் ஆப் எடின்பரோ எனும் பட்டத்தையும் அப்போதைய இங்கிலாந்து மன்னரான 5ம் ஜார்ஜ் மன்னர் அளித்துக் கெளரவித்தார்.

    நோயினால் பாதிக்கப்பட்ட ஜார்ஜ் மன்னர் 1952ம் ஆண்டு பெப்ரவரி மாதம் மரணமடைய இங்கிலாந்தின் இரண்டாவது எல்சபேத் மகாராணியாராக இங்கிலாந்தின் இளவரசி முடிசூடினார்.

    தனது பட்டத்து அரசியான வாழ்விலே பல மாற்றங்களைச் சந்தித்தும் அவையனைத்தும் தனது மண்வாழ்வில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படாத வகையில் தனது வாழ்க்கையை அமைத்துக் கொண்டார்.

    அவருக்குத் துணையாகத் தானும் எந்தவித சர்ச்சைகளுக்குள்ளும் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளாமல் பிரின்ஸ் பிலிப் அவர்களும் மகாராணியாருக்கு ஏற்ற கணவராக தனது வாழ்வை மேற்கொண்டார்.

    இவர்களின் மூத்த மக்னான இளவரசர் சார்லசின் மணவாழ்க்கை முறிவடைந்து அவர் இளவரசி டயானவை விவாகரத்துச் செய்தார், இரண்டாவது மக்னான இளவரசர் அன்ட்ரூ தனது மனைவியை விவாகரத்துச் செய்தார்.

    இளவரசி டயானா மரணமானார். இளவரசர் சார்ல்ஸ் அவர்கள் தனது பதின்ம வயதுக் காதலியை மறுமணம் செய்தார்.

    இப்படியான பல பாதிக்கக்கூடிய விடயங்கள் அனைத்துக்கும் முகம் கொடுத்து இங்கிலாந்து ராணி எனும் தனது பதவிக்கு எவ்வித களங்கமும் ஏற்படாத வகையில் தனது பிரத்தியேக வாழ்க்கையை செப்பனிட்டு அனைவருக்கும் முன்னுதாரணமாக வாழ்ந்து கொண்டிருக்கும் இத்தம்பதியரின் மணவாழ்க்கை நிச்சயமாக ஒரு சாதனையே.

    ஒரு வியாபாரம் செழிக்க வேண்டுமானால் அவ்வியாபாரத்தின் விஸ்தரிப்புக்காக எமது உழைப்பை அர்ப்பணிப்பதைப் போல திருமண வாழ்க்கையின் வெற்றிக்காக எமது பண்புகளை மேம்படுத்தி வாழப் பழகிக் கொள்ள வேண்டும் என்பதை இவர்களது வாழ்க்கையில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.

    “ஒரு மனிதன் விழாமலே வாழ்வது பெருமையல்ல‌
      ஒவ்வொருமுறை விழுந்த போதும் எழுந்தான் என்பதுவே பெருமை “

    அடுத்த மடலில் சந்திக்கும் வரை

    அன்புடன்
    சக்தி சக்திதாசன்
     

     

     

    Share
  • அணுமின் சக்தி இயக்கச் சாதனங்களின் அனுதினக் கண்காணிப்பும், அபாயப் பாதுகாப்பும்

     

     

                                                                                                                      கட்டுரை –3

                                                                         சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா


     

    பரிதியின் ஒளிக்கதிர் மின்சக்தியாய்ப்
    பயன்படும் பகலில்
    பல்லாண்டு !
    ஓயாத கடல் அலைகளின்
    அசுர அடிப்பில்
    அளவற்ற மின்சக்தி உள்ளது !
    காற்றுள்ள போது விசிறிகள் சுழன்று
    மேட்டில் கிடைக்கும் மின்சக்தி !
    மாட்டுச் சாணி வாயு
    வீட்டு மின்சக்தி ஆக்கும் !
    நிலக்கரி மூலம்
    நிரம்ப மின்சக்தி பெறலாம்,
    கரியமில வாயு வோடு !
    அந்த முறைகள் யாவும் ஓர்
    அளவுக் குட்பட்டவை !
    சிக்கன மானவை சில !
    செலவு மிக்கவை சில !
    சிறியவை சில !
    பேரளவு மின்சக்தி படைக்க
    நுணுக்கமான
    அணுப் பிளவுச் சக்தி தேவை.
    கதிரியக்கம் இல்லா
    அணுப் பிணைவுச் சக்தி தேவை.
    அந்த சக்திக்கு
    எல்லை இல்லை !
    வரையறை ஏதுவு மில்லை !
    மின்சக்தி
    பற்றாக் குறையைத்
    தீர்க்க
    எரிசக்தி அனைத்தும் தேவை
    தரணிக்கு !

     ++++++++++++

     

     

    “அணுவைப் பிளந்து சக்தியை வெளியாக்குவதுடன், கடல் மட்ட அலைகளின் ஏற்ற இறக்கத்தில் உண்டாக்கும் சக்தியைக் கையாண்டு, பரிதிக் கதிரொளி வெப்பத்தையும் கைப்பற்றி ஒருநாள் மின்சக்தி ஆக்குவோம்.”

    ஆக்கமேதை தாமஸ் ஆல்வா எடிஸன் (ஆகஸ்டு 22, 1921)

    “மின்சக்தி உற்பத்தி இல்லாமை போன்று செலவு மிக்க மின்சக்தி எதுவுமில்லை.”

    [No Power is so costly as no Power]

    டாக்டர் ஹோமி பாபா (1955 ஐக்கிய நாடுகளின் ஆக்கப்பயன்களின் அணுசக்திப் பேரவை ஜெனிவா)

    “அடுத்து வரும் சில பத்தாண்டுகளுக்கு நமது பூகோளத்தின் முக்கியப் பெரும் பிரச்சனைகளாக நீர்வளப் பஞ்சமும், எரிசக்திப் பற்றாக்குறையும் மனிதரைப் பாதிக்கப் போகின்றன! இந்தியாவைப் பொருத்த மட்டில் அடுத்த இருபது ஆண்டுகளுக்கு நமக்குப் போதிய நீர்வளமும், எரிசக்தியும் மிக மிகத் தேவை! பரிதிக் கனலைப் பயன்படுத்தியும், அணுசக்தி வெப்பத்தை உபயோகித்தும் உப்புநீக்கி நிலையங்கள் பல உண்டாக்கப்பட வேண்டும். இப்போது இயங்கிவரும் அணு மின்சக்தி நிலையங்களுக்கு அருகே, உப்புநீக்கி நிலையங்கள் உடனே உருவாக்கப்பட வேண்டும்.”

    முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம். (2003)


     

    Fig. 1

    Pressurized Water Reactor Systems

    முன்னுரை:   இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டிலே தமிழ்மக்கள் உள்பட உலக மாந்தர் அனைவருக்கும் நாகரீகமாக அனுதினமும் உயிர்வாழக் குடிநீரும், மின்சக்தியும் மிக மிகத் தேவை. 1950 ஆம் ஆண்டு முதல் 30 உலக நாடுகளில் 435 அணுமின் நிலையங்கள் [அமெரிக்காவில் திரி மைல் தீவு, ரஷ்யாவில் செர்நோபிள் நிலையம் ஆகிய இரண்டைத் தவிர] பாதுகாப்பாக இயங்கி 370,000 MWe (16%) ஆற்றலைப் பரிமாறி வருகின்றன. மேலும் 56 நாடுகளில் 284 அணு ஆராய்ச்சி உலைகள் ஆய்வுகள் நடத்திக் கொண்டு வருகின்றன. அதற்கு அடுத்தபடி அணுசக்தி இயக்கும் 220 கப்பல்களும், கடலடிக் கப்பல்களும் (Submarines) கடல் மீதும், கீழும் உலாவி வருகின்றன. ஈழத்தீவில் பாதிக்கும் குறைவாக அரை மாங்காய் போலிருக்கும் தென் கொரியாவில் 20 அணுமின் நிலையங்கள் 39% ஆற்றலைத் தயாரித்து மின்சாரம் அனுப்பி வருகின்றன. இந்தியாவின் அணு மின்சக்திப் பரிமாற்றப் பங்கு 2.6%;  இயங்கி வருபவை 20  அணுமின் நிலையங்கள் (2011).  இந்தியாவில் அனைத்து அணுசக்தி நிலையங்களைப் பாதுகாப்பாக இயக்கத் திறமையுள்ள, துணிவுள்ள நிபுணர்கள் ஏராளமாய் இருக்கிறார்கள்.

     

    இந்திய அணுசக்தி நிலையங்களின் மின்சார உற்பத்தித் திறனையும், இயக்க விபரங்களையும், புதிய நிலையங்களின் கட்டுமான வேலைகளையும், இந்திய அணுசக்திக் கார்ப்பொரேஷன் வலைத் தளத்தில் << www.npcil.nic.in >> விளக்கமாகக் காணலாம். 1957 ஆம் ஆண்டு முதல் கடந்த 50 வருடங்களாக ஆண்டுக்கு 250 விஞ்ஞானப் பொறியியற் துறைப் பட்டதாரிகள் வீதம் சுமார் 12,000 பேருக்கு மிகையாகப் பயிற்சிக்காகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார்கள். தற்போது அணுசக்தி நிலையங்களை டிசைன் செய்யவும், கட்டி முடிக்கவும், இயக்கி வரவும், அவற்றில் ஆராய்ச்சி செய்யவும் பட்டதாரிகள் பலர் இருக்கிறார்கள், இந்தியாவிலே விஞ்ஞானப் பொறியியற் பட்டதாரிகள் ஆயிரக் கணக்கில் பணிசெய்யும் ஓர் உயர்ந்த தொழில் நுட்பத் துறையாக அணுசக்தி நிர்வாகம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. பாரத நாட்டுப் பாதுகாப்புக்காக அணு ஆயுத உற்பத்தி, அணு ஆயுதச் சோதனை, அணு ஆயுத எரி உலோகச் சேமிப்பு [Nuclear Weapon Grade Materials] ஆகியவற்றை ரகசியமாக இந்திய அரசாங்கம் தன் நேரடிப் பார்வையில் கையாண்டு வருகிறது. ஆனால் மின்சாரம் பரிமாறி இயங்கி வரும் 20 அணுமின்சக்தி நிலையங்களின் அமைப்பிலோ, நிர்வாகத்திலோ இயக்கத்திலோ, மின்சாரப் பரிமாற்றத்திலோ எதிலும் அரசாங்க அதிகாரிகளின் குறுக்கீடு கிடையாது.

    இந்தக் கட்டுரையில் அணுமின்சக்தி நிலைய இயக்குநர்கள் எப்படி அனுதினமும் அணுமின் உலைக் கட்டுப்பாடு, பாதுகாப்பு, கண்காணிப்பு முறைகளைப் பின்பற்றி வருகிறார் என்பது விளக்கப் படுகிறது..

     

    Fig 1A

    Reactor Vessel Parts


    அணு மின்சக்தி உலை இயக்கத்துக்குத் தேவையான ஏற்பாடுகள்

    அணுமின்சக்தி நிலையத்தில் எத்தனை இயக்க ஏற்பாடுகள் உள்ளன ?  500 மெகா வாட் ஆற்றல் உற்பத்தி செய்வதற்கு நிலையத்தில் குறைந்தது 50 முதல் 80 வரையான அமைப்புகள் கொண்டதாக இருக்கும். அவற்றின் விபரங்களைக் காண்போம்: கீழ்க்காணும் ஏற்பாடுகள் யாவும் 500 மெகா வாட் அழுத்த நீர் அணுமின் நிலையம் [Pressurized Water Reactor (PWR)]  ஒன்றின் உதாரண அமைப்புகள் ஆகும்.

    1. அணு உலை, அழுத்த அணு உலைக் கலம் (Atomic Reactor & Reactor Pressure Vessel)

    அணு உலைக் கலன் நேராகவோ அல்லது மட்டத்திலோ (Vertical or Horizontal Vessel)  அமைக்கப் படலாம். நம் விளக்கத்துக்கு செங்குத்து உலைக்கலனை உதாரணமாக எடுத்துக் கொள்வோம். அணு உலையில் உள்ள 300 மேற்பட்ட துளைகளில் யுரேனியம் டையாக்ஸைடு வில்லைகள் அடங்கிய எரிக்கோல்கள் [Fuel Rods with Uranium Dioxide Pellets] புகுத்தப் பட்டுள்ளன. உலைக்கலனில் எப்போதும் மிதவாக்கி நீர் மட்டம் (Moderator Water Level) எரிக்கோல்களை மூழ்க்கி யிருக்கும். யுரேனியத்தில் (U-235) நேரும் சுயப் பிளவுகளால் எழும் நியூட்ரான்கள், மேலும், மேலும் யுரேனியம் அணுக்கருவைப் பிளந்து, பிளவு ஒன்றுக்கு 200 மில்லியன் எலெக்டிரான்-வோல்ட் வெப்பசக்தி நீரில் தொடர்ந்து எழுகிறது. [200 Mev Energy per Fission]. அணு உலை இயங்கினாலும், இயங்கா விட்டாலும் எப்போதும் பிளவுத் துணுக்குகள் தேய்வதாலும் [Fission Product Decay Heat], சுயப்பிளவுக் கனலாலும் தொடர்ந்து வெப்பம் உண்டாகிய வண்ணமிருக்கும். உலைக்கலனில் அந்த வெப்பம் தணிக்கப்பட்டு நீரின் உஷ்ணம் ஒரே அளவில் சுயமாகக் கட்டுப்படுத்த வேண்டும்.

     

    Fig. 1B

    Nuclear Safety Analysis

    1. “நிறுத்த அணு உலை வெப்பத் தணிப்பு ஏற்பாடு” [Shutdow Cooling Water System] : அணு உலை நிறுத்தமான தருணத்தில் எழும் நீரின் வெப்பத்தை நீக்கிச் சீரான கனப்பில் வைத்திருக்கும் ஏற்பாடு இது, இந்த நீரோட்டச் சுற்றில் பம்புகளும், வெப்பக் கடத்தியும் [Pumps & Heat Exchangers] முக்கியமாக உள்ளன. இந்தச் சுற்றில் நீரோட்டத்தின் வேகமும், அழுத்தமும் மிதமானவை. [Low Flow & Low Pressure System]. இது தானாக இயங்குவது. இந்தச் சுற்று நீரோட்டத்தை முற்றிலும் இயக்குநர் நிறுத்த முடியாது.

    2.. அணு உலைக்குள்ளே உலைக்கலன் வெல்டிங் இணைப்புகளை உளவு செய்யும் போது “பராமரிப்பு தணிப்பு நீரோட்டச் சுற்று” [Maintenance Cooling Water System] இயக்கத்தில் கொண்டு வரப்படும்.

     

    இந்த நீரோட்டம் நிறுத்தமான அணு உலை பலநாட்கள் குளிர்ந்த பின்பு இயக்கப்படும். பராமரிப்பு வேலைகள் முடிந்த பிறகு, இந்த நீரோட்டம் நிறுத்தப்பட்டு மேலே கூறப்பட்டுள்ள முதல் தணிப்பு நீரோட்டம் இயங்கி விளையும் வெப்பத்தைச் சீராக வைக்கும்.

    3. அணு உலைப் பணிகள் யாவும் முடிந்து மின்சக்தி உற்பத்திக்குத் தயாராக உள்ள போது “பிரதம வெப்பத் தணிப்பு நீரோட்டம்” [Main or Primary Coolant System] அழுத்தமாக்கப் பட்டு மிக்க வேகமாக நீரை எரிக்கோல்கள் ஊடே செலுத்தும். அணு உலையில் கீழே இறக்கப்  பட்டுள்ள நியூட்ரான் விழுங்கிகளை மெதுவாக மேலே தூக்கும் போது மிதவேக நியூட்ரான் களின் எண்ணிக்கை பில்லியன் கணக்கில் பெருகி வெப்பசக்தி பன்மடங்கு ஏறுகிறது. பிரதம நீரோட்டத்தில் நான்கு அல்லது எட்டு பிரதம வெப்பக் கடத்திகளும் [Primary Heat Exchangers], நான்கு அல்லது எட்டு பூதப் பம்புகளும் [Primary Heat Transport Pumps], நீராவி உண்டாக்க இரண்டு கொதிகலன்களும் [Steam Boilers] இணைக்கப் பட்டுள்ளன.

     

     

    Fig 1C

    Steam Generator

    4. நிலையம் முழு ஆற்றலில் இயங்கி வரும் சமயத்தில் திடீரென அணு உலைச் சாதனங்களுக்கும், வெப்பத் தணிப்புப் பம்புகளுக்கும் மின்சாரப் பரிமாற்றம் நின்று போனால் நிலைய ஏற்பாடுகளில் கொந்தளிப்பு ஏற்பட்டு, ஆட்சி அரங்கில் [Control Room] சிவப்பு விளக்குகள் பல மின்னி எச்சரிக்கை மணிகள் அடிக்கும். அவ்விதம் ஏற்பாடுகள் தடுமாறும் போது, முதலில் மேலே காத்திருக்கும் நியூட்ரான் விழுங்கிகள் தானாக் கீழே இறங்கி அணு உலைச் சுயமாக நிறுத்தம் அடையும். பிரதம வெப்பத் தணிப்பு நீரோட்டத்தின் அழுத்தம் குறைந்து வேகமும் விரைவாகக் குன்றுகிறது. அப்போது அணுப்பிளவுகள் ஏற்பட்டு சூடான அணுப்பிளவுத் துணுக்குகளின் வெப்பம் தணிக்கப் படாவிட்டால் யுரேனியக் கோல்கள் கனல் எழுச்சியால் உருகிவிடும் ! இதுவே “நீரிழப்பு விபத்து” [Loss of Coolant Accident (LOCA)] என்று அஞ்சப்படுவது. 1979 இல் அமெரிக்காவின் திரிமைல் அணுமின் நிலையத்தில் அந்த “நீரிழப்பு விபத்து” நேர்ந்துதான் அணு உலையில் எரிக்கோல்கள் பெரும்பான்மையாக உருகி [Fuel Core Melting], மாபெரும் சுத்தீகரிப்பு, மீட்சி வேலைகள் மேற்கொள்ளப் பட்டன !

    அவ்வித “நீரிழப்பு விபத்தைத்” தவிர்க்க, நிறுத்தமடையும் அணு உலை எரிகோல்களின் வெப்பத்தைத் தணிக்க, “அபாய தணிப்பு நீர் பாய்ச்சல் ஏற்பாடு” [Emergency Coolant Injection System] அமைக்கப் பட்டிருக்கிறது.

     

     

    Fig. 1D

    Reactor Systems

    5. அணு உலையில் நியூட்ரான் பெருக்கம் விழுங்கிகளால் தடைபெற்று மீறும் தொடரியம் நிகழாதவாறு பாதுகாப்பு உண்டாக “அபாய நஞ்சுப் பாய்ச்சல் ஏற்பாடு” [Emergency Poison Injection System] இணைக்கப் படுகிறது. நியூட்ரான்களை விரைவாக விழுங்கும் கடோலினியம் அந்த திரவ நீரில் கலக்கப்பட்டிருக்கிறது. கனநீர் அணுமின் உலைகளில் [Indian Heavy Water Reactors] அது தேவையாகும் போது மிதவாக்கி நீரில் பாய்ச்சப் படுகிறது.

    அணு உலையை முற்றிலும் நிறுத்த “இரட்டைப் பாதுகாப்பு ஏற்பாடுகள்” இருக்கின்றன.

    a) நியூட்ரான்களை விழுங்கும் தடைக்கோல்கள் சட்டென அணு உலைக்குள் இறங்கும் ஏற்பாடு

    b) நியூட்ரான்களை விரைவாக விழுங்கும் “அபாய நஞ்சுப் பாய்ச்சல் ஏற்பாடு”

    6. தனித்தனியாக ஆட்சிக் கோல்களும், நிறுத்தக் கோல்களும் சுயமாக இயங்கும் மின்சாரக் கட்டுப்பாட்டு ஏற்பாடுகள் [Control Rods & Shut-off Rods Drive Systems]. உதாரணமாக ஆட்சிக் கோல்கள் அணு உலையில் 12 அல்லது 18 இருக்கலாம். நிறுத்தக் கோல்கள் 20 அல்லது 30 இருக்கலாம். நிறுத்தமான அணு உலையில் ஆட்சிக் கோல்களும், நிறுத்தக் கோல்களும் முழுவதும் கீழே இறக்கப்பட்டிருக்கும். அணு உலை இயங்க ஆரம்பிக்க முதலில் அனைத்து நிறுத்தக் கோல்களும் அணு உலைக்கு மேலே தூக்கப் படவேண்டும். ஆனால் மின்சக்தி ஆற்றலை மிகைப்படுத்த ஆட்சிக் கோல்கள் சீராக, முறையாக, மெதுவாக ஒவ்வொன்றாக மேலே தூக்கப் படவேண்டும்.

     

     

    Fig. 1E

    Primary Giant Pump Motor

    7. அணு உலைக்குள்ளே பல வெப்பக் கடத்திகள் அமைக்கப் பட்டிருக்கின்றன. வெப்பத்தை நீக்க முக்கியப் பிரதம வெப்பக் கடத்திகளில் “தனிமங்கள் அகற்றப்பட்ட தூய நீர்” அல்லது கடல் நீர் சில நிலையங்களில் பயன்படுகிறது. [Demineralised Water System or Sea Water Cooling System for Heat Exchangers]

    8. துவித நீரோட்ட ஏற்பாடு [Secondary Coolant Water System] என்பது கொதிகலனில் வெந்நீர் நீராவியாக மாறி டர்பைன் சுழலிகளைச் சுழற்றி, மின்சார ஜனனியில் மின்சாரம் உற்பத்தி செய்ய வசதி உண்டாக்குகிறது.

    9. டர்பைன் குளிர்ப்புக் கலனைத் தணிப்பு செய்யும் நீரோட்டம் [Condenser Cooling water System or Sea Water Cooling System for the Steam Condenser].

    10. அணு உலையில் எதிர்பாராது மனிதத் தவறோ அல்லது யந்திர சாதனப் பிசகோ நேர்ந்து எல்லா வித நீரோட்டமும் எரிக்கோல் வெப்பத் தணிப்புக்குத் தடைப்பட்டால், இறுதியாகத் “தீயணைப்பு நீரோட்ட ஏற்பாடு” [Emergency Fire Water System] அணு உலை எரிக்கோல்களை உருக விடாமல் செய்ய கடைசி முயற்சியாகக் கையாளப்படுகிறது.

     

    Fig. 2

    Reactor Internal Parts

    பொது அபாய மின்சாரத் தயாரிப்பு ஏற்பாடுகள்

    பொது நிலையத்துக்குப் பயன்படும் மின்சாரம் தடைப்படுமானால், அபாய நிலைத் தேவைக்குப் பயன்பட டீசன் எஞ்சின் இயக்கும் இரட்டை மின்சார ஜனனிகள் [Emergency Diesel Power System] அமைக்கப் பட்டிருக்கின்றன. அவற்றில் ஒன்று எப்போதும் மிதப்பு நிலையில் ஓடிக் கொண்டி ருக்கும். முதல் யூனிட் நின்றால் மற்றொன்று ஓடத் தயாராய் இருக்கும். மின்னல் இடி மழைச் சமயங்களில்

    நிலைய மின்சார ஆற்றல் தடைப்பட்டுப் போனால், ஓடிக்கொண்டிருக்கும் டீசல் ஜெனரேட்டர் மின்சாரம் நிறுத்தமான அணு உலைச் சாதனங்களுக்கும், கட்டுப்பாடு புரியும் சுற்றுக்களுக்கும் பரிமாறப்படும்.

     

    Fig. 3

    Primary & Secondary Coolant Systems

    (தொடரும்)

    ***********************

    தகவல்:

    1. http://www.npcil.nic.in/index.asp [Nuclear Power Corporation of India Ltd Website for Nuclear Power Updates]

    2. http://pib.nic.in/release/release.asp?relid=20878 [President Dr. Abdul Kalam Speech on Kudungulam (Sep 22, 2006)]

    3. http://www.stratmag.com/issue2Nov-15/page03.htm

    [Russia Breaches Nuclear Blockade against India By: C. Raja Mohan (Nov 16, 2001)]

    4. World Nuclear Association – WNA

    Radiological Protection Working Group – RPWG (Official List – July 20, 2006)

    http://www.world-nuclear.org/sym/2006/st_pierre.htm

    5. World Nuclear Association – WNA

    Waste Management and Decommissioning Working Group – WM&DWG (Official List – July 25, 2006)

    http://www.world-nuclear.org/sym/2006/st_pierre.htm

    6. http://www.candu.org/npcil.html [Indian Heavywater Nuclear Power Plants]

    7. Safety of Nuclear Power Reactors, [www.uic.com.au/nip14.htm] (July 2007)

    8. Nuclear Power Plants & Earthquakes [www.uic.com.au/nip20.htm] (Aug 2007)

    9. http://www.thinnai.com/?module=displaystory&story_id=80708091&format=html Letter By R. Bala (August 9, 2007)

    10. http://www.wano.org.uk/WANO_Documents/What_is_Wano.asp [World Association of Nuclear Operation Website]

    11 IAEA Incident Reporting System Using Operational Experience to Improve Safety (IAEA Instruction)

     

    ******************

    S. Jayabarathan [jayabarat@tnt21.com] December 1, 2011  (Revised -1)

    ******************

    S. Jayabarathan [jayabarat@tnt21.com]  November 21, 2012 (R-1)

    Share
  • சீன யாத்திரிகர் யுவாங் சுவாங்

     

    சீன யாத்திரிகர் யுவாங் சுவாங்

     
    பற்றி பலரும் பலமுறை கேள்வியுற்றிருப்பார்கள்
     
    சிறுவரும் வரலாற்றுப்படத்தில் படித்திருப்பர்
     
    ஆனால் அவர் உருவம் எப்படிஇருக்கும் ???
     
    என படத்தில் பார்துள்ளோர் சிலரே ஆகலாம் !!!!
     
    பார்கக்காதவர் நிரலில் யானும் உள்ளேன்
     
    இணைய தளங்களில் உலாவரும்போது கண்டது 
     
    பார்த்தவர் பார்க்காதவர் என எல்லொரும் காண
     
    அவரது சிலை
     
    இந்தியாவில்
     
    நாளந்தாவில் 
     
    அவர் நினைவிடத்தில்
     
    உள்ளது படத்தில் கண்டேன்
     
     
     
     
    தாங்களும் காண்க
     
    நூ த லோ சு
     
    மயிலை
     
     
     
     
     
    Share
  • துளிர்!

     

    தமிழ்முகில் பிரகாசம்

     

    கையிலிருக்கும் அட்சயப்  பாத்திரத்தின்

    பெருமை உணராது – அலட்சியமாய் 

    ஒடித்தெறிந்து விட

    இன்றோ – பிச்சைப் பாத்திரம்

    ஏந்தி நிற்கிறோம் !!!

    மரங்களை வெட்டி

    எறிந்தோம் – தூய்மையான

    சுவாசக் காற்றைத் தேடி

    யாசகர்களாய் அலைகிறோம் !!!

    பாவிகளை இரட்சிக்கும்

    தேவ தூதன் என –

    நமக்காய் மீண்டும் மண்ணில்  –

    புத்தம் புது துளிராய் !!!

    புது நம்பிக்கையுடன் …………

    புது உற்சாகத்துடன் ……..

    தன்னலமில்லா மனத்துடன் 

    ஓர் புத்துயிரின் ஜனனம் !!!!

     

    Share
  • காணிக்கை

     

    சு. கோதண்டராமன்

    கோவில் உண்டியல் காணிக்கைக்குக்
                காசினை எடுக்கையில் அறிவு தடுத்தது
                “பற்பல கோவிலில் உண்டியல் திருட்டு,
                அறங்காவலரால் ஆலயம் சூறை,
                என நிதம் படிக்கிறோம் செய்தித்தாளில்.
                நேரே  நல்லோர்க் கீவாய்” என்றது.

             
                தீபத்தட்டுடன் குருக்கள் வந்தார்-
                வைரக்கடுக்கன் வகை வகை மோதிரம்
                “இவர்க்கேன் எந்தன் அற்பக்காசு?
                தனிகர்க் களித்தல் தருமம் அல்ல.”
               

                வறுமையின் உருவமாய் வந்தார் பணியாள்
                “ஐயகோ! இவனொரு குடியன் அன்றோ?
                ஆலயப் பணியின் புனிதம் மறந்து
                அறவழி பிறழும் இவனும் வேண்டாம்.”
     

                வெளியே பலபேர் பிச்சை எடுத்தனர்
                எஃகினைப்போன்ற உடலினைக் கொண்டோர்
                உழைக்கா துண்பதில் தனிச்சுகம் காண்போர்
                “இவர்க்கு ஈந்தால் சோம்பல் வளரும்,
         எனக்கோர் சமூகக் கடமையும் உண்டு.”
     

    தெருவில் இறங்கி நடந்தபோது
    எதிரில் சுவரில் இருந்ததிவ் வாசகம்
    “கடமையைச் செய்யவே உனக்குளதுரிமை,
    பலனை
    அலசுதல் மாபெரும் மடமை.”

    காசினை அங்கே வைத்து நகர்ந்தேன்
    கனமிலா மனத்துடன் இல்லம் வந்தேன்.

    படத்திற்கு நன்றி :

    http://www.osho-tv.com/

    Share
  • நன்மையே தீமையாய்!

     

    முகில் தினகரன்

    நான் ஆசை ஆசையாய் வாங்கி வந்து நீட்டிய அந்த புடவைப் பார்சலை முகம் மலர வாங்கி, விழிகளில் ஆவலைத் தேக்கி, இதழ்களில் புன்முறுவலைக் காட்டி, விரல்களில் பரபரப்பைக் கொட்டி, வேக வேகமாய்ப் பிரித்த அமுதா அப்புடவையை வெளியே எடுத்து பிரித்துப் பார்த்ததும் முகம் மாறினாள்.

    “அடப்பாவமே!…பிடிக்கலை போலிருக்கே!

    ம்…ம்…ம்…எப்படி?….இவளுக்குப் பிடித்த ஸ்கை ப்ளு கலர்ல்தானே எடுத்திருக்கேன்…அப்புறம் ஏன்…?”

    சுவாரசியமேயில்லாமல் அதை மடித்து மீண்டும் அதே அட்டைப் பெட்டிக்குள் திணித்தவாறே கேட்டாள். “என்ன விலை?”

    “ம்ம்ம்….ஆயிரத்தி இருநூறு!” அதிகமென்று திட்டுவாளோ… இல்லை…குறைவு என்று பாராட்டுவாளோ…என்பது புரியாமல் திக்கித் திணறி சொன்னேன்.

    “ப்ச்….வேஸ்ட்” என்றாள் ஒற்றை வார்த்தையில்.

    “ஏன் அமுதா…ஏன் அப்படிச் சொல்லுறே?…நான் ஆசைப்பட்டு…நானே செலக்ட் பண்ணிட்டு வந்ததை இப்படி “பொசுக்”ன்னு ‘வேஸ்ட்’ன்னுட்டியே…” பரிதாபமாய்க் கேட்டேன்.

    “ஸாரிங்க….நான் அப்படிச் சொன்னதுக்கான காரணத்தை நானா சொல்லுறதை விட நீங்களே உணருவீங்க!…எப்ப?…நாளைக்கு நான் இதைக் கட்டிட்டு ஆபீஸூக்குக் கிளம்பும் போது!”

    நான் குழப்பமாய்ப் பார்த்தேன்.

    என் மன ஓட்டத்தைப் புரிந்து கொண்டவள், “கோவிச்சுக்காதீங்க டியர்!” எனக் கொஞ்சலாய் என் கன்னத்தைச் செல்லத் தட்டு தட்டி விட்டுச் சென்றாள்.

    மறுநாள் காலை.

    நானும் அமுதாவும் ஆளுக்கொரு பக்கம் பரபரப்பாய் ஆபீஸூக்குக் கிளம்பிக் கொண்டிருந்தோம்.

    “ஏங்க…டைனிங் டேபிள்ல டிபனெல்லாம் எடுத்து வெச்சிட்டேன்…நீங்களே எடுத்து சாப்பிட்டுக்கங்க!” என்று சொல்லி விட்டு குளியலறைக்குள் புகுந்தாள் அவள்.

    அவசர அவசரமாய் டிபனை அள்ளி விழுங்கி விட்டு, வாசலருகே இருந்த ஸ்டூலில் அமர்ந்து ஷூ அணிந்து கொண்டே, உள் அறையை நோக்கிக் கத்தினேன். “அமுதா…ஆச்சா?…லேட்டாகுதும்மா!”

    “இதோ வந்திட்டேன்!” என்றபடி வந்து நின்றவளைப் பார்த்து முகம் சுளித்தேன்.

    “இதென்னடி புடவை?…..சருகாட்டம் இவ்வளவு லேசாயிருக்கு!…இடுப்புப் பகுதியில் உள் பாவாடை சுருக்கங்கள் எல்லாம் அப்படியே வெளிய தெரியுது!”

    “ம்…இதுதான் நீங்க நேத்திக்கு எடுத்திட்டு வந்த சேலையோட லட்சணம்!”

      என் தப்பும், நேத்திக்கு அமுதாவின் முகம் மாறியதற்கான காரணமும் எனக்கு இப்போதுதான் புரிந்தது.

    “ச்சே!…இதுக்குத்தான் இந்த மாதிரி வேலைகளிலெல்லாம் ஆம்பளைங்க மூக்கை நுழைக்கக் கூடாதுங்கறது!…இதுவே…நீயாயிருந்தா வாங்கும் போதே இதைக் கவனிச்சிருப்பே இல்ல?…ஹூம்…நான் கலரையும்…வெலையையும் மட்டும்தான் கவனிச்சேன்…இந்த மாதிரியெல்லாம் பார்க்கணும்னு தோணக் கூட இல்லை!…” நான் மிகவும் வருத்தப்பட்டுச் சொன்னேன்.

    “அதனாலென்ன பரவாயில்லை விடுங்க…நீங்க ஆசையா எனக்கு எடுத்திட்டு வந்து குடுத்தீங்க பாரு?…அதுவே சந்தோஷம் எனக்கு!…அதைக் கட்டித்தான் சந்தோஷப்படணுமா என்ன?”

    சொல்லியவாறே மீண்டும் உள்ளறைக்குச் சென்று, வேறு புடவையை மாற்றிக் கொண்டு வந்தவளை என் பைக்கில் ஏற்றிச் சென்று, அவள் அலுவலகத்தில் இறக்கி விட்டு விட்டு என் அலுவலகம் நோக்கிப் பறந்தேன்.

    அன்று முழுவதும் என் மனம் மிகவும் சங்கடத்தில் உழன்றது.  “ச்சே!…பாவம் அவளை அநியாயத்திற்கு ஏமாத்திட்டேன்!… ஆனாலும் அந்த ஏமாற்றத்தை வெளிக் காட்டிக் கொள்ளாமல் என்கிட்ட வெகு சகஜமாப் பேசினாளே…ரியலி கிரேட்!”

    அடுத்த மாதத்தில் ஒரு நாள்

    சோப்புத் தூள் விற்க வந்திருந்த ஒரு இளம் பெண்ணுடன் அமுதா பேசிக் கொண்டிருந்தது உள் அறையில் புத்தகம் படித்துக் கொண்டிருந்த என் காதுகளில் விழுந்தது.

    “அடப்பாவமே!…காலையிலிருந்து சாயங்காலம் வரை விற்றாலும் ஒரு நாளைக்குக் கமிஷன் நூறு ரூபாய்தானா?” அமுதா அங்கலாய்க்க,

    “ப்;ச்…என்ன மேடம் பண்றது?…கூலி வேலைக்குப் போனாக்கூட இதை விட அதிகம் கிடைக்கும் …ஆனா…போக முடியாதபடி குடும்ப கௌரவம் இடிக்குதே!”

    “அது செரி…கமிஷன் இல்லாம வேற ஏதாவது அலவன்ஸ் மாதிரி குடுக்கறாங்களா?”

    “ம்ஹூம்…நாலு தெரு போறதினால நல்லபடியா உடை உடுத்த வேண்டியிருக்கு!…தெனமும் ஒரு புடவை கட்டக்கூட வக்கில்லாம ஒண்ணு ரெண்டு புடவை மட்டுமே வெச்சுக்கிட்டு….அதையே துவைச்சுத் துவைச்சுக் கட்ட வேண்டியிருக்கு!” தன் நிலையை பரிதாபமாகச் சொன்னாள் அந்த இளம்பெண்.

    “ம்ம்ம்…ஏம்மா…நான் ஒண்ணு கேட்டா…சங்கடப்பட மாட்டியே?” அமுதா கேட்டாள்.

    “என்ன மேடம் சொல்லுங்க!”

    “என்கிட்ட ஒரு புதுப்புடவை இருக்கு…ஒரு தடவை கூடக் கட்டலை!….அப்படியே வாங்கிட்டு வந்த அட்டைப் பெட்டியிலேயே இருக்கு…நீ சங்கடப்படலைன்னா….அதை உனக்குத் தறேன்…பணமெல்லாம் எதுவும் வேண்டாம்…சும்மாவே வெச்சுக்க!”

    “இதுல சங்கடப்படறதுக்கு என்ன மேடம் இருக்கு?…புதுசுங்கறீங்க…ஒரு தடவை கூடக் கட்டலைங்கறீங்க…அப்புறமென்ன?… என் அக்காகிட்ட வாங்கற மாதிரி நெனச்சு வாங்கிக்கறேன்!”

    அப்பெண் சம்மதம் சொன்னதும், அமுதா எழுந்து உள்ளறைக்குள் வந்தாள்.

    “என்ன அமுதா அந்தப் புடவையை அந்தப் பெண்ணுக்குத் தரப் போறியா?” கேட்டேன்.

    “ஆமாம்…அது வேஸ்ட்டாத்தானே கிடக்கு!”

    “சும்மா கிடந்தாலும் பரவாயில்லை… அதைத் தர வேண்டாம்!” கண்டிப்பாகச் சொன்னேன்.

    “என்னங்க…நான் தறதாச் சொல்லிட்டேனே!”

    “ம்…என் வீட்டுக்காரர் தர வேண்டாம்னு சொல்லிட்டார்ன்னு என் மேல பழிய போட்டுடு”

    “ப்ச்…என்னங்க நீங்க…!” அவள் கையைப் பிசைந்து கொண்டு நிற்க, நான் நெருப்பாய் முறைத்தேன்.

    என் முறைப்பின் சூடு தாளாமல் உடனே வெளியேறி, எதையெதையோ சொல்லிச் சமாளித்து அப்பெண்ணை அனுப்பியே விட்டாள்.
     
    இரவு.

    மறுபக்கம் திரும்பிப் படுத்திருந்தவளின் முதுகைத் தொட்டுத் திருப்பினேன்.

    திரும்பியவள் முகத்தில் தார் சாலை இறுக்கம்.

    “அமுதா…நீ ஏன் கோபமா இருக்கேன்னு எனக்குத் தெரியும்!…நான் காரணமில்லாமல் அப்படிச் சொல்லலை… காரணத்தோடதான் சொன்னேன்!”

    அவள் குழப்பமாய் என்னைப் பார்க்க,

    “அந்தப் பொண்ணு சின்ன வயசுப் பொண்ணு!…பார்க்க “தள…தள”ன்னு நல்லா வாளிப்பா வேற இருக்கா!…அப்படியிருக்கற பொண்ணுக்கு உள்ளே இருக்கறதெல்லாம் தெளிவா வெளிய தெரியற மாதிரியான ஒரு சேலையைக் கொடுத்து அவ வாழ்க்கை கெட்டுப் போக நாம காரணமாகலாமா?”

    “என்ன சொல்றீங்க?…அதெப்படி அவ வாழ்க்கைய நாம கெடுக்குற மாதிரி ஆகும்?”

    “பின்னே?…அவ வேலையே தெருத் தெருவா…வீடு வீடாப் போயி சோப்புத் தூள் விக்கறது!…அப்படிப் போகிற சமயத்துல அவ எத்தனையோ விதமான ஆம்பளைங்களைச் சந்திக்க வேண்டி வரும்!…அவ சந்திக்கற எல்லா ஆம்பளைங்களுமே நல்லவங்களா இருப்பாங்கன்னு சொல்ல முடியாது!…இப்ப இந்தச் சருகுச் சேலையக் கட்டிட்டு கவர்ச்சியாப் போனா…அந்த மோசமான ஆளுங்களை இவளே தூண்டி விடற மாதிரியும்…அழைப்பு விடற மாதிரியும் இருக்கும்!…”

    “அட…ஆமாங்க!”

    “அவ்வளவு ஏன்?…நல்ல ஆம்பளைங்களைக் கூட புத்தி தடுமாற வெச்சிடும் அந்தச் சேலையோட லட்சணம்!…கடைசில அது ஏதாவதொரு விபரீதத்துலதான் போய் முடியும்!….தேவையா?…நீயொரு நன்மை செய்யப் போக அதுவே அவளுக்கொரு தீமையா ஆகணுமா?…சொல்லு அமுதா!”

    நான் சொல்லச் சொல்ல என்னை….என் எண்ணத்தை முழுவதுமாய்ப் புரிந்து கொண்ட அமுதா “விருட்”டென்று என் முகத்தை தன் நெஞ்சில் பொதித்துக் கொண்டாள்.

    (முற்றும்)

     

    Share