யாருமற்ற ஒரு தனியிரவு
வருணன்.
துணையில்லா கணங்களின்
வர்ணங்களை வரிந்து கொண்டு
மெல்லப் பரவத் துவங்குகிறது இரவு
அறை முழுமையும்
உறைந்த வெம்மையாய்
வெளியில் சிலுசிலுக்கும் குளிர்
யன்னலிடம் மன்றாடுகிறது
உள்ளே வர அனுமதி வேண்டி
மௌன மரத்தின் கால்கள் உலுப்பி
ஓசைப் பூக்களை உதிர்த்திட
பிரயத்தனப்படுகிறது வாத்திய இசையை
உமிழ்ந்திடும் குறுந்தகடு
தளர்ந்த உடல் நாற்காலியில் நிறைந்திட
தளராத பார்வையோ படர்கின்றது
அறை முழுவதும்
ஏழெழுபது முறையாக
படர்ந்த பார்வை படிகின்றது
ஓசையாய்ப் போன
கணப்பு அடுப்பில் கிளர்ந்து நெளியும்
தீயின் நிழலில்.
படத்திற்கு நன்றி:
http://www.artwizard.com.hk/UVPaintDemo.html
மௌன மரத்தின் கால்கள் உலுப்பி
ஓசைப் பூக்களை உதிர்த்திட
பிரயத்தனப்படுகிறது வாத்திய இசையை
உமிழ்ந்திடும் குறுந்தகடு
…இந்த உவமை அழகாக இருக்கிறது …
பின்னூட்டத்திற்கு நன்றி தோழி.