Blog

  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    crazy

     

    “விட்டத்து உறிப்பானை வெண்ணை வழங்கிட
    சட்டாம்பிள்ளை (LEADER ) போல்முன் செல்வோனை
    சட்டத்துள் -சிற்பமாய் வைத்தான் சகாதேவன் போல்கேசவ்
    கற்பனையின் அற்புதம் காண் “….கிரேசி மோகன் ….

    Share
  • காலம்

    மீ.விசுவநாதன்

     

    sea

    ஆர்பரிக்கும் பேரருவி ஆளோடும் ஆடுமே
    சேர்த்து அடித்துடன் சீறியே பாயுமாம் ;
    தீர்ப்பை இறைவனும் தீம்பின்றிக் கூறுவான்
    சீர்மதி கொண்டோன் சிறப்பு .

    Share
  • அடித்தாலும் கணவன், மிதித்தாலும் கணவன்

    — நாகேஸ்வரி அண்ணாமலை.

     

    domestic-violenceபிப்ரவரி 28-ஆம் தேதியிட்ட நியுயார்க் டைம்ஸ் பத்திரிக்கையில் வந்த செய்தியின்படி அமெரிக்காவில் ஒரு வழக்கு நடந்து முடிந்திருக்கிறது. ஒரு காதலன் (ஆங்கிலத்தில் உள்ள ‘boy friend’-ஐ எப்படித் தமிழில் குறிப்பிடுவது என்று தெரியவில்லை), இந்தக் கதையில் உள்ளவன் வழக்கமான boy friend கூட இல்லை. மனைவியும் இரண்டு குழந்தைகளும் இருக்கும்போதே இன்னொரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருக்கிறான்) தன் காதலியை (வழக்கமான காதல் தோழி… ‘girl friend’ இல்லை.) தாறுமாறாக அடித்திருக்கிறான். அவள் வலியால் துடித்துக்கொண்டு அப்பார்ட்மெண்டிற்கு வெளியே ஓடிவந்து படிக்கட்டின் மேல் உட்கார்ந்து அழுகொண்டிருந்திருக்கிறாள். பக்கத்து வீட்டுக்காரர் வெளியே ஓடிவந்து பார்த்து உடனே காவலர்களை அழைத்திருக்கிறார். அவர்கள் வருமுன்பே தாமஸ் (அதுதான் காதலனின் பெயர்) அலிஸனை (அலிஸன் என்பது காதலியின் பெயர்) குளித்துவிட்டு அவள் உடம்பின் மீதுள்ள ரத்தக் கறைகளை அகற்றும்படி கூறியிருக்கிறான். அப்பார்ட்மெண்டின் வாசலிலிருந்து படிக்கட்டு வரை வழிந்திருந்த ரத்தக் கறைகளைத் துடைத்தெடுத்திருக்கிறான்.

    காவலர்கள் வந்து நடந்தது என்னவாக இருக்கும் என்று ஓரளவு ஊகித்து இருவரையும் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்திருக்கிறார்கள். அன்று அவள் என்ன சொன்னாள் என்று தெரியவில்லை. அவளுடைய உறவினர்கள், பக்கத்து வீட்டுக்காரர், மனைவிகளைத் துன்புறுத்தும் கணவன்மார்களின் செயல்களை ஆராயும் ஒரு நிபுணர் ஆகியவர்களை நீதிமன்றத்திற்கு அழைத்து விசாரித்தார்கள். அலிஸன் ஒரு சாட்சியாக வர மறுத்துவிட்டாள். எல்லோருடைய கருத்துகளையும் கேட்டுவிட்டு நீதிபதி தாமஸை குற்றவாளி என்று தீர்மானித்திருக்கிறார். தாமஸுக்கு ஒன்பது ஆண்டு வரை சிறைத் தண்டனை கிடைக்கலாம்.

    தாமஸுக்குத் தண்டனை வழங்கியதன் மூலம் நீதிமன்றம் தனக்குப் பெரிய தீங்கு இழைத்திருக்கிறது என்று அலிஸன் புலம்பியிருக்கிறாள். தாமஸ் தனக்குத் தீங்கு எதுவும் இழைக்கவில்லை என்றும் அவனுக்குத் தனடனை வழங்கியதன் மூலம் அவளுடைய வாழ்க்கையே பாழடைந்துவிட்டதாகவும் தன்னுடைய உயிர் நண்பனைச் சிறைக்கு அனுப்பியதன் மூலம் தான் அவனை இழந்துவிட்டதாகவும் தான் அவனுடன் வசித்துவந்த அப்பார்ட்மெண்டிலிருந்து வெளியேற்றப்பட்டுவிட்டதாகவும் அழுதிருக்கிறாள்.

    domestic-violence2மனைவியும் இரண்டு குழந்தைகளும் இருக்கும் ஒருவனோடு கள்ளத் தொடர்பு வைத்துக்கொண்டு அவனைத் தன் உண்மை நண்பனாக ஏற்றுக்கொண்டு அவன் தன்னை அடித்துத் துன்புறுத்தியும் அவனை நீதிமன்றத்திற்கு இழுத்துச் செல்லாமல் பக்கத்து வீட்டுக்காரர் மூலம் அவன் காவலர்களால் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டபோதும் அவன் தன்னைத் துன்புறுத்தவில்லை என்று கூறிய அலிஸனின் வாதத்தைக் கேட்ட நீதிபதி “தீங்கிழைக்கப்பட்ட (victim) அலிஸனே தாமஸ் தனக்குத் தீங்கிழைக்கவில்லை என்று கூறினாலும், அது என்னைப் பொறுத்தவரை இந்த வழக்கிற்குத் தொடர்பற்ற, பொருத்தமில்லாத, சம்பந்தமில்லாத விஷயம்” என்று கூறியிருக்கிறார். அவர் எப்பேர்ப்பட்ட நீதிபதி! எப்பேர்ப்பட்ட தீர்ப்பு!

    அமெரிக்காவில் குடும்பங்களில் நடக்கும் வன்முறைச் செயல்களுக்கு (அநேகமாக ஆண்கள் பெண்களைத் துன்புறுத்தும் விஷயங்களுக்கு) மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்; பெரிய தண்டனையும் கொடுக்கிறார்கள். ஒரு முறை நான் கீழே விழுந்து என் வலது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டு மருத்துவமனைக்குச் செல்ல நேரிட்டது. என்னை மருத்துவர் வந்து பரிசோதிக்கும் முன்பே “வீட்டில் உங்கள் கணவர் உங்களைத் துன்புறுத்தி இப்படி ஏற்பட்டதா?” என்று கேட்டார்கள். அந்த வேதனையிலும் எனக்குச் சிரிப்புத்தான் வந்தது. இது அமெரிக்காவில் மாமூலான விஷயம். பெண்கள் காயம் பட்டு வந்தால் அவர்களைக் கணவனோ மற்ற ஆண்துணையோ அவர்களை துன்புறுத்தியிருக்கலாம் என்று முதலில் நினைக்கிறார்கள். அப்படி நடந்திருந்தால் அதற்குரிய தண்டனையை ஆண்களுக்கு வழங்கத் தவறுவதில்லை.

    domestic-violence--300x214இந்தியாவில் இதற்கு நேர் மாறாக நடக்கிறது. கணவன் மனைவியை அடித்துத் துன்புறுத்தினால், காவலர்களைத் தள்ளுங்கள், உற்றார் உறவினர்கள் கூட ஏன் என்று கேட்பதில்லை. அடிக்கிற கைதான் அணைக்கும் என்ற பழமொழி வேறு. ‘இன்று அடித்துக்கொள்வார்கள். நாளை கூடிக்கொள்வார்கள்’ என்று கணவன் கொடியவனாக இருந்தாலும் அவனுடைய மனைவியைக் கணவனிடமிருந்து பிரிப்பதைப் பற்றி யோசிப்பதே இல்லை.

    உடல் ரீதியாகத் துன்புறுத்துவதை விடுங்கள். மனரீதியாக எத்தனை கணவன்மார்கள் மனைவிமார்களைக் கொடுமைப்படுத்துகிறார்கள். இந்த மனைவிமார்களும் மேலே குறிப்பிட்ட அலிஸன் போல்தான் கணவன்மார்கள் மேல் எந்தக் குற்றமும் கண்டுபிடிப்பதில்லை. காலம் காலமாகப் பெண்களை மூளைச்சலவை செய்திருக்கிறோம்.

    கணவனைப் பரத்தை வீட்டிற்குக் கூட்டிச்சென்ற நளாயினியையும், கட்டிய மனைவியைக் கைவிட்டுவிட்டு மாதவியிடம் தஞ்சம் புகுந்த கணவன் பணத்தை எல்லாம் தொலைத்துவிட்டு மீண்டும் கண்ணகியிடம் வந்தபோது அவள் அவனைக் கடிந்துகொள்ளாமல் திரும்பவும் அவன் தொழில் நடத்தத் தன் சிலம்புகளை விற்றுப் பணம் திரட்டுமாறு கூறிய கண்ணகியையும் கற்புக்கரசிகள் என்று பட்டம் சூட்டிவிட்டோம். பழைய கதைகள் இருக்கட்டும். சென்ற நூற்றாண்டில் எழுதப்பட்ட மனோகரா கதையில் தந்தையின் இரண்டாவது மனைவிக்குத் தன் மகன் தீங்கிழைக்க முயலும் போதெல்லாம் ‘அவள் உன் தந்தை விரும்பும் பொருள். அவளுக்கு எந்தவிதத் தீங்கும் நேரக் கூடாது’ என்று கணவனின் ஆசையை நிறைவேற்றுவதையே – கணவன் தன் நலன்களுக்கு எதிராக நடந்துகொண்டாலும் – அந்த மனைவி தன் கொள்கையாகக் கொண்டிருக்கிறாள்.

    எனக்குத் தெரிந்த எங்கள் உறவினப் பெண் ஒருத்தியின் தந்தை வழிச் சொத்துக்களை எல்லாம் கணவன் தொலைத்துவிட்டான். இருக்கும் ஒரே ஒரு சின்னச் சொத்தையாவது அவளுடைய கணவனிடமிருந்து காப்பாற்ற எவ்வளவோ முயற்சிகள் நான் செய்துகொண்டிருக்கிறேன். அவள் எதற்கும் ஒத்துழைக்கவில்லை. எல்லாச் சொத்துக்களையும் இழப்பதற்குக் கணவன் காரணமாக இருந்தாலும் இன்னும் கணவன் தன்னை நன்றாக வாழவைப்பான் என்று நம்பிக்கொண்டிருக்கிறாள். தாமஸ் தன்னைத் துன்புறுத்தவே இல்லை என்று கூறியும் நீதிமன்றம் தாமஸைத் தண்டித்ததுபோல் எங்கள் உறவுக்காரப் பெண்ணைக் காப்பாற்ற இந்தியச் சட்டத்தில் இடம் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?

    படம் உதவி:

    A domestic violence attorney can help you

    Domestic Violence Essay Sample, Example


    http://www.abetterwaydomesticviolence.org/Abuse

    Share
  • பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! பிரபஞ்சத்தின் வயதென்ன ?

    சி. ஜெயபாரதன்.

     

    பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! பிரபஞ்சத்தின் வயதென்ன ?

    fig-1-our-milkyway

    நமது பால்வீதி ஒளிமந்தை

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

     

    பிரபஞ்சப் பெரு வெடிப்பில்
    பொரி உருண்டை
    சிதறிச்
    சின்னா பின்னமாகித்
    துண்டமாகித்
    துணுக்காகித் தூளாகி
    பிண்டமாகிப் பிளந்து
    அணுவாகி,
    அணுவுக்குள் அணுவாகித்
    துண்டுக் கோள்கள் திரண்டு,
    அண்டமாகி,
    அண்டத்தில் கண்டமாகித்
    கண்டத்தில்
    துண்டமாகிப் பிண்டமாகி,
    பிண்டத்தில் பின்னமாகிப்
    பிளந்து தொடர்ப் பிளவில்
    பேரளவுச் சக்தியாகி
    மூலகமாகி, மூலக் கூறாகிச்
    சீராகிச் சேர்ந்து
    நுண்ணிய அணுக்கருக்கள்
    பிழம்பில் பின்னிப்
    பிணைந்து பேரொளியாகிப்
    பிரம்மாண்டப் பிழம்பாகி,
    பரிதி ஒளிக்கோளாகி,
    பம்பரமாய்ச் சுழலும் பந்துகளை,
    ஈர்ப்பு வலையில்
    பரிதியைச் சுற்றி வீசி விட்டு
    அம்மானை ஆடுகிறாள்
    அன்னை !

    +++++++++++++++++

    “விஞ்ஞானத்துறை போலி நியதிகளில் [Myths] முதலில் துவக்கமாகி, பிறகு அந்நியதிகள் அனைத்தும் திறனாயப்பட வேண்டும்.”

    டாக்டர் கார்ல் போப்பர், ஆஸ்டிரியன் பிரிட்டீஷ் வேதாந்தி, பேராசிரியர் (Dr. Karl Popper)

    “பிரபஞ்சத்தைப் பற்றிப் புரிந்துகொள்ள முடியாத பிரச்சனை என்ன வென்றால், அதை நாம் அறிந்து கொள்ள இயலும் என்னும் திறன்பாடு.”

    டாக்டர் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் (1879-1955)

    பிரபஞ்சத்தில் ஒளிந்திருக்கும் எண்ணற்ற புதிர்களில் ஒரு புதிரை விடுவிக்கப் போனால், ஒன்பது புதிர்கள் எழுகின்றன.”

    கட்டுரை ஆசிரியர்.

    விண்மீனை விழுங்கும் கருந்துளை

    பூமியின் வயதென்ன ?  சூரியன் வயதென்ன ?

    வற்றாத நீரும், வளமான நிலமும், வாயு மண்டலமும் சூழ்ந்து உயிரினமும், பயிரினமும் வளர்ந்து வரும் நாமறிந்தும், அறியாத விந்தை மிகும் அண்டகோளம் நாம் வசிக்கும் பூகோளம் ஒன்றுதான் !  அந்த கோளம் சுற்றிவரும் சூரியன் ஓர் சுயவொளி விண்மீன்.   அத்தகைய கோடான கோடி சுயவொளி விண்மீன்களைக் கொண்டது “காலக்ஸி” (Galaxy) எனப்படும் “ஒளிமய மந்தை.”  பால்மய வீதி (Milky Way) எனப்படும் நமது ஒளிமய மந்தை பிரபஞ்சத்தின் மில்லியன் கணக்கான காலாக்ஸிகளில் ஒன்று !  புதன், வெள்ளி, பூமி, சந்திரன், செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் போன்ற அண்ட கோளங்கள் ஈர்ப்பு விசைகளால் இழுக்கப்பட்டுச் சூரிய குடும்பத்தில் கூட்டாக இருந்தாலும், பிரபஞ்சம் ஏதோ ஓர் விலக்கு விசையால் பலூன் போல் உப்பி விரிந்து கொண்டே போகிறது !

    பூமி சுமார் 4.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பாக தோன்றியது என்று விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.  அந்த நாள் முதலாக பூமியின் தளவடிவம் தொடர்ந்து மாறுபட்டு வந்திருக்கிறது என்றும் நாம் அறிகிறோம்.  பூமியின் மிக்க முதுமையான பாறை மூலகத்தின் கதிரியக்கத் தேய்வை ஆராயும் போது, (Radioactive Decay of Elemets) புவியின் வயது 3.8 பில்லியன் என்று விஞ்ஞானிகள் கணிக்கிட்டிருக் கிறார்கள்.  மேலும் பூமியில் விழுந்த மிகப் புராதன விண்கற்களின் (Meteorites) மூலகக் கதிரியக்கத் தேய்வை ஆய்ந்த போது, சூரிய குடும்பத்தில் பூமியின் வயது 4.6 பில்லியன் என்று இப்போது தெளிவாக முடிவு செய்யப் பட்டிருக்கிறது.

    சூரிய குடும்பத்தை ஆட்சி செய்யும் வேந்தாகிய பரிதி எப்போது தோன்றியது ?  பரிதியின் பிளாஸ்மா (Plasma) ஒளிப்பிழம்பு வெப்பத்தையும், விளைந்த வாயுக்களையும் கணிக்கும் போது, சூரியனின் வயது 10 பில்லியன் ஆண்டுகளாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.  சூரிய குடும்பத்தைப் போல் கோடான கோடி சுயவொளி விண்மீன்களைக் கொண்ட ஒளிமய மந்தைகள் எப்போது உருவாயின ?  கோடான கோடி ஒளிமய மந்தைகளைச் சுமந்து செல்லும் பிரபஞ்சம் எப்போது தோன்றியது ?  உப்பி விரியும் பிரபஞ்சக் குமிழி எத்தனை பெரியது ?  பிரம்மாண்டமான பிரபஞ்சத் தோற்றம் எப்படி உருவானது ?  எப்படி ஒளிமய மந்தை என்னும் காலாக்ஸிகள் உண்டாயின ?  பூமியிலே வாழும் நாம் மட்டும்தானா மானிடப் பிறவிகளாக இருந்து வருகிறோம் ?  முடிவிலே பூதள மாந்தருக்கு என்ன நேரிடும் ?  அப்புதிர் வினாக்களுக்கு இத்தொடர்க் கட்டுரைகள் ஒரளவு விடைகளைச் சொல்லப் போகின்றன.

    விண்வெளி விஞ்ஞானம் விருத்தியாகும் மகத்தான யுகம்

    விண்வெளி ஏவுகணைகள் பாய்ந்து செல்லும் இருபதாம் நூற்றாண்டில் பிறந்த இளைஞ ரெல்லாம் பல விதங்களில் பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.  முக்கியமாக விண்வெளி விஞ்ஞானம் பேரளவில் விருத்தி அடையும் ஒரு மகத்தான யுகத்திலே உதித்திருக்கிறோம்.  வெண்ணிலவில் தடம் வைத்து மீண்ட மனிதரின் மாபெரும் விந்தை களைக் கண்டோம் !  அடுத்து இன்னும் பத்துப் பதினைந்து ஆண்டுகளில் மனிதரின் மகத்தான தடங்கள் செவ்வாய்த் தளத்தி லேயும் பதிவாகப் போகின்றன என்று நினைக்கும் போது நமது நெஞ்ச மெல்லாம் துள்ளிப் புல்லரிக்க வில்லையா ?

    பூதளத்தில் தோண்டி எடுத்த பூர்வ மாதிரிகளையும், உயிரின எலும்புக் கூடுகளையும் சோதித்து கடந்த 100,000 ஆண்டு முதல் வாழ்ந்து வந்த மானிடரின் மூல தோற்றத்தைக் காண முடிகிறது !  5000 ஆண்டு களுக்கு முன்னே நாகரீகம் தோன்றி கிரேக்க, ரோமானிய, எகிப்த், இந்திய, சைன கலாச்சாரங்களை அறிய முடிந்தது.  பிரபஞ்சத்தின் பல்வேறு பூர்வப் புதிர்களை விடுவிக்க பல்லாயிரம் ஆண்டுகளாக மானிடச் சித்தாந்த ஞானிகள் முயன்று எழுதி வந்திருக்கிறார்கள்.  சிந்தனைக்குள் சிக்கிய மாபெரும் சில புதிர்கள் விடுவிக்கப் பட்டாலும் பல புதிர்கள் இன்னும் அரைகுறையாக விடுவிக்கப் படாமல்தான் தொங்கிக் கொண்டிருக்கின்றன !

    ஒளி மந்தை [காலாக்ஸி]

    பிரபஞ்சத்தின் பல புதிர்களில் ஒரு புதிரை விடுவிக்கப் போனால் ஒன்பது புதிர்கள் முளைக்கின்றன. பரமாணுக்களில் நுண்ணிய நியூடிரினோ துகள்கள் (Neutrino Particles) எப்படி விண்வெளியில் உண்டாகின்றன ?  காமாக் கதிர் வெடிப்பு (Gamma Ray Bursts) என்றால் என்ன ?  செவ்வாய்க் கோளின் தளப்பகுதி ஏன் வரண்டு போனது. அகிலக் கதிர்கள் (Cosmic Rays) என்பவை எங்கிருந்து வருகின்றன. பிரபஞ்சத்தைப் புதிய “நூலிழை நியதி” (String Theory) கட்டுப்படுத்து கிறதா ?  ஈர்ப்பாற்றல் அலைகளை (Gravitational Waves) உருவாக்கு வது எது ?  இந்தக் கிளைப் புதிர்களுக்கும் விஞ்ஞானிகள் விடைகாண வேண்டிய நிர்ப்பந்தம் இப்போது ஏற்பட்டது.

    இப்புதிர்களுக்குக் கட்டுரைகளில் விடை பூரணமாகக் கிடைக்கலாம்.  கிடைக்காமலும் போகலாம்.  வானியல் விஞ்ஞானம் வளர்ச்சி அடையும் ஒரு விஞ்ஞானத் துறை.  பெருவாரியான புதிர்களுக்கு விடை கிடைக்க இன்னும் நெடுங்காலம் ஆகலாம்.  புதிய கருவிகள் படைக்கப்பட்டு, கண்டுபிடிப்புகளும் உண்டாகி முன்பு மெய்யாகத் தோன்றியவைப் பின்னால் பொய்யாக நிரூபிக்கப் படலாம்.  குறிப்பாக விண்வெளியைச் சுற்றிவந்த ஹப்பிள் தொலைநோக்கி பல அரிய விண்வெளிக் காட்சிகளை ஆராயத் தந்திருக்கிறது.

    பிரபஞ்சத்தின் வயதுக் கணிப்பு

    பல நூற்றாண்டுகளாக விஞ்ஞானிகள் பிரபஞ்சத்தின் வயதைக் கணக்கிடப் பல்வேறு முறைகளைக் கடைப்பிடித்து வந்துள்ளார்கள்.  புதிய நூற்றாண்டின் ஆரம்ப காலத்திலேயும் விஞ்ஞானிகள் இன்னும் உறுதியாக அதன் வயதைத் தெரிந்து கொள்ள முடியவில்லை.  2003 பிப்ரவரியில் ஏவிய “வில்கின்ஸன் பல்கோண நுண்ணலை நோக்கி விண்ணுளவி”  [Wilkinson Microwave Anisotropy Probe (WMAP)] அனுப்புவதற்கு முன்பு பிரபஞ்ச உப்புதலை அளக்கும் “ஹப்பிள் நிலையிலக்கம்” (Hubble Constant) பயன்படுத்தப்பட்டுப் பலரது தர்க்கத்துக்கு உட்பட்டது.  விண்மீன்கள் பூமியை விட்டு விலகிச் செல்லும் வேக வீதத்தை அறிந்து கொண்டு ஹப்பிள் நிலையிலக்கம் நிர்ணயமாகும்.  அதாவது காலாக்ஸி தொடர்ந்து மறையும் வேகத்தை அதன் தூரத்தால் வகுத்தால் வருவது ஹப்பிள் நிலையிலக்கம். அந்த நிலையிலக்கின் தலைகீழ் எண்ணிக்கை [Reciprocal of the Hubble Constant] பிரபஞ்சத்தின் வயதைக் காண உதவும்.  அவ்விதம் கண்டுபிடித்ததில் பிரபஞ்சத்தின் வயது 10-16 பில்லியன் ஆண்டுகள் என்று அறிய வந்தது.  இம்முறையில் ஒரு விஞ்ஞானி பல்வேறு அனுமானங்களைக் கடைப்பிடிக்க வேண்டி உள்ளதால், அம்முறை உறுதியுடன் பலரால் ஏற்றுக்கொள்ளப் படவில்லை.

    அடுத்த முறை பூதளத்தின் மிகப் புராதனப் பாறைகளில் உள்ள மூலகங்களின் கதிரியக்கத் தேய்வைக் (Radioactive Decay of Elements in Oldest Rocks) கணக்கிட்டு பிரபஞ்சத்தின் ஆரம்ப காலம் கணிக்கப் பட்டது.  பூமியில் விழுந்த மிகப் புராதன விண்கற்களின் மூலக கதிரியக்கத் தேய்வைக் கணக்கிட்டுப் பூகோளத்தின் வயது 4.6 பில்லியன் ஆண்டுகள் என்று அறியப்பட்டது.

    அதே திடப்பொருள் விதிகளைப் பயன்படுத்தி காலாக்ஸி அல்லது புராதன விண்மீன்களில் எழும் வாயுக்களின் கதிரியக்கத் தேய்வுகளை ஆராய்ந்தனர்.  அவ்விதம் கணக்கிட்டதில் பிரபஞ்சத்தின் வயது 12-15 [plus or minus 3 to 4 billion] பில்லியன் ஆண்டுகள் என்று தீர்மானிக்கப் பட்டது !  ஒளிமிக்க விண்மீன்களின் ஒளித்திரட்சியையும் அதன் உஷ்ணத்தையும் [Brightness versus Temperature] பல மாதங்களுக்குப் பதிவு செய்து விண்மீனின் தூரத்தோடு ஒப்பிட்டுப் பிரபஞ்சத்தின் வயதை 12 பில்லியன் ஆண்டுகள் என்று கணக்கிட்டார்கள்.  ஈசா [ESA] எனப்படும் ஈரோப்பியன் விண்வெளிப் பேரவை அனுப்பிய ஹிப்பார்கஸ் துணைக் கோள் (Hipparcos Satellite) விண்மீன் தூரத்தை அளக்கப் பயன்படுத்தப் பட்டது.  அவ்விதம் கணக்கிட்டதில் மிகப் புராதன விண்மீனின் வயது சுமார் 12 பில்லியன் ஆண்டுகள் என்று அறியப்பட்டது.

    வெண்குள்ளி விண்மீன் சிதைவு மூலம் வயதைக் கணக்கிடுதல்

    சூரியனைப் போன்று பெருத்த கனமும் பூமியைப் போல் சிறுத்த வடிவமும் கொண்ட “வெண்குள்ளி விண்மீன்கள்” [White Dwarfs Stars] குறுகிப் போகும் போது விளைந்த விண்சிதைவுகளைக் கொண்டு பிரபஞ்ச வயதைக் கணக்கிடும் போது, மிக மங்கிய அதாவது மிகப் புராதன வெண்குள்ளி ஒன்று எத்தனை ஆண்டு காலமாகக் குளிர்ந்து வருகிறது என்று தேர்ந்தெடுத்துப் பதிவு செய்து வருகிறார்கள்.  அவ்விதம் பார்த்ததில் நமது பால்மய வீதித் தட்டின் வயது 10 பில்லியன் ஆண்டுகள் என்று கணக்கிடப் பட்டுள்ளது.  பெரு வெடிப்புக்கு 2 பில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு பால்மய வீதித் தட்டு தோன்றியதால், பிரபஞ்சத்தின் வயது 12 (10+2) பில்லியன் ஆண்டு என்று கூட்டிச் சொல்லலாம்.

    இவ்விதம் பல்வேறு வயது வேறுபாடுகள் இருந்தாலும் 2003 ஆண்டு “வில்கின்ஸன் பல்கோண நுண்ணலை நோக்கி விண்ணுளவி” [Wilkinson Microwave Anisotropy Probe (WMAP)] அனுப்பிய தகவலை வைத்து நுணுக்கமாகக் கணக்கிட்டதில் பிரபஞ்சத்தின் வயது 1% துல்லியத்தில் 13.7 பில்லியன் ஆண்டுகள் என்று கணக்கிடப்பட்டு முடிவாகி எல்லாத் தர்க்கங்களையும் நீக்கியது !

    (தொடரும்)

    *********************

    தகவல் :

    Picture Credit : 1. Astronomy (August 21, 2007) 2.  Universe 6th Edition (2002)  3. National Geographic Encyclopedia of Space (2005) 5. 50 Years of Space (2004)

    1.  Astronomy Magazine : 50 Greatest Mysteries of the Universe (Aug 21, 2007)

    2.  Universe By Roger Freedman & William Kaufmann III (2002)

    3.  National Geographic Encyclopedia of Space By Linda Glover.

    4.  The World Book Atlas By World Book Encyclopedia Inc (1984)

    5.  Scientific Impact of WMAP Space Probe Results (May 15, 2007)

    ******************

    S. Jayabarathan (jayabarat@tnt21.com) November 1, 2007

     

    Share
  • ஆட்கொள்ள வேண்டும் ஐயா !

    -எம். ஜெயராம சர்மா- மெல்பேண்

    கருணைகூர் முகங்கள் ஆறும்
    கரத்தினில் வேலும் கொண்டு
    அருமையாம் தமிழைக் காக்கும்              lord muruga
    அழகுடைக் கந்த வேளே
    உரிமையால் உன்னைப் பாட
    உவப்புடன் நிற்கும் என்னைக்
    கரிசனை கொண்டு நாளும்
    காத்திட வாரும் ஐயா !

    பாயிலே படுக்கா முன்னம்
    பன்னிரு கையா உன்னைக்
    காவியம் ஆக்கி நானும்
    கற்பவர்க் கீதல் வேண்டும்
    சேயென நினைத்து என்னைத்
    தினமுமே காக்க வேண்டி
    மாமயில் ஏறும் கந்தா
    மலரடி போற்று கின்றேன் !

    செந்தமிழ்க் கொண்டு நாளும்
    நின்றனைப் போற்ற வேண்டும்!
    வந்தஎன் வினைகள் போக
    சந்ததம் உதவு கந்தா!
    அந்தமில் உருவம் ஆனாய்
    அனைத்து மாய் நிற்கின்றாயே
    கந்தனே நாளும் என்னைக்
    காத்திட வேண்டும் ஐயா!

    ஆணவம் போக்கி என்னை
    ஆட்கொள்ள வேண்டும் ஐயா!
    அலைபாயும் மனத்தை நாளும்
    அடக்கிட வேண்டும் ஐயா!
    நாளெலாம் உந்தன் நாமம்
    நான் சொல்லி நிற்கவேணும்
    நீயெனக் கருள்வாய் ஐயா
    நித்தமும் கந்த வேளே !

     

    Share
  • மௌனம்

    -மணிமுத்து

    பார்ப்பவர் கண்களுக்கு!
    எதை கேட்டாலும்
    மெளனத்தையே
    பரிசாகத் தந்தாள்
    எனவே
    அவன் கேள்வியையும்
    அவள் பாஷையிலே
    கேட்க
    ’பக்’கென்று சிரித்துவிட்டாள்
    அடடா!
    இவளுக்கு இவ்வளவு அழகான மொழி
    தெரியும்போது
    ஊமை என்கிறார்களே!!!

    Share
  • திருமலை தெய்வம்!

    -ரா.பார்த்தசாரதி

    திருவருள்  தரும்  தெய்வம்  திருமலை தெய்வம் !
    தீராத  வினை எல்லாம் தீர்த்திடும்  தெய்வம் !

    வரும்துயர் பகையையும் போக்கிடும் தெய்வம்!         balaji
    வாய்திறந்து கேட்டாலே வழங்கிடும் தெய்வம் !

    தாயாரைத்  தரிசித்து  வேங்கடவனைத் தரிசிப்போம் !
    தரணியில்  யாவரும் நலம்பெற  யாசிப்போம் !

    மனிதனைப்  புனிதம்  ஆக்குவது தெய்வ தரிசனம் !
    மனதில்  சலனம்  போக்குவது தெய்வ தரிசனம் !

    திருமலைவாசா  என்று அழைத்தாலே  குறைதீர்க்கும் தெய்வம் !
    தினமும்  நினைத்தாலே நல்வழி காட்டும் தெய்வம் !

    கோவிந்தா கோவிந்தா என்றாலே பரவசம் !
    கோவிந்தன்  அருளும் கிடைத்திடுமே  நம்வசம் !

    என்றும் நினைப்போம் பணிவோம் அவன்தாள் !
    எல்லார்க்கும் உகந்த தெய்வம்  திருமலை தெய்வம் !

     

    Share
  • மனதில் நிறைந்தவர் எம். ஜி. ராமசந்திரன்…

    –திருக்குவளை மீ.லதா.

     

    அள்ளி தந்த கைகள் எங்கே ,
    அரவணைத்த நெஞ்சம் எங்கே,
    சேற்றில் மலர்ந்த செந்தாமரை போல தமிழரின் நல்வாழ்விற்காய் பிறந்தாரோ நல் மாணிக்கமாக எம் ஜி ஆர். அவர் சிம்ம குரல் எடுத்து கர்ஜனை செய்ய வேண்டாம். ஒலிப்பெருக்கியில் ஒரு குரல் கொடுத்தால் போதும் என் இரத்தத்தின் இரத்தங்களே… என் இனிய உடன் பிறப்புகளே என்று சொன்னாலே போதும்… ஒடி வரும் மக்கள் வெள்ளத்தில் அவர் திணறிய நாட்கள் எத்தனையோ! பொன்மன செம்மலாய் பூமிதனில் இன்றும் ஒளிரும் தீபங்களாய் இருப்பவரை பற்றி எழுதுகிறேன். அவர் மீது அன்பு கொண்ட நான்.

    இலங்கையில் உருவாகி தமிழகத்தில் நிலைக்கொண்ட புயலாக வந்தார். அன்பு என்ற மந்திரத்தில் அடங்கிப் போனோம் நாம்.

    ஏழையின் பங்காளனாக அவர் இருந்தார். ஏட்டுக் கல்வியை ஏழைக்கும் அளித்த காமராசரின் வாரிசாக வந்து கொடுத்தார் இலவசமாய்.

    தாய் சத்தியபாமாவின் கண்டிப்பான வளர்ப்பும், நேசமான உறவும், பாசமான பரிவும் உலகை ஆள வைத்தவையோ??

    1936ல் சதிலீலாவதி என்னும் திரைப்படத்தில் முதலில் நடித்திருந்தும், 1947 ல் அவர் நடித்த ராஜகுமாரி படம் வெளிவரும்வரை அதிகம் புகழ் கிடைக்கவில்லை. தொடர்ந்து வந்த அடுத்த 25 ஆண்டுகள், தமிழ் திரைப்பட உலகில் மிக முக்கியமானவர்களில் ஒருவராக விளங்கினார். இவருடைய சக நடிகர்களுள் ஒருவரான எம். ஆர். ராதாவினால் சுடப்பட்டுத் தெளிவாகப் பேசும் திறனை இழந்தபோதும் அவருடைய நட்சத்திர வலிமை குறையவேயில்லை.

    இச்சம்பவத்திற்குப் பின்னர் முதன் முதலாக வெளிவந்த திரைப்படம் காவல்காரன். இது மாபெரும் வெற்றிப் படமாகவும், திரையுலகில் அவரது ஆளுமையை மீண்டும் நிலை நிறுத்தும் நிகழ்வாகவும் அமைந்தது. 1971 ஆம் ஆண்டின் அகில இந்திய சிறந்த நடிகராக, எம்.ஜி. ஆரை மத்திய அரசு தேர்வு செய்து, “பாரத்” விருதை வழங்கியது. இது சத்யா மூவிஸ் தயாரிப்பான “ரிக்சாக்காரன்” படத்தில் நடித்ததற்காக கிடைத்தது. தமிழ்நாட்டில் மொத்தம் 12 தியேட்டர்களில் 100 நாட்கள் முதல் 150 நாட்கள் வரை ஓடி, வசூலைக் குவித்தது படம்.

    அவர் நடித்துக் கடைசியாக வெளி வந்த திரைப்படம் மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்.

    1972-இல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியொன்றை அவர் ஆரம்பித்தார். பின்பு அக்கட்சி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமாக மாறியது. முதன் முதலாக போட்டியிட்ட திண்டுக்கல் பகுதியில் பெரும் வெற்றி பெற்றது.

    திரைப்படங்களின் மூலம் அவரடைந்த புகழும், அவருடைய வசீகரமான தோற்றமும், சமூகத் தொண்டனாகவும், ஏழைகள் தோழனாகவும், கொடையாளியாகவும், வீரனாகவும் நடித்ததன் மூலம் பெற்றுக் கொண்ட நற்பெயரும், அவர் மிக விரைவில் மக்களாதரவைப் பெற வழிவகுத்தது. 1984 ல் கடுமையாக நோய்வாய்ப்பட்டும், தமிழக அரசியல் வரலாற்றில் தேர்தல் பிரசாரத்திற்கே வராமல் முதலமைச்சர் ஆன ஒரே முதல்வரானார் எம்.ஜி.ஆர். இவரது ஆட்சிக்காலத்தில் மதுவிலக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.

    1987 வரை 10 ஆண்டுகள் தொடர்ச்சியாக முதலமைச்சர் பதவியை வகித்துப் பதவியிலிருக்கும் போதே காலமானார். மறைவிற்குப் பின் அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.

    எம்.ஜி.ஆர் எத்தனையோ குழந்தைகளுக்குப் பாதுகாவலராக இருந்து படிக்கவைத்தார். அதில் முக்கியமான இரண்டு பேர், அரசியலைக் கலக்கிய துரைமுருகன். சினிமாவில் வலம் வந்த கோவை சரளா என்று எம்.ஜி.ஆர் 25ல் ஆனந்த விகடனில் வெளி வந்தது.

    mgr“இருந்தாலும் மறைந்தாலும் பெயர் சொல்ல வேண்டும்
    இவர்போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்”

    “மாபெரும் சபைதனில் நீ நடந்தால் – உனக்கு
    மாலைகள் விழவேண்டும்
    ஒரு மாற்றுக்குறையாத மன்னவன் இவனென்று
    போற்றிப் புகழ வேண்டும்”

    இவை வெறும் பாடல் வரிகள் அல்ல. சாகாவரம் பெற்ற ஒரு சகாப்தத்தைப் பற்றிய ஆழமான பதிவுகள். அந்த சகாப்தம் தான் எம்.ஜி.ஆர்.

    இருபதாம் நூற்றாண்டில் எம்.ஜி.ஆர் என்ற இந்த மூன்றெழுத்து மந்திரச் சொல், தமிழகத்தை, இந்தியாவை, ஏன் உலகின் ஒரு பகுதியை எவ்வாறு ஆட்டிப்படைத்தது. மக்களை எப்படி ஈர்த்திருந்தது என்பதை நம்மில் பலரும் அறிவோம்.

    எழுபதுகளில், ஒரு ஆங்கிலப் பத்திரிகை, இந்தியாவில் மக்களின் பேரன்பைப் பெற்ற பெருமகன்களாக இருவரைச் சுட்டியது. ஒருவர் பண்டித ஜவஹர்லால் நேரு. மற்றொருவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.

    நாடக அரங்கிலும், திரையுலகத்திலும், அரசியல் பொதுவாழ்விலும் எவராலும் வெல்ல முடியாத சக்தியாக, மக்கள் மனம் கவர்ந்த முடிசூடா மன்னனாக வலம் வந்தவர் எம்.ஜி.ஆர். நின்றால் பொதுக்கூட்டம். நடந்தால் ஊர்வலம். அமர்ந்தால் மாநாடு…என்பார்களே…. அது முழுக்க முழுக்க எம்.ஜி.ஆருக்கு பொருந்தும்.

    மதத்தால், இனத்தால், மொழியால் அவர் யார் என்பதை விட, மனத்தால், குணத்தால், எண்ணத்தால், செயலால் ஒரு மாபெரும் மனிதராக வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர்.

    குழந்தைத் தொழிலாளராக நாடகத்துறையில் அடியெடுத்து வைத்த எம்.ஜி.ஆரின் அந்தப் பாலப் பருவத்திலேயே பட்ட துன்பங்களும், துயரங்களும் ஏராளம், ஏராளம்.

    “உழைப்பவரே உயர்ந்தவர்” எனும் உன்னத லட்சியத்தை கொள்கையாகக் கொண்டிருந்த எம்.ஜி.ஆர் “ஓடி ஓடி உழைக்கணும், ஊருக்கெல்லாம் கொடுக்கணும்” எனும் பாடல்களுக்கு ஏற்ப வாழ்நாளெல்லாம் தாம் பாடுபட்டு உழைத்துச் சேர்த்த பணத்தை வாரிக்கொடுத்து வள்ளலானார். அந்த வள்ளலின் பொன்மனத்தைப் போற்றித்தான் திருமுருக கிருபானந்த வாரியார் எம்.ஜி.ஆருக்கு பொன்மனச் செம்மல் என்ற பட்டத்தை வழங்கினார்.

    திரையுலகிலும், அரசியல் பொதுவாழ்விலும் எம்.ஜி.ஆர் சந்திக்காத சோதனைகள் இல்லை. அத்தனையையும் முறியடித்து சாதனைகள் பல புரிந்தவர்.

     

     

     

     
    திருக்குவளை மீ.லதா
    நாகை மாவட்டம்

    Share
  • சற்றே நினைத்துப்பாருங்கள் !

    –ரா. பார்த்தசாரதி.

     

    சற்றே  நினைத்துப்பாருங்கள்  !

    why_you_must_think_positive

     

    ஞானத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்
    அது சக்தியின் பிறப்பிடமாகும் !

    கடவுளின் அருளை வேண்டுங்கள்
    அது பக்தியின் இருப்பிடமாகும் !

    தியானம் செய்ய விரும்புங்கள்
    அது மனஅமைதியின் உறைவிடமாகும் !

    யோகாசனங்களை செய்ய பழகுங்கள்
    அது உணர்சிகளை நிலைநிறுத்தும் இடமாகும் !

    நினைவாற்றலை வளர்த்துக் கொள்ளுங்கள்
    அது அறிவு எனும் ஊற்று தோன்றும் இடமாகும் !

    உடற்பயிற்சியும், நடை பயிற்ச்சியும் தினமும் கடைபிடியுங்கள்
    அது இளமையென்னும் ரகசியத்தை ரசிக்கும் இடமாகும் !

    பிறருக்கு நல்லதை செய்ய நினையுங்கள்
    அது உங்கள் புகழினை பரப்பும் இடமாகும் !

    நாணயமாக இருக்க முயற்சி செய்யுங்கள் ,
    அது உங்கள் நேர்மைக்கு இடமாகும் !

    வாழ்வில் சேமிப்பை கற்றுக்கொள்ளுங்கள்
    அது எதிர்காலத்தில் நம்மை தாங்கும் தூணாகும் !

    சிரித்து வாழக் கற்றுக்கொள்ளுங்கள்
    அது நோயினை நீக்கும் மருந்தாகும் !

    ஆம்,
    வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டு போகும் !
    சிரிக்க தெரிந்தவனே, சிந்திக்க தெரிந்தவனாவான் !!

     
     
     
     
     
     

    படம் உதவி:
    http://idiva.com/opinion-relationships/why-smart-people-practice-positive-thinking/28852

    Share
  • லம்போகினி கார்

    –கே.எஸ்.சுதாகர்.

    (50 வார்த்தைகளுக்குள் ஒரு குறுங்கதை)

     

    wptv 3_luxury_cars_hit__tires_stolen_from _carமைத்துனருக்குக் கலியாணம். ரொறன்ரோ விமான நிலையத்திற்கு என்னை அழைக்க வந்திருந்தார். தனது லம்போகினி வாகனத்தைப் புகழ்ந்தபடியே வந்தார். வீட்டை அண்மித்ததும் ஹோட்டலிற்கு முன்னால் காரை நிற்பாட்டினார்.

    உணவை வாங்கி, காரில் ஏறியபோது ஸ்ராட் செய்ய மறுத்தது.

    “லம்போகினியும் பழுதாகுமா?”

    முழுசிப் பார்த்தான்.

    இரவு பதினொன்று. காரை அங்கேயே நிறுத்திவிட்டு, ஹோட்டலின் உரிமையாளரான மைத்துனரின் நண்பருடன் வீடு வந்தோம்.

    மறுநாள் காரை எடுக்கச் சென்றபோது, நான்குபக்கமும் செங்கல் அடுக்கப்பட்டு ரயர்கள் கழற்றப்பட்டிருந்தன.

     

     

     

    படம் உதவி: http://www.wptv.com/news/region-c-palm-beach-county/palm-beach/thieves-stole-tires-and-a-car-from-palm-beach-driveways

    Share
  • நான் ஓர் அகதி

    –கே.எஸ்.சுதாகர்.

    (50 வார்த்தைகளுக்குள் ஒரு குறுங்கதை)

     

    World Refugee Day 2013நான் சமீபத்து அகதி. நண்பன் 16 வருட அதிதி, பொறியியலாளன், (கொழுத்த) மனைவி சீதனம்.

    ஒருநாள் சந்தித்துக் கொண்டோம்.

    வாடகை வீட்டிலா இருக்கிறாய்? காசு தருகின்றேன். வீட்டை வாங்கு. கொஞ்ச வட்டிதான்.

    வீடு வாங்கினேன். காலம் மாறியது. வட்டி ஏறியது. வேலை நின்றது.

    மகனுக்கு வருத்தம், காசைத் தா மனமறியப் பொய் சொன்னான்.

    அற விலைக்கு வீட்டை விற்று தன் பணத்தை எடுத்தான்.

    மீண்டும் வாடகை வீட்டில் நான்.

     

     

     

    படம் உதவி: http://rabble.ca/multimedia/2013/06/world-refugee-day-2013

     

     

     

    Share
  • பொழுதெல்லாம் பேசச் சொல்லும் …

    — கவிஞர் காவிரிமைந்தன். 


    thangath thambi

    அண்மையில் நான் இணையதளமொன்றில் கேட்கக் கிடைத்த புதையல் இந்தப் பாடல் என்பேன்! எத்தனை அருமையான இப்பாடல் இதுவரை கேட்டது கிடையாது என்பதை என்னால் நம்பவே முடியவில்லை! ‘தங்கத் தம்பி’ என்கிற திரைப்படத்தில் தமிழ்த்திரையில் என்றும் வலம்வந்துகொண்டிக்கிற டி.எம்.செளந்திரராஜன் பி.சுசீலா ஆகியோரின் வளமையான குரல்களில்.. கேளுங்கள் புதிய உலகம் நுழைந்ததுபோலிருக்கும்!

    பல்லவி தொடங்கி சரணங்கள் எல்லாம் செந்தமிழின் சுகமிருக்கிறது! இசையோ நம்மைக் கட்டி இழுக்கிறது! திரையிசைத்திலகம் கே.வி.மகாதேவன் அமைத்த இசையில் இதயங்கள் கட்டுண்டு போவது சகஜம்தான் என்றாலும் இந்தப் பாடல் அதற்கும் மேலே என்றே சொல்லத் தோன்றுகிறது!

     

     

    ஆண்:
    பொழுதெல்லாம் பேசச் சொல்லும்
    கதையொன்று கண்ணில் உண்டு

    பெண்:
    இரவெல்லாம் பாடச்சொல்லும்
    பாட்டொன்று நெஞ்சில் உண்டு

    ஆண்:
    அம்புலிபோல் பெண்ணைக் கண்டேன்
    அம்புவிழிக் கண்ணைக் கண்டேன்
    அழகுரதம் ஆடக் கண்டேன்
    ஆடைகொண்டு மூடக் கண்டேன்

    பெண்:
    கோடையிலே நிழலைக் கண்டேன்
    கானலிலே நீரைக் கண்டேன்
    அன்னை போலே நெஞ்சம் கண்டேன்
    பிள்ளைபோல் தஞ்சம் என்றேன்.

    [பொழுதெல்லாம் பேசச் சொல்லும்]

    ஆண்:
    காற்றுக்கு கண் கிடையாது
    நடப்பதெல்லாம் பார்ப்பதற்கு..
    கட்டிலுக்கு வாயுமில்லை
    கவிதைகளை வரைவதற்கு..

    பெண்:
    விடிந்தபின்பு வண்ணம் காட்டும்
    மன்னன்தந்த சின்னம் காட்டும்
    செந்தமிழே பண்ணில் திகழும்
    காண்பவர்க்கு தன்னால் புரியும்!

    [பொழுதெல்லாம் பேசச் சொல்லும்]

    காணொளி: http://youtu.be/qjh5KdPub38

    படம்: தங்கத் தம்பி
    பாடல்: வாலி
    இசை: கே. வி. மகாதேவன்
    குரல்: டி எம் சௌந்தரராஜன், பி. சுசீலா

     

    அருமையான வரிகளில் ஆனந்தமழையடிப்பதைப்போல் இன்பம் கொள்ளை கொள்ளையாகக் கொட்டிக்கிடக்கிறது! இசைப்பாடலுக்குத்தானே இத்தனைப் பெருமை அமைகிறது! இயல்தமிழாய் இருக்கும்போது அது கவிதை என்று மட்டுமே கவனத்தில் கொள்ளப்படுகிறது! பாடல் பாடப்படுகிற சூழல், பாடும் குரல்கள், பாடல் காட்சிகள் என்று பல காரணிகள் இருந்தாலும் பெளர்ணமி வெளிச்சம் பரவிக்கிடக்கிற பாடலாய் இப்பாடல் பவனிவருகிறது!

    ரவிச்சந்திரன் – பாரதி இணைசேர கண்ணுக்கு விருந்தளிக்கும் இதமான ஜோடியாய் இவர்கள் நடிப்பில் பண்ணும் இசையும் பவித்ரமாய் கலக்கின்றன! ஒன்றிணையும் இருவர் இப்படி அமைய வேண்டும் என்கிற எண்ணம்கூட நெஞ்சில் பதிகிறது! கண்களை மூடிக்கொண்டு கேட்டுப்பார்த்தால் கவிதை மஞ்சம் விரிக்கிறது! கன்னித்தமிழின் வெள்ளம் பாய்ந்துவந்து இதயத்தை இன்ப அலைகள் நனைக்கிறது!

    இன்பத்தை வளரச்செய்ய இணைசேரும் வார்த்தைப்பூக்கள் மொத்தமாக அணிவகுக்க.. அன்னைபோல நெஞ்சம் கண்டேன் ..உன்னிடத்தில் பிள்ளைபோல் தஞ்சம் என்றேன் என்கிற கனிந்த சொற்களால் இப்பாடல் தரத்தில் உயர்ந்துநிற்கிறது! இனிய தம்பதியர் வாழ்வில் இப்பாடல் நிதந்தோறும் கேட்க வேண்டிய கானமாக.. என்றென்றும் ஒலிக்கட்டுமே!!

    Share
  • இன்று பிரதோஷ நன்னாள்!

    -மீ.விசுவநாதன்

    இருண்ட மனதில் ஒளியானாய்; இயற்கை நியதிப் பொருளானாய்;
    உருண்டு புரண்டு அழுதாலும் உயிருள் குளிர்ந்த சுகமானாய்;
    சுருண்டு கிடக்கும் பாம்பினையே தொட்டு எழுப்பும் குருவானாய்;
    மருண்மா அகந்தை அழிந்திடவே மனதை ஒடுக்கும் சிவமானாய்!

    சிறகை விரித்துப் பறக்கின்ற சிந்தை யதனில் கவியானாய்;
    பிறவி எடுத்த பயன்சொல்லி பிறர்க்கு தவிடும் கையானாய்;
    இறக்கும் வரைக்கும் எளியோனாய் இருந்து பழக வழியானாய்;
    மறக்கும் பொருளாய் அமையாமல் மதியை அணிந்த அரனானாய்!

    (அறுசீர் விருத்தம் வாய்பாடு: மா, மா, காய் , மா, மா, காய்)

     

    Share
  • படக் கவிதைப் போட்டி – 2

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

    Robins_click

    ராபின் ராஜ் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பு ஆசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (07.03.2015) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை முனைவர் அண்ணாகண்ணன் தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பல முறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். இது, கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்கு பெற அழைக்கிறோம்.

    Share