Blog

  • பதினெண் கீழ்க்கணக்குநூல்களில் சமயங்களும், புத்திலக்கிய வளர்ச்சிநிலைகளும்

    — முனைவர் மு.பழனியப்பன்.

     

    பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்

     

     

     

    படைப்பிற்கும் படைப்பாளனுக்கும் பின்புலம் என்பது இன்றியமையாதது. ஒரு படைப்பு எழுவதற்கும், படைப்பாளன் எழுதுவதற்கும் ஒரு மன எழுச்சி ஏற்பட வேண்டும். இந்த மன எழுச்சி படைப்பெழுச்சியாக மாறி, தக்கதொரு வடிவம் கொண்டு வாசகத் தளத்திற்கு முழுமையான படைப்பாக வந்து சேர்கின்றது. ஒரு படைப்பு முழுமையான படைப்பாக, வெற்றிகரமான படைப்பாக அமைய அதன் வடிவம், அதன் கருத்து, நடை, அதன் பொதுமைத்தன்மை, அதன் பன்முகத்தன்மை, இலக்கியத் தன்மை போன்ற பல நிலைகள் காரணங்களாக அமைகின்றன. இக்காரணங்கள் வலுப்பெற்று வெற்றிகரமான படைப்பாக மிளர்ந்த ஒன்று காலாகாலத்திற்கும் அழியாமல் சமுதாயத்தின் முன்னோடி இலக்கியமாகக் கருதப்பட்டு நிலைப்படுகின்றது. அவ்வகையில் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் சங்கம் மருவிய கால இலக்கியங்களாக இருந்தாலும் அவை தன் காலச் சூழலில் நின்றுகொண்டு, இன்றைய சமுதாயத்தின் நெறிகாட்டு இலக்கியங்களாக முன்னோடி இலக்கியங்களாக அமைந்து சிறக்கின்றன. அவற்றின் நீதி சொல்லும் பாங்கு புதிய இலக்கிய வகை உருவாகக் காரணமாகியது.

    பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் எழுதப்பட்ட ஆசிரியர் அவர்சார்ந்த சமயம் ஆகியவற்றின் காரணமாக சமயப் பின்புலத்தையும் பெற்றமைகின்றன. இப்பின்புலம் அக்கால நிலையில் சமயங்கள் பெற்றிருந்த ஏற்றத்தைக் காட்டுவனவாக உள்ளன. பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் அவற்றின் கடவுள் வாழ்த்துகளை அடிப்படையாகக் கொண்டு பகுக்கும்போது அவைதிக சமயங்கள், வைதிக சமயங்கள் என்ற இருநிலைப் பகுப்பினை உணரமுடிகின்றது. இவைதவிர சமயப்பொதுமை என்ற நிலையையும் பதினெண் கீழ்க்கணக்கு நூல் பரப்பில் காணமுடிகின்றது.

    அவைதிக சமயங்களாகக் கொள்ளத்தக்கன சமணம், பௌத்தம் ஆகியனவாகும். இவற்றில் ப சமணம் சார்ந்த கடவுள் வாழ்த்துக்களைப் பெற்ற பதினெண் கீழ்;க்கணக்கு நூல்களாக, நாலடியார், பழமொழி, ஏலாதி, சிறுபஞ்சமூலம், திணைமாலை நூற்றைம்பது ஆகிய நூல்கள் அமைகின்றன. பௌத்த சமயம் சார்ந்த கடவுள் வாழ்த்துகள் எதுவும் எந்நூலுக்கும் அமையவில்லை. இதன் காரணமாகப் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களின் காலத்தில் பௌத்தச் செல்வாக்கு குறைந்தே இருந்துள்ளது என்பதை உணரமுடிகின்றது.

    வைதீக சமயங்கள் என்ற நிலையில் சைவம் வைணவம் ஆகியன அமைகின்றன. சைவம் சார்ந்தனவாக ஆசாரக் கோவை, ஐந்திணை எழுபது, இன்னிலை ஆகிய நூல்கள் அமைகின்றன. திருமால் பற்றிய கடவுள் வாழ்த்துகளை உடைய நூல்களாக நான்மணிக்கடிகை, திரிகடுகம், கார் நாற்பது ஆகியன அமைகின்றன. சிவன், திருமால் இருவரையும் பாடுவனவாக இனியவை நாற்பது, இன்னா நாற்பது ஆகியன அமைகின்றன. திருக்குறள் சமணப் பொதுமை வாய்ந்ததாக அமைகின்றது. ஆசாரக் கோவை வேதநெறி சார்ந்ததாக அமைகின்றது. மீதம் ஐந்து நூல்கள் சமயச் சார்பினை அறியா நிலையில் உள்ளன.

    அவைதீக சமயங்கள்
    அவைதீகம் என்றால் வேதநெறியை ஏற்காதது என்று பொருள்படும். வேதங்கள் சொல்லிய முறைக்கு முன்னான சமயங்கள், அல்லது வேதநெறிப்பாடாத சமயங்கள் அவைதீக சமயங்கள் எனப்படுகின்றன. இவ்வகையில் சமணமும், பௌத்தமும் அவைதீக சமயங்கள் ஆகின்றன. அதாவது ஆரியர் வருகைக்குப் பின்பு ஏற்படுத்தப்பட்ட வேத நெறி சார்ந்த சமயங்களை வைதீக சமயங்கள் என்றும், அதற்கு முன்னான முரணான சமயங்களை அவைதீக சமயங்கள் என்றும் பிரிப்பது சமயப் பாகுபாடாகும்.

    சமணம்
    சமண சமயத்தாக்கம் அதிகமாக இருந்த காலமாக பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் காலம் அமைகின்றது. இதற்குப் பின் வந்த களப்பிரர் காலத்திலும் சமண சமயத்தின் ஆளுமை இருந்தமையை இலக்கிய வரலாறுகள் உணர்த்துகின்றன. பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் காணப்படும் சமண சமய கடவுள் வாழ்த்துகள் சமயம் பற்றி அறிய முக்கிய சான்றாதாரங்களாக உள்ளன.

    நாலடியார் சமண சமயம் சார்ந்த பலரால் எழுதப் பெற்றது. இதன் கடவுள் வாழ்த்துப்பகுதியில், இடம்பெறும் பாடல் பின்வருமாறு.
    வான்ஈடு வில்லின் வரவறியா வாய்மையால்
    கால்நிலம் தோயாக் கடவுளை- யாம் நிலம்
    சென்னி யுறவணங்கிச் சேர்தும் எம் உள்ளத்து
    முன்னி யவைமுடிக என்று”
    என்ற இப்பாடல் அருக வணக்கமாக அமைகின்றது. வானவில்லின் வரவையும் செலவையும் அறிய இயலாது. அதுபோன்று உயிர்களின் பிறப்பு இறப்பு ஆகியன பற்றியும் அறிந்துகொள்ள இயலாது. பாதம் புவியில் பாடாத அளவு பெருமை உடைய அருகக்கடவுளை வணங்கி நாம் எண்ணியதை முடிக்க வேண்டுவோம் என்பது நாலடியாரின் தெய்வ வணக்கம் ஆகும்.

    மேலும் நாலடியாரில் நிலையாமை கருத்துக்கள் முன்னணியில் அமைக்கப்பெற்றுள்ளன. செல்வம் நிலையாமை, இளமை நிலையாமை, யாக்கை நிலையாமை ஆகியனவும் வலியுறுத்தப்பெற்றுள்ளன. இவற்றின் வழி சமண சமயக் கருத்துகளை அறிந்து கொள்ள முடிகின்றது.
    பழமொழி நானூறில் வரும் கடவுள் வாழ்த்து பின்வருமாறு
    ~அரிதவித்து ஆசின்று உணர்ந்தவன் பாதம்
    விரிகடல் சூழ்ந்த வியன்கண் மாஞாலத்து
    உரியதனிற் கண்டுணர்ந்தார் ஓக்கமே போலப்
    பெரியதன் ஆவி பெரிது
    என்ற பாடல் பழமொழி நானூற்றின் முன்பகுதியில் அமைந்துள்ள கடவுள் வாழ்த்துப் பாடலாகும். இதில் பெரியதன் ஆவி பெரிது என்று ஒரு பழமொழி எடுத்தாளப்பெற்றுள்ளது கவனிக்கத்தக்கது. எனவே இக்கடவுள் வாழ்த்தும் பிறறொரு புலவரால் எழுதப்பாடாது முன்றுறையரையனாராலேயே எழுதப்பெற்றிருக்க வேண்டும் என்பது தெரியவருகிறது.

    பெரியதன் ஆவி பெரிது என்ற இந்த உவமை சமணசமயம் சார்ந்த உவமையாகும். சமண சமயத்தில் உடல் பெரியதாக இருந்தால் அதனுள் இருக்கும் உயிரும் பெரியதாக இருக்கும் என்ற கருத்து விளங்குகின்றது. சீவன் அல்லது உயிருக்குப் பருமனும்அளவும் குறிக்கின்றது சமணரது தத்துவம். உயிர் எந்த உடலை தனக்கு உறைவிடமாகக் கொள்கின்றதோ அந்த உடலின் பருமனுக்கு ஏற்பத் தன்னைக் கூட்டவும் குறைக்கவும் விரிக்கவும் சுருக்கவும் வல்லது (கி.லெட்சுமணன், இந்தியத் தத்துவ ஞானம்,ப.96) என்ற கருத்தினை மேற்கொண்டுப் பார்க்கையில் பழமொழிநானூற்றின் கடவுள் வாழ்த்து சமண சமயக் கொள்கைக்கு இடம் தருவதாக இருப்பதை அறியமுடிகின்றது.

    பரந்த கடல் சூழ்ந்த உலகில் காமம், வெகுளி, மயக்கம் ஆகிய மூன்று குற்றங்களையும் கெடுத்துக், குற்றமற்றவராக விளங்கும் இறைவனின் திருவடிகளை அறிந்தவர்களின் உயர்வு பெரிதாகும். அது பெரிய உடலின் ஆவி பெரியதாக அமைவதுபோல் அமையும் என்பது இப்பாடலின் கருத்தாகும்.

    இந்நூலுக்கு ஒரு தற்சிறப்புப் பாயிரம் ஒன்று உள்ளது.இதிலும் இந்நூல் சமணம் சார்ந்தது என்பது தெரிவிக்கப்பெற்றுள்ளது.
    ~பிண்டியின் நீழல் பெருமான் அடிவணங்கிப்
    பண்டைப்பழமொழி நானூறும் கொண்டு இனிதா
    முன்றுறை மன்னவன் நான்கடியும் செய்தமைத்தான்
    இன்றுறை வெண்பா இவை.
    என்ற இப்பாடலில் அசோக மரத்தின் நிழலில் இருக்கும் பெருமான் என்று அருகப் பெருமான் வாழ்த்தப் பெறுகிறான். இவற்றின் வாயிலாக பழமொழி நானூறு சமணசமயம் சார்ந்தது என்பது தெளிவாகின்றது.

    சிறுபஞ்சமூலமும் சமணம் சமயம் சார்ந்த நூலாகும். இந்நூலில் இடம்பெற்றுள்ள கடவுள் வாழ்த்து பின்வருமாறு.
    முழுதுணர்ந்து மூன்றொழித்து மூவாதான் பாதம்
    பழுதின்றி ஆற்றப் பணிந்து – முழுதேத்தி
    மண்பாய ஞாலத்து மாந்தர்க்கு உறுதியா
    வெண்பா உரைப்பான் சில
    என்ற கடவுள் வாழ்த்து காரியாசானின் சிறுபஞ்சமூலத்தின் முன்பகுதியில் இடம்பெறுகின்றது.

    காமம், வெகுளி, மயக்கம் என்ற மூன்றினையும் ஒழித்து, முழுதுணர்ந்து, முதுமை பெறாத இறைவனின் பாதத்தை குற்றமின்றி வணங்கி அப்பெருமானின் குணங்களைப் போற்றி இவ்வுலகத்திற்கு நன்மை உண்டாகும் வண்ணம் சிறுபஞ்சமூலம் என்ற நூலை நான் உரைப்பேன் என்ற ஆசிரியர் கூற்றாகக் கடவுள் வாழ்த்து அமைகின்றது.
    ஏலாதி என்ற நூலும் சமண சமயச் சார்புடைய நூலாகும்.
    அறுநால்வர் ஆய்புகழ்ச் சேவடி யாற்றப்
    பெறுநாலவர் பேணி வழங்கிப் பெறுநூல்
    மறைபுரிந்து வாழுமேல் மண்ணொழிந்து விண்ணோர்க்கு
    இறைபுரிந்து வாழ்தலியல்பு.
    என்ற இப்பாடலில் சமண சமய அடிப்படைகள் பல கூறப்பெற்றுள்ளன. சமண சமயத்தில்தீர்த்தங்கரர்கள்- 24, அவதராங்கள்-24, தேவராசி -4, சக்கரவர்த்திகள் -12, பலதேவர்-9, வாசுதேவர் -9 என்ற கூறுபாடுகள் ஏற்கப்படுகின்றனர். இவர்கள் கொல்லாமை முதலான அறங்களை உலகில் பரவச் செய்தவர்கள் ஆவர். இவர்களின் மேலாக, வேதங்களால் உணர்த்தப்படுகின்ற இறைவனை எப்போதும் துதி செய்து வாழுங்கள். இறந்தபின் இதற்கு வாய்ப்பில்லை. தேவர்களுக்கு அரசனும் இதனையே செய்து பெரும்பதவி பெற்றான் என்கிறது இப்பாடல்.

    ஏலாதி நூலின் ஆசிரியராக விளங்கும் கணிமேதாவியார் பாடிய அகத்துறைப் பாடல் திணைமாலை நூற்றைம்பது ஆகும். இந்நூலும் சமண சமயத்தவரால் எழுதப்பெற்றது என்பதற்கு ஏலாதி சான்றாக அமைகின்றது.

    இவ்வாறு சமண சமய நூல்களின் கடவுள் வாழ்த்துகள் அக்கடவுளின் தன்மைகளை, இயல்புகளை, அவர்களின் சுற்றததை எடுத்துக்காட்டுகின்றது. இதன் காரணமாக பதினெண் கீழ்க்கணக்கு காலத்தில் சமணத்திற்கு உயரிய இடம் இருந்ததை உணரமுடிகின்றது. அதாவது ஏறக்குறைய ஐந்து நூல்கள் என்ற பெரிய எண்ணிக்கை சமண சமயத்தின ஆளுமை உயர்வை இக்காலத்தில் காட்டுவதாக உள்ளது.

    வைதீக சமயங்கள்
    வைதீக சமயங்கள் என்ற நிலையில் வேதநெறிக்கு உட்பட்ட சமயங்களாக சைவம், வைணவம் ஆகியன கொள்ளப்பெறுகின்றன. இவை பற்றிய குறிப்புகள் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் காணப்பெறுகின்றன.

    சைவம்
    சிவனை முழுமுதல் தெய்வமாகக் கொண்ட சமயம் சைவ சமயம் ஆகும். இச்சமயத்தின் கடவுளான சிவனைப் பற்றிக் கடவுள் வாழ்த்தில் பாடி சைவசமயப் பின்புலம் ஏற்படுத்திக் கொண்ட நூல்கள் நான்காகும். அவை ஆசாரக் கோவை, ஐந்திணை எழுபது, இன்னிலை ஆகியன சிவபெருமானின் பாடலைத் தம் கடவுள் வாழ்த்தாகக் கொண்டுள்ளன. இவற்றின் வழியாக சிவபெருமான் பற்றி கருத்துகளை அறிந்து கொள்ளமுடிகின்றது.

    பெருவாயின் முள்ளியார் பாடிய ஆசாரக் கோவையின் சிறப்புப் பாயிரமாக சிவனைப் போற்றும் கடவுள் வாழ்த்து ஒன்று அமைந்துள்ளது.
    ஆர்எயில் மூன்றும் அழித்தான அடி ஏத்தி
    ஆரிடத்துத் தான்அறிந்த மாத்திரையான் ஆசாரம்
    யாரும் அறிய அறன் ஆய மற்றவற்றை
    ஆசாரக் கோவை எனத்தொகுத்தான் – தீராத்
    திருவாயில் ஆய திறல்வண் கயத்தூர்ப்
    பெருவாயின் முள்ளிஎன் பான்
    என்ற இப்பாடலில் ஆர் எயில் மூன்றும் என்பது திரிபுரம் பற்றியதாகும். திரிபுரத்ஐ;த எரித்தவன் அடி ஏத்துவதாக ஆசாரக்கோவையின் சிறப்புப் பாயிரம் அமைகின்றது.

    மேலும் இவ்வாசாரக் கோவையின் உட்பகுதியில் அமைந்துள்ள ஒருபாடல் வேதநெறியைப் போற்றுகின்றது.
    தக்கிணை, வேள்வி, தவம், கல்வி இந்நான்கும்
    முப்பால் ஒழுக்கினால் காத்து உய்க்க உய்யாக்கால்
    எப்பாலும் ஆகா கெடும் (பாடல். 3)
    என்ற பாடலில் வேதநெறிமுறை காட்டப்பெற்றுள்ளது. எரியால் பொருள்களை அவிக்கும் வேள்வி, அந்தணர்களுக்கு வழங்கப்பெறும் ;தட்சிணை போன்றன வேதக்குறிப்புகள் ஆகும். இவ்வகையில் வேதநெறியின் பாற்பட்டதாக ஆசாரக்கோவை அமைகின்றது.

    மூவாதியார் படைத்த ஐந்திணை எழுபது என்ற நூலில் விநாயக வணக்கம் இடம்பெற்றுள்ளது.
    எண்ணும் பொருளினிதே எல்லா முடித்தெமக்கு
    நண்ணும் கலையனைத்து நல்குமால்- கண்ணுதலின்
    முண்டத்தான் அண்டத்தான் மூலத்தான் ஆலஞ்சேர்
    சண்டத்தான் ஈன்ற களிறு
    என்ற பாடலில் ஈசனைக் கண்ணுதல் தெய்வமாக அதாவது நெற்றியில் கண் பொருந்தியவனாக, மூலமாக விளங்குகின்றவனாக, கண்டத்தில் விடம் உடையவனாகச் சிவனைக் காட்டி அத்தெய்வத்தின் மகனான விநாயகப் பெருமான வேண்டிய கலைகள் அனைத்தும் தருவான் என்று உரைக்கப்பெற்றுள்ளது.

    வைணவம்
    வைணவத்தின் முதல் தெய்வம் திருமால் ஆவார். இவர் முல்லை நிலத் n;தய்வமாகச் சங்ககாலத்தில் வைத்து எண்ணப்பெற்றார். இதன் தொடர்ச்சிப் பதினெண் கீழக்கணக்கு நூல்களில் காணக்கிடைக்கின்றது. திரிகடுகம், கார்நாற்பது, நான்மணிக்கடிகை ஆகிய நூல்கள் திருமால் வணக்கத்தைப் பெற்றுள்ளன.
    ~மதி மன்னு மாயவன் வாள்முகம் ஒக்கும்
    கதிர் சேர்ந்த ஞாயிறு சக்கரம் ஒக்கும்
    முதுநீர்ப் பழனத்துத் தாமரைத் தாளின்
    எதிர்மலர் மற்றவன் கண் ஒக்கும் ப+வைப்
    புதுமலர் ஒக்கும் நிறம்
    என்பது விளம்பிநாகனார் பாடிய நான்மணிக்கடிகையின் கடவுள் வாழ்த்துப் பகுதியாகும். இதில் திருமாலின் முகம் முழுமதி போன்றது என்றும், திருமாலின் கையிலுள்ள சக்கரம் சூரியனைப் போன்றது என்றும் அவனின் விழிகள் தாமரைமலர் போன்றது என்றும், அவன் திருமேனியின் நிறம் காயா மலர் போன்றது என்றும் கருத்துக்கள் அமையப் பாடப்பெற்றுள்ளன. இதனைப் பாடிய விளம்பிநாகனார் கடவுள் வாழ்த்தாக மற்றொரு பாடலையும் தருகின்றார்.
    படியை மடியகத் திட்டான் அடியினால்
    முக்காற் கடந்தான் முழுநிலம் – அக்காலத்தும்
    ஆப்பனி தாங்கிய குன்றெடுத்தான் கோவின்
    அருமை அழித்த மகன்
    என்ற இப்பாடலில் திருமாலி;ன் செயல்கள் எடுத்துக்காட்டப்பெறுகின்றன. உலகைத் தன் மடியில் வைத்தவன் திருமால். அவன் மூவடியால் உலகை அளந்தவன். குன்றைக் குடையாகப் பிடித்து ஆநிரைகளைக் காத்தவனும் அவனே. அரிய நெருப்பு மதிலான ~சோ|வை அழித்தவனும் அவனே. இவ்வாறு அவனின் அருமை பெருமைகளைச் சொல்லி நான்மணிக்கடிகை திருமாலை வாழ்த்துகின்றது.
    நல்லாதனார் இயற்றிய திரிகடுகத்தில் திருமால் வாழ்த்து அமைந்துள்ளது.
    ~கண்ணகல் ஞாலம் அளந்துதூஉம் காமருசீர்த்
    தண்ணறும் ப+ங்குருந்தம் பாய்ந்ததூஉம் நண்ணிய
    மாயச் சகடம் உதைத்தூஉம் இம்மூன்றும்
    ப+வைப்ப+ வண்ணன் அடி
    என்ற இப்பாடலில் திருமாலின் அலகிலா விளையாட்டுகள் எடுத்துக்காட்டப்பெறுகின்றன. உலகை அளந்தவன் கண்ணன். குருந்த மரம் முறித்ததும், வண்டியை உதைத்ததும் திருமாலே. அவன் காயாம் ப+வைப் போன்ற கரிய நிறமுடைய திருமால் ஆவான். இவ்வாறாக திருமாலின் பெருமையைப் பேசுவதாக அமைவது இக்கடவுள் வாழ்த்தாகின்றது.

    கார் நாற்பது என்ற பதினெண்க் கீழ்க்கணக்கு நூலின் கடவுள் வாழ்த்தும் திருமாலைப் போற்றுகின்றது.
    ~பொருகடல் வண்ணன் புனைமார்பிற்றார்போல்
    திருவில் விலங்கூன்றித் தீம்பெயல் தாழ
    வருதும் என மொழிந்தார் வாரார் கொல் வானம்
    கருவிருந் தாலிக்கும் போழ்து
    என்ற இந்தப் பாடலில் திருமால் பற்றிய குறிப்பு இடம்பெறுகிறது. கார் என்பது முல்லை நிலத்தின் பெரும்பொழுதாகும். இந்நிலத்தினைப் பற்றிய பனுவல் கார் நாற்பது. முல்லை நிலத்திற்கு உரிய தெய்வம் திருமால். அத்தெய்வத்தை முதல் பாடலில் சுட்டி அதனையே கடவுள் வாழ்த்தாகவும் ஏற்கத்தக்க வகையில் இந்நூலின் முதல் பாடலை மதுரை கண்ணங்கூத்தனார் பாடியுள்ளார்.

    கடலின் நிறத்தை உடைய திருமாலின் மார்பில் உள்ள மாலை போன்று வானவில்லை குறுக்காக நிறுத்தி மழையானது பெய்யத் தொடங்கியது. இம்மழைக்காலத்தில் வருவோம் என்று சொல்லி விட்டுச்சென்ற தலைவர் வாராது இருப்பாரா என்பது இப்பாடலின் கருத்தாகும்.

    இன்னிலையில் சிவபெருமானையும், உமையம்பிகையையும், சிவபெருமான் பெற்றெடுத்த மற்றொரு மகனான முருகனையும் வணங்குவதாகக் கடவுள் வாழ்த்து அமைகின்றது,
    ~வேலன் தரீஇய விரிசடைப் பெம்மான்
    வாலிழை பாகத்து அமரிய கொழுவேல்
    கூற்றம் கதழ்ந்நெறி கொன்றையன்
    கூட்டா உலகம் கெழீஇய மலிந்தே
    என்ற பாடல் கடவுள் வணக்கமாக அமைகின்றது. இதனை இயற்றியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார் என்ற குறிப்பு இடம்பெற்றுள்ளது. ஆனால் இன்னிலையை எழுதியவர் பொய்கையார் ஆவார். இப்பாடலில் வேலனைப் பெற்றெடுத்த விரிந்த சடையை உடைய பெருமான் எமனைச் சினந்தழித்தக் கொன்றை மாலையை உடைய பெருமான் ஆகிய சிவபெருமானின் இடப்பாகத்தில் அமர்ந்துள்ள உமையம்பிகையின் இணையோடு அமர்ந்திருக்க உலகம் நன்மை பெறுகின்றது என்பது இப்பாடலின் பொருளாகின்றது.

    சிவனையும் திருமாலையும் ஒருங்கிணைந்த நிலையில் பாடப்பெற்றுள்ள கடவுள் வாழ்த்துகள் வைதிக நெறியில் அமைந்த மும்மூர்த்திகளையும் கடவுள் வாழ்த்தில் பாடும் முறைமையும் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் காணப்படுகின்றது. இனியவை நாற்பதின் கடவுள் வாழ்த்தும் முக்கடவுளர்களைத் தொழும் நிலையில் அமைகின்றது.
    ~கண்மூன்றுடையான் தாள் சேர்தல் கடிதினிதே
    தொல்மாண் துழாய் மாலையானைத் தொழலினிதே
    முந்துறப் பேணி முகநான் குடையானைச்
    சென்றமர்ந் தேத்தல் இனிது
    என்று சிவன், திருமால், நான்முகன் ஆகிய மூவரையும் வணங்குவதாக ப+தஞ்சேந்தனாரின் இனியவை நாற்பது விளங்குகின்றது.

    இன்னாநாற்பதின் கடவுள் வாழ்த்து, சிவன், திருமால், பலராமன் ஆகிய மூவரையும் வாழ்த்துகின்றது.
    முக்கண் பகவன் அடிதொழா தார்க்கின்னா
    பொன்பனை வெள்ளையை உள்ளா தொழுகின்னா
    சக்கரத்தானை மறப்பின்னா ஆங்கின்னா
    சத்தியான் தாள்தொழாதார்க்கு
    என்பது இன்னாநாற்பதின் கடவுள் வாழ்த்துப் பகுதியாகும். இப்பாடலில் மூன்று கண்களை உடைய சிவன், பலராமன், திருமால் ஆகிய மூவரையும் தொழாமல் இருப்பது இன்னாதது என்று குறிக்கிறார் கபிலர்.

    மேற்சொன்னவற்றைத் தொகுத்துக் காணும்போது, வேதநெறியின் பாற்படாத அவைதீக சமயங்களுக்கும், வேதநெறியின் பாற்பட்ட வைதீக சமயங்களுக்குமான போட்டி மிகுந்த காலப் பகுதியில் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் எழுந்துள்ளன என்பது தெளிவாகத் தெரிகின்றது.

    திருக்குறள் வேதநெறியின் படியும் அமையாமல், அவைதீகத்தையும் சார்ந்துவிடாமல் பொதுநிலையில் நிற்கின்றது. திருக்குறள்
    அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ;ஒன்றன்
    உயிர் செகுத்து உண்ணாமை நன்று (குறள் 259)

    என்று வேள்வியை மறுக்கின்றது. ஏனெனில் வேள்வியில் ;உயிர் செகுத்து சதைத் திரளைப் போடும் வழக்கம் இருந்துள்ளது. இவ்விரண்டையும் திருவள்ளுவர் மறுக்கின்றார். அதே நேரத்தில் அவைதீக நெறிப்படவும் அவர் தன் நூலை அமைத்துக்கொள்ளவில்லை.
    காமம் வெகுளி மயக்கம் இவை மூன்றன்
    நாமம் கெடக் கெடும் நோய் (குறள் 360)

    என்று சமணக் கொள்கையை ஏற்கும் வள்ளுவர் இன்பத்துப்பால் என்ற ஒன்றைப் பாடுகின்றார். இவ்வின்பத்துப்பால் காமம் சார்ந்த ஒன்றாகும். தமிழ் நெறிப்பட்ட நிலையில் அமைந்த களவியல், கற்பியல் ஆகியவற்றை வள்ளுவர் ஏற்றுக்கொள்வதில் இருந்து அவைதீக நெறியிலும் அவர் தன்னைச் சார்ந்து அமைத்துக்கொள்ளவில்லை என்பது தெரிகிறது.

    நாலடியார் பாடிய காமத்துப்பாலுக்கும் திருக்குறள் காமத்துப்பாலுக்கும் அடிப்படையில் பல வேறுபாடுகள் காணப்படுகின்றன. பொதுமகளிர், கற்புடை மகளிர் ஆகிய இருவரின் இழிவையும் சிறப்பையும் எடுத்துரைக்கும் பணியை மட்டுமே நாலடியார் செய்துள்ளது. ஆனால் வள்ளுவர் காதலின் முதல்நிலை முதல், ஊடல் வரைப் பாடியுள்ளார். இதனால் வள்ளுவர் பொதுநிலை சார்ந்து தன் நூலைச் சமயச் சார்பு இன்றிப் படைத்துள்ளார் என்பது தெளிவு.

    இவ்வாறு வெளிப்படத் தன்னை சமய அடிப்படை வாய்ந்ததாகக் காட்டிக்கொள்ளும் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களை அடிப்படையாக வைத்து அவற்றின் சமய நிலையை அதன் பின்புலத்தை அறிந்து கொள்ள முடிகின்றது.

    புத்திலக்கிய வகைகள்
    பதினெண் கீழ்க்கணக்கு நூல்களை அடிப்படையாகக் கொண்டு நீதிநூல்கள் பாடும் வகைமை தோன்றியது. முற்கால நீதி நூல்கள் என்று பதினெண் கீழ்க்கணக்கு நூல்களை வழங்கும் முறைமை ஏற்பட்டது. பிற்காலத்தில் நீதி நூல்கள் தோன்றும் வாய்ப்பும் ஏற்பட்டது.

    பிற்கால ஒளவையார் பாடிய ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி போன்றன பதினெண் கீழ்க்கணக்கு நூல்களின் அமைந்துள்ள நீதிநூல்களின் தொடர்நிலைசார்ந்தனவாகும். இவற்றைத் தொடர்ந்து எழுந்த அருங்கலச்செப்பு, முனைப்பாடியார் பாடிய அறநெறிச்சாரம், அதிவீரராம பாண்டியர் பாடிய வெற்றிவேற்கை, குமரகுருபரர் பாடிய நீதி நெறி விளக்கம், சிவப்பிரகாசர் பாடிய நன்னெறி, உலகநாதப் பண்டிதரால் பாடப்பெற்ற உலகநீதி, மாயுரம் வேதநாயகம் பிள்ளையால் பாடப்பெற்ற நீதிநூல் பெண்மதி மாலை போன்றனவும் நீதி இலக்கிய வகைமையின் தொடர்ச்சியாக அமைகின்றன.

    மேலும் புதிய வகைமைகள் தோன்றவும் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் காரணமாக அமைந்தன.

    ஆத்திச்சூடிகள்
    ஒருவரியில் அறத்தைச் சொல்லும் மரபு பதினெண்கீழ்க்கணக்கு நூலான முதுமொழிக்காஞ்சியில் துவக்கி வைக்கப்பெற்றது. இம்மரபு ஒளவையாரின் ஆத்திச்சூடியானது. இதன்பின் பல ஆத்திச் சூடிகள் வர ஆரம்பித்தன.

    பாரதியாரின் புதிய ஆத்திச்சூடி, பாரதிதாசனின் ஆத்திச்சூடி, வ.சுப. மாணிக்கத்தால் எழுதப்பெற்ற தமிழ்ச் சூடி, ச.மெய்யப்பன் எழுதிய அறிவியல்சூடி, நா.ரா. நாச்சியப்பன் எழுதிய தமிழ்சூடி, சிற்பி எழுதிய ஆத்திச் சூடி போன்ற பல ஆத்திச்சூடிகள் புதுவகையாகப் பதினெண்க் கீழ்க்கணக்கு நூல்களின் தாக்கத்தால் படைக்கப்பெற்றன.

    திருக்குறள் தொடர்பான புதிய ஆக்கங்கள்
    திருக்குறளை மையமாக வைத்துப் பல ஆக்கங்கள், பல வகைமைகள் தோன்றின. ஒளைவயார் படைத்த ஞானக்குறள், வ.சுப. மாணிக்கானர் படைத்த மாணிக்கக்குறள் ஆகியன திருக்குறளின் தாக்கத்தால் எழுந்தவை. இதன் யாப்பு வடிவமான குறள் வெண்பா யாப்பு வடிவமும் பிறரால் பின்பற்றப்பட்டது. குறிப்பாக சைவ சித்தாந்த நூலான உமாபதி சிவம் படைத்த திருவருட்பயன் வள்ளுவ யாப்புமுறையைப் பின்பற்றியது.

    திருக்குறளை முன்னிறுத்த அதனைச் சார்ந்து பல இலக்கியங்கள் தோன்றின. திருக்குறள் குமரேச வெண்பா, ரங்கேச வெண்பா போன்றன இவ்வகையில் குறிக்கத்தக்கன. கவிராஜ பண்டிதர் எனப்படும் ஜெகவீரபாண்டியனார் இயற்றி திருக்குறள் குமரேச வெண்பா மிகச் சிறப்பானது. முதல் இரு அடிகளில் குறள், அடுத்தது ஒரு தனிச்சொல், அடுத்த இருஅடிகளில் மேற்காட்டிய குறளுக்கு எடுத்துக்காட்டு நிகழ்ச்சி என்று அத்தனை குறள்களுக்கும் நேரிசை வெண்பா யாப்பில் ஒரு நூலை கவிராஜபண்டிதர் திருக்குறள் குமரேச வெண்பா எனப் படைக்கின்றார். இதோடு நில்லாமல் குறளுக்கும், எடுத்துக்காட்டிற்கும் உரைவிளக்கம் தருகின்றார். இவ்வடிப்படையில் ரங்கேச வெண்பா போன்றனவும் எழுந்தன.

    திருக்குறள் தமிழில் அதிகம் உரையாசிரியர்களைப் பெற்ற நூலாகும். இதன் சொற்சுருக்கம்,செம்மை,தெளிவு கருதிப் பற்பலரும் உரை வரைந்தனர். உரை வரைந்து கொண்டுவருகின்றனர். இவை அனைத்தும் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் மீது மக்கள் கொண்டுள்ள பற்றினை விளக்குவன என்றால் மிகையாகாது.

    இன்னா, இனிய
    இன்னா நாற்பது, இனியவை நாற்பது என்று வாழ்வில் இன்னாதவற்றையும் இனியவற்றையும் காட்டுவன பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் ஆகும். பிற்காலத்தில் பாவேந்தர் பாரதிதாசனால் இயற்றப்பெற்ற குடும்பவிளக்கு, இருண்ட வீடு ஆகிய இரு முரண்பட்ட கருத்து கொண்ட இலக்கியங்கள் படைக்கப்படவும் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் வழிவகுத்துள்ளன.

    இன்னும் பற்பல முயற்சிகள் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களை அடிப்படையாக வைத்து எழுதப்பெற்று வருகின்றன. இவ்வகையில் சமயநிலையிலும், இலக்கிய வகைப் பெருக்க நிலையிலும் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் மிக முக்கியமான இடத்தை வகிக்கின்றன.

    முனைவர் மு.பழனியப்பன்
    தமிழ்த்துறைத் தலைவர், இணைப் பேராசிரியர்
    அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி
    திருவாடானை

     

     

     

    Share
  • ‘‘புறநானூற்றில் நாட்டுப்புற நம்பிக்கைகள்”

    — முனைவர் சி. சேதுராமன்.

    purananooru

    நம்பிக்கைகள் மக்களால் உருவாக்கப்பட்டு, அம்மக்கள் சார்ந்த சமுதாயத்த்தால் பாதுகாக்கப்படுகின்றன.மனிதனின் தன்னல மற்றும் சமுதாய உணர்வுகளே நம்பிக்கைகளை வளர்த்து வருகின்றன. இந்நம்பிக்கைகள்காலந்தோறும் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கின்றன. இயற்கைக்கு அப்பாற்பட்ட செயல்களை உணராதபொழுதும், மனித வாழ்வில் ஏற்படும் சில நிகழ்ச்சிகளுக்குக் காரணம் கற்பிக்க இயலாத பொழுதும் மனிதமனமானது சிலவற்றைப் படைத்துக் காரணம் கற்பித்துக் கொள்கிறது. அவ்வாறு காரணம் கற்பித்துக்கொண்டவைகளே பின்னர் நம்பிக்கைகளாக உருவாகின்றன.

    மனித மனத்தின் விளைவாக நம்பிக்கைகள் தோன்றுகின்றன. இந்நம்பிக்கைகள் காலங்காலமாக ஒருதலைமுறையினரிடமிருந்து மற்றொரு தலைமுறையினருக்குப் பரவி வருகின்றன. மனித வாழ்க்கையின்பிரதிபலிப்புகளாகத் திகழும் இலக்கியங்களிலும் இந்நம்பிக்கைகள் குறித்த செய்திகள் இடம்பெற்றுள்ளன.எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான புறநானூற்றில் நாட்டுப்புற நம்பிக்கைகள் மிகுதியாக இடம்பெற்றுள்ளன.

    நாட்டுப்புற நம்பிக்கைகள்:
    அறிவு நிலைக்கு அப்பாற்பட்ட எண்ணங்களையே நம்பிக்கைகள் என்பர; அறிஞர். காரணகாரியத்தொடர்புகளுக்கு உட்பட்டுச் சான்றுகளின் வாயிலாக நிறு முடிவதை நம்பிக்கை என்றும் சான்றுகளின்அடிப்படையிலோ, காரண காரியத் தொடர்பின் வாயிலாகவோ விளக்க முடியாதவற்றை மூடநம்பிக்கை(ளுரிநசளவவைழைn) என்றும் வகைப்படுத்துவர். மனிதனின் சடங்குகள், நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள்பண்பாட்டின்கண் அடங்கி விடுகின்றன. நாட்டுப்புற நம்பிக்கைகளும் பழக்க வழக்கங்களும் பண்பாட்டுவளர்ச்சியின் படிக்கற்கள் என்பது நோக்கத்தக்கது. மனிதன் தனது பிறப்பு முதல் இறப்பு வரையில் பலவிதமானநம்பிக்கைகள் கொண்டிருக்கின்றான். மனிதனின் இந்நம்பிக்கைகளே அவனது வாழ்வை இயக்குகின்றன. மேலும்மனிதன் வாழ்வில் வளம் பெறுவதற்கு இந்நம்பிக்கைகளே அடித்தளமாக அமைந்திலங்குகின்றன.

    இந்நம்பிக்கைகள் எப்பொழுது தோன்றின என்று அறுதியிட்டுக் கூற இயலாது. இந்நம்பிக்கைகள்மக்களின் நடைமுறை வாழ்வில் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கின்றன. அதனால் இந்நம்பிக்கைகளைசமுதாயப் பண்பாட்டின் வளர்ச்சிக் கூறுகளின் தொகுதி எனக் கூறலாம். மனித வாழ்க்கையில் காணப்படும்நம்பிக்கைகளுக்குக் காரணத்தை அறிய முடியாததாக இருந்தாலும் மனித சமுதாயம் நம்பிக்கை வயப்பட்டுச்செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது. தனி மனித நம்பிக்கை காலப்போக்கில் சமுதாயநம்பிக்கையாக மாற்றம் பெறுவதுண்டு.

    பழக்க வழக்கங்கள் காலப்போக்கில் சடங்குகளாக மாறுகின்றன. இச்சடங்குகள் என்பதுநிர்ணயிக்கப்பட்ட விரிவான நடத்தைகளின் வடிவமாகும் என்பர். இது மனி மனிதனின் சுயமான ஆக்கமாகவோபண்பாட்டினுடைய தனிச்சிறப்புக் கூறாகவோ அமையும். பண்பாட்டின் ஏனைய அம்சங்கள் இன்றிச்சடங்குகளிலேயே வெவ்வேறு நாகரிகங்களின் நம்பிக்கைகளும் இலட்சியங்களும் மிகத் தெளிவாகவெளிப்படுத்தப்படுகின்றன என்கிறார் ரூத் பெனிடிக்ட்.

    பழந்தமிழர்கள் இயற்கையோடு இயைந்து வாழ்ந்தனர். இயற்கையின் மாறுதலுக்கேற்றாற் போன்றுமனித மனமும் மாறுபடுகின்றது. இயற்கையோடு இயைந்த மனித வாழ்க்கையில் நம்பிக்கைகள் தோன்றின.புறநானூற்றில் பல்வேறுவிதமான நாட்டுப்புற நம்பிக்கைகள் காணப்படுகின்றன. இந்நம்பிகைகள் அனைத்தும்சகுனம் சார்ந்து இயற்கையோடு இயைந்ததாக அமைந்திருப்பது நோக்கத்தக்கது.

    சகுனங்கள் குறித்த நம்பிக்கைகள்:
    சகுனம் பார்க்கும் நம்பிக்கை உலகெங்கிலும் காணப்படுகின்றது. பண்டைத் தமிழர; இதனைப் புள்,நிமித்தம் ஆகிய சொற்களால் குறிப்பிடுகின்றனர். நிமித்தம் என்பது வாழ்வில் நிகழவிருக்கும் நன்மைதீமைகளைச் சில குறியீடுகளின் வாயிலாக உணர்த்துவதாகும். நிமித்தங்கள் அனைத்தும் நம்பிக்கையைச்சார்ந்தனவாக உள்ளன. நிமித்தங்களை, நற்செயலையும், நற்பயனையும் அறிவிக்கும் குறியீட்டினைநன்னிமித்தம் என்றும் தீய செயலையும், தீமையையும் தெரிவிக்கும் குறியீட்டினை தீ நிமித்தம் என்றும்அவற்றின் செயற்பாட்டு விளைவு கருதி இருவகையாகப் பகுக்கலாம்.

    இதனை நாட்டுப்புற வழக்கில் நல்ல சகுனம், தீய சகுனம் என்று குறிப்பிடுவர். ஒரு செயலைத்தொடங்கும்போது நல்ல சகுனம் தோன்றினால் அச்செயல் நன்மையாக முடியும் என்றும், தீய சகுனம்தோன்றினால் அச்செயல் தோல்வியடையும் என்றும் நம்புகின்றனர்.

    நல்ல நாள், நேரம் பார்த்தல்:
    ஒரு செயலை நல்ல நாளில் செய்யத் தொடங்கினால் எவ்விதத் தடங்கலின்றி நன்றாக முடியும் என்றுமக்கள் நம்புகின்றனர். மன்னர்கள் போர் தொடங்குவதற்கு நல்ல நாள் பார்த்தனர். நல்ல நேரத்தை முழுத்தம்என்று குறிப்பிட்டனர். இம்முழுத்தத்தை இன்று முகூர்த்தம் என்று கூறுகிறோம். போர் தொடங்கும் முன்னர்நல்ல நாள் குறித்து அந்நாளில் வெண்கொற்றக் குடையையும், வாளையும் செல்ல வேண்டிய திசையில் எடுத்துச்சென்றனர். இதனை வாள்நாள்கோள், குடைநாள் கோள் எனத் தொல்காப்பியர் குறிப்பிடுகின்றார்.
    தொல்காப்பியத்தில்,
    ‘‘நாளும் புள்ளும் பிறவற்றின் நிமித்தமும்”(தொல்., பொருள்., 91)
    என நாள் நிமித்தமும், புள் நிமித்தமும் சுட்டப்படுகின்றது.

    மன்னனைக் காணப் போகும்போது இரவலர்கள் நல்ல நாள், நல்ல நிமித்தம்(சகுனம்) பார்த்துச் செல்வர்.அவ்வாறு சென்றால்; நிறையப் பரிசில்கள் கிடைக்கும் என்று அவர்கள் நம்பினர். நாளும் சகுனமும்சரியில்லையெனில் அவர்கள் மன்னனைக் காண்பதற்குச் செல்லமாட்டார்கள். இதனை,

    ‘‘நாள் அன்று போகி, புள் இடை தட்ப,
    பதன் அன்று புக்கு, திறன் அன்று மொழியினும்,
    வறிது பெயர்குநர்அல்லர் நெறி கொளப்
    பாடு ஆன்று, இரங்கும் அருவிப்
    பீடு கெழு மலையன் பாடியோரே” (புறம்., 124)

    என்ற புறப்பாடல் எடுத்துரைக்கின்றது. விதை விதைக்கும்போதும் மக்கள் நல்ல நாள் பார்த்தே விதைவிதைப்பர்.நல்ல நாளில் விதைவிதைத்தால் நன்கு விளைச்சல் பெருகும் என்று மக்கள் நம்பினர். பன்றி உழுத புழுதியில்குறவர் நல்ல நாள் பார்த்து திணையை விதைத்தையும், விளைந்த தானியத்தை உண்பதற்கு நல்ல நாள்பார்த்தனர். நல்ல நாளில் உண்டால் எந்தவிதமான தீங்கும் நேராது என்றும் மக்கள் நம்பினர். மக்களின்இந்நம்பிக்கையினை,

    ‘‘கொழுங் கிழங்கு மிளிரக் கிண்டி, கிளையொடு,
    கடுங் கண் கேழல் உழுத பூழி,
    நல் நாள் வரு பதம் நோக்கி, குறவர்
    உழாஅது வித்திய பரூஉக் குரல் சிறு தினை
    முந்து விளை யாணர் நாள் புதிது உண்மார்” (புறம்.,168)

    என்ற கருவூர்க் கதப்பிள்ளைச் சாத்தனார் பாடிய பாடல் தெளிவுறுத்துகிறது.

    மன்னர்கள் போருக்குச் செல்லும்போது நல்ல சகுனங்களைப் பார்த்தே புறப்பட்டனர். எட்டுத் திசைகளிலும்எரிகொள்ளி எரிந்து விழுதல், பெரிய மரத்தின் இலையில்லாத கிளை உலர்ந்து போதல், ஞாயிறுபலவிடங்களிலே செறிந்து தோன்றுதல், அச்சம் தரும் பறவைகள் ஓசையெழுப்புதல் ஆகியவை நனவில் தீயசகுனங்களாகும். இத்தகைய பெரியதீய சகுனங்கள் ஏற்படுகின்றனவா என்று பார்த்து அவ்வாறு ஏற்பட்டால் அதன்உட்பொருளை அறிந்தபின்னர் போருக்குச் சென்றனர். இச்சகுனம் பற்றிய மக்களின் நம்பிக்கையை,

    “வெல் போர் வேந்தே!
    திசை இரு நான்கும் உற்கம் உற்கவும்,
    பெரு மரத்து, இலை இல் நெடுங் கோடு வற்றல் பற்றவும்,
    வெங் கதிர்க் கனலி துற்றவும், பிறவும்,
    அஞ்சுவரத் தகுந புள்ளுக் குரல் இயம்பவும்” (புறம்.,41)

    என்ற கோவூர்க்கிழாரின் பாடல் தெளிவுறுத்துகிறது. இன்றும் பயணத்தின்போது சகுனம் பார்த்துச் செல்லும்பழக்கம் மக்களிடையே இருந்துவருவது நோக்கத்தக்கது. இது பழக்கம் பற்றிய நம்பிக்கையாக அமைந்துள்ளது.

    தலையை விரித்துப் போடுதல்:
    பயணம் செய்யும்போது எதிரில் தலையை விரித்துப் போட்டுக் கொண்டு வருவது தீய சகுனமாகக்கருதப்பட்டது. அவ்வாறு வந்தால் உயிருக்குத் தீங்கு நேரும் என்று மக்கள் கருதினர். அவ்வாறு வந்துவிட்டால்அத்தீங்கினின்று தப்புவதற்காக உடனே கடவுளை வணங்கினர். இதனை,

    “தளரு நெஞ்சந் தலைஇ மனையோள்
    உளருங் கூந்த னோக்கிக் களர
    கள்ளி நீழற் கடவுள் வாழ்த்தி”(260)

    என்ற புறநானூற்றுப் பாடல் தெளிவுறுத்துகின்றது. வழிச்செல்வோர் எதிரே, விரித்த தலைமயிருடன் ஒருத்திமுற்படவரின், அதனைத் தீநிமித்தமாகக் கருதுவது இயல்பு. தீநிமித்தத்தால் உண்டாகும் எனக் கருதிய தீங்கைவிலக்குதல் வேண்டி கள்ளியின் நிழலில் இருந்த தெய்வத்தை வணங்கினர். இத்தகைய சகுனம் குறித்தநம்பிக்கை இன்றும் மக்களிடையே இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

    பறவை அலறுதல்:
    சில பறவைகள் பறப்பதும் சிலவகையான பறவைகள் அலறுவதும் தீயதை ஏற்படுத்தும் சகுனங்களாகமக்களால் கருதப்பட்டன. இச்சகுனங்கள் மக்களிடத்தில் காணப்படும் பல்வேறுவிதமான நம்பிக்கைகளைஎடுத்துரைக்கின்றன.

    ‘‘கூகை அலறினால் சாவு வரும், போத்துப் பறந்தால் பேத்தடி வைக்காதே”
    என்பது அன்றிலிருந்து இன்றுவரை தமிழகத்தில் நிலவி வரும் நம்பிக்கையாகும். அஞ்சத்தக்க கூகையும்பெருங்குரலெடுத்து அலறுகிறது. இது தீயது நிகழப் போகிறது என்பதைக் குறிக்கின்றது. தலைவன்இறந்துவிடுவதையே இவ்வாந்தையின் அலறல் எடுத்துரைக்கின்றது என்று மனைவி புலம்புகின்றாள்.

    ஆந்தைஅலறினால் தீயது நடக்கும் என்ற இந்நம்பிக்கை புறநானூற்றில்,
    ‘‘அஞ்சுவரு குராஅல் குரலுந் தூற்றும்” (புறம்., 280)
    என்று இடம்பெற்றுள்ளது. ஆந்தை அலறுவதைத் தீ நிமித்தம் என்று மக்கள் நம்பினர் இதனை புறநானூற்றின் 40-ஆவது பாடல் குறிப்பிடுகின்றது. சிற்சில பறவை விலங்குகளின் காட்சியும் அவற்றின் குரல்களும் நன்மைதீமைகளைத் தெளிவுறுத்தும் என்று மக்கள் நம்பினர். வல்வில் ஓரியைக் கழைதின் யானையார் பாடிச்சென்றபோது பரிசில் கிடைக்கவில்லை. அதற்காகப் புலவர் ஓரியைப் பழிக்கவில்லை. மாறாக,

    ”புள்ளும் பொழுதும் பழித்தல் அல்லதை
    உள்ளி வருநர் பழியலர் அதனால்
    புலவேன் வாழியர் ஓரி” (புறம்., 204)

    என்று தான் புறப்பட்ட நேரத்தையும் எதிர்ப்பட்ட புள்ளையும் நோவது தவிர மன்னனை நோவது பயனற்றது என்றுகுறிப்பிடுகின்றார்.

    மலையமான் திருமுடிக்காரியைக் காண விரும்பியோர் தீய நாளில் சென்றாலும தீய பறவைஎதிர்ப்பட்டிருந்தாலும் கூட ஒன்றும் பெறாது திரும்பமாட்டார்கள் என்பதை,

    “நாளன்று போகிப் புள்ளிடை தட்பப்
    புதனன்று புக்குத்திறனன்று மொழியினும்
    பெயர்குநர் அல்லர்’’(புறம்., 124)

    என்று குறிப்பிடுகின்றார். இங்ஙனம் நல்ல நேரத்தில், நல்ல நாளில், நல்ல சகுனம் பார்த்து எதையும்பழந்தமிழர்கள் செய்தனர் என்பதை புறநானூறு தெளிவுற எடுத்துரைக்கின்றது.

    போருக்கு வீரர்கள் செல்லும்போது சில பறவைகளின் ஒலி சகுனமாகக் கொள்ளப்பட்டது. அரசனுடன்பறவைகள் ஒலிகளைக் கேட்டு அதற்குரிய பலனைக் கூறுவோரும் இருந்தனர். ‘புட்பகை’ பற்றி,

    “புள்ளிடை தட்ப”(புறம்., 124)
    “உட்பகை ஒரு திறம் பட்டெனப் புட்பகைக்
    கேவான் ஆதலின் சாவேம் யாமென” (புறம்., 68)

    என்று புறநானூறு குறிப்பிடுவது நோக்கத்தக்கது. ஆந்தையின் அலறினால் தீயது நடக்கும் என்று மக்கள் நம்பினர்.இந்நம்பிக்கையினை புறநானூற்றின் 40-ஆவது பாடல் தெளிவுறுத்துகின்றது.

    விரிச்சிகேட்டல்:
    விரிச்சி என்பது நற்சொல் கேட்டலாகும். ஒரு செயலின் தொடக்கத்தில் பிறர் சொல்லும் சொற்களைச்சகுனமாகக் கொள்வது உண்டு. இதனையே விரிச்சி என்பர். பகைவர் நாட்ழற்குள் புகுந்து பசுக்களைக்கவருவதற்கு முன்பு வெட்சி மறவர் விரிச்சி கேட்டதைத் தொல்காப்பியர் ‘பாக்கத்து விரிச்சி’ என்றுகுறிப்பிடுகின்றார்.

    முதுசெம்பெண்டிர் நாழியில் நெல்லை எடுத்துச் சென்று, சுளகில் இட்டு, நீரும் பூவும் சொரிந்து விரிச்சிகேட்பர். இதனை முல்லைப்பாட்டு,
    ‘‘பெரும்பெயல் பொழிந்த சிறுபுன்மாலை
    அருங்கடி மூதூர் மருங்கிற் போகி
    யாழிசை இனவண் டார்ப்ப நெல்லொடு
    நாழி கொண்ட நறுவீ முல்லை
    அரும்பவிழ் அலரி தூஉய்க் கைதொழுது
    பெருமுது பெண்டிர் விரிச்சி நிற்ப” (முல்லைப்பாட்டு, 6-11)
    என்று குறிப்பிடுகின்றது.

    விரிச்சி கூறும் கட்டுவிச்சியான பெருமுது பெண்கள் குரல் தடுமாறாமல் கூறல் வேண்டும். அவ்வாறுதடுமாறினால் தீயது நிகழும் என்று மக்கள் நம்பினர். புண்பட்ட நிலையில் கிடக்கும் தலைவனின் இறப்பைஇதுகுறிப்பதாக மனைவி அஞ்சுகிறாள். அவளின் நம்பிக்கையை,

    “நெல்நீர் எறிந்து விரிச்சி யோர்க்கும்
    செம்முது பெண்டின் சொல்லும் நிரம்பா’’ (புறம்., 280:6-7)
    என்று புறநானூறு எடுத்தியம்புகின்றது.

    விளக்கு அணைதல்:
    நல்ல செயல்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கும்போது விளக்கு அணைதல் கூடாது. அவ்வாறுஅணைந்தால் அது தீயதை விளைவிக்கும் என்று மக்கள் நம்பினர;. இந்த நம்பிக்கை எல்லோரிடத்திலும் இருப்பதுகுறிப்பிடத்தக்கது. புறநானூற்றில்,

    ‘‘நெடுநகர் வரைப்பின் விளக்கும் நில்லா” (புறம்., 280)
    என விளக்கும் அணைதல் பற்றிய நம்பிக்கை இடம்பெற்றுள்ளது. நீண்ட நகரின் மாளிகையில் ஏற்றி வைத்தவிளக்குகளும் அணைந்து விடும். அதனால் போரில் புண்பட்டுக் கிடக்கும் தலைவன் இறந்துபடுவான். தலைவன்இறந்து நான் உயிர்வாழ்வது அரிதினும் அரிதாகும் என்று மனைவி கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.இன்றும் ஏற்றிய விளக்கு அணைவது தீயதை உணர்த்தும் சகுனமாக மக்களால் நம்பப்படுகின்றது.

    கனவு:
    எல்லா மக்களிடமும் கனவு குறித்த நம்பிக்கை இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொருகனவிற்கும் ஒவ்வொருவிதமான பலன் உண்டு. பகற்கனவு பலிக்காது என்பர். அதிகாலையில் காணும் கனவுபலிக்கும் என்பர். இலக்கியங்களில் கனவு குறித்த செய்திகள் பல இடம்பெற்றுள்ளன. இக்கனவுகள் வாழ்வில்நிகழப் போகும் நிகழ்வுகளை முன்னரே எடுத்துரைக்கும் தன்மை வாய்ந்தவை.

    சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனின் பகைவர்கள், இரு நான்கு திசைகளிலும் உற்கம்உற்கவும், வற்றல் மரம் தீப்பற்றி எரியவும், ஞாயிறு பலவாகத் தோன்றவும், அஞ்சத்தக்க பறவைகள்ஆரவாரிக்கவும், பல் கழன்று விழவும், தலையில் எண்ணெய் ஊற்றவும், கோட்டு மாவூரவும், படைக்கருவிகள்கட்டிலொடு சாயவும் கனவு கண்டு தங்களுக்கு ஏற்படப் போகும் அழிவைக் குறித்து,

    “எயிறு நிலத்து வீழவும், எண்ணெய் ஆடவும்,
    களிறு மேல் கொள்ளவும், காழகம் நீப்பவும்,
    வெள்ளெரி நோன் படை கட்டிலொடு கவிழவும்,
    கனவின் அரியன காணா, நனவில்
    செருச் செய் முன்ப! நின் வரு திறன் நோக்கி,
    மையல் கொண்ட ஏமம் இல் இருக்கையர்”
    என்று அஞ்சியதாக புறநானூறு(41) குறிப்பிடுகிறது.

    வெள்ளியும் எரிகோளும்:
    வெள்ளிமீன் வட திசையில் இருந்தால் நாட்டில் வளம் பெருகும். தென்திசைக்குச் சென்றால்மழைபெய்யாது; பஞ்சம் ஏற்படும். இன்றும் இந்நம்பிக்கை மக்களிடையே இருந்து வருவது நோக்கத்தக்கது.மக்களிடையே காணப்படும் இத்தகைய நாட்டுப்புற நம்பிக்கையானது புறநானூற்றிலும் காணப்படுகின்றது.பாரியின் நாட்டில் சனிமீன் புகையினும், எல்லாத் திசையிலும் புகை தோன்றினாலும் வெள்ளி தெற்கேசென்றாலும் மழை வளம் தவறாது என்ற பாரியின் நாட்டின் வளம் குறித்துக் குறிப்பிடும்போது,

    “மைம்மீன் புகையினும். தூமம் தோன்றினும்
    தென்திசை மருங்கின் வெள்ளி ஓடினும்
    வயலகம் நிறைய, புதல் பூ மலர,
    மனைத்தலை மகவை ஈன்ற அமர்க்கண்’’ (புறம்., 117)
    என்று கபிலர் இயம்புகின்றார்.

    வெள்ளிக் கோள் தென்திசையில் எழுவது தீய சகுனமாகக் கருதப்பட்டது. மேலும் வானில் எரிமீன்,குளமீன், தாள் மீன் ஆகிய விண்மீன்கள் புகைந்து தோன்றினும் தீய சகுனமாகும் (நிமித்தங்களாகும்). இவைநாட்டில் வறுமையும் பஞ்சமும் ஏற்படப் போவதை முன்கூட்டியே தெரிவிக்கும் தீய சகுனங்களாக மக்கள்கருதினர். மக்களின் இத்தகைய சகுனம் குறித்த நம்பிக்கையை,

    ‘‘வெள்ளி தென் புலத்து உறைய, விளை வயல்,
    பள்ளம், வாடிய பயன் இல் காலை” (புறம்., 388)
    “அகன் ஞாலம் பெரிது வெம்பினும்,
    மிக வானுள் எரி தோன்றினும்,
    குள மீனொடும் தாள் புகையினும்’’ (புறம்., 395)
    என்ற பாடல்கள் எடுத்துரைக்கின்றன.

    அதேபோன்று தூமகேது வானத்தில் தோன்றினால் நாட்டை ஆளுகின்ற அரசர்களுக்கு ஆகாது என்றுமக்கள் நம்பினர். அவ்வாறு ஒரு தூமகேது தோன்றிய ஏழாவது நாளில் சேரமான் யானைக்கட்சேய் மந்தரஞ்சேரல்இரும்பொறை மாய்ந்தான். இதனை,

    “ஆடுஇயல் அழல் குட்டத்து
    ஆர்இருள் அரை இரவில்
    முடப் பனையத்து வேர்முதலாக்
    குடைக் குளத்துக் கயம்காய,
    பங்குனி உயர் அழுவத்து,
    தலை நாள்மீன் நிலைதிரிய,
    நிலை நாள்மீன் துறை படிய,
    பாசிச் செல்லாது, ஊசித் துன்னாது,
    அளக்கர்த் திணை விளக்காகக்
    கனை எரிபரப்ப, கால் எதிர்பு பொங்கி
    ஒரு மீன் வீழ்ந்தன்றால், விசும்பினானே:
    அது கண்டு யாமும், பிறரும் பல்வேறு இரவலர்,
    பறைஇசை அருவி நல்நாட்டுப் பொருநன்
    நோய் இலன் ஆயின் நன்றுமன்தில் என
    அழிந்தி நெஞ்சம் மடிஉளம் பரப்ப,
    அஞ்சினம்: எழுநாள் வந்தன்று, இன்றே” (புறம்., 229)
    என்று கூடலூர்க்கிழார் குறிப்பிடுகிறார்.

    மேடராசி பொருந்திய கார்த்திகை நாளின் முதற்காலின்கண் நிறைந்த இருள் கொண்ட பாதி இரவு;அப்போது முடப்பனை போன்ற வடிவை உடைய அனுஷ நாளின் முதல் நட்சத்திரம் முதலாகக் குளம்போன்றவடிவை உடைய புனர்பூச நட்சத்திரத்தின் கடைப்பகுதியாக விளங்கும்; அத்தகைய பங்குனி மாதத்தில்முதற்பதினைந்தில் உச்சமாக விளங்கும் உத்தரம் சாய்ந்தது; அதற்கு எட்டாம் நாட்சத்திரமாகிய மூலம் அதற்குஎதிரே எழும்; அந்த உத்தரத்திற்கு முன் செல்லப்பட்ட மீன்களில் எட்டாவதாக உள்ள மிருகசீரிடம், துறையிலேதாழ்ந்து படியக் கீழ்த்திசையிற் போகாமலும் வடதிசையிற் போகாமல், தீத்திசையாகிய வடகிழக்கே வீழ்ந்ததுஒரு மீன். கடல் சூழ்ந்த உலகின் விளக்காக முழங்குகின்ற தீப்பரக்கக் காற்றால் விசிறப்பட்டு வீழ்ந்தது. அம்மீன்விழுவதைப் பார்த்து யாமும் இரவலர் பிறராகிய பல்வேறு வகையினரும், வேந்தன் நோயில்லாமல் இருக்கவேண்டும் என்று அஞ்சினோம். நாங்கள் அஞ்சியவாறே ஏழாம் நாள் வந்தது. இன்று மன்னன் இறந்தான் என்றுஇப்பாடலில் நாட்டுப்புற மக்களின் நம்பிகை இடம்பெற்றுள்ளது.

    பேய் பற்றிய நம்பிக்கை:
    கண்ணுக்குப் புலப்படாத பேய்கள் இரவில் உலவுவதாகவும் இவை பெரும்பாலும் சுடுகாட்டிலேயேஉலவியதாகவும் மக்கள் நம்பினர். இப்பேய்கள் பிணங்களை விரும்பி உண்ணும்; இறந்த வீரர்களின் குருதியைத்தலையில் தடவித் தலையை வாரும் என்ற பேய்கள் குறித்த நம்பிக்கை மக்களிடம் நிலவியதை,

    ‘‘வாய்வன் காக்கையும் கூகையும் கூடிப்
    பேஎய் ஆயமொடு பெட்டாங்கு வழங்கும் காடு”(புறம்., 238)

    என்று புறநானூறு குறிப்பிடுகிறது. போர்க்களங்களில் கழுகுகளும், நரிகளும் பேயொடு சேர்ந்து பிணங்களைஉண்டதாக மக்கள் நம்பினர்(புறம்., 373). பேய்கள் பிணந் தின்றதையும், இறந்து கிடந்த வீரரின் குருதியைத்தலையில் தடவித் தலைவாரியதையும் புறநானூறு(369, 62) குறிப்பிடுகிறது.

    பேய்கள் போர்க்களத்தில் மண்டையோடுகளில் சமைத்து அதனைக் கொற்றவைக்குப் படைக்கும் என்றுமக்கள் நம்பினர். மக்களின் இந்நம்பிக்கையானது,
    “பொருந்தாத் தெவ்வ ரருந்தலை யடுப்பிற்
    கூவிள விறகி னாக்குவரி நுடங்க
    ஆனா மண்டை வன்னியந் துடுப்பின்
    ஈனா வேண்மா ளிடந்துழந் தட்ட
    மாமறி பிண்டம் வாலுவ னேந்த
    வதுவை விழவிற் புதுவோர்க் கெல்லாம்
    வெவ்வாய்ப் பெய்த புதுநீர் சால்கெனப்
    புலவுக்களம் பொலிய வேட்டோய்” (372)
    என்று புறநானூற்றில் குறிப்பிடப்படுகிறது. மனம்பொருந்தாத பகைவர் உடலினின்றும் நீங்கிய அரியதலைகளாற் செய்ப்பட்ட அடுப்பிலே கூவியங்கட்டையாகிய விறகிட்டெரித்து ஆக்கப்படும் கூழிடையே,வரிக்குடர்கள் பிறழ்ந்து பொங்க நீங்கிய மண்டையோட்டை அகப்பையாகவும் வன்னிமரத்தின் கொம்பை யதிற்செருகப்பட்ட காம்பாகவும் கொண்ட துடுப்பினால் ஈனாத பேண்மகள் தோண்டித் துழாவிச் சமைத்த மாக்களும்உண்ண மறுக்கும் ஊன்சோறாகிய பிண்டத்தை பேய்மடையன் எடுத்துக் கொற்றவைக்குப் படைப்பானாய்ஏந்திக்காட்ட களவேள்விசெய்தவனே என்று பாண்டியன் நெடுஞ்செழியனைப் பற்றி மாங்குடிக் கிழார் என்றபுலவர் பாடும்போது இந்நம்பிக்கையைக் குறிப்பிடுகிறார்.

    பேய்கள் மக்களுக்குத் தீங்கு விளைவிக்கும் தன்மை கொண்டவையாகும். இப்பேய்களிடம் இருந்துதப்பிப்பதற்குப் பல்வேறுவிதமான செயல்களைச் செய்தனர். வீட்டில் இரவம், வேம்பு இவற்றின் குழைகளைச்செருகி வைத்தனர். யாழையும் பிற கருவிகளையும் முழக்கினர். வெண் சிறுகடுகைப் புகைத்தனர். ஆம்பற்குழலை ஊதினர். காஞ்சிப் பண்ணைப் பாடினர். தூபம் எடுத்தனர். இவ்வாறு செய்தால் தீங்கு செய்ய வரும் பேயைஓட்டிவிடலாம் என்று மக்கள் நம்பினர். இதனை,

    “தீம் கனி இரவமொடு வேம்பு மனைச் செரீஇ,
    வாங்கு மருப்பு யாழொடு பல் இயம் கறங்க,
    கை பயப் பெயர்த்து மை இழுது இழுகி,
    ஐயவி சிதறி, ஆம்பல் ஊதி,
    இசை மணி எறிந்து, காஞ்சி பாடி,
    நெடு நகர் வரைப்பில் கடி நறை புகைஇ,
    காக்கம் வம்மோ காதலம் தோழி!
    வேந்துறு விழுமம் தாங்கிய
    பூம் பொறிக் கழல் கால் நெடுந்தகை புண்ணே”(புறம்.,281)
    என்று அரிசில் கிழார் (புறம்., 98;15, 281) குறிப்பிடுகின்றார்.

    இந்நம்பிக்கை பற்றிய செய்தியை,
    “வேம்பு சினை ஒடிப்பவும், காஞ்சி பாடவும்,
    நெய்யுடைக் கையர் ஐயவி புகைப்பவும்,
    எல்லா மனையும் கல்லென்றவ்வே;’’ (புறம்., 296)
    என்று வெள்ளைமாளர் பாடுவதும் நோக்கத்தக்கது. இன்றும் பேய் பற்றிய பல்வேறு கதைகளும் நம்பிக்கைகளும்மக்களிடம் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது. இன்றும் வேம்பின் குழைகளை எடுத்து அடித்துப் பேய்ஓட்டும்பூசாரிகள் கிராமங்களில் இருக்கின்றனர்.

    சமய நம்பிக்கைகள்:
    சங்க கால மக்கள் இம்மை வாழ்வின் செம்மையிலும் இன்பத்திலும் விருப்பமுடையதாக இருந்தது.அவர்களின் சமயம் சார்ந்த வாழ்க்கை வாழ்வியல் நெறியாக இருந்தது. இம்மை, மறுமை, சொர்க்கம், நரகம், விதிஉள்ளிட்ட நம்பிக்கைகள் மக்களிடம் இருந்தது.

    கடவுள் பற்றிய நம்பிக்கை:
    பழந்தமிழ் மக்கள் மரங்களைத் தெய்வமாகக் கருதி வழிபட்டனர். வேங்கை, கடம்பு, அரசு, ஆல் ஆகியமரங்களில் தெய்வம் உறைவதாகக் கருதினர். அம்மரங்களைத் தாங்கள் வணங்கும் கடவுளாகக் கருதியமக்களின் கடவுள் பற்றிய நம்பிக்கையை,

    ‘‘கடவு ளாலத்துத் தடவுச்சினைப் பல்பழம்
    நெருந லுண்டன மென்னாது பின்னும்
    செலவா னாவே களிகொள் புள்ளினம்”(புறம்.,199)
    என்ற பெரும்பதுமனார் பாடல் எடுத்தியம்புகிறது. இன்றும் மக்கள் வேம்பினை அம்மன் தெய்வமாகவும், கடம்பு,வேங்கை ஆகிய மரங்களை முருகனாகவும், ஆலமரத்தை சிவனாகவும் கருதி வழிபட்டு வருவதுகுறிப்பிடத்தக்கது.

    சொர்க்கம் நரகம்:
    அவரவர் செய்த நல்வினை தீவினைகளுக்கேற்ப நன்மையும் தீமையும் ஏற்படும் என்று அன்றிலிருந்துஇன்று வரை மக்கள் நம்புகின்றனர். அன்பையும் அறத்தையும் புறக்கணித்தவர்கள் நீங்காத நிரயம்(நரகத்திற்குச்)செல்வர் என்று மக்கள் நம்பினர். இதனை,
    ‘‘அன்பும் அறனும் நீக்கி நீங்கா
    நிரயம் கொள்பவ ரோடொன்றாது காவல்
    குழவி கொள்பவரின் ஓம்புமதி”(புறம்., 5)
    என்று புறநானூறு எடுத்தியம்புகிறது. இறந்தோரில் சிறந்தவர்(நல்லவர்) மட்டுமே சொர்க்கத்திற்குச் செல்வர்.தீயவர் நரகிற்குச் செல்வர். நல்லோர் இறந்து விண்ணுலகு எய்தும்போது அவரை சொர்க்கத்தின் தலைவனாகவிளங்கும் இந்திரனே எதிர்நின்று வரவேற்பான் என்று மக்கள் நம்பினர். இத்தகைய நம்பிக்கையைபுறநானூற்றின் 241-ஆவது பாடல் குறிப்பிடுகிறது.

    ஒருவர் இறந்த பின்னர் அவருக்குத் துணையாக அவர் செய்த நல்வினைகளே உடன் செல்லும்.இந்நம்பிக்கை இன்றுவரை மக்களிடையே நிலவி வருகின்றது. இந்நம்பிக்கையினை,
    ‘‘வாழச் செய்த நல்வினை அல்லது
    ஆழுங் காலைப் புணை பிறிது இல்லை’’(புறம்.,367)
    என்ற ஔவையார் பாடல் புலப்படுத்துகிறது.

    போர்க்களத்தில் பகைவருடன் போர் புரிந்து மரணிப்பவர்கள் சொர்க்கத்தில் தெய்வ மகளிரை மணந்துமகிழ்வர் என்ற நம்பிக்கையும் நிலவியது. இந்நம்பிக்கையை,
    ‘‘மாசு இல் மகளிர் மன்றல் நன்றும்,
    உயர் நிலை உலகத்து, நுகர்ப” (புறம்.,287)
    என்ற புறநானூற்றுப் பாடல் எடுத்துரைக்கின்றது. படைத்தலைவன் தனது படைவீரர்கள் கிளர்ந்தெழுந்துபோர்புரியும் வகையில் அவர்களுக்கு இத்தகைய நம்பிக்கையூட்டும் சொற்களைக் கூறுவதாக இதனைக்கருதலாம்.

    வீர வாழ்க்கை வாழ்ந்து தாம் செய்ய வேண்டிய கடமைகளைச் செவ்வனே முடித்தவர்கள் விசும்பில்வலவன் இயக்காத வான ஊர்தியிலேறி விண்ணுலகு(சொர்க்கத்திற்கு) செல்வர் என்ற நம்பிக்கையை,
    ‘‘புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின்
    வலவன் ஏவா வான வூர்தி
    எய்துப என்பதம் செய்வினை முடித்தே” (புறம்., 27)
    என்று புலவர் ஒருவர் தெளிவுறுத்துகிறார். தாம் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்து செவ்வனேமுடித்தவர்கள் சொர்க்கத்திற்குச் செல்வர். இத்தகைய நம்பிக்கையை,
    ‘‘உயர்ந்த வேட்டத்து உயர;ந்திசி னோர்க்குச்
    செய்வினை மருங்கின் எய்தல் உண்டெனின்
    தொய்யா வுலகத்து நுகர்ச்சியும் கூடும்
    தொய்யா வுலகத்து நுகர்ச்சி இல்லெனில்
    மாறிப் பிறப்பின் இன்மையும் கூடும்” (புறம்., 214)
    என்ற கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்தபோது பாடிய பாடல் எடுத்துரைக்கின்றது. சொர்க்கம் குறித்த மக்களின்நம்பிக்கையை, (134, 141, 174) ஆகிய புறப்பாடல்களும் எடுத்துரைக்கின்றன.

    ஊழ்வினை நம்பிக்கை:
    ஊழ்வினை குறித்த நம்பிக்கை மக்களின் வாழ்க்கையோடு இரண்டறக் கலந்துள்ளது. தமதுவாழ்க்கையில் முன்னேற்றம் காண்பதற்கும், முன்னேற்றத் தடை ஏற்படுவற்கும் முதன்மையான காரணமாகஊழ்வினையே விளங்குகின்றது என்று மக்கள் நம்புகின்றனர். ஊழ்வினையை வெல்ல முடியாது என்ற எண்ணம்மக்களின் மனதில் வேரூன்றிப் போய்விட்டது. இவ்வூழ்வினையை, பால், வரை, தெய்வம் எனப் பலவாறுகுறிப்பிடுவர். காதலர் ஊழின் ஆற்றலால் மீண்டும் சந்தித்து உறவு கொள்வர். இவ்வகையில் கணியன்பூங்குன்றனாரின்,

    ‘‘வானம் தண்டுளி தலைஇ யானாது
    கல்பொருது இறங்கும் மல்லல் பேர்யாற்று
    நீர்வழிப் படூஉம் புணைபோல ஆருயிர்
    முறைவழிப் படூஉம்” (புறம்., 192)
    என்ற பாடல் குறிப்பிடத்தக்கதாக விளங்குகின்றது.

    மலையிற் பெய்த நீர் வெள்ளமாக ஓடும்போது அதிலகப்பட்ட மரத்தெப்பம் போன்றே உயிர்கள் விதியின்வழிச் செல்லும் என்று குறிப்பிடும் அவர் அதனால் பெரியோரை வியத்தலும், சிறியோரை இகழ்தலும் தமக்குஇயல்பில்லை என்று தெளிவுறுத்துகிறார். இப்பாடல் பழந்தமிழ் மக்களின் ஊழ்வினை நம்பிக்கைக்குச் சான்றுபகர்வதாக அமைந்துள்ளது. இன்றுவரை அனைத்துத் தரப்பு மக்களிடமும் இவ்வூழைப் பற்றிய நம்பிக்கை மிகுந்துகாணப்படுவது குறிப்பிடத்தக்கது. ஊழ் குறித்த செய்திகள், புறநானூற்றில்(75, 176, 236, 192) நான்கு பாடல்களில்இடம்பெற்றுள்ளன.
    வீடுபேறு (முக்தி)

    இலக்கியங்களின் பயன் அறம், பொருள், இன்பம், வீடுபேறு என்ற நான்கும் ஆகும். அதிலும் வீடுபேறுஎன்பது மக்கள் அனைவரும் முயல்கின்றனர். அன்றிலிருந்து இன்றுவரை வீடுபேறு அடைவதே மக்களின்குறிக்கோளாக இருந்துவருவது குறிப்பிடத்தக்கது. இவ்வுலகம் நிலையில்லாதது; அதனால் இதன் தன்மையைஅறிந்து இதனினும் சிறந்த இன்ப உலகமான வீட்டின்பம் பெறும் (வீடுபேறு) சிறந்த செயல்களைச் செய்தல்வேண்டும் என்பதைப் பக்குடுக்கை நன்கணியார்,

    ‘‘ஓர் இல் நெய்தல் கறங்க, ஓர் இல்
    ஈர்ந் தண் முழவின் பாணி ததும்ப,
    புணர்ந்தோர் பூ அணி அணிய, பிரிந்தோர்
    பைதல் உண்கண் பனி வார்பு உறைப்ப,
    படைத்தோன் மன்ற, அப் பண்பிலாளன்!
    இன்னாது அம்ம, இவ் உலகம்;
    இனிய காண்க, இதன் இயல்பு உணர்ந்தோரே” (புறம்.,194)

    என்று பாடுகின்றார். நல்லது செய்தால்தான் இறையருளாகிய வீடுபேறு ஒருவருக்குக் கிட்டும்.இல்லையென்றால் அவரை எமன் வந்து வருத்துவான். நல்லது செய்ய முடியவில்லை என்றால்தீயனவற்றையாவது செய்யாதீர்கள் என்ற மக்களின் வீடுபேறு குறித்த நம்பிக்கையை,

    ‘‘கணிச்சிக் கூர்ம் படைக் கடுந் திறல் ஒருவன்
    பிணிக்கும் காலை, இரங்குவிர் மாதோ;
    நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்,
    அல்லது செய்தல் ஓம்புமின்; அதுதான்
    ல்லாரும் உவப்பது; அன்றியும்,
    நல் ஆற்றுப் படூஉம் நெறியும்மார் அதுவே’’ (புறம்.,195)
    என்று நரிவெரூஉத்தலையார் எடுத்தியம்புகின்றார்.

    இன்றும் மக்கள் நல்லது செய்தால் நல்லது நடக்கும் என்றும் தீயது செய்தால் தீயது நடக்கும் என்றும்நம்புகின்றார்கள். இத்தகைய நம்பிக்கையை, ‘‘வினை விதைத்தவன் வினையறுப்பான்; தினை விதைத்தவன்தினையறுப்பான்” என்ற பழமொழி எடுத்துரைப்பதும் நோக்கத்தக்கது.

    மறுபிறப்பு பற்றிய நம்பிக்கை:
    இப்பிறவியில் நிறைவேறாத ஆசைகளோ, செயல்களோ இருப்பின் அவர்கள் மறுபிறப்பெடுத்து அதனைநிறைவேற்றுவர். மார்கழி மாதத்தில் இறந்தோருக்கு மறுபிறப்பில்லை என்றும் மக்கள் நம்புகின்றனர். அவரவர்செய்த நன்மை தீமைகளுக்கேற்ப மறுபிறப்பு என்பது இறைவனால் தீர்மானிக்கப்படுகிறது. ஒருவர் செய்தகொடுமைக்குப் பழிக்குப் பழி வாங்குவதற்காக மறுபிறப்பெடுத்து வந்து பழி வாங்குவர் என்ற நம்பிக்கையும்மக்களிடையே இன்றும் நிலவி வருகின்றது. பாரி தன்னைவிட்டுப் பிரிந்தபோது தன்னுயிர் நீங்காததால் கபிலர்வருந்தினார். இப்பிறவியல் பாரியுடன் கூடிய நட்பு தொடராது தமடைபட்டதே என்று துன்புற்ற கபிலர்மறுபிறவியிலாவது பாரியுடன் தனது நட்பானது தொடர வேண்டும். அதனை விதியே செய்யும் என்று கருதிமறுபிறவிக்காகத் தானும் பாரியைத் தொடர்வதாகக் கபிலர்,

    “இனையை யாதலி னினக்கு மற்றியான்
    மேயினே னன்மை யானே யாயினும்
    இம்மை போலக் காட்டி யும்மை
    இடையில் காட்சி நின்னோ
    டுடனுறை வாக்குக வுயர்ந்த பாலே” (புறம்., 236)
    என்று பாடுகின்றார். இப்பாடல், ‘‘இம்மை மாறி மறுமையாயினும் நீயாகியர் எம் கணவனை, யானாகியர் நின்நெஞ்சு நேர்பவளே” என்ற அகப்பாடலை நினைவுறுத்துவதாக அமைந்துள்ளது. இப்பாடலில் விதி, மறுபிறப்புஆகியவை குறித்த நம்பிக்கைகள் இடம்பெற்றிருப்பது நோக்கத்தக்கது.

    இறந்தவர் பற்றிய நம்பிக்கை:
    இறந்தவர்களை நினைத்து வழிபடும் பழக்கம் தொன்றுதொட்டு இருந்து வருகின்றது.இறந்தவர்களுக்காகப் படைக்கப்படும் உணவினை அவர்கள் வந்து உண்பார்கள் என்று மக்கள் நம்புகின்றனர்.இவ்வாறு உணவு படைப்பதைப் பிண்டம் படைத்தல் என்பர். இது மூடநம்பிக்கையாக இன்று கருதப்பட்டாலும்இறந்தவர்களுக்குப் பிண்டம் படைக்கும் பழக்கம் இருந்துவருவது நோக்கத்தக்கது. பாண்டியன் பல்யாகசாலைமுதுகுடுமிப் பெருவழுதியின் போர் அறத்தைப் பாடும் நெட்டிமையார்,

    “தென்புல வாழ்நர்க் கருங்கட னிறுக்கும்
    பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும்”(9)
    என்று குறிப்பிடுகின்றார். தென்றிசைக்கண் வாழ்வோராகிய நுங்குடியில் இறந்தோர்க்குச் செய்தற்கரிய பிண்டோதகக் கிரியையைப் பண்ணும்; பொன்போல் புதல்வர்ப் பெறாதீரும் பாதுகாப்பான இடங்களுக்குச்செல்லுங்கள் என்று கூறிப் போர்புரிந்ததாக புலவர் கூறுவது நோக்கத்தக்கது. இதற்கு விளக்கம் எழுதும் ஔவைதுரைசாமிப்பிள்ளை அவர்கள், ‘‘பிண்டம் – சோறு; உதகம் – நீர். ஒரு குடியில் இறந்தோர், தென்றிசைக்கண் இருந்து, தம் குடியிற் பிறக்கும் புதல்வர் தம்மை நோக்கிப் படைக்கும் சோறும் நீரும் உண்டு வாழ்வர்”(ப.,27)என்று கூறுகின்றார். இறந்தோர் தங்களுக்குப் படைக்கும் சோற்றையும், நீரையும் வந்து உண்பர் என்று மக்கள்நம்பினர்.

    இறந்தவர்களுக்கு உணவு படைத்து வழிபட்டால் நல்லது நடக்கும் என்று மக்கள் நம்புகின்றனர்.இறந்தவர்கள் தெய்வமாக நின்று தங்களையும் குடும்பத்தினரையும் காப்பர் என்றும் மக்கள் நம்புவதால்தான்இப்பிண்டம் படைத்தல் என்ற பழக்கம் தொடர்கின்றது எனலாம். பிண்டமாகப் படைக்கப்பட்ட உணவை எவ்வாறுதன் கணவன் உண்டான் என்று மனைவியானவள் கண்ணீர் விட்டு வருந்துவதாக,

    “நோகோ யானே தேய்கமா காலை
    பிடியடி யன்ன சிறுவழி மெழுகித்
    தன்னமர் காதலி புன்மேல் வைத்த
    இன்சிறு பிண்டம் யாங்குண் டனன்கொல்
    உலகுபுகத் திறந்த வாயிற்
    பலரோ டுண்டன் மரீஇ யோனே” (புறம்., 236)
    வேள் எவ்வியை வெள்ளெருக்கிலையார் பாடும்போது குறிப்பிடுகிறார்.

    மேலும் பிண்டம் படைப்பதற்குரிய இடத்தை மனைவியானவள் பசுவின் சாணத்தை வைத்துமெழுகுகின்றாள். சாணத்தைத் தண்ணீர்விட்டுக் கரைத்து மெழுகாது சாணத்தில் கண்ணீரைவிட்டுக் கரைத்துமெழுகுவதாக தும்பிசேர் கீரனாரின்,
    ‘‘இன்றே,
    அடங்கிய கற்பின், ஆய் நுதல் மடந்தை,
    உயர் நிலை உலகம் அவன் புக,…. வரி
    நீறு ஆடு சுளகின் சீறிடம் நீக்கி,
    அழுதல் ஆனாக் கண்ணள்,
    மெழுகும், ஆப்பி கண் கலுழ் நீரானே’’ (புறம்.,249)
    என்ற பாடல் இயம்புகின்றது.

    மழை பற்றிய நம்பிக்கை:
    பருவ நிலைகள் மாறப் போவதை எறும்புகள், பூனைகள், விலங்குகள் உள்ளிட்ட உயிரனங்கள் உணர்ந்துகொண்டு அதற்கேற்ப செயல்படும். இவ்வுயிரினங்களின் செயல்பாடுகளைப் பார்த்து அடுத்து என்ன நிகழும்என்று பழந்தமிழ் மக்கள் அறிந்து கொண்டனர். எறும்புகள் தங்களது முட்டைகளைக் கொண்டு மேட்டு நிலப்பகுதிக்குச் சென்றால் மழையானது பெய்யும் என்று நம்பினர். இன்றும் கிராமப்புறங்களில் இந்நம்பிக்கைமக்களிடையே காணப்படுவது குறிப்பிடத்தக்கது. மக்களின் இத்தகைய நம்பிக்கையை,

    ‘‘பொய்யா வெழிலி பெய்விட நோக்கி
    முட்டை கொண்டு வற்புலஞ் சேரும்
    சிறுநுண் ணெறும்பின் சில்லொழுக் கேய்ப்பச்’’ (புறம்., 173)
    என்ற சோழன் குளமுற்றத்துத்துஞ்சிய கிள்ளிவளவனின் பாடல் புலப்படுத்துகின்றது. இந்நம்பிக்கையானது, ‘‘எறும்பு முட்டை கொண்டு திட்டையேறின் மழைபெய்யும்” என்று பழமொழியாக மக்களிடையே வழங்கப்பட்டுவருகின்றது. மக்களின் இந்நம்பிக்கையை இளம்பூரணர் தமது உரையில், ‘‘எறும்பு முட்டை கொண்டுதெற்றியேறின் மழை பெய்தது மழை பெய்யு மென்பது” (தொல். வினை. சூ. 45, இளம்.) என்று குறிப்பிடுவதும்நோக்கத்தக்கது.

    மழை பெய்யாமல் நாட்டில் வறட்சி ஏற்பட்டால் மக்கள் இறைவனை மழைவரம் வேண்டி வழிபடுவர்.இறைவனை வழிபட்டால் மழைபொழியும் என்று மக்கள் நம்பினர். அதேபோன்று மழை அதிகமாகப் பொழிந்துஅழிவானது ஏற்பட்டால் அதனைத் தடுப்பதற்காக மக்கள் இறைவனை வழிபடுவர். இறைவனை வழிபட்டால்அதிகமாக மழைபொழியாது என்றும் மக்கள் நம்பினர். இன்றும் இந்நம்பிக்கை மக்களிடையே நிலவி வருகின்றது.

    திருவிழாக் கலாங்களில் மழைவரும் என்று அறிந்தால் உடனே மழைபொழியக் கூடாது என்பதற்காகதேங்காயை உடைத்துச் சூடத்தைக் காட்டி அதனை விழாவிற்காகப் போடப்பட்ட பந்தலின் மீது எறிவர். அவ்வாறுஎறிந்தால் பெய்து கொண்டிருக்கும் மழையோ அல்லது பெய்யப் போகும் மழையோ உடனடியாக நின்றுவிடும்என்று மக்கள் நம்புகின்றனர். மக்களின் இந்நம்பிக்கையை,

    “மலைவான் கொள்கென வுயர்பலி தூஉய்
    மாரி யான்று மழைமேக் குயர்கெனக்
    கடவுட் பேணிய குறவர் மாக்கள்
    பெயல்கண் மாறிய வுவகையர் சாரற்
    புனத்தினை யயிலு நாட” (புறம்., 143)
    எனக் கபிலர் குறிப்பிடுகின்றார்.

    தெய்வத்தைப் போற்றும் குறமாக்கள், மழையற்ற காலத்து, மலையை மழை வந்து சூழ்க என்று பலியைத்தூவி வேண்ட மிகுதியான மழை பெய்தது; மழை மிகுதியாகப் பெய்ததால் அதனை நிறுத்துவதற்காக,மழை(முகில்) மேலே போவதாக என்று தெய்வத்தை வேண்டினர். அவர்களின் வேண்டுதலுக்கேற்ப, மழையும்இடம்மாறிப் பெய்தது. அதனால் குறமாக்கள் மகிழ்ந்தனர் என்று இப்பாடலில் மக்களின் நம்பிக்கையை புலவர்தெளிவுறுத்துகிறார். இந்நம்பிக்கை குறித்த செய்தியானது,

    “குன்றக் குறவ னார்ப்பி னெழிலி,
    நுண்ப லழிதுளி பொழியு நாட” (ஐங்குறு. 251)
    என ஐங்குநுறூற்றிலும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    புறநானூற்றில் குறிப்பிடப்படும் நம்பிக்கைகள் இன்று வரை மக்களிடையே இருந்து வருகின்றது.இவ்வாறு பல்வேறுவிதமான நம்பிக்கைகளை எடுத்துக் கூறி பண்பாட்டுக் களஞ்சியமாக புறநானூறுவிளங்குகின்றது. புறநானூறு குறிப்பிடும் நாட்டுப்புற நம்பிக்கைகள் வாழ்வியல் சார்ந்தவையாகவும், மக்களின்பழக்க வழக்கங்களை அடிப்படையாகக் கொண்டவையாகவும் அமைந்திலங்குகின்றன.

     

     

     

    முனைவர் சி. சேதுராமன்,
    தமிழாய்வுத் துறைத்தலைவர்,
    மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை – 622 001.
    Malar.sethu@gmail.com

     

     

     

     

     
    படம் உதவி: http://garuda-sangatamil.com/pages/third/images/purananooru.jpg

    Share
  • மனதில் நிறைந்த மக்கள்திலகம்

    — சுமதி ரவிச்சந்திரன். 

     

    “மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் அது
    முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்.”

    தமிழ், ஈழம், கடமை, அன்பு, பாசம், புகழ், நன்றி, காதல், நட்பு, உதவி, கல்வி, பரிசு, தானம், கருணை, மனம் என்ற அனைத்து வகையிலும் ‘கரம்’ என்ற மூன்றெழுத்தில் மக்களின் மனதில் நிலைத்து நிற்கும் புரட்சித் தலைவர் என்று அனைவராலும் பாராட்டப்பட்ட மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன் என்ற எம்.ஜி. ஆர். என்ற ‘பொன்மனச்செம்மல்’ அவர்களின் மக்களின் மனத்தில் நிறைந்த தன்மையை இக்கட்டுரையின் வழி இயம்புவதில் பெருமையடைகிறேன்.

    mgrமூன்றெழுத்து வலிமைமிகு, பெருமைமிகு, தருமம் மிகுந்த தன்னுடையச் சிவந்த கரங்களால் தனிப்பெரும் பெருமை பெற்ற கலைமாமணி, பாரதரத்னா அவர்களின் நினைவுகளும் கட்டுரை வடிவில் தருவதில் பெருமை செய்யும் ‘வல்லமை’ இதழுக்கும் வணக்கங்கள்.

    “மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்” என்று திரைப்படப் பாடலின் வரிகளிள் தவழ்ந்துவருவது இனிமையாகும் என்று நினைத்து வியந்து நின்றதும் உண்டு. “மூச்சு” என்ற மூன்றெழுத்து வழி ஈழம் – பொன், பெருமை மனிதர், தங்கமனிதர் என்ற பெருமையும் எம்.ஜி. ஆர். என்ற பெயரின் முதல் எழுத்து சுருக்கத்தில் வியந்து நிற்கும் அளவுக்கு நடிப்பிலும், கொடையிலும் , அன்பு, பண்பு, பாசம், உபச்சாரம் என்ற அனைத்து அளவிலும் தனிப்பட்ட மனிதராக வாழ்ந்து மறைந்த, மாபெரும் சபைகளின் வழி நடந்து ‘ புகழ் மாலைகள் ‘ ஏற்றுக்கொண்டு நம்மிடையே வாழ்ந்தவர்.

    ஈழம் என்பது சிங்கதேசம் என்பது மட்டுமல்ல. ஈழம் – பொன் , பொன் தீவில் பிறந்த மனிதர் ‘பொன்மனச்செம்மல் ‘என்பதில் சாலவும் பொருத்தமானவர். தவப்புதலவன் பிறந்த நாளின் எண்ணான ‘ ஏழு ‘ என்பதும் ஏற்றமிகு வாழ்க்கையின் அஸ்திவாரமாக அமைந்தது .

    1917 பிறந்த நாள் , சுறவம்(சனவரி) 17, 1917 இல் பிறந்த தவப்புதல்வர் ஈழம், கண்டி, நாவலப்பிட்டியில் பிறந்து ஈழத்திற்கும் பெருமை படைத்தவர். மலையாளத்தில் வாழ்ந்தாலும் தமிழின் வழியான மலையமும் சேர்ந்தே சிறப்பாகியது.
    1927 தொடங்கிய பயணத்தில் தன்னுடைய 20 வயதில் (1937) திரையுலகில் பிரவேசித்து, நாடகங்களில் நடித்து,
    1947 முதல் கதாநாயகனாக பரிமளிக்கும் திறமை பெற்றவர். நடிப்புத் திறமையில் திறமையையும், பாடல்கள் வழியே பாமரனும் பாடும் எளிமையான நடிப்பின் ஊடாக அனைவர் மனத்திலும் பிரவேசித்தவர்.
    1967 திராவிடக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர் என்ற நிலையில் உயர்ந்தார்.
    1977 தி.மு.க. அண்ணாவின் மறைவிற்குப் பிறகு கருணாநிதியின் பிரவேசத்தில் கருத்து வேறுபாடு காரணமாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமாகப் பிரிந்து ஆண்டிப்பட்டியில் வெற்றிபெற்று ‘முதல் அமைச்சர் ‘ என்ற முதல்வர் பதவி வகித்தார்.
    1987 பத்து ஆண்டுகள் தொடர்ந்து முதல்வர் பதவி வகித்த ‘ பொன்மனச்செம்மல்’ தனது எழுபதாவது வயதில் இந்த அரசியல் உலகம், திரையுலகம், தமிழ்நாடு என்ற அனைத்திலும் பெருமை பெற்று மனத்தில் நிறைந்த மக்கள்திலகம்’ என்ற மாபெரும் புகழுடன் உடல்நலக் குறைவினால் மறைந்தார். ஏழ்பிறப்பு என்ற நிலையில் ‘ தேவர்’ என்ற நிலைக்குப் பிறகு மக்கள், விலங்கு, பறவை, ஊர்வன, நீர்வாழ்வன, தாவரம் இந்த நிலையில் மக்கள் என்ற இரண்டாவது நிலையின் வழி பிறக்கும் அனைவருக்கும் கிட்டாத பிறப்பாகப் பிறந்து, பிறந்த பயனையும், வாழ்கின்ற பயனையும் மக்களுக்கு கொண்டு செல்லும் பெரும்பேறு அனைவருக்கும் கிட்டுவதில்லை.. அப்படி கிடைத்த பாக்கியம் பெற்ற மனிதர்கள் ‘பெருமைமிகு சிலரின்’வரிசையில் ‘கலைச்சுடர் ‘என்று தமிழ் நாட்டிலும், நிருத்தியச் சக்கரவர்த்தி என்று ஈழம் ரசிகர்களாலும் பாராட்டப்பட்டு வாழும் பொழுதிலே ‘நிறைவான பெருமை’ அடைந்தவர்.

    திரைப்படச் சேவை :
    இதயக்கனி – அறிஞர் அண்ணா
    புரட்சி நடிகர் – கலைஞர். மு. கருணாநிதி
    நடிக மன்னன் – சென்னை ரசிகர்கள் (சி.சுப்ரமணியம்)
    மக்கள் நடிகர் – நாகர்கோவில் ரசிகர்கள்
    பல்கலை வேந்தர் – சிங்கப்பூர் ரசிகர்கள்
    மக்கள் கலைஞர் – காரைக்குடி ரசிகர்கள்
    கலை அரசர் – விழுப்புரம், முத்தமிழ்க் கலைமன்றம்
    கலைச்சுடர் – மதுரை தேகப்பயிற்சிக் கலைமன்றம்
    கலைமன்னர் – நீதிபதி ராஜமன்னர்
    கலைமன்னன் – சென்னை ரசிகர்கள்
    கலை வேந்தர் – மலேசிய ரசிகர்கள்
    திரை நாயகன் – சேலம் ரசிகர்கள்
    இவ்வாறு திரையுலகின் பிரவேசத்தில் நடிப்பின் திறமையின் மக்கள் கொடுத்த புகழ் பட்டங்கள் . திரையுலகின் பணிகளில் அவரின் நடிப்பு மட்டும் அன்றி, திரைபடத் துறையில் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கும் உதவி செய்து பெருந்தன்மையுடன் கருணையும், எளிமையும் கொண்ட மனிதராகத் திகழ்ந்தார்.

    பொதுமக்களின் சேவையில் அரசியலில் முழு மூச்சாகக் கொண்டு அரசியல் பிரவேசத்தில் ஆர்வமும் , அரவணைத்துச் செல்லும் தன்மையும் செம்மலின் குணங்களுள் ஒன்றாக இருந்தது. அவர் சாப்பிடும் முன்பு உடன் வந்த வாகன ஓட்டுனர் முதற்கொண்டு ‘உணவு’ விசயத்தில் கவனமாகப் பார்த்துக் கொள்வார். ஒருமுறை அவர் ஒரு நடிப்புத் தளத்திற்காக வெளியூர் சென்றபோது ‘பயணவிடுதியின் பணிச்சிறுவன்’ கேட்ட கேள்விக்கு அவசரமாகப் பதில் அளிக்கமுடியாமல் சென்றுவிட்டார். ஆனாலும் அவர் நடிப்புப்பணி முடிந்து திரும்பிவரும் நேரத்தில் அந்தச் சிறுவனைப் பற்றி விசாரித்து அவனுடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டாராம். எந்தவொரு மனிதரையும் ஒரே மாதிரியாகக் கவனித்து மதிப்பு கொடுக்கும் தன்மையில் அவர் ஒரு ‘தனிப்பிறவி . அதனால் தான் பொதுமக்களின் சேவையில் அவர் பெற்ற பட்டங்கள் வரிசையில் மக்கள் திலகம் இன்றும் நிலைத்து நிற்கிறது.

    பொதுமக்களின் சேவையின் வழி கிடைத்த பட்டங்கள் :
    கொடுத்துச் சிவந்த கரம் – குடந்தை ரசிகர்கள்
    கலியுகக் கடவுள் – கர்நாடகா, பெங்களூரு
    நிருத்தியச் சக்கரவர்த்தி – இலங்கை ரசிகர்கள்
    பொன்மனச் செம்மல் – கிருபானந்த வாரியார்
    மக்கள் திலகம் – தமிழ்வாணன்
    வாத்தியார் – திருநெல்வேலி ரசிகர்கள்
    புரட்சித் தலைவர் – கட்சித் தோழர்கள்
    இதய தெய்வம் – தமிழ்நாடு பொதுமக்கள்
    மக்கள் மதிவாணர் – இரா. நெடுஞ்செழியன்
    ஆளவந்தார் – ம.பொ. சிவஞானம்.
    அண்ணா அவர்களின் பவள விழாவின் சிறப்பு என்ற வகையில் ‘அண்ணாவின் வளைவினை ‘ நிறுவினார். அரசியல் வாழ்வில் இவர் செய்த நற்பணிகள் சிறப்பான இடம் பெற்றுள்ளன. பெண்களுக்கு, ஏழை, எளியவர் மற்றும் பணிபுரியும் பெண்கள் என்று அனைத்து வழிகளிலும் பெண்களைச் சிறப்பிக்க கொண்டுவந்த திட்டங்களின் காரணமாகஎம்.ஜி. ஆர். அவர்களின் புகழ் பன்மடங்காக இன்றும் நிலைத்து நிற்பதில் வியப்பில்லை.

    திட்டங்களின் செயல்பாடுகள் :
    * சத்துணவுத் திட்டம்.
    * விதவை ஆதரவற்ற பெண்களுக்குத் திருமண உதவி
    * தாலிக்கு தங்கம் வழங்குதல்
    * மகளிருக்குச் சேவை நிலையங்கள்
    * பணிபுரியும் பெண்களுக்குத் தங்கும் விடுதிகள்
    * தாய்சேய் நல இல்லங்கள்
    * இலவசச் சீருடை
    * இலவசக் காலணி
    * இலவசப் பற்பொடி
    * இலவசப்பாடநூல்
    * வறட்சிக் காலத்தில் லாரி மூலம் குடிநீர்

    மேலும் அவரின் முக்கியப் பணிகளில் தமிழ்ப்பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டதில் முன்னின்று முயற்சி செய்து தஞ்சையில் தமிழ்ப் பல்கலைக்கழகம் ஆகஸ்ட், 1, 1981-இல் 972.7 ஏக்கர் நிலத்தில் இடம் ஒதுக்கப்பட்டு , 1921ஆம் ஆண்டு உமாமகேசுவரனார் ஏற்பட்ட தீர்மானம் அவர் பிறந்த தஞ்சையில் அறுபது (60) வருடங்களுக்குப் பிறகு முதலமைச்சராக இருத்த எம்.ஜி. இராமச்சந்திரன் அவர்களால் நிறுவப்பட்டது. இதன் முக்கிய அம்சம்”தமிழ்மொழி, தமிழ் இலக்கணம், தமிழ் இலக்கியம், சித்த மருத்துவம்”… முதற்கொண்டு அனைத்துவகை பாடப் பிரிவுகளும், ஓவியம், கட்டிடக்கலை, சிற்பக்கலையும் ஓலைச்சுவடி, கல்வெட்டுக்கள் பாடப்பிரிவும் பயிற்றுவிக்கப் படுவதுடன் கைவினைப்பொருட்கள், கடலியல், தொல்லியல் …மட்டுமல்லாமல் மற்ற ‘மொழி ‘ கற்றலும் உள்ளது.

    பழ. நெடுமாறன் அவர்களின் கருத்துப்படி ஈழமக்களின் போராட்டத்தின் போது ஏழுகோடிக்கும் தொகை உதவி செய்தும் வந்தார் என்பது அறியமுடிகிறது. அவர் ஈழத்தில் பிறந்து தமிழ் மக்களிடையே வாழ்ந்தாலும் ஈழவிடுதலைக் காரணமாகவும், தமிழ் மக்களின் நன்மைக்காகவும் தனிஈழம் கிடைக்கும் முடிவில் அவர்களுக்குஉதவி செய்தார். விடுதலைப் போராட்ட விடுதலைப்புலி பிரபாகரன் அவர்களின் பண்பும், கடமையும் ஈர்க்கப்பட்டு அவர்களுக்கு உதவி செய்தார் என்று ‘ ஆன்டனி பாலசி்ங்கம் ‘ கூறுகிறார் தன்னுடைய கட்டுரையில்.

    அரசியலில் செம்மலின் எளிமை :
    * முன்னணித் தமிழ் தேசியவாதி
    * திராவிடக் கழகத்தின் ‘முன்னேற்றக் கழக உறுப்பினர் ‘
    * திராவிட இயக்கத்தில் பொருளாளர்
    * அண்ணாவுடன் கருத்து வேறுபாட்டில் வெளியேறுதல்
    * 1971-ல் ‘பாரத் ‘ திரைப்பட விருது
    * 1972 இல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் துவக்கம்.
    * அனைத்திந்திய அண்ணா திராவிடக் கழகம் உருவாக்கியப் பெருமை (17/10/1972)
    * 1977- முதல் அமைச்சர் பதவி ( திண்டுக்கல் )

    அரசியல் அல்லாத எளிமை வழியில்:
    * திரைப்படப் புகழ்
    * வசீகரத் தோற்றம்
    * சமூகத் தொண்டர்கள்
    * ஏழைகள் தோழன்
    * கொடையாளி
    * வீரன் – நடிப்பின் வீரமும் மிளிரும் மன்னர்

    அரசு விருதுகள் :
    * பாரத் விருது (இந்திய அரசு)
    * அண்ணா விருது (தமிழக அரசு)
    * பாரத ரத்னா விருது (இந்திய அரசு)
    * பத்மஸ்ரீ விருது (இந்திய அரசு, விருதை ஏற்க மறுப்பு )
    * சிறப்பு முனைவர் பட்டம் (அமெரிக்கா, அரிசேனா பல்கலைக்கழகம் )

    நினைவுகள் :
    தாமரை மலர் போன்ற வடிவம் கொண்ட நினைவிடம் சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டு உள்ளது. மூன்றெழுத்து நாயகனின் புகழ், மூன்று முறை முதலமைச்சர் பதவி வகித்தவர்… நினைவுகள் ‘ இதயக்கனி ‘ யாகி ‘ நாடோடி மன்னன் ‘ தயாரித்து படம் வெற்றி பெற்றால் ” நான் மன்னன் ” என்று கூறிய பெருமை உடையவர். மந்திரிகுமாரி தொடங்கி மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் போன்ற வெற்றிப் படங்கள் வழியில் வரலாற்று மனிதராகவும் வாழ்ந்து மறைந்த ‘ வரலாற்று நாயகன் ‘ என்று பகர்வதே சாலப் பொருந்தும். அவரின் உருவில் கோவில் கட்டி வழிபாடு செய்யும் பக்தி கொண்ட தமிழகமக்கள் போற்றும் ‘நாயகன் ‘ என்று பெயர் பெற்ற மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன்.

    1977 அரசியல் பிரவேசத்திற்குப் பிறகும் அவர் திரைப்படம் தயாரித்து , நடிப்பிலும் சிலகாலம் இருந்தார்.
    1977 முதல் 1987 வரை பத்து ஆண்டுகள் தமிழ் நாட்டின் முதலமைச்சர் பதவி வகித்தார்.
    1984-ல் அவரின் உடல்நலம் குறைவு காரணமாக அவரின் இறுதி நாட்கள் படுக்கையில் சிலகாலம் வாழவேண்டியக் கட்டாயத்தில் இருந்த அவர் தங்கமனிதர், கலியுகக் கடவுள், என்றெல்லாம் மக்களால் புகழப் பட்டுக் கொண்டிருக்கும் பாடல்களின் வரிகளிலும், அன்றும், இன்றும் என்றும் வாழ்ந்து கொண்டிருக்கும்
    ‘இதயத்தெய்வம் ‘ , ஒளிவிளக்கு நம்மிடையே மனிதருள் மாணிக்கமாக வாழ்கிறார் என்பதில் ஐயமில்லை. ஏழு என்ற எண்ணிற்கு பெருமை சேர்த்த மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன் என்ற MGR .

    “இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்லவேண்டும்
    இவர்போல் யாரென்று ஊர் சொல்ல வேண்டும்” —இப்படிப்பட்ட பெருமையில் வாழ்ந்த

    அரசியல், திரைஉலகம், பொதுநலச் சேவை, மக்களின் தொண்டே மகேசன் தொண்டு என்ற வகையில் தமிழக மக்கள் அனைவரின் மனத்திலும் நிறைந்த மாபெரும் வள்ளல், தங்கம், பொன்மனச்செம்மல் என்ற பெயருடன் தன்னுடைய வசீகரத் தோற்றத்துடனே திசம்பர் திங்கள் 24ஆம் நாள் 1987 ஆம் வருடம் தனது இறுதி யாத்திரையாகிய ‘ தூக்கம் போலும் சாக்காடு ‘ என்ற நிலையை அடைந்தார். மூன்றெழுத்து நாயகன் , நற்சொல், நற்செயல் என்று அனைத்து வகையில் வாழ்வு வாழ்ந்தவர் ‘பிறப்பு ‘என்ற நான்கெழுத்தும் ‘ இறப்பு’ என்ற நான்கு எழுத்தும் பிரிவு என்ற மூன்று எழுத்தின் வழியே மறைவு என்றபடி உண்மையாகியது.

     
    சுமதி ரவிச்சந்திரன், ராமாபுரம்

    Share
  • இணையமும் தமிழ்மொழியின் வளர்ச்சியும்

    — இரா.நாகராஜன்.

    முன்னுரை:
    இருபத்தொன்றாம் நூற்றாண்டினை தகவல் தொழில்நுட்ப யுகம் என்று அழைக்கின்றோம். அவ்வுலகத்தில் நாள்தோறும் புதிய கண்டுபிடிப்புகள் நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே இருக்கின்றன. மனிதனும் மொழியும் தன்னை அவற்றில் இணைத்துக்கொள்ள வேண்டும். அவ்வகையில் தமிழ் மொழியினை இந்நூற்றாண்டுக்கேற்ப வளர்ச்சியடைய செய்வது இன்றைய இளஞர்களின் கடமையாகும். ஓலைச்சுவட்டில் தழைத்த தமிழனாது கணினியோடு இணைந்த இணையத்தில் தளர்நடையிட்ட தமிழ்மொழி இன்று தரணியில் தமிழ் சமூகங்களை இணைத்துள்ளது. இதற்கு இணையப் பக்கங்கள், வலைப்பூக்கள், இணைய நூலகம், இணைய அகராதி, இணைய இதழ்கள் போன்றவை மிக முக்கிய பங்காற்றி வருகின்றது.

    இணையைம் வரையறை:
    இன்றைய நவீன உலகின் முக்கிய பங்காற்றிவருவது இணையமாகும். இணையத்தை பயன்படுத்ததெரியாதவன் குருடன் என்றே கூறலாம். “இணையம் என்பது வலையமைவுகளின் வலையமைவு ஆகும். சிறியனவாகவும் பெரியனவாகவும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன”1 (தகவல் தொழில்நுட்பம், ப.புனிதா, ப.53). உலகம் முழுவதிலுமுள்ள அனைத்துக் கணினிகளையும் ஒரே மின்னனு வலையில் சங்கிலிப் பிணைப்பாக இணையச் செய்வதுதான் இணையம் எனப்படும். “International Netwrok” என்பதின் சுருக்கமே இன்டர்நெட் ஆகும். இணையம் என்பது World Wide Web என்பர். இதனை W3 என்றும் அழைக்கலாம்.

    ஊடகம்:
    ஊடகங்கள் என்னும் சொல் பரவல், செய்தித்தொடர்பு சாதனம் என்கின்ற பொருளைக் குறிக்கும். இருபதாம் நூற்றாண்டில் உலகிலுள்ள மக்களை ஏதாவது ஒரு வகையில் தொடர்புபடுத்தும் சாதனங்களை ஊடகம் அல்லது மக்கள் தொடர்புச் சாதனம் என்று அழைப்பர். “பெருமளவுக்கு மக்களுக்கு செய்திகளை எடுத்துச் செல்லும் வடிவமைக்கப்பட்ட ஊடகத்தொடர்புச் சாதனங்கள் மக்கள் தொடர்புச் சாதனங்கள் என்று அழைக்கப்படகின்றன”2 (சமூக அறிவியல், தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம், ப.150) ஊடகங்களை இரண்டு வகையாகப் பிரித்துள்ளனர். அதனை, 1. அச்சிடப்படும் ஊடகங்கள் (செய்தித் தாள்கள், பத்திரிக்கை, புத்தகங்கள்) 2.மின்னணு ஊடங்கள் (வானொலி, தொலைக்காட்சி, தொலைத்தொடர்பு சாதனங்கள், இணையம்)

    http://www.dreamstime.com/-image13169118தகவல் தொடர்பியலும் இணையமும்:
    உலகில் அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள இணையதளம் உதவுகிறது. இவற்றின் மூலம் பல்வேறு நாடுகளில் நடக்கக் கூடிய நிகழ்வுகளை அந்தந்த மொழிகளின் மூலமும், பிறமொழிகளின் மூலமும் செய்திகளாக வெளியிடுகின்றனர். இதன் மூலம் அந்தந்த பகுதியில் நடக்கும் நிகழ்வுகளையும் அந்தந்த மொழிகளில் தகவல்களை உடனுக்குடன் மற்றமொழி பேசும் மக்களும் அறிந்துகொள்ள இணையம் உதவுகின்றது. அவ்வாறு தகவல்கள் மூலம் மூலத்தரவுகளை மிகவும் கவனமும் அதன் மையக்கருத்தில் எந்தவித மாற்றமும் செய்யாமல் தெளிவாக இருத்தல் வேண்டும். அவ்வாறு இருப்பதுதான் சிறந்த தகவல் தொடர்பாக அமையும். ஆரம்ப காலத்தில் புலவர்களும், மன்னர்களும் தமிழிலக்கியத்தினை ஓலைச்சுவடி, முரசு, கல்வெட்டு, செப்பேடுகள் போன்றவற்றின் மூலமாக பதிவுசெய்தனர். ஆனால் இன்றைய காலத்தில் புத்தகம், செய்தித்தாள், இதழ்கள், வானொலி, தொலைக்காட்சி, தந்தி, இணையதளம், குறுஞ்செய்தி, வலைப்பூக்கள் போன்றவற்றின் மூலம் தகவல்களை பெறலாம்.

    இணையமும் பங்களிப்பும்:
    ஓலைச்சுவடிகளின் வாயிலாகவும், முன்னோர்களின் குறிப்புகளின் மூலமாகவும் சங்ககால மக்களின் வரலாற்றினை நாம் அறிந்துகொள்ள முடியும். ஆனால் இன்றோ உலகெங்குமுள்ள தமிழர்களின் வரலாற்றினை அடுத்த நிமிடமே நாம் அறிந்துகொள்ள இணையத்தின் பங்களிப்பு மிக இன்றியமையாததாக அமைகின்றது. அவற்றினால் தமிழிலக்கிய வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பவைகள் இணைய இதழ்கள், இணைய வானொலிகள், இணைய தொலைக்காட்சிகள், இணையப்பக்கங்கள், இணையப் பல்கலைக்கழகம், இணைய நூலகம், சமூக வளைதளங்கள், வலைப்பூக்கள் போன்றவைகள் ஆகும்.

    தமிழ் இணையப் பல்கலைக்கழகம்:
    உலகெங்கிலும் வாழும் தமிழர்களை இணைக்கும் பாலமாக 17.02.2001 அன்று தொடங்கப்பட்டது. தமிழுக்காக அன்று தொடங்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் தமிழ் மக்கட்கும், தமிழில் ஈடுபாடு உள்ள மற்றையோர்க்கும், தமிழ் மொழியைக் கற்கவும், தமிழர் வரலாறு கலை, இலக்கியம், பண்பாடு பற்றி அறிந்த கொள்ளவும், வேண்டிய வாய்ப்புகளை இணையம் வழியாக அளிக்கும் நோக்கத்தோடு செயல்பட்டு வருகிறது. அவற்றில் தமிழ்க் கல்வியை அரிச்சுவடி முதல் ஆராய்ச்சி வரை தமிழ் இணைய பல்கலைக்கழகம் வழங்குகிறது. இதன் கல்வித்திட்டம் ஆறுநிலைகளாகச் செயல்படுகிறது. அவை 1. மழலைக்கல்வி, 2. சான்றிதழ்க் கல்வி, 3. பட்டயக் கல்வி, 4. பட்ட மேற்படிப்பு, 5. ஆய்வு இவை தவிர 6. பயணியர் தமிழ், 7. சிறப்புக் கல்வித் திட்டங்கள் ஆகியனவும் உள்ளன.

    மின் நூலகம்:
    மின் நூலகத்தினை தமிழஞர்களின் ஆர்வம், தமிழ் அமைப்புகளின் முயற்சி, தமிழ் மென்பொருள் தயாரிப்பாளர்களின் செயல்பாடு இவற்றின் ஒட்டுமொத்த வளர்ச்சியால் தமிழ் இலக்கணம், இலக்கியம், சமயம், ஆராய்ச்சி, தமிழ்-ஆங்கில அகராதி, நிகண்டுகள் போன்றவைகள் இடம்பெற்றுள்ளன. தமிழ் இணையப் பல்கலைக்கழகம், மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம், நூலகம் திட்டம் , சென்னை நூலகம், தமிழ் நூலகம் போன்றவைகள் மூலம் தமிழ் மொழியானது என்றும் பரணியில் தவழ்ந்து கொண்டிருக்கும் என்பதில் ஐயமில்லை.

    இணைய இதழ்கள்:
    தமிழ் மொழியில் கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக இருநூறுக்கு மேலாக வெளிவந்து கொண்டிருக்கிறது. அவ்வாறு முதன் முதலாக இணையத்தில் மலர்ந்தது திண்ணை வார இதழாகும். இதற்கு அடுத்த நிலையில் தேனீ இதழாகும். தட்சு தமிழ்.காம், பதிவு.காம், தமிழ்சினிமா.காம், தமிழ்ஈ.காம், நிதா்சனம்.காம், வீரகேசாரிஆன்லைன்.காம், யாழிணையம், அறுசுவை, தமிழன் எக்சுபிரசு, தமிழ்நெட், தமிழ்க்கூடல்.காம், சினிமாஎக்ச்பிரசு, தேனி.இலங்கை.காம், தமிழ்மணம், தமிழ்பிலிம்கிளப், புதினம், பதிவுகள் கனடா மாத இதழ், சங்கதி, அதிர்வு, சுடரொளி, தமிழஆர், சுவிசுமுரசம், மட்டுஈழநாதம், பரபரப்பு, முழக்கம், கனடாமுரசு, சுதந்திரம், ஈழமுரசு, ஈரநாதம், தமிழ்நாதம், லங்காசிறீ, தமிழ்தகவல்மையம், சுரதா, தமிழ்நியூசு.டிகே, சற்றுமுன், வணக்கம்மலேசியா, அலைகள், தென்செய்தி, நோர்வேதமிழ், ஈழதமிழ், நெருடல், தமிழ்விண், விருபா, சோதிடபூமி, குவியம் கனடா மாத இதழ், நாதம், தமிழோவியம் இந்தியா மாத இதழ், அப்பால்தமிழ், பிரான்ஸ் இதழ், வார்ப்பு, நெய்தல், கவிமலா் இந்தியா, இளமை, தமிழமுதம், நிலாச்சாரல், தமிழம், எழில்நிலா, வானவில், தமிழ்த்திணை, திசைகள், அம்பலம், ஆறாம்திணை, மரத்தடி, தமிழெழுதி, தமிழ்முரசு, அமுரசுரபி, கலைமகள், தமிழகம்.காம், மஞ்சரி, ஈழவிசன், தமிழ்ஆசுதிரேலியா, எரிமலை, இன்தாம், வரலாறு, மொழி, செம்பருத்தி, தமிழமுதம், தாயகப்பறவைகள், கீற்று, சூரியன், திண்ணை, புதுச்சேரி.காம், உண்மை, புதுவிசை, தமிழரங்கம், தமிழ்வாணன், வல்லமை, தமிழகம்.நெட் போன்ற பல்வேறு இதழ்கள் இணையத்தில் வெளிவந்து தமிழ் மொழிக்கு பெரும்பங்கினை ஆற்றி வருகிறது.

    முடிவுரை:
    இணையமானது இன்றைய காலகட்டத்தில் தமிழ்மொழி வளர்ச்சியினை மக்களிடம் தகவல்களை மிகவிரைவாகவும், மிகக்குறைந்த நேரத்திலும் கொண்டு சேர்ப்பதில் முக்கிய பங்காற்றி வருகிறது. மனிதன் காலமாற்றத்திற்கு ஏற்ப தன்னுடைய நாகரிகம், பண்பாடு, பழக்கவழக்கங்களை புதிய உத்தியை கையாள்கிறானோ அதுபோல கால மாற்றத்திற்கு தகுந்தாற்போல் மொழியும் தன்னை அடுத்தகட்ட நிலைக்கு கொண்டு செல்ல இணையத்தோடு சேர்ந்து தன்னுடைய வளர்ச்சி அடைந்து வருகிறது. இதற்கு முக்கிய பங்கு வகிப்பது ஊடகமேயாகும்.

    இரா.நாகராஜன்
    பகுதிநேர முனைவர்பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை
    அரசு கலைக் கல்லூரி,
    திருச்சி – 22

    படம் உதவி: http://www.informationweek.com/

    Share
  • மனதில் நின்ற மக்கள் திலகம்

    — கலைவாணன். 

    வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார்? என்று கேள்வி எழுப்பி அதற்கு விடை சொன்ன மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., என்னுடைய மனத்தில் மட்டும் நின்றவர் அல்ல… கோடிக்கணக்கான மக்களின் மனங்களில் இன்றும் கொலுவீற்றிருப்பவர் அந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். ஏனென்று காரணங்களை யோசிக்க வேண்டுமா என்ன…? காரணங்களை விஞ்சிய பூரணணாயிற்றே அவர்! முழு நிலவு போன்ற முகம், கவர்ந்திழுக்கும் விழிகள், கனிவான சிரிப்பு, எந்த நிறத்தில் ஆடை அணிந்தாலும் பொருந்துகிற செக்கச் சிவந்த உடல்… இப்படி பார்த்ததுமே பிடித்துப் போகிற உருவம் படைத்தவரல்லவோ நமது பொன்மனச் செம்மல்.

    ‘மாதா வயிறெரிய வாழா ஒருநாளும்’ என்றொரு பழைய மொழி சொல்வார்கள். அன்னையின் அன்பைப் பெறாத வாழ்வு வாழ்வாகவே இராது. ‘பத்துத் திங்கள் சுமந்தாளே அவள் பெருமைப்பட வேண்டும்… உன்னைப் பெற்றதனால் அவள் மற்றவராலே போற்றப்பட வேண்டும்’ என்று சிறுவனுக்கு அறிவுரை கூறிய வாத்யார் தன் அன்னையைத் தெய்வமாக வணங்கி வந்தவராயிற்றே! தாய்க்காக தன் இல்லத்தில் தனிக் கோயிலே கட்டி வணங்கியவராயிற்றே… ‘தாயில்லாமல் நானில்லை’ பாடலில் மட்டுமா அன்னையின் பெருமையைப் போற்றினார்…? தன் அனைத்துப் படங்களிலும் அம்மாவின் வார்த்தையை எந்தச் சூழ்நிலையிலும் தட்டிடாத தனயனாக அல்லவோ வாழ்ந்து காட்டினார். இது ஒன்றே போதாதா மக்கள் மனத்தில் அவர் நிற்பதற்கு…?

    mgr2பொழுதுபோக்கிற்கு உத்தரவாதம் தரும் திரைப்படங்களாக அவருடைய படங்கள் அமைந்தாலும் அதிலும் கண்ணியம் காத்தவர் வாத்யாரையன்றி வேறு எவர் உளர்…? கதாநாயகன் ஒரு அடி அடித்தால் வாயிலும் மூக்கிலும் ரத்தம் கக்கி, இருபத்தைந்து அடி தூரம் வில்லன்கள் பறந்து விழுகிற இன்றைய சண்டைக்காட்சிகளைக் கண்டு துன்புற்ற கண்களுக்கு, ஒரு துளி ரத்தம் சிந்தினாலே பெரிதெனக் கருதும், கலைநயம் மிக்க வாத்யாரின் சண்டைக் காட்சிகள் ஒப்பற்ற விருந்தன்றோ..!

    இதைத் தவிரவும் குறிப்பிடப்பட வேண்டிய விஷயம்.. வில்லன் இவர் குடும்பத்தையே அழித்திருந்தாலும், எத்தனை கொடுமைகள் செய்திருந்தாலும்கூட தன் எந்தப் படத்திலும் வாத்யார் வில்லனைக் கொல்வதாகக் காட்சிகள் இருக்காது. கிளைமாக்ஸில் ஒன்று வில்லனை மனம் திருந்தியவனாக்கி மன்னிப்பார் அல்லது சட்டத்தின் பிடியில் ஒப்படைப்பார். அவரை வாத்யார் என்று அன்போடு கூப்பிட்டு மக்கள் மனதில் இருத்திக் கொள்ள இதைவிடப் பெருங்காரணம் எதும் தேவையா என்ன…?

    ராமகிருஷ்ணப் பரமஹம்சரிடம் ஒரு அன்னை வந்து இனிப்பு தின்னும் தன் மகனுக்கு அறிவுரை கூறும்படி கேட்க, அடுத்த வாரம் வந்து பாருங்கள் என்றார் ராமகிருஷ்ணர். அடுத்த வாரம் வந்ததும் அந்தச் சிறுவனுக்கு அன்பாக அறிவுரைத்தார். ஏன் இதற்கு ஒரு வாரம் என அந்தத் தாய் வினவ, சென்ற வாரம் வரை நானே அதிகம் இனிப்பு உண்பவனாக இருந்தேன். அப்பழக்கத்தை கைவிட்டால்தானே அறிவுரை கூறும் தகுதி எனக்குக் கிட்டும்..? என்றாராம் ராமகிருஷ்ணர். தன் படங்களில் குடித்தலும் புகைத்தலும் தவறு என்று அழுத்தந்திருத்தமாய் போதித்த வாத்யார் நிஜ வாழ்விலும் முன்னுதாரணமாக இருந்து காட்டியவரல்லவா…?

    mgr3இரண்டு உதாரணங்களை இங்கு சொல்லுதல் அவசியம். ‘நினைத்ததை முடிப்பவன்’ படத்தில் ஒரு எம்.ஜி.ஆர். வில்லன். அவர் புகை பிடிக்கும் காட்சி ஒன்று படத்தில் வந்தாக வேண்டும். அதில் நடிக்கவோ வாத்யாருக்கு உடன்பாடில்லை. ஆனாலும் சமாளித்தார். எப்படி..? முதல் பாதியில் ராம்தாஸ் புகைக்க முயலும்போது, ‘இந்த ரஞ்சித்துக்கு முன்னால எவனும் சிகரெட் பிடிக்கக் கூடாது’ என்று தட்டிவிடுவார். பின்னொரு காட்சியில் வில்லன் எம்.ஜி.ஆர். சிகரெட்டை வாயில் வைக்க முற்படுகையில் கதாநாயக எம்.ஜி.ஆர். அதே வசனத்தைச் சொல்லி, அவர் வாயிலிருந்து தட்டி விடுவார். காட்சியிலும் நிறைவு… கொள்கைக்கு முரணாக நடிக்கவில்லை என்று வாத்யாரிடமும் நிறைவு.

    இதேபோன்று மற்றொரு பெரும் தர்மசங்கடம் அவரது 100வது படமான ஒளிவிளக்கு படத்தில் வந்தது. கதையின்படி நாயகன் குடித்து நிதானமிழந்திருக்கும் வேளையில் கொள்ளைப் பழி அவன் மீது சுமத்தப்படுகிறது. ஹிந்தியில் தர்மேந்திரா குடிப்பவராக நடித்திருந்தார். இந்திப்பட கதாநாயகர்கள் குடிகாரர்களாக நடிப்பது சகஜமான ஒன்று. தமிழிலும் இந்தக் காட்சியில் வாத்யார் குடிப்பதாக நடித்தேயாக வேண்டும். நடிப்புக்காகக் கூட அதைச் செய்ய விரும்பவில்லை வாத்யார். கதையை மாற்றுவதில் தயாரிப்பாளர் எஸ்.எஸ்.வாசனுக்கும் உடன்பாடில்லை. கடைசியில் வாத்யார் ஒரு சின்ன மாறுதல் செய்தார். மதுவை அவர் அறியாமல் குடிக்க வைத்து விடுகிறார்கள். மதுவின் மயக்கம் தெளிந்தபின் அவரது மனச்சாட்சி அவரை ‘தைரியமாகச் சொல்.. நீ மனிதன் தானா?’ என்று குத்திக் காட்டி மதுவின் கொடுமைகளை எடுத்துக் கூறும். குடித்ததை நினைத்து அவர் துடிப்பார், வருந்துவார். இப்படி எந்த விதத்திலும் மற்றவர்களைப் பாதிக்கும் விஷயங்களைச் சொல்லக் கூடாது என்று பிடிவாதக்காரராக அவர் இருந்ததைவிடவா மக்கள் மனத்தில் குடியிருப்பதற்கு பிறிதொரு காரணம் வேண்டும்…?

    தன்னைச் சந்திப்பவர்கள் எவராக இருந்தாலும் அவர்களை முதலில் சாப்பிடச் சொல்லி உண்டி கொடுத்து உபசரிப்பது மக்கள் திலகத்தின் வழக்கம் என்பது உலகம் அறிந்த உண்மை. ஆனால் அதற்கொரு காரணமும் சொல்வார்கள் சிலர். சிறு வயதிலிருந்தே பசியையும் பட்டினியையும் அனுபவித்து வாழ்ந்தவர் மக்கள் திலகம். அதனால் பிறர் பசிப்பதைப் பொறுக்காதவர். இந்தக் காரணத்தினால் தன்னைச் சந்திக்கும் எவரையும் வயிறார உண்ண வைத்துக் கண்டு மகிழ்பவராக இருந்தார் என்பதே அந்தக் காரணம். அதில் உண்மை இருந்தாலும் இயல்பிலேயே அவருக்கு அமைந்திருந்த ஈரமுள்ள இதயம்தான் அவரை அப்படிச் செயல்படச் செய்தது என்பதே நிஜமான நிஜம்.

    ஒரு மழைநாளில் அவர் காரில் செல்கையில் வெளியே ஒரு காட்சி கண்ணில் படுகிறது. கொட்டுகிற மழையில் உள்ளே உட்கார்ந்திருப்பவர் நனையாமல் கூரை அமைத்திருக்க தான் மட்டும் சொட்டச் சொட்ட நனைந்தபடி வயிற்றுப் பிழைப்புக்காக ரிகக்ஷா ஓட்டிக் கொண்டிருந்தனர் பல ரிக்க்ஷாக்காரர்கள். அவர்களைக் கண்டதும், வள்ளலின் மனம் கசிந்தது. தன் அலுவலகம் வந்த உடனே, உதவியாளரைக் கூப்பிட்டு, ”நகரிலுள்ள ரிக்க்ஷாத் தொழிலாளிகள் அனைவருக்கும் மழைக்கோட்டுகள் தர வேண்டும், வாங்கி வாருங்கள்” என்று ஆணையிட்டாரே.. அதற்கு என்ன காரணம் இருக்க முடியும் – மற்றவர் துன்பம் கண்டு பொறாத இளகிய நெஞ்சம் ஒன்றைத் தவிர..! அடித்தட்டு மக்கள் அனைவரிடமும் கல்லில் செதுக்கிய சிற்பமாய் அவர் மனங்களில் பதிந்து போனதற்கு இதைவிடச் சிறந்த காரணம் ஏதேனும் உண்டா என்ன…?

    mgr4கலைவாணர் என்.எஸ்.கே. உடல்நலம் குன்றி மருத்துவமனையில் இருந்த சமயம் அது. அவர் நினைவுக்குத் திரும்பியதும் அவரைப் பார்க்க வந்து சென்றவர்கள் பற்றி அவரிடம் சொல்லப்பட்டது. “ராமச்சந்திரன் வரலையா..? உடனே வரச்சொல்லி ஆளனுப்புங்க” என்றிருக்கிறார். அதன்படி வந்த மக்கள் திலகம் அவரிடம் என்ன உதவி கேட்டாலும் தான் செய்வதாகக் சொன்னார். கலைவாணர், “நிறையப் பேருக்கு உதவின எனக்கு நீ நிறைய உதவிகள் இப்ப வரை பண்ணிட்டிருக்கேங்கறது ஊருக்குத் தெரியாது. ஆனா நீ வரலைங்கறதை மட்டும்தான் எல்லாரும பாப்பாங்க… அதனாலதான் உன்னை வந்துட்டுப் போகச் சொன்னேன். வேற ஒண்ணும் இப்ப தேவையில்ல” என்றாராம். வள்ளலுக்கு வள்ளல் இந்த வாத்யார் என்பது அவரை அனைவரின் மனத்திலும் சிம்மாசனமிட்டு உட்கார வைக்கச் சிறந்த காரணம்தானே…

    அரசியலில் எதிரெதிர் துருவங்களாக இருந்தாலும் கலைஞர் கருணாநிதியிடம் அளவற்ற மதிப்பும் மரியாதையும் கொண்டிருந்தவர் மக்கள் திலகம். ஒருமுறை அவரெதிரில் ‘கருணாநிதி சொல்றாரு’ என்று பேசிய ஒருவரை, ‘கலைஞர்னு சொல்லுங்க. நானே அவரை கருணாநிதின்னு பேர் சொல்லிக் கூப்பிடறதில்ல’ என்று திட்டியிருக்கிறார். திருச்செந்தூர் ஆலய மரணத்திற்கு நீதிகேட்டு கலைஞர் தமிழகம் முழுவதும் நடை பயணம் மேற்கொண்டபோது தினம் அவரின் உடல்நலம் பற்றி போனில் விசாரித்ததுடன், தானே பேசி அதை கைவிடக் கோரியவர் மக்கள் திலகம். அந்தப் பண்பாடும் நாகரீகமும் அவரையன்றி வேறு எவருக்கு வரும்?

    இப்படிப் எண்ணற்ற காரணங்களால் மக்கள் மனத்தில் பதிந்துவிட்ட மக்கள்திலகம், என் மனத்தில் பதிந்ததற்கு இவை தவிர்த்த வேறுசில காரணங்களும் உண்டு. தான் சார்ந்த துறையான திரைப்படத் துறையில் அவருக்கிருந்த அபாரமான அறிவு பிரமிக்கத் தக்கது. சிறந்த இசை ரசிகராகவும், எடிட்டராகவும், நடிகராகவும், இயக்குனராகவும், திரைக்கதை ஆசிரியராகவும்… இப்படிப் பல அவதாரங்களைத் தன்னுள் பொதித்து வைத்திருந்தவர் வாத்யார். அவரது புகழ்பெற்ற ‘உலகம் சுற்றும் வாலிபன்’ பற்றி அவரது எழுத்துக்களில் இப்படிச் சொல்கிறார் : mgr5
    “அவரிடம் (ப.நீலகண்டன்) ‘உலகம் சுற்றும் வாலிபன்’ கதையின் ஆரம்பத்தைச் சொல்லி இருந்தேன். அதாவது விஞ்ஞானி ஒருவன் தான் கண்டுபிடித்திருந்த புதிய விஞ்ஞான யுக்தியை தன்னைப் போன்ற விஞ்ஞானிகள் மத்தியில் செயல்படுத்திக் காண்பிக்கிறான். தன் உழைப்பின் விளைவாக உருவான புதிய சாதனை உலகை அழிக்கும் அழிவு சக்தியாக மலர்ந்திருப்பதை மற்றவர்கட்குச் செயல்படுத்திக் காண்பிக்கிறான். அந்த ஆராய்ச்சிக் குறிப்புகளையெல்லாம் அந்த விஞ்ஞானிகளின் எதிரிலேயே தீயிட்டுக் கொளுத்தி விடுகிறான். ஆனால் ஒரு விஞ்ஞானி இந்தக் கூற்றை நம்புவதில்லை. அதன் நகல் எங்காவரு இருந்தே தீரும் என்ற எண்ணத்தில் முன்னவனைத் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துவிட்டு அவன் செத்துவிட்டதாக உலகத்தை நம்பச் செய்து விடுகிறான். இளம் விஞ்ஞானியின் தம்பி இதை நம்பாமல் அண்ணனைத் தேடிப் புறப்படுகிறான்.

    இவ்வளவுதான் நான் அவருக்குச் சொல்லியிருந்தேன். அதுவும் குறிப்பாகத்தான். இவ்வளவு விளக்கமாகக் கூட அல்ல. நான் என்ன எடுக்கப் போகிறேன், எப்படிப்பட்ட காட்சிகளை உருவாக்க இவ்விதப் பெரிய பயணத்தைத் துவங்கி இருக்கிறேன்… இந்த விவரம் எல்லாம் அப்போது அவரிடம் இல்லை. ஆகவே அவர் சிந்தனையில் ஆழ்ந்திருந்ததற்குக் காரணம் ‘இத்தனை பேருடன் புறப்பட்டுச் செல்கிறோமே, பிறர் நம்மைக் கேலி செய்யாத அளவுக்காவது ஏதாவது காரியம் ஆற்றிவிட்டு வரவேண்டும் என்ற அச்சம்தான் என்பது உண்மையாகத் தானிருக்கும்!”

    இப்படி வெளிநாடுகளுக்கு படப்பிடிப்புக்காகப் பணயப்படும் நிலையில் கூட திரைக்கதை, வசனத்தை முடிவு செய்து கொள்ளாமல் புறப்பட்டுச் சென்று வெளிநாடுகளின் அழகையெல்லாம் சீரான காட்சிகளாலும் ரசனையான வசனங்களாலும் இன்றும் கைதட்ட வைக்கும் பாடல்களாலும் அள்ளிவந்து, எத்தனையோ தடைகளை வென்று அதை சாதனைப் படமாக்க முடிகிறது என்றால் அது வாத்யாரால் மட்டுமே சாத்தியம். அவரை மிஞ்ச இனியொருவன் பிறந்துவரப் போவதில்லை என்பதே நிதர்சனம்.

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்…..(141)

    சக்தி சக்திதாசன்.

     

    அன்பினியவர்களே !

    அன்பான வணக்கங்களுடன் இவ்வார மடலில் உங்களைச் சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

    எழுத்துக்களின் மூலம் நடக்கும் எண்ணப் பரிமாற்றங்கள் அளப்பரியன, அரியன, உள்ளத்திற்கு இதம் தருவன.

    உலகில் பல்வேறு நாடுகள் உள்ளன, அவையனைத்தும் தலைவர்களால் வழிநடத்தப் படவேண்டியது கட்டாயமாகிறது.

    தனியொரு மனிதன், தான் வைத்ததே சட்டம் என்றும் அதற்குக் கீழ்ப்படியாதவர்கள் அனைவரும் குற்றவாளிகள் எனும் வகையில் சில தலைவர்களுள்ள நாடுகளும்; நாட்டில் ஒரேயொரு கட்சிதான் உண்டு, அது அடக்குமுறையின் மூலம் தனது ஆட்ச்சியை மக்கள் மீது திணிக்கும் வகையில் என வேறு நாடுகளும், எனப் பலவகையான முறைகளில் நாடுகள் வழிநடத்தப்படுகின்றன.

    ஒருவருக்கு ஒரு வாக்கு எனும் சுதந்திரத்தைக் கொடுத்து, அவர்கள் முன்னால் வைக்கப்படும் கட்சிகளின் கொள்கைகள் பிரகாரம் மக்கள் தமது விருப்புகளுக்கு ஏற்ப வாக்களித்து பதவிக்குக் கொண்டுவரும் அரசாங்கங்கள், பொதுவாக அம்மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் வகையிலமைந்த அரசாங்கம் “ஜனநாயகம்” எனும் கட்டமைப்பில் அழைக்கப்பட்டு இயங்குகிறது.

    ஜனநாயக ஆட்சி என்று கூறி ஆட்சிநடக்கும் நாடுகளில் உண்மையான ஜனநாயகம் நிலவுகிறதா ? எனும் கேள்விக்கு விடையளிக்கும் வகையில் அமைந்ததல்ல இம்மடல்.

    இங்கிலாந்திலே கடந்த வாரம் சர்ச்சையைக் கிளப்பி விட்டிருக்கும் ஒரு சூடான அரசியல் விவகாரம், தவறு செய்பவர் யாராக இருந்தாலும் அவர்கள் தட்டிக் கேட்கப்படவேண்டும் எனும் அடிப்படை ஜனநாயகக் கோட்பாட்டை நினைவுக்குக் கொண்டு வந்ததினால் இந்நாட்டில் 40 வருடங்கள் வாழ்ந்த ஒரு புலம்பெயர் தமிழன் எனும் வகையில் அதைப் பகிர்ந்து கொள்வதே இம்மடலின் நோக்கம்.

    அப்படி என்னதான் நடந்தது ? எனும் கேள்வி உங்கள் மனதில் எழுந்திருக்கும்.

    malcolm and Jackகன்சர்வேடிவ் கட்சியின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரும் நீண்டகால அரசியல் சேவைக்காக இங்கிலாந்து மகாராணியாரால் “சர்” பட்டம் வழங்கப்பட்டு கெளரவிக்கப்பட்டவர் சர் மல்கம் ரிவ்கிண்ட் ( Sir Malcolm Rifkind). முன்னால் பிரித்தானியா பிரதமர் மார்கிரெட் தாச்சர் அவர்களினால் அமைச்சராக்கப்பட்டவர் . பின்னர் ஜான் மேஜர் அவர்களின் அமைச்சரவையிலும் அமைச்சராகப் பணியாற்றியவர்.

    தற்போது இங்கிலாந்து பாராளுமன்றத்தில் இங்கிலாந்தின் இரகசிய உளவுத்துறையின் நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் தெரிவுக்குழுவின் தலைவராகப் பங்காற்றியவர்.

    சரி, இனி அடுத்தவரைப் பார்ப்போம். இவர் தற்போதைய இங்கிலாந்தின் எதிர்க்கட்சியாக விளங்கும் லேபர் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ” ஜக் ஸ்ட்ரோ” ஆவார்.

    முன்னால் பிரதமர் டோனி பிளேயர் அவர்களின் அமைச்சரையிலும் அதன் பின்னால் கோர்டன் பிரவுன் அவர்களின் அமைச்சரவையிலும் அமைச்சராகவும் பிரதான அமைச்சுகளுக்கு பொறுப்பாக இருந்தவர்.

    என்ன இது ? ஆளும் கட்சியான கன்சர்வேடிவ் கட்சியின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரைப் பற்றியும், எதிர்கட்சியான லேபர் கட்சியின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரைப் பற்றியும் ஒரு வியாபனம்.

    எங்கே போகிறது இம்மடல் ? ஆத்திரப்படாதீர்கள், அவசரப்படாதீர்கள் இந்த இரண்டுபேரையும் இணைக்கப்போகிறது ஒரு விடயம்.

    DTG

    “தி டெய்லி டெலிகிராப் ” என்றொரு பத்திரிகையைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். இங்கிலாந்தின் பாரளுமன்ற அங்கத்தினர்கள் தமது உத்தியோகப்பூர்வ செலவுகள் எனும் பட்டியலில் செய்யும் குளறுபடிகளை அம்பலத்துக்குக் கொண்டு வந்து உண்டு இல்லை என்று பண்ணிய பத்திரிகை.

    அப்பத்திரிகை விரித்தது ஒரு வலை . அதிலே வசமாகச் சிக்கிக் கொண்டனர் இவர்கள் இருவரும்.

    ஒரு சீனக் கம்பெனி எனும் பெயரில் ஒரு போலி நாடகமாடி, இவர்கள் இருவரும் தமது பராளுமன்றச் சலுகைகளின் அடிப்படையில் அரசியலில் பெற்ற செல்வாக்கின் மூலம் பணம் சம்பாதிக்கத் தலைப்பட்டதை வீடியோ ஆதாரத்துடன் நிரூபித்து விட்டது இப்பத்திரிகை.

    பாராளுமன்ற அங்கத்தினர்கள் தாம் பாரளுமன்ற உறுப்பினர்களாக இருக்கும் போது வேறு கம்பெனிகளில் பணியாற்றக் கூடாது என்றோ, அன்றி வேறு கூட்டங்களில் பணத்துக்காகச் சம்மதித்துப் பேசக்கூடாது என்றோ சட்டம் இல்லை.

    ஆனால், அவர்கள் தாம் மக்களின் பிரதிநிதிகளாகப் பங்காற்றும் போது வேறுவழிகளில் சம்பாதிக்கும் பணத்தை பாராளுமன்ற ஒழுக்க நடவடிக்கைக் குழுவிற்குச் சமர்ப்பிக்க வேண்டும்.

    தாம் புரிந்தது சட்டத்திற்கு முரணான செயலன்றால், அது தவறென்று கருதும் பட்சத்தில் அதற்கு எதிரான சட்டமூலங்களை உருவாக்குங்கள் என்கிறார்கள் இவர்கள் இருவரும்.

    தன்னுடைய திறமையின் மூலம் தனது வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு தான் சட்டத்திற்கு உட்பட்ட வகையில் முயன்றது குற்றமாகாது என வாதாடுகிறார் மால்கம் ரிவ்கிண்ட்.

    மறுபுறம் ஜக் ஸ்ட்ரோ என்பவரோ தான் ஏற்கனவே வரும் மே மாத பாரளுமன்றத் தேர்தலில் பங்கு கொள்ளப் போவதில்லை, அரசியலில் இருந்து ஒதுங்கிக் கொள்கிறேன் என்று ஏற்கனவே அறிவித்து விட்ட நிலையில் தனது எதிர்கால வாழ்க்கையின் ஆதாரத்திற்காக தான் உழைக்க முயன்றது எப்படித் தவறாகும் என்கிறார்.

    எது எப்படி இருந்தாலும் வருடமொன்றுக்கு 67,000 பவுண்ட்ஸ் உழைக்கும் பாராளுமன்ற அங்கத்தினர்கள், பேராசையால் தமது பதவியின் அடிப்படையில் பணமீட்ட முயல்வது பொருளாதாரச் சிக்கல்களினால் தவிக்கும் சாதாரண மக்களின் மனதில் அரசியல்வாதிகளைப் பற்றிய கண்ணோட்டத்தை எப்படிப் பாதிக்கும் என்பதை அறியாமலா மக்களின் பிரதிநிதிகள் என்று கூறிக்கொள்ளும் இவர்கள் இப்படி நடந்தார்கள் என்று வினவுகிறார்கள் அரசியல் அவதானிகள்.

    Tony and Maggieஏற்கனவே அரசியல் மீதும், அரசியல்வாதிகள் மீதும் அவநம்பிக்கை கொள்வோர்கள் பெருகிவரும் வேளையில் இத்தகைய மூத்த அரசியல் தலைவர்களின் தன்னலத்தின் அடிப்படையிலான செய்கைகள் இளையோர் மனதில் அரசியலை வெறுக்கப்பண்ணும் என்பது பலரது அபிப்பிராயம்.

    இவர்கள் இருவருமே அடுத்த தேர்தலில் இருந்து தாம் அரசியலில் இருந்து ஒதுங்கிக் கொள்வதாகத் தெரிவித்துள்ளார்கள். இருவரும் அவரவர் கட்சிகளின் உறுப்பினர் அந்தஸ்திலிருந்து தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளார்கள்.

    இவருக்கும் உள்ள மற்றொரு ஒற்றுமை என்ன தெரியுமா? இங்கிலாந்து அரசியல் வரலாற்றில் அதிககாலம் பிரதமராக பதவி வகித்தவர்களாகிய மர்கிரெட் தச்சரினாலும் , டோனி பிளேயரினாலும் அமைசராக்கப்பட்டவர்கள் என்பதே !

    “ஒரு தவறு செய்தால் அதைத் தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன் ” என்றொரு எம்.ஜி.ஆர் பாடல் கூறும்.

    அவர் மேலிருந்து பார்த்து புன்னகைப்பாரோ ?

     

     

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

     

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • மனதில் நிறைந்த மக்கள்திலகம் எம்.ஜி.ஆர்.

    — வில்லவன் கோதை.

    அது ஒரு இனிமையான மாலைப் பொழுது.

    தமிழன் என்றொரு இனமுண்டு அவர்க்கு தனியே ஒரு குணமுண்டு !

    என்ற எழுச்சி மிக்க இசையொலி அந்த ஊருக்கு வெளியேயிருந்த டூரிங் தியேட்டரின் உச்சியிலிருந்து வெளியேறி நாற்புறமும் சூழ்ந்திருந்த கிராம மக்களை ஒருவித பரபரப்புக்குள்ளாக்குகிறது.

    இன்னும் சற்று நேரத்தில் அன்றைய முதற்காட்சியாக திரையிடப்பட இருக்கின்ற சாகாவரம் பெற்ற கலைஞன் எம்ஜி ராமச்சந்ரன் நடித்த மலைக்கள்ளன் திரைப்படத்துக்கான முன்னோட்டம்தான் அது.

    அன்று அந்த திரைப்படத்துக்கு நான் அழைத்துச் செல்லப் பட்டிருந்தேன்.தொள்ளாயிரத்து ஐம்பத்தி நாலு என்று நினைக்கிறேன். அப்போது எனக்கு ஏறகுறைய எட்டு வயதிருக்கும். அதற்கு முன்னதாகவே அவர் நடித்த வேறு சில படங்களை பார்த்திருந்தாலும் என் நினைவுத்திரையில் எம்ஜியார் என்ற வடிவம் முழுமையாக பதிந்து போனது அன்றுதான்.

    அன்று என் மனதைக் கவர்ந்துபோன அந்த கள்ளன் கடைசிவரையில் திருப்பித்தந்ததாக எனக்கு நினைவில்லை. என்னைப்போலவே களவாடப்பட்டவர்கள் அந்த தலைமுறையில் பெரும்பாலோர் இருக்கக்கூடும்.

    தொள்ளாயிரத்து எழுபத்தைந்தில் திரைக்கு வந்த அதே எம்ஜி ராமச்சந்ரனின் இதயக்கனி என்றொரு திரைப்படத்தில் முகப்பிசையாக கவிஞர் வாலியின் பாடல் ஒன்று ஒலிக்கும்.

    தென்னகமாம் இன்பத் திருநாட்டில் மேவியதோர்
    கன்னடத்துக் குடகுமலைக் கனிவயிற்றில் கருவாகி
    தலைக்காவிரி என்னும் தாதியிடம் உருவாகி
    ஏர்வீழ்ச்சி காணாமல் இருக்க சிவசமுத்திர
    நீர்வீழ்ச்சி எனும் பேரில் நீண்ட வரலாறாய்

    வண்ணம் பாடியொரு வளர்த்தென்றல் தாலாட்ட
    கண்ணம்பாடி அணைகடந்து ஆடுதாண்டும் காவிரிப்பேர் பெற்று
    அகண்ட காவிரியாய்ப் பின் நடந்து
    கல்லணையில் கொள்ளிடத்தில் காணும் இடமெல்லாம்
    தாவிப் பெருகி வந்து தஞ்சை வளநாட்டைத்
    தாயாகிக் காப்பவளாம் தனிக்கருணை காவிரிபோல்
    செல்லும் இடமெல்லாம் சீர் பெருக்கித் தேர் நிறுத்தி
    கல்லும் கனியாகும் கருணையால் எல்லோர்க்கும்
    பிள்ளையென நாளும் பேசவந்த கண்மணியே
    வள்ளலே எங்கள் வாழ்வே இதயக் கனி
    எங்கள் இதயக் கனி இதயக் கனி

    மக்கள் திலகம் எம்ஜியாரின் வாழ்வைப்பேச இப்படியொரு பாடலைத் தவிற வேறொரு சரியான உவமை இருக்குமென்று எனக்குத் தோன்றவில்லை. மக்கள் திலகத்தின் வாழ்வை காவிரித்தாயின் நெடும்பயணத்தோடு ஒப்பிட்டு அந்தப்பாடலில் வாலி பேசுவார்.

    தொள்ளாயிரத்து பதிநேழில் ஸ்ரீலங்காவின் கண்டியில் பிறந்து கேரளத்தில் தவழ்ந்து , தமிழகத்தில் வேர்பரப்பி விருட்சமாக பெரும்பாலான மக்கள் மனதில் இன்றும் நிற்பவர் எம் ஜி ராமச்சந்திரன்..

    சரியாக எழுபதாண்டுகள் வாழ்ந்த ராமச்சந்திரனின் முற்பகுதி வாழ்க்கை அவருக்கு அத்தனை எளிதாக இருந்திடவில்லை. அன்றைக்கு அவர் அனுபவித்த பசியின் கோரச்சுவை இன்றைய தலைமுறைக்கு தெரியாத ஒன்று.

    mgrஅவர் தந்தை மருதூர் கோபால மேனன் மறைவுற்றபோது எம்ஜி ராமச்சந்திரனும் அவர் மூத்த சகோதரர் எம் ஜி சக்ரபாணியும் பச்சிளம் குழந்தைகள். ஈழத்தீவில் வாழ வழியின்றி இரண்டு குழந்தைகளுடன் இந்தியாவின் கேரளத்துக்கு குடிபெயர்ந்தார் அன்னை சத்யபாமா.

    அடுத்து தமிழ்நாட்டின் கும்பகோணம் அவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கிறது. வறுமையின் பிடியில் இறுகிய அந்த குடும்பம் பிழைப்பிற்கு வேறுவழியின்றி அன்னாளில் தாழ்வான தொழிலாக கருதப்பட்ட நாடகத்தொழிலை ஏற்கிறது.

    ஈழத்து சகோதரர்கள் ஏழு எட்டு வயதிலேயே நாடக சபாக்களில் வேஷம் கட்டத் தொடங்குகிறார்கள். பல்வேறு நாடகங்களில் சின்னச்சின்ன வேஷங்களை ஏற்ற ராமச்சந்திரன் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு சதி லீலாவதி என்ற திரைப்படத்தில் காவல்துறை அதிகாரியாய் ஒரு துணைப்பாத்திரத்தில் அறிமுகமாகிறார்.

    அடுத்த பதினைந்து ஆண்டுகள் திரையுலகில் அவருக்கு கிடைத்ததொல்லாம் வெரும் துணைப்பாத்திரங்களே.

    தொள்ளாயிரத்து நாற்பத்தேழில் முதன்முதலாக அவர் கதாநாயகனாக நடித்த ராஜகுமாரி திரைக்கு வருகிறது. அதைத் தொடர்ந்து வருடத்துக்கு இரண்டிரண்டு படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் ராமச்சந்திரன் பெருவாரியான மக்களைச் சென்றடையவில்லை.

    நாற்பத்தேழில் இந்ததேசம் நள்ளிரவில் விடுதலை பெறுகிறது. விடிந்தபின்னும்கூட இந்த தேசத்தின் பெருவாரியான மக்களுக்கு விடுதலை கிடைத்துவிடவில்லை. இனம் மதம் சாதி போன்ற பெரும் சுவர்கள் அவர்கள் வளர்ச்சிக்கு இடையூராய் நிற்கிறது. தமிழகத்தில் தந்தை பெரியாரின் சமூக சீர்திருத்த இயக்கமும் பேறறிஞர் அண்ணாவின் அரசியல் சார்ந்த திமுகாவும் வலுவாக காலூன்றுகின்றன. கல்வியிலும் கலையிலும் ஈடுபாடு மிக்க திராவிட இயக்கத்தினர் தங்கள் கருத்துக்களை அடித்தளத்து மக்களிடையே கொண்டு சேர்க்க கலைத்துறையை கையில் எடுக்கின்றனர்.

    அண்ணா, கலைஞர், ஆசைத்தம்பி, சிற்றரசு, மாறன் போன்ற திமுகாவின் முன்னணித்தலைவர்கள் எல்லாம் திரைக்கதை தீட்டிய திரைப்படங்கள் ஒவ்வொன்றாக திரைக்குவந்து நாடெங்கும் பேசப்படுகிறது. பேறறிஞர் அண்ணாவின் பேச்சாலும் எழுத்தாலும் கவரபட்ட தமிழ்த் திரையுல கலைஞர்கள் தங்கள் இயல்பான ஆத்தீக மரபுகளை மாற்றிக்கொண்டு சீர்திருத்தம் பேசிய இயக்கத்தில் இணைகின்றனர். அதுவரை காந்தியார்மீதும் காங்கிரஸ் பேரியக்கத்தின்மீதும் நேசம் செலுத்திய ராமச்சந்திரன் ஐம்பத்தி மூன்றில் திமுகாவில் இணைகிறார்.

    தொள்ளாயிரத்து ஐம்பத்தி நான்கில் நாமக்கல் கவிஞரின் மலைக்கள்ளன் கலைஞரின் திரைக்கதையில் வெளிவந்து எம்ஜியாரை எட்டாத உயரத்துக்கு கொண்டு செல்கிறது. தமிழ்த்திரையுலகுக்கு முதன் முதலாக தேசிய விருதை மலைக்கள்ளன் திரைப்படம் பெற்றுத்தருகிறது. ஏறத்தாழ ஆறு தேசிய மொழிகளில் மலைக்கள்ளன் திரைப்படம் வெளியாகி திரையுலகம் அதுவரை காணாத வசூலை வாரிகொட்டுகிறது.

    அதைத்தொடர்ந்து அவர் நடித்து திரைக்கு வந்த ஒவ்வொரு படமும் ஒரு சரவெடி என்றே சொல்லவேண்டும்.

    அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உடமையடா . என்ற எம்ஜியாருக்காக கவிஞர் கண்ணதாசன் எழுதிய இந்தப் பாடல் அன்றைய தலைமுறையையே பித்தர்களாக்கிற்று என்று சொல்லலாம்.

    கலைஞர்தான் முதன் முதலாக எம்ஜியாரை புரட்சி நடிகர் என்ற அடைமொழி இட்டு அழைக்கிறார். அடுத்தடுத்து புரட்சி நடிகர் நடித்த திரைப்படங்கள் மகத்தான வெற்றி பெற்று வசூலில் சாதனை படைக்கிறது.

    mgr2இயல்பாகவே இறையுணர்வு மிக்க ராமச்சந்திரன் அண்ணாவின் கருத்துக்களுக்கேற்ப தன்னை மாற்றிக்கொண்டு கடவுள் சார்ந்த திரைப்படங்களில் நடிப்பதைத் தவிர்க்கிறார். ஒடுக்கப்பட்ட சமூகத்திற்காவும் நலிந்த பிரிவினருக்காகவும் திரைப்படங்களில் உயர்ந்த குரலெழுப்புகிறார். நடைபாதையில் குடியிருப்பவர் நலனுக்காக போராடுகிறார். திரைப்படங்களில் கூட புகைபிடிப்பதை நிறுத்துகிறார். மது அருந்தும் காட்சிகளை தவிர்க்கிறார். தான் நடித்த எல்லா திரைப்படங்களிலும் தருமத்துக்கும் நியாயத்திற்கும் குரல் எழுப்புகிறார். பெண்களைக் காக்க சண்டைபோடுகிறார்.

    அவருக்காக திரைக்கதைகளும் பாடல்களும் பிரத்யோகமாக உருவாக்கப்படுகின்றன. பாற்க பரவசமூட்டும் எம்ஜியாரின் கவர்ச்சியான தேகம் அதற்கெல்லாம் ஈடு கொடுக்கிறது. அவருடைய திரைப்படங்கள் அத்தனையும் அவரது ரசிகர்களை ஏமாற்றியதில்லை. எந்த படமும் அவருடைய தயாரிப்பாளர்களுக்கு இழப்பை ஏற்படுத்திவிட்டதாக நினைவில்லை.

    தமிழகத்தின் வறண்ட பூமிகளிலும் நலிந்த மக்களிடையேயும் அவர் ஏற்படுத்திய ஒப்பனைப்பிம்பம் ஆழப்பதிகிறது. சென்னை ரசிகர்களுக்கு அவர் வாத்தியார் ஆகிறார்.

    அவருக்கான ரசிகர் மன்றங்கள் திமுகாவின் சார்புமன்றங்களாக பெருமளவில் துவக்கப்படுகிறது. அவருடைய ஒவ்வொரு திரைப்படத்துக்கும் தோரணங்கள் கட்டி திரைஅரங்கத்தை அலங்கரிக்கிறது அந்நாளைய திமுக பட்டாளம்.

    இன்றைக்குத் தொடரும் ரசிகர்களின் கட்டவுட் பாலாபிஷேக கலாச்சாரத்துக்கு அதுவே முன்னோடி என்று கருதுகிறேன். அன்று அவர் வளர்ச்சிக்கு திராவிட இயக்கத்தின் எழுத்தும் பேச்சும் ஒரு மாபெரும் ஏணியாக நின்றன.

    அப்போதுதான் தனக்குத்தானே அடைமொழியிட்டு அழைத்துக் கொள்ளும் தன்னம்பிக்கை மிக்க எழுத்தாளர் கல்கண்டு ஆசிரியர் தமிழ்வாணன் எம்ஜியாரை மக்கள் திலகமென்று முதன்முதலாக அழைக்கிறார் அதுவே அவர் பெற்ற இரண்டாவது இயல்பான அடைமொழி.

    ஏறதாழ நூற்றுமுப்பது படங்களுக்கு மேல் நடித்திருந்த எம்ஜியார் நடிப்புத்துறை மட்டுமின்றி கலைத்துறையின் சகல நுணுக்கங்களையும் பெற்றிருந்தார். படத்தொகுப்பிலும் இயக்குதலிலும் அவர் தேர்ந்திருந்தார். சுயமாக திரைப்படம் தயாரிப்பதிலும் அரங்குகளுக்கு வினியோகிப்பதிலும் கூட அவருக்கு பயிர்ச்சியிருந்தது. நாடோடிமன்னன், உலகம் சுற்றும் வாலிபன், மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் ஆகிய மூன்று வெற்றிப்படங்களும் அவர் இயக்கத்தில் வந்து வரலாறு படைத்தவை.

    அறுபத்தொன்பதில் அடிமைப்பெண் படப்பிடிப்புக்கு ராஜஸ்தான் சென்றபோது தொப்பியணியும் வழக்கத்தை மேற்கொண்டார். அப்போதிலிருந்து தொப்பியும் கருப்புக்கண்ணாடியுமின்றி அவர் வெளியுலகிற்கு தோன்றியதில்லை. தன் தோற்றத்தை எப்போதும் ஒரே மாதிரியும் ஒப்பனையோடும் அமைத்துக்கொள்ள அவர் என்றைக்குமே தவறியதில்லை.

    ஏறத்தாழ அகவை அறுபதைக்கடந்த போதும் இளம் கதாநாயகிகளோடு காதற் காட்சிகளில் தொடர்ந்து நடித்து தமிழ்த்திரையுலகை பழிதீர்த்துக்கொண்டவர் மக்கள்திலகம். மக்களிடையே ஏற்படுத்தியிருந்த இந்த ஒப்பனைப் பிம்பத்தை மண்ணில் மறையும்வரை காத்தவர் மக்கள் திலகம் மட்டுமே.

    இளம் வயதில் அவரை திரும்பிப்பாற்காத இந்த தமிழ்த் திரையுலகம் அவருடைய கிழவயதில் அவர் கால்களில் மண்டியிட்டு கிடந்தது மிகப்பெரிய வினோதம்.

    வாடிய முகத்தை கண்டபோதெல்லாம் வாடியதோடல்லாமல் வாட்டத்தை போக்குகின்றவராகவும் எம்ஜியார் திகழ்ந்தார். இயல்பிலேயே மிகுந்த இரக்கசிந்தனை அவருக்கிருந்தது. வருமையிலும் பகிர்ந்துண்ணும் பாங்கை அவர் பெற்றிருந்தார்.

    தொள்ளாயிரத்து அறுபத்து இரண்டில் இந்தியாவுக்கெதிராக சீனா போர் தொடுத்தபோது பாரதப்பிரதமரின் வேண்டுகோளுக்கிணங்க அந்நாளிலேயே தன் உழைப்பிலிருந்து 75,000 ரூபாயை அள்ளிக்கொடுத்தவர் எம்ஜியார். குழந்தைகளையும் முதியோர்களையும் பெரிதும் நேசித்தவர் எம்ஜியார். அந்நாளில் சுயமாக இயங்கி வந்த கல்விக் கூடங்களுக்கும் தொண்டு நிறுவனங்களுக்கும் அவர் அளித்த நன்கொடைகள் கணக்கில் அடங்கா.

    நான் படித்த சென்னை மேற்கு மாம்பலம் உயர்நிலைப்பள்ளி ( இன்று அஞ்சுகம் மேல் நிலைப்பள்ளி என்ற பெயராம் ) கட்டிட நிதிக்காக அட்வகேட் அமரன் என்ற நாடகத்தை நடத்தி பெருநிதி அளித்தவர் எம்ஜியார். இருந்தபோதும் அந்த பள்ளி இன்றும் பழைய தோற்றத்திலேயே கீற்றுக்கொட்டக்கையில் நீடிப்பதை சமீபத்தில் பாற்கநேர்ந்தது.

    எம்ஜியாருடைய வாழ்வில் முதல் இரண்டு மனைவிகள் அடுத்தடுத்து மரணமுற்றபோது மூன்றாவதாக அவரோடு இணைந்து நடித்த விஎன் ஜானகியை அறுபதுகளில் மணந்து அவர் ஜானகி ராமச்சந்திரனானார்.

    திரையில் எனக்கொருமகன் பிறப்பான் அவன் என்னைப்போலவே இருப்பான் என்று குதூகுலத்தோடு குதித்துப் பாடிய எம்ஜியாரின் விருப்பம் கடைசிவரை பொய்யாயிற்று.

    தொள்ளாயிரத்து அறுபத்தேழில் ஏறத்தாழ இருபது படங்களுக்கு மேலாக அவரோடு இணைந்து நடித்த நடிகவேள் எம் ஆர் ராதாவால் தனிப்பட்ட காரணங்களுக்காக சுடப்பட்டு தனிப்பிறவியாக அவர் பிழைத்ததை பார்த்தவன் நான்.

    தன்வாழ்வுக்கு ஏணியாய் நின்ற திமுகாவின் அந்நாளைய அசுர வளர்ச்சிக்கு எம்ஜியார் திருப்பிச் செலுத்திய பங்கு மகத்தானது.

    எம்ஜியாரும் கருணாநிதியும் தொள்ளாயிரத்து ஐம்பதிலேயே நெருங்கிய நண்பர்கள். அவர்கள் இணைந்து வெளியான மந்திரி குமாரி திரைப்படம் தமிழ்த்திரையுலகிற்கு ஒரு திருப்பம் தந்தது.

    அண்ணாவின் மறைவிற்குப்பிறகு கருணாநிதி முதல்வர் பொறுப்பேற்க எம்ஜியாரே துணை நின்றார். இருப்பினும் காலப்போக்கில் அவர்களுக்கிடையே ஏற்பட்ட கசப்பில் 1972 ல் எம்ஜியாரின் அண்ணாதிமுக உருவெடுக்கிறது. திமுகாவில் கருணாநிதிக்கெதிராக நின்றிருந்தவர்கள் எம்ஜியாரோடு அணிசேர்ந்தனர். மாற்றுக் கட்சிகளில் இருந்த கருணாநிதிக் கெதிரானவர்களும் அதிமுகாவை ஆதரித்தனர். பிற்படுத்தப்பட்டோருக்கான சலுகைகளால் பின்தங்கியவர்கள் கருணாநிதிக்கெதிராக எம்ஜியாரோடு சேர்ந்தனர்.

    ஒருதனிமனித எதிர்ப்பே அந்தக்கட்சியின் தலையாய கொள்கையாயிற்று. முன்னதாக நலிந்தமக்களிடையே எம்ஜியார் ஏற்படுத்தியிருந்த பிம்பம் அவரது அரசியலுக்கு பெரும்துணையாயிற்று. அண்ணாகாலத்தில் திமுக கலைத்துறையை ஊறுகாயாய் பயன்படுத்திற்று. ஆனால் அதிமுகாவோ அதையே முக்கிய விருந்தாக்கிற்று. மத்திய அரசின் மிட்டலுக்கு பயந்து அதிமுகவை அஇஅதிமுக வாக அவர் மாற்றியது நல்ல வேடிக்கை.

    மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் அது முடிந்தபின்னாலும் பேச்சிருக்கும் என்று பாடிய அந்த திரைக்கலைஞன் அடுத்தடுத்து காலப்போக்கில் நான்கெழுத்துக்கும் ஆறெழுத்துக்கும் தாவியது துரதிஷ்டம்.

    இயக்கத்தின் வளர்ச்சிக்காக திமுகவினர் தொடர்ச்சியாக அரசுக்கெதிரான போராட்டங்களை நடத்தி சிறைப்பட்ட காலம். அத்தனை போராட்டங்களிலும் கலந்து கொள்ளாமலிருக்க கலைத்துறையினருக்கு அண்ணா விதிவிலக்களித்திருந்தார். அவர்களை திமுகாவின் செல்லப் பிளைகளாகவே அண்ணா பாவித்தார். அவர்களை இயக்க வளர்ச்சிக்கு பிரச்சாரக்கருவியாக மட்டுமே கையாண்டார். கழக நிர்வாக செயல்பாடுகளில் அவர்களுக்கெல்லாம் பெரிதாக இடமளிக்க வில்லை.

    திமுகாவின் எந்தப்போராட்டங்களிலும் எம்ஜியார் கலந்து கொண்டதில்லை. சிறைபுகுகின்ற வாய்ப்பும் அவருக்கு கிட்டியதில்லை.

    திராவிட இயக்கத்தில் இவர்களுக்கெல்லாம் ஒரு இறுக்கமான பிடிப்பு இல்லாமற் போனதற்கு இதுவும் ஒருகாரணம் என்று கருதுகிறேன்.

    எழுபத்திரெண்டில் திமுகவைவிட்டு எம்ஜியார் வெளியேறிய போது கட்டியவேட்டியோடு வெளியேறினார் என்று சொல்லவேண்டும். திமுக பெரியாரிடம் சமரசம் செய்துகொண்ட கடவுள் மறுப்பு கொள்கையை முழுதுமாக எம்ஜியார் கைவிட்டதைத்தான் இப்படி குறிப்பிடுகிறேன். பெரும்பாலான ஆத்தீகர்கள் கூட எம்ஜியாரோடு அணிவகுக்க இப்போது சங்கடமில்லாமற் போயிற்று.

    பக்திப்பழம் திருமுருக கிருபானந்த வாரியார் சாமிகள் மக்கள் திலகத்துக்கு பொன்மனச்செம்மல் என்ற பட்டத்தை வழங்குகிறார். அதேசமயம் அவரது அபிமானிகளோ அவரை புரட்சித்தலைவராக்கி மகிழ்ந்தனர்.

    தொள்ளாயிரத்து எழுபத்தி இரண்டுக்குப்பிறகு எம்ஜியார் பிக்சர்ஸ் முகப்புக்கொடி அண்ணா திமுக அடையாளமாயிற்று.அவர் நண்பர் கருணாநிதிக்கெதிராக மக்களிடையே அவர் விதைத்த வெறுப்பு விதைகள் அவர் மறைந்து இரண்டு தலைமுறை கடந்த பிறகும் கூட அகன்றதாக தெரியவில்லை.

    பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் இரண்டுமுறை திமுகாவிலும் மூன்று முறை அதிமுகாவிலும் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் மக்கள்திலகம். பெரம்பலூர் மதுரை மாவட்டங்களின் நலிந்த பிரிவினர் அவரை கண்களால் கண்ட தெய்வமாக இன்றும் நேசிக்கின்றனர்.

    பெருவாரியான மக்களின் பேராதரவுடன் தமிழ்நாடு முதல்வராக ஏறதாழ பதினோரு ஆண்டுகள் பதவியில் இருந்தவர். அவரது திரைப்படங்களுக்கு பிலிம்பேர் பத்திரிக்கையின் மதிப்புமிக்க விருதும் மத்திய அரசின் தேசிய விருதுகளும் கிடைத்திருக்கின்றன. சென்னை பல்கலைக்கழகம் கௌரமிக்க டாக்டர் பட்டம் வழங்கி அவருக்கு பெருமை சேர்க்கிறது.

    மந்திரிகுமாரி, மலைக்கள்ளன், அலிபாபாவும் 40 திருடர்களும், எங்கவீட்டுப்பிள்ளை, நாடோடி மன்னன், ஆயிரத்தில் ஒருவன், மகாதேவி, உலகம் சுற்றும்வாலிபன், ரிக்ஷாக்காரன் . . . அவரது வெற்றிப் படங்களின் எண்ணிக்கை இப்படி நீள்கிறது.

    அவரது கடைசிகாலங்களில் வெளியான நான் ஏன் பிறந்தேன் திரைப்படத்தை நான் விரும்பி ரசித்தேன் என்று சொல்லவேண்டும். அவருடைய உலகம் சுற்றும் வாலிபன் அவருடைய முந்தைய சாதனைகள் அனைத்தையும் முறியடித்து புதிய வரலாறு படைத்ததை மறக்க இயலாதது.

    அவருடைய திரைப்படங்களைப்பற்றியோ அவரது நற்குணங்களைப் பற்றியோ அவர் அளித்த நன்கொடைகள் பற்றியோ வரையறுக்கப் பெற்ற சொற்களில் இந்த பதிவில் ஒருபோதும் விளக்கிட முடியாது.

    தொள்ளாயிரத்து எண்பத்தியேழு டிசம்பர் இருபத்திநாலில் அந்த மகத்தான கலைஞன் உயிர் நீத்த போது தமிழகமே ஸ்தம்பித்தது. சோகம் என்ற சொல்லின் வலிமையை தமிழகம் அன்று முழுமையாக உணர்ந்தது.

    ஏறத்தாழ முப்பதுக்குமேற்பட்ட மதிப்புமிக்க உயிர்கள் அவருக்காக உதிர்ந்து போயின. அவரை அரசியலில் எதிர்த்து நின்றவர்களும் அன்று கண்ணீர் உகுத்தனர்.

    மத்திய அரசு எண்பத்தியெட்டில் அந்த பெருமகனுக்கு மிக உயரிய விருதான பாரத ரத்னா வழங்கி கௌரவிக்கிறது.

    பதினைந்து வருடங்களுக்கு மேலாக நேரடியான அரசியல் அநுபவம் இருந்தாலும் மக்கள் திலகத்தின் ஆட்சி அத்தனை திருப்திகரமானதாக இருந்திடவில்லை என்பதை இங்கு சொல்லித்தான் ஆகவேண்டும். அவர் திமுகாவை விட்டு வெளியேறியபோது அவரோடு அவசரம் அவசரமாக இணைந்து கொண்டவர்கள் பெரும்பாலும் திமுகாவில் பல காரணங்களால் ஒதுக்கப்பட்ட அதிருப்தியாளர்களும், அரசியல் சந்தர்ப்பவாதிகளுமாகவே இருந்தார்கள்.

    கருணாநிதியை ஊழல்வாதியாக குற்றம்சாட்டி கட்சி ஆரம்பித்த எம்ஜியார் தனது அரசின் சகல துறைகளிலும் ஊடுருவிய ஊழலை தடுக்க முடியாமற் போயிற்று. திரைப்படங்களில் சாமானிய மக்களுக்காக தொடர்ந்து குரல் எழுப்பியிருந்தாலும் அவர் ஆட்சியின் பயன்கள் அவர்களுக்கு எட்டமுடியாமல் போயிற்று. அவரது ஆட்சிகாலங்களில் தமிழகத்திற்கான தொலைநோக்கு திட்டங்கள் எதுவுமே சிந்திக்கபடாமற் போயிற்று.

    நிர்வாகத்திறன் போதாமை, நேர்மையான ஆலோசகர்கள் இன்மை, இவையெல்லாம் அவருக்கெதிராக நின்றது. ஆளும் கட்சியினரின் அபரிதமான தலையீடு அரசு எந்திரத்தை கடித்துக் குதறியது.

    அதேசமயம் குழந்தைகளுக்கான காமராஜரின் மதிய உணவுத் திட்டத்தை சீரமைத்து மதிப்புமிக்க சத்துணவுத்திட்டமாக்கியது மக்கள் திலகமே. அரசின் நியாயவிலைக்கடைகளை பெருமளவு விரிவாக்கியதும் பிற்படுத்தப்பட்டோருக்கான கல்வியில் அறுபத்தொன்பது விழுக்காடு இடஒதுக்கீடு ஏற்படுத்தியதும் அவர் ஆட்சி காலத்தில்தான்.

    தமிழ் ஈழ விடுதலைக்காக உயிர்துறந்த மாவீரன் பிரபாகரன் கரங்களை அன்நாளில் வலுப்படுத்த மக்கள்திலகம் துணையாக நின்றதை மறக்கமுடியாது.

    காலம் காலமாக கலைத்துறையில் அவர் ஏற்படுத்திக்கொண்ட மாயபிம்பம், ஒரு ஒப்பனை வடிவம், தலைமுறைகளைத் தாண்டி இன்றும் அவரை பேசிக்கொண்டிருக்கிறது. திரையுலகில் அவர் வாயசைத்த பாடல்கள் தமிழ்நாடெங்கும் இன்னும் அவரது நினைவை ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது.

    தனிமனித எதிர்ப்பில் தோன்றிய அவருடைய இயக்கம் இன்றும் ஒரு பெருங்கூட்டத்துக்கு அரசியல்வாழ்வு கொடுத்துக் கொண்டிருக்கிறது.

    இருந்தபோதும் அவரது எதிராளிகளுக்கும் அவர் இன்னும் மனங்கவர்ந்த மக்கள் திலகம்தான்.

    என் நினைவுகளில் மக்கள் திலகத்துக்கு நீங்காத ஒரு இடமுண்டு. அதில் ஒன்றும் இரு கருத்தில்லை.

    Share
  • நீயே என்றும் உனக்கு நிகரானவன்

    காவிரி  மைந்தன்

    அரிய இப்பாடலுக்கு அடியேன் விளக்கமளிப்பதைவிட .. தமிழ் என்னும் கடல் மூழ்கி.. தத்துவ தரிசனங்கள் காட்டி.. அடியவர்க்கெல்லாம் அடியவராக.. ஆம்.. அவர் அடியொற்றிப்போகத்தக்க அளவு சிந்தனையைச் செப்பனிட்டு.. பரம்பொருளைத் தான் உணர்ந்து பாமரரும் உணரும்வண்ணம் தான் எழுதும் பரசுராமன் என்னும் திருப்பெயரால் ஆன்மீகம்தான்தழைக்க அரும்பெரும் தொண்டாற்றும் என்னரும் நண்பரின் வாய்மொழியாலே வாசகர்கள் வாசிக்கத்த தருவதில் மெத்தவே மகிழ்கிறேன்.

    இறைவன் மிகப்பெரியவன்.. அவனுக்கு இணை கிடையாது என்கிற வாசகங்களுக்கு கவியரசர் கண்ணதாசன் விளக்கம் சொல்ல கோவிலுக்குள் அழைத்துச் செல்கிறார்!  அங்கே இறைவனுடைய தரிசனம் கிடைக்கிறது. அதுமட்டுமல்ல.. கேள்வி கேட்டவர்களுக்கு விளக்கமும் கிடைக்கிறது.

    கவியரசரின் வாய் மெல்ல அசைகிறது.  வார்த்தைகள் அர்ச்சனைப் பூக்களாக வெளிவருகின்றன!

    நீயே உனக்கு என்றும் நிகரானவன்..

    தனக்கு உவமை இல்லாதவன் என்று தமிழ்வேதம் திருக்குறள் சொல்கிறது! அடுத்த அடியில்.. அந்தி நிழல் போல் குழல் .. என்கிறார்..  ஆம்.. அருணகிரிநாதர் கந்தரலங்காரத்தில் ‘செஞ்சடா அடவி’ என்று சொல்கிறார்.

    தனக்குத் தானே நிகரானவனாகவும், எல்லா ஜீவராசிகளுக்கும் தந்தையாகவும்,தாயகவும் இருப்பவன் இறைவன்.. ‘தாயும் நீ!  தந்தையும் நீ! என்று திருமறைகள் முழங்குகின்றன!

    அப்படிப்பட்ட இறைவன் தாயாகவே வடிவம் தாங்கி வந்து பிரசவம் பார்த்தான்.  செட்டியார்குலப் பெண்மணியான ரத்னாவதிக்குத் தாயாக வந்து இப்படித் திருவிளையாடல் புரிந்த சிவபெருமானுக்கு, ‘தாயுமான சுவாமி’ என்றே திருநாமம்!

    இந்த உட்பொருளை வைத்தே உருவானது – வளர்த்த தாயாகி வந்தவன்

    bale pandiyaa

    தாயாகி வந்த இறைவனின் தூய வடிவத்தைச் சொல்கிறார் பாருங்கள்!

    இன்னது செய்யலாம்.. இன்னதைச் செய்யக்கூடாது என்று சொல்லி எல்லோருக்கம் வாழ வழி காட்டுவது வேதம்.. அப்படிப்பட்ட வேதமே இறைவனுக்கு வாயாக இருக்கிறது.  வாய் மட்டும் நல்லதைப் பேசிப் பலனில்லை.. அது செயலிலும் வரவேண்டுமல்லவா?

    அதனால்தான், ‘இறைவனுக்குக் கையாக நீதி இருக்கிறது’ என்கிறார் கவியரசர்.

    வாய் வேதம் கை நீதி..

    இறைவனுக்கு அன்பே கண்ணாக இருக்கிறது.

    விழி அன்பு

    இறைவனின் வாய், கை, விழி என்று சொல்லி வந்த கவியரசர் இதுவரை இறைவனின் மொழி எது என்று சொல்லவில்லை..

    இறைவனின் மொழி  கருணை..

    மொழி கருணை

    இப்படி.. வாய், கை, கண் என்று வடிவம் கொண்டவனா இறைவன்?  என்று நாம் எண்ணிவிடக்கூடாது என்பதற்காக..வடிவாகி, முடிவற்ற.. என்கிறார் கவியரசர்.

    இறைவனுக்கு முடிவு கிடையாது.. எல்லாவற்றிற்கும் முதலாக இருப்பவன் இறைவன் என்று சொல்லி அழைக்கிறார்.. கண்ணதாசன்

    முதலான இறைவா!

    அடுத்து.. அருளை நாம் எப்படிப் பெறுவது?

    கூட்டமாகக் கூடித் துதி பாடி இறைவனை நெருங்கி தூபம் போட்டுக் காட்டி அவனை மயக்கி அவன் அருளை அடைந்துவிடலாம் என்றால் அது இயலுமா?

    துதிபாடும் கூட்டம் உன்னை நெருங்காதைய்யா.. வெறும்

    தூபத்தில் உன் இதயம் மயங்காதய்யா..

    எல்லோரையும் தவறாமல் ஆட்டிப்படைக்கும் விதி கூட, இறைவனை நெருங்காது.. நெருங்க முடியாது..

    விதி கூட உன் வடிவை நெருங்காதய்யா..

    இறைவனை அடைய என்ன வழி.. என்றால்..

    விணை வென்ற மனம் கொண்ட
    இனம் கண்டு துணை சென்று வென்ற தெய்வ மலர்

    இரு வினைகளை வென்ற, தூய்மையான மனம் கொண்ட நல்லவர்களை இனம் கண்டுகொள்ளவேண்டும்.  அவர்களைத் துணையாகக் கொண்டு .. பின்பற்றினால் இறைவன் அருள் கிடைத்துவிடும்.

    மேலும் ஒரு திரைப்படத்தில் நகைச்சுவைக் காட்சியாக மக்களால் பெரிதும் ரசிக்கப்பட்ட பாடல் ஒன்றிலும்கூட இவ்வளவு செய்திகள்.. கடவுள் பற்றிய விளக்கங்கள்.. அமைத்துத் தர முடியும் என்று அறியும்போது வியப்பின் விளம்பிற்குச் செல்லாதார் யார்?

    மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் பாடியவர் – டி எம் செளந்திரராஜன் ..

    யாரைப் பாராட்டுவது என்று அறிய முடியவில்லை…

    tmsநடைபெறும் பரபரப்பான உலகில் எப்படி வாழ்ந்து மறைந்த கவிஞன் ஒருவரின் பாடல்களை எடுத்து இப்படி விளக்கங்கள் கொடுக்க முடிகிறது என்று நண்பர்கள் பல நேரம் என்னிடம் கேட்பதுண்டு.  வள்ளுவன் கூட வாழ்ந்து மறைந்தவன்தான்.. அவர் கருத்துக்கள் இன்றும் குறள் வடிவில் இவ்வுலகம் ஏற்றுக்கொள்ளவில்லையா? தமிழ்கூறும் நல்லுலகில் பல்வேறு கவிஞர்கள் அவ்வப்போது தோன்றி அரியபல கருத்துக்களை, வாழ்வின் அர்த்தங்களை நமக்குத் தருகின்றார்கள். அப்படி.. நாம் வாழ்கின்ற நூற்றாண்டில் நம் கண்முன்னே வாழ்ந்து மறைந்த மாபெரும் கவிஞரின் படைப்புகளில் உள்ள முத்துக்களைக் கண்டெடுக்கும்போது.. அதனை தமிழ்மக்கள் அறியத்தருவதை என் கடமையாகக் கருதுகிறேன்.

    நீயே உனக்கு என்றும் நிகரானவன்
    நீயே உனக்கு என்றும் நிகரானவன்
    அந்தி நிழல் போல் குழல் வளர்த்த தாயாகி இவன் வந்தவன்
    நீயே உனக்கு என்றும் நிகரானவன்
    அந்தி நிழல் போல் குழல் வளர்த்த தாயாகி இவன் வந்தவன்
    வாய் வேதம் கை மீறி விழி அன்பு மொழி கருணை
    கருணை…கருணை…கருணை…கருணை…
    வாய் வேதம் கை மீறி விழி அன்பு மொழி கருணை
    வடிவாகி முடிவற்ற முதலான இறைவன்
    நீயே உனக்கு என்றும் நிகரானவன்
    அந்தி நிழல் போல் குழல் வளர்த்த தாயாகி இவன் வந்தவன்
    துதி பாடும் கூட்டம் உன்னை நெருங்காதய்யா
    வெறும் யூகத்தில் உன் இதயம் மயங்காதய்யா
    விதிக்கூட உன் வடிவை நெருங்காதய்யா
    விணை வென்ற மனம் கொண்ட
    இனம் கண்டு துணை சென்று வென்ற தெய்வ மலர்
    நீயே உனக்கு என்றும் நிகரானவன்
    அந்தி நிழல் போல் குழல் வளர்த்த தாயாகி இவன் வந்தவன்
    நீயே உனக்கு என்றும் நிகரானவன்
    துதி பாடும் … துதி பாடும் … துதி பாடும் … துதி பாடும் …
    துதி பாடும் …துதி பாடும் …துதி பாடும் … பாடும் பாடும் டும் டும்..
    துதி பாடும் …

    திரைப்படம் – பலே பாண்டியா

    இசை – மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி

    பாடியவர் – டி எம் செளந்திரராஜன் மற்றும் வி.ராஜூ

    நீயே உனக்கு என்றும் நிகரானவன்

    இசை உலகில் 65 ஆண்டுகளாக அனுபவம் பெற்ற திரு. வி. ராஜூ அவர்கள் 84 வயதில் சமீபத்தில் இயற்கை எய்தினார். வீணை, மாண்டோலின், சிதார், சந்தூர் வாசிப்பதிலும் மற்றும் கொன்னக்கோல் சொல்வதிலும் வல்லவர். இந்த பாடலில் திரு எம். ஆர். ராதா அவர்களுக்கு ஜதி சொல்வது அவர் தான்.

    இந்தப் பாடல் “பலே பாண்டியா” என்ற படத்தில் வருகிறது. திரு. டி. எம். எஸ். அண்ணா அவர்கள் நடிகர் திலகத்துக்கும் பாடியிருப்பார். படக்காட்சியில் எம். ஆர். ராதா அவர்களின் சேஷ்டைகளை ரசிக்காதவர் எவரும் இருக்கமாட்டார்கள்.

    https://www.youtube.com/watch?v=b3ku7VgUi30

    Share
  • மனதில் நிறைந்த மக்கள் திலகம்

    ஷேக் சிந்தா மதார்

    mgrநேற்று இன்று நாளை

    ‘தோன்றிற் புகழொடு தோன்றுக’ என்ற வள்ளுவரின் வாக்குக்கேற்பவும், ‘இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்லவேண்டும் இவர்போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்’ என்ற தனது சொல்லுக்கேற்பவும் வாழ்ந்து மறைந்தவர்தான் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரையுலகில் நடிகராக நுழைந்து, இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் உயர்ந்தவர்.

    ‘மருதூர் கோபாலமேனன் ராமச்சந்திரன்’ என்ற இயற்பெயரைச் சொன்னால் பெரும்பாலா-னோரால் புரிந்துகொள்ள இயலாது. சுருக்கமாக எம்.ஜி.ஆர் என்றால் இளைய தலைமுறை-யினர்கூட புரிந்து புன்முறுவல் பூக்கின்றனர்.

    1917 ஜனவரி 17 அன்று கோபாலமேனன் – சத்தியபாமா தம்பதியருக்கு மகனாக இலங்கையில் பிறந்து, இள வயதில் கேரளாவில் வளர்ந்தார் அவர். சென்ற தலைமுறையும் இந்தத் தலைமுறையும் மட்டுமின்றி இனி வரும் தலைமுறைகளும் அவர் புகழைப் பேசும்.

    உழைக்கும் கரங்கள்

    தந்தையின் மறைவுக்குப்பின் ‘மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி’யில் நடிகராகச் சேர்ந்த எம்.ஜி.ஆர், சதி லீலாவதி மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்தார். மந்திரிகுமாரி மலைக்கள்ளன், அலிபாபாவும் 40 திருடர்களும் ஆகியவை அவரைப் பிரபலமாக்கின.

    நாடோடி மன்னன், உலகம் சுற்றும் வாலிபன், மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் ஆகியவை அவர் இயக்கிய திரைப்படங்கள்.. இவற்றில் நாடோடி மன்னன் அவரது சொந்தத் தயாரிப்பாகும். அவர் தயாரித்த மற்றுமொரு படம் அடிமைப்பெண். சிறந்த நடிகருக்கான விருதுகள் எங்க வீட்டுப் பிள்ளைக்கும் ரிக்ஷாக்காரனுக்கும் அவருக்குக் கிடைத்தன. அடிமைப்பெண் சிறந்த படமாகத் தேர்வு பெற்றது. பல வெளிநாடுகளில் படமாக்கப்பட்ட உலகம் சுற்றும் வாலிபன் அதற்கு முந்தைய எல்லா ரிக்கார்டுகளையும் முறியடித்து வசூலில் சாதனை புரிந்தது. அவர் நடித்த கடைசிப் படம் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்.

    அவரது கடின உழைப்பையும் முன்னேற்றத்தையும் அங்கீகரித்து அவரது மறைவுக்குப்பின் இந்திய அரசு பாரத ரத்னா விருது வழங்கி கௌரவித்தது.

    தாயின் மடியில்

    பொதுமக்களின் – குறிப்பாகத் தாய்க்குலத்தின் – மனங்களைக் கொள்ளை கொள்ளும் கதாபாத்-திரங்களாகவே தேர்ந்தெடுத்து நடித்தார், எம்.ஜி.ஆர். கன்னித்தாய், தெய்வத்தாய், தாய்க்குப்பின் பாசம், தாய் சொல்லைத் தட்டாதே, என்று தாயை மையமாக வைத்தே பல படங்களில் நடித்தார். புகை பிடிப்பது, மது அருந்துவது போன்ற காட்சிகளில் நடிக்க மறுத்தார்.

    நினைத்ததை முடிப்பவன்

    இதர கதாநாயகர்களைப் போலன்றி, எம்.ஜி.ஆர் தன் படங்களில் பாடல்களுக்கும் மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து வந்தார். பாடல் பதிவின்போதும் இசையமைப்பிலும் கூடவே இருந்து உன்னிப்பாகக் கவனிப்பதுடன் சில திருத்தங்களும் சொல்வார். தான் நினைத்தபடியே பாடல் திருப்திகரமாக வரும்வரை அவர்களை விடமாட்டார். அதனாலேயே வர்த்தகரீதியாக வெற்றி பெறாத அவரது சில படங்களில்கூடப் பாடல்கள் இனிமையாக அமைந்தன.

    தனிப்பிறவி

    அவரது திரைப்படப் பாடல்கள் சிலவற்றில் அவரது புனைப்பெயர்கள் இடம் பெற்றதுண்டு (புரட்சித் தலைவன் நீ, பொன்மனச் செம்மலைப் புண்படச் செய்தது யாரோ? வானகமே உருகாதோ வள்ளல் முகம் பாராமல்?). திரையுலகில் அவருக்குச் செல்லமாக ‘சின்னவர்’ என்றொரு பெயர் இருந்தது. அதையும் விட்டு வைக்கவில்லை நம் பாடலாசிரியர்கள் (சேலத்துப் பட்டென்று வாங்கி வந்தார் அந்தச் சின்னவரைப் போய்க் கேளும்).

    வேறு பல நடிகர்களுக்கும் பட்டப் பெயர்கள் இருந்தபோதிலும் அவை அந்த நடிகர்களின் பாடல்களில் இடம் பெறவில்லை. இந்தப் பெருமை எம்.ஜி.ஆர். ஒருவருக்கே சொந்தம்.

    என் கடமை

    கவிஞர் கண்ணதாசனுடன் கருத்து வேறுபாடு கொண்டு ‘தன் படங்களுக்கு அவர் பாடலே எழுதக்கூடாது’ என்று தீர்மானித்திருந்தார். ஆனால் பணத்தோட்டம் படத்திற்கு அவர் எழுதியிருந்த ‘பேசுவது கிளியா?” என்ற பாடலில் ‘சேரனுக்கு உறவா செந்தமிழர் நிலவா?’ என்ற வரியை ரசித்தவாறே கோபம் தணிந்து அதைச் சேர்த்துக் கொள்ளச் சம்மதித்தார்.

    உலகம் சுற்றும் வாலிபன் தயாரிப்பில் இருந்த சமயம் ஒருநாள் கவிஞர் வாலியிடம், “இந்தப் படத்தில் நீ கிடையாதய்யா” என்று எம்.ஜி.ஆர். சொல்ல, வாலி “அதெப்படி? என் பேரு இல்லாம இந்தப் படம் வெளியாயிடுமா?” என்று வாதிட்டார். இறுதியில் கவிஞர், “சரி, அப்படின்னா ‘வாலி’ங்கற என் பேரே இல்லாமே இந்தப் படத்தை ‘உலகம் சுற்றும் பன்’ அப்படின்னு மாத்தி வெளியிடுங்க, பார்ப்போம்?” என்றார். வாய்விட்டுச் சிரித்த எம்.ஜி.ஆர், அவருக்கும் அதில் பாட்டெழுத வாய்ப்பளித்தார்.

    ஒருமுறை டி.எம். சவுந்தரராஜன் மேல் கோபம் கொண்டு, தனது சொந்தப் படமான அடிமைப்பெண்ணுக்கு எஸ்.பி. பாலசுப்ரமணியத்தை விட்டே பாட வைத்து ஒலிப்பதிவு செய்தார். ஆனால் ‘தாயில்லாமல் நானில்லை, ‘உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது போன்ற உணர்ச்சி கொந்தளிக்கும் பாடல்களை இந்தப் புதிய குரலில் கேட்க மக்கள் துணிவார்களா?’ என்ற சந்தேகம் தோன்றவே, தன் வைராக்கியத்தைத் தளர்த்திக்கொண்டு டி.எம்.எஸ்.ஸையே திரும்ப அழைத்துப் பாடச் செய்தார். எஸ்.பி.பி. கேட்டுக்கொண்டதன் பேரில் ஆயிரம் நிலவே வா என்ற பாடலை மட்டும் தக்க வைத்துக்கொண்டார் (அந்தப் பாடல்தான் எஸ்.பி.பி.யின் திரையுலக வாழ்க்கைக்கே திருப்புமுனையாக அமைந்தது).

    தன் எதிரிகளையும்கூட அன்புடனும் நேசத்துடனும் வைத்திருக்க வேண்டும் என்பதைத் தன் கடமையாகவே கருதிச் செயல்பட்டார்.

    இதயக்கனி

    ஆரம்பத்தில் காங்கிரஸில் இருந்த எம்.ஜி.ஆர், அறிஞர் அண்ணாவின் வசீகரப் பேச்சுகளால் கவரப்பட்டு தி.மு.க.வில் இணைந்தார். பின்னாளில் அண்ணாவே எம்.ஜி.ஆரின் வசீகரத்தால் கவரப்பட்டு அவரைத் தன் இதயக்கனி என்று அறிவித்தார். சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.ஜி.ஆர், அண்ணாவின் மறைவுக்குப் பின் பொருளாளரானார்.

    1972யில் கருணாநிதி தன் மகன் மு.க. முத்துவைத் திரையுலகில் களமிறக்கினார். பிள்ளையோ பிள்ளை, பூக்காரி போன்ற படங்களில் எம்.ஜி.ஆர். மாதிரியே ஒப்பனைகள் செய்து நடிக்க வைத்தார். ‘திரையுலகை விட்டுத் தன்னை விரட்டவே கலைஞர் நாடகமாடு-கிறார்’ என்பதை சூசகமாகப் புரிந்துகொண்ட எம்.ஜி.ஆர், ஊழல் குற்றச்சாட்டை அவர் மீது சுமத்தி, “கட்சியின் கணக்குகளைக் காட்ட முடியுமா?” என்று சவால் விட்டார். கோபமுற்ற கருணாநிதி அவரைக் கட்சியிலிருந்தே நீக்கினார்.

    ‘அண்ணா திராவிட முன்னேற்றக் கழக’த்தைத் தொடங்கினார், எம்.ஜி.ஆர்.. அவரது சினிமா பாப்புலாரிட்டியால் கோடிக்கணக்கான மக்கள் அதில் இணைந்தனர். 1977யில் நடந்த பொதுத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தார். திரைப்பட நடிகராக இருந்து முதலமைச்சராக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த முதல் நபர் அவர்தான். 1987யில் முதலமைச்சர் பதவியிருந்தபோதே மரணமடைந்தார்.

    முகராசி

    1967யில் சட்டமன்றத் தேர்தலுக்காக தி.மு.க. தயாராகிக்கொண்டிருந்தபோது அண்ணாவிடம் எம்.ஜி.ஆர், “தேர்தல் நிதியா நான் எவ்வளவு தரணும்ண்ணா?” என்றதற்கு அண்ணா, “உன் பணம் தேவையில்லே தம்பி, உன் முகம்தான் தேவை. பிரச்சாரக் கூட்டங்கள்லே நீ வந்து முகத்தைக் காட்டு. அப்புறம் நமக்குத்தான் ஓட்டு” என்றார். அதன்படியே எம்.ஜி.ஆரின்  பிரச்சாரங்களிலெல்லாம் கூட்டம் அலை மோதியது. அதிக வாக்குகளுடன் தி.மு.க. வென்றது.

    சிரித்து வாழ வேண்டும்

    எங்க வீட்டுப் பிள்ளை படத்தின் வெள்ளிவிழாக் கொண்டாட்டம் திருநெல்வேலியில் நடைபெற்றபோது, நடிகர் நடிகைகள் அனைவரும் பேசி முடித்தபின் கடைசியாகப் பேச வந்தார் எம்.ஜி.ஆர். அப்போது கூடுதலாக இன்னொரு மைக் வைக்கப்பட்டது. உடனே நம்பியார் வந்து, “நாங்க இத்தனை நடிகர் நடிகைங்க பேசறப்போ ஒரே ஒரு மைக்கை வச்சிட்டு இப்போ உங்களுக்கு மட்டும் ஏன் ரண்டு?” என்றார். “படத்திலேதான் என்கூட ஒரே சண்டை போட்டீங்க, இங்கேயுமா?” என்று எம்.ஜி.ஆர். பதில் சொல்ல, கூட்டம் ஆர்ப்பரித்தது. “இப்படியெல்லாம் பிரச்னையைத் திசை திருப்பாதீங்க, உங்களுக்கு மட்டும் ஏன் ரண்டு மைக்? அதுக்கு விளக்கம் சொன்னாலே ஆச்சு” என்றார் நம்பியார், விடாப்பிடியாக. உடனே எம்.ஜி.ஆர், “நான் படத்திலே ரண்டு வேஷத்திலே நடிச்சேனில்லையா? அதனாலேதான்” என்று ஒரு கணம்கூடத் தயங்காமல் சொல்லவும், சிரிப்பலை அடங்க வெகுநேரமாயிற்று.

    நல்ல நேரம்

    1967யில் ஒருநாள் எம்.ஜி.ஆர். வீட்டுக்கு எம்.ஆர். ராதா சென்றபோது பெற்றால்தான் பிள்ளையா படம் குறித்து அவர்களிடையே வாக்குவாதம் முற்றியது, சட்டென்று தன் கைத்துப்பாக்கியால் எம்.ஆர். ராதா எம்.ஜி.ஆரைச் சுட, இரு குண்டுகள் அவரது காதைத் துளைத்தன. இந்தச் சம்பவத்திற்குப் பின் எம்.ஜி.ஆரின் இடது காது பழுதடைந்து போய், பேசும் சக்தியும் பாதிக்கப்பட்டது. அறுவைச் சிகிச்சை செய்துகொண்டு குரலை மட்டும் ஓரளவு நிவர்த்தித்துக் கொண்டார். அவரது நல்ல காலம், பாதிப்பு காதுடன் நின்று போனது.

    நாடோடி மன்னன்

    மிகுந்த பொருட்செலவில் முதல் சொந்தப் படமாக நாடோடி மன்னனைத் தயாரித்தபின், ‘படம் நன்றாக ஓடுமா?’ என்று எம்.ஜி.ஆருக்கே கவலை பிடித்துக்கொண்டது. அண்ணாவிடம் சென்று தன் கவலையை வெளியிட்டார். அண்ணா தனக்கேயுரிய நகைச்சுவை உணர்ச்சி-யுடன் சொன்னாராம். “ஓடிட்டா நீ மன்னன், ஓடாமப் போனா  நாடோடி”

    தர்மம் தலை காக்கும்

    வறுமையுற்ற ஏழைகளுக்கு வாரி வழங்குவதில் வள்ளலாய்த் திகழ்ந்தார் எம்.ஜி.ஆர். புயல், வறட்சி, வெள்ளம் போன்ற பேரழிவுகளின்போது தாராளமாக நிதியுதவி செய்வார். 1962யில் சீனாவுடன் போர் மூண்டபோது யுத்தநிதியாக ரூ. 75 ஆயிரம் கொடுத்தார். கடவுள் நம்பிக்கை அதிகம் இல்லாதபோதிலும் கேரளாவிலுள்ள மூகாம்பிகை கோவிலுக்கு அரைக் கிலோ எடையுள்ள தங்க வாள் ஒன்றை அன்பளிப்பாகக் கொடுத்தார். அவரது தர்ம குணம்தான் பல சந்தர்ப்பங்களில் அவரது உயிரைக் காப்பாற்றியது என்பது மக்களின் திடமான நம்பிக்கை.

    பாசம்

    புரூக்ளின் மருத்துவமனையில் எம்.ஜி.ஆர். சிகிச்சை பெற்று வந்த சமயம் சிவாஜி கணேசன் தன் மனைவி கமலாவுடன் அமெரிக்கா சென்று சந்தித்து நலம் விசாரித்தார். இருவரும் வெளியேறியபின் கமலாவை மட்டும் உள்ளே அழைத்த எம்.ஜி.ஆர். “கமலா, தம்பிக்கு அதிகமா கருவாடு கொடுக்காதேம்மா” என்றார். “நான் அதிகமாக் கருவாடு சாப்பிட்டதாலே உப்புச் சத்து கூடிப் போய், ஆஸ்பத்திரியிலே வந்து கிடக்கறேன். இந்தக் கதி தம்பிக்கு வந்திடக் கூடாதும்மா” என்று அவர் சொன்னதும், ‘அவர் இவ்வளவு கஷ்ட நிலையில் இருக்கும்போதும் தன் கணவர்மேல் இத்தனை பரிவும் பாசமும் காட்டுகிறாரே’ என்றெண்ணிய கமலாவுக்குக் கண்ணீரே வந்துவிட்டதாம்.

    ஆயிரத்தில் ஒருவன்

    ‘அவரது திரைவாழ்க்கை அரசியலுக்கு உதவியதா, அல்லது அரசியல்தான் திரையுலகுக்கு ஆதரவாக இருந்ததா?’ என்று கேட்பது, ‘முட்டை முதலில் வந்ததா கோழி முதலில் வந்ததா?’ என்று கேட்பதற்கு ஒப்பாகும். அரசியலில் அவர் கால் பதித்தபின் இரண்டும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தே இருந்தன.

    வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார்?’ என்ற தன் கேள்விக்கு, தானே பதிலாக வாழ்ந்து மறைந்த மாமனிதர் அவர். அவரது புகழ் நீடூழி வாழ்க!

    Share
  • என்னதான் இருக்கிறது வேதத்தில்?– 46

    –சு. கோதண்டராமன்.

     

    பக்தி மாத்திரம்தான் உண்டு

     

    praying-figurine

     

     

    பொதுவாக, யக்ஞம் செய்வதை ஆதரிக்காத உபநிடதங்களை ஞான காண்டம் என்றும் அதை ஆதரிக்கும் ஸம்ஹிதை உள்ளிட்ட பிற வேதப் பகுதிகளைக் கர்ம காண்டம் என்றும் சொல்வது வழக்கம்.

    ஸம்ஹிதைகளைப் பொறுத்தவரை அவை யக்ஞங்கள் செய்வதை ஆதரிப்பதாகவும் கூற முடியாது, எதிர்ப்பதாகவும் கூற முடியாது. யக்ஞம்தான் உலகின் மையப் புள்ளி என்றும் யக்ஞம் செய்யாதவர்கள் அழிகிறார்கள் என்று கூறும் ரிக் ஸம்ஹிதை, யக்ஞம் இல்லாமல் பிரார்த்தனை மூலமே தேவர்களை மகிழ்விக்க முடியும் என்றும், யக்ஞத்தை விட உழைப்பு மேலானது என்றும் கூறுவதை முன்பு கண்டோம். சாயணரின் விளக்கம்தான் அதைக் கர்மகாண்ட நூலாக்கியது. அதன் உண்மையான பொருளைப் பார்க்கும்போது அது ஒரு பக்தி நூலாகத்தான் தெரிகிறது.

    ஸம்ஹிதைகளைக் கர்ம காண்டமாகப் பார்க்கும் தத்துவமாகிய பூர்வ மீமாம்சை கர்மா செய்தால் அததற்குரிய பலன் தானே விளையும், இதற்குப் பலதாதாவாகிய ஈச்வரன் ஒருவன் அவசியமில்லை என்று கூறும்.

    இறைவன் என்று ஒருவன் இருப்பதையே மறுப்பதாகக் கூறப்படும் ஸம்ஹிதையில் பக்தி மாத்திரம்தான் உண்டு என்று பாரதி சொல்வதன் விளக்கத்தைப் பார்ப்போம்.

    பக்தி என்பது என்ன? பாரதி வரையறுக்கிறார்- எப்போதும் எப்போதும் எப்போதிலும் எதிலும் எங்கும் நம்மைக் கடவுள் காக்கும் என்ற நம்பிக்கை கொண்டிருத்தல் பக்தி என்று சொல்லப்படும்.

    இறைவனை, என்றும் எங்கும் நம்மைக் காப்பவராக, தனக்கு மிக நெருங்கியவராக- தாயாக, தந்தையாக, நண்பனாக, குழந்தையாகக்- கருதுவது, அவனையே சரணடைவது, அவன் புகழைக் கூறுவது, அவனிடம் தன் குறைகளைத் தெரிவித்து நீக்குமாறு வேண்டுவது, அவனன்றி வேறு ஒருவரையும் நாடாமல் இருப்பது – இதுதான் பக்தியின் அடையாளங்கள்.

                புகழுள்ள உன் நாமத்தை நான் எப்பொழுதும் கூறிக் கொண்டிருப்பேன் என்று  நாம ஜப மஹிமை பற்றிப் பேசுகிறது. 7.22.5

    கற்றாவின் மனம் போலக் கசிந்துருக வேண்டுவனே என்ற மாணிக்க வாசகர் கூற்றின் ஆழ்ந்த பக்தியை இங்கு காணலாம். இந்திரா, நாங்கள் உன்னை மடி நிரம்பிக் கன்றை அழைக்கும் பசுப் போலக் கதறி அழைக்கிறோம். எங்கள் பிரார்த்தனையைச் செவி மடுப்பாயாக என்று வேண்டுகிறது 7.32.22.

    அவனருளாலே அவன் தாள் வணங்கி என்பது போல உன்னைத் துதிக்க வலிமையும் நீயேதான் கொடுக்க வேண்டும் என்று அக்னி வேண்டப்படுகிறார். 5.10.7

                இறைவன் என்னை அறிவான், நான் அவனது செல்வத்தை அனுபவிக்கிறேன். ஆனால் அவனை அறியவில்லை. 5.12.3

                மனதிற்கெட்டாதவன் இறைவன். 5.17.2

    தெய்வத்தை மிக உரிமையுடன் நெருங்கிப் பேசுகிறார் ரிஷி  விரூப ஆங்கிரஸர். அக்னியே, நான் நீயாகவும், நீ நானாகவும் இருந்தால் நான் உன் வேண்டுகோளை உடனே நிறைவேற்றியிருப்பேன் என்கிறார். 8.44.23

    மற்றொரு ரிஷியான காண்வாயனர் என்பவர், நான் இந்திரனாக இருந்தால் என் பக்தன் நிறைய பசுக்களைப் பெறுவான். என்கிறார். 8.14.1 நான் எத்தனை சொன்னாலும் நீ காதில் போட்டுக் கொள்ள மாட்டேன் என்கிறாயே, தெய்வம் என்று பெயர் வைத்துக் கொண்டு இப்படியா இருப்பது என்ற அவர்களது ஆதங்கம் அதில் தொனிக்கிறது.

    இந்திரன் விலை பேசப்படுகிறார். யாராவது இந்த இந்திரனை 10 மாடு கொடுத்து என்னிடமிருந்து விலைக்கு வாங்கிக் கொள்ளலாம். இந்திரனைக் கொண்டு, தங்கள் பகைவர்களை கொன்ற பிறகு, அவனை என்னிடம் திருப்பித் தரலாம் என்கிறது ஒரு மந்திரம். 4.24.10

    நீ எங்களுடையவன், நாங்கள் உன்னுடையவர்கள் என்கிறது ஒரு ரிக்.8.92.32

                இந்திரா, மற்றவர்களுடைய பூசைக்குச் செல்லாமல் முன்னதாக என் பிரார்த்தனைக்குச் செவி மடுப்பாயாக. 10.160.1

                இந்திரா, நீ பிறந்தது முதல் சகோதரனோ வேறு உறவோ இல்லாமல்  இருக்கிறாய். அதனால் என்னை உறவினன் ஆக்கிக் கொள்ள விரும்புகிறாய் என உறவு கொண்டாடுகிறார் ஒருவர். 8.21.13

                தந்தையின் ஆடை முனையைப் பிடித்திழுக்கும் மகனைப் போல நான் உன்னை என் பிரார்த்தனையால் பிடித்திழுக்கிறேன் 3.53.2 என்பது சிக்கெனப் பிடித்தேன் எங்கு எழுந்தருளுவது இனியே என்று மாணிக்க வாசகர் கூறுவதற்கு முன்னோடி.

    அக்னியை, இந்திரனைத் தந்தையாக, உறவினனாக, நண்பனாகப் பாவித்துப் போற்றும் மந்திரங்கள் பல உள்ளன. இதோ ஒரு மந்திரம் மருத்துகளைத் தந்தையாகக் காண்கிறது. மருத்துகளே, தந்தை மகனை அணைத்துக் கொள்வது போல, நீங்கள் என்னை எப்பொழுது இருகைகளாலும் அணைத்துக் கொள்வீர்கள்? 1.38.1

    சூரனே, நீ எங்களை ஒரு குற்றத்துக்காகக் கொல்லாதே, இரு குற்றங்களுக்காகக் கொல்லாதே, மூன்று குற்றங்களுக்காகக் கொல்லாதே, பல குற்றங்களுக்காகக் கொல்லாதே என்ற மந்திரம் 8.45.34 கந்தர் சஷ்டி கவசத்தில் வரும் எத்தனை குறைகள் எத்தனை பிழைகள் எத்தனை செயினும் பெற்றவன் நீ குரு, பொறுப்பது உன் கடன் என்ற வாக்கியத்தை நினைவூட்டுகிறது.

                உன்னை ஒழிய ஒருவரையும் நம்புகிலேன், பின்னை ஒருவரை யான் பின் செல்கேன் என்ற திருமுருகாற்றுப்படையின் பிற்சேர்க்கைப் பாடல் கருத்து  உன்னையன்றி எனக்கு சுகப்படுத்துபவன் எவரும் இல்லை  என்று 8.66.1 இல் காணப்படுகிறது.

                உன் மேல் நம்பிக்கை வைத்துத் தான், இந்திரா, நான் கதிர் அரிவாளுடன் களத்தில் நிற்கிறேன். கை நிறைய தானியங்களை அருள்வாய்  என்று தன் அசைக்க முடியாத நம்பிக்கையை வெளிப்படுத்துகிறார் ஒருவர். 8.78.10

    பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்றுஅறியேன் என்று மணிவாசகர் கூறியதின் முன்னோடி ரிக் 1.7.7 இல் காணப்படுகிறது. இந்திரனைப் புகழும் வகையை நான் அறியேன் என்கிறார் ரிஷி.

                இந்திரன் எனக்கு மட்டுமே உரியவனாகட்டும் என்கிறார் ரிஷி. 1.7.10

    இந்திரன் என்றும் அக்னி என்றும் பல பெயர் கூறி அழைத்தாலும் எல்லாம் ஒன்றேயான அந்தப் பரம்பொருளையே குறிப்பிடுகின்றன என்பதைப் பார்த்தோம்.  வேதத்தில் பல வேறு தெய்வங்களையும் அன்புடன் அழைத்து, தன் மன விருப்பங்களைத் தெரிவித்து அவற்றை நிறைவேற்றுமாறு உரிமையுடன் வேண்டுகின்ற பக்தி மணம் கமழும் மந்திரங்கள் பல உள்ளன.

    படம் உதவி:   http://www.crystalsrocksandgems.com/

    Share
  • அந்தரங்கம்

     ரா. பார்த்தசாரதி.

    (50 வார்த்தைகளுக்குள் ஒரு குறுங்கதை)

     

    photo albumதிருமணம் முடிந்து ஒரு வருடம் நெருங்கிற்று. சுரேஷுக்கு அவசரம்.

    அன்று இரவு சுமதியிடம், “இன்னிக்காவது காட்டுவாயா, இல்லையா?”

    “என்னஅவசரம்? பொறு சுரேஷ் ”

    “ஏமாற்றாதே சுமதி என்றான்” அருகில் சென்று ஒரு முத்தம்.

    “இன்னிக்கு இது போதும், நாளை காட்றேன்”

    மறுநாள் …..

    இரவு சுமதி கதவை மூடினாள். மிக நெருக்கமாக அமர்ந்தாள், திறந்து காட்டினாள் அவர்களின் திருமண புகைப்படங்களை.

    அன்று அவர்களின் திருமணநாள்..

     

     

     

     

     

     

    படம் உதவி: http://imgarcade.com/1/south-indian-wedding-photo-album-design/

    Share
  • “இடி இறங்கியது”

    — தேமொழி.

    (50 வார்த்தைகளுக்குள் ஒரு குறுங்கதை)

    buildingகொட்டும் மழையில் கட்டிடத்தை விட்டு வெளியேறியவன் மனம் வெறுத்திருந்தான். இப்போழுதே உயிர் போனால் எவ்வளவு பிரச்சனை தீரும் என மனம் ஏங்கினான்.

    “காத்திரு, உடனே அங்கு வந்துவிடுகிறோம்” என்று தொலைபேசிய நண்பர்கள்…. இல்லை…. அவனறியாமல் கஞ்சாக் கடத்தலில் அவனை மாட்டிவிட்டிருக்கும் துரோகிகள் சொன்னதைப் பொருட்படுத்தாமல் நடந்தான். கைப்பையிலோ கோடிக்கணக்கான குற்றப்பணம் கனத்தது. தப்பிக்க என்ன வழி?

    பெரும் சப்தம் கேட்டுத் திரும்பியபொழுது இடியிறங்கி அவன் வெளியேறிய கட்டிடம் தரை மட்டமாகியிருந்தது.

     

    படம் உதவி: http://www.stuff.co.nz/the-press/news/christchurch-earthquake-2011/4867859/Death-Zone

    Share
  • மனதில் நிறைந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.

    — திருமதி. மீனாட்சி நாகப்பன்.

    என்னுரை:
    “பச்சைக்கிளி முத்துச்சரம்” . . . . . .என்ற பாடலில்
    “வள்ளல் குணம்” யாரோ . . . . . . . என்ற பாடல் வரிகளின் கதாநாயகர்!

    காவியமாய்! நெஞ்சின் ஓவியமாய்! – காலங்கள் கடந்தாலும் எல்லோர் மனதிலும் என்றும் துடிக்கின்ற இதயமாய் வாழ்கின்றவர் திரு. எம்.ஜி.ஆர் என்றழைக்கப்படும் எம்.ஜி.இராமச்சந்திரன் ஆவார்!

    “இருந்தாலும் மறைந்தாலும் பெயர்சொல்ல வேண்டும்
    இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்” என்கிற பாடல் வரிகளுக்கு உயிர் ஊட்டியவர்! இலக்கண இலக்கியமாய்த் திகழ்ந்தவர்! இவ்வாறு மக்களின் மனதில் மக்கள்திலகமாய் விளங்கிய எம்.ஜி.ஆர் அவர்கள் பற்றிய என் மனத்துளிகள் சில!

    mgrசிறியோர் நலன் சில வரிகள்:
    “திருடாதே பாப்பா திருடாதே..” என்கிற மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் வரிகள்..

    “திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது” என்று டி.எம்.செளந்திரராஜன் அவர்கள் குரலில் பாடினாலும் மக்கள்திலகம் மூலமே அதுபோன்ற பாடல்கள் மக்கள் மனதில் நிலைபெற்று இன்றளவும் பாடப்படுகின்றன!

    ‘சின்னப்பயலே.. சின்னப்பயலே! சேதி கேளடா..
    . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
    ஆளும் வளரணும்.. அறிவும் வளரணும்..
    அதுதாண்டா வளர்ச்சி!” என்று இளம் குழந்தைகளை நோக்கி இனிமையாய் சொன்ன விதமும்,

    தூங்காதே தம்பி தூங்காதே!
    . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . என்ற பாடலில்.. பொன்னான வேலைகள் .. பணி நிறைவு செய்ய காத்திருக்கும்போது தூங்கிக் கழிக்கக்கூடாது என்கிற அறிவுரையைப் பாடலின் மூலம் நடித்துக்காட்டிய விதம் அருமை!

    “நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி
    இந்த நாடே இருக்குது தம்பி!”
    என்று இளைஞர்களுக்கும் திரையிசைப் பாடல்மூலம் திகட்டாத கருத்துக்களை வழங்கியவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள்!

    இளமை இனிமை என்றும் என்றென்றும்:
    “ஹலோ! ஹலோ!! சுகமா..
    ஆமா! நீங்க நலமா..”
    என்று காதலனாய் காதலியுடன் பாடும்விதமும்…

    “மெல்லப் போ மெல்லப் போ
    மெல்லிடையாளே மெல்லப்போ “
    என்று காதலியின் நடையை வருணித்து…

    “தொட்டால் பூ மலரும்..
    தொடாமல் நான் மலர்ந்தேன்”
    என்ற பாடலில் காதலியைப் பார்த்து கண் சிவந்த விதமும், ஒவ்வொரு இளைஞனும் இளைஞியும் அன்றைய காலக்கட்டத்தில் “காதல்” எனும் உணர்வும், உணர்ச்சியும் எழாமல் இருந்திருந்தால் ஆச்சர்யமே! அவ்வளவு இனிமை என்றும் என்றென்றும் காணும்போது!

    நாட்டின் நலனில் பற்றுகொண்ட பாடல்கள்:
    “தாய் மேல் ஆணை! தமிழ்மேல் ஆணை..” என்று சத்தியம் செய்யும் பாடல்! சாத்தியமான பாடல் அது!
    “அச்சம் என்பது மடமையடா!
    அஞ்சாமை திராவிடர் உடமையடா!”
    என்கிற பாடல் பயத்தை நீக்கும் பாடல் அல்லவா?

    “உன்னையறிந்தால் நீ
    உன்னையறிந்தால் உலகத்தில் போரடலாம்
    உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலைவணங்காமல்
    நீ வாழலாம்!”
    என்ற பாடல் உன்னை அறிந்து கொள்! மற்றவர்களை குறை சொல்லுமுன் என்கிறது!

    “நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால். . . . . . . .” என்று பாடிய திரைப்படக் கதாநாயகர், பிறகு தமிழக முதல்வராய் ஆணையிட்டு மக்களின் நலன் காத்தது இறைவனின் அருளாசி!

    1960களில் கொடிகட்டிப்பறந்தவர் திரைப்படங்களில்!
    “அதோ அந்தப் பறவை போல வாழவேண்டும்
    இதோ இந்த அலைகள் போல ஆடவேண்டும்..” என்கிற பாடலில் வாழ்க்கைக் கடலில் துன்ப அலைகள், துயர அலைகள் வரும்.. அதை துடுப்புப்போல் தள்ளிவிட்டு இன்பமயமான வாழ்க்கை தொடர வேண்டும் என்று உணர்ச்சி பொங்க உரைத்தார்!

    மக்கள் பணி:
    திரைப்படங்களில் முதல்வராக… கதாநாயகராக… இருந்த மக்கள்திலகம், மக்களின் முதல்வராக பணியாற்றியது அவர் வாழ்க்கையின் உச்சம்! ஏழை எளிய மக்களுக்குப் பல திட்டங்களைக் கொண்டு வந்து அவர்கள் நலன் காத்த அருட்செல்வர்! சென்னையில் போரூர் செல்லும்வழியில் இராமாபுரத்தைக் கண்டால் எம்.ஜி.ஆரின் நினைவுகளில் மூழ்காதவர் எவரும் இலர்!

    காலஞ்சென்ற காவியத்தலைவன்!
    காரிருள் நீக்கிட வந்த கதிரவன்!
    வாழ்வில் பேரொளி கொடுத்த பெருஞ்சுடர்!
    இன்றளவும் உலகின் நீளமான இரண்டாவது கடற்கரையாம் மெரீனாவிலே வங்கக்கடலோரம் மக்களின் நம்பிக்கைச் சுடராய் காட்சிதருகிறார்!

    “பொதுவாக.. மண்ணைத் தோண்டி தங்கமெடுப்பதைக் அறிவோம்! முதன்முறையாக மண்ணைத்தோண்டி எங்கள் தங்கத்தையல்லவா புதைத்தோம்” என்கிற புலவர் புலமைப்பித்தன் அவர்களின் வைர வரிகளோடு இக்கட்டுரையை நிறைவு செய்ய விரும்புகிறேன்!

    மக்கள் திலகம் பற்றி மனம் நிறைந்தவை:
    சொல்லலாம்! சொல்லிக் கொண்டே இருக்கலாம்! அன்றும் இன்றும் என்றும் … இசையும் பாடலும் இருக்கும்வரை மக்கள் திலகத்தின் படக்காட்சிகள்..மனக்காட்சியாக மனம் நிறைந்து நிலைக்கும்!

    திருமதி.மீனாட்சி நாகப்பன்
    புதுக்கோட்டை

    Share
  • அடிபட்டவர் கை அணைக்குமா?

    –நிர்மலா ராகவன்.

     

    “பிரபா எங்கடா? இன்னுமா வரலே?”

    அலட்சியமாகப் பதிலளித்தான் மகன், “ரெண்டு பஸ் மாத்தி வர கொஞ்சம் முந்திப் பிந்திதான் ஆகும். அதான் சமைச்சு வெச்சுட்டுப் போயிருக்கா, இல்லே?”

    கிழவருக்கு என்னமோபோல் இருந்தது. ஏதோ கரிசனத்தில் கேட்டதாகத்தான் அவர் நினைத்தார். ஆனால், `தன் பெண்டாட்டியை அப்பா என்ன குறை சொல்வது?’என்ற எரிச்சலுடன் இவன் வக்காலத்து வாங்குகிறானே!

    ஐந்து மணிக்கு வேலை முடிகிறது. இப்படியா ஒருத்தி வீட்டு நினைப்பே இல்லாது, ஏழரை மணிக்குமேல் ஆகியும், ஊர் சுற்றிக்கொண்டிருப்பாள்! ஒரு குடும்பப் பெண் சந்தியா காலத்தில் குத்து விளக்கு ஏற்றி வைக்க வேண்டாம்? பின் எப்படி லட்சுமி வீட்டுக்குள் நுழைவாள்? சே! தன்னோடு வாழ்ந்த நாற்பத்து ஐந்து வருடத் தாம்பத்தியத்தில் என்றாவது இப்படி ஒரு அநியாயம் பண்ணியிருப்பாளா அன்னம்மா? பாவம், ஒரே ஒரு தடவைதான் சின்னத் தப்புப் பண்ணிவிட்டாள்!

    அந்த நிகழ்ச்சியின் ஞாபகம் இப்போது சற்று பெருமையாகவும், இனம் புரியாத தாபத்தையும் உண்டாக்கியது. “அண்ணி முறுக்கு பிழிய வரச் சொன்னாங்க. மத்தியானம் திரும்பி வந்துடுவேங்க. போகட்டுமா?” காலையிலேயே அவருடைய உத்தரவைப் பெற்றுத்தான் சென்றிருந்தாள் அன்னம்மா.

    சாயந்திரம் இவர் வந்தபோது, அவள் இன்னும் வீடு வந்து சேரவில்லை என்று தெரிந்ததும் ஆத்திரம் பீறிட்டது. மத்தியானம் வந்துவிடுவதாகத்தானே சொல்லிப் போனாள்? அது என்ன, அண்ணன் வீட்டில் சீராடல் வேண்டிக் கிடக்கிறது, வேலை முடிந்து வீடு திரும்பும் கணவருக்குத் தண்ணி கலக்கிக் கொடுக்க வேண்டுமே என்ற அக்கறைகூட இல்லாமல்!

    ஏதோ அனாதரவாக விடப்பட்டதுபோல பயம், கலக்கம். ஒவ்வொரு முறை சுவர்க்கடிகாரத்தில் கண் பதிந்தபோதும், இவருடைய வெப்பம் அதிகரித்தது. ஒரு வழியாக, எட்டு மணிக்கு வாடகைக்காரில் வந்து இறங்கினாள் மனைவி. “எவனோடடி சுத்திட்டு வர்றே?” தெருக்கதவை மறைத்தபடி இவர். எதிர்பாராத அதிர்ச்சியில் அவளுக்கு வாயடைத்துப்போயிற்று.

    எண்ணெய்ப் புகை பொறுக்க முடியாது, வாந்தியும், மயக்கமுமாக இருந்ததை எங்கே சொல்லவிட்டார்! இரவு முழுவதும், வார்த்தைகளாலேயே குதறி எடுத்தார். அவள் எந்தவித எதிர்ப்பும் காட்டாது, எல்லா அவமானங்களையும் ஏற்றது அவருக்குத் திருப்தியாக இருந்தது. இதுபோல பல சம்பவங்கள்.

    “பிரபா வரபோதே பசியோட வருவா, பாவம்! எல்லாத்தையும் சுட வைக்கணும்,” என்றபடி, உள்ளே போனான் பாலு.

    கிழவர் உதட்டைச் சுழித்துக்கொண்டார். அடுப்பின்மேல் சீனிச்சட்டியை (வாணலி) வைத்தவன், பேச்சுக்குரல் கேட்டு, காஸ் அடுப்பைச் சிறியதாக எரியவிட்டு, அவசரமாக வெளியே வந்தான்.

    அவன் பயந்தபடியே, “ஏம்மா? மழையும் சாரலுமா இருக்கில்ல? ஏதாவது கனமான புடவையைக் கட்டிட்டுப் போயிருக்கக் கூடாது?” என்றவாறு மருமகளை வரவேற்றுக் கொண்டிருந்தார் கிழவர். `இப்படி உடல் தெரிய நைலக்ஸ் புடவை கட்டிக்கொண்டு, அதிலும், தலைப்பை ஒற்றையாக விட்டுக்கொண்டு இருக்கிறாயே! எல்லாத் தடியன்களுடைய பார்வையும் ஒரே மாதிரி இருக்குமா?’ என்று மனதுக்குள் அவர் திட்டிக்கொண்டது அவளுக்கா புரியாது!

    எதுவும் பேசாது, மாமனாரை முழுவதாக ஏறிட்டுப் பார்த்துப் புன்னகைத்துவிட்டு, உள்ளே போக யத்தனித்தாள். கணவனைக் கண்டதும், அவளது புன்னகை விரிந்தது. “சாப்பாட்டைச் சுட வைச்சுட்டீங்களா? அப்பாடி! பசி கொல்லுது,” என்றபடி சாப்பாட்டு மேசைமுன் நாற்காலியில் சாய்ந்து அமர்ந்தாள்.

    லஞ்ச் டைம்கிழவரின் உணர்ச்சிகள் கொந்தளித்தன. ஆண்பிள்ளையாய் லட்சணமாய், தான் அவனுடைய அம்மாவை `வைக்க வேண்டிய இடத்தில்’ வைத்திருந்ததைப் பார்த்து வளர்ந்திருந்த பிள்ளை! இன்று பெண்டாட்டிக்குக் குடை பிடிக்கிறான்! இந்தக் காலத்துப் பயலுகளே மோசம்! வெட்கம் கெட்டவனுங்க! கிழவரின் கைகள் இறுகி, வலித்தன.

    அப்பா! சாப்பிட வர்றீங்களா?”

    ஏதோ, இப்போதாவது அப்பா ஞாபகம் வந்ததே! எந்தக் காலத்தில் அவர் சாப்பிடுமுன் அவர் மனைவி சாப்பிட்டு இருக்கிறாள்! கல்யாணத்தன்று மட்டும், `சம்பிரதாயம்’ என்ற பெயரில், இருவரையும் ஒன்றாக உட்காரச் சொல்லி, சாப்பிட வைத்தார்கள்.

    ஹூம்! காலம்தான் எவ்வளவு கெட்டுவிட்டது! இன்று, இந்த சின்னப்பெண் முதலில் உட்கார்ந்துகொண்டு, அதிகாரமாய் சாப்பிடுகிறது, வீட்டுக்குப் பெரியவன் நான் — ஒரு ஆண்பிள்ளை — பசியோடு இருப்பேனே என்கிற பயமோ, மரியாதையோ கொஞ்சமும் இல்லாமல்! வேண்டாவெறுப்புடன் உள்ளே போனவருக்கு, கையை மட்டும் கழுவிவிட்டு பிரபா சாப்பிட்டுக்கொண்டிருந்தது கண்ணை உறுத்தியது. அடக்க மாட்டாது, “ஏம்மா, பிரபா! வெளியில அலைஞ்சுட்டு வந்தது கசகசன்னு இல்லே? குளிச்சிருக்கலாமே!” என்று அவளைக் கேட்டபோது, தன்மேலேயே கோபம் எழுந்தது. கேவலம், ஒரு பெண்ணுக்கு மரியாதை கொடுத்துப் பேசவேண்டி வந்துவிட்டதே என்று குன்றிப்போனர்.

    பட்டென்று அவள் புத்தியில் உறைக்கிறமாதிரி, `பொம்பளையா, லட்சணமா, வீட்டுக்கு வந்ததும் புருஷனையும், மாமனாரையும் கவனிச்சுக்கறதை விட்டுட்டு, இப்படி ஊர் சுத்திட்டு, அதிலும் வெக்கமில்லாம, கட்டின புருஷனையே வீட்டு வேலை செய்ய விட்டுட்டு, என்னமோ மகாராணிமாதிரி சாப்பிட ஒக்காந்துட்டியே! எழுந்திருடி, சரிதான்!’ என்று பொரியத் துடித்தார்.

    ஆனால், `மகன்’ என்ற பெயரில் யமன் அல்லவோ அவருக்கு வாய்த்திருந்தான்! கல்யாணம் ஆவதற்கு முன்பே அவருக்கு வாய்ப்பூட்டு போட்டிருந்தான்: `நீங்க ஒங்க காலத்தையே நெனைச்சுக்கிட்டு, வர்றவளையும் விரட்டிக்கிட்டு இருக்காதீங்க. எனக்குப் பிடிக்காது!’ சிறு வயதிலேயே முரடன் அவன். அன்னம்மா சாம்பாரில் அதிகமாக உப்பு போட்டுவிட்ட குற்றத்துக்காக அவளை அடிக்க இவர் கையை ஓங்க, பதினாறு வயதுப் பையனாக இருந்த அவன், ஓங்கிய கையை இறுகப் பிடித்துக்கொண்டு, `அம்மாமேல இன்னொரு தடவை ஒங்க கை பட்டுச்சோ.., அதை வெட்டி எறிஞ்சுடுவேன், ஆமாம்!’ என்று உறுமியவன் ஆயிற்றே!

    வயதான காலத்தில், வருவாயோ, வேறு போக்கிடமோ இல்லாத நிலையில், இவனைப் பகைத்துக்கொண்டால், யாருக்கு நஷ்டம்? தலையை அளவுக்கு மீறி குனிந்தபடி சாப்பிடுவதாகப் பாவனை செய்தாலும், அந்தத் தம்பதியரிடையே உண்டான சங்கேதக் குறிப்புகளும், கண் சிமிட்டலும் அவருக்குத் தெரியாமல் போகவில்லை.

    தன் தாம்பத்தியத்தில் மட்டும் ஏன் இப்படி — நினைத்து, நினைத்து ஆனந்தப்படும்படி — எதுவுமே நிகழவில்லை? அன்னம்மா ஏன் இந்த ஒரு விஷயத்தில் மட்டும் ஒத்துழைக்கவில்லை? மற்ற எல்லா விதத்திலும் அனுசரித்துப்போனாளே?

    `உங்களால் என் உணர்ச்சிகளைக் கிளற முடியாது!’ என்ற வீம்பு பிடித்தவள்போல், மரக்கட்டையாய் படுக்கையில் கிடந்த மனைவி அவருடைய ஆண்மைக்கே சவால் விடுவது போலிருந்தது. அவளுடைய அப்போக்கு பொறுக்காதுதானே நொந்த மனதுக்கு ஆறுதல் தேடி, கண்ட பெண்களை நாடிப் போனார்!

    அப்பெண்களும் அவரது ஸ்பரிசத்துக்காக ஏங்கிக் காத்திருந்ததுபோல் நடந்துகொண்டது தான் அள்ளிக் கொடுத்த காசுக்குரிய நடிப்பாக இருக்கும் என்று அவர் நம்பத் தயாராக இல்லை. இதமாகத்தான் இருந்தது. தனக்கு மனைவியாக வாய்த்தது பெண் ஜன்மமே இல்லை என்று குமுறினார். அவள்மேல் விளைந்த இளக்காரமும், அது தோற்றுவித்த பலாத்காரமும் மேலும் வலுப்பட்டன.

    லஞ்ச் டைம்கை கழுவியபடியே பிரபா திரும்பினாள். “இன்னிக்கு ஒரு வேடிக்கை,” என்று கணவனிடம் ஆரம்பித்தாள். “எங்கூட வேலை செய்யற ஜெயா இல்லே, அவ வீட்டுக்குப் போன் பண்ணினா — பிள்ளைகூட பேச. அதுக்கு மூணு வயசு. அம்மாகூட பேசமாட்டேன்னு அது அடம் பிடிக்க, இவ திரும்பத் திரும்ப போன் போட்டுக் கெஞ்ச..!” பிரபாவுக்குச் சிரிப்பு பொங்கி வந்தது.

    “அதிசயமா இருக்கே!” வாயில் போட்டிருந்த கவளத்தை விழுங்காமலே அவளுடைய கதையில் ஆர்வம் காட்டினான் பாலு.

    “ஆமா!” நொடித்தாள். “கண்டிப்பு என்கிற பேரிலே இவ ஓயாம அந்தப் பையனை அடிப்பாளாம். அதை எங்க எல்லார்கிட்டேயும் தினமும் பெருமையா சொல்லிக்கறது இருக்கே! இப்ப இவளுக்கு வேணும்கிறபோது, `ஓடி வந்து என் கழுத்தைக் கட்டிக்க’ன்னா?”

    கிழவருக்குச் சட்டென்று புரையேறியது.

    இந்தச் சின்ன விஷயம் ஏன் தனக்குப் புரியாமல் போய்விட்டது? பெற்ற குழந்தையாக இருந்தால் என்ன, கட்டிய மனைவியாக இருந்தால்தான் என்ன, அன்பை நாம் முதலில் கொடுத்தால்தானே அதைத் திரும்பப் பெறமுடியும்! மனைவியின் போக்கை நிர்ணயித்ததே தான்தான் என்று புரிந்தபோது, அந்த வேதனை அவ்வயோதிகர் முகத்தில் படர்ந்தது. அடிவயிற்றிலிருந்து இரும ஆரம்பித்தார்.

    மெதுவாச் சாப்பிடுங்க, மாமா,” என்றாள் பிரபா கனிவுடன். “சாப்பிடறபோது நான் பேசியிருக்கக்கூடாது!”

    (நயனம், 1993, மின்னூல் தொகுப்பு)

    படம் உதவி: http://image1.masterfile.com/em_t/06/58/52/6100-06585213er.jpg

    Share
  • கோபூஜை

    — மீ.விசுவநாதன்.

    சத்யவாகீஸ்வரன் என்ற சத்யாவுக்கு முப்பத்திரெண்டு வயது இந்த மாதம் முப்பதாம் தேதியன்றே முடிந்து விட்டது. அவன் கணக்கில் புலி. அதனால் அவன் விரும்பி “பீகாம்” சேர்ந்து, குடும்பச் சூழ்நிலையால் அதற்குமேல் தொடர்ந்து படிக்க விரும்பாமல் வேலையைத் தேடிக்கொண்டான். சென்னையில் “பாரீஸ் கார்னரில்” ஒரு சிறிய கம்பெனியில் ரூபாய் பத்தாயிரத்திற்கு வேலை அமைந்து தனது திறமையாலும், நேர்மையாலும் தன்னுடைய இருபத்தி எட்டாம் வயதில் ரூபாய் இருபதா யிரமாக அது உயரக் கடினமாக உழைத்தவன். இப்போது அது நாற்பதா யிரமாக உயர்ந்து விட்டது. அவனுக்குத் திருமணமாகி இரண்டரை வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறாள். கோமதி அவனுடைய மனைவி. நன்றாகப் பாடுவாள். கோமதி, கல்லூரிக்குச் சேர்ந்த மூன்று மாதத்தில் சத்யாவின் அம்மா பார்வையில் ஒரு அழகான பெண்ணாகத் தெரிந்ததால், பெரியோர்களால் உடனேயே நிச்சயம் செய்யப் பட்டு நடந்தது கல்யாணம். அதனால் கோமதி கல்லூரிப் படிப்புக்கு “டாட்டா” சொல்லிவிட்டாள். இப்போதைக்குக் குழந்தையைக் கவனிப்பதே அவளுக்கு முக்கியமாகவும், மனதுக்கு இன்பமாகவும் இருக்கிறது. மாமனார் காலமாகி இரண்டு வருடம் ஆகப்போகின்றது. மாமியார் மிகவும் தன்மையானவராகவும், அனுசரணையாகவும் இருப்பது கோமதிக்கு மிகவும் பிடித்திருந்தது.

    சத்யாவுக்கு சின்ன வயதிலேயே உபநயனம் நடந்து விட்டது. சத்யா நன்கு மனதை நிறுத்தி மந்திரங்களும் சொல்லுவான். அவனுக்கு அவனுடைய அப்பாவே அந்த மந்திரங்களுக்குரிய அர்த்தங்களையும் சொல்லிக் கொடுத்ததால், அவனுக்கு வேதத்திலும், வேதவாழ்கை முறையிலும் சிறுவயது முதலே ஈர்ப்பு ஏர்ப்பட்டிருந்தது.

    அவனுடைய அப்பா, அவனுக்குச் சின்ன வயதில் அவர்களது வீட்டின் வாசலில் வரும் கருப்பு நிறத்தில் வெள்ளைப் புள்ளி போட்ட, அகன்ற நெற்றியும், வழவழக் கொம்பும், அழகிய பெரிய கண்களையும் கொண்ட ஒரு பசுமாட்டிற்கும், அதன் வெள்ளை நிறக் கன்றுக் குட்டிக்கும் பழங்களும், கழுநீரும் தரச்சொல்லி,”வாயில்லா ஜீவன்….கோந்தே…இதோட ஒடம்பு பூராவும் தேவதைகள் நிறைஞ்சு இருக்கா…மெதுவாத் தொட்டு ஒன்னோட கண்ணுல ஒத்திக்கோ…” என்று சத்யாவின் இரண்டு கைவிரல்களையும் அந்தப் பசுவின் மீது வைத்து அந்த விரல்களைக் கொண்டே அவனது இரு விழிகளையும் மெல்லத் தடவி விட்டதை சத்யா இப்போதும் நினைத்துக் கொள்வதுண்டு. “பசு தேவதை. நமக்காகப் பால்தரும் அம்மா” என்றெல்லாம் சத்யாவின் அப்பா சொல்லிச் சொல்லியே வளர்த்ததால் அவனுக்குப் பசுவைப் பிடிக்கும். அதனால் அம்மாவையும் மிகவும் பிடிக்கும்.

    ஒருநாள் அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு வந்து கை கால்களைக் கழுவிவிட்டு, நடு அறையில் உள்ள ஒரு நாற்காலியில் அமர்ந்த சத்யாவிடம்,” இன்னிக்கி மத்தியானம் டோக்கியோ கம்பெனி வெங்கடராமன் மாமா போன் பண்ணினார்…உங்ககிட்ட ஏதோ அவசரமா பேசணுமாம்..இந்த நம்பர்ல பேசச் சொன்னார்…” என்று சத்யாவின் மனைவி தன்னுடைய வலதுகையில் உள்ள ஒரு காகிதத்தைக் கணவனிடம் நீட்டினாள். அதை வாங்கிப் பார்த்துத் தன்னுடைய “T” ஷர்ட் பைக்குள் வைத்துக் கொண்டு, தன்னுடைய செல்ல மகளைத் தூக்கி மடியில் வைதுக்கொஞ்சினான்.

    அவனுடைய அம்மா,” சத்யா …நான் பக்கத்துல காலனிக்குள்ள இருக்கற பசுபதிநாதர் கோவிலுக்குப் போயிட்டுவரேன்”..என்று தனது பேத்தியைத் தூக்கி இடுப்பில் வைத்தபடி வாசலை நோக்கி நடந்தாள்.

    சத்யா தனது கைபேசியின் மூலமாக அந்த “டோக்கியோ வெங்கடராமன்” மாமாவைத் தொடர்பு கொண்டான்.

    “மாமா..நமஸ்காரம்..நான் சத்யா”..

    “சத்யா..நன்னா இருக்கியா..”

    “இருக்கேன் மாமா..நீங்க கூப்டதாகச் சொன்னா”

    “ஒனக்கு எங்க கம்பெனில நல்ல வேலை தரணும்னு நெனைச்சேன்…நாங்க புதுசா ஒரு “கோடவுன்”, ராணிப்பேட்டைல தொறக்கபோறோம்…அதுக்கு உன்னத்தான் பொறுப்பாப் போடலாம்னு எனக்குத் தோணித்து…அது சீப் மேனேஜர் போஸ்ட் …..ஒன்னோட வேலையும், நேர்மையும் என்னக்குத் தெரியும்….அதான் ஒன்னக் கேக்கலாம்னு….ஆமாம், இப்ப நீ எவ்வளவு வாங்கரே…”

    “மாசம் நாப்பதாயிரம் மாமா… இன்சென்டிவ் தனியா உண்டு”

    “மாசம் அறுபதாயிரம் தரோம்…இன்சென்டிவ், குழந்தைக்கு படிப்புச் செலவு…தங்கறதுக்குத் தனி வீடு எல்லாம் உண்டு..கவலைப் படவேண்டாம்…”

    “மாமா எனக்கு ஒரு நாள் தாங்கோ, நான் என்னோட ஆத்துலயும் கலந்து பேசிச் சொல்லறேன்..என்னோட ஆபீசுக்கும் சொல்லணும்…ஒரு மாசம் டைம் அவாளுக்குக் குடுக்கணும்…யோசிச்சுச் சொல்லறேன்”…

    ” நீ ஒண்ணும் கவலைப்பட வேண்டாம்..ஒரு மாசச் சம்பளத்த நாங்க தரோம் … இன்னும் ஒரு பத்து நாள்ல..நீ எங்க கம்பெனில மேனேஜர் “

    “சரி ….மாமா..”

    சத்யா தன்னுடைய மனைவி, அம்மாவிடம் விவரமாகப் பேசினான். அவர்களும் சம்பளம் அதிகம் என்றதால் சரி, பார்த்துக் கொள் என்றனர்.

    சத்யா தன்னுடைய பெண் குழந்தையை அள்ளி முத்தமிட்டான். அது சிரித்துச் சிரித்து அவனது கன்னத்தைத் தன்னுடைய நாக்கால் நக்கியது. சத்யாவுக்கு “பசுவை அதன் கன்றுக் குட்டி தனது நாக்கால் நக்கிக் கொடுப்பது” நினைவில் வந்து சென்றது.

    டோக்கியோ வெங்கடராமன் மாமாவிடம் சத்யா பேசினான். வியாபாரம் படிந்தது.

    kopoojaiஇராணிப்பேட்டையில் மிகவும் விசாலமான கோடவுன். அதன் பக்கத்திலேயே குளிர்சாதனம் கொண்ட மிக நேர்த்தியான அலுவலகம். டோக்கியோ வெங்கடராமனும், திருநெல்வேலி கோபாலஅய்யங்காரும், திருச்சூர் ராவூத்தனும் இந்த நிறுவனத்தின் பங்குதாரர்கள். ஏகப்பட்ட பணம். இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் நிறையக் கிளைகள் உண்டு.

    “சத்யா..சாஸ்த்ரிகள் வந்தாச்சா…கோபூஜைக்குப் பசுவும், கன்னுகுட்டியும் வந்தாச்சா…..” டோக்கியோ வெங்கடராமன் பரபரத்தார். சாஸ்த்திரிகள் வந்து “கோபூஜை” முடித்தவுடன் தீபாராதனை செய்தார்.

    டோக்கியோ வேங்கடராமனும், திருநெல்வேலி கோபாலஅய்யங்காரும், திருச்சூர் ராவூத்தனும் பசுவுக்கும், கன்னுக் குட்டிக்கும் பழங்கள் கொடுத்து அதைக் கும்பிட்டனர். அங்கு இருந்த கூலியாட்கள் இதை வேடிக்கை பார்த்தபடி இருந்தனர்.

    “கோடவுனுக்குள் மங்கள வாத்தியம் முழங்க பசுவும், கன்னுகுட்டியும் நுழைத்தன, பசு, சாணியும் மூத்திரமுமாகச் சாய்ந்து சாய்ந்து நடந்தது. அதன் கொம்பில் சுற்றியிருந்த பூமாலை கீழே விழுந்து சிதறியது.”

    சாஸ்திரிகள் தட்சிணையைப் பெற்றுக்கொண்டு புறப்பட்டார்.

    “மாமா..இது என்ன இவ்வளவு பெரிய கோடவுன்ல… .ஒண்ணுமே இல்லை…வெறுமென இருக்கு ” சத்யா ஆச்சர்யத்துடன் டோக்கியோ மாமாவிடம் கேடக்க, “இப்ப ஒரு அஞ்சு நிமிஷத்துல பாரு…கோடவுனே ரொம்பிடும்” என்று சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே, கோடவுன் வாசலில் மூன்று பெரிய லாரிகள் வந்து நின்றன.

    சத்யா அவைகளை ஆச்சர்யத்துடன் பார்த்துக் கொண்டிருந்து விட்டு,” மாமா இதெல்லாம் “…என்று டோக்கியோ வெங்கடராமனிடம் கேட்ட பொழுது,” இந்த அறநூறு பசுக்களும், இன்னிக்கி ராத்திரிக்குக் கோழிக்கோடு கசாப்புக்கடைக்குப் போயிடும்…வாரம் இரண்டு முறை மூணு லாரிகள்ள ஆயிரத்து இருநூறு பசுக்கள் வரும் .. வரவு செலவெல்லாம் உனக்கு வந்துடும்….நீயும் ஒன்னோடு வேலைக்கு உள்ள ஆட்களும் இந்த குளிர்சாதன அறையில் இருந்து வேலை பார்க்கலாம்..

    ஒனக்கு வீடு இங்க பக்கத்துலேயே நல்ல வசதியோடு இருக்கு..ஆல் தி பெஸ்ட்” என்று சத்யாவின் கையை டோக்கியோ குலுக்கிய பொழுது, சத்யாவின் நெஞ்சம் பட படத்தது.

    கோடவுனில் பசுக்களின் “அம்மா” என்ற ஓலம் காதில் விழுந்து அவனின் உடம்பு முழுக்கப் பற்றி எரிவது போல இருந்தது. ” வாயில்லா ஜீவன்….கோந்தே…இதோட ஒடம்பு பூராவும் தேவதைகள் நிறைஞ்சு இருக்கா…மெதுவாத் தொட்டு ஒன்னோடு கண்ணுல ஒத்திக்கோ…” என்று சத்யாவின் அப்பா அவன் சிறுவயதில் சொன்னது இப்போதும் காதில் ஒலித்தது,.

    “மாமா .. எனக்கு இந்த வேலை வேண்டாம்..நான் வரேன் ” என்று திரும்பும் பொழுது, “பொழைக்கத் தெரியாத புள்ள” என்று டோக்கியோ வெங்கடராமன், திருச்சூர் ராவூத்தனிடம் கூறிய வார்த்தைகளுக்கு, அந்தக் கோடவுனில் கத்திக் கொண்டிருக்கக் கூடிய பசுக்களின் ஒட்டு மொத்த “அம்மா” என்ற கதறலையும் மீறி சத்யாவின் காதுகளுக்குள் நுழையக் கூடிய சக்தி இருக்கவில்லை.

    ——————-௦௦௦௦௦௦௦……………………….

    படம் உதவி: http://www.taringa.net/posts/deportes/16757345/Vaca-sagrada-hindu-predijo-al-futuro-Campeon.html

     

     

    Share