Blog

  • முதலாவது படக் கவிதைப் போட்டியின் முடிவுகள்

    அண்ணாகண்ணன்

    முதலாவது படக் கவிதைப் போட்டியில் உற்சாகமாகப் பங்கேற்ற படைப்பாளிகள் அனைவருக்கும் பாராட்டுகள். ஒரு படத்தைப் பார்த்தவுடன் உங்களுக்குள் இருக்கும் படைப்புத் திறன் வெளிப்படுகிறது எனில், நீங்கள் இன்னும் உயிர்ப்போடு இருக்கிறீர்கள் என்பது பொருள். அந்த ஒன்றுக்காகவே முதலில் உங்களைப் பாராட்டுகிறேன்.

    padakkavithai - 1

    அனிதா சத்யம் அவர்களின் அழகிய படம், சிறப்பான தூண்டுதலை அளித்துள்ளது. இதற்காக அனிதாவுக்கும் அவரது படத்தைத் தேர்ந்தெடுத்துக் கொடுத்த சாந்தி மாரியப்பனுக்கும் நம் நன்றிகள்.

    20 பேர்களின் 25 பின்னூட்டங்கள், ஒன்றுக்கு மேற்பட்ட முறைகளும் பங்கேற்ற சிலர், புதுக்கவிதை, வெண்பா, விருத்தம் என விதவிதமான வடிவங்கள், அதிலும் பல்வேறு வட்டார வழக்குகள், இரண்டு வரிகளிலிருந்து 50க்கும் மேற்பட்ட வரிகள் என வெவ்வேறு அளவுகள் என்று போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது. கவிதைகளில் எழுத்துப் பிழைகளும் வரி ஒழுங்கமைவுக் குறைவுகளும் இருந்தாலும் அவற்றைப் பொருட்படுத்தாமல், சொன்ன செய்திகளையும் சொல்லிய விதத்தையும் மட்டுமே கவனத்தில் கொண்டேன்.

    ஒவ்வொருவரின் பார்வையும் ஒவ்வொரு வகையில் வித்தியாசமாக இருந்தது. அனைவருமே சிரிப்பை விரும்புகிறார்கள் என்பதே பொது ஒற்றுமை. சிரிப்பைத் தொலைத்த சூழ்நிலைகளை, வலிகளைச் சில கவிதைகள் நினைவுகூர்ந்தாலும் ஒரு சிரிப்புக்குப் பின் இருக்கும் சக்தியையும் அழகையும் வசீகரத்தையும் ஆளுமையையும் பற்பல கவிதைகளும் சிறப்பாக வெளிப்படுத்தின.

    இதில் ஏதாவது ஒன்றை மட்டும் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற நிலையில், பல்வேறு கவிதைகளையும் பரிசீலித்ததில் புனிதா கணேசனின் கவிதையை இந்த வாரத்தின் சிறந்த கவிதையாகத் தேர்ந்தெடுக்கிறேன். அவரது கவிதை இங்கே-

    இயற்கையின் தூய சுவாசங்கள்
    இயம்பிய இனிய கூடுதல்
    பயத்திட்ட பழமை நட்புகள்
    வியந்து மகிழ்ந்ததில்
    தூய இதயங்கள் கொட்டின
    தூ வெண் முத்துக்கள்
    பரல்களாய் இதழ்களில் விரவின,
    அவை விரைந்து பரப்பின
    பிரபஞ்சம் முழுவதும் வரையற்ற மகிழ்வை!

    பாரங்கள் குறைந்ததால் துயரங்கள் பகிர்ந்ததால்
    இலகுவாய்ப் போன இதயங்கள் நெகிழ்ந்ததில்
    சிதறின சிரிப்புகள்!!
    சிட்டுகள் ஆயினர் பெண்கள்!

    இன்பத்தின் இறக்கைகள் கொண்டு துன்பத்தை மறந்தே..
    மனத்தில் இனிய பொழுதுகள் கனிந்து போயின…
    கனத்த பொழுதுகள் காற்றாய்க்… கரைந்ததில்
    இதழ்கள் முகிழ்த்தன முத்துப் பரல்கள்……
    கொத்துக் கொத்தாக சத்தமாய் சிரிப்பு…
    எங்கும் நிறைந்தது
    மனம் விட்டுச் சிரிக்கும் மங்கைகளாலே…

    சிட்டுகள் ஆயினர் பெண்கள்! என்ற ஒற்றை வரியில் அபாரமான கவித்துவம் வெளிப்படுகிறது.

    ரேவதி நரசிம்மனின்

    ஓடிய நரிக்கு ஒரு சிரிப்பு, பொங்கும் சோறுக்கு ஒரு சிரிப்பு.
    சிரித்தே வாழ்ந்திடுவீர் நலமாக

    என்ற வரிகளும் எனக்குப் பிடித்திருந்தன.

    புனிதா கணேசனை இந்த வாரத்தின் சிறந்த கவிஞராகவும் ரேவதி நரசிம்மனை குறிப்பிடத்தக்க கவிஞராகவும் தேர்ந்தெடுத்துப் பாராட்டுகிறேன்.

    பங்கேற்ற அனைவருக்கும் என் வாழ்த்துகள்.

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    மார்ச் 2, 2015

    இவ்வார வல்லமையாளர்
    வல்லமைமிகு முனைவர் எல்மார் நிப்ரத் அவர்கள்

     

    Elmar Kniprath

    வல்லமை இதழின் இவ்வார வல்லமையாளராகப் பாராட்டப் படுபவர், பண்டைய தமிழ் வட்டெழுத்து எழுத்துருவை உருவாக்கி தமிழுலகிற்கு அளித்துள்ள, ஹாம்பர்க்கில் வசிக்கும் முனைவர் எல்மார் நிப்ரத் (Elmar Kniprath, Hamburg) அவர்கள். தமிழ் ஆர்வலர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வண்ணம் திரு. எல்மார் நிப்ரத் செய்துள்ள இப்பணியை வல்லமை வாசகர்களின் கவனத்திற்குக் கொண்டு வந்தவர் பிரெஞ்சு தேசிய அறிவியல் ஆய்வு மையத்தின் மொழியியல் ஆய்வாளரான முனைவர் “ழான்” (Jean-Luc Chevillard of France, French National Centre for Scientific Research/CNRS – Paris) அவர்கள்.

    தமிழ் வட்டெழுத்து பற்றியும் நிப்ரத் வடிமைத்த வட்டெழுத்து மற்றும் அதன் பயன்பாடு பற்றியும் வல்லமையின் வாசகரும் எழுத்தாளருமான, ஈழத்தின் மறவன்புலவு திரு. க. சச்சிதானந்தன் அவர்கள் வல்லமை இதழில் கட்டுரை ஒன்று எழுதியிருந்தார். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் கல்வெட்டுகளில் எழுதப்பட்ட வட்டெழுத்து தமிழையும், கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்னர் பள்ளியில் பயிற்றுவிக்கப்பட்ட தமிழ் எழுத்தையும் நாம் இப்பொழுது கணினி வழியே எழுதவும், படிக்கவும் முடிவதை வியப்புடன் பாராட்டியதுடன், அந்த எழுத்துருக்களைக் கொண்டு எழுதியும் காண்பித்துள்ளார்.

    அவர் வழங்கிய மிகச் சிறப்பான விளக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது, மேலும் தகவலறிய பார்க்க: பழன் தமிழ் எழுத்துகள் உங்கள் கணிணியில்http://www.vallamai.com/?p=54582

    பாண்டியர் சோழர் பயன்படுத்திய வட்டெழுத்தை இப்பொழுது உங்கள் கணிணியில் நீங்களே எழுதலாம். அடுத்துள்ள இணைப்புக்குச் செல்க, எழுத்துருவைத் தரவிறக்குக. தமிழ் ஒருங்குறியில் தட்டச்சிடுக. ஒருங்குறி எழுத்துருவாக e-Vatteluttu OT தேர்க. 35 ஆண்டுகளுக்கு முந்தைய எழுத்துருவுக்கு e-Tamil 100 தேர்க.

    வட்டெழுத்து

     

    என்னே… என்னே…. என்னே….
    செய்தி தந்த புதுவைப் பேராசிரியர் இழான் அவர்களுக்கும், அரிதின் முயன்று எழுத்துரு உருவாக்கிய ஆம்பேர்க்கு வாழ் பேராசிரியர் எல்மார் இணிப்பிராதருக்கும் தமிழ் மக்கள் என்றென்றும கடமைப்பட்டவர்கள்.

    திரு. நிப்ரத் அவர்கள் வடிவமைத்த வட்டெழுத்து எழுத்துருக்களை தரவிறக்கம் செய்ய இத்தளத்திற்கு செல்க:

    http://www.aai.uni-hamburg.de/indtib/vatteluttu.html

    திரு. நிப்ரத் அவர்கள் தமிழ் வட்டெழுத்து மட்டுமன்று, இதுவரை; தமிழ், அஸ்ஸாம், வங்கம், குஜராத்தி, இந்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, நேபாளி, பஞ்சாபி, ராஜஸ்தானி, சமஸ்கிரதம், தெலுங்கு எனப் பற்பல இந்திய மொழிகளிலும், சிங்கள மொழியிலும் எழுத உதவும் பொருட்டு, அந்தந்த மொழிகளுக்குமான “இந்தோலிபி” (Indolipi) எழுத்துருக்களை உருவாக்கி விலையற்று வழங்கி அனைவரும் பயன்பெறும் வகையில் உதவியுள்ளார்.

    இவர் உருவாக்கிய Elmar’s Indic எழுத்துருக்களான e-Tamil , e-Telugu , e-Kannada , e-Malayalam , e-Oriya , e-Panjabi , e-Asamiya, e-Bengali, e-Gujarati, e-Nagari, e-Devanagari, e-Grantha,  e-Sanskrit, e-Sinhala ஆகிய எழுத்துருக்கள் கிடைக்கும் இணைய தளத்தின் முகவரி: http://elmar-kniprath.software.informer.com/

    திரு. நிப்ரத் உருவாக்கிய வட்டெழுத்துக்களில் எழுதிப் பழகி, படித்துப் பழகி தேர்ச்சி பெறும் தமிழர் யாவரும் அடுத்த முறை தமிழக தொல்பொருள் காட்சியகங்களுக்கோ, கோவில்களுக்கோ செல்லும் பொழுது வட்டெழுத்தில் உருவாக்கப்பட்ட கல்வெட்டுகளையும் ஓலைச்சுவடிகளையும் படிக்க ஆர்வம் கொள்வார்கள் என்பது உறுதி. தமிழின் தொன்மையைப் பாராட்டும் வண்ணம் அவற்றைப் பாதுகாக்கும் முயற்சியில் அக்கறையுடன் ஈடுபடுவார்கள் என்பதையும் நம்பிக்கையுடன் எதிர்பார்ப்போம்.

    திரு. நிப்ரத் தமிழர்களுக்கு அளித்த பரிசுக்காக அவரை வாழ்த்தி, வல்லமை குழுவினர் அவரை வல்லமையாளாராகப் பாராட்டி மகிழ்கிறோம்.

     

    **************************************************************************************
    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

    தொடர்புக்கு: “Elmar Kniprath” மின்னஞ்சல் முகவரி: kniprath@online.de

    படங்களும் தகவல்களும்:
    முனைவர் “ழான்” அவர்களின் சமூக வலைத்தளங்களில் இருந்து திரட்டப்பட்டன.

    Share
  • குறளின் கதிர்களாய்…(61)

    -செண்பக ஜெகதீசன்

    அமரகத் தாற்றறுக்குங் கல்லாமா வன்னார்
    தமரின் தனிமை தலை.
    (திருக்குறள்:814 – தீ நட்பு)

    புதுக் கவிதையில்…

    போரில் வீரனைப்
    புறந்தள்ளிவிட்டுப்                                            horse
    பாதியில் ஓடிடும்
    பரி போல,
    துன்ப காலத்தில்
    துணையாயின்றித்
    தனியே விட்டுச்செல்லும்
    தீய நட்பைவிட,
    தனிமை மேலானதே…!

    குறும்பாவில்…

    போரில் களம்விட்டோடும் குதிரைபோல்
    துன்பத்தில் துணைவரா நட்பைவிட,
    தனிமை தலையாயதே…!

    மரபுக் கவிதையில்…

    அமரது நடந்திடும் வேளையிலே
    ஆற்றும் கடமையை விட்டுவிட்டு,
    சுமையென வீரனைத் தள்ளிவிட்டே
    சுகம்பெற ஓடிடும் குதிரையேபோல்,
    நமக்குத் துன்பம் வருகையிலே
    நம்மைச் சிறிதும் பாராமல்
    தமது நலனே பார்த்தோடும்
    தீய நட்பினும் தனிமைமேலே…!

    லிமரைக்கூ…

    வீரனைப் புறந்தள்ளியோடும் குதிரை போரில்,
    இதுபோல் கைவிட்டோடும் நட்பைவிட
    இடர்வரினும் தனிமையே மேலானது பாரில்…!

    கிராமிய பாணியில்…

    குதுரவோடும் குதுரவோடும்
    குப்புறத்தள்ளிட்டு குதுரவோடும்,
    சண்டையில வீரன உட்டுட்டு
    சத்தமில்லாம ஓடிப்போவும்,
    குதுரவோடும் குதுரவோடும்
    குப்புறத்தள்ளிட்டு குதுரவோடும்…

    வேண்டாம்வேண்டாம் நட்புவேண்டாம்
    குதுரபோல நட்புவேண்டாம்
    கைவுடுற நட்புவேண்டாம்,
    போதும்போதும் தனிமபோதும்
    பொய்யில்லாத் தனிமபோதும்…

    குதுரவோடும் குதுரவோடும்
    குப்புறத்தள்ளிட்டு குதுரவோடும்…!

     

    Share
  • வெற்றியும் தோல்வியும்!

    -விஜயகுமார் வேல்முருகன்

    நூறு வெற்றிகளைப்
    பெற்றவன்தான் ஆனால்
    அதற்காக
    ஆயிரம் தோல்விகளை
    அடைந்தவன் நான்!

    வெற்றிதனைப் பெற்றதனால்
    வெறிகொண்டு தலையில்
    வைத்து ஆடவுமில்லை…
    தோல்விதனை அடைந்ததனால்
    தலைகுனிந்து ஓடவுமில்லை!

    வெற்றியும் தோல்வியும் கலந்தே
    வாழ்க்கை இங்கே இருக்கிறதே!
    தோல்வியையும் ரசித்திருந்தால்
    வாழ்க்கையது இனிக்கிறதே!!

     

    Share
  • பாரதி கண்ட புதுமைப்பெண்!

    -றியாஸ் முஹமட்

    ஆணுக்கு பெண் இங்கே சரி நிகர்
    புரிந்தும்  கிடக்கலாமோ
    வீட்டுச் சுவர்,
    கொதித்தெழு உன்னை எதிர்ப்பவர்              puthumaipen
    இங்கு எவர்…?

    பேனாவைப் பிடித்து விட்டாய்
    பேராயுதம் ஏந்திவிட்டாய்
    பேரின்பம் அடைந்து விட்டாய் – இனிப்
    பேரரசை ஆளப்போகிறாய்…!

    காடு மலை தாண்டு
    கழுகுக்கண்கொண்டு பாரு
    பல்லக்கில் ஏறு
    பல்லாங் குழியாடு!

    அடிமைச் சங்கிலியை அவிழ்த்து
    மடமைகளைக் கொளுத்து
    சாத்திரங்களை வகுத்து
    மூத்த பொய்களை நசுக்கு!

    தளர் நடைபோக்கு
    நிமிர்ந்த நன்னடையாக்கு
    அந்தப் பாரதியின் எளிய நடைதானே
    உன் மொழிநடையாச்சு…!

    அச்சம் மடம் நாணம்
    உடைத்தெறி,
    நல்லவை கெட்டவை பகுத்தறி
    உன் பேனா வைக்கட்டும் வெடி
    அசத்தட்டும் வரி!

    திறந்து கிடக்கிறது வழி
    உன்னை அழைக்கிறது வெற்றிப்படி
    ஓயாமல் ஓடடி
    நீதான் வற்றா நதி…!

    நீ மரபுக் கவி
    புதுக்கவி
    ஹைக்கூக் கவி!

    உன் வாழ்க்கையில்
    இல்லவேயில்லை சதி
    விதி உடைத்து வெளியேற்றும்
    உன் மதி!

    பல்லவர் காலப் பக்தி
    சோழர்காலப் புத்தி
    மாந்தர்கள் வியக்கும் செம்பருத்தி
    உன்னைப்போல யாரு இன்னொருத்தி?

    பெண்ணியம் எதிர்ப்பவனுக்குக்
    கொடு வியாதி…!
    உன் பேனா குண்டுபட்டு அழியட்டும்
    அந்தக் கபோதி…!

    விழி பிதுங்கி நிற்கட்டும்
    இனவாதி…!
    உன் எழுத்தால் விழிக்கட்டும்
    பச்சோந்தி…!

    நல்லறங்களைக் கவிதைகளில் போதி!
    எச்சரிக்கையாகட்டும்
    நம்ஊர் அரசியல்வாதி!

    மாற்றங்களைக் கொண்டுவா
    பெண் பாரதி!
    நம் நலிந்த சமூகத்தில்
    நீயும் ஒரு பாதி!

    பேனா பிடித்த தாதி
    தந்திரவாதிகளுக்கு மந்திரவாதி,
    இதைத்தானே பாரதி சொன்னான்
    கவிதைகளில் ஓதி..!

    அற்புதம் உன் எழுத்து
    இனி மாறும் ஈழத் தமிழர்களின்
    தலையெழுத்து!

    பெண்ணடிமை அழியட்டும்!
    பெண்குரல் ஓங்கட்டும்!
    அற்பர்கள் ஒழியட்டும்!
    அநியாயம் அழியட்டும்!

    உன் பேனா கண்டு அவன்
    கை அரிவாள் நழுவட்டும்..!
    அந்தப் பாரதி கண்ட
    புதுமைப் பெண்ணும்
    நீயாகட்டும்!

    பாரதி கண்ட புதுமைப் பெண்ணடி!
    உன்னைப் போற்றி வணங்குது
    தாய் மண்ணடி!

     

    Share
  • மனநிலை தெளிய வேண்டும் !

    -எம். ஜெயராம சர்மா – மெல்பேண்

     உரசல்கள் ஒழிய வேண்டும்
     விரிசல்கள் விலக வேண்டும்
     தெருதனில் தீய தெல்லாம்
     சிதறியே ஓட வேண்டும்!

    மொழியலை ஓய வேண்டும்
    முரணிலை ஒழிய வேண்டும்
    மருணிலை நீங்க வேண்டும்
    மனநிலை தெளிய வேண்டும்!

    அழிவுகள் அகல வேண்டும்
    அனைவரும் இணைய வேண்டும்
    தெளிவுகள் பிறக்க வேண்டும்
    சிறப்பெலாம் சேர வேண்டும்!

    சமயங்கள் யாவும் சேர்ந்து
    சமரசம் பேண வேண்டும்
    இமயமாய் உள்ள சிக்கல்
    இறந்துமே போக வேண்டும்!

    பெருமைகள் பேசி நிற்போர்
    பிதற்றலை விடவே வேண்டும்
    கருவதில் நல்ல எண்ணம்
    பெருகியே நிற்க வேண்டும்!

    Share
  • தொலைவிலும் அருகிலும் மிதக்கும் கடல்!

    எம்.ரிஷான் ஷெரீப்

    துல்லியமான நீர்ப்பரப்பு
    கூழாங்கற்களைப் போர்த்திப் படர்ந்திருக்கிறது           sea
    சலனமற்றிருக்கிறது ஈர நிலத்தின் சயனம்!

    போர்வையின் பாசிப் பூக்களும் பசிய அலங்காரங்களும்
    அசைந்தசைந்து
    காற்றின் தாலாட்டுக்களை இசைக்கின்றன மௌனமாய்!

    உன் கையிலொரு மதுக் குவளை
    ‘அதிதிகளாய்ப் பறவைகள் வந்திரையும்
    மா கடலின் மேலேயான வானம் பற்றித் தெளிவாகத் தெரியும்
    சமுத்திரம் பற்றி மட்டும் சொல்’ என்றாய்
    ‘இறுதி மதுவில் கரைந்தழியும் பேரண்டம்’
    வேறென்ன சொல்ல இயலும்?

     

    Share
  • லிமரைக்கூ கவிதைகள்!

    -கவிக்குயில்  ஆர். எஸ். கலா, இலங்கை

    தள்ளாடும் குடிகாரன்  கால்கள்
    வறுமையின்  பிடியில்  அவன் குடும்பம்          kala
    பசியில் மனைவி மக்கள்!

    மழையில் நிரம்பியது ஆறு
    சந்தோசமாக ஓடி  நீந்தியது  மீன்
    உள்ளே மறைந்தது சேறு!

    ஓயாமல்  ஆடுது  அலை
    உதவி  இன்றிப் படகில் மீனவன்
    கடலோடு ஆடுது வலை!

    மேகத்தின்  அழுகையோ மோகம்
    பூமியிலே  நிறைந்து  விட்டது வெள்ளம்
    என்னுள்ளே  ஒரு சோகம்!

    சிவனுக்கு நெற்றிக் கண்
    அடையாளம்  போல்  மனிதனுக்குச்  சிறந்து
    நல்ல  அறிவின்  கண்!

    தாய்  தந்தை  ஆசான்
    மூன்று தெய்வங்கள்  சொல் கேட்டால்
    நாம்  அறிவில்  மகான்!

    விலங்குக்கு வீடு காடு
    இதயம் அற்ற மனிதன் கொடுத்தான்
    சிறைக் கம்பிக்  கூடு!

    கண்  கவரும்  இயற்கை
    அதை அழித்து மனிதன்  உருவாக்கி
    விட்டான் ஒரு செயற்கை!

    அச்சம் மடம் நாணம்
    பெண்ணுக்குச் சொத்தாக அந்தக் காலம்
    இப்போது அதைக்  காணோம்!

    ஏந்தியது அகப்பை அன்று
    துணிந்தாள் போருக்குச் சென்றாள் பெண்
    ஏந்தினாள் துப்பாக்கி இன்று!

     

    Share
  • “நம்பிக்கை”

    — சரஸ்வதி ராசேந்திரன்.
    (50 வார்த்தைகளுக்குள் ஒரு குறுங்கதை)

     

    malaysia airline‘’இது ரொம்ப தப்பு ஆறுமுகம், உன்னை நம்பிய மக்களை மோசம் பண்ணுவது நம்பிக்கைத் துரோகம், வேண்டாம்ப்பா‘’ என்றான் விஷால்.

    மக்கள் கொண்டுவந்து கொட்டிய பணத்தை எல்லாம் சுருட்டிக் கொண்டு வெளிநாட்டிற்கு ஓடிவிடும் நோக்கத்தோடு ஃபைனான்சியர் ஆறுமுகம் ஃப்ளைட்டில் பறந்தார் குடும்பத்தோடு. தவறு என்று தடுத்த நண்பனையும் சட்டை செய்யவில்லை.

    அடுத்த நாள் பேப்பரில் செய்தி:
    சென்னையிலிருந்து கிளம்பிய மலேசிய விமானத்தைக் காணவில்லை, அதிலிருந்த முன்னூறு பேர் என்ன ஆனார்களென்றே தெரியவில்லை.


     
     
     
     
     

    படம் உதவி: http://www.malaysiaairlines.com/my/en.html

    Share
  • இயல்புநிலை திரும்பியது …

    — தேமொழி.
    (50 வார்த்தைகளுக்குள் ஒரு குறுங்கதை)

     

    angry birdமலர் கவலையுடன் வாசலுக்கும் உள்ளுக்குமாக அலைந்தாள். மது வழக்கமாக வீடு வரும் நேரம் கடந்து இருட்டவும் துவங்கி விட்டது.

    ஒருவழியாக வாசல் கதவைத் திறந்தவன் சோர்வுடன், “வண்டியும் பிரேக் டவுன், செல்ஃபோனிலும் சார்ஜ் இல்லை,” என்றான்.

    அவனைக் கண்டதும் நிம்மதி அடைந்திருந்தவளுக்கு உடனே கோபம் வந்தது. “அதென்ன பொறுப்பில்லாத்தனம், எங்கேயும் ஃபோனே இல்லையா, அடுத்தவங்க கவலைப் படுவாங்களேன்னு கொஞ்சமாவது கருத்து இருந்தாத்தானே?” என்று சீறினாள். இயல்புநிலைக்குத் திரும்பிவிட்டாள் அவள்.

     

     

     

     

     

    படம் உதவி: http://www.scooppick.com/things-most-common-in-indian-wives/

    Share
  • பயன்மிகு இணையவழிச் சேவைகள் – கட்டுரைப் போட்டி

    வல்லமையில் பயன்மிகு இணையவழிச் சேவைகள் என்ற தலைப்பிலான புதிய கட்டுரைப் போட்டியை அறிவிப்பதில் மகிழ்கிறோம்.

    இணையம் மிக வேகமாக வளர்ந்து வருகின்றது. இருந்த இடத்திலிருந்தே எதையும் எளிதில், விரைவாக, கூர்மையாகச் செய்து முடிக்க முடிகிறது. கல்வி, தொழில், பொழுதுபோக்கு, தகவல் தொடர்பு… என எண்ணற்ற துறைகளில், வகைகளில் இதன் விரிவையும் ஆழத்தையும் நாம் கண்டு வருகிறோம். கூகுள், யாஹூ போன்ற பெரு நிறுவனத்தினர் முதல் தனி நபர்கள் வரை, புதிய புதிய பயனுள்ள இணையவழிச் சேவைகளை வழங்கி வருகின்றனர். இவற்றைப் பற்றி முழுதும் அறிந்தோர் சிலரே. இன்னும் ஏராளமானோருக்கு இப்படி ஒரு சேவை இருக்கிறது என்பதே தெரிவதில்லை. சேவையைப் பற்றிச் சிறிதளவு தெரிந்தாலும் அதை எப்படிப் பயன்படுத்துவது என்று தெரியவில்லை. எனவே, இத்தகைய பயன்மிகு இணையவழிச் சேவைகளைப் பலரும் அறியும் வகையில் புதிய போட்டியை முன்னெடுக்கிறோம்.

    Google_Appliance

    வாசகர்கள், தங்களுக்கு நன்கு தெரிந்த, பயன் மிகுந்த, நம்பகமான இணையவழிச் சேவைகளை எளிய முறையில் அறிமுகப்படுத்தலாம். ஒரு கட்டுரையில், ஒரு நிறுவனத்தின் ஒரு சேவையையோ அல்லது பல சேவைகளையோ அல்லது பல நிறுவனங்களின் பற்பல சேவைகளையோ குறிப்பிடலாம். ஆனால், எந்தச் சேவையைக் குறிப்பிட்டாலும் அதுகுறித்த முழுமையான செய்திகளையும் அதன் பல்வகைப் பயன்களையும் பயனர் கண்ணோட்டத்தில் அளிக்க வேண்டும்.

    வையவன் படம்இதன்படி, இந்தப் போட்டி, மார்ச்சு 2015 முதல் பிப்ரவரி 2016 வரை மாதந்தோறும் நடைபெறும். ஒவ்வொரு மாதமும் போட்டிக்கு வரும் கட்டுரைகளில் சிறந்த ஒரு கட்டுரைக்கு ரூ.100 (நூறு ரூபாய்) பரிசாக வழங்கப்படும். ஓராண்டு முடிவில் தேர்வு பெற்ற 12 கட்டுரைகளிலிருந்து ஒரு கட்டுரைக்கு ரூ.1000 (ஆயிரம் ரூபாய்) பரிசு வழங்கப்படும். தேர்வு பெறும் கட்டுரைகள் தொகுக்கப்பெற்று, தாரிணி பதிப்பகத்தின் வாயிலாகப் புத்தகமாக வெளியாகும். அதன் அச்சுப் பிரதி, கட்டுரையாளருக்கு அனுப்பி வைக்கப்படும்.

    எழுத்தாளர் வையவன் அவர்கள், இந்தப் போட்டியை முன்மொழிந்ததோடு மட்டுமில்லாமல், இதற்கான பரிசுத் தொகையையும் வழங்க முன்வந்துள்ளார். அவருக்கு வல்லமையின் சார்பில் நன்றிகள்.

    எழுத்தாளரும் இணையத்தில் தோய்ந்தவருமான ஐயப்பன் கிருஷ்ணன், மாதாந்தரப் போட்டிக்கான நடுவராக இருந்து, சிறந்த கட்டுரைகளைத் தேர்ந்தெடுக்க இசைந்துள்ளார். அவருக்கும் எங்கள் நன்றிகள்.

    விதிமுறைகள்

    1. கட்டுரைகளை vallamaieditor@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

    2. பயன்மிகு இணையவழிச் சேவைகள் என்பது கருப்பொருளே. வேறு உகந்த தலைப்புகளில் கட்டுரைகளை அனுப்பலாம். ஆனால், பயன்மிகு இணையவழிச் சேவைகள் – கட்டுரைப் போட்டிக்கு அனுப்பப்படும் கட்டுரை என்பதை மடலில் குறிப்பிட வேண்டும்.

    Iyappan_Krishnan3. மாதத்தின் முதல் தேதியிலிருந்து கடைசித் தேதி வரை வரப்பெறும் கட்டுரைகள், அந்த மாதத்துக்கான போட்டிக்கு ஏற்கப்பெறும். அடுத்த மாதத்தின் முதல் வாரத்தில் முடிவுகள் அறிவிக்கப்பெறும்.

    4. போட்டிக்கு அனுப்பப்பெறும் கட்டுரைகள், வேறு எங்கும் வெளிவராத புதிய படைப்புகளாக இருக்க வேண்டும்.

    5. தேவையான இடங்களில் படங்களையும் சுட்டிகளையும் இணைக்கலாம். காப்புரிமை உள்ள படங்களை இணைக்க வேண்டாம்.

    6. கட்டுரைகள், 1500 வார்த்தைகளுக்குள் இருப்பது நல்லது.

    7. போட்டியில் வெற்றி பெறும் கட்டுரையாளர், இந்தியாவுக்கு வெளியே இருந்தால், தமது இந்திய முகவரியை அளிக்க வேண்டும். யார் பெயருக்குக் காசோலை அனுப்பலாம் என்பதையும் தெரிவிக்க வேண்டும்.

    உங்கள் கட்டுரையின் மூலம், உலகின் ஏதோ ஒரு மூலையில் இருப்பவரும் பயன்பெறக் கூடும். எனவே, நீங்கள் அறிந்த நல்லதொரு புதிய சேவையை அனைவரும் அறியும் வகையில் எழுதுங்கள். பரிசுகளை வெல்லுங்கள்.

    படத்துக்கு நன்றி – விக்கிப்பீடியா

    Share
  • மனத்தில் நிறைந்த மக்கள் திலகம் – கட்டுரைப் போட்டிக்கான இறுதித் தேதி நீட்டிப்பு

    மனத்தில் நிறைந்த மக்கள் திலகம் என்ற தலைப்பில் தமிழக முன்னாள் முதல்வர், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களைப் பற்றிய கட்டுரைப் போட்டியை அவரது பிறந்த நாளில் அறிவித்திருந்தோம். ஆர்வமுள்ள வாசகர்கள், தொடர்ந்து படைப்புகளை அனுப்பி வருகிறீர்கள்.

    MGR_midday_meal

    கையால் எழுதி ஸ்கேன் செய்தும் வெவ்வேறு எழுத்துருவிலும் சிற்சில கட்டுரைகள் அமைந்துள்ளன. ஒருங்குறியில் தட்டி எழுதப்பெற்ற படைப்புகளை மட்டுமே போட்டிக்கு ஏற்க இயலும் என்பதை வாசகர்கள் கவனத்தில் கொள்ள வேண்டுகிறோம்.

    சில கட்டுரைகள் மிக நீளமாகவும் அமைந்துள்ளன. கட்டுரைகள், 1000 முதல் 1500 வார்த்தைகளுக்குள் இருக்க வேண்டும் என்பதையும் நினைவூட்டுகிறோம்.

    கட்டுரைகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 01.03.2015 என அறிவித்திருந்தோம். வாசகர்களுக்குக் கூடுதல் அவகாசம் தரும் பொருட்டு, இதனை மார்ச்சு 31 வரை நீட்டிக்கிறோம்.

    எம்.ஜி.ஆர். அவர்களை அறியாதவர்களைக் காண்பது அரிதே. அவர், உலகம் முழுதும் உள்ள தமிழர்கள் அனைவரும் அறிந்த, உணர்ந்த, மறக்க முடியாத மனிதர். அவர் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு வகையிலான தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பார். அதை உங்கள் நடையில் எழுதுங்கள். பரிசுகளை வெல்லுங்கள்.

    இது பற்றிய கூடுதல் விவரங்களை இந்தப் பக்கத்தில் காணுங்கள். http://www.vallamai.com/?p=53863

    படத்திற்கு நன்றி – விக்கிப்பீடியா

    Share
  • இருபத்துநான்கு மணி நேரம்

    — ரா.பார்த்தசாரதி.

     

     

    berkeley parkingஇருபத்துநான்கு மணி நேர ஆஸ்பத்திரி, ஏ டிஎம், மெடிக்கல் ஷாப், இவை எல்லாம் பெரிய அதிசயம் இல்லை. ஆனால் அமெரிக்காவில் பார்க்கிங் என்பதே ரொம்ப கஷ்டம்.

    ஒரு முறை பீட்டர் என்கிற 83 வயது முதியவர் தனது காரில் இரண்டு புள்ளி நான்கு மணி நேரம் பார்கிங் செய்வதற்காகச் சுற்றியலைந்து, கடைசியில் தனது காரை பார்க் செய்தார். செக்யூரிட்டியிடம் போய் தான் கஷ்டபட்டதைச் சொன்னார். தப்பாக புரிந்து கொண்ட அவர் தலைமை அதிகாரியிடம் சொல்ல, உடனே அவர் CNN TV க்குப் போன் செய்ததும், அவர்கள் உடனே பீட்டரை பேட்டி காண வந்தனர்.

    டிவி ரிபோர்ட்டர் அவரிடம், எப்படி நீங்க 24 மணி நேரம் பார்க் செய்வதற்காகச் சுற்றினீர்கள்? இது பெரிய சாதனை… இதை கின்னஸ் ரெக்கார்டில் போடபோகிறோம் என்றார். பீட்டருக்கு ஒன்றும் புரியவில்லை. டிவி ரிபோர்ட்டரிடம், சார் இரண்டு புள்ளி நான்கு மணிநேரம் சுற்றிய பின் பார்க்கிங் செய்தேன். நீங்கள் தவறுதலாக இருபத்துநான்கு மணி நேரம் என்று புரிந்து கொண்டது என் தவறில்லை என்றார். ரிப்போர்ட்டரும், தலைமை அதிகாரியும் அசடு வழிந்தார்கள்.

     

     

     

     

     
    பெர்க்லி நகர ஊர்திகள் நிறுத்துமிடம் படம் எடுத்தவர்: தேமொழி

    Share
  • பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! பிரபஞ்சம் எத்தனை பெரியது ?

    சி. ஜெயபாரதன்.

     

    பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! பிரபஞ்சம் எத்தனை பெரியது ?


     ஐரோப்பிய  விண்ணோக்கி  ஹெர்ச்செல்

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

     

     

    பிரபஞ்சம் சோப்புக் குமிழிபோல்
    விரிகிறது எது ஊதி ?
    பரிதி மண்டலக் கோள்களை
    கவர்ச்சி விசை
    ஈர்க்கிறது எது ஓதி ?
    சுருள் சுருளாய்
    ஆக்டபஸ் கரங்களில்
    ஒட்டிக் கொண்ட
    ஒளிமயத் தீவுகள் நகரும்
    கால வெளியில் எது ஆதி !
    ஓயாத
    பாய்மரப் படகுகளின்
    உந்து சக்தியை
    அலைகள் எதிர்க்க மாட்டா !
    விலக்கு விசைப் பயணத்தில்
    ஒளிமய மந்தைகள்
    உலாவும் குமிழி !
    கலியுகத்தில் மனிதன் படைத்த
    அகிலவலை யுகத்தில்
    திரும்பவும்
    பொரிக் கோள மாகும்
    பிரபஞ்சம் !

    ++++++++++

    “பிரபஞ்சத்தின் முழுத் தோற்றம் அது கொண்டுள்ள அண்டவெளிப் பிண்டங்களின் கூட்டுத் தொகையை விடப் பெரியது !”

    ********

    பிரபஞ்ச மெய்ப்பாடுகளைத் தேடிச் செல்லும் நமது விஞ்ஞான விதிகள் எல்லாம் குழந்தைதனமாய் முதிர்ச்சி பெறாத நிலையில் உள்ளன !  ஆயினும் அவைதான் நமது ஒப்பற்ற களஞ்சியமாக உதவிடக் கைவசம் இருக்கின்றன !

    ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் (1879-1955) 

    கிறித்துவத் தேவாலயம் விஞ்ஞானிகளைச் சமயப் பகைவர்கள் என்ற தரத்தில் எடை போட்டிருக்கிறது !  ஆனால் பிரபஞ்ச ஒழுங்கமைப்பை உறுதியாக நம்பும் அவர்கள்தான் உண்மையான மதச்சார்பு மனிதர்கள் !

    ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்

    இதுவரை வானியல் விஞ்ஞானிகள் காணாத பூர்வீக ஒளிமய மந்தையை (Galaxy), விண்வெளியில் ஊர்ந்து செல்லும் ஹப்பிள் தொலைநோக்கி நெடுந்தூரத்தில் படமெடுத்து அனுப்பியுள்ளது.

    டாக்டர் டேவிட் ஒயிட்ஹௌஸ் பி.பி.ஸி விஞ்ஞான பதிப்பாசிரியர் (ஜனவரி 16, 2004)

    விண்டுரைக்க அறிய அரியதாய்
    விரிந்த வானவெளி யென நின்றனை !
    அண்ட கோடிகள் வானில் அமைத்தனை !
    அவற்றில் எண்ணற்ற வேகம் சமைத்தனை !
    மண்டலத்தை அணுவணு வாக்கினால் வருவ தெத்தனை
    அத்தனை யோசனை அவற்றிடை வைத்தனை !

    மகாகவி பாரதியார் 

    ஹப்பிள் தொலைநோக்கி கண்ட பூர்வீக அகிலக் காலாக்ஸி

    2003 செப்டம்பர் முதல் நான்கு மாதங்கள் ஹப்பிள் தொலைநோக்கி தொடர்ந்து கூர்மையாய்ப் பார்த்து 2004 ஜனவரி 16 ஆம் தேதி பிரபஞ்ச விளிம்பிலே ஓரிடத்தில் படம் பிடித்து அனுப்பிய காலாக்ஸியின் பிம்பம் மகத்தானது !  அது பிரபஞ்சத் தேடல் வரலாற்றில் ஒரு மைல் கல்லாகிப் பிரபஞ்சத்தின் பரிமாணத்தை ஓரளவு துல்லியமாய்க் கணக்கிட ஓரரிய வாய்ப்பளித்தது !  2003 செப்டம்பர் முதலே ஹப்பிள் விண்ணோக்கி விண்வெளியில் அக்குறியை நோக்கிக் கண்வைக்க ஏற்பாடு செய்தவர் வானியல் விஞ்ஞான ஆளுநர், ஸ்டீவன் பெக்வித் [Steven Beckwith Director Space Science Institute].  அவரின் குறிக்கோள் பிரபஞ்சத்தில் நெடுந்தூரத் துளை ஒன்றையிட்டு மிக மங்கலான பூர்வீகக் காலாக்ஸி ஒன்றை ஆராய வேண்டும் என்பதே. அப்பணியைத் துல்லியமாகச் செய்ய “ஹப்பிள் நெடுந்தூர வெளிநோக்கி” [Hubble Deep Field (HDF)] கருவி பயன்படுத்தப்பட்டது.  ஹப்பிள் படமெடுத்த அந்த பூர்வ காலாக்ஸியின் ஒளிப் பண்பாடுகள், வாயுப் பண்டங்கள் ஆராயப் பட்டதின் மூலன் அதன் வயதைக் கணிக்கிட முடிந்தது.  அந்த விண்வெளி இடத்தின் ஒளியாண்டு தூரம் [Distance in Light Years (ஒளி ஓராண்டில் செல்லும் தூரம்)] கணிப்பாகிப் பிரபஞ்சத்தின் அந்த விளிம்பின் தோற்ற காலம் கண்டுபிடிக்கப்பட்டது !

    பிரபஞ்சம் எத்தனை பெரிய வடிவம் உடையது ?

    யுக யுகமாகக் கேட்கப்படும் ஒரு கேள்வி “பிரபஞ்சத்தின் பரிமாணம் என்ன ?” என்பதே.  அதன் பரிமாணத்தை அளப்பதற்கு எந்த அளவு கோலைப் பயன்படுத்துவது என்று இரண்டு வானியல் விஞ்ஞான வல்லுநர்கள் தர்க்கம் புரிந்தனர் !  ஒருவரின் பெயர் ஹார்லோ ஷேப்லி [Harlow Shapley]. இரண்டாமவரின் பெயர் ஹெர்பர் கெர்டிஸ் [Herber Curtis].  நடந்த இடம்: சுமித்ஸோனியன் கண்காட்சிக் கூடம், இயற்கை வரலாற்றுப் பகுதி அரங்கம். வாஷிங்டன். டி.சி. [Natural History Museum Smithsonian Institution Washington. D.C.]  1920 ஆண்டு ஏப்ரல் தர்க்கம் நிகழ்ந்த காலம்.  அதற்குச் சில ஆண்டுகளுக்கு முன்புதான் அமெரிக்க வானியல் நிபுணர் எட்வின் ஹப்பிள் (1889-1953) காலாக்ஸிகளின் இயல்பான பண்பாடுகளை தொலைநோக்கி மூலம் கண்டுபிடித்து எழுதினார்.

    ஹெர்பர் கர்டிஸ் கூறியது:  அகிலமானது (The Cosmos) பல்வேறு தனித்தனி பிரபஞ்சத் தீவுகளைக் (Islands of Universes) கொண்டது.  அதாவது சுருள் நிபுளாக்கள் [Spiral Nubulae or Galaxy] என்பவை நாம் வாழும் பால்மய வீதி (Milky Way) காலாக்ஸிக்கும் வெகு தூரத்துக்கு அப்பால் இருக்கிறது என்னும் அனுமானத்தில் தர்க்கம் செய்தார்.  ஹார்லோ ஷேப்லி சொல்லியது:  “சுருள் நிபுளாக்கள் என்பவை பால்மய வீதியின் வாயு முகில்களே.”  அத்துடன் பரிதியின் இடத்தைப் பிரபஞ்சத்தை முழுமையாகக் கருதிப் பால்மய வீதியின் விளிம்பில் கொண்டு வைத்தார்.  ஆனால் கர்டிஸ் பரிதியை காலாக்ஸியின் மத்தியில் வைத்தார். கர்டிஸ் பிரபஞ்சத்தின் பேரளவைப் பற்றிக் கூறியது உண்மையாக ஏற்றுக் கொள்ளப் படுகிறது.  ஆனால் பரிதியானது பால்மய வீதியின் மத்தியில் உள்ளது என்பது தவறென அறியப்பட்டது.  ஷேப்லி கூறியபடி பால்மய வீதியின் விளிம்பில் பரிதி இருப்பது மெய்யென நம்பப் படுகிறது.  அதே சமயத்தில் ஷேப்லி சொன்ன சிறிய பிரபஞ்சம் என்பது தவறாக ஒதுக்கப்பட்டது.

    எழுபத்தியைந்து ஆண்டுகள் கடந்து மீண்டும் தர்க்கம்

    பல்வேறு காலாக்ஸிகளைக் கண்டுபிடித்த பிறகு மீண்டும் 1996 ஆம் ஆண்டில் பிரபஞ்சத்தின் பரிமாணத்தின் மீது தர்க்கம் எழுந்தது.  பிரபஞ்சத்தின் வயதுக்கும் அதன் பரிமாணத்துக்கும் ஓர் உடன்பாடு உள்ளது.  இரண்டும் ஹப்பிள் நிலையிலக்கத்தின் (Hubble Constant) மூலம் கணிக்கப்பட்டவை.  விண்மீன்கள் பூமியை விட்டு விலகிச் செல்லும் வேக வீதத்தை அறிந்து கொண்டு ஹப்பிள் நிலையிலக்கம் நிர்ணயமாகும்.  அதாவது காலாக்ஸி தொடர்ந்து மறையும் வேகத்தை அதன் தூரத்தால் வகுத்தால் வருவது ஹப்பிள் நிலையிலக்கம். அந்த நிலையிலக்கின் தலைகீழ் எண்ணிக்கை [Reciprocal of the Hubble Constant] பிரபஞ்சத்தின் வயதைக் காண உதவும்.  அப்போது தர்க்கத்தில் கலந்து கொண்டவர் சிட்னி வான் டன் பெர்க் (Sidney Van den Bergh) & கஸ்டாவ் தம்மன் (Gustav Tammann).

    வானியல் நிபுணர் சிட்னி தன் தொலைநோக்கிக் கண்டுபிடிப்புகள் மூலம் பெரிய ஹப்பிள் நிலையிலக்க மதிப்பைக் (Hubble Constant: 80 km/sec/Mpc) (படத்தில் Mpc பற்றி விளக்கம் உள்ளது) கூறினார்.  அதாவது ஓர் இளைய வயது, சிறிய வடிவுப் பிரபஞ்சத்தை அவர் சான்றுகளுடன் விளக்கினார்.  ஆனால் கஸ்டாவ் தன் கண்டுபிடிப்புகள் மூலம் ஒரு சிறிய ஹப்பிள் நிலையிலக்கத்தை (சுமார்: 50 km/sec/Mpc) கணித்தார்.  அதாவது அவரது பிரபஞ்சம் பூர்வீகமானது ! பிரமாண்டமானது !  இவர்கள் இருவரது கணிப்பு எண்ணிக்கைகள் போதாத சான்றுகளால் உருவாக்கப் பட்டதால், அவரது கொள்கைகளும் முழுவதும் ஏற்றுக் கொள்ளப் படவில்லை !

    பிரபஞ்சத்தின் முடிவான பரிமாணத் தீர்மானங்கள் 

    கடந்த நூற்றாண்டுக் கண்ணோக்க முடிவுகளிலிருந்து, பிரபஞ்சத்தின் பரிமாண எல்லைகளை ஓரளவு வரையறுக்க முடியும்.  உலகிலே இருக்கும் ஆற்றல் மிக்க தொலைநோக்கிகளின் பதிவுகளை ஒழுங்கு படுத்தி ஆராய்ந்ததில், வானியல் வல்லுநர்கள் 10-12 பில்லியன் ஒளியாண்டு தூரத்தில் இருக்கும் காலாக்ஸிகளைப் பார்க்க முடிந்தது.  (ஓர் ஒளியாண்டு = 6 டிரில்லியன் மைல் அல்லது 10 டிரில்லியன் கி.மீ.)  ஆதலால் மனிதக் கண்ணோக்கு வானத்தில் (Human Vision Horizon) 24 (12+12) மில்லியன் ஒளியாண்டு விட்ட முள்ள பிரபஞ்ச வெளியை நாம் காண முடிகிறது !

    ஆனால் அந்தப் பரிமாண பிரபஞ்சம் பூதளத்தில் நிற்கும் மனிதக் கண்களுக்கு மட்டுமே ஏற்ற முறையில் இருக்க முடியும்.  ஆனால் விண்வெளியில் நகரும் காலாக்ஸியில் ஒருவர் நின்று விண்வெளி விளிம்பைப் பார்த்தால் எத்தனை அளவுப் பேரளவு பிரபஞ்சம் தெரியும் என்பது அறியப் படவேண்டும்.  நிச்சயமாக நமது பூதள அரங்கிலிருந்து பார்க்கும் பிரபஞ்சத்தை விட, காலாக்ஸியில் நின்று பார்ப்பவருக்குப் பிரபஞ்சம் பேரளவு பெரிதாகத் தென்படும்.

    அத்தகைய “வீக்க நியதியை” (Inflation Hypothesis) எடுத்துச் சொன்ன எம்.ஐ.டி. நிபுணர் அலன் கத் (M.I.T.’s Alan Guth) தனது கருத்துக்கு விளக்கம் தந்தார்.  மிக இளமையான பிரபஞ்சம் தீவிரமாய் உப்பிப் பெருகியிருக்க வேண்டும் என்றார்.  அதாவது ஒப்புமையாகக் கூறினால் அணு வடிவிலிருந்த பிரபஞ்சம் ஒரு நொடியில் பலமடங்கு பெருத்துப் பந்தளவுக்கு பலூனாய் உப்பியது !  அத்தகைய அகில வீக்கம் ஒன்று ஏற்பட்டிருந்தால் நமது தற்கால உளவுச் சாதனங்களிலிருந்து ஒரு பேரளவுள்ள பிரபஞ்சத்தை எதிர்பார்க்கலாம் !

    பிரபஞ்சத்தின் குறைந்தளவுப் பரிமாணக் கணிப்பு என்ன ?

    அலன் கத்தின் வீக்க நியதியில் ஒரு பெரும் ஐயம் எழுகிறது !  அவ்விதம் கண்ணுக்குத் தெரியாமல் அகில வானுக்கு அப்பால், காலவெளித் தொடர்வாக (Space-Time Continuum) எழுந்த வீக்கம் ஒன்றா ? இரண்டா ? மூன்றா ? முன்னூறா ? மூவாயிராமா ? அல்லது முடிவில்லா எண்ணிக்கையா ? அந்த வினாவுக்கு விடை இல்லாததால் அந்தக் கொள்கையும் தர்க்கத்துக்குள் வீழ்ந்தது.  அந்த நியதி மெய்யா னால் நமக்கு தெரியாமல் இருந்து, நம்மால் நிரூபிக்க முடியாத இன்னும் பல பிரபஞ்சங்கள் இருந்திட லாம் !  ஆனால் தற்போதுள்ள தொலைநோக்குச் சாதனங்களிலிருந்து விஞ்ஞானிகள் தீர்மானமாக அறிவது நாமிருக்கும் பிரபஞ்சத்தின் குறுக்களவு குறைந்தது 150 பில்லியன் டிரில்லியன் மைல்கள் !  அதாவது அதன் விட்டம் 25 பில்லியன் ஒளியாண்டுக்கு (25 Billion Light Years Diameter) மிகையாக இருக்கலாம் என்பதே !

    (தொடரும்)

    *********************

    தகவல் :

    Picture Credit : 1. Astronomy (August 21, 2007) 2.  Universe 6th Edition (2002)  3. National Geographic Encyclopedia of Space (2005) 5. 50 Years of Space (2004)

    1.  Astronomy Magazine : 50 Greatest Mysteries of the Universe (Aug 21, 2007)

    2.  Universe By Roger Freedman & William Kaufmann III (2002)

    3.  National Geographic Encyclopedia of Space By Linda Glover.

    4.  The World Book Atlas By World Book Encyclopedia Inc (1984)

    5.  Scientific Impact of WMAP Space Probe Results (May 15, 2007)

    6.  BBC News – Hubble Obtains Deepest Space View By Dr. David Whitehouse, Science Editor (Jan 16, 2004)

    ******************

    S. Jayabarathan (jayabarat@tnt21.com) November 8, 2007

    Share
  • மனதில் நிறைந்த மக்கள்திலகம்

    —  எஸ். பழனிச்சாமி.

     

    லண்டனில் பி.பி.சி. தமிழோசை ரேடியோவிற்கு முதன் முதலாக அளித்த பேட்டியில் எம்.ஜி.ஆர் அவர்கள் தன்னுடைய வாழ்க்கை வரலாற்றை, சுருக்கமாக இப்படிச் சொல்லி இருந்தார்.

    ‘இலங்கையிலே பிறந்து கேரளாவில் வளர்ந்தேன். என்னுடைய இரண்டரை வயதில் என் தந்தை இறந்து விட்டார். என்னுடைய தந்தையும், பாட்டனாரும் பெரும் லட்சாதிபதிகளாக இருந்தவர்கள். பெரும் பணக்காரர்கள். வசதியும் வாய்ப்பும் மிகுந்தவர்கள். ஆனால் கேரளத்தில் மருமக்கத்தாயம் என்ற ஒரு வழக்கம் இருந்த காரணத்தால் அதாவது குழந்தைகளுக்கு தன் தந்தையின் சொத்துக்கள் இல்லை என்ற காரணத்தால் நாங்கள் அனாதைகளாக்கப்பட்டோம். என் தாயினுடைய அரவணைப்பில்தான் நாங்கள் வளரவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. என் தந்தை மாஜிஸ்ட்ரேட்டாக இருந்தார், பிரின்சிபாலாக இருந்தார். அவர் பிரின்சிபாலாக இலங்கையிலே பணியாற்றும்போது கண்டியில்தான் நான் பிறந்தேன். தந்தை இறந்தபிறகு ஐந்து வயதிற்குள்ளேயே தமிழகத்துக்கு வந்து விட்டேன். முதன்முதலாக நான் எழுதப் படிக்கக் கற்றுக் கொண்ட மொழி தமிழ். எனக்கு அறிவு தெரிந்த நாள் முதல் பார்த்துக்கொண்டும் பழகிக் கொண்டும் இருக்கின்ற மக்கள் தமிழ் மக்கள். என் உடம்பில் இத்தனை ஆண்டுகளாக குருதி வளர்ந்திருக்கிறது, என் உடலில் சூடு தணியாமல் இருக்கிறதென்றால், நான் வளர்ந்திருக்கிறேன், வாய்ப்புப் பெற்றிருக்கிறேன் என்றால் அது தமிழ் கூறும் நல்லுலகம் தந்த வாய்ப்பாகும். ஆகவே அந்த தமிழ் மக்களுக்குத் தொண்டு செய்ய வேண்டும் என்ற ஆர்வம் என்னை அறியாமலே என்னை உந்தித் தள்ளிக் கொண்டிருக்கிறது. என் தாயின் அரவணைப்பில் வளர்ப்பில் வளர்ந்த காரணத்தால் எனக்கு அதிக கல்வி கற்றுக் கொள்ள முடியவில்லை. ஏழாவது வயதில் நாடகக் கம்பெனியில் சேர்ந்து விட்டேன். அதன் பிறகு 1935 ல் சினிமாவில் நடிக்கத் துவங்கினேன். 1929-30 என்ற கால கட்டத்திலேயே நான் காங்கிரஸ் கட்சியில் அங்கத்தினராக இல்லாவிட்டாலும், ஒரு ஊழியனாக இருந்தேன். 1933-34 காலகட்டத்தில் அதில் அங்கத்தினராக பதிவு செய்து கொண்டு விட்டேன். அதன் பிறகு சில நாட்கள் இருந்து, எனக்கு அங்கே செயல்பட்ட முறைகளிலே குறைபாடுகள் கண்டதாக எண்ணியதால், விருப்பு வெறுப்பற்ற நிலையில் நான் வளர வேண்டும் என்று நினைத்த காரணத்தால் அதிலிருந்து விலகி, அரசியலில் எந்தவித தொடர்பும், ஈடுபாடும் இல்லாமல் இருந்தேன். ஆனால் அன்று முதல் நான் ஒரு தேசியவாதியாக எப்பொழுதுமே இருந்து கொண்டிருப்பவன். அது மட்டுமல்ல மகாத்மாவின் கொள்கையிலே பிடிப்பும் நம்பிக்கையும் கொண்டவன். அவைகளையெல்லாம் ஒருங்குசேர நான் தமிழகத்திலே கண்ட தலைவன் பேரரறிஞர் அண்ணாதான். அவருடைய புத்தகங்களைப் படித்து விட்டு அவருடைய நியாயமான கோரிக்கைகள்தான் தமிழகத்துக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்று கருதியதால் திராவிட முன்னேற்றக் கழகத்தில் சேர்ந்தேன். அண்மையில் 1972ம் ஆண்டு அக்டோபர் 10ந் தேதி அன்று குற்றமற்ற நான் வெளியேற்றப் பட்டேன். வெளியேற்றப்பட்ட பிறகு தொண்டர்களுடைய, மக்களுடைய விருப்பத்தின்படி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற அமைப்பை நான் உருவாக்கினேன். இப்பொழுது அதில் நான் முதல் தொண்டனாக இருக்கின்றேன் என்று சொல்லுகின்றார்கள். நான் அதிலே பணியாற்றிக் கொண்டிருக்கின்றேன்.’

    அதே பேட்டியில் பிரிட்டனில் உள்ள மக்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் உங்களுடைய அனுபவம் என்ன என்ற கேள்விக்கு எம்.ஜி.ஆர் அவர்கள் இப்படி பதில் சொல்லியிருப்பார்.

    ‘1930ம் ஆண்டு மதுவிலக்குப் போராட்டத்தில் மறியல் செய்த நேரங்களில் எல்லாம் பிரிட்டிஷ் ஆதிக்கம் வெளியேற வேண்டும் என்ற எண்ணத்தோடு போராடியவன். அதே பிரிட்டனுக்கு வந்து இங்கு மக்களைக் காணும்போது, இன்று காமன்வெல்த் அமைப்பிலே அங்கத்தினரான இந்தியக் துணைக்கண்டத்துக்கும் பிரிட்டனுக்கும் உள்ள உறவையும், பிரிட்டிஷ் மக்கள் இந்தியர்களை மதிக்கின்றார்கள் என்பதையும் இங்கு நான் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். ஆண்டான் அடிமை என்பது நிலைமை மாறி, சுதந்திர பங்காளி என்ற நிலையிலே இந்தியரும் ஆங்கிலேயரும் இணையும் போது அதிலே மகிழ்ச்சியும் பெருமிதமும் இருக்கிறது என்பதை நான் இங்கு காணுகிறேன்.

    பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள், இந்திய மக்களுக்கு அவர்களது மொழியாலும், செயலாலும் இந்தியர்களின் சுதந்திர உணர்வைத் தூண்டி விட்டார்கள். அவர்கள் நமக்கு அரசியல் சிந்தனைக்கு ஆக்கம் அளிக்கக்கூடிய சூழ்நிலையை உருவாக்கியவர்கள் என்று நான் சொல்வேன். ஆங்கிலத்தை அடிப்படையாகக் கொண்டு, ஆங்கிலேயர்கள் மூலமாக ஆங்கிலம் கற்று உலக விஷயங்களையும், விஞ்ஞான உயர்வையும் அறிந்து பிறகு அவர்களை நாட்டை விட்டு வெளியேற்ற ஆங்கிலம் பயன்பட்டது.’

    இந்தப் பேட்டியில் இருந்து எம்.ஜி.ஆர் அவர்களுக்கு இருந்த தமிழ் மக்களுக்குத் தொண்டு செய்ய வேண்டும் என்ற எண்ணத்தையும், நம் இந்திய நாட்டின் மீது அவருக்கு உள்ள பற்றையும் தெரிந்து கொள்ள முடிகிறது. அவர் அரசியலில் வெற்றி பெற்றதற்கு அடிப்படையான விஷயங்கள் என்ன என்பது இப்போது தெரிகிறதல்லவா?

    எம்.ஜி.ஆர் அவர்களின் வாழ்க்கை வரலாறும், அவருடைய திரைப்பட மற்றும் அரசியல் செயல்பாடுகளும் தமிழகத்தோடும், தமிழ் மக்களோடும் இரண்டறக் கலந்து விட்ட ஒன்றுதான். அனைவரும் அறிந்த விஷயங்கள்தான். இன்று வரை எம்.ஜி.ஆர் என்ற மந்திரச் சொல் தமிழர்களிடையே எத்தகைய மதிப்பையும் மரியாதையையும் பெற்றிருக்கிறது என்பதும் அனைவரும் அறிந்த ஒன்றுதான்.

    சிறு வயதில் வறுமையில் வாடினாலும் பல நல்ல குணங்களை அவர் தன் தாயிடமிருந்து கற்றுக் கொண்டார். அந்தக் குணங்களே அவரை வாழ்க்கையில் உச்சத்திற்கு கொண்டு சென்றது. தன் தாயிடம் அவர் கொண்ட அன்புதான் பின்னாளில் அரசியலில் காலடி எடுத்து வைத்த போது தாய்க்குலத்தின் பேராதரவைப் பெற்றுத் தந்தது.

    ஆரம்ப காலத் திரைப் படங்களிலும் தாய் சொல்லைத் தட்டாதே, தாயைக்காத்த தனயன், தாய்க்குத் தலை வணங்கு, தாய்க்குப் பின் தாரம், தாய் மகளுக்கு கட்டிய தாலி, தெய்வத்தாய், தாயின் மடியில், கன்னித்தாய், குடியிருந்த கோயில், ஒரு தாய் மக்கள் என்று தாயை முன்னிலைப் படுத்தியே அவருடைய படங்களின் தலைப்புகள் அமைந்தன. மாபெரும் வெற்றியையும் பெற்றுத் தந்தன.

    சினிமாத்துறையைப் பொருத்தவரை நடிப்பு மட்டுமல்லாது, தயாரிப்பு, இயக்கம், வினியோகம் என்று பல துறைகளிலும் ஈடுபட்டு வெற்றி பெற்றார். சினிமாவைப் பற்றி அணுஅணுவாக அறிந்து வைத்திருந்தார். பொதுமக்களின் பார்வையிலிருந்து சினிமாவை அணுகினார். எந்த மாதிரி கதையம்சம் கொண்ட படங்கள் மக்களைக் கவரும் என்பதை நன்றாக தெரிந்து வைத்திருந்தார். அந்த ஞானமே திரையுலகில் அவரது மாபெரும் வெற்றிக்கு வழிவகுத்தது. அவர் மொத்தம் 136 படங்கள் நடித்திருக்கிறார். அதில் 86 படங்கள் 100 நாட்களுக்கு மேல் ஓடி வெற்றி வாகை சூடி இருக்கிறது.

    சிறு வயதில் பிழைப்புக்கான ஒரு தொழிலாக நாடகங்களில் நடிக்க ஆரம்பித்து, பின் சினிமாவில் நுழைந்த எம்.ஜி.ஆர் அவர்கள் ஒரு கட்டத்தில் திரைப்படத் துறையில் வல்லுனர் ஆனார். தான் நடிக்கும் திரைப் படங்களில் கதை, வசனம், பாடல்கள், இசை, இயக்கம் என்று ஒவ்வொன்றிலும் அவரது தாக்கம் இருக்கும். அவர் சொல்வது போல் எல்லாம் அமைந்து படம் வெளியானால் நிச்சயம் அந்தப் படம் வெற்றிப் படமாக இருக்கும். அந்த அளவிற்கு அவரது அறிவாற்றலும், ஆளுமையும் வியாபித்து இருந்தது.

    அவருடைய திரைப்பட வெற்றி ஃபார்முலாவை பயன்படுத்தி இன்றும் ஒரு சில படங்கள் வெற்றி அடைகின்றன. இருந்தாலும் அவருடைய திறமைக்கும், ஈடுபாட்டிற்கும் சமமாகச் சொல்லக் கூடிய ஒருவரை காண்பது அரிது. திரைப்படங்களில் அவருடன் பணியாற்றிய யாருடைய பேட்டியை படித்தாலும், ‘எம்.ஜி.ஆர் அவர்கள் யாரைச் சந்தித்தாலும், சாப்பிட்டீர்களா என்றுதான் முதலில் கேட்பார்’ என்று சொல்லி இருப்பார்கள். அந்தளவுக்கு மனிதநேயத்தோடு வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர்.

    இசையமைப்பாளர்கள், இசையமைக்கும் போது சரணத்துக்கும், பல்லவிக்கும் என பலப்பல மெட்டுக்களை எம்.ஜி.ஆரிடம் போட்டுக் காண்பிப்பார்களாம். ஆனால் அவரோ, இதில் கொஞ்சம் அதில் கொஞ்சம் என்று எடுத்து இதை சரணத்திலும், அதைப் பல்லவியிலும் போடுங்கள் என்பாராம். இசையமைப்பாளர்களுக்கு அது வினோதமாக இருந்தாலும் அதே போல் செய்து கொடுப்பார்களாம். அந்தப் பாடல் வெளியாகும்போது மிகப்பெரிய வரவேற்பைப் பெறுமாம். எம்.ஜி.ஆரின் படப்பாடல்கள் இன்றளவும் ரசிக்கத் தக்கதாக இருப்பதற்குக் காரணம் அவருடைய ஞானம்தான்.

    எம்.ஜி.ஆருக்காக பெரும்பாலான பாடல்களைப் பாடிய மறைந்த T.M. சௌந்திரராஜன் அவர்கள், எம்.ஜி.ஆருக்காகவே தன் குரலை சிறிது மாற்றிப் பாடியதாக ஒரு பேட்டியில் சொல்லி இருப்பார். தனக்குத் திருப்தி ஏற்படும் வரை பாடகர்களைப் பாட வைத்து, பிறகு அவர்களுக்கு வழக்கமான சம்பளத்துடன், மனமுவந்து சன்மானமும் கொடுப்பார் என்றும் அவர் சிலாகித்துச் சொல்லி இருப்பார்.

    தன்னுடைய படத்தின் கதைகளில் மனிதாபிமானமும், தர்மமே இறுதியில் வெல்லும் என்ற கருத்துடைய காட்சிகளும் அமையும்படி பார்த்துக் கொண்டார். தன்னுடைய பாடல்களில் தன் கொள்கைகளையும், லட்சியங்களையும் வெளிப்படுத்தினார். நேர்மறைச் சிந்தனைகளையும், உற்சாகம் கொடுக்கும் வார்த்தைகளையும் அவருடைய திரைப்படப் பாடல்களில் காணலாம்.

    mgr

     

    உன்னை யறிந்தால் நீ உன்னை யறிந்தால்
    உலகத்தில் போராடலாம்
    உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை
    வணங்காமல் நீ வாழலாம்
    மானம் பெரிதென்று வாழும் மனிதர்களை
    மானென்று சொல்வதில்லையா – தன்னைத்
    தானும் அறிந்துகொண்டு ஊருக்குச் சொல்பவர்கள்
    தலைவர்கள் ஆவதில்லையா
    மாபெரும் சபைதனில் நீ நடந்தால்
    உனக்கு மாலைகள் விழ வேண்டும் – ஒரு
    மாற்றுக் குறையாத மன்னவன் இவனென்று
    போற்றிப் புகழ வேண்டும்

    என்று திரைப்படப் பாடலுக்கு வாயசைத்து நடித்தவர், அந்தப் பாடல் சொல்லும் அர்த்தத்துக்கு ஏற்ப வாழ்ந்தும் காட்டினார்.

    உழைப்பாளி வர்க்கத்தின் ஒரு அங்கமாக அவர் நடித்த பெரும்பாலான படங்களின் கதாபாத்திரங்கள், அவரை தத்தம் குடும்பத்திலும், சமூகத்திலும் ஒருவர் என்று மக்கள் கருதும்படி செய்தது. அதனால் மிக எளிதாக மக்கள் மனதைக் கவர்ந்தார் எம்.ஜி.ஆர் அவர்கள்.

    தேவை உள்ளவர்களுக்கு அவர் செய்த உதவிகள் வள்ளல் என்ற பட்டத்தை அவருக்குப் பெற்றுத் தந்தன. மக்களின் அடிப்படைத் தேவைகளுக்காகப் போராடும் வகையிலான அவரது கதாபாத்திரங்கள் அவரை மக்களின் தலைவராக முன்னிறுத்தி மக்கள்திலகம் என்ற பட்டத்தையும் பெற்றுத் தந்தது.

    இது போன்ற அவரின் செயல்பாடுகள் மக்கள் மத்தியில் அவரைப் பற்றி மிக உயர்ந்த பிம்பத்தை ஏற்படுத்தியது. அதுவே சினிமாவில் மட்டுமல்லாது, பின்னாளில் அவரது அரசியல் பிரவேசத்தின் போதும் மாபெரும் ஆதரவையும் வெற்றியையும் அவருக்குப் பெற்றுத் தந்தது.

    சிறுவயதில் பசியின் கொடுமையை அனுபவித்த காரணத்தினால், அவர் முதல்வராகப் பதவி ஏற்ற பிறகு, பள்ளியில் சத்துணவுத் திட்டத்தை கொண்டு வந்து, படிக்கும் குழந்தைகள் பசியால் வாடாது இருக்க ஏற்பாடு செய்தார். அது இன்றளவும் தொடர்கின்றது. மதிய உணவுத் திட்டம் பெருந்தலைவர் காமராஜர் உருவாக்கியது என்றாலும், எம்.ஜி.ஆர் அதை விரிவு படுத்தினார்.

    பாரத், டாக்டர் போன்று எத்தனையோ பட்டங்களையும் பதவிகளையும் பெற்றவர் எம்.ஜி.ஆர். இறுதியில் அவரது மறைவுக்குப் பின் இந்திய அரசின் மிக உயரிய விருதான பாரத ரத்னா பட்டமும் அவருக்கு வழங்கப்பட்டது. ஒரு நடிகராகவும், மக்கள் தலைவராகவும் வாழும் போதும் மறைந்த பின்னும் மக்கள் மனத்தில் நிலைபெற்றிருப்பவர் எம்.ஜி.ஆர். இன்னும் பல காலம் அவருடைய புகழ் நிலைத்து நிற்கும் என்பது உறுதி.

    பொன்மனச் செம்மல் என்றும், புரட்சித் தலைவர் என்று போற்றப்படும் எம்.ஜி.ஆர் அவர்களின் வாழ்க்கை, போராட்டங்களை எதிர்கொண்டு வாழ்க்கையில் முன்னேறி சாதனை படைக்கத் துடிக்கும் எல்லோருக்கும் மிகச்சிறந்த பாடமாக இருக்கும் என்பது நிச்சயம்.

    Share