லிமரைக்கூ கவிதைகள்!
-கவிக்குயில் ஆர். எஸ். கலா, இலங்கை
தள்ளாடும் குடிகாரன் கால்கள்
வறுமையின் பிடியில் அவன் குடும்பம்
பசியில் மனைவி மக்கள்!
மழையில் நிரம்பியது ஆறு
சந்தோசமாக ஓடி நீந்தியது மீன்
உள்ளே மறைந்தது சேறு!
ஓயாமல் ஆடுது அலை
உதவி இன்றிப் படகில் மீனவன்
கடலோடு ஆடுது வலை!
மேகத்தின் அழுகையோ மோகம்
பூமியிலே நிறைந்து விட்டது வெள்ளம்
என்னுள்ளே ஒரு சோகம்!
சிவனுக்கு நெற்றிக் கண்
அடையாளம் போல் மனிதனுக்குச் சிறந்து
நல்ல அறிவின் கண்!
தாய் தந்தை ஆசான்
மூன்று தெய்வங்கள் சொல் கேட்டால்
நாம் அறிவில் மகான்!
விலங்குக்கு வீடு காடு
இதயம் அற்ற மனிதன் கொடுத்தான்
சிறைக் கம்பிக் கூடு!
கண் கவரும் இயற்கை
அதை அழித்து மனிதன் உருவாக்கி
விட்டான் ஒரு செயற்கை!
அச்சம் மடம் நாணம்
பெண்ணுக்குச் சொத்தாக அந்தக் காலம்
இப்போது அதைக் காணோம்!
ஏந்தியது அகப்பை அன்று
துணிந்தாள் போருக்குச் சென்றாள் பெண்
ஏந்தினாள் துப்பாக்கி இன்று!