Blog

  • இந்த வார ராசி பலன் (மே, 26 முதல் ஜூன் 1 வரை)

    வார பலன்கள் 

     

    –    ஜோதிடர் சகாதேவன்

     vaniyal-300x225

    1.மேஷம் : பொதுவாக அனைவருக்கும் மகிழ்ச்சிகரமான வாரம். ஆஹா! ஓஹோ! என வெற்றிகள் கிடைக்காவிட்டாலும் மனநிறைவோடு இருக்கலாம். பெண்களுக்கும் மாணவர்களுக்கும் உற்சாகம் மேலிடும். வியாபாரிகளுக்கு சுமாரான வாரம். அரசியலில் இருப்போர்க்கு முன் ஜாக்கிரதை தேவை. கலைத்துறையினர் திறமையை வெளிப்படுத்தலாம்.

    2. ரிஷபம் : ஓடி ஓடி உழைத்து பணம் சேர்ப்பீர்கள். ஆரோகியம் கைகூடும். அடுத்த படிக்கு ஏற உதவிக்கரம் நீண்டு வரும். மொத்தத்தில் எல்லாம் சாதகமாக அமையும். பெண்களுக்குப் புதிய பொருள் கிடைக்கும். சுற்றி வளைத்து சுப காரியம் சுபமாய் முடியும். மாணவர்கள் எதை விதைக்கிறார்களோ அதை அறுவடைசெய்வார்கள். பணிபுரிவோர்க்கு உயர்வு கிட்டும். வியாபாரிகளுக்கு துணிச்சல் பிறக்கும். கலைத்துறையினருக்கு  வெற்றி கிடைக்கும்.

    3. மிதுனம்: சுபமான செய்தியோடு வருமானமும் வந்தால் மகிழ்ச்சிக்கு குறைவு ஏது. எனவே உங்களிடம் சுறுசுறுப்பு மிஞ்சி நிற்கும். பெண்களுக்கு நல்ல உறவு நீடிக்கும். மாணவர்கள் சாகச விளையாட்டுக்களை தவிர்ப்பது நல்லது. பணிபுரிபவர்களுக்கு மகிழ்ச்சி குறையாது. அரசியலில் இருப்போர் எதையும் ஆராய்ந்து செயல்பட வேண்டும். கலைத்துறையினருக்கு வாய்ப்புகளும் வருவாயும் அதிகரிக்கும்.

    4. கடகம்: எண்ணி துணிந்த செயல்களில் தாமதம் காட்டாதீர்கள். பணவரவு உள்ளதே என்று பிறருக்கு பொறுப்பாக நிற்காதீர். உடல் நலத்தில் கவனம் தேவை. பெண்களுக்கு சுப நிகழ்ச்சிகள் உண்டு. மாணவர்கள் எதையும் தள்ளிப்போடாமல் காலத்தே செய்யவேண்டும். பணிபுரிவோர் எல்லோருடனும் சுமூகமாய் கலந்து பழகுவர். தொழில் புரிவோர் கவனமாய் இருத்தல் வேண்டும். அரசியலில் இருப்போர்க்கு நிதானம் தேவை. கலைத்துறையினருக்கு போதுமான வருமானம் கிடைக்கும்.

    5. சிம்மம்: சரியாக திட்டமிட்டிருப்போர்க்கு எல்லாம் சிறப்பாக நிறைவேறும் நேரம்.ஆரோகியத்தில் அக்கறை கொள்வீர்கள். சுற்றுலா விரும்புவீர்கள். பெண்களுக்கு நிதானம் தேவை. மாணவர்கள் கூடுதல் கவனமுடன் செயல்படவேண்டும். பணியில் இருப்பவர்களுக்கு நம்பிக்கை நட்சத்திரம் பிரகாசிக்கும். வியாபாரிகளுக்கு வருமானம் கூடும். அரசியலில் இருப்போர்க்கு கவனம் தேவை. கலைத்துறையினருக்கு சுமூக மனப்பான்மை  தேவை.

    6.   கன்னி: அதிர்ஷ்டம் உங்களை தேடி வருகிறது. சொன்னபடி செயல்புரிவீர்கள். கடன் தொல்லை நீங்கும். பெண்களுக்கு சங்கடங்கள் வந்தாலும் சட்டென மறந்து பட்டென அன்பு காட்டுவீர்கள். மாணவர்க்கு கவனம் தேவை. பணிபுரிவோர் திறமைகள் மேம்படும். அரசியலில் இருப்போர்க்கு நீண்ட நாள் ஆதங்கம் தீரும். கலைத்துறையினருக்கு சூழல் சிறப்பாக இருந்தாலும் தடாலடியாக செயல்களைச் செய்ய வேண்டாம்.

    7. துலாம்: ஆரோக்கியமும் குடும்பத்தில் ஏற்றமும் இருப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சமுதாயத்தில் மரியாதை உயரும். கோவில்களுக்குச் செல்லும் வாய்ப்புகள் ஏற்படும். பெண்களுக்கு சமாதானம் ஏற்படும். மாணவர்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பணிபுரிவோர்க்கு வருவாய் கூடும். மேலதிகாரிகளின் நற்சான்றிதழ் கிடைக்கும். தொழில் செய்பவர்களுக்கு முதலீட்டில் கவனம் தேவை. அரசியலில் இருப்போர் பார்த்து நடந்து கொள்ள வேண்டும். கலைத்துறையினர் தடைகளை கண்டு கவலைப்படாமல் தன்னம்பிக்கையோடு இருத்தல் வேண்டும்.

    8.  விருச்சிகம்: கடவுள் கருணையால் உங்கள் இல்லத்தில் துன்பம் விலகி இன்பம் பெருகும். நல்ல மனிதர்களின் தொடர்பும் வருவாயும் கிட்டும். பெண்கள் புதிய பொருள் வாங்க விரும்புவர். மாணவர்கள் விளையாட்டில் ஆர்வம் செலுத்துவார். பணிபுரிவோர் கவனமாய் இருத்தல் நலம்.  தொழில் புரிவோர்க்கு  சுமாரான வாரம். அரசியலில் இருப்போர்க்கும் அனுகூலம் கிட்டும். கலைத்துறையினர் போட்டி மேலிட்டாலும் சமாளித்து வெற்றி பெறுவர்.

    9.தனுசு: சின்னச் சின்ன சங்கடங்களைப் பொருட்படுத்தாமல் இருந்தால் வாரம் முழுவதுமே உற்சாகம் மேலிட வலம் வரலாம். உங்களின் ஆரோக்கியம், தன்னம்பிக்கையை மேம்படுத்தி சமூகத்தில் நற்பெயரை எடுப்பீர்கள்.  பெண்களுக்கு பொருள் வாங்க ஆசை தான். மாணவர்களுக்கு படிக்கப் படிக்க இனிக்கும் தான். பணிபுரிவோர் கவனமாய் இருக்க. வீண் விவாதம் தேவையில்லை. அரசியலில் இருப்போர்க்கு எந்தப் பகையும் தேவையில்லை. கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் காத்திருக்கிறது.

    10. மகரம்: கடினமாக உழைத்தாலும் உழைப்புக்கேற்ற பலன் உண்டு. சிலருக்கு அசையா சொத்தும் பலருக்கு வாகன விருத்தியும் அமையும். எனவே வருமானம் சிறப்பாக இருக்கும் எனலாம். பெண்களுக்கு ஆரோகியத்தில் கவனமும் மாணவர்களுக்கு படிப்பில் சிரத்தையும் தேவை. பணிபுரிவோர் மலை போன்ற வேலையையும் போராடி முடிப்பார். அரசியலில் இருப்போர்க்கு எதிர்பார்த்த முன்னேற்றம் இருக்கிறது. கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த முன்னேற்றம் இருக்கும்.

    11.  கும்பம்: தேவையற்ற விவாதங்களைத் தவிர்க்கவும். முன்னோர்களின் அசையாத சொத்துக்களின் பிரச்னை தீரும். பிரயாண அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது. செலவு செய்தாலும் ஆரோகியத்தைப் பார்த்துக் கொள்வீர். பெண்களுக்கு சிக்கனம் தேவை.மாணவர்களுக்கு பாராட்டு கிடைக்கும். பணிபுரிவோர் எப்போதும் போல் இருப்பர். அரசியலில் இருப்போர்க்கு பதவி கிடைக்கும். ஆனால் பணிவு தேவை. கலைத்துறையினர் தனித்துவம் காட்டினால் மகத்துவம் பெறுவர்.

    12. மீனம்: பிரச்சனைகள் குறைந்தது என்று நிம்மதிப் பெருமூச்சு விடுவீர். நல்ல செயல்களை செய்து மகிழ்வீர். எனினும் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பெண்களுக்கு ஆரோகியத்தில் அக்கறை வேண்டும். மாணவர்கள் படிப்பில் மட்டும் கவனம் செலுத்தினால் போதும். பணிபுரிவோர்க்கு சமாதானம் கிடைக்கும். தொழில் புரிவோர்க்கு திருப்தி கிட்டும். அரசியலில் இருப்போர்க்கு வெற்றி கிடைக்கும். கலைத்துறையினருக்கு புதிய பாதை கிடைக்கும்.

    Share
  • மோடி என்ற மோடி வித்தைக்காரர்

     

    — நாகேஸ்வரி அண்ணாமலை

    Modi_Obama__newsnextbd2005-இலிருந்து மனித உரிமைகளை மீறிய குற்றத்திற்காக அமெரிக்காவிற்கு வருவதற்கு மோடிக்கு விசா கொடுக்க அமெரிக்கா மறுத்துக்கொண்டிருந்தது. அவர் இந்தியப் பாராளுமன்றத் தேர்தலில் ஜெயித்து இந்தியப் பிரதமர் ஆகிவிடும் வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிய வந்ததும் ‘எல்லோரையும் போல் மோடியும் அமெரிக்காவுக்கு வருவதற்கு விண்ணப்பித்தால் அமெரிக்கா அதைப் பரிசீலனை செய்யும்’ என்று கூறியது. மோடியின் வெற்றி வாய்ப்புகள் கூடக் கூட மோடியோடு ஒத்துழைக்கத் தயார் என்று அமெரிக்கா கூறத் தொடங்கியது. தேர்தல் முடிவுகள் வந்ததும் மோடியை முதலில் வாழ்த்திய நாடுகளில் ஒன்றாக அமெரிக்கா இல்லையென்றாலும் மறு நாளே ஜனாதிபதி ஒபாமா மோடியை போனில் நேரில் அழைத்து வாழ்த்துக் கூறினார். அதோடு மோடியோடு சேர்ந்து இந்திய-அமெரிக்க நல்லுறவுக்குப் பாடுபடப் போவதாக வாக்களித்தார். இது போதாதென்று வெளியுறவு அமைச்சர் கெரி அமெரிக்காவுக்கு வருவதற்கு அழைப்பு விடுத்திருக்கிறார். கெரிக்கு என்ன அவசரமோ தெரியவில்லை. உலகின் இரண்டு பெரிய ஜனநாயக நாடுகளும் ஒன்றாகச் செயல்பட வேண்டும் என்றும், மோடி எப்போது அமெரிக்கா வர முடியும் என்றும் கேட்டிருக்கிறார். அமெரிக்கா வருவதற்கு மோடி தேதி கொடுக்கும் முன் அவரே வந்து மோடியைத் தூக்கிக்கொண்டு போய்விடுவார் போலும்!

    இந்தியாவுக்கு உலக வல்லரசு நாடான அமெரிக்கா தேவை; அதே சமயம் அமெரிக்காவுக்கும் இந்தியா தேவை. ஆசியாவில் வலிமை பெற்றுவரும் சீனாவை கட்டுக்குள் வைக்க இந்தியாவின் உதவி அமெரிக்காவுக்குத் தேவைப்படலாம். இருந்தாலும் ஏன் இப்படி அவசரப்படுகிறார்கள் என்று தெரியவில்லை. 2002-இல் குஜராத்தில் முஸ்லீம்களுக்கு நடந்த மாபாதகத்தை மோடி கண்டும் காணாதது போல் இருந்ததற்கு மனித உரிமைகளை மீறிய குற்றத்தை மோடி மீது சுமத்திய அமெரிக்கா இப்போது எந்தக் காரணத்தால் அவரை விழுந்து விழுந்து வரவேற்கிறது? அவர் செய்ததாக அமெரிக்கா அவர் மீது சுமத்திய குற்றங்கள் எல்லாம் என்னவாயிற்று? இந்தியாவில் மோடி மீது பல விசாரணைகள் நடந்து சரியான ஆதாரங்கள் இல்லாததால் அவர் மீது சாட்டப்பட்ட குற்றங்கள் நிரூபிக்கப்படாமல் அவர் நிரபராதி என்று தீர்மானிக்கப்பட்ட பிறகும் அமெரிக்கா அவருக்கு விசா கொடுக்க மறுத்தது. அவர் இந்தியப் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் என்ற ஒரே காரணத்திற்காக அவர் செய்ததாக அமெரிக்கா சாட்டிய குற்றங்கள் எல்லாம் இல்லையென்றாகி விடுமா?

    மோடி என்ற மோடி வித்தைக்காரர் தன்னுடைய இந்துத்துவ கொள்கைகளை எல்லாம் மூடிமறைத்துவிட்டு ‘வளர்ச்சியின்’ மூலம் இந்தியாவை இந்திரபுரியாக மாற்றிவிடுவேன் என்று கூறுவதை அப்பாவி இந்திய மக்கள்தான் அப்படியே நம்பி அவருக்குப் பெரும்பான்மை அளித்திருக்கிறார்கள். காங்கிரஸுக்கு மாற்றாக இருக்க வேண்டும் என்பதற்காக பி.ஜே.பி.க்கு இப்படி ஒரு பெரும்பான்மை கொடுக்க வேண்டுமா? பெரும்பான்மை கிடைத்துவிட்டதால் பி.ஜே.பி.யும் (மோடியும்) தங்கள் இஷ்டத்திற்கு என்ன வேண்டுமானாலும் செய்வதற்கு வாய்ப்புக் கொடுத்திருக்கிறார்கள் இந்திய மக்கள்.

    மக்கள் மட்டுமல்ல, அவரை எப்படி எப்படியோ விமர்சித்த இந்திய அரசியல் கட்சித் தலைவர்கள் எல்லாம் அவரை இப்போது புகழ்ந்து தள்ளுகிறார்கள். அவர் பின்னால் போகத் தயாராக இருக்கிறார்கள். அவர் நிழலில் வெயில்காய நினைக்கிறார்கள். இதெல்லாம் எதற்கு? அரசியல் ஆதாயத்தை எப்படியும் பெற்றுவிட வேண்டும் என்பதற்காகவா?

    இலங்கைத் தமிழர்களைக் கொன்றுகுவித்த இலங்கைப் பிரதமர் இராஜபக்சேயை மோடி தன்னுடைய பதவியேற்பு விழாவிற்கு அழைத்திருப்பதை ஏற்றுக்கொள்ளவும் முடியாமல் எதிர்க்கவும் முடியாமல் தமிழ் நாட்டுத் திராவிடக் கட்சிகள் திணறுவதைப் பார்த்தால் இவர்கள் மீது பரிதாபமாக இருக்கிறது. இந்தியாவை ஒரு இந்து நாடாக மோடி மாற்ற முயற்சித்தால் அப்போதும் இவர்கள் வாய்பொத்தி நிற்கத்தான் போகிறார்களா? பெரியார் படத்தையும் தங்கள் கட்சி விளம்பரங்களில் சேர்த்துக்கொள்ளும் இவர்கள் பெரியார் வழியில் வந்தவர்கள் என்று சொல்லிக்கொள்வதற்கு என்ன தகுதி இருக்கிறது? இந்த அவலம் நடப்பதற்கு யார் காரணம்? மோடி என்ற மோடி வித்தைக்காரரா? அல்லது நாட்டு மக்களின் நலன்களாவது, சுண்டைக்காயாவது, எங்களுக்கு எங்கள் நலன்கள்தான் முக்கியம் என்ற அளவிற்கு இறங்கிவிட்ட இந்த சுயநல அரசியல்வாதிகளா? இறைவா, இந்த அப்பாவி இந்திய மக்களை இந்த அரசியல்வாதிகளிடம் இருந்து காப்பாற்று.

    படம் உதவி: http://newsnextbd.com/obama-congratulates-modi/

    Share
  • நிறங்கள் – ஒரு பார்வை

    மாதவன் இளங்கோ

    nirangal

    அது நான் தினந்தோறும் சென்றமர்ந்து ஓய்வெடுக்கும் பூங்கா.

    காற்றோடு மரத்தின் இலைகள் உராயும் சத்தம், மழலைகள் உரக்கக் கூச்சலிட்டு விளையாடும் மகிழ்ச்சியின் சத்தம், காதலர்களின் உதடுகள் எழுப்பும் காதல் சத்தம், பறவைகள் சில என் வெகு அருகாமையில் எதையோ கொத்தித் தின்று பசிமுறிக்கும் சத்தம், அருகேயொரு விமான நிலையம் இருப்பதால் சில நிமிடங்களுக்கொருமுறை விமானங்கள் காற்றை ஊடுருவும் சத்தம் என அத்தனையும் கலந்து எனக்கு அன்றாடம் இலவச இசைக்கச்சேரி தான்!

    அன்றைக்கு சுரீரென அடித்த வெயிலோடு சேர்ந்துகொண்டது சிறுதூறல்! அதன் விழைவாய், இசைக் கச்சேரியில் இன்னொரு புதிய வாத்தியம் இணைந்திற்று! அழகான இசை, மிதமான வெயில், மிதமான மழை. ஆகா! இதுபோதும் எனக்கு இன்றைய மாலைக்கு! வெயிலும் மழையும் விட, இந்த ‘மிதம்’, அதுதான் சிறப்பு. கடும் வெயிலும், கடும் மழையும்  யாருக்குப் பிடிக்கும்? மிதம் தான் இதம்.

    வெயிலுக்கும் மழைக்கும் இடையே சிலமணித்துளிகள் நான் சிக்குண்டு   லயித்துக் கிடந்த போது, என் செவிகள் ‘சிறுவர்கூட்ட வாத்திய அமைப்பில்’ ஏற்பட்டதொரு பெருமாற்றத்தைக் கண்டுகொண்டு மேலும் கூர்மையானது.

    ‘வானவில்’ ‘வானவில்’ ‘வானவில்’ என்று அந்த மழலைகளின் ஆரவாரத்தில் தான் எத்தனை மகிழ்ச்சி?

    வானவில்! நான் அறிவேன். ஏழு நிறங்கள் அதற்கு. ஊதாவும், கருநீலமும், நீலமும், பச்சையும் மஞ்சளும், ஆரஞ்சும் சிவப்பும் என ஏழு நிறங்கள்!

    ஏழு வெள்ளைப் பிரம்புகளுக்கு வெவ்வேறு வண்ணந்தீட்டி ஒன்றன் மீதொன்றாய், அழகாய் அடுக்கி, வளைத்து வில்லாக்கினாற்போல் இருக்கும் இந்த வானவில்!

    எனக்கு நிறங்கள் தெரியாது. விளக்கினாலும் புரியாது. எனக்கு ஒளி தெரியாது. விளக்கினாலும் புரியாது. ஆனால் எனக்கு உணர்வுகள் தெரியும்! எனக்கு ஒலி புரியும்!

    நிறங்களும் உணர்வுகளுமா? என்ன தொடர்பு? தொடர்பில்லாமல் இருக்கலாம். ஆனால் எனக்கு இந்தத் தொடர்பு தேவைப்படுகிறது. ஏனென்றால் எனக்கு வேறு வழியில்லை. எனக்குப் புரிய வைக்க முயற்சித்து பல மேதைகளே தோற்றுப்போனதால், எனக்கு புரியவைக்க நானாகவே செய்துகொண்ட ஒரு ஏற்பாடுதான் இந்த நிறங்களும் உணர்வுகளும்.

    கோபம், சோகம், மகிழ்ச்சி, பயம், வெறுப்பு, வியப்பு, எரிச்சல் என்று ஒவ்வொரு உணர்வும் ஒவ்வொரு நிறம் எனக்கு.

    கோபம் வருகையில் எனக்குள் ஏற்படும் உணர்வின் நிறம் சிவப்பு. யாரேனும் சிவப்பு என்றால், என் மனம் உடனே  அதை கோபம் என்று குணப்படுத்திக் காட்டும் அதனால் எனக்கு சிவப்பு என்றாலே எப்போதும் சிறிது நடுக்கம் தான்!

    பச்சை தான் எனக்கு நிரம்பப் பிடித்த நிறம். உங்களுக்குப் பச்சை. எனக்கு மகிழ்ச்சி. மகிழ்ச்சியை யாருக்குத் தான் பிடிக்காது. யாரேனும் பச்சை புல்வெளிகள் என்றாலே, எனக்குள் மகிழ்ச்சி பிறக்கும். நகரங்களில் இப்போதெல்லாம் புல்வெளிகளை உணரமுடிவதில்லை. இதற்காகவே கிராமங்களுக்கு பலமுறை செல்வதுண்டு, உங்கள் பச்சையை உணர்வதற்கும், என்னுடைய மகிழ்ச்சியை காண்பதற்கும்.

    பல நேரங்களில் கோபத்திற்கும் மகிழ்ச்சிக்கும் இடையே இருந்து கொண்டு மஞ்சள் நிறத்தைக் காண்பதுண்டு. சூரியன் மஞ்சள் நிறம் என்று கூறுகிறார்கள். சில நேரங்களில் அது உக்கிரமாய் வாட்டுகையில் சிவப்பை உணர்வேன்.

    ஊதாவுக்கு  வெறுப்பு, கருநீலத்து சோகம் என்று இப்படி பல ஒப்பீடுகள். சில  சமயம் இருவேறு அல்லது பல்வேறு உணர்வுகளைக் கலந்து வேறு சில நிறங்களையும் காண்பதுண்டு. கோபமும் சோகமும் கலக்கும் போது எனக்கு வாழ்க்கையின் மீது வெறுப்பு தோன்றும்.

    இன்னும் எத்தனையோ உணர்வுகள். எத்தனையோ நிறங்கள்…

    அத்தனை நிறங்களையும் சரிவிகிதத்தில் கலந்தால் வெள்ளை பிறக்கிறது என்கிறார்கள். பச்சைக்கு அடுத்து எனக்கு வெள்ளை மிகவும் பிடிக்கும். வெள்ளை எனக்கு தூய்மை. யாரேனும் எனக்கு உதவும்போதெலாம் வெள்ளையை உணர்வேன்.

    வெள்ளை நிறமற்ற நிலை இல்லை என்றால் சிலரால் புரிந்துகொள்ள முடிவதில்லை என்கிறார்கள். வெள்ளை எல்லா நிறங்களும் உள்ளடக்கிய நிலை. ஆனால், எனக்கு இது நன்றாகப்  புரிகிறது. எல்லா உணர்வுகளையும் உள்ளடக்கிய நிலை வெள்ளை உணர்வு நிலை. அது ஒளியின் நிறம் என்று கூறுகிறார்கள். ஞானிகளைப் பற்றி எண்ணும்போதெல்லாம் நான் வெள்ளை நிறத்தை உணர்வேன். சில சமயங்களில் நானும் ஞானியாவதுண்டு!

    அது அனைத்தையும் உள்ளடக்கிய நிலை.

    இதெல்லாம் உங்களுக்குப் புரிகிறதா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், இது நிறங்களைப் பற்றிய என்னுடைய பார்வை. அதில் தவறு இருந்தால் மன்னிக்கவும். எத்தனையோ விஷயங்களைப் பற்றிய உங்களின் பார்வை எனக்கு விளங்கியதே இல்லை. ஆயினும் அதற்காக உங்கள் மீது நான் கோபம் கொண்டதே இல்லை.

    கருப்பு எனக்கு – தீவினை அல்லது தீங்கு! கருப்பு நிறமல்ல என்று கூறுகிறார்கள். அது நிறமற்ற நிலை. கருப்பை வெள்ளைக்கு எதிர் என்கிறார்கள்! எனவே அது மனத்தூய்மையற்றவர்களின் நிறமாகத்தான் இருக்கவேண்டும். அது துரோகிகளின் நிறம்; கொலைகாரர்களின் நிறம்! படுகொலைகளைப் பற்றி கேள்விப்படும்போதெல்லாம், நான் கருப்பை உணர்கிறேன்.

    உணர்வது மட்டுமல்ல, காணவும் செய்வேன்!

    ஆமாம், என்னைப் போன்ற பார்வையற்றவர்கள் காணமுடிந்தது அந்தக்  கருப்பு மட்டுமே! அது தீங்கின் நிறம்! இந்த இயற்கை எங்களுக்கு இழைத்த தீங்கின் நிறம்.

     

     

    Share
  • அவன்தான் பாபு

    இசைக்கவி ரமணன்

    அன்புடைய நண்பர்களே!

    எனது இனிய நண்பன் ஒருவனைப் பற்றி உங்களுடன் கொஞ்சம் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். யாருக்குத்தான் நண்பர்களில்லை? நண்பர்களில்லாத வாழ்வும் ஒருவாழ்வா? எனவே, நான் என் நண்பனைப் பற்றி எழுதுவது உங்கள் அனைவருக்கும் பிடித்தமாக இருக்கும் என்ற எண்ணத்தில் ஓர் அந்தரங்கச் சித்திரத்தை அம்பலமாக்குகிறேன்.

    அன்புடன்,

    ரமணன்

    Rama1968 ஆம் வருடம். நாங்கள் பாண்டிபஜார் பகுதியிலிருந்து வீடுமாறி நங்கைநல்லூர் வந்துசேர்ந்தோம். அப்பா மட்டுமே பார்த்து வைத்திருந்த அந்த வீட்டை, நாங்கள் குடிபுகுந்த அன்றுதான் கண்டோம். அப்போது எனக்கு வயது 14. அருமையான என் கிரிக்கெட் நண்பர்களை விட்டுவிட்டு, ஏதோ ஒரு பெயர் தெரியாத தொலைதூர கிராமத்திற்கு ஏன் செல்கிறோம் என்று என் மனது நொந்து கொண்டிருந்தது. வந்த சிலநாட்களிலேயே எல்லாம் மாறிவிட்டது. சீக்கிரமே வீட்டின் பின்புறமே கிரிக்கெட் நண்பர்கள் கிடைத்தனர். கிணற்றில் நீரிறைத்துக் குளிக்கும் சுகம், நாமே போட்ட தோட்டம் என்று நங்கைநல்லூர் வாழ்க்கை படிப்படியாக வளர்ந்தது.

    அங்கு வந்த வெகுவிரைவிலேயே ஒரு கலை நிகழ்ச்சியைக் காணவருமாறு புதிய நண்பர்கள் அழைத்தனர். இப்போது குருவாயூரப்பன் குடிகொண்டுள்ள நிலத்தில் அந்த நாளில் ஒரு சிமெண்டு மேடை இருந்தது. அங்கேதான் அந்த ‘நல்லூர் என்டர்டெய்னர்ஸ்’ குழுவின் நிகழ்ச்சி. எனக்கு அங்கே யாரையும் தெரியாது. ஆனால், அந்த நிகழ்ச்சியில் என்னைக் கவர்ந்த மூன்று பேர்கள் எனக்கு நெருங்கிய நண்பர்களாகி விட்டார்கள்.

    ஒருவர், வடக்கத்திக்காரர்போல் இருந்தார். அலைபுரளும் தலைமுடியைத் தள்ளிவிட்டுக் கொண்டு, ஹார்மோனியத்தை வைத்துக்கொண்டு, ‘வரப்போகும் திரைப்படத்திலிருந்து ஒருபாடல்’ என்று அறிவிப்புச் செய்து, ‘உன்னோடு வந்தாலோ உறவாடச் சொல்லும்,’ என்று இனிமையாகப் பாடினார். ஒரு கோமாளியாக வேடமிட்டு பிரமிக்க வைத்தார். தொடர்ந்த நாடகத்தில் பட்டாணிக்காரன் போலத் தமிழ்பேசி நடித்தார். இன்றும் எனக்கு நண்பராக, மூத்த சகோதரராக விளங்கும் அவர்தான் மணிசார்..

    இன்னொருவர், நங்கைநல்லூர் ‘சோ’ என்றழைக்கப்பட்ட வீரராகவன். குரலும், முழியும், மூக்குக் கண்ணாடியும் அப்படிச் சொல்லவைத்தன போலும். அத்தோடு முடிந்தன ஒற்றுமைகள். வீரராகவன், தனது வாழ்க்கையின் அல்லல்களை அடுத்தவர்களுக்கு உற்சாகம் ஊட்டும் கவிதைகளாய்ப் பாடும் கவிஞன். நேர்மையாளன். நேசமே நெஞ்சாகக் கிடப்பவன். இதோ இன்றுகூட அவனிடம் நான் பேசினேன்.

    மணிசார் மேடையில் நிற்கிறார். அவர்தான் ராணுவத்திலிருந்து ஓய்வுபெற்ற அதிகாரியாம். இரண்டு கைகளையும் போரில் இழந்துவிட்டாராம். ஒப்பனை தத்ரூபமாகவே இருந்தது. ‘அதனாலென்ன? அதோ நிற்கிறாரே என் செகரட்ரி! அவர்தான் எனக்குக் கைகள்,’ என்றார். அருகே, அவரைவிடக் குள்ளமாக ஒரு பையன், கண்கள் பளபளக்க நின்றுகொண்டிருந்தான். அவர் அழைத்ததும், மணிசாரின் பின்னால் வந்து நின்று, தனது கரங்களை அவரது கரங்கள் இருக்க வேண்டிய இடத்தில் கொண்டுவந்து, அவர் பேசப் பேசக் கைகளாலேயே அற்புத பாவனைகள் காட்டினான். ஒரு கட்டத்தில் மணிசார் சிகரெட் பிடிக்கவேண்டும். இந்தப் பையன் சாரின் பாக்கெட்டிலிருந்து சிகரெட்டை எடுத்தாயிற்று. ஆனால் தீப்பெட்டியை எடுக்கும்போது அது விழுந்து விட்டது! இருவரும் அனாயசமாகக் குனிய, அந்தப் பையன் தீப்பெட்டியை எடுத்து, சிகரெட்டைப் பற்றவைத்து, மணிசாரின் முகவாயைச் சொறிந்தபோது, இதெல்லாம் ஏற்கனவே திட்டமிட்டுச் செய்தார்கள் என்றெண்ணிய அரங்கத்தார் எழுப்பிய கரவொலி அடங்க வெகுநேரமாயிற்று.

    அதே பையன் மீண்டும் மேடைக்கு வந்து பாலையா, அசோகன் (“எனக்குத் தொப்பை இல்லெ, இருக்கறதா நெனச்சுக்குங்க”) மற்றும் சிவாஜியைப் போலும் பேசி எல்லோரையும் அசரவைத்தான்.

    இத்துடன் நிற்காமல் நாடகத்தில் டாக்சி டிரைவராக வந்து, சென்னைத் தமிழில் வெளுத்துக்கட்டி, உள்ள வசனத்தை மறந்து, அப்போது மனதில் தோன்றியதைப் பேசிக் கலக்கிவிட்டான்.

    அவனைச் சந்திக்க ஆவல் கொண்டேன். அவன் மூலம்தான் மணிசாரையும், வீரராகவனையும்
    சந்தித்தேன்.

    இவன் முதலில் நம்மோடு பழகிவிட்டு அப்புறம் நம்மைச் சந்திக்கிறானோ என்று வியக்கவைக்கும்படி ஒரு நேசம். எல்லோரிடமும் எளிதில் ஒட்டிக் கொள்வான். அவர்களுக்குத் தெரிந்தவற்றில் ஏதேனும் தனக்குத் தெரிந்தவொன்றைப் பேசத் தலைப்படுவான்.

    அவனுக்குத் தொடர்புகள் பிடிக்கும். வரம்புகள் தெரியாது! அதனால்தானோ என்னமோ பலரை ஒரே சமயத்தில் காதலிப்பது அவனுக்கு சாத்தியமாகவே இருந்தது. ஒரே நேரத்தில் ஒரு பெண்மணியும், அவள் மகளும் கூட அவனிடம் மயங்கிக் கிடந்தார்கள்! அதில் ஏதும் தவறிருப்பதாக அவன் நினைத்ததே இல்லை! அதேபோல், காதல் வேறு கல்யாணம் வேறு என்பதுபோல் ஒரு மனோபாவம் அவனுக்கிருந்தது. அவனுக்குக் கொள்கைகள் கிடையாது. பாவனைகள் மட்டுமே உண்டு. காதலியிடம் உண்மையிலேயே குழைவான்; மனைவியிடம் மிகுந்த பிரேமையுடனும், மரியாதையுடனும் இருப்பான்! தாய்மீது மட்டற்ற பாசம். அவள் மிகவும் வெகுளி. தந்தையோ அதற்கும் மேல். அவர் புகையிலையைத் துப்பிவிட்டுப் பேச ஆரம்பித்தால்தான் அவரும் எவ்வளவு வெகுளி என்பது புரியும். பாபுவின் பாச வெள்ளமே அவர்களை அப்படி ஆக்கிவிட்டதோ என்றுகூடத் தோன்றியது. அவனுக்கு அத்தை ஒருத்தி இருந்தாள். அவள்தான் அவனது ‘வெளி’ நடவடிக்கைகளை சதா சாடிக்கொண்டே இருப்பாள்.

    ஒருமுறை, அவனை நான் ‘உரிய இடத்தில்’ கண்டுபிடித்து அவனோடு அவன் வீட்டுக்குச் சென்றேன். உடனே அவன் அம்மா அவனுக்குச் சாப்பாடு போட்டாள். அத்தையோ அவனை விடாமல் சாடி “நீ எங்கேர்ந்து வரேன்னு தெரியும். டே ரமணா நீ சொல்லுடா, அங்கேர்ந்துதானே வரான் அவன்?” என்று கேட்டவுடனேயே பாபு கையிலெடுத்த சோற்றுருண்டையை (மிகப் பெரிதாய்த்தானிருந்தது!) விசிறியடிக்க, பருக்கைகள் தரையெங்கும் சிதற, அவன் ருத்திர தாண்டவமாட, அத்தை விடாமல் கத்த, வைணவத் தமிழில் நமக்குத் தெரியாத கெட்ட வார்த்தைகள் இத்தனை இருக்குமோ என்று நான் வியக்க, அவன் என்னை இழுத்துக்கொண்டே வெளியே வர, ‘ஐயோ! சாப்பிடாம போறியேடா!’ என்று அவன் அம்மா அழுது அரற்றியது இன்னும் என் காதில் ஒலிக்கிறது.

    பாபுவின் குணசித்திரத்தில் மூன்று அம்சங்கள் பிரதானமாக இருந்தன. ஒன்று காதல், இன்னொன்று கோபம். மூன்றாவது கோமாளித்தனம். ஏதோவொரு விசித்திரமான தைரியம்தான் அவனை நிர்வகித்தது. காரணமில்லாமலேயே பொத்துக்கொண்டுவரும் கோபமும், எடைதூக்கி
    உடற்பயிற்சி செய்து முறுக்கேறிய உடம்பின் மதர்ப்பும் அவனுக்கு அடிதடியில் ஒரு ருசியை ஏற்படுத்தியிருந்தன. தேவையின்றிப் பலவிதமான சண்டைகளில் ஈடுபடுவான். அடித்திருக்கிறான்; அடிவாங்கியுமிருக்கிறான். இந்த விவகாரத்தில்தான் அவனுக்குப் பிச்சை எனப்படும் கிருஷ்ணன் நண்பனானான். பாபு-பிச்சை என்று இவர்கள் இரட்டையர்களாகவே தென்பட்டார்கள். ஏதாவது ஒரு தகராறுக்கு எப்போதும் தயாராகவே இருந்தார்கள். பிச்சைக்கு நவரசமும் சினத்தின் வெளிப்பாடுதான்! பாபுவோ உணர்ச்சிகளின் கிலுகிலுப்பை. இவர்களிருவரும் பிராமணர்கள் என்பது உள்ளூர் ரவுடிகளுக்கு இன்னும் கோபத்தை வரவழைத்தது. ஒரு முறை, நான் அவன் வீட்டுக்குச் சென்றபோது, பாபுவை அடித்துப்போட ஏழெட்டு பேர் சைக்கிள் செயின் போன்ற போர்க்கருவிகளோடு வந்திருந்தார்கள். அவனை வெளியே கூப்பிட்டார்கள். உள்ளிருந்து அவனது அம்மாவும், அப்பாவும் ஓவென்று புலம்பத் துவங்கினார்கள். பாபு அடிவாங்கவே இல்லை! ஏன் தெரியுமா? ஒரு நீண்டவுரையாற்றினான் பாருங்கள்! “என்ன அடிச்சுப்போட ஒங்களுக்கு ரெண்டு நிமிஷம் போதும்! எங்க அப்பா அம்மா காலடியிலெ ரத்த வெள்ளத்திலெ என்னெ நீங்க தூக்கிப்போடலாம். ஆனா..” என்று ஆரம்பித்து சிவாஜி கணேசனும், சைகாலஜிஸ்டும் சேர்ந்து கும்மியடித்தான். அம்மாடி! அடிக்க வந்தவர்கள் அழாத குறையாகத் திரும்பிப் போனார்கள்!

    அவனுக்கு ‘தாடி’ பாபு என்று பெயர். எப்போதோ ஒருநாள் முழுச்சவரம் பண்ணிக்கொண்டு வந்து, கொஞ்சம் வெட்கமுடன் நிற்பான். மற்றபடி, தாடி வளர்த்து அதைப் படாதபாடு படுத்திக்கொண்டிருப்பான். தாடியும், லுங்கியுமாய் சைக்கிளில் திரிந்ததாலேயே அவனுக்கு ஒரு ரெளடித் தோற்றம் வந்துவிட்டது.

    ஒருமுறை ராஜராஜேஸ்வரி கோவிலில் திருமதி மணி கிருஷ்ணசாமியின் கச்சேரி நடக்கிறது. அம்மையார் அருமையாகப் பாடினார்கள். அது தோடிராகம் என்று சொன்னவுடன் பாபுவுக்கும், பிச்சைக்கும் உற்சாகம் ஏறிவிட்டது. நாங்கள் ஒரு பத்து பேர் ஏரியிலிருந்த குருவாயூரப்பன் மேட்டில் அமர்ந்து கொண்டு உச்ச ஸ்தாயியில் ‘ஜகதோ தாரணா’ பாடுவோம், அல்லது கூப்பாடு போடுவோம். ஆளரவம் இல்லாத இடமாதலால் பிழைத்தோம். இல்லையென்றால் ஏதோ கொலை நடக்கிறது என்று போலீஸ் பிடித்துக் கொண்டு போயிருப்பார்கள். அந்த ஞாபகம் வந்துவிடவே, பாபு (பிச்சை சகிதம்) மேடைக்குச் சென்று அம்மையாரை ‘ஜகதோத்தாரண’ பாடும்படிக் கேட்டுக்கொண்டான். அதை அங்கிருந்த பிரமுகர்கள் ரசிக்கவில்லை. மேலும், விசிலடிக்காமல் எதையும் ரசிக்கத் தெரியாது அவனுக்கு! அப்படியொரு பாராட்டை மணிகிருஷ்ணசாமி அவர்கள் வாழ்க்கையில் பெற்றிருக்கவே மாட்டார்கள்!! அன்று, கச்சேரியில் மிருதங்கமும் களை கட்டி விட்டது. அல்லது அப்படித் தோன்றியது எங்களுக்கு. பாபுவால் தாங்க முடியவில்லை. உடனே ஒரு மாலையை வாங்கிக்கொண்டு மேடைக்கு (ஆமாமாம், பிச்சையோடுதான்!) விரைந்து, படபடக்க மைக்கைப் பிடித்து நாலுவார்த்தை சொல்லிக் கண்ணீர் மல்கி, மாலையையும் மிருதங்கக்காரர் கழுத்தில் போட்டுவிட்டான்! அவர், இப்படி, தாடி, லுங்கி சகிதம் கோவில் கச்சேரியில் இதுவரை யாரும் பாராட்டியிராததால், இந்தவூரில் ‘இவர்களுக்’கெல்லாம் கூடப் பாட்டு ரசிக்கத்தெரிகிறதே என்ற வியப்போடும், மாலையைப் போட்டுக்கொள்ளவில்லையென்றால் இவன் நம்மை ஒருபோடு போட்டுவிடுவானோ என்று சற்றே அச்சத்தோடும் வாங்கிக்கொண்டு கொஞ்சம் முழித்தார். பிரமுகர்களின் முகச்சுளிப்பைச் சட்டை செய்யாமல், பாபுவும், பிச்சையும் ரொம்பப் பரவசமாகி நாங்கள் அமர்ந்திருந்த மணற்பரப்புக்குத் திரும்பிக் கொண்டிருக்கும்போதுதான் அது நடந்தது.

    “டேய் நில்லு!” என்றது ஒரு குரல்.

    குரலுக்கு சொந்தக்காரர் அந்த ஊரில் சித்தராக வலுக்கட்டாயமாக மதிக்கப் பட்ட ராஜகோபாலன் என்பவர்.

    இங்கே சிவாஜியைப்போல் புருவம் உயர்ந்து திரும்பினான் பாபு.

    “என்னடா, கச்சேரி நடுவிலெ கலாட்டா பண்றீங்களா?”

    ‘கலாட்டாவா? நாங்க ரசிச்சோம்; பாராட்டினோம் அவ்வளவுதான்,’ என்றான். பிச்சை, எதுவாயிருந்தாலும் நாலு தட்டு தட்டிவிட்டு அப்புறமாய்ப் பேசிக்கொள்ளலாமே என்று பரபரத்தான்.

    “எதுக்கு மாலயப் போட்டீங்க?”

    ‘ரசிச்சோம் போட்டோம். ஏற்கனவே சொல்லிட்டேனில்லே?’

    “நீங்க எப்டீடா மாலயப் போட்லாம் நாங்க இருக்கும்போது?”

    ‘யோவ்! கச்சேரி ஜனங்களுக்குத்தானேயா? நீங்க போடற மாலெ வெறும் சம்பிரதாயம். நாங்க போடறதுதான் உண்மையான ரசனை’ என்றானே பார்க்கலாம்!

    ராஜகோபாலன் விடுவதாயில்லை. ஒருபடி மேலேபோய், “நான் யார் தெரியுமா? உங்களெ அப்படியே நிக்கவச்சுடுவேன்!” என்று மிரட்டினார். உடனே பிச்சை லுங்கியை மடித்துக் கட்டினான்; பாபுவுக்குக் கோபம் வந்ததில் வார்த்தைகள் வரவில்லை. இருவரும், ‘யோவ்! எங்கெ, நிக்கவை பாக்கலாம்! யாரெ மெரட்றே?’ என்க, அப்புறம் தொடர்ந்த சம்பாஷணையை இங்கே பிரசுரிப்பதற்கில்லை!

    ஒருவழியாக நாங்கள் இருவரையும் மீட்டுக்கொண்டு வந்தோம். துடிப்பான, நல்ல மனம் கொண்ட இளைஞர்களை ரவுடிகளாக மாற்றுவது இதுபோன்ற பிரமுகர்களின் அறியாமையும், அட்டகாசமும்தான். தோற்றம் என்பது எந்த அளவுக்கு மாயையைத் தோற்றுவிக்கிறது என்பதை நினைத்துப் பார்த்தால் வியப்பாக இருக்கிறது. அற்புதமான உடையில்தான் எத்தனைக் களவாணிகளை நாம் சந்திக்கிறோம்! எத்தனை நல்லவர்கள் ஏனோ தாடியிலும் லுங்கியிலும் தொலைந்து போகிறார்கள்!

    என்னிடம் ஒருமுறை கூட அவன் கோபப்பட்டதே இல்லை.. நான் அவனைப் பலமுறை கடிந்துகொண்டதுண்டு. ஒருமுறை — இதுவும் கச்சேரியில்தான்! வீணை காயத்ரி — சந்தானம் என்ற ஒரு எளிய மனிதரிடம் தேவையில்லாமல் கோபப்பட்டுக் கண்ணெல்லாம் சிவந்து அடிக்கத் தயாராகிவிட்டான். நான் அவனை அங்கேயே கடுமையாகச் சாடி அவரிடம் மன்னிப்புக்கேள் என்றேன். கேட்டானே!! அவரும் உடனே அவன் கோபத்தை மறந்து கைகுலுக்கினாரே! அதுதான் பாபு!

    அவன் பழகாத ஆளே ஊரில் கிடையாது. அவனும், பிச்சையும் கோவிலில் சாமி தூக்கச் செல்வார்கள். விநாயகர் கோவிலில் சதுர்த்தியன்று இரவு முழுக்க ஊர்வலம். இருவரும் யாருக்கும் விட்டுக் கொடுக்காமல் தோள்கொடுப்பார்கள். மறுநாள் யாரையோ காதலித்துக் கொண்டிருப்பான். அதற்குப் பிறகு, ஏதாவது அடிதடியில் காயப்பட்டுக்கொண்டு வருவான். அடுத்தநாள் காலையில் நான் வெளியே வந்தால், இவன் ஈரத் துண்டைக் கட்டிக்கொண்டு ஒரு மணிப்பிரம்பைக் கையிலேந்திக் கொண்டு, என்னமோ மந்திரம் ஜபித்துக் கொண்டு ஒரு பாழடைந்த சிவன் கோவிலுக்கு வெறுங்காலோடு சென்றுகொண்டிருந்தான்! அவனும், பிச்சையுமாய்ப் புதைந்து கிடந்த பழங்காலத் தூணை வெகுபிரயாசையுடன் வெளியே கொணர்ந்து நிறுத்தினார்கள். பாம்பு மண்டிய புதர்களைக் களைந்தார்கள். இன்று அந்தக் கோவில் நங்கைநல்லூரை அடுத்த எம்.எம்.டி.சி. காலனியில் பெரிய சிவன்கோவிலாய்ப் புகழுடன் விளங்குகிறது.

    நங்கைநல்லூர் குளத்தங்கரை சிவன் கோவிலுக்கும் இவர்களிருவரும் நிறையவே உழைத்தார்கள். இவர்கள் உழைத்த இடம் புகழ்பெறும்போது, இருவரும் அங்கிருக்க மாட்டார்கள். அது அவர்கள் ராசியோ, குணமோ, இரண்டுமோ?

    குருவாயூரப்பன் கோவில் கட்டப்படுவதற்கு முன்னால், தொடர்ந்து பலநாட்கள் பஜனைகள் நடைபெற்றன. நான் தினமும் அங்கு சென்று தபலா வாசிப்பேன். (அடிப்பான் என்பார் அப்பா) எனக்குத் தபலா கற்றுக் கொடுத்த — கொடுத்த என்றால் தபலாவும் கொடுத்த ! — மணிசார் மெட்டுப்போட, நான் பாடல்களெழுத, முறையான சம்பிரதாயத்தில் நாங்களே எங்கள் நிகழ்ச்சியை வழங்குவதாக ஏற்பாடாயிற்று. ‘கந்தப்பா .. கந்தப்பா..கந்தப்பா..’ என்ற பாட்டை நான் இயற்ற, சார் மெட்டுப் போட்டுக் கொண்டிருக்கிறார். பாபு வந்து சேர்ந்துகொண்டான். சாரிடம் ரொம்ப மரியாதையாக இருப்பான். நான் ஒருவரி பாடினால் அடுத்தவரியை அவன் அனாயசமாக இட்டுக்கட்டிவிட்டான்! அது ஐயப்பன் மேலே அமைந்தது. இப்படி நானும் அவனும் கந்தப்பா ஐயப்பா என்று மாறிமாறி இயற்றிய பாட்டை மணிசார் அந்தக் கூரைக்கொட்டகையில் பாடும்போது குழந்தைகளின் உற்சாகம் கரைபுரண்டு ஓடியது! கூட இருந்து கண்பனித்தவன், அதற்குப் பிறகு பஜனைக்கு வரவே இல்லை! அதுதான் பாபு!

    ஐயப்பன் மலைக்குப் போக ஆரம்பித்தான். கடுமையாக விரதமும் இருப்பான். அப்படி இருக்க வேண்டியதில்லை என்று பேசத்துவங்கி வாங்கிக் கட்டிக் கொள்வான். ஐயப்ப பஜனைக்கு என்னை அழைப்பான். நானும் அவனுக்காகப் பலவிடங்களுக்குச் சென்று தபலா தட்டுவேன்; பாடுவேன்; பிரசாதம் உண்டு திரும்புவேன்.

    ஒருமுறை ஒரு பெரிய ஐயப்பன் ஊர்வலம் ஏற்பாடானது. யானையின்மீது ஐயப்பன் படத்தை வைத்து அர்ச்சகரை அமர்த்தி, ஒருவர் பெருங்குடை பிடிக்கவேண்டும் என்று தீர்மானமாயிற்று. நான்தான் குடைபிடிப்பேன் என்று பாபு சொன்னபிறகு அதற்குமேல் யாரும் ஒன்றும் சொல்ல முடியவில்லை! சைதாப்பேட்டையில் ஊர்வலம். மிருகக்காட்சி சாலையிலிருந்து யானையைக் கொண்டுவந்திருந்தார்கள். அதற்கு என்ன நோயோ, வாயில் நுரைதள்ளிக் கொண்டிருந்தது. இருந்தாலும் கொஞ்ச நேரந்தானே என்று சமாதானப் படுத்திக்கொண்டு ஐயப்பனும், அர்ச்சகரும் யானை மீது அமர்ந்தாயிற்று. பாபு யானைமீது நின்றுகொண்டு குடையைத் தூக்கினான். அவனுக்குத் தானே அரசனானதுபோல் பெருமை! ஒரு சிவாஜி கம்பீரம்! நுரையானை கொஞ்ச தூரம்தான் போயிருக்கும். இவன் தூக்கிவந்த குடை மேலே இருந்த மின்சாரக் கம்பியைத் தொட, அர்ச்சகர் “ஐயப்பா!” என்று படத்தோடு குதிக்க, குடை கீழே விழுந்துவிட, பார்த்தால் மறைமலை அடிகள் பாலத்தில் யானை பந்தயக் குதிரையாய்ப் பறக்க, அதன்மேல் நம் பாபு யானையின் கழுத்தை இறுகத் தழுவிக்கொண்டு கிடக்கிறான்!

    அவனுக்குப் பரபரப்பு பிடிக்கும்; பயம் கிடையாது. அதே ஊர்வலம் நங்கைநல்லூரில் நடந்தது. இந்தமுறை கோவில் யானை வந்தது. குடைக்குப் பதில், பாபு கவரி வீசினான். மேலே திறந்த உடம்போடு அவன் ஐயப்பன்மேல் பக்தியோடும், சாலையின் இருமருங்கிலும் இருந்த பெண்கள்மேல் காதலோடும், தனது புயங்களில் தானே மயங்கியபடி, நிதானமாய்த் தாளம் பிசகாமல் கவரி வீசிய காட்சி இன்னும் கண்முன்னே நிற்கிறது.

    அவனுக்கு எல்லாம் சுலபமாகவே வந்தது, படிப்பைத்தவிர. முறையான கல்விக்கும் அவனது மனப்போக்குக்கும் சமாதானம் காணமுடியாத முரண்பாடுகள் இருந்தன. அவன் பச்சையப்பன் கல்லூரியில் படித்தான். சென்று வந்தான் என்பதே பொருத்தம். படிப்பு அவனுக்குப் பிடிக்கவே இல்லை. யாருக்குத்தான் பிடிக்கும் சொல்லுங்கள்? ஹரிகிருஷ்ணன், வீரராகவன், வர்த்தமானன், சுகுமார் என்று நாங்களெல்லாம் நல்லூர் இலக்கிய வட்டம் என்ற அமைப்பை நிறுவினோம். மாதாமாதம் கவியரங்கம் நடத்துவோம். நான்தான் தலைப்புக் கொடுப்பேன். ‘நானும் எழுதறேண்டா’ என்றான். “காவிரியில் நான்” என்றேன். அழகான கவிதை எழுதிக்கொண்டு வந்து அதை உணர்ச்சியோடு படித்துக் கைதட்டலும், கொஞ்சம் காதலும் வாங்கிக் கொண்டானே! நான் கொடுத்த உற்சாகத்தில் ஒரு நோட்டுப் புத்தகம் நிறையக் கவிதைகள் எழுதிக் காண்பித்தான். அப்புறம் நிறுத்திவிட்டான். அதுதானே பாபு!

    பாபுவுக்குக் கனவுகள் அதிகம். அதிகமென்ன, அவன் கனவுகளில்தான் வாழ்வான். கனவுகள் அவசியம் என்பதை யார்தான் மறுக்க முடியும்? நேற்றுவரை நேசமுடன் பாதுகாக்கப்பட்ட கனவைத்தானே இன்று நினைவென்று கொண்டாடுகிறோம்? கனவுகள், அடிக்கடி உதிர்ந்துபோகும் நம்மை மறுபடி மறுபடி நிறுவிக்கொள்ளத் துணைபுரிகின்றன. நாம் எப்படி இருக்கிறோம், எப்படி இருக்கவேண்டும், இவையிரண்டுக்கும் இடைவெளி இருப்பின் அதைச் சரிப்படுத்த என்னசெய்வது? இந்த எல்லாத் தளங்களும், நமது கனவுகளால் ஊடுருவப்பட்டுத்தான் இருக்கின்றன. கனவின் ஸ்பரிசம் இல்லாத இதயமே இல்லை. மனித மனத்தில் மனிதத்தன்மை இன்னும் இருப்பதற்குக் கனவுகளே காரணம்.

    ஆனால், பாபுவின் கனவுகள், அவனது கண்களுக்கு வெளியே இருந்தன. அதனால்தான் அவனுக்கு நினவு என்கிற நிதர்சனம் கண்ணில் தட்டுப்பட்டதே இல்லை. சந்தித்த எல்லோரையும் ஏதொவொரு விதத்தில் தொடக்கூடிய அவன் வாழ்க்கை சோபிக்காமல் போனதன் காரணம் இதுதான். அவனது கவிதைக் கனவு, ஒரு நோட்டுப் புத்தகத்தோடு முடிந்துவிட்டது. சினிமாக்கனவு, ஒரு ஷூட்டிங்கைப் பார்த்ததோடு நின்றுவிட்டது. காதற்கனவு, கடைசிவரை அவன் மனத்தையும், உடலையும் அரித்தது.

    ஆயினும், அவனது கனவுகளுக்குச் சிறப்பான அந்தஸ்து உண்டு. அதற்குக் காரணம், அவனுக்கு மற்றவர்களைப் பற்றிய கனவுகள் நிறையவே இருந்தன. உதாரணத்திற்கு என்னை எடுத்துக் கொள்கிறேன். பூஞ்சையான நான் வலுமுறுக்கேறிய உடலோடு திகழவேண்டும் என்பது அவன் கனவு. அதற்காகக் காலை 4.30 மணிக்கு என் வீட்டுக் கதவைத்தட்டி, வா, ஓடலாம் என்பான்! நான் தூக்கம் கலைந்து வருவதற்குள், திண்ணையில் சற்றே கிறங்கியிருப்பான். காலில் கட்டாயம் தேங்காய் எண்ணெய் பூசிக்கொள்ளவேண்டும்! ஏனென்றெல்லாம் கேட்கக் கூடாது! முக்கால்வாசி நேரம், முக்கால்வாசி இடம் உலர்ந்திருந்த அந்த ஏரியில், நாங்கள் ஓடுவோம்! நின்றால், ஆயிரம் ஈக்கள் காலைப் பிடுங்கும். தேங்காய் எண்ணெய்! ஊஹும்! ஒத்துக்கொள்ள மாட்டான். பிறகு அவன் மிகவும் ரசித்த என் அம்மாவின் காப்பியை அருந்திவிட்டுச் செல்வான்.

    என் கவிதைகளும், பாடல்களும் பிரபலமடைய வேண்டும் என்று ரொம்பக் கனவு காணுவான்.

    ‘டேய்! நீ ஃபேமஸ் ஆகும்போது நான்தாண்டா ஒன் செக்ரட்டரி,’ என்பான். நல்லூர் இலக்கிய வட்டத்தின் ஆண்டுவிழா சிறப்பாக நடந்தது. முத்துமுத்தான கையெழுத்தில் அவன் பரிசுப் புத்தகங்களில், என் கவிதைகளை எழுதிக்கொடுத்தான். விழா முடிந்து எல்லோருக்கும் எங்கள் வீட்டில் சாப்பாடு. கிட்டத்தட்ட 75 பேருக்கு அம்மாவும், என் அக்கா மாலாவும் அற்புதமான விருந்தைச் சமைத்துப்போட்டார்கள். அது பரவாயில்லை. ஏரிக்குள்ளிருந்த எங்கள் வீட்டைச் சுற்றியும் மழையால் தண்ணீர் சூழ்ந்திருந்தது. நாங்கள் பின்வீட்டுச் சுவரை ஒரு ஸ்டூல் உதவியால் தாவி அப்புறம் செல்வோம். விருந்தினர்களை எப்படிக் கொண்டுவருவது? பாபுவின் தலைமையில் பாறாங்கற்களைக் கீழே போட்டு அதன்மேல் சாரப்பலகைகள் வைத்து ஒரு பாலமே கட்டினோம்! இருபுறமும் நண்பர்கள் தோள்கொடுக்க, அந்தப் பாலத்தில் கவிஞர் சுரதா உயிரைக் கையில் பிடித்தபடி நடந்து வந்தார்.

    ஏரித்தண்ணீர் காம்பவுண்டு சுவர், பெரிய இரும்பு கேட் எல்லாவற்றையும் தாண்டி, வாசற்படியைக் கடந்து எப்படி வசதி என்று ததும்பிக் கொண்டிருந்தது. விதம்விதமான வண்ணங்களில் பாம்புகள் விளையாடிக் கொண்டிருந்தன. சில, கேட்டில் பின்னிக் கிடக்கும். சில நமக்கு மிக அருகே, தண்ணீரிலிருந்து திடீரென்று தலையைத் தூக்கிக் கொட்டாவி விடும். ஆனால் உள்ளே வரா. சடைப்பூரான்கள் அப்படியில்லை. அவை கரையைத் தேடின. எங்கள் வீடுதான் ஒரே கரை! பார்க்கப் பயங்கரமாக இருக்கும் அவை வீட்டு வராண்டாவில் நுழையும்போது, அவற்றைப் பார்த்துப் பேசிக்கொண்டே அவற்றை அடித்துத் தண்ணீரில் எறிவான் பாபு. என் தங்கை புவனா சின்னக் குழந்தை. அப்போது அவளுக்கு ஆறுவயது. அவளை அப்படியே தூக்கிக் கொண்டு, கோமாளித்தனம் செய்து அவளைச் சிரிக்க வைத்துப் பயத்தைப் போக்கி அந்தப் பாம்பு, பூரான், அட்டைக் கூட்டத்தை மெல்லக் கடப்பான்.

    ஒவ்வொரு நாளும் இந்தக் காரியத்தைச் செய்வதற்கென்றே வருவான். தண்ணீர் வடிந்த பிறகு, அவன் தென்பட மாட்டான்.

    அதுதான் பாபு!

    பாபுவுக்குக் கோபம் எப்படிப் பொத்துக் கொண்டு வந்துவிடுமோ, கண்ணீரும் அப்படியேதான்! தன்னை நண்பர்கள் சரியாகப் புரிந்துகொள்ளாத போது, அல்லது அப்படி அவன் நினைக்கும்போது அவன் கண்கள் கண்ணீர் பூத்துப் பளபளக்கும். அதேபோல், யாரோ ஒருவரது துயரம் பற்றி நான் விவரிக்கும்போதும், அவனுக்குக் கண்ணீர் வந்துவிடும்.

    “புதிய பறவை” திரைப்படத்துக்கு என்னைக் அழைத்துக்கொண்டு சென்றான். ‘எங்கே நிம்மதி?’ என்று சிவாஜி, பெருந்திரையில் பிரும்மாண்டமாக எழுந்து நிற்கும்போது, பாபு சில்லரையை வாரியிறைத்து, விசிலடித்துக் கண்ணீர் விட்டான். இந்தக் கூத்தைப் பார்க்கும்போது எனக்குத் தமாஷாக இருந்தது. ஆனால், அதைவிட ஆச்சரியம் என்னவென்றால், அவனது இயல்பில், சோகம் கிடையாது! பிச்சையோடு சேர்ந்து ‘கடாமார்க்’ சாராயம் அடித்திருக்கிறான். ஆனால் உண்மையில் அதில் அவனுக்கு ருசியில்லை. அவனுக்கு எதிலாவது உண்மையிலேயே ருசியிருந்ததாவென்பதில் எனக்குச் சந்தேகம்தான். எதிலும், யோசிக்காமல் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும் விசித்திர மனப்பாங்கு அவனுக்கிருந்தது.

    கவிதை எழுதினானா? பாலங்கட்டினானா? காதல் செய்தானா? ‘கடாமார்க்’ அடித்தானா? சாமி தூக்கினானா? சைக்கிள்செயின் சுற்றினானா? கச்சேரி கேட்டானா? அதேபோல் ஒருநாள் எங்கள் வீட்டெதிரே பெரிய இடத்துப் பிள்ளைகள் முறையாகக் கிரிக்கெட் ஆடிக் கொண்டிருந்தார்கள். நானும் அவர்களோடிருந்தேன். இவன் வந்து நின்றான் குள்ளமாக, தாடி லுங்கி சகிதம்!

    “டேய்! நானும் ஆடறேன்”, என்றான். அவர்கள் அவனைப் பொறுக்கியாகவே பார்த்தார்கள். அதை அவன் ரசித்தபடியே, லுங்கியை மடித்துக் கட்டிக்கொண்டு மட்டையைப் பிடித்தான். அவனை மட்டந்தட்டச் சரியான சந்தர்ப்பம் கிடைத்தது என்று அவர்களில் மிக வேகமாகப் பந்துவீசக் கூடியவனிடம் பந்தைக் கொடுத்தார்கள். இவனா, விடாமல் கோமாளி சேஷ்டைகள் செய்தபடி, என்னிடம் பேசிக்கொண்டே, ஒவ்வொரு பந்துக்கும் அவனது சென்னைத் தமிழில் காமென்டரி கொடுத்தபடி, ஆறும் நாலுமாக விளாசித் தள்ளினான். ஸ்பின்னரைக் கூப்பிட்டு எல்லா ஃபீல்டர்களையும் எல்லைக் காவல் மாதிரி நிற்கவைத்தார்கள். “…த்தோடா!” என்று இன்னும் சில பொன்மொழிகளைச் சொல்லிப் பந்தை வயற்காட்டை நோக்கியடித்து, “டேய்! போய் சைக்கிள்ள எடுத்துட்டு வாங்கடா!” என்று அவர்களைச் சீண்டினான்.

    “ஒங்களுக்கு இது போதும்னு நெனக்கறேன்”, என்றபடி மட்டையைத் திருப்பிக் கொடுத்துவிட்டுப் பந்தை எடுத்துக்கொண்டான். அவனவன் அங்கே காலுக்கும், கைக்கும் கவசம் அணிந்து புத்தம்புதிய ஷூவோடு இருந்தபோது, இவன் லுங்கியை அனாயசமாக முக்கால் மடிப்பு மடித்து, வெறுங்காலுடன் நாலெட்டு அடிகள் எடுத்துவைத்துப் பந்துவீசி, விடாமல் பேசி, நான்கைந்து பேரை அவுட்டாக்கி, சிலருக்குப் பலான இடத்தில் முத்திரை போட்டுப் பந்தைத் திருப்பிக் கொடுத்தான். வெலவெலத்துப் போன அந்தக் கேப்டனிடம், “தாங்க்ஸ்ப்பா! என் தம்பிய அனுப்பறேன், அவன் வந்து ஃபீல்டிங் பண்ணுவான், ” என்று நக்கல் பண்ணிவிட்டு, என்னைப் பார்த்து, “வாடா ரமணா! என்னாடா இந்தக் கத்துக்குட்டிங்க கூட ஆடிக்கிட்டு,” என்று ஞாபகமாய் அவர்கள் காதில் விழும்படிச் சொல்லிவிட்டு சைக்கிள் ஏறினான்!

    மறுநாள் வந்தானோ? அல்லது மறுவாரம்? ஊஹும்! அவன்தான் பாபுவாயிற்றே!

    பாபு-பிச்சை இரட்டையர்கள் போதாதென்று சேகர் வந்துசேர்ந்தான். சேகர், குடிசையிலிருந்து வந்தவன். எம்.ஜி.ஆர். ரசிகனாகத் துவங்கி, வறுமையில் அல்லலுற்று, தற்போது முக்கியமான கம்யூனிஸ்டாக ஆகிவிட்டான். பளுதூக்கி உடற்பயிற்சி செய்வான். மேலுடம்பு அற்புதமாக இருக்கும். கால்மட்டும் சூம்பியிருக்கும். ஒருநிமிடம் கூட இடைவெளி விடாமல் தமாஷ் பண்ணி விலா நொறுங்கச் சிரிக்கவைப்பான். இவன்வந்து சேர்ந்துகொண்டான் பாபுவோடு! என்வீட்டில் ஒரே கும்மாளம், கொண்டாட்டம். மொட்டை மாடியில் வெயிட் லிஃப்டிங்! கூட்டம் பெருகியது. அப்பா இதை அவ்வளவாக ரசிக்கவில்லை. அம்மா எல்லோருக்கும் விதவிதமாகச் சமைத்துப்போடுவாள். அதனால், அவளது பல அம்சங்களை அவர்கள் பொருட்படுத்தவில்லை. மொட்டை மாடியில் நாங்கள் குளிப்போம், ‘டேங்க்’ குழாயைத் திருப்பிவிட்டு! அப்பா கீழே விசனமாக இருப்பார்.

    நாலணா பந்தயத்திற்காக பாபு மொட்டை மாடியிலிருந்து குதித்தான். சிராய்ப்போடு தப்பினான். என்னை அப்படியும் வீரனாக்கி விடுவதென்று ‘போர்டிகோ’ மேலிருந்து என்னைக் குதிக்கச் சொன்னான். சுகுமாரும் அவனோடு சேர்ந்துகொண்டான். அவர்கள் பிடிவாதம் பிடித்து, மாடிக்கதவையும் சாத்தி……. எனக்கு வேறு வழியில்லை. குதித்து, இதோ எழுதிக்கொண்டிருக்கிறேன்!

    பெருமழை பெய்து ஏரி நிரம்பிவிட்டது. ‘சைக்கிள்கடை தாஸ்’ குடிசையைப் பெயர்த்துக் கொண்டு வந்த தண்ணீர், பழைய கண்மாய் வழியே பாயத் துவங்கியது. நாவிதரும், உள்ளூர் மேளக்காரரும், அனைவருக்கும் நண்பரான நடராஜன், அந்தக் கதையை அங்கு வந்த பாபுவிடம் தனி ஆவர்த்தனம் வாசிக்கும் பாணியில் சொல்லிக் கொண்டிருந்தார். அதை இன்னும் கொஞ்சம் மெருகேற்றிச் சொல்ல, பாபு தயாராயிருந்ததை நான் கவனித்துக் கொண்டேன்! அவனும், சேகரும் ஒரு டயரை எடுத்துக்கொண்டு, அந்த ஏரி வெள்ளத்தில் “முல்லை மலர்மேலே” என்றுபாடிக்கொண்டு படகு விட்டார்கள்! ஏறக்குறைய, வெள்ளத்தில் மூழ்கவிருந்த ஒரு கிணற்றின் சுவற்றில் இளைப்பாறி, அதில் இறங்கி ஆழம் பார்த்தார்கள். சேகரும் கிளம்பிவிட்டான். பாபு, என் அம்மா கூப்பாடு போட்டதில் வீட்டுக்கு வந்து கையில் ஒரு காப்பி டம்ளருடன் மாடிக்குத்தாவி, அங்கிருந்து ‘ஆஸ்பெஸ்டாஸ்’ கூரைச் சரிவில் பாடிக்கொண்டு ஓடிவந்து, எங்கள் வீட்டுக் கிணற்றின் மேல் தாவி, ராட்டினம் தொங்குமே அந்த இரும்புக் கழியின்மீது — சலங்கையொலி கமலஹாசனெல்லாம் பிச்சைவாங்கும்படி, தகிடதகதிமி தந்தானா செய்து, இரண்டு மூன்றுமுறை நாங்கள் அலற அலற ஓடி……. எல்லாம் மழையில்! பிறகு பூப்போல இறங்கிவந்து, சாதுவாகக் காப்பி குடித்தான்!

    அவனை விட்டுவிட்டு நான் எதுவும் சாப்பிடவோ, அருந்தவோ கூடாது! ஒருமுறை ‘போர்ன்வீட்டா’ குடித்துக் கொண்டிருந்தேன், வந்துவிட்டான்! அவன் அடித்த லூட்டியில், நான் குளியலறைக்குள்ளே சென்று அங்கு குடிக்க முயன்று, அவன் கதவுக்கு அந்தப் புறத்திலிருந்து செய்த கோமாளித்தனத்தில் துப்பிவிட்டேன்!

    அவன் சந்தோஷப்பட்டான்!

    எங்கள் வீட்டில் கிணறு வற்றிவிட்டது. ஆழமாய்த் தோண்டினால்தான் நீர் சுரக்கக்கூடும் என்றார்கள். பாபு, பிச்சை, சேகர் மூவரும் வந்துவிட்டார்கள்! நானும் கிணற்றுக்குள் இறங்கினேன், அல்லது இரக்கமின்றி இறக்கப்பட்டேன்! மிகக் கடுமையான பணியைத் தனது நகைச்சுவையால் ஒரு விளையாட்டு மாதிரி செய்துவிட்டான் பாபு. ஆங்கிலம் பேசியே தீருவது, அதுவும் என் அப்பாவிடம் என்று ஒரு முடிவுக்கு வந்து, கிணற்றுக்குள்ளிருந்து அவன் படுத்திய பாட்டில், அப்பா கிணற்றுக்குள் குதிக்கத் தயாராய் விட்டார்! தண்ணீர்தான் இல்லை! ராட்டினத்தை மெல்ல அசைத்து வாளியில் டீ வரும்! கிணற்றுக்குள்ளேயே குடித்துவிட்டு பீடி பிடிக்கவேண்டும் என்பான். அது நல்லது என்று ஆயுர்வேதத்தில் சொல்லியிருப்பதாகக் கதை விடுவான். அன்று மாலைப் பொழுதில் பாபுவின் முயற்சியால் புதிய ஊற்றுக்கள் திறந்தன. நாங்கள் அந்த வீட்டில் இருந்தவரை எங்களுக்குப் பஞ்சமின்றித் தண்ணீர் கிடைத்தது. ஆனால் நான் சம்மட்டி அடிக்கும்போது பிசகி அவன் நெற்றியை உராய்ந்து ரத்தம் கொட்டியது. எல்லோரும் துடித்துப் போனோம். அவன் தலையில் துணியைக் கட்டிக்கொண்டு சிவாஜி பார்வை பார்த்தான்! இந்தப் பணியில் அவன் உடம்பில் காயங்கள் ஏற்பட்டன. என் வீட்டார் கவனித்து மருத்துவ சிகிச்சை அளித்திருக்க வேண்டும்..

    பாபுவின் வீட்டார் அனைவரையும் எனக்குத் தெரியும். அண்ணன் வெங்கடேஷ் அற்புதமான கிரிக்கெட் வீரன். பந்து இரண்டு பக்கமும் நாகம்போல் சீறும்படிப் போடுவான். தம்பிகள் வாசு, ராஜன், தங்கைகள் ஹேமா, ஜெயந்தி எல்லோரும் என்னிடம் மிகவும் அன்புடனிருப்பார்கள். அவனும் அனைவரிடமும் மிகுந்த பாசத்துடனிருப்பான். பாபுவும், வாசுவும் திருமணத்திற்குப் பிறகும் சேர்ந்தே இருந்தார்கள். பாபு, தன் மனைவி உமாவைப் பலர் முன்னிலையில் கொஞ்சித் தமாஷ் பண்ணிப் பாடாய்ப் படுத்துவான். அவளுக்கோ ஒருபுறம் வெட்கம் பிடுங்கித் தின்னும், மறுபுறம் பெருமை தாளாது. நவீனும், வினோத்தும் சுட்டிப் பயல்கள். வாசுவின் மனைவி உஷா. மகள் ஸ்வப்னா. மகன்பெயர் சட்டென்று நினைவுக்கு வரவில்லை. இவர்கள் எல்லோரும் மைசூரிலிருந்தார்கள்.

    நான் 1983 லிருந்து 1986 வரை பெங்களூரில் இருந்தேன். அப்போது அலுவல் நிமித்தம் அடிக்கடி மைசூர் செல்வேன். இந்தச் சகோதரர்களோடுதான் தங்குவேன். வேறிடத்தில் தங்க நினைக்கவும் முடியாது. பாபு தலைமையில், அவர்கள் ஒவ்வொருவரும் என்மீது காட்டிவரும் அன்பு விலைமதிக்கவொண்ணாதது. தன் சக்திக்கு மீறிக் கடன்வாங்கி விருந்தினர்களை உபசரிக்கத் துடிப்பான் பாபு. கெளரவத்திற்காக இல்லை. கொள்ளை அன்பு அவனுக்கு.

    மைசூரில் அவன்வீட்டில், எல்லோரும் உட்கார்ந்து அரட்டை அடிப்போம். என் பாடல்களையும், கவிதைகளையும் விரும்பிக் கேட்பார்கள். எப்போதும் விருந்துதான். பார்த்துப் பார்த்துக் கவனித்துக் கொள்வார்கள். ஒருநாள் பெஞ்சில் பாபு படுத்துக் கொண்டிருக்கிறான். அவன் தலைக்குமேலே ராமர் படமிருந்தது. மத்தியான நேரம். நான் தூக்கம் வராமல் உட்கார்ந்திருந்தேன். அவனுக்கு அசதி. பலமாகக் குறட்டை விட்டான். அடுத்தடுத்து ‘இந்த பாலன் உள்ளே வரலாமா?’, ‘என்மனம் நீ வாழ்ந்திடும் மந்த்ராலயம்’ என்ற இரண்டு பாடல்களைப் புனைந்தேன். இந்த பாடல்கள் எப்போது பாடினாலும் ரசிக்கப் படுவன.

    பாபு எழுந்த பிறகு எல்லோரையும் அழைத்துப் பாடல்களைப் பாடிக் காட்டினேன். ‘ஐயோ! பாவிடா நான்! நீ பாட்டுப்போடும்போது மடையனாட்டம் கொறட்டை விட்டுத் தூங்கிண்டிருந்தேனே.’ என்று அனாவசியமாக ரொம்ப வருத்தப்பட்டான். நான் மேஜையில் தாளம்போட அவன் தலையில் ரவுடிக்கட்டுக் கட்டிக்கொண்டு கூத்தடிப்பான்!

    நல்லூர் இலக்கிய வட்ட ஆண்டு விழாவுக்கு நன்கொடை வாங்க வீடுவீடாகப் போனோம். அதிகம் பிராமணர்களிருந்த இடமது. பாபு, அவர்களிடம் பிராமண பாஷையிலேயே பேசச் சித்தமானான். நான் எவ்வளவோ தடுத்தும் ‘நீ சும்மா இருடா’ என்று என்னைத் தள்ளிவிட்டு, ஒரு பெரியவரிடம் ரொம்ப பவ்யமாகச் சென்று, ‘எங்களுக்கு வருஷாப்தீகம், நீங்க ஒத்தாசை பண்ணணும்,’ என்க, அவர் முழிபிதுங்க, அவனைப்
    பரபரவென்று தள்ளிக்கொண்டு வந்து, ‘அடேய்! அதற்கு அர்த்தம் திவசம்டா,’ என்று சொல்ல அவன் பலமாக ரசித்தான்!

    பாபுவும், வாசுவும், “அப்படி நீ என்னதாண்டா வேலை செய்கிறாய்?” என்று கேட்டார்கள். ஒரே நாள் என்னோடு அதிகாலையில் சைக்கிளில் வந்து நான் செய்யும் வேலையை அல்லது படும்பாட்டைப் பார்த்து மிகவும் வருந்தினார்கள். ‘மவனே, என்கிட்ட மட்டும் காசிருந்தா ஒன்னெ இப்படிக் கஷ்டப்பட விடுவேனா?’ என்பான் பாபு. எனக்கு பெங்களூரிலிருந்து சென்னைக்கு மாற்றலாகிவிட்டது. கடைசியாக ஒருமுறை அனுவோடு மைசூருக்குச் சென்றேன். அவன் சின்னக் குழந்தையைப்போல் அழுதான். ‘இதுக்குத்தாண்டா யார்கிட்டயும் பாசம்வக்கக் கூடாதுன்றது,’ என்று பொருமினான்.

    பாசத்தைத்தவிர அவனுக்கு வேறொன்றும் தெரியாது. எல்லாரிடமும் அப்படியேதானிருந்தான்!

    நானும் பாபுவும் சேர்ந்து தண்ணி அடித்திருக்கிறோம். அதில் அவனுக்குப் பிரத்யேகப் பெருமை உண்டு. அப்புறம் நான் விட்டுவிட்டேன். அவன் தொடாததில்லை! தொட்ட எதையும் விட்டதுமில்லை! நான் மதுரையில் இருந்தபோது கூட, என்னை வந்து பார்த்திருக்கிறான். அது மட்டுமல்ல, என்னுடனிருந்த நண்பர்களைக் கவர்ந்துமிருக்கிறான். என் நண்பர்களெல்லாம் அவனுக்கும் நண்பர்களானார்கள். அதில் சுப்புவும் உண்டு. ஒருவழியாய் சுப்புவுக்குக் கல்யாணம் ஆனதும் தேனிலவுக்கு அவன் மைசூர்தான் வரவேண்டும் என்று பாபு ஆணையிட்டான். நாங்கள் ஒரு
    படையோடு போனோம்! பாபு என்ன செய்தான் தெரியுமா? தன் வீட்டைக் காலிசெய்துவிட்டு, அதைப் புதுமணத் தம்பதிக்கு விட்டுவிட்டு, வாசு வீட்டுக்குத் தன் குடும்பத்தோடு சென்றுவிட்டான்!

    அதுதான் பாபு என்று நீங்களே சொல்லத் துவங்கி விட்டீர்களல்லவா? அதுதான் பாபு!

    ஒத்தாசை செய்வது அவனுக்கு இயல்பு. மணிசார் 1973 -ல் நங்கைநல்லூரிலிருந்து மாம்பலத்துக்கு வீடு மாறினார். அப்போதும் அவன் அங்கிருந்தான்! முன்பு, கோவையில் என் மாமியார் மாமனார் வீடு மாறும்போது அவன்தான் வந்து ஒத்தாசை செய்தான். என் வீட்டில் எந்த நிகழ்ச்சி நடந்தாலும் அவனிருப்பான் துணையாக. யார்யாரோ உறவினர்களின் கல்யாணத்துக்கெல்லாம் வந்து கடுமையாக உழைத்துவிட்டுக் காணாமல் போய்விடுவான் பாபு. என் வாழ்க்கையின் பல முக்கியமான கட்டங்களிலும் அவன் உடனிருப்பான். நடுவிலே கொஞ்சநாள் ஏதோ அரபுநாட்டுக்குச் சென்றிருந்துவிட்டுத் திரும்பி வந்துவிட்டான். அவனால் தனியாக இருக்க முடியாது. எவ்வளவு கூத்தடித்தாலும், அவன் இயல்பில் குடும்பஸ்தன். அவனுக்கு மனைவி, மக்கள், வாசு, உஷா, அவர்களது குழந்தைகள் எல்லோரும் வேண்டும். மறைமலை நகரில் டி.வி.எஸ். கம்பெனியில் வேலையாக இருக்கிறேன் என்று தொலைபேசியில்
    சொன்னான். ரொம்ப சந்தோஷமாக இருந்தது.

    2005 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நான் கனடாவுக்குப் பயணம் செய்தபோது, அவன், தன்
    மகனுடன் விமான நிலையத்திற்கு ஓடிவந்துவிட்டானே! அவன்தான் டிராலியைத் தள்ளினான்! அப்போதும் ஏதோ தமாஷ்தான். 2006 ஏப்ரல் மாதம் 2 ஆம் தேதி, என் கவிதைத் தொகுப்புகள் வெளியீட்டு விழாவுக்கு டாக்சி வைத்துக்கொண்டு குடும்பத்தோடு வந்து கடைசிவரை இருந்து, ரகளை பண்ணி, விசிலடித்து, எல்லோரும் சென்றபிறகு என்னோடு தோசை தின்று, என் மனைவி அனுவுடன் என்னைப் பற்றி உருகிக்கொண்டிருந்தான். ‘அனேகமாக மஸ்கட் போய்டுவேண்டா, விழாவுக்கு வரமுடியும்னு தோணலெ,’ என்றவன் அனைவரோடும் வந்திருந்து நங்கைநல்லூர் நண்பர்களோடு போட்டோ எடுத்துக்கொள்ளத் தோதாயிருந்தது. மணிசார்தான் அப்போது இல்லை என்று நாங்கள் நினைவுகூர்ந்தோம்.

    எனக்காக, நானும் என் பாடல்களும் பிரபலமாக வேண்டும் என்று கனவு காணும் நண்பர்களில் பாபு முக்கியமானவன். என் வாழ்வில் 1968 முக்கியமான வருடம். அதற்குச் சற்று முன்பு ஹரிகிருஷ்ணன் பரிச்சயமானான், பள்ளித்தோழனாக. பிறகு, பாபு, அவன் மூலம் வீரராகவன், மற்றும் மணிசார்.

    சரி, பாபுவைப் பற்றிச் சொல்ல இப்போது என்ன அவசியம்?

    நாளை அவன் பிறந்த நாளல்லவா?

    இன்றிரவுக்கும், நாளைக் காலைக்கும் ஒரு சுமையான இடைவெளி இருக்கிறது. இதற்கிடையே, பாபுவைப் பற்றிய இன்னொரு சுவையான தகவல் நினைவுக்கு வருகிறது.

    என் உறவினர் ஒருவர் சுந்தரம் ஃபேசனர்ஸ் கம்பெனியில் உயர்பதவி வகித்தார். (சமீபத்தில் புற்றுநோயால் இறந்துபோனார் அந்த மிக நல்ல மனிதர்) அவர்களது தொழிற்சாலையில் ஆயுத பூஜை விழாவுக்காக எங்களை ஒரு நிகழ்ச்சி நடத்தித்தரச் சொன்னார். நான் வழக்கம்போல், மணிசார் வீட்டுக்கு ஓடினேன். படபடப்பாய் நான் பேசியதை, வழக்கம்போல் நிதானமாகக் கேட்டுக்கொண்டார் அவர். பிறகு, அவர், நான், வீரரகவன், பாபு, வெங்கடேஷ் சேர்ந்து ஒரு நிகழ்ச்சியைச் செய்வோம் என்று முடிவானது.

    வசனமில்லாமல் ஒரு குட்டி நகைச்சுவை நாடகம் தயாரித்தார் மணிசார். எனக்கு நகைச்சுவை வரும் என்று கண்டுபிடித்தவர் அவர்தான்! அதில், பாபு ஒரு பெண்ணாக வருவான். ஒப்பனை எதுவும் கிடையாது! மீசை, தாடியோடு! ஆனால், அவன் காட்டிய பாவனை, செய்த சேட்டை எல்லோரையும் வயிறு குலுங்கிச் சிரிக்க வைத்தது. அவன் தேங்காய் சீனிவாசனாக, நான் சுருளி ராஜனாக ஒரு துணுக்குப் போட்டோம். மணிசாரின் மருந்து வியாபாரித் துணுக்கு எல்லோரையும் கவர்ந்தது.. ஆயிரம் பேர் நிரம்பிய அந்த அரங்கில் எங்கள் நிகழ்ச்சிதான் முதன்மையாய் விளங்கியது என்று அனைவரும் பாராட்டினார்களாம். நாங்கள் மணிசாரின் பின்னால் சின்னக் குழ்ந்தைகள்போல் குதூகலமாய் வந்தோம். எழும்பூர் இம்பாலா ஓட்டலில் மசாலாபால் அருந்திவிட்டு பான்பீடா போட்டுக்கொண்டு, அவரைப் பாடச்சொல்லிக் கேட்டுக்கொண்டு,
    நங்கைநல்லூருக்கு ரயிலில் ரொம்பச் சந்தோஷமாக வந்துசேர்ந்தோம்.

    அவையெல்லாம் மறக்க முடியாத அனுபவங்கள்!

    இன்று பாபுவின் பிறந்தநாள்! இதோ, மீனம்பாக்கம் விமான நிலையத்தில் ‘மஸ்கட்’ டிலிருந்து கிளம்பிய விமானம் வந்திறங்கிவிட்டது. என்ன வயதிருக்கும்? என்னைவிட ஓரிரண்டு வயதுகள் பெரியவன். பயணிகளெல்லாம் ஒவ்வொருவராய் இறங்குகிறார்கள். பணம் சம்பாதிக்க வெளிநாட்டுக்குப்போய், அங்கே படாதபாடுபட்டு, விடுமுறையிலோ, அல்லது ஒரேயடியாகவோ சொந்தவூர் திரும்பும் பயணிகளின் முகமெல்லாம் நிம்மதியின் ஆயாசம்! தாய்நாட்டை விடவும் சிறந்தவூர் இருக்க முடியாது. என்ன ஏழ்மையோ, ஒண்டுக் குடித்தனமோ, நம்வீட்டில் நம் குடும்பத்தோடு கூடத்தில் உட்கார்ந்து சாப்பிடுவது, லுங்கி, கிழிந்த பனியன், கழுத்தில் ஒரு துண்டு என்று டி.வி.யில் இந்தியா, கிரிக்கெட் மாட்ச்சில் வெற்றி பெறுவதைப் பார்த்துக் குழந்தைகளோடு கும்மாளம் போடுவது, அவர்கள் அறியாதபோது மனைவியைக் கொஞ்சுவது என்று எத்தனை எத்தனையோ சின்னச் சின்ன சந்தோஷங்கள் நமது தரித்திர வாயிலில் தங்கத் தோரணம் கட்டுகின்றன!

    என்ன இன்னும் இவன் இறங்கவில்லை? நங்கைநல்லூரில் சொந்த வீடு வாங்கியாயிற்று. அதற்கு கிருஹப் பிரவேசம் செய்யவேண்டும் என்பதற்குத்தானே வருவதாகச் சொன்னான்?
    கண்பொங்கக் கட்டிக் கொள்ளத் துடிப்பவன் என்ன தூங்கிவிட்டானா?

    அந்தோ!

    பாபு, இறங்கி வரவில்லை. இறந்து வருகிறான். பெட்டி பெட்டியாய்ப் பரிசுப் பொருள்களைக் கொண்டுவந்து கொடுத்து மகிழ்ந்தவன், பெட்டிக்குள் பரிசுப்பொருளாக வருகிறான். விதியின் சதிக்கு அக்கினிக்குப் பரிசாக வருகிறான். இரக்கமே இயல்பான என் நண்பனின் உடலைச் சுமந்த பெட்டி, இறக்கப் படுகிறது…செத்த பிணமும் துள்ளும்படிச் சிரிக்கச் சிரிக்கப் பேசியவன், இனி பேசுவதில்லை என்று முடிவெடுத்து விட்டான். நாலு காசு சேர்த்துப் பெட்டியில் பத்திரமாக வைக்கத் தெரியாதவன், இதோ பெட்டியில் பத்திரமாக வருகிறான்.

    சென்னைக்குக் கிளம்ப நாள் பார்த்துக் கொண்டிருந்த பாபுவுக்கு மார்வலி வந்துவிட்டது. மருத்துவரிடம் சென்றிருக்கிறான். ஈ.சி.ஜி. எடுத்து அதில் ஒன்றுமில்லை என்று திருப்பி அனுப்பிவிட்டார். மாரடைப்பு நடக்கும் போதல்லவா அந்த வரைபடம் எதையாவது காட்டும்? அதிகம் பயனற்ற அந்தப் பரிசோதனையின் தரத்தை மருத்துவம், ஏனோ இன்னும் உயர்த்தவில்லை. அறைக்கு வந்து சேர்ந்தவுடன், நெஞ்சுவலி அதிகமாகி இறந்துவிட்டான் பாபு. மருத்துவ மனையில் அங்குமிங்கும் அலைக்கழிக்கப் பட்டிருக்கிறான். தனிமையே விரும்பாதவன், இப்படித் தனியாய் விடப்பட்டு என்னபாடு பட்டானோ!

    வாசுவுக்கு இனிமேல் வயது கிடுகிடுவென்று கூடிவிடும். பாபுவின்றி வாசுவைக் கற்பனை செய்யக்கூட முடிவதில்லை. பிச்சை, தன் ஒரே தோழனை இழந்துவிட்டான். தனது அத்தனை கோபதாபங்களையும் தாங்கி அவனைப் பிரியாமல் நேசித்த நண்பன் போய்விட்டான் என்பதைப் புரிந்துகொள்ள பிச்சைக்கு நேரமாகாது; தாங்கிக் கொள்ள வலுபோதாது. உமா, இனி எப்படி வாழ்வைக் கழிப்பாளோ? இதுவரை நடந்த வாழ்க்கையை இனிமேல் கழிக்க வேண்டும் என்பதுதான் கொடுமையானது. குழந்தைகள்தான் அவளைத் தேற்றவேண்டும்..

    வீரராகவன் நெஞ்சம் சூடுபட்டாற்போலத் துடிக்கும். அது சீக்கிரமே கவிதையாக வெடிக்கும்.

    என் வாழ்க்கையின், என் வீட்டின் எல்லா நிகழ்ச்சிகளிலும் அவன்கலந்து கொண்டு உழைப்பாலும், அன்பாலும் மனதிற்கு எவ்வளவோ மகிழ்ச்சி கொடுத்திருக்கிறான். நானோ, அவன் சம்பந்தப்பட்ட ஒரு நிகழ்ச்சியில்கூடக் கலந்துகொண்டதில்லை. அதற்காக அவன் வருத்தப்படவில்லை. ‘வர முடிஞ்சா வந்திருக்க மாட்டானா?’ என்று அவனே சமாதானம் சொல்லிவிடுவான்.

    ஆம், அவனது கல்யாணத்திற்கும் நான் செல்லவில்லை. இன்று அவன் கருமாதிக்கும் நான் செல்லவில்லை. சில சாதாரணக் கடமைகள், சில முக்கியமான கடமைகளைச் செய்யவிடாத துயரம், என்வாழ்வில் இயல்பாகிவிட்டது.

    ஒவ்வொரு மனிதனும் தன்னை மேம்படுத்திக்கொள்ள சில விஷயங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும். எனக்கு அப்படிப்பட்ட விஷயங்களைச் சாத்திரங்களோ, பேராசிரியர்களோ, அறிஞர்களோ கற்றுத் தரவில்லை. தாடியும், லுங்கியுமாயத் திரிந்த என் நண்பன் பாபுவைப் போன்றோரிடமிருந்தே நான் மிக மேன்மையானவற்றைத் தெரிந்துகொண்டேன். மேன்மை, பட்டுத்துணி அணிந்து மினுக்குவதில்லை. தன்னிடமிருக்கும் நேயத்தைப் பகிர்ந்துகொள்ளத் துடிக்கும் இயல்பில், அடுத்தவர் நெஞ்சைச் சுலபமாகத் தொட்டுவிடுவதே மேன்மை.

    யோகீச்வரர் மாவுமில் என்று ஒன்றிருந்தது நங்கைநல்லூரில். அதன் வாசலில் அவ்வப்போது வந்தமரும் ஓர் அரவாணிப் பிறவியிடம் பாபுவுக்குப் பழக்கமுண்டு. சைக்கிளை நிறுத்தி அந்தத் திருநங்கையோடு அவன் பேசுவது எனக்கு மிகுந்த வியப்பை ஏற்படுத்தியது. ‘இன்னா ஒம்பேர என்னாண்டையே சொல்லமாட்டியா?’ என்று வாஞ்சையோடு கேட்கும்போது, அது தனது காவிப்பல் தெரிய வெட்கமுடன் சிரித்து, ‘என்னெ ரோசான்னு கூப்டுவாங்க. சரோசான்னும் கூப்டுவாங்க,’ என்று பதில்சொல்லும். பாபு, அதை அப்படியே சொல்லிக் காண்பித்து அசத்துவான்.

    எனக்கு நாயென்றால் குலைநடுக்கம். அவனுக்குத் தெருநாயெல்லாம் பழக்கம்! ஒருநாள் நான் பார்த்த காட்சியை என்னால் மறக்கவே முடியாது. மணல்மேட்டை நோக்கி அவன் நடக்கிறான். அங்குமிங்கும் நின்றுகொண்டிருந்த தெருநாய்கள் அவனை ஆர்வத்தோடு பார்த்தன. பொதுவாக, தாடி, லுங்கி இப்படிப் பார்த்தால் நாய்கள் குரைக்கும். இங்கே அப்படியில்லை. ‘எல்லாம் வாங்கடியம்மா,’ என்றான். உடனே ஒரு நான்கைந்து நாய்கள் அவனிடம் ஓடிவந்து வாலை ஆட்டுவதும், கொஞ்சித் தீர்ப்பதுமாய்…என்னால் நம்பவே முடியவில்லை. அதிலும் ஒரு பெண் நாயிடம் அவன் நடத்திய உரையாடல்! ‘இன்னா, எங்கெ ஊர் மேஞ்சிட்டு வர்றே? எத்தினி லெட்டர் போட்டாலும் ஒருதபா கூட பதிலே போடறதில்ல, ஓடுகாலி,’ என்று அதன் மோவாயை இடித்தான். அது முக்கிய முனகலும், சிணுங்கிய சிணுங்கலும் இன்றைக்கும் என்னால் மறக்க முடியாது!

    ஒரு மூலையில் உட்கார்ந்துகொண்டு மோட்டுவளையைப் பார்க்கிறேன். எத்தனை எத்தனையோ காட்சிகள் சித்திரங்களாக விரிகின்றன. மனத்திரையில் ஊர்வலமாக வருகின்றன. பாபு, என் வாழ்க்கையின் ஒரு சுவாரசியமான அங்கம். அதை முழுவதுமாய் வார்த்தையில் வடித்துவிட முடியாது. சரி, எதைத்தான் வார்த்தை சரியாகச் சொல்லியது? நான் அவனருகே இல்லாத ஆதங்கத்தில், துயரத்தின் ஆற்றாமையைத் தாங்கமுடியாமல், நான் நினைவுகூர்ந்தபடி நிறுத்தாமல் எழுதிவைத்தேன். இதுதான் சரி. ஏனென்றால் அவன் அப்படித்தான் வாழ்ந்தான். நிதானித்து எழுத இது இலக்கியக் கட்டுரை அல்லவே! என்னிதய அஞ்சலி இது! அது, மலர்வளையச் சம்பிரதாயம். இது மொத்தத் துக்கத்தையும் கீழே பொத்திவைத்திருக்கும் மெளன விம்மல்….

    இறந்து மூன்று நாட்களுக்குப் பிறகு சவமாய்ப் பிறந்த நாளன்று வந்துசேர்ந்து அதோ சிதையில் தகனமாகின்றான். அதோ! பாம்புகள்போல் நடனமிடும் அந்த ஒளிக்கொழுந்துகளுக்குப் பின்னே, அவனது நிழலையே காண்கின்றேன். அந்த நிழலுருவத்திலும், அவன் விழிகள் பனித்திருந்து ஜ்வாலையில் மின்னுகின்றன.. வருந்தாதே பாபு! வாழ்க்கையை வீணாக்கிவிட்டதாக நினைக்காதே! உன் நேசத்தால் பயன்பெற்ற என்னைப் போன்றோர் எத்தனைபேர் தெரியுமா? ஒரு கவிதையைக் கவிஞன் நிச்சயிக்க முடியுமா? கோடுபோட்டு வெள்ளத்தைப் போகச் சொல்ல முடியுமா? கவிதை என்னும் அதிசயமும், வெள்ளம் என்னும் விபத்தும், இயற்கையின் இயல்புதானே!

    நீயும் அப்படித்தான்.

    நேற்றிரவும் நீ வந்து நின்றாய். “நீ இன்னும் உணர்ச்சிவசப்படுவது வேண்டாம்” என்று என் குருவின் உபதேசத்தை உனக்குத் தந்தேன். நீ அதைப்பற்றிக்கொண்டாய். உன்குரலில் அதைக்கேட்டபோது எனக்கு நிறைவாயிருந்தது. நீ எதையும் எளிதாகப் பற்றிக்கொண்டு அதைவிட எளிதாக விட்டுவிடுவாய். ஆனால் அதுபற்றி இன்றெனக்குக் கவலையில்லை. ஏனென்றால், என்மூலம் வந்தவொன்று உன் அந்தராத்மாவைப் பற்றிக்கொண்டுவிட்டது. இதை நீ விடமுடியாது!

    உன் பயணம் தொடரும் பாபு! உன்னுயிர் ஒழுங்குபெறும். உன்னால் நன்மைகள் விளையும்.

    பாபு மறைந்துவிட்டான். அதோ, என் முடிவுக்கு, முதல்மணி கேட்கிறது…..

    Share
  • மறக்க முடியாத மதுரை – 2

    இசைக்கவி ரமணன்

    மதுரையில், ராஜா முத்தையா மன்றத்திற்கு அருகே கற்பகம் உணவு விடுதி ஒன்றிருந்தது. அதுதான் எங்கள் அலுவலகத்திற்கு அருகில் இருந்த ஒரே ஓட்டல் என்பதால் நாங்கள் கற்பகமே கதியாகக் கிடந்தோம். சாப்பாடு நன்றாகத்தானிருந்தது; சிற்றுண்டி இன்னும் நன்றாக இருந்தது. இருந்தாலும், தினமும் ஓட்டலில் தின்னுவது சரிப்படவில்லை. எங்களுக்கோ வேறு வழியும் இல்லை. அங்கிருந்த அத்தனைச் சிப்பந்திகளும் நண்பர்களாகி விட்டார்கள். வெளிச்சாப்பாடு, மாதாமாதம் அலுவற் பயணங்கள் இவற்றால், எப்போதும் கெட்டே இருந்த வயிறு இன்னும் கெட்டுப் போனது. வீட்டில் வளரும்போது, இட்டிலியை இளக்காரமாகப் பார்த்த நான் இப்போது ஏறக்குறைய இட்டிலிக்குத் தாலியே கட்டிவிட்டேன்! இட்டிலியைத் தின்றபிறகு வேறெதைத் தின்றாலும் ஒன்றும் செய்யாது என்பதாக ஒரு சித்தாந்தம் எங்களிடையே இருந்தது!

     raman

    ஒருநாள், வழக்கம்போல் காலைச் சிற்றுண்டிக்காகச் சென்று, ‘என்ன இருக்குண்ணே?’ என்று கேட்டேன். சர்வர் பட்டியல் பலகையில் இருந்ததை — நான் நடுவில் தடுத்தபோதும் — ஒன்றுவிடாமல் சொல்லி முடித்தார். ‘போதுங்க! போட்டுக் கொழப்பாதீங்க!’ என்றேன் நான். அவரோ, ‘எது? நானா கொழப்பறேன்?! நீங்க திங்கப் போறது ரெண்டு இட்லி, ஒரு வடை, அதிகம் போனா ஒரு பொங்க. நானும் பாத்துக்கிட்டுத்தானே இருக்கேன்! இதுக்கு நெதமும் ‘என்ன இருக்கு’ன்னு ஒரு கேள்வியை எதுக்குத்தான் கேக்குறீய்ங்களோ?!’ என்று ஒரே போடாய்ப் போட்டார்! பக்கத்தில், டபரா, டம்ளர் தட்டுக்களை எடுத்து வாளியில் போட்டுக் கொண்டிருந்த சிறுவன் கரணமலை, ரசித்துச் சிரித்தான். நான் பார்த்ததும், ‘ஒண்ணும் தப்பா எடுத்துக்கிட வேணாம்,’ என்றான். ‘இதுல தப்பா நெனக்கிறதுக்கு என்ன இருக்கு? நல்லா இருக்கியா?’ என்றேன். பதில்பேசத் தயங்காத மதுரையில்தான் எனக்கு எத்தனை விதமான நண்பர்கள்! சின்ன வாழை மட்டையால் டேபிளை நேர்த்தியாகச் சுத்தம் செய்தான் கரணமலை. இவர்களுக்குத்தான் சிரிப்பு எத்தனை இயல்பாகவும், முழுமையாகவும் இருக்கிறது!

    ramana

    ram

    காப்பி முடிந்து வெளியே வந்தால், பெட்டிக் கடையில் பாலகிருஷ்ணன் தயாராக வெற்றிலை, பாக்குப் புகையிலையை நீட்டினார். பளிச்சென்று இருக்கும் அந்தக் கடைக்காரரோடு பேச்சுக் கொடுப்பது எனக்கு மிகவும் பிடித்தமானது. சிரிப்பும், வம்புமாக இருக்கும் அவர் பேச்சு. அப்போது நடந்த ஓர் உரையாடலை என்னால் இன்றைக்கும் மறக்க முடியாது. வெற்றிலை வாங்கிக் கொண்டார் ஒருவர். பார்க்க மிகவும் சாதாரணமாக இருந்தார்.

    ‘சுண்ணாம்பு எங்க?’

    – அந்தாத் தூணுலெ கட்டித் தொங்க விட்டிருக்கு, பாக்க மாட்டியளோ? புதுசாக் கேக்கீக?’

    ‘சரித்தான்; வெத்தலைய மருதயில வாங்க்கிக்கிட்டுச் சுண்ணாம்புக்குத் திண்டுக்க போக வேண்டி இருக்கு!’

    நான் ரசித்துச் சிரித்தேன், பாலகிருஷ்ணனுக்கு முகம் தொங்கிவிட்டது. சுண்ணாம்பை எடுத்துக் கொண்டவர் அப்படியே போகாமல், கடையருகே வந்து நின்று வெற்றிலையில் பரபரப்பாகத் தடவிக்கொண்டிருந்தார். பாலகிருஷ்ணன் கடகடவென்று சிரித்தார்.

    ‘எதுக்கு இப்பம் சிரிக்கிறீய?’

    – இல்ல, வெத்தலக்குத்தான் சுண்ணாம்பு தடவறீயளா, வீட்டுக்குத்தான் வெள்ளையடிக்கீகளான்னு பாக்கேன்

    இவர் முகம் இறுகிப்போய்விட்டது. ஒன்றும் பதிலே சொல்லவில்லை. வெற்றிலையைச் சுருட்டி வாயில் திணித்துக்கொண்டு, மிஞ்சிய சுண்ணாம்பை, கடைப்பலகை அடியில் நாசூக்காகத் தேய்த்தபடிக் கேட்டார்:

    ‘பளம் எம்புட்டு?’

    கழுத்தை வலதுபுறமாகச் சாய்த்தபடிப் பாலகிருஷ்ணன் சொன்னார்,

    – எப்பமும் போல அம்பது காசுதான்

    ‘பளுத்திருக்கோ?’

    குலையில் கைவைத்திருந்த பாலுவுக்குக் கொலைவெறி வந்துவிட்டது. தன்கடைப் பழத்தை யாரும் சந்தேகிப்பதைச் சகிக்கமாட்டார் அவர்!

    – எல்லாம் வெளஞ்ச பழம்தான் நாங்க வியாவாரம் பண்ணுவம் பாத்துகிடுங்க!

    ‘அது பளம்கிறீய்ங்க; கையி பிடிச்சபடி இருக்கு; காலுரெண்டும் ஆகாசத்துல தொங்கிக்கிட்டிருக்கே அதான் கேட்டேன்!’ என்று ஓசைப்படாமல் இரண்டு பழங்களுக்கான காசை மிட்டாய் டப்பா மேல் வைத்துவிட்டு அப்பாவியாக நின்றார்!

    பாலகிருஷ்ணனின் பரிதாபம், நான் பார்த்தால் அதிகமாகும் என்று நாலெட்டு வைத்தேன். அருகே, என் தோழியான இளநீர்ப்பாட்டி, கடை பரப்பியிருந்தாள். சின்னக் கோணிச்சாக்குப் படுதாவின் கீழ்தான் அவள் இந்தக் கடுமையான வெயில் மாதங்களைக் கழிக்க வேண்டும்.

    கடந்த காலக் கதைகளை முகத்தின் ரேகைகளே

    படம்போட்டுக் காட்டுகின்ற பாட்டி

    படுதாவே கூரையாக, பாயுமாக, பரப்பிவைத்த கடையுமாக…

     

    இவள் விதவையாகி எத்தனை நூற்றாண்டுகள் ஆகியிருக்குமோ? வாழ்க்கையின் ஏற்ற இறக்கங்களால் விளைந்த அசதி அவளைக் கப்பிக் கிடந்தது. ஆனால், எதற்கும் யாரையும் குறைகூறாத ஒரு மனோபாவம் அவள் மனதில் அமைதியாய் நிறைந்திருந்தது. அவள் முகத்தின் விரிவற்ற இனிமைக்கு அதுதான் காரணம்.

    ‘என்ன பாட்டி செளரியந்தானே?’

    – வாப்பு! வந்துக்க

    என்று கழுத்திலிருந்து கையிடுக்கில் வழிந்தோடும் வியர்வையை, எத்தனை லாகவமாய்த் துடைத்துக் கொண்டாள்! ரவிக்கை போடாத அந்தப் பெண்மணியின் சேலை ஒருபோதும் விலகியதில்லை! அவள் துடைத்துக்கொண்ட பாங்கில், எனக்கும் களைப்பு நீங்கியது.

    ‘எளநி குடிப்பமா?’

    – நான் எம்புட்டுத்தரம்தான் சொல்லுறதோ! அங்ஙன ஓட்டல் உள்ளறபோயிக் காப்பியக் குடிச்சிட்டு வந்து ஒடனே இங்க எளநி குடிக்க வேணாம்னு!

    ‘ஐயோ! மறந்துபோச்சு ஆத்தா!’

    -எப்படித்தா மறப்பீயளோ? என்ன எளவட்டோ?

    அந்த அக்கறை மிகுந்த கோபத்தால் குளிர்ந்துபோய் அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன். அவளோ, காய்களைச் சுற்றுமுற்றும் பார்த்துக் கண்ணால் ஊடுருவி, ஒன்றை எடுத்துச் சீவித்தந்தாள். எனக்கு ஸ்டிரா போட்டு உறிஞ்சுவது பிடிக்காது. வாயை வாயில் பதித்து, சொட்டு கீழே விழாமல் வானத்தைப் பார்த்துக் கொண்டே தொண்டையில் கவிழ்க்க வேண்டும். அந்தக் குளுமை, இனிமை இவை கலந்த சுகம் நெஞ்சில் இறங்க, கண், அதுபாட்டுக்கு மூடிக்கொள்ளும்! கடைசியில் கொஞ்சம் கவனம் பிசகி, நீர் சட்டையை நனைக்கும்! அப்படிக் குடித்தால்தான் இளநீர் குடித்தது போலிருக்கும். பாட்டி, அதற்கேற்ப, வாயை நறுவிசாக அகலப்படுத்தித் தருவாள்.

    – அங்கிட்டு ஒக்காரு

    இன்னும் கோபம் குறையவில்லை! அவள் சொன்ன பெட்டி மீது உட்கார்ந்து கொண்டு, இளநீரைக் கையில் வாங்கிக் கொண்டு (இல்லையென்றால் தரமாட்டாள்!) பேச்சைத் திருப்புவோமென்று கேட்டேன்:

    ‘சரி, வியாவாரமெல்லாம் எப்படி இருக்கு?’

    அவளா? சொல்ல நினைத்ததைச் சொல்லாமல் விடுவாளா?

    – இந்தா! இன்னும் ஒருக்கா இப்படிக் கண்ட மேனிக்கு எளநி கேட்டாத் தரமாட்டேன், சொல்லிப்புட்டேன் ஆமா!

    ‘சரி தாயி! அதான் சொல்லிட்டிங்கள்ளே! இனிமே கவனமா இருந்துக்குவேன்’

    – அதுக்குத்தாஞ் சொல்லுறது; காப்பியக் குடிச்சுப்போட்டு எளநியையுங் குடிச்சென்னு வய்யி; அப்பொறம் கல்லுக்கொடலாயிப் பீச்சும். எல்லாம் நல்லதுக்குத்தாஞ் சொல்லுறது

    என்று பெருமூச்சு விட்டுக்கொண்டாள். நான் அவள் தந்த இளநீரை ரசித்துக் குடித்துக் கொண்டிருந்த போது ஒரு க்ளாசில் டீயுடன் உட்கார்ந்து கொண்டு மெல்ல உறிஞ்சத் துவங்கினாள்.

    ‘ஏம் பாட்டி! இந்த வெய்யில்ல எதுக்கு டீயைப் போயி குடிக்கறீங்க? ஒரு எளநியைக் குடிக்க வேண்டியதுதானே?’

    – தே! பேச்சப் பாரு! நான் வாழற பவுசுக்கு எளநி கட்டுப் படியாவுமோ? டீ தான் தேறும்

    என்று, இன்னொரு மடக்கு விழுங்கினாள். தாழ்ந்திருந்த அவள் பார்வையில், நினைவுகளின் ஆரவாரம் தெரிந்தது. டீயிலிருந்து எழுந்த ஆவி, அதற்குத் தூபம் போட்டுக் கொண்டிருந்தது. எத்தனை அல்லல்களோ! என்னென்ன பின்னல்களோ! இத்தனைக்ககும் மத்தியில், வியாபாரம் செய்து வயிறு கழுவ வேண்டிய கட்டாயம். அதிலும், எந்த உறவுமில்லாத என்மீது வாஞ்சை. தாய்மனம், ஆள்பார்க்குமா அன்பு காட்ட? மனது பாரமாகி, பாதி இளநீரை நான் கீழே வைத்துவிட்டுக் கிளம்பியதைக் கவனிக்காமல் சிலையாக அமர்ந்திருந்தாள் பாட்டி.

    பாட்டியும் டீயும்

     

    கிழிந்த கோணிக் கூரையின்

    ஓவியம் : ஜெயராஜ்
    ஓவியம் : ஜெயராஜ்

    கீழே இளநீர்ப் பாட்டி

    தாகத்திற்கு டீ தான்

    தருவித்து உறிஞ்சுகிறாள்

     

    விறகு சுமந்து

    வீதியில் கூவுகிறோம்

    விற்கவந்த விறகே

    விசித்திர ஆடையாகி

    வீதி வளைவில்

    வெந்து போகிறோம்

     

    விற்க வந்தது

    விற்று முடியாது

    வாங்கவும் முடியாது

     

    வேளாண்மை பொய்த்தாலும்

    விதைநெல் மிஞ்சும்

    மாளவிடாமல் வாழ்வை இழுக்கும்

    மர்ம வினைபோல

     

    மிஞ்சிய டீயிலும்

    மினுக்கு கொஞ்சம் மிச்சம்

    எடுத்துச் செல்லும் பையன்

    எச்சிலைப் பார்ப்பதில்லை

    களையான கருப்பு முகத்தில்

    கசப்பின் குரூரம்

     

     புகைப்படங்களுக்கு நன்றி: இசைக்கவி ரமணன்

    Share
  • எக்காலம்!…

    செண்பக ஜெகதீசன்

     

    எக்காலம்…

     

    தன்னிகரில்லாத் தலைவர்களைத்

    தமது இனமென்று

    தலையில் தூக்கிவைத்து ஆடி,

    சாதிச் சாயம் பூசி

    சந்தியில் சிலையாய் நிறுத்தி,

    காக்கை குருவிகளின்

    கழிப்பிடமாய் ஆக்குவதும்.. (more…)

    Share
  • ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல.. கவிஞர் வாலி!…

    கவிஞர் காவிரிமைந்தன்

    ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல..

    உள்ளத்து உள்ளது கவிதை என்பார் நாமக்கல் கவிஞர்.  அது ஊற்றுக்கண் திறந்ததும் புனலாய் வெளிப்பட்டு உருவாகும் வெள்ளம்!  கவிஞர்தம் நெஞ்சமும் அப்படித்தான்!  உள்ளத்துள் தான் உணர்ந்ததை உணர்வின் வெளிப்பாடல் கவிதை வடிவில் மொழி பெயர்த்துவிடுகிறான்!

    இதில் திரைப்படப்பாடலாசிரியரோ.. ஒருவகையில் கதையை, கருவை, கதாபாத்திர இயல்புகளை பாடல்வரிகளில் பிரதிபலிக்க வேண்டிய பணியில் ஈடுபட்டு சொற்சித்திரம்தனை இசைக் கோர்வைக்குள் அமைத்திட ஒரு வகையில் தவமே கொள்கின்றான்.  இந்தக் கற்பனைக் கலவையில் உருவாகிடும் பல்லாயிரம் பாடல்களில் – திரையில் தோன்றும் கதாபாத்திரங்களின் ஈடிலா நடிப்புத்தித்தால்.. வெள்ளித்திரையில் நம் உள்ளம் தொட்டப் பாடல்களின் வரிசையிதோ..

    நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களும் புன்னகை அரசி கே.ஆர்.விஜயா அவர்களும் அற்புத நடிப்பை அள்ளி வழங்கி நம் கண்முன்னே காட்சியளித்ததுடன் மனக்கண்முன் நிழலாடுகின்றனர்!

    ‘செல்வம்’ திரைப்படத்தில் திரையிசைத்திலகம் கே.வி.மகாதேவன் அவர்களின் இசையில், டி.எம்.செளந்திரராஜன் பி.சுசீலா குரல்களில் உணர்வுகளை வார்த்தெடுத்து பாவங்களைச் சேர்த்தெடுத்து ஒற்றைப் பாடலில் கொட்டித்தீர்த்துள்ளார்கள்.

    கணவன் – மனைவிக்கு இடையே தாம்பத்யம் சில காலம் ஒத்திப்பபோடப்பட வேண்டும் என்று ஆரூடம் சொன்னதாலே.. தலைவி தன்னுள் எழுகின்ற அத்துணை மனப்போராட்டங்களையும் அழுத்தமாய்.. அளவாய், அற்புதமாய் வெளிப்படுத்த புன்னகை அரசியின் பூமுகம்.. நம் கண் முன்னே காட்டும் கோலங்களும்.. நாடுதல், தேடுதல், ஏங்குதல்.. அதையெல்லாம் ஒன்றாகத் தாங்குதல் என முத்திரைப் பதித்த முக பாவணைகளும் கலந்து சிவாஜியின் பெரும் பங்களிப்பும் – காண்போரை வசமாக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை!

    ஏதோ காட்சியல்ல.. இதயம் தொடும் காட்சி!  கதாபாத்திரங்கள் தத்தம் நடிப்பு முத்திரைகளால் பரிணமிக்கச் செய்த இப்பாடல் வரிகளில் வார்த்தைகளை வழங்கிய வள்ளல் வாலியாவார்!

    http://www.youtube.com/watch?v=6uNf_KRgp18

    ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல..maxresdefault

    உள்ள உணர்ச்சியை வார்த்தையில்

    வடித்துச் சொல்ல.. எண்ணம்..

    உயிரா உடலா பிரிந்து செல்ல

    நாம் பிரிந்தது எந்நாளும் கலந்து கொள்ள..

    நின்றால் நடந்தால் உன் நினைவு

    என் நினைவே அகன்றால் உன் கனவு

    கனவு ஒன்றா.. இரண்டா எடுத்துச் சொல்ல..

    நினைவும் கனவும் எனக்காக – என்

    நெற்றியில் குங்குமம் உனக்காக

    நான் உயிரா உடலா பிரிந்து செல்ல..

    குங்குமம் நிலைக்கும் குலமகளே.. நான்

    குலவிடத் துடிப்பது உன் நிழலே

    நிழலும் நினைவும் அநித்தியமே.. என்றும்

    நிலையாய் நிற்பது சத்தியமே.. சத்தியமே.. சத்தியமே!

    Share
  • என் பார்வையில் கண்ணதாசன்

     

    –ஞா.கலையரசி

    Kannadasanகவிஞர், திரைப்படப்பாடலாசிரியர், அரசியல்வாதி, இலக்கியவாதி, சிந்தனாவாதி என்ற பன்முகத்திறமைகளைப் பெற்றவர் கண்ணதாசன் என்றாலும், என்னைப் பெருமளவு பாதித்தவர் திரைப்படப்பாடலாசிரியர் கண்ணதாசனே.

    சிறுவயதில் எனக்கு மிகவும் பிடித்தது, ‘குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று,’ என்ற பாடல்.

    உச்சி வெயில் சூரியனை மேகம் மூடுது – என்
    உள்ளம் எனும் சூரியனைக் கோபம் மூடுது
    காற்று வந்தால் மறுபடியும் மேகம் ஓடுது
    பேசிக் கலந்து விட்டால் கோபம் மாறி நேசமாகுது

    என்று தகிக்கும் உச்சி வெயில் சூரியனை, கடுங்கோபத்தால் டென்ஷன் அதிகமாகி சிடுசிடுக்கும் உள்ளத்துக்கு ஒப்பிட்டு எழுதிய இவ்வரிகள் அப்போதே என்னை ஈர்த்துச் சிந்திக்க வைத்தன.

    ஒருவித லயிப்புடன் இப்பாடலை நான் பாடியதாலோ என்னவோ, பள்ளித் தோழிகள் அடிக்கடி இதனைப் பாடச்சொல்லிக் கேட்பது வழக்கம். ஐந்தாம் வகுப்பின் முடிவில் என் தந்தையின் பணி மாற்றம் காரணமாக வேறு ஊருக்குச் சென்று விட்டோம். ஆறாம் வகுப்பிலிருந்து பள்ளியிறுதியாண்டு வரை வேறு ஒரு பள்ளியில் படித்தேன். பழைய பள்ளித் தோழிகளின் பெயர்கள் ஒன்றிரண்டு நினைவில் இருந்ததே தவிர, அவர்களின் முகங்கள் நினைவில் இல்லை.

    கல்லூரியில் சேரத் திரும்பவும் பழைய ஊருக்கு வர வேண்டியதாயிற்று. கல்லூரியில் அடியெடுத்து வைத்த முதல் நாள், ஒருத்தி என்னைப் பார்த்து “ஏய், குழந்தையும் தெய்வமும் பாட்டு பாடுவியே, அந்தக் கலையரசி தானே நீ?” என்றாள்.

    அப்போது தான் லேசாக அவள் முகம் நினைவுக்கு வந்தது. அவள் என் ஐந்தாம் வகுப்புத் தோழி அனுசுயா. என் அடையாளத்தை மீட்டெடுத்துப் என் நட்பைப் புதுப்பிக்க உதவிய இப்பாடலை எழுதியவர், கவிஞர் கண்ணதாசன்!

    ஒவ்வொருவரின் வாழ்விலும் மிகவும் இனிமையானது என்று போற்றப்படும் கல்லூரி வாழ்வின் இறுதி நாளில், பாட வேண்டும் என நாங்கள் தேர்ந்தெடுத்த பாடல், கண்ணதாசனின், ‘பசுமை நிறைந்த நினைவுகளே!’ அன்றிலிருந்து இன்று வரை, அத்தினத்தில் அனைவராலும் பாடப்படும் பாடல் இது தானே?

    பசுமை நிறைந்த நினைவுகளே
    பாடிப் பறந்த பறவைகளே
    பழகிக் கழித்த தோழர்களே
    பறந்து செல்கின்றோம்

    என்பதில் ‘பறந்து’ என்பதற்குப் பதிலாகப் ‘பிரிந்து’ என்று பாடுவதாக ஏற்பாடு.

    அந்த நாளும் வந்தது. கல்லூரி முதல்வர் உட்பட பேராசிரியைகள் அனைவரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள். விருந்து முடிந்து இறுதியில் தோழிகள் அனைவருடனும் இப்பாடலைப் பாடத் துவங்கினேன்.

    குரங்குகள் போல, மரங்களின் மீதே தாவித் திரிந்தோமே
    குயில்களைப் போலே, இரவும் பகலும் கூவித் திரிந்தோமே
    வரவில்லாமல், செலவுகள் செய்து மகிழ்ந்திருந்தோமே
    வாழ்க்கைத் துன்பம், அறிந்திடாமல் வாழ்ந்து வந்தோமே

    என்று பாடுவதற்குள்ளாகவே, பெரும்பாலோர் பாடமுடியாமல் தேம்பித் தேம்பி அழத் துவங்க, கஷ்டப்பட்டுத் தொடர்ந்து பாடி முடித்தவர்கள் ஓரிருவர் மட்டுமே.

    இப்பாடலைக் கேட்ட எங்கள் முதல்வர், “நீங்களே சொந்தமாக எழுதிப்பாடியதா?” என வினவினார். திரைப்படப்பாடல்களைப் பற்றி மிக மோசமான எண்ணம் கொண்டிருந்த அவர், இப்பாடலைக் கேட்ட பிறகு தம் எண்ணத்தை மாற்றிக் கொண்டார் என்றால், பார்த்துக் கொள்ளுங்களேன்!

    ஏற்கெனவே இதே வரிகளைப் பலமுறை பாடிப் பார்த்திருந்தும் கூட அச்சமயத்தில் முழுவதும் பாடமுடியாத அளவுக்கு, தொண்டையை அடைக்க வைத்த அவ்வளவு பொருத்தமான வரிகளைக் கொண்ட பாடல்! கல்லூரியில் காலடி வைக்காத கவிஞர், மாணவப் பருவத்தின் அனைத்து அம்சங்களையும் அழகாகச் சொல்லிப் பிரிவின் வேதனையைத் துல்லியமாக உணர்த்தி எங்களை அழ வைத்த நிகழ்வு, என்றுமே மறக்க முடியாதது. தொலைக்காட்சியில் இன்று இப்பாடலைக் கேட்டால் கூட, அந்த நாள் நினைவுகள், நேற்று நடந்தது போல, நெஞ்சிலே வலம் வருகின்றன! அந்தளவுக்கு என் மலரும் நினைவுகளில், முக்கிய இடம் பெற்ற சாகா வரம் பெற்ற பாடல் இது!

    என் கல்லூரி வாழ்வின் முதல் நாள், பழைய தோழியை அடையாளம் காணவும், இறுதி நாளை வாழ்நாள் முழுக்க நினைவில் நிறுத்தவும் உதவியவை கண்ணதாசனின் இந்த அருமையான திரையிசைப்பாடல்களே!

    பள்ளி நாட்களில் தினமும் இரவில் தந்தை, தங்கை, தம்பிகளுடன் ஒன்றாக வட்டமாக அமர்ந்து, அன்றைய தின நிகழ்வுகளையும் செய்திகளையும் அனைவருடனும் பகிர்ந்து கொண்டே சாப்பிடுவது வழக்கம். அச்சமயத்தில் என் தந்தை, அரசியல், இலக்கியம், சினிமா, நாட்டு நடப்பு பற்றிய பலசெய்திகளை எங்களுக்குச் சொல்வார்.

    ஒருநாள் தமிழலக்கியத்தை ஆழமாகக் கற்ற கவிஞர் கண்ணதாசன் திரைப்படப்பாடல்களில் இலக்கிய நயத்தை எடுத்தாண்டிருப்பது பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தார்.

    “அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில் எந்தையும் இருந்தார்,” என்ற பாரி மகளிரின் பாட்டின் கருத்தை மையமாக வைத்து, அன்றொரு நாள் இதே நிலவில் அவர் இருந்தார் என் அருகே” என்ற பாடலைக் கவிஞர் இயற்றியிருப்பது பற்றிச் சொன்னார்.

    தொடர்ந்து ‘அத்திக்காய்,’….என்ற பாடல் பற்றிப் பேச்சு வந்தது. அதுவரை அத்திக்காய் என்றால் அத்திமரத்தின் காய் என்று தான் நாங்கள் நினைத்துக் கொண்டிருந்தோம். ஒவ்வொரு வரியாக தந்தை விளக்கம் சொன்னபோது, எங்களுக்கு வியப்புத் தாங்கவில்லை.

    ஆர்வக்கோளாறு அதிகமாகி “உருவங்காய் ஆனாலும் பருவங்காய் ஆகுமோ?” என்றால் என்ன அர்த்தம் அப்பா?” என்று அவர் சொல்லாமல் விட்ட வரிக்குத் தம்பிகளுக்கு முன்னால் அசட்டுத்தனமாய் நான் கேட்டதும், அது காதில் விழாதது போல் அவர் எழுந்து கையலம்பச் சென்றதும், இதைப்போய்க் கேட்கிறாயே என்று என் தங்கை, யாருக்கும் தெரியாமல் என் காலைக் கிள்ளியதும் என் நினைவுக்கு வந்து, இப்போதும் என்னை நாணச் செய்கின்றது.

    பள்ளிப்பருவத்தில், நோட்டுகளின் கடைசிப் பக்கங்களில் திரைப்படப் பாடல்களை எழுதிவைக்கும் பழக்கம் எங்களிடமிருந்தது. தூக்கத்தில் எழுப்பிக் கேட்டால் கூட தப்பில்லாமல் சொல்லுமளவிற்கு அவை மனப்பாடமாயிருந்தன. மனப்பாடச்செய்யுள் பகுதியில் கண்ணதாசன் பாடல்களிலிருந்திருந்தால், வகுப்பில் எல்லோருமே முழுமதிப்பெண் பெற்றிருந்திருப்போம்! அக்காலத்தில் இரவு பத்து மணியிலிருந்து பதினொரு மணிவரை வானொலியில், ‘நெஞ்சில் நிறைந்தவை,’ என்ற தலைப்பில் திரைப்படப்பாடல்கள் ஒலிபரப்பாகும். அவற்றில் பெரும்பாலானவை கவிஞர் கண்ணதாசனுடையவை தாம். விளக்கை அணைத்து விட்டுப் படுத்துக்கொண்டே அவற்றைக் கேட்பது மனதுக்கு இதமான தாலாட்டாக இருக்கும்.

    தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே
    அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே

    உள்ளத்தின் கதவுகள் கண்களடா – இங்கே
    உறவுக்குக் காரணம் பெண்களடா

    போன்ற பாடல்களைக் கேட்டுவிட்டு நிகழ்ச்சி முடிவதற்கு முன்பே தூங்கிவிடுவது வழக்கம். வானொலியை நிறுத்தாமல் தூங்கிவிட்டமைக்கு அடுத்த நாள் காலையில், அம்மாவிடம் திட்டு வாங்குவது சகஜமாய் நடக்கும் நிகழ்வு.

    கவலைகளால் மனம் சோர்ந்து போயிருக்கும் சமயங்களில், கவிஞரின்
    ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது

    உலகம் பிறந்தது எனக்காக, ஓடும் நதிகளும் எனக்காக,
    மலர்கள் மலர்ந்தது எனக்காக, அன்னை மடியை விரித்தாள் எனக்காக

    அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும்,
    இதோ இந்த அலைகள் போல ஆட வேண்டும்

    வாழ நினைத்தால் வாழலாம்
    வழியா இல்லை பூமியில்?
    ஆழக்கடலும் சோலையாகும் ஆசை இருந்தால் நீந்திவா

    போன்ற பாடல்களைக் கேட்கும் போது சோர்வு நீங்கி, மனதில் உற்சாகம் கரை புரண்டு ஓடும்.

    நெருங்கிய உறவுகளை இழந்து விரக்தியின் எல்லையில் நின்ற போது
    போனால் போகட்டும் போடா, இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா?” என்ற பாடலை நமக்காகவே கவிஞர் எழுதியிருக்கிறாரோ என்று தோன்றும்.

    என்னைக் கொஞ்சம் தூங்க வைத்தால் வணங்குவேன் தாயே
    இன்று மட்டும் அமைதி தந்தால் உறங்குவேன் தாயே

    நிம்மதியிழந்து தூக்கத்தைத் தொலைத்த காலத்தில், இவ்வரிகள் சொல்லும் நிதர்சனம் உறைத்தது!

    முதன்முதலில் தாய்மைப்பேறை எதிர்நோக்கியிருந்த காலத்தில்,
    பூப்போல பூப்போல பிறக்கும்
    பால் போல பால் போல சிரிக்கும்
    மான் போல மான் போல துள்ளும்
    தேன் போல இதயத்தை அள்ளும்

    என்ற வரிகள் மனதை மயிலிறகால் வருடி பேருவகை அளித்தன!

    “உள்ளாடும் உயிரொன்று கண்டேன், அதன்
    உருவத்தை நான் என்று காண்பேன்?,”
    என்று முதல் குழந்தையை எதிர்நோக்கியிருக்கும் தாயொருத்தியின் கனவையும் ஏக்கத்தையும் அத்துணை நுணுக்கமாக தாம் அனுபவித்தது போல் சொல்லில் வடித்த கவிஞரை, என்ன சொல்லிப் புகழ?

    அமைதியான நதியினிலே ஓடும்- ஓடம்
    அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்
    காற்றினிலும் நதியினிலும் கலங்க வைக்கும் இடியினிலும்
    கரையினிலே ஒதுங்கி நின்றால் வாழும்

    உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால்
    உலகம் உன்னிடம் மயங்கும்
    நிலை உயரும் போது பணிவு கொண்டால்
    உயிர்கள் உன்னை வணங்கும்
    உண்மை என்பது அன்பாகும்
    பெரும் பணிவு என்பது பண்பாகும்

    கருணை பொங்கும் உள்ளம்- அது
    கடவுள் வாழும் இல்லம்
    கருணை மறந்தே வாழ்கின்றான்
    கடவுளைத் தேடி அலைகின்றான்

    போன்ற வாழ்வியலுக்குத் தேவையான உயரிய தத்துவங்களை எளிய மொழியில் பாமரருக்கும் புரிகின்ற மாதிரி, பொட்டில் அடித்தாற் போல் படைத்துச் சென்ற மக்கள் கவிஞரின் கவிதைகள் காலத்தை வென்று நிற்கும் சக்தி படைத்தவை!

    என் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் கவிஞரின் பல்வேறு பாடல்கள் பொழுதுபோக்கு என்ற அம்சத்தைத் தாண்டி என் ஊனோடும் உணர்வோடும் கலந்து விட்ட காரணத்தினால், ‘அந்த நாள் முதல், இந்த நாள் வரை’ அவை என் மீது தாக்கத்தைச் செலுத்தி என்னை உயிர்ப்புடன் இயங்க வைப்பது, முழுக்க முழுக்க உண்மை!

    ‘காலங்களில் அவள் வசந்தம்,’ பாடல் எழுதிய கவிஞர் கண்ணதாசன் வாழ்ந்த காலம், தமிழ்த்திரையிசைப் பாடல்களின் வசந்த காலம் என்றால் அது மிகையில்லை!

    Share
  • திருமால் திருப்புகழ் (94)

    கிரேசி மோகன்

    ndra garvabhangam - acrylic on canvas. #Krishnafortoday Keshav
    Indra garvabhangam – acrylic on canvas. #Krishnafortoday
    Keshav

    கண்ணன் திருப்புகழ்(வெண்பா)….
    ————————————————————-
    ’’கண்ணன் அந்தாதி’’
    ————————————

    Chocolate Krishna. oil on canvas. - Keshav
    Chocolate Krishna. oil on canvas. – Keshav

    ஓட்டைப் பிரித்ததன், உள்ளே புகுந்தவனைத்,
    தேட்டை இடுவோர்க்கும் தேறாதான், -மாட்டைப்,
    பிடிக்காது மாயன், பதத்தைப் பிடிக்கப்,
    படிப்படியாய்க் குண்டலினிப் பாம்பு….(76)

    பாம்பணைவோன், நம்மில் பழுதகற்றும் ஞானக்காய்,
    காம்பவனே, உண்ணக் கனிபவனாம், -தீம்புலனை,
    வீழ்த்தி அடியார்தம், வாழ்வையனு பூதியினில்,
    ஆழ்த்தும் அவனன்(பு) அளிப்பு….(77)

    அளிப்பாய் இலைபூ களிப்பாய், அவன்தாள்,
    குளிப்பாய் கருணை மழையில், -புலிப்பால்,
    கொணர்ந்த சபரிக் குழந்தையைப் பெற்றோன்,
    மனம்தனில், மாதவன் மாது….(78)

    மாதவன், கேசவன், மாலவன், மோகினி,
    மா(து)அவன், ஐயப்பன் மாதாவாம், -ஆதலால்,
    அன்னையென்(று) எண்ணி, அணுகினால் காத்தருள்வான்,
    தன்னையே கன்னையன் தந்து….(79)

    தந்தம் ஒடித்தனன், தாய்மாமன் யானைக்கு,
    வந்தமா மல்லரை வீழ்த்தினன், -அந்த,
    முகுந்தனோ(டு) ஒன்ற, உகந்தவழி ஒன்றே,
    அகந்தை அழித்தல் அது….(80)

    ————————————————————————————————–

    படங்களுக்கு நன்றி:

    http://kamadenu.blogspot.in/2013_08_01_archive.html

     

    Share
  • காலம் என்பது

    இசைக்கவி ரமணன்

    isai

    காலம் என்பது காளி நடத்தும்
    கண்கட்டு வித்தை அல்லவா? அது
    கனவில் ஒருவிதம் நினைவில் பலவிதம்
    மாறும் விந்தை அல்லவா?
    தூலம் உறங்கும் வேளை, காலம்
    தொலைந்தே போகும் அல்லவா?
    தொட்ட பூமியை விட்ட போததன்
    தூரிகை மாறும் அல்லவா?

    கடிகாரத்தால் காலம் என்றும்
    கட்டுப் படுவதே இல்லை
    கடமையைச் செய்து பயன்கருதார்க்கோ
    மட்டுப் படுவதே இல்லை
    இடையில் நெளியும் நாகம் போலே
    இதனை அணிந்தவர் முனிவர்
    இன்றில் வாழ்ந்து நேற்றையும் நாளையும்
    இழந்தவர் அவரே தலைவர்!

    காலம் என்பது கடவுளுடையது
    வளர்வதும் தேய்வதும் இல்லை
    நேரம் என்பதோ மனிதனுடையது
    கரைவது தானதன் எல்லை
    காலம் என்பது எதையும் என்றோ
    கவளம் விழுங்கி விட்டது! அதன்
    கவனம் சற்றே தளர்ந்த போது
    கவிதை அதனைத் தொட்டது!!

    Share
  • வரைந்த ஓவியமும் ‘’வந்தாள் பொன்மகள்’’ வெண்பாக்களும்….

     

    ரவிவர்மா ‘’மகாலஷ்மி’’ ஓவியம் 1974 ல் வரைந்தது….சு.ரவியும் ,நானும் இஞ்சினீரிங் கொஞ்சனீரிங் படித்த பொன்னான பொறியியற்க் காலம்….எத்திராஜு முதலித் தெருவில் வெங்கடாசலபதிக்கு போட்டியாக நாமம் இட்டுக் கொண்டிருக்கும் பெரியவர் கடையில் ரவிவர்மா படங்களைப் பார்த்து மனதில் பதிய வைத்துக் கொண்டு அவசர அவசரமாக வீடு வந்து வரைவோம்….காக்கை சிறகில் மட்டுமல்ல பசுஞ்சாணி வண்ணத்திலும் பரம்பொருளை பார்த்த காலம்….சு.ரவியும் நானும் சுகமாய் வாழ்ந்த அந்நாட்களை பிற்பாடு விரிவாக பதிவு செய்கிறேன்….கிரேசி மோகன்….
    ———————————————————————————————————————

    பொன்மகள் வந்தாள்….மூன்று தேவியர்க்கும் சேர்த்து முதற்பாடல்

    crazy1

    “படைத்திடும் வாணி துடைத்திடும் துர்க்கா
    இடைபுகுந்து காக்கும் இவளும் -சடைப்பின்னல்
    ஆக இணைந்து அலகிலா ஆட்டத்தை
    பாகப் பிரிவினையில் பார்ப்பு”….

    “பத்தவ தாரப் பணிக்குதவ பூதேவி,
    நித்திரை யோகமோ நீளாவால், -பத்தர்க்கு
    சேர அருள்சகாயம் ஸ்ரீதேவி , ஆகமால்
    தாரங் களின்தயவால் தான்”….

     

    ” காப்பு”
    ——–
    “அகழ்வாரைத் தாங்குகின்ற அக்காள்முன் வந்த ,
    முகிழ்வா ரிசமமர்ந்த மாமி -புகழ்பாட
    பாழியன்தோள் மாமன்தோப் புக்கரணம் போட்டபின்பு
    ஆழியைத்தந் தோன்தாள் அரண்”….
    சமர்ப்பணம்
    —————-
    “அன்னை இருந்த அசோகவனம் சேர்ந்தன்று
    அண்ணல் கணையாழி தந்தவள் -முன்னுச்சி
    சூடா மணிகொணர்ந்து ,தேடும் இராகவன்
    பாடொழித்தோன் பாதசமர்ப் பிப்பு”….
    “கஷ்டம் கலைந்திடும் , இஷ்டம் இணங்கிடும்
    அஷ்ட இலக்குமிகள் ஆசியால் -இஷ்டமாய்
    சுக்குமி ளக்குதி திப்பிலி என்பதின்றி ,
    லக்குமி தாராய் லயம் “….(1)

    “கள்ளம் கபடின்றி, கையேந்திய சங்கரர்க்கு
    உள்ளங்கை நெல்லி உவந்தளித்த -உள்ளத்தின்
    வீரதர் மத்தால் வியந்தவர் வேண்டிட
    கூரையைப் பிய்த்தவளைக் கொஞ்சு”….(2)

    “சுதாமன் அவலுக்கு சொர்ணங்கள் தந்தாய்
    கதாமகன் கீர்த்தியை கண்ணனுக்(கு) -இதோவென்று
    பொன்னோடு பேரை புறக்கணித்த பூவையே
    நின்னோடு சேர்ந்தகண்ணன் நார்”….(3)

    “பொன்வைக் குமிடத்தில் பூவைப்போர் மீதிவள்
    கண்வைக்க கஞ்சனும் கர்ணனே -முன்வைத்தக்
    காலைப்பின் வைக்கா கடுமுயற்சி யாளர்க்கு
    வேலை திருவினையாள் வாகு”….(4)

    “தான மவள்லீலை தர்ம மவள்வேலை
    மானம் புகுந்து மகாபலி -தானமிட்ட
    கர்வத்தை மூவடியைக் கொண்டு அடக்கிய
    தர்மத்தின் தாரம் திரு”….(5)

    “தானம் கொடுத்தமாட்டின் தாடை பிடிப்பது
    ஈனம் எனநூல் இயம்பினாலும் -மானம்
    பெரிதென்று எண்ணாமல் பிச்சை எடுப்போரை
    சிறிதென்(று) ஒதுக்குவாள் சீர்”….(6)

    ’’பண்டிதர் பின்தொடர பிச்சைக்குப் போயன்று
    கொண்டவூசிக் கஞ்சியை உண்டபின் -மண்டையில்
    கையோ(டு) அகந்தை கழவு ரமணரை
    மெய்யோடு சேர்த்தாள்பொன் மாது’….(7)

    “அக்காள்மூ தேவி அயர்ந்துறங்கும் இல்லத்தில்
    நிக்காள்ஸ்ரீ தேவிஎன்பர் நூலோர்கள் -முக்காலம்
    தூங்கும் பெருமாளின் தூய திருவடிகளை
    தாங்குவதால் தூங்காமல் தூங்கு”….(8)
    “பூணுமய பக்திக்கே பூரித் தளித்திடும்
    ஏனைய செல்விகள் ஏற்றத்தை -நாணய
    நாயகி ஏற்பது நாற்புற சுத்தத்தை
    போயகி லத்தை பெருக்கு”….(9)

    அலையில் பிறந்து அலையில் புகுந்த
    அலைதாண்டா பத்தினியை, அப்பொன் -சிலையை
    விழியில் பதித்து விரலால் ஜபிக்க
    கிழியும்பார் அவ்வறுமைக் கீத்து….(10)

    வித்தைக்கு வேண்டும் வினயம், அதிதீர
    சித்தத்தில் வேண்டும் சரிசமம் -சுத்தத்தை
    வேண்டுவாள் செந்திரு, வாசல் தெளிப்போர்க்கு
    யாண்டும் வறுமை இல….(11)

    பட்ட கடனால் பயந்தோடி பாலாஜி
    எட்டா மலையுச்சி ஏறிட -வட்டி
    அசலோடு சேர்த்தளித்தும் அந்தோ புகழில்
    முசலானாள் ஆமைக்கு முன்….(12)

    வானுகந்து வந்தீரே வகுண்ட வாசலில்
    நானகன்று சூரியாய் நிற்பதற்கு -தானமொன்று
    செய்ய வருவாளே ஸ்ரீமன்நா ராயணரின்
    கையைப் பிடித்து கனகு….(13)

    பாங்கியின் யோகத்தால் பார்த்தனுக்கு பாரதத்தில்
    சாங்கிய யோகத்தைச் செப்பியவன் -நீங்கிய
    போதுன்னை ராமன் புலம்பினான் பார்த்தனாய்
    யாதுமான லக்குமி யே….(14)

    “தரமும் தரத்தில் நிரந்தரமும், செய்யும்
    கருமத்தால் ஏழைக் குதவும் -கரமும்
    இருப்பவர் வீட்டை இமையாது காப்பாள் ,
    திருப்பள்ளி கொள்ளாள் திரு”….(15)

    “பயில்வான் இறந்தாலும் , பண்டிதனாய் வாழ்ந்த
    பயில்வோன் இறந்தாலும் பைசா -துயில்வோன்மேல்;
    வீடு வரையுறவு வீதி வரைமனைவி
    காடு வரைநெற்றிக் காசு”….(16)

    “அவலை சுசீலை அளிக்கக் குசேலன்
    கவலை களைந்தான் கிருஷ்ணன்; -அவளை
    மணந்ததால் அன்றோமால் மாங்கல்ய பிச்சை
    பணம்தந்து பெற்றான் புகழ்”….(OR ) -அவளை
    வரித்ததால் தானேமால் வாரிக் கொடுத்து
    தரித்திரம் தீர்க்கத் துணிபு”….(17)

    “நாத்தனார் வீரத்தை , கூத்தனூர் கல்வியை
    ஏத்திட ஏற்றம்தான் , என்றாலும் -பூத்தமலர்
    செவ்விதழின் மீதேளும் செல்வியருள் இல்லையேல்
    இவ்வுலகில் இல்லை இருப்பு “….(18)

    “மஞ்சள் அரிசியில் மங்கல வாத்யத்தில்
    வஞ்சியர் கல்யாண வைபவத்தில் -நெஞ்சணைந்த
    தாலியில் தங்கமாய்த் தங்கியவள் தாம்பத்ய
    வேலியைக் காக்கும்செல் வி”….(19)
    “சித்திரம் கைப்பழக்கம் , செந்தமிழ் நாப்பழக்கம்
    பத்தரை மாத்துப்பொன் பெண்பழக்கம் -உத்தம
    பக்தி வயலில் புளகநீர் பாய்ச்சிட
    முக்திநெல்லாய் விட்டெழும்உன் முன்”….(20)

    “தங்கநிற வண்டுகள் தாதுக்காய் மொய்த்திட
    பொங்கும் புளகமலர் போல்மாலின்-அங்கம்
    புளகத்தால் கூச்செறிய, பார்வையால் உண்ணும்
    அலகொத்தக் கண்ணாள் அவள்”….(21)

    நீல மலர்நாடும் நந்தவன வண்டேபோல்
    நீள விழியிரெண்டும் நாரணன் -கோலத்தைக்
    கொண்டதோர் நாணத்தால் ,காணும் விருப்பத்தால்
    அண்டமாய்ச் சுற்றும் அலைந்து….(22)

    ஏழை சிரிப்பில், எடுப்பார்கைப் பிள்ளையின்
    பேழைவாய் பொக்கையின் புன்னகையில், -வாழையடி
    வாழையாய் வந்த விகல்பமில்லா வேட்டதிர்வில்,
    தாழை எனமணக்கும் தாய்….(23)

    “உச்சிவான் தோன்றி உறுமும் இடிமின்னல்
    பச்சை மலையில் பளிச்சிடலாய் – அச்சுதன்
    மாலின் மரகத மார்பில் மகாலட்சுமி
    பாலின் நிறத்தில் பொலிவு”….(24)

    மடைதிறந்த வெள்ளமாய் மங்கலப் பார்வை
    கடைதிறந்து காணமயிர் கால்கள் -புடைத்தெழ
    எல்லையில் லாயின்பம் எம்பிரா னுக்களிப்போய்
    அல்லலில்லா வாழ்வை அளி….(25)

    “கவுத்துவம் பூண்டவன் , கொன்று மதுவைக்
    குவித்தவன் யோகத்தைக் கண்ணால் -கவுத்தவளே,
    நீலமணி பட்டதால் நீலமுற்ற பார்வையை
    பாலனென் மீது பதி”….(26)

    ’’கைடபனைக் கொன்றவன், கார்முகிலாய் சேடன்மேல்
    மெய்படரச் சாய்ந்தவன்மேல் மின்னலாய் -மையடர்ந்த
    பங்கயக் கண்களால் பார்த்தது போதுமென்மேல்
    திங்கள் விழியைத் திருப்பு’’….(27)

    “நாணுமுன் கண்களை நாணாக்கி மன்மதன்
    வேணுவின் மீதெய்து வெற்றியைப் -பூணுவான்;
    பாற்கடல் தோன்றிய பாவையே பார்வையை
    ஓர்கணம் என்மீ (து ) உரசு”….(28)

    பயிரான பூர்வஜென்ம பாவங்கள் போக்கும்
    அயிரா வதத்தில் அமர்த்தும் -உயிராக
    எண்ணினாள் தங்குவாள், ஏத்தினால் தாங்குவாள்
    கண்ணினால் காவல் கொடுத்து….(29)

     

     

    “அத்தகைய பார்வை அடியேன் மீதுபட்டால்
    எத்தகைய செல்வம் எனைச்சேரும் -குத்தகையாய்
    பத்தினி யேநீ, படியில்லை பாற்கடலில்,
    இத்தரைக்குத் தாண்டிட ஏகு”….(30)

     

    நூறிடர் தீர்த்திட பாரதம் செய்தவனின்
    மாரிடம் கொண்ட மகாலக்‌ஷ்மி -சோறிடும்
    சுத்தம் எதிர்பார்ப்பாள் செல்வம் அளித்திட
    அத்திருக்(கு)ஆ சாரம் அணி….(31)

    “குப்பையில் மாணிக்கக் கல்லாய் மிளிர்ந்திடுவாள்
    அப்பழுக்கு சேறிலவள் அல்லியாவாள் -குப்பனின்
    வீட்டுச் சுவரில் வரைந்தாலும் வந்தருள்
    கூட்டும் வரலக்ஷ்மி காப்பு”….(32)

    “சொர்ண நிறவதனம், செம்மா துளையதரம்
    வர்ணனைக்(கு) எட்டா வடிவழகு – கர்ணனை
    மிஞ்சும் உதார மனத்திற்க்(கு) உரியவளால்
    பஞ்சும் பசும்பொன்னாம் பார்….(OR )
    பஞ்சுமா கும்மாணிப் பொன்”….(33)

    “அத்தன் அரிமால் அவதா ரமாய்யெடுத்த
    பத்தையும் செய்த பணமிவளே -சத்த
    நரசிம்மன் சாந்த நிலையுற்றார் ,செல்வி
    வரசிம்மன் ஆனான் வரம்”….(34)

    “பெண்ணொருத்தி நின்றிடுவாள், பின்னிருந்து ஆடவனை
    முன்னிறுத்தி ஈவாள் முழுவெற்றி -கண்ணுறுத்தும்
    கானகத்து அல்லிலன்று காகுத்தன் ,பின்தொடர்ந்த
    ஜானகியால் கண்டான் ஜெயம்”….(35)

    நீல மலர்நாடும் நந்தவன வண்டேபோல்
    நீள விழியிரெண்டும் நாரணன் -கோலத்தைக்
    கொண்டதோர் நாணத்தால் ,காணும் விருப்பத்தால்
    அண்டமாய்ச் சுற்றும் அலைந்து….(36)

    ஏழை சிரிப்பில், எடுப்பார்கைப் பிள்ளையின்
    பேழைவாய் பொக்கையின் புன்னகையில், -வாழையடி
    வாழையாய் வந்த விகல்பமில்லா வேட்டதிர்வில்,
    தாழை எனமணக்கும் தாய்….(37)

    உத்தம பத்தினியின் உச்சந் தலைவகிட்டில்
    பத்தும் செய்யா பணமுடிப்பில் -சுத்தமாய்
    சாணத் தெளிப்பில்ஸ்ரீ சூர்ண நுதற்பிறையில்
    காணலாம் பொன்மகளின் கால்….(38)

    கன்றை விளிக்கும் கறவையின் கத்தலில்
    நன்றுரைக்கும் நல்லோர் நயவாக்கில் -வென்று
    முழங்கிடும் வீரத்தில், வேதாந்த மூச்சில்
    புழங்கிடும் பொமகள் பேச்சு….(39)

    யாப்பலங் காரத்தில் ,காப்புக் கவிதையில்
    மூப்புணர்ந்தோர் போக்கின் முதிர்ச்சியில் -நாப்பிளக்கப்
    பொய்பேசா நாவில், புறங்கூறா புத்தியில்
    தைபூசத் தான்மாமி தேசு….(40)

    ஏரோட்டி வேர்வையை, ஏமாந்த காதலால்
    நீரோட் டமான நினைவுகளை -போராட்ட
    ஊழியன் கூலி உயர்விழந்த துக்கத்தை
    தோழியாய் பொற்கை துடைப்பு….(41)

    பலியின் தலைவைத்துப் பாதாளம் பாய்ந்து
    கலிதீர்த்தக் காலிலிவள் காசாய் -ஒளிந்திருந்தாள்.
    பாதாளம் பாயும் பணமென்று சொன்னதன்
    ஆ!தாரம் அன்றோ அவள்….(or)
    ஆ!தாரம் அன்னை அருள்….(42)

    பரம்பொரு ளாதாரப் பொன்மகள் பார்வை
    தரம்தரும்சே தாரம் தவிர்த்து -வரம்தரும்
    செய்கூலி பக்திக்கு. செய்யவளால் உன்பணப்
    பைகாலி ஆகாது பார்….(43)

    “பணப்பை அரவம் படுத்த பொருளை
    கணத்தும் பிரியாத கஞ்ச -மனத்தாளே,
    ஓரக்கண்ணால் என்னை ஒருமுறை பார்த்தெனக்கு
    சேரச்செய் செல்வச் செழிப்பு”….(44)

    வாளாழி வெண்சங்கு வில்லும் கதாயுதமும்
    தோளாலும் தர்மத் தலைவனை -பாலாழி
    தோன்றிய பொன்மகள் தேர்ந்தெடுத்தக் காரணத்தால்
    மூன்றிலவன் ஆனான் முதல்….(45)

    “பாக்கள் புனைந்திடுதல் பாரதியே ஆனாலும்
    வாக்கில் பொருளாக வந்தமர்ந்து -ஆக்குவள்
    ஆசுகவி தம்மை அகிலத்தில் செல்வந்த
    காசுகவி யாய்பார் கவி”….(46)

    “கருவளர் பிள்ளையை காத்தவன் மார்பில்
    மருவத் ஸமாக மிளிரும் -திருவளர்
    கண்தானம் கொண்டதோர் காளைக்கும் வாய்த்திடும்
    சந்தான செல்வச் சிறப்பு”….(47)

    “கற்காத பேருக்கும் கோழைக் குமருளை
    துர்க்கா சரஸ்வதியர் தாரார்கள் -தர்காதி
    தர்கத்தை விட்டுநீ தாமசமாய் நின்றாலும்
    நற்காவல் பொன்மகள் நட்பு”….(48)
    “சீதையாய் ராமன்பின் சென்றளித் தாள்ஜெயத்தை
    கோதையாய் கோவிந்தன் கைப்பிடித்தாள்-ராதை
    யாகி ரசித்தாள் யதுகுலக் கண்ணனை
    பாகிமாம் பாதாம் புஜம்”….(49)

    “பிருகு குலத்தில் பிறந்த திருவே
    உருகும் அடியார்க் (கு ) உதவ -பெருகும்
    அறம்பொருள் இன்பம் அளிப்போய் , எனக்கு
    வரம்தரவா வீட்டுக்குள் வீடு”….(50)

    “சிங்கம் அரியா சனத்து மடியமர்ந்து
    பொங்கும் அவன்வெகுளி போக்கினோய் -தங்க
    வதனத்து தாயே வரவேண்டும் மாலற்
    புதனோடு பொன் சேர்ந்தாற் போல்….(51)

    “வைகுண்ட வாசல் விளக்கேற்றும் பொன்ஒளியே ,
    பைகொண்ட பாற்கடல் பாம்பணைதோன் -மெய்கொண்ட ,
    ஐவர்க்காய் அன்று அலைந்த களைப்பகல
    கைவைத்துத் தீர்ப்போளே காப்பு”….(52)

    வீரென்று காற்று வீசப் பொழிந்திடும்
    நீருண்ட மேகம் நிகர்த்தது; -சோறுண்டு
    நாளான சோகத்தை நீக்கிடும் நாரணனை
    தாலாட்டும் தாய்விழிகள் தான்….(53)

    “புத்தி பலம்வீரம் பொன்புகழ் பேருனை
    சுத்தி வலம்வரும் செல்விபதம் -ஒத்தி
    விழிநீர் அபிஷேகம் வார்த்திட பக்தி
    வழிகூறும் முக்தி வரை”….(54)

    பொன்மகள் வந்தாள் (OR ) திரு விளையாடல்….
    “வேதம் படித்தென்ன , வேதாந்தம் கற்றென்ன
    சீதரன் பாதம் சொடுக்கெடுப்போள் -பாதம்
    பணிந்திடு மானுடா, பாரதன்பின் உன்னுள்
    கனிந்திடும் காண்முத்திக் காய்”….(55)

    “கற்பை நெருப்பிலிட்ட காகுத்தன் சோதனையில்
    பொற்பூ புகுந்தெழுந்தாள் பூரணமாய் -அற்ப
    இராவணன் தீவெரிய இட்டனள் தீயை;
    இராகவன் தூதன் எரிப்பு”….(56)

    “ஆடி வெள்ளியில் தேடிவரும் தங்கமுனை
    மூடி உறங்காதே முன்கதவை -ஏடி !
    எழுந்தேலோ ரெம்பாவாய் ,எம்பிரான் பள்ளி
    விழுந்தாளை வாழ்த்தி வணங்கு”….(57)

    “நற்கா ரியப்பயன் , நான்மறை நுண்பொருள்
    பொற்கம லம்வீற்ற பேரெழில் -நற்குணங்கள்
    பூண்ட நிறைவு , பராசக் தியினம்சம்
    வேண்டும் அடியார் வரம்”….(58)

    “குமுத வதனம் ,கடல்கடைந்து வந்த
    அமுத வளர்மதி அக்காள் -துமிதம்
    தெறித்திடும் பாற்கடலில் தூங்கும் பெருமாள்
    வரித்திடும் செல்வியை வாழ்த்து”….(59)

    “சாரங்கன் வில்லுக்கு சக்தி அளித்திடும்
    கூரம்புக் கண்களைக் கொண்டவளே , -ஓரங்கை
    பங்கஜம் ஏந்தமறு பொற்கரத்தால் பாலிக்கும்
    அங்குசம்நீ ஆனைநான் ஆள்”….(60)
    “முனிபிருகு வாரிசே மூவா முகுந்தன்
    பணிகாத்தல் பக்க பலமே -அணிபொற்
    சரமே அவன்மார் சரோஜமே தாமோ
    தரனுகக்கும் தாயே துதிப்பு “….(61)

    “கண்பறிக்கும் காந்தி , கமல முகம்கண்கள் ,
    விண்பரப்பில் எண்திசையாய் வீற்றிருந்து -மண்பிறப்பை
    நோக்கி இயக்குவாள், நந்த குமாரனை
    ஏக்கமுற வைக்கும் எழில்”….(62)

    ’’பொறிகளுக்கு எட்டாத போகமே, ஞான
    வரிகளுக்(கு) உட்பட்ட வாக்கே -தறிகளுக்கு
    ஈடான வேகத்தில் இற்றிடாத நூலாகத்
    தேடும் ரமணஎளி தே’’….(63)

    “வாள்எதிர்த்தால் நந்தகி , வில்எதிர்த்தால் சாரங்கி
    ஆள்எதிர்த்தால் வெண்சங்கு ஆழிவட்டம் -கோள்எதிர்த்தால்
    கால்எதிர்த்த கூற்றனின் மேலுதைத்த வீரதுர்க்கா
    நூல்எதிர்த்தால் வாணிஅவள் நா”….(64)

    “பேராசை பின்சென்று போனால் பெருநஷ்டம்
    பாரீசன் போனானே பத்தினியால்- மாரீச
    மானென் (று) அறிந்தும் மயர்வுற்ற ராமனைத்
    தானன்று சோதனைசெய் தாள்”….(65)

    “சாரங்கன் வில்லுக்கு சக்தி அளித்திடும்
    கூரம்புக் கண்களைக் கொண்டவளே , -ஓரங்கை
    பங்கஜம் ஏந்தமறு பொற்கரத்தால் பாலிக்கும்
    அங்குசம்நீ ஆனைநான் ஆள்”….(66)

    “சிலையை வளைக்கவந்த ஸ்ரீராமன் ,செம்பொன்
    சிலையான சீதையால் சொக்கி -சிலையாகி ,
    மற்றவர் வாய்ப்பை மறந்திட , கைவில்லை
    இற்றிட வைத்தாள் இவள்”….(67)

    “தரித்திரமாய் வந்தாடும் தாண்டவக் கோனை
    உருத்தெரியா வண்ணம் ஒசித்து -சரித்திரமாய்
    செய்தெதிர் காலத்தை சீரும் சிறப்புமாய்
    பெய்தா தரித்தளிப்பாள் பொன்”….(68)

    “கோதையாய் ,கோகுலக் கூட்டத்து தாதியாய்,
    ராதையாய் வந்தவனை ரட்சித்தோள் -கீதையாய்
    வாக்கில் புகுந்துவந்த பாக்கிய லஷ்மியே
    காக்கும் கடவுளுக்கு காப்பு….(OR )
    காக்கும் திருமஞ்சக் காப்பு”….(70)

    ’’ ஏறுக்கு மாறான நூறுக்கு தோல்விதர
    பாருக்கு வந்தபளு போக்கிட, -போருக்குக்
    காரண பாஞ்சாலி கூந்தல் விரிப்பிருந்து
    நாரணர்க்கு செய்தாள் நலம்’’….(OR)
    நாரணர்க்கு தோள்கொடுத்த நட்பு’’….(71)

    “பொன்னாத்தா, தாமரைப் பூவாத்தா, தாங்கிடும்
    மண்ணாத்தா, பின்வந்த சின்னாத்தா, -பண்ணாத்தான்,
    நன்னாத்தான் பாடிய, நாச்சியார் காதலுக்கு
    கண்ணாத்தா வாயிருந்து காப்பு”….(72)

    “ஊடலில் பாற்கடலை உக்கிரமாய் பொங்கவைத்து
    தேடலில்மால் வாட, திருவிளை -ஆடலாய்,
    ஆடிவரும் தங்கமிவள் அக்காள் நிலத்தடியில்
    ஓடிக் கரியாய் ஒளிவு”….(73)

    “பாலுக்(கு) அழும்சேய்க்கு பார்வதியால் ஞானம்
    கோலக் கவிக்கு கலைவாணி -சேலைத்
    தலைப்பிட்டு செல்வத்தை தாமரையாள் தந்து
    இலைமேல்நீர் பற்றை இடும்”….(74)

    “ஆர்த்த கடலில் அரிமால் அவதாரப்
    பூர்த்தி வரையில் பொறுமையாய் -காத்துக்
    கிடக்கும் திருமகளே காக்கும் கடவுள்
    எடக்கு மடக்கல்ல ஈது”….(75)

    “அகலாது கல்லில் அடைந்து கிடந்த
    அகலிகை மீண்டாள், அதனை -உகந்தது,
    ஏகபதி நோன்பிருந்து ஏத்திய தாலன்றோ
    ராகவன் பாத ரசம்”….(76)

    “வண்ணான் சொல்ல வரித்த மனையிவளை
    சொன்னான் வனத்திற்கு செல்லென்று -பின்னாளில்
    தந்தை கதைசொல்ல தந்தாள் இருபிள்ளை
    விந்தை இவள்செய் விதி”….(77)

    அண்ணலும் நோக்கினான், அன்னையும் நோக்கினாள்
    அண்ணலவன் நோக்கம் அவதாரம் -அன்னையவள்
    நோக்கமோ அக்காள் நிலமடந்தை மாந்தரை
    காக்கும் கருணை குணம்….(78)

    “குத்திய காகத்தைக் குத்திய காகுத்தன்
    பத்தினி தெய்வத்தைப் போற்றிடுவோம் -இத்தரையில்
    இன்னல் வருங்கால் இவளைத் துதித்திட
    அண்ணல் அபயம் அளிப்பு”….(79)

    ’’தீதண்டும் வேளை, திருக்கரம் ஏந்திடும்
    கோதண்ட ராமன் கரம்பிடித்த -மாதண்டி(மாதை அண்டி)
    வாழப் பழகிடு , ஆழ்நிலை யோகத்தில்
    ஏழைக் குசேலா எழு’’….(80)

    “ஏழுமலைக்(கு ) ஏதிந்த ஏற்றம் எனப்பார்த்தால்
    கீழ்அமர்ந்த வல்லியிரு கைகளால் -ஊழ்அழுந்த
    வந்தவரை கேள்வனின் வட்டிக் கடன்தீர்க்க
    உந்துகிறாள் உண்டியலுக் குள்”….(81)

    ’’வள்ளென்று பேசாதே, தள்ளென்று கூறாதே
    உள்ளொன்று வைத்து உரைக்காதே -கொல்லென்று
    பூத்த கமலத்தாள் , பொல்லாத வர்களுக்கு
    ஏத்த வளல்ல எதிர்’’….(82)

    “எட்டுவகை செல்வங்கள் ,எட்டு வகைசுகங்கள்
    கிட்டும் அவள்கடைக் கண்ணொன்று -பட்டால்;
    முராரி சகியால் முகாரி இசைக்கும்
    பராரிக்கும் வாழ்வில் பொருள்”….(83)

    “வாழ்வில் பொருளிருந்தும் வாழ்வின் பொருளறியா
    தாழ்வில் புகமறுப்பாள் தங்கமகள் -ஊழ்வினை
    தந்த பொருளைத் திரும்ப எடுத்தழிப்பாள்
    சிந்தையின் செல்வச் செறுக்கு”….(84)

    குறுக்குவழி சென்று குவித்த பணத்தால்
    செறுக்கு மரச்சரிவில் செல்லும், -கிறுக்குத்
    தனம்பித்தம், செல்வி திருத்தாள் துதிக்கும்
    மனம்தான்பொன் செய்யும் மருந்து….(85)

    “வெண்பட் டுடுத்திப்பூ வெண்மல்லித் தார்சூடி
    மென்பட்டுத் தாமரை மீதிருந்து -கண்கொட்டா
    ஞானியர் காட்சியே , நாணமுறக் கண்ணளிப்பாய்
    ஆணில் உயர்ந்த அரிக்கு”….(86)

    “எட்டுதிக்கு யானைகள் ஏந்திவரும் கங்கையால்
    அட்டமா லஷ்மிக் (கு ) அபிஷேகம் -கட்டுக்(கு)
    அடங்கா கடலரசன் ஆருயிர் பெண்ணே
    தடந்தோள் மாலனமு தே”….(87)

    “வீரத் துணிச்சலை (தைரியம் ), வெற்றிக் கனிச்சுவையை ( விஜயம் )
    ஈரப் பசைநெஞ்சுக்(கு) ஈகையை (தனம் )-சேரும்
    மனைமக்கள்(சந்தானம்) வித்தை(வித்யா) முளைக்கதிர்(தான்யம்), எட்டு
    முனையானை(அஷ்ட திக் கஜங்கள்) ஆதி முடிப்பு”….(88)

    “வாரிசம் ஓர்கையில், வெண்குடை ஓர்கையில்
    ஆறுதல் கூட்டும் அபயத்தை-வேறிரு
    அங்கைகள் தாங்கிடும் ஆதி இலக்குமி
    பங்கயத் தாளைப் பணி”….(89)

    “அம்புஜஅங் கைகள் அபயவரம் முத்திரையில்
    அம்புஜம் ஏந்தும் அடுத்தயிரு-அம்புஜங்கள்,
    வெண்பட் டுடுத்துமைஸ் வர்ய இலக்குமியை
    பொன்கொட்ட வேண்டிப் பணி”….(90)

    “ஆறில் அபயம் அளித்திடப்பொன் , ஐந்தில்விண்
    சோறமுதம், வில்லம்பு , சங்காழி -வாரிசத்தை
    தாங்கும்செம் பட்டு தனலஷ்மி தேவியை
    பாங்குற ஏத்திப் பணி”….(91)

    “கன்னல் ,இரண்டு கமலம் ,கதைகதலி
    செந்நெல் ,அபயவரம் சாதிப்பாள்-தன்எண்கை
    தாங்கிபச் சையணிந்த தான்ய இலக்குமியை
    பாங்கிஎன எண்ணிப் பணி”….(92)

    “கஜங்கள் குளிர்விக்க ,கையம் புஜங்கள்
    நிஜம்கொள் அபயவரம், நீள்அம்-புஜங்கள்
    தரிக்கப்பச் சையணிந்த தாய்கஜ லஷ்மி
    பரத்தினும் மேலாம் பணி”…(93)

    “இடையில் குழந்தை இரண்டிளநீர் கும்பம்
    படைவாளும் கேடயமும் பற்றி -அடையாள
    சேய்அபயம் காண்பிக்கும் சந்தான லஷ்மியை
    போய்அபலை ஆகப் பணி….(OR )
    போய்சுபம் காணப் பணி”….(94)

    ’’வரிசங்கு, வீச்சாழி, வில்லம்பு, சூலம்
    வரஅபயம், புத்தகம், வீற்றெண் -கரத்தாள்,
    வறுமை சிவப்பணிந்த வீர இலக்குமியை
    பெருமையாய் சென்று பணி’’….(95)

    “பாசம்,வெண் சங்கு, படைதிகிரி, கேடயம்
    வீசும்வாள், வாஞ்சை வரஅபயம்-பூசும்
    திலகநிறக் கூறையாள் திக்விஜய லஷ்மியை
    புளகநீ ராட்டிப் பணி”….(96)

    “பூனைக்குப் போய்மணி பூட்டிய கர்வத்தில்
    ஆனைக்கு லாடம் அடித்தேனே ! -மோனை
    எதுகை வரக்கண்(டு) எழுதப் புகுந்தேன்
    பதுமையே கொள்ளென் பழுது”….(97)

    “திருமஞ் ஜனக்காப்பே, தீயிட்ட போதும்
    கருமை யுறாதங்கக் காப்பே, -திருமகளே,
    பாதுகை இல்லாத போதும்மால் பாதகாப்பே,
    கோதுகைவெண் பாபாது காப்பு”….(98)

    “மாவீரன் பாரதியின் மேதமை இல்லாது
    தீவிரலைத் தீண்டினால் தீய்ந்திடுமே! -பூவீற்ற,
    தொட்டால் தகதகக்கும் தங்கமுந்தன் கண்பார்வை
    பட்டால் துலங்குமென் பா”….(99)

    (OR)
    “மாவீரன் பாரதியின் மேதமை இல்லாது
    தீவிரலைத் தீண்டினால் தீய்ந்திடுமே! -பூவீற்ற,
    பட்டால் தகதகக்கும் பொன்மக ளுன்பார்வை
    தொட்டால் துலங்கும் தமிழ்”….(99)

    “ஈர துணியால் இறுக முடிந்துபசி
    ஆற முடிக்கும் அரும்பணியில் -வீரத்
    திருமகள் சேர்ந்தெட்டு தோள்கொடுத்து, வானக்
    கருமுகிலாய் தீர்ப்பாள் கலி”….(100)

    “வாடும் பயிர்கண்டு வாடிய வள்ளலார்
    தேடும் அருட்ஜோதி தெய்வத்தை -நாடி
    அழைத்த வருக்குமுன்பு ஆதிலஷ்மி சேர்த்து,
    செழித்திடப் பெய்வாள் செடிக்கு”….(101)

    “தாத்தாக்கை கோர்த்து தெருத்தெருவாய் சென்றன்று
    சேர்த்தாள் தமிழின் சுவடிகளை -ஆத்தாவால்
    ஐம்பெருங் காப்பியத்தை ஐஸ்வர்ய மாய்பெற்றோம்,
    பைம்பொழில்வாழ் பங்கஜத்தைப் போற்று”….(102)

    “கொள்ளை அடிக்கவந்த கும்பினிக் காரனைக்
    ‘வெள்ளையனே போவெளியே’ விண்டுரைத்த -பிள்ளை
    மகான் சுதந்திரத்தை மீட்டபோது, இட்ட
    லகான்விஜய லஷ்மியின்லீ லை”….(103)

    ’’மூப்பினை ஏற்றதிய மானளித்த நெல்லியை
    சாப்பிடாது சென்றாள் சாவெதிர்த்து -தோப்பில்
    தனிமரமாம் அவ்வையை, தைரிய லஷ்மி
    பனிமலைஈ சன்பால்வைப் பு’’….(104)

    ’’ஏழை இருபத்தி ஏழை பிரசவித்து
    பாழும் வறுமையால் பாடுற -தோழனுக்கு
    கண்ணன்சம் பத்தைக் கொடுத்திட வைத்தது
    அன்னைசந் தானலஷ்மி அன்பு’’….(105)

    “அச்சம் தவிர்த்திடும் , ஆண்மை பெருக்கிடும்
    உச்சப் புகழில் உலவவிடும் -பச்சைமால்
    இச்சைக் (கு) உரிய இகபர தேவதையே
    பிச்சையிடு ஞானப் பிடிப்பு”….(106)

    “அம்பிகை பொன்மகளை ஆரா தனைசெய்து
    நம்பினோர் கெட்டதில்லை நானிலத்தில் -சொம்பிலே
    தேங்காய் மாவிலை தண்ணிள நீர்வைத்து
    பாங்காய் இவளைப் பணி”….(107)

     

    ’’வேதம் வளையல், விளக்கும் உபநிடதம்
    பாதச் சதங்கை, புராணங்கள் -காதணி,
    கோதை திருப்பாவை கொண்டாள் புடவையாய்,
    பேதையென் பாபாதப் பூ’’….(108)

     

    வாயார வாழ்த்து வடவேங் கடன்நெஞ்சத்
    தாயாரை, பூவாழ் திருமகளை -ஓயாமல்
    அன்னை கடைக்கண் அனுக்கிரகம் கொண்டோர்முன்
    முன்னை வினைகள் முடம்…(109)

     

    Share
  • பூமியில் அடித்தட்டு அதிர்வுப் பெயர்ச்சி இல்லாது [Plate Tectonics] உயிரினங்கள் பெருகச் சூழ்வெளி உதவியிருக்க முடியாது

    Plate tectonics Model

    (Subduction Zones Drift & Sea-Floor Spreading) 

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா

     

    http://classroom.synonym.com/science-projects-earths-changes-18295.html

    http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=Cm5giPd5Uro

    கால்பந்து ஒட்டுபோல் தையலிட்ட

    கடற் தளத்தின் மேல்

    கோல மிட்டுக்

    காலக் குயவன் எல்லை வரைந்த

    ஓவியப் பீடங்கள்

    நடம் புரியும்

    கடலில் மிதந்து !

    நண்டு போல் நகர்ந்து,

    கண்டத் தட்டுகள் இங்குமங்கும்

    துண்டு துண்டாய்ச் சேரும்,

    பிரியும் கடல் சூழ்ந்திட !

    நாற்பது மில்லியன் ஆண்டுகட்கு

    முந்தி இந்தியா

    ஆமைபோல் உந்தித் தவழ்ந்து

    ஆசியாக் கண்டமுடன்

    முட்டி மோதிப் படிப் படியாய்

    உயர்ந்துள்ளது

    எட்டாப் பனிச் சிகரமாய்

    இமய மலை !

    +++++++++++++

     

    jay

    நாம் அறிந்தபடி அடித்தட்டு பெயர்ச்சி உயிரினப் பிறப்புகளுக்கு மிகவும் முக்கியமானது.   பாறைக் கோள் [Rocky Planet] மனிதக் குடியேற்றம் பற்றிச் சொல்ல வந்தால், எண்ணிக்கையில் பேரளவு பெயர்ச்சிகள்  நேர்வது, பெருந்தேவை என்பது எங்கள் கணக்குப்படி தெரிய வருகிறது.  சூரிய மண்டலத்தில் நமது பூமியே பாறைப் பெருங் கோள் என்பதும்,  உயிரினம் வாழத் தகுதி உள்ள ஒரு கோள் என்பதும் எதிர்பாராது  நிகழ்ந்தவை அல்ல.  மீள்சுற்று இயக்கங்கள்  பாறைக் கோள்களில் உயிரினம் வசிக்கப் பெரும்பங்கு ஏற்கின்றன.   அடித்தட்டுகள் நகவர்தாலும், எரிமலைப் புகைமூட்டம்  எழுவதாலும், பாறைகளுக்குள் அடைபட்ட ஆக்சிஜென், கார்பன்டையாக்சைடு போன்ற சிக்கலான இரசாயன வாயுக்கள் வெளியேறி, மீள்சுற்று நிகழ்ச்சியில் சூழ்வெளியில் தொடர்ந்து பயனளிக்கின்றன.

    டையானா வாலன்சியா,  ஹார்வேர்டு பல்கலைக்கழகம்

    Plate tectonics -1

     

    “இந்திய உபகண்டம் 40 மில்லியன் ஆண்டுகட்கு முந்தி வெகு வேகமாக ஆசியக் கண்டத்தை நோக்கி வந்து மோதியது. ஆனால் அப்படி இந்தியா மோதியது ஒரு தடவை மட்டுமில்லை. [பலமுறையாக இருக்கலாம்]. இந்த முடிவு இமயமலை எவ்விதம் நகர்கிறது என்னும் யூகிப்பைப் பெருமளவில் மாற்றப் போகிறது. புகழ் பெற்ற அடித்தட்டு நகர்ச்சி [Plate Tectonics] பற்றிய கால யுகம் இந்த முடிவால் மாற்றம் அடையும். இந்திய உப கண்டம் ஆண்டுக்கு 10 செ.மீ. [4 அங்குலம்] நகர்கிறது. 10 மில்லியன் வருடங் களுக்குப் பிறகு 1000 கி.மீடர் [600 மைல்] நகர்ந்திருக்கும். புவி & அண்டக் கோள் விஞ்ஞான இதழில் [Earth and Planetary Science Letter] இந்த அரிய, புதிய விளைவுகள் வெளியிடப் படும். “

    ஆலிவர் ஜொகட்ஸ்  [Oliver Jagotz]  [Boston MIT Assistant Professor of Geology]

    முன்னுரை:

    பிரபஞ்சத்தின் அண்டங்கள், பஞ்ச பூதத்தின் அங்கங்கள், உலகத்தில் வாழும் உயிரினங்கள் எல்லாம் சக்தி மயத்தால் முறையே ஓர் ஒழுக்க நியதியைப் பின்பற்றி இயங்கினாலும், அவற்றின் இயக்கத்திலும் வடிவத்திலும் தொடர்ந்து மாறுபாடுகள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. அந்த வேறுபாடுகளை நோக்கும் போது, பிரபஞ்ச நியதிகள் முற்றிலும் சீரானவை என்றோ அல்லது முழுவதும் சீரற்றவை என்றோ அழுத்தமாகச் சொல்லமுடியாது. ஆனால் நமக்குத் தெரிந்த பிரபஞ்சக் கோட்பாடு களைச் [Laws of the Universe] ‘சீரற்ற ஒழுங்கு நியதிகள் ‘ [Disorderly Order Hypothesis] என்று இரண்டு முரண்பாடுகளையும் இணைத்து நாம் விளக்கம் சொல்லலாம்!

    Moving Himalayas

     

    அட்லாண்டிக் பெருங்கடல் மெதுவாக அகன்று வருகிறது என்று கண்டுபிடிக்கப் பட்டுள்ளது! ஆனால் பசிபிக் பெருகடல் மெதுவாகக் குறுகிக்கொண்டு வருகிறது! ஈரோப்பில் இருக்கும் ஆல்ஃப்ஸ் மலைத்தொடர் வளர்ச்சியாகி உயரம் அதிகமாகிக் கொண்டே போகிறது! பூதக் கண்டம் ஆஃப்பிரிக்கா செங்கடல் வட முனையில் பிளக்கப் போகிறது!  இமாலயச் சிகரங்களை இந்தியாவின் கனத்த உபகண்டம் அடித் தட்டுக்கு மேல் புகுத்தி, அழுத்தி அவற்றின் உயரத்தை மிகை யாக்கிய வண்ணமா யிருக்கின்றன! ஹவாயி தீவுகள் வடமேற்குத் திசையில் மெதுவாகப் பெயர்ந்து ஜப்பான் தீவுகளை நோக்கிச் செல்கின்றன!

     

    http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=JmC-vjQGSNM

    [Plate Tectonics]

    http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=L8CT3UHp0IE

    [The Formation of Himalayas]

     

    Fig 1A Ages of Plates

     

    450 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஆஃபிரிக்காவின் ஸகாராப் பாலையின் மீது துருவப் பனிக்கூண்டு [Polar Ice Dome] படிந்து கிடந்தது. அதை மெய்ப்பிக்க அல்ஜீரியா பாலைவனத்தில் பனிப்பாறை செதுக்கிய கற்பாறைகள் இப்போதும் பிழைத்திருப்பதை காணலாம். பூர்வக் காந்தத்தைச் [Paleo-magnetism] சோதிக்கும் போது அல்ஜீரியா பகுதி ஒருகாலத்தில் தென்துருவத்தில் பனிமூடிக் கிடந்திருக்க வேண்டும் என்று தெரிய வருகிறது. அல்ஜீரியா பகுதி இப்போது பூகோளத்தின் வளைவில் பெயர்ச்சியாகி 8000 மைல் தூரம் வடக்கே நகர்ந்துள்ளது. 250 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஆஃபிரிக்காவின் ஸகாரா பாலைவனம் தென் துருவத்தில் இருந்து பனிப்பாறையால் மூடியிருந்த காலத்தில், பூமத்திய ரேகை வட அமெரிக்காவின் மத்தியப் பகுதி வழியாகச் சென்றிருக்க வேண்டும். குளிர்ப் பிரதேசங்களான அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற இடங்களில் நிலக்கரிச் சுரங்கங்கள் அந்த யுகத்தில்தான் தோன்றி யிருக்க வேண்டும் ‘.

    டாக்டர் ரோட்ஸ் ஃபேர்பிரிட்ஜ்கொலம்பியா பல்கலைக் கழகம்.

     

    Fig Continents Drifts

     

    கடலடித் தட்டுகள் நகர்ச்சியின்றி உயிரினங்கள் விருத்தி நேர்ந்திருக்காது 

    நமது நீர்க்கோள் நம் கண்முன்பு மாறி வருகிறது.  அதனால் அநேக உயிரினப் பிறப்புகள் விளிம்பு முனையில் உள்ளன.   நாம் வாழும் பூகோளமானது நிறை குன்றிச் சிறிதளவு சிறுத்திருந்தால், கண்டங்களை நகர்த்தி, மலைகளை எழுப்பும் அடித்தட்டுப் பெயர்ச்சிகள் [Plate Tectonics] நேர்ந்திருக்கா !   அடித்தட்டு நகர்ச்சி இல்லையேல் வாயுச் சூழ்வெளி அமைப்பின்றி உயிரினங்களே பூமியில் தடம் வைத்து நடமாடி இருக்க முடியாது.

    புதிய ஆராய்ச்சியின்படி பூர்வீகத்தில் பூமிக்கு நேர்ந்த பூதப்பளு தாக்குதலால், அடித்தட்டு நகர்ச்சியும் தொடங்கி நமது நீர்க்கோள் உயிரன வசிப்புக்கு ஏற்ற நட்புக் கோளாய் மாறியது என்று தெளியாய் அறியப்படுகிறது.   சுமார் 3.26 பில்லியன் ஆண்டுகட்கு முன்னார், சுமார் 25 மைல் [60 கி.மீ.] அகலமுள்ள ஓரண்டம் பூமியில் எங்கோ மோதி, அதன் பூதள விளைவுச் சான்றுகள் தென் ஆப்பிரிக்கப் பகுதியில் இருந்தது தெரிகிறது.   அந்த  மோதலைப் பற்றி 2014 ஏப்ரலில் டோனால்டு லவ் [Donald Lowe] என்பவர்  பூதளவியல் வெளியீட்டில் [Journal of Geochemistry, Geophysics & Geosytems] எழுதியுள்ளார்.  அந்த யுகத்தில் உயிர் நுண்ணிகள் [Microbiological beings] மட்டும் இருந்ததாக அறியப் படுகிறது.   அவை அந்த மோதலில் பெரிதும் பாதிக்கப் பட்டதாகத் தெரிகிறது.   சுமார் 3 பில்லியன் ஆண்டுக்கு முன்புதான் அடித்தட்டுப் பெயர்ச்சியே ஆரம்ப மானது என்றும் டொனால்டு லவ் கூறுகிறார்.   தோன்றிய பூகோள   உயிரினங்கள்  ஏற்பட்ட அடித்தட்டு பெயர்ச்சி விளைவுகளுக்குத் தம்மைத் தகுதியாக்கிக் கொண்டன என்றும் கூறுகிறார்.

     

    Fig 2 Major Plates

     

    நாற்பது மில்லியன் ஆண்டுகட்கு முந்தி இந்திய உபகண்டம் வடதிசை நோக்கி நகர்ச்சி

    பாஸ்டன் மாஸ்ஸெசுஸெட்ஸ் தொழில் நுணுக்கக்  கூடத்தின்  விஞ்ஞான வல்லுநர்கள், இந்தியா ஆசியா வுடன் முட்டி மோதிய  அடித்தட்டு நகர்ச்சி 40 மில்லியன் ஆண்டுகட்கு முந்திதான் நிகழ ஆரம்பித்தது என்று   இப்போது கண்டு பிடித்துள்ளார்கள்.   இதுவரை 50 மில்லியன் ஆண்டுகட்கு முன்பு என்று கணிக்கப் பட்டிருந்தது.   சமீபத்தில் இமய மலைச் சரிவுகளில் தேடி அறிந்த மூலக / மூலக்கூறு உலோகச் சான்று களை வைத்து அந்த நிகழ்ச்சி 10 மில்லியன் ஆண்டுகட்குப்  பிந்தி [50-10=40] நேர்ந்திருக்க வேண்டும் என்று அறிவித்துள்ளார்கள்.   இமயமலைத் தொடர்களில் தற்போது  இரண்டு வெவ்வேறு அரங்குகளில் எடுத்த மாதிரிப் பாறைகளை  ஆராய்ந்ததின் விளைவுகள்தான் இந்த முடிவை வெளியிட ஆதாரமாக இருந்துள்ளன. இப்போது நாம் காணும் இந்தியா 50 மில்லியன் ஆண்டுகட்கு முன்பு சிறிய பரப்புள்ள  உபகண்டமாய் இருந்திருக்கும். இந்தியாவின் எத்தனை வடபுறப் பரப்பளவு யுரேசியக் கண்டத்தின் அடியிலே நகர்ந்துள்ளது என்று அறிந்து கொள்வது கடினம். ஆனால் இந்திய அடித்தட்டு எந்த வேகத்தில் நகர்கிறது என்று நுட்பமாய்த் தெரிவதிலும், எப்போது ஆசியத் தட்டுடன் மோதியது என்று தெரிவதின் மூலமும் விடை கிடைக்கும் என்று விஞ்ஞானிகள் நம்புகிறார். இமயத்தின் பல்வேறு சிகரங்கள் அவற்றின் கீழியங்கும் பூதப் பெரும் அடித்தட்டு நகர்ச்சி விசைகளால் எழுப்பப் பட்ட கோபுரங்களே.

     

    Fig 1 North America's Shaping

     

    முந்தைய கணிப்புகளின்படி இந்திய-யுரேசிய மோதல் விரைவான வேகத் தாக்குதல் ஏற்பட்டது சுமார் 50 மில்லியன் ஆண்டுகட்கு முன்பு நேர்ந்த தாகக் கருதப் பட்டது. இடையில் தூளாக்கப்பட பாறைகளே பிறகு இமயமலைச் சிகரமாக உயர்ந்தன என்பது மாதிரி ஆதாரங்களை வைத்து ஊகிக்கப்படுகிறது. இந்தப் பேரளவு மோதலே அடித்தட்டு நகர்ச்சி தாக்கங்களில் பெரும் கொந்தளிப்பு நிகழ்ச்சியாக கருதப் படுகிறது. அந்த அசுர மோதலில் பெரும்பான்மையான இந்தியப் பகுதி யுரேசியத் தட்டின் கீழ் புகுந்துவிட்டது என்று ஊகிக்கப் படுகிறது.  இந்திய-யுரேசிய மோதலை உறுதியாகத் தெரிந்து கொள்ள அதுபோல் சமீபத்தில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தை விஞ்ஞானிகள் ஆராய்ந்தனர். கடந்த 2 மில்லியன் ஆண்டுகளாக ஆஸ்திரேலியக் கண்டத்தின் அடித்தட்டு அருகில் உள்ள “சுந்தா வளைவு” [Sunda Arc] என்னும் பற்பல தீவு மந்தைகளைத் மோதி வருகின்றன. அந்த மோதல்களை ஆராய்ந்து, முந்தைய இந்திய மோதல்கள் எப்படி நேர்ந்தன என்று கண்டறிந்தனர்.

     

    Fig Zigzaw Puzzle

     

    வட அமெரிக்காவும், ஐரோப்பாவும் எதிர்ப்புறம் மெல்ல மெல்ல நகர்ந்து இடைவெளியை அகலமாக்கி வருகின்றன! அமெரிக்காவில் காலிஃபோர்னியா கடற்கரையில் உள்ள லாஸ் ஏஞ்சலஸ் நகரம் வடபுறமாகச் சரிந்து கொண்டிருக்கிறது! மைய அட்லாண்டிக் கடற்தட்டுப் பிறழ்ச்சிப் பீடம் [Mid-Atlandic Tectonic Plate Ridge] குறுக்கே வெட்டிச் செல்லும் ஐஸ்லாந்து தீவின் அருகில் உள்ள சூர்ட்ஸி [Surtsey, Iceland] என்னும் தீவு 1963 நவம்பர் 14 இல் வட அட்லாண்டிக் கடலில் திடீரென எழுந்த எரிமலையால் புதிதாகத் தோன்றியது! ‘கடற்தளங்கள் நீட்சியைக் கண்டுபிடித்து விளக்குவது நம் கையில்தான் இருக்கிறது. மைய அட்லாண்டிக் பிறழ்ச்சிப் பீடத்தின் இருபுறமும் உள்ள கடற்தளம் ஆண்டுக்கு சுமார் ஓரங்குல நீளம் நகர்ந்து கொண்டு வருகிறது. கடற்துளையில் எடுத்த மாதிரிகள் வடிகால் புழுதிக்கும், அடிக்கடற் பாறைக்கும் இடையில் உள்ள எல்லையைக் காட்டின. அத்துடன் அவை எத்துணை இளைய பருவத்தை உடையவை என்று வயதைக் காட்டி, அடிக்கடல் பூர்வப்படிவங்கள் [Undersea Basement Fossils] வெஜினரின் [Alfred Wegener (1880-1930] மகத்தான கண்டங்களின் புலப்பெயர்ச்சி நியதியை மெய்ப்பித்தது ‘.

    டாக்டர் ஆர்தர் மாக்ஸ்வெல் [Co-Leader, Wood Hole Oceanographic Institution]

     

    ‘ஆறு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னே மத்தியதரைக் கடல் பிரதேசம், நீரில்லாத இரண்டு மைல் ஆழக் குழியாக உப்புக் கலவைப் பொருள் மிகையாகக் கொண்டிருந்தது. அட்லாண்டிக் கடலை ஜிப்ரால்டர் பெரு மலைத்தொடர் மறைத்து, ஒருசில நதிகள் மட்டும் சேரும் மத்திய தரைக் கடல் வெள்ளம் அனைத்தும் ஆவியாகப் போனது. கப்பலின் துளைக்கருவி வெகு ஆழத்தில் தோண்டிப் பார்த்ததில், பல பகுதிகளில் பாலைவன வெப்பத்தில் காய்ந்துபோன ஆயிரக் கணக்கான அடி உயர உப்புக் குளங்களும், ஏரிகளும் காணப்பட்டன ‘.

    டாக்டர் வில்லியம் ரயான், [Glomar Challenger Deep Sea Exploration (1970)]

    அட்லாண்டிக் பெருங்கடல் மெதுவாக அகன்று வருகிறது என்று கண்டுபிடிக்கப் பட்டுள்ளது! ஆனால் பசிபிக் பெருகடல் மெதுவாகக் குறுகிக்கொண்டு வருகிறது! ஈரோப்பில் இருக்கும் ஆல்ஃப்ஸ் மலைத்தொடர் வளர்ச்சியாகி உயரம் அதிகமாகிக் கொண்டே போகிறது! பூதக் கண்டம் ஆஃப்பிரிக்கா செங்கடல் வடமுனையில் பிளக்கப் போகிறது!

    Half Globe

    இமாலயச் சிகரங்களை இந்தியாவின் கனத்த உபகண்டம்  அடித்தட்டுக்கு மேல் புகுத்தி, அழுத்தி அவற்றின் உயரத்தை மிகை யாக்கிய வண்ணமா யிருக்கின்றன! ஹவாயி தீவுகள் வடமேற்குத் திசையில் மெதுவாகப் பெயர்ந்து ஜப்பான் தீவுகளை நோக்கிச் செல்கின்றன! வட அமெரிக்காவும், ஐரோப்பாவும் எதிர்ப்புறம் மெல்ல மெல்ல நகர்ந்து இடைவெளியை அகலமாக்கி வருகின்றன! அமெரிக்காவில் காலிஃபோர்னியா கடற் கரையில் உள்ள லாஸ் ஏஞ்சலஸ் நகரம் வடபுறமாகச் சரிந்து கொண்டிருக்கிறது! மைய அட்லாண்டிக் கடற்தட்டுப் பிறழ்ச்சிப் பீடம் [Mid-Atlandic Tectonic Plate Ridge] குறுக்கே வெட்டிச் செல்லும் ஐஸ்லாந்து தீவின் அருகில் உள்ள சூர்ட்ஸி [Surtsey, Iceland] என்னும் தீவு 1963 நவம்பர் 14 இல் வட அட்லாண்டிக் கடலில் திடாரென எழுந்த எரிமலையால் புதிதாகத் தோன்றியது!


    தென்துருவத்தில் இருக்கும் அண்டார்க்டிகாவில் முதலில் 1967 ஆண்டிலும், அடுத்து 1969 ஆண்டிலும் நெடுத்தொடர் மலைகளின் [Transantarctic Mountains] பனிபாறைகளில் டைனோசார்ஸ் காலத்திய நிலத்துறை விலங்குகளின் பூர்வப்படிவத் துணுக்குகளைக் [Fossil Fragments of Land Creatures] கண்டுபிடித்து, அமெரிக்க தேசீய விஞ்ஞான அறக்கூடம் [National Science Foundation] உளவு செய்தது.

     

    Vaious Zones

     

    அந்த மாதிரிகளில் ஒன்று செம்மறி ஆடு போல் ஊர்ந்திடும் விலங்கான லிஸ்டிரோசாரஸ் [Lystrosaurus]. அண்டார்க்டிகாவில் முதன்முதல் கண்டுபிடிக்கப் பட்ட முதுகெலும்புள்ள பூர்வ மூலப்படிவம் [Index Fossil] அந்த விலங்கு. அந்த விலங்குகள் ஆஃபிரிக்கா, இந்தியா, சைனா ஆகிய நாடுகளில் 180-225 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்ததாக அறியப்படுகின்றன.


    குலோமர் சாலஞ்சர் கடற்துளைக் கருவி 1968 ஆம் ஆண்டு போட்ட முதல் துளையில் மெக்ஸிகோ வளைகுடாவில் 12,000 அடி ஆழத்தில் நுழைந்து பெட்ரோலியம் கச்சா ஆயில் இருப்பதைக் கண்டுபிடித்தது! இதுவரைக் கடலில் இத்தனை ஆழத்தில் ஆயில் ஒளிந்துள்ள தென்று யாரும் ஊகித்தது கூட இல்லை! மூன்றாவது துளையை அட்லாண்டிக் கடற்தளத்தில் தோண்டி, அட்லாண்டிக் கடல் மெய்யாக அகன்று வருகிறது என்று கண்டு பிடித்தது. 1968 ஆண்டு இறுதியில் ஆஃபிரிக்காவின் மேற்திசையில் சென்று, மைய அட்லாண்டிக் கடற்தட்டுப் பீடத்தின் தென்புற மிருந்து துவங்கி இருபுறமும் தொடர்ந்து துளைக்கு மேல் துளையிட்டு மாதிரிகளைச் சோதித்து மகத்தான கடற்தட்டு மெய்ப்பாடுகளைக் கண்டு பிடித்தது. குலோமர் கப்பல் நான்கு வருடங்களாகப் பணி செய்து சுமார் 400 துளைகளைக் கடற் பாறைகளில் தோண்டி பல அரிய புதிய பூகோளச் செய்திகளைக் கூறி யிருக்கிறது. உலகக் கண்டங்களை விட, கடற்தளங்கள் இளைய காலத்தவை என்று கண்டுபிடித்துள்ளது. பூர்வ வடிகால் புழுதிகள் [Oldest Sediments] 160 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்புதான் உண்டாகி யிருக்கின்றன என்று கண்டுள்ளது.அதற்கு முரணாகச் சமீபத்தில் உளவிய கிரீன்லாந்தின் பாறைகள் சுமார் 4 பில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்று காட்டி யுள்ளது. பூகோள விஞ்ஞானிகள் தற்போது பூமியின் முழு வயதை 4.5 பில்லியன் ஆண்டாகக் கணிக்கிறார்கள். ஆனால் பூகோளக் கடற்தளத்தின் வயதை சுமார் 180 மில்லியன் ஆண்டாகத்தான் மதிப்பிடுகிறார்கள். 1970 இல் குலோமர் கப்பல் ஆய்வாளர்கள் ஆஃபிரிக்கா கண்டம் வடதிசை நோக்கி மெதுவாக நகர்ந்து, மத்தியதரைக் கடல் அகலத்தைக் குறுக்கி வருகிறது என்று நிரூபித்திருக்கிறார்கள். அந்த நகர்ச்சியால் கடற்தட்டுகள் பிறழ்ந்து, எப்போதாவது ஸிசிலியில் உள்ள எட்னா சிகரத்தில் [Mount Edna, Sicily] எரிமலைக் குமுறலையும், கிரீஸ், துருக்கி ஆகிய நாடுகளில் நில நடுக்கத்தையும் உண்டாக்குகின்றன! படிப்படியாக அழுத்தி மத்திய தரைக் கடற்தட்டு மடங்கி ஆல்ஃப்ஸ் மலைத் தொடரை உயர்த்திக் கொண்டே போகிறது என்றும் கூறி யிருக்கிறார்கள்!

    சுனாமி உண்டாக்கிய சுமாத்திரா கடற்தட்டுப் பிறழ்ச்சி:

    இந்தோனேசியாவுக்கு மேற்கே சுமாத்திரா தீவுக்கு அருகே கடற்தளத்தில் அதே கோணத்தில் சாய்திருக்கும் சுமாத்திர நிலநடுக்கப் பழுது [Sumatran Fault] சுமார் 1100 மைல் நீளத்தில் இருப்பதாக அறியப்படுகிறது. 2004 ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதி வெடித்த கடற்தள பூகம்பத்தில் பூதவடிவில் எழுந்த சுனாமி கால் மில்லியன் நபர்களைக் கொன்றதோடு, பனிரெண்டு நாட்டுக்குக் கடற்கரை நகரங்களைத் தகர்த்து விட்டது.

     

    நிலநடுக்கத்தின் போது மாபெரும் ஆற்றல் மிக்க அசுர சுனாமியை எழச்செய்த கடற்தள முறிவின் நீளம்: சுமார் 700-800 மைல், அகலம்: 60 மைல்! அதாவது 48,000 சதுர மைல் [800×60] பரப்பும், பல ஆயிரம் அடி ஆழமுள்ள கடல் வெள்ளத்தை செங்குத்தாகத் தூக்கிப் பல முறைக் குலுக்கிப் போட்டுச் சுனாமிப் பேரலைகள் கரைநோக்கி அடுத்தடுத்துப் படையெடுத்துள்ளன! அபார ஆற்றல் கொண்ட அந்த அசுர நிலநடுக்கத்தைத் தூண்டிய கடற்தட்டுப் பிறழ்ச்சிப் பழுது [Plate Tectonic Fault] சுமாத்திரா பழுது! பல்லாண்டு களாக இக்கடற்தட்டுப் பழுது எண்ணற்ற நிலநடுக்கங்களை உண்டாக்கியுள்ள பூகம்பத் திடலாக இருந்து வருகிறது. 1833 ஆம் ஆண்டில் அதே பழுதுத் தொடரில் மிகப்பெரும் பூகம்பம், Mw:9 [Mercalli Scale] அளவு நிர்ணயத்தில் எழுந்து பேரழிவு செய்துள்ளது.. சுமாத்திரா தீவு 1100 மைல் நீளமும், 250 மைல் அகலமும் கொண்டது. தீவுக்கு மேற்கே 180 மைல் தூரத்தில் அதன் முழு நீளத்திற்கும் இணையாக, ஒரு பயங்கர நில அதிர்வுப் படுகுழி காணப் படுகிறது. சுமாத்திரா பூகம்ப பழுதுக்குழி [Sumatran Fault Trench] குமுறிக் கொண்டிருக்கும் உலகக் கடற்தளப் பிறழ்ச்சிக் குழிகளிலே மிகப் பெரியது. அன்னத்தின் கழுத்துபோல் வளைந்த அந்தப் பூகம்ப பழுது 1100 மைல் நீண்ட தாக தீவுக்கு இணையாகக் கடற்தளத்தில் தோன்றி யிருக்கிறது. கடற்தட்டுத் திணிப்பால் [Ocean Plate Subduction Process] வளர்ந்திருக்கும் சுமாத்திராவின் மலைத்தொடரும், பழுதுக் குழிக்கு இணையாக மலைப் பாம்புபோல் படுத்துக் கிடக்கிறது!

     

    Fig Drift Maps

     

    மெஸோசாயிக் யுகத்தின் [Mesozoic Era] ஆரம்ப காலத்தில், அதாவது 240 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு குமுறிக் கொண்டிருந்த கடற்தட்டுத் திணிப்பு அரங்கத்தில் [Subduction Zone], சுமாத்திரா தீவு அமைந்துள்ளது. அந்த நாட்டிய அரங்கம் சுமாத்திரா தீவு போல் இணை யாகச் சாய்ந்த கோணத்தில் நீண்டு வளைந்துள்ளது. பல மில்லியன் ஆண்டுகளாக படிப்படியாகக் கடற்தட்டுத் திணிப்பால் உண்டான கருங்கல் குன்றுகளில் மாதிரிகளை எடுத்து ஆராய்ந்ததில் கீழிருக்கும் கடற்தட்டின் உயர அளவுகளையும், பண்புகளையும் கண்டிருக் கிறார்கள். அவை யாவும் திணிப்பைச் சார்ந்த கருங்கல் வகையான, நிலநடுக்கத் தன்மை கொண்ட கால்க்-ஆல்கலைன் ரகத்தைச் [Subduction Related I-type, Volcanic Arc, Calc-Alkaline type] சேர்ந்தவை.

     

    கருங்கல் மாதிரியில் உள்ள ஸ்டிராஞ்சியம் ஏகமூலத்தின் ஆதி விகிதத்தை [Strontium Isotope Initial Ratio] உளவு செய்தால், திணிப்புத் திடல் கலந்துள்ள பூதளக் குழம்பின் மேற்தட்டு பகுதியைச் [Magmas from Upper Mantle with Subduction Contamination] சேர்ந்ததாக அறியப் படுகிறது. ஆர்கான் ஏகமூலங்கள் [Ar40-Ar39 Dating], ருபீடியம், ஸ்டிராஞ்சியம் கதிரியக்கத் தேய்வு காலத்தை [Rubidium-Strontium (Rb-Sr) Dating] ஆராய்ந்து, சுமாத்திரா குன்றுகளின் கருங்கல் மாதிரிகளின் வயதைக் காண முடிந்தது. கருங்கற்கள் 5.5 முதல் 192 மில்லியன் ஆண்டு வயதுகளைக் கொண்டிருந்தன. [Sulit Granite: 192 Ma], [Lassi Pluton: 52 Ma], [Lolo Pluton: 12 Ma], [Sungaipenuh Granite: 5.5 Ma] [Ma (Million Years Ago)]. சுமாத்திரா பாறைகளில் காந்தசக்தி ஜுராஸிக் யுகத்தின் [Jurassic Era] ஆரம்பத்தில் சுமார் [193-15 Ma] மில்லியன் ஆண்டுகளுக்கு இடையிடையே ஏற்பட்டுள்ளது என்பதும் அறியப்பட்டது.

     

    Conitinental drift


    கண்டத் தீவுகளுக்கும் கடற் தீவுகளுக்கும் உள்ள வேறுபாடுகள்:

    உலகிலே உண்டாகி யிருக்கும் தீவுகளை இரண்டு விதமாகப் பிரிக்கலாம். 1. கண்டத் தீவுகள். 2. கடற் தீவுகள். கண்டத் தீவுகள் [Continental Islands] என்றால் என்ன என்பதை முதலில் பார்ப்போம். பெருங் கண்டத்துடன் அதன் அருகே தணிந்த கடல் ஆழத்தில் தளப்பரப்பால் இணைக்கப்பட்ட தீவே, கண்டத் தீவு என்று அழைக்கப்படுகிறது. இலங்கைத் தீவு உப கண்ட மான இந்தியாவின் கண்டத் தீவு என்று சொல்லலாம். கடந்த 20,000 ஆண்டுகளில் பெருங் கண்டத்துடன் பிணைந்து கொண்ட தீவுகளே அப்பெயரைப் பெறுகின்றன. கண்டத் தீவுகளில் உள்ள சில செடி கொடிகள், உயிர் ஜந்துகள் [Fauna & Flora, Species] பெருங் கண்டத்தில் உள்ளவை போல் இருக்கின்றன.

     

    குறிப்பிட்ட இடத்தில் பிறந்து விருத்தி யாகும் ஜந்துகள் [Endemic Species] அங்கு இருப்பது அபூர்வந்தான். கடற் தீவுகள் [Ocean Islands] என்றால் என்ன ? பூமியின் உட்கருவிலிருந்து கடற்தளத்தில் துளையிட்டு எரிமலைகள் சீறி எழுந்து, கடல் ஆழத்தில் உண்டாக்கப்பட்ட தீவுகள் இப்பெயரால் அழைக்கப்படுகின்றன. ஹவாயி தீவுகள், ஐஸ்லாந்து தீவுகள் ஆகிய வற்றை இவற்றுக்கு உதாரணமாகக் கூறலாம். கண்டங்களை ஒட்டாமல், கண்டங் களுக்கு அப்பால் உண்டானவை இத்தீவுகள். மைய அட்லாண்டிக் பிறழ்ச்சித் தட்டுக் கடற்பீடம் குறுக்கே செல்லும் ஐஸ்லாந்தில் உள்ள சூர்ட்ஸி [Surtsey, Iceland] என்னும் தீவு 1963 நவம்பர் 14 இல் வட அட்லாண்டிக் கடலில் எழுந்த எரிமலையால் புதிதாகத் தோன்றியது! அத்தீவுகள் எப்போதும் ஒரு பெருங் கண்டத்துடன் பிணைக்கப் படுவதில்லை. செடி, கொடிகள், விலங்கினங்கள் கடல் வழியாகக் கொண்டு செல்லப்பட வேண்டும். கடல்மீது வந்த தாவர இனங்கள், விலங்கினங்கள் மட்டுமே அத்தீவுகளில் பிழைத்திருக்க முடியும். நிலப் புதுநீரில் வளரும் மீனினம் போன்ற பலதரப்பட்ட உயிர் ஜந்துகள் அந்த தீவுகளில் கிடையா. கண்டத்திற்கு அப்பாலிருக்கும் கடற்தீவுகளில் புத்தின ஜந்துகள் வளர்ச்சிக்கு மையமாக [Centres of Speciation] இருக்கின்றன. குறிப்பிட்ட இடவிருத்தி ஜந்துகள் [Endemic Species] வளர இத்தீவுப் பகுதிகளின் சூழ்நிலைகள் உதவுகின்றன.

    Carbon Cycle in the Earth

    கடலில் மூழ்கிய தமிழகத்தின் தென்திசைக் குமரிக் கண்டம்

    1960 ஆம் ஆண்டில் அமெரிக்கா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் நிதிக்கொடை அளித்து, இந்து மாக்கடலில் கடற்தள ஆராய்ச்சியாளர் செய்த உளவில், தமிழகத்தின் கன்னியா குமரிக்குத் தெற்கே இரண்டு கண்டங்கள் இருந்திருப்பதைக் கண்டுபிடித்திருக் கிறார்கள். முதலாக கப்பலில் சென்று ஒலிச் சமிக்கை அனுப்பி உளவு செய்ததில் [Ultra-Sonic Probing] தென்பகுதிக் கடலடியில் நீண்ட மலைத்தொடர் ஒன்று இருப்பதைக் கண்டார்கள். அத்திட்டம் ஏனோ 1960 ஆண்டுக்குப் பிறகு தொடரப்பட வில்லை! 1960-1970 ஆண்டுகளில் தயாரிக்கப்பட்ட இந்து மாக்கடல் கடற்தள வரைப் படங்களில், குமரிக் கண்டத்தின் பூர்வீக அமைப்பு நிலை காணப்படுகிறது. அரபிக் கடலுக்குத் தெற்கில், லட்சத் தீவுகள் நீட்சியில் மால்டிவ் தீவின் வடக்குப் பகுதியுடன் பிணைந்து, தெற்கில் சாகோஸ் ஆர்கிபிலாகோ [Chagos, Archipelago] வரை சுமார் 2000 மைல் தூரம் வரைக் குமரிக் கண்டம் இருந்திருப்பதாகத் தெரிகிறது. பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்த [கி.மு.8000] பனி யுகத்தின் போது [During the Ice Age] இந்து மாக்கடலில் கடல்நீர் மட்டம் குன்றிக் குமரிக் கண்டம் முழுவதும் புறத்தே தெரியும்படி மேலாக உயர்ந்திருந்தது.

     

     

    பனி யுகத்தில் எங்கோ பனி திரண்டு நீர் சுண்டிப்போய் உலகெங்கும் கடல் மட்டநீர் தணிவாக இருந்தது. அப்போது உலகத்தில் கண்டங்கள், தீவுகள் பல பகுதிகளில் பிணைந்திருந்தன! ஐரோப்பாவுடன் இங்கிலாந்து, பிளாரிடாவுடன் கியூபா தீவு, ஆஸ்திரேலியாவுடன் பப்பா நியூகினி தீவு, தமிழகத்துடன் இலங்கைத் தீவு, சுமாத்திரா ஜாவா போர்னியோ தீவுகள் தென் கிழக்காசியாவின் பெருந்தளத்துடன் இணைந் திருந்தன என்று கருதப்படுகிறது! இலங்கை தமிழகத்துடன் இணைந்திருந் ததற்கு, இப்போதும் தெரியும் தணிவாக உள்ள கடல்மட்ட நீர் நிலையே சான்றாக இருக்கிறது. மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்து வால்மீகி முனிவர் எழுதிய இராம கதையில், அனுமார் படையினர் பாறாங் கற்களைக் கொண்டு வந்து, ஈழத்தின் தணிந்த கடற்தள மீது கற்பாலம் கட்டிக் கடந்திருப்பது அறியப்படுகிறது. பனியுகம் மாறி வெப்பம் மிகையான காலத்தில் பனிப் பாறைகள் உருகி கடல் மட்டம் மெதுவாக படிப்படியாக உயர்ந்து குமரிக் கண்டம் மூழ்கிப் போயிருக்கலாம் என்று உறுதியாக நம்ப இடமிருக்கிறது. அதன் விளைவில் குமரிக் கண்டம் சிதறி ஆஃபிரிக்கா முதல், ஆஸ்திரேலியா வரை உள்ள மடகாஸ்கர், லட்சத் தீவுகள், அந்தமான் தீவுகள், இந்தோனியாவின் தீவுகள் போன்றவை பிரிவு பட்டன என்று ஒரு சாரார் குறிப்பிட்டுள்ளார்கள்.

     

    Fig Mosaic Plates

    ‘லெமூரியா கண்டம் ‘ [Lemuria Continent] இந்து மாக்கடல் பகுதியில் இருந்திருக்க வேண்டும் என்று முதலில் கூறியவர் 19 ஆம் நூற்றாண்டு பூதளவாதி பிலிப் ஸ்கிலேட்டர் [Geologist, Philip Sclater]. விக்டோரியன் டார்வின் நியதியைப் பின்பற்றுவோர் மடகாஸ்கர் தீவில் மட்டும் தனித்து வாழும் லெமூர் குரங்குகளை [Lemurs] எடுத்துக் காட்டி யிருக்கிறார்கள். அவற்றின் பூர்வப்படிவப் பிரதிகள் [Fossils of Lemurs] ஆஃபிரிக்காவிலும், தென் கிழக்காசியாவிலும் தற்போது கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. ஜெர்மன் டார்வின்வாதியான ஏர்னெஸ்ட் ஹேக்கல் [Ernst Haeckel] ஆதி லெமூரியாவின் உயிர் மூலவிகள் [Genes] யாவும் இந்து மாக்கடலில் மூழ்கி மடிந்ததால் காணாமல் போயின என்று கூறியதை எடுத்துக் கொண்டு பிலிப் ஸ்கிலேட்டர் லெமூரியா கண்டம் (குமரிக் கண்டம்) ஒன்று ஆங்கே இருந்திருக்க வேண்டும் என்று அறிவித்திருக்கிறார்.

     


    ++++++++++++++++++++++++++

    From: http://www.sepiamutiny.com/sepia/archives/004456.html

     

    (தொடரும்)

    தகவல்

    1. The Continental Mosaic -Reader ‘s Digest Atlas of the World [1987]

    2. Hutchinson Encyclopedia of the Earth By Peter Smith [1985]

    3. Earth ‘s Restless Crust -ABC ‘s of Nature, Reader ‘s Digest [1984]

    4. The Long Journey of Continents By: Ronald Schiller -The Marvels & Mysteries of The World Around US, Reader ‘s Digest Publication [1972]

    5. Continental Drift & Plate Tectonics [www.zephryus.co.uk/geography/home.html] (Mar 20, 2003)

    6. Pangaea, Gondwana, Laurasia, Plate Tectonics, Alfred Wegener From: Wikipedia Encyclopedia

    7. Theory of Continental Drift By: Jim Cornish, Newfoundland, Canada (Sep 2001)

    8. Continental Frift, Geology & Oceanography. [Several Internet Articles]

    9. Everyday Geography By: Kevin McKinney (1993)

    10  Eduard Suess, Austrian Scientist From: Wikipedia Encyclopedia

    11 Our Changing Earth By: Tusco Wilson Ph.D. Frontiers of Science, National Geographic Society [1982]

    12 This Changing Earth By: Samuel Matthews, National Geographic Society [Jan 1973]

    13 Our Restless Planet Earth Rick Gore By: National Geographic Society [Aug 1985]

    14 Fossils, Annals of Life Written in Rocks By: David Jeffery, National Geographic Society [Aug 1985]

    15 The Earth ‘s Fractured Surface By: National Geographic Society [1995]

    16 Physical Earth By: National Geographic Society [1998]

    17 The Shaping of a Continent, North America ‘s Active West [1995]

    18 National Geographic Picture Atlas of our World [1990]

    19 Differences Between Continental & Oceanic Islands [www.abdn.ac.uk/zoohons/lecture1]

    20 The Evolution of the Sumatran Earthquake Fault System, Indonesia, Andy McCarthy. Ph.D. [July 9, 2002]

    21 Isotopic Dating of Sumatran Fault System By: Imtihanah & MPhil

    22 The Sumatran Fault System By Professor Kerry Sieh & Danny Natawidjaja [Nov 1999]

    23 Kumari Kandam & Lemuria [http://en.wikipedia.org/wiki/Lemuria_(continent)

    24 Kumari Kandam By: Chitta Ranjan Myilvaganan, Sydney, Australia. [Jan 30, 2005]

    25. http://www.sepiamutiny.com/sepia/archives/004456.html  (May 22, 2007)

    26. http://www.crystallotus.com/Lemuria/04.htm

    27.  http://en.wikipedia.org/wiki/Lemuria_(continent) [July 3, 2011]

    28.  http://en.wikipedia.org/wiki/Kumari_Kandam [July 7, 2011]

    29.  India Joined with Asia 10 million years later than previouly thought By:  Jennifer Chu, MIT News Office, Boston, MA [February 14, 2013]

    30. http://en.wikipedia.org/wiki/Continental_drift  [February 15, 2013]

    31. http://education.nationalgeographic.com/education/encyclopedia/continental-drift/?ar_a=1

    32.  https://mail.google.com/mail/?ui=2&shva=1#all/13d12f58198ec527  [Long-Lost Continent Found ? Fragments Of ‘Mauritia’ May Be Buried Beneath Indian Ocean]

    33.  http://www.huffingtonpost.com/2013/02/25/lost-continent-mauritia-found-indian-ocean_n_2759797.html  [Long-Lost Continent Found ? Fragments Of ‘Mauritia’ May Be Buried Beneath Indian Ocean]

    34.  http://education-portal.com/academy/lesson/plate-tectonics-a-unified-theory-for-change-of-the-earths-surface.html#lesson

    35   http://www.astrobio.net/news-exclusive/plate-tectonics-could-be-essential-for-life/  [February 19, 2009]

    36.  https://www.google.ca/search?client=opera&hs=HAx&q=Plate+tectonics+and+life+on+earth&spell=1&sa=X&ei=GNyAU6CVJYaq8AGC_4GgAg&ved=0CCoQvwUoAA&biw=1361&bih=89

    37.  http://www.ethlife.ethz.ch/archive_articles/120223_Simulation_subduktion_su/index_EN  [February 23, 2012]

    38.  http://www.dailygalaxy.com/my_weblog/2014/05/without-plate-tectonics-life-on-earth-might-never-have-gained-a-foothold-harvard-smithsonian-center-.html  [May 7, 2014]

    **********************

    S. Jayabarathan   [jayabarathans@gmail.com  (May 24, 2014)

    http://jayabarathan.wordpress.com/

    +++++++++++++++++++++

     

    Attachments area

    Plate Tectonics in action

    Plate Tectonics

    Formation of The Himalayas
    Share
  • அழைக்கும் தொலைவில் ஆண்டவன்

    இசைக்கவி ரமணன்

    நீ வேண்டும்! எனக்கு
    நீதான் வேண்டும்!!

    அம்மா, வாசலில் விளையாடிக் கொண்டிருக்கும் மகனை அவசரமாக அழைக்கிறாள். `வருகிறேன்,` `வந்துகொண்டிருக்கிறேன்` என்றா சொல்கிறான்? `இதோ வந்துட்டேம்மா!` என்றல்லவா கூவி, தனது கூவல் முடியுமுன்னே மூச்சிரைக்க அம்மாவின் முன்னே வந்து நிற்கிறான்? உலகத்தில் அன்றாட நடப்பே இப்படி இருக்க, எல்லோர்க்கும் தந்தையான இறைவன் அழைத்தால் வரமாட்டானா என்ன?

    siva (4)இறைவன் யார்? எங்கும் இருப்பவன். எப்போதும் இருப்பவன். எல்லாமாகவும் இருப்பவன். எல்லோருக்கும் சம அளவில் இருப்பவன். மனிதர்கள், தேவர்கள், ஏன், அரக்கர்கள், விலங்கினங்கள் போன்ற எல்லா உயிர்களுக்கும் சம தொலைவில் இருப்பவன். எல்லோர்க்கும் தந்தை இறைவன்! அவன் நல்லோர்க்கும் தீயோர்க்கும் தலைவன்! ஆம், கடவுள் அனைவருக்காகவும் இருக்கிறான் என்பது மட்டுமல்ல. ஒவ்வொருவருக்கும் அவன் முழுமையாக இருக்கிறான்! `அவன் எனக்கே எனக்கு!` என்று ஒவ்வொருவரும் உரிமை கொண்டாடும் வண்ணம் இருக்கிறான். (‘’Not only God is available for all, all of God is available for everyone!’’) அப்படி இருப்பவனை அழைப்பதென்ன, அவன் அதன் பிறகு வருவதென்ன?

    இதயக் கமலத்தில் அவன் இருக்கிறான் என்பதை உணர்வதே அழைத்தல்! உணர்ந்த அந்தக் கணத்தில், அவன் உள்ளில் தெரிவான். வெளியில் விரிவான். உள், வெளி என்னும் கோடழிந்து, ஒன்று பலவாக நின்று விளங்குவதை உணர்த்துவான். திருவள்ளுவர், `மலர்மிசை ஏகினான்,` என்று கடந்த காலமாகச் சொல்கிறார். காலம் என்கின்ற கட்டுப்பாடு கடவுளுக்கு ஏது? எல்லாவற்றையும் ஏற்கனவே ஆண்டு முடித்துவிட்டவன் என்பதால்தானே அவனை ஆண்டவன் என்கிறோம்? உள்ளே இருக்கிறான் என்று உணர்ந்த கணம், உள்ளக் கமலம் விரியும். அங்கே இறை, ஒளிமயமாக வீற்றிருப்பது தெரியும்! ஆக, ஏற்கனவே அங்கே அவன் இருப்பதனால்தான் `ஏகினான்`என்றார் வள்ளுவர்.

    மாணிக்க வாசகப் பெருமான், `அவனருளாலே அவன்தாள் வணங்கி,` என்னும் அமர வாசகத்தைச் சொல்வதற்கு முன்னால், அந்த அற்புத நிலைக்கான காரணத்தைப் பொன்னில் பொறிக்க வேண்டிய தேன்தமிழ்ச் சொற்களிலே சொல்கிறார், `சிவனவன் என்றன் சிந்தையுள் நின்ற அதனால்,` என்று. இந்த உணர்வுதான், சிவனையே நேரில் வரவழைத்தது. பரியை நரியாக்கி, அவருடைய உலகாய குற்றத்திற்காக அவருக்கு சிறைவாசத்தைத் தந்து, நரியைப் பரியாக்கி, அவருடைய மட்டற்ற சிவநேயத்திற்காக அவருக்கு சிவலோகமும் தரவைத்தது.

    அவன், இருக்கிறான். அவன், என் உள்ளத்தில் நன்றாக வீற்றிருக்கிறான் என்னும் நம்பிக்கையோடு, முழு உணர்வோடு, அவனே கதியென அழைத்தவர்களுக்கு அவன், `நண்பனாய், மந்திரியாய், நல்லாசிரியனுமாய், பண்பிலே தெய்வமாய், பார்வையிலே சேவகனாய்,` வந்து பணிவிடை செய்தான்! இன்றும் செய்து வருகிறான்!

    எல்லாம் அவனுடையதே என்பதனால் எதையும் அவனிடம் கேட்கலாம்தான். ஆனால், இரண்டு முக்கியமான விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும்:

    கேட்டதைக் கொடுத்துவிடுவான்
    கொடுத்தவுடன் மறைந்துவிடுவான்

    உலக வாழ்க்கையில் கூட, நாம் எவரிடம் என்ன கேட்கவேண்டும் என்று சிந்தித்துத்தானே கேட்கிறோம்? சச்சின் டெண்டுல்கரிடம் சங்கீதம் கற்றுக்கொள்ளப் போகிறோமா? பூக்கடையில் நெய்வாங்கப் போகிறோமா? எங்கே என்ன கிடைக்கும், எவரிடம் எதைக் கேட்கலாம் என்ற அறிவும் இங்கிதமும் நமக்கு இல்லாமலில்லை. ஆனால், அருகம் புல்லிலிருந்து ஆன்ம விடுதலை வரை, எதையும் வழங்கவல்ல இறைவனின் முன்னிலையில் இந்த அறிவும் இங்கிதமும் நம்மில் பெரும்பாலானவருக்கு இல்லை என்பதே உண்மை. உலக வாழ்வில் மண்டிக் கிடக்கும் கவலைகளும் கலகங்களுமே இதற்கு நிரூபணம்.

    ஒரு ஞானி சொல்கிறார், ‘The problem with desires is that they get fulfilled; if not today, tomorrow. So, one should be careful in desiring only desirable things!’ என்ன ஆழமான வாசகம்! ஆம், ஆசைகளில் இருக்கும் ஆபத்து, இன்றில்லையானால் அவை நாளையேனும் நிறைவேறிவிடும் என்பதுதான்! பல ஆசைகள் நம்மை பந்தத்தில் இறுக்கும். சில ஆசைகள் நம்மை விடுதலையில் உய்க்கும். `எனது தேசம் மேன்மை அடையவேண்டும், நான் வாழும் சமுதாயம் நலிவுகள் நீங்கி நலம்பெறவேண்டும்,` என்பன போன்ற ஆசைகள் ஒருவனை ஒருபோதும் கட்டுப்படுத்தாது. அல்லாமல், அதுவேண்டும் இதுவேண்டும் என்று வேண்டும்போது அவற்றைத் தந்துவிட்டு, அக்கணமே மறைந்துவிடுகிறான் ஆண்டவன் என்பதே சான்றோர்கள் நமக்குக் கூறியுள்ள எச்சரிக்கை.

    அவனிடம் அதையும் இதையும் கேட்காமல், அவன்தான் வேண்டும் என்று உறுதியாக நின்றால், அவன் வராமலிருக்க முடியுமா? தன்னைத் தராமல்தான் இருக்க முடியுமா?

    ஒரு பொருட்காட்சி. அம்மாவின் கையைப் பிடித்துக்கொண்டு உற்சாகமாகச் செல்கிறான் பையன். எதைப்பார்த்தாலும் வேண்டும்போல் தோன்றுகிறது. குடைராட்டினம், பஞ்சுமிட்டாய், பரிசல் போன்ற பொரித்த அப்பளம், இன்னும் என்னென்னவோ! பார்த்ததையெல்லாம் கேட்கிறான் குழந்தை. அம்மாவும் சலிக்காமல் வாங்கித் தருகிறாள்.

    திடீரென்று, கூட்டத்தில் பையன் அம்மாவின் பிடியிலிருந்து நழுவி, தொலைந்துபோய்விடுகிறான். அனைத்தாலும் கவரப்பட்ட அந்த அரங்கத்தில், எதுவுமே கண்ணில் படாமல் அவன் அம்போவென்று நிற்கிறான். அடிமனத்திலிருந்து துயரம் பொங்க ஓவென்று அழுகிறான். காவல் துறையினர் பார்க்கிறார்கள். இது அம்மாவின் பிடியைவிட்டுத் தொலைந்த குழந்தை என்பதை உடனேயே புரிந்துகொண்டு அதைச் சமாதானம் செய்ய முயல்கிறார்கள். `பையா, அம்மாவைக் கண்டுபிடிக்கலாம், இந்தா அப்பளம்.`

    — வேண்டாம், எனக்கு அம்மாதான் வேண்டும்

    `அம்மாவிடம் போகலாம் தம்பி, அழாதே, இந்தா பஞ்சு மிட்டாய்.`

    — வேண்டவே வேண்டாம் எனக்கு அம்மாதான் வேண்டும்

    `வா, குடைராட்டினத்தில் மூன்று சுற்று சுற்றலாம்.`

    — ஒண்ணுமே வேணாம், அம்மாதான் எனக்கு வேணும்….`

    இலவசமாகவும், நிறையவும் எதைக் கொடுத்தாலும் எதிலும் விருப்பமின்றி கண்ணில் தெரியாத அம்மா ஒன்றே குறியாகி அழுகிறது குழந்தை. இதைத்தான் ரவீந்திரநாத் தாகூர்,

    நீ வேண்டும்! எனக்கு
    நீதான் வேண்டும்!!

    என்று கீதாஞ்சலியில் இறைவனிடம் பாடுகிறார்.

    அவனிடமிருந்து பெறும் வேறு எதனாலும் நீடித்த இன்பமோ, நிலையான நிம்மதியோ கிடைக்கப்போவதில்லை. இதை நாம் உணரும் வரையில், கோரிக்கைகள் நம் உள்ளத்தில் அலையலையாகப் பெருகிக்கொண்டுதான் இருக்கும். கேட்டுக் கேட்டுப் பெற்றுப் பெற்று, எதிலும் திருப்தி வராமல், எதிலும் சலிப்பே நேரும்போதுதான் நாம் உள்ளே திரும்ப எத்தனிக்கிறோம். அதற்காகவே உள்ளே அவன் காத்திருக்கிறான்.

    நாம் என்ன கேட்டாலும் அளிக்கவல்லவன், எல்லாவற்றுக்கும் மேலான ஒன்றை நமக்கு வழங்குவதற்காகக் காத்திருக்கிறான், நாம் கேட்டால்! விழைந்தால்! அதுதான் வேண்டும் என்று அடம்பிடித்தால்! அதுதான் அவன்! எனவே, தாகூரின் பல்லவியை வாங்கிக்கொண்டு, நாம் இன்னும் இரண்டு வரிகளைச் சேர்த்துக் கொண்டு இப்படிப் பாடலாம்:

    வேறு
    நினைவறியாத
    நிலை விரும்பாத
    மனம் முழுதாக
    மலர்ந்திருக்கும், அந்த

    நீ வேண்டும்! எனக்கு
    நீதான் வேண்டும்!!

    அந்தக் குருட்டு தர்பாரில், அனைவரின் முன்னே அவமானப் படுத்தப்பட்டபோது, பாஞ்சாலி என்ன செய்தாள்? மந்திரங்களை ஜெபித்தாளா? தோத்திரங்களைச் சொன்னாளா? அரற்றினாளா? `கண்ணா! இது உனக்கு நியாயமென்று தோன்றுமானால், எனக்கும் இது சம்மதமே!` என்ற தெளிவில் சரணடைந்தாள். அந்தக் கணமே, ’ தம்பி கழற்றிடக் கழற்றிடத் துணிபுதிதாய், அவை வளர்ந்தன வளர்ந்தன வளர்ந்தனவே!` “நான் கடலில் எறியப்பட்டு, சுறாக்கள் என்னைக் கடித்துக் குதறவேண்டும் என்பதுதான் உன் விருப்பமென்றால் எனக்கது சம்மதமே,` என்னும் மனநிலைதான் சரணாகதி.

    `எது நடந்தாலும், நடக்காது போனாலும், அது இறைவா உன் சித்தம். அது என் நலன் கருதியே, என் நன்மைக்காகவே!` என்றிருப்பதே பக்தன், யோகி, ஞானி அனைவருக்கும் பொதுவான நிலை. அந்த நிலையில் இருந்து அழைத்தவர்களுக்குக் கடவுள் எப்போது கூப்பிடும் தொலைவில் பணிசெய்யக் காத்திருந்தான்!

    `அழைத்தால் வருபவனே ஆண்டவன்,` என்ற ஆந்திர வசனம்தான் எத்தனை உண்மை!

    Share
  • திருமால் திருப்புகழ் (93)

    கிரேசி மோகன்

    Mahavishnu on Anantha and Garuda. Oil and canvas. #Krishnafortoday Keshav
    Mahavishnu on Anantha and Garuda. Oil and canvas. #Krishnafortoday
    Keshav

    கண்ணன் திருப்புகழ்(வெண்பா)…. ————————————————————– ’’கண்ணன் அந்தாதி’’ ———————————–

    Gitamrita: the milk of the Upanishads. Watercolor. #krishnafortoday Keshav
    Gitamrita: the milk of the Upanishads. Watercolor. #krishnafortoday
    Keshav

    அலர்ந்திடும் செந்தா மரையாளுன், மார்பில், கிளர்ந்திடும் சந்தனச் சேற்றில், -விளைந்திட, பாற்கடல் மத்தியில், பாம்பணை மெத்தையில் ஊர்கலி தீர்த்துக்கொள், ஓய்வு….(71) ஓய்!உமக்கு, ஓய்வெடுக்கப் பாய்விரிப்பான்; ஆதிசேடன் சாய்ந்திட, சிம்மா சனமாவான்; -வேய்ந்த, குடையாவான் நின்றிட; காலணியாய்ப் போய்வர; கடனாயுன் வாழ்வைக் கொடு….(72) கொடுப்பதில் கர்ணன், எடுப்பதில் கள்ளன் அடித்துத் திருத்தலில், அன்னை, -மிடுக்குடன், ஆசை தொலைத்தவன், ஆட்டத் துணையாக, வேஷம் கலைத்திடும் விஷ்ணு….(73) விஷ்ணுவின் நாமங்கள், வேண்டும் பலனளிக்கும், உஷ்ண வினையை உருக்கிடும், -கஷ்டதசை, துஷ்டன், நமைக்கண்டு தூர ஒதுங்கிடும், நிஷ்டைக்(கு) இழுத்திடும் நூல்….(74) நூலறியேன், மண்ணளந்த தாளறியேன், மல்லாண்ட தோளறியேன், ஞானவிளக் காளறியேன், -மாலரியே, தேசிகனாய் வந்தெனக்(கு), ஆசை அடங்கவைத்து, ஊசிவாயில், ஒட்டகத்தை ஓட்டு….(75)….கிரேசி மோகன்…. ———————————————————————————————————————- படங்களுக்கு நன்றி: http://kamadenu.blogspot.in/2014_02_01_archive.html

    Share
  • வரைந்த ஓவியமும் வெண்பாவும்!

    கிரேசி மோகன்

     

    அவாவடக்கி சும்மா அமர்ந்த சிவனுக்கு
    சவால்விடு கின்றாள் சிவசக்தி, -குவாகுவாக்கள்(வேழன் +வேலன்)
    கேக்கிறார்கள் என்னை, குடும்பத் தலைவரெங்கே!,
    ஆக்கியசோ றுண்ணா(து) அடம்’’….கிரேசி மோகன்…

     

    crazy

     

     

    Share