எக்காலம்!…
செண்பக ஜெகதீசன்
எக்காலம்…
தன்னிகரில்லாத் தலைவர்களைத்
தமது இனமென்று
தலையில் தூக்கிவைத்து ஆடி,
சாதிச் சாயம் பூசி
சந்தியில் சிலையாய் நிறுத்தி,
காக்கை குருவிகளின்
கழிப்பிடமாய் ஆக்குவதும்..
கலவரத்தில் தாக்கப்படும்
இலக்காகிவிடாமல்
கம்பிவேலி போட்டுக் காப்பதுவும்..
சிலைக்கு விலையாகச்
சில உயிரை மாய்ப்பதுவும்..
இறந்துவிட்ட பெரியோரையும்
இனம்பார்த்து ஒதுக்குவதும்..
இப்படிப் பல
இனம்பிரித்து இனமழிக்கும்
மனிதர்கள்
இங்கே இருக்கும்வரை,
இயல்பு வாழ்வை
இனி மனிதன் பெறுங்காலம்
எக்காலம்…!