Blog

  • சராசரிகள்

    முகில் தினகரன்

    வழக்கத்திற்கு மாறாக பேருந்து நிறுத்தத்தில் கூட்டம் அதிகமாயிருக்க எனக்குள் ஏதோவொன்று பிறாண்டியது. கைகளைப் பிசைந்தபடி கலவர முகத்துடன் நின்று கொண்டிருந்த அந்தப் பெண்ணிடம் மெல்ல விசாரித்தேன்.

    ‘அதையேன் சார் கேட்கறீங்க?…மெயின் ரோட்டுல ஏதோ ஜாதிக் கட்சியோட பேரணியாம்…இந்த ரோட்டுக்கு இன்னும் ரெண்டு மூணு மணி நேரத்துக்கு பஸ்ஸே வராதாம்..கர்மம்..ஆபீஸ் முடிஞ்சு போகிற நேரத்தில்தானா இந்த சோதனையெல்லாம் வரணும்?…ச்சை’ சொல்லும் போது அஷ்டகோணலாய்ப் போனது அந்த அழகு முகம்.

    அவளைப் போலவே பல யுவதிகள் பஸ் இப்போதைக்கு வராதென்று தெரிந்தும் அது வரும் திசையை திரும்பித் திரும்பிப் பார்த்து திட்டிக் கொண்டிருந்தனர்.

    ‘ஏய்..நாம இப்படி நின்னுட்டிருந்தா நின்னுட்டே இருக்க வேண்டியதுதான்! டூவீலர்க போயிட்டுத்தானே இருக்கு? பாரு…எத்தனை ஆம்பளைங்க தனியாளா சிங்கிள்ஸ்லே போய்க்கிட்டிருக்காங்க!….அவங்களை நிறுத்தி லிப்ட் கேட்டா என்னடி?’ துணிச்சலாய்ப் பேசிய சுடிதார்ப்பெண் என் கவனத்தை ஈர்க்க, ‘அட…பரவாயில்லையே’ கவனிக்கலானேன்.

    சொன்னதோடு நில்லாமல் அந்தப் பேருந்து நிறுத்தத்தைக் கடந்து செல்லும் டூவீலர் ஆசாமிகளை குறுக்கே கை நீட்டி மறித்தாள்.

    ‘என்னம்மா…என்ன வேணும்?’ ஹெல்மட் தலையனொருவன் கத்தலாய்க் கேட்க,

    ‘சார்..இந்த ரோட்டுக்கு இப்போதைக்கு பஸ் வராது..பாருங்க எத்தனை லேடிஸ் பரிதாபமா நின்னுட்டிருக்காங்க…நீங்க தனியாத்தானே போறீங்க…யாராவது ஒருத்தருக்கு லிப்ட் கொடுத்து உதவலாமில்ல?’

    ‘வாட?;…லிப்ட்டா?..நோ…நோ..நமக்கு அந்தப் பழக்கமெல்லாம் கெடையாது…அதுக்குன்னு எவனாச்சும் வருவான் அவன்கிட்டக் கேளுங்க!..வழிய விடுங்க மொதல்ல..’

    ‘என்ன சார் லேடீஸ்க்கு லிப்ட் குடுத்தா என்ன சார் தப்பு?..மனுசனுக்கு மனுசன் இந்த உதவி கூடச் செய்யக் கூடாதா?’ சுடிதாரப்பெண் விடாமல் பேசினாள.;

    ‘த பாரும்மா..பொண்ணுங்களையெல்லாம் நான் டபுள்ஸ் ஏத்தினதில்லை…ஏத்தவும் மாட்டேன்’

    ‘அதான் ஏன்னு கேட்கறேன்?..பயமா?…யாராச்சும் பார்த்து ஏதாச்சும் கதை கட்டிடுவாங்களோன்னு பயமாயிருக்கா?..இல்ல உங்க சம்சாரத்துக்கு தெரிஞ்சு..குடும்பத்துல குழப்பம் உண்டாயிடுமோன்னு அச்சமாயிருக்கா?’

    அவன் மௌனமாய் விழிக்க,

    ‘என்ன சார்…அதைப் பத்திக் கவலைப்பட வேண்டிய பொண்ணுங்களே தைரியமா லிப்ட் கேக்கறாங்க…நீங்க ஆம்பளை..அதுவும் அடர்த்தியா மீசை வெச்சிருக்கற ஆம்பளை நீங்க பயப்படறீங்களே’

    ‘இல்லம்மா…அது..வந்து..பிரச்சினை…’

    ‘யோவ்…பிரச்சினைக்கு பயப்படற நீயெல்லாம் எதுக்கய்யா வெளிய வர்றே,..வீட்டுக்குள்ளாரவே முடங்கிக் கெடக்க வேண்டியதுதானே?’

    அவள் பேச்சில் மரியாதை தடாலென்று இறங்க அவன் தர்ம சங்கடமாய் எல்லோரையும் பார்த்தான்.

    ‘இங்க பாருய்யா..உம்மனசு சுத்தமான மனசுன்னா..யாராவது ஒருத்தரை கூட்டிக்கிட்டுப் போ’ என்றவள் பெண்கள் பக்கம் திரும்பி ‘ஏய் காயத்ரி…நீ இந்தப் பக்கம்தானே போகணும்?..வா..வந்து சார் வண்டில உட்காரு’ என்றழைக்க,

    அந்த காயத்ரி நிதானமாய் நடந்து வந்து ‘ணங்’கென்று பில்லியனில் ஏறி அமர்ந்து கொண்டாள்.

    ஹெல்மட்காரன் வேறு வழியில்லாமல் முனகியபடியே வண்டியைக் கிளப்பினான்.

    எனக்கு அந்தச் சுடிதார்ப்பெண்ணின் பேச்சும் செயல்பாடும் மிகவும் பிடித்திருந்தது. ‘வெரிகுட்..பெண்கள்ன்னா இப்படித்தான் இருக்கணும்..பாரதி கண்ட புதுமைப்பெண்’

    தொடர்ந்து அதே போல் பல இருசக்கர வாகனாதிபதிகளை நிறுத்தி சாம…பேத…தான…தண்ட முறைகளைப் பயன்படுத்தி கிட்டத்தட்ட பத்துக்கும் மேற்பட்ட பெண்களை அங்கிருந்து வெற்றிகரமாக அனுப்பி வைத்தாள்.

    இறுதியில் அந்த சுடிதார்ப்பெண் மட்டும் தனித்து நிற்கையில் ஒரு டூவீலர்க்காரன் கடந்து செல்ல நான் கேட்டேன். ‘என்னம்மா…ஒரு வண்டி போகுது…அத நிறுத்தி அதுல நீ போகலாமே?’

    ‘இல்ல சார் எங்க வீட்டுக்காரர் வந்திட்டிருக்கார்..என்னை பிக்அப் செய்ய’

    அடுத்த ஐந்தாவது நிமிடம் ஒரு பைக் வந்து நின்றது. அதிலிருந்து இறங்கிய அந்த இளம்பெண் ‘ரொம்ப தேங்க்ஸ் சார்…எங்க ஹாஸ்டல் இங்கிருந்து பக்கம்தான்…நான் நடந்தே போயிடறேன்’ என்று சொல்லி விட்டு நகர,

    அந்த பைக்காரனை நோக்கி வேகவேகமாயச் சென்றாள சுடிதார்க்காரி.

    ‘யார் அவ?’ கேள்வியில் கோபம் தெறித்தது.

    ‘தெரியாதுடா…இங்கதான் எங்கியோ லேடீஸ் ஹாஸ்டல்ல தங்கியிருப்பா போலிருக்கு!..இந்த ரோட்டுலதான் பஸ் வரலையே…தனியா நடந்து வந்;திட்டிருந்தா…நான்தான் நிறுத்தி…கேட்டு..லிப்;ட் குடுத்தேன்’

    கண்களைப் பெரிதாக்கிக் கொண்டு பற்களை ‘நற..நற’வென்று கடித்த சுடிதார்க்காரி ‘கொஞ்சம் செவப்பா…அழகா இருந்தாப் போதுமே…உடனே.. ‘ஈஈஈஈ’ ன்னு இளிச்சுட்டு லிப்ட் குடுத்துடுவீங்களே’

    ‘அட என்னம்மா…இதுல என்ன இருக்கு?..மனுசனுக்கு மனுசன் செய்யற உதவிதானே?’

    ‘போதும் பேசாதீங்க’ ‘சட்’டென அவன் வாயை அடைத்து விட்டு, பிசாசுத்தனமாய் பில்லியனில் ஏறி அமர்ந்தாள்.

    அவன் நிதானமாக வண்டியைக் கிளப்ப,

    ‘வீட்டுக்குப் போய் உங்கள வெச்சுக்கறேன் இருங்க’

    போகிற போக்கில் அவள் கோபமாய்ச் சொல்லிக் கொண்டே சென்றது என் காதுகளில் விழ நான் மூரச்சையாகாத குறைதான். ‘அடிப்பாவி..போறவனையெல்லாம் நிறுத்தி…இல்லாத வசனமெல்லாம் பேசி லிப்ட் குடுக்க வெச்சிட்டு…உம்புருஷன் ஒரு பெண்ணுக்கு லிப்ட் குடுத்ததுக்கு இந்த உறுமு உறுமுறியே..ச்சே..உன்னைப் போயி புதுமைப்பெண்ணுன்னு நெனச்சேனே…நீயும் சராசரிதானா?’

    Share
  • கிரேக்க நாடகத்தில் தமிழ் உரையாடல்

    சேசாத்திரி
       

    நூல் குறித்து சுருக்க விளக்கம்: 

    1889 ஆம் ஆண்டில் எகிப்து நாட்டுக் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் அக்குசிரிங்கசில் (Oxyrhynchus) விவிலிய அகழ்வாய்வுக் கூட்டமைப்பு நடத்திய அகழாய்வில் கண்டெடுத்த பாபிரசுச் சுருள் ஒன்றனுள் கிரேக்க நகைச்சுவை நாடகமும் அடங்கும். திரு. பெர்னார்டு பி. கிரென்பெல் (Bernard P. Grenfell), ஆர்தர் எசு. அண்ட்டு (Arthur S. Hunt) ஆகிய வரலாற்று ஆய்வாளர்கள் இந்த கிரேக்க நாடகத்தின் கிரேக்கப் பகுதியை ஆங்கிலத்தில் பெயர்த்தியும் கிரேக்கம் அல்லாத சொற்களை ஆங்கில எழுத்துப் பெயர்ப்பு செய்தும் 1903 இல் அதை ஒரு நூலாய் வெளியிட்டனர். இதன் காலத்தை அவர்கள் கி.பி. 2 ஆம் நூற்றாண்டினதாக முடிவு கட்டினர். 

    இந்த நாடகத்தில் ஆங்காங்கே கிரேக்கம் அல்லாத வேற்று மொழி உரையாடல்களும் இடம்பெற்றிருந்தன. இது அந்த ஆய்வாளர்களுக்கு வியப்பை ஏற்படுத்தியது. இந்நாடகத்தில் தென்கன்னட மாவட்டத்தில் இருந்து பிரித்த உடுப்பி மாவட்டத்தின் உடுப்பிக்கு அருகில் உள்ள மள்பி என்ற துறைமுகத்தை ஆளும் தலைவன் குறிப்பிடப்படுவதால் அதில் உள்ள வேற்று மொழி திரவிட மொழி தான் என்று முடிவு கொண்டனர். முனைவர் ஈகன் உல்ட்சு என்ற ஆய்வாளர் இந்த வேற்று மொழி கன்னடமே என்று கூறினார். 

    1927 இல் திரு. கோவிந்த பய் என்ற கன்னட அறிஞர் அந்த உரையாடல்களைக் கன்னடமாகக் கொண்டு ‘பிரபுத்த கர்னாடகா’ என்ற நூலாக வெளியிட்டு தம் கருத்தை வழங்கினார். இன்னும் பலர் இந்த வேற்று மொழி பழைய துளு, பழைய கொங்கணி, பழைய கன்னடம், பழந்தமிழ் என்றெல்லாம் சொல்லி உள்ளனர். 

    இந்நாடகத்தில் 48 திரவிட மொழித் தொடர்கள் உரையாடல் பகுதியில் எண்ணிடப்பட்டு காட்டப்பட்டுள்ளன. கன்னட மொழியை நன்றாக அறிந்த பேராசிரியர் திரு இரா. மதிவாணன் அவற்றை நன்கு ஊன்றி ஆராய்ந்து இவை கன்னடம் அல்ல என மறுத்து, மாறாக இவை துளு நாட்டு வட்டார வழக்குத் தமிழின் திரிந்த மக்கள் பேச்சு வழக்கு என்று தம்முடைய “கிரேக்க நாடகத்தில் தமிழ் உரையாடல், 1978” என்ற குறுநூலில் 30 – 35 பக்கங்களில் ஒப்பிட்டு நிறுவி உள்ளார். பக்கம் 29 இல் செவ்விய தமிழ் சொல்லாட்சிகளாக 11 தொடர்களைச் சுட்டிக்காட்டி உள்ளார். இந்த மக்கள் வழக்குத் திரிபிற்கு ஒரு காட்டாக சென்னை வட்டார வழக்கில் ‘அதற்கு என்ன என்கிறார்’ என்ற சொற்றொடரைக் கல்லா மக்கள் ‘அதுக்கு இன்னான்ற’ என உரைப்பதைச் சுட்டுகிறார். 

    படிக்குநர்கள் இந்நாடகம் குறித்து மேலதிகச் சேதிகளை அறிந்து கொள்வதற்காகவே இக்குறுநூல் இணைப்பில் இணைக்கப்பட்டு உள்ளது. முதலில் 30 – 35 பக்கங்களில் தமிழ் –  துளு – ஆங்கில எழுத்து பெயர்ப்பு ஆகியவற்றின் ஒப்பீட்டைப் படித்து விட்டு, அதன் பின் பக்கம் 20 – 29 வரை கொடுத்துள்ள நாடகத் தெளிவுரையையும் படித்த பிறகு ஆங்கிலத்தில் உள்ள கிரேக்க நாடகத்தைப் படித்தால் நாடகம் நன்றாகப் புரியும், சுவையூட்டும். அப்படியல்லாமல் நேரடியாக ஆங்கில நாடகத்தைப் படித்தால் ஒன்றும் புரியாமல் அலுப்பை ஏற்படுத்தும். 

    இனி, இணைப்பில் . . . . .

    கிரேக்க நாடகத்தில் தமிழ் உரையாடல்”- ஒளிவருடியது

     
    Share
  • கோயமுத்தூர்

     

    முகில் தினகரன் 

    வறண்ட வரைபடத்தை
    விரல்களால் வருடிப் பாருங்கள்
    ஓரிடத்தில் ஜில்லிப்பு
    உங்கள் விரல் நுனியை வியப்பாக்கும் 
    அது
    கோவையின் இருப்பிடம்
    தொட்டாலே சிலிர்ப்பூட்டும்
    வரைபடத்தில் கூட!..

    இம்மண்ணின் மைந்தன்
    மாதாவை மறந்தாலும்
    மரியாதை மறப்பதில்லை!
    ‘வா’.. ‘போ’..வெனும்
    வீராப்பு வார்த்தைகளுக்கு
    வைரப்பூச்சு பூசி
    ‘வாங்க’ போங்க’ ஆக்குவதால்
    மற்ற மாவட்டத்தார் மத்தியில்
    மரியாதை ராமன் இவன்!

    ஊட்டிக் கண்ணகியை
    உரசி நிற்பதால் – இந்த
    கோவலபுரியில்
    வெப்ப மாதவிக்கு விவாகரத்து!

    கலைவாணியின் கடாட்சம்
    கரை புரண்டோடுவதால்
    இங்கு கல்லூரிக்
    கோட்டங்கள் ஏராளம்!
    ஓ…புரிந்து விட்டது
    சிறுவாணியின் தொண்டை வருடல்
    கலைவாணியையும்
    கவர்ந்து விட்டது போலும்!

    திரைத் தேவதையின்
    சிங்கார வதனத்திற்கு – இந்த
    கோவைப் பொற்கொல்லன்
    கொணர்ந்த அணிகள் ஏராளம்!
    ‘பாக்ய’ வளையல்களாய்….
    ‘சத்ய’ மோதிரமாய்….
    ‘ரகுவர’க் கம்மல்களாய்….
    ‘மணிவண்ண’ மூக்குத்தியாய்….
    ‘நிழலான ரவி’களாய்…. 
    ‘சரள’மான சிரிப்புக்களாய்!
    ஆம்!
    வெற்றிக் கோட்டைகள்
    எங்கிருப்பினும் 
    அதில்
    கொங்கு மண்டலத்தின்
    செங்கற்களுண்டு!!

    ஆடையில்லா மனிதன்
    அரை மனிதன் – எங்கள்
    கோவையில்லா உலகம்
    அரை உலகம் – ஆம்
    இங்கு உருளும்
    பஞ்சாலைத் தேர்தானே
    எங்கெங்கோ உள்ள
    திரௌபதைகளுக்கு
    ஆடை வரம் பொழிகின்றது!

    பொருளாதார வகுப்பில்
    முதலிடம் பிடித்த
    டெக்ஸ்டைல்ஸ் குழந்தைக்கு
    இங்குதானே டிசைன் சென்டர்!

    வெண்பளிங்கு மேனியில்
    வியர்க்குரு போல்
    தங்கத் தாமரை மேல்
    திராவகத்துளி போல் – அன்று
    கொங்குத் தலை மேல் மதக்கலவரம்!;  
    விளைவாய்
    வியாபாரக் குறியீட்டில்
    இறங்கு முகம்!
    பொருளாதார நல்லிருப்பில் 
    தற்காலிக நலிவு!

    கறையே காந்தமாகி
    உயர்வுகளை ஈர்த்தெடுக்க – அந்த
    ஊனமே உரமாகி
    ஊன்று கோலை உற்பத்தி செய்ய
    உயர்வு நிலை உன்னதமாய்!
    நிரந்தர வாசமாய்!
    இன்றும்..
    என்றும்!

     படத்திற்கு நன்றி

    Share
  • தடயமின்றி

    வருணன்
    ஊடலால் பிரியத்துடிக்கிற
    தம்பதியராய் தண்டவாளங்கள் அருகருகே
    
    கிடைத்த உலோகத் துண்டை
    காந்தமாக்கும் ஆர்வத்தில் சேரிச் சிறுவன்
    
    ஒற்றை தண்டவாளத்தில்
    நாற்காலியிலமரும் முதலாளியாய்
    அமர்கிறது உலோகத் துண்டு
    காலடியில் எடுபிடி போல் சிறுவனின்
    ஆவலையும் காத்திருப்பையும்
    அருகருகே அமர்த்திக் கொண்டு
    
    தூரத்துச் சீழ்க்கையொலியில்
    பரபரக்கும் பிஞ்சு மனதின் ஏக்கமறியாது
    அனைத்தின் மீதும் ஏறியிறங்கிக்
    கடக்கிறது ஓர் புகைவண்டி.
    
     படத்திற்கு நன்றி    

    http://shankarpur.co.in/shankarpur_bus_train
    Share
  • அம்மாவுக்குக் கடிதம்!

    பழமைபேசி

    இலையுதிர் காலம்! வீட்டின் முன்புறம் இருக்கும் பழுப்பேறிக் கொண்டிருந்த மேப்பில் மரங்கள் தன் இலைகளைச் சாவகாசத்துடன் ஒவ்வொன்றாய் உதிர்த்துக் கொண்டிருந்தன. ஆறு மாதங்களாய்ப் பச்சையத்தை முழுவீச்சில் பூசிக்கொண்டிருந்த தரைப் புல்வெளி வெளிறத் துவங்கிருந்தது. பரணிலும் பெட்டியிலுமிருந்த குளிர்கால ஆடைகளுக்கு மறுபிரசவம் நெருங்கிக் கொண்டிருந்தது.

    இப்படியான இந்நாளின் இத்தருணத்தில், அதே ஊரில் அமைந்திருக்கும் பேங்க் ஆஃப் அமெரிக்காவின் தலைமையகத்தில் பல நூறு மில்லியன்களுக்கான ஒப்பந்தம் கையெழுத்தாகிக் கொண்டிருக்கக் கூடும்.  கொல்லப்படப் போகும் பயங்கரவாதிக்கு  அங்கிருக்கும்  உளவு நிறுவனத்தில் வைத்து நாள் குறிக்கும் தருணமாகவும் இது இருக்கக் கூடும்.  இவையாவிலும் ஒன்றாகத்தான், சார்லட் பெருநகரத்தின்  பேலன்ட்டைன் பகுதிலிருந்து  மடலொன்றும் தீட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது இத்தருணத்தில்.

    அன்புடன் அம்மாவுக்கு,

    சுகாதாரத்தில் நான் மிகவும் நலமாய் இருப்பதாகவே உணருகிறேன். இன்று நான் உன்னைச் சந்திக்கிற வரையிலும் மனரீதியாகவும் நலமாய்த்தான் இருந்தேன். ஆனால் தற்போது அப்படி இல்லை. மிகவும் வருத்தமாய் இருக்கிறது.

    நீயும் உன் கணவனுமாகச் சேர்ந்து கொண்டு என் பள்ளிக்கூட முன்றலுக்கு ஏன் வந்தீர்கள்? வந்ததோடு மட்டுமல்லாமல், ஏதேதோ பேசி நண்பர்கள் மத்தியில் பெரிய அவமானத்தை ஏற்படுத்தி விட்டிருக்கிறீர்கள்.

    எனக்கு நன்கு நினைவிருக்கிறது. இனிமையான கோடைகால விடுமுறை அது. ஆறாம் வகுப்புத் தேர்வு எழுதி விட்டு, பெருமைமிகு ராபின்சன் இடைநிலைப் பள்ளியில் அடுத்த ஆண்டு படிப்பினைத் தொடரப் போகிறேன் எனும் மகிழ்ச்சியில் திளைத்து மகிழ்ந்தோடிக் கொண்டிருந்தேன்.

    என்னைச் சுற்றிலும் என்ன நடக்கிறது என்பதை உணர்ந்து கொள்ள முடியாத பருவம்; வீடெங்கும் தேடிப் பார்க்கிறேன்; அப்பாவைக் காணவில்லை. கூட்டத்தினின்று ஒதுக்கி வைக்கப்பட்ட ஆட்டுக்குட்டி போல உணர்ந்தேன். வழிதவறி அல்லாடும் என்னைக் கொண்டு போய்ச் சேர்ப்பதற்கு மேய்ப்பன் எவனும் வர மாட்டானா என ஏங்கிப் புழுங்கித் தவித்தேன். அடிமேல்தான் அடி விழும் என்பார்களே, அதைப் போலத்தான் எனக்கும்.

    என்மீதான உன் கவனிப்பும் அருகிப் போனது. உனக்கு எல்லாமே ஸ்டீவ் என்றாகி விட்டது. நீயும் என்னைக் கவனிக்கவில்லை. அப்பாவையும் சந்திக்க விடவில்லை. நொறுங்கிப் போனேன் நான்.

    அந்த ஏழு மாதங்களும் எனக்கு வெம்மையான மாதங்கள்தாம். அங்கே நீதிமன்றக் கதவுகளைத் தட்டியெழுப்பிக் கொண்டிருந்தார் அப்பா. அதுவும் எனக்காக! போராட்டத்தின் முடிவில் வாரம் ஒருமுறை என்னையவர் பொது இடத்தில் வைத்துப் பார்க்கலாம் என்றாகிப் போனது.

    வாரத்தில் கிடைக்கும் அந்த இரண்டு மணி நேரமும் எனக்கு வசந்த காலம். இறைவனின் திருவுலகிற்கே அழைத்துச் செல்வார் அவர். அவர் சந்திக்குமந்த மெக்டொனால்ட்சு கடையோ, இசுடார் பாக்சு கடையோ, அது எனக்கு புனிதத் தலமானது. எனக்குப் பொன் தரவில்லை. பொருள் தரவில்லை. சந்திக்கும் போதெல்லாம் என் அப்பா எனக்கு ஊட்டியது நம்பிக்கையான சொற்களை மட்டுமே. அவைதான் இன்றளவும் என்னை இருத்திக் கொண்டுள்ளது.

    பழைய கதை எதற்கு? நடப்புக்கு வருவோம்.பள்ளிக்குச் சென்றுவிட்டுத் திரும்பி உன் வீட்டிற்கு வரவே மனம் ஒத்துக் கொள்ள மாட்டேன் என்கிறது. உன் அழகிய மணாளன், அதான் அந்த ஸ்டீவ் என்னை அங்குல அங்குலமாய் கீழிருந்து மேலாய் வெறித்தும் உற்றும் பார்க்கிறான். தொட்டுப் பேசுகிறான். போதாக்குறைக்கு, வார ஈறின் போது அவனது நண்பர்களையும் அழைத்து வந்து கூத்தடிக்கிறான். நீயும் என்னை அவர்களுக்கு விருந்தோம்பச் சொல்கிறாய். அதுதான் முடிவாக நான் இங்கேயே வந்து விட்டேன்.

    அதில் உனக்கு என்ன இடைஞ்சல்? எனக்கு இன்னும் பதினெட்டு வயது ஆகவில்லையென்பதற்காக என்னவெல்லாமோ செய்கிறாய். நான் இங்கு மிகவும் பாதுகாப்பாய் இருக்கிறேன். பள்ளிக்குச் சென்று வந்த நேரம் போக, எஞ்சிய நேரத்தை என் படிப்புக்காக மட்டுமே செலவிடுகிறேன்.

    கடந்த இலையுதிர்காலப் பருவத்தின் கடைசிக் கட்டத்தில்தான் இங்கு வந்தேன். இந்த எட்டு மாதங்களில் ஒரு தடவை கூட என் அறைக்குள் அவர் வந்தது கிடையாது. அதே வேளையில் என்னைக் கவனித்துக் கொள்வதனின்றும் அவர் தவறியது இல்லை.

    காலையில் ஆறரை மணிக்கெல்லாம் கிளம்பி, சார்லட் நகர மையத்தில் இருக்கும் தன் அலுவலகத்திற்குச் சென்று விடுகிறார். மாலை ஏழு மணிக்கு வந்ததும் வீட்டு வேலைகளைச் செய்து விட்டு, உடற்பயிற்சிக்காக ஒரு மணி நேரம்; அவ்வளவுதான்! பிறகு ஒன்பது மணிக்கெல்லாம் தன் அறைக்குள் போய் விடுகிறார். காலையில் எனக்கான சிற்றுண்டியை அவரே செய்து வைத்து விட்டுப் போகிறார். இந்த எட்டு மாதங்களில் ஒரு தடவை கூட என்னையவர் கடிந்து கொண்டது கிடையாது.

    ஒவ்வொரு நாள் காலையில் கிளம்பும் போதும் என் அறைக்கதவுக்கு வெளியே நின்று கொண்டு, காலையில் சாப்பிடுவதற்கு இன்னது செய்து வைத்திருக்கிறேன்; வெளியே தட்பவெட்பம் இப்படி இருக்கிறது; இன்று மழை வரும், குடை எடுத்துக் கொண்டு போ என்றெல்லாம் அக்கறையுடன் சொல்வார். குளிர்நாள் என்றால், அதற்கான ஆடை இருக்கிறதா எனக் கேட்டுத் தெரிந்து கொள்வார்.

    மாலை நேர உணவு வேளையின் போது, அன்றைய நாள் எப்படி இருந்தது எனக் கேட்பார். நிறைய நூல்களையும், நூல்களில் குறிப்பிட்டுள்ள வாசகங்களையும் மேற்கோள் காண்பித்துப் பேசுவார். இப்படித்தானம்மா நாட்கள் நகர்ந்து கொண்டிருக்கிறது எனக்கு.

    நீ, உன்னை நீயே ஏமாற்றிக் கொண்டாய் அம்மா. என்னைக் கடத்திக் கொண்டு போய் அடைத்து வைத்திருப்பதாய் நீ வழக்கெதுவும் பதிந்து விடாதே! இன்னும் இரண்டு மாதங்கள்தானே? எனது பதினெட்டாவது பிறந்த நாள் வந்து விடும். அதையும் பிரையனுடன் சேர்ந்து மகிழ்வோடு கொண்டாட விரும்புகிறேன். தயவு கூர்ந்து என் விருப்பத்தை நிறைவேற்று. ஸ்டீவுடன் சேர்ந்து கொண்டு இனிமேலும் என் பள்ளிக்கு வராதே! இறைஞ்சுகிறேன்!!

    இதோ கதவு திறக்கப்படும் ஓசை கேட்கிறது அம்மா. அவர் வந்து விட்டார் போல தெரிகிறது மீண்டும் சந்திப்போம்.. இறைவனது அருள் உனக்கு உரித்தாகட்டும்!!

    அன்பு மகள்,

    டீனா.

    மாடத்தில் இருக்கும் தன் அறையிலிருந்து இறங்கிப் போனாள் டீனா. இரண்டு ரொட்டிகள், பழச்சீப்பு ஒன்று, மூன்று காலன் பாலுக்கான நெகிழிக்கலம் ஆகியனவற்றைச் சுமந்தபடி உள்ளே வந்து கொண்டிருந்தார் பிரையன். ஓடிப் போய், அவர் கையிலிருக்கும் பாலை வாங்கி, சமையலறையில் இருக்கும் குளிர்மிக்குள் வைத்தாள்.

    “என்ன டீனா? ஒரு மாதிரி சோர்ந்து போயி இருக்கியே?! இன்னைக்கு பாடங்கள் எதும் அதிகமோ?”, கேட்டுவிட்டுத் தனக்கே உரிய சிரிப்பினை உதிர விட்டார் பிரையன்.

    ”ஸ்டீவும் அம்மாவும் பள்ளிக்கே வந்து மத்தவிங்க முன்னாடி அலப்பறை பண்ணிட்டாங்க அப்பா. அவமானமா இருக்கு!”, ஓவெனப் பெருங்குரலெடுத்து பிரையனின் கால்களைக் கட்டிக் கொண்டு அழுதாள்.

    ”ஏய், இதுக்கெல்லாம் இப்படி நீ உணர்ச்சிவசப்படலாமா? அடுத்த கோடைகாலத்துல நீ மருத்துவத்துறை மாணவி. அமெரிக்காவுக்கும், இந்த உலக மக்களுக்கும் நீ செய்ய வேண்டிய பணிகள் ஏராளமா இருக்கு. மருத்துவத் துறையில் நீ காலூன்றதுலதான் இருக்கு எல்லாமே! அதை நினைச்சுப் பாரு டீனா!”

    இரு கைகளாலும் தன் இரு தோள்ப்பட்டைகளைப் பற்றித் தூக்கி நிறுத்தி அவர் குலுக்கியதிலும், பொலிவு மிகுந்த அவரது முகத்தின் ஒளிவீச்சிலும் புத்துணர்வு பெற்றாள் டீனா.

    ”இன்னைக்கு நான் உடற்பயிற்சிக்குப் போகலை. குளிச்சிட்டு வா சாப்பிடலாம். நல்லா, எதனா செய்து வைக்கிறேன்!”, கிளம்பி தன் அறைக்குப் போனார் பிரையன்.

    சிறு ஓய்வுக்குப் பின்னர், கலைந்து கிடந்த தன் பாடப்புத்தகங்களை நேர்த்தியாகத் தன் மேசையின் மீது அடுக்கிக் கொண்டிருக்கிறாள் டீனா.  அஞ்சல் செய்வதற்கும், செய்யாமல் கசக்கித் தூக்கி எறியப்படுவதற்குமான இடைவெளியில் ஊசலாடிக் கொண்டிருக்கிறது மேசையின் மறுகோடியிலிருக்கும் அம்மாவுக்கு எழுதிய அந்தக் கடிதம்!

    Share
  • தேவாரத் தலங்கள் சில (பகுதி-4)

    நூ.த.லோகசுந்தரம்

    அன்பில் ஆலந்துறை

    ‘தேவாரத் தலங்கள் சில’ எனும் கருத்தில் திருச்சி அருகு திருப்பட்டூர் (பிடவூர்) ஊட்டத்தூர்(ஊற்றத்தூர்) லால்குடி (தவத்துறை) என மூன்று வைப்புத்தலங்கள் பற்றி நாம் பார்த்தோம். இப்போது லால்குடிக்குக் கிழக்காக 5 கி மீ ‘அன்பில்’ எனும் சிற்றூரில் அமைந்த தொன்மை மிகு, ஆலந்துறையைக் காண்போம்.

    இஃது சம்பந்தர் ஒன்று (தக்கராகம் – 1.33 – ” கணை நீடெரி மாலரவம் வரை வில்லா”), அப்பர் ஒன்று (குறுந்தொகை – 5.80 – ” வானம் சேர்மதி சூடிய மைந்தனை “) என இரு தேவாரமுள்ள, நீர்வளமிகு, பொழில்சூழ், சோழநாட்டு, காவிரி வடகரைத், தலம்.

    தேவாரத் தலமாம் புளமங்கையும் ‘ஆலந்துறை’ எனக் காண்கின்றது. அதனருகே உள்ள சக்கரப்பள்ளி இறைவரும் ‘ஆலந்துறையார்’ ஆகிறார். பெரிய புராணத்தில் சேக்கிழார் பெருந்தகை ஞானசம்பந்தர் கொங்குநாடு வழிபட்டுத் திரும்பும் வழியில் காவிரித் தென்கரை திருப்பராய்த்துறை அருகு செந்துறையுடன் ஓர் ‘ஆலந்துறை’ வழிபட்டு “கற்குடி சேர வந்தார்” என ஆவணப்படுத்தியுள்ளார்.

    வடநாடு முழுதும் நேரடி சென்று வழிபட்டு ஆங்கமைந்த சோதிலிங்கத் தலங்களுடன் வடகோடி ‘தாவி’ நதியையும் குறித்த அப்பரடிகள் காசுமீரத்து அமைந்த அமர்நாதம் எனப் பெரும் பேர் பெற்ற இயற்கையாகப் பனி குயில்கின்ற தலத்தை ஆலந்துறை என அடைவு திருத்தாண்டகத்தில் குறித்துள்ளார்

    “பதினோறாம் திருமுறை பரணர் சிவபெருமான் திருவந்தாதியிலும் ஒர் ஆலந்துறை காட்டப்பட்டுள்ளது”

    ‘ஆலம்’ எனும் சொல் நீரினைக் குறிக்கும். ‘ஆலங்கட்டி’ மழை, ஞாயிறு-திங்களை சுற்றித் தோன்றும் ‘ஆலவட்டம்’ எனும் சொற்களும் நீர் வழிப் பிறந்தவைகளே. நீர் எப்போதும் நிலைத்து நின்று மண்வாகு இளகிய நிலங்களிலும் சாய்ந்து விடாமல் நிற்க பரிணாம வளர்ச்சியால் 10 முழ உயர குறுக்குக் கிளைகளினின்றும் காற்று வழியில் விழுது(வேர்)களை வீழ்த்தி அங்கும் நிலைத்து வளரும் திறம் பெற்றதால் ஆல்=நீர் வழி அப்பெயர் பெற்றது ஆலமரம். ஓர் நீர்நிலையை அணித்தே ஆலத்தூர், ஆலங்கானம், ஆலக்கோயில், ஆலப்பாக்கம், ஆலத்துறை, ஆலக்குடி என ஊர்கள் அமைந்தன. ஆலங்காடு, ஆலம்பொழில் என்பனவோ ஆலமரம் பற்றி வழங்கியவை.

    அன்பிலுக்கு திருச்சியிலிருந்தே நகரப்பெருந்து உள்ளது. ஊரினுள் கோயிலின் மிக அருகேயே இறங்கலாம். சிற்றூராதலால் காபி, சிற்றுண்டிக்கும்/உணவிற்கும் தகுந்த முன்னேற்பாடுகளுடன் செல்ல வேண்டும். எனினும் இலால்குடிதான் அருகுள்ளதே. நம் அன்பில் ஆலந்துறைக் கோயில் சிறிதாயினும் சீர்மிகு 5 நிலை 5 கலச வெளிச் சுற்றுக் கோபுரம் தொன்மையான பழங் கல்வெட்டுகளுடைய முற்றுப் பெறாத உள்சுற்று பழங்கோபுரம், கல்வேலைப்பாடு சிறந்த நந்திகளும் இருகையுடன் காணும் வாயில் காப்போனும் கற்றளியாக திருஉண்ணாழிகைகளும் திருச்சுற்று மண்டபங்களும் தலத் தேவாரக் கல்வெட்டும் திருவரங்கம் கோயிலின் உபகோயில் எனக்குறிக்கும் தாரண வைகாசி 27குடமுழுக்கினை அறிவிக்கும் கற்பலகையும் காணலாம்

    இறைவர்=ஆலந்துறைநாதர்/ இறைவி=அழகம்மை/ தலப்பயிர் = ஆல்/ தூநீர்= காவிரி/ (கொள்ளிடம் – வடகரை). மக்களரவம் ஏதுமின்றி அமைதியாக தியானம் செய்நிலையிலும் நம் ஆலந்துறையாரை வழிபடலாம். முன் குறித்தபடிப் பாடல் பெற்ற வடகரை மாந்துறை லால்குடிக்கு சிறிதே மேற்குள்ளதால் மிக எளிதாக மூன்றினையும் ஓர் பகலிலேயே வழிபடலாம்.

    ‘பொருள்வழித் திருமுறை’=’அன்பில்’ பாடல்கள் தொகுப்பினை இணைப்பில் காணலாம் என்கருவி வழி வெளிப்பட்ட படங்களையும் கண்டு, தேர்ந்து ஓர் நாள் வழிபடலாமே.

    திருச்சிற்றம்பலம்

    இணைப்பு

    நமசிவாய

    பொருள்வழித் திருமுறை © இதனில் அன்பில் திருமுறை ©

    திருமுறை தொகுப்பாளன் – நூ.த.முத்து முதலி மயிலை

    1
    வன்புற்று இள நாகம் அசைத்து அழகாக
    என்பில் பல மாலையும் பூண்டு எருதேறி
    *அன்பில்* பிரியா தவளோடும் உடனாய்
    இன்புற்று இருந்தான்தன் இடைமருது ஈதோ 1.32.6
    சம்பந்தர் தேவாரம்

    2
    எழிலார் இராச சிங்கத்தை இராமேச்சுரத்து எம் எழில் ஏற்றைக்
    குழலார் கோதை வரைமார்பில் குற்றாலத்து எம் கூத்தனை
    நிழலார் சோலை நெடுங்களத்து நிலாய நித்த மணாளனை
    அழலார் வண்ணத்து அம்மானை *அன்பில்* அணைத்து வைத்தேனே 4.15.7
    அப்பர் தேவாரம்

    3
    அம்மையே அப்பா ஒப்பிலா மணியே *அன்பினில்* விளைந்த ஆரமுதே
    பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும் புழுத்தலைப் புலையனேன் தனக்குச்
    செம்மையே ஆய சிவபதம் அளித்த செல்வமே சிவபெருமானே
    இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே 8.538
    மணிவாசகர் திருவாசகம்

    4
    வில்லிகைப் போதின் விரும்பா அரும்பா வியர்கள் *அன்பில்*
    செல்லிகைப் போதின் எரியுடையோன் தில்லை அம்பலம்சூழ்
    மல்லிகைப் போதின்வெண் சங்கம்வண்டு ஊதவிண் தோய்பிறையோடு
    எல்லிகைப் போதியல் வேல்வயல் ஊரற்கு எதிர் கொண்டதே 8/2.364
    மணிவாசகர் கோவையார்

    5
    தானொரு காலம் சயம்பு என்று ஏத்தினும்
    வானொரு காலம் வழித்துணை யாய்நிற்கும்
    தேனொரு பால்திகழ் கொன்றை அணிசிவன்
    தானொரு வண்ணம்என் *அன்பில்* நின்றானே 10.275
    திருமூலர் திருமந்திரம்

    6
    அன்பின் உள்ளான் புறத்தான் உடலாய் உளான்
    முன்பின் உள்ளான் முனிவர்க்கும் பிரானவன்
    அன்பின் உள்ளாகி அமரும் அரும்பொருள்
    அன்பின் உள்ளார்க்கே அணைதுணை ஆமே 10.279
    திருமூலர் திருமந்திரம்

    7
    கண்டேன் கமழ்தரு கொன்றையினான் அடி
    கண்டேன் கரியுரியான்தன் கழல் இணை
    கண்டேன் கமலமலர் உறைவான் அடி
    கண்டேன் கழலதுஎன் *அன்பினுள்* யானே 10.285
    திருமூலர் திருமந்திரம்

    8
    முன்பு பிறப்பும் இறப்பும் அறியாதார்
    அன்பில் இறைவனை யாம்அறிவோம் என்பர்
    இன்பப் பிறப்பும் இறப்பும் இலான் நந்தி
    *அன்பில்*அவனை அறியகி லாரே 10.287
    திருமூலர் திருமந்திரம்

    9
    காரணன் *அன்பில்* கலந்து எங்கும் நின்றவன்
    நாரணன் நின்ற நடுஉடலாய் நிற்கும்
    பாரணன் அன்பில் பதஞ்செய்யும் நான்முகன்
    ஆரணமாய் உலகாய் அமர்ந் தானே 10.391
    திருமூலர் திருமந்திரம்

    10
    இசைந்தெழும் *அன்பில்* எழுந்த படியே
    பசைந்தெழும் ஈசரைப் பாசத்துள் ஏகச்
    சிவந்த குருவந்து சென்னிகை வைக்க
    உவந்த குருபதம் உள்ளத் துவந்ததே 10.1590
    திருமூலர் திருமந்திரம்

    11
    போது சடக்கெனப் போகின்றது கண்டும்
    வாதுசெய்து என்னோ மனிதர் பெறுவது
    நீதியுளே நின்று நின்மலன் தாள்பணிந்து
    ஆதியை *அன்பில்* அறியகில் லார்களே 10.2085
    திருமூலர் திருமந்திரம்

    (தொடரும்)

    Share
  • நல்வாழ்க்கை வாழ ‘வழிகாட்டிகள்’: தொடர்-18

    பெருவை பார்த்தசாரதி

    நடைமுறை வாழ்க்கையில் சாதாரணமாக நாம் செய்கின்ற ஒவ்வொரு வேலைக்கும், நிகழ்ச்சிக்கும், செயலுக்கும் ஒருவரது உதவியை நாடி அவரிடம் ஆலோசனை பெற்று எடுக்கின்ற காரியத்தைச் செவ்வனே செய்து முடிக்கும் யுக்தியை, நமக்கு முன் வாழ்ந்தவர்களது அனுபவங்கள் மூலம் அறிந்து கொண்டு, ஒவ்வொரு துறையிலும் சிறந்து விளங்குகின்ற ஒருவர் லெளகீக வாழ்க்கைக்கு வழிகாட்டுவது போல், வேறு யாரெல்லாம் நம் ஆனந்த வாழ்க்கைக்கும், ஞான மார்க்கத்தும் வழிகாட்டுகின்றனர்?என்பதை நமது அன்றாட வாழ்க்கை அனுபவங்களிலிருந்தும், புராண, இதிகாசங்களில் இடம் பெறும் அறநெறிகள் மூலம் பாடம் பெறமுடியும் என்பதே இத்தொடரின் முக்கிய குறிக்கோள். ஆலோசனை என்பது ஒவ்வொரு காலகட்டத்திலும் அவசியமாகி, வாழ்வின் இறுதிக் கட்டம் வரை தொடர்ந்து கொண்டே இருக்கிறது என்பதைத் தொடர்ந்து உதாரணங்கள், மேற்கோள்கள் மூலம் வலியுறுத்துவதே இத்தொடருக்கு இன்னொரு சிறப்பு.

    அன்றாட வாழ்க்கையில் கடைப்பிடிக்கும் கடமைகளுள் ஆன்மீகத்திற்கு அதிக முக்கியத்துவம் உண்டு. அன்றாடம் நாம் சந்திக்கும் இன்ப, துன்பப் படிகளைக் கடந்து வரும்போது, ஏதாவதொரு இடத்தில் தடைக்கல்லாக ஏதோ ஒரு துன்பம் நம்மைத் தடுக்கும்போது, நமக்கு ஆறுதலாக, அருமருந்தாக அந்த நேரத்தில் உதவுவது ஆன்மீகம். ஆனாலும் ஆன்மீகத்தை முழுமையாக அனுபவித்து உணர முடியாமல் திணறும்போது, ஞான வாழ்க்கைக்குக் வழிகாட்டுகின்ற ஆன்மீககுருவின் உதவியைப் பெற தொடர்ந்து ஒவ்வொருவரும் முயற்சித்துக் கொண்டே இருக்கிறோம்.

    உலகில் வாழும் மனிதர்கள் எவருமே துன்பத்தோடும், வருத்தத்தோடும் வாழ விரும்புவதில்லை. வாழ்க்கை முழுவதும் மகிழ்ச்சி நீடித்திருக்க வேண்டும், சந்தோஷம் எங்கே கிடைக்கிறதோ அதை நோக்கித்தான் பயணித்துக் கொண்டிருக்கிறோம் என்று சொன்னால் யாராவது மறுக்கப் போகிறார்களா என்ன?…. ஆக வாழ்க்கையில் எவ்வளவு பொருளாதார வசதிகள் பெற்றிருந்தாலும், மகிழ்ச்சியும் சந்தோஷமும் இதில் கலந்திருக்கும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. மற்றவர் உதவியுடன் இதைப் பெறுவதற்கான முயற்சியை வாணாள் முழுவதும் தொடர்ந்துகொண்டிருக்கிறோம். ஒரு நிமிடம் கூட ஓய்வு இல்லாமல் உழைத்துக் கொண்டிருக்கும் பெரிய பணக்காரர்கள் என்று சொல்லக்கூடியவர்கள், தொழிலதிபர்கள், தங்கள் வேலையெல்லாம் ஒதுக்கிவிட்டு, வருடத்தில் சில நாட்கள் நிம்மதி தேடி ஆன்மீகம் தழைத்திருக்கும் இமாலயம், ஹரித்வார், ரிஷிகேசம், காசி போன்ற புண்ணியத்தலங்களுக்குச் சென்று ஆன்மீகக்குருக்களிடம் அறிவுரை பெற்று வருவதை நாம் படித்திருக்கிறோம். குருவைப் பற்றிய சிந்தனையைத் தொடருவோம்.

    இதிகாசங்களில் குருவாக வருணிக்கப்படுபவர் மும்மூர்த்திகளுக்கும் சம்மானவர் என்று சொல்லப்பட்டிருக்கிறது. “குருபிரம்மா குரு விஷ்ணோ, குருதேவோ மஹேஸ்வரஹா, குரு சாக்ஷாத் பரப்ரும்மம், குரவே நமஹா”…குருவே பிரம்மா, அவரே விஷ்ணு, மஹேஸ்வரன் எல்லாமும், ப்ரப்பிரும்மும் அவரே என்கிறது வேத உபநிஷத்துக்கள். இதிகாசங்களில் கூறப்படும் அறநெறிகளை எடுத்துச் சொல்லி, உலகை நல்வழியில் நடத்திய இத்தொடருக்குப் பொருந்துகின்ற வகையில் அமைகின்ற ஒரு சில குருமார்களைப் பற்றி இந்த நேரத்தில் சற்று மீண்டும் நம் நினைவுக்குக் கொண்டுவந்து பிறகு தொடருவோம்.

    அறவழியில் ஆட்சி செய்ய, இஷ்வாகு வம்சத்தின் குலகுருவாக ‘வசிட்டமுனி’, தசரதனுக்கு அவ்வப்போது நல்லுபதேசங்களைத் தந்தருளினார்.

    திருதராஷ்டிரனின் தீய எண்ணங்களைப் போக்கி, அவரை நீதி வழியில் நல்வழிப்படுத்த விதுரன் தன் வாழ்நாளைச் செலவிட்டான். ‘விதுரர்’ உபதேசித்தது அனைத்தும் ‘விதுர நீதி’ என்ற பெயரில் புத்தக வடிவில் இன்றும் உலகுக்கு வழிகாட்டிக் கொண்டிருக்கிறது.

    தன்னை யார் என்று அறிவித்து, தாம் அடைந்த முன்வினைகளைக் களைந்து, சந்தத்தினுள் சதாசிவத்தைக் காட்டி, உள்ளுக்குள் இருக்கும் ஞானக் கனலை எழுப்பி, கருத்தறிவித்து தனக்கு ‘விநாயகப் பெருமான்’ அருள் புரிந்ததாக அவ்வை மூதாட்டி விநாயகர் அகவலில் சொல்லியதைப் படித்திருக்கிறொமல்லவா?…

    மாபாரதத்தில், ‘தருமன்’, தனது மற்ற சகோதரர்களுக்கு சகோதரராக மட்டுமல்லாமல், சில சமயம், அவர்களுக்குக் குருவாக இருந்து, தவறுகளைச் சுட்டிக்காட்டி, சகோதரர்களையும், நாட்டு மக்களையும் அறவழியில் செயல் பட வைத்திருக்கிறார்.

    ஆஸ்திகப் பெருமக்களுக்கு என்றுமே மானசீக குருவாக திகழ்பவர்கள் ஸ்ரீ ராமானுஜர், ஸ்ரீமந் நிகமாந்த மஹா தேசிகன், ஸ்ரீ மத்வர், ஸ்ரீ ஆதிசங்கரர், ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்ஸர், ஸ்ரீ விவேகானந்தர் போல இன்னும் பலர் இருக்கின்றனர். இன்று இவர்கள் நிலவுலகில் இல்லையென்றாலும், பல தரப்பட்ட மக்கள் தங்கள் மனதில் மானசீக குருவாக இம்மஹான்களையெல்லாம் வரித்துக் கொண்டுள்ளனர் என்பது யாவரும் அறிந்த உண்மை. கோடானுகோடி மக்களுக்குக் குருவாக இருந்த இவர்கள் அனைவருக்குமே கூட குருவாக அமைந்தவர்களும் உண்டு.

    பதினெட்டு முறைக்கு மேல் இடைவிடாமல் யாத்திரை சென்று, சபரியில் மணிகண்ட சுவாமியை தரிசிப்பவர்கள், குருசாமி பதவிக்குத் தகுதி அடைந்தவராகி, மற்றவர்களுக்கு வழிகாட்டியாக அமைந்து விடும் தகுதியை அடைகிறார். தன் வழி நடப்பவர்களை நெறிப்படுத்தி, உடலுக்குக் கல்லினாலும், முள்ளினாலும் உண்டாகும் பாதகம் தெரியாமல், நெஞ்சத்துக்கு இதத்தைக் கொடுத்து இறைதரிசனம் செய்துவிக்கும் பணியினால், ஐயப்பகுருசாமிக்கு மட்டுமல்ல, அவரைப் பின்பற்றுபவருக்கும் அது ஆத்ம திருப்தியை அளிக்கிறதல்லவா?

    இன்றைய உலகம் ஒரு அதிஅற்புத உலகம். ஒவ்வொரு பொருளிலும் நாம் ஒரு பாடத்தை ஒருவர் மூலம் கற்றுக் கொள்ள முடியும். தினமும் தொலைக்காட்சியைத் திறந்தால், எண்ணற்ற நிகழ்ச்சிகளுக்கு இடையில் யாராவது ஒரு மருத்துவர் உடல் வியாதிக்கு மருத்துவ ஆலோசனைகளை வழங்கிக்கொண்டிருப்பார். இன்னொருவர் ஆன்மீக விஷயங்களுக்கு விளக்கம் அளித்து மன அமைதிக்கு வழி காட்டுவார். வேதங்களையும் இதிகாஸங்களையும், உபநிஷத்துகளையும் கற்றுத் தேர்ந்து, அதிலுள்ள சாரங்களைப் பக்குவமாகத் தெளிவு பட உரைக்கத் தெரிந்த ஒருவரே, அனைவராலும் ஆன்மீகக்குருவாக எங்கும் ஏற்றுக் கொள்ளப்படுகிறார். அறநெறிகளைத் தவறாக உபதேசித்து, ஆலோசனைகள் எதிர்மறையாக அமைந்தால், குருவின் பதவி அங்கே கேள்விக்குரியதாகி விடுகிறது… அதேபோல

    தனது வாழ்க்கைக்குச் சரியான வழிகாட்டுதலை அளிக்க முடியாத குருவைத் தேர்ந்தெடுத்தாலும் தவறு நேர்ந்து விடும் என்பதை மகாபாரதத்தின் மூலம் அறிய முடியும். அனுவமும், பக்குவமும், திறமையும் ஒருங்கே அமைந்த துரோணாச்சார்யர் பாண்டவர்களுக்கும், கெளரவர்களுக்கும் குருவாக இருந்தாலும், அறிவும், பக்குவமும் இல்லாத வஞ்சக எண்ணம் கொண்ட சகுனியைத்தானே இன்னொரு குருவாகத் துரியோதனன் வரித்துக்கொண்டு அவர் வழி நடந்து அழிவைத் தேடிக்கொண்டான். துரியோதனின் அறியாமையை நீக்கும்படி ஒரு போதும் சகுனி செயல்பட்டதில்லையே!…..

    குருவின் தகுதியைப் பற்றிய கருத்தைத் தனக்கே உரிய பாணியில் ரத்தினச்சுருக்கமாக நான்கு வரிப்பாடலில் திருமூலநாயனார் அவர்கள் அருளிய அருமையான தமிழ்ப்பாடல் ஒன்று:- தகுதிகள் இல்லாத ஒருவரைக் குருவாக அடைந்தால், என்ன நடக்கும் என்பதை மூவாயிரம் வருடத்திற்கு முன்பு வாழ்ந்த திருமுலர், எளிய தமிழில் யாவரும் புரிந்து கொள்ளும்படி இயற்றிய ‘திருமந்திரம்’ நமக்குத் தெளிவுபட உரைக்கிறது.

    குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார்
    குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வர்
    குருடுங் குருடுங் குருட்டாட்டம் ஆடி
    குருடுங் குருடுங் குழிவிழு மாறே

    அறிவும், பக்குவமும் இல்லாத ஆச்சார்யனைத் (குருவினை) தேர்ந்தெடுத்தால், வாழ்வில் கெடுவர். அறியாமயைக் களையும், நீக்கும் குருவினை ஒரு போதும் இவர்கள் பெற மாட்டார்கள். குருவின் தகுதி இப்படி இருந்தால் என்ன நடக்கும்?.. என்பதற்கு ஒரு உதாரணமும் சொல்லுகிறார். ஒரு குருடனைக் குருவாகத் தேர்ந்தெடுத்த மற்ற இரண்டு குருடர்கள், கூத்தாட்டம் போட்டு, குருட்டாட்டம் ஆடி, முடிவில் கண் தெரியாமல் படுகுழியில் விழுவதைப் போல அமைந்துவிடாமல், குருவைத் தேர்ந்தெடுப்பதற்கு உள்ள அவசியத்தை, ஒரு நான்கு வரிகளில் எளிய பாடலால் விளக்குகிறார். குருவின் தேடுதல் முற்றுப் பெறாமல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும் என்ற உட்கருத்தை இதை விட அழகாக யாரால்?…. நயம்பட விளக்க முடியும். எப்பொழுதுமே சித்தர் பாடல்கள் மேலோட்டமாகப் புரிவது போல் இருந்தாலும், உட்கருத்தை அறிந்து பொருள் கொள்ள வேண்டுமென்று படித்திருக்கிறேன்.

    குருவின் வழிகாட்டல் வாழ்க்கைக்கு அவசியமா?….. என்ற கேள்வியை முன் வைப்பவர்களுக்குப் பதில் சொல்லும் விதமாக ஒரு சிறிய கதை மூலம் விளக்கமளிக்க விரும்புகிறேன்.

    ஒரு குருகுலத்தில் படிப்பு முடிந்த பிறகு சீடர்கள் ஒவ்வொருவரும் கல்வியில் முழுமை அடைந்திருக்கிறார்களா என்பதைப் பரீட்சித்துப் பார்ப்பது குருவின் கடமை அல்லவா!….

    குருகுலத்தை விட்டுச் செல்லும் சீடர்களிடம்…….
    “வாழ்க்கையில் மிக மிக அரிதாகக் கிடைப்பதும், மதிப்பு வாய்ந்ததும் எது?… கேட்கிறார் குரு.

    தங்கம்தான் மிக அரிதாகக் கிடைப்பது,
    இல்லை வெள்ளிதான்,
    இல்லை, இல்லை வைரம், நவரத்தினம் என்று ஒவ்வொரு சீடரும் ஒரு பொருளைச் சொல்லுகிறார்கள்.

    குருவுக்கு இந்த பதிலில் திருப்தி ஏற்படவில்லை ஆதலால், மறுபடி ‘வேறு ஏதாவதொன்று சொல்ல முடியுமா’?… என்று கேட்கிறார்.

    கடைசியில் ஒருவன் “வாழ்க்கையில் மிக மிக அரிதாகக் கிடைப்பதும் மதிப்பு வாய்ந்ததும் ஒன்றே ஒன்றுதான் அது உண்மையான “குருவின் வழிகாட்டல்”.

    ஏன் அப்படி உறுதியாகச் சொல்கிறாய்?… குரு

    “நான் எங்கு தேடியும் எனக்கு உண்மையான ‘குரு’ கிடைக்கவில்லை, கடைசியில் இங்கு கல்வி பயின்றதில் குரு போதனையால் அனைத்துக் கலைகளிலும் பூரண தேர்ச்சி பெற்றேன். நம்மிடத்தில் இருக்கும் திறமைகளை நாம் அறியாவிட்டாலும், அதை அறிந்து வெளிக்கொணர்வது, நமக்குக் குருவாக அமைவதைப் பொருத்தே அமையும் என்பதை அறிந்தேன். எல்லாம் எளிதாகக் கிடைக்கும் இந்த உலகத்தில், ஒருவருக்கு மிக மிக அரிதாகக் கிடைப்பதும், அமைவதும் ‘உண்மையான குருவும் அவரது போதனையும்’ என்பதை இங்கு உணர்ந்தேன்”.

    ‘சீடனின் விரிவான விளக்கத்தால்’ குருவுக்கு திருப்தி ஏற்பட்டது.

    (தொடரும்)

    Share
  • நல்வாழ்த்து நான் சொல்லுவேன் (அத்தியாயம்-16)

    ஸ்ரீஜா வெங்கடேஷ்

    நிகில் மிக அதிக மதிப்பெண்கள் பெற்று பி.ஈ பரீட்சையில் தேறி விட்டான். அமெரிக்காவுக்கு செல்லத் தேவைப்படும் தேர்வுகளான ஜி.ஆர்.ஈ, டோஃபில் இவற்றிலும் நல்ல மார்க்குகள் எடுத்துப் பாஸ் செய்திருந்தான். மூன்று புகழ் பெற்ற பல்கலைக்கழகங்களிலிருந்து அவனுக்கு அட்மிஷன் கிடைத்து விட்டது. அதில் மிகச் சிறந்ததான டெக்சாஸ் பல்கலைக் கழகத்தைத் தேர்ந்தெடுத்து அதில் சேர்வதாக முடிவெடுத்திருந்தான் நிகில். அங்கு படிப்பதற்குரிய ஸ்காலர்ஷிப்பும் அவனுக்குக் கிடைத்து விட்டது.

    சுந்தரத்துக்கும் கல்யாணிக்கும் பெருமை தாங்கவில்லை. அது மட்டுமா? இப்போது சுந்தரம் மேனேஜர் ஆகி விட்டான். அது வேறு அவர்கள் பெருமையைப் பூரிக்கச் செய்தது.

    தங்களுடைய மகன் அமெரிக்கா செல்லப் போவதை நினைத்து நினைத்து இருவரும் வானில் பறந்தனர். சுமதி அக்கா, சுந்தரத்தின் தங்கை என எல்லாருக்கும் ஃபோனில் விஷயத்தைச் சொன்னார்கள். அவர்களுக்கும் சந்தோஷம். அதைக் கொண்டாடவும், நிகில் வெளிநாட்டுக்குப் போவதற்கு முன் கடவுளிடம் வேண்டிக் கொள்ளவும் என ஒரு பூஜை ஏற்பாடு செய்தாள் கல்யாணி.

    அதற்கு அனைவரையும் அழைத்திருந்தாள். நாளை தான் பூஜை. கம்ப்யூட்டரில் அழைப்புகளை அனுப்பிக் கொண்டிருந்தவளுக்கு ஒரு இ-மெயில் வந்தது. அதைப் பார்த்ததும் அவள் மனம் ஒரு வருடம் முன்னோக்கிப் பறந்தது. தன்னிடம் சுந்தரம் சீறி விட்டு டாக்குமெண்டுகளை எடுத்துக் கொண்டு ஆபீசுக்கு அரக்கப் பறக்க ஓடிய அந்த நாள் நினைவுக்கு வந்தது. ஏனெனில் இந்த இ-மெயிலும் அந்த இ-மெயிலைப் போலவே பல கோடி ரூபாய் பரிசு விழுந்திருப்பதாக எழுதப்பட்டிருந்தது.

    அதை ஒரு புன்னகையோடு டெலீட் செய்தாள் கல்யாணி.

    மனம் மீண்டும் அந்த நாளில் போய் உட்கார்ந்து கொண்டது.

    அடேயப்பா! சுந்தரத்துக்கு இனி கெட்ட பெயர் இல்லை எனத் தெரிந்ததும் அவர்கள் குடும்பம் அடைந்த மகிழ்ச்சிக்கு ஏது அளவு? அதுவும் சுந்தரம் தன் மேல் உள்ள கோபமெல்லாம் தீர்ந்தது என்று அறிந்த போது ஏற்பட்ட மகிழ்ச்சி இருக்கிறதே! அதை விட ஒரு சந்தோஷத் தருணம் இனி இருக்குமா? மனம் பின்னோக்கி ஓடியது.

    “கல்யாணி! போனாப் போகுது போ! ஏதோ தெரியாம செஞ்சிட்ட! இனிமே இப்டிப் பண்ணதே சரியா?” என்ற வார்த்தைகளோடு விளையாட்டாய் அவள் காதைப் பிடித்துத் திருகினான்.

    “ஆஆ.. வலிக்குது விடுங்க! நீங்க என்ன ஸ்கூல் வாத்தியாரா இருந்தீங்களா? காதைப் பிடிச்சுத் திருகுறீங்க?”

    “பின்ன? தப்புப் பண்ணினா! அப்டித்தான் தண்டனை குடுப்பாங்க! என்னடா நிகில்?”

    “ஆமாம்ப்பா! விடாதீங்க அம்மாவை! என்னை எத்தனை தடவை திருகியிருக்காங்க சின்ன வயசுல”

    கலகலவென்ற சிரிப்பொலியால் அந்த வீடு நிறைந்தது.

    அதற்கப்புறம் எல்லாம் சரியாவதற்கு எத்தனை நாள் பிடித்தது?

    ஒரு பக்கம் கல்யானியின் நாத்தனார் செல்வி கோபித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள் என்றால், மறு புறம் நிகில் பல பரீட்சைகளுக்குத் தன்னை தயார் செய்து கொண்டிருந்தான். அது போதாதென்று இஞ்சினியரிங் பரீட்சை வேறு நெருங்கிக் கொண்டிருந்தது. கல்யாணி வேறு கிட்டத்தட்ட எல்லா உறவினர்களோடும் சண்டை போட்ட நிலை. வட பழனி முருகனுக்கு பாலபிஷேகம் செய்ய வேண்டியது வேறு பிரார்த்தனை பாக்கி.

    மூச்சு முட்டியது கல்யாணிக்கு. இந்த முறை எதிலும் தவறு நேராமல் நிதானமாக யார் மனதும் நோகாமல் பேச வேண்டும். எல்லோருடனும் சமாதானமாகப் போக வேண்டும் என்று முடிவு செய்து கொண்டாள் அவள். சுந்தரத்தை இதில் நுழைக்க விரும்பவில்லை. தான் ஏற்படுத்திய சிக்கலைத் தானே தான் விடுவிக்க வேண்டும் என்ற வைராக்கியம் அவளுக்கு.

    இந்தக் கம்ப்யூட்டர் வேலையாலும், அந்தப் பரிசாலும் யார் யார் மனதை நோகடித்திருக்கிறோம் என்று எண்ணிப் பார்த்தாள் கல்யாணி.

    முதலில் சுஜாதா, அவள் அந்த மெயிலை ஃபிராடு என்று சொன்னாள் என்பதற்காக அவள் மனம் நோகப் பேசியாயிற்று, அடுத்து சுமதி அக்கா, அவள் சவுத் ஆப்பிரிக்காவில் அந்த அட்ரசைப் பற்றி விசாரித்துச் சொன்ன பிறகு ஒரு நாள் வெறுப்பில் ஃபோன் செய்து அவளையும் கடுமையாகப் பேசி விட்டாள். அந்த நிகழ்ச்சிக்கப்புறம் சுமதி அக்கா ஃபோன் செய்வதேயில்லை.அதற்கு அடுத்தது செல்வி தான். தன்னுடைய கவலையினால் வீட்டிற்கு வந்தவளை வெறுப்பாகப் பேசித் துரத்தி விட்டாள். சுந்தரத்துக்கு அந்தக் கோபம் இன்னும் உள்ளூர இருப்பது கல்யாணிக்குத் தெரியும்.

    முதலில் சுஜாதாவிலிருந்து ஆரம்பிக்கலாம் என்று முடிவு செய்தாள் அவள்.

    கல்யாணிக்கு மிகவும் அவமானமாக இருந்தது. “ஒரு சிறு பெண் அவளிடம் போய் நாம் மன்னிப்புக் கேட்பதா?” என்றிருந்தது. இருந்தாலும் “தவறு செய்தது நாம், அதனால் மன்னிப்புக் கேட்பது தான் முறை. இதில் அவமானம் ஒன்றுமில்லை” என்று திரும்பத் திரும்ப தனக்குத்தானே கூறிக் கொண்டு பின் சுஜாதாவுக்கு ஃபோன் செய்தாள். முதலில் சுஜா எடுக்கவேயில்லை. நான்கைந்து முறை முயற்சி செய்த பின் எடுத்தாள்.

    “ஹலோ! சுஜா! நான் கல்யாணி பேசறேம்மா!”

    “தெரியுது!”

    “உங்கிட்ட மன்னிப்புக் கேக்கத்தான் நான் ஃபோன் பண்ணினேன் சுஜா! பிளீஸ் என்னை மன்னிச்சிடும்மா! ஐ ஆம் சாரி”

    “————“

    “இல்ல சுஜா! நான் சும்மா மேலுக்கு உங்கிட்ட மன்னிப்புக் கேக்கறேன்னு நினைக்காதே! நீ சொன்னா மாதிரி அது எவ்ளோ பெரிய ஃபிராடுங்கறதை அனுபவ பூர்வமா தெரிஞ்சுக்கிட்டேன். நீ சொல்றதை முதல்லேயே கேட்டிருந்தா இந்தப் பிரச்சனை எல்லாம் வந்திருக்காது. “

    “பரவாயில்லை மேடம்! விடுங்க! எப்டியோ நீங்க அதெல்லாம் ஃபிராடுன்னு புரிஞ்சிக்கிட்டீங்கல்ல அது போதும்”

    “ஆமாம்மா! என் மேல உனக்கு கோபம் இல்லை தானே”

    “இல்ல! இல்ல! போதுமா?”

    “சரி சுஜா” என்று ஃபோனை வைத்தவள் மனது சற்று லேசாகியது. “ஒரு மன்னிப்பு கேட்டால் நல்லபடியாக முடிந்தது, அடுத்தது சுமதி அக்கா” என்று அவர்களுக்கு ஃபோனைச் சுழற்றினாள். இரண்டு ரிங்குகளிலேயே எடுத்து விட்டாள் அக்கா.

    “ஹலோ! கல்யாணி! எப்டி இருக்க?” கொஞ்சமும் எதையும் மனதில் வைத்துக் கொள்ளாமல் சுமதி அக்கா பேசியது கல்யாணிக்குக் கண்களில் நீரை வரவழைத்தது.

    “ஹலோ! அக்கா!” என்றாள் தொண்டை அடைக்க.

    “”சொல்லு! கல்யாணி! எதும் பிரச்சனையா? சொல்லும்மா!”

    “அதெல்லாம் ஒண்ணுமில்லக்கா! கடவுள் அருளால எல்லாம் நல்லபடியா முடிஞ்சது”

    “நானும் எல்லாமே கேள்விப் பட்டேன்மா! நல்லவங்களுக்கு இப்படிப்பட்ட சோதனைகள் வரது சகஜம் தான்”

    “என்னவோ போங்க! நான் முக்கியமா ஃபோன் பண்ணது உங்க கிட்ட மன்னிப்புக் கேக்கத்தான்”

    “மன்னிப்பா? எதுக்கு?”

    “அக்கா! எதுக்குன்னு நீங்க கேக்கறதுலருந்தே நீங்க எவ்ளோ உசந்தவங்கன்னு தெரியுது! அன்னிக்கு நீங்க சவுத் ஆப்பிரிக்கா வரைக்கும் கேட்டு விசாரிச்சு எனக்குச் சொன்னீங்கள்ல்ல அதுக்கப்புறம் நான் உங்களைத் தப்பாப் பேசிட்டேங்கா! அதுக்கு சாரி கேக்கத்தான்….”

    “சீ! பைத்தியம்! நான் அதை ஒண்ணும் தப்பாவே நினைக்கல்ல!”

    “அப்ப ஏன் எனக்கு அதுக்கப்புறம் ஃபோன் பண்ணல்ல?”

    “அதுவா? நீ ஏற்கனவே சங்கடத்துல இருக்க! அப்பப் போயி சும்மா உன்னை நொய் நொய்னு தொந்தரவு பண்ணுவானேன்னுதான் நான் ஃபோன் பண்ணல்ல”

    “உண்மையிலேயே அது தான் ரீசனா?”

    “அட! ஆமாம்! ஆமாம்! ஆமாம்! போதுமா? உன்னை எனக்குத் தெரியாதா? அவசர அவசரமா காரியங்களைச் செஞ்சுட்டு நிதானமா வருத்தப்படுவ நீ! சின்ன வயசுல இருந்த அதே மாதிரி தான் இன்னமும் இருக்க! உன்னைப்போயி தப்பா நெனப்பேனா?”

    “ரொம்ப தேங்க்ஸ்க்கா” என்று ஃபோனை வைத்தவள் மனது இப்போது குதூகலமாயிருந்தது. “அக்கான்னா அக்காதான்” என்று நினைத்துக் கொண்டாள்.

    அடுத்து ஃபோன் செய்ய வேண்டிய ஆளை நினைத்த போது அவளுக்கு வயிறு கலங்கியது. நாத்தனார்.. அதிலும் கோபித்துக் கொண்டு போன நாத்தனார். என்ன சொல்லி சமாதானப்படுத்த? மிகவும் யோசித்தவள் கடைசியில் உண்மையைச் சொல்லி விட வேண்டியது தான் என்ற முடிவுக்கு வந்தாள்.

    அதேபோல ஃபோனைச் சுழற்றினாள். மறு முனையில் எடுத்தபோதே மன்னிப்புக் கேட்டாள். நாத்தனார் கொஞ்சம் இறங்கி வருவது போலத் தோன்றவே விஷயம் முழுவதையும் சுந்தரத்துக்கு வந்த ஆபத்தையும் சேர்த்துக் கொட்டித் தீர்த்து விட்டாள்.

    “அண்ணி! இவ்ளோ நடந்திருக்கா? அண்ணன் என் கிட்ட ஒரு வார்த்தை கூடச் சொல்லல்ல! நிகில் நடுவுல ரெண்டு தரம் வீட்டுக்கு வந்தான் ஏண்டா ஒரு மாதிரி இருக்கன்னு கேட்டதுக்கு ஒண்ணுமில்ல அத்தன்னு மழுப்பிட்டானே!”

    “அதெல்லாம் ஒண்ணுமில்ல! எல்லாத்தையும் உங்ககிட்ட சொல்லி உங்களையும் ஏன் மனசு கஷ்டப்பட வைக்கணும்னுதான் சொல்லல்ல! ரொம்ப சாரிம்மா! நீ அன்னிக்கு ஆசையா வீட்டுக்கு வந்த!”

    “பரவாயில்லீங்க அண்ணி! நாம அடுத்த வாரமே ஒரு நாள் போவோம் சரியா?”

    “கண்டிப்பா” என்று சொன்னவள் அதே போல மறு வாரமே நாத்தனாரோடு மனம் போல ஷாப்பிங் போய் வந்து திருப்தியாகச் சமைத்துச் சாப்பிட்டு ஜாலியாக இருந்தார்கள்.

    கனவிலிருந்து மீண்டாள் கல்யாணி.

    இந்தக் கம்ப்யூட்டர் தான் தன் வாழ்க்கையை எப்படி மாற்றி விட்டது? முதலில் நிறைய சந்தோஷம், பணம் எல்லாம் கிடைத்தது. அதன் பிறகு அவமானம், அவச்சொல், பண நஷ்டம் எல்லாம் உண்டாக்கியது. யோசித்துப் பார்த்தாள் கல்யாணி “கம்ப்யூட்டர் நஷ்டம் உண்டாக்கியதா? இல்லை உன் பேராசை நஷ்டம் உண்டாக்கியதா? என்று அவள் மனசாட்சி தட்டிக் கேட்டது.

    “ஆமாம்! என் பேராசைதான் எனக்கு எதிரியாக வந்தது. கம்ப்யூட்டர் என்பது இன்றைய நாளின் அத்தியாவசியம். ஆனால் அதன் நல்லது கெட்டது தெரிந்து உபயோகிக்க வேண்டும். அதிலும் இண்டர் நெட் என்பது தொழில் நுட்பப் புதையல். யாருக்கு என்ன தகவல் வேண்டுமோ அவை அனைத்துமே விரல் நுனியில் அதில் கிடைக்கும். அதனாலேயே அதை மிகவும் ஜாக்கிரதையாகக் கையாள வேண்டும். ஏதாவது ஒரு எழுத்து மாறிப் போனால் கூட மிகவும் அசிங்கமான மனதைத் தூண்டும் விதமான தகவல்கள் கிடைக்கும் அபாயமுள்ளது.

    எப்படி துப்பாக்கி சுடுபவர்கள் அதை மிகவும் ஜாக்கிரதையாகக் கையாளுகிறார்களோ அதே போலத்தான் நாமும் இண்டர் நெட்டைக் கையாள வேண்டும். இதையெல்லாம் அறியாத பல பெண்கள் இருக்கிறார்கள். நாம் ஏன் அவர்களுக்கு இதன் ஜாக்கிரதை பற்றிச் சொல்லிக் கொடுக்கக் கூடாது?” என்று தோன்றியது கல்யாணிக்கு.

    முதல் தனக்கு தெரிந்தவர்கள் அவர்களுக்குத் தெரிந்தவர்கள் என்று எல்லோரிடமும் இண்டர் நெட் பற்றியும் அதன் பயன், ஆபத்து இரண்டைப் பற்றியும் எடுத்துக் கூறினாள். இது சம்பந்தமான ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கூட அவள் கலந்து கொண்டாள். அதில் மிகவும் நல்ல பெயர் அவளுக்கு. தனக்குக் கிடைத்த கசப்பான அனுபவத்தை மற்றவரோடு பகிர்ந்து கொண்டு அவர்களுக்கு அந்த அனுபவம் நேராமல் காத்தாள்.

    இப்போதெல்லாம் கல்யாணி யாருடனும் சேட்டிங் செய்வதில்லை. சுந்தரத்துக்குப் பிரமோஷன் கிடைத்ததும் பிரீதாவே வலிய இரு முறை ஃபோனில் பேசி சேட்டிங்கில் வரச் சொன்னாள். ஆனால் கல்யாணி அதற்கெல்லாம் இடம் கொடுக்கவேயில்லை. வீட்டை கவனித்துக் கொண்ட நேரம் போக மற்ற நேரம் வேலை செய்து திருப்தியாகச் சம்பாதிக்கிறாள்.

    இதிலெல்லாம் சுந்தரத்துக்கு ஏகப் பெருமை.

    பூஜை சிறப்பாக நடைபெற்றது. சுமதி அக்கா, கல்யாணி இருவரும் சேர்ந்து வருபவர்களுக்கு விருந்து தயாரித்து விட்டார்கள். செல்வி எல்லாரையும் வரவேற்று உட்கார வைக்கும் பொறுப்பையும், பூஜைக்கு வேண்டிய பொருட்களை எடுத்துக் கொடுக்கும் பொறுப்பையும் செய்தாள். வந்திருந்த உறவினர்கள் அனைவரும் மனாதார சாமி கும்பிட்டு வயிறாரச் சாப்பிட்டு விட்டு வாழ்த்தியபடி சென்றார்கள்.

    அனைவரும் விடை பெற்றுக் கொண்டு போயாகி விட்டது.

    வீட்டில் கல்யாணி, சுந்தரம் மற்றும் நிகில் இந்த மூவர் தான்.

    இதோ நிகில் இன்னும் ஒரு மாதத்தில் அமெரிக்கா கிளம்புகிறான். அதற்குள் செய்ய வேண்டியது ஏராளம் இருக்கிறது. தேவையான சாமான்கள் வாங்க வேண்டும், உணவுப் பண்டங்கள் பார்சல் செய்ய வேண்டும், நிகிலுக்கு அடிப்படைச் சமையல் கற்றுக் கொடுக்க வேண்டும், நிகிலை அழைத்துக் கொண்டு வட பழனி முருகன் கோயிலுக்குச் செல்ல வேண்டும் இப்படிப் பல.

    எல்லா வேலைகளும் முடிந்து நிகில் அமெரிக்கா கிளம்பும் நாளும் வந்து விட்டது.

    நடு இரவு 2:30க்கு ஃபிளைட். 12 மணிக்கு இவர்கள் ஏர்போர்ட் சென்று விட்டார்கள். விமானம் கிளம்பும் மூன்று மணி நேரத்துக்கு முன்பே பயணிகள் தங்கள் உடமைகளோடு உள்ளே சென்று விட அதாவது செக் இன் செய்து விட வேண்டும் என்பதால் ஒரு மணி வாக்கில் நிகிலிடம் பிரியா விடை பெற்றுக் கொண்டு வெளியில் வந்தனர் கல்யாணியும் சுந்தரமும். இருவர் கண்ணிலும் ஆனந்த வெள்ளம், கவலைக் கண்ணீர் இரண்டும் சேர்ந்து காணப் பட்டது.

    ஏர்போர்ட்டிலிருந்து திரும்பும் டாக்சியில் ஆதரவாகக் கணவனின் தோள் மேல் சாய்ந்த கல்யாணியை மெதுவாகத் தட்டிக் கொடுத்தான் சுந்தரம். டாக்சி விரைந்தது. மானசீகமாக நிகிலுக்கு டாட்டா காட்டியபடி வீடு திரும்பிக் கொண்டிருந்தனர் அந்தத் தம்பதி.

    முற்றும்.

     

    படத்திற்கு நன்றி: http://www.teluguone.com/nri/thkts/pages/events-2-387.html

    Share
  • காவேரி நீர் திறந்து விடக் கோரி ஆர்ப்பாட்டம்

     

     
    Tomorrow 10-10-12 Wednesday 4pm at Chepauk Stadium (oppsite to Govt Guest house)

    Thanks & Regards

     

    S.Selvaragu-PRO 

    (Film & Channel)
    9003024334
    9382209649
    8015765631
    selvaragu.s.pro@gmail.com
    Share
  • Welcome to view MOON TV

     

    Selvaragu

    We would like to introduce ourselves “Moon TV” GEC And  News & Current Affairs Channel, which was officially launched on 20th March 2009..


             “Moon TV” is a 24X7 Channel We broadcast programs for all genres.We are telecasting more informative programs and our infotainment programs include reality shows, talk shows, game shows, health shows, spiritual shows, lifestyle, travel, cooking, science, fiction, history, comedy, children’s television shows and much more.

             

               The Channel is blended with young and experienced professionals who contribute their new and innovative ideas to all program.

     

               The Channel is going to have a very good reception in market and acceptance among the viewers.

     

    The shows are………

    Education: Kalvi Selvam

                       Phuthiyana Karpoom

    Break Fast Show: Thenkoodu

    DOCTOR”S SHOW: Nalam Kapoam

    BUSSNESS: Neengalum Sambathikkalam

                           Vanga Virka

    GAME SHOW: Sollungal Vellungal

    News:  Moon Muthirai Seithigal

    Islamic programe: KI PEE 570- Islamiya Varalaaru

                  Historical: Sarithiram Saivoum

                   Kids Show:   Lolipup

                  Gluf band:  Valaikuda Nigalchigal

     MOON TV is a Free to air channel and is currently transmitting in IS 17 satellite whose orbital placement is 66* East and is available in 130 countries across the globe for the development of youth. It broadcasts its programs in the universal language of Tamil and reaches millions of Tamil speaking people across the world.

    Penetration across the countries

             MOON TV channel is available in Tamilnadu Arasu Cable and UAE, Saudi Arabia, Kuwait, Oman, Bahrain, Qatar by E Vision via its Direct to Home services whose connectivity reaches to 1.2 Million households and it being a Free to air channel is tuned by millions of people with the help of 12 feet dish antenna is and reaches a connectivity of 1 Million households.

             Moon TV is also available via People TV., LBN in Srilanka reaching up to 1.2 Million households.

    . Kindly request you to inform that our Moon channel programs and FPC publish in  your esteemed dailys, magazines and websites.

    Thanking you,

    MOON VISION PRIVATE LIMITED

    M P M ABDUL CADER

    Chief Operationg Officer

     

     

     

    PLACE:Chennai

     

    DATE:  09-10-2012

    Share
  • பெட்டைகள்

    தமிழ்த்தேனீ

     

    ஒரு பெட்டைக் கோழிக்கும் கட்டுச் சேவலுக்கும் ஊடல்.  வாக்குவாதம் முற்றியது.

    “இதோ பாரு இப்பிடி இனிமே  எல்லாத்துக்கும் எங்கிட்ட வாக்குவாதம் செஞ்சே, மனுஷங்க மாதிரி நானும் உன்னை  விவாகரத்து செஞ்சுடுவேன். நான் மத்தவங்க மாதிரி இல்லே மானமுள்ள ஆம்பிள்ளை” என்றது கட்டுச் சேவல்.

    “நீ எப்பவும் பெட்டைதான். சேவலாக முடியாது”, என்றது. விதிர் விதிர்த்துப் போனது பெட்டைக் கோழி.

    “ஓஹோ  இந்த  ஆம்பிள்ளைத் தனத்தெல்லாம் எங்க கிட்ட மட்டும் காட்டுங்க . யாராவது கையை  ஓங்கிட்டு  வந்தா உடனே ஆம்பிள்ளைங்கறதை எல்லாம் மறந்துட்டு கொக்கரகோன்னு ஓடிப் போயிடுங்க.

    காலமே கெட்டுப் போச்சு..நீங்க  என்னவேணா செய்வீங்க. இப்பல்லாம் ஆம்பிள்ளைங்க,பொம்பளைங்க  எல்லாருக்கும்   வெவஸ்தையே இல்லாமப் போச்சே. விவாகரத்து செஞ்சாலும் செய்வீங்க.  மனுஷனுக்குதான் அறிவில்லாம போயிடிச்சுன்னா, இயற்கையா வாழற நமக்குமா இப்பிடி புத்தி போகணும்….?    ..இனிமே விளையாட்டுக்கு கூட இப்பிடி சொல்லாதீங்க”, என்று கண்ணைக் கசக்கியது  பெட்டைக் கோழி,  தலையைக் குனிந்துகொண்டு.  

    “அப்பிடி வா வழிக்கு ” என்றது சேவல் தலையை நிமிர்த்தி  ஆணின் கர்வத்துடன்.

    ஒரு பெண் தன்னுடைய கணவனிடம் ஏதோ வாக்குவாதம் செய்து கொண்டிருந்தாள். அது என்னவென்று அறிய பெட்டைக் கோழிக்கும் கட்டுச் சேவலுக்கும் ஆசை. அவர்கள் பக்கமாக இரண்டும்  ஏதோ காரியம் இருப்பது போன்ற பாவனையுடன் அருகில் சென்றன.

    அங்கே, அந்தப் பெண் அவள் கணவனிடம் சொல்லிக் கொண்டிருந்தாள், “இதோ பாருங்க, திருப்பி திருப்பி பயித்தியம் மாதிரி, சொன்னதையே சொல்லாதீங்க. ஆமா நான் தெரியாமத்தான் கேக்கறேன்,  நாமே ரெண்டு குழந்தைகளை பெத்து வெச்சுருக்கோமே, அதுங்களுக்கு என்னவழி?

    இப்போ காலம் இருக்குற இருப்புல, நம்ம கையில தேவையான காசு இருந்தாதான் நாமளும் சுகமா இருந்து அதுங்களையும்  வாழ வைக்க முடியும். புரியுதா?”

    அதற்கு அந்தக் கணவன் “சரிம்மா,  சரி” என்று வேகமாக  தலையை ஆட்டிவிட்டு, ” நான் என்ன சொல்ல வரேன்னா…” என்று இழுத்தான்.

    உடனே அவள் “போதும் நீங்க என்ன சொல்லப்  போறீங்க, என்ன இருந்தாலும் உங்களைப்  பெத்தவங்க அவுங்க , உங்களைப் படிக்க வெச்சு ஆளாக்கி நீங்க  ஆசைப்பட்டா மாதிரியே என்னையும் உங்களுக்கு கட்டி வெச்சவங்க அவுங்க.  அவுங்களுக்கு இப்போ உடம்பு சரியில்லைன்னா நாமதானே கவனிக்கணும்,நம்ம கடமை இல்லையா இது.”  இதானே சொல்லப் போறீங்க?

    “கேட்டுக் கேட்டு காது புளிச்சுப் போச்சு. இதோ பாருங்க இப்போ நாம ஊருக்குப் போனா  மொத்த செலவும் நம்ம தலையிலெதான் விழும். உங்கப்பாக்கு ஹார்ட் அட்டாக். அவசர சிகிச்சை முடிஞ்சு பாத்துகிட்டு இருக்காங்க. அது ரொம்ப நல்ல மருத்துவமனை, நல்லா பாத்துப்பாங்க. இப்போ நாம அங்க போனா,  எல்லா செலவும் நம்ம தலையிலதான் விழும். அதுனாலதான் சொல்றேன், நீங்க சும்மா இருங்க எல்லாத்தையும் நான் பாத்துக்கறேன்.      அப்பிடி யாராவது கேட்டா உங்களுக்கு உடம்பு சரியில்லைன்னு சமாளிச்சுக்கறேன், புரியுதா” என்றாள். 

    உடனே சரி சரி என்று தலையை ஆட்டினான் கணவன்.

    இப்போது பெட்டைக் கோழி சேவலைப் பார்த்து, “என்னைப் பெட்டை என்று திட்டினீங்களே, இப்போ சொல்லுங்க  யாரு பெட்டை?” ன்னு அப்பிடீன்னுது……..? 

    நிமிர்ந்திருந்த தலையைக் குனிஞ்சு பரிதாபமாகப் பார்த்தது சேவல்!!!!

    Share
  • ஆண்மீக இச்சை..! (இது எழுத்துப் பிழை அல்ல….மனத்துப் பிழை…)

     
     
    ஜெயஸ்ரீ ஷங்கர், தில்லை.
     
    வாசல் தெளித்துக் கோலம் போட வாளியில் தண்ணீரோடு சென்ற சந்திராவுக்கு நிலைப்படி தடுக்கி த்ண்ணீர் தளும்பி விழவும் … மேலும் அதிலேயே அவளது காலடி தடுக்கி வழுக்க……  சுதாரித்தவள், என்னாச்சு இன்னைக்கு காலங்கார்த்தாலே இப்படி ஒரு தடைச்சகுனம்  இன்றைய நாள் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் சுமுகமாப் போகணுமே”
     

    சகுனமே சரியில்லையே….என்று எண்ணிக் கொண்டே புள்ளி வைத்துக் கோடு இழுக்க…கோலம் வராமல், கோடுகள் எங்கேயோ போய் நின்று வரமாட்டேன் என்று அடம் பிடித்தது.

    அழித்து…அழித்து மனதில் உள்ள கோலம் விரலிடுக்கில் அடங்காமல் அழிச்சாட்டியம் செய்ய….கூடவே நகரும் மேகங்களாக மனம்..எண்ணத்தில் மாறிக் கொண்டே…கை கோலத்தைக் அவசரத்தில் கிறுக்கிவிட்டு .இன்று ஞாயிற்றுக் கிழமை தானே….அவசர அவசரமாப் பறக்க வேண்டாம்…என்று எண்ணியபடியே நிமிர்ந்தவள்… “அம்மா..நேற்று ..எல்லாம் தான் படிச்சேன்..இப்போ ஒண்ணுமே ஞாபகத்துக்கு வரலைம்மா…” என்ற பிரவீன் தன் கவலையை பயத்துடன்  சொல்கிறான்.

    என்னடா பிரவீன் ?…இப்பப் போய் இப்படிச் சொல்றே….இது க்வாடர்லி எக்ஸாம்ஸ் ….நீ சரியா எழுதணும்..கண்ணா…..இன்னும் நேரம் இருக்கு..நாளைக்குத் தானே பரீட்சை….பயப்படாமல் .போய் உட்கார்ந்து நிதானமாப்  படி…எல்லாம் மனசில் ஏறும் ….என்று சொல்லிக் கொண்டே பாலை அடுப்பில் ஏற்ற….எண்ணம் பின்னோக்கிச் சென்று கால் வழுக்கலில் சென்று நின்றது..! இடரின காலே இடரும்….! எனக்கு என்னாகுமோ…? மனசுக்குள் வழக்கம் போல கறுப்புப் பூனை எழுந்து  நடக்க ஆரம்பித்தது…சந்திராவுக்கு.

    நல்ல வேளை….நான் கீழே விழலை…பிரவீனுக்குப் பரீட்சை நேரம்..இப்பப் .பார்த்து எனக்கு எதுவும் ஆனால்..அவ்ளோ தான்..!நினைத்துக் கொண்டிருக்கும்போதே…பால்…”புஸ்” என்று பொங்கிப்  படமெடுத்தது.

    டேய்..பிரவீன்….சித்தியை எழுப்பி சொல்லித் தரச் சொல்லேன்….என்று குரல் கொடுத்தவள்….சித்ரா…சித்ரா பிரவீனுக்கு கொஞ்சம் கணக்குச் சொல்லித் தாயேன்…ஒண்ணுமே தெரியலைன்னு சொல்றான்.பாவம்…பயப்படறான்…..நீதான் மாத்ஸ் ஜீனியஸ் ஆச்சே … என்றவள்….பையன் நல்லபடியாப் பரிட்சைக்குப் போகணும்..இன்னிக்கு உனக்கு லீவு தானே…? என்று சொல்லிக் கொண்டே காலில் சக்கரத்தைக் மாட்டிக் கொண்டு வேலையில் மூழ்கினாள்.

    படுக்கையை விட்டு எழுந்து நெளிந்த சித்ரா….என்னக்கா…பிரவீன் அஞ்சாவது தானே படிக்கறான்? …என்ன ஐ.ஏ.எஸ்’க்கா படிக்கிறான்..நீ..என்னமோ .இவ்ளோ அலுத்துக்கறே….டேய்..பிரவீன் நோட்புக் எடுத்துண்டு வாடான்னு கொட்டாவி விட்டபடியே…சோம்பல் முறித்து வாயருகில் சொடக்குப் போட்டபடியே சொல்கிறாள்..

    “ம்ம்ம்…உனக்கும் இந்த சொகுசெல்லாம்  இந்த மாசத்தோட கடைசி…. அடுத்த மாசமே…நீயும் கால்ல சக்கரம் தான் கட்டிக்கணும்…சந்தோஷ் உன் கழுத்தில் மூணு முடிச்சுப் போடற வரைக்கும் தான்…நீ இந்த வீட்டு மகாராணி..அப்புறம் நீயும்…என்னை மாதிரியே…கௌரவ வேலைக்காரி, தெரிஞ்சுக்கோ….” சொல்லிக் கொண்டே.

    நம்ம வீட்டு வேலையை நாம பண்றதுக்கு வேலைக்காரின்னு ஏன் நினைச்சுண்டு பண்ணனும்…உரிமையா…அன்பாப் பண்ண வேண்டியது தானேக்கா….நம்ப அம்மா…பாட்டி பண்ணாததையா நீ பண்றே…?.என்று சித்ரா விடாமல் சந்திராவை வம்புக்கு இழுக்கிறாள்.

    “ஏன்னா…..இங்க கொஞ்சம் வரேளா….இந்த பீன்சைக் கொஞ்சம் பொடிப் பொடியா நறுக்கித் தந்தா ஆகாதா…? என்று காப்பியைக் கலக்க ஆரம்பித்தாள்.

    இதோ பாருடா….வேலைக்காரி வீட்டுக்காரரை…வேலை வாங்கறதை…என்று கிண்டலடித்துச் சிரிக்கிறாள் சித்ரா.

    என்ன சந்திரா…இப்போ தான் நியூஸ் பேப்பர் படிக்க ஆரம்பித்தேன்… அதுக்குள்ளே உன் மூக்கு வியர்க்குதா….? அட….இங்க பாரேன்…நம்ம ரவீந்திர பாரதியில். இன்னைக்கு சாயங்காலம் ..உனக்குப் பிடிச்ச சுதா ரகுநாதனின் சங்கீதக் கச்சேரி இருக்காம்..  ரெண்டு பாஸ் அன்னிக்கே போஸ்ட்ல வந்துதே….இன்னைக்குப் போலாம்’ன்னு நினைக்கிறேன் ?   வரியா ? சுதா ரொம்ப நன்னாப் பாடுவா.. .என்றவர்.. தூரத்தில் பாடம் சொல்லிக் கொடுக்கும் சித்ராவைப் பார்த்தார் !   கண்கள் சந்திராவை நோக்கவில்லை.  ! மனசு …நீ வரமாட்டே…எனக்கேத் தெரியும் என்றது.,

    நானா….? என்ன விளையாட்டா…பிரவீனுக்கு நாளையிலிருந்து  கால் பரீட்சை ஆரம்பம்… நானும் வந்துட்டா அவனுக்கு யார் சொல்லித் தருவா…? நான் எங்கேயும்  வரலை…நீங்க போறதுன்னாப் போய்ட்டு வாங்கோ…நான் வேண்டாம்னு சொல்லலை..என்றவள்…பீன்ஸையும் கத்தியும்  கொண்டு வந்து “டொக்கென்று”  வைத்தாள்.

    ஒ.. ..பரிட்சை இருக்கா….சரி.  நான் மட்டும் தனியா எப்படிப் போறது ?  அப்போ …. நான்….   சித்ரா சும்மாத் தானே வீட்லே இருப்பா..?அவளை அழைச்சுண்டு போறேன்…அவளும் வீட்டிலயே அடைந்து கெடக்கா பாவம்…என்றவர்…கண்கள் மச்சினி சித்ராவைத் தேடியது.

    சந்திராவுக்கு நெஞ்சு  திக்கென்றது  !  என்ன சித்ராவா ?   அவள் கல்யாணப் பெண்,  என் கணவனோடு பாட்டுக் கச்சேரிக்குப் போவதா ?  இதென்ன அல்பமான  ஆசை….இவருக்கு..! இந்த வயசில் இந்த ஆசை ரொம்பத் தேவை…இவருக்கு….கஷ்டம்…கஷ்டம்…என்றது  அவளின் மனது.

    கல்யாணம் ஆகப் போறவள்….இப்போதான்.நிச்சயம் ஆயிருக்கு…இப்ப வெளியில்…கச்சேரிக்கெல்லாம் அழைச்சுண்டு போறது அவ்வளவு சரியில்லை..யாராவது பார்த்தால் தப்பா நினைப்பா..நீங்க மட்டும் போய்ட்டு வந்தால் ஆகாதா?

    அடிப் போடி..நீ தான் சுத்த கர்நாடகம்…எந்தக் காலத்தில் இருக்கே இன்னும் நீ…?..எதுக்கெடுத்தாலும்….எப்பப் பாரு…சகுனம்…நாலுபேரு….அது இதுன்னு…சொல்லி பொழுதைப் போக்குவ..சித்ரா  இதுக்கெல்லாம் நேர்மாறு. நீயே பாரேன்….நான் வான்னு கூப்பிட்டால் உடனே சரி வரேன் அத்திம்பேர்ன்னு சொல்வா…நீ வேற எதையும் சொல்லி அவள் மனசையும் கெடுக்காமல் இருக்கணும்…ஆமா….கொடு…கொடு…பீன்ஸை நறுக்கி வைக்கிறேன்…என்று அவசரப்பட்டார்…சபாபதி.

    சித்ரா செதுக்கி வைத்த சிலை.  பளிங்குப் பதுமை !  பேரழகி !  சந்திரா முகத்தில் .. தேமல் மேடு பள்ளங்கள்.  

    சந்திராவுக்குக் கோபம் பொங்கியது.  எப்படியோ அடக்கிக் கொண்டாள். சரி நான் பாட்டுக் கச்சேரிக்கு வரேன்.   சித்ரா வேண்டாம்.  கல்யாணப் பெண் உங்களோடு போவதை நான் விரும்ப வில்லை.

    ஒருதரம் நான் அவளோடு வெளியே உலாவப் போகணும்’ன்னு எனக்கு ஆசை சந்திரா.  நீ வர வேண்டாம், அவள் வரட்டும்.  தப்பா நினைக்காதே !

    என்னவோ செய்யுங்கோ …நீங்களாச்சு…உங்க மாடர்ன் மச்சினியாச்சு.. நான் ஏன் அவள் மனசைக் கெடுக்கப் போறேன்?…நீங்க உங்க மனசை பத்திரமாப் பார்த்துக்கோங்கோ…அது போதும் நேக்கு, என்று சிலேடையாகச்  சொல்லிவிட்டு சிரித்துக் கொண்டே நகர்ந்தாள் சந்திரா. உள்ளுக்குள்ளே அவளின் மனம் அழுதது. கண்ணாடியைப் பார்த்தாள்….கன்னமெல்லாம் வடுக்கள்…இந்த அம்மிக்கல்லு முகத்தை எனக்கே பிடிக்கலை…பாவம்..அவர்…! தன்னோட மனைவி அம்சமா இருக்கணும்னு கனவு கண்டிருப்பார்…விதி…என் லக்ஷணத்தில் அவருக்கு வாய்ச்சிருக்கு….என்று சொல்லிக் கொண்டே கண்ணாடியை விட்டு நகர்ந்தாள்.

    பீன்ஸை நறுக்கிக் கொண்டே…அப்போ…இன்னைக்கு சித்ராவுடன் மோட்டர் பைக்கில் தனியாகப் போகப் போறேன்….என்ற மிதப்பில் கிறங்கியபடியே..”பார்த்த முதல்நாளே….உன்னைப் பார்த்த முதல் நாளே…” என்று சீட்டியடித்தபடியே…மனமெல்லாம்  சித்ரா வர சம்மதிப்பாளா…? என்று யோசனையில் ஆழ்ந்தார் சபாபதி.

    என்னதான் இருந்தாலும்…ஆண்மனம் சபலம் அடையும்,  மரத்துக்கு மரம் தாவும்.  கையில் கொய்யாப் பழமிருக்க  மரத்தில் தொங்கும் மாங்கனிக்கு ஏங்கும் !  பல சமயங்களில் தன்னை மீறி அலைபாயும்..இது தவறு…இது சரி.. என்ற எல்லைக் கோட்டைத் தாண்டுவதில் மகிழும். ஷண நேர சந்தோஷத்தில் கூத்தாடும். விதி விலக்குகள் இருந்தாலும். பெரும்பான்மை யானவர்களின் வரிசையில் தான் சித்ராவின் அத்திம்பேரும்  நின்றார், பெண் குழந்தைகளுக்குத் தகப்பனாயிருந்திருந்தால்  கொஞ்சம் பொறுப்பு வந்திருக்கும். அதற்கும் வழியில்லை இப்போது. நாற்பது வயதை நெருங்கும் சமயம் இளமை அவருக்கு ஊஞ்சல் ஆடுகிறது.  வாலிப முறுக்கு திரும்பிய எண்ணம் அவருக்கு.

    கண்ணருகில்….இளவயதில்….மெழுகு பொம்மை நடமாடிக் கொண்டிருந்தால்…அலைபாயும் மனசோடு அலையும் ஆண்மகனுக்குக் கேட்கவா வேண்டும்.? வயது என்ற சாக்குப் போக்கெல்லாம் அங்கே செல்லாது. குடும்பத்தின் தலைவனாகவே இருப்பினும் உள்ளுக்குள்ளே  ஒரு கண்சித்ராவையே தொட்டு  விட வட்டமிடும்.

    சித்ராவுக்கு “ஹை-டெக்” சிட்டியில் வேலைக் கிடைத்ததும்…அக்கா சந்திராவின் வீடு தான் இருக்கே…அங்கேயே தங்கி வேலை பார்க்கலாம்.என்ற எண்ணத்தில்….சென்னையிலிருந்து ஹைதராபாத்துக்கு தைரியமாக வந்திறங்கினாள் பெற்றோருடன்.. சந்திரா….இவள்  ஒரு ரெண்டு மூணு மாசம் இங்க இருக்கட்டும்… கொஞ்சம் பார்த்துக்கோ..தெரியாத ஊர், புரியாத பாஷை வேற…அதற்குள் இவளுக்கும் சீக்கிரமா ஒரு வரனைப் பார்க்கிறோம்…என்று .சித்ராவை விட்டுட்டு சொல்லிச் சென்றவர்கள்  முழுமூச்சாக வரன் பார்த்ததில் ஒரே மாசத்தில் இங்கேயே ஆக்சிஸ் பாங்கில் வேலை பார்க்கும் சந்தோஷுக்கு நிச்சயம் செய்து விட்டு நிம்மதியானார்கள்.

    அடுத்த மாசம் சித்ராவின் கல்யாணம். அதற்கான ஏற்பாட்டில் சந்திராவும் மும்முரமானாள்…சித்ராவும் இதே ஊரில் வந்து வாழப் போவதில் அவளுக்கு பரம  சந்தோஷம்.  

    டிபன் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் சித்ராவைப் பார்த்து, அப்பறம்… சந்தோஷ் உனக்கு ஃபோன் பண்ணி பேசினாரா? என்று சந்தடிசாக்கில் சந்திரா கேட்க.

    இல்லக்கா…அவரோட அம்மா…சொன்னாளாம்…அடிக்கடி ஃ போன் பண்ணிப் பேசி, அவாளுக்குத் தெரியாமல் வெளில போறது…இதெல்லாம் செய்யக் கூடாதுன்னு. அவங்க கொஞ்சம் ஸ்ட்ரிக்டாம்.  என்னவோ… பெரிசா….இந்தக் காலத்திலும் இப்படியெல்லாம் இருக்காங்க பாரேன்க்கா.  இவரும்…அவங்க சொல்றதைக் கேட்டுட்டு எனக்கு ஒரு தரம் ஃபோனில் சொன்னார்..அவ்ளோ தான். நானும்..என்ன சீப்பா…? சரி. இனிமேல் ஃபோன் பண்ணாதீங்க…கல்யாண மேடையில் சந்திக்கலாம்னு சொல்லிட்டு வெச்சிட்டேன். மனசுக்குள்ளே….இவருக்கும் எனக்கும் ஒத்துப் போகுமா? பிரச்சனை வருமான்னு ஒரே கவலையாத் தான் இருக்கு. ஆனால் இப்போ என்ன பண்ண முடியும்.? அதான் அவசர அவசரமா நிச்சயம் ஆயாச்சே… எல்லாம் தலைவிதிப் படி தான் நடக்கும்.என்று அலுத்துக் கொண்டாள் சித்ரா.

    அக்கா…உன் கணவர் உனக்கு ரொம்ப நல்லபடியா அமைஞ்சுட்டார்… பாரேன்… எனக்குத்  தான் சரியான தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை.!..”என் அம்மா சொல்லிட்டாங்க…..” என்று வக்களித்துக் காட்டியபடியே….இவரை நான் தான் அங்கே போய் மாற்றி என் வழிக்குக் கொண்டு வரணும்….அதுக்கு நான் என்னெல்லாம் பண்ண வேண்டி வருமோ…?என்றாள் சித்ரா.

    அப்படியெல்லாம்  சொல்லாதே சித்ரா..அவங்க கண்ணோட்டத்தில் அவங்க சொல்றது தான் நிஜம். கல்யாணத்துக்கு முன்னாடியே அங்கே..இங்கே..சுத்திட்டு அந்த நேரத்தில் ரெண்டு பேருமே தங்களைப் போல நல்லவங்க இல்லைன்னு ஒரு அபிப்பிராயத்தை ஒருவருக் கொருவர் ஏற்படுத்திக் கொண்டு…அப்பறம்..யதார்த்தமான வாழ்கைச் சூழ்நிலைக்கு திரும்பும்போது, அது கொஞ்சம் முரணாத் தெரியும்.. அப்போதான் பிரச்சனை வரும்.அதற்கு கல்யாணம்’னு ஆனபின்பு ஒருத்தரை ஒருத்தர் சரியாப் புரிஞ்சுண்டு வாழ ஆரம்பித்தால்…எந்த பகட்டும் இல்லாமல் யதார்த்தமாக வாழலாம் இல்லையா? இது மாதிரி நிறைய விஷயங்கள் இருக்கும்..பெரியவர்கள் எதையும் தெரியாமல்  சொல்ல மாட்டா.

    அதுவும் சந்தோஷ் அவர்களுக்கு ஒரே பிள்ளை.அதனால் கூட அவரோட அம்மா நிறைய செல்லம் கொடுத்து வளர்த்திருக்கலாம். நிச்சயம் நீ போனபிறகு அவர்கள் உன்னையும் மகளாகத் தான் பார்ப்பார்கள். பெண் குழந்தைகள் இல்லாத வீட்டில் மருமகளை மகளாகத் தான் நினைச்சுப் பார்ப்பா…நீயாக எதையும் மனதில் போட்டுக் குழப்பிக்காதே..அவர்களைப் பார்த்தால் ரொம்ப நல்ல மாதிரியா தான் தெரிகிறார்கள். யாருமே.. மருமகளை துவேஷமாக நினைப்பதில்லை. அதே சமயம் வந்த பெண்….அவர்களது மகனை உரிமை அது இதுன்னு யோசிச்சு பெற்றவர்களிடம் இருந்து ஒரேயடியாப் பிரிக்க முயலும்போது தான்….அவர்களால்  தாங்க முடியாது…எப்பவும் ரெண்டு பக்கமும் பார்க்கணும்.

    ஆனாலும்..ஒண்ணு சொல்றேன் கேட்டுக்கோ..நாம எப்போ..நம்ம கணவரோட..குடும்பம் தனின்னு பிரிச்சுப் பார்க்காமல் அந்தக் குடும்பத்தில் உன்னையும் ஒருத்தியா மனதோட இணைத்துப் புகுத்திக் கொள்கிறாயோ..  அப்போது தான் அவர்களுக்கும் நம்ம குடும்பத்தின் மேலயும் உன் மேலயும்  ஒரு பற்றும்..பாசமும்…மதிப்பும் உண்டாகும்.  எப்பவுமே…உரிமைகளை யாருமே இந்தா… எடுத்துக்கோன்னு கூப்பிட்டுக் கையில்  தருவதில்லை…அதை நாம் தான் யாருக்கும் மனம் வருத்தப் படும்படியாக நடந்து கொள்ளாமல் உரிமையோடு  எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு குடும்பத்தில் மருமகளாக இருப்பது கூட கம்பி மேல் நடப்பது போலத் தான். அதே போல ஒரு மாமியாராக பொறுப்பு எடுப்பதும் ரொம்ப கஷ்டம் தான். தெரியுமா…?  இதெல்லாம் ஆண்களுக்கு அவ்வளவா பிரச்சனையாக இருப்பதில்லை.

    அக்கா…போதும்…உன் “சந்திரோபதேசம்….”. இப்படியெல்லாம் சொல்லி என்னை இன்னும் பயமுறுத்தாதே..ப்ளீஸ். ஞாயிற்றுக் கிழமையும்  அதுவுமா..நன்னா வீட்டில் ரெஸ்ட் எடுக்கணும்..சாயங்கால வேளையில் எங்கேயாவது வெளியில் போகணும்..ஹோட்டல்ல டின்னர் சாப்பிடணும்…வந்து அக்கடான்னு படுத்து நிம்மதியாத் தூங்கணும்.அப்போ தான் அடுத்த ஒரு வாரத்துக்கு சரியா வேலை பார்க்க முடியும்.

    ஆமாம்மாம்…வேலைக்குப் போகும் உங்களுக்கென்ன சண்டே ரெஸ்ட் டே…என்னை மாதிரி “அகழியிலிருக்கும் முதலைக்கு அதுவே வைகுண்டம் போல”…இருக்கறவளுக்கு ஏது ரெஸ்ட் டே..! கேட்டால்..வருஷம் முழுதும் உங்களுக்கு ரெஸ்ட் தானேன்னு சொல்வேள்..எங்களுக்குத் தானே தெரியும்…ஒரு நாள் நாங்க ரெஸ்ட் எடுத்தால்…எப்படி உங்க டப்பா….டான்ஸ் ஆடும்னு…!

    சித்ரா…இன்னைக்கு இவர் ரவீந்திர பாரதியில் சுதா ரகுநாதனோட பாட்டுக் கச்சேரிக்குப் போறாராம்…உன்னையும் அழைச்சிண்டு…போயிட்டு வா.

    என்னக்கா…நீ போறது தானே…? நான் என்னத்துக்கு…? நான் அத்திம்பேரோட  எங்கியும் போகலை.

    பிரவீனுக்கு நாளைக்கு பரீட்சை ஆரம்பம்…நான் தான் கூட உட்கார்ந்து சொல்லித் தரணும். இல்லாட்ட படிக்க மாட்டான். அத்திம்பேர் என்ன உன்னை கடிச்சா முழுங்கப் போறார்….?  அவரே சொன்னார்…சித்ராவை அழைச்சுண்டு போறேன்னு…போயிட்டு  வாயேன். அப்படியே நல்ல ஹோட்டல்ல நீ சொன்ன மாதிரி டின்னர் சாப்பிட்டுட்டு வா,.எனக்கும் வேலை மிச்சம்.

    ஐயய்யோ… இது என்ன? இல்லக்கா….நான் இவரோட தனியால்லாம் போகலை…சரிப்பட்டு வராது.

    எது சரிப்பட்டு வராது……? நீயா ஏன் எப்படியெல்லாமோ நினைக்கறே. உன் அத்திம்பேர் என்னடான்னா…சித்ரா ரொம்ப மாடர்ன், பிராட் மைன்டெட்  அப்டீன்னு பெருமை பேசறார்…நீ இப்படி சொல்றே…நானே போயிட்டு  வான்னு சொல்றேன்..உனக்கும் ஒரு அவுட்டிங். ஏதோ உன்னையும் அழைச்சுண்டு போகணும்னு அவருக்கு ஒரு ஆசை…இனிமேல் உனக்கு கல்யாணம் ஆயாச்சுன்னா முடியுமா? சுதா ரகுநாத்தின் கச்சேரி…ரொம்ப நன்னாருக்கும்…மிஸ் பண்ணாதே. இல்லாட்டி நீ பிரவீனுக்கு கணக்குச் சொல்லிக் கொடு..நான் போய்ட்டு வரேன்…என்று சந்திரா சொன்னதும்..

    அம்மாடி…அந்த பனிஷ்மென்ட் எனக்கு வேண்டாம்…நானே போறேன்…. நீயே உன் வாழை மட்டைக்குப் பாடம் எடு…அது உன்னால் மட்டும் தான் முடியும்..என்று கையைக் கூப்புகிறாள்.

    நேரம் ஆக ஆக…சித்ரா…போகணுமா..வேண்டாமா..? என்ற குழப்பத்தில் இருந்தாள். அதே சமயம் கச்சேரியை விடவும் மனசு இல்லை.சரி.. அத்திம்பேர் தானே…போய்ட்டு வரலாம்…என்று கிளம்பத் தயாரானாள் சித்ரா.

    அவளுக்கும் முன்னால் சபாபதி கிளம்பி மைனர் மாதிரி சென்ட்…மணக்க தயாரா வந்து நின்றபோது  சந்திராவே  அசந்து மயங்கிப் போனாள்.

    என்ன அத்திம்பேர்…அசத்தலா கிளம்பிட்டேள்…சுதா ரகுநாதன்னா…. அவ்ளோ இஷ்டமா?…அவங்க மேடையில் கச்சேரி பண்ண வராங்க…நினைவு வெச்சுக்கோங்க…என்று கிண்டல் செய்தாள் சித்ரா.

    இவரும் சிரித்துக் கொண்டே…மனசுக்குள்….அடி அசட்டுப் பெண்ணே….”மனசுலோனி மர்மம்….தெலுசுகோ…..” என்று ராகம் இழுத்தார்..

    ஒரு வழியாக கிளம்பி மோட்டர் பைக்கில் இருவரும்  ஏறியாச்சு…!

    முன்புற கண்ணாடியை சரி செய்தவர்…அப்போ…போலாமா..என்று கண்ணாடி வழியாகவே இவளைப் பார்த்துச் சிரித்தபடியே  கேட்க,

    இவளும்…கண்ணாடியைப் பார்த்தே…”ம்ம்ம்…ம்ம்ம்” என்று பதில் சொன்னாள் சித்ரா.”சிரிப்பைப் பாரு…” என்று அவரை இவள் மனம் ஏளனம் செய்தது.

    ஏனோ மனதிற்குள் ஊசியாகக் குத்த புது மாதிரியாக இன்ப வேதனையை உணர்ந்தாள். “சே…சே…என்று மனசைக் கட்டுப் படுத்தி பார்வையை வேறு புறம் திருப்பி..”நல்லதும்..கெட்டதும் …நெஞ்சுக்குள்ளே. .” அதை மீறி வெளியே வரவேண்டும்…என்று மனசுக்குள் சொல்லிக் கொண்டாள். இருந்தும்…சித்ராவின் “யௌவன கர்வம்” பார்ப்பவர்கள்  எல்லாம் தவறுபவனாகவே….ஆள்காட்டிக் கொண்டிருந்தது.

    அங்கங்கே…சிக்னலில் நிறுத்தும் போது போடும் ப்ரேக்கில்…சர்வ ஜாக்கிரதையாக தன்னை ஒடுக்கிக் கொண்டு இறுக்கமாக பின்னால் நகர்ந்து தள்ளிக் கொண்டவள்……..இதுல…இந்தப் பிரச்சனை எல்லாம் வேற இருக்கா…அட பகவானே…தெரியாமல் போச்சே….என்று தடுமாறி  எண்ணியவள்…

    அடிக்கடி கண்ணாடியைப் பார்க்கும் சாக்கில்  அவரது கண்கள் தன்னைத் தொட்டுச் செல்வது போலவே உணந்தாள் சித்ரா.

    நான் வர வேண்டாம்னு தான் நினைச்சேன்…இந்த சந்திரா கேட்டால் தானே…போயிட்டு வா….போயிட்டு வான்னு…கட்டாயப் படுத்தி அனுப்பினாள்…இருக்கட்டும் அவளை…வீட்டுக்கு போய் கவனிச்சுக்கறேன்….என்று மனசுக்குள் சிடு சிடுத்தவள்….

    அத்திம்பேர்….உங்களுக்கு தான் சிரமம்….இத்தனை தூரம்…ரவீந்திர பாரதி…”சலங்கை ஒலி ” சினிமாவில் கமலஹாசன்..ஷைலஜா…டான்ஸ் ஆடுவதைப் பார்க்க வரும் இடம் இது தானே…என்று கேட்க..

    ஆமாம்…அதே தான் சித்ரா…அந்தப் படம் பாதி இங்கே தான் ஷூட்டிங் ஆச்சு. அப்போ…நான்…என்று ஏதேதோ பேசிக் கொண்டே வந்தவர்….இதோ வந்தாச்சு…பிடிச்சுக்கோ….என்று “விர்ரென்று” அந்த ஏற்றத்தில் ஏற்றும் போது…அந்த செங்குத்தான ஏற்றத்தில் பைக் ஜோராகச் சென்றது.

    சித்ராவின் மனசுக்குள்….சந்தோஷிடம் சொல்லி இப்படித் தானும், அவரும்  பைக்கில் வெளியில் செல்ல வேண்டும் என்ற ஆவலைத் தூண்டியது. இதுவே இன்று அவரோடு வந்திருந்தால் எவ்வளவு இனிமையாக இருந்திருக்கும்….என்றும் எண்ணிக் கொண்டாள்.

    உள்ளே சென்று மூன்றாவது வரிசையில் இடம் பிடித்து அமர்ந்ததும்…அந்த பிரம்மாண்டமான ஹாலில் “ஜில்லென்ற” குளிரில்…மெத்து மெத்தென்ற இருக்கையில் அமர்ந்தபடியே….அதன் அழகை ரசித்துக் ஆச்சரியத்துடன் ரசித்துக் கொண்டிருந்தவளுக்கு அந்த நிமிடங்கள் வேறெந்த நினைவுமின்றி  இன்பமாகக் கரைந்து கொண்டிருந்தது.

    திடீரென கோரஸாக  குரல்கள்….ஏய்…சித்ரா….”ஏன்ட்டி….நூவு…இக்கட….! இதநேனா….நீ காப்போயே… வாரு..”
    (என்ன…நீ… இங்க…! இவரா…உனக்கு வரப் போறவர்…?) என்று அருகில் அமர்ந்திருந்த  சபாபதியைப் பார்த்து…சிரித்தபடியே  கேட்க…..அவர்கள் கேள்வி இவளை உலுக்க..திடுக்கிட்டுத் திரும்பினாள்.

    (இதைக் கேட்டதும் சபாபதி…கண்களில் சந்தோஷத்தோடு முகத்தை எங்கேயோ திருப்பிக் கொண்டு பார்த்தாலும் மனம் முழுதும் ஏதோ பரவசமாக உணர்ந்தார்….அவருக்கு மனசுக்குள் ஆஹா…என்று இச்சையை அதிகமாக்கியது….)

    அவர்கள் கண்களில் குறும்பு…ஹேய்…நோ…நோ…நோ..நோ….ஹி இஸ் மை சிஸ்டர்’ஸ் ஹஸ்பெண்ட்” என்று அவசரமாக சொல்ல…!

    சாரி…சாரி….வெரி சாரி….ஏமி அனுகக்கு… (ஒன்றும் நினைச்சுக்காதே…) என்று கலைந்து போனார்கள்.

    சித்ராவின் தர்ம சங்கடமான நிலைமை இப்போது சபாபதியையும் தாக்க…! என்ன சித்ரா…..தப்பா நினைக்காதே…தெரியாமல் கேட்டிருப்பா….உன் கொல்லீகா…? என்று பேச்சை மாற்றப் பார்த்தார்.

    இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே….சந்தோஷின் அப்பாவும்..அம்மாவும் உள்ளே நுழைந்து அரங்கை ஒரு பார்வை பார்த்துக் கொண்டிருக்கும் போதே..பளிச்சென்று அவர்கள் கண்ணில் பட்டார்கள் இவர்கள் இருவரும்..

    அந்த இடத்தில் அப்படியே நின்ற சந்தோஷின் அம்மா….என்னன்னா…. அங்கே பாருங்கோ…அவள் நம்ம கல்யாணப் பெண் சித்ரா மாதிரி இருக்காளே….சித்ரா தானே..? என்று சந்தேகத்தை கேட்க..

    அட…ஆமாம்…சித்ராவே தான்…அவர்….அவர்….ஏய்…அவர் சபாபதிடி….அவாளும் குடும்பத்தோட கச்சேரிக்கு வந்திருக்கா போல..!

    இல்லையேன்னா ..சந்திராவைக் காணோம்…இவா ரெண்டு பேரும் மட்டும் தனியா வந்திருக்கா மாதிரி தெரியறது…!
    என்ன பழக்கம் இதெல்லாம்…! நாம் சரியா இந்தக் குடும்பத்தைப் பத்தி விசாரிக்காமல்  தெரியாமல் தப்பு பண்ணிட்டோமோ…?

    நம்ம பையனுக்கு நிச்சயமான பெண்ணை இவர் வெளில அழைச்சுண்டு வரதாவது..? கொஞ்சம் கூட நன்னாயில்லைன்னா..நன்னா விசாரிச்சு பெண்ணை நிச்சயம் பண்ணியிருக்கணும்….தப்புப் பண்ணிட்டோமோ…வெறும் அழகையும், வேலையையும் மட்டும் பார்த்து…என்று புலம்ப ஆரம்பித்த சந்தோஷின் அம்மாவைப் பார்த்து அவர்.

    என்ன இது கற்பகம்?….கண்ணால் காண்பதுவும் பொய்…காதால் கேட்பதுவும் பொய். .கொஞ்சம் அமைதியா இரேன்..டக்கு டக்குன்னு நீயா ஒரு முடிவுக்கு வராதேன்னு எத்தனை தடவை சொல்லியிருக்கேன். சித்ராவை நமக்குத் தெரியாதா என்ன..? கொஞ்சம் பொறுமையா இரு,,,,பாப்போம்..என்றதும்..

    எனக்கு மூட் போச்சு…கிளம்புங்கோ…ஆத்துக்குப் போவோம்…கச்சேரியும் வேண்டாம்..கிச்சேரியும் வேண்டாம்….என்று கற்பகம் கிளம்பத் தயாராகத திரும்பவும்..

    வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சித்ரா…இவர்களை கவனிக்கவும்….. .மனசுக்குள் ஏக மகிழ்ச்சியில் டக்கென்று சீட்டை விட்டு எழுந்து, வேகமாக நடந்து போய் அவர்களது கையைப் பிடித்து…..சந்தோஷமாக பேச…அங்கிருந்த மூவரும்…சபாபதியை நோக்கி வர……!

    சந்தோஷின் அப்பா…தான் மனைவியைப் பார்த்துக் கண்களால்….” இப்போப் பார்த்தியா? அவசரக் குடுக்கை….”என்று சீண்டியது.

    இவரும் எழுந்து…கைகுலுக்கி….நானும் உங்களை இங்கே சந்திப்பேன்னு நினைக்கவே இல்லை…சர்ப்ரைஸ்…! என்று சிரிக்க.

    சந்திரா வரலையா..?

    பையனுக்கு பரிட்சை சார்… சித்ரா தான் வீட்டில் போர் அடிக்கறதுன்னு சொன்னா…நான் தமிழ் சங்கத்தில் மெம்பர் பாஸ் வீணாக்க வேண்டாமேன்னு…வந்தோம்…

    குட்…நாங்களும்…அதே தான். சந்தோஷ் தான் டிவீயில் கிரிகெட் மாட்ச் பார்த்துண்டு இருக்கான்…அதான் நாங்க மட்டும் கிளம்பி வந்தோம்…!

    சித்ரா வந்திருக்காள்னு தெரிந்தால் அவனும் உடனே கிளம்பி வந்துடுவான்…என்று மாமி சந்தோஷமாகச் சிரித்தபடியே சொல்ல…

    கூப்பிடலாமா அவனையும்…என்று சந்தோஷின் அப்பாவும் கேட்க..

    அதற்குள்…நிகழ்ச்சியின் ஆரம்பிக்கும் அறிகுறிகள் தென்படுமாறு திரை…விலக..பளீரென்ற அரங்க மேடையின் அலங்காரம் கண்களைப் பறிக்க…அனைவரும் ஒருவித எதிர்பார்ப்பில் அமைதியாகிறார்கள்.

    அம்மா…நீங்க இங்கே வந்து உட்காருங்கோ என்று சித்ரா தனக்கு அருகில் இருக்கும் இருக்கையில் அழைக்க, சபாபதி சந்தோஷின் அப்பாவின் அருகில் சென்று அமருகிறார்.

    சபாபதிக்கு அவரது இச்சையெல்லாம் அடங்கிப் போயிருந்தது. பேசாமல் சந்திராவையே அழைச்சுண்டு வந்திருக்கலாம்…அவளுக்கும் சுதாவின் பாட்டுப் பிடிக்கும்…என்று நினைத்துக் கொண்டார்.

    மேடையில் நிகழ்ச்சி ஜோராக ஆரம்பமாகிறது. இடையிடையில் கிடைத்த நேரத்தில் சந்தோஷின் அம்மா சித்ராவிடம் பேச்சுக் கொடுக்கவும்…சித்ராவும் அவர்களோடு ரொம்ப அன்பாகவும், மதிப்போடு பேசிக் கொள்ள அங்கே அவர்களுக்குள் ஒரு “புரிதல்” ஆரம்பமாகிக் கொண்டிருந்தது.

    இடையில் கிடைத்த சிறு இடைவேளையின் போது…சித்ரா தனது கைபேசியை எடுத்து….”உரிமைகளை யாரும் கையில் எடுத்துத் தர மாட்டார்கள்…நாம் தான் எடுத்துக்கணும்…” என்ற சந்திராவின் குரல் உள்ளுக்குள் எதிரொலிக்க,
    “அம்மா…நான் சந்தோஷுக்கு ஃபோன் பண்ணி, நானும் உங்களோடத் தான் இருக்கேன்னு சொல்லட்டுமாம்மா…” என்று பணிவோடு கேட்கிறாள்.

    “சொல்லேன்….அவனும் சந்தோஷப் படுவான்….” என்கிறாள் அம்மா.

    இவளும் விஷயத்தை சுருக்கமாகச் சொல்லிவிட்டு வைக்கிறாள்.. அம்மா…நீங்கள் சொன்னா மாதிரி அவருக்கும் ரொம்ப சந்தோஷம்…என்று முகமெல்லாம் வெட்கத்தோடு சொல்லும் சித்ராவைப் பார்த்து…அம்மா… அவளது கன்னத்தைத் செல்லமாகத் தட்டுகிறாள்.

    தன்னுடைய வருங்கால மருமகள்..பெரியவர்களுக்குத் தரும் மதிப்பையும், மரியாதையையும் கண்டு  நிறைந்த மனதோடு கச்சேரியை ரசித்துக் கொண்டிருக்கிறார்கள்..இருவரும்.

    ஆர்வத்தை அடக்க முடியாமல்…சித்ரா, சந்திராவுக்கும்  போன் செய்து “அக்கா..நான் கச்சேரிக்கு வந்தது நல்லதாச்சு….இங்கே யார் வந்திருக்கா…தெரியுமா? அவரோட அம்மாவும், அப்பாவும்…இதோ என் பக்கத்தில் தான்…இருக்கா…பேசறியா…இரு தரேன்..என்று சொல்லி…”அம்மா…சந்திரா….லைன்ல இருக்கா…பேசுங்கோ…” என்று கைபேசியை தரவும்.

    “கச்சேரி ரொம்ப பிரமாதமா இருக்கு சந்திரா….கேட்கிறதா? சித்ரா வந்தது எங்களுக்கு ரொம்ப சந்தோசம்..” என்று சொல்லி ஃபோனை வைக்கிறாள், அம்மா.

    குடும்பத்துக்குள் இறுகி இருக்கும் சில முடிச்சுகள் மெல்ல மெல்ல அவிழ்ந்தது போல…இறுக்கம் தளர்ந்தது போலிருந்தது சித்ராவுக்கு.

    சுதா ரகுநாதனின்…வெண்கலக் குரல்…அரங்கம் முழுதும் நிரம்பி அத்தனை இதயங்களையும் கட்டிப் போட்டு வைத்தது.

    “நீ….ரஜ…ரமணீ….ய  கிருஷ்ணா……தேஹி…..ஜெய…ஜெயா……மாம்பாஹி….”

    கணீரென்று அம்ருத வர்ஷிணியாய் இசை மழை பொழிந்து கொண்டிருந்தது.,

    ஆயிரம் பேர்கள் அந்த ஒரு இசைக் குரலுக்குக் கட்டுப் பட்டு மகுடிக்கு ஆடும் பாம்பு போல் தனை மறந்து ஐக்கியமாகி இருந்தனர்.

    சந்தோஷின் அப்பா..அவ்வபோது சபாபதி பக்கம் திரும்பி…பரஸ்பரமாகப் பேசிக் கொள்கிறார்கள்.

    இரண்டு மனங்களோ….இரண்டு குணங்களோ…சில வேளைகளில் உறவுகள் பலப்பட இது போன்ற ஒரு நிகழ்வு…அவசியம் தேவை என்று சொல்லாமல் சொன்னது.

    சித்ராவுக்கு தான் மனதுக்குள் இருந்த இனம் புரியாத கல்யாண பயம் விலகி….தெளிவானது.

    சந்தோஷின் அம்மாவும்..அப்பாவும்…கூட சித்ராவின் எளிமையான, இனிமையான குணமும்…அவளின் அக்கா தங்கையின் ஒட்டுதலைப் புரிந்து கொள்ள முடிந்தது.

    சந்திராவின் கணவருக்கும்…தனது உறவின் பங்கும்…பதவியும் விளங்கியது போலிருந்தது. பயிருக்கு தான் வேலியாக மட்டும் தான் இருக்க வேண்டும் என்ற உண்மை ஆழமாகப் புரிந்தது.

    நிகழ்ச்சி முடிந்து அரங்கம்  கலைந்ததும்…வெளியில் வந்து புறப்படத் தயாரானவர்கள்…”அம்மா…அப்பா…நாங்க போயிட்டு வரோம்” …என்று சொல்லவும்.

    எங்கம்மாக் கிளம்பறே…இரு…இரு….எல்லோரும் சேர்ந்து டின்னர் சாப்ட்டுட்டு போகலாம்…சரியா..என்றனர்.

    சபாபதியிடம்…எங்க போகலாம் டின்னருக்கு..?..என்று பேசிக் கொண்டிருக்கும் அப்பாவும்… இப்போது அவன் அம்மாவே…”சித்ரா…நீ வேணா..சந்தோஷைக் கூப்பிடேன்…வந்தாலும் வருவான்…கிரிகெட் முடிஞ்சிருக்கும்..” என்று சொல்லவும்..

    அதற்காகவே காத்திருந்தவள், அவசர அவசரமாய் தன் கைபேசியை எடுத்து சந்தோஷுக்கு இடத்தைச் சொல்லிவிட்டு வரச் சொன்னவள்.. இன்னும் சற்று நேரத்தில் அவனது  வருகைக்காக இப்போதிருந்தே இவளது மனம் சந்தோஷ மயக்கத்தில் காத்திருந்தது.

    தான் நினைத்தது ஒன்று…நடந்து கொண்டிருப்பது வேறொன்றாக இருந்தாலும்….சந்திராவின் கணவன் சபாபதிக்கு இந்தப் பொழுதுகள்  மிகவும் பிடித்திருந்தது., எல்லோரிடமும் தான்…மிகவும் பொறுப்புள்ளவனாக வெளிக்காட்டிக் கொண்ட தருணமாக அமைத்துக் கொண்டு அவர்களிடம் தன்னை பற்றி ஒரு உயர்ந்த  அபிப்ராயத்தை உருவாக்கி  அவர்கள் மனதில் இடம் பிடித்து விட்ட திருப்தியில் இருந்தார். இன்னும்  அதை தக்க வைத்துக் கொள்ள சந்திராவுக்கு  போன் செய்து…அவளுக்கு என்ன வேண்டும் ? என்று கேட்டுப் பேசி….சந்தோஷ் வந்ததும், அவனுடனும் சிரித்துப் பேசி…தன்னுடைய  சுய கௌரவத்தை அழகாகக் காப்பாற்றிக் கொண்டிருந்தார் சபாபதி.

    இரவு டின்னர் “கிராண்ட் மினர்வா”வில்  பேசியபடியே…இரவோடு சேர்ந்து நகர்ந்து கொண்டிருந்தது. நேரம் போவதே தெரியாமல்  சிரிப்பும்… மகிழ்வுமாக.

    வீட்டில் பிரவீன் படித்து முடித்த களைப்பில் உறங்கிப் போனான்…சந்திரா,  கணவனின் வருகைக்காகக் காத்திருந்தாள்.

    இவர்கள் வீட்டை விட்டுப் புறப்பட்ட நிமிஷத்திலிருந்து மனக் குழப்பத்தினூடே…குழம்பித் தவிக்க…என்னைக்கும் இல்லாத திருநாளா…இன்னைக்கு இவர் போனில் சிரித்து சிரித்துப் பேசுகிறார்…..என்னவாயிருக்கும்…இவ்வளவு சந்தோஷப் படும் படியாக?

    “சித்ரா போக மாட்டேன் என்று எவ்வளவு சொன்னாள்..!.நான் தானே அவள் பேச்சைக் கேட்காமல்..அனுப்பி வைத்தேன்… இவர் ஏதாவது அவளிடம் ஏடாக்  கூடமாக பேசி இருப்பாரோ…? அவளுக்குக் கோபம் வந்திருக்குமோ…? அப்படி என்ன இவருக்கு அவளோட ஊர் சுத்த ஆசை…? இப்போ அவளோட மாமியார், மாமனார் இப்படிப் பார்த்து  தப்பா நினைக்க ஆரம்பிச்சா என்னாவது…? நானே சித்ராவுக்கு கெடுதல் செய்வது போலத் தானே…. இன்னைக்கு கார்த்தால …கால் இடறியது…”இடறிய கால் இடரும்” ன்னு சொல்லியிருக்கு…அப்போ இன்னைக்கு என்னவெல்லாம் நடக்கப்  போறதோ…? இன்னும் வரலையே…இத்தனை லேட்டாகிறதே….இன்னைக்கு சகுனமே சரியில்லையே….என்றெல்லாம் கவலைப் பட்டவள்…

    வாசலுக்கு வந்து நின்று காலையில் தான் போட்ட தப்புக் கோலங்களைப் பார்வையிட்டாள்

    தெருவிளக்கின் ஒளியில் கூட காலையில் அவள் அழித்து அழித்துப் போட்ட தப்புக் கோலத்  தடயங்கள் அப்படியே இருந்தாலும் அதையும் மீறி அவள் இழுத்த கோடுகள்….போல…..பளிச்சென “நட்சத்திரமாக”  மின்னி “நல்லதே நடக்கும்” என்று சொல்வது போலிருந்தது.

    அத்தனை நேரம் அவள் மனசுக்குள் குறுக்கும் நெடுக்குமாக ஓடிக் கொண்டிருந்த கறுப்புப் பூனை  எல்லா சகுனங்களையும்  புறந்தள்ளி விட்டு வெளியேறியது. அவள் அந்த நட்சத்திரக் கோலத்தைப் பார்த்தபடியே நின்றிருந்தாள்.

    குற்ற உணர்வில், தப்புக் கோலங்கள் போட்டது நானா அல்லது கணவனா என்று தராசில் சற்று நிறுத்துப் பார்த்தாள் சந்திரா !  தன் கணவனின் ஆண்மீக இச்சையால் சித்ராவுக்குத் திருமணம் நின்று போகாமல் தப்பிய தாளங்களை ஊழ்விதி  எப்படியோ சரி செய்து விட்டது இவர்கள் அறியாமலே.

    Share
  • உன் அன்பை!

    மு.கோபி சரபோஜி

    இன்னும் யோசித்து

    செய்திருக்கலாமென

    அங்கலாய்கிறார் அப்பா.

     

    வந்து விடு

    பேசி தீர்த்து திரும்பலாமென

    புலம்புகிறாள் அம்மா.

     

    எப்படி இப்படி

    சகித்துக் கொள்கிறாய் என

    சாடுகிறாள் சகோதரி.

     

    இந்த கஷ்டம்

    வேணுமா உனக்கு? என

    வெடிக்கிறான் சகோதரன்.

     

    கிளையின்

    சேதத்தை பார்த்து

    அக்கறை கொள்ளும்

    இவர்களுக்கு

    எப்படி புரியவைப்பேன்?

     

    நசிந்து கிடந்தேனும்

    வேராய் விரவி

    என்னை நேராய்

    பிடித்து வைத்திருக்கும்

    உன் அன்பை!

     படத்துக்கு நன்றி

     

    http://www.zastavki.com/eng/Photoshop/wallpaper-17490-2.htm

     

    Share
  • இலக்கிய வானில் நூற்றாண்டு கடந்து சுடர்விடும் க.நா.சு

    திருமலை சோமு

    க.நா.சுப்ரமணியம் (ஜனவரி 31,1912 – டிசம்பர் 18,1988)

    நவீன தமிழ் இலக்கியத்தின் முக்கிய பங்களிப்பாளர்களில் ஒருவர், க.நா.சு என்று பரவலாக அறியப்படும் க.நா.சுப்ரமண்யம், 1912ம் ஆண்டு ஜனவரி 31ம் தேதி வலங்கைமானில் பிறந்தார். கந்தாடை நாராயணசாமி சுப்ரமண்யம் என்ற க. நா. சு. சுவாமிமலை, சிதம்பரம் ஆகிய இடங்களிலும் வாழ்ந்தார். உலக இலக்கியத்திற்கு இணையாகத் தமிழ் இலக்கியம் வளரவேண்டும் என்ற எண்ணம் கொண்ட க.நா.சு, சுவாமிமலை கோவிலருகே தொடக்கப்பள்ளியில் தொடங்கி, பின்னர் கும்பகோணம் நேட்டிவ் உயர்நிலைப் பள்ளியில் தன் படிப்பை தொடர்ந்தார். அவருடைய தந்தைக்கு சுப்பிரமணியத்தை ஏதாவது ஓர் அரசுப் பணியில் அமர்த்திவிட எண்ணம். எனவே, ஆங்கிலக் கல்வி முறைக்கு மாற்றிப் படிக்க வைத்தார். ஆனால் க.நா.சு கும்பகோணம் அரசுக் கல்லூரி, அண்ணாமலைப் பல்கலை என விரிந்த அவருடைய கல்விப் பயணத்தின் போதே எழுத்து பணியில் இறங்கி இலக்கிய வாழ்க்கையைத் தொடங்கினார்.

    பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிரெஞ்சு இலக்கிய மேதைகளும், இருபதாம் நூற்றாண்டின் என் தலைமுறைப் புரட்சி எழுத்தாளர்களான ஜேம்ஸ் ஜாய்ஸும், டி.எஸ். எலியட்டும், எஸ்ரா பவுண்டும் வகுத்துக் கொடுத்த புரட்சி மரபுக்கு நான் வாரிசு என்கிற எண்ணம் க.நா.சுவுக்கு இருந்தது.  தமிழின் மிகச்சிறந்த ஆக்கங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். உலகத்தின் சிறந்த இலக்கிய ஆக்கங்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட வேண்டும் என்ற எண்ணம் கொண்டு, கடுமையாக உழைத்தார். 1930களில் தமிழ் இலக்கியப் பணிக்காகச் சென்னை வந்த அவர் தினமணி அலுவலகத்தில், தன் எழுத்துகளுடன் கால் பதித்தார். 

    அங்கே எழுத்தாளர் வ.ரா. இவருடைய கையெழுத்துப் பிரதிகளை வாங்கிப் பார்த்தார். கே.என்.சுப்ரமண்யம் என்று கையெழுத்துப் போட்டிருந்தார். வ.ரா. வெடுக்கென்று கேட்டார், நீர் என்ன ஆங்கிலேயனுக்குப் பிறந்தவரா, கே.என்.சுப்ரமண்யம் என்று எழுத?    சுப்ரமண்யமோ யோசித்துக் கொண்டிருந்தார். கே.என்.சுப்ரமண்யம் என்றெல்லாம் எழுதாதீர். கந்தாடை நாராயணசாமி ஐயர் மகன் சுப்ரமண்யம் அல்லவா நீர்; க.நா.சு. அல்லது க.நா.சுப்ரமண்யம் என்றே எழுதும் என்று கட்டளையிட, இவரும் அதை ஏற்றுக்கொண்டார். அதுமுதல் க.நா.சு. என்ற மூன்றெழுத்துப் பெயர் தமிழ் இலக்கிய வானில் சுடர்விடத் தொடங்கியது.

    ராமபாணம், இலக்கிய வட்டம், சூறாவளி, முன்றில், Lipi – Literary Magazine போன்ற சிற்றிதழ்களை நடத்தினார். ‘பொய்த்தேவு’ புதினம் இவரது புகழ்பெற்ற படைப்பு. 1946ல் இவர் எழுதிய இந்த நாவல். சோமு என்ற மேட்டுத் தெரு பையன், சோமு முதலியார் ஆன கதை. வாழ்க்கைத் தேடல் குறித்த சுவையான படைப்பு. 1986ம் ஆண்டு அவரது ‘இலக்கியத்துக்கு ஒரு இயக்கம்’ என்ற இலக்கியத் திறனாய்வு நூலுக்கு சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது. 2006ம் ஆண்டு அவரது நூல்களை தமிழ்நாடு அரசு நாட்டுடமையாக்கியது. படிப்பது, எழுதுவது தவிர வேறு எதுவும் செய்யாதவர். 

    40 நாவல்கள், 10 சிறுகதைத் தொகுதிகள், 80க்கும் மேற்பட்ட மொழிபெயர்ப்பு நூல்கள், தத்துவ விசார நூல்கள் 10, இலக்கிய விசாரம் என்ற கேள்வி பதில் நூல் ஒன்று, உலகத்துச் சிறந்த நாவல்கள், உலகத்துச் சிறந்த நாவலாசிரியர்கள், உலகத்துச் சிறந்த சிந்தனையாளர்கள் என மூன்று தொகுதிகள், இலக்கிய விமர்சன நூல் ஒன்று. இன்னும் பல நூல்களை தம் 86 வயதுக்குள் எழுதிக் குவித்தவர் இவர். அதற்கு மூல காரணமாக அமைந்தது, சிறுவயதிலேயே இவர் ஊன்றிப் படித்த இலக்கியங்கள் மற்றும் பிற நூல்கள்தான்.

    படிக்கும் காலத்திலேயே ஐரோப்பியப் பத்திரிகைகளுக்கு கதைகள் அனுப்பி வைத்தார் சுப்ரமணியம். வெளிநாட்டு மற்றும் இந்திய ஆங்கிலப் பத்திரிகைகளில் அவருடைய கதை கட்டுரைகள் வெளிவந்தன. 1935-இல் டி.எஸ்.சொக்கலிங்கம் நடத்திவந்த காந்தி இதழில் வெளிவந்த கதைகள் அவரது சிந்தனையை தமிழின்பால் திருப்பின. தொடர்ந்து மணிக்கொடி அவரை ஈர்த்தது. தமிழில் எழுதத் தொடங்கினார் க.நா.சு.

    மலையாளக் கவிஞரான குமாரன் ஆசான் நினைவாக உருவாக்கப்பட்ட ஆசான் கவிதைப் பரிசு 1979ஆம் ஆண்டு க.நா.சுவுக்கு வழங்கப்பட்டது.   அவருக்குக் கிடைத்த முதல் தனிப்பட்ட அங்கீகாரம் அதுதான். அதற்கு முன் தமிழக அரசின் பரிசை  ‘கோதை சிரித்தாள்’ என்ற நூலுக்காகப் பெற்றிருந்தார்.

    க.நா.சுவின் மறைவுக்குப் பின்பு, அவர் சேகரித்துவைத்திருந்த புத்தகங்களையும் அவரது கையெழுத்துப் படிகளையும் அவரது மருமகன் பாரதி மணி சுந்தர ராமசாமி நினைவு நூலகத்துக்குக் கொடுத்தார்.

     

    ஆர்வமுடையோர் படித்து இன்புற -க.நா.சுவைப் பற்றிய தகவல் தரும் சில முக்கிய இணையப் பக்கங்கள்:-

    க.நா.சு பற்றிய விக்கிபீடியா சுட்டி:

    க.நா.சு.வும் நானும் -வெங்கட் சாமி நாதன் கட்டுரை  (http://www.tamilhindu.com ல் வெளி வந்தது-மூன்று பாகங்கள்)

    சொல்வனம்- க.நா.சு சிறப்பிதழ்

     http://azhiyasudargal.blogspot.in/2012/10/blog-post_9.html

     எனக்கு மாமனாராகவும் இருந்த க.நா.சு.- பாரதி மணி

    Share
  • உன் அருகே

     

    திருமலை சோமு

    எல்லாம் இருந்தும்
    வெறுமைக் காற்று வந்து
    வெற்றிடம் நிரப்பும்..

    ஒவ்வொரு பொழுதும்
    உன் மூச்சே உனக்கு
    கனக்கும்

    உலகை ஒளிர்விக்கும் கதிரவன்
    உன் கண்களில் மட்டும்
    இருளை பீச்சுவான்..

    நினைவுகள் எல்லாம்
    எதிர்காலத்தை புதைத்து விட்டு
    பின்நோக்கி செல்லும்

    உன்னோடு உயிராக
    உனக்குள்ளே கலந்த உன்னவள்
    உன் அருகே .. இல்லையென்றால்

    உன் வீட்டு நாட்காட்டியும்
    கடிகார முட்களும் கூட
    உன் இதயத்தை போலவே
    நின்று விடத்தான் துடிக்கும்..

    என்ன செய்வது
    உன் அருகே வீசும் காற்றுக்கும்
    உயிர் கொடுப்பவள் அவள்தானே..!
    படத்துக்கு நன்றி

    Share