Blog

  • நல்வாழ்க்கை வாழ ‘வழிகாட்டிகள்’:: தொடர்-19

    பெருவை பார்த்தசாரதி

     

    கடந்த 01-10-12 அன்று “முதியோர்களின் நிலை” என்ற தலைப்பில் வெளியான தனிக்கட்டுரையோடு (http://www.vallamai.com/literature/articles/26855/), இந்தத் தொடரையும் சேர்த்து வாசிக்கவேண்டும் என்ற விண்ணப்பத்தோடு இந்தத் தொடரை ஆரம்பிக்கிறேன். 

    ஏழை, பணக்காரன், விலங்குகள், பறவைகள் என்ற பேதமில்ல்லாமல், மண்ணுலகில் பிறவி எடுத்த அனைவருக்கும் ‘முதுமை’ என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகி முதுமையில்  துன்பங்களையும் சேர்த்து விடுகிறது. பல குழந்தைகள் அல்லது ஒரே ஒரு குழந்தை மட்டும் பெற்றுக் கொண்ட பெற்றோர் தங்கள் குழந்தைகளை ஒழுக்கத்துடனும், கட்டுப்பாடு, நற்பண்புகள் கொண்டவனாக வளர்த்து விட்டால், அது முதுமையில் அனுபவிக்கும் பல இன்னல்களுக்குத் தீர்வாக அமைந்துவிடும். 

    எங்காவது நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ளும் சந்தர்ப்பத்தில் நாமும், நம்மைச் சுற்றி இருப்பவர்களும் ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்ளும் விஷயங்களில் எத்தகைய விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம்?… ‘தான் பெற்ற குழந்தைகள், தாங்கள் சொல்லுவதைக் கேட்க மறுக்கிறார்கள்’ ‘இப்போது இருக்கும் குழந்தைகள் பெற்றோர்கள் விரும்புவதைச் செய்வதில்லை’, ‘இன்றய இளையதலைமுறையினர் தவறான பாதையில் செல்லுகின்றனர்’  போன்ற செய்திகளே அதிக அளவில் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளும் செய்திகளில் இடம்பெறுகின்றன. பெற்றோர்களின் விருப்பத்திற்கு எதிராக நடந்து கொள்ளுகின்ற பிள்ளைகள், பெரியோர்களின் அறிவுரையை ஏற்க மறுக்கும் சந்ததிகள் இவர்கள் அனைவரையும் அவரவர் குடும்பத்திலேயே அடையாளம் கண்டுகொள்ளமுடியும். ஒரு குடும்பத்தில் ஒருவர் தவறாக நடந்துகொள்ளும்போது அதை அந்தக் குடும்பத்தின் மூத்த உறுப்பினர் திருத்த முயற்சித்து, குடும்பம் பிரிந்து விடுவதும் சகஜம். ஒரு பெற்றோருக்குச் செய்ய வேண்டிய கடமைகளை, சகோதரர்கள் ஒன்று கூடிச் செய்வதில்தான் பெரும்பாலும் சிக்கல்கள் தோன்றுகின்றன. குடும்பத்தை நல்வழியில் நடத்திச் சென்ற வயதான முதியவர்களை யார் வைத்துக் காப்பாற்றுவது?….என்ற தருணத்தில்தான், அவர்களுக்கு ஆலோசனையும், அறிவுரையையும் தேவைப்படுகிறது.  மதிப்பு மிகுந்த இத்தகய வழிகாட்டலுக்குச் செவிசாய்க்க மறுப்பவர்களுக்கு இதிகாச புராணங்களில் வரும் கதாபாத்திரங்கள் வழிகாட்டுகின்றன.          

    வளர்த்த பிள்ளைகளால் கைவிடப்பட்டு, அந்திமக் காலத்தில் உயிர் ஊசலாடும் போது, ஆறுதல் சொல்ல பெற்ற பிள்ளகளே வரவில்லை என்கிறபோது வேறு யார்?….வருவார்கள்.  முக்காலமும் உணரும் முனிவர் போல, இதையெல்லாம் முன்பே உணர்ந்ததுபோல் நமது கவியரசர், 1968ல் வெளிவந்த ‘எங்க ஊர் ராஜா’ என்ற படத்திற்காக எழுதிய

    ‘பெட்டியிலே பணமில்லே, பெத்தபுள்ளே சொந்தமில்லே,

    தென்னைய பெத்தா இளநீரு பிள்ளைய பெத்தா கண்ணீரு,

    பெத்தவன் மனமே பித்தம்மா பிள்ளையின் மனமே கல்லம்மா…….’ 

    என்ற பாடல் வரிகளின் முடிவில் 

    சோதனையை பங்கு வச்சா சொந்தமில்லே பந்தமில்லே”

    என்று எழுதியிருப்பார். இம்மாதிரி பாடல்கள் வேண்டுமானால் முதியோரின் சங்கடங்களுக்குச் சற்று நேரத்திற்கு ஆறுதல் தரும்.         

    உயிரோடு இருக்கும் போது, பெற்றோர்களுக்குச் செய்யவேண்டிய கடமைகளைச் செய்தாலும், இறந்த பின்னும் அவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் தொடருகிறது. தன்னைப் பெற்றெடுத்த தாய், தந்தையர் உயிரோடு இருக்கும்போது அவர்களைக் காப்பதும், காலமானபின் அவர்களுக்கு ‘திதிகளைச்’ செய்வதன் மூலம் தொடர்ந்து அவர்களுக்கு மரியாதை அளிப்பதாகக் கூறுகிறார் ‘ஆதிசங்கரர்’. கடமைகளிலேயே மிகச் சிறப்பான கடமை என்பது தனது பெற்றோருக்கு ஆற்ற வேண்டிய கடமைதான் என்பதை, புராண, இதிகாசங்கள் அவ்வப்போது நமக்கு வலியுறுத்தி உள்ளன. வேத நூல்கள், மனிதன் கடைபிடிக்கவேண்டிய  அறநெறிகள் பற்றிக் குறிப்பிடும்போது, உறவினர்கள் மேல் வைக்கும் பாசத்தையும், பரிவையும், பற்றிக் குறிப்பிடத் தவறுவதில்லை. 

    பன்னிரண்டு ஆண்டுகள் வனவாழ்வு, ஓராண்டு தலைமறைவு வாழ்க்கை என்ற துன்பங்களை அனுபவித்த போதும், உறவினர்களுடன் சேர்ந்து வாழ்வதையே விரும்பினார் தருமர். குடும்ப ஒற்றுமைக்காக, தருமரின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு வாழ்ந்தனர் தம்பியர் அனைவரும். ஒவ்வொரு முறையும் அதர்மத்துக்குத் துணைபோன உறவினர்களை அழிக்கக் கொதித்தெழுந்தனர் தம்பிமார்கள்.  “குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை” அரசுரிமைக்காக ஒரே குடும்பத்தில் பிறந்த உறவினர்கள் ஒருவருக்கொருவர் சண்டையிடுவதை உலகமறிந்தால், நாம் எப்படி உலகத்தாரின் நலனுக்கு வழிகாட்டமுடியும்?….என்று சமாதானம் சொன்ன தருமரின் சொல்லுக்கு தம்பிமார்கள் அனைவரும் கட்டுப்பட்டது எதற்காக?….என்பதைச் சற்று சிந்தித்தித்துப் பார்த்தால் உண்மை விளங்கும். இன்று கூட கிராமப்புறங்களில் ஒரு குடும்பத்தில் முதலாவதாகப் பிறக்கும் ஆண்குழந்தை, அக்குடும்பத்துக்குக் குலவிலக்காய் இருந்து, குடும்ப நலத்திற்கும், தனது சகோதர, சகோதரிகளிக்கு உற்ற துணையாக இருந்து குடும்பத்தை நல்வழியில் நடத்திச் செல்வான் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் தான் “தருமன்” என்ற பெயரைச் சூட்டுவதை வழக்கத்தில் கொண்டிருக்கிறார்கள். 

    பிள்ளைகளின் குணநலன்கள் சிறப்பாக அமைந்துவிட்டால், அதைவிட தாய் தந்தையருக்கு மகிழ்ச்சி அளிக்கக் கூடிய செய்தி வேறு ஒன்றுமில்லை. இதற்கு சிறுவயது முதலே அவர்களுக்கு நீதிநெறிகளை எடுத்துச்சொல்லி, இளவயதிலேயே அவர்கள் மனதில் நற்சிந்தனைகளை விதைக்க வேண்டும் என்பதை நமது முன்னோர்கள் நமக்கு அறிவுரை வழங்கியிருக்கிறார்கள். மராட்டிய மன்னன் சிவாஜியும், கவி தாகூரும், மஹாத்மாவும் இளமைக் காலத்திலேயே இத்தகைய பாக்கியத்தைப் பெற்றதால்தான், பின்னாளில் உலகம் போற்றும்படி வாழ்ந்தார்கள்.         

    வேதங்கள் காட்டுகின்ற வழிகள் தவிர, பதினெண் புராணங்களும், காப்பியங்களும், மனிதன் பின்பற்றவேண்டிய பல நன்னெறிக் கோட்பாடுகளையும், போதனைகளையும் அளவில்லாமல் அள்ளி வழங்கியிருக்கின்றன. மகாபாரதத்தில் தாய்தந்தையரின் மகிழ்ச்சியே தன்னுடைய மகிழ்சியாகக் கருதிய ஒரு உத்தமரின் வாழ்க்கை எவ்வாறு அமைந்தது?….தந்தைக்காக தன் வாழ்க்கை முழுவதும் துணையின்றியே வாழ்ந்தான். அரசனாக இருந்த அவனுடைய தந்தை, ஒரு பெண்ணை விரும்பியபொது, அப்பெண் ஒரு வாக்குறுதியை தனக்கு அளித்த பிறகே அவனை மணக்க முடியும் என்பதை வலியுறுத்தினாள்.  தனக்குப் பிறக்கும் வாரிசுக்கே அரசுரிமை அளிக்க வேண்டுமென்பதே அவளுடைய நோக்கம்.  இதனைக் கேள்வியுற்று செய்வதறியாது திகைத்தான் மன்னன். அவனுடைய மூத்த மகன், தந்தையின் விருப்பத்திற்காக, வாரிசுரிமையை விட்டுக்கொடுப்பதற்காக, தனது வாணாள் முழுவதும் மணமுடிக்காமலேயே வாழ்ந்து காட்டினான். குடும்ப நலம்தான் பெரிது என்று கருதியதால், குடும்ப ஒற்றுமைக்காக தம்முடைய தன்னுடைய வாக்குக்குக் கட்டுப்பட்டு, ஒருபோதும், ‘தனது உரிமை’ என்று எதையும் வாழ்நாள் முழுவதும் கோரவில்லை என்பதை இங்கே குறிப்பில் கொள்ளவேண்டும். பின்னாளில், உலகுக்கே நீதி நெறிகளை எடுத்துச் சொல்லும் “பிதாமகர்” என்று உலகத்தாரால் போற்றப்பட்டார் “வீடுமர்”. 

    பொருளாதார வசதியுடன், பணமும், உடலில் சக்தியும் இருக்கின்ற வரையில்தான் இவ்வுலகில் மதிப்பு இருக்கும் என்பதை அனைவரும் அறிவோம். ஒரு காலகட்டத்தில் “உன்னால் ஏதாவது பிரயோஜனம் உண்டா”?….என்ற கேள்விக்கான பதிலைப் பொருத்துத்தான் அவரவர்களின் வாழ்க்கை முறையும் அமையும். பெற்ற பிள்ளைகள் கூட தாய் தந்தையருக்குச் செய்கின்ற பணிவிடைகளை ஒரு சுமை!… என்று நினைக்கும் இன்றய சூழ்நிலையில்  பெற்றோர்களுக்குச் செய்ய வேண்டிய கடமை தவறாத கண்ணியனுக்கு, ஒரு உதாரணம் ஒன்றையும், இதிகாசங்களிருந்து எடுத்துக் கூற விரும்புகிறேன். 

    வயோதிக பருவத்தில், உடல் நலமின்றி, சக்தியற்று படுக்கையில் இருந்த தாய் தந்தையர்களை மிகவும் அன்போடும், மகிழ்ச்சியோடும் தெளிவான சிந்தனையோடும் ஒருவன் கனிவோடு, முகம் சுளிக்காமல் பொருப்பாகக் கவனித்து வருவதை அந்நாட்டு மன்னன் கேள்விப் பட்டு அவனைச் சந்திக்க அவன் இருப்பிடம் வருகிறான். 

    ‘நான் இந்நாட்டு மன்னன் உன்னைச் சந்திக்க வந்திருக்கிறேன்’……என்று வீட்டு வாசலில் நின்று கூக்குரலிடுகிறான். 

    அவனோ சிறிதும் சட்டை செய்யாமல் தனது பெற்றோர்களுக்கு பணிவிடை செய்வதில் கவனமாக இருக்கிறான். 

    மறுபடி திரும்பத் திரும்ப அவனை அழைக்கிறான் மன்னன். 

    நம் வீட்டிற்கு யாராவது விருந்தாளியாக வரும்போது, நாம் ஏதாவதொரு முக்கியமான வேலையில் ஈடுபட்டிருப்போம், அப்போது……. 

    சற்று பொருங்கள்!..இதோ வந்து விடுகிறேன்!…என்று சொல்வதைப் போல், அவனும் 

    சற்று பொறுமய்யா!…நீர் யாராக இருந்தாலும் சரி, நான் எனது பெற்றோர்களைக் குளிப்பாட்டிக் கொண்டிருக்கிறேன், அதை முடித்துவிட்டு உம்மை சந்திக்கிறேன், அதுவரை இதோ இந்தக் கல்லில் உட்காரும், என்று சொல்லி ஒரு செங்கல்லைத் தூக்கி எறிகிறான் அந்தச் சிறுவன். 

    கடமையில் கண்ணாக, இப்படியும் ஒரு சிறுவனா!…இவனைப் பெற்றவர்கள் பாக்கியம் பெற்றவர்கள்!……வந்தவன்!……..வழிந்து ஓடுகிற அழுக்குத் தண்ணீரில் விழுந்த அந்தச் செங்கல்லின்மீது நின்ற படியே அவனுக்கு ஆசி வழங்குகிறான். 

    மன்னனாக வந்தவன் ‘பகவான் விட்டல் ஸ்ரீகிருஷ்ணன்’, அவரைச் சந்திக்காமலேயே அருள் பெற்ற நல்லவன் ‘புண்டரீகன்’ என்ற சிறுவன். 

    நற்குடும்பத்தில் பிறந்த சிறுவன் புண்டரீகனுக்கு மட்டுமல்ல, பெற்றோருக்குக் கடமை தவறாது பணிவிடை செய்கின்ற நல்லவர்கள் அனைவருக்குமே இன்றும் அதே செங்கல்லின் மீது நின்று கொண்டே “விட்டல் கிருஷ்ணனாக” பண்டரிபுரத்திலிருந்து அருள் பாலித்துக் கொண்டிருக்கிறான். மராத்தியில் ‘விட்’ என்ற சொல்லுக்கு செங்கல் என்ற பொருள் படும். 

    நற்குடும்பத்தில் பிறப்பதே அரிது என்பதை புராணங்கள் கூறுகின்றன. இதுகூட முற்பிறப்பில் செய்த புண்ணிய பலன்களின் வாயிலாகவே இத்தகைய நற்பிறப்பு சாத்தியமாகக் கூடும். ஆக நற்குடும்பம், நற்பிறப்பு என்பதெல்லாம் ஒருவனது நல்ஒழுக்கம், நற்பண்பு, கடமை தவறாமை போன்றவையே தீர்மானிக்கின்றன.  வாழ்க்கையில் மிக உன்னத நிலைக்குச் சென்ற பலரது வாழ்க்கை வரலாற்றைப் புரட்டிப் பார்த்தோமானால், அவர்களது முன்னோர்களும் இவர்களைப் போலவே உயர்ந்த நிலையில் வாழ்ந்து இருந்ததை அறியமுடியும். இவர்கள் கூறும் அறிவுரைகளை ஒருகாலும் புறக்கணிக்கக் கூடாது என்பதற்கு, எளிய தமிழில் எல்லோரும் புரிந்து கொள்ளும்படி அமைந்த சித்தர் தத்துவப்பாடல் வரிகளில் ஒன்றிரண்டைக் காண்போம். 

    “நல்லவர் தம்மைத் தள்ளாதே – அறம்

    நாலெட்டிலொன்றை நாடித் தள்ளாதே

    பொல்லாங்கி லொன்றும் கொள்ளாதே – கெட்ட

    பொய் மொழிக் கோள்கள் பொருத்த விள்ளாதே”         

    நல்லவர்களின் வார்த்தைகள், சான்றோர்கள் சொன்ன அறங்கள் இவற்றைப் புறக்கணிக்கக்கூடாது. புறம் பேசாமல், பொல்லாத காரியங்களைச் செய்ய வேண்டாம் என்பதை இப்பாடல் விளக்குகிறது. நன்னெறிகளையும், அறநெறிகளையும், இலக்கியங்கள், காப்பியங்கள், இதிகாசங்கள் மூலமாக அறிந்துகொண்டாலும், வாழ்க்கைச் சிக்கலுக்குத் தீர்வு காணும் நல் ஆலோசனைகளை, வேறு எங்கும் தேடாமல் நம்மை வளர்த்து ஆளாக்கிய, நமது முன்னோர்களின் அனுபவங்களிலிருந்தே, எளிதாகப் பெற்று விட முடியும்!….அதை இன்றளவும் நாம் பெற்றுக் கொண்டிருக்கிறோம் என்பதில் ஐயமில்லை?……         

    தொடரும்…..

    Share
  • பிரமிடுகள் தேசத்தில் ஞானத் தேடல்

     

     பிரமிடுகள் தேசத்தில் ப்ரண்டனின் தேடல் என்ற தொடரை ஆர்வத்துடன் படித்து வந்த வாசகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி. அந்தத் தொடர் “பிரமிடுகள் தேசத்தில் ஞானத் தேடல்” என்ற பெயரில் புத்தகமாக ப்ளாக்ஹோல் மீடியா பப்ளிகேசன்ஸ் நிறுவனத்தால் வெளியிடப் பட்டு உள்ளது.

    இது வரை சுவாரசியமாக சொல்லப்பட்ட விஷயங்களான நள்ளிரவில் பிரமிடுக்குள் பால் ப்ரண்டனின் அனுபவங்கள்,  உடலைப் பிரிந்து சென்ற பயணம், மந்திரவாதங்கள், ஹிப்னாடிச சக்தியாளர்கள், நாள் கணக்கில் மண்ணில் புதையுண்டு கிடந்தவர், அது பற்றிய அறிவியல் விளக்கங்கள், ஓசிரிஸ் கோயில்களின் ரகசிய தீட்சை முறைகள் ஆகியவற்றை மிகுந்த வரவேற்புடன் படித்து இருக்கிறீர்கள்.  புத்தகம் வெளியானதால் இந்தத் தொடர் இந்த வலைப்பூவில் இத்துடன் நிறுத்தப்படுகிறது

    மேலும் அனேக சுவையான, சுவாரசியமான தகவல்களை இந்தப் புத்தகத்தில் எழுதி இருக்கிறேன். ஆவி, பூதங்களை ஆட்கொண்ட மனிதன், இறந்தவர்களின் புத்தகம், கர்னாக் கோயில்களில் இருந்த ரகசியக் குறிப்புகள், ரகசிய அறைகள்,  பிரமிடுக்குள் செய்தது போலவே கர்னாக் கோயிலில் நள்ளிரவில் செய்த தியானத்தின் சுவாரசிய அனுபவம், பாம்பு தேள்களை வசியம் செய்யும் கலை, அதன் சூட்சுமங்கள், அந்தக் கலையை பால் ப்ரண்டன் கற்றுத் தேர்ந்து செய்த ஆராய்ச்சிகள், எகிப்திய மலைப்பகுதியில் கண்ட அதிசய மனிதர், உடலை ரகசிய சமாதியில் ஒளித்து வைத்து விட்டு ஆவியுலகில் வசிக்கும் அபூர்வ மனிதர்கள் பற்றியெல்லாம் சுவையான தகவல்களைக் கூடுதலாக இந்த நூலில் படிக்கலாம்.

    நூலைப் பெற விரும்புவோர் admin@blackholemedia.in ,   blackholemedia@gmail.com  மின்னஞ்சல்கள் மூலமாகவோ,  செல்பேசி:   9600123146,  மூலமாகவோ பதிப்பகத்தாரைத் தொடர்பு கொள்ளலாம்.

    பதிப்பக இணைப்பையும் இங்கு தந்துள்ளேன்.
    http://blackholemedia.in/node/211

    இந்த நூல் ஆன்மிகம் மற்றும் அபூர்வ சக்திகளில் ஆர்வம் உள்ளவர்களுக்கு ஒரு பொக்கிஷமாக இருக்கும் என்று நம்புகிறேன். எனவே தங்கள் மேலான ஆதரவை இந்த நூலுக்கு அளிக்கும்படியும் அன்புடன் வேண்டிக் கொள்கிறேன்.

    அன்புடன்
    என்.கணேசன்

    Share
  • வீணையா (பாடல்)

     

    இசைக்கவி ரமணன்

    வீணையா – கேட்டு மகிழுங்கள்

    வீணையா? விதியினைச் சரிசெய்யும் இதயத்தின்
    ஆணையா?
    விரல்களா? விண்ணுக்கும் மண்ணுக்கும் வாழ்வுதரும்
    சுரங்களா? ஒரு
    வீணையை ஏந்திய திருமகள் என்
    விழியினில் வந்துநின்றாள் அவள்
    செந்தாமரையில் கலைமகள், புதுச்
    சிரிப்புடன் வந்துநின்றாள்
    அலைமகளும் கலைமகளும் வந்து குலவுகின்ற தருணம்
    மலைமகளும் இதைக்கண்டு தன் மனது குளிரும் தருணம்

    பார்க்கப் பார்க்கப் பரவசம் அம்மா பார்க்க முடியவில்லையே
    பால்மழையில் குழந்தையம்மா பருகத் தெரியவில்லையே
    சேர்த்துப் பிடித்த மணல்மேடெல்லாம் தேன்மழையில் கரைந்ததுவே!
    செல்லுமிடம் நானேயாகி சிலையாய் உயிர் நிலைத்ததுவே!
    நேரில் நின்ற சிறுமியின் கண்ணில் கோடிமின்னல் தெறித்ததுவே, அவள்
    நெஞ்சின் ஒளியில் நீண்ட நிழலில் அலையும் கலையும் தோன்றியதே
    கண்ணில் மறைந்து நெஞ்சில் நுழைந்து கமலமாக விரிந்ததுவே                     

    (வீணையா)

     

    நாணம்வந்து சிவந்ததிதயம் அதிலெழுந்தாள் திருமகளே
    நாள்:விடிந்து வெளுத்தபோது அங்குவந்தாள் கலைமகளே
    காணக்காண எங்கும்தோன்றிக் கலகலத்தாள் மலைமகளே
    கண்கள்கூச உயிரின் உள்ளே ஒன்றானாள் ஒருமகளே
    மாறிமாறித் தோன்றினாலும் மர்மமொன்றும் இல்லையே
    ஒளியும் இருளும் ஒன்றே என்றால் மாயமொன்றும் இல்லையே
    மாயம் மர்மம் தீர்ந்துவிட்டாலும் மலைப்பு தீரவில்லையே! (வீணையா)

    வீணையா – ஆம் கேட்டு மகிழுங்கள்!

     படத்திற்கு நன்றி :

    http://www.brass-handicrafts.com/saraswati-statue.html

     

    Share
  • நட்ட நடுவில் (பாடல்)

     

    இசைகவி ரமணன்

    நட்டநடுவில் – சுவைத்து மகிழுங்கள்

    நட்ட நடுவில் பொட்டுவைத்து
    நட்சத்திரங்களை நட்டுவைத்து
    கோள்களினைச் சுழலவைத்து கோளங்களை அலையவைத்து
    வெள்ளம்வடிந்து நாணல்புல்லை நிமிரவைத்தவள்! அந்த
    வானத்திலே முகம்துடைத்துச் சுருட்டி எறிந்தவள்!
     அவள்தான் என்னையும் படைத்தவள்!
     எனக்குள் தன்னையும் அடைத்தவள்!!
    தர்மங்களும் நியாயங்களும் அவள் மனத்தின் இட்டம், நம்
    தர்க்கமெல்லாம் தாழ்வாரத்தில் குழந்தை அடிக்கும் கொட்டம்!
    மர்மமாக இருப்பதிலும் அவளுக்கில்லை திட்டம்
    மனம்தொறந்தா மல்லிகைஉதிர்ந்து மணக்குமவள் கொற்றம்!

    தக்கைபோல மெதந்திடாமல்
    தாயை அறிய முடிந்திடுமா?
    கட்டிப்பிடிக்கவும் முடியாது விட்டுவிலகவும் வழியேது?
    தொட்டுப் பார்க்க முடியாத தொலைவில் ராணி, என்னைத்
    தொட்டுத் தொட்டு வார்த்தைசெல்லும் தோழமை வாணி
     அவள்தான் தொலைவில் ராணி
     அவளே தோழமை வாணி

     
    சாதனையும் வேதனையும் கானலிலே நீரு, அவ
    சோதனையே வைப்பதில்லே தேறுவது யாரு?
    இன்பம் பதநி துன்பம் கள்ளு இப்படிப் பாருநீ
    சரியும் தவறும் அவள்வீணையில் சரிகமபதநி

    பேரைச் சொல்லி அழைத்தாலும்
    பேந்தப் பேந்த முழித்தாலும்
    ஊரைக்கூட்டித் தொழுதாலும் உருண்டு புரண்டு விழுந்தாலும்
    ஒண்ணும்லாபம் இல்லேநானும் சொல்வதைக் கேளு, அவளை
    உயிர்க்குயிரா அம்மான்னு ஒரு தரம் கூவு
     உண்மையைச் சொல்லுறேன் கேளு
     அம்மான்னு ஒருதரம் கூவு

    படத்திற்கு நன்றி :

    https://ramanan50.wordpress.com/2012/09/01/for-childless-couplethirukkarukaavoor-details/

    நட்டநடுவில் – செவி குளிர!

     

    Share
  • அம்பிகையின் அழகு

     

    இசைக்கவி ரமணன்

    அம்பிகையின் அழகைக் கேட்டு மகிழுங்கள்!

    ஜூலை 1976. பாரதி கலைக்கழக அன்பர்கள் ஒரு திருக்கோயிலில் ”தெய்வக் கவியரங்கம்” என்று ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார்கள். அது எந்தக் கோயில் என்பது இப்போது நினைவில் இல்லை. ஐந்தாறு கவிஞர்கள் – இளையவன், மதிவண்ணன் போன்றோர், ஆளுக்கொரு தெய்வத்தைப் பாடவேண்டும் என்பதாக ஏற்பாடு.

    “நீ அம்பிகையின் அழகு என்ற தலைப்பில் பாட முடியுமா?” என்று கேட்டார்கள். நான் மிக அலட்சியமாகவும் ஆணவத்தோடும், அது ரொம்ப சுலபம் என்று சொல்லிவிட்டு வீட்டுக்கு வந்தேன்.
     
    அந்தக் கணத்திலிருந்து என்னில் கவிதையைக் காண இயலவில்லை…நான் சொல்வது உங்களுக்கு நம்புவதற்குக் கடினமாக இருக்கலாம். இருந்தாலும் சொல்கிறேன். ஒரு வார்த்தை கூட எனக்கு வரவில்லை! பேசிக்கொண்டே இருந்தவன் தீடீரென்று நட்ட நடு அவையில் ஊமையாகிப்போனால் எப்படி இருக்கும்? அப்படி, எனக்குத் தமிழே மறந்துவிட்டதுபோல் மனது சூனியமாகி விட்டது.

    யாரிடமும் இதைப் பகிர்ந்துகொள்ள முடியாத அளவுக்கு துக்கமாகவும் அவமானமாகவும் இருந்தது. ஒருநாள் பகற்பொழுது முழுவதும் எனக்குத் தமிழே மறந்ததுபோல், சொல்லே இல்லாமல் துடித்தேன்.

    விளக்கேற்றி வைத்து, பராசக்தியிடம் மன்னிப்புக் கேட்டேன். ஜீவித்திருக்கும் உயிர்களுக்கு எப்படி அடுத்த மூச்சு நிச்சயம் இல்லையோ, அதுபோல் அடுத்த சொல்லுக்கான உத்தரவாதம் இல்லாத கவிஞன்தான் நான்; அவளிட்ட பிச்சையே தவிர என் திறமை என்று ஏதுமில்லை; என்று புரிந்துகொண்டேன்.

     
    பிறகு வந்தன வார்த்தைகள். அதுதான் “அம்பிகையின் அழகு” என்னும் கவிதை. அதை என் குரலில் ஒலிப்பதிவு செய்து இத்துடன் இணைத்துள்ளேன். இதில் இலக்கியம், கவிதை நயம் எதுவும் கிடையாது. ஆனால், எனக்கு இது அம்பிகையுடனான அந்தரங்க அனுபவம். 36 ஆண்டுகளுக்குப் பிறகு இதை ஏன் பொதுவில் கொண்டு வருகிறேன்?

    அவளைத்தான் கேட்கவேண்டும்!

    அம்பிகையின் அழகை செவியாலும் பருகலாம்!

    படத்திற்கு நன்றி :

    http://www.starsai.com/garbarakshambigai-photos/

    Share
  • கலைதரும் தலைவி…

               

     செண்பக ஜெகதீசன்

    குறையிலாக் கல்விக் குருகுலமே

         குமர குருபரர் கலாவல்லியே,

    உறைவது வெள்ளைத் தாமரையிலே

         உரைத்திடும் பாவலர் நாவினிலே,

    நிறைவுடன் புகழது தருபவளே

         நினைத்ததும் அருள்தர வருபவளே,

    மறைகளில் நிறைந்திடும் தலைமகளே

         மனதுடன் பணிந்தோம் கலைமகளே…!

     

     http://srilalithatripurasundari.wordpress.com/lalita-sahasranama/impact-of-chanting-lalitha-sahasranama/sri-lalitha-tripura-sundari-an-overview/meanings-of-lalitha-sahasranamam/nitya-buddha/         

    Share
  • கோபம்.

    ராஜ்பிரியன்

    பரபரப்பாக இருந்த அந்த கல்யாண மண்டபத்துக்கு முக்கிய பிரமுகர்கள் எல்லாம் வந்தபடியே இருந்தார்கள். வந்தவர்களை வாசலில் நின்று வரவேற்றுக்கொண்டு இருந்தார்கள் அலுமேலுவும், அவரது கணவர் தங்கச்சாமியும். தங்கச்சாமி பொள்ளாச்சியில் ஹோட்டல், நகைக்கடை, துணிக்கடை, 500 ஏக்கர் நிலமென வசதிக்கு குறைவில்லாதவர். சுற்றுவட்டார பகுதியில் செல்வாக்கானவர், அமைதியானவர். அவரது பெண் சுவாதிக்கு தான் திருமணம்.

    அவரது செல்வாக்குக்கு குறைவான இடத்திலேயே மாப்பிள்ளையை பார்த்திருந்தார். காரணம் அவரது மகள் அவருக்கு செல்லம். ஓரே பெண் என்பதால் சின்ன வயதில் இருந்தே ஏகப்பட்ட பாசத்தை பொழித்து வளர்த்திருந்தார். இதனால் சுவாதிக்கு எதிலும் கர்வம். தான் நினைத்தது நடக்க வேண்டும். விருப்பத்துக்கு எதிராகவோ, அவள் சொல்வதை மறுத்தாலோ சடாரென கோபம் வந்துவிடும். குடும்பத்தாரிடம் கோபம் வந்தால் இரண்டு நாளைக்கு சாப்பிடமாட்டாள். வெளியாட்களாக இருந்தால் திட்டிவிடுவாள்.

    இப்படித்தான் ஒருநாள் காலை பதினோரு மணிக்கு டிபன் சாப்பிட அமர்ந்தவளுக்கு அவளது அண்ணி கீதா, சுடாக டிபன் தரவில்லையென தட்டையெடுத்து கீதா மீது அடித்துவிட வீட்டில் ஒரே களோபரம். அவள் செய்தது தப்பு என எல்லோருக்கும் தெரியும். ஏதாவது கேட்டால் அவளுக்கு கோபம் வரும் என்பதால் யாரும் வாயை திறக்கவில்லை. இதனால் கீதா அம்மா வீட்டுக்கு போய்விட்டாள். சமாதானம் பேசிய மாமியாரிடம் அவளை மன்னிப்பு கேட்கச்சொல்லுங்க அப்பத்தான் வருவன்.

    உங்கண்ணன் வாழ்க்கைடீ ஸாரி கேளு என அலமேலு மகளிடம் கேட்டபோது அவன் வாழ்க்கை எப்படி போனாலும் எனக்கு கவலையில்ல அவக்கிட்ட நான் மன்னிப்பு கேட்கமாட்டன் என உறுதியாக இருந்துவிட குமரன் தான் திண்டாடிபோனான். மனைவியை சமாதானப்படுத்தி அழைத்து வர அவனுக்கு ஆறுமாதமானது.

    நான்கு மாதத்துக்கு முன்பு உனக்கு கல்யாணம் பண்ணலாம்ன்னு இருக்கம்மா எப்படிப்பட்ட மாப்பிள்ளை வேணும்ன்ன சொல்லும்மா என தங்கச்சாமி கேட்டதும், அடக்கமானவரா, அழகானவரா, படிச்சவரா, எதிர்த்து பேசாதவரா இருக்கனும் என அடுக்கினாள். இதை கேட்டுக்கொண்டுயிருந்த அலமேலு அப்படின்னா நீ சன்னியாசியா தான் போகனும் என்றார்.

    அதை கேட்டு கோபமான தங்கச்சாமி, வாய மூடுடீ என அதட்டினார்.

    அப்படி போனாலும் போவன் ஒருத்தன்கிட்ட அடிமையா இருக்கமாட்டன் என்றாள் கோபமாக.

    அவ கிடக்கறா விடும்மா. நீ சொல்றமாதிரியே பாக்கறன்ம்மா என்றார் பாசமாக அவள் தலையை தடவியபடி. கல்யாண புரோக்கரை அழைத்து வசதி குறைவா இருந்தாலும் பரவாயில்ல. பையன் நல்லவனா, படிச்சவனா, அழகா இருக்கனும் என்றார். புரோக்கரும் கோவையில் சின்னதாக ஒரு பேக்டரி வைத்திருக்கும் விநோதன் ஜாதகத்தை தந்து நல்லப்பையன், குடும்பத்துக்கு அடக்கமானவன், கோபப்பட்டே பார்க்க முடியாது என்றார்.

    விசாரித்தபோது புரோக்கர் சொன்னது உண்மையென அறிந்துக்கொண்டவர், அதன்பின்பே பெயர் பொருத்தங்களை பார்த்தார். “பையன் பொண்டாட்டிக்கு அடங்கனவனா இருப்பான்” எனச்சொல்ல மனம் குதுகலித்தது. உடனே புரோக்கர் மூலம் அந்த குடும்பாத்தரை சந்தித்து பேசினார். பெரிய இடம் தங்கச்சாமியை பற்றி அறிந்தவர்கள் அவரது மகள் பற்றி அறியாமல் சம்மதம் தெரிவித்தனர். சுவாதியும் விநோதனை பிடித்திருப்பதாக சொல்ல கல்யாண ஏற்பாடுகள் தடபுடலாக நடந்தன. தங்கச்சாமி பொள்ளாச்சியிலேயே நடத்தினார்.

    இரவு வரவேற்பு நடந்தது. சுவாதி தேர்வு செய்திருந்த ஆடையையே விநோதன் அணிந்தான். அவன் கையில் வைத்திருக்கும் கைக்குட்டை வரை சுவாதியின் தேர்வாகவே இருந்தது. சுவாதியின் நடவடிக்கையை நிச்சயம் நடந்தது முதல் பார்த்தும் அனுபவித்து தான் வந்தான். அவள் ஒருமுறை செல்போனில் அழைக்க பேக்டரி சத்தத்தில் எடுக்காமல் விட்டுவிட்டான். கோபத்தில் ஒருநாள் முழுக்க அவனுடன் பேசவில்லை. ரிசப்ஷன் முடிந்து சாப்பிட அமர்ந்த போது விநோதனுக்கு பிடித்த பால் பாயாசம் டம்ளரில் இருந்தது. அதை குடித்தவன் இரண்டாவதாக வாங்கலாம் என நினைத்து பரிமாறுபவரை அழைத்து பால்பாயாசம் கேட்டான்.

    அதல சக்கரை அதிகமாயிருக்கும் சாப்பிடாதிங்க என தடைபோட்டாள். அப்போது விநோதன் முகம் சுருங்கியதை அலமேலு கவனித்து நொந்துப்போனார். காலை முகூர்த்தத்துக்கு வந்தவர்களை அலுமேலு தன் கணவருடன் சேர்ந்து வரவேற்ற போது அவளுக்கு மகளின் செயல்கள் மனதில் படமாக ஓடியது.

    தாலி கட்டி முடித்ததும் மைக் முன் வந்த முக்கியஸ்தர்கள் சிலர் மணமக்களை வாழ்த்தினர். அலமேலுவை பேசச்சொல்ல, “இரண்டு பேரும் விட்டுக்கொடுத்து வாழனும். என் பொண்ணு கோபப்பட்டா, மாப்பிள்ளை தான் பொறுத்துக்கனும்”, என கண்ணீருடன் சொல்லிவிட்டு இறங்கினார். அடுத்து மைக் முன் வந்த குமரன், “என் தங்கச்சிக்கு தப்பு பண்ணா கோபம் வரும். மச்சான் பொறுத்துக்கனும்” என சொல்லிவிட்டு இறங்க, அடுத்து வந்த சுவாதியின் சித்தப்பா ரங்கன், “பொண்ணு கோபப்பட்டாலும் மாப்பிள்ளை விட்டுக்கொடுத்து போகனும்.” இதை கேட்டுக்கொண்டுயிருந்த விநோதன் மைக்கை வாங்கி “எல்லாரும் பொண்ணு கோபப்பட்டா பொறுத்துக்கிட்டு போகனம்ன்னு எனக்கு அறிவுரை சொல்றிங்க. ஆனா யாரும் பொண்ணு கோபப்படகூடாதுன்னு சொல்ல மாட்டேன்கிறிங்களே. அறிவுரை சொல்றவங்க முதல்ல கோபப்படக்கூடாதுன்னு சொல்லுங்க” என்றார். இதை கேட்டுக்கொண்டுயிருந்த தங்கச்சாமியின் முகத்தில் திகிலடித்தது. சுவாதி தன் அப்பாவை பார்க்க, “பாத்துக்கலாம்மா ” என்றார் கண்களாலேயே.

    மண்டபத்தை விட்டு வீட்டுக்கு போயும் சுவாதி விநோதனுடன் சரியாக பேசவில்லை. முதலிரவு அறைக்கு அனுப்பும்போது பாத்து நடந்துக்க என கிண்டலாக சொல்லி அனுப்பினார்கள் உறவினர்கள்.

    அறைக்குள் சென்ற சுவாதி கட்டிலில் உட்கார்ந்திருந்த விநோதனை பார்த்து, “எதுக்கு மண்டபத்தல அப்படி பேசனிங்க ” என்றாள் கோபத்துடன். அவள் பக்கம் திரும்பிய விநோதன், “இப்படி உட்காரு” என கட்டிலை காட்டினான். உட்கார்ந்தவள் பக்கம் திரும்பி, “இங்கப்பாரு சுவாதி, உனக்கு அதிகமா கோபம் வரும். நீ சொல்றதத்தான் மத்தவங்க கேட்கனும் அப்படின்னு நினைக்கறத முதல்ல விடு. உன் குணத்தப்பத்தி மண்டபத்தலயிருந்து வந்ததுமே உங்கம்மா எங்கிட்ட சொன்னாங்க. நீ நினைக்கற மாதிரி என்னால வாழ முடியாது. உன் சுதந்திரத்த நான் கணவன்ங்கற அதிகாரத்தை வச்சி தடுக்க மாட்டன். அத நீ தப்பா பயன்படுத்தாதன்னு சொல்றன். பணத்துக்காக உன்ன நான் கல்யாணம் செய்துக்கல. முதல்ல உங்க வசதிய நினைச்சி யோசிச்சோம். புரோக்கர் தான் நல்ல குடும்பம்ன்னு சொன்னாரு. அதனால தான் சரின்னு சொன்னோம். உனக்குயிருக்கற மாதிரி மத்தவங்களுக்கும் மனசு, அவுங்களுக்குன்னு ஒரு கருத்துயிருக்கும் அதுக்கும் மதிப்பு தரனும். சின்ன சின்ன விஷயத்துக்கெல்லாம் கோபப்பட்டா அதுக்கு மரியாதையில்லாம போயிடும். உன் மேல வருத்தம் தான் வரும். குடும்ப வாழ்க்கைன்னா கணவன் மனைவிக்குள்ள விட்டுக்கொடுக்கறது இருக்கனும். இந்த கட்டில்லயிருந்து சின்ன சின்ன ஆசைகள் வரை ஒவ்வொருத்தரும் புரிஞ்சிக்கிட்டு, கலந்து பேசி வாழ்ந்தா எந்த பிரச்சனையும்மில்ல. கோபமும் வரப்போறதில்ல.

    நம்ம இரண்டு பேருக்குள்ள இந்த பணம் வந்து குடும்பம் நடத்தப்போறதில்ல. மனிதர்களான நாம தான் குடும்பம் நடத்தப்போறோம். அதனால ஆதிக்கம் செலுத்தறத, கோபப்பட்டறத விட்டுட்டு விட்டுக்கொடுத்து வாழ பழகிக்க. அதான் நமக்குள்ள நல்ல வாழ்க்கையை தரும். உனக்கு அட்வைஸ் பண்றத்து புடிக்காதுன்னு உங்கம்மா சொன்னாங்க. இருந்தாலும் நான் மண்டபத்தல அப்படி பேசனதால நீ என் மேல கோபமா இருக்கறது தெரியும். நான் அந்த இடத்தல உன்ன விட்டுக்கொடுத்துயிருக்ககூடாது. ஆனா ஒரு பிரச்சனையை முளையிலயே கிள்ளிடனும் இல்லன்ன பெருசாகிடும். அதனால தான் அங்க பேசனன். இப்பவும் சொல்றன். அங்க உன்ன விட்டுக்கொடுத்ததுக்கு ஸாரி ” என பேசி முடித்தான்.

    இவ்வளவு நேரம் விநோதன் பேசியதை கட்டிலின் ஓரத்தில் அமர்ந்து கேட்டுக்கொண்டுயிருந்தாள்.

    “நானே தான் பேசிக்கிட்டுயிருக்கன் உன் கருத்து என்னன்னு சொல்லு”, என கேட்டான்.

    பதிலேதும் சொல்லாமல் தலையை திருப்பிக்கொண்டாள். நீண்ட நேரம் பதிலேதும் வராததால் அமைதியாக அப்படியே கட்டிலில் ஓரமாக படுத்துக்கொண்டான். சுவாதியின் மனம் கொதிக்க தொடங்கியது. பூக்கள் வாடத் தொடங்கியது.

    காலையில் அறையை விட்டு வெளியே வந்த சுவாதியை பார்த்ததுமே அலமேலுவுக்கு புரிந்து போனது. இரவு எதுவும் நடக்கவில்லை என்று. மகளை கிச்சன்க்கு அழைத்து சென்றவர் என்ன நடந்துச்சி என கேட்டார். அமைதியாக இருந்தவளை பார்த்து “சண்டை போட்டுக்கிட்டா,  சமாதானமா போறயிடத்தலயே சண்டைன்னா உன்னயெல்லாம் என்ன சொல்றது”, என நொந்துக்கொள்ள மவுனமாகவே தரையை பார்த்தப்படி நிற்க தாய் பாசம் அவரை கண் கலங்க வைத்தது.

    அப்போது “வாங்க மாப்பிள்ள” என்ற குரல் கேட்டு இருவரும் வெளியே பார்த்தனர். சோபாவில் அமர்ந்து பேப்பர் படித்தபடியே ரூமை விட்டு வெளியே வந்த விநோதனை  அழைத்து எதிரில் “உட்காருங்க”, என்றார் தங்கச்சாமி.

    கிச்சன் பக்கம் திரும்பி “அலமேலு, மாப்பிள்ளைக்கு காபி எடுத்துவா” என குரல் கொடுத்தார்.

    விநோதன் பக்கம் திரும்பி, “வீடு புடிச்சியிருக்கா மாப்பிள்ள.?”

    “நல்லாயிருக்கு மாமா.”

    “சுவாதியோட அறை சின்னதா இருக்கும். மேல பெருசா ஒரு அறையிருக்கு. அதை எடுத்துக்குங்க.”

    “எதுக்கு மாமா இருக்கறதே கம்பர்டபிளா இருக்கு.”

    “என்ன வசதி வேணும்மோ செய்துக்குங்க”, என்றதும் ஓரளவு புரிஞ்சது விநோதனுக்கு. வீட்டோட இருக்கச்சொல்றாரு. அத சுத்தி வளைச்சி பேசறாரு.

    “வீட்டோட மாப்பிள்ளையா இருக்க எனக்கு சம்மதம்மில்ல மாமா”, எனச்சொல்லும் போதே அலமேலுவும், சுவாதியும் ஹாலுக்கு வந்திருந்தனர்.

    “இல்ல அப்படி சொல்ல வரல மாப்ள”, என தயங்க,

    “நீங்க உங்க பொண்ணு மேல ரொம்ப அதிகமாவே பாசம் வச்சியிருக்கறது தெரியும் மாமா. உங்க பொண்ண நீங்க பாத்துக்கறத விட நான் என் மனைவியை ரொம்ப நல்லாவே பாத்துக்குவன்.”

    “அதுக்கில்ல மாப்ள.”

    “இதப்பத்தி நானும் என் மனைவியும் பேசி எடுக்க வேண்டிய முடிவு. நான் பேசிட்டு சொல்றன் மாமா”, என்றபடியே எழுந்து மீண்டும் அறைக்குள் சென்றான்.

    சில நொடி தன் அப்பாவை பார்த்தவள் பின் அலமேலு கையில் இருந்த காபி டம்பளரை வாங்கிய சுவாதி விநோதன் பின்னாடியே அறைக்குள் நுழைந்தவள் கதவை லாக் செய்தாள்.

    காபி டம்பளரை தந்துவிட்டு அமைதியாக பார்த்தவளிடம், “உங்கப்பா வீட்டோட மாப்பிள்ளையா இருக்கனம்ன்னு நினைக்கறாரு. ஒரே பொண்ணுன்னு ரொம்ப பாசம் வச்சிட்டாரு. அதனால அப்படி நினைக்கறாரு. ஆனா ஆம்பளைக்கு அழகு அவன் சம்பாதியத்தல மனைவிய நல்லா பாத்துக்கறது தான். அதான் எனக்கும் மரியாதை. உனக்கும் மரியாதை. இதான் என் கருத்து. உன் கருத்து என்னன்னு சொல்லு.”

    “உன் வீட்டுக்காரர் என்ன பண்றாருன்னு கேட்டா, இந்த தொழில் பண்றாருன்னு சொல்றதுத்தான் எனக்கு மரியாதை. எங்கப்பாவோட ஆபிஸ்ல வேலை பாக்கறாருன்னு சொல்றதுயில்ல. அது உங்களுக்கும் அசிங்கம். உங்களுக்கு ஒரு அசிங்கம்ன்னா அது எனக்கும் தான். சடங்கு முடிஞ்சதும் நாம நம்ம வீட்டுக்கு போயிடலாம்.”

    ஆச்சர்யமான விநோதன், “இந்த மாற்றம் நைட்டே வந்துயிருந்தா, ஒரு நைட் வேஸ்ட்டாகியிருக்காது. இப்ப நைட் வரைக்கும் காத்திருக்கனும்மா” என ஏக்கத்தோடு கேட்டபோது, “காத்திருக்க தேவையில்ல” என புன்னகைத்தபடியே அவன் உதட்டோடு தன் உதடுகளை இணைத்திருந்தாள் சுவாதி. விநோதன் குடித்த காபியின் மனம் அவளின் உதடுகளில் மணத்தது.

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 42 (22.1012)

     

    மலர்சபா

    புகார்க்காண்டம் – 06. கடல் ஆடு காதை
     
     
    விஞ்சை வீரன் தன் காதலியுடன் வந்து விழாக் காணுதல்
     
     
    உச்சி உயர்ந்த இமயமலையையும்
    வளமையான நீருடைய கங்கையாற்றையும்
    அழகு பொருந்திய உச்சயினி நகரத்தையும்
    விந்திய மலை சூழ்ந்த காட்டையும்
    வேங்கடம் என்னும் மலையையும்
    நிலம் கொள்ளாத அளவு
    பெருவிளைச்சல் காணும்
    காவிரி பாயும் சோழநாட்டினையும்
    தன் காதலிக்குக் காட்டிய பின்
    இதழ்விரி பூக்கள் நிறைந்த
    தோட்டங்களை உடைய
    புகார்நகரம் அடைந்தனன்
    விஞ்சையன்.
     
     
    இந்திரனைத் தொழுது,
    எல்லா இடங்களையும்
    முறைமைப்படியே
    அவளுக்குக் காட்டியபின்
    வளம் பொருந்திய புகார் நகர்
    இந்திரவிழாவினையும்
    மாதவியின் ஆடலையும்
    காணலுற்றனர்.
     
     
    மாதவி ஆடிய பதினொரு வகை ஆடல்களைக் காதலிக்குக் காட்டி விஞ்சை வீரன் மகிழ்தல்
    (முதல் ஐந்து வகைகள்)

     
    திருமாலைப் புகழும் தேவபாணியும்
    வருணப்பூதர் நால்வரைப் புகழும்
    நால்வகைத் தேவபாணியும்
    பல வகை உயிர்களும் தம் ஒளியால்
    நன்மை பெறும் தன்மையுடைய
    வானூர்ந்து செல்லும்
    நிலவைப் பாடும் தேவபாணியும்
    ஆகிய
    இசைப்பாடல்களைப் பாடிய பின்னர்
    அவதாளம் நீங்கிய
    நல் தாளத்தின் இயல்பு பொருந்த
    மாதவி புரிந்த நடன வகைகள்
    ஒவ்வொன்றையும் தன் காதலிக்குக்
    காட்டி மகிழ்ந்தனன்.
     
     
    1. கொடுகொட்டி
     
     
    பாரதி(பைரவி) ஆடியமையால்
    பாரதியரங்கம் எனப்பட்ட சுடுகாட்டில்…
    திரிபுரத்தையும் எரியச் செய்ய
    தேவர்கள் வேண்டியதால்,
    தீயினைத் தலையாய் உடைய
    திருமாலாகிய அம்பினை
    ஏவிய சிவன்
    திரிபுரத்தைச் சாம்பலாக்கினன்.
     
    அத்தருணத்தில்
    உமையவளைத் தன் ஒருபாகமாகக் கொண்டு
    தேவர் யாவரினும் சிறந்த இறைவன்
    வெற்றிக் களியில் கைகொட்டி ஆடிய
    கொடுகொட்டி ஆடல்
    இது பாராய்!
     
     
    2. பாண்டரங்கம்
     
     
    தன் தேரின் முன்
    பாகன் என நின்றிட்ட
    நான்முகன் காணும்படி
    பாரதி வடிவம் பூண்டு
    திருநீறு அணிந்து
    சிவபெருமான் ஆடிய
    பாண்டரங்கக் கூத்து
    இது பாராய்!
     
     
    3. அல்லியம்
     
     
    கஞ்சனின் வஞ்சனை
    வெல்ல நினைத்து
    அவன் ஏவி அனுப்பிய
    யானையின் கொம்பை ஒடிப்பதற்காக
    அஞ்சன வண்ணன் நின்றாடிய
    அல்லியக் கூத்து
    இது பாராய்!
     
     
    4. மல்லாடல்
     
     
    கஞ்சன் அவன் ஏவிய
    அசுரர்களை வெல்ல
    திருமால் ஆடிய
    மல்லாடல் எனும் கூத்து
    இது பாராய்!
     
     
    5. துடிக் கூத்து
     
     
    கருமையான கடலது நடுவே
    நீர் அலைகளே அரங்கமெனக் கொண்டு
    தன்னை எதிர்த்து முன்நின்ற
    வஞ்சச் சூரனை
    எதிர்த்துக் கொன்ற முருகன்
    துடி கொட்டி ஆடிய
    துடிக் கூத்து
    இது பாராய்!

     

    அடிப்படையாய் அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 28 – 30
     
     
    அடிப்படையாய் அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 31- 51
     
     

    படத்திற்கு நன்றி :

    http://macaulay.cuny.edu/eportfolios/judell12/2012/09/15/the-elegant-dance-form/

    Share
  • சகலகலாவல்லியே…!

     

    கவிநயா

    சகலகலா வல்லியே — உனைப் பாட
    தீந்தமிழ் வரும் துள்ளியே
    (சகலகலா)

    பண்ணிசை உனைப் பாட
    எண்திசை உனை வாழ்த்த
    கண்மிசை நீர் பெருக
    என்திசை நீ பார்க்க
    (சகலகலா)

    ஒவ்வொரு கலையிலும் உள்ளொளிர்ந்திருப்பாய்
    வேதத்தின் நாதமாய் நீ ஒலித்திருப்பாய்
    நான்முகன் நாவினில் நீ குடியிருப்பாய்
    நற்றமிழ் நான்பாட அகம்மகிழ்ந்திருப்பாய்
    (சகலகலா)

    சுப்புத்தாத்தாவின் சகலகலாவல்லி

    Share
  • வல்லமையாளர்!

     

    திவாகர்

    இனி வரும் பத்துப் பதினைந்து நாட்கள் உலகம் முழுதுமே பேசப்போகும் செய்தி அமெரிக்காவின் ஜனாதிபதி தேர்தல் பற்றிதான். இந்தியர்களுக்கு பொதுவாக பத்து வருடங்களுக்கு முன்பு இந்த அமெரிக்கா தேர்தல் விவகாரங்களில் எல்லாம் அவர்களுக்கு விருப்பம் கிடையாது. ஆனால் இந்த மென்பொருள் தொழிலில் எப்போது இந்தியா மேன்மை அடையத் தொடங்கியதோ, எப்போது மென்பொருள் ஏற்றுமதி மூலம் தன் வளர்ச்சி விகிதத்தை மிக அதிகமாக உலகுக்குக் காட்டத் தொடங்கியதோ, எப்போது அமெரிக்கா இந்த இந்திய மென்பொருள் வித்த்கர்கள் மூலம் பலனடையத் தொடங்கியதோ, எப்போது இந்தியாவில் உள்ள மத்தியதரக் குடும்பங்கள் ஏராளமாக மென்பொருள் வித்தகர்களை உருவாக்கி அவர்கள் மூலம் வளர்ச்சி அடையத் தொடங்கியதோ, அப்போதே அமெரிக்காவும் அமெரிக்க அரசியலும் அமெரிக்க ஆட்சியர்களின் சாதக் பாதக முடிவுகளிலும் இந்தியர்களுக்கு  ஒரு தனிப்பட்ட விருப்பத்தை உண்டாக்கிவிட்டது எனச் சொல்லலாம்.

    இந்த 2000 ஆம் ஆண்டு வருமுன்பு அமெரிக்காவில் ஏற்பட்ட கடுஞ்சிக்கலான Y2K (Data memory loss) ஏற்பட்டபோது அதைப் பெருமளவில் சரிசெய்ய இந்திய மென்பொருள் பொறியாளர்கள் உதவினார்கள். அதன்பிறகு மென்பொருள் ஏற்றுமதியும் இந்தியாவில் சூடு பிடித்தது. அமெரிக்கா முதற்கொண்டு பல மேலை நாடுகள் இந்திய மென்பொருள் கம்பெனிகள் மூலம் காண்டிராக்ட் வேலைகளைக் கொடுத்து அதன் மூலம் அனைவரும் பலன் பெற வேண்டிய ஒரு நல்ல ஏற்பாட்டை ஏற்படுத்தினர். குறிப்பாக இந்தியா இதனால் பொருளாதாரத்தில் மிகப் பரவலாக பலன் அடைந்து வருவதை நாம் மறுக்க முடியாது.

    இதனால் அமெரிக்கா எடுக்கும் உள்நாட்டு, வெளிநாட்டுப் பொருளாதாரக் கொள்கை ஒவ்வொன்றும் இந்தியர்களுக்கு மிகவும் முக்கியமானவையாகப்படுகிறது. அங்கு செயல்படும் ஜனாதிபதி எவ்வாறு செயல்படுகிறார் என்பது நமக்கு முக்கியமானவையாகப்படுகிறது. தெரிந்தோ தெரியாமலோ, அல்லது தெரிந்தும் தெரியாதது போல தற்போதைய ஜனாதிபதி ஒபாமா இந்தியர்களுக்கு எதிரான சூழ்நிலையில் இருப்பதாக பல்நோக்கர்கள் தெளிவுபடுத்தி வருகிறார்கள். இத்தகைய சூநிலையில்தான் நம் தமிழ் குழுமங்களில் ஒரு சுவையான விவாதக் களம் படித்தேன். நண்பர்கள் வேந்தன் அரசு, பழைமைபேசி, செல்வன் போன்றோர் மிகச் சுவையான விவரங்களையும் குடியரசு-ஜனநாயகக் கட்சி வேட்பாளர்களின் விவாதங்களையும் அழகாகத் தொகுத்து நமக்கு தந்து வருகிறார்கள். மூவரில் இருவர் ஒபாமாவுக்காகவும், செல்வன் ரோம்னிக்காகவும் வாதாடி வருவதும் சுவையாக உள்ளது. குடியரசுக் கட்சி வேட்பாளர் பொதுவாக இந்தியர்களுக்கு சாதகமானவர் போல ஒரு போக்கினை உருவாக்கி வருவதும் தெரிய வருகிறது, என்றாலும் ஒபாமாவின் அமெரிக்க மக்களின் நலம் என்ற போர்வையில் அவர் ஓட்டுக் கேட்டு வருவதை ரோம்னியாலும் எதிர்க்கவும் முடியாது.. முடிவு எப்படி வேண்டுமானாலும் மாறலாம் என்ற சூழ்நிலை பொதுவாகக் காணப்படும் இந்த நேரத்தில் நம் இந்திய பணநாயகத் தேர்தலை விட (அமெரிக்காவிலும் பணம் நன்றாகவே விளையாடும், ஆனாலும் வெளிப்படையாகத்தான்) நமக்குத் தனிப்பட்ட விருப்பத்தை இந்தமுறை இந்தத் தேர்தல் உருவாக்கி வருகிறது.

    நம்மைப் பொறுத்தவரை, ரோம்னியானாலும் சரி, ஒபாமாவானாலும் சரி, யார் ஆண்டாலும் நம்மைப் பாதிக்காத அளவில் ஆளவேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம். இவர்கள் இருவருமே நண்பர்களுமல்ல, எதிரிகளுமல்ல.. ஒரு நல்ல பிஸிநஸ் ரிலேஷன், நமக்கு நல்ல பயனளிக்கும் உறவு, மேலும் வலுப்பெறவேண்டும் – இதுதான் நமது விருப்பம்.

    செல்வன் ஒரு தனியாளாக நின்று இந்த விவாதக் களத்தில் நன்றாகவே சமாளித்து வருகிறார் என்றுதான் படுகிறது. அவர் கொடுத்து வரும் தகவலின் ஒரு பகுதியை இங்கே உங்களுக்காகத் தருகிறேன்.

    மக்கள் தீர்ப்பை பற்றி ஒபாமா என்றும் கவலைபட்டது இல்லை. “மக்கள் யார் எனக்கு உத்தரவு போட?நான் போடுவது தான் சட்டம்..பிடிங்கடா ஒபாமா கேரை” என நான்சி பெலோஸி, ஹேரி ரீடுடன் இணைந்து வல்லடியாக ஒபாமகேரை மக்களின் அத்தனை எதிர்ப்பையும் மீறி சர்வாதிகாரமாக திணித்தவர் ஒபாமா. அதனால் மக்கள் தீர்ப்பை பற்றி நாம் இங்கே பேசுவதில் பொருளே இல்லை. மக்கள் திரிப்பை மதிக்கணும் எனில் ஒபாமகேரை அடுத்த நிமிடம் தூக்குவதுதான் முறை.

    மற்றபடி ஒபாமகேர் மிக பெரும் பொய்களாலும், பிராடுதனத்தாலும் கட்டப்பட்ட சீட்டுகட்டு மாளிகை. மெடிகேரில் இருந்து 716 பில்லியன் டாலரை தூக்கி ஒபாமாகேரில் போட்டு “நான் மெடிகேரையும் காப்பாற்றுகிறேன், ஒபாமம்கேரையும் பண்ட் செய்கிறேன்” என டபுள் கவுண்ட் செய்தது ஒரு மிகபெரிய பொருளாதார மோசடி. அடுத்து “தனியார் கம்பெனியில் ஒரு பொருளை வாங்காதவருக்கு பைன் மற்றும் ஜெயில்” என உலக வரலாற்றில் எங்கும் இல்லாத தண்டனையை விதித்தது அடுத்த மோசடி

    மூன்றாவது “ஆட்சிக்கு வந்தால் வருடம் $250,000 கீழாக வருமானம் உள்ளவருக்கு வரி விதிக்க மாட்டேன்” என வீதி வீதியாக முழங்கி ஆட்சியை பிடித்தபின் வருடம் $15,000 சம்பாதிப்பவர்கள் “இன்சூரன்சு வாங்கணும், அல்லது வரி கட்டணும்” என வரி விதிப்பில் ஈடுபட்டது மூன்றாவது மோசடி. இந்த வரிவிதிப்பு திட்டம் மக்களுக்கு நன்மை அளிக்கிறதா? இல்லை.  காரணம் என்னவெனில் வருடம் பதினைந்தாயிரம் சம்பாதிப்பவர்கள் ஒபாமாவின் சப்சிடியுடன் மாதம் ஐம்பது டாலர் கட்டணம் அதாவது வருடம் அறுநூறு டாலர் கட்டி இன்சூரன்சு எடுப்பது அவர்களுக்கு கூடுதல் சுமை. அதனால் அவர்களுக்கு பணம் மிச்சமாகுமா? இல்லை. காரணம் அபப்டியே இன்சூரன்சு எடுத்தாலும் டிடக்டபிள் ஏழாயிரம் டாலர், எட்டாயிரம் டாலர் என இருக்கும். வருடம் அறுநூறு டாலர் கட்டி இன்சூரன்சு எடுத்தாலும் எட்டயிரம் டாலர் வரை கைகாசு போட்டு தான் சிகிச்சை எடுக்கணும். சிகிச்சை செலவு ஏழாயிரம், எட்டாயிரம் டாலரை தான்டினால் தான் இன்சூரன்சு கம்பெனி பணம் கட்டும். பெரிய ஆபரேஷன், ஆக்சிடெண்ட் நடக்காமல் இருந்தால் இளைஞர்களுக்கு வருடம் எட்டாயிரம், ஏழாயிரம் டாலர் செலவு ஆகப் போவது இல்லை. அதனால் அவர்கள் அந்த ரிஸ்க்கை எடுத்து வருடம் அறுநூறு டாலர் கட்டி இன்சூரன்சு ப்ரீமியம் வாங்குவது இல்லை.

    விபத்து நடந்தால், ஹார்ட் அட்டாக் வந்தால் எமெர்ஜென்சி ரூமில் இலவச சிகிச்சை. அப்புறம் ஆஸ்பத்திரி நிர்வாகம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து பணத்தைக் கேட்பார்கள். பணத்தைக் கட்டவில்லை எனில் நஷ்டம் கோடிகளில் குளிக்கும் ஆஸ்பத்திரிகளுக்கே ஒழிய எமெர்ஜென்சி ரூமில் சிகிச்சை எடுப்பவர்களுக்கு அல்ல. ஆக இந்த இன்டிவிஜுவல் மெண்டேட் கோடீஸ்வர ஆஸ்பத்திரிகளின் நன்மைக்கு என சொன்னால் அதில் பொருள் உண்டு. ஏழைகளின் நன்மைக்கு என கூறுவதில் எந்த பொருளும் இல்லை.

    தான் அளித்த வாக்குறுதிப்படி ஒபாமா ஏழைகளின் மேல் வரி விதிக்காமல் இந்தத் திட்டத்தை கொண்டு வந்திருக்கவேண்டும். அதை செய்யாததால் இத்திட்டம் மகக்ளால் கடுமையாக எதிர்க்கப்படுகிறது. ஏழைகளுக்கு மருத்துவ வசதி அளிப்பது நல்ல விஷயம் தான் என்றாலும் அதை இம்மாதிரி மெடிகேரை சூறையாடாமலும், ஏழைகள் மேல் வரி விதிக்காமலும் செய்திருக்கவேண்டும்.

    ரிபப்ளிக்கன்கள் திட்டப்படி “ஸ்டேட் லைன்களைத் தாண்டி இன்சூரன்சு வாங்க அனுமதிப்பது” மற்றும் “டார்ட் ரிஃபார்ம்” ஆகியவற்றை கொண்டு வந்து இன்சூரன்சு செலவை பெருமளவு குறைத்திருக்க முடியும். ஆனால் வக்கீல்கள் ஒபாமா கட்சி ஆதரவாளர்கள் என்பதால் அதைச் செய்ய மறுத்து மெடிக்கல் இன்சூரன்சு கட்டணத்தை பெருமளவு உயர்த்தியுள்ளார் ஒபாமா.

    இவர் வாதங்களில் ஒரு சிறுபகுதிதான் கொடுத்திருக்கிறேன். செல்வன் இப்படியெல்லாம் சொல்வதனால் ரோம்னி நாளை ஒருவேளை ஆட்சிக்கு வந்தால் ஒபாமாவின் இதே செய்கைகளை அவரும் அமெரிக்க நன்மை என்ற பெயரில் செய்யமாட்டார் என்பது என்ன நிச்சயம் என்ற கேள்வி கேட்கத் தோன்றினாலும், நல்ல சுவையான கருத்துக்களைக் கொடுத்து அங்குள்ள அரசியலையும் தெளிவாகத்தந்த திரு செல்வன் அவர்களை இந்த வார வல்லமையாளராக நம் வல்லமைக் குழு தேர்ந்தெடுக்கிறது.  திரு செல்வன் அவர்களுக்கு நம் வாழ்த்துகள்.

     

    கடைசி பாரா: இசைக்கவி ரமணன் அவர்களின் தேவி நவராத்திரி கவிதைக் கொலுவில் இசைக்கவி எழுதின பொன் வரிகள்தான் இந்த வாரக் கடைசி பாராவில் இடம்பெறுகிறது. பிரபஞ்சத்தை ஆளும் அன்னையை எப்படி வர்ணித்தாலும், எத்தனை முறை வர்ணித்தாலும் போத மாட்டேங்குதுதான்

        காலு வச்ச எடமெங்கும்  தாமரை
        கையி தொட்ட எடமெங்கும் பூமழை
        கண்ணு பட்ட எடமெல்லாம் பெளர்ணமி
        கன்னு முட்ட முட்டவரும் பால்மடி

        இவ எட்ட முடியாத பைரவி
        எவனும் கிட்ட நெருங்காத பேரொளி

        அவ சுட்ட எடமெங்கும் பொட்டலே
        அது தொட்ட கணத்துல பூக்குமே

        இது கட்டுக் கடங்காத வெள்ளமே
        அதைக் கட்டத் துடிக்குது உள்ளமே

     

    Share
  • நடிக்கிறாள்

     

    இசைக்கவி ரமணன்

    வீசும் ஒளிவிழிப் பார்வையில், எங்கள்
    வீரர் உதிர்த்திடும் வேர்வையில், ஞானத்
    தேசு பெருகிடும் நெஞ்சினில், எங்கள்
    தேசத்து மாதர்கள் நெற்றியில், பொன்னைப்
    பூசிப் பரப்பிய மாலையில், இன்பப்
    புள்ளினம் ஆர்த்திடும் சோலையில், ஒரு
    தூசின் அசைவு முயற்சியில், சக்தி
    துயர்கெடக் கூத்து நடிக்கிறாள்!

    ஆழ நடுக்கருங் காட்டிலே, ஓர்
    ஆளுமில் லாக்குச்சு வீட்டிலே, நன்கு
    வாழ மறந்திட்ட போதிலே, நல்ல
    வார்த்தையொன் றும்விழாக் காதிலே, கண்ணில்
    ஆழத் துயர்சுழல் கையிலே, நித்தம்
    ஆடியின் புற்றுவீழ் பொய்யிலே, தோன்றி
    வாழத் திருவொளி பெய்யவே, சக்தி
    வாழ்வெனும் கூத்து நடிக்கிறாள்!

    எண்ணரியப் பல பந்துகள், தமை
    எட்டி உதைத்துச் சுழற்றுவாள்! நீல
    விண்ணைக் கடலினி இம் மண்ணினை, நூறு
    வித்தைகள் காட்டி இயக்குவாள், மனம்
    எண்ணுமுன்னே சிரம் தாழ்ந்திடும், முன்னோர்
    என்னும் மலர்களைச் சூடுவாள், அவள்
    எண்ணும்படிக் கொன்றுமே இலாத
    என்னிலும் ஓடி நடிக்கிறாள்!

    காதலெனச் சொல்லிக் காமத்தில், இந்தக்
    கட்டுடல் வீழ்ந்து துடிக்கையில், நெஞ்சம்
    சாதலை எண்ணி வருந்தியே, ஒரு
    தத்துவம் இன்றித் தவிக்கையில், வாழ்வில்
    சோதனை யாய்ப்பல துன்பங்கள், வந்து
    சூழ்ந்து விழுந்து கடிக்கையில், இன்ப
    வேத மெனக்கவி வெள்ளமாய், சக்தி
    வேக நடனம் நடிக்கிறாள்!

    பண்ணிய பாவங்கள் எத்தனை! எய்தும்
    பழிகள் ஊறுகள் எத்தனை!
    கண்ணிருந்தும் குருடாகிய, கலி
    காலங்கள் எத்தனை எத்தனை!
    எண்ணி இவைகளை ஓர்கணம், இந்த
    ஏழை அழுது புரள்கையில், எந்தன்
    கண்ணின் றுருண்டிடும் முத்திலும், அந்தக்
    காளி நடனம் நடிக்கிறாள்!

    படத்திற்கு நன்றி :

    http://en.wikipedia.org/wiki/File:Kali_Dakshineswar.jpg

    Share
  • சடசபை

    தி.ந.இளங்கோவன்

     

    இங்கே மனிதர்கள் மட்டுமே

    விவாதிக்கப் படுகிறார்கள்.

    கருத்துப் பரிமாறல்களுக்கும்

    கருத்து மோதல்களுக்கும்

    இடமில்லை இங்கே !

    நாக்குக்கத்திகள் உரசும் ஓசைகள் !

    கொட்டும் வார்த்தை உதிரத்தின் குரூரம் !

    தோற்று அலறும் குரல்களின் வேதனை !

    வெற்றுச் சவால்களின்,

    ஆணவத்தின் எக்காள ஒலிகள் !

    இங்கே இன்றைய காவுகள்,

    நாளைய பட்டாக்கத்திகள் !

    துதி பாடும் நாக்குகள்

    நொடிப் பிறழ்வில்

    கக்குமிங்கே தீக்கங்குகள் !

    கருத்துக் குடமேந்தி வருவோரும்

    கருத்துக்காய் குடமேந்தி வருவோரும்

    பத்திரமாய் ஒதுங்கிச் செல்லுங்கள்,

    கண், காது, வாய் பொத்தி

    காந்திமகான் சொன்னது போல் !

    இங்கே மனிதர்கள் மட்டுமே

    விவாதிக்கப் படுகிறார்கள்.

    கருத்துப் பரிமாறல்களுக்கும்

    கருத்து மோதல்களுக்கும்

    இடமில்லை இங்கே !

     

    சித்திரத்துக்கு நன்றி:
    Share
  • அன்பே தெய்வம்

    விசாலம்

     “ட்ரிங் டிரிங் ” … டெலிபோன் மணி ஒலித்தது.

    ”இந்தப்போன் எப்போதும்   பால் காச்சும்   போதுதான் வரும், இரு இரு வரேன்” என்று ஒரு குழந்தை போல் சொல்லிக்கொண்டு ராஜம் போனை எடுத்தாள்.

    “ஹலோ ஹலோ யார் பேசறது ?”

    “நான் தான் சுப்பிரமண்யன்”

    “நமஸ்காரம் இருங்கோ. இதோ எங்காத்து மாமாவைக் கூப்படறேன்”………டெலிபோனைப்பொத்தியபடி, “ஏன்னா இந்தாங்கோ நம்ம சம்பந்தி….கூப்பிடறார் உடனே வாங்கோ” என்று தன் கணவர் சிவராமனைக் கூப்பிட்டாள். பாதி ஷவரம் செய்த முகத்துடன் அவரும் வந்தார்.

    “ஹலோ நமஸ்காரம் சௌக்கியமா? எப்போ முகூர்த்தத்தை வச்சுக்கலாம் ? “

    “அதுதான் சொல்ல வந்தேன். இந்தச்சம்பந்ததம் நடக்காது மன்னிக்கணும், நீங்கள் நிச்சியதார்த்தம் அன்று போட்ட பொருட்கள் எல்லாம் திருப்பித் தந்துவிடுகிறோம், வந்து எடுத்துங்கோ.”

    “ஏன் என்ன ஆச்சு ? எல்லாம் நன்னாத்தானே நடந்தது இப்ப என்ன திடீர்னு …”

    “மேலே ஒண்ணும் சொல்லறதுக்கில்லை வச்சுடறேன்”

    ராஜம் கேட்டாள்,  “என்ன ஆச்சு ?ஏன் இப்படி இடிஞ்சு போய் நிக்கறேள் ?”

    “நம்ம சம்பந்தம் வேண்டாம்னு சொல்றாடி …. நம்ம பையனுக்கு என்ன குறைச்சல் ?…ராஜா மாதிரி இருக்கான் சி ஏ வேறு …….கை நிறைய சம்பளம் ….அவாளுக்கு என்ன….. கசக்கறதா ?    சரி, விடு விடு     இந்தப்பெண் இல்லேன்னா எத்தனையோ பெண்கள்”……..

    ராஜத்திற்கு மனம் உளைச்சல் கண்டது. ஓடிப்போய் தன் தங்கையிடம் போனில் தெரிவித்தாள்.     பின் திருவாரூரில் இருக்கும் தன் அப்பாவைக் கூப்பிட்டாள்.

    “ஹலோ ஹலோ ,யாரு அப்பாவா…..”

    “ஆமாம் ராஜமா …என்ன மோஹனுக்கு முகூர்த்ததேதி பார்த்தாச்சா”?

    “அதுதாம்பா சொல்ல வந்தேன். கல்யாணம் நின்னுபோயிடுத்து, என்ன காரணம்னு தெரிலை. நீங்கள் தான் துப்பறியும் சாம்பு போல் கண்டுபிடிக்க வேண்டும்.    பெண்ணோட தாத்தாவும் திருவாரூர்தானே….”

    “சரி ராஜம் நான் விஜாரிச்சு  சொல்றேன், கவலப்படாதே”

    அப்பாடி… இப்போத்தான் ராஜத்திற்கு மூச்சு வந்தது. உள்ளே போனாள்.

    ப்துல் தும் கஹான் ஹோ?’ {அப்துல் நீ எங்குஇருக்கிறாய் “?} என்று இந்தியில் பேச அப்துல் “அபி ஆயா {இதோவந்துவிட்டேன் } என்று பதில் சொன்னான்.

    “சாப்பிட்டாயா …. அப்துல் …..நம்ம மோஹன் கல்யாணம் நின்றுவிட்டது தெரிமா”?

    “தெரியும் மாஜி ” என்று அவனும் தமிழில் பேச முயன்றான். அவன் கண்கள் கலங்கின.

     

    தில்லியில் ஜனக்புரி என்ற இடத்தில் தான் சிவராமன் குடும்பம் இருந்தது. இரு மகன்கள் …..மூத்தவன் மோஹன்…. தம்பி சுரேஷ். பின் யார் இந்த அப்துல் ? இது தெரிய பத்து வருடங்களுக்கு முன்னால் நாம் போக வேண்டும்.

    எப்போதும் தனக்கென்று ஒரு ரிக்க்ஷா வாலாவை ராஜம் தன் சிறு பிரயாணத்திற்கு அமர்த்திக்கொள்வாள். ஒருநாள் அவனைக்கூப்பிடப் போன போது ஒரு ஐந்து வயது சிறுவன் அங்கு அழுது கொண்டிருந்தான். அவன் தான் ரிக்க்ஷாக்காரன் சலீமின் குட்டித்தம்பி அப்துல் …..ராஜம் அவன் ஏன் அழுகிறான் என்று கேட்க, அவனும் தன் பெற்றோர்கள் இறந்துவிட்டதால் இந்தக்குட்டி அப்துலைத் தான் பார்த்துக்கொள்வதாகவும் வேலைக்குப்போக மிக கஷ்டமாக இருப்பதாகவும் கூறினான்.

    தவிர வறுமை வேறு …..ராஜம் இயல்பாகவே இளகிய மனம் படைத்தவள். ஆதலால் அவனிடம் “சலீம் நான் இவனை வளர்த்து படிக்க வைக்கிறேன். அனுப்புகிறாயா ?”என்று கேட்டாள்.

    கரும்பு தின்னக்கூலியா ? உடனேயே அவனை அனுப்பி வைத்தான். அப்துல் வயிறு ஒடுங்கி ஒல்லிக்குச்சியாய் ராஜத்தைத் தொடர்ந்தான். அன்று வந்தவன் தான் அப்துல் “மாஜி மாஜி “என்று அன்பைக்கொட்டினான். ராஜமும் அவனைப்பள்ளிக்கு அனுப்பித்தாள். தமிழ் கற்றுக்கொடுத்தாள். விதவிதமான உடைகளும் வாங்கிக்கொடுத்தாள். அவனும் வளர்ந்தான். வீட்டுவேலையும் செய்து, பின் படிப்பிலும் கவனம் செலுத்தினான். மொத்தத்தில் ராஜத்தின் வலது கையானான். ராஜத்தின் பிள்ளைகள் ஒரு வேலையும் செய்யாமல் அப்துலை வேலை வாங்குவார்கள். இது ராஜத்திற்கு மிக வருத்தம் உண்டாக்கும்.

    அப்துலுக்கு அந்த வீட்டில் தனிச்சலுகை என்று இரண்டாவது மகன் மனம் வெம்பினான். பொறாமை வேறு அவனை ஆட்கொண்டது. ஒருநாள் ராஜம் தலைவலியால் துடித்தாள்.

    அவள் மகன் சுரேஷ் காலேஜிலிருந்து வந்தான் ,”அம்மா என்ன திங்க வச்சிருக்கே எடுத்துக்கொடு”

    “சுரேஷ் கண்ணா எனக்குத் தலைவலிடா….. நீயாகவே உள்ளே போய் தோசை எடுத்துக்கோ”

    அப்போது அப்துலும் அங்கு வந்தான்.

    “மாஜி என்ன ஆச்சு ?உங்கல்கு ,,,,,தலவலியா? இதோ நானு வரேன் ” என்று தனக்குத்தெரிந்தத்தமிழில் பேசித் தலைவலி பாம் கொண்டு வந்து தடவினான். ,பின் உள்ளே போய் தோசையும் கொண்டு வந்து “மாஜி இந்தா.. வாயைக்காட்டு,, தோசை சாப்பிடு” என்று ஆசையாகச் சொன்னான். ராஜம் மனம் நெகிழ்ந்தாள். அப்படியே அவனை அணைத்துக்கொண்டாள். இதையெல்லாம் பார்த்த சுரேஷுக்குக் கோபம் கோபமாக வந்தது. “இந்த அம்மா என்ன இத்தனை மாறி விட்டாள்?  எப்போ பாத்தாலும் அப்துலையே கொஞ்சறாளே”

    “ஏண்டா சுரேஷ் என்ன செய்யறே “ என்று கேட்டபடி மோகன் அங்கு வந்தான். “ஒன்றுமில்லை அண்ணா… இந்த அப்துல் அம்மாவை என்ன மக்கன்{வெண்ணெய்} வைத்தானோ நன்னா மயக்கி  வச்சிருக்கான். அன்று நான் கிரிக்கெட் பார்க்கறச்ச இந்த  அம்மா அவனுக்காக இராமயணம் சானல் மாத்தினா  தெரிமா உனக்கு?’

    “ஆமாம் என்னிடமும் அம்மா அன்னிக்கு சொன்னாள் .  இந்த அப்துல் எனக்குக்கால் பிடிச்சு விடறான், பாத்திரமும் அலம்பித் தரான், ரொம்ப அன்பாக பழகறான்.  நீங்க  ஆபீஸ்லேந்து வரதும்  தெரிலை.  ஆபீஸ் போவதும்
    தெரிலை .. என்ன பிள்ளைகள்டா நீங்கள்” என்றாள்.

    இப்படிச்சொல்லும்போதே ராஜம் அங்கு வர அண்ணா தம்பி  பேச்சு நின்றுவிட்டது. இந்த நிலையில் தான் மூத்தவன் மோஹனுக்கு பெண் பார்த்து பெண்வீட்டார் போபாலிலிருந்து வருவதாகச்சொன்னார்கள். அவர்கள்தில்லிக்கு ஒரு
    கல்யாணத்திற்கு வருவதாகவும், அப்போது பிள்ளையும் பெண்ணும் பார்த்து விடட்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.    

    வாசலில் வண்டி வந்து நின்றது.  “அப்துல் இங்க வா  . வாசல்ல அவாள்ளாம்  வந்துட்டா போலிருக்கு  போய் அழைச்சுண்டு வரலாம்  வா ” என்றபடி அப்துலையும் அழைத்து வந்தாள்.

    பெண்ணின் தாயார்   அவனை ஏற இறங்கப்பார்த்து “ஆமாம் யார் இந்தப்பிள்ளை ‘? என்று கேட்டாள்.

    “இவன் தான் அப்துல். என் பிள்ளை “என்று அவனை அணைத்துக்கொண்டாள் ராஜம். பெண்ணின் தாய் முகம் சுளித்தாள். பின் ராஜம் அந்த அப்துல் கையில் டிபன் காபி எல்லாம் கொடுத்து அனுப்பினாள்.

    பெண்ணின் அம்மா அவ்வளவு ஆசாரம் இல்லை என்றாலும், அப்துல் பூஜை அறை, கிச்சன் என்று நுழைவது அவளுக்குப் பிடிக்கவில்லை.. பெண் சுமதியும் மோஹனும் தன்னை மறந்து தனியாகப் பேசிக்கொண்டு பின் திருமணத்திற்கு  ஒகே சொல்லி விட்டார்கள். நிச்சியதார்த்தம் மிக நன்றாக நடந்தது ……………

    ”போஸ்ட்” என்று தபால்காரன் ஒரு கடிதத்தைப்போட ராஜம் அதை எடுத்துப்படித்தாள். அவள் அப்பா எழுதியிருந்தார். அதில் அப்துலால்தான் கல்யாணம் நின்றுவிட்டதாகவும், இரு மகன்கள் ராஜாப்போல் இருக்க, இந்த அப்துலை ஏன் வளர்க்க வேண்டும்.   இந்தப்பையனுக்கும் அந்தக்குடுமபத்திற்கும் எதாவது சம்பந்தம் இருக்குமா என்ற சந்தேகம் வந்துவிட்டது அவர்களுக்கு என்றும் எழுதியிருந்தார். இதைப்படித்த ராஜத்திற்கு கையும் ஓடலை காலும் ஓடலை.

    அவசரம் அவசரமாகப் போனை அடித்தாள் தன் அப்பாவுக்கு…….

    “அப்பா உங்க   லெட்டர் வந்தது.    என்ன இது இப்படி அபாண்டமாகப்பழி…”

    “நீ ஏன் அந்த அப்துல் பயலை வளைய வர விட்டாய்?  அதுதான் கல்யாணமே நின்று விட்டது இப்போ ..பார்த்தாயா ?அதன் விளைவை ……”

    “என்ன அப்பா…நீங்க ! அம்மா அப்பா இல்லாத ஒரு பிள்ளையை வளர்ப்பது தப்பா”?

    “அதுசரி ராஜம்…. இப்போ என்ன செய்யப்போறே “?

    வேறு வரன் வராமலா போய்விடும்? கடவுள் விட்ட வழி “

    பேச்சு முடிந்தது. கல்யாணமும் நின்றுவிட்டது. 

    காலம் உருண்டது. வேறு பெண் மோஹனுக்கு நிச்சியம் ஆயிற்று.

    “சுரேஷ் அந்த அப்துலை என் கல்யாணத்திற்கு அப்புறம் வரசொல்” இந்த வரனையும் நிறுத்திவிடப்போறான் ” என்றான் மோஹன் .

    “அம்மா அந்த அப்துல் பயலை கிட்நேப் செய்து கல்யாணம் ஆனபின் கொண்டுவிடுகிறேன் “என்று கிண்டல் அடித்தான் சுரேஷ்.

    மோஹனும் சுரேஷும் தமிழர்கள் ஆனாலும் இந்தியில் பேசிக்கொண்டார்கள். ஆனால் அப்துலோ தமிழ் நன்றாகப்பேசினான். கடவுள் கிருபையினால் ஒரு தடங்கலுமில்லாமல் திருமணம் நடந்தது. கல்யாணம் ஆனவுடனேயே மோஹன் தனிக்குடித்தனம் போய் விட்டான். இரண்டாவது மகனோ பூனாவில் வேலை சேர்ந்து
    விட்டான். சிவராமனும் ராஜமும் தனித்து விடப்பட்டனர். ஆனால் பிள்ளைக்குப்பிள்ளையாக அப்துல் இருந்து காலேஜையும் முடித்தான். வேலையும் தேடினான்.

    கொரியர் சர்விசில் ஒரு நல்ல வேலை கிடைத்தது. 

    அன்று முதல் சம்பளத்தை வாங்கி வீடு வந்து “மா..ஜி ஆசீர்வாதம்செய்யுங்கோ. ” என்று அவள் காலிலும், சிவராமன் காலிலும் விழுந்தான். தன் சம்பளத்தை அவள் கையில் கொடுத்தான்..

    “இந்த சம்பளத்தை உன்  பையா   பாபிட்ட { baiya  babi  அண்ணா  ,மன்னி } கொடு அப்துல் எங்கிட்ட ஏன் தர  ?”

    ” மாஜி  எனக்கு எல்லாமே நீங்க தான்  அதுக்கப்பறம்தான் எல்லாம் ” என்றபடி தன் இரு கைகளைக்கூப்பினான்.

    அடுத்த வீட்டிலிருந்து ஒரு இந்திபஜன் கேட்டது

    “பிரேம் ஈஸ்வர் ஹை ஈஸ்வர் பிரேம் ஹை” {அன்பே கடவுள் கடவுளே அன்பு } ராம் ரஹீம் புத்த கரீம்.. கோயீ பி நாம் ஜபோ ரெ மனுவா ஈஸ்வர் ஏக்ஹை {ராம் என்று சொன்னாலும் ரஹீம் புத்தர் கரீம் என்று எந்தப் பெயர் சொன்னாலும் எல்லாமே ஒன்றுதான் ஈஸ்வரன் ஒன்றுதான் }……

    ராஜம் அப்துலை அணைத்தாள். சொந்த மகன்கள் எங்கேயோ இருக்க இந்த வளர்ப்பு மகன், அதுவும் பீஹாரைச்சேர்ந்த முஸ்லிம் இப்படி அன்பைப்பொழிகிறான். அவள்    கண்களிலிருந்து கண்ணீர் பெருகியது,    அங்கு        அன்பே தெய்வமானது.

    Share
  • கனவுச் சாவி

    தமிழ்த்தேனீ

    வழக்கமாய் வருவது போலவே அன்றைக்கும் கனவு வந்தது லக்ஷ்மிக்கு. வேலைகளை முடித்துவிட்டு அக்கடா என்று சற்று நேரம் படுக்கலாம் என்று படுத்தால், உடனே உறக்கம் கண்களை சுழற்றுகிறது.

    சரி தூங்குவோம் என்று முடிவெடுக்கும் முன்னரே தூங்கிப் போவது அவள் வழக்கம்.  அன்றும் அப்படியே வேலைகளை முடித்துவிட்டு  மதியம் கண்ணயர்ந்தாள் லக்ஷ்மி.

    எப்போதும் வருவது போலவே கனவில் அவளுக்கு பிடித்த இஷ்ட தெய்வம் கிருஷ்ணன்.

    “என்ன வந்து விட்டாயா? சற்று நேரம் தூங்கலாம் என்று கண்ணயர்ந்தால் உடனே நீ வந்துவிடுகிறாய். சரி  சொல் என்ன வேண்டும்” என்றாள் லக்ஷ்மி.

    “எனக்கு என்ன வேண்டும்? உனக்கு வேண்டுவதை என்னிடம் கேட்டுப் பெறுவதற்கே,  நீ இந்த மதிய வேளையில் தூங்குகிறாய் என்று  எனக்குத் தெரியும். இன்று உன் தேவை என்னவோ அதைத் தெரிந்து கொண்டு  அதை நிறைவேற்றிவிட்டுப் போகலாம் என்றுதான் வந்தேன்” என்றான் கிருஷ்ணன்.

    “கிருஷ்ணா, உனக்குத்தான் தெரியும். எனக்கு படுத்தால் உடனே உறக்கம் வந்துவிடுகிறது. அது மட்டுமல்ல கனவும் வந்துபோகிறது. கனவில் வருவதெல்லாம் அப்படியே நடக்கவும் நடக்கிறது.” என்றாள்  லக்ஷ்மி.

    “நல்லதுதானே ? எத்தனை பேருக்கு, இது போல் முன்கூட்டியே என்ன நடக்கப் போகிறது என்று தெரிகிறது. இது உனக்குக் கிடைத்த பெரும் பாக்கியமல்லவா” என்றான் கிருஷ்ணன்.

    “கிருஷ்ணா, இந்த மானுட ஜென்மத்தில் வருவதை முன்கூட்டியே அறிந்து கொள்ள முடியாதிருப்பதும், பழையதை மறந்து போவதும் தானே வரப்ப்ரசாதங்கள். அந்த இரு வரப்ரசாதங்களில் ஒன்றை இழந்துவிட்டேனே என்று ஒரு புறம் வருத்தமாக இருந்தாலும் இன்னொரு புறம் கனவின் மூலமாக உன்னை சந்திக்கும் பாக்கியம் பெற்றிருக்கிறேனே அதை எண்ணியே மகிழ்கிறேன்.

    இன்று நான் கண்ட கனவு என்னை நிம்மதி இழக்கச் செய்து விட்டதே, ஆமாம் நான் இறந்து போவது போலவும், என் கணவர்  வருத்தமாக இருப்பது போலவும்  கனவு கண்டேன்.”

    “அப்படியா நல்லதுதானே ! நீ சீக்கிரம் என்னை வந்து அடையப் போகிறாய். அதற்கென்ன கலக்கம் ?” என்றான் கிருஷ்ணன்.

    “சீக்கிரமாக உன்னை வந்து அடையப் போகிறேன் என்பது மகிழ்ச்சியாக இருந்தாலும், வேறு ஒரு சிந்தனை என்னை வருத்துகிறது.” என்றாள் லக்ஷ்மி.

    “என்னை வந்து அடைவதை விட மகிழ்ச்சியானது வேறொன்று இருக்க முடியுமா? பிறகென்ன  வருத்தும் சிந்தனை உனக்கு ?”,  என்றான் நமுட்டுச் சிரிப்புடன் கிருஷ்ணன்.

    “உனக்குத் தெரியாததா! எல்லாம் அறிந்தவன் நீ , வேண்டுமென்றே  என்னைச் சீண்டுகிறாய்.

    நீ எனக்கு ஒரு வரம் போல் கொடுத்தாயே ஒரு வாழ்க்கைத் துணைவர், அவருடைய குணம் என்னவென்று உனக்குத் தெரியாதா?

    எப்போதோ நான் செய்த புண்ணியத்தின் பலனை எனக்கு  வாழ்க்கைத் துணை அமைத்துக் கொடுப்பதில் செலவிட்டிருக்கிறாய் நீ.

    அவருக்கு கள்ளம் கபடம் தெரியாது, எல்லாருக்கும் என்ன வேணும்ன்னு பாத்து பாத்து செய்யக் கூடிய மனுஷன், ஆனா அவருக்கு என்ன வேணும்னு அவருக்கே தெரியாது.

    அவங்க அம்மா. அதான் என் மாமியார் எனக்கு கல்யாணம் ஆன புதுசுலே என் கையைப் பிடிச்சிண்டு சொன்ன வார்த்தைகள் அப்பிடியே இப்பவும் காதிலே ஒலிக்கறதே, 

    ‘லக்ஷ்மி எல்லாரும் நெனைச்சிண்டுருக்கா உன்னை இவன்கிட்ட ஒப்படைச்சிட்டோம்னு. எனக்குதான் தெரியும்  இவனை உங்கிட்ட ஒப்படைச்சிருக்கேன்னு. அவனோட நேர்மையிலே, புத்திசாலித்தனத்திலே எனக்கு அவநம்பிக்கை இல்லே. ஆனா இந்தக் காலத்துக்கு வேண்டிய கெட்டிக் காரத்தனம் இவனுக்கு கிடையாது. வெளுத்ததெல்லாம் பாலுன்னு நெனைப்பான், எல்லாரையும் நம்புவான். யார் எது கேட்டாலும்  தனக்கு இருக்கோ இல்லையோ எடுத்துக் குடுத்துட்டு  அவங்க திருப்பித் தருவாங்கன்னு எதிர்ப்பார்த்திண்டே இருப்பான்.

    யார்கிட்டே எப்பிடிப் பேசணும்னு தெரியாது, எவ்ளோ கள்ளம் நிறைந்த உலகம் இதுன்னு தெரியாது. உதவின்னு கூப்பிட்டா ஓடிப்போயி உதவிட்டு அவங்க தூக்கி அடிக்கும்போது வருத்தப்பட்டுண்டு இருப்பான். இவனை நான் உங்கிட்ட ஒப்படைக்கிறேன்,இனிமே நீதான் இவனைப் பாத்துக்கணும்’ னுட்டு சொல்லி இவரை எங்கிட்ட ஒப்படைச்சாங்க.

    நானும் என்னாலானது இவ்ளோ நாள் அவருக்கு உதவியா இருந்துட்டேன். இப்போ நான் முதல்லேயே போகப் போறேன்னு தெரிஞ்சதுக்கப்புறம் இவரைப் பத்தின கவலைதான் அதிகமாயிடிச்சு.

    இவரு ஒரு சொல் பொறுக்க மாட்டாரு. அனிச்ச மலர் மாதிரி மென்மையான மனசு. இனிமே இவரை யாரு கவனிக்கப் போறாங்க? நெனைச்சுப் பாத்தாவே கவலையா இருக்கு.

    கிருஷ்ணா நீ நான் எது கேட்டாலும் நிறைவேத்தி வெச்சே, எனக்கு ஒரு குறையும் வைக்கலே. எனக்கு உன்னை விட்டா வேற யாரும் கிடையாது. உன்னையே சரண் அடைஞ்சு கவலை இல்லாம இருந்தேன்.

    இப்பவும் எனக்கு நீதான் உதவணும், யாருக்குமே கிடைக்க முடியாத பாக்கியத்தை எனக்கு குடுத்தே. எவ்ளவோ மகான்களுக்கெல்லாம் கிடைக்காத பாக்கியம் எனக்கு குடுத்திருக்கே. நான் இந்த வாழ்க்கையிலே இருந்துண்டே உன்னை அப்பப்போ பாத்து பேசறேன்.

    நான் ஒரு வரம் கேப்பேன் குடுப்பியா ?”, என்றாள் ஏக்கமாக! 

    “நீ என்ன கேக்கப் போறேன்னு எனக்குத் தெரியும்.  வாழ்க்கையிலே பல பூட்டுகள் இருக்கு. ஆனா எல்லாப் பூட்டுக்கும்  சாவி கிடையாது. சில பூட்டுக்கு மட்டும்தான் சாவி இருக்கு, அந்தச் சாவிகள் கூட யார்கிட்டே இருக்கணுமோ அவங்க கிட்டே இருக்கறதில்லே, வேற எங்கேயோ இருக்கு. அதுனாலே பல பூட்டுக்கள் இன்னும் திறக்கப் படாமையே இருக்கு. சரி கேளு” என்றான் கிருஷ்ணன் புன் சிரிப்புடன்.

    “எனக்கு முன்னாடி அவரைக் கூட்டிண்டு போயிடு. அதுக்கு அப்புறம் என்னை கூட்டிண்டு போ. அது முடியலைன்னா  எங்க ரெண்டு பேரையும் ஒண்ணா கூட்டிண்டு போயிடு. அவரை மட்டும் தனியா விட்டுட்டு நான் மட்டும் வந்தா  நான் குடுத்த வாக்கை நிறைவேத்த முடியாம போயிடும்”,  என்றாள் லக்ஷ்மி. 

    நாளையிலேருந்து உனக்கு கனவே வராது  என்றான் கிருஷ்ணன் புன்சிரிப்புடன்

    Share