இசைக்கவி ரமணன்

வீசும் ஒளிவிழிப் பார்வையில், எங்கள்
வீரர் உதிர்த்திடும் வேர்வையில், ஞானத்
தேசு பெருகிடும் நெஞ்சினில், எங்கள்
தேசத்து மாதர்கள் நெற்றியில், பொன்னைப்
பூசிப் பரப்பிய மாலையில், இன்பப்
புள்ளினம் ஆர்த்திடும் சோலையில், ஒரு
தூசின் அசைவு முயற்சியில், சக்தி
துயர்கெடக் கூத்து நடிக்கிறாள்!

ஆழ நடுக்கருங் காட்டிலே, ஓர்
ஆளுமில் லாக்குச்சு வீட்டிலே, நன்கு
வாழ மறந்திட்ட போதிலே, நல்ல
வார்த்தையொன் றும்விழாக் காதிலே, கண்ணில்
ஆழத் துயர்சுழல் கையிலே, நித்தம்
ஆடியின் புற்றுவீழ் பொய்யிலே, தோன்றி
வாழத் திருவொளி பெய்யவே, சக்தி
வாழ்வெனும் கூத்து நடிக்கிறாள்!

எண்ணரியப் பல பந்துகள், தமை
எட்டி உதைத்துச் சுழற்றுவாள்! நீல
விண்ணைக் கடலினி இம் மண்ணினை, நூறு
வித்தைகள் காட்டி இயக்குவாள், மனம்
எண்ணுமுன்னே சிரம் தாழ்ந்திடும், முன்னோர்
என்னும் மலர்களைச் சூடுவாள், அவள்
எண்ணும்படிக் கொன்றுமே இலாத
என்னிலும் ஓடி நடிக்கிறாள்!

காதலெனச் சொல்லிக் காமத்தில், இந்தக்
கட்டுடல் வீழ்ந்து துடிக்கையில், நெஞ்சம்
சாதலை எண்ணி வருந்தியே, ஒரு
தத்துவம் இன்றித் தவிக்கையில், வாழ்வில்
சோதனை யாய்ப்பல துன்பங்கள், வந்து
சூழ்ந்து விழுந்து கடிக்கையில், இன்ப
வேத மெனக்கவி வெள்ளமாய், சக்தி
வேக நடனம் நடிக்கிறாள்!

பண்ணிய பாவங்கள் எத்தனை! எய்தும்
பழிகள் ஊறுகள் எத்தனை!
கண்ணிருந்தும் குருடாகிய, கலி
காலங்கள் எத்தனை எத்தனை!
எண்ணி இவைகளை ஓர்கணம், இந்த
ஏழை அழுது புரள்கையில், எந்தன்
கண்ணின் றுருண்டிடும் முத்திலும், அந்தக்
காளி நடனம் நடிக்கிறாள்!

படத்திற்கு நன்றி :

http://en.wikipedia.org/wiki/File:Kali_Dakshineswar.jpg

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.