திவாகர்

இனி வரும் பத்துப் பதினைந்து நாட்கள் உலகம் முழுதுமே பேசப்போகும் செய்தி அமெரிக்காவின் ஜனாதிபதி தேர்தல் பற்றிதான். இந்தியர்களுக்கு பொதுவாக பத்து வருடங்களுக்கு முன்பு இந்த அமெரிக்கா தேர்தல் விவகாரங்களில் எல்லாம் அவர்களுக்கு விருப்பம் கிடையாது. ஆனால் இந்த மென்பொருள் தொழிலில் எப்போது இந்தியா மேன்மை அடையத் தொடங்கியதோ, எப்போது மென்பொருள் ஏற்றுமதி மூலம் தன் வளர்ச்சி விகிதத்தை மிக அதிகமாக உலகுக்குக் காட்டத் தொடங்கியதோ, எப்போது அமெரிக்கா இந்த இந்திய மென்பொருள் வித்த்கர்கள் மூலம் பலனடையத் தொடங்கியதோ, எப்போது இந்தியாவில் உள்ள மத்தியதரக் குடும்பங்கள் ஏராளமாக மென்பொருள் வித்தகர்களை உருவாக்கி அவர்கள் மூலம் வளர்ச்சி அடையத் தொடங்கியதோ, அப்போதே அமெரிக்காவும் அமெரிக்க அரசியலும் அமெரிக்க ஆட்சியர்களின் சாதக் பாதக முடிவுகளிலும் இந்தியர்களுக்கு  ஒரு தனிப்பட்ட விருப்பத்தை உண்டாக்கிவிட்டது எனச் சொல்லலாம்.

இந்த 2000 ஆம் ஆண்டு வருமுன்பு அமெரிக்காவில் ஏற்பட்ட கடுஞ்சிக்கலான Y2K (Data memory loss) ஏற்பட்டபோது அதைப் பெருமளவில் சரிசெய்ய இந்திய மென்பொருள் பொறியாளர்கள் உதவினார்கள். அதன்பிறகு மென்பொருள் ஏற்றுமதியும் இந்தியாவில் சூடு பிடித்தது. அமெரிக்கா முதற்கொண்டு பல மேலை நாடுகள் இந்திய மென்பொருள் கம்பெனிகள் மூலம் காண்டிராக்ட் வேலைகளைக் கொடுத்து அதன் மூலம் அனைவரும் பலன் பெற வேண்டிய ஒரு நல்ல ஏற்பாட்டை ஏற்படுத்தினர். குறிப்பாக இந்தியா இதனால் பொருளாதாரத்தில் மிகப் பரவலாக பலன் அடைந்து வருவதை நாம் மறுக்க முடியாது.

இதனால் அமெரிக்கா எடுக்கும் உள்நாட்டு, வெளிநாட்டுப் பொருளாதாரக் கொள்கை ஒவ்வொன்றும் இந்தியர்களுக்கு மிகவும் முக்கியமானவையாகப்படுகிறது. அங்கு செயல்படும் ஜனாதிபதி எவ்வாறு செயல்படுகிறார் என்பது நமக்கு முக்கியமானவையாகப்படுகிறது. தெரிந்தோ தெரியாமலோ, அல்லது தெரிந்தும் தெரியாதது போல தற்போதைய ஜனாதிபதி ஒபாமா இந்தியர்களுக்கு எதிரான சூழ்நிலையில் இருப்பதாக பல்நோக்கர்கள் தெளிவுபடுத்தி வருகிறார்கள். இத்தகைய சூநிலையில்தான் நம் தமிழ் குழுமங்களில் ஒரு சுவையான விவாதக் களம் படித்தேன். நண்பர்கள் வேந்தன் அரசு, பழைமைபேசி, செல்வன் போன்றோர் மிகச் சுவையான விவரங்களையும் குடியரசு-ஜனநாயகக் கட்சி வேட்பாளர்களின் விவாதங்களையும் அழகாகத் தொகுத்து நமக்கு தந்து வருகிறார்கள். மூவரில் இருவர் ஒபாமாவுக்காகவும், செல்வன் ரோம்னிக்காகவும் வாதாடி வருவதும் சுவையாக உள்ளது. குடியரசுக் கட்சி வேட்பாளர் பொதுவாக இந்தியர்களுக்கு சாதகமானவர் போல ஒரு போக்கினை உருவாக்கி வருவதும் தெரிய வருகிறது, என்றாலும் ஒபாமாவின் அமெரிக்க மக்களின் நலம் என்ற போர்வையில் அவர் ஓட்டுக் கேட்டு வருவதை ரோம்னியாலும் எதிர்க்கவும் முடியாது.. முடிவு எப்படி வேண்டுமானாலும் மாறலாம் என்ற சூழ்நிலை பொதுவாகக் காணப்படும் இந்த நேரத்தில் நம் இந்திய பணநாயகத் தேர்தலை விட (அமெரிக்காவிலும் பணம் நன்றாகவே விளையாடும், ஆனாலும் வெளிப்படையாகத்தான்) நமக்குத் தனிப்பட்ட விருப்பத்தை இந்தமுறை இந்தத் தேர்தல் உருவாக்கி வருகிறது.

நம்மைப் பொறுத்தவரை, ரோம்னியானாலும் சரி, ஒபாமாவானாலும் சரி, யார் ஆண்டாலும் நம்மைப் பாதிக்காத அளவில் ஆளவேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம். இவர்கள் இருவருமே நண்பர்களுமல்ல, எதிரிகளுமல்ல.. ஒரு நல்ல பிஸிநஸ் ரிலேஷன், நமக்கு நல்ல பயனளிக்கும் உறவு, மேலும் வலுப்பெறவேண்டும் – இதுதான் நமது விருப்பம்.

செல்வன் ஒரு தனியாளாக நின்று இந்த விவாதக் களத்தில் நன்றாகவே சமாளித்து வருகிறார் என்றுதான் படுகிறது. அவர் கொடுத்து வரும் தகவலின் ஒரு பகுதியை இங்கே உங்களுக்காகத் தருகிறேன்.

மக்கள் தீர்ப்பை பற்றி ஒபாமா என்றும் கவலைபட்டது இல்லை. “மக்கள் யார் எனக்கு உத்தரவு போட?நான் போடுவது தான் சட்டம்..பிடிங்கடா ஒபாமா கேரை” என நான்சி பெலோஸி, ஹேரி ரீடுடன் இணைந்து வல்லடியாக ஒபாமகேரை மக்களின் அத்தனை எதிர்ப்பையும் மீறி சர்வாதிகாரமாக திணித்தவர் ஒபாமா. அதனால் மக்கள் தீர்ப்பை பற்றி நாம் இங்கே பேசுவதில் பொருளே இல்லை. மக்கள் திரிப்பை மதிக்கணும் எனில் ஒபாமகேரை அடுத்த நிமிடம் தூக்குவதுதான் முறை.

மற்றபடி ஒபாமகேர் மிக பெரும் பொய்களாலும், பிராடுதனத்தாலும் கட்டப்பட்ட சீட்டுகட்டு மாளிகை. மெடிகேரில் இருந்து 716 பில்லியன் டாலரை தூக்கி ஒபாமாகேரில் போட்டு “நான் மெடிகேரையும் காப்பாற்றுகிறேன், ஒபாமம்கேரையும் பண்ட் செய்கிறேன்” என டபுள் கவுண்ட் செய்தது ஒரு மிகபெரிய பொருளாதார மோசடி. அடுத்து “தனியார் கம்பெனியில் ஒரு பொருளை வாங்காதவருக்கு பைன் மற்றும் ஜெயில்” என உலக வரலாற்றில் எங்கும் இல்லாத தண்டனையை விதித்தது அடுத்த மோசடி

மூன்றாவது “ஆட்சிக்கு வந்தால் வருடம் $250,000 கீழாக வருமானம் உள்ளவருக்கு வரி விதிக்க மாட்டேன்” என வீதி வீதியாக முழங்கி ஆட்சியை பிடித்தபின் வருடம் $15,000 சம்பாதிப்பவர்கள் “இன்சூரன்சு வாங்கணும், அல்லது வரி கட்டணும்” என வரி விதிப்பில் ஈடுபட்டது மூன்றாவது மோசடி. இந்த வரிவிதிப்பு திட்டம் மக்களுக்கு நன்மை அளிக்கிறதா? இல்லை.  காரணம் என்னவெனில் வருடம் பதினைந்தாயிரம் சம்பாதிப்பவர்கள் ஒபாமாவின் சப்சிடியுடன் மாதம் ஐம்பது டாலர் கட்டணம் அதாவது வருடம் அறுநூறு டாலர் கட்டி இன்சூரன்சு எடுப்பது அவர்களுக்கு கூடுதல் சுமை. அதனால் அவர்களுக்கு பணம் மிச்சமாகுமா? இல்லை. காரணம் அபப்டியே இன்சூரன்சு எடுத்தாலும் டிடக்டபிள் ஏழாயிரம் டாலர், எட்டாயிரம் டாலர் என இருக்கும். வருடம் அறுநூறு டாலர் கட்டி இன்சூரன்சு எடுத்தாலும் எட்டயிரம் டாலர் வரை கைகாசு போட்டு தான் சிகிச்சை எடுக்கணும். சிகிச்சை செலவு ஏழாயிரம், எட்டாயிரம் டாலரை தான்டினால் தான் இன்சூரன்சு கம்பெனி பணம் கட்டும். பெரிய ஆபரேஷன், ஆக்சிடெண்ட் நடக்காமல் இருந்தால் இளைஞர்களுக்கு வருடம் எட்டாயிரம், ஏழாயிரம் டாலர் செலவு ஆகப் போவது இல்லை. அதனால் அவர்கள் அந்த ரிஸ்க்கை எடுத்து வருடம் அறுநூறு டாலர் கட்டி இன்சூரன்சு ப்ரீமியம் வாங்குவது இல்லை.

விபத்து நடந்தால், ஹார்ட் அட்டாக் வந்தால் எமெர்ஜென்சி ரூமில் இலவச சிகிச்சை. அப்புறம் ஆஸ்பத்திரி நிர்வாகம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து பணத்தைக் கேட்பார்கள். பணத்தைக் கட்டவில்லை எனில் நஷ்டம் கோடிகளில் குளிக்கும் ஆஸ்பத்திரிகளுக்கே ஒழிய எமெர்ஜென்சி ரூமில் சிகிச்சை எடுப்பவர்களுக்கு அல்ல. ஆக இந்த இன்டிவிஜுவல் மெண்டேட் கோடீஸ்வர ஆஸ்பத்திரிகளின் நன்மைக்கு என சொன்னால் அதில் பொருள் உண்டு. ஏழைகளின் நன்மைக்கு என கூறுவதில் எந்த பொருளும் இல்லை.

தான் அளித்த வாக்குறுதிப்படி ஒபாமா ஏழைகளின் மேல் வரி விதிக்காமல் இந்தத் திட்டத்தை கொண்டு வந்திருக்கவேண்டும். அதை செய்யாததால் இத்திட்டம் மகக்ளால் கடுமையாக எதிர்க்கப்படுகிறது. ஏழைகளுக்கு மருத்துவ வசதி அளிப்பது நல்ல விஷயம் தான் என்றாலும் அதை இம்மாதிரி மெடிகேரை சூறையாடாமலும், ஏழைகள் மேல் வரி விதிக்காமலும் செய்திருக்கவேண்டும்.

ரிபப்ளிக்கன்கள் திட்டப்படி “ஸ்டேட் லைன்களைத் தாண்டி இன்சூரன்சு வாங்க அனுமதிப்பது” மற்றும் “டார்ட் ரிஃபார்ம்” ஆகியவற்றை கொண்டு வந்து இன்சூரன்சு செலவை பெருமளவு குறைத்திருக்க முடியும். ஆனால் வக்கீல்கள் ஒபாமா கட்சி ஆதரவாளர்கள் என்பதால் அதைச் செய்ய மறுத்து மெடிக்கல் இன்சூரன்சு கட்டணத்தை பெருமளவு உயர்த்தியுள்ளார் ஒபாமா.

இவர் வாதங்களில் ஒரு சிறுபகுதிதான் கொடுத்திருக்கிறேன். செல்வன் இப்படியெல்லாம் சொல்வதனால் ரோம்னி நாளை ஒருவேளை ஆட்சிக்கு வந்தால் ஒபாமாவின் இதே செய்கைகளை அவரும் அமெரிக்க நன்மை என்ற பெயரில் செய்யமாட்டார் என்பது என்ன நிச்சயம் என்ற கேள்வி கேட்கத் தோன்றினாலும், நல்ல சுவையான கருத்துக்களைக் கொடுத்து அங்குள்ள அரசியலையும் தெளிவாகத்தந்த திரு செல்வன் அவர்களை இந்த வார வல்லமையாளராக நம் வல்லமைக் குழு தேர்ந்தெடுக்கிறது.  திரு செல்வன் அவர்களுக்கு நம் வாழ்த்துகள்.

 

கடைசி பாரா: இசைக்கவி ரமணன் அவர்களின் தேவி நவராத்திரி கவிதைக் கொலுவில் இசைக்கவி எழுதின பொன் வரிகள்தான் இந்த வாரக் கடைசி பாராவில் இடம்பெறுகிறது. பிரபஞ்சத்தை ஆளும் அன்னையை எப்படி வர்ணித்தாலும், எத்தனை முறை வர்ணித்தாலும் போத மாட்டேங்குதுதான்

    காலு வச்ச எடமெங்கும்  தாமரை
    கையி தொட்ட எடமெங்கும் பூமழை
    கண்ணு பட்ட எடமெல்லாம் பெளர்ணமி
    கன்னு முட்ட முட்டவரும் பால்மடி

    இவ எட்ட முடியாத பைரவி
    எவனும் கிட்ட நெருங்காத பேரொளி

    அவ சுட்ட எடமெங்கும் பொட்டலே
    அது தொட்ட கணத்துல பூக்குமே

    இது கட்டுக் கடங்காத வெள்ளமே
    அதைக் கட்டத் துடிக்குது உள்ளமே

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “வல்லமையாளர்!

  1. திரு.செல்வன் அவர்களுக்கு வாழ்த்துகள்!
    இரமணன் அண்ணாவிற்கு வணக்கங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *