கோபம்.
ராஜ்பிரியன்
பரபரப்பாக இருந்த அந்த கல்யாண மண்டபத்துக்கு முக்கிய பிரமுகர்கள் எல்லாம் வந்தபடியே இருந்தார்கள். வந்தவர்களை வாசலில் நின்று வரவேற்றுக்கொண்டு இருந்தார்கள் அலுமேலுவும், அவரது கணவர் தங்கச்சாமியும். தங்கச்சாமி பொள்ளாச்சியில் ஹோட்டல், நகைக்கடை, துணிக்கடை, 500 ஏக்கர் நிலமென வசதிக்கு குறைவில்லாதவர். சுற்றுவட்டார பகுதியில் செல்வாக்கானவர், அமைதியானவர். அவரது பெண் சுவாதிக்கு தான் திருமணம்.
அவரது செல்வாக்குக்கு குறைவான இடத்திலேயே மாப்பிள்ளையை பார்த்திருந்தார். காரணம் அவரது மகள் அவருக்கு செல்லம். ஓரே பெண் என்பதால் சின்ன வயதில் இருந்தே ஏகப்பட்ட பாசத்தை பொழித்து வளர்த்திருந்தார். இதனால் சுவாதிக்கு எதிலும் கர்வம். தான் நினைத்தது நடக்க வேண்டும். விருப்பத்துக்கு எதிராகவோ, அவள் சொல்வதை மறுத்தாலோ சடாரென கோபம் வந்துவிடும். குடும்பத்தாரிடம் கோபம் வந்தால் இரண்டு நாளைக்கு சாப்பிடமாட்டாள். வெளியாட்களாக இருந்தால் திட்டிவிடுவாள்.
இப்படித்தான் ஒருநாள் காலை பதினோரு மணிக்கு டிபன் சாப்பிட அமர்ந்தவளுக்கு அவளது அண்ணி கீதா, சுடாக டிபன் தரவில்லையென தட்டையெடுத்து கீதா மீது அடித்துவிட வீட்டில் ஒரே களோபரம். அவள் செய்தது தப்பு என எல்லோருக்கும் தெரியும். ஏதாவது கேட்டால் அவளுக்கு கோபம் வரும் என்பதால் யாரும் வாயை திறக்கவில்லை. இதனால் கீதா அம்மா வீட்டுக்கு போய்விட்டாள். சமாதானம் பேசிய மாமியாரிடம் அவளை மன்னிப்பு கேட்கச்சொல்லுங்க அப்பத்தான் வருவன்.
உங்கண்ணன் வாழ்க்கைடீ ஸாரி கேளு என அலமேலு மகளிடம் கேட்டபோது அவன் வாழ்க்கை எப்படி போனாலும் எனக்கு கவலையில்ல அவக்கிட்ட நான் மன்னிப்பு கேட்கமாட்டன் என உறுதியாக இருந்துவிட குமரன் தான் திண்டாடிபோனான். மனைவியை சமாதானப்படுத்தி அழைத்து வர அவனுக்கு ஆறுமாதமானது.
நான்கு மாதத்துக்கு முன்பு உனக்கு கல்யாணம் பண்ணலாம்ன்னு இருக்கம்மா எப்படிப்பட்ட மாப்பிள்ளை வேணும்ன்ன சொல்லும்மா என தங்கச்சாமி கேட்டதும், அடக்கமானவரா, அழகானவரா, படிச்சவரா, எதிர்த்து பேசாதவரா இருக்கனும் என அடுக்கினாள். இதை கேட்டுக்கொண்டுயிருந்த அலமேலு அப்படின்னா நீ சன்னியாசியா தான் போகனும் என்றார்.
அதை கேட்டு கோபமான தங்கச்சாமி, வாய மூடுடீ என அதட்டினார்.
அப்படி போனாலும் போவன் ஒருத்தன்கிட்ட அடிமையா இருக்கமாட்டன் என்றாள் கோபமாக.
அவ கிடக்கறா விடும்மா. நீ சொல்றமாதிரியே பாக்கறன்ம்மா என்றார் பாசமாக அவள் தலையை தடவியபடி. கல்யாண புரோக்கரை அழைத்து வசதி குறைவா இருந்தாலும் பரவாயில்ல. பையன் நல்லவனா, படிச்சவனா, அழகா இருக்கனும் என்றார். புரோக்கரும் கோவையில் சின்னதாக ஒரு பேக்டரி வைத்திருக்கும் விநோதன் ஜாதகத்தை தந்து நல்லப்பையன், குடும்பத்துக்கு அடக்கமானவன், கோபப்பட்டே பார்க்க முடியாது என்றார்.
விசாரித்தபோது புரோக்கர் சொன்னது உண்மையென அறிந்துக்கொண்டவர், அதன்பின்பே பெயர் பொருத்தங்களை பார்த்தார். “பையன் பொண்டாட்டிக்கு அடங்கனவனா இருப்பான்” எனச்சொல்ல மனம் குதுகலித்தது. உடனே புரோக்கர் மூலம் அந்த குடும்பாத்தரை சந்தித்து பேசினார். பெரிய இடம் தங்கச்சாமியை பற்றி அறிந்தவர்கள் அவரது மகள் பற்றி அறியாமல் சம்மதம் தெரிவித்தனர். சுவாதியும் விநோதனை பிடித்திருப்பதாக சொல்ல கல்யாண ஏற்பாடுகள் தடபுடலாக நடந்தன. தங்கச்சாமி பொள்ளாச்சியிலேயே நடத்தினார்.
இரவு வரவேற்பு நடந்தது. சுவாதி தேர்வு செய்திருந்த ஆடையையே விநோதன் அணிந்தான். அவன் கையில் வைத்திருக்கும் கைக்குட்டை வரை சுவாதியின் தேர்வாகவே இருந்தது. சுவாதியின் நடவடிக்கையை நிச்சயம் நடந்தது முதல் பார்த்தும் அனுபவித்து தான் வந்தான். அவள் ஒருமுறை செல்போனில் அழைக்க பேக்டரி சத்தத்தில் எடுக்காமல் விட்டுவிட்டான். கோபத்தில் ஒருநாள் முழுக்க அவனுடன் பேசவில்லை. ரிசப்ஷன் முடிந்து சாப்பிட அமர்ந்த போது விநோதனுக்கு பிடித்த பால் பாயாசம் டம்ளரில் இருந்தது. அதை குடித்தவன் இரண்டாவதாக வாங்கலாம் என நினைத்து பரிமாறுபவரை அழைத்து பால்பாயாசம் கேட்டான்.
அதல சக்கரை அதிகமாயிருக்கும் சாப்பிடாதிங்க என தடைபோட்டாள். அப்போது விநோதன் முகம் சுருங்கியதை அலமேலு கவனித்து நொந்துப்போனார். காலை முகூர்த்தத்துக்கு வந்தவர்களை அலுமேலு தன் கணவருடன் சேர்ந்து வரவேற்ற போது அவளுக்கு மகளின் செயல்கள் மனதில் படமாக ஓடியது.
தாலி கட்டி முடித்ததும் மைக் முன் வந்த முக்கியஸ்தர்கள் சிலர் மணமக்களை வாழ்த்தினர். அலமேலுவை பேசச்சொல்ல, “இரண்டு பேரும் விட்டுக்கொடுத்து வாழனும். என் பொண்ணு கோபப்பட்டா, மாப்பிள்ளை தான் பொறுத்துக்கனும்”, என கண்ணீருடன் சொல்லிவிட்டு இறங்கினார். அடுத்து மைக் முன் வந்த குமரன், “என் தங்கச்சிக்கு தப்பு பண்ணா கோபம் வரும். மச்சான் பொறுத்துக்கனும்” என சொல்லிவிட்டு இறங்க, அடுத்து வந்த சுவாதியின் சித்தப்பா ரங்கன், “பொண்ணு கோபப்பட்டாலும் மாப்பிள்ளை விட்டுக்கொடுத்து போகனும்.” இதை கேட்டுக்கொண்டுயிருந்த விநோதன் மைக்கை வாங்கி “எல்லாரும் பொண்ணு கோபப்பட்டா பொறுத்துக்கிட்டு போகனம்ன்னு எனக்கு அறிவுரை சொல்றிங்க. ஆனா யாரும் பொண்ணு கோபப்படகூடாதுன்னு சொல்ல மாட்டேன்கிறிங்களே. அறிவுரை சொல்றவங்க முதல்ல கோபப்படக்கூடாதுன்னு சொல்லுங்க” என்றார். இதை கேட்டுக்கொண்டுயிருந்த தங்கச்சாமியின் முகத்தில் திகிலடித்தது. சுவாதி தன் அப்பாவை பார்க்க, “பாத்துக்கலாம்மா ” என்றார் கண்களாலேயே.
மண்டபத்தை விட்டு வீட்டுக்கு போயும் சுவாதி விநோதனுடன் சரியாக பேசவில்லை. முதலிரவு அறைக்கு அனுப்பும்போது பாத்து நடந்துக்க என கிண்டலாக சொல்லி அனுப்பினார்கள் உறவினர்கள்.
அறைக்குள் சென்ற சுவாதி கட்டிலில் உட்கார்ந்திருந்த விநோதனை பார்த்து, “எதுக்கு மண்டபத்தல அப்படி பேசனிங்க ” என்றாள் கோபத்துடன். அவள் பக்கம் திரும்பிய விநோதன், “இப்படி உட்காரு” என கட்டிலை காட்டினான். உட்கார்ந்தவள் பக்கம் திரும்பி, “இங்கப்பாரு சுவாதி, உனக்கு அதிகமா கோபம் வரும். நீ சொல்றதத்தான் மத்தவங்க கேட்கனும் அப்படின்னு நினைக்கறத முதல்ல விடு. உன் குணத்தப்பத்தி மண்டபத்தலயிருந்து வந்ததுமே உங்கம்மா எங்கிட்ட சொன்னாங்க. நீ நினைக்கற மாதிரி என்னால வாழ முடியாது. உன் சுதந்திரத்த நான் கணவன்ங்கற அதிகாரத்தை வச்சி தடுக்க மாட்டன். அத நீ தப்பா பயன்படுத்தாதன்னு சொல்றன். பணத்துக்காக உன்ன நான் கல்யாணம் செய்துக்கல. முதல்ல உங்க வசதிய நினைச்சி யோசிச்சோம். புரோக்கர் தான் நல்ல குடும்பம்ன்னு சொன்னாரு. அதனால தான் சரின்னு சொன்னோம். உனக்குயிருக்கற மாதிரி மத்தவங்களுக்கும் மனசு, அவுங்களுக்குன்னு ஒரு கருத்துயிருக்கும் அதுக்கும் மதிப்பு தரனும். சின்ன சின்ன விஷயத்துக்கெல்லாம் கோபப்பட்டா அதுக்கு மரியாதையில்லாம போயிடும். உன் மேல வருத்தம் தான் வரும். குடும்ப வாழ்க்கைன்னா கணவன் மனைவிக்குள்ள விட்டுக்கொடுக்கறது இருக்கனும். இந்த கட்டில்லயிருந்து சின்ன சின்ன ஆசைகள் வரை ஒவ்வொருத்தரும் புரிஞ்சிக்கிட்டு, கலந்து பேசி வாழ்ந்தா எந்த பிரச்சனையும்மில்ல. கோபமும் வரப்போறதில்ல.
நம்ம இரண்டு பேருக்குள்ள இந்த பணம் வந்து குடும்பம் நடத்தப்போறதில்ல. மனிதர்களான நாம தான் குடும்பம் நடத்தப்போறோம். அதனால ஆதிக்கம் செலுத்தறத, கோபப்பட்டறத விட்டுட்டு விட்டுக்கொடுத்து வாழ பழகிக்க. அதான் நமக்குள்ள நல்ல வாழ்க்கையை தரும். உனக்கு அட்வைஸ் பண்றத்து புடிக்காதுன்னு உங்கம்மா சொன்னாங்க. இருந்தாலும் நான் மண்டபத்தல அப்படி பேசனதால நீ என் மேல கோபமா இருக்கறது தெரியும். நான் அந்த இடத்தல உன்ன விட்டுக்கொடுத்துயிருக்ககூடாது. ஆனா ஒரு பிரச்சனையை முளையிலயே கிள்ளிடனும் இல்லன்ன பெருசாகிடும். அதனால தான் அங்க பேசனன். இப்பவும் சொல்றன். அங்க உன்ன விட்டுக்கொடுத்ததுக்கு ஸாரி ” என பேசி முடித்தான்.
இவ்வளவு நேரம் விநோதன் பேசியதை கட்டிலின் ஓரத்தில் அமர்ந்து கேட்டுக்கொண்டுயிருந்தாள்.
“நானே தான் பேசிக்கிட்டுயிருக்கன் உன் கருத்து என்னன்னு சொல்லு”, என கேட்டான்.
பதிலேதும் சொல்லாமல் தலையை திருப்பிக்கொண்டாள். நீண்ட நேரம் பதிலேதும் வராததால் அமைதியாக அப்படியே கட்டிலில் ஓரமாக படுத்துக்கொண்டான். சுவாதியின் மனம் கொதிக்க தொடங்கியது. பூக்கள் வாடத் தொடங்கியது.
காலையில் அறையை விட்டு வெளியே வந்த சுவாதியை பார்த்ததுமே அலமேலுவுக்கு புரிந்து போனது. இரவு எதுவும் நடக்கவில்லை என்று. மகளை கிச்சன்க்கு அழைத்து சென்றவர் என்ன நடந்துச்சி என கேட்டார். அமைதியாக இருந்தவளை பார்த்து “சண்டை போட்டுக்கிட்டா, சமாதானமா போறயிடத்தலயே சண்டைன்னா உன்னயெல்லாம் என்ன சொல்றது”, என நொந்துக்கொள்ள மவுனமாகவே தரையை பார்த்தப்படி நிற்க தாய் பாசம் அவரை கண் கலங்க வைத்தது.
அப்போது “வாங்க மாப்பிள்ள” என்ற குரல் கேட்டு இருவரும் வெளியே பார்த்தனர். சோபாவில் அமர்ந்து பேப்பர் படித்தபடியே ரூமை விட்டு வெளியே வந்த விநோதனை அழைத்து எதிரில் “உட்காருங்க”, என்றார் தங்கச்சாமி.
கிச்சன் பக்கம் திரும்பி “அலமேலு, மாப்பிள்ளைக்கு காபி எடுத்துவா” என குரல் கொடுத்தார்.
விநோதன் பக்கம் திரும்பி, “வீடு புடிச்சியிருக்கா மாப்பிள்ள.?”
“நல்லாயிருக்கு மாமா.”
“சுவாதியோட அறை சின்னதா இருக்கும். மேல பெருசா ஒரு அறையிருக்கு. அதை எடுத்துக்குங்க.”
“எதுக்கு மாமா இருக்கறதே கம்பர்டபிளா இருக்கு.”
“என்ன வசதி வேணும்மோ செய்துக்குங்க”, என்றதும் ஓரளவு புரிஞ்சது விநோதனுக்கு. வீட்டோட இருக்கச்சொல்றாரு. அத சுத்தி வளைச்சி பேசறாரு.
“வீட்டோட மாப்பிள்ளையா இருக்க எனக்கு சம்மதம்மில்ல மாமா”, எனச்சொல்லும் போதே அலமேலுவும், சுவாதியும் ஹாலுக்கு வந்திருந்தனர்.
“இல்ல அப்படி சொல்ல வரல மாப்ள”, என தயங்க,
“நீங்க உங்க பொண்ணு மேல ரொம்ப அதிகமாவே பாசம் வச்சியிருக்கறது தெரியும் மாமா. உங்க பொண்ண நீங்க பாத்துக்கறத விட நான் என் மனைவியை ரொம்ப நல்லாவே பாத்துக்குவன்.”
“அதுக்கில்ல மாப்ள.”
“இதப்பத்தி நானும் என் மனைவியும் பேசி எடுக்க வேண்டிய முடிவு. நான் பேசிட்டு சொல்றன் மாமா”, என்றபடியே எழுந்து மீண்டும் அறைக்குள் சென்றான்.
சில நொடி தன் அப்பாவை பார்த்தவள் பின் அலமேலு கையில் இருந்த காபி டம்பளரை வாங்கிய சுவாதி விநோதன் பின்னாடியே அறைக்குள் நுழைந்தவள் கதவை லாக் செய்தாள்.
காபி டம்பளரை தந்துவிட்டு அமைதியாக பார்த்தவளிடம், “உங்கப்பா வீட்டோட மாப்பிள்ளையா இருக்கனம்ன்னு நினைக்கறாரு. ஒரே பொண்ணுன்னு ரொம்ப பாசம் வச்சிட்டாரு. அதனால அப்படி நினைக்கறாரு. ஆனா ஆம்பளைக்கு அழகு அவன் சம்பாதியத்தல மனைவிய நல்லா பாத்துக்கறது தான். அதான் எனக்கும் மரியாதை. உனக்கும் மரியாதை. இதான் என் கருத்து. உன் கருத்து என்னன்னு சொல்லு.”
“உன் வீட்டுக்காரர் என்ன பண்றாருன்னு கேட்டா, இந்த தொழில் பண்றாருன்னு சொல்றதுத்தான் எனக்கு மரியாதை. எங்கப்பாவோட ஆபிஸ்ல வேலை பாக்கறாருன்னு சொல்றதுயில்ல. அது உங்களுக்கும் அசிங்கம். உங்களுக்கு ஒரு அசிங்கம்ன்னா அது எனக்கும் தான். சடங்கு முடிஞ்சதும் நாம நம்ம வீட்டுக்கு போயிடலாம்.”
ஆச்சர்யமான விநோதன், “இந்த மாற்றம் நைட்டே வந்துயிருந்தா, ஒரு நைட் வேஸ்ட்டாகியிருக்காது. இப்ப நைட் வரைக்கும் காத்திருக்கனும்மா” என ஏக்கத்தோடு கேட்டபோது, “காத்திருக்க தேவையில்ல” என புன்னகைத்தபடியே அவன் உதட்டோடு தன் உதடுகளை இணைத்திருந்தாள் சுவாதி. விநோதன் குடித்த காபியின் மனம் அவளின் உதடுகளில் மணத்தது.