Blog

  • என் பார்வையில் கண்ணதாசன்

    –ப.கண்ணன்சேகர்.

     “கவியரசர் பார்வையில் மகளிர்”

    Kannadasan  பாரதிக்கு பின் வந்த பார்போற்றும் கவிஞர் நமது கவியரசு கண்ணதாசன்தான். இவர் எழுத்து வடிவில் தமிழ் சமுதயாத்திற்கு எண்ணற்ற காவியங்களையும் கவிதைகளையும் படைத்திருக்கிறார். இவை அனைத்தும் தலைமுறைகளைத் தாண்டி தமிழ்ச்சமுதாயத்திற்கு  பயன்படும் கல்வெட்டுக்களாக திகழ்கின்றன. இவர் பேனா தொடாத துறைகளே இல்லை என்று கூறும் அளவிற்கு எழுத்துலகில் கோலோச்சியுள்ளார்.

    குடும்பத்தில் ஒவ்வொரு உறவுக்கும் இவரின் வழிகாட்டுதல்கள் எல்லாத் தலைமுறையும் ஏற்றுக்கொள்ளும் முறையாக அமைந்துள்ளது. குறிப்பாக  மகளிர்காக இவரின் படைப்புக்கள் சிறப்பாகவே இருப்பதை அறிய முடிகிறது.பெண்மை, பக்தி, ஆளுமை, குடும்பம், உறவுகள் என பல வடிவங்களில் மகளிர் சிறப்பை குறிப்பிட்டுள்ளார். பெண்ணாக பிறந்து விட்டால் பக்தி என்பது இயல்பாய் வரக்கூடியது எனவும், நாத்திகனாக கணவன் இருந்தாலும் அந்த வீட்டில் இறை உணர்வுடன் மனைவி இருப்பது பல குடும்பங்களில் கண் கூடு. பட்டணத்தில் பூதம் திரைப்படத்தில் இடம் பெற்ற அந்த சிவகாமி மகனிடம் பாடலில்,

    பெண்ணென பூமியில் பிறந்த பின்னாலே
    வேலை வணங்காமல் வேறேன்ன வேலை?

    அதே போல “அவன் பித்தனா”  படத்தில் “இறைவன் இருக்கின்றானா..” பாடலில்,

    “மனிதன் இருக்கின்றானா..
    இறைவன் கேட்கின்றான்
    …………………………..
    ஒன்றையே நினைத்திருந்தும்
    ஒன்றாக வாழ்ந்திருந்தும்
    பெண்ணாக பிறந்தவரை
    கண்ணாக யார் மதித்தார்.. ”

    ஒரு பெண் கற்புடையவளாக தனது கணவன், குடும்பம் என வாழ்தாலும், அவளை மதிக்காத சமூகமே நிறைந்து காணப்படுவதை தமது வரிகளால் கவியரசர் குறிப்பிடுவது பெண்ணுக்கு வாதாடும் வக்கீலாகவே காணப்படுகிறார். அதே போல் மாதராண்டு வரவேற்போம் என தமது கவிதையில்,

    பாவையர் வாழ்க்கை என்றும்
    வீடு காப்பது – எங்கள்
    பாரதத்துப் பெண்மை
    இன்று நாடுகாப்பது
    சேவை செய்யும் பெண்மை
    இன்று அதிகமானது..

    (கண்ணதாசன் கவிதைகள் -6 பக்:164)

    மகளீரின் நாட்டுப்பற்றை குறிப்பிட்டு, இன்று எல்லாத்துறையிலும் பெண்களின் வளர்ச்சி கண்டிருப்பதை எழுதியுள்ளார். ஆணுக்கு பெண் சமம் என்ற பாரதியின் சமதர்ம சிந்தனைகளை கவியரசர் பாடல்களிலும் பல இடங்களில் காண முடிகிறது.  நல்லபெண்மணி இருக்கும் ஒரு வீடு கோவிலுக்கு இணையாகும் என்பதை,  ஒரு பாடலில் மகளிரின் பெருமையை உயர்த்திக் காட்டுகிறார். பச்சைவிளக்கு திரைப்படத்தில் “கேள்வி பிறந்தது அன்று…”  பாடலில்,

    குலமகள் வாழும் இனியகுடும்பம்
    கோயிலுக்கிணையாகும்
    குறை தெரியாமல் உறவு கொண்டாலே
    வாழ்வும் சுவையாகும்..

    இப்படி ஒரு பெண்ணிடம் சிறு குறை இருந்தாலும் அவற்றை பெரிது படுத்தாமல் இருக்கும் உறவுகள் நிறைந்த குடும்ப வாழ்க்கை சுவையானது என சுவைபட வார்த்தைகளை வகைப்படுத்தி எழுதும் பக்குவம் கவியரசரைத் தவிர வேறு யாருக்கு வரும்?

    இதை விட மிகச்சிறப்பாக தனது மனைவி பொன்னம்மாளுக்கு காது கேட்காது என்றாலும் அதை பக்குவமாக ஏற்றுக் கொண்டு, அந்த சீமாட்டியை சிறப்பிக்கும் கவியரசரின் குணம் குன்றின் மேல் வைத்த விளக்காய் ஒளிர்கிறது.

                                                      செவிகள்பழு தானாலும்
                                                                        சேவைச் சிறப்பால்என்
                                                     கவிகள்பழு தாகாமல்
                                                                     காத்துவந்த ராஜாத்தி!  
                                                    குடிக்க துணிந்ததற்கோ
                                                                         குத்துகின்ற ஊசிகட்கோ
                                                   கண்ணான என்மனைவி
                                                                         காரணமாய் இருந்ததில்லை!

    (“பொன்னம்மா என் மனைவி” கவிதை நூல்)

    இந்த வைரவரிகள் கவியரசரின் மனைவியை குறிப்பிடுவதாய் இருந்தாலும் ஊனமுற்ற மகளீருக்கும் இவரின் எழுத்துக்கள் பெருமை சேர்ப்பதாகவே இருக்கிறது. இப்படி பெண்ணின் பெருமைப் பற்றி கவியரசர் எழுதியுள்ளதை பல மேற்கோள்களுடன் பல பக்கங்களுக்கு எழுதலாம்.

    பெண்களை ஆடையில்லாமல் வர்ணிக்கும் ஆபாச உலகில் “ஆடைக் கட்டிய ரதமே ரதமே.. அருகில் அருகில் நான் வரவா… என்று பெண்மையை போற்றி புகழ்ந்தவன் நமது கவியரசு கண்ணதாசன். பெண்மையின் புகழை பெருமையாய் பாடிய அந்த கவிஞனை என்றும் போற்றுவோம்.

    Share
  • என் பார்வையில் கண்ணதாசன்

    பி.எஸ்.டி. பிரசாத்

    என் பார்வையில் கண்ணதாசன்

     

    Kannadasan“வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி
    மக்களின் மன‌தில் நிற்பவர் யார்
    மாபெரும் வீரர் மானம் காப்போர்
    சரித்திரம் தனிலே நிற்கின்றார்”

    என்று பாட்டாலே வீரம் ஊட்டிய கவியரசு கண்ணதாசன், இன்று சரித்திரமாகி நிற்பதற்கான முக்கியமான காரணம் என நான் எண்ணுவது, பல்லாயிரம் தமிழ் ஆர்வலர்களுக்கு, கவிதை மற்றும் பாடல் அமைப்பு செய்வதற்கான இலக்கண எடுத்துக்காட்டுக்களாக விளங்கிய அவரது திரைப் பட பாடல் வரிகள்தான். அவரது பாடல் வரிகளை ரசித்து, நாமும் முயலலாம் எனக் கவிதை எழுத வந்தவர்கள் எத்தனை பேர்? அந்த வகையிலே, கவியரசு அவர்கள் என் பார்வையில், பாடலாசிரியர்கள் மற்றும் கவிஞர்களின் முன்னோடியாகவும், மாபெரும் தாக்கத்தையும், ஊக்கத்தையும் ஏற்படுத்தியவராகவும் பார்க்கிறேன்.

    முன்னோடிப் பாடல் வரிகள் (Inspirations):

    “உள்ளம் என்பது ஆமை அதில் உண்மை என்பது ஊமை” என்று துவங்கும் பாடலில் வரும் வரிகள்:

    “தெய்வம் என்றால் அது தெய்வம்
    அது சிலை என்றால் வெறும் சிலை தான்”

    திரு.கமல்ஹாசனின் தசாவதாரம் திரைப்படத்தில் வரும்

    “கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது..” என்ற பாடலுக்கு எப்பேர்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது?

    “ஆடி அடங்கும் வாழ்க்கையடா
    ஆறடி நிலமே சொந்தமடா” என்ற வரிகள்தான் பின் வந்த நாட்களில்,

    “நடந்தால் இரண்டடி இருந்தால் நான்கடி
    படுத்தால் ஆறடிபோதும்” என்ற பாடலுக்கு ஊக்கமாக இருந்திருக்குமோ?

    ‘கர்ணன்’ திரைப்படத்தில் வரும் இனிமையான பாடல்

    “இரவும் நிலவும் வளரட்டுமே…நம் இனிமை நினைவுகள் தொடரட்டுமே,,,”

    “இலைமறை காய்மறை”யாகச் சொல்வதற்கு இந்த வரிகளை உதாரணம் சொல்லலாம். இந்த வரிகள், நிறைய பாடல்களில் வெவ்வேறு சொல்லாக்கத்தில் இடம் பெற்றிருக்கிறது. எடுத்துக்காட்டாக, “அன்பு” என்ற திரைப்படத்தில் வரும் “தவமின்றி கிடைத்த” என்று தொடங்கும் பாடலில் வரும் வரிகளைச் சொல்லலாம்.

    “பகல் எல்லாம் இரவாகிப் போனால் என்ன? இரவெல்லாம் விடியாமல் நீண்டாலென்ன?
    நம் உயிர் ரெண்டும் உடல் ஒன்றில் வாழ்ந்தாலென்ன?”

    “ரத்தத் திலகம்” என்ற திரைப்படத்தில் வந்த பிரபலமான பாடல்தான் “கோப்பையிலே என் குடியிருப்பு” என்ற பாடல். அந்தப் பாடலில் “படைப்பதனால் என் பேர் இறைவன்” என்ற வரிகள் “மடை திறந்து தாவும் எனத் துவங்கும் பாடலில் வரும் “புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே”  என்ற வரிக்கும், “பாட்டுக்களை படைப்பதனால் பிரம்மனாகிறோம்” என்ற வரிக்கும் என்னவொரு தாக்கமாக அமைந்திருக்கிறது !

    நீ காற்று…நான் மரம் என்று தொடங்கும் அருமையான பாடல். அப்பாடலில் “நீ வானம் நான் நீலம் உன்னில் நானாய்க் கல்ந்திருப்பேன்” என்ற வரிகள் வரும். இந்த பாடலின் அமைப்புக்கே கவியரசு அவர்களின் நீ எந்தன் வானம்…நான் அங்கு நீலம…நீ எந்தன் வாசல்…நான் அங்கு கோலம்” (படம்: அமரகாவியம் – பாடல்:  செல்வமே ஒரே முகம் பார்க்கிறேன்) என்னும் வரிகள் தான் ஊக்கமாய் அமைந்ததோ!

    வெவ்வேறு சூழ்நிலைகளுக்காக எழுதப்பட்ட பாடல்கள் என்றாலும், நாம் அடுத்து பார்க்க இருக்கும் பாடல், கண்ணதாசனின் தாக்கம் இருக்குமோ என்ற எண்ணத்தை ஏற்படுத்தத் தான் செய்கிறது.

    “சேச் சேச் சேச் சே ! ஆம்பளைங்களா நீங்க…ஆம்பளைங்களா – ஒரு ஆறு கஜம் சேலை கட்டி நாலு வளை போடுங்களேன் !”
    என்ற பாடல் (படம்: உரிமைக் குரல்)  – தேவர் மகன் படத்தில் வரும் “சாந்து பொட்டு…ஒரு சந்தன பொட்டு எடுத்து வெச்சுக்க  வெச்சுக்க மாமா !” என்ற பாடல்கள் !

    அடுத்ததாக, “பொம்பளையா லட்சணமா பொடவையக் கட்டு சும்மா குளுகுளுன்னு கிழுஞ்சு போன ட்ரௌசர விட்டு” (படம்: இளைய தலைமுறை) என்ற பாடல் வரிகளின் தாக்கம்….எந்த பாட்டில் தெரிகிறது சொல்லுங்கள்….ம்…சரியான விடை: “செந்தமிழ் நாட்டு தமிழச்சியே…சேல உடுத்தத் தயங்கினியே ! நெசவு செய்யும் திருநாட்டில் நீச்சல் உடையில் அலையிருயே !” என்ற பாடலுக்குத் தான். மறைந்த திரு. சாகுல் ஹமீது அவர்கள் நன்றாகப் பாடியிருப்பார்.

    முடிவுரை:

    இவ்வாறாக, இன்னும் அடுக்கிக் கொண்டே போகலாம்….இது வரை மட்டுமல்ல…இனி வரும் கவிஞர்கள் பலருக்கும் கவியரசு கண்ணதாசன் அவர்களின் பாடல் வரிகள் மாபெரும் இன்ஸ்பிரேஷனாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

    “மானிட இனத்தை ஆட்டி வைப்பேன் அவர்
    மாண்டுவிட்டால் அதை பாடிவைப்பேன் நான்
    நிரந்தரமானவன் அழிவதில்லை எந்த
    நிலையிலும் எனக்கு மரணமில்லை ​”

    என்று முழங்கிய கண்ணதாசன் அவர்கள் இன்றைய கவிஞர் என்னும் நிலவுக்கெல்லாம், சூரியனாக ஒளி தந்து என்றும் வாழ்பவராக என் பார்வையை பதிவு செய்கிறேன் !..வளர்க‌ அவர் புகழ் !

    பி.எஸ்.டி. பிரசாத்
    வலைத்தளம்: http://psdprasad-tamil.blogspot.com

    Share
  • நான் ஏன் பிறந்தேன்!!!

    –கவிஞர் காவிரிமைந்தன்.

    நான் ஏன் பிறந்தேன்!!!

    naan en piranthen

    பத்துத் திங்கள் சுமந்தாளே அவள் பெருமைப் படவேண்டும்
    உன்னைப் பெற்றதனால் அவள் மற்றவராலே போற்றப்பட வேண்டும்
    க‌ற்ற‌வ‌ர் ச‌பையில் உன‌க்காக‌ த‌னி இட‌மும் த‌ர‌ வேண்டும்
    உன் க‌ண்ணில் ஒரு துளி நீர் வந்தாலும் உல‌க‌ம் அழ‌ வேண்டும்

    கவிஞர் வாலி அவர்கள் இயற்றி மக்கள் திலகம் நடித்து வெளியான பாடல்கள் என்பதா?  மக்கள் திலகத்திற்காக கவிஞர் வாலி இயற்றிய பாடல்கள் என்பதா?  இந்தக் கலவை தந்திருக்கும் முத்துக்கள் கொட்டிக் கிடக்கின்றன தமிழ்த்திரைசையில்!  நான் ஏன் பிறந்தேன்… என்கிற திரைப்படத்தில் இடம் பெரும் இனிய பாடலிது!  கவிஞர் வழங்கிய தேவரின் சங்கர் கணேஷ் இசையமைப்பில் உருவான பாடல்கள் என்றும் நம் இதயம் தொடுகின்றன!

    நான் ஏன் பிறந்தேன்
    நாட்டுக்கு நலம் என்ன புரிந்தேன்
    என்று நாளும் பொழுதும் வாழும் வரையில்
    நினைத்திடு என் தோழா
    நினைத்து செயல்படு என் தோழா
    உடனே செயல்படு என் தோழா

    முன்னோர் சொன்ன சொல்லே ஆனாலும் எளிய தமிழில் வினாக்களாய் நம் நெஞ்சில் பதிக்கிறார்.  மறைந்த முன்னாள் அமெரிக்க அதிபர் கென்னடி தான் பதவி ஏற்றக் கூட்டத்தில்  “Ask not what your country had done for you;  Ask what you have doe for the country” என்ற பொன்மொழியின் பிரதிபலிப்பாக இப்பாடல் திகழ்கிறது!

    பத்துத் திங்கள் சுமந்தாளே அவள் பெருமைப் படவேண்டும்
    உன்னைப் பெற்றதனால் அவள் மற்றவராலே போற்றப்பட வேண்டும்
    க‌ற்ற‌வ‌ர் ச‌பையில் உன‌க்காக‌ த‌னி இட‌மும் த‌ர‌ வேண்டும்
    உன் க‌ண்ணில் ஒரு துளி நீர் வந்தாலும் உல‌க‌ம் அழ‌ வேண்டும்

    mgrvaali
    இந்த வைர வரிகள் என்னையும் கூட வாழ்க்கைப் போராட்டத்தில் நீந்தி வெற்றி பெற வைத்திருக்கின்றன என்றால் அது மிகையில்லை!  அந்த நன்றிக் கடனாக “வாழும் தமிழே வாலி” என்கிற நூலை கவிஞர் வாலிக்கு நன்றி காணிக்கையாக எழுதி குமரன் பதிப்பகத்தால் வெளியிட்டேன்.. பாடலாசிரியன் என்கிற தகுதியோடு திரையுலகில் பாட்டு எழுதிச் சென்றவர் பலர் இருக்கலாம்!  அதே பாடல்கள் மக்கள் நெஞ்சில் குடியிருக்கச் செய்தவரைத்தான் ‘கவிஞர்’ என்கிற வரிசையில் கொள்கிறோம். மேலும் அதிலும் மானுட வாழ்விற்கான தேவைகளைக் கருத்துக்களை வழங்கிய கவிஞர்களையே காலம் போற்றிப் புகழ்ந்து கொண்டிருக்கிறது.

    http://youtu.be/m_d5bAbO0fM
    காணொளி: -http://youtu.be/m_d5bAbO0fM

    நான் ஏன் பிறந்தேன்
    நாட்டுக்கு நலம் என்ன புரிந்தேன்
    என்று நாளும் பொழுதும் வாழும் வரையில்
    நினைத்திடு என் தோழா
    நினைத்து செயல்படு என் தோழா
    உடனே செயல்படு என் தோழா
    நாடென்ன செய்தது ந‌ம‌க்கு என கேள்விகள் கேட்பது எதற்கு
    நீயென்ன செய்தாய் அதற்கு என நினைத்தால் நன்மை உனக்கு
    நாடென்ன செய்தது ந‌ம‌க்கு என கேள்விகள் கேட்பது எதற்கு
    நீயென்ன செய்தாய் அதற்கு என நினைத்தால் நன்மை உனக்கு
    நான் ஏன் பிறந்தேன்
    நாட்டுக்கு நலம் என்ன புரிந்தேன்
    என்று நாளும் பொழுதும் வாழும் வரையில்
    நினைத்திடு என் தோழா
    நினைத்து செயல்படு என் தோழா
    உடனே செயல்படு என் தோழா

    மலையில் பிறந்த நதியால் மக்கள் தாகம் தீர்ந்தது
    மரத்தில் பிறந்த கனியால் அவர் பசியும் தணிந்தது
    மலையில் பிறந்த நதியால் மக்கள் தாகம் தீர்ந்தது
    மரத்தில் பிறந்த கனியால் அவர் பசியும் தணிந்தது
    கொடியில் பிறந்த மலரால் எங்கும் வாசம் தவழ்ந்தது
    அன்னை மடியில் பிறந்த உன்னால் என்ன பயன் தான் விளைந்தது
    நான் ஏன் பிறந்தேன்
    நாட்டுக்கு நலம் என்ன புரிந்தேன்
    என்று நாளும் பொழுதும் வாழும் வரையில்
    நினைத்திடு என் தோழா
    நினைத்து செயல்படு என் தோழா
    உடனே செயல்படு என் தோழா

    பத்துத் திங்கள் சுமந்தாளே அவள் பெருமைப் படவேண்டும்
    உன்னைப் பெற்றதனால் அவள் மற்றவராலே போற்றப்பட வேண்டும்
    க‌ற்ற‌வ‌ர் ச‌பையில் உன‌க்காக‌ த‌னி இட‌மும் த‌ர‌ வேண்டும்
    உன் க‌ண்ணில் ஒரு துளி நீர் வந்தாலும் உல‌க‌ம் அழ‌ வேண்டும்
    நான் ஏன் பிறந்தேன்
    நாட்டுக்கு நலம் என்ன புரிந்தேன்
    என்று நாளும் பொழுதும் வாழும் வரையில்
    நினைத்திடு என் தோழா
    நினைத்து செயல்படு என் தோழா
    உடனே செயல்படு என் தோழா

     

    Share
  • கணக்கில்…

    -செண்பக ஜெகதீசன்

    காலக் கரும்பலகையில்
    மனிதன் போடும்
    வாழ்க்கைக் கணக்கில்,
    தவறாகிப்போகும்
    தவறாத விடை – மரணம்…!

     

    Share
  • இந்த வார ராசி பலன்கள் : (16.5.2014) – (22.6.14)

    ஜோதிடர் சகாதேவன்

    vaniyal-300x225

     மேஷம் :

     (அஸ்வினி, பரனி கார்த்திகை முதல் பாதம் முடிய)

    தேவையற்ற மன கவலை தவிர்க்கவும். தடைகள் விலகி பண வரவு உண்டு.கடன் தொல்லை தீரும்.

    பெண்கள் : குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்

    பணியாளர்கள் : பதட்டத்தை தவிர்த்து பணியில் கவனம் செலுத்தவும்

    விவசாயிகள் : சோர்வை விலக்கவும்

    தொழில் முனைவோர் : அந்நியரிடம் கொடுக்கல் வாங்கல் வைத்துக் கொள்ளாதீர்கள்

    கலைத் துறையினர் : சாதகமான செய்தி உண்டு

    அரசியல் துறையினர் : பதவி கிடைக்கும்.

    ரிஷபம் :

    (கார்த்திகை 2 பாதம், ரோகிணி, மிருகசிரிஷம் 2 பாதம் முடிய)

    மற்றவர்களின் ஆதரவு போதுமான அளவு இல்லை என்றாலும் நீங்கள் நினைத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர். வருமானம் வளரும் பயணம் இனிக்கும்.

    பெண்கள் : வீண் குழப்பம் வேண்டாமே!

    பணியாளர்கள் : இடைஞ்சல்களை அகற்றி வெற்றியை பெறுவீர்.

    விவசாயிகள் : வருவாய் உண்டு.

    தொழில் முனைவோர் : புதிய முயற்சிகளில் கவனமாக இருக்கவும்.

    கலைத் துறையினர் : கடமையை செய்யுங்கள், பாராட்டு தன்னால் கிடைக்கும்.

    அரசியல் துறையினர்: உண்மையான மக்கள் சேவையை செய்யுங்கள் பிரச்சனைகள் அகலும்.

    மிதுனம் :

    (மிருகசிரிஷம் 3 பாதம்  முதல் புணர்பூசம் 3 பாதம் முடிய)

    உடல் ஆரோக்கியம் சிறப்பாக அமையும். வரவும் செலவும் சரியாக இருக்கும். பிரயாணத்தில் பயன் உண்டு.

    பெண்கள் : மன ஒருமுகப்பாடு தேவை. தியானம் செய்யுங்கள்.

    பணியாளர்கள் : திட்டமிட்டு உழைத்தால் பயன் உண்டு.

    விவசாயிகள் : கவலைப்படாதீர்கள் நன்மை விளையும்.

    தொழில் முனைவோர் : உற்றார் உறவினர் பணப் பரிமாற்றத்தில் கவனம் தேவை.

    கலைத் துறையினர் : நீண்ட நாளாய் தள்ளி வந்த திட்டங்கள் நிறைவேறும்

    அரசியல் துறையினர் : வளர்ச்சித் திட்டங்களில் கவனம் செலுத்துவீர்

     

    கடகம் :

    ( புணர்பூசம் 4 பாதம் முதல், பூசம் ஆயில்யம் முடிய)

    உறவினர் ஆதரவு கிட்டும். பணவரவு உண்டு. பிரச்சனைகள் விலகி சமூகம் உங்களை மதிக்கும். மற்றவர்களுக்கு உதவி செய்வீர்.

    பெண்கள் ; மகிழ்ச்சி பிறக்கும்

    பணியாளர்கள் : ஊதியம் கூடும்

    விவசாயிகள் : லாபம் கிடைக்கும்

    தொழில் முனைவோர் : அரசு மூலம் ஆதாயம் உண்டு

    கலைத் துறையினர் : முன்னேற்றம்

    அரசியல் துறையினர்: முயற்சிக்கேற்ற வெற்றி

    சிம்மம்:

    (மகம் பூரம் உத்திரம் முதல் பாதம் முடிய)

    வரவு சிறப்பாக இருப்பதால் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் தானே!. நினைத்ததை செய்வீர். சேமித்து பழகவும்.

    பெண்கள் ; பணவரவு உண்டு

    பணியாளர்கள் : பாராட்டு கிடைக்கும்

    விவசாயிகள் : லாபம் அதிகரிக்கும்

    தொழில் முனைவோர் : லாபமான வியாபாரம்

    கலைத் துறையினர் : ஆடம்பரம் வருமானம்

    அரசியல் துறையினர்: பதவி பாராட்டு

    கன்னி :

    (உத்திரம் 2 பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2 ஆம் பாதம் முடிய)

    உங்களின் சின்ன சின்ன முயற்சிகள் கூட நல்ல பலனைத் தரக் கூடிய காலம் இது. எனவே தளர்ச்சி அடையாமல் இருங்கள். மகிழ்ச்சி கிட்டும்.

    பெண்கள் : விட்டுக் கொடுத்து போவதே சிறப்பான வாழ்க்கை

    பணியாளர்கள் : அனுகூலமான வாரம்

    விவசாயிகள் : சிறுசிறு தடங்கள் விலகி சீர்படும்

    தொழில் முனைவோர் : திருப்திகரமான வாரம்

    கலைத் துறையினர் : தடைகள் தாண்டி வெற்றி

    அரசியல் துறையினர்: எளிதாக சிறப்பான பணி செய்வீர்

    துலாம் :

    ( சித்திரை 3 பாதம் முதல் சுவாதி, விசாகம் 3 ஆம் பாதம் முடிய)

    கையில் பணம் புரண்டால் எப்போதும் உற்சாகம் தானே. சரியாக திட்டமிட்ட எந்த செயலும் காலம் தாமதம் ஆனாலும் கண்டிப்பாக பலனை நல்கும்.

    பெண்கள் : தேவையற்ற பேச்சைக் குறைக்கலாமே.

    பணியாளர்கள் : சாணக்கியத்தனம் கை கொடுக்கும்

    விவசாயிகள் : நிறைவான லாபம்

    தொழில் முனைவோர் : நிதானம்

    கலைத் துறையினர் : புதிய வாய்ப்பு

    அரசியல் துறையினர்: திட்டம் நிறைவேறும்

    விருச்சிகம் :

    ( விசாகம் 4 பாதம் முதல் அனுஷம் கேட்டை முடிய)

    புத்துணர்ச்சி மேலிட வலம் வருவீர்.சமுதாயத்தில் உங்கள் மதிப்பு வளரும். உதவிகள் கிடைக்கும். மற்றவர்களின் ஏளனத்தைப் பொருட்படுத்தாதீர். பணப்பரிமாற்றத்தில் கவனம் தேவை

    பெண்கள் : புதிய ஆபரணம் சேரும்

    பணியாளர்கள் :  பணியில் கவனம் வேண்டும்

    விவசாயிகள் : புதிய முயற்சி செய்யலாம்

    தொழில் முனைவோர் : எச்சரிக்கை வேண்டும்

    கலைத் துறையினர் : புதிய வாய்ப்பு புதிய சாதனை

    அரசியல் துறையினர் : மேலிட பாராட்டு, பதவி

    தனுசு :

    ( மூலம் பூராடம் உத்திராடம் முதல் பாதம் முடிய)

    மகிழ்ச்சி பொங்கும். வெற்றி கிடைக்கும். பொருளாதாரத்தில் சிறப்பு உண்டாகும்

    பெண்கள் : குடும்பப் பிரச்சனைகளை எளிதாக சமாளிக்கும் மனோபாவம் தேவை

    பணியாளர்கள் : முன்னேற்றம் உண்டு

    விவசாயிகள் : லாபம் உண்டு

    தொழில் முனைவோர் : சுமாரான வாரம்

    கலைத் துறையினர் : வெற்றி, பாராட்டு, புதிய வாய்ப்பு

    அரசியல் துறையினர்: நிதானம், கவனம்

    மகரம் :

    ( உத்திராடம் 2ஆம் பாதம் முதல் திருவோணம் அவிட்டம் 2 ஆம் பாதம் முடிய )

    சாதகமான வாரம். உங்களுக்கு விருப்பமான செலவுகளை செய்வீர். உங்களுடைய தளர்ர்ச்சி நீங்கி கலகலப்பாய் இருப்பீர். உற்றார் உறவினர் உதவுவர்.

    பெண்கள் : குடும்ப ஒற்றுமை

    பணியாளர்கள் : மேலதிகாரிகள் பாராட்டு

    விவசாயிகள் : கவனமாக செயல்படவும்

    தொழில் முனைவோர் : சாதகமான வாரம்

    கலைத் துறையினர் : பாராட்டு கிடைக்கும்

    அரசியல் துறையினர் : உங்கள் பேச்சு அனைவரையும் கவரும்

    கும்பம் :

    ( கும்பம் 3ஆம் பாதம் முதல் சதயம் பூரட்டாதி 3 ஆம் பாதம் முடிய )

    தளர்வடையாதீர்கள். வெற்றி கைக்கு எட்டும் தூரத்தில் தான் உள்ளது. மனம் தளராமல் இருப்பீர் பண வரவு நன்றாக இருக்கும்

    பெண்கள் : பிரச்சனைகள் குறையும்

    பணியாளர்கள் : ஊதியம் கூடும்

    விவசாயிகள் : விளைச்சல்  அதிகரிக்கும்

    தொழில் முனைவோர் : அந்நியரிடம் எச்சரிக்கை

    கலைத் துறையினர் : தடைகள் தாண்டிய வெற்றி

    அரசியல் துறையினர் : சாதுரியமே சமர்த்து

    மீனம் :

    (பூரட்டாதி 4 ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி ரேவதி முடிய)

    உணர்ச்சி வசப்படாமல் செயல்பட்டால் எல்லா நன்மைகளும் கூடி வரும். மனசு லேசாகும். ஆரோக்கியம் பலப்படும். அனைவரும் உதவிக்கரம் நீட்டுவர். பிரச்சனைகள் தீரும்

    பெண்கள் : குடும்பத்தில் ஒற்றுமை.

    பணியாளர்கள் : வேலையில் கவனம் தேவை

    விவசாயிகள் :  நல்ல லாபம் உண்டு

    தொழில் முனைவோர் : பண பரிமாற்றம் சுமூகமாய் உண்டு.

    கலைத் துறையினர் : புதிய வாய்ப்பு மற்றும் பாராட்டு உண்டு.

    அரசியல் துறையினர்: தலைவர் பாராட்டு.

    Share
  • ‘என் பார்வையில் கண்ணதாசன்’

    – தென்றல் கமால் –

    பாவையைக் காதலிக்கிற வயது வந்த போது பாவையை விட்டு என்னைப் “பா“வைக் காதலிக்க வைத்தவன் கண்ணதாசன்.

    கண்ணதாசன் என்ற களஞ்சியத்தில் நான் எடுத்துக் கொண்ட கவிதை இது ஒன்றே என் கட்டுரைக்கு இது நன்றே !

    ஆடிய ஆட்டமென்ன
    பேசிய வார்த்தையென்ன
    தேடிய செல்வமென்ன
    திரண்டதோர் சுற்றமென்ன
    கூடு விட்டு ஆவி போனால்
    கூடவே வருவதென்ன

    வீடு வரை உறவு
    வீதி வரை மனைவி
    காடு வரை பிள்ளை
    கடைசி வரை யாரோ

    ஆடும் வரை ஆட்டம்
    ஆயிரத்தில் நாட்டம்
    கூடி வரும் கூட்டம்
    கொள்ளி வரை வருமா

    வீடு வரை உறவு
    வீதி வரை மனைவி
    காடு வரை பிள்ளை
    கடைசி வரை யாரோ

    தொட்டிலுக்கு அன்னை
    கட்டிலுக்கு கன்னி
    பட்டினிக்குத் தீனி
    கெட்ட பின்பு ஞானி

    வீடு வரை உறவு
    வீதி வரை மனைவி
    காடு வரை பிள்ளை
    கடைசி வரை யாரோ

    சென்றவனைக் கேட்டால்
    வந்துவிடு என்பான்
    வந்தவனைக் கேட்டால்
    சென்று விடு என்பான்

    வீடு வரை உறவு
    வீதி வரை மனைவி
    காடு வரை பிள்ளை
    கடைசி வரை யாரோ

    விட்டு விடும் ஆவி
    பட்டு விடும் மேனி
    சுட்டு விடும் நெருப்பு
    சூனியத்தில் நிலைப்பு

    வீடு வரை உறவு
    வீதி வரை மனைவி
    காடு வரை பிள்ளை
    கடைசி வரை யாரோ

    மனிதர்கள் பிறக்கிறார்கள் இறக்கிறார்கள்
    கவிஞர்கள் மட்டுமே என்றும் நிலைக்கிறார்கள்

    கண்ணதாசனை நான் மனிதனாகக் காணவில்லை
    அவனை நான் கால் கொண்டு நடந்தக் கவிதை என்பேன்

    அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன்
    முதற்றே உலகு என்றான் வள்ளுவன்

    மனிதனைப் படைத்தோம் மொழியைக் கற்பித்தோம் என்கிறது இசுலாமியர்களின் திருமறை

    மொழிக்கு வரும் ஊறினை கவிதை எனும் ஆறு கிளம்பி
    மொழியை ஏறு பாதைக்கு அழைத்துச் செல்ல
    இறைவன் செய்த ஏற்பாடோ கவிஞர்கள் என என நான் எண்ணுவதுண்டு

    சிறு வயது முதலே மரணம் என்னை அதிகம் சிந்திக்க வைத்த ஒரு பொருள்

    மனிதன் ஏன் பிறக்கிறான் ஏன் மரணிக்கிறான் ……… எதற்காக மரணிக்கிறான்
    கேள்விகள் என்னுள் அதிகம் வேள்விகள் செய்த காலமது

    வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
    தெய்வத்துள் வைக்கப்படும் என்கிறான் வள்ளுவன்

    மனந்திரும்புங்கள் பரலோக இராச்சியம் சமீபித்திருக்கிறது என்கிறது பைபிள்

    எவர்கள் விசுவாசங் கொண்டு நற்கருமங்களைச் செய்கிறார்களோ அவர்களை நாம் மறுமையில் நல்லோர்களுடன் சேர்த்திடுவோம் என்கிறது இசுலாமியர்களின் இறைவேதம்

    இம்மூன்றும் சொல்வது மரணத்திற்கு பிந்தைய ஒரு வாழ்க்கை அது இறைவனிடத்தில் அது யாருக்கு இந்த உலகில் வாழ்வியல் நெறிப்படி வாழ்பவர்களுக்கு நற்கருமங்களைச் செய்பவர்களுக்கு மனம் திருந்தியவர்களுக்கு

    மரணத்தைப் பற்றிய சிந்தனை அற்ற மனிதனே உலக இச்சைகளில் மூழ்கியவனாக வாழ்க்கையின் நெறிப்படி வாழாதவனான நற்கருமங்களைச் செய்யாதவனாக மனம் திருந்தாதவனாக வாழக் காண்கிறோம்

    வேதங்கள் மரணத்தைப் பற்றியும் மறு உலக வாழ்வைப் பற்றியும் சொல்லி முடித்த போது

    மீண்டும் பாமரனுக்கு மரணத்தை அவன் புரியும் வண்ணம் அவன் மொழியில் படித்துக் காட்டியவன் அந்தக் க(எ)ண்ணதாசன்

    ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தைச் சுவைத்தே தீர வேண்டும் என்கிறது இஸ்லாம்

    உலகப் பற்றை அறுத்து எறியக் கூடிய மரணத்தை அதிகம் நினைவு கூறுங்கள் என்றார் முஹம்மது நபியவர்கள்

    அத்தகையை மரணத்தை சிந்தனையூறும் வகையில் பாமரனுக்கும் புரியும் வண்ணம் எடுத்தியம்பியவன் கண்ணதாசன்

    அவனுடைய இந்தப் பாடலைக் கேட்கும் போதெல்லாம் என் மேனி சிலிர்க்கும் ஞானம் பிறக்கும்

    எனக்கொரு அவா உண்டு …….

    பத்தாம் வகுப்புக்கும் அதற்கும் மேலே உள்ள பாடத்திட்டத்தில் இந்தப் பாடலை மன்னிக்கவும் இந்தப்பாடத்தை வைக்க வேண்டும். மாணவர்களின் சிந்தனை சீர்படுகிற காலத்தில் இந்தப் பாடலை பாடத்தைக் கொண்டு மாணவர்களின் எண்ண நிலத்தில உழுது ஆழப் பதித்து விட்டால் ஒழுக்கம் எனும் பயிரை வளர்த்தெடுக்கலாம்

    கண்ணதாசனின் இப்பாடல் வரிகளை ஒருவன் அனுதினமும் ஒரு முறை படித்துப் பார்த்துக் கொள்வானெனின் அவன் வாழ்வாங்கு வாழ்வான் மனந்திருந்துவான் நற்கருமங்கள் செய்வான் என்பது என் எண்ணம்

    வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும் என்று வள்ளுவன் சொன்ன மரணத்திற்கு பிந்தைய தெய்வத்துடன் வாழக் கூடிய மறு உலக வாழ்வை அடைவான் அதுவே திண்ணம்a

    Share
  • என் பார்வையில் கண்ணதாசன்

    –மஸ்கட். மு. பஷீர்.

    என் பார்வையில் கண்ணதாசன்

    Kannadasanகவிஞன் என்பவன், தன்படைப்புக்கள் பேரறிவாளர் விருதுகள் பலபெற்று பெட்டகத்துள் அடைபட்டு, சட்டத்துக்குள்  வரம் பெற்று அலங்காரம் பெறுவதில் அல்ல வெற்றிபெறுகிறான். பட்டமும், பத்திரமும், பதக்கமும், பணமுடிப்பும், பளிங்கு விளக்குகள் மேடையில் பெறும் பரிசளிப்பும் என்றெல்லாம்  ஒரு குறுகிய வட்டத்துள் அடைபடும் கவிஞனாக என் பார்வையில் கவியரசர் கண்ணதாசனைக் காண முடியவில்லை. அந்தக் கவிவெளிச்சத்தை  சட்டங்களுக்குள்ளோ, குறுகிய கவிவட்டதுக்குள்ளோ  கட்டிப்பபோட என்னால் முடியவில்லை.

    மாறாக மக்கள் இதயக் கூட்டில் மட்டும் அடையும் பறவையாய் , தினம் தினம் மனிதனின் வாழ்வில் சிறகடிக்கும் பிரச்சனைகளின்  தீர்வாய், உறவுகளின் புனிதத்தைப்  பூஜிக்கும் மலர்களாய், சங்கடங்கள் தீர்க்கும் மருந்தாய், தனிமையில் சிந்தித்தால் கிடைக்கும் ஞான ஓளியாய், இதயத்தில் இயங்கும் ஜீவ நாதமாய், உலகத்தரக் கவிஞர்களின் தடாகத்தில் அவர் ஒரு ஜீவ நதியாய் அவரின் கவிதைகளையும்  பாடல்களையும் மக்கள் வைத்துப் போற்றுகின்றனர். அந்த வரிசையில் கவியரசர் கண்ணதாசன் முதல்வராகிறார். அங்கேதான் கவியரசர் ஒரு முழுமை பெற்றக்  கவிஞராக வித்தியாசமாய் ஜொலிக்கிறார்.

    ‘இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்  எல்லாம் சௌக்கியமே’ என வாழும் கவிஞர்கள் மத்தியில் தரத்தில் குறையாத தரமான படைப்புக்களைள தமிழ் சமூகத்துக்கு தந்தவர் கவியரசர். அவரின் வரிகள் காற்றோடு கலந்து தமிழ் மூச்சின் சுவாசமாய் கலந்தது. அந்தக் காற்றை  சுவாசித்து வாழ்ந்ததால்தான் என்போன்றவர்களின் தமிழறிவும் இலக்கிய அறிவும் சிறிதேனும் வளர்ந்தது என்றால் மிகையாகாது.

    கண்ணதாசன் என்ற அந்த கவிச்சோலைக்குள்  அத்துணை அமுதமும் தேனாய், தெவிட்டும் மதுவாய் தேங்கி வழிந்தாலும், கவியரசு என்னும் கவிஞர் கம்பனின் கவிரசம் பருகி மயங்கி கவின்மிகுக் கவிதைகள் வடித்தார் என்றால் மிகையாகாது! அவரைப் பற்றி என் கவிதைத்  தொகுப்பில் இவ்வாறு எழுதியுள்ளேன்;

    தமிழ்ச் சிப்பியில்
    பிறந்த முத்தையா
    நீ கவிக்கடலின்
    மொத்த  சொத்தையா !
    கம்பன் வரி
    நேசித்தாய் !
    கண்ணன் வரி
    வாசித்தாய் !
    தமிழ்க் காவியமாய்
    பிறந்து நீ சாதித்தாய் !
    பாரே போற்றிய
    கம்பனின் கவி நயத்தை
    பாமரன் உதடுகளில்
    பனிக்க வைத்தவன் !

    தமிழ்ப்பாலை  என்போன்ற மழலைக்கு அமுதூட்டிய கவித்தாய் கண்ணதாசன். மற்ற கவிஞர்களெல்லாம் நகைபோட்டு, அணிபோட்டு, வகை வகை  அழகுப்பூசி தமிழன்னையை அழகுபார்த்த வேளையில் முத்தான தமிழால் தமிழ்த்தாயின் முகத்தில் பொட்டு வைத்து அழகின் உச்சம் சேர்த்தவன்.

    “நதியில் விளையாடி கொடியில் தலைசீவி
    நடந்த இளந்தென்றலே வளர்
    பொதிகை மலைதோன்றி
    மதுரை நகர்கண்டு பொலிந்த தமிழ் மன்றமே”

    சந்த நடையும், தன் சொந்த நடையும் இணைத்து இசைத்து  கவிதை நடனம்  ஆடிய கவிச்சிவன். அது ஆனந்தக் கூத்தேதவிர ஆக்ரோஷ ஆட்டம் இல்லை.

    சந்தத்தில் பலக் கவிபாடி தமிழ்ச் சொந்தத்தை  மீளாமல் அடிமையாக்கியவன். அதனைப் படித்துப் பாடிய பலரும் பின்னாளில் நிரந்தர அடிமைகளாய் மாறிய விந்தையை  என்பனபவன்று சொல்வது.

    “வான் நிலா நிலா அல்ல – உன் வாலிபம் நிலா
    தேன் நிலா எனும் நிலா – என் தேவியின் நிலா
    நீயில்லாத நாளெல்லாம் – நான் தேதய்ந்த வெண்ணிலா
    மானிலாத ஊரிலே சாயல் கண்ணிலா
    பூவிலாத மண்ணலே ஜாடை பெண்ணிலா… ”

    ‘எந்த ஊர் என்றவனே இருந்த ஊரைச் சொல்லவா’ என்று தொடங்கும் பாடலில்,
    உடலூரில் வாழ்ந்திருந்தேன் உறவூரில் மிதந்திருந்தேன்
    கருவூரில் குடி புகுந்தேன் மண்ணூரில் விழுந்து விட்டேன்!
    கண்ணூரில் தவழ்ந்திருந்தேன் கையூரில் வளர்ந்திருந்தேதன்
    காலூரில் நடந்து வந்தேதன் காளையூர் வந்துவிட்டேன்!
    வேலூரைப்  பார்த்து விட்டேன் விழியூரில் கலந்து விட்டேன்
    பாலூறும் பருவம் என்னும் பட்டினத்தில் குடிபுகுந்தேன்!’

    ‘ஊர், ஊர்’ எனத் தொடரும்  வார்த்தைகளால் அலங்கரித்து, இலக்கியத் தேர்பிடித்து தமிழ்த்தேரோட்டம் நடத்தியவர்  கவிஞர். இந்தப் பாடலை  என் பள்ளிப் பருவத்தில் கேட்டு ‘இப்படியும் பாடல்  எழுதும் ஒரு மகாக்கவிஞன் தமிழ்மண்ணில் உள்ளாரா?’ என ஆச்சரியப்பட்டுப் போயிருக்கிறேன்… அதிசயித்து வியந்திருக்கிறேன். இன்றளவும் என் நெஞ்சூரில் வைத்து  நித்தமும் அலங்கரிக்கிறேன்.

    ஒருவனுக்கு ஒருத்தி எனும் தமிழ்ப்பண்பாட்டை உரக்கப்பாடியவர் கவியரசர். கம்பனின் காப்பிய வரிகளிபல அடியோட்டமாகச் சொல்லப்படும் கருத்தும் இதுவேயாகும். சுந்தரகாண்டத்திலே, தன் கணவன் ராமனுக்கு அனுமனிடம் செய்திபசால்லி அனுப்புகிறாள் சீதை,

    ‘வந்து எனைக்கரம் பற்றிய வைகல்வாய்
    இந்த இப்பிறவிக்கு இரு மாதரைச்
    சிந்தையாலும் தொடேன் என்ற செவ்வரம்
    தந்த வார்த்தை  திருச்செசவி சாற்றுவாய்’

    எனச் சொல்கிறாள். அதையே  கண்ணதாசனும் இராமனைப்ப் பற்றிப் பாடும்வேளையில் ஒருதாரம் எனும் உயர்வினைக் காட்டிய அவதாரம் இராமன் என்பார்.

    ‘மயக்கம் என்ன இந்த மௌனம் என்ன.. மணி மாளிகைதான் கண்ணே’ என்ற திரைப்படப் பாடலில்  அதை  மீண்டும் வலியுறுத்துவார் கவிஞர்.

    “உன்னை அல்லால் ஒரு பெண்ணை இனி நான்
    உள்ளத்தினாலும் தொடமாட்டேன் ..”.

    “ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால் அந்த உறவுக்கு பெயர் என்ன ? –காதல்..”
    எனும் பாடலில்  ‘நினைத்ததும் வருவது காதல்’ என்பதை  அவர் சொல்லவில்லை. அதே நேரம் ஒருவனை மனதார இவன்தான் தன்னுடைய காதலன் என நினைத்து முடிவு செய்துவிட்டால்  பிறப்பதுதான் காதல் எனச் சொல்கிறார்.

    இருமனங்கள் இணைந்து  ஒருமனமாகிவிடும் அந்த வசந்த வேளையிலே, ஒருவேளை  பிரிவு எனும் துயரம் வந்துவிடுமானால் அந்த இழப்பைத்  தாங்கிக் கொள்ள  எத்தனைக்  கடினமான இதயம் வேண்டும்  என்பதை வார்த்தைகளால்  வருணிக்க முடியாது. இதயத்தின் கடினத்தைத்  தாங்காது கண்ணீர் சொரியும் சோகத்தின் வடிவத்தை நாம் சங்க இலக்கியத்தில் நிரம்பவே காணலாம்.
    அதில் ஒரு பாடலில்  ( அகநானூறு 233: பாலை).

    “அலமரல் மழைக்கண் மல்குபனி வாரநி ..” எனத் தொடங்கும் பாடலில் பிரிவின் துயரால் அழுகிறத் தலைவியின் கண்ணீரை  ஆற்றுமுகமாகத் தோழி சொல்லும் ஆறுதலில் கற்பனையின் செறிவு காணக்கிடைக்கிறது.

    அப்படிப் பிரிந்த காதலர்கள் மீண்டும் சேர்ந்துவிடும் போது கிடைக்கும் சுகத்திற்கு அளவேது…!
    பிரிந்தவர் மேனிபோல் புல்லென்ற வள்ளி
    பொருந்தினர் மேனிபோல் பொற்பத் திருந்திழாய்
    வானம் பொழியவும் வாரார்கொல் இன்னாத
    கானம் கடந்து  சென்றார்

    பிரிந்தவர் மேனிபோல மழையின்றி வறண்டு கிடந்த முல்லைப் பூவானது, பெய்த மழையால் பொருந்தியனர் மேனி போலச் செழித்தது என்பதை இச்சங்கப் பாடல் விளக்குகிறது. பிரிந்தவர் சேரும் தருணம் பொதுவாக ஆர்ப்பரிக்கும் தருணமாகத்தான் இருக்கும். ஆனால் கவியரசரோ அதைக் காதலியின் அமைதியின் தருணமாக,  மௌனத்தின் நிலையாக வரைகிறார்.

    “பிரிந்தவர் மீண்டும் சேர்ந்து விட்டால்
    அங்கு பெண்மையின் நிலை என்ன? – மௌனம்”

    ஆதலால்தான் காதலியின் நிலையைப் பற்றி சொல்கிறார் கவியரசர்… மௌன நிலை என்று !

    பிரிந்து மீண்டும் சேரும் காதலர்கள் பேச்சுவரமுடியாமல் கண்களால் மட்டுமே கவிதை  பாடிடுவர். பேச்சுகூடஅங்கு ஒரு சுமையாகத்தான் இருக்கும். கம்பன் இந்த நிலையை  நயமாகப் பாடியுள்ளார். ஆனால் கண்ணதாசனோ அந்த நிலையை  மௌனத்தின் நிலையாக, அமைதியான தெய்வத்தின் சன்னதி என்பதாகப் பாடுகிறார். காதலின் தெய்விகத்தைத் தன் காவிய வரிகளால் ஆளுகிறார்;

    “பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும் போதில்
    அழுதால் கொஞ்சம்  நிம்மதி.
    பேச மறந்து  சிலையாய் இருந்தால்
    அதுதான் தெய்வத்தின் சன்னதி…”

    “நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா?” என்ற இந்தப் பாடல் எதிர்மறைக் கருத்துக்கள் தாங்கி நிற்கும் பாடல்போல்  தோன்றினாலும், நேர்மறை  எண்ணமிக்கப் பாடலாக  கவிஞர்.கண்ணதாசனால் ஓவியமாய் வரையப்பட்ட பாடல். மனிதனின் வாழ்வில் எல்லா நிகழ்வுகளுக்குமே காரணம் மனம் தானே. மனத்தால் தான் இன்பமும் துன்பமும் நிகழ்கிறது.

    இன்பத்தில் எழுந்து விளயாடும் மனம்
    துன்பம் வரும்பபோது மட்டும் ஏனோ
    துவண்டு போகிறது !

    சோகத்தில் மனம் தளர்ந்து விடும்போது அது விடை தேடி இறைவனை நாடுகிறது! புரியாத புதிருக்கு ஆறுதலாய் விடைதேடி இறைவனை  நாடுவதாக அற்புதமமான வரிகளைக் கொண்ட  கருத்தாழமிக்க வரிகள்.

    ‘கொதிக்கத் தெரிந்த நிலவே உனக்கு குளிரத் தெரியாதா’குளிர்நிலா என எல்லாக் கவிஞர்களும், நிலாவின் வெளிச்சத்தில் குளிர்ந்தபோது கொதிக்கும் நிலாவெனக் கண்ணாதாசன் பாடி வெப்பக்காதலை வெவளிச்சம் போட்டுக் காட்டியுள்ளார்.

    யாப்பின் அச்சில் நின்று கொண்டே அவர் நெய்த பலவிதமான கவிதைப் பாக்கள் நவனீ க் கவிதை வடிவத்துக்கு சுக்கான் பிடித்தது. அது தமிழ்த்தாய்க்கு ஆடைபூட்டி, அடையாளம் காட்டி, மானம் காத்த நெசவாளியாக நமது கவிஞரை கவியுலகில் அடையாளம் காட்டியது.

    “பார்த்தேன் சிரித்தேன் பக்கத்தில் அழைத்தேன்
    அன்று உனைத்தேன் என நான் நினைத்தேன்
    அந்த மலைத்தேன் இதுவென மலைத்தேன்…”

    ‘மலைத்தேன்’ எனும் சிலேடை வரிகண்டு நானும் மலைத்தேன்…கவிஞரின் கற்பனைத் திறனின் தமிழாழம் கண்டு திகைத்தேன்!.

    அதிலும், ‘பார்வையால் குடித்தேன்..’ என்ற பட்டொளி வீசும்  வரிகண்டு இன்றளவும் வியந்தேன்… கவியரசரின் கவியாளுமை கண்டு தோற்று நான் அயர்ந்தேன் !

    கன்னியரைத் தொடாமல்  கவிதை என்பதை  எப்போது பாடிமுடிப்பது… நான் கன்னியர் பற்றி அவர் பாடல் வடிப்பதைச் சொல்கிறேன். அலையும் தோதாரணமாய் கவிஞரின் வரிகளில் அழகுப் பதுமைமயர் ஆடி நிற்பதைக் கண்டு, இன்றும் நான் நினைனத்து ரசித்து ரசித்து வியந்து போகிறேன். ரிஷிகள் கூட வியந்து ரசிக்கும் காதல் ரசமும், கவியமுதமும் கவிஞரின் வரிகளில் கொட்டி வடியும் அழகு ரசம்.

    காதல் ரசம் கம்பனின் வலையில் விழுந்து கவிஞரின் மடியில் கனிந்தது. அமுதக் காதலை அள்ளிப் பருகியும் தெவிட்டாத  கவிஞர், வெள்ளித்திரைச் சுருளுக்குள் அள்ளித் தெளித்த தங்க வரிகள்தான் எத்தனை எத்தனை!

    காதலைப் பாடச் சொன்னால்  … நிஜக் காதலியையே  நமக்குமுன் கொண்டு வந்து நிறுத்தும் மந்திரக் கவிஞர் அவர்.

    மதுவை  சுவைத்தால் கவிதை  பிறக்கும் என்பர்…! நான் கவிஞரின் கவிமதுவை சுவைத்ததால் என்னுள் கவிதை  மலர்ந்தது இன்னும் மலர்ந்துகொண்டே  இருக்கிறது.

    கவியரசு ஒரு தத்துவப் பள்ளிக் கூடம். ஏழைப் பாமரனின் உதடுகளில் கூட தத்துவத்தைப் பேசவைத்த  ஆசான். வாழ்வின் எல்லா நிலைகளிலும் பாமரன்கூட இன்றளவும் பேசும் தத்துவ வசனங்கள் கவிஞரின் திரைப்பாடல் தத்துவ வரிகள்.

    பட்டியிலும் தொட்டியிலும் பாட்டின் வடிவத்தில் தமிழன்னையை துதிக்க வைத்தவன் !

    “பூஜ்யத்துக்குள்ளே ஒரு
    ராஜ்ஜியத்தை ஆண்டு கொண்டு
    புரியாமலே இருப்பான் ஒருவன், அவனைப்
    புரிந்து கொண்டால்  அவன் தான் இறைவன்…”

    தத்துவத்தின் முத்திரையாக மக்களின் மனத்தில் என்றும் வாழும் முத்தானப் பாடல். தன்முனைப்பாற்றலுக்கு இதைவிடச் சிறந்த வரிகள் உண்டா?

    உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால்
    உலகத்தில் போராடலாம்
    உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை  வணங்காமல் நீ வாழலாம்

    மானம் பெரியதென்று வாழும் மனிதர்களை
    மானென்று  சொல்வதில்லையா? தன்னைத்
    தானும் அறிந்து கொண்டு ஊருக்கும் சொல்பவர்கள்
    தலைவர்கள் ஆவதில்லையா?

    கீதாவுபதேசம் படித்து பாமரனுக்கும் கண்ணதாசா உபதேசம் தந்தவன். முன்னது ஆழம்மிக்க பமாழி.,. பின்னது அர்த்தம் மிக்க ஒளி.! இருட்டுக்குள் இருந்து தியானத்தில் தேடவண்டிய ஆன்மீகத்தை எளிய தமிழில் இலகு வெவளிச்சத்தில் எல்லோரும் அறிய ஒளிப்பாய்ச்சியவர் கவியரசர்.

    “வீடு வரை உறவு …வீதி வரை மனைவி
    காடுவரை பிள்ளை…கடைசி வரை யாரோ”

    வாழ்க்கையின் எல்லைக் கோட்டை அளந்து அதற்கான மைல்கல்லையும்  இந்த புண்ணிய வரிகளில் புதைத்து வைத்தவர் நம் கவிஞர்.

    ஆட்டுவித்தால் யார் ஒருவன்…..எனும் பாடலின் வரிகள் அத்துணையும் தத்துவத்தின் அர்த்தமிக்க வடிவங்கள்.

    “கடல்  அளவே இருந்தாலும் மயங்க மாட்டேன்
    அது கை அளவே ஆனாலும் கலங்க மாட்டேன்”

    என வாழ்வின் ஒப்புயர்வற்ற உன்னத நிலையை  எடுத்துச் சொன்னபதோடு அதுபோல் வாழ்ந்தும் காட்டியவர்.

    ‘சொல்லுதல் யார்க்கும் எளியவாம் அரியவாம்
    சொல்லிய வண்ணம் செயல்’

    என்ற வள்ளுவன் வாய்மொழிக்கேற்ப வாழ்ந்து மறைந்தவர், கவியரசு கண்ணதாசன்.

    அவர் உடலால்தான் மறைந்தாரே தவிர உயிராய் நம்மோடு என்றென்றும்  வாழ்கிறார், அவரின் பாடல் வரிகள் இன்றளவும் நம்மூச்சோடு இணைந்து  இசைத்துக் கொண்டுதான் இருக்கிறது.

    Share
  • என் பார்வையில் கண்ணதாசன்

    விசாலம்

    என் பார்வையில் கண்ணதாசன் . {கற்பனையில் உண்மை} 

    இரவு மணி எட்டு. நான் என் வேலைகளை முடித்துக்கொண்டு ‘அப்பாடி ‘ என்று அமர்ந்தேன்..என் மனம் “ என் பர்வையில் கண்ணதாசன் என் பார்வையில் கண்ணதாசன்” என்று ஜபம் செய்தது..இரு வாரங்களாக இந்த ஜபம் தான் . அது அப்படியே ஆழ் மனதில் போய் அமர்ந்து கொண்டது .சுமார் ஒன்பது மணி இருக்கும் வாசல் கதவு திறந்தாற்போன்று ஒரு உணர்வு .தலை நிமிர்ந்து பார்த்தேன் . ஆ என்னையே என்னால் நம்ப முடியவில்லை. என் எதிரே கவியரசர் . அழகிய முகம். நெற்றியில் அழகு குங்கமப்பொட்டு .மேலே விபூதியின் சிறு கீறல் .முகத்தில் புன்னகை . “வாருங்கள் வாருங்கள் நீங்கள் இங்கு வர நான் என்ன தவம் செய்தேனோ . என் பார்வையில் கண்ணதாசன் என்று பல தடவை நான் சொன்னதால் நீங்கள் நேரே வந்துவிட்டீர்கள். இல்லையா ?. என்றபடி என் கையை கிள்ளிப்பார்த்துக்கொண்டேன் .பின் “அமருங்கள் “என்று ஒரு கட்டிலைக்காட்டினேன் . அவர் எப்போதும் கட்டிலில் சாய்ந்தபடியே பல முத்துக்களை நமக்குத்தந்திருக்கிறார். அவரும் அதில் அவர் அமர்ந்தார் பௌர்ணமி நிலவின் .நிலாவும் கவிஞரைப்பார்க்க ஆவல் கொண்டு சன்னல் வழியாக எட்டிப்பார்த்தது .நான் அவரிடம் நிலவைக்காட்டி

    “கவியரசரே அதோ பாருங்கள் நிலா. . எனக்கு நீங்கள் பாடிய “வான் நிலா” பாடல் ஞாபகம் வருகிறது. ஆஹா அது என்ன பாட்டு ! என்ன லயம்,எல்லாமே “லா, லா என்று முடிகிறதே ! இது போல் எப்படி செய்ய முடிந்தது? அவர் முகம் பிரகாசமானது

    “வான் நிலா ,நிலா அல்ல உன் வாலிபம் நிலா, என்று என் வாய் முணுமுணுத்தது.

    “வாழ்க்கை வழியிலா ஒரு மங்கை ஒளியிலா .ஊரிலா நாட்டிலா ஆனந்தம் வீட்டிலா ,அவள் நெஞ்சம் ஏட்டிலா” 

    ஆமாம் இந்தப்பாடலை ஒரு 15 நிமிடத்தில் முடித்துவிட்டீர்களாமே! வெரி கிரேட் கவிஞர் சார். “பட்டின பிரவேசம் ‘படத்திற்காக எம் எஸ் வி அவர்கள் ஒரு டூயூனை முனகிக்கொண்டு வர அதை திரு பாலசந்தர் கேட்க அதற்கு ஒரு பாடலை உங்களிடமிருந்து வாங்கி வரச்சொன்னார் இல்லையா? அவரும் உங்கள் வீடு தேடி வந்து அந்த இசையை . ஹார்மோனியத்தில் வாசித்தவுடனேயே இந்த முத்தைத் தந்துவிட்டீர்கள் நீங்கள்…என் பார்வையில் நீங்கள் எங்கேயோ போய் விட்டீர்கள் . என்ன நிதரிசனம் “ .

    கவிஞர் இதைக்கேட்டு புன்னகை புரிகிறார் .

    “கவியரசரே உங்களுக்கு ஒரு உண்மை தெரியுமா ? உங்களால் தான் என் மகனும் பேரக்குழந்தைகளும் தமிழ் பேசுகின்றனர்.உங்கள் பாடல் தான் என்னையும் மாற்றியது ,உங்கள் வாழ்க்கையின் கடைசி நேரம் நீங்கள் சிகாகோவில் இருந்தீர்கள்..அப்போது அங்கிருக்கும் தமிழர்களின் குழந்தைகள் ஆங்கிலத்திலேயே பேசின. .அதைக்கண்டு நீங்கள் மனம் வருந்தினீர்கள்.. அப்போது ஒரு பாடல் பிறந்தது.

    “மனதில் ஒன்று பட்டு சேர்ந்திடுவீர். ,
    மழலைகள் தமிழ் பேச செய்திடுவீர்,
    தமக்கென கொண்டுவந்தேதுமில்ல, –பெற்ற
    தமிழையும் விட்டுவிட்டால் வாழ்க்கையில்லை.”

    இதனால் என்வீட்டுக் குழந்தைகளும் என் முயற்சியால் தமிழ் பேச ஆரம்பித்தன. தவிர உங்கள் பாடல் ஒன்று என் தந்தையின் நிலையையே மாற்றியது.அப்போது நான் உங்கள் பாடலின் சக்தியை நன்கு உணர்ந்தேன்.”
    .”அது எந்த பாடல்? உங்கள் தந்தைக்கு என்ன ஆயிற்று?”

    அந்த ஒரு நாள். மறக்கமுடியாத நாள் . இரவில் படுத்த என் தாய் காலையில் . எழுந்திருக்கவில்லை. என் அப்பா நிலைக்குலைந்து போனார்.. அவருக்கு உலகமே என் தாய்தான். கேவிக்கேவி அழுதார். பின்னர் ஏதோ இயந்திரம் போல் ஆனார்.தினமும் என் தாயின் போட்டோ வைத்து மாலை அணிவித்து பூஜை செய்வார்.இரவில் தூங்கமாட்டார். எத்தனை வைத்தியம் செய்தும் பலனில்லை. ஆனால் உங்கள் பாடல் என் தந்தையின் நிலையை மாற்றியது.. அவர் கொஞ்சம் கொஞ்சமாக தெளிவு பெற்றார்.டாக்டர் மருந்து செய்யாதது உங்கள் பாடல் செய்தது . என்ன சக்தியான பாடல் !

    “ நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை.
    நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி ஏதுமில்லை
    முடிந்த கதை தொடர்வதில்லை இறைவன் ஏட்டினிலே,
    தொடர்ந்த கதை முடிவதில்லை மனிதன் வீட்டினிலே .

    எங்கே வாழ்க்கை தொடங்கும் .அது எங்கே எவ்விதம் முடியும் ?
    இது தான் பாதை இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது.
    பாதையெல்லாம் மாறி வரும் பயணம் முடிந்துவிடும்
    மாறுவதைப் புரிந்து கொண்டால் மயக்கம் தெளிந்துவிடும் “

    இதேபோல் தான் திரு வாலி அவர்கள் தன் வருமையின் காரணமாக மனம் ஒடிந்து தற்கொலை செய்துக்கொள்ளும் முடிவுக்கே போய்விட்டார். அவரையும் உங்கள் பாடல் மாற்றியது. ஞாபகம் இருக்கிறதா?”

    இருக்கிறது என்றபடி கவிஞர் தலையை ஆட்டுகிறார்.

    “ஆம் அந்தப்பாடல் “ மயக்கமா.தயக்கமா? மனதிலே குழப்பமா,
    வாழ்க்கையில் நடுக்கமா?
    உனக்கும் கீழே உள்ளவர் கோடி, நினைத்து பார்த்து நிம்மதி நாடு”

    இந்தப்பாடல் திரு வாலி அவர்களைக் காப்பாற்றியதுமல்லாமல் அவருக்கு ஒரு புது வாழ்வும் கொடுத்து விட்டது,தவிர அவர் சினிமாவில் பல பாடல்களை எழுத நீங்கள் மனதார அவரைப் பாராட்டினீர்கள் . அவருடைய “ கடல் மேல் பிறக்க வைத்தான் “ என்ற பாடலைக்கேட்டவுடன் அவரைப்பாராட்ட அவர் வீடு தேடி போனீர்கள். அங்கு அவர் ஒரு சிறிய அறையில் இருந்தார். அந்த அறையிலும் ஏழ்மை தெரிந்தது .நீங்கள் அவரைப்பாராட்டி உங்கள் கழுத்திலிருந்த தங்கச்சங்கலியை கழட்டி அவருக்கு அணிவித்தீர்கள். என்ன பரந்த உள்ளம் ! கவியரசர் ஐயா .என் பார்வையில் நீங்கள் மிக உயர்வான இடத்தில் இருக்கிறீர்கள்..

    கவிஞர் அவர்களே, வேதம் சொல்கிறது .
    “ஓம் பூர்ணமத: பூர்ணமிதம் பூர்ணாத் ,பூர்ணமுதச்யதே
    பூர்ணஸ்ய பூர்ணமாதாய, பூர்ணமேவாயா சிஷ்யதே “ ஓம் சாந்தி ……

    . பூர்ணத்திலிருந்து எத்தனை எடுத்தாலும் குறைவதில்லை. எத்தனைச்சேர்த்தாலும் வளர்வதில்லை . ’
    இதையே எத்தனை எளிமையாக பாடலின் மூலம்சொல்லியிருக்கிறீர்கள்..

    “பூஜ்ஜியத்தினுள்ளே ஒரு ராஜ்ஜியத்தை ஆண்டுக்கொண்டு புரியாமலே இருப்பான் ஒருவன் .
    அவனைப்புரிந்துக்கொண்டால் அவன் தான் இறைவன் “ {Infinity }

    முழு சமர்ப்பணம், செய்ய அவன் நம்மைக் காப்பாற்ற ஓடி வருவான் என்கிறது கீதை.அதையே நீங்கள் எவ்வளவு அழகாக காட்டியிருக்கிறீர்கள்.!
    ஸ்ரீரமணர் “நான் யார்” என்று தேடி உள்ளொளி கண்டார் .இதையே நீங்கள்

    “தெளிவாகத்தெரிந்தாலே சித்தாந்தம் .
    அது தெரியாமல் போனால் வேதாந்தம் .
    மண்ணைத்தோண்டி தண்ணீர் தேடும் அன்பு தங்கச்சி,
    என்னைத்தோண்டி ஞானம் கண்டேன் ,இதுதான் என்கட்சி” என்று பாடலில் சொல்லி விட்டீர்கள். .
    “மருதமலை மாமணியே முருகய்யா” என்ற பாடலில் மருதமலை முருகனே கண்முன் வந்து நிறுத்தி விட்டீர்கள். கடவுள் யார் என்பதற்கு

    “பற்று அறுத்துக்கொண்டு வந்தவர்க்கு சுற்றம் என்று நின்றிருப்பான் ஒருவன்,
    அவனைத் தொடர்ந்து சென்றால் அவன் தான் இறைவன் “என்று எழுதி அசத்திவிட்டீர்கள். ‘இது போல் நிறைய நான் படித்தேன். .என் பார்வையில் நீங்கள் ஒரு மகானாக தோன்றுகிறீர்கள். சரி நான் மட்டும் பேசிக்கொண்டே போகிறேன் .குடிக்க பால் தான் இருக்கிறது எடுத்து வருகிறேன் .
    “ இல்லை வேண்டாம் .நான் பேரானந்த அலையில் மூழ்கி இருக்கிறேன் அந்த போதைக்கு ஈடு வேறு ஒன்றுமில்லை. இபோதெல்லாம் என்னுள்ளேயும் வெளியேயும் ஒளிமயமாக இருப்பதை உணர்கிறேன் “

    என் கைகளைக்கூப்பி அவரை வணங்குகிறேன் பின் மேலே தொடருகிறேன் .
    “ கவிஞர் அவர்களே எப்படி நீங்கள் நாஸ்திகத்திலிருந்து ஆஸ்திகத்தில் குதித்தீர்கள்?
    “ நான் குதிக்கவில்லை அது என் ரத்தத்திலேயே ஊறிய ஒன்று. ,.ஆரம்பத்தில் தான் . கொஞ்சம் திசை கெட்டுப்போனேன்’ பலவிதமான கூடாத பழக்கங்கள் “

    “ ஆம் நான் கூட படித்தேன் உங்கள் வம்சத்தில் எல்லோரும் பல புண்ணிய காரியங்களைச் செய்திருக்கிறார்கள். நாட்டுக்கோட்டை செட்டியார் பிரிவில் வந்த அவர்கள் கோயில் திருப்பணிக்கே பிறந்தவர்கள் .ஏகாம்பரநாதர் கோயில் திருப்பணி , வரதராசர் கோயில் திருப்பணி ,காமாட்சிஅம்மன் கோயில் திருப்பணி என்று பட்டியல் நீளும்.அப்படியிருக்கும் போது நீங்கள் எப்படி நாஸ்திகராக இருக்க முடியும் ? ஆரம்பத்தில் இராமாயணத்தை நெருப்பு வைத்துக்கொளுத்தவும் துணிந்தீர்கள் அல்லவா?

    “ ஆம் உள் இருந்த இராமன் என் மனதை மாற்றிவிட்டான் .இராமன் எத்தனை ராமனடி பாடலில் பல ராமன்களைப் பார்க்கலாம் “

    ஆம் இராமயணப்பாடல்கள் உங்கள் மனதையே மாற்றிவிட்டன. அது போல் திருப்பாவையில் கோதை நாச்சியாரின் திருப்பாசுரங்கள் உங்களை மாற்றிவிட்டன .ஸ்ரீ அரவிந்தருக்கு கண்ணன் தெரிந்தான் .அதுபோல் உங்கள் முன்னும் கண்ணன் தரிசனம் தந்திருப்பான் .கண்ணதாசன் என்ற பெயர் என்ன பொருத்தம் !

    “ கவிஞர் அவர்களே,

    “புறத்தூயமை நீரான் அமையும் அகம் தூய்மை
    வாய்மையால் காணப்படும்”

    என்ற திருக்குறளுக்கு ஏற்ப உங்கள் வாழ்க்கையில் உண்மையே பேசுவதே ஒரு கொள்கையாக இருந்தது. மஹாத்மாஜிக்குப் பிறகு நீங்கள் உண்மைப்பேசுவதைக் கடைப்பிடித்துள்ளீர்கள். எப்படி சொல்கிறேன் என்றால் அது மிகையாகாது. உங்கள் படைப்புகளை ஒளிமறைவு இல்லாமல் எழுதி அதை ஒரு திறந்த புத்தகமாக ஆக்கியிருக்கிறீர்கள். .ஒருவர் தன்னுடைய பலகீனத்தை உண்மையாக ஒப்புத்துக்கொண்டு அதை எழுத்திலும் காட்டுவது மிக அபூர்வம் .
    என் பார்வையில் நீங்கள் எட்டாத உயரத்துக்குச்சென்று விட்டீர்கள். .உங்களுடைய மது ,மாது ,சூது போன்ற வேண்டாத பழக்கங்கள் வாய்மை என்ற தீயில் விழுந்து சாம்பலாகி விட்டன..சத்தியமே கடவுள் இல்லையா? “மனிதன் என்பவன் தெய்வமாகலாம்” என்ற பாடல் எவ்வளவு உண்மை !

    எல்லாவற்றுக்கும் மேலாக ஸ்ரீ காஞ்சி பெரியவாள் உங்களை ஆசீர்வதித்து
    “அங்கிக்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கும் ஞான சூரியனாம் நம் மதத்தைப் பற்றி எழுது “ என்று சொன்னார் இல்லையா? அதனால் பிறந்தது “அர்த்தமுள்ள இந்துமதம் “ சரிதானே.”

    ஆம் என்பது போல் தலையை ஆட்டுகிறார்,.

    “ நீங்கள் திரு சின்னப்பதேவருடன் வரும் போது நடந்த கார் விபத்து ஒரு நல்ல காரணத்திற்காகத்தான் இருக்க வேண்டும்.” பிளெஸ்ஸிங் இன் டிஸ்கைஸ் “ என்று ஆங்கிலத்தில் சொல்வார்களே ! அந்த விபத்தால் நீங்கள் ஆஸ்பத்திரியில் இருக்க தேவர் அவர்கள் காஞ்சி பெரியவாள் முன் நின்று கண்களை மூடிக்கொண்டார். அந்த மகானும் “கண்ணதாசன் எப்படி இருக்கிறான் ? என்று கேட்ட தேவர் அப்படியே பிரமித்துப்போய் நின்றார். பின் பெரியவாள் அவருக்கு விபூதி கொடுத்து அதை நெற்றியில் இடச்சொல்லி அனுப்பினார். ஆனால் பூனைக்கு மணி கட்டுவது எப்படி?

    நீங்கள் நாஸ்திக அலைகளில் அல்லவா நீந்திக்கொண்டிருந்தார். இருந்தாலும் தேவர் உங்கள் உயிரைக்காக்க நீங்கள் மயக்கமாக இருக்கும் போது நெற்றியில் இட்டுவிட்டார்.. காலையில் நீங்கள் கண்முழித்துப்பின் முகத்தைப்பார்க்க கண்ணாடி கேட்டீர். பின் அதைப்பார்த்தீர்கள். தேவரோ பயத்தில் நடுங்கிக்கொண்டிருந்தார். ஆனால் என்ன ஆச்சரியம் ! நீங்கள் அமைதியாக விவரங்களைக்கேட்டு நேரே வீடு செல்லாமல் நேரே காஞ்சி மகானைப்பார்க்க அவர் இடத்திற்குச் சென்றீர்கள். அந்த கருணாமூர்த்தியைப் பார்த்து கண் கலங்கி பாவமன்னிப்பு கேட்டு வணங்கினீர்கள். “

    “ ஆம் நான் அப்போது அவருக்காக ஒரு கவிதையும் சொன்னேன்.

    “ பார்த்த மாத்திரத்தில் பாவத்தை அலம்புகிற தீர்த்தம் பெருக்கு ,
    திருவாசகத்தின் உட்கருத்து .

    கூர்த்த மதியால் மெய்ஞானக்கருத்துணர்த்தும் முழு மூர்த்தம்.
    கலி மொய்க்கும் இவ்வுலகைக் காக்க வந்த கண் கண்ட தெய்வம் .
    எம்மதத்தோரும் சம்மதத்துடன் தம்மதத்தலைவனென
    தொழுதேத்தும் தெய்வக்கமலக் கழல் தொழுவோம் வாரீர்.”

    “ ஆஹா! என்ன அழகு பாடல் ..காஞ்சி மகானின் ஆசிகளுடன் அவருடைய கருணாகடாட்சம் பெற்ற நீங்கள் என் பார்வையில் மிகப்பெரிய இடத்தைப்பிடித்து விட்டீர்கள் “தோன்றின் புகழோடு தோன்றுக “ என்ற குறளுக்கு உதாரணம் நீங்கள் தான் ஆன்மீகத்தில் உங்கள் சாதனை மிகப்பெரியது . அளவிடமுடியாது .”

    நீங்கள் சுவாமி விவேகானந்தருக்காக பாடிய பாடல் “ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு “ இல்லையா? அதில் வரும் இந்த வரிகள் மிக மிக உண்மையான வரிகள் .

    ஆசை கோபம் களவு கொள்பவன் பேச தெரிந்த மிருகம்
    அன்பு, நன்றி ,கருணை கொண்டவன் மனித வடிவில் தெய்வம் “

    நீங்கள் எத்தனை கஷ்டங்கள் வந்தாலும் அதை வெளியில் காட்டிக்
    கொள்ளாமல் கடமையைப் பூர்த்தி செய்திருப்பதை தெரிந்துக்கொண்டேன்” . .
    “ ஆம் . ஒன்று ஒப்புக்கொண்டால் அதை செய்துமுடிக்கவேண்டாமா?”

    “ சரிதான் . ஒரு தடவை திரு எம் .எஸ் வி அவர்களுடன் பாடல் எழுதும் போது ஒரு போன்கால் வந்தது. அதைக்கேட்டப்பின் உங்கள் முகம் மாறியது .முகத்தில் ஒரு கவலை . ஆனாலும் அதை வெளியில் காட்டாமல் ஒன்றுமே நடக்காதது போல் பாடல் புனைந்தீர்கள். அந்தப்பாடல் தான் “ சிலர் சிரிப்பார் சிலர் அழுவார் நான் அழுதுக்கொண்டே சிரிக்கின்றேன் “ ஏன் கவிஞர் சார் உங்கள் வீட்டை ஜப்தி செய்யப்போவதாக வந்த போன் காலை எப்படி சாதாரணமாக எடுத்துக்கொண்டு பாடலும் செய்ய முடிந்தது. ? “

    “ அதுதான் பாடலில் காட்டிவிட்டேன் . அழுதது போன் காலுக்கு .சிரித்தது பாடலுக்காக வரும் பணத்திற்கு”
    “ அப்பப்பா சொல்ல வார்த்தைகளே வரவில்லை. கண்ணதாசன் அவர்களே என் பார்வையில் நீங்கள் மிக உயர்ந்து நிற்கிறீர்கள். .

    நீங்கள் எம் ஜி ஆர் அவர்களையும் பாடலில் புகழ்ந்திருக்கிறீர்கள். .

    “தேக்கு மரம் உடலை தந்தது. சின்ன யானை நடையைத் தந்தது,
    பூக்களெல்லாம் சிரிப்பை தந்தது .,பொன்நிலவே நிறத்தை தந்தது,

    என்றும்

    சேரனுக்கு உறவா, செந்தமிழின் நிலவா? பாரி வள்ளல் மகனா என்றும்
    அவரை விவரித்திருக்கிறீர்கள். எம் ஜி ஆர் நீங்கள் எழுதிய பாடல் “ “அச்சம் என்பது மடமையடா “ பாடி தான் மனமொடிந்துப்போனால் தன்னை தேற்றிக்கொள்வாராம். நீங்கள் திரு காமராஜரையும் விட்டுவைக்கவில்லை. திரு காமராஜரை ஐக்கிய நாடுகள் அழைத்த போது

    சென்று வா மகனே வென்றுவா “
    அறிவுலகம் உன்னை அழைக்கின்றது – ஏதும்
    அறியாதவன் என்றே நினக்கின்றது “
    உண்மையைச்சொல்ல படிப்பெதற்கு.
    உணர்ந்தவர் போல் நடிக்கும் நடுப்பெதற்கு …. என்று பாடல் போகிறது

    .அவர் திரும்ப முக்கிய மந்திரியாக வர பாடல் மூலம் வாழ்த்து தெரிவித்தீர்கள்.. இதே போல அவர் தான் படிக்கவில்லையே என்ற ஏக்கத்தை பாடல் மூலம் போக்கினீர்கள்.

    “ படிப்பதினால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு ,ஆனால் படிக்காத மேதையெல்லாம் பாரினில் உண்டு “ சினிமாவின் பெயரும் படிக்காத மேதை என நினைக்கிறேன் . எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற்போல் அமைந்த பாடல் “ சட்டி சுட்டதடா” “

    “ ஆம் நான் அரசியலை விட்டுவிட தீர்மானித்தேன் அப்போது எழுதியதுதான் இந்தப் பாடல் “ நான் அரசியலை விட்டப்பின் தான் என்னை ஆட்டிப்படைத்த மிருகம் விலகிப்போயிற்று “ .
    “ சூப்பர் பாடல் “ என்று சொல்லியபடி அந்தப்பாட்டை முனகுகிறேன்

    சட்டி சுட்டதடா ,கை விட்டதடா, .
    “புத்தி கெட்டதடா ,நெஞ்சை தொட்டதடா,
    நாலும் நடந்து முடிந்த பின்னால்
    நல்லது கெட்டது தெரிந்ததடா”

    : “ அது சரி கவியரசரே .நீங்கள் எந்த சொல்லைக்கொடுத்தாலும் அதில் பாடல் எழுதி அசத்துகிறீர்கள். திரு எம் .எஸ் வி சார் உங்களுக்கு “தேன் “
    என்று முடியும்படி பாடல் செய்ய சவால் விட்டவுடன் உங்கள்பேனாவால்

    “பார்த்தேன் . சிரித்தேன் ,பக்கம் வர அழைத்தேன் “ என்று ஒரே தேனாகவே ஒழுக விட்டீர்களே எப்படி சார் .இந்த மேஜிக் ! மிக அருமை சார். என் பார்வையில் நீங்கள் ஆகாயத்தை தொட்டுவிட்டீர்கள் .மேலும் எல்லா மதமும் சம்மதமே என்ற உங்கள் கொள்கை எத்தனை உயர்ந்த கொள்கை. ராமன் .ஏசு. அல்லா எல்லோருமே ஒரே கடலில் கடக்கும் புண்ணிய நதிகள் என்ற பொருள் கொண்ட பாடலும் . “எல்லோரும் கொண்டாடுவோம் .அல்லாவின் பெயரைச்சொல்லி” என்று பாடலும் . ஏசு காவியமும் உங்கள் நல்லிணக்கத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு. இந்த அணுகுமுறையில் நீங்கள் என் பார்வையில் மிக உயர்ந்த இடத்தைப்பிடித்து விட்டீர்கள். “

    “நீங்களும், இசை மன்னர் திரு எம் எஸ் வி அவர்களும் நகமும் சதையும் போல் இருந்தீர்கள். .
    “கங்கை .யமுனை .இங்குதான் சங்கமம் .” சிப்பி இருக்குது முத்து இருக்குது “ போன்ற பாடல்கள் இதைத் தெரிவிக்கின்றன.

    ஆமாம் நீங்கள் காமெடி செய்து உங்கள் நண்பர்களை அழ வைத்தீர்களாமே! அந்த சம்பவத்தை நானே ஞாபகப்படுத்துகிறேன் . நீங்கள் உங்கள் குரலை மாற்றிக்கொண்டு டெலிபோனில் உங்கள் இணைப்பிரியா நண்பரிடம் “கவிஞர் இறந்துவிட்டார்.” என்று சொல்ல பாவம் மெல்லிசை மன்னர் அலறி அடித்துக்கொண்டு தன் நண்பர்களுடன் அழுதபடி உங்கள் இடத்திற்கு ஓடி வந்தால் நீங்கள் சிரித்தபடி கட்டிலில் அமர்ந்திருந்தீர்கள். ஏன் இப்படி செய்தீர்கள் கவிஞர் அவர்களே?”

    “ ஓ அதுவா. நான் இறந்தால் யார் முதலில் என்னைப்பார்க்க வந்து அழுவார் என்று எனக்கு பார்க்க ஆசை .அதனால் தான் ……….”

    ‘ஐயோ பாவம் மெல்லிசை மன்னர்.. கவிஞர் அவர்களே உங்கள் முதல் பாடல் “கலங்காதிரு மனமே “ கடைசி பாடல் “கண்ணே கலைமானே” இரண்டும் ‘க’ வில் ஆரம்பம் உங்கள் பெயரும் ‘க’ வில் ஆரம்பம் நீங்கள் பிறந்த ஊர் சிறுகூடல்பட்டி வாழ்க்கை பயணம் முடிந்த ஊர் சிகாகோ . இரண்டும் “சி’ யில் ஆரம்பம் .எங்கே வாழ்க்கை பயணம் அது எங்கே எவ்விதம் முடியும்?” என்ற கேள்விக்கு பதில் ஒருவருக்கும் தெரிவதில்லை . உங்கள் வனவாசம், மனவாசம் இரு புத்தகங்கள் உங்கள் வாழ்க்கையின் திறந்த புத்தகங்கள்.. நீங்கள் எழுதிய பாடல் உங்களுக்காகவே எழுதியது போல் இருக்கிறது . நீங்கள் கண்ணன் காட்டிய கீதையின் பல அம்சங்கள் பாடலில் கொணர்ந்து வந்திருக்கிறீர்கள்.

    இது போல் கவிதைகள் செய்ய இனி ஒருவர் பிறக்க வேண்டும் . கவிஞர் அவர்களே என் பார்வையில் நீங்கள் ஒரு புடம் போட்ட தங்கமாக ஒளி வீசுகிறீர்கள் .எனக்கு ஒரு வருத்தம் . உங்களுக்கு பத்மபூஷன் பட்டம் கண்டிப்பாக கிடைத்திருக்க வேண்டும் நீங்கள் மட்டும் சிறுகூடல்பட்டியில் பிறக்காமல் அமெரிக்காவில் பிறந்திருந்தால் உங்களுக்கு மிக எளிதாக நோபல் பரிசு கிடைத்திருக்கும் .”

    அருகில் இருக்கும் கோயிலின் மணி இரவு பூஜை முடியும் சமயம் “டண் டண். என்று ஒலித்தது “ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன் என்று நான் முனக “ஏன்டி இன்னும் அந்த ரூமில் தனியாக உட்காந்து என்ன செய்யறே? என்று என் கணவர் கத்த என் கவியரசரும் ஆலயமணி ஓசையுடன் மறைந்து போனார் .

    Share
  • திருமால் திருப்புகழ் (114)

    கிரேசி மோகன்

    Santhanagopalam - Glory of the Supreme Person - Keshav
    Santhanagopalam – Glory of the Supreme Person – Keshav

    கண்ணன் திருப்புகழ்(வெண்பா)….
    ————————————————————–
    ’’கண்ணன் வெண்பாக்கள்’’
    ————————————————-
    ஸ்ரீரங்கநாதர்
    ————————–
    முன்விழித்துப் பின்விழித்துப், பொன்மகள் பார்த்திருக்க,
    கண்விழிக்கா யோகமா? கற்பனையா? -தென்னிலங்கை,
    பக்கம் தவித்திருக்கும், பத்தினியாள் ஞாபகமா?
    துக்கமென்ன சொல்லிவிட்டு தூங்கு….(198)

    களைப்போடு வீடணன் கைகால் கழுவுகையில்
    மலைக்கோட்டைப் பிள்ளை குறும்பால் -நிலைப்பாடாய்
    கொள்ளிடத் தீவில் கிடக்கும் அயோத்தியின்
    பள்ளிகொண்ட ரங்கனைப் பாடு….(199)
    —————————————————————————-

    ஓவியம் : கேஷவ்
    ஓவியம் : கேஷவ்

    வெறும்வாயில் மெல்லும் அவலா கிடாது
    குருவாயூ ரப்பா எனக்கும் -திருவாயால்
    பாடிய நாரண பட்டர்க்குப் போட்டாற்போல்
    போடுநீ ஆமாம்சா மி….(200)

     
    விடையேழ் அடக்கி வளைக்கரம் கொண்ட
    இடையா எனக்கிங்(கு) இருக்கும் -தடையான
    பாழும் வினைகளும் பஞ்சப் புலன்களும்
    வீழ வகைசெய் விரைந்து….(201)

    காயாம்பு மேனியும், கொவ்வைக் கனியிதழும்,
    ஓயாது தாலாட்டும் ஓங்காரத், -தாயன்பும்,
    புத்தியில் சேயாகிப், போற்றுவோர் வாக்கினில்,
    முத்தமிழ் முத்தமிடு மாம்….(202)

    அற்புதம் செய்ய, அவதரித்த ஆய்க்குலத்தோன்,
    பொற்பதம் போற்றிப் பணிந்திட, -கற்பூரம்,
    மூச்சில் மணத்திடும், மூடக் கழுதைக்கும்,
    ஆச்சரியம் கண்ணன் அருள்….(203)

    ——————————————————————————————————————-

    படங்களுக்கு நன்றி :

    http://bhagavatham.blogspot.in/

     

    Share
  • பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் : அகில ஈர்ப்பு விசை அலைகள் இணைப் பிரபஞ்சங்கள் இருப்பைச் சுட்டிக் காட்டும்

     

    jay

     

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    http://www.youtube.com/watch?feature=player_embedded&v=dhGRV8cD_tY 

    [Evidence of Gravitational Waves Points to Multiple Universes (VIDEO)]

    “வெறுமையிலிருந்து எதுவுமே உருவாக முடியாது.”

    லுகிரிடியஸ் ரோமானிய வேதாந்தி (Lucretius) கி.மு. (99-55)

    “நமது பிரபஞ்சம் பத்து பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு மெய்யாகவே வெறுமையிலிருந்து தோன்றியதாக நான் அனுமானம் செய்கிறேன் ! . . .ஏன் அவ்விதம் நிகழ்ந்தது என்னும் கேள்விக்கு எனது தாழ்மையான முன்னறிவிப்பு இதுதான் : எப்போதாவது ஒரு யுகத்தில் அப்படி நேரும் தோற்றங்களில், நமது பிரபஞ்சமும் ஒன்று என்பது !”

    எட்வேர்டு டிரையன், பௌதிகப் பேராசிரியர் நியூயார்க் பல்கலைக் கழகம் (1975)

    “கவிஞன் அண்டக் கோள்களில் மண்டையை நுழைக்க வேண்டுகிறான். தர்க்கவாதி தன் மண்டைக்குள் அண்டங்களைத் தேடிச் செல்கிறான். அப்புறம் அவன் தலைதான் பிளக்கிறது.”

    ஜி.கே. செஸ்டர்ஸன் (G.K. Chesterson) (1874-1936)

     

    Parallel Universes

     

    அகிலவெளி ஈர்ப்பு விசை அலைகள் சுட்டிக் காட்டும் இணைப் பிரபஞ்சங்கள்

    2014 ஜூன் 13 ஆம் தேதியில் அறிவிக்கப்பட்ட ஒரு வெளியீட்டில் விஞ்ஞானிகள்,  அகிலவெளி ஈர்ப்பு விசை அலைகள் [Gravitational Waves] பல்வேறு பிரபஞ்சங்கள்  [Multiple Universes] இருக்கக் கூடும் என்றோர் கோட்பாடைத் தெளிவு படுத்தியைக் கூறியுள்ளார்.   ஈர்ப்பு விசை அலைகள் விண்வெளியில் ஒருவித சக்தியை உட்புகுத்தி  “விலக்கு விசை” [Repulsive Force] ஒன்றை உண்டாக்கி நமது பிரபஞ்சத்தை ஒளி வேகத்துக்கு மிஞ்சி வேகத்தில், வியப்புக்குரிய முறையில் ஒரு நொடிக் கொந்தளிப்பிலே விரிவு படுத்தி வருகிறது.   பலூன்போல் உப்பிடும்  இந்த வீக்க முறை [Inflation Process] அகில நெளிவு, சுழிவுகளை நிமிர்த்திச் சீர்செய்து பிரபஞ்ச முரண்பாட்டுப் பிரச்சனைகளைத் துருவத்துக்குத் துருவம் தீர்வு செய்து ஒருமைப் பாட்டை நிலைநாட்டுகிறது.

     

    Boston Discovery

    1979 ஆண்டில்தான் முதன்முதல் ஈர்ப்பு விசை அலைகளின் இருப்பை [The Existense of Gravitational Waves] பௌதிக விஞ்ஞானி அலன் கூத் என்பவர் [Alan Guth]  கண்டுபிடித்தார்.  2014 ஆண்டு ஆரம்பத்தில்  பெரு வெடிப்புத் துவக்கத்தைக் கண்ட ரேடியோ வானியல் விஞ்ஞானிகள் [Radio Astronomers] ஈர்ப்பு விசை அலைகள் இருப்பை உறுதிப் படுத்தினர்.   பிரபஞ்ச வீக்க விரிவு நியதியை [Inflation Theory]  விளக்கிய அலன் கூத் கோட்பாடை மேலும் மெய்ப் படுத்தினர் அந்த ரேடியோ விஞ்ஞானிகள்.   ஆயினும் இன்னும் ஆய்வுகள் செய்து, வீக்க விரிவு நியதி மாடல்கள் பல்வேறு இணைப் பிரபஞ்சங்கள் உருவாகப் பாதை வகுத்தன என்று உறுதிப் படுத்த வேண்டும்.

     

    Multiverse -1

     

    இணைப் பிரபஞ்சங்கள் விண்வெளியில் உள்ளனவா ?

    விஞ்ஞானிகள் இப்போது நமது பிரபஞ்சத்தைப் போல ஓர் இணையான பிரபஞ்சம் (Parallel Universe) இருக்கலாம் என்று மெய்யாக நம்புகிறார்கள். புத்தகத்தில் படிக்கும் விஞ்ஞானப் புனைகதை இல்லை இது ! “Multiverse” என்னும் சொல்லை முதலில் ஆக்கியவர் அமெரிக்க வேதாந்தி வில்லியம் ஜேம்ஸ் (1848-1910). சொல்லப் போனால் நமக்குத் தெரியாமல் குறிப்பிட முடியாத எண்ணிக்கையில் இணையான “பல்லரங்கப் பிரபஞ்சங்கள்”  (Multiverses) இருக்கலாம் என்று யூகிக்கப்படுகிறார்கள் ! நாம் அவற்றில் ஒன்றான நமக்குத் தெரியும், உப்பி விரியும் ஒரு பெரு வெடிப்புப் பிரபஞ்சத்தில்தான் வாழ்ந்து வருகிறோம். அந்தப் பிரபஞ்சங்கள் கால வெளியும், மர்மமான, புதிரான பண்டங்களும் கொண்டிருக்கலாம் ! மெய்யாக நமது பிரபஞ்சத்தில் உள்ள ஈர்ப்பாற்றல் வலுவற்ற சமிக்கை மற்ற இணைப் பிரபஞ்சத்திலிருந்து கசிந்து புகுந்து விட்ட ஒன்றுதான் ! இதில் வியப்பென்ன வென்றால் இந்த இணைப் பிரபஞ்சம் நமது பிரபஞ்சத்துக்கு மிக்க அருகில் இருக்கலாம் என்றும் விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.

     

    Big Pang and Inflation

     

    பிரபஞ்சத்தின் பரிமாணங்கள் நான்கு அல்ல பதினொன்று !

    உன்னத இழை நியதி (Superstring Theory) பெருவெடிப்புக்கு முந்தய சில அடிப்படை விளைவு களையும் விளக்க உதவுகின்றது ! ஒற்றை நியதியில் இழை நியதி பராமாணுக்கள், அடிப்படை இயற்கை உந்து விசைகள் (Particles & Fundamental Forces of Nature) யாவும் உன்னத சீரான நுண்ணிழைகளின் அதிர்வுகள் (Vibrations of Tiny Supersymmetric Strings) என்று தெளிவாகக் கூறுகிறது. பரமாணுக்களின் அணுக்கூண்டில் இயங்கும் “நுண்துகள் ஈர்ப்பாற்றல்” (Quantum Gravity) தன்மைகளை விளக்கும் மகிமை கொண்டது இந்த உன்னத இழை நியதி !  ஏறக்குறைய உயிரியல் பிறவி மூலமான “டியென்னே” (DNA) போன்றது பிரமஞ்சத்தின் ஒற்றை உன்னத மூலத்துவ இழை நியதி [String Theory] என்று வைத்துக் கொள்ளலாம் !

    புரட்சிகரமான இந்த இணைப் பிரபஞ்சக் கோட்பாடு எப்போது உதயமானது என்னும் கேள்வி எழுகிறது இப்போது ! உன்னத இழை நியதி, பெருவெளி, கருமைப் பிண்டம் (Superstring Theory, Hyperspace & Dark Matter) ஆகிய புதிய கோட்பாடுகள் எழுதப்பட்டதும் பௌதிக விஞ்ஞானிகள் பிரமஞ்சத்தின் விஞ்ஞானத்தை விளக்க நாமறிந்த நான்கு காலவெளிப் பரிமாணங்கள் மட்டும் போதா வென்றும், அவை மெய்யாகப் பதினொன்று எண்ணிக்கைகள் என்றும் உணர்ந்தார்கள் ! அவ்வித முடிவுக்கு விஞ்ஞானிகள் வந்ததும், அடுத்தோர் முடிவும் உதயமானது ! அதாவது நாமறிந்த பிரபஞ்சமானது எண்ணிற்ற  “சவ்வியல் குமிழிகளில்”  (Membraneous Bubbles) ஒன்றானது ! சவ்வுக் குமிழிகள் பதினொன்றாம் பரிமாணத்தில் கொந்தளிக்கும் போது அலைகள் எழுகின்றன !

     

     

    பெருவெடிப்பு மீளும் காலவெளித் தொடர் நிகழ்ச்சி

    இப்போது குமிழிப் பிரபஞ்சங்கள் இரண்டு ஒன்றை ஒன்று தொட்டால் என்ன நிகழும் என்று நினைக்கிறீர்கள் ? பிரிட்டனில் கேம்பிரிட்ஜ் விஞ்ஞானி நீல் துராக் (Neil Turok), அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக் கழகத்தின் விஞ்ஞானி பர்ட் ஓவ்ரட் (Burt Ovrut), & பிரின்ஸ்டன் பல்கலைக் கழகத்தின் விஞ்ஞானி பால் ஸ்டைன்ஹார்ட் (Paul Steinhardt) ஆகிய மூவரும் அவ்விதம் இரண்டு குமிழிப் பிரபஞ்சங்கள் ஒரு யுகத்தில் தொட்டன என்று நம்புகிறார்கள் ! அதன் விளைவென்ன ? மெய்யாக ஒரு மிகப் பெரும் வெடிப்பு நேர்ந்து ஓர் புதிய பிரபஞ்சம் << நமது பிரபஞ்சம் >> பிறந்ததாம் ! அப்படி அவர்கள் அறிவித்ததும் உலக விஞ்ஞானச் சமூகத்திற்கு ஓர் அதிர்ச்சி உண்டானது ! அந்த விளக்கவுரை சம்பிரதாய பெருவெடிப்பு நியதியின் முகத்தைத் திருப்பி விட்டது !

     

     

    அதாவது நாமறிந்த பெருவெடிப்பு மெய்யாக பிரபஞ்சத்தின் ஆரம்பகால முதற் தோற்றமில்லை. காலவெளிப் படைப்பு அதற்கும் முற்பட்டது; மேலும் பெருவெடிப்பு அடுத்தும் தொடராய் நிகழலாம் என்னும் புரட்சிகரமான ஓர் அதிசய பிரபஞ்சத் தோற்றங்களின் “காலவெளித் தொடர் நிகழ்ச்சியை” (Space-Time Chain Event) அவர்கள் எடுத்துக் கூறினார். பெருவெடிப்புகள் எப்போதும் நிகழலாம் ! இப்போது பிரபஞ்சத்தின் மூலத் தோற்றத்தை வைத்து நமக்கு எச்சரிக்கையாய்ப் பூதகரமான ஒரு பயங்கரக் கேள்வி எழுகிறது ! பிரபஞ்சக் குமிழிகள் ஒன்றை ஒன்றை மோதி நமது பிரபஞ்சம் தோன்றிய தென்றால் மீண்டும் அவ்விதம் மோதும் ஒரு வாய்ப்புள்ளதா ? பதினொன்று பரிமாணமுடைய அகில வெளியில் எந்த நிகழ்ச்சியும் ஏற்படலாம் !

     

     

    நான்கு வகுப்பு வடிவ நிலைகளில் பிரபஞ்ச அமைப்புகள்

    “பல்லரங்கப் பிரபஞ்சம்” அல்லது “மேநிலைப் பிரபஞ்சம்” (Multiverse, Multi-Domain Universes or Meta-Universe) என்பது நிகழக் கூடிய பல்வேறு இணைப் பிரபஞ்சங்கள் பற்றிய ஓர் சித்தாந்தப் பௌதிகக் கோட்பாடு (Hypothesis of Possible Multiple Universes). அதனுள் நாம் வாழும் பிரபஞ்சமும் அடங்கும். அது ஒரு பௌதிக விஞ்ஞான மெய்ப்பாடு

    ​ ​

    தான் ! பற்பல பிரபஞ்சங்களின் கட்டமைப்புகள் (Structures of the Multiverse), ஒவ்வொரு பிரபஞ்சத்தின் இயல்பான பண்பாடு (The Nature of Each Universe), பல்வேறு பிரபஞ்ச உட்பண்டங்களின் உறவுப்பாடு (The Relationship between the Constituent Universes), ஆகியவை குறிப்பிட்ட பிரபஞ்சத்தின் சித்தாந்த பௌதிகக் கோட்பாடைச் சார்தவை. “Multiverse” என்னும் சொல்லை ஆக்கியவர் அமெரிக்க வேதாந்தி வில்லியம் ஜேம்ஸ் (1848-1910). அவற்றை (Alternate Universes, parallel Universes, Quantum Universes, Parallel Worlds, Alternate Realities & Alternate Timelines) என்றெல்லாம் குறிப்பிடுகிறார்கள். 

     

    clipboard012.jpg

     

    பல்லரங்க பிரபஞ்சங்கள் வகுப்பு -1, வகுப்பு -2, வகுப்பு -3 & வகுப்பு -4 (Level I, Level II, Level III & Level IV) என்று நான்கு வகுப்புகளாகப் பிரிக்கப் பட்டுள்ளன. இந்தப் வகுப்பு முறைகளை ஆக்கியவர் மூவர் : 1. ஜியார்ஜ் எல்லிஸ் (George Ellis). 2. யு. கெர்ச்செனர் (U. Kirchner) & 3. டபிள்யு. ஆர். ஸ்டோஜர் (W.R. Stoeger). அப்பிரிவு முறைகளுக்கு “டெக்மார்க் வகுப்பியல்”  (Tegmark Classification) என்பது பெயர்.

    1. பல்லரங்க பிரபஞ்சங்கள் (Multi-Domain Universes)

    வகுப்பு : 1 (திறந்த வெளிப் பிரபஞ்சம்)

    யுகங்கள் கடந்த பிரபஞ்சத்தின் எல்லையிலா அகிலவெளி வீக்கம் பற்றி ஒரு பூர்வீக முன்னறிவிப்புச் சித்தாந்தம் இது. அதனில் ஆதிகால நிபந்தனைகள் எடுக்கப்பட்டு ஹப்பிள் தொலைநோக்கி காணமுடிந்த கொள்ளளவுகள் இருக்க வேண்டும்.

     

     

    (Level : 1 A Generic Prediction of Cosmic Inflation is an infinite Ergodic Universe which, being infinite, must contain Hubble Volumes, realizing all initial conditions)

    2. வேறுபட்ட பௌதிக நிலைத்துவம் கொண்ட பிரபஞ்சங்கள் (Universes with Different Physical Constants)

    வகுப்பு : 2 (ஆன்ரி லிண்டேயின் குமிழ் நியதி) (Andrei Linde’s Bubble Theory)

    கொந்தளிக்கும் அகிலவெளி வீக்கத்தில் வெப்ப அரங்கங்கள் பரிமாணவியல், நுண்துகள் இருப்புகளுடன் வேறுபட்ட, வளப்பூட்டும் பௌதிக நிலைப்பாடுகள் அடைவது.

    (Level : 2 In Chaotic Inflation other Thermalized Regions may have different Effective Physical Constants Dimensionality & Particle Content. Also it includes Wheeler’s Oscillating Universe Theory)

     

    Multiverses

     

    3. பல்வேறு பிரபஞ்சங்கள் (Multiverses)

    வகுப்பு : 3

    நுண்துகள் யந்திரவியலை விளக்கும் போது சமத் தோற்றம் கொண்ட ஆனால் மாறுப்பட்ட தன்மையுள்ள பல்வேறு பிரபஞ்சங்களைப் பற்றிக் கூறுகிறது. 2007 செப்டம்பரில் டேவிட் டாய்ட்ஸ்ட் (David Deutsch) பல்வேறு உலகங்களைப் பற்றி விளக்கமும் நிரூபணமும் அளித்தார்

    (Level : III An Interpretation of Quantum Mechanics that proposes of Multiple Universes which are identical but exist in possibly different States)

    4. முடிவான முழுத் தோற்றப் பிரபஞ்சங்கள் (Ensemble Theory of Tegmark – Ultimate Ensemble)

    வகுப்பு : 4 மற்ற கணித அரங்குகள் வெவ்வேறு அடிப்படைப் பௌதிகச் சமன்பாடுகளை உண்டாக்குகின்றன.

    (Level : IV Other Mathematical Structures give different fundamental Equations of Physics)

     

    எண்ணற்ற பிரபஞ்சங்களின் குமிழ்க் கோட்பாடு (Bubble Theory of Infinite Universes)

    வகுப்பு -2 இல் வரும் அகிலவெளி வீக்கத்தில் தோன்றும் பொருத்தமான குமிழ்ப் பிரபஞ்சங்களைப் பற்றி ஆன்ரி லிண்டே எடுத்து விளக்கினார். விஞ்ஞானிகள் பலர் ஒப்புக்கொண்ட கோட்பாடி இது. இந்த கோட்பாடு கூறுவது என்ன ? நுண்துகள் திரட்சி நுரையிலிருந்து (Quantum Foam) ஒரு “தாய்ப் பிரபஞ்சத்திலிருந்து” (Parent Universe) மற்ற பிரபஞ்சங்கள் உதித்தன என்பதே !

    “இணையான உலகங்கள்” என்னும் நூல் எழுதிய மிச்சியோ காக்கு

    ஜப்பானிய அகிலவியல் மேதை மிச்சியோ காக்கு (Parallel Worlds By : Michio Kaku) தான் 2004 இல் வெளியிட்ட கட்டுரையில் பின்வருமாறு கூறுகிறார்:

    நான் எழுதிய “இணையான உலகங்கள்” நூலில் காலவெளி அமைப்புகளை விளக்குவதற்குப் பதிலாக கடந்த பல ஆண்டுகளில் வளர்ந்த அகிலவியல் உளவுப் புரட்சிகளைக் குறிப்பாகக் காட்டுகிறேன். முதல் பாகத்தில் பிரபஞ்சத்தைப் பற்றியும், முற்போக்கான அகில வீக்கம் பற்றியும் கூறி முடிவில் பெருவெடிப்புடன் முடிகிறது. இரண்டாம் பாகத்தில் பல்லரங்கப் பிரபஞ்சங்கள் பற்றி எழுந்த கோட்பாடுகளை விளக்கி பரிமாண எண்ணிக்கை விரிவானது பற்றியும், உன்னத இழை நியதி பற்றியும் கூறுகிறேன். மூன்றாவது பாகத்தில் எப்படிக் கோடான கோடி ஆண்டுகளுக்குப் பிறகு பிரபஞ்சம் குளிர்மயமாகி முடிவடையும் என்பதை விளக்கம் செய்கிறேன்.

     

     

    (தொடரும்)

    *****************************

    Image Credits : Scientific American (May 2003)

    தகவல்:

    1. Astronomy’s Explore the Universe 8th Edition (2002) December 31, 2001

    2. National Geographic Magazine (1982) Frontiers of Science The Family of the Sun By: Bradford Smith Ph. D. Professor of Planetary Sciences, The University of Arizona.

    3. National Geographic Magazine (1975) Amazing Universe, The Family of Stars By: Herbert Friedman.

    4. Internet Article “Stellar Evolution”

    5. Majestic Universe By: Serge Brunier (1999)

    6. Neutron Stars & Pulsars -From the Internet Sources (December 2006)

    7. Parallel Universe – BBC Information (February 14, 2002)

    8. Scientific American “Parallel Universes” By Max Tegmark, Professor of Physics & Astronomy, University of Pennsylvania (May 2003)

    9. Parallel Worlds (The Science of Alternate Universes & Our Future in the Cosmos) By : Michio Kaku (2005)

    10. 50 Greatest Mysteries of the Universe – Astronomy Magazine (August 21, 2007)

    11.  http://www.space.com/25100-multiverse-cosmic-inflation-gravitational-waves.html  [March 18,  2014]

    12. http://thebottomline.as.ucsb.edu/2014/04/welcome-to-the-multiverse-discovery-of-gravitational-waves-sheds-new-light-on-nature-of-the-universe  [April 9, 2014]

    13.  http://www.dailygalaxy.com/my_weblog/2014/06/new-evidence-of-gravitational-waves-point-to-multiple-universes-video.html  [June 13, 2014]

     

    *******************************

    S. Jayabarathan (jayabarathans@gmail.com) June 14, 2014

    Attachments area

    Is Our Universe Part Of A Multiverse – Professor Alan H. Guth Lecture
    Share
  • என் பார்வையில் கண்ணதாசன்

    பி.தமிழ்முகில் நீலமேகம்

    Kannadasanபொதுவாக, திரையிசைப் பாடல்கள் காலத்தால் நிலைத்து நிற்கக் கூடியவை அல்ல. இன்று நாம் முணுமுணுக்கும் இக்காலத்துத் திரையிசைப் பாடல்கள், நாளை நம் நினைவில் நிற்குமா என்று கேட்டால், நிச்சயமாக இருக்க முடியாது என்று அடித்துச் சொல்லலாம். இன்றைய பாடல்கள் காளான்கள் போன்றவை. அவற்றிற்கான ஆயுட்காலம் மிகக் குறைவு. கருத்தாழம் மிக்க பாடல்களே காலமெலாம் நிலைத்து நிற்கும். காலத்தால் அழியாத அற்புதப் படைப்புகள் பலவற்றை நமக்குப் பெரும் பொக்கிஷங்களாகக் கொடுத்தவர் கவிஞர் கண்ணதாசன் என்பது நிதர்சனமான உண்மை.

    காதல் ஆயினும் சரி, தத்துவமாயினும் சரி, கவிஞரது கவிதை வரிகள் எல்லாமே சராசரி மனிதன் தனது வாழ்வியலோடு ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளும் வகையில் இருக்கின்றபடியால், கேட்பவர்களின் மனதில் சட்டென்று ஒட்டிக் கொள்கிறது.  காலம் பல கடந்தும், இன்றளவும் நம் மனதில் ரீங்கரித்துக் கொண்டே இருக்கின்றன அவரது பாடல்கள்.

    நிறப் பேதம் பார்த்து,  மனங்களை வருத்தும் மானுடர்கள் மத்தியில் வாழும் பெண்ணொருத்தி, தன் மனக்குமுறலைக் கண்ணனிடம் கொட்டுவதாகக் கவிஞர் எழுதியுள்ள  இந்தப் பாடலினுள் மாநிறம் அல்லது கருப்பு நிறத் தோல் கொண்ட  பெண்கள், தம்மையும் அச்சூழலில் பொருத்திப் பார்த்துக் கொள்ளுமளவுக்கு, மனத்துயரை அச்சூழலில் எவ்வளவு அழகாகத் தன் கவிதையில் வடித்திருக்கிறார் கவிஞர்!

    மனம் பார்க்க மறுப்போர் முன்
    படைத்தாய் கண்ணா!
    நிறம் பார்த்து வெறுப்போர் முன்
    கொடுத்தாய் கண்ணா!
    இனம் பார்த்து எனைச் சேர்க்க
    மறந்தாய் கண்ணா!

    மனித மனம் பச்சோந்தியைப் போன்றது. சந்தர்ப்பத்திற்கும் சூழ்நிலைக்கும் ஏற்றவாறு தன் நிலையை மாற்றிக் கொள்வது.எடுத்த முடிவில் நிலையாக நில்லாதது. உயர்ந்த இடத்தில் இருக்கும் அனைத்துமே உயர்வானவை என்றும், எளிமையானவை அனைத்தும் தாழ்வானவை என்னும் மாயையை உண்மை என்று நம்புவது மனித மனம்.

    உயர்ந்த இடத்தில் இருக்கும் போது
    உலகம் உன்னை மதிக்கும்
    உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால்
    நிழலும் கூட மிதிக்கும்.

    ஒரு மனிதனுக்கு அத்தியாவசியமானது நிம்மதியானஉறக்கம். மனதினுள் எத்துணை பெரிய பாரம் ஏறிக்கொண்டு, உறக்கம்தனைக் கண்களை அண்ட விடாது செய்தாலும், கவிஞரின் மெல்லிய பாடல்கள் மயிலிறகாய் வருடி, நித்திராதேவி நம் கண்களைத் தேடி ஓடிவரும்படி செய்துவிடும். அத்தகைய பேராற்றல் கொண்டவை கவிஞர் கண்ணதாசன் அவர்களின் பாடல்கள்.

    உதாரணத்திற்குச் சில பாடல்கள்…

    •பூஞ்சிட்டுக் கன்னங்கள் பொன்மணி தீபத்தில்
     பால் பொங்கல் பொங்குது பன்னீரிலே

    •மலர்ந்தும் மலராத பாதி மலர்
     போல வளரும் விழி வண்ணமே

    •தூக்கமுன் கண்களைத் தழுவட்டுமே
     அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே

    •கண்ணன் வருவான் கதை சொல்லுவான்
     வண்ண மலர் தொட்டில் கட்டி தாலாட்டுவான்

    •கண்ணே கலைமானே கன்னி மயில் என
     கண்டேன் உன்னை நானே

    போன்ற பாடல்கள் பச்சிளம் குழந்தைகள் முதல் வயோதிகப் பெரியவர்கள் வரை  தன்வயப்படுத்தி, நித்திரையை அவர்கள் கண்வயப்படுத்தும் என்பது அனுபவத்தில் கண்ட உண்மை.

    மனித வாழ்க்கையை நான்கே வரிகளில் கவிஞர் எவ்வளவு அழகாகவும் தெளிவாகவும் சொல்கிறார் பாருங்கள்.

    பிறந்தோம் என்பதே முகவுரையாம்
    பேசினோம்
    என்பதே தாய்மொழியாம்
    மறந்தோம்
    என்பதே நித்திரையாம்
    மரணம்
    என்பதே முடிவுரையாம்.

    உன்னதமான காதலைச் சொல்ல இதைவிடவும் வேறு வார்த்தைகள் இருக்கின்றனவோ?

    சொல்லென்றும் மொழியென்றும் பொருளென்றும் இல்லை
    சொல்லாத
    சொல்லுக்கு விலையேதும் இல்லை
    ஒன்றோடு
    ஒன்றாக உயிர் சேர்ந்த பின்னே
    உலகங்கள்
    நமையன்றி வேறேதும் இல்லை
    நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்
    நாளோடும்
    பொழுதோடும் உறவாட வேண்டும்

    கேட்கும் போதெல்லாம், நம்மையும் உணர்ச்சிவசப்படச்செய்து, கண்களில் நீரை வரவழைக்கும் வரிகள், தன்  கண்பட்டு விட்டதாலேயே தன் காதலனுக்குக் காயம் ஏற்பட்டுவிட்டதோ என்றெண்ணி, காதலி படும் பாட்டை உணர்வுப்பூர்வமாகச் சொல்லும் வரிகள். எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்!

    கண் பட்டதால் உந்தன் மேனியிலே
    புண்பட்டதோ
    அதை நானறியேன்
    என்
    கண்  பட்டதால் உந்தன் மேனியிலே
    புண்பட்டதோ
    அதை நானறியேன்.
    புண்பட்ட சேதியைக் கேட்டவுடன்
    இந்தப்
    பெண் பட்ட பாட்டை யாரறிவார்?

    சிரிப்பு ! – இது மனித இனத்திற்கு இறைவன் அளித்த சிறப்பு. குழந்தைகளின் சிரிப்பைக் காணக் காண இன்பம் கரைபுரளும். அதே சிரிப்பைக் குழந்தை குமரியானதும் சிரித்தால் சொல்வார்கள் ” பொண்ணு சிரிச்சா போச்சு, புகையிலை விரிஞ்சாப் போச்சு “என்று. விதியையும் விரட்டி அடிக்கும் மதியும் சக்தியும் சிரிப்பிற்கு உண்டு என்று சிரிப்பைப் பற்றிக் கவிஞர் சொல்கிறார்.

    குழந்தையிலே சிரிச்சது தான் இந்த சிரிப்பு
    அதைக்
    குமரிப் பொண்ணு சிரிக்கும் போது என்ன வெறுப்பு
    பொறந்ததுக்குப்
    பரிசு இந்த சிரிப்பு அல்லவா!
    இது
    பொண்ணுக்காக இறைவன் தந்த பரிசு அல்லவா!
    வேண்டும்
    மட்டும் குலுங்கிக் குலுங்கி நானும் சிரிப்பேன்
    அந்த
    விதியைக் கூட சிரிப்பினாலே விரட்டி அடிப்பேன்

    குடும்பம் என்ற அழகான கூட்டில் பறவைகளின் இனிமையான இசை வெள்ளம். கணவன், பிள்ளை இருவரையும் குழந்தைகளாகப் பாவித்து மனைவி பாடும் அழகானதோர் கீதம் கவிஞரின் கவிதை வெள்ளத்தில்.

    பாலூட்ட ஒரு பிள்ளை அழைக்கின்றது
    நான்
    படும் பாட்டை ஒரு பிள்ளை ரசிக்கின்றது
    எனக்காக
    இரு நெஞ்சம் துடிக்கின்றது – இதில்
    யார்
    கேட்டு என் பாட்டை முடிக்கின்றது.

    பள்ளி, கல்லூரிகளில் நிகழும் பிரிவு உபசார விழாக்களில் இந்தப் பாடல் ஒலிக்காமல் இருக்குமோ?

    பசுமை நிறைந்த நினைவுகளே
    பாடித்
    திரிந்த பறவைகளே”
    எந்த ஊரில் எந்த நாட்டில்
    என்று
    காண்போமோ?
    எந்த அழகை எந்த விழியில்
    கொண்டு
    செல்வோமோ?”

    இன்னும் எத்தனை எத்தனையோ….சொல்லிக் கொண்டே போகலாம்.

    நமது வாழ்வில் ஏதேனும் ஓர் சந்தர்ப்பத்தில் கவிஞரது பாடல்கள்  நிச்சயம் நம் நினைவுகளில் நிழலாடிச் சென்றிருக்கும். காதல், நட்பு, சகோதர பாசம், குடும்பம், குழந்தைகள், துயரம், சோகம் என்று ஏதேனும் ஓர் சூழலில் நம்மைக் காந்தமாய் கவர்ந்திழுக்கும்.

    நான் நிரந்தரமானவன் அழிவதில்லை
    எந்த
    நிலையிலும் எனக்கு மரணமில்லை”

    என்று  தீர்க்கதரிசியைப் போல் கவிஞர் அன்று சொன்னது எவ்வளவு உண்மை.காலத்தால், மக்களின் இரசனையில், கற்பனை, எண்ணங்கள், என்று அனைத்திலும் எத்துணை பெரிய மாற்றம் ஏற்பட்ட போதும், அவர் மறைந்து முப்பது ஆண்டுகளுக்கு மேலாகியும், இன்றளவும் நம்மிடையே தன்  பாடல்களினால் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார். இன்னும், காலம் பல கடந்தாலும், நிலையாக நம் மனங்களில், இனிய கவிதைகளாய் வாழப் போகிறவர் கவியரசர் கண்ணதாசன் அவர்கள்.

     

    Share
  • என் பார்வையில் கண்ணதாசன்

    -பாலகணேஷ்

    Kannadasanகண்ணதாசனை என் பார்வையில் எழுதுவது என்றதுமே பலத்த யோசனை சிந்தையை ஆட்டி வைத்தது. நண்பனாய், அண்ணனாய், ஆசானாய், ஞானியாய் பலப்பல முகம் காட்டி வாழ்வில் பங்குபெற்றவரான கண்ணதாசனின் எந்த முகத்தைச் சொல்வது நான்? சற்றே ஆழ்ந்து யோசித்தால் நான் கண்ணதாசனைக் கண்ணதாசனாகவே அதிகம் ரசித்திருக்கிறேன். அதாவது கண்ணனுக்கு அவர் தாசனாக இருந்த காரணத்தாலேயே எனக்கு அவரைப் பிடிக்கும்.

    பாரதியார் கண்ணனை அம்மாவாக, தோழியாக, காதலியாக, சேவகனாக இப்படிப் பலப்பல ரூபங்களில் கண்டு நெகிழ்ந்து கவிதைகளைப் பொழிந்தது போலக் கண்ணதாசனும் கண்ணனை நினைந்து நெகிழ்ந்து நெக்குருகித் தமிழ்த் திரையிசைக்கு அளித்த பாடல்கள் ஒவ்வொன்றும் முத்துக்கள்தான். ’கண்ணன் என்னும் மன்னன் பேரைச் சொல்லச் சொல்ல; கல்லும் முள்ளுமே பூவாய் மாறும்’ என்றால் மானிடனான கண்ணதாசன் மலர்ந்து கவிதை மழை பொழிந்ததில் என்ன வியப்பு?

    ’ராமு’ படப்பாடலில் சொல்கிறார்: ’தேடிநின்ற கண்களிலே கண்ணன் வந்தான் ; தீபம் ஒன்று கையில் கொண்டு கண்ணன் வந்தான்’ அப்படி வருகிற கண்ணன் எப்படியிருப்பான்? ’கேட்டவர்க்குக் கேட்டபடி கண்ணன் வந்தான்; கேள்வியிலே பதிலாகக் கண்ணன் வந்தான்’. யார் எந்த வடிவத்தில் பார்க்க விரும்பினாலும் அந்த வடிவில் கண்ணன் இருப்பானாம். அப்படி எதுக்குய்யா அவன் வரணும்?

    ’தர்மம் என்னும் தேரிலேறிக் கண்ணன் வந்தான்; தாளாத துயர் தீர்க்கக் கண்ணன் வந்தான்’ என்கிறார். தீராத துயரால் வருந்தி அழைப்பவர்க்கு விடிவெள்ளியாய்க் கண்ணன் வருவான், பிருந்தாவனம் அழைத்துச் செல்வான். அந்த இடம் எப்படிப்பட்டது? அதையும் சொல்கிறார் தாசன். முடவர்களை நடக்க வைக்கும், மூடர்களை அறிய வைக்கும், குருடர்களைக் காண வைக்கும், ஊமைகளைப் பேச வைக்கும்… கண்ணனின் வசிப்பிடமே அத்தனை மகிமை வாய்ந்ததெனில் கண்ணனை என் சொல்ல…?

    கடவுள் கண்ணன் அப்படி என்றால், கோபிகையருடன் ராஸலீலை செய்யும் காதலன் கண்ணனை எப்படிச் சொல்கிறார் தாசன்? ‘கண்ணன் என்னைக் கண்டு கொண்டான், கையிரண்டில் அள்ளிக் கொண்டான், பொன்னழகு மேனி என்றான், பூச்சரங்கள் சூடித் தந்தான்’ இப்படியெல்லாம் செய்து மயக்கிய கள்வன் ‘கண் திறந்து பார்த்தேன், கண்ணன் அங்கு இல்லை. கண்ணீர் பெருகியதே’ என்று புலம்பிக் கண்ணீர் வடிக்க வைத்துவிட்டு மாயாவியாக மறைந்து விடுகிறான் என்கிறார்.

    ’இப்படிச் செய்துவிட்டானே!’ என்று கண்ணன் மேல் கோபம் வருகிறதா என்ன…? அப்போதும்கூடக் ‘கண்ணன் முகம் கண்ட கண்கள் மன்னன் முகம் காண்பதில்லை, கண்ணனுக்குத் தந்த உள்ளம் இன்னொருவர் கொள்வதில்லை’ என்று கண்ணனையே எண்ணி உருகத்தான் முடிகிறது. முத்தாய்ப்பாகக் ’கண்ணன் வரும் நாளில் நான் இருப்பேனோ, காற்றில் மறைவேனோ’ என்றுவிட்டு ‘நாடி வரும் கண்ணன் கோலமணி மார்பில் நானே தவழ்ந்திருப்பேன்’ என்று முடிக்கிறார். இதில் காதல் பாவத்தை விட்டு அருள் புரியவரும் கண்ணனின் நெஞ்சில் எனக்கு ஓர் இடம் வேண்டும் என்று ஆன்மீக பாவத்திலும் கண்ணதாசன் துடிப்பை நம்மால் உணர முடியும்.

    கண்ணதாசன் இயற்றிய ‘கிருஷ்ண கானம்’ இசைத் தொகுப்பு மிகப்பிரபலமானது; கேட்பவரை உருக வைப்பது. அதில் ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப் போல் கண்ணனைத் தாலாட்டுப் பாடித் தூங்க வைப்பார். கோகுலத்தில் பசுக்களெல்லாம் அந்தக் கோபாலன் பேரைக் கேட்டாலே நூறுபடி பால் கறக்கின்றன என்று துவங்கிக் கண்ணன் பெருமைகளைப் பாடுவார். சகல உயிரினங்களையும மயக்கும் கண்ணனின் வேணுகானத்தைப் பொழியும் புல்லாங்குழலை, அதைத் தந்த மூங்கில்களையே புகழ்ந்து பாடச் சொல்லுவார் கண்ணதாசன். பாரதியாருக்குச் சற்றும் குறைவில்லாமல் இந்தத் தொகுப்பு முழுவதிலும் கண்ணனைப் பல பாவங்களில் பல கோணங்களில் வைத்துக் கவிஅடைமழை பொழிந்திருப்பார் கண்ணதாசன்.

    கண்ணனைக் கொண்டாடுதலின் உச்சமாகக் கண்ணன் நேரில் வந்தால் என்ன வரம் கேட்பது என்பதைச் சொல்கிறார். கண்ணதாசனின் வாழ்க்கை அனுபவங்கள் ஓருருக் கொண்டதுபோல் அது தொனிக்கிறது. ‘பாஞ்சாலி உன்னிடத்தில் சேலை கேட்டாள், அந்தப் பார்த்தனவன் உன்னிடத்தில் கீதை கேட்டான், நானிருக்கும் நிலையில் உன்னை என்ன கேட்பேன்? இன்னும் நன்மை செய்து துன்பம் வாங்கும் உள்ளம் கேட்பேன்!’’ இன்பத்தையே மனம் நாடும் இவ்வுலகில் நன்மை செய்து துன்பம் வாங்கும் உள்ளத்தைக் கேட்க அந்தக் கவிஞன் எத்தனை அனுபவங்களால் பக்குவப்பட்டிருக்க வேண்டும்?

    அந்த அனுபவங்களின் சாறை நமக்கு அளிக்கிறார் ’உள்ளத்திலே உள்ளதுதான் உலகம் கண்ணா… இதை உணர்ந்து கொண்டல் துன்பம் எல்லாம் விலகும் கண்ணா’ என்கிற இரண்டே வரிகளில். நம் உள்ளம் எத்தனை உயரமோ அத்தனை உயரம்தான் உலகில் நமக்குக் கிடைக்கும் ஏற்றமும் வாழ்வும்.

    இன்னும்… இன்னும்… என சொல்லிக் கொண்டே போனால் அதற்கு முடிவேயிராது. ஆக…கண்ணனை எல்லா நிலைகளிலும் பார்த்துப் பரவசித்து அவனுக்குத் தாசனாக இருக்கும் கண்ணதாசன், அந்த அனுபவங்களையும் அதனால் தனக்குக் கிடைத்த ஞானத்தையும் எந்தவிதச் சிரமமும் இன்றி நமக்கும் இனிய திரைப்படப் பாடல்களின்வழி கடத்தி விட்டிருக்கிறார். ஒவ்வொன்றையும் கேட்கும் போதெல்லாம் புதுப்புது நயங்கள் மனதில் தோன்றி கண்ணதாசனை வியக்கத்தான் வேண்டி இருக்கிறது. எனவே கண்ணனுக்குத் தாசனாகவே என் மனதில் சிம்மாசனமிட்டு கண்ணதாசன் வீற்றிருப்பதில் வியப்பென்ன…?

     

    Share
  • தந்தையர் தின விழா!

    -ரா.பார்த்தசாரதி

    Fathers-Day-Poster

    எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவிய  நாடு!
    அன்னையும் பிதாவும் முன்னெறி தெய்வம் என்ற நாடு!
    தாயைவிடச் சிறந்த கோவில் இல்லை!
    தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை!

    தாயிடம் அன்பும்,  தந்தையிடம் அறிவும்,
    அவர்களால் கல்விமானாய் உலகில் திகழவும்,
    பணம் ஒன்றினால் பாகுபடுத்தத் தெரிந்தவனாய்,
    ஏன் பாசத்தை மட்டும் காட்டத் தயங்குகின்றாய்!

    அன்று அவர்கள் கொடுத்த முகவரிதான்
    இன்று உன்னை அடையாளம் காட்டுகின்றதே!
    பழையதை மறந்து, புதியதில் என்றும் திளைக்காதே!
    வந்த வழியினையும், பாதையினையும் என்றும் மறக்காதே!

    தந்தையே  உன்  பிறப்பிற்குக் காரணம்
    தந்தையே உன் அறிவிற்கு ஆதாரம்!
    பணம் என்றும் எட்டிப் பார்க்கும்
    பாசம்  என்றும்  பக்கத்தில் நிற்கும்!

    வாழ்க்கை முழுதும் குடும்பத்தின்  தூணாய்,
    உன் ஆண்மைக்கும், அறிவுக்கும் தூண்டுகோலாய்,
    உலாவி வரும்  தந்தையே   இடிதாங்கி!
    ஏன் எனில் நல்லது கெட்டதெல்லாம் அவர்மேலே!

    தந்தைக்கும் தாய்க்கும்  ஊன்றுகோலாய்  இருந்திடு!
    அவர்களே கண்கண்ட தெய்வமென  நினைத்திடு!
    தரணியில் என்றும் சிறந்து விளங்கிடு!
    எல்லோர்க்கும் நல்லவனாய்  என்றும் திகழ்ந்திடு!

    Share
  • என் பார்வையில் கண்ணதாசன்

    –எஸ். கிருஷ்ணசாமி

    என் பார்வையில் கண்ணதாசன்

    Kannadasanநம் செந்தமிழ் நாட்டில் இருபதாம் நுற்றாண்டில் வாழ்ந்த இணையற்ற கவிஞர்களில் தமிழர்களின் நெஞ்சங்களில் நீங்கா இடம் பெற்றவர்கள் மூவர். அவர்கள் தான் மகாகவி பாரதியார், பாவேந்தர் பாரதிதாசன், கவியரசு கண்ணதாசன்.

    அந்த மூவரின் படைப்புக்களில் நான் அதிகமாக படித்தது கவியரசு கண்ணதாசன் படைப்புக்களைத்தான். என் பார்வையில் கவியரசு கண்ணதாசன் மிகப்பெரிய கவிஞராக காட்சியளிக்கிறார்.

    கவிஞர், பாடலாசிரியர், வசனகர்த்தா, படத்தயாரிப்பாளர், நடிகர், அரசியல்வாதி, ஆன்மீகப் பேச்சாளர், இலக்கியவாதி என்று பன்முகம் கொண்ட பண்பட்ட மனிதராக நான் கவியரசு கண்ணதாசனை பார்க்கிறேன்.

    குறுகிய காலத்தில் கண்ணதாசன் 5000க்கும் மேற்பட்ட திரை இசைப் பாடல்களையும், 4000க்கு மேற்பட்ட கவிதைகளையும் 60க்கும் மேற்பட்ட நூல்களையும் எழுதியுள்ளார். நோய் நாட்களைத் தவிர எஞ்சிய நாட்களிலெல்லாம் எழுதிக் கொண்டே இருந்திருந்தால் தான் இவ்வளவு படைப்புகள் சாத்தியமாகும். அவரின் எமுத்துப் பணியை நினைத்துப் பார்த்தால் பிரமிப்பாக உள்ளது.

    அவர் தொட்டெழுதாத துறைகளே இல்லை. காதலை, கன்னியரை, மதுவை, அரசியலை, நீதியை, நியாத்தை, ஆண்டவனை, சிலுவையில் மாண்டவனை. தான் துய்த்த இன்பங்களை, பட்ட துன்பங்களை, செய்த தவறுகளை- அத்தனை பேர்களையும், அத்தனை நிகழ்வுகளையும் பாடலாக, கவிதையாக, கட்டுரையாகப் பதிவு செய்த ஒரே கவிஞர் கவியரசு கண்ணதாசன் ஒருவர் மட்டுமே!

    அவர் எழுத்துக்கள் எல்லோராலும் போற்றப்படக் காரணம்; தன் அனுபவங்களையே வார்த்தைகளாக வழங்கிச் சென்றுள்ளார் அந்த மகாகவிஞன்!

    ஒருவர் மாண்புற நடந்தால் அவரை வானளாவப் புகழ்வதும் அவர் மாறிவிட்டால் உடனே தாக்குவதும் அவர் எழுதுகோலின் இயல்பான வேலையாகும்.

    மானிடரைப்பாடி அவர்
    மாறியதும் ஏசுவதென்
    வாடிக்கையான பதிகம்
    மலையளவு தூக்கி உடன்
    வலிக்கும் வரை தாக்குவதில்
    மனிதரில் நான் தெய்வமிருகம்
    என்கிறார் கவியரசு. அதுபோலவே மற்றவர்கள் தன்னைப் புகழ்ந்தாலும், இகழ்ந்தாலும் அதை சமமாகப் பார்ப்பது அவர் பழக்கம்.

    கவிஞன் யானோர் காலக் கணிதம்
    கருப்படு பொருளை உருப்பட வைப்பேன்
    இகழ்ந்தால் என்னுல் இறந்துவிடாது
    புகழ்ந்தால் என்மனம் புல்லரிக்காது
    என்று சாதரணமாக பாடிவிட்டு போகிறார்.  எனது பார்வையில் கண்ணதாசன் எதையும் தாங்கும் இதயம் படைத்தவராக தெரிகிறார்.

    கண்ணதாசனின் கவிதைகள் இதுவரை ஏழு தொகுதிகளாக வெளிவந்துள்ளது. அதைப்போலவே அவரின்திரை இசைப்படால்கள் பல தொகுதிகள் வெளிவந்துள்ளன. நான் அவரின் படைப்புகள் அத்தனையும் படித்துள்ளேன். அதன் தாக்கத்தில் சென்ற ஆண்டு “கவியரசர் கண்ணதாசனின் கவிதைச் சிந்தனைகள்” என்ற ஒரு நுலை எழுதி வெளியிட்டுள்ளேன். அது அரசால் ஏற்கப்பட்டு அனைத்து நுலகங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    அவரின் எழுத்துக்களை கவனமாகக் கவனித்துப் படித்தால் நம் வாழ்வின் பல நிகழ்வுகள் அதில் வெளிப்படும். “தனி மனித வாழ்வில் எங்கு ஒரு சம்பவம் சடந்தாலும் அங்கு எனது பாடல் ஒன்று ஒலிக்கும்” என்று கண்ணதாசனே ஏழுதியிருக்கிறார்.

    என்வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வையும் எண்ணிப்பார்க்கிறேன். கவிஞரின் கூற்று நுற்றுக்கு நூறு என் வாழ்வில் நடந்துள்ளதை அறிகிறேன்.
    என் கல்லுரிக் காலங்களில் நான் ரசித்துக் காதலித்த நாட்களில் என் கூடவே வந்தது கவிஞரின் பாடல்கள்.

    காதலித்தவளைக் காணத் தவித்த நேரங்களிலெல்லாம் என் வாய் தானாக முணுமுணுத்த பாடல்:
    கண்கள் இரண்டும் என்று
    உன்னைக் கண்டு பேசுமோ!
    காலம் இனிமேல் நம்மை
    ஒன்றாய்க் கொண்டு சேர்க்குமோ!

    காதலில் வெற்றிடைந்த நான் மணநாளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். அப்பொழுது காற்றில் மிதந்து வருகிறது கண்ணதாசன் பாடல்:
    கல்யாண நாள் பார்க்கச் சொல்லலாமா…..நாம்
    கையோடு கை சேர்த்துக் கொள்ளலாமா!
    செல்லாத இடம் நோக்கி செல்லலாமா?

    ஒவ்வொரு தருணத்திலும் கவிஞரின் பாடல் ஒலிப்பதை உளமாற உணர்கிறேன்.

    கவியரசர் வெள்ளை உள்ளம் படைத்தவர் தன் வாழ்நாளில் யாருக்கும் எந்தக் கெடுதலும் செய்யாதவர். அவரைத் தான் பலபேர் பல துன்பங்களுக்கு ஆளாக்கியுள்ளனர்.

    தன் மனதில் பட்டதை துணிச்சலாக எழுதும் தன்மை பாரதிக்கு பிறகு கண்ணதாசனிடம் காண்கிறேன்.
    கோப்பையின் மதுவே உன்னைக்
    குடித்து துடித்தாலே நான்
    காப்பியக் கவிஞனானேன்

    கிண்ணம் உடைந்தால் … என்
    கிறுக்கும் முடிந்து விடும்

    ஒர் கையிலே மதுவும் ஒர் கையிலே மங்கையரும்
    சேர்ந்திருக்கும் வேளையிலே ஜீவன் பிரிந்தால் தான்
    நான் வாழ்ந்த வாழ்க்கை நலமாகும் இல்லையெனில்
    ஏன் வாழ்ந்தாய் என்றே இறைவன் என்னைக் கேட்பான்

    இப்படி தன்னைப் பற்றி வெட்ட வெளிச்சமாக எழுத எந்த கவிஞனால் முடியும்? தன்வாழ்வில் நடந்தவைகளை ஒளிவு மறைவின்றி எழுதிய ஒரே கவிஞன் என்னைப் பொருத்த வரையில் கவியரசு கண்ணதாசன் மட்டுமே!

    மதுவிலும் மங்கையரிலும் திளைத்த போதும் தான் ஒரு மாபெரும் கவிஞன் என்பதை தன் எழுத்தில் நிரூபித்தவர் கவிஞர் கண்ணதாசன்.

    தற்காலத்தில் ஒரு திரைப்படத்தின் பாடல் வெளிவந்தால், அடுத்த படம் வந்ததும் இப்பாடல் மக்களிடமிருந்து மறைந்து விடுகிறது. ஆனால் கண்ணதாசனின் பாடல்கள் காலங்கடந்தும் மக்களால் உச்சரிக்கப்பட்டே வருகின்றன.

    அவரின் கவிதைகள், காலத்தின் சாத்திரங்கள்; அவரின் நான்காயிரம் கவிதைகள் ஏழு தொகுதிகளாக வெளிவந்துள்ளன. ஏழு தொகுதிகளையும் படித்த நான் எல்லாக் கவிதைகளுக்கு முத்தாய்ப்புக் கவிதையாக போற்றுவது கண்ணதாசன் எழுதிய:
    சுடுகாட்டு எலும்புகளை
    சோதித்து பார்த்ததிலே
    வடநாட் டெலும்பென்று
    வந்த எலும் பில்லையடி!
    தென்னாட் டெலும் பென்று
    தெரிந்த எலும் பில்லையடி
    எந்நாட் டெலும் பென்றும்
    எழுதிவைக்க வில்லையடி
    ஒரு நாட்டு மக்களுக்குள்
    ஓராயிரம் பிரிவை
    எரியூட்ட வில்லையெனில்
    எந்நாளும் துன்பமடி
    என்ற கவிதையைத்தான். இந்தக் கவிதையை இந்திய மொழிகள் அனைத்திலும் மொழிபெயர்த்து ஒவ்வொரு இந்தியனின் இல்லத்திலும் அவன் உள்ளத்திலும் மாட்டி வைத்தால் போதும்! இனச் சண்டை சாதிச் சண்டை என்றும் வராது!

    இனவேறுபாடுகளைக் களையப்பாடிய கவியரசர் மதநல்லிணக்கத்தை போற்றும் வகையில் “அர்த்தமுள்ள இந்து மதம்” “ஏசு காவியம்” போன்ற நுல்களையும் படைத்துள்ளார். இஸ்லாமியர்களின் வேத நுலான திருக்குரனை தமிழ் காவியமாக மொழி பெயர்க்க விரும்பி குரானின் முதல் வசனத்தை “திறப்பு” என்ற பெயரில் கவிதையாக எழுதினார். சிலரின் தலையீட்டால் அது அப்படியே நின்று போய்விட்டது.

    கண்ணதாசன் கவிதை பாடல் மட்டுமின்றி திரைப்பட வசனகர்த்தாவாவும் திறம்பட பணியாற்றி உள்ளார் பல படங்களுக்கு அவர் வசனம் எழுதியுள்ளார். அதில் நான் ரசித்துக் கேட்ட வசனம் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த “நாடோடி மன்னன்” என்ற படத்துக்கு கவிஞர் எழுதிய கீழ்க்கண்ட வசனம். இதில் தமிழ் எவ்வளவு எளிமையாகவும், எதார்தமாகவும் கவிஞரால் கையாளப் பட்டுள்ளது என்று பாருங்கள்.

    அப்படத்தில் நடிகை பானுமதி ஏற்ற பாத்திரம் மதனா என்ற பெயருடையது. மதனா இறந்து விடுகிறாள். வீராங்கன் (எம்.ஜி.ஆர்) அழுது துடிப்பதைக் கண்ட மதனாவின் தந்தை “அழாதே! வீராங்கா” என்பார் அதற்கு வீராங்கன்,
    “இன்பம் வந்த போது சிரிக்கத்தான் விடவில்லை
    அழக்கூடவா விடக்கூடாது” என்பார்.
    அதற்கு மதனாவின் தந்தை பதில் கூறுவதாக வரும் வசனம்
    “இருளைப் போக்கும் விளக்குக்கு …. தன்
    நிழலைப் போக்கும் சக்தி இல்லை என்பார்.
    உடனே எம்.ஜி.ஆர். “விரலை அறுத்து விட்டா வீணை மீட்டுவது” என்று சொல்வார்.
    அது கேட்ட மதனாவின் தந்தை,
    “உலகில் சாதிக்கப்பட்ட சாதனைகள்  எல்லாம்
    பாதிக்கப்பட்டவர்கள் செய்தது வீராங்கா”
    என்று சொல்வார்.

    இப்படத்தில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நாடோடியாகவும் மன்னாகவும் இரட்டை வேடத்தில் நடித்திருப்பார். இருவரும் உரையாடும் ஒரு காட்சி. இதில் கவியராசரின் அற்புதமான அறிவுப்பூர்வமான வசனத்தைப் பாருங்கள்.

    மன்னன்:    எதற்காக புராட்சி? யாரை எதிர்த்து புராட்சி?
    நாடோடி: உங்கள் ஆட்சியை எதிர்த்து, சர்வாதிகாரமுறையை ஒழிப்பதற்கு!
    மன்னன்:    அப்படியானால் என்னை ஒழித்து விடப் போகிறீர்களா?
    மக்களின் ஒருவர் தானே மன்னன். ஏன் நானே ஆட்சி செய்யக் கூடாதா?
    நாடோடி:    மக்களில் ஒருவர்தான் நீங்கள், ஆனால் மக்களின் நிலையறியாதவர். ஏழைகள் இந்த நாட்டை ஆள வேண்டும் என்கிறோம்!
    மன்னன்:    அதெப்படி முடியும் விவசாயிக்கு உழத்தெரியும், வியாபாரிக்கு தொழில் தெரியும். மன்னனுக்குத் தானே ஆளத்தெரியும்!
    நாடோடி:    அப்படித்தான் மக்கள் இதுவரை நம்பி வந்தார்கள் ஆனால் விதிக்கப்படும் கொடிய வரிகளும், கொடுக்கப்படும் சவுக்கடிகளும், மன்னர்களாகிய நீங்கள் வாழத்தெரிந்தவர்கள் தானே தவிர, ஆளத் தெரிந்தவர்கள் அல்ல என்பதை நிரூபித்து விட்டன. பாத்திரம் நிறைய பாலைக் கண்டு பழகிய உங்களுக்கு சாக்கடை நடுவே வாழும் மக்களின் நிலை புரியாதென்றால் ஆச்சரியப்படுவதற்கில்லை. இரண்டாயிரம் ஆடைகளில் எதை அணிவது என்று புரியாமல் திண்டாடும் நீங்கள், ஏதாவது ஒரு ஆடையிருந்தால் மானத்தை மறைக்கலாமே என்று ஏங்கும் ஏழைகள் பற்றி எப்படி அறிய முடியும்? இங்கே தாதியர்கள் பட்டு விரிக்கிறார்கள் நீங்கள் நடந்து போகிறீர்கள். அங்கே காலில் குத்திய முள்ளில் பாதியை ஒடித்து எரிந்து விட்டு கடந்து போய்க் கொண்டிருக்கிறார்கள், ஏழை மக்கள்!

    என்ன அருமையான வசனம்! இதில் எங்காவது சினிமாத்தனம் தெரிகிறதா? இயல்பான நடை அது தான் கண்ணதாசன்.

    இன்னொரு படம் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடிகையர் திலகம் சாவித்திரி நடித்த மகாதேவி. அதில் வில்லன் பேசும் ஒரு வசனம்.
    “வசுந்தரா நாளை நீ எனக்கு இணங்க வேண்டும்
    இல்லையேல் உன் குழந்தையைக் கொன்று விடுவேன்”;

    அதே படத்தில் வேறொரு காட்சியில் கவிஞர் வசனம் எழுதுகிறார் இப்படி:
    “பித்துப் பிடித்தவர்களுக்கு மற்ற பேச்சு
    பிதற்றலாகவே இருக்கும்”

    “ ஆத்திரமே நீதிபதியாகிவிட்டால்
    அறிவுக்கு அங்கே வேலையில்லை”

    “இந்தக் காதல் ஒரு பாதி இல்லை சரிபாதி”

    “கண்ணீரில் சட்டம் கரைந்து விட்டால்
    நீதி சுடுகாடு போக வேண்டியது தான்”
    வசனத்தில் தான் என்ன ஒரு ஒட்டம்! என்ன ஒரு தெளிவு. கவியரசாரின் வசனத்திற்காகவே மகாதேவியை பலமுறை பார்த்தேன்.

    “சிவகங்கைச் சீமை” கவிஞரின் சொந்தப்படம். மற்ற படங்களுக்கு சிறப்பாக வசனம் எழுதிய கவிஞர் தன் சொந்தப் படத்துக்கு தன்திறமை முழுவதையும் காட்டி எழுதியுள்ளார் பாருங்கள்.
    ஒரு பெண் பாடுகிறாள்:
    இமையும் விழியும் எதிரானால்
    இயற்கை சிரிக்காதோ!
    தாயும் சேயும் பகையானால்
    தாரணி நகைக்காதோ!

    இதற்கு அப்பெண்ணின் கணவர் என்ன சொல்வான்? கவியரசனின் வசனம் வாள்வீசுகிறது பாருங்கள்.
    நகைக்கட்டும் நன்றாக நகைக்கட்டும் நீயும் சேர்ந்து
    நகைத்து விடு. வலுவுள்ளவன் வாழுகிறான். வாழத்
    தெரியாதவன் வறண்டு போன தத்துவங்களின் பிரதிநிதி.
    சாவைக் கண்டு சிரிக்கப் பழகு. உன் சஞ்சலம் மறைந்து விடும்.
    மண்டை ஓடுகளின் மேலே நடந்து மண்டலத்தை
    ஆண்டவர் பலர். தன் தம்பியின் தலைமீது நடந்து
    தரணியை ஆளாப்போகிறான் உன் கணவன்”
    கவியரசரின் வசனங்களுக்காகவே படம் வெற்றி பெற்றது.

    திரைத்துறை மட்டும் அல்லாமல் பத்திரிக்கைத் துறையிலும் வெற்றிக் கொடி நாட்டியவர் கண்ணதாசன். சண்டமாருதம், திருமகள், தாய்நாடு, திரைஒலி, கண்ணதாசன், தென்றல், தென்றல்திரை, அணிகலன், என்று பல்வேறு இதழ்களுக்கு ஆசிரியாராக இருந்து பத்திரிக்கையை திறம்பட நடத்தியுள்ளார் கண்ணதாசன்.

    தான் நடத்திய “கண்ணதாசன்” என்ற பத்திரிக்கையில் கவிதைப் போட்டி நடத்தி பல இளம் கலைஞர்களை, கண்ணதாசன் உருவாக்கியுள்ளார். ஈற்றடி கொடுத்து வெண்பா எழுதும் போட்டி அக்காலத்தில் அனைவராருலும் வரவேற்கப்பட்டது.

    காலத்தை வென்ற கவிஞராக வழ்ந்த கண்ணதாசன் அரசியலில் இறங்கி தன் பொன்னான நேரங்களை வீணடித்துள்ளார். அரசியலில் பேசும் பொய் பித்தலாட்டம் கவிஞருக்கு பழக்கமில்லாத ஒன்று. 1962 ஏப்ரால் 9 நாள் கண்ணதாசன் தான் சார்ந்திருந்த திராவிட முன்னேற்ற கழகத்தை விட்டு வெளியேறினார்.

    அரசியலை விட்ட பிறகு அவரின் எழுத்து மேலும் மேலும் கூர்மையானது. அன்மீகத்தில் இறங்கி அற்புதாமான பல நூல்களைப் படைத்தார்.

    கம்பனைப் போல் தானும் ஒரு பெரிய காவியம் படைக்க வேண்டும் என்பதே கவிஞரின் கடைசி ஆசை. அந்த ஆசை நிறைவேறுவதற்குள் காலன் அவசரப்பட்டு கவிஞரின் உயிரைப் பறித்து விட்டான்.

    சிறு கூடல் பட்டியில் பிறந்த  அம்மகாகவிஞன் சிகாகோவில் மறைந்து கண்ணணிடம் சென்றுவிட்டார்.

    Share
  • என் பார்வையில் கண்ணதாசன் – சத்தியமணி

    முன்னுரை

    ஓராயிரம் பார்வையிலே என் பார்வையை நீயறிவாய்  , என் பார்வையில் உன்வடிவம்  ஓர் மாபெரும் கவியரங்கம். முத்தய்யா, உன்னை யொன்று கேட்பேன் உண்மை சொல்ல வேண்டும்  என்னைக் கட்டுரை  எழுதச் சொன்னால் ஒரு நாள்  போதுமா ஒரு மாதம் தான் போதுமா? எத்தனைப் படைப்புகள் …அப்பப்பா ! சின்ன கண்ணன் புன்னகையில் என்னத்தான் ரகசியமோ ? தட்டு தடுமாறும் எனைப் பார்த்து கேட்கிறீர் மயக்கமென்ன இன்னும் மெளனமென்ன என்று கேளிக்கையுடன்.? ஆயிரம் மலர்களே மலருங்கள் ஆயிரம் வார்த்தைகள் பகிருங்கள் கவியரசே என்றே தொடர்கிறேன்.  கவியரசே எங்கிருந்தாலும் உன்னை நான் அறிவேன், உன்னை என்னை அல்லால் வேறு யார் அறிவார் ?

    புகழுரை

    வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில் என்று வாழவில்லை நீ.  எந்தஊர் என்றவனே என்று கேட்பவர் முன் இருந்தவூரைப் பெருமையுற செய்தவன் நீ. தமிழகம் பிறந்தாலும் உலகம் பிறந்தது எனக்காக …ஓடும் நதிகளும் எனக்காக என்று உரிமையாய் பாடியவன் நீ ? கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா கவியென்றால் கவியரசுன்றன் வரியாகுமா எனக் காட்டியவன் நீ? புவியரசு தான் விதிக்குமா! கவியரசின் வரிகளும் வாடிக்கையாய் கேளிக்கைவரிகள் விதிக்குமய்யா! மெல்லிசை மன்னரின் மெட்டுகளும் உங்களின் வரிகளின் சொட்டுகளும்  அற்புத அலை வரிசைகளை செவிகளில் நுழைத்தன ! அனுபவம் புதுமை என்று பல்லவி பாடிய பின் விஸ்வநாதன் வேலை வேண்டும் என்றும் ஆடினாய். பளிங்கினால் ஒரு மாளிகையும் அமைத்து அதன் மஞ்சத்திலிருந்து  எல்லோரது   நெஞ்சத்தில் அமர்ந்தவன் நீயல்லவோ ? கருமை நிறக் கண்ணா !

    காற்றுக்கென்ன வேலி? கடலுக்கென்ன மூடி? கங்கை வெள்ளம் சங்குக்குள்ளே அடங்கிவிடாது போன்றது உங்கள் கவி பெருக்கு! கற்பனை  முறுக்கு!!. பல்லவியிலிருந்து சரணம் வரை அருவி போல் தொடராய் கவிதை வரும். இந்தத் திறன் இப்போது எவருக்கு இருக்கிறது ?   மலர்ந்தும் மலராத பாதி மலரானப் பாச மலராகட்டும் கண்ணே கலைமானே என்ற வாச மலராகட்டும் காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே என்ற தாலாட்டாகட்டும் எதிலும் உங்களின் கை வண்ணம். இந்த கை வண்ணம் அங்கே கண்டேன் மை வண்ணம் இங்கே கண்டேன் என்று உங்களின் கவி தொகுப்பினில் எத்தனை ஆளுமைகள் ?  உண்மையில் பாடல் வந்ததும் தாளம் வந்ததா இல்லை தாளம் வந்ததும் பாடல் வந்ததா,  சொல்லுங்கள் பார்க்கலாம்? எனக்கு மட்டும் எனக்கு மட்டும் ரகசியம் சொல்வாய்,அந்த ரகசியத்தை ஒருவருக்கும் சொல்லிட மாட்டேன்.

    எனக்கு மட்டும் எனக்கு மட்டும் சொந்தம் அல்லவா? நம் இருவருக்கும் இயற்கை தந்த பந்தம் அல்லவா?.வயற்காடாகட்டும் ஏரிகரையாகட்டும் கல்லூரி வளாகமாகட்டும் அயல்நாட்டு சங்கமாகட்டும் உம் பாட்டையே பாட வைத்தது யார்?

    சிறப்புரை

    என்னைப் போன்ற பூஜ்ஜியத்துக்குள், ஒரு ராஜ்ஜியம் அமைத்தவன் நீ.  புரியாமல் நின்றவன் இவன்.

    அத்தனையும்   முத்தமிழ் காவியமோ ஆன்றத் தமிழ் ஓவியமோ ? கோப்பையில் உன் குடியிருப்பாகலாம் ஒரு கோலமயில் உன் துணையாகலாம் வாசிக்கும் எங்களுக்கு அத்தனையும்  கள் போதை அமுதம் தான்.

    கண்ணிழந்த பிள்ளைக்கு தெய்வம் தந்த தரிசனம் போல் தமிழ் மக்களுக்கு வாய்த்தது உங்களின் பாடல்கள்.   எளிமையாகவும் இனிமையாகவும் படிக்காத பாமர மக்களாகட்டும் ஆராய்ச்சி செய்யும் முனைவராகட்டும் அனைவருக்கும் உம் கவிதை தேனீர் விருந்து.  எப்படி ?  பார்த்தேன் ரசித்தேன் பக்கங்களை இசைத்தேன். பாட்டு பாடவா  பார்த்து பேசவா என்று தமிழை அழைத்ததால் என்னவோ?  அவளும் ஜல் ஜல் யெனும் சலங்கையொலி கூட்டி நடனமாடினாள் உங்கள் முன்.

    அறிவுரை

    புத்தியுள்ள மனிதனெல்லாம் வெற்றி காண்பதில்லை வெற்றி பெற்ற மனிதனெல்லாம் புத்திசாலி யில்லை என்பதில் உன் போராட்ட வாழ்க்கையை அறிய முடிகிறது. வந்து பிறந்துவிட்டேன்  ஆனால் வாழத் தெரியவில்லை என்பதில் காயங்கள் தெரிகிறது. எங்கே நிம்மதி எங்கே நிம்மதி என்று வனவாசத்தில் வரித்த போது சிலர் சிரிப்பார் சிலர் அழுவார் என்றே மது போதையில் அடிமையானாய்.  போயும் போயும் மனிதனுக்கிந்த புத்தியை கொடுத்தானே என்று ரசிகர்கள் அழுத போது மயக்கம் எனது தாயகம் மெளனம் எனது தாய் மொழி என்று ஆறுதல் அளித்தாய் . உங்கள் சொத்துகளை கபளீகரம் செய்த தொண்டர்களுக்கும்  யாரைத் தான் நம்புவதோ என்று குட்டு வைத்தாய்.  சோதனை மேல் சோதனை போதுமடா சாமி என்று நிலைகுலைந்தாய். உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன் வகுத்ததல்லவா ? யாரை நம்பி நான் பிறந்தேன் என்ற எழுச்சியுடன் நிமிர்ந்தாய்.  என்னதான் நடக்கும் நடக்கட்டுமே என்று சவாலை சமாளித்தாய். நம்பினோர் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு , உன்னை யறிந்தால் நீ உன்னை யறிந்தால் வரிகளும்  படிப்பில்லாத மக்களுக்கும் நம்பிக்கை கொடுத்தது.உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்து பார்த்து நிம்மதி நாடு என்பது  தாழ்ந்த மனப்பாண்மை நோயாளிகளுக்கும் ஊக்க மருந்து , ஆறுதல் அரவணைப்பு. செல்வத்தை சொல்லும் போது காசே தான் கடவுளடா

    என்றாய். பால் தரு பசுவுக்கு “இணங்காதோர் மனம் கூட இணங்கும் (கருணை) ,

    நீ எதிர் வந்தால் எதிர்காலம் துலங்கும் (நம்பிக்கை), வணங்காதோர் சிரம் உன்னை வணங்கும் (சிறப்பு), உன்னை வலம் வந்தால் நலம் எல்லாம் விளங்கும் (பயன்) என்றாயே. தற்கால  அரசாங்கத்திற்கு கைக்குக் கைமாறும் பணமே – உன்னைக் கைப்பற்ற நினைக்குது மனமே, வரவு எட்டணா செலவு பத்தணா இக்கால நிலைக்கு ஏகப் பொருத்தம். அளவுக்கு மேலே பணம் வைத்திருந்தால் அவனும் திருடனும் ஒன்றாகும் என்பதும் ஒரு ஏவுகணை தான்.”மலை போலே வரும் சோதனை யாவும்

    பனி போல் நீங்கி விடும்,நம்மை வாழவிடாதவர் வந்து நம் வாசலில் வணங்கிட வைத்து விடும்..,கூட இருந்தே குழி பறிச்சாலும் கொடுத்தது காத்து நிக்கும்” ஆகா அற்புதம்.

    இல்லறவுரை / காதல் உரை

    ‘நான் கவிஞனும் இல்லை ,நல்ல ரசிகனும் இல்லை,காதலென்னும் ஆசையில்லா பொம்மையும் இல்லை”  வல்லவன் இப்படி சொல்லலாமா ? பாலிருக்கும் பழமிருக்கும் பசியெடுக்காது உங்களின் பாட்டை கேட்டால். சிட்டு குருவி முத்தங் கொடுத்த இளமை காதலும் உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில்  உதிரம் கொட்டுதடி என்ற முதிர்ந்த காதலும்  திரைப் பாடல்களாய் யார் தரப் போகிறார்கள்? மலர் போன்ற இதழ் இன்று பனிகண்டு துடிக்கும் என்ற வரிகளில் காமம் தெரிக்கிறது. ஆபாசம் தெரியவில்லை. ” சுக்கு மிளகு தட்டி சூப்பு வைச்சு”    என்றால் இன்று பாரத விருது !  அடங்கா மனைவி அடிமை புருஷன் குடும்பதுக்காகாது என்பதில் மின்னல். மனைவிக்கு வளர்ந்த கலை மறந்து விட்டாள் …..குடும்பக் கலை போதுமென்று … – அதில் கூட இந்தக் கலைகள் வேறு ஏனடா கண்ணா? என்ற அறவுரை  வழங்கினாய்.  திருமண அர்த்ததிற்கு “

    சொல்லென்றும் மொழியென்றும் பொருளென்றும் இல்லை பொருளென்றும் இல்லை

    சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை விலையேதும் இல்லை – (சண்டையே வராது பாருங்க) ஒன்றோடு ஒன்றாக உயிர் சேர்ந்த பின்னே உயிர் சேர்ந்த பின்னே உலகங்கள் நமையன்றி வேறேதும் இல்லை வேறேதும் இல்லை”. நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்  என்பதை உணர்ந்தார் போல் உன் கஜானாவும் எனது என்ற நிலையின்று.  காதலின் அர்த்தத்திற்கு  “பொன்னை விரும்பும் பூமியிலே,என்னை விரும்பும் ஓருயிரே,புதையல் தேடி அலையும் உலகில் இதயம் தேடும் என்னுயிரே” என்றாய். காதல் சிறகை காற்றினில் விரித்து பறந்தாய். என்னதான் ரகசியமோ இதயத்திலே, நினைத்தால் எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே என்றும் மயங்கினாய். “நடமாடும் மேகம் நவநாகரீகம் … நடமாடும் செல்வம் பணிவான தெய்வம் பழங்கால சின்னம் உயிராக மின்னும்”  என்று கன்னிகளின் பண்பைக் கூறினாய். பெண்மையை போற்றும் முகமாக ” ஈன்ற தாயை நான் கண்டதில்லை எனது தெய்வம் வேறெங்கும் இல்லை

    ”  என்றாய்.  ஊடலைச் சொல்லி “கூடல் கொள்ள மன்னன் உள்ளம் அருகே வந்தது,என்னடி விளையாட்டு என்று சொன்னவன் மொழி கேட்டு,ஆசையில் விழுந்தேன் அங்கே,காலையில் கனவுகள் எங்கே” உறவாக்கினாய்.

    “மலராத பெண்மை மலரும், முன்பு தெரியாத உண்மை தெரியும்” என்றும் உசுப்பினாய். “ஆசை கொஞ்சம் நாணம் கொஞ்சம் பின்னிப் பார்ப்பதென்ன

    அருகில் நடந்து மடியில் விழுந்து ஆடக் கேட்பதென்ன” என்று பரிமளித்தாய்.

    கற்புக்கு  ” தெய்வத்தின் மார்பில் சூடிய மாலை,தெருவினிலே விழலாமா

    ,வேறோர் கை தொடலாமா,ஒரு கொடியில் ஒரு முறை தான் மலரும் மலரல்லவா,ஒரு மனதில் ஒரு முறை தான் வளரும் உறவல்லவா” என்ற வர்ணித்தாய். குழந்தைக்கு ‘வாழாத மனிதரையும் வாழ வைக்கும் சேயல்லவோ, பேசாத தெய்வத்தையும் பேச வைக்கும் தாயல்லவோ’ என்றாயே பார்க்கலாம்.

    பகுத்தறிவு உரை

    அண்ணன் என்னடா என்ற பல்லவியில் குடும்ப அரசியலை கலக்கியவர் நீங்கள். அராஜகம் செய்ய வடக்கே முளைத்தவரை ராணி மகா ராணி யென்று பாடி,  கவியரசை புவியரசு வெற்றி கண்டதுண்டா என்று வரிகள் விட்டதை மூன்றாம் வகுப்பில் ரசித்தவன் நான். அது தான் நான் கவி யெழுத வித்திட்டதும். இன்றும் தில்லி ராஜபேட்டையில் நிமிர்ந்து நடக்க  வைக்கிறது செந்தமிழ் கவிதைகளை இயற்றி கொண்டு!புதியதல்லவே தீண்டாமை யென்பது புதுமையல்லவே அதை நீயும் சொன்னது  சமூகப் பிரச்சனைக்கு பகிரங்க கண்டனம்.இளம் பகுத்தறிவில் கடவுள் ஏன் கல்லானான் என்றும் இறைவன் இருக்கிறானா என்றும் எழுதிய வரிகள்,  முதிர்வில் இறைவன் வருவான், கடவுள் ஒருநாள் .. தனியே வருவான்,  இருக்கும் இடத்தைவிட்டு என்றும் பல்லவிகள் சரணங்களோடு உதயமாயின. ஆள்பவர்களின் அடிபணிவாயாயின் உனக்கு கவிபேரரசு,கவிமாபேரரசு எல்லாம் கிடைத்திருக்கும். “நன்றி உள்ள உயிர்களெல்லாம் பிள்ளை தானடா , தம்பி நன்றி கெட்ட மகனை விட நாய்கள் மேலடா”  நம்பிக்கை துரோகிகளுக்கோர் கணை. சமத்துவத்திற்கு “அண்ணாந்து பார்க்கின்ற மாளிகை கட்டி, அதன் அருகினில் ஓலை குடிசை கட்டி… பொன்னான உலகு என்று பெயரும் இட்டால் பூமி சிரிக்கும்” . மனிதநேயத்திற்கு “படித்ததினால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு – பாடம் படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு”  சுட்டிகாட்டினாய்.

    எழிலுரை

    இயற்கையை கையாளுவதில் கடவுளுக்கு பின் கவிதான். இயற்கையென்னும் கன்னியை வர்ணிக்கும் பால் “அங்கமெல்லாம் தங்கமான மங்கையைப் போலே,ந‌தி அன்ன நடை போடுதம்மா பூமியின் மேலே! ” , “அழகு மிகுந்த ராஜகுமாரி மேகமாக போகிறாள்…..பள்ளம் சிலர் உள்ளம் என ஏன் படைத்தான் ஆண்டவன், பட்டம் தர தேடுகின்றேன் எங்கே அந்த நாயகன்” கவிஞன் கடவுளுடன் பேசுகிறான். தமிழும் கவியுமாக “நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனே….தெம்மாங்கு பூந்தமிழே தென்னாளும் குலமகளே….” வரிகள்.

    கண்ணனுரை

    யமுனைக் கண்ணனுக்கு கங்கை கரைத் தோட்டம் என்ற பல்லவியை போட்டாலும் பிரசிதம்! . ஒரு வாய் சோறு ஊட்டும் தாய் முன் உட்கார்ந்திருப்பதை காணுங்கள் என்றாய் குருவாயூரப்பனை? ஆனால் அவனோ நின்றபடி யிருக்கிறான்! நீங்கள் சொல்ல வந்தது அன்னப் பிரசனம் செய்ய அன்னை முன் அமர்ந்திருக்கும் குட்டி கோபாலர்களை அல்லவா ? அவ்வப்பொழுது கீதையையும், இதிகாசங்களையும், காவியங்களையும், பாசுரங்களையும், பாரதியையும் உமர்கயாமையும் காளிதாசையும் வரிகளில் படைத்தாய்.

    ஞான உரை

    கல்வியா செல்வமா வீரமா அன்னையா தந்தையா தெய்வமா என்ற ஞானக் கேள்விக்கு  ஒன்றுக்குள் ஒன்றாக கருவானது ,அது ஒன்றினில் ஒன்றாக பொருளானது, ஒன்றை ஒன்று பகைத்தால் உயர்வேது மூன்றும் ஓரிடத்தில் இருந்தால் நிகரேது என்றே பதிலளித்தாயே ! நம்பிக்கை வைத்து கல்லையும் பார்த்தால் தெய்வத்தின் காட்சியம்மா அதுதான் உள்ளத்தின் காட்சியம்மா  அதுதான் உண்மைக்கு சாட்சியம்மா என்ற சித்த மந்திரம் எத்தனை திறம் !  பொதுவுடமையாய் “ஆறென்றும் நதியென்றும் ஓடை என்றாலும் அது நீரோடும் பாதைதன்னைக் குறிக்கும் – நிற்கும் ஊர் மாறி பேர் மாறி கரு மாறி உரு மாறி  ஒன்றே ஓம் சக்தியென உரைக்கும் ” சொன்னது உன்னுள்ளும் பாரதி. “உயர்ந்த இடத்தில் இருக்கும் போது

    உலகம் உன்னை மதிக்கும் உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால் நிழலும் கூட மிதிக்கும்” ஏகத்தின் அனுபவம். ” தெளிவாகத் தெரிந்தாலே சித்தாந்தம்,அது தெரியாமல் போனாலே வேதாந்தம்,மண்ணைத் தோன்றி தண்ணீர் தேடும் அன்புத் தங்கச்சி,என்னை தோன்றி ஞானம் கண்டேன் இதுதான் என் கட்சி,உண்மை என்ன பொய்மை என்ன ?”  என்ன வரிகள்? “படித்தவன் கருத்தெல்லாம் சபையேறுமா

    பொருள் படைத்தவன் கருத்தானால் சபை மீறுமா”  இன்றைய வாழ்க்கை நெறி.

    “சொர்க்கமும் நரகமும் நம் வசமே, நான் சொல்வதை உன் மனம் கேட்கட்டுமே…..

    சத்தியம் தர்மங்கள் நினைக்கட்டுமே…. இது தாய்மையின் குரலாய் ஒலிக்கட்டுமே” ஒரு சமாதானம்.

    முடிவுரை

    உங்களுடன் அமர்ந்து என் கவிதைகளை பகிர ரொம்ப ஆசைப் பட்டேன். உன்னைச் சொல்லிக் குற்றமில்லை என்னைச் சொல்லிக் குற்றமில்லை  காலம் செய்த கோலமய்யா கடவுள் செய்யும் ஜாலமய்யா ! அதற்கு  வாய்ப்பே வரவில்லை.  நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லைதான். அதற்காக இழந்தா நிற்பது ? நெஞ்சம் மறப்பதில்லை  அது நினைவை இழப்பதில்லை அல்லவா . அதற்காக போனால் போகட்டும் போடா என்று சொல்ல வேண்டாம்.   யார் பெறுவார் அந்த அரியாசனம் கவியரசோடு தனக்கும் ஒரு சரியாசனம் என்றே பாடுவேன். ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது உன்னைப் பார்த்த பின்னால். பார்த்தால்/படித்தால் பசி தீருமா என்று கேட்டால் ஆம் என்பேன் .  எனது பாட்டும் நீ  பாவமும் நீயானாய்.  நலந்தானா ! நலம்தானா உடலும் உள்ளமும் நலம் தானா என்பது என் கைப்பேசி அழைப்பு மணி. காவியப் பேரரசு வாலி படித்து சபாஷ் கொடுத்த இவன் எழுதிய உனக்கோர் இரங்கற்பாவின் வரிகள்

    கவிமகள் உன்னையே கணவனாய் எண்ணியே

    கற்புடை ம‌ங்கையாய் வாழ்ந்திருந்தாள்

    கவிநீ பிரிந்ததால் கண்டவர் நாவிலே

    கற்பிழந்து  இங்கே தவிக்கிறாள்

    கவியரசு கண்ணதாசனுக்கு இந்த தாசனின் சமர்ப்பணம்.

    Share