திருமால் திருப்புகழ் (114)
கிரேசி மோகன்
கண்ணன் திருப்புகழ்(வெண்பா)….
————————————————————–
’’கண்ணன் வெண்பாக்கள்’’
————————————————-
ஸ்ரீரங்கநாதர்
————————–
முன்விழித்துப் பின்விழித்துப், பொன்மகள் பார்த்திருக்க,
கண்விழிக்கா யோகமா? கற்பனையா? -தென்னிலங்கை,
பக்கம் தவித்திருக்கும், பத்தினியாள் ஞாபகமா?
துக்கமென்ன சொல்லிவிட்டு தூங்கு….(198)
களைப்போடு வீடணன் கைகால் கழுவுகையில்
மலைக்கோட்டைப் பிள்ளை குறும்பால் -நிலைப்பாடாய்
கொள்ளிடத் தீவில் கிடக்கும் அயோத்தியின்
பள்ளிகொண்ட ரங்கனைப் பாடு….(199)
—————————————————————————-
வெறும்வாயில் மெல்லும் அவலா கிடாது
குருவாயூ ரப்பா எனக்கும் -திருவாயால்
பாடிய நாரண பட்டர்க்குப் போட்டாற்போல்
போடுநீ ஆமாம்சா மி….(200)
விடையேழ் அடக்கி வளைக்கரம் கொண்ட
இடையா எனக்கிங்(கு) இருக்கும் -தடையான
பாழும் வினைகளும் பஞ்சப் புலன்களும்
வீழ வகைசெய் விரைந்து….(201)
காயாம்பு மேனியும், கொவ்வைக் கனியிதழும்,
ஓயாது தாலாட்டும் ஓங்காரத், -தாயன்பும்,
புத்தியில் சேயாகிப், போற்றுவோர் வாக்கினில்,
முத்தமிழ் முத்தமிடு மாம்….(202)
அற்புதம் செய்ய, அவதரித்த ஆய்க்குலத்தோன்,
பொற்பதம் போற்றிப் பணிந்திட, -கற்பூரம்,
மூச்சில் மணத்திடும், மூடக் கழுதைக்கும்,
ஆச்சரியம் கண்ணன் அருள்….(203)
——————————————————————————————————————-
படங்களுக்கு நன்றி :
http://bhagavatham.blogspot.in/