Blog

  • கீழ் வான சிவப்பு

    தனுசுimag va

    அடி வானம் சிவந்தது
    அது ஏன்?
    பல வினாக்கள் என்னுள் எழுந்தது
    அவைகளை உங்கள் முன் வைக்கிறேன்
    தகுந்த விடை தந்தால் ஏற்கிறேன்!

    பணி முடித்த சூரியன்
    சொல்லாமல்
    வீட்டுக்கு விரைவதால்
    வானம் கோபத்தில் சிவக்கிறதா?

    எரிக்கும் தன்னை வெறுத்து
    குளிர் தரும் நிலவை
    வரசொல்லும் வானுக்கு
    சூரியன் தீ வைக்கிறதா?

    ஒரு நாள் விளையாட்டில்
    இரவோ பகலோ
    யார் அத்து மீறுவதென புரியாமல்
    அந்தி நேரம்
    ஆட்டத்தை நிறுத்த
    அடிவானத்துக்கு
    சிவப்பு கொடி காட்டுகிறதா?

    இரவுக்கு
    அழகூட்ட வரும் நிலவுக்கு
    வானம் ஆரத்தி எடுக்கிறதா?

    இரவும் பகலும்
    கலவிக்கு தயாரானதால்
    வானம் வெட்கப்பட்டு சிவக்கிறதா?

    இரவின் வானம்
    நிலவாலும் நட்சத்திரத்தாலும்
    பூச்சூடுவதால்
    பகலின் முகம்
    பொறாமையால் கீழ்வானில் எரிகிறதா?

    இரவின் வண்ணத்திற்கு ஈடுகட்ட
    பகலவள்
    மருதாணியிட்டுக் கொண்டாளா?

    ஜாம விருந்துக்கு
    தயாராகும் வானம்
    மகிழ்ச்சியில்
    வெற்றிலை போட்டுக்கொண்டதா?

    இரவின் இருளால்
    உலகம் தவிக்காதிருக்க
    பகல்
    அடி வானில் தீப்பந்தம் ஏந்துகிறதா?

    நிலவவளை வரவேற்க
    பகலரசன்
    வானில்
    சிவப்பு கம்பளம் விரிக்கிறானா?

    பூலோக பெண்களுக்கு போட்டியாக
    மஞ்சள் அரைத்துக் குளித்த வானம்
    இன்று கொஞ்சம்
    அதிகமாக மஞ்சள் பூசிக்கொண்டதா?

    ஏன்?
    ஏன்? என்று எழுந்த
    விளங்க முடியா வினாக்களை
    உங்கள் முன் வைத்துவிட்டேன்
    தகுந்த பதிலை தாருங்கள்
    தலை வணங்கி ஏற்கிறேன்.

    Share
  • வாக்குமூலம்பற்றிய என் எழுத்துமூலம்

             

                     பிச்சினிக்காடு இளங்கோ

     

     அண்மையில் திடீரென்று சுவாசுகாங் நூலகத்தில் நுழைந்தேன். முதலில் ஆங்கிலப்பகுதிக்குச் சென்றேன். இதய நோய்வராமல் தடுப்பதுபற்றிய ஆங்கில மருத்துவ நூலைப்படித்துவிட்டு தமிழ்ப்பகுதிக்கு வந்து நான் எடுத்த நுல்கள் யூ.ஆர்.ஆனந்தமூர்த்தி எழுதிய சமஸ்காராஎன்ற புதினம், தமயந்தி எழுதிய வாக்குமூலம்என்கிற சிறுகதைத்தொகுப்பு. தமயந்தியின் அக்கக்கா குருவிகள் பற்றி தம்பி நெப்போலியன் என்னுடன் பேசியது நினைவுக்கு வந்தது.

                          தமயந்தி தன்முனைப்பும், சாதிக்கத்துடிக்கும் ஆர்வமும், முற்போக்கு எண்ணமும்கொண்ட பெண்ணாக நான் முடிவு செய்திருந்தேன்.

     பண்பலை வானொலியில் பணியாற்றினார் அல்லது பணியாற்றுகிறார் என்ற தகவல் நூலைப்படித்தபோது தெரிந்தது. எதோ  ஒரு வார இதழில் பணியாற்றியதாகவும் கேள்விப்பட்டிருக்கிறேன். இந்தப்பின்னணியோடுதான்

    அவருடைய சிறுகதைத்தொகுப்பிற்குள் நுழைந்தேன்.

                         சிறுகதைகள் பக்கங்கள்கூடி சிறுகதையாக இல்லாதநிலையில் அது எத்தகைய கதையாக இருந்தாலும் கரைந்து படிப்பதற்கு மனம் இசைவதில்லை. இவருடைய கதைகள் அளவில் சிறுகதையாகவே அமைந்தது நான் ஆர்வமாகப் படிப்பதற்குக் காரணம்.

     அப்படி கையிலெடுத்து படித்தபொழுது எல்லா கதைகளையும் இயல்பாக படித்துவிட்டேன் என்று சொல்லமுடியாது.

                        கதை சொல்வது யார்? கதைப்பாத்திரங்கள் யார் யார்? என்று நினைவில் நிறுத்திக்கொண்டு படிப்பதில் சில இடங்களில் எனக்குச் சிரமம் ஏற்பட்டது.. ஆனாலும் கதையைச்சொல்லிச்செல்லும் முறையைக் கவனத்தில்கொள்ளக்கருதி படிக்கத்தொடங்கினேன். தொடக்கம்முதல் முடிவுவரை கதையில் வரும் சில சொற்றொடர்களை அடுக்கிப்பார்த்தால் அது ஒரு கவிதையாக மாறும் என்பது என் முடிவு.

                          ஆண்களின் சுயநலம் இழக்காத போலி கட்டமைப்பால் பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பது நான் உணர்ந்த உண்மை. அரிதாரம் பூசாமல் கடைவிரித்து ஏமாற்றத்தைத்தருவது இன்றைய ஆண்போலிகளின் ஏதார்த்தமாக நான் பார்க்கிறேன். அப்படியான சூழலில்

    தமயந்தியின் பெருமுச்சு அக்னியைச்சுமந்திருக்கிறது அல்லது அடைகாக்கிறது என்பதில் அய்யமில்லை. எந்தக்கதையை எடுத்துக்கொண்டாலும் அங்கங்கே கவிதையின் கண்ணடிப்புகள், தீர்க்கமான சொல்வெட்டுகள் பளீச்சிடுவதைப் பார்க்கமுடிகிறது.

    எடுத்துக்காட்டுக்கு இதோ….

     

    உன்

    ஒற்றை ஸ்பரிசம்

    இன்னமும் ஈரத்தோடு

    மனதின் மூலையில்

    ஒட்டியிருக்கிறது

     

     

    கண்சிமிட்டும்

    பறவைகளின் பயணம்

    காற்றின் அலைக்கழிப்பால்

    ரத்தாகும் தருணங்கள்

    காயமானவை

     

    விலகி நிற்கும்

    உறவுகளைத்

    தனிமைப்பிரதேசத்தில்

    கைசுட்ட நெருப்பாய்

    ஞாபகப்படுத்துகிறது

      

    சந்தர்ப்பங்களின் வலையில்

    எல்லோரும் சரிவதுண்டு

    அப்படித்தான்

    நானும் அவளும்

     

    வெளிச்சம்

    ஒரு பறவையைபோல்

    பறந்து

    அறையெங்கும் பரவிற்று

     

    வெயில்மெல்ல

    யானைத் துதிக்கையால்

    ஜன்னலுக்குள்

    எட்டிப்பார்த்தபடி இருந்தது

     

    ஜன்னல் வழியாக

    பளிச்சென்று வெயிலாகும் வானம்

    என்னை வெறிக்கிறது

     

    சின்னவயதில்

    மழைக்காட்டி எனக்குச்

    சோறூட்டின தருணங்கள்

    என் ஞாபகத்தில்

    அச்சிடப்பட்டிருக்கின்றன

     

    சுயலாபங்களுக்காக

    கைகளைவிட்டுச்செல்லும்

    யாருக்காகவும் வருத்தப்படக்கூடாது

     

    பயத்திலேயே

    ஆண்பெண் உறவு

    நிலவுகிறது

     

     

    மழைநாளில்

    எங்கள் வீட்டுவாசல்

    விரிக்கும் குடைகள்

    எனக்காக அழும்

     

    இதை ஒரு கவிதையென்று நான் சொல்லவேண்டுமா என்ன?

    சமுகத்தைப்புரட்டிப்போடும் ஆவேசம் தமயந்திடம் குடிகொண்டிருக்கிறது என்பதின் அடையாளமாக ஆண்களின் பார்வையிலேயே சமூகம் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாய் இந்தக்கட்டமைப்பு மனிதப்பண்புகளின்மேல் மறுகட்டமைப்பு பண்ணப்படுமெனில் அதுவே தீர்வாக இருக்கும்.”  என்ற வாக்குமூலத்தை எடுத்துக்கொள்ளலாம்.

    நித்தியானந்தாவைவைத்து ஒரு கருத்தையும் இப்படி நாம் மறைக்கப்பட்டவற்றையே நிஜமென நம்புகிறோம்.நிர்வாணத்தை மறுக்கும்

    மனநிலை இருக்கும்வரை இதுபோன்றபோலிகளே உண்மையாகக்கருதப்படுவார்கள்என்று பதிவுசெய்கிறார்.

     

                       எல்லா கதைகளையும் எடுத்துக்கொள்ளாமல் நூலின் தலைப்பாக இருக்கிற வாக்குமூலம்கதையைமட்டும் என் சொற்களால் சொல்லிக்காட்ட ஆசைப்படுகிறேன். தொகுப்பில் எல்லா கதைகளுமே ஒரு வகையில் வாக்குமூலம்தான். பொதுவாக எதையுமே வாக்குமூலமாகத்தானே அறிகிறோம்.. தமயந்தியின் வாக்குமூலம் நேர்மையானது; தூய்மையானது;

    தாய்மையானது; சோகமானது. சுதந்தரத்தோடு வாழ்வது என்று முடிவெடுத்துவிட்டால் சுதந்திரம் கைகூடுகிறதோ இல்லையோ சோகம் எஞ்சிவிடுகிறது. அப்படிச்சோகம் சுமந்து சுதந்தரம்கைகூடித் ததும்பும் மனநிலையில்  சொல்லப்பட்டிருக்கிறது வாக்குமூலம்தன்மகனைப்பிரிந்து வாழவேண்டிய சூழல் .விவாகரத்துக்காக காலம் கழிக்கும் நிலை. அது கிடைத்துவிடத்தான் போகிறது. அதைமிக மிக நுட்பமாக “ நீதி மன்றங்களில் உறவுகள் பிரிக்கப்படுகின்றன என்றாலும் தொப்புள்கொடிகளும் அறுத்தெறியப்படுகின்றன என்பதையும் உறுதி செய்தாகிவிட்டது. உன்னைப்பற்றி என்னிடம் மிச்சமிருப்பது உன்நினைவுகள் மட்டும்தான்என தமயந்தி சொல்கிறார். சோகத்தின் தொய்வும் நீதிமன்றத்தீர்ப்பும் ஒருசேர இதயத்துடிப்பாகியிருப்பதை உணரமுடிகிறது. உணர உணர நமக்கும் வலி வலுவாகவே வந்துவிடுகிறது.

    பிள்ளைகளைப்பிரிதல் கொடுமை. பிரித்தல் அதனினும் கொடுமை. பிள்ளையைப்பிரிந்து எப்படியான வாழ்க்கை அமைந்தாலும் பிரிந்த பிள்ளையை நினைத்தால் எல்லாம் கரைந்த மணல்வீடாகும் என்பது உண்மை. அதற்காக ஒரு நரகத்தைச் சகிக்கவும் முடியாது. நரகத்தில் வாழ்ந்துகொண்டு பிள்ளையை வளர்க்கமுடியாது என்ற தெளிவான முடிவாக இருக்கலாம். பெற்றப்பிள்ளைகளை நினைத்து வாழவும்முடியாமல் சாகவும்முடியாமல் எத்துணைத் தாய்மார்கள் நரகத்தில் தம்மை அழித்துக்கொண்டிருப்பார்கள் என்பதை ஒருகணம் அசைபோடமுடிகிறது.

    மகனைப்பிரிந்ததாயின் வலி வலுவாகவும் சுயத்தின் துணையோடும் சொல்லப்பட்டிருக்கிறது.

     

     

    உன்கண்கள்

      மழைவரும் வானம் மாதிரி

       இருட்டுவது

       நீ பிறந்ததிலிருந்தே

        எனக்குப்பொறுக்காது.” “ என்னன்னாலும் உங்கூடதாம்மா இருப்பேன். என்றும் உன்னை நான் பார்த்த ஒரு வாரத்துக்கு முன் நீ என்மடியில் படுத்தபடியாய்சொன்னாய்” “ பால்கட்டின கனத்த மார்பின் வலிகளோடு ஞாபகங்கள் சிதறுகின்றன. நரம்புகள் வழியே ரத்தமும் உயிருமாய் நிரம்பின அவஸ்தைகள் உடலெங்கும் சூடான அமிலமாய் பெருகுகின்றன.

    அதிகாலையில் தூக்கமும் கரகரப்பும் கூடின குரலோடு ம்மாஎன்று பாலுக்காக நீ அழைப்பது என் காலை நேரங்களை நிறைத்திருக்கிறது.”

    உனக்காக இடது கையில் நான் ஹோம்வொர்க்க எழுத, அவித்த கடலை சப்பிட்டபடி என் வாயிலும் ஒன்றிரண்டைத்திணிக்கும் உன் கைவிரல்களின்

    சூடு என் மனதை நிரப்புகிறது” “ அவ்வப்போது ரப்பரைவைத்து அழிக்கும்போது நெற்றிப்புருவத்தைத் தூக்கி என் உயிரை உருக்குவதுபோலொரு பார்வை பார்ப்பாய்.உன்னைப்பற்றி என்னிடம் மிச்சமிருப்பது உன் நினைவுகள்மட்டும்தான்

    உன் உள்ளங்கையில் என்னைப்பற்றின ரேகைகள் பதிந்திருக்கும்.என் மூச்சுக்காற்றின் சூடு உன்னை உஷ்ணப்படுத்திகொண்டே இருக்கும். உலகிலேயே மரணத்தண்டனையைக்காட்டிலும்கொடிய தண்டனை பிள்ளைகளைப்பிரிவதுதான்என்ற வாக்குமூலங்களிலிருந்து எத்துணைச்சோகமானது என்பதை விளக்க என்னால் முடியவில்லை.

    எந்தக்குழைந்தையையும் பத்து விநாடிகளுக்குமேல் இப்போது என்னால் பார்க்கமுடியவில்லைஎன்ற தமயந்தியின் கூற்று ரணமாக்கிவிடுகிறது என்னை. இது மட்டுமா?….இல்லை….இதோ ஒரு பட்டாம்பூச்சியின் படபடப்போடு நீ என்னிருந்து விடுபட்டு சிணுங்கும் அழுகையோடு பிறந்ததும் உன்னை என் வயிற்றுமேட்டில் சிரித்தமுகத்தோடு டாக்டரம்மா போட்டபோது எழுந்த உணர்வை சாகும் நேரமும் என் அடி வயிறு நினைத்திருக்கும்.” எப்படி நித்திரையைக்கலைக்கும் வரிகளைத்த ந்திருக்கிறார் தமயந்தி!

                               இப்படித் தாய்மையின் வருத்தத்தைப்பிழிந்து தந்திருக்கும் தமயந்தி திருமணமுறிவுக்கான காரணத்தை எங்கேயும் சொன்னதாகப்படவில்லை. ஆனாலும் ஓரிடத்தில் வரும் வாக்குமூலம் நமக்கு வழிகாட்டுகிறது. அதாவது நீ வளர்ந்தபிறகு உன்னிடம் சொல்லவேண்டுமென நான் சேமித்தவைத்த உண்மைகள் சில உண்டு. கவிதை எழுதியதற்காக ஒடிக்கப்பட்ட என் வலதுகை நடுவிரல், தனித்தன்மைகளற்று மறத்திருந்த என் சுயம்” . கவிதை எழுதியும் சுயத்தோடு பேசியும் குடும்பவாழ்வில் ஈடுபட்டவருக்கு தனித்தன்மைகளென கருதியவைகளே கணவனுக்கு ஒவ்வாத தன்மைகளாகமாறி இல்லறத்தை இழக்க கரணங்களாகிவிட்டன என முடிவுசெய்யமுடிகிறது.

    தனித்தன்மையோடு வாழவிரும்பும் பலரின் வாழ்க்கை இப்படித்தடுமாறி சிதறும் செய்திகள் வந்தவண்ணமிருக்கின்றன. இவர்களே துணையைத்தேடுகிறார்கள்.பின் இவர்களே முரண்பட்டு பிரிந்துவிடுகிறார்கள். துணையைத்தேடும்போழுது சிலவற்றை மறந்திவிட்டார்களா!. அல்லது விருப்பம்போல் நடந்து பின் ஆண்கள் ஏமாற்றி விட்டார்களா? என நினைக்க நிறைய இடமிருக்கிறது.

    ஆனாலும் தாய்க்கு ஒரு நம்பிக்கை இருக்கிறது என்பதை ஆசிரியர் கரன்சி நோட்டுக்களின் வாடை புழங்கும் இடங்கள் உன்னைத்தீண்டாதென்பதில் நான் திடமாக இருக்கிறேன்என்ற வாக்குமூலத்தை ஓரிடத்தில் பதிவுசெய்திருக்கிறார். கதை முழுவதும் மகனைப்பிரிந்ததாயின் துயர், தன்னிடமிருக்கும் சுயத்தின் துணையோடு வெளிப்படும் வெறுமையை ஆசிரியர் தமயந்தி சொல்லுவதில் வெற்றிபெற்றிருந்தாலும் மகனைப்பிரிந்த தோல்வியை அவர் அடைந்திருக்கிறார் என்பதில் நமக்கும் வலி. கதையின் வெற்றியை, கதாசிரியரின் வெற்றியை சமூகத்தின் தோல்வியாக கருதவேண்டியிருக்கிறது. சொல்லும் திறனாலும் சொல்வதிலுள்ள உண்மையாலும் சமூகத்தை உணரவைத்தலில், வாசிப்போரின் இதயத்தைக் கனக்கவைத்தலில் வெற்றிபெற்றிருக்கிறார்.

                          பிள்ளையைப்பிரியும் மனமுறிவு கூடாதென்பதை தானடைந்த மனமுறிவின்வழி வலியைக்கொடுத்து நம்மை உணரவைத்திருக்கிறார் தமயந்தி. ஒருமுறை தாயின் உடல்நலம் மோசமானபோதுமகனை பார்க்க விருபியபோது மகனைக்கடத்த தாய் தீர்மானித்ததாக எச்சரிக்கை நோட்டிசு அனுப்பப்படுகிறது. அப்போது தாய் சொல்லுகிறாள்.. “பெற்ற மகனைக்கடத்த விரும்பும் தாயாகப்பார்க்கப்பட்டவள் உலகத்தில் நான் மட்டுமே இருக்கக்கூடும்என்று. தாய் பேருந்துகளில் வேலைக்குச்சென்றுவந்த பயணச்சீட்டுகளை மகன் சேகரித்து வைத்திருந்ததை நினைவுப்படுத்தித் தாய் கூறுகிறாள்  இப்போது நினைவுகளின் சேகரிப்பில் திளைத்திருக்கிறோம் இருவரும்“. நினைவின் அடையாளங்கள் துருப்பிடிக்காதென்று நினைக்கிறேன்திடீரென்று கனவு வருகிறது.கனவில் மரணம் வாவா என்றழைப்பதாகக்கூறும் தாய், “நீ பிறந்தபோது என்னை முதலில் பார்த்ததுபோல நான் இறக்கையில் உன்னைக்கடைசியாய் பார்க்கவேண்டும்என உருக்கமாக,ஏக்கமிகு வாக்குமூலத்தை வழங்குகிறார். அன்புள்ள மகனுக்கு என்று தொடங்கி, கடிதத்தை முடிக்கும் கடைசிவரியில்  உன் முகம்தேடிவழியும் கண்ணோரத்துத்துளிகளுடன் அம்மா“. கண்ணீர் துளியின்றி கடந்துபோகமுடியாத கதை வாக்குமூலம் என்ற தமயந்தியின் கருத்தை முன்மொழிந்து முடிக்கிறேன்.

     

    Share
  • உத்தமன் அலெக்சாண்டர்!…(பகுதி-4)

    ராமஸ்வாமி ஸம்பத்

     porus

    “அன்பரே! ஜீலம் நதிக்கரையில் அடாது மழை பெய்தாலும் விடாது நடந்த யுத்தம் உச்ச கட்டத்தை அடைந்த தருணத்தில், தினம் மாலையில் போர் நிலவரம் பற்றி என்னிடம் விவரிப்பீர்கள். போரஸின் பராக்கிரமத்தையும் சாகசத்தையும் வெகுவாக சிலாகித்து அவருடைய வீரத்தினைப் போற்றுவீர்கள். ‘உண்மையிலேயே போரஸ் எனக்குச் சரியான ஜோடி’ என்றெல்லாம் சொல்வீர்கள்.

    “ஒரு மாலை, இருபக்கங்களிலும் ஏற்பட்ட உயிர்ச்சேதங்கள் பற்றி விவரித்து, ‘போரஸை யுத்த தந்திரங்களால்தான் தோற்கடிக்க முடியும்’ என்று கூறினீர்கள். அதற்கான திட்டத்தையும் என்னிடம் விவரித்தீர்கள். ’அதன்படி புறமுதுகிட்டு ஓடுவதுபோல் பாசாங்கு செய்து, போர் முடிந்து விட்டதாக போரஸை நம்பவைத்து, அவன் படை அயர்ந்த நிலையில் இருக்கும்போது பின்பக்கமாகச் சென்று தாக்கப்போவதுதான் அந்த திட்டம். அதனால் அவன் குழப்பமடைந்து தன் படையின் பெரும் பகுதியை அங்கு நகர்த்துவான். அப்போது நான் இப்பக்கத்திலிருந்து போரஸைத் தாக்குவேன்’ என்றீர்கள். ’உங்கள் படையும் இரண்டாகி பாதுகாப்பு குறைந்து தங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படுமோ’ என்று எனக்கு அச்சம் மேலிட்டது.

    “பௌர்ணமி நாளான அன்றிரவு இதே போன்று கொட்டும் மழையில், நான் ஒரு பவுரவ ஒற்றன்போல் வேடமிட்டு சுலபமாக போரஸின் கூடாரத்திற்குள் நுழைந்தேன். கவலை தோய்ந்த முகத்தோடு அவர் அமர்ந்திருந்தார். வேடத்தைக் களைந்துவிட்டிருந்த என்னை அவர் வியப்புடன் நோக்கி, “பெண்ணே நீ யார்? எதற்கு இந்த நள்ளிரவில் கொட்டும் மழையில் என் கூடாரத்திற்கு தனியே வந்திருக்கிறாய்? உனக்கு என்ன வேண்டும்?’’ என்றார். நான், ‘பவுரவ மன்னரே! இன்றைய தினம் சிரவண பூர்ணிமா அல்லவா? என் போன்ற பெண்கள் தங்கள் சகோதரர்களுக்கு ரக்‌ஷை கட்டும் நாளல்லவா? எனக்கு உடன்பிறந்தவர் யாரும் இல்லை. ஆகவே, இந்த சகோதரியின் ரக்‌ஷையை தாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். இறை அருளால் உங்களுக்கும் நீண்ட ஆயுள் கிடைக்கட்டும்’ என்றேன்.

    “போரஸ் மனம் மகிழ்ந்து, ‘தங்காய், உனக்கு இன்னும் மணம் ஆகவில்லை என்று நினைக்கிறேன். நீ என் வலது கை மணிக்கட்டில் ரக்‌ஷை கட்டியதால் உன்னை மணக்கப்போகும் பாக்கியசாலிக்கு எத்தீங்கும் வராது காப்பேன்’ என்றார். ‘அண்ணா, அப்படியானால், உங்கள் எதிர் முகாமில் இருக்கும் அலெக்சாண்டரை போரில் கொல்லமாட்டீர்கள் என நம்புகிறேன். அவரே என்னை மணம்புரியப் போகிறார்” என்றேன்.

    “பவுரவ மன்னர் பேரதிர்ச்சியில் ஒரு கணம் திகைத்து நின்றார். பின்பு சுதாரித்துக்கொண்டு, ‘தங்காய், நீ சாமர்த்தியசாலி. உன் காதலனைக் காக்க எப்பேற்பட்ட ஆபத்து நிறைந்த முயற்சியில் ஈடுபட்டிருக்கிறாய். இந்த புருஷோத்தமன் வாக்களித்துவிட்டால் அதனை எக்காரணம் கொண்டும் மீறமாட்டான். நீ மன நிறைவோடு புறப்பட்டுச்செல்’ என்று கூறி தன் கழுத்தில் இருந்த வைரமாலையை எனக்கு அளித்தார். பின்னர் தன் மெய்க்காப்பாளனை அழைத்து என்னை ஜாக்கிரதையாக எங்கு செல்ல வேண்டுமோ அங்கு கொண்டு விடுமாறு பணித்தார்.”

    இதைக்கேட்ட அலெக்சாண்டர் மிக்க ஆச்சரியமடைந்து, ‘ஓகோ, இதுதான் காரணமா அன்று போரஸின் தயக்கத்திற்கு?’ என நினைத்தான். பின்னர், “ரொக்ஸானா,  அது என்ன ரக்‌ஷை கட்டுவது? அது என்ன வழக்கம்” என்று வினவினான்.

    roxana“என் ஆருயிரே! சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்திரப்ரஸ்தம் எனும் தலைநகரிலிருந்து ஒரு சாம்ராஜ்யத்தை தர்மபுத்திரன் ஆண்டு வந்தான். அவன் நடத்திய ராஜசூய யாகத்தில் யாதவ குலத்தைச் சேர்ந்த கண்ணன் என்கிற வாசுதேவர் பங்கு கொண்டார். யாக முடிவில் அவருக்கே முதல் தாம்பூலம் கொடுப்பது என்று தீர்மானிக்கப்பட்டது. அத்தருணத்தில் கண்ணனின் ஜன்ம வைரியான சிசுபாலன் அவரைப் பலவாறு வசைமாரி பொழிந்து அந்த யாகசாலையில் கலவரம் செய்தான். சினம்கொண்ட கண்ணன் தன் சுதர்சனம் என்கிற சக்கர ஆயுதத்தை அவன் மீது பிரயோகம் செய்தார். அந்தச் சக்கராயுதம் சிசுபாலன் தலையைக் கொய்து விட்டு கண்ணன் கையைத் திரும்பி வந்தடைந்தது. அப்போது கண்ணனின் வலது கை மணிக்கட்டு காயமுற்று குருதி பெருகியது. அதைக் கண்ட தர்மபுத்திரனின் பட்டத்து ராணியான துரோபதை தன் விலைமதிப்பான புடைவையின் முந்தானையைக் கிழித்து கண்ணன் மணிக்கட்டில் கட்டி குருதிப் பெருக்கை நிறுத்தினாள். கண்ணன்  மகிழ்ந்து, ‘தங்காய், இந்த பேருதவிக்கு என்ன கைம்மாறு செய்வேன்? உன்னுடைய இந்த புடைவையில் எத்தனை நூலிழைகள் உள்ளதோ அத்தனை மதிப்புள்ள  புடைவைகளை உரிய காலத்தில் உனக்கு அளிப்பேன். அது மட்டுமல்ல. உன் கணவர்களான பஞ்ச பாண்டவர்களின் உயிருக்கு ஆபத்து இல்லாமல் காப்பேன்’ என்று வாஞ்சையுடன் வரமளித்தான். அன்று முதல் பரத கண்டத்தில் ஒவ்வொரு வருடமும் சிரவண பூர்ணிமா அன்று சகோதரிகள் தம்தம் சகோதரர்களுக்கு ரக்‌ஷை கட்டும் வழக்கம் ஏற்பட்டிருக்கிறது” என்றுரைத்தாள் ரொக்ஸானா.

    இதைக்கேட்ட அலெக்சாண்டர், ‘எவ்வளவு உயர்ந்த மனிதன் இந்த போரஸ்! எதிரியின் காதலி தன்னை நயமாகப் பேசி மடக்கிவிட்டபோதிலும் தான் கொடுத்த வாக்கினை மீறாமல் இருந்திருக்கிறான். நல்மனம் படைத்தவன் இந்த பவுரவ மன்னன்’ என்று பெருமிதம் கொண்டான்.

    அதே நேரத்தில் ஒரு பெண்மூலம் தனக்கு உயிர்ப்பிச்சை கிடைத்திருக்கிறது என்ற எண்ணமே அவனுக்குக் கசந்தது.

    ”ரொக்ஸானா, அந்த நள்ளிரவில் நீ என் எதிரியின் முகாமுக்குச் சென்றது எனக்கு எள்ளளவும் பிடிக்கவில்லை. உனக்கு ஏதேனும் ஆகியிருந்தால் அதை என்னால் சகித்துக்கொள்ள முடியுமா?”

    “மன்னியுங்கள் மாமன்னரே! இப்பரத கண்ட மண்ணின் மகிமையோ என்னவோ தெரியவில்லை. காதலனுக்காக இந்த சிறிய சாகசத்தைச் செய்ய முற்பட்டேன்” என்றாள் அவள்.

    “அது சரி. பாரசீகத்தைச் சேர்ந்த உனக்கு இப்பரத கண்ட பழக்க வழக்கங்கள் எவ்வாறு தெரிந்தன?”

    “பாக்டிரீயா நாட்டில் எனக்கு நாட்டியம் கற்பித்த ஆசான் பரத கண்டத்தைச் சேர்ந்தவர். அவர் எனக்கு பாரதவர்ஷத்தின் இதிகாச புராணங்களையும் இந்நிலப்பகுதியின் கலாச்சாரங்களையும் அடிக்கடி விளக்குவார். அதனால் எனக்கு இந்த மண்மீது ஒரு பற்று ஏற்பட்டது. இதனைக் காணவேண்டும் என்ற தீவிரமான அவாவும் உண்டாயிற்று. இறை அருளால் தங்கள் மூலம் அந்த பாக்கியமும் கிட்டியது” என்றாள் ரொக்ஸானா.

    அலெக்சாண்டரின் கூடாரத்தில் சில நொடிகள் மவுனமாகக் கடந்தன.

    (தொடரும்)

    Share
  • கென்யா பயணம் – 5

    நாகேஸ்வரி அண்ணாமலை

    நேஷனல் ஜியாகிரபிக் நிகழ்ச்சிகளைத் தொலைக்காட்சியில் பார்க்கும்போது ஆப்பிரிக்க சவானாவைப் (African Savannah) பார்த்திருக்கிறேன்.  இப்போது அதை நைரோபி நேஷனல் பார்க்கில் நேரில் பார்த்தபோது பிரமிப்பாக இருந்தது.  கென்யாவில் நிறைய நேஷனல் பார்க்குகள் இருக்கின்றன.  ஒரு பெரிய நகருக்கு அருகில் ஒரு வனவிலங்குகள் வாழும் காடு இருக்கிறது என்பது இந்தப் பார்க்கின் விஷேசம்.  கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பரந்துவிரிந்திருக்கும், நீண்டு வளர்ந்த கோரைப் புல் மட்டுமே வளர்ந்திருக்கும் சவானாவின் ஊடே ஒரு வேனில் கச்சா ரோடுகளின் இடையே சென்றபோது பல வனவிலங்குகளைப் பார்க்க முடிந்தது.  ஆங்காங்கே சவானாவுக்கே உரிய குடை போல் வளர்ந்திருக்கும் அகேசியா (Acacia) என்னும் மரங்களையும் பார்க்க முடிந்தது.

    இந்த பார்க் நைரோபியிலிருந்து பத்து கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது.  இதன் ஆரம்பத்தில் அனாதை விலங்குகளின் புகலிடமாக ஒரு மிருகக்காட்சிசாலை அமைந்திருக்கிறது.  பார்க்கிற்குள் நுழைவதற்கு முன்பே இந்தியாவிற்கும் கென்யாவிற்கும் உள்ள ஒரு மிகப் பெரிய ஒற்றுமை தெளிவானது!  நாங்கள் வேனில் உள்ளே நுழைவதற்குரிய நுழைவுக் கட்டணம் வாங்கச் சென்றபோது ஏற்கனவே சிலர் அங்கு டிக்கெட் வாங்க முயன்றுகொண்டிருந்தனர்.  எங்களுக்கு டிக்கெட் கொடுத்துவிட்டு எங்களை வெளியே போகச் சொல்லிவிட்டு அங்கு இருந்த இன்னொரு பார்ட்டியிடம் ஏதோ பேரம் பேசத் தொடங்கினார் டிக்கெட் கொடுப்பவர்.  உள்ளே செல்வதற்கு பெரிய வேன்களுக்கு ஒரு கட்டணமும் சிறிய கார்களுக்கு குறைந்த கட்டணமும் வசூலிக்கிறார்கள்.  மேலும் குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் ஒரு வாகனத்தில் செல்பவர்கள் இருந்தால் கட்டணம் அதிகம்.  கென்யாவில் எல்லா இடங்களிலுமே கென்யா நாட்டுப் பிரஜைகளுக்குக் குறைந்த ரேட்.  குழந்தைகளுக்கு இன்னும் குறைந்த ரேட்.  வெளிநாட்டுப் பயணிகளுக்கு உள்நாட்டுப் பயணிகளை விட கிட்டதட்ட இரண்டு மடங்கு அதிகம்.  இன்னொரு பார்ட்டி ஆப்பிரிக்காவிலுள்ள  இன்னொரு நாட்டிலிருந்து வந்திருந்தவர்கள்.  இவர்களும் வெளிநாட்டுப் பயணிகள் போல்தான் கட்டணம் செலுத்த வேண்டும்.  ஆப்பிரிக்காவிலுள்ள நாடுகளிலிருந்து வருபவர்களுக்கென்று தனிச் சலுகை எதுவும் கிடையாது.  ஆனால் வெளியிலிருந்து வந்த அந்தப் பயணிகள் உள்நாட்டுப் பயணிகள் ரேட்டில் டிக்கெட் வாங்குவதற்கு டிக்கெட் வினியோகிப்பவரிடம் லஞ்சம் கொடுத்ததாகப் பின்னால் எங்கள் ஓட்டுநர் எங்களிடம் கூறினார்.  மேலும் பெரிய காரில் வந்துவிட்டு சிறிய காருக்குரிய ரேட்டையும் கொடுத்ததாகச் சொன்னார்.

    வனவிலங்குகளைப் பார்ப்பதற்காகச் செல்லும் வாகனங்கள் மட்டுமே இந்த பார்க்கிற்குள் கட்டனம் செலுத்திச் செல்ல முடியும்.  ஆனால் தாங்கள் வேலைசெய்யும் இடங்களிலிருந்து வீடு திரும்பும்போது பார்க்கைச் சுற்றிக்கொண்டு செல்வதர்குப் பதில் இதன் வழியாகச் சென்றால் அவர்கள் செல்ல வேண்டிய தூரம் வெகுவாகக் குறையும் என்பதால் பார்க் காவலர்களிடம் லஞ்சம் கொடுத்து இதனூடே செல்கிறார்களாம்.  வளர்ந்துவரும் நாடுகள் எல்லாவற்றிலும் சட்டத்தை மதிக்காத சாபக்கேடு இருக்கிறது.

    சவானாவின் நுழைவாயிலிலிருந்து கொஞ்சதூரம் சென்றதுமே ஒரு நினைவுச்சின்னம் இருக்கிறது.  ஒரு முறை யானகளைத் திருட்டுத்தனமாகக் கொன்று பல கோடி ரூபாய் பெறுமான தந்தங்களைக் கடத்திச் சென்ற ஒரு திருட்டுக் கும்பலைப் பிடித்து அவர்கள் திருடிச் சென்ற தந்தங்களை இந்த இடத்தில் வைத்து எரித்தார்களாம். அப்படி எரித்தால் தந்தத்திற்குப் பணம் கிடைக்காது என்று யானைகளைக் கொல்லமாட்டார்கள் என்பது நம்பிக்கை. அதன் நினைவாக மேடை போன்ற ஒரு நினைவுச் சின்னம் அமைத்திருக்கிறார்கள்.  ஆயினும் தந்தங்கள் திருட்டுப் போவது குறையவில்லையாம்.  அதிலும் வளமடைந்து வரும் சீனாவில் தந்தத்தின் தேவை பெருகி வருவதால் ஆப்பிரிக்க நாடுகளில் யானைகளைக் கொன்று தந்தங்களைத் திருடுவதும் கூடிக்கொண்டுதான் போகிறதாம்.

    சவான்னாவின் நடுவே சில இடங்களில் தண்ணீர்க் குட்டைகள் இருக்கின்றன.  அவற்றில் தண்ணீர் குடிக்க மிருகங்கள் வருமாம்.  ஒரு குட்டையருகே ஏழெட்டு ஒட்டகச் சிவிங்கிகளைப் பார்த்தோம்.  Gazelle என்னும் ஒரு வகை மான் கூட்டம் கூட்டமாகத் திரிந்துகொண்டிருந்தது.  கினி கோழிகள், காட்டெருமை, காண்டாமிருகம், தீக்கோழிகள்,  வரிக்குதிரை ஆகியவையும் காணக் கிடைத்தன.  சிறுத்தை, புலி போன்றவை இருட்டிய பிறகுதான் வெளியே வருமாம்.  கென்யாவின் சில பார்க்குகளில் இடம்பெயரும் காட்டெருமைகள் கூட்டம் கூட்டமாக மலைச் சரிவிலிருந்து இறங்கியதும் ஓடும் நதிக்குள் புகுந்து கடப்பதையும் நதியில் வாழும் முதலைகளுக்கு ஒரு சில காட்டெருமைகள் இரையாவதையும் பர்ப்பதற்கு வெளிநாடுகளிலிருந்து நிறைய உல்லாசப் பயணிகள் வருவார்களாம்.  அங்கெல்லாம் போவதற்கு எங்களுக்கு விருப்பமில்லை.

    ஒட்டகச் சிவிங்கிக்கென்று பார்க்கின் ஒரு மூலையில் ஒரு சரணாலாயம் இருக்கிறது. இதற்கு சிவிங்கி பார்க் (Giraffe Park) என்று பெயர். ஒட்டகச் சிவிங்கியில் இரண்டு இனங்கள் உண்டு.  ஒரு இனம் மறைந்துவருகிறது. இந்த இனத்தைக் காப்பாறுவதற்காக இந்தச் சரணாலயம் ஆரம்பிக்க்ப்பட்டது. இதை ஆரம்பித்தவரும் ஒரு ஐரோப்பியரே.  இதைப் பார்ப்பதற்கும் கூட்டம் வருகிறது. உள்ளே போகக் க்ட்டணம் உண்டு.  ஒரு சிறிய இடத்திற்குள்தான் நாம் போக முடியும். அதில் உயரமான ஒரு மேடை அமைத்திருக்கிறார்கள். அதில் ஏறி நின்றால் ஒட்டகச் சிவிங்கியின் தலை உயரத்தில் நிற்கலாம். நின்றுகொண்டு பக்கத்தில் வரும் ஒட்ட்கசிவிங்கிக்கு தீனி கொடுக்கலாம். கொடுப்பதற்கென்றே ஸ்பெஷலாகச் செய்யப்பட்ட உணவு உருண்டைகள் கிடைக்கின்றன.  ஒட்டகச்சிவிங்கியின் வாயைத் தொடும் அளவில் பக்கத்தில் நின்றுகொண்டு அதன் நாக்கில் உருண்டையை வைக்கலாம். அது நம் கையை நக்கும்.  ஒட்டகசிவிங்கியைப் பக்கத்தில் பார்க்காதவர்களுக்கு இது ஒரு புது அனுபவம்.

    நைரோபியில் பார்க்க வேண்டிய இடங்களில் யானைக் குட்டிகளின் காப்பகமும் ஒன்று (Elephant Orphange).  தந்தத்திற்காகச் சுட்டுக்கொல்லப்பட்ட தாய் யானையின் இளம் குட்டிகளை ரோந்துபோகும் வனஅதிகாரிகள் காப்பாற்றிக் இந்தக் காப்பகத்திற்குக் கொண்டுவருகிறார்கள். வியாதியால் இறந்துபோன தாயின் இளம் குட்டிகளையும் இப்படிக் காப்பாற்றுகிறார்கள்.  யானைக் கூட்டத்ததிலிருந்து பிரிந்த யானைக் குட்டி வழி தவறி, நீர் குடிக்கச் சென்று கிணற்றில் விழுந்துவிடுவதும் உண்டு. இந்தக் குட்டிகளையும் காப்பாற்றிக் காப்பகத்திற்குக் கொண்டுவருகிறார்கள். இந்தக் காப்பகத்தின் நோக்கம் ஐந்தாறு ஆண்டுகள் குட்டிகளைக் கண்ணும்கருத்துமாக வள்ர்த்துப் பின் காட்டில் விட்டுவிடுவது.  அங்கே அவை ஒரு யானைக் கூட்டத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டுப் பிழைத்துக்கொள்ளுமாம்.

    ஒரு ஐரோப்பிய தம்பதிக்ள் முதலில் இந்தக் காப்பகத்தை ஆரம்பித்தார்களாம். யானை குட்டி நான்கு வருடங்கள் வரை தாய்ப்பால் குடிக்குமாம்.  அனாதைக் குட்டிகளுக்க்கு மாட்டுப்பால் ஒத்துக்கொள்ளாதாம்.  அதனால் மனிதக் குழந்தைகளுக்குக் கொடுக்கும் புட்டிப்பாலை பெரிய பாட்டில்களில் அடைத்துக் கொடுக்கிறார்கள்.  இது தினமும் பதினொரு மணிக்கு நடக்கும்.  இதற்குக் குட்டிகளைக காட்டுக்குள்ளேயிருந்து கூட்டிவந்து ஒரு வளைவுக்குள் விடுவார்கள்.  இந்தக் காட்சியைப் பொதுமக்கள் சுற்றி நின்று பார்கக்லாம். இதற்குக் கட்டணம் உண்டு.  பல உல்லாசப் பயணிகள் இதைப் பார்க்கக் கூடுகிறார்கள்.  கென்யாவின் பள்ளிக் குழந்தைகளையும் பள்ளி நிர்வாகத்தினர் கூட்டிக்கொண்டு வருகிறார்கள்.

    குட்டி யானைகள் வரிசையாக நடந்துவந்து பால் பாட்டில்களுக்கு முன்னால் வந்து நிற்கும் அழகு ரசிக்கத் தகுந்தது.  பாலைக் குடித்துவிட்டு ஒர் மணி நேரம் மண்ணை வாரி இறைத்தும் தண்ணீரில் இறங்கியும் விளையாடுகின்றன.  ஒவ்வொரு குட்டிக்கும் தனிப் பெயர் உண்டு; தனிக் காவலரும் உண்டு.  ஒரு யானைக் குட்டிக்கு வயது நான்கு மாதமே.  தாயை ஒரு நாளிலேயே பிரிந்துவிட்டது.  அன்றிலிருந்து அது காப்பகத்தில் வள்ர்கிறது.  தாயைப் பிரிந்த சோகம் அதன் முகத்தில் இன்னும் காணப்பட்டது.  இது பிழைக்கும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது.

    நாங்கள் காப்பகத்திற்குப் போன அன்று பல நாட்டுப் பயணிகள் வந்திருந்தனர். கென்யாவைச் சேர்ந்த வசதியான ஒரு ஆரம்பப் பள்ளியின் குழந்தைகளும் பள்ளிச் சீருடை அணிந்து வந்திருந்தார்கள்.  ஒரு காவலர் ஒவ்வொரு குட்டியின் கதையையும் சொனன்னார்.  இந்தக் குட்டிகளின் பராமரிப்புச் செலவுக்கு உதவும் வகையில் யாரும் ஆண்டுக்கு ஐம்பது டாலர் செலுத்தித் தத்துஎடுத்துக்கொள்ளலாம்.  ஒவ்வொரு குட்டிக்கும் தத்துஎடுப்பவர்கள் பலர் இருப்பார்கள்.  இவர்களுக்கு மாதம்தோறும் தத்தெடுத்த குட்டியின் வளர்ச்சியை மின்னஞ்சல் மூலம் தெரிவிப்பார்கள்.  குட்டியின் படத்தையும் அவ்வப்போது அனுப்புவார்கள்,  பார்க்க வந்த பலர் பணம் கொடுத்தார்கள்.

    இங்கு பல நினவுப் பொருள்கள் விற்கப்படுகின்றன.  யானைப் படம் போட்ட பைகள், T ஷர்ட்டுகள், யானை உருவங்கள் முதலியனவற்றைப் பலரும் வாங்கினார்கள்.  இந்தப் பணமும் காப்பகத்துக்குப் போகும்.

    மிருகங்கள் என்றால் எனக்குக் கொள்ளைப் பிரியம்.  அவற்றை மிருகக் காட்சிச் சாலையில் பார்ப்பதை  விட அவற்றின் இயற்கைச் சூழலிலேயே பார்ப்பது ஒரு தனி இன்பம்.  அந்த இன்பம் எனக்குக் கென்யாவில் நிறையவே கிடைத்தது.

    சரணாலயத்தின் படங்களை இந்த இணைப்புகளில் பார்க்கலாம்.

    https://picasaweb.google.com/108173580006522327175/KenyaWildlife?authkey=Gv1sRgCJ67k97mpOaxQQ

    https://picasaweb.google.com/108173580006522327175/SheldrickElephantOrphanage?authkey=Gv1sRgCJn25YaJsOL3Cw

    படங்கள்: மெல்லியல்

    (தொடரும்)

    Share
  • வார ராசி பலன்!…19-08-13 – 25-08-13

    காயத்ரி பாலசுப்ரமணியன்

    மேஷம்: வியாபாரிகள் பணியாளர்கள் கொடுத்த பொறுப்புகளை சரிவர செய்கிறார்களா என்று கவனித்துக் கொண்டால், பணமும், பொருளும் வீணாவதைத் தவிர்த்து விடலாம். கலைஞர்கள் தங்கள் பேச்சாற்றலை நல்ல முறையில் பயன்படுத்தினால், பல ஒப்பந்தங்கள் உங்கள் பக்கமே! பணியில் உள்ளவர்கள் நிதி நிலவரத்தை அனுமானித்தபின் காசோலைகளை பிறருக்கு வழங்குவது நல்லது. பெண்கள் விட்டுக் கொடுத்து நடந்து கொண்டால், வேண்டிய காரியங்களைஎளிதில் நிறைவேற்றுக் கொள்ளலாம். உயர் பதவியில் இருப்பவர்கள் பணியாளர்களின் ஒத்துழைப்பு குறையாமல் பார்த்துக் கொண்டால் வேலைகள் சீராக நடக்கும்.

    ரிஷபம்: இந்த வாரம் அதிர்ஷ்டக் காற்று உங்கள் பக்கம் வீசத் துவங்கும். நினத்த காரியம் கை கூடுவதால், குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பணியில் உள்ளவர்கள் திடீரென்று வரும் இடமாற்றம், பதவி மாற்றம் ஆகியவற்றை ஏற்றுக் கொள்ள தயாராய் இருப்பது நல்லது. மாணவர்கள் ஏடாகூடமாய் பேசுபவர்களிடமிருந்து விலகி இருந்தால், மன நிம்மதி குறையாமலிருக்கும். வியாபாரிகள் மேற்கொள்ளும் முயற்சிக்கேற்ப நிலுவையில் உள்ள பணம் ஓரளவு வசூலாகிவிடும். சுய தொழில் புரிபவர்கள் சரக்கு பற்றாக்குறையை சமாளிக்க, கடன் வாங்கியாவது அதிக முதலீடு போடுவதோடு நீண்ட நேரமும் பாடுபட வேண்டியிருக்கும்.

    மிதுனம்: இந்த வாரம் பெண்கள் நினைத்தபடி காரியங்கள் நடக்காமல் இழுத்தடிப்பதால், நேரமும், பணமும் வீணாகலாம். மாணவர்கள் அவ்வப்போது தலை காட்டும் சண்டைச் சச்சரவுகளை பெரிது படுத்தாமலிருப்பது நல்லது. பணியிடத்தில் எழும் பிரச்னைகளைத் தீர்க்க நிதானத்தைக் கடைபிடியுங்கள். உறவுகளும் சீராக இருக்கும், வேலையும் தடையின்றி நடைபெறும். கலைஞர்களுக்கு தொல்லை தந்தவர்கள், தோள் கொடுக்கும் அளவிற்கு நட்பு பாராட்டி வருவார்கள். வியாபாரிகள் பொது விஷயங்களுக்காக கூடுதலான அலைச்சல் இருக்கும். எனவே ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

    கடகம்: குடும்பத்தில் நல்ல காரியங்கள் நடப்பதால் பெண்கள் மனதில் மகிழ்ச்சி நிலவும். மாணவர்கள் உங்கள் வாகனம் உங்கள் வசமே இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். தேவையற்ற செலவும், மன உளைச்சலும் இராது. வியாபாரிகள் கொடுக்கல் வாங்கலில் யாருடனும் கருத்து வேறுபாடு ஏற்படாமல் பார்த்துக் கொள்வது அவசியம். சுய தொழில் புரிபவர்கள் இயன்றவரை புதிய கடன் வாங்குதலைத் தள்ளிப் போடுங்கள். கலைஞர்கள் அளவாகப் பேசி, காரியங்களை முடிக்கும் திறனை வளர்த்துக் கொண்டால், எதிலும் வெற்றி கிட்டும். பதற்றம், எரிச்சல் ஆகியவற்றால் உங்கள் பணியின் வேகம் மட்டுப்பட இடம் கொடுக்க வேண்டாம்.

    சிம்மம்: வியாபாரிகள் பிறருக்கு தாட்சண்யம் காட்டுவதிலும் ஒரு வரையறை வைத்துக் கொண்டால், மகிழ்ச்சிக்கு குறைவிராது. பெண்களுக்கு சுறுசுறுப்புடன் பணிகளில் ஈடுபடும் மனோபாவம் அதிகரிக்கும். கூட்டு முயற்சி மூலம் ஓரளவு லாபம் உண்டு. மாணவர்கள் தங்களைக் கட்டுப்படுத்தியிருந்த எதிர்ப்புச் சக்திகளை புறம் தள்ளி புதிய வழியில் நடை போடுவார்கள். புதிதாக பணியில் சேர்ந்துள்ளவர்கள் பணியின் தன்மை அறிந்து செயல்பட்டால், பணிகளை தடங்கலின்றி முடிப்பதோடு நல்ல பெயரும் பெற்று விடலாம். தேவையில்லாமல் சிலருடன் மோதல் நிகழும் வாய்ப்பிருப்பதால், கலைஞர்கள் கவனமாக இருப்பது அவசியம்.

    கன்னி: இந்த வாரம் முதியவர்களின் உடல் ஆரோக்கியத்தில் பின்னடைவு ஏற்படலாம். எனவே தேக நலனை நல்ல முறையில் பராமரித்து வரவும். வியாபாரிகள் கடன் பற்றிய நிலவரத்தை முழுமையாக தெரிந்து கொண்டால்,பொருளாதாரச் சரிவுகளை ஓரளவு சரிக்கட்டமுடியும். பொறுப்பில் இருப்பவர்கள் நிர்வாக விவகாரங்களில், தகுந்த ஆலோசனையின் பேரில் செயல்படுவதே நல்லது. சுயதொழில் புரிபவர்கள் தொழில் வகையில் செய்யும் மாற்றங்கள் ஏமாற்றத்தை கொடுக்கலாம். கலைஞர்கள் ஓய்வு ஒழிச்சலின்றி ஓடிக்கொண்டிருக்கும் நிலை இருந்தாலும் உணவு விஷயங்களில் மிதமாக இருப்பது அவசியம்.

    துலாம்: பொது வாழ்வில் இருப்பவர்கள் மற்றவர் கூறும் குறைகளையும், விமர்சனங்களையும் பொருட்படுத்தாது, பணியில் இறங்கினால், உயர்ந்த இடத்தை இடைய இயலும். உங்கள் தரத்தை உயர்த்திக் கொள்ள வரும் வாய்ப்புகளை மாணவர்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டால் நல்ல பலனடையலாம். உதாசீனம் செய்தவர்கள் உங்கள் அருமை உணர்ந்து உதவிக்கரம் நீட்ட தயாராய் இருப்பதால், பெண்களின் வேதனை நிலைமாறி, மகிழ்ச்சி பூக்கும். அலுவலக அளவில் கலந்து கொள்ளும் பொதுக் குழுக்களில், சிற்சில பிரச்னைகளும், விவாதங்களும் ஏற்பட்டு மறையும்.

    விருச்சிகம்: பெண்கள் உழைப்புக்கு நடுவே தேவையான ஓய்வும் எடுத்துக் கொண்டால், புதிய பலத்துடன் பணிகளை முடிக்கலாம். கலைஞர்கள் சிந்தனையுடன் செயலாக்கத்தையும் இணைத்தால், விரும்பிய பலன்கள் வரிசையாக வரும். மாணவர்கள் கேளிக்கைகளில் கவனத்தைச் சிதற விடாமல் பாடங்களுக்கு அதிக நேரம் ஒதுக்குங்கள். ஆசிரியர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். கூட்டாக வியாபாரம் செய்பவர்கள் தன்னிச்சையாக முடிவெடுப்பதைத் தவிர்த்தல் நலம். கனவு இல்லம் கை கூட வேண்டுமென்று விரும்புபவர்கள் இடைத்தரகர்களை நம்பி செயல்படாதிருந்தால் ஏமாற்றங்களைத் தவிர்த்து விடலாம்.

    தனுசு: இந்த வாரம் வியாபாரிகள் எதிர்பார்த்த ஒப்பந்த வாய்ப்புகள் சற்றே தள்ளிப் போகக் கூடும். தொல்லை கொடுத்த கடன் பிரச்னைகளின் தாக்கம் குறையும். மனைவி வழி உறவுகளால் அனுகூலமிருக்கும். முன்பு அடங்கியிருந்த பிரச்னைகள் மீண்டும் தலை தூக்க வாய்ப்பிருப்பதால், பொது வாழ்வில் இருப்பவர்கள் எதிரியின் பலம், பலவீனம் இரண்டையும் அறிந்து செயல்பட்டால், நிலைமை ஓரளவுக்கு கட்டுக்குள் இருக்கும். அரசு பணியில் இருப்பவர்கள் சம்பள உயர்வு பற்றி நல்ல தகவல் பெறுவார்கள். பெண்கள் உறவுகளிடையே எழும் பூசலை வளர விடாதீர்கள். மன அமைதி சிதறாமலிருக்கும்.

    மகரம்: பெண்கள் துணைவரின் போக்கில் தோன்றும் மாறுதல்களை இதமாகக் கண்டித்தால் அன்பு இழை விலகாமல் இருக்கும் . கலைஞர்களின் ஆர்வத்திற்கும் உற்சாகத்திற்கும் இறக்கை கட்டும் விதமாக வாய்ப்புக்கள் வந்து சேரும்.வியாபாரிகளுக்கு சிறு அலைக்கழிப்புக்குப் பின் அவசரத் தேவைகளுக்கான பணம் கிட்டும். மாணவர்கள் முனைப்புடன் பாடங்களில் கவனம் செலுத்தி வந்தால், முதல் மதிப்பெண் பரிசாய் கிடைக்கும். பொது வாழ்வில் இருப்பவர்கள் சிறு விஷயங்களுக்காக ஆர்ப்பாட்டமாய் செயல்படுதல் என்பதைத் தவிர்த்தல் நலம். கூட்டாய் செயல்படுவதில், சில விஷயங்களில் தலையாட்டி பொம்மையாய் இருக்க நேரிடும்.

    கும்பம்: மாணவர்கள் ஆசை வார்த்தை பேசுபவர்களிடம் கவனமாய் பழகுங்கள்.முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள் தெளிவாகத் திட்டமிட்டபின் செயலில் இறங்கினால், நல்ல பெயர் நிலைக்கும்.இந்த வாரம் வியாபாரிகள் ஏட்டிக்குப் போட்டிகளை சமாளித்து, சரக்குகளை விநியோகம் செய்ய வேண்டியிருக்கும். சுய தொழில் புரிபவர்கள் எடுத்த பணியை முடிக்கும் வரை, அதிலேயே முனைப்பாய் இருந்தால், நஷ்டங்களைத் தவிர்க்க முடியும். பெண்கள் பணியிடத்தில் பட்டென்று வார்த்தைகளை கொட்டா திருந்தால்,பின்னால் அதற்காக வருந்த வேண்டியிராது. உறவுகளின் தலையீட்டால், குடும்பத்தில், சில நேரம் தர்மசங்கடமான நிலை உருவாகலாம்.

    மீனம்: உயர் பதவியில் இருப்பவர்கள் சட்டச்சிக்கல் ஏற்படும் வாய்ப்புள்ள எந்த ஒரு விஷயத்தையும் செய்ய வேண்டாம். வியாபாரிகள் அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளை பாக்கியில்லாமல் கட்டினால், அங்கும் இங்கும் அலைவதைக் குறைத்து விடலாம். கலைஞர்கள் மேற்கொள்ளும் தொழில் தொடர்பான பயணங்கள் நல்ல பலனளிக்கும். தொழிலதிபர்கள் பணியாளர்களிடம் பக்குவமாக நடந்து கொண்டால், பணிகள் விரைவில் முடியும். பொது வாழ்வில் இருப்பவர்கள் பிறரிடம் வார்த்தைகளை கொட்டும் முன் பின்விளைவுகளை சிந்தியுங்கள். பேச்சில் இணக்கம் தானே வரும். இந்த வாரம் கடன் தொல்லை கணிசமாக குறையும்

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 85 (19.08.13)

    மலர் சபாtemple

    புகார்க்காண்டம் – 09. கனாத்திறம் உரைத்த காதை

    மகளிர் இரவிற்கு ஏற்ற கோலம் கொண்டு இல் உறை தெய்வத்தை வழிபடுதல

    கொடி போன்ற இடையுடைய மகளிர்
    பகலவன் மறைந்திட்ட
    மாலைப் பொழுதினில்
    அகன்று விளங்கும் தம் வீடு எங்கிலும்
    அரும்பு அவிழ்ந்து ஒளிவீசும்
    முல்லை மலர்களை
    நெல்லுடன் தூவினர்.

    இல் உறை தெய்வத்தை வணங்குதற்பொருட்டு
    மணிவிளக்கையும் ஏற்றிவைத்தனர்.
    கணவனுடன் கூடி மகிழவென்று
    இரவுக்கென்று பொருத்தமாக
    ஆடை அணிகலன்களை அணிந்து கொண்டனர்.

    மாலதியின் வரலாறு

    மாலதி இறந்த மகவைக் கொண்டு தெய்வக் கோட்டங்களுக்குச் சென்று,வரம் வேண்டுதல்

    முன்னொரு நாளில் மாலதி எனும் ஒரு பெண்
    தன் மார்பில் சுரந்த பாலைச் சங்கில் எடுத்து
    தன் மாற்றாள் குழந்தைக்குப்  புகட்ட.
    பால் விக்கியதால் குழந்தை மரித்தது.
    இதனால் தன் கணவனும் மாற்றாளும்
    தன் மேல் அடாத பழியெல்லாம் கூறுவார்களே
    என்று எண்ணிய மாலதி தவித்தாள்.

    அக்குழந்தையை எடுத்துக்கொண்டு
    தேவ மரமாகிய கற்பகத்தரு நிற்கும் கோவில்,
    ஐராவதம் நிற்கும் கோவில்,
    அழகிய வெண்மையான மேனியுடைய தேவர் கோவில்,
    பகல் பொழுதுக்கு வாயிலான
    கிழக்குத் திசையில் தோன்றும் சூரியன் கோவில்,
    ஊரின் காவலான தெய்வம் நிற்கும் கோவில்,
    முருகவேள் கோவில்,
    இந்திரன் படைக்கலமான வச்சிரம் நிற்கும் கோவில்,
    ஐயனார் கோவில், அருகன் கோவில், சந்திரன் கோவில்,
    இக்கோவில்கள் எங்கும் புகுந்து,

    “தெய்வங்களே! நான் உற்ற துயர் தீர்த்தருள்வீர்”
    என வேண்டி நின்றாள்.
    எந்த ஒரு தெய்வமும்
    அவளுக்காய் இரங்கவில்லை.

    அடிப்படையாய் அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 1 – 22
    http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram25.html

    படத்துக்கு நன்றி:
    http://www.himalayanacademy.com/media/books/danzando-con-siva_es/web/ops/xhtml/dws_spanish_r6_timeline.html

    Share
  • ரக்ஷா பந்தன்

     

    விசாலம்

    எங்கு மேடைப் பேச்சு இருந்தாலும் .சிறு கூட்டமாக இருந்தாலும் “என் அன்பு சகோதர சகோதரிகளே” என்று அழைக்கிறோம். ” India is my country .we r all brothers and sisters “என்று பள்ளி அசெம்பிளியில் சத்தியப் பிரமாணம் எடுக்கிறோம். ஆக சகோதர அன்பு என்பது அளவெடுக்க முடியாத ஒன்று. அப்படிப்பட்ட அன்பை மேலும் வெளிப்படுத்தும் நாளாக வருகிறது, ராக்கி பண்டிகை. வட நாடு முழுவதும் கொண்டாடும் இந்தப் பண்டிகை மிகவும் அர்த்தம் உள்ள பண்டிகை..நான் பலவருடங்களாக அங்கேயே இருந்ததால் நானும் இதைக் கொண்டாடுகிறேன் என் பாசமுள்ள சகோதரர்கள் எல்லோருக்கும் மானசீகமாக ரக்ஷைக் கட்டுகிறேன்.

    இந்த ராக்கி என்றால் என்ன? புராணக் கதை என்ன? பார்க்கலாம்…

    இது ஒரு அன்பு பந்தம் ..சகோதரன் சகோதரியைப் பாசத்தால் கட்டுப் போடும் ஒரு அன்பு பாலம். இந்தப் பண்டிகை சிராவண பூர்ணிமாவில் வருகிறது இதற்கு, வயதோ, ஜாதி பேதமோ கிடையாது சகோதரன் கையில் அன்பு சகோதரி ராக்கி கட்டி அவனுடைய சுபீட்சத்திற்குப் பிரார்த்தனையும் செய்கிறாள் ,பதிலுக்கு அவளுக்கு நிறைய பரிசுகள் கிடைக்கின்றன முன் காலத்தில் ராஜபுத் வம்சத்தில் போருக்குக் போகும் முன் இரத்த திலகமிட்டு,கையில் ரக்ஷையும் கட்டி “வெற்றியுடன் திரும்பி வா”என்று வழி அனுப்பி வைப்பார்கள்.இவர்களில் சிலர் முஸ்லிம் பெண்ணையும் சகோதரியாக எற்றது உண்டு.மஹாபாரதக் காலத்திலும் ஸ்ரீ கிருஷ்ணர் திருதராஷ்டிரருக்கு வரப் போகும் அபாயத்திலிருந்து காப்பாற்றிக் கொள்ள ரக்ஷை கட்டிக்க சொல்கிறார்

    பலி சக்கிரவர்த்தி விஷ்ணுவின் பெரிய பக்தர்.விஷ்ணு பலியின் ராஜ்யத்தைக்காக்க சத்தியம் செய்து கொடுத்ததால் வைக்குண்டத்தை விட்டு மஹாபலியிடம் வருகிறார்.சில நாட்கள் பொறுத்துப்பார்த்த மஹாலட்சுமி அந்தபிரிவைத் தாங்கமுடியாமல் மஹாவிஷ்ணுவிடம் இருக்கப்பிரியப்பட்டு தான் ஒரு சாதாரண பெண்மணிப்போல் வேஷம் தரித்து பலியிடம் வந்தாள் . “மஹாராஜா என் கணவர் வரும் வரை நான் இங்கு தங்க அனுமதி வேண்டும் “என்று கூறியபடி அடைக்கலம் புகுந்தாள் நாட்கள் நகர்ந்தன.

    அன்று பௌர்ணமி தினம். அன்று மகாராஜாவிடம் சென்று அவரை சகோதரனாக பாவித்து ராக்கி கட்டி விட்டாள்.ராக்கி கட்டிவிட்டால் அந்தச்சகோதரர் ஏதாவது வெகுமதி தருவது வழக்கம். ” சகோதரி உனக்கு என்ன வேண்டும் சொல் தருகிறேன்” ” நான் என் கணவருடன் சேர்ந்து வாழவேண்டும்.அது உங்கள் கையில் தான் இருக்கிறது என் கணவர் இங்கு தான் இருக்கிறார்” ‘யார் அவர் ? சொல் சகோதரி நான் உனக்கு உதவுகிறேன்.” “அவர்தான் வைகுந்ததிலிருந்து இங்கு வந்திருக்கும் மகாவிஷ்ணு. அவரை விட்டு பிரிந்து இருக்க முடியாமல் நான் இங்கு ஒரு சாதாரண பெண்மணிப்போல் வேஷம் தரித்து இங்கு வந்தேன் .தயவு செய்து அவரை என்னுடன் அனுப்பி வைக்கவும் ” மகாபலியும் இதைக்கேட்டு பரவசமாகி லட்சுமியை விஷ்ணுவுடன் சேர்த்து திரும்பவும் வைகுந்தத்திற்கு அனுப்பி வைத்தார் .அவருக்கு உதவிய திருமாலுக்காக அவர் தனது ராஜ்யத்தையே தியாகம் செய்தார்.லட்சுமி மஞ்சள் கயிறை அவர் கையில் கட்டியதால் “மஞ்சள் ராக்கி” என்ற பெயருடன் இது கொண்டாடப்படுகிறது . இது வடக்கில் நம்பும் புராணக் கதை. ராக்கி இரண்டு ரூபாயிலிருந்து ஆரம்பித்து பல ஆயிரம் ரூபாய்க்கும் மேல் வாங்கமுடியும் சாதாரண வழவழப்பான நூலிலிருந்து ஆரம்பித்து நவரத்தினங்கள் பதித்த ராக்கி வரை விற்கப்படுகின்றன

    ஒரு சமயம் முகம்மதிய மன்னனுக்கு ராஜபுத் ராணி ராக்கி அனுப்பித்து வைத்தாள்..

    முகமதிய மன்னர் ஹுமாயூனுக்கும் சித்தூர் அரசியான ராணி கர்ணவதி ராக்கி அனுப்பித்து வைத்து அவரை சகோதரராக நினைப்பதாகவும் தனக்கு உதவும்படியும் கூறினாள்.அப்படி என்ன ஆபத்து அவளுக்கு வந்தது?குஜராத் சுல்தான் பஹதூர்ஷா சித்தூர் மேல் படையெடுத்தான்.ராணி விதவை என தெரிந்து அவளால் ஒன்றும் செய்யமுடியாது என்ற தைரியத்தில் போர் தொடுத்தான்.ராணி மனமுடைந்துப்போனதால் அந்தப்போரை எதிர்க்கொள்ளும் சக்தி இல்லாமல் போயிற்று .அதனால் தான் தில்லியில் ஆண்டு வந்த ஹூமாயூனுக்கு ராக்கி அனுப்பித்து தன்னையும் தன் ராஜ்யத்தையும் காக்கும்படி வேண்டிக்கொண்டாள்.சக்கர்வர்த்தி ஹுமாயூனும் ராக்கியைப்பார்த்து மனம் நெகிழ்ந்து அவளுக்கு உதவ சைன்யத்தை அனுப்பி வைத்தான்.அதற்குள் பஹதூர்ஷாவின் சேனை கோட்டைக்குள் நுழைந்து விட்டது.ராணி கர்ணவதி தனக்கும் மற்றும் பல பெண்மணிகளுக்கும் அவமானம் ஏற்படகூடாது என நினைத்து தீயை வளர்த்து அதில் குதித்துவிட்டனர் .இதற்குள் ஹுமாயூன் அனுப்பிய சேனை கோட்டைக்குள் நுழைந்து பஹதூர் ஷாவின் சேனையை முறியடித்து ஷா வின் மேல் பல பெண்மணிகளைக் கொன்ற குற்றத்திற்காக கைது செய்தனர் .பின் ஹுமாயூன் ராணி கர்ணவதியின் மகன் விக்ரமஜித் சிங்கிற்கு சித்தூர் ராஜ்ஜியத்தைக்கொடுத்து அவனை மன்னனாக்கி சகோதரி அனுப்பிய ராக்கிக்கு பரிசு கொடுத்துவிட்டார் .ராணி கர்ண்வதி சுவர்கத்திலிருந்து இதைப்பார்த்து மகிழ்ந்திருப்பாள் யமனின் தங்கை யமுனாவும் யமனுக்கு ராக்கி கட்டி விட்டாள் .யமனும் மன மகிழ்ந்து “யார் யார் சகோதரருக்கு ராக்கி கட்டி அவனது வாழ்க்கை வளத்திற்கு பிரார்த்திக்கிறாரோ அவர்களுக்கு நான் பாதுகாப்பு அளிப்பேன்” என்றானாம் இதுவும் வடக்கில் சொல்லும் கதை . மகாபாரதத்தில் ஒரு கதை . ஒரு தடவை கண்ணனின் கையில் அடிப்பட்டு இரத்தம் கசிந்தது .இதைப்பார்த்த பாஞ்சாலி ஓடி வந்து தன் தலைப்பைக்கிழித்து அடிப்பட்ட மணிக்கட்டில் கட்டிவிட்டாள்.கண்ணனும் மனம் நெகிழ்ந்து இன்று முதல் நீ என் தங்கையும் கூட .நான் எப்போதும் உன் பக்கம் இருப்பேன்.” என்றாராம். அதே போல் பாஞ்சலியும் கண்ணனையே முழுவதும் நம்பினாள்.ராக்கிக்கு அத்தனை சக்தி .அத்தனை நம்பிக்கை . எப்போதும் ராக்கி பண்டிகையும் .பூணல் போட்டுக்கொள்ளும் ஆவணியாவட்டமும் ஒன்றாக வரும் என் இனிய வாழ்த்துகள்.

    படத்துக்கு நன்றி: http://astrobix.com/festivals_of_india/raksha_bandhan/default.aspx

     

    Share
  • தமிழ் இணையத்தில் புதிய அலை

    முனைவர் அண்ணாகண்ணன்

    (annakannan@gmail.com)

    (மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள மலாயா பல்கலையில் நடைபெற்ற 12ஆவது தமிழ் இணைய மாநாட்டில் வாசிக்கப்பெற்றது)

    தமிழ் இணைய வெளியின் பரப்பும் அடர்த்தியும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன; ஆழம் கேள்விக் குறியே ஆயினும், இதன் முக்கியத்துவம் பெருகி வருகின்றது.

    இணைய இதழ்களின் பரிணாம வளர்ச்சி

    இணையப் பக்கங்கள், இணைய இதழ்களாக வளர்ந்தன; இணைய இதழ்கள், ஒற்றைத் தன்மையிலிருந்து, பன்முகத்தன்மை கொண்டவையாக மாறின. அத்துடன் நில்லாமல், வலைப்பதிவுகளும் நுண் வலைப்பதிவுகளும் பிறந்தன. இந்த நுண் வலைப்பதிவுகள் பின்னர், சமூக ஊடகங்கள் எனப் பெயர் பெற்றன. இவை, தனி மனித இதழ்கள் எனக் கருதத் தக்கவை. எழுத்து மட்டுமே பெரும்பான்மையாக இருந்த இணையத்தில், நிழற்படங்களும் ஒலி – ஒளித் தரவுகளும் பெருகத் தொடங்கி, பல்லூடக உள்ளடக்கங்கள் வளர்ந்து வருகின்றன. இந்தப் பின்னணியில் இணைய இதழ்களை விரிவான கண்ணோட்டத்துடன் வரையறுத்தல் வேண்டும்.

    எவர் ஒருவர் உள்ளடக்கத்தை உருவாக்குகின்றாரோ, அவர் உள்ளடக்க உற்பத்தியாளர் எனக் கருதத் தக்கவர். இவற்றைப் பெறுவோர், பயனர் ஆவர். இந்த உள்ளடக்கம் வெளியாகும் இடங்கள், இணையத் தளங்களாகவோ, இணைய இதழ்களாகவோ, வலைப்பதிவுகளாகவோ, சமூக ஊடகங்களாகவோ அமைந்திருக்கலாம். பெயரளவுக்கு இவை வெவ்வேறாக இருப்பினும் இவை ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. ஒன்றின் தொடர்ச்சியாக, இன்னொன்று தோன்றியவை. எனவே இவை அனைத்தையும் உள்ளடக்க வெளி எனக் குறிப்பிடுவது பொருந்தும்.

    தமிழ் இணையத்தில் புதிய அலை

    இந்தியாவில் உள்ள இணையப் பயனர்களின் எண்ணிக்கை, 15 கோடியாக உள்ளது. இது, 2013 இறுதிக்குள் 18 கோடியாக வளரக் கூடும் (2013 India Internet outlook – http://techcircle.vccircle.com/2013/02/01/2013-india-internet-outlook/). மேலும், ஃபேஸ்புக் தளத்தின் இந்தியப் பயனர்களின் எண்ணிக்கை, 7.8 கோடியாக உயர்ந்துள்ளது (Facebook India Active Users Up 50% To 78M In Q1-2013 – http://www.medianama.com/2013/05/223-facebook-india-78-million-users/). இந்தியப் பயனர்களின் எண்ணிக்கையில் சரி பாதிக்கும் மேல், ஃபேஸ்புக் தளத்தில் உறுப்பினர்களாக உள்ளனர். இது, சமூக வலைத்தளங்களின் மீது மக்களுக்கு உள்ள ஈர்ப்பினைத் தெள்ளத் தெளிவாகக் காட்டுகிறது. இதில் தமிழர்களின் பங்களிப்பும் குறிப்பிடத்தக்க அளவு உள்ளது.

    இணைய வெளியில் பல்வேறு தேசிய, அரசியல், சமூக, தொழில், கல்விப் பின்புலங்களைக் கொண்ட படைப்பாளர்களும் பயனர்களும் தொடர்ந்து தோன்றிய வண்ணம் உள்ளனர். இதன் நல்விளைவாக, தமிழுக்குப் புதிய புதிய ஆக்கங்கள் அதிகம் கிடைத்து வருகின்றன. இது வரை வெளிப்படாத புதிய பார்வைகளும் அனுபவங்களும் நுணுக்கமான கருத்துகளும் பதிவாகி வருகின்றன. அன்றாட உலக நடப்புகளும் செய்திகளும் அவற்றின் மீதான விமர்சனங்களும் உடனுக்குடன் பதிவாகின்றன.

    தமிழின் முக்கியமான எழுத்தாளர்கள், கலைஞர்கள், அரசியல் புள்ளிகள் எனப் பலரும் இணையப் பரப்பிற்கு வந்துள்ளதோடு, தங்களுக்கெனத் தனித் தனி வலைப்பதிவுகளையும் இணையத்தளங்களையும் உருவாக்கி வருகின்றனர். இணையப் பரிச்சயம் இல்லாத மூத்த எழுத்தாளர்கள் பலருக்கும் அவர்கள் சார்பில் யாரேனும் அவர்களின் ஆக்கங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்கள். இது, இணையத்தில் தங்கள் இருப்பை உறுதி செய்ய வேண்டிய கட்டாயம், தமிழ்ப் படைப்பாளர்களுக்கு ஏற்பட்டிருப்பதை எடுத்துக் காட்டுகிறது.

    பிரபலமானவர்கள் மட்டுமின்றி, இதுவரை வெளியுலகிற்கு வராத பெண்களும் மாணவர்களும் எளிய பணிகளில் இருப்போரும் இணைய வெளிக்கு வந்துள்ளனர். இந்த வகையில் தமிழ் இணையம், இது வரை காணாத புதிய பயனர்களையும் புதிய துறைகளையும் காணத் தொடங்கியுள்ளது. இது, பல்வகையான பரிமாணங்களுடன் நாளும் விரிந்து வருகிறது.

    இலவசம் என்னும் கவர்ச்சி

    தமிழ் இணையப் பயனர்களிடையே இவ்வளவு ஆர்வமும் துடிப்பும் எழுந்துள்ளதற்கு முக்கிய காரணங்களுள் ஒன்று, இணையத் தளங்களில் இலவசமாகக் கணக்குத் தொடங்கி, எவ்வளவு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என்ற வாய்ப்பு.

    வலைப்பதிவுகள் தோன்றிய காலத்தில் பயனர்கள் பலரும் அதில் தங்களுக்கெனத் தனி வலைப்பதிவுகளை உருவாக்கினர். ஒருவரே பல வலைப்பதிவுகளை உருவாக்கினார். அந்த அலை, இப்பொழுது அப்படியே சமூக ஊடகங்களில் எழுந்துள்ளது. இணையத்திற்குப் புதிதாக அறிமுகமாகும் ஒருவர், மின்னஞ்சல் கணக்குத் தொடங்குவதோடு, ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களிலும் கணக்குத் தொடங்குகின்றனர். செல்பேசிகளில் படங்கள் எடுத்து, அவற்றை ஃபிளிக்கர் போன்ற புகைப்படத் தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். விழியங்கள் எடுப்போர், அவற்றை யூடியூப் போன்ற விழியத் தளங்களில் வெளியிடுகின்றனர். இவ்வாறாக, எழுத்து, புகைப்படம், விழியம் ஆகிய கூறுகளில் பல்லூடக உள்ளடக்கம், இணையத்தில் பெரும் பாய்ச்சலைக் கண்டு வருகின்றது.

    புகழ் வேட்கை

    தமிழ் இணையப் பயனர்களைத் தொடர்ந்து உந்திச் செலுத்தும் முக்கிய விசைகளுள் ஒன்று,, அவர்களின் புகழ் வேட்கை. இணையத்தில் கிடைப்பது 15 நிமிடப் புகழ் என முன்பு எழுத்தாளர் சுஜாதா குறிப்பிட்டார். (“இப்போது புதிதாக பிலாக்ஸ் என்று வந்திருப்பது ஒரு விதத்தில் சின்ன வயசில் நாங்கள் எல்லோரும் நடத்திய கையெழுத்துப் பத்திரிகையின் மறுவடிவம்தான். ‘இதோ பார் என் கவிதை’ ‘இதோ பார் என் கருத்து’ ‘இதோ பார் உலகுக்கு என் உபதேசம்’ என நானும் இருக்கிறேன் நண்டுவளையில் என்று. ஒவ்வொரு தனிமனிதனும் தன்னைப் பிரகடனப்படுத்த கைகளைக் குவித்து ஏதோ ஒரு திசையில் குரல் கொடுத்துவிட்டு, யாராவது பதில் தருகிறார்களா என்று அவரவர் பதினைந்து நிமிஷப் புகழுக்குக் காத்திருப்பதுதான் இது! பிரபஞ்சத்தில் வேற்று கிரகங்களில் உயிரினங்கள் இருக்கிறதா என்பதை இப்படித்தான் தேடுகிறார்கள்” – சுஜாதா – http://agaramuthala.blogspot.in/2004/08/blog-post_24.html) அது, இப்போது, ஓரிரு நிமிடங்கள் தாக்குப் பிடிப்பதே அரிதாக இருக்கிறது. ஏனெனில் நொடிக்கு நொடி, புதிய புதிய உள்ளடக்கங்கள் பெருகி வரும்போது, ஒவ்வொன்றையும் ஆழ்ந்து படிப்பதற்குப் பயனர்களுக்கு நேரமும் பொறுமையும் இருப்பதில்லை. எனவே, அந்தந்தப் படைப்பாளர்களின் புகழ் ஈட்டும் அவகாசம் குறைந்துவிடுகிறது.

    ஆயினும், தான் கவனிக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் அவர்களிடையே வலுப்பெறுகிறது. இதுவே, அவர்கள் இணையத்தில் மிக அதிகமான நேரத்தைச் செலவிடத் தூண்டுகிறது. நட்பையும் உறவையும் புதிய செய்திகளையும் வாய்ப்புகளையும் தேடி வருகின்ற பயனர்கள், இயல்பாகவே, புகழை விரும்புகின்றனர். தாங்கள் கவனிக்கப்பட வேண்டும் என்பதில் இவர்களுக்கு உள்ள ஆர்வம், நாளுக்கு நாள் உச்சமடைந்து, ஒரு கட்டத்தில் இணைய வெளிக்கு இவர்களை அடிமையாக்கிவிடுகிறது.

    பயனராகத் தன் பயணத்தைத் தொடங்கும் ஒவ்வொருவரும் தாங்களே படைப்பாளராகப் பரிணமிக்கின்றனர். இதன் மறுபக்கமாக, உள்ளடக்கம் தீர்ந்துவிடுகிற நேரத்திலும் எதையாவது வெளியிட வேண்டிய உந்துதல் இவர்களுக்குப் பிறக்கிறது. இது, ஆழமற்ற உள்ளடக்கத்துக்கு இட்டுச் செல்வதோடு, மொக்கைகளும் மரண மொக்கைகளும் பின்னூட்டக் கும்மிகளுமாக வளர்ச்சி அடைகிறது.

    இணையத்திலிருந்து அச்சுக்கு

    அச்சில் வெளியானவற்றை இணையத்தில் ஏற்றுவது, ஒரு புறம் நடந்துகொண்டிருக்கிறது. அதே நேரம், இணையத்தில் வெளியானவற்றிலிருந்து தேர்ந்தெடுத்து, அச்சில் வெளியிடுவதும் பெருகி வருகிறது. ஆனந்த விகடன், குமுதம், குங்குமம், பாக்யா உள்ளிட்ட பல்வேறு அச்சிதழ்களில் இந்தப் போக்கினைக் காணலாம். அத்துடன் இணையத்தில் எழுதத் தொடங்கிய பலரும், அச்சிதழ்களிலும் எழுதி வருகின்றனர். மேலும் டுவிட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களிலும் இணைய இதழ்களிலும் பலர் வெளியிடும் கருத்துகள், பரபரப்பை ஏற்படுத்துவதோடு, அச்சிதழ்களில் அவை செய்திகளாக இடம் பிடிக்கின்றன. இவை, இணையத்தளங்கள், சமுதாயத்தின் மீது செலுத்தும் தாக்கத்திற்கு ஒரு சான்றாகும்.

    குறையும் நம்பகத்தன்மை

    இணையப் பரப்பில் வெளியாகும் ஆக்கங்கள், பெரும்பாலும் தாங்கள் முன்வைக்கும் செய்திக்கும் தகவலுக்கும் உரிய சான்றுகளை முன்வைப்பதில்லை. அந்தச் செய்தியை வழங்கிய செய்தியாளர் யார், முகாமை நிறுவனம் எது, தகவலைத் தெரிவித்தவர் யார்? போன்ற அடிப்படைத் தகவல்கள் கிடைப்பதில்லை. எனவே, யூகத்தின் பேரிலும் கற்பனையாகவும் செவிவழி அறிந்தவையாகவும் செய்திகள் வெளியாகும் சாத்தியங்கள் அதிகரித்துள்ளன. நடுநிலைத் தன்மையுடன் செய்திகளை அணுகாமல், ஒரு செய்தியில் தங்களுக்குத் தேவையான பகுதியை மட்டும் வெளியிடும் வாய்ப்பும் உள்ளது. இதனால் வதந்திகள் பரவிடவும் சமூக இயல்பு நிலை கெடுவதற்கும் அதிக வாய்ப்புகள் உள்ளன.

    அவதூறுகள் – தாக்குதல்கள்

    இணைய வெளியில் அவதூறுகளுக்கும் தாக்குதல்களுக்கும் அதிகப் பார்வையாளர்கள் கிடைக்கின்றனர். எனவே, பிரபலம் அடைய வேண்டும் என விரும்புவோரும் அடைந்த பிரபலத்தைத் தக்கவைக்க விரும்புவோரும் இவற்றில் அதிக முக்கியத்துவம் அளித்து வருகின்றனர். இது, பல்வேறு குழுக்களை உருவாக்கி வருவதோடு, நேரத்தைப் பெருமளவு வீணடிப்பதாகவும் மன உளைச்சலைப் பெருக்குவதாகவும் அமைகின்றது.

    கருத்துச் சுதந்திரத்துக்குப் பாதிப்பு

    இணையப் பரப்பில் வெளியாகும் பல்வகை ஆக்கங்களைப் பலரும் மவுனமாகத் துய்ப்பதோடு நின்றுவிடுவர். துய்த்த அனைவரும் பின்னூட்டம் இடுவதில்லை. ஆயினும் பயனருள் சிலர், சற்று சுதந்திர உணர்வுடன் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தி வருகின்றனர். சர்ச்சைக்கு உரிய ஆக்கங்களில் கார சாரமான பின்னூட்டங்கள் வரத் தொடங்கி, பின்னர் அது, பரவத் தொடங்குகிறது. இதன் நீட்சியாக, தரக் குறைவான, பொருத்தமில்லாத பின்னூட்டங்கள் மட்டுமின்றி, எரித (ஸ்பாம்) மறுமொழிகளும் மிகுதியாக வருகின்றன. இதனால், இணைய வெளியில் பின்னூட்டங்கள் பெரும்பாலும் மட்டுறுத்தப் பெறுகின்றன. மேலும் பல இணையத்தளங்களில் மறுமொழி இடும் வாய்ப்பு, முடக்கப்பெற்றுள்ளது. இத்தகைய நடவடிக்கைகள், இணைய இதழ்களில் கருத்துப் பரிமாற்றத்தை மட்டுப்படுத்துகின்றன. மேலும் வெளிப்படைத்தன்மை குறைந்து, வாசகர்களின் சுதந்திரம் குறைந்துவிடுகிறது. இணைய இதழ்கள், இருவழிப் பாதையாக இல்லாமல், ஒருவழிப் பாதையாகக் குறுகி வருகின்றன.

    பொதுவான இணைய இதழ்களிலும் பிறரின் வலைப்பதிவுகளிலும் பக்கங்களிலும் கருத்துகளைப் பதிவதற்குக் கட்டுப்பாடுகள் உள்ளன. எனவே, ஒருவர் தன் தளத்தில், வலைப்பதிவில், பக்கத்தில் தாம் விரும்புவதைப் பதிய முனைகின்றார். ஆனால், இங்கும் எதை வேண்டுமானாலும் எழுதலாம், பகிரலாம் என்ற நிலை இல்லை. பொய்யாகவும் அவதூறாகவும் அடுத்தவர் மனம் புண்படும் வகையிலும் பதிவாகின்ற உள்ளடக்கங்களை வெளியிடுவோர், வழக்குகளைச் சந்திக்க வேண்டிய நிலை உள்ளது. இதற்கென இந்தியாவின் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தில் 66A என்ற திருத்தம் மேற்கொள்ளப்பெற்றது. இந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தவண்ணம் உள்ளன.

    அறிவுச் சொத்துகளுக்கு ஆபத்து

    இணைய இதழ்களில் செய்திகள் தொடங்கி, பல்வகை படைப்பிலக்கியங்களும் புகைப்படங்களும் பல்லூடக உள்ளடக்கங்களும் இடம்பெற்று வருகின்றன. இவற்றைத் துய்க்கும் பயனர்கள், தங்கள் தளங்களிலும் சமூக ஊடகங்களிலும் அவற்றைப் பகிர்ந்து வருகின்றனர். ஆனால், மூலத் தரவுகளை எங்கிருந்து பெற்றோம் என்ற அடிப்படைத் தகவலைக் கூட அறிவிக்காமல், அவரவர் விருப்பத்துக்கு வெளியிடுகின்றனர். சிலர், அவற்றைத் தங்கள் பெயரிலேயே வெளியிடுவதும் நிகழ்கிறது. இதனால், இணையப் படைப்பாளிகளின் அறிவுச் சொத்துகளுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

    போலி அடையாளங்கள்

    இணையத்தில் பொய்யான பெயருடன், படத்துடன், போலி அடையாளத்துடன் வலம் வருவோர், அதிகரித்து வருகின்றனர். பெண்களின் பெயர்களில் / படங்களில் கணக்குத் தொடங்குவோர் பலர். திரை நட்சத்திரங்களின் பெயர்களில் உள்ள கணக்குகள் பலவும் அவர்களுடையவை அல்ல. இது தொடர்பாகப் பலரும் காவல் துறையில் புகார் அளித்துள்ளனர். பண மோசடி உள்பட பல்வேறு குற்றங்களும் இணையத்தில் நடைபெற்று வருகின்றன. எனவே, பயனர்கள், இத்தகைய விவகாரங்களில் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். தங்கள் தனிப்பட்ட விவரங்களை அளிப்பதற்கு முன், அவர்கள் நம்பகமானவர்களா என உறுதி செய்துகொள்ள வேண்டும்.

    பயனர்களின் கவனத்திற்கு

    ஆண்டுதோறும் மாதம்தோறும் நாள்தோறும் பொழுதுதோறும் இணையப் பயனர்கள் அதிகரித்து வருகின்றனர். முழு மக்கள் தொகையும் இணையத்தில் தங்களை இணைத்துக்கொள்ளும் காலம், வெகு தூரத்தில் இல்லை. இலவச மடிக்கணினிகளும் இணையக் கட்டணங்கள் குறைப்பும் இணைய வேகம் அதிகரித்து வருவதும் சமூகத்தில் பெரும் மாற்றங்களை விரைவில் நிகழ்த்த உள்ளன.

    இந்தச் சூழ்நிலையில், இணையப் பயனர்களின் உரிமைகளையும் கடமைகளையும் பொறுப்புணர்வையும் எச்சரிக்கை உணர்வையும் அவர்களுக்கு உணர்த்த வேண்டிய தேவை எழுந்துள்ளது. செய்யத் தக்கவை, செய்யத் தகாதவை ஆகியவற்றில் அவர்களுக்குத் தெளிவு தேவை. தங்கள் செயல்பாடுகள் ஏற்படுத்தக் கூடிய விளைவுகளை இணையப் பயனர்கள் அவசியம் உணர வேண்டும். இணையத்தில் தங்கள் நேரத்தை வீணடித்துவிடாமல், அதே இணையத்தைக் கொண்டு, தங்கள் நேரத்தைச் செம்மையாகப் பயன்படுத்துவது எப்படி என்பதை அவர்கள் கற்க வேண்டும்.

    இத்தகைய பண்புகள் கொண்ட தமிழர்கள், தமிழ் இணையத்திற்கு அளப்பரிய பங்காற்றிட முடியும். அதன் மூலம், தமிழ் மொழியும் தமிழ்ச் சமூகமும் புதிய உயரங்களை எட்ட முடியும். உலகம் முழுவதும் பெரும் மறுமலர்ச்சியையும் உயிரோட்டத்தையும் தோற்றுவிக்க முடியும். இவை அனைத்தும் அலை அலையாய்ப் புறப்படும் புதிய பயனர்களின் கைகளிலேயே உள்ளது.

    Share
  • ஆண்-பெண் நட்புறவு

    ஜோதிர்லதா கிரிஜா

    ஆண்-பெண் நட்புறவின் சாத்தியம் பற்றிய கேள்வியைப் பிரபஞ்சன் அவர்களின் கட்டுரை (புதிய தலைமுறை (23.2.2012) யின் சில பகுதிகள் எழுப்புகின்றன. அந்தக் கேள்வியை மட்டுமே தொட்டு இந்தக் கட்டுரை எழுதப்படுகிறது.

    ஆண்களும் பெண்களும் கலந்து பழகவே கூடாது என்பதில் நம் முன்னோர்கள் காலம் காலமாக மிகப் பிடிவாதமாக இருந்து வந்துள்ளார்கள். இது முழுவதுமாய் ஏற்கத்தக்கதன்று என்பதே எனது கருத்தாகவும் இருந்து வந்துள்ளது. ஒன்று சொன்னால் நம்புவீர்களா? தோழிகளைக் காட்டிலும் எனக்குத் தோழர்களே அதிக எண்ணிக்கையில் உள்ளனர்! ஆண்களது நட்பு உயர்வானது, நட்புக்கு ஆண்களே அதிகம் உரியவர்கள் என்பதே எனது கருத்து. நட்பைப் பொறுத்த வரையில், பெண்களைக் காட்டிலும் ஆண்களே சிறந்த நண்பர்கள் என்பதாய், ‘இன்றும் நாளையும் இளைஞர்கள் கையில்’ எனும் எனது நூல் ஒன்றில் நான் குறிப்பிட்டிருந்ததை ஒரு பத்திரிகை ஆசிரியர் எடுத்தெழுதியிருந்ததோடு அது பற்றிய தமது வியப்பையும் வெளிப்படுத்தியிருந்தார். கட்டுரையின் தொடக்கத்தில் இதைக் குறிப்பிட ஒரு பொருத்தமான காரணம் இருக்கிறது. பெண்ணுரிமைவாதி என்பதோடு, ஆண் எதிர்ப்பாளி என்பதாகவும் நான் அறியப்பட்டு வந்துள்ளதால், எப்போதும் அப்படி இல்லை என்பதைச் சுட்டிக்காட்டும் பொருட்டே இது இங்கே குறிப்பிடப்படுகிறது!

    ஆண்-பெண் நட்புறவில் இங்கே ஆணுக்கு எதிராய் நான் சொல்லப் போகும் கருத்தை என்னைப்பற்றிய ஏற்கெனவே இருக்கக்கூடிய கணிப்பின் அடிப்படையில் விமர்சித்தல் சரியாக இருக்காது என்பதை எடுத்துச் சொல்ல இந்தச் சுயத் தம்பட்டம் தேவைப்படுகிறது. மன்னிக்கவும்.

    ஆண்களுடன் பழகுவது தீமை பயக்கும் என்பதாய்ச் சின்னஞ்சிறு வயதிலிருந்தே ஒரு பெண்ணுக்குச் சொல்லப்பட்டு வருகிறது. இது தவறானது என்று அறவே புறந்தள்ளிவிட முடியாது. பத்து வயதுச் சிறுவர்கள் கூட நம்பத்தகுந்தவர்கள் அல்லர் என்பதே உண்மை! விகாரங்களைத் தூண்டும் ஊடகங்கள் இல்லாத அந்த நாளிலேயே இப்படி யெனில், இந்த நாள் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. ‘எல்லாத்துக்கும் சின்னவன்; ஆனா, கல்யாணத்துக்கு மட்டும் பெரியவன்’ என்பதாய் ஒரு தமிழ்ப் பழமொழி உண்டு. இது பற்றிய அறிவால்தான் நம் பெரியவர்கள் ‘ஆம்பளப் பசங்களோட வெளையாண்டா, காது அறுந்து போகும்’ என்று பெண் குழந்தைகளை அச்சுறுத்தி வந்தார்கள் போலும்.

    ஒரு பெண்ணோடு பழகும் போது ‘இவள் ஒரு பெண்’ என்கிற நினைவையும் நினைப்பையும் அகற்றி அவளை ஒரு நண்பணைப் பார்ப்பது போல் ஒரு தோழியாக மட்டுமே பார்ப்பவர் ஆண்களில் அரிது என்பதே கசப்பான உண்மை. இத்தகைய அரிய ஆண்களை மட்டுமே தன் உள்ளுணர்வால் கண்டுணர்ந்து பழகும் கெட்டிக்காரத்தனம் பெண்ணுக்கு இருந்தால்தான் அவள் உருப்படியாக மீண்டு வர முடியும்!

    இயல்பான உள்ளுணர்வு பெண்ணுக்கு உண்டு. அது இறைவன் அவளுக்கு அளித்த கொடை. முதுகுக்குப் பின்னால் இருந்தபடி எவரேனும் முறைத்தாலும் திரும்பிப் பார்க்கும் உள்ளுணர்வு அவளது பிறப்பியல்பு. பெண் அதைச் சரியாகவோ, முழுமையாகவோ பயன்படுத்திக்கொள்ளாத போதுதான் அவள் கண்மூடித்தனமாக ஆணை நம்பி ஏமாந்து போகிறாள். தனது உள்ளுணர்வைப் புறக்கணிக்காமல், அதை ஏற்று நண்பர்களைத் தேர்ந்தெடுக்கும் பெண் ஏமாந்து போவதில்லை. எதிர்ப்பாலைச் (Opposite sex) சேர்ந்தவனாக ஆண் நண்பன் இருப்பதால் அதிகப்படியாக நிகழக் கூடிய வன்னுகர்வு எனும் ஆபத்தைத் தவிர்த்தல் கட்டாயமாகிறது. ஒரு பெண் இன்னொரு பெண்ணைத் தோழியாக்கிக் கொள்ளும் போது பாலுணர்வு சார்ந்த இந்தக் கசப்பான ஆபத்து அவளுக்கு இல்லை. எனவே தன் உள்ளுணர்வைச் சார்ந்துதான் ஒருத்தி தன் தோழியைத் தேர்ந்தெடுத்தாக வேண்டும் என்கிற இன்றியமையாத் தேவையும் இல்லை. சண்டை வரும் போது விலகவோ, விலக்கவோ செய்யலாம். (பெண்களிடையே சண்டை அடிக்கடி வரும்!)

    தன்னோடு வெறும் நண்பனாக மட்டுமே பழகி வந்துள்ள நிலையிலும் – அது புனிதமான நட்பு மட்டுமே என்பது இரு தரப்பிலும் ஒப்புக்கொள்ளப்பட்ட நிலையிலும் – திடீரென்று அந்த நண்பன் அத்துமீறிய வக்கிரச் செயலில் ஈடுபடும்போது, அந்தப் பெண் அதிர்ந்து போகிறாள். சின்னச் சின்ன அத்து மீறல்கள் ஏற்படும் போதே, அதைப் புரிந்து கொள்ளும் – ஆனால் அதை விரும்பாத – பெண் அவனைப் புறந்தள்ளி விடுவாள்.

    ஆனால், ஆண் இவ்விஷயத்தில் தந்திரமானவன். நம்ப வைத்துக் கழுத்தறுப்பவன். தன்னைப் புரிந்துகொண்டு பெண் தன்னைத் தவிர்த்துவிடுவாளோ என்னும் உணர்வால், சிறு அத்து மீறல்களைக் கூடத் தவிர்த்துக் கண்ணியவானைப் போல் நடப்பதில் (நடிப்பதில்) மிகுந்த கவனம் காட்டி அவளது நன்மதிப்பைச் சம்பாதித்த பின் பிரபஞ்சன் குறிப்பிட்ட அந்த ஐந்து இளைஞர்களைப் போல் மிகக் கீழ்த்தரமாக நடந்து கொள்ளுபவன். தன் உண்மையான தன்மையை அவளுக்குக் காட்டிக்கொடுக்கக் கூடிய சிறு அத்து மீறல்களைஅவன் செய்ய மாட்டான்! தோதான வாய்ப்பின் போது, எடுத்த எடுப்பிலேயே வன்னுகர்வுதான்! அந்த வாய்ப்பையும் அவனே ஏற்படுத்திவிடுவான்.

    எனவே, ஒரு புற்றில் பாம்பு இருக்கிறதா, அல்லது எறும்பு இருக்கிறதா என்றெல்லாம் ஒரு பெண் அதனுள் கையை விட்டுப் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. அது தேவையற்ற அபாய நிலை (risk). ஆக, (100%) மிக, மிக, மிகச் சரியான கணிப்பு இருந்தால் மட்டுமே அவள் ஆண் நண்பர்களைச் சேர்த்துக்கொள்ளலாம்! மிக மிக நல்லவர்கள் என்கிற மதிப்பீடே யானாலும், அவர்களை வைக்க வேண்டிய இடத்தில் வைப்பதுதான் அவளுக்கு நல்லது. ஏனெனில், மிகுந்த கெட்டிக்காரத்தனமும் கவனமும் உள்ள பெண்களே கூட இந்தத் தேர்வில் ஏமாந்துவிடக்கூடும்.

    காதலித்துத் திருமணம் செய்துகொண்டு, அவளோடும் அவள் பெற்றுத் தந்த குழந்தைகளோடும் வாழும் ஆண்களே சமயங்களில் தம் பெண் நண்பர்களிடம் “வழிவது” பற்றிய கதைகள் காதில் விழுவதுண்டு. பெரும்பாலான ஆண்கள் முழு நம்பிக்கைக்கு உரியவர் அல்லர் என்னும் காரணத்தால், அவர்களுடன் பழகும் பெண்களும் சரி, தோழிகளுடனான தன் கணவனின் நடத்தையை நம்பாத பெண்களும் சரி, வீண் மனக் கலக்கம், குழப்பம், கவலை ஆகியவற்றுக்கு ஆளாகிறார்கள் என்பதே உண்மை. (பெண்களிலும் “வழிசல்கள்” உண்டென்றாலும், அவர்களின் எண்ணிக்கை மிக, மிகக் குறைவே.)

    பல்லாண்டுகள் எந்த விதச் சலனமோ, வக்கிரமோ இல்லாமல் பழகும் ஆணே கூடச் சறுக்கிவிடுவதை அறிந்துள்ள பெண் தன் கணவனையும் அவனுடைய தோழியையும் சந்தேகக் கண்கொண்டு பார்க்க முற்பட்டுவிடுகிறாள். சென்ற ஆண்டு “கல்கி” யில் வந்த துர்வாசரின் “உள்ளும் புறமும்” எனும் தொடர்கதை (நான் பாதியிலிருந்து முடிவுவரை படித்தது) இதைத்தான் மிக அழகாய், மிக இயல்பாய்ச் சொல்லுகிறது.

    ஆணின் நெருக்கமான நட்பு ஒரு பெண்ணுக்கு இன்றியமையாத தேவை இல்லை. ஆணின் நட்பு இருந்தால்தான் அவளது பிறவி சாபல்யம் அடையுமா என்ன!

    பெண்ணையும் ஆணையும் பால் வேற்றுமையால் பிரித்து வைப்பதும், அவர்களை நெருங்கிப் பழகவிடாமல் தடுப்பதும்தான் ஆண்களின் கவர்ச்சிக்கும், அதன் விளைவான தவறான நடத்தைக்கும் அடிகோலுகிறது என்பது பச்சைப் பொய்! அபத்தத்திலும் அபத்தமான கருத்து!

    பெண்களோடு அவர்களைப் பழக விட்டாலும். பழகவிடாவிட்டாலும், அவர்கள் காட்டுகிற இயல்பு ஒன்றுதான்! அதை மாற்றுவது மிக, மிக………மிகக் கடினம். எனவே, பெண்கள் கவனமாக இருத்தல் வேண்டும் என்பது அவளது பத்திரமும், நலனும் சார்ந்த கோட்பாடாகும். கிழவனோ, குமரனோ, மணமானவனோ, பள்ளி /கல்லூரி மாணவனோ, சிறுவனோ, இவ்வனைவரிலும் பெரும்பாலோர் பெண்ணை உடலுறவு சார்ந்த துய்பொருளாகத்தான் பார்க்கிறார்கள். எனவே, விஷப்பரீட்சை செய்து கொண்டிராமல், நம்பிக்கைக்கு உரியவன் என்பதே தனது கணிப்பானாலும், ஒரு நண்பனைக் குறிப்பிட்ட தொலைவில் வைத்து ஓர் எல்லை வகுப்பதே அறிவுடைமையாகும். நட்பின் தொடக்கத்திலேயே அதை அவனுக்குப் புரிய வைப்பவள் இன்னும் அதிக அறிவாளியாவாள்!

    நமது கல்வித் திட்டம் குறைபாடு உடையது. பெண்களைச் சகோதரிகளாகவும், சக உயிர்களாகவும் கருதும் பக்குவத்தையும், அவர்களைக் காக்கும் ஜடாயுத்தனத்தையும் சிறு வயது முதலே ஆண்களுக்குக் கற்பிக்கத் தவறியுள்ள கல்வித் திட்டம் நம்முடையது.

    வட இந்திய ஊர் ஒன்றில் அண்மையில் நடந்தது நினைவுக்கு வருகிறது. ஒரு நண்பனுடன் நடந்து சென்றுகொண்டிருந்த இரண்டு பெண்களைச் சில கயவர்கள் வழிமறித்து வன்னுகர்வுக்கு முயல, அருகே வயல் ஒன்றில் வேலை செய்துகொண்டிருந்த ஆணகள், கூக்குரலிட்டு உதவி கோரிய அந்தப் பெண்களை நோக்கி ஓடி வந்து, அவர்களுக்கு உதவாமல், ஆனால், கூட்டு வன்னுகர்வில் தாங்களும் கலந்து கொண்ட கொடுமையை என்ன சொல்ல! பொதுவாக இதுதான் ஆண்களின் ‘லச்சணம்’ ! இது போன்ற நேரத்தில் பெண்ணைக் காப்பற்றத் தங்கள் உயிரையே தியாகம் செய்துவிடும் ஆண்களும் உண்டுதான். மறுக்கவில்லை. ஆனால் அவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம் என்பதால், ஆணின் பொதுவான இயல்பின் அடிப்படையில் தான் ஒரு பெண் தன் நடவடிக்கைகளை அமைத்துத் தன்னைக் காத்துக்கொள்ள வேண்டும்.

    ஆண்களும் பெண்களும் கலந்து பழகினால் இத்தகைய குற்றங்கள் குறையும் என்று சில மனத்தத்துவ வல்லுநர்கள் கூறுவது வெறும் பிதற்றல். இதனால் எல்லாம் ஆணின் பிறவி இயல்பை மாற்றிவிட முடியாது. நற்சிந்தனையும், உயரிய எண்ணங்களும், பெண்களை நுகர்பொருளாய்ப் பார்க்காமல் சகமனிதர்களாய்ப் பார்க்கும் நியாய உணர்வும் கொண்ட பிரபஞ்சன் போன்ற சிலருக்கு இந்த உண்மை கசக்கும்தான்.

    எனவேதான் நல்லிதயம் படைத்த ஆண்கள் சிலர் (மகாபாரத தருமபுத்திரர் போல்) தங்களைப் போன்றே மற்றவர்களையும் எடை போட்டு ஆண்-பெண் நட்புக்கு வக்காலத்து வாங்குகிறார்கள். அவ்வாறு இல்லாத பிற ஆண்களும் கூட இதனை ஆதரிக்கிறார்கள் – ஆனால், வேறு உள் நோக்கத்துடன். அவர்கள் காட்டில் மழை பெய்யுமன்றோ! அதற்காக!

    நன்றி – தினமணி

    ……..

    jothigirija@live.com

    Share
  • வெற்றிக் கனியை எட்டிப் பறிப்போமா! (23)

    பவள சங்கரி

    tumblr_lxsk8jNp831qfwg0ho1_500
    குணப்படுத்தும் வல்லமையாளராவோம்!

    பல நேரங்களில் நம்மை அனைவரும் தாங்கிப் பிடிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். நம்மோடு பழகுபவர்கள் நமக்கு பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்துபவர்களாகவும், அன்பைப் பொழிபவர்களாகவும் இருக்க வேண்டும் என்று ஏங்குகிறோம். ஆனால் யதார்த்த வாழ்க்கையில் இது எந்த அளவிற்கு சாத்தியமாகும் என்று சிந்திக்க வேண்டும். ஒன்று கொடுத்தால்தான் ஒன்றைப் பெற முடியும். அந்த வகையில் ஒருவருக்குத் தேவையான நேரத்தில் நம் உதவிக்கரங்களை நீட்டவும் தயங்கக்கூடாது. எந்த அளவிற்கு அடுத்தவரின் நம்பிக்கைக்கு உரியவராக நடந்துகொள்ள முடிகிறதோ, அந்த அளவிற்கே அவரும் நம்மீது நம்பிக்கை கொள்ள முடியும். இதற்காக நாம் பெரிய தியாகியாகவோ அல்லது அவரைவிட அறிவிலும், மனோவலிமையிலும் உயர்ந்து இருப்பவராகவோ அல்லது இருப்பதாக நடிப்பவராகவோ இருக்க வேண்டியத் தேவையோ இல்லை. ஆனால் அதற்காகச் சில குறுக்கு வழி முறைகளைப் பின்பற்றுவதுதான் மிகவும் சங்கடப்படுத்தக் கூடியதொரு செயலாகிவிடும். பொதுவாகவே, மனக்குழப்பத்திலோ அல்லது பிரச்சனைகளிலோ இருப்பவர்களுக்கு அறிவுரை சொல்வதைக்காட்டிலும், அவர்களுடைய பிரச்சனைகளுக்கு பொறுமையுடன், சிறிது செவி கொடுத்தால் போதும். மனபாரம் குறைந்து ஆறுதல் பெற முடியும். அத்தோடு இல்லாமல் தன்னுடைய வாழ்க்கையின் ஒரு மிக முக்கியமான நபராகவும் நினைக்கக்கூடும். தனக்காக எதுவும் செய்யக்கூடியவர் என்ற நம்பிக்கையுடன் நிம்மதி கொள்ளமுடியும்.

    நம் மனதை அடக்கி வாசிக்கச் செய்யும் மற்றொரு வழி, தற்காலிகமாக நம் மனவோட்டத்தின் வேகத்தைக் குறைப்பதுதான். அதாவது அடுத்தவரைப் பற்றி அதிகமாக அலசி ஆராய்வதோ அல்லது அவரைப் பற்றிய ஒரு தீர்மானத்திற்கு வருவதோ என்று எதுவும் செய்யாமல் திறந்த மனதுடன் பழக ஆரம்பிக்கும்போது, நாம் உதவி செய்யும் வாய்ப்பிற்கும் தடையேற்பபடாது. அதிகமாக அதைப்பற்றிச் சிந்திக்க ஆரம்பிக்க முற்படும்போது, நமக்கு கால விரயம் ஆவதாக எழுகிற எண்ணம், நம்முடைய பொறுமையின்மையை வெளிக்காட்டி விடக்கூடும்.

    சுகமும், துக்கமும் புகட்டும் பாடங்கள்!

    திருமணம், குழந்தை பிறப்பு அல்லது வேறு எந்த விதமான கொண்டாட்டமோ – அல்லது பெருந்துக்கமோ, பேரிழப்போ, பெரும் விபத்தோ, நோய் அல்லது இறப்போ இப்படி எதுவாக இருந்தாலும் அதனைக் கூர்ந்து கவனித்தோமானால் உலகிற்கு எடுத்துச் சொல்லும் வகையில் அதிலிருந்து நம் வாழ்வை வளப்படுத்தக்கூடிய ஏதோ ஒரு பாடம் புலப்படும்.

    சுனாமியில் சிக்கித் தவித்து எப்படியோ தப்பித்து ஒரு கூரையின் மீது அடைக்கலம் கிடைத்து, அடுத்து என்ன நடக்கப்போகிறதோ என்று அறியாமல் உயிரை கையில் பிடித்துக்கொண்டிருக்கும் அந்த வேளையில் சட்டையின் உள்பகுதியில் இருந்த கைபேசி அதிசயமாக வேலை செய்கிறது என்று வைத்துக்கொள்வோம். அப்போது அந்த நேரத்தில் அவருக்கு என்ன பேசத் தோன்றும் என்று எண்ணிப்பாருங்கள்! அவர் தனக்கு பணம் கொடுக்க வேண்டியர்கள் பற்றியோ அல்லது பங்குச் சந்தையில் தான் செய்திருக்கும் முதலீடு பற்றியோ சிந்திப்பாரா? இது போன்ற ஒரு மோசமான சூழ்நிலையில் ஒன்றே ஒன்று மட்டும்தான் முன்னால் நிற்க முடியும். அதுதான் ‘அன்பு’ என்பது. இதைத்தவிர வேறு எது நிற்க முடியும்? தான் சேர்த்து வைத்திருக்கும் சொத்தோ, பணமோ, அண்டை வீட்டாரிடம் போட்ட சண்டையோ, இழந்ததோ, மீட்டதோ என எதுவும் தோன்றாது. அன்பு.. அன்பு.. என்ற இந்த ஒன்றைத் தவிர வேறு எதுவும் ஒரு பொருட்டாகாது.

    இன்னும் ஐந்து நிமிடத்தில் உலகம் அழியப் போகிறது என்று தெரிந்தால் என்ன நடக்கும்? உலகில் உள்ள அத்தனை மனிதரும் உடனே போனை எடுத்து தனக்கு நெருக்கமானவர்களிடம் அன்பைப் பொழிவதைத் தவிர வேறு என்ன செய்வார்கள். உண்மையான, கலப்படமில்லாத அந்த அன்பு வெளிப்படும் இல்லையா. திருமண நாளில் உள்ளப் பூரிப்புடன், கைகோர்த்து நடக்கும் சில தம்பதியரால் காலம் முழுவதும் அப்படியே ஏன் இருந்துவிட முடிவதில்லை . ஆரம்பத்தில் இருக்கும் நெருக்கம் போகப்போக குறைவதற்கான காரணம், அந்த விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையின் குறைபாடுதான் அல்லவா. உலகம் அழியப் போகிறது என்று தெரியவந்தால் நமக்குள் இருக்கும் அத்தனை மன வேறுபாடுகளும் நிமிடத்தில் மாறி, உண்மையான அன்பு வெளிப்பட முடியும்போது, மற்ற நேரங்களில் ஏன் அப்படி இருக்க முடிவதில்லை என்று சிந்திக்க ஆரம்பித்தாலே கோபமெல்லாம் பறந்துவிடும் அல்லவா.

    தன் பெற்றோரின் சம்மதமில்லாமல் காதல் மணம் புரிந்த ஒரு பெண்ணின் பெற்றோர் அவளை சுத்தமாக விலக்கி வைத்திருந்தனர். சாலையில், வழியில் கண்டால்கூட முகம் திருப்பிச் செல்லும் அளவிற்கு கோபம் கொண்டிருந்தனர். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு அந்தப் பெண்ணிற்கு மகப்பேறு உண்டானவுடன், அவளுடைய தாய்க்கு மகள் பாசம் வந்துவிட தந்தைக்குத் தெரியாமல் மகளுக்கு ஆதரவு கொடுத்தார். பேரன் பிறந்தவுடன் தாத்தாவிற்கும் பாசம் பொத்துக்கொண்டு வந்துவிட்டது. குடும்பம் ஒரு வழியாக ஒன்று சேர்ந்தது. அவர்கள் இழந்தது ஐந்து ஆண்டுகால உறவை, பாசத்தை. இதை முன்பே யோசித்திருந்தால் அந்த தற்காலிக பிரிவு இருந்திருக்காதே. இதை ஏன் யோசிக்க முடியவில்லை அவர்களால்.. இதே போல கணவனைப் பிடிக்கவில்லை என்று பிரிந்துபோய் தாய் வீட்டோடு பத்து ஆண்டுகளாக இருந்த ஒரு பெண் தன்னுடைய கணவன் கேன்சர் வியாதியால் தனிமையில் கவனிக்கவும் ஆளில்லாமல் துன்பப்படுவது கண்டு மனம் பொறுக்காமல் அவனோடு சென்று சேர்ந்துவிட்டாள். வெகு எளிதாக இந்த இரு சம்பவங்களிலும் மனமாற்றம் ஏற்பட்டிருக்கிறது. கோபம், வெறுப்பு, சகிக்க முடியாத தன்மை என அனைத்தும் அன்பு, பாசம் என்ற சொல்லில் அடிபட்டுப்போய்விட்டது. இவ்வளவு நாட்கள் இதெல்லாம் எங்கு ஒளிந்திருந்தது? இந்த உறவுகளின் அடிப்படையில் சாகாமல் இருந்த அந்த அன்பு விழித்துக் கொண்டிருந்தது. இதை முன்பே யோசித்திருந்தால் இந்த பிரிவு அவசியம் இல்லை என்பதுதானே உண்மை.

    ஒரு இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டு திரும்பி வரும்போது கனமான நம் மனதில், நிலையில்லாத இந்த வாழ்க்கையைப் பற்றி எத்தனை எத்தனை சிந்தனைகள் தோன்றுகின்றன. வாழ்க்கையின் ஓட்டத்தில் ஒரு சகாப்தமே சில மணித்துளிகளில் கரைந்து போய்விடுகிறது. இதை நம்முடைய அன்றாட வாழ்க்கையில் பலரும் பலவிதமான சொற்களில் சொல்வதைக் கேட்க முடிகிறது. அப்படிப்பட்ட இந்த நிலையில்லாத வாழ்க்கையில், தேவையில்லாத சின்ன விசயங்களுக்கெல்லாம் காரணம் கற்பித்து, அப்போதைய மகிழ்ச்சியை, நிம்மதியை ஏன் கெடுத்துக்கொள்ள வேண்டும் . அன்றைய வாழ்க்கையை ஏன் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து பார்க்கக்கூடாது. வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியும், ஒவ்வொரு அங்கமும், நமக்கு ஏதோ ஒரு பாடத்தைக் கற்பிக்கும் ஆசானாகவே இருக்கிறது. அதனை உணர்ந்து, திறந்த மனதுடன் ஏற்றுக்கொண்டு நம் அடுத்த உயரத்தை, நம் வெற்றிக் கனியை எட்டிப் பறிக்க வேண்டியதுதான்!

    தொடருவோம்

    படத்திற்கு நன்றி:

    http://inspirational-images.tumblr.com/

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்!…(70)

    சக்தி சக்திதாசன்

    images (2)

    old-couple-holding-hands

     

     

     

     

     

     

     

     

    அன்பினியவர்களே !

    அன்பான வணக்கங்களுடன் இம்மடலை வரைகிறேன்

    திருமண பந்தம் என்பது இரு மனக்களின் தூய்மையான புரிந்துணர்தலின் வழி ஏற்படும் உறவு அவ்வுறவின் நெருக்கத்தினால் எதிர்பார்ப்பிலாத அன்பு ஒர் மகிழ்ச்சியான திருமண வாழ்விர்கு அடித்தளம் அமைக்கின்றது.

    முந்தைய காலங்களில் இத்திருமணம் என்பது பெற்றோரின் தேர்விற்கமைய உறவினர்களின் ஒப்புதலோடு ஏற்படுத்தப்பட்டது.

    ஆனால் காலமாற்றத்திற்குட்பட்ட சமுதாய மாற்றம் தற்காலத்தில் பெரும்பான்மையான் திருமணங்கள் ஒரு ஆணாலும், பெண்ணாலும் “காதல்” எனும் சொல்லின் அடிப்படையில் நிகழ்த்தப்படுகிறது.

    இந்தக் காதல் எனும் உணர்வு ஏதோ இன்று நேற்று ஏற்பட்டதல்ல . இதிகாசங்களில் குறிப்பிட்டபடி “அண்ணலும் நோக்கினாள், அவளும் நோக்கினாள்” எனும் வரிகளின் அப்டி அக்காலங்களிலேயே இள நேஞ்சங்களில் உணர்வின் அடிப்படையில் எழுந்த உறவு என்பது தெட்டத் தெளிவு.

    அப்படியானல் அந்தக் காலத்துக் காதலுக்கும், இந்தக் காலக் காதலுக்கும் என்ன வேறுபாடு என்று பார்த்தோமானல் காதல் எனும் பதத்தை பார்க்கும் சமுதாயத்தின் கண்ணோட்டமே என்பது தெளிவாகும்.

    சரி எதற்காக சக்தியின் இந்தக் காதல் ஆராய்ச்சி எனும் கெள்வி உங்கள் மனதை அரிக்கத் தொடங்கியிருக்குமோ ?

    கவலையை விடுங்கள் இதோ காரணத்தைக் கட்டவிழ்க்கிறேன்..

    இங்கிலாந்து ஊடகங்களில் நேற்ரைய தினம் வெளியான ஒரு கருத்துக் கணிப்பின் தாக்கமே எனது இந்த மடலின் அடியிலுள்ள சாரம்.

    இங்கிலாந்து நாட்டில் 60 வயதுக்கும் மேலான தம்பதியினரிடையே நிகழும் விவாகரத்துக்களின் எண்ணிக்கையின் அளவு அதிகரித்துள்லது என்பதுவே இந்தச் செய்தி.

    அட என்னடா இது 60 வயது என்பது ஒரு அனுபவ முதிர்ச்சி அடைந்த வயது அல்லவா ? இளவயதில் கண்டதும் காதல் எனும் மனப்பான்மையில் இருக்கும் இளவயதினர் தாக்கங்களை நன்கு பரிசீலிக்காமல் மணவாழ்க்கையில் தம்மை ஈடுபடுத்தி விட்டு பின்னால் அந்தத் தாக்கங்களின் விளைவுகளுக்கு முகம் கொடுக்க முடியாமல் மண்முறிவுக்குள்ளாகுகிறார்கள் என்பது ஓரளவிற்கு புரிந்து கொள்ளக்கூடிய ஒரு விடயம்.

    ஆனால் வாழ்க்கைப் பயண்த்தின் பெரும்பகுதியைக் கடந்து அனுபவம் எனும் புத்தகத்தில் பல அத்தியாயங்களைச் சேர்த்துக் கொண்ட னுதுமை எனும் படியினுள் தம்மைப் புகுத்திக் கொண்டவர்கள் கூடவா மணமுறிவு எனும் நிகழ்வுக்கு தம்மை உட்படுத்திக் கொள்கிறார்கள் என்பது ஆச்சரியத்துக்குரிய ஒரு செய்தியாகிறது.

    தாய், தந்தை, உடன் பிறந்தோர் எனும் சொந்தம் எம்மால் கேட்டு பெறப்படுவதல்ல. ஆனால் வாழ்க்கைத்துணை என்பதின் தெரிவில் நிச்சயம் எமக்கும் ஒரு பங்கு இருக்கிறது. இந்தப்பந்தத்தின் பாதுகாப்பை காப்பார்றிக் கொள்வதன் கடமை ஒவ்வொருவருக்கும் அதிக அளவில் இருக்கிறது. பின் எப்படி இந்த 60 வயதில் மணமுறிவு விவகாரம் ? . . . . .

    இவ்வறிக்கையின் படி 2011இல் 60 வயதிர்கு மேலானவர்களில் விவாகரத்து செய்து கொண்டவர்களில் ஆண்களின் சராசரி மணவாழ்வின் நீளம் 27.4 வருடங்கள் என்றும் பெண்களின் சராசரி மணவாழ்வின் நீளம் 31.9 என்றும் கணகிடப் பட்டுள்ளது.

    இங்கிலாந்தில் பொதுவாக விவாகரத்தின் வீதம் வீழ்ச்சியடைந்து கொண்டு வரும் வேளையில் இவ்வாறு 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மத்தியில் விவாகரத்தின் வீதம் ஆதீத வளர்ச்சியடைந்திருப்பது அதிசயமே என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

    இவ்வாய்வின் படி 2011இல் நடைபெற்ற 118000 விவாகரத்துக்களில் 9500 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கே வழங்கப்பட்டிருக்கிறது இது 1991 இலிருந்து 73% அதிகரித்துள்ளது என்றும் கூறப்படுகிறது.

    அதே சமயம் பெண்களை எடுத்துக் கொண்டால் 19991இல் 3200 , 60 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு வழங்கப்பட்ட விவாகரத்து 2011இல் 5800 ஆக உயர்ந்துள்ளது.

    இதன் காரணத்தை அராயும் ஆய்வாளர்கள் வாழும் காலம் மருத்துவ வசதிகளினால் நீடிக்கப்படுவது இதற்கு ஒரு காரணம் என்கிறார்கள். 1991ம் ஆண்டில் தம்பதியரில் ஒருவர் மரணம் எய்தும் வீதம் 2011ஜ விட அதிகமாக இருப்பது அடஹ்ற்கு ஒரு காரணம் என்கிறார்கள்.

    அது மட்டுமல்ல காலமாற்றத்தின் படி சமுதாயம் விவாகஎத்தை நோக்கிக் கொண்டிருக்கும் பார்வை மிகவும் மாறுபட்டிருப்பதனால் விவாகரத்து என்பது ஒரு பெரிய இழுக்கு அல்ல என்பதும் இதற்கு இன்னொரு காரணமாக் அமைகிறது.

    அது மட்டுமின்றி 16 வயதிற்கும் 64 வயதிற்கும் இடைப்பட்ட பெண்களின் வேலைவாய்ப்பு 1991ம் ஆண்டு 53% ஆக இருந்தது 2011ம் ஆண்டு 66% ஆக உயர்ந்துள்ளதினால் பெண்கல் திருமணம் எனும் பந்ததிற்கு வெளியே கணவனின் பாதுகாப்பின்றி தமது சொந்தக் காலில் நிற்கும் வசதியின் அதிகரிப்பும் இதற்கு மற்றொரு காரணம் என்கிறார்கள்.

    குழந்தைகள் அவர்களோடு இருக்கும் காலத்தில் அவர்களின் வளர்ச்சியிலும், முன்னேற்றத்திலும் தமது பெரும்பான்மையான நேரத்தைச் செலவிடுவதால் தம்பதியர் தம்கிடையில் இருக்கும் வேறுபாடுகளில் அதிக கவனம் செலுத்துவதில்லை என்றும் பிள்ளைகள் வளர்ந்து தனியாக வசிக்கும் போது தம்பதியரிடையே காணப்படும் வேறுபாடுகளின் தாக்கம் அதிகரித்து அது பல இடங்களில் விவாகரத்தை நோக்கி அவர்களை இழுத்துச் செல்கிறது என்கிறார்கள் இதை ஆங்கிலத்தில் Empty nest syndrome என்கிறார்கள்.

    வாழ்வில் பெற்றோருடன் வாழும் காலத்தை விட ஒரு கணவனோடோ அன்றி மனையியோடோ வாழும் காலமே அதிகம். இவ்வாழில் மகிழ்ச்சி என்பது எள்ளளவும் இல்லாது போனால் அவ்வாழ்வில் அர்த்தம் அற்றுப் போகிறது. அது தவிர பல சமயங்களில் கணவனோ அன்றி மனைவியோ மற்றவரை வாழ்வு முழுவதும் துன்புறுத்தும் செயல்களும் நடைபெறுகிறது.

    இப்படியான் சூழலில் விவாகரத்து என்பது ஓரளவு அவர்களின் அடிப்படையான மனித வாழ்வில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தும் என்பதில் எனக்கு மாறுபட்ட கருத்தில்லை.

    ஆனால் விவாகரத்து என்பதனை உள்வாங்கிக் கொள்வதில் உள்ள இலகுத்தன்மை என்னை கொஞ்சம் அசர வைக்கிரது. கருத்து வேர்றுமை, சிறு சிறு பிணக்குகள், சச்சரவு இல்லாத தம்பதியர் இவ்வுலகில் இருக்க மாட்டார்கள். ஆனால் இதையும் தாண்டி அவர்கள் ஒருவரையொருவர் புரிந்து கொள்ளும் மனப்பான்மையே அவர்களுக்கு வாழ்வில் ஒரு ஸ்திரமான உரவினைக் கொடுக்கிறது.

    அதனை மனதில் கொண்டு வித்தியாசங்களை ஏர்றுக் கொண்டு விட்டுக்கொடுப்புகளுடன் வாழ்ந்தால் வெற்றிகரமான் தம்பத்தியத்தை நடத்தி முடிக்கலாம் .

    எல்லாவர்றிலும் மேலைநாடுகளின் நாகரீகத்தைப் பின்பற்றும் எமது பின்புல நாடுகள் இவ்விடயத்தில் அந்நடைமுறைய மாற்றிக் கொள்வார்களா? இல்லையானல் அவர்களும் இந்தச் சகதியினுள் சிக்கிக் கொள்வார்களா?

    விடை எதிர்காலத்தின் கைகளில் . . . .

    அன்புடன்

    சக்தி சக்திதாசன்

    07.08.2013

    http://www.thamilpoonga.com

    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • குறவன் பாட்டு – 6

    
    சச்சிதானந்தம்
    
    
    பூனைப் புனுகு சேகரித்தல்

     

    நாய்போல் வளர்ந்த புனுகுப் பூனை,

    நரிவால் போன்ற அடர்வால் சுருட்டி,

    நாள்முழுதும் மரத்தில் பதுங்கித் தூங்கி,

    நன்முன் னிரவில் உணவைத் தேடும்!                                                                                                       45

     

    உணவைக் கூடத் தவிர்த்துத் தனித்து,

    மினுக்கும் கண்களை மூடித் தூங்கும்,

    புனுகுப் பூனை பதுங்கும் புதரை,

    அணுகிப் புனுகுப் பூனை பிடித்தான்!                                                                                                            46

     

    அஞ்சிப் பதறிய அந்தப் பூனை,

    அட்ரினலின் போல் அதி வேகத்தில்,

    ஆசன வாயின் அருகில் இருக்கும்,

    அமுதச் சுரப்பியில் புனுகைச் சுரந்தது!                                                                                                     47

     

    அடர்ந் திருக்கும் புனுகின் நெடியை,

    நுகர்ந் திடாமல் தவிர்த்திட வேண்டி,

    முகமூடிக் கொள்ளையன் போலக் குறவன்,

    முகத்தைத் துணியால் மூடிக் காத்தான்!                                                                                  48

     

    புனுகை எடுத்துப் பத்திரப் படுத்தி,

    பூனையை மீண்டும் மரத்தில் விடவே,

    புழுவைப் போலத் துடித்த பூனை,

    பாம்பைப் போல உடனே மறைந்தது!                                                                                                        49

     

    அமிலம் போன்று அடர்ந்த புனுகை,

    அமுதம் போன்று ஆக்கும் பொருட்டு,

    அதிலே நீரைக் கலந்து குழைத்து,

    அரும் பொருளாக மாற்றி விட்டான்!                                                                                                          50

     

    ஆசன வாயில் சுரந்த புனுகு,

    வாசனை மிக்க திரவிய மாகி,

    ஈசனை மிக்கப் போற்றிட ஏற்ற,

    பூசனைப் பொருளாய்ப் பூத்து விட்டதே!                                                                                                   51

    Share
  • வாழ்க்கை நலம் – 22

    குன்றக்குடி அடிகள்

    22.  நம் கடமை

     

    ஒழுகுதல், ஒழுக்கம் என்று பாராட்டப் பெறுகிறது. அதாவது ஒருவருடைய வாழ்க்கை நடைமுறைகள் ஒழுக்கம் என்று கணிக்கப்பெறும். ஒருவர் தனக்கும் தன்னோடு வாழும் மற்றவர்களுக்கும் கேடுகள் வாராது வாழ்வது ஒழுக்கமுடைய வாழ்வாகும்.

    இப்பிறப்பு, சிறப்புடைய ஒன்று. இதற்கு இணையானது எதுவும் இல்லை. இதுவும் ஒரே ஒரு தடவைதான். தேர்வுகள் பல தடவை எழுதுவது போல, வாழ்க்கைத் தேர்வு பல தடவை எழுத இயாது; எழுத முடியாது.  ஆதலால் வாய்த்த இந்தப் பிறப்பைப் பயனுறு வகையில் வாழ்ந்து, வாழ்க்கையின் பயன் காண வேண்டும்.

    ஒழுக்க நிலையில், தற்சார்பான ஒழுக்கம் முதல் நிலையினது. அதாவது ஒரு மனிதன் தன்னைத்தான் கொண்டொழுகுதல்; தன்னுடைய சுவைப் புலன்களைத் தூய்மையாக வைத்துக் கொள்ளல். உலகின் எல்லாவித நோய்களுக்கும், துன்பங்களுக்கும், தீமைகளுக்கும், அடிப்படைக் காரணம், சுவைநுகர்வின் பாற்பட்ட இழிவுத் தன்மையே!  வளர்ந்து வரும் மருத்துவமனைகள், காவல் நிலையங்கள் ஆகியன மானிடரின் சுவைப் புலன்கள் கெட்டவழித் தோன்றும் நோய்களிலிருந்தும் தீமைகளிலிருந்தும் மானுடத்தை மீட்கவேயாம். மானிடர் புலன்களின் மீது கவனம் செலுத்தித் தூய்மை காக்க வேண்டும். புலன்கள் தூய்மைக்குத் துணை செய்வது ஆசைகளிலிருந்து தப்பிப்பது. தேவையை அடைய நினைப்பது ஆசையல்ல. அளவற்று வெறி பிடித்த நிலையில் அடைய நினைப்பதே வெறுக்கத்தக்க ஆசை.

    புலன்களின் தூய்மை காத்தால், தாமே பொறிகளில் தூய்மை காணப்பெறும்,பொறிகள் மீது தனி ஆணை  செலுத்தி நெறிப்படுத்திக் கொள்ளவேண்டும். நமது வாழ்க்கை என்ற தேர் பத்துக் குதிரைகள் பூட்டிய தேர் ஆகும். இந்தப் பத்துக் குதிரைகள் புலன்களும் பொறிகளுமாகும். இவைகளின் பிடி நமது கையில் இருப்பதே ஒழுக்கம் நிறைந்த வாழ்வு. ஒழுக்கமுடையார் என்றும் நலமுடன் வாழ்வர்; வெற்றிகளுடன் வாழ்வர்; பலருக்கும் பயன்பட வாழ்வர். வாழ்க்கையின் பெரும்பகுதி ஒழுக்கத்தால் சிறப்பது. வாழ்க்கைப் பயணத்தின் நெடிய வரலாறு ஒழுக்கதாலேயே எழுதப் பெறுகிறது.

    அடுத்து ஒழுக்கத்தின் இரண்டாவது நிலை, சமுதாய ஒழுக்கம் எனப்படும். அதாவது பலருடன் ஒத்திசைந்து வாழ்தல். விதண்டா வாதங்களும், பிணக்கும், பகையும் சமூகத்தை அரித்து அழிக்கும் கரையான்களாகும். சமுதாயமே தனிமனிதனை உருவாக்கும் பட்டறை. ஆதலால், சமுதாய ஒழுக்கலாறுகள் கண்டிப்பாகப் பின்பற்றத் தக்கன, சமுதாயத்தின் மதிப்பைக் கெளரவித்தலில் தனிமனித ஒழுகலாறு சிறப்படைய வழி உண்டு. மதிப்பீட்டுப் பொறுப்புள்ள சமுதாய அமைப்பு, சமுதாய ஒழுக்கம் சீர்கெடின் தனிமனித ஒழுகலாறும் சிறக்க இயலாது.  ஆக ஒழுக்கமுடையராக வாழ்தலே வாழ்க்கை.

    “ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
    உயிரினும் ஓம்பப் படும்”

    என்பது ஒரு சிறந்த குறள். ஆம்! ஒவ்வொருவருக்கும் அவர்தம் உயிர் பெரியது; எல்லாவற்றிலும் பெரியது. சாக யாரும் விரும்புவதில்லை. அதனால்தான் ஓரறிவுயிர் முதல் ஆறறிவு உயிராகிய மானிடன் வரையில் எல்லா உயிர்களும் உயிர்க்காப்பு முயற்சியில் முன்னணியில் நிற்கின்றன. உயிர்க்காப்பு முயற்சியின் அளவுக்கு ஒழுக்கப் பாதுகாப்பு முயற்சி கால்கொள்ளவில்லை. உயிரோடு வாழ்தல், வாழ்தலின் பயன்காண! அதாவது வையகம் பயனுற வாழ்ந்து நிலத்திடை நீள்புகழ் பெறுதல். இதற்கு ஒழுக்கம் துணை செய்யும். உயிரோடு வாழ்ந்தும் ஒழுக்கமிலாமையால் நோய்களுக்கு இரையாகியும், சமுதாய ஒழுகலாறு இன்மையால் ஊரவர் பழி தூற்றவும் வாழ்ந்து பயன் என்ன? இத்தகையோர் வாழாமையே கோடி தரும்.

    குடிமை – குடிமைப்பண்பு – Citizenship என்பது புதிய நாகரிகத்தின் வடிவம்.  ஆனால் திருக்குறள் குடிமைப் பண்பு பற்றிப் பேசுகிறது.

    “ஒழுக்க முடைமை குடிமை இழுக்கம்
    இழிந்த பிறப்பாய் விடும்”

    அதாவது, நாடு தழுவிய நிலையில், ஒத்தது அறிந்து ஒழுகுதலே குடிமைப் பண்பு. நமது நாட்டுக்கு என்று சில நாட்டு ஒழுகலாறுகள் தேவை. முதலாவது நாட்டு ஒழுக்கம் சமயச் சார்பற்ற (Secular) ஒழுக்கம். இரண்டாவது பல மொழிகளைக் கற்றல். மூன்றாவது சுதந்திரத்தை – ஜனநாயக மரபுகளைப் பாதுகாத்தல். இவைகளைத் தேசீய ஒழுக்கங்கள் – என்று கூறலாம். இந்த ஒழுக்கங்களை மேற்கொண்டு ஒழுகுவது இந்தியக் குடியுரிமை பெற்ற ஒவ்வொருவரின் கடமையுமாகும்.

     

    _________________________________
    REF: http://www.tamilvu.org/library/nationalized/pdf/47.KUNDRAKUDIADIGALAR/VAZAKAINALAM.pdf
    இது ஒரு நாட்டுடைமையாக்கப்பட்ட  நூல், நாட்டுடைமையாக்கப்பட்டது  நிதியாண்டு 2007-2008 ல்

    மின்பதிப்பாக்க உதவி: தேமொழி

     
    படம் உதவி:
    http://www.udaipurtimes.com/wp-content/uploads/2012/08/kidzee-udaipur2.jpg

     

     

     

    Share
  • Roja Muthiah Research Library

     

    Roja Muthiah Research Library

    invites you for 

     

     Madras Week Celebrations 

    ———————

     

     

    Programme

    ——————–

     

    18th August 2013

     

     

    5.00 p.m. Inauguration of exhibition of Mr. C. L. D. Gupta’s “Line drawings of Madras, Queen of the Coromandel”

            

    Inauguration: Mr. P. Chellapan, Director, Palaniappa Brothers, Chennai

    Public Lecture: Mr. K. R. A. Narasiah, Writer

     

    (Exhibition will be open on all days from the time of inauguration till 24th August 2013)

     

     

    22nd August 2013

     

    5. 00 p.m. | Screening of documentary on Sekkizhar Adi-p-Podi T. N. Ramachandran

    by Ravi Subramaniam

     

    23rd August 2013

     

    5.00 p.m. | Public Lecture

     

    Re-inscribing religion as nation: Naveena Caiva (Modern Saivites), Tamil nationalism and the Dravidian movement

    Prof. Ravi Vaitheeswaran, Manitoba University, Canada

     

    24th August 2013

     

    5.00 p.m. Public Lecture

     

    Thiru. Vi. Ka’s Chennai

    Prof. A. R. Venkatachalapathy, Madras Institute of Development Studies, Chennai

    Venue: 
    Roja Muthiah Research Library

    3rd Cross Road, Central Polytechnic Campus
    Taramani, Chennai 600 113
    Telephone: 2254 2551 / 2254 2552
    Share
  • குடும்பத்தில் ‘சுதந்திர நாள்”

    விசாலம்

    “ஏண்டி ராஜி, கோபாலன் தில்லிலேந்து எப்ப வரான்”

    “அவனாம்மா ,அவன் புதங்கிழமை வராம்மா, வியாழக்கிழமை  இன்டிபெண்டன்ஸ்டே வெள்ளிக்கிழமை ஒரு நாள் லீவு எடுத்துண்டாக்க ஸன்டே வரை இருப்பான் என் அண்ணா”

    “அண்ணாவும் தங்கையும் என்ன புரோக்கிராம் போட்டிருக்கேள்?

    “தெரிலைம்மா நான் எங்கேயாவது மால் போய் எஞ்ஜாய் பண்ணிட்டு வருவேன் என் பிரண்ட்ஸ்க்கு போன் செய்யணும்”

    “ஏண்டி ராஜி இது எத்தனாவது வருஷ சுதந்திரம்”? “யார் கண்டா? மறந்து போச்சு. இரு, இரு, 1947ல்ல சுதந்திரம் வந்ததா? இப்ப 2013.  அப்படீன்னா 66 வருஷம் இல்லையா?’                                                                                                                                                                                                                                                                           “அடி சமத்து கணக்கு வந்துடுத்தே நல்ல வேளை கால்குலேடர் வச்சுக்கலை. யார் யார் இந்த போராட்டம் ஆரம்பிச்சா தெரிமா?”

    “காந்தி, நேரு அப்பறம் யார் யாரோ…..இந்த சோஷியல் சயின்ஸே போர். எப்படியோ நமக்கு ஒரு லீவு கிடைக்கறது. அதான் சுகம். ஆமாம் அன்னிக்கி நீ என்ன பண்ணுவே”

                                                                                                                                                                                                                                                 “நல்ல வேளை அன்னிக்கு மறு நாள் வரலட்சுமி நோம்பு முதன் நாளே பல காரியம் செஞ்சு வச்சுக்கணும் எல்லோருக்கும் லீவு இருக்கு அதனாலே நிதானமா சமையல் செய்யலாம் ஆனா என்ன அன்னிக்கு ஒரு சீரியல். சினிமான்னு ஒன்னும் பாக்கமுடியாது’”அம்மா திரும்ப திரும்ப  காந்தி. இந்தியனுட்டு ஒரே மாதிரி படம் காட்டுவா. புதுசா என்ன காட்டப்போறா. நான் புது ரிலீஸுக்கு போய்விடுவேன்’

    “அப்படி சொல்லாதேடி ராஜி,  அந்த மாதிரி படம் பாத்தாலாவது நாட்டுபற்று வருமோன்னு காட்டறா. நல்ல விஷயம் தானே”

    “எங்கம்மா நாட்டுபற்று இன்னிக்கு நாடு எந்த நிலமைல இருக்கு எல்லாரும் கோடி கோடியா பணம் பண்றதே தொழிலா வச்சிண்டிருக்கா,  பேப்பர்ல  பாரு, யார் ஒழுங்கா இருக்கா”, நீங்கள்லாம் தான் வருங்கால இளைஞர்கள் நீங்கதான் நாட்டை சரி பண்ணனும் நீங்களே

    நாட்டுபற்று இல்லாம சுதந்திர நாளிலேயும் சுத்தினா எப்படி ?’

    “அம்மா திங்க என்ன இருக்கு? பகோடா இருக்கா “

    “வாடப்பா கடைக்குட்டி .முரளி என் செல்லமே! லீவெல்லாம் கிரிக்கெட் தானா உன் கையும் மூஞ்சியும் பாரு ஒரே மண்ணு ….சரி நாளைக்கு என்ன புரோக்கிராம்?”

    “நாளைக்கு காலம்பற மேட்ச்சு ஜயிக்கறவா டிரீட் தருவா……. அப்பறம் ஈவினிங்கல  பட்டம்  விடப்போறாம் “

    “ஏண்டா முரளி எந்த வருஷம் நமக்கு சுதந்திரம் கிடைச்சுது தெரிமா உனக்கு, சொல்லு பாக்கலாம் “

    “தெரியுமே எனக்கு 1947. நேத்திக்குத்தான் எங்க டீச்சர் சொன்னா அதுக்குள்ள மறந்துவிடுவேனா  அக்கா” “சரி தமிழ் நாட்ல சுதந்திர போராட்டத்தல யார் யார் கலந்திண்டா  ஏதாவது ஒருத்தரை சொல்லு, ‘

    போ அக்கா’ இப்ப எனக்கு பசிக்கிறது  யார் யார் கலந்திண்டா உனக்கு என்ன இப்ப!  அப்பறம் சொல்றேன் அம்மா எங்கே பக்கோடா”

    குறை ஒன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா………….” அம்மா  உன் போன் குரல் கொடுக்கறது   எடு எடு  “

    “நீயே பாரேன்டி  நான் வேலையா இருக்கேன்னு தெரியுமோனோ”

    “அம்மா  அண்ணா தில்லிலேந்து பேசறான்…….அண்ணா எப்படி இருக்கே  என்ன ஏர்போர்ட்டுக்கு வந்துட்டயா  ஆ மஜாதான் நாளைக்கு   என்ன புரோக்கிராம்?

    “ராஜி ஹவ்வார் யூ ? டுமாரோ  ஐ வில் மீட் மை பிரண்டஸ் அண்ட் கோ டு மால் . அங்க வந்துட்டு பேசறேன் அப்பாட்ட போன் கொடு”

    “டாடி வெளில  போயிருக்கா . ஏதோ  சுதந்திர போராட்டத்ல கலந்த குடும்பத்த  பாக்க போயிருக்கா “

    “ஓகே மம்மீட்ட கொடு”, “மம்மீ நான் இன்னிக்கு வந்துடுவேன் நாளைக்கு உன்ன அழைச்சுண்டு விஜய் படத்துக்கு போறேன் சரியா “

    “நான் வரலை ரமேஷ்  வீட்ல வேலை சரியா இருக்கும் மறுநாளைக்கு பூஜை வேறு உனக்கு சாப்பிட என்ன வேணும்னு சொல்லு உனக்கு பிடிச்சதை செஞ்சு வைக்கறேன் அதுவே  எனக்கு ஆனந்தம்  சரி போனை வச்சுடறேன்.”

    “மம்மீ மம்மீ டாடி வந்தாச்சு    என்ன டாடி சுதந்திர போராட்ட பேமிலியை பாத்தேளா? எப்படி இருக்கா?

    “அதையேன் கேக்கறே ஒரு சந்துல வீடு சுவரலெல்லாம் உடைஞ்சிருக்கு. ஏதோ பென்சன்னு கொஞ்சம் பணம்தான் கிடைக்கறதாம் வீட்ல எல்லோருமே ஜெயிலுக்கு போய் அடி வாங்கி வந்தவர்கள் தானாம், அப்படி நாட்டுக்காக போராடியவர்களின் கதி இப்படியா?”

    பேசிண்டே டாடி ஏணி போட்டு எங்க மேலே ஏற்றேள்”,

    “அதுவா  உன் தாத்தாவும் பாட்டியும் சுதந்திர போராட்டத்தில் கலந்துண்டு கொடிப்பிடித்து வந்தேமாதரம்ன்னு கோஷம் இட்டவர்கள் உன் பாட்டி தன் நகைகள் எல்லாம் அதற்கென்று கொடுத்துவிட்டாள் அவர்கள் போட்டோவை எடுத்து தூசி தட்டி நாளைக்கு மாலைப்போட்டு மரியாதை செய்து  கொண்டாடப்போறேன். அதுதான் நாளைக்கு என் புரோக்கிராம் அவர்களுக்குப்பிறந்த நான் இது செய்யாமல் விடுவேனா?”?

    “மம்மி’  இங்க வாயேன்  ஒருத்தரும் சுதந்திர தினத்தைக்கொண்டாடவில்லை என்று மனசுல வருத்தப்பட்டயே இதோ அப்பா கொண்டாடப்போறார் “

    “அப்பாடி வீட்ல ஒருவருக்காவது இந்த உணர்வு இருக்கே. நாளைக்கு உங்க பாட்டிக்கு பிடிச்ச போளி செஞ்சுடறேன் “

    “வந்தே மாதரம்”  “ஜெய் ஹிந்த்”

    “முரளி நானும் சேர்ந்துக்கறேன். “வந்தே மாதரம்”,  “ஜெய்ஹிந்த்”. அம்மா அப்பா வாங்கோ எல்லோரும் சேர்ந்து சொல்லலாம் “

    Share