முனைவர் அண்ணாகண்ணன்

(annakannan@gmail.com)

(மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள மலாயா பல்கலையில் நடைபெற்ற 12ஆவது தமிழ் இணைய மாநாட்டில் வாசிக்கப்பெற்றது)

தமிழ் இணைய வெளியின் பரப்பும் அடர்த்தியும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன; ஆழம் கேள்விக் குறியே ஆயினும், இதன் முக்கியத்துவம் பெருகி வருகின்றது.

இணைய இதழ்களின் பரிணாம வளர்ச்சி

இணையப் பக்கங்கள், இணைய இதழ்களாக வளர்ந்தன; இணைய இதழ்கள், ஒற்றைத் தன்மையிலிருந்து, பன்முகத்தன்மை கொண்டவையாக மாறின. அத்துடன் நில்லாமல், வலைப்பதிவுகளும் நுண் வலைப்பதிவுகளும் பிறந்தன. இந்த நுண் வலைப்பதிவுகள் பின்னர், சமூக ஊடகங்கள் எனப் பெயர் பெற்றன. இவை, தனி மனித இதழ்கள் எனக் கருதத் தக்கவை. எழுத்து மட்டுமே பெரும்பான்மையாக இருந்த இணையத்தில், நிழற்படங்களும் ஒலி – ஒளித் தரவுகளும் பெருகத் தொடங்கி, பல்லூடக உள்ளடக்கங்கள் வளர்ந்து வருகின்றன. இந்தப் பின்னணியில் இணைய இதழ்களை விரிவான கண்ணோட்டத்துடன் வரையறுத்தல் வேண்டும்.

எவர் ஒருவர் உள்ளடக்கத்தை உருவாக்குகின்றாரோ, அவர் உள்ளடக்க உற்பத்தியாளர் எனக் கருதத் தக்கவர். இவற்றைப் பெறுவோர், பயனர் ஆவர். இந்த உள்ளடக்கம் வெளியாகும் இடங்கள், இணையத் தளங்களாகவோ, இணைய இதழ்களாகவோ, வலைப்பதிவுகளாகவோ, சமூக ஊடகங்களாகவோ அமைந்திருக்கலாம். பெயரளவுக்கு இவை வெவ்வேறாக இருப்பினும் இவை ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. ஒன்றின் தொடர்ச்சியாக, இன்னொன்று தோன்றியவை. எனவே இவை அனைத்தையும் உள்ளடக்க வெளி எனக் குறிப்பிடுவது பொருந்தும்.

தமிழ் இணையத்தில் புதிய அலை

இந்தியாவில் உள்ள இணையப் பயனர்களின் எண்ணிக்கை, 15 கோடியாக உள்ளது. இது, 2013 இறுதிக்குள் 18 கோடியாக வளரக் கூடும் (2013 India Internet outlook – http://techcircle.vccircle.com/2013/02/01/2013-india-internet-outlook/). மேலும், ஃபேஸ்புக் தளத்தின் இந்தியப் பயனர்களின் எண்ணிக்கை, 7.8 கோடியாக உயர்ந்துள்ளது (Facebook India Active Users Up 50% To 78M In Q1-2013 – http://www.medianama.com/2013/05/223-facebook-india-78-million-users/). இந்தியப் பயனர்களின் எண்ணிக்கையில் சரி பாதிக்கும் மேல், ஃபேஸ்புக் தளத்தில் உறுப்பினர்களாக உள்ளனர். இது, சமூக வலைத்தளங்களின் மீது மக்களுக்கு உள்ள ஈர்ப்பினைத் தெள்ளத் தெளிவாகக் காட்டுகிறது. இதில் தமிழர்களின் பங்களிப்பும் குறிப்பிடத்தக்க அளவு உள்ளது.

இணைய வெளியில் பல்வேறு தேசிய, அரசியல், சமூக, தொழில், கல்விப் பின்புலங்களைக் கொண்ட படைப்பாளர்களும் பயனர்களும் தொடர்ந்து தோன்றிய வண்ணம் உள்ளனர். இதன் நல்விளைவாக, தமிழுக்குப் புதிய புதிய ஆக்கங்கள் அதிகம் கிடைத்து வருகின்றன. இது வரை வெளிப்படாத புதிய பார்வைகளும் அனுபவங்களும் நுணுக்கமான கருத்துகளும் பதிவாகி வருகின்றன. அன்றாட உலக நடப்புகளும் செய்திகளும் அவற்றின் மீதான விமர்சனங்களும் உடனுக்குடன் பதிவாகின்றன.

தமிழின் முக்கியமான எழுத்தாளர்கள், கலைஞர்கள், அரசியல் புள்ளிகள் எனப் பலரும் இணையப் பரப்பிற்கு வந்துள்ளதோடு, தங்களுக்கெனத் தனித் தனி வலைப்பதிவுகளையும் இணையத்தளங்களையும் உருவாக்கி வருகின்றனர். இணையப் பரிச்சயம் இல்லாத மூத்த எழுத்தாளர்கள் பலருக்கும் அவர்கள் சார்பில் யாரேனும் அவர்களின் ஆக்கங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்கள். இது, இணையத்தில் தங்கள் இருப்பை உறுதி செய்ய வேண்டிய கட்டாயம், தமிழ்ப் படைப்பாளர்களுக்கு ஏற்பட்டிருப்பதை எடுத்துக் காட்டுகிறது.

பிரபலமானவர்கள் மட்டுமின்றி, இதுவரை வெளியுலகிற்கு வராத பெண்களும் மாணவர்களும் எளிய பணிகளில் இருப்போரும் இணைய வெளிக்கு வந்துள்ளனர். இந்த வகையில் தமிழ் இணையம், இது வரை காணாத புதிய பயனர்களையும் புதிய துறைகளையும் காணத் தொடங்கியுள்ளது. இது, பல்வகையான பரிமாணங்களுடன் நாளும் விரிந்து வருகிறது.

இலவசம் என்னும் கவர்ச்சி

தமிழ் இணையப் பயனர்களிடையே இவ்வளவு ஆர்வமும் துடிப்பும் எழுந்துள்ளதற்கு முக்கிய காரணங்களுள் ஒன்று, இணையத் தளங்களில் இலவசமாகக் கணக்குத் தொடங்கி, எவ்வளவு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என்ற வாய்ப்பு.

வலைப்பதிவுகள் தோன்றிய காலத்தில் பயனர்கள் பலரும் அதில் தங்களுக்கெனத் தனி வலைப்பதிவுகளை உருவாக்கினர். ஒருவரே பல வலைப்பதிவுகளை உருவாக்கினார். அந்த அலை, இப்பொழுது அப்படியே சமூக ஊடகங்களில் எழுந்துள்ளது. இணையத்திற்குப் புதிதாக அறிமுகமாகும் ஒருவர், மின்னஞ்சல் கணக்குத் தொடங்குவதோடு, ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களிலும் கணக்குத் தொடங்குகின்றனர். செல்பேசிகளில் படங்கள் எடுத்து, அவற்றை ஃபிளிக்கர் போன்ற புகைப்படத் தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். விழியங்கள் எடுப்போர், அவற்றை யூடியூப் போன்ற விழியத் தளங்களில் வெளியிடுகின்றனர். இவ்வாறாக, எழுத்து, புகைப்படம், விழியம் ஆகிய கூறுகளில் பல்லூடக உள்ளடக்கம், இணையத்தில் பெரும் பாய்ச்சலைக் கண்டு வருகின்றது.

புகழ் வேட்கை

தமிழ் இணையப் பயனர்களைத் தொடர்ந்து உந்திச் செலுத்தும் முக்கிய விசைகளுள் ஒன்று,, அவர்களின் புகழ் வேட்கை. இணையத்தில் கிடைப்பது 15 நிமிடப் புகழ் என முன்பு எழுத்தாளர் சுஜாதா குறிப்பிட்டார். (“இப்போது புதிதாக பிலாக்ஸ் என்று வந்திருப்பது ஒரு விதத்தில் சின்ன வயசில் நாங்கள் எல்லோரும் நடத்திய கையெழுத்துப் பத்திரிகையின் மறுவடிவம்தான். ‘இதோ பார் என் கவிதை’ ‘இதோ பார் என் கருத்து’ ‘இதோ பார் உலகுக்கு என் உபதேசம்’ என நானும் இருக்கிறேன் நண்டுவளையில் என்று. ஒவ்வொரு தனிமனிதனும் தன்னைப் பிரகடனப்படுத்த கைகளைக் குவித்து ஏதோ ஒரு திசையில் குரல் கொடுத்துவிட்டு, யாராவது பதில் தருகிறார்களா என்று அவரவர் பதினைந்து நிமிஷப் புகழுக்குக் காத்திருப்பதுதான் இது! பிரபஞ்சத்தில் வேற்று கிரகங்களில் உயிரினங்கள் இருக்கிறதா என்பதை இப்படித்தான் தேடுகிறார்கள்” – சுஜாதா – http://agaramuthala.blogspot.in/2004/08/blog-post_24.html) அது, இப்போது, ஓரிரு நிமிடங்கள் தாக்குப் பிடிப்பதே அரிதாக இருக்கிறது. ஏனெனில் நொடிக்கு நொடி, புதிய புதிய உள்ளடக்கங்கள் பெருகி வரும்போது, ஒவ்வொன்றையும் ஆழ்ந்து படிப்பதற்குப் பயனர்களுக்கு நேரமும் பொறுமையும் இருப்பதில்லை. எனவே, அந்தந்தப் படைப்பாளர்களின் புகழ் ஈட்டும் அவகாசம் குறைந்துவிடுகிறது.

ஆயினும், தான் கவனிக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் அவர்களிடையே வலுப்பெறுகிறது. இதுவே, அவர்கள் இணையத்தில் மிக அதிகமான நேரத்தைச் செலவிடத் தூண்டுகிறது. நட்பையும் உறவையும் புதிய செய்திகளையும் வாய்ப்புகளையும் தேடி வருகின்ற பயனர்கள், இயல்பாகவே, புகழை விரும்புகின்றனர். தாங்கள் கவனிக்கப்பட வேண்டும் என்பதில் இவர்களுக்கு உள்ள ஆர்வம், நாளுக்கு நாள் உச்சமடைந்து, ஒரு கட்டத்தில் இணைய வெளிக்கு இவர்களை அடிமையாக்கிவிடுகிறது.

பயனராகத் தன் பயணத்தைத் தொடங்கும் ஒவ்வொருவரும் தாங்களே படைப்பாளராகப் பரிணமிக்கின்றனர். இதன் மறுபக்கமாக, உள்ளடக்கம் தீர்ந்துவிடுகிற நேரத்திலும் எதையாவது வெளியிட வேண்டிய உந்துதல் இவர்களுக்குப் பிறக்கிறது. இது, ஆழமற்ற உள்ளடக்கத்துக்கு இட்டுச் செல்வதோடு, மொக்கைகளும் மரண மொக்கைகளும் பின்னூட்டக் கும்மிகளுமாக வளர்ச்சி அடைகிறது.

இணையத்திலிருந்து அச்சுக்கு

அச்சில் வெளியானவற்றை இணையத்தில் ஏற்றுவது, ஒரு புறம் நடந்துகொண்டிருக்கிறது. அதே நேரம், இணையத்தில் வெளியானவற்றிலிருந்து தேர்ந்தெடுத்து, அச்சில் வெளியிடுவதும் பெருகி வருகிறது. ஆனந்த விகடன், குமுதம், குங்குமம், பாக்யா உள்ளிட்ட பல்வேறு அச்சிதழ்களில் இந்தப் போக்கினைக் காணலாம். அத்துடன் இணையத்தில் எழுதத் தொடங்கிய பலரும், அச்சிதழ்களிலும் எழுதி வருகின்றனர். மேலும் டுவிட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களிலும் இணைய இதழ்களிலும் பலர் வெளியிடும் கருத்துகள், பரபரப்பை ஏற்படுத்துவதோடு, அச்சிதழ்களில் அவை செய்திகளாக இடம் பிடிக்கின்றன. இவை, இணையத்தளங்கள், சமுதாயத்தின் மீது செலுத்தும் தாக்கத்திற்கு ஒரு சான்றாகும்.

குறையும் நம்பகத்தன்மை

இணையப் பரப்பில் வெளியாகும் ஆக்கங்கள், பெரும்பாலும் தாங்கள் முன்வைக்கும் செய்திக்கும் தகவலுக்கும் உரிய சான்றுகளை முன்வைப்பதில்லை. அந்தச் செய்தியை வழங்கிய செய்தியாளர் யார், முகாமை நிறுவனம் எது, தகவலைத் தெரிவித்தவர் யார்? போன்ற அடிப்படைத் தகவல்கள் கிடைப்பதில்லை. எனவே, யூகத்தின் பேரிலும் கற்பனையாகவும் செவிவழி அறிந்தவையாகவும் செய்திகள் வெளியாகும் சாத்தியங்கள் அதிகரித்துள்ளன. நடுநிலைத் தன்மையுடன் செய்திகளை அணுகாமல், ஒரு செய்தியில் தங்களுக்குத் தேவையான பகுதியை மட்டும் வெளியிடும் வாய்ப்பும் உள்ளது. இதனால் வதந்திகள் பரவிடவும் சமூக இயல்பு நிலை கெடுவதற்கும் அதிக வாய்ப்புகள் உள்ளன.

அவதூறுகள் – தாக்குதல்கள்

இணைய வெளியில் அவதூறுகளுக்கும் தாக்குதல்களுக்கும் அதிகப் பார்வையாளர்கள் கிடைக்கின்றனர். எனவே, பிரபலம் அடைய வேண்டும் என விரும்புவோரும் அடைந்த பிரபலத்தைத் தக்கவைக்க விரும்புவோரும் இவற்றில் அதிக முக்கியத்துவம் அளித்து வருகின்றனர். இது, பல்வேறு குழுக்களை உருவாக்கி வருவதோடு, நேரத்தைப் பெருமளவு வீணடிப்பதாகவும் மன உளைச்சலைப் பெருக்குவதாகவும் அமைகின்றது.

கருத்துச் சுதந்திரத்துக்குப் பாதிப்பு

இணையப் பரப்பில் வெளியாகும் பல்வகை ஆக்கங்களைப் பலரும் மவுனமாகத் துய்ப்பதோடு நின்றுவிடுவர். துய்த்த அனைவரும் பின்னூட்டம் இடுவதில்லை. ஆயினும் பயனருள் சிலர், சற்று சுதந்திர உணர்வுடன் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தி வருகின்றனர். சர்ச்சைக்கு உரிய ஆக்கங்களில் கார சாரமான பின்னூட்டங்கள் வரத் தொடங்கி, பின்னர் அது, பரவத் தொடங்குகிறது. இதன் நீட்சியாக, தரக் குறைவான, பொருத்தமில்லாத பின்னூட்டங்கள் மட்டுமின்றி, எரித (ஸ்பாம்) மறுமொழிகளும் மிகுதியாக வருகின்றன. இதனால், இணைய வெளியில் பின்னூட்டங்கள் பெரும்பாலும் மட்டுறுத்தப் பெறுகின்றன. மேலும் பல இணையத்தளங்களில் மறுமொழி இடும் வாய்ப்பு, முடக்கப்பெற்றுள்ளது. இத்தகைய நடவடிக்கைகள், இணைய இதழ்களில் கருத்துப் பரிமாற்றத்தை மட்டுப்படுத்துகின்றன. மேலும் வெளிப்படைத்தன்மை குறைந்து, வாசகர்களின் சுதந்திரம் குறைந்துவிடுகிறது. இணைய இதழ்கள், இருவழிப் பாதையாக இல்லாமல், ஒருவழிப் பாதையாகக் குறுகி வருகின்றன.

பொதுவான இணைய இதழ்களிலும் பிறரின் வலைப்பதிவுகளிலும் பக்கங்களிலும் கருத்துகளைப் பதிவதற்குக் கட்டுப்பாடுகள் உள்ளன. எனவே, ஒருவர் தன் தளத்தில், வலைப்பதிவில், பக்கத்தில் தாம் விரும்புவதைப் பதிய முனைகின்றார். ஆனால், இங்கும் எதை வேண்டுமானாலும் எழுதலாம், பகிரலாம் என்ற நிலை இல்லை. பொய்யாகவும் அவதூறாகவும் அடுத்தவர் மனம் புண்படும் வகையிலும் பதிவாகின்ற உள்ளடக்கங்களை வெளியிடுவோர், வழக்குகளைச் சந்திக்க வேண்டிய நிலை உள்ளது. இதற்கென இந்தியாவின் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தில் 66A என்ற திருத்தம் மேற்கொள்ளப்பெற்றது. இந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தவண்ணம் உள்ளன.

அறிவுச் சொத்துகளுக்கு ஆபத்து

இணைய இதழ்களில் செய்திகள் தொடங்கி, பல்வகை படைப்பிலக்கியங்களும் புகைப்படங்களும் பல்லூடக உள்ளடக்கங்களும் இடம்பெற்று வருகின்றன. இவற்றைத் துய்க்கும் பயனர்கள், தங்கள் தளங்களிலும் சமூக ஊடகங்களிலும் அவற்றைப் பகிர்ந்து வருகின்றனர். ஆனால், மூலத் தரவுகளை எங்கிருந்து பெற்றோம் என்ற அடிப்படைத் தகவலைக் கூட அறிவிக்காமல், அவரவர் விருப்பத்துக்கு வெளியிடுகின்றனர். சிலர், அவற்றைத் தங்கள் பெயரிலேயே வெளியிடுவதும் நிகழ்கிறது. இதனால், இணையப் படைப்பாளிகளின் அறிவுச் சொத்துகளுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

போலி அடையாளங்கள்

இணையத்தில் பொய்யான பெயருடன், படத்துடன், போலி அடையாளத்துடன் வலம் வருவோர், அதிகரித்து வருகின்றனர். பெண்களின் பெயர்களில் / படங்களில் கணக்குத் தொடங்குவோர் பலர். திரை நட்சத்திரங்களின் பெயர்களில் உள்ள கணக்குகள் பலவும் அவர்களுடையவை அல்ல. இது தொடர்பாகப் பலரும் காவல் துறையில் புகார் அளித்துள்ளனர். பண மோசடி உள்பட பல்வேறு குற்றங்களும் இணையத்தில் நடைபெற்று வருகின்றன. எனவே, பயனர்கள், இத்தகைய விவகாரங்களில் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். தங்கள் தனிப்பட்ட விவரங்களை அளிப்பதற்கு முன், அவர்கள் நம்பகமானவர்களா என உறுதி செய்துகொள்ள வேண்டும்.

பயனர்களின் கவனத்திற்கு

ஆண்டுதோறும் மாதம்தோறும் நாள்தோறும் பொழுதுதோறும் இணையப் பயனர்கள் அதிகரித்து வருகின்றனர். முழு மக்கள் தொகையும் இணையத்தில் தங்களை இணைத்துக்கொள்ளும் காலம், வெகு தூரத்தில் இல்லை. இலவச மடிக்கணினிகளும் இணையக் கட்டணங்கள் குறைப்பும் இணைய வேகம் அதிகரித்து வருவதும் சமூகத்தில் பெரும் மாற்றங்களை விரைவில் நிகழ்த்த உள்ளன.

இந்தச் சூழ்நிலையில், இணையப் பயனர்களின் உரிமைகளையும் கடமைகளையும் பொறுப்புணர்வையும் எச்சரிக்கை உணர்வையும் அவர்களுக்கு உணர்த்த வேண்டிய தேவை எழுந்துள்ளது. செய்யத் தக்கவை, செய்யத் தகாதவை ஆகியவற்றில் அவர்களுக்குத் தெளிவு தேவை. தங்கள் செயல்பாடுகள் ஏற்படுத்தக் கூடிய விளைவுகளை இணையப் பயனர்கள் அவசியம் உணர வேண்டும். இணையத்தில் தங்கள் நேரத்தை வீணடித்துவிடாமல், அதே இணையத்தைக் கொண்டு, தங்கள் நேரத்தைச் செம்மையாகப் பயன்படுத்துவது எப்படி என்பதை அவர்கள் கற்க வேண்டும்.

இத்தகைய பண்புகள் கொண்ட தமிழர்கள், தமிழ் இணையத்திற்கு அளப்பரிய பங்காற்றிட முடியும். அதன் மூலம், தமிழ் மொழியும் தமிழ்ச் சமூகமும் புதிய உயரங்களை எட்ட முடியும். உலகம் முழுவதும் பெரும் மறுமலர்ச்சியையும் உயிரோட்டத்தையும் தோற்றுவிக்க முடியும். இவை அனைத்தும் அலை அலையாய்ப் புறப்படும் புதிய பயனர்களின் கைகளிலேயே உள்ளது.

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “தமிழ் இணையத்தில் புதிய அலை

  1. வெகு வேகமாக வளர்ந்து வரும் இணையம்சார் பயன்பாடுகள்/பங்களிப்புக்கள் குறித்த பல பயனுள்ள தகவல்களை உள்ளடக்கமாகக் கொண்டுள்ள சிறந்த கட்டுரையை வழங்கியுள்ள முனைவர் அண்ணாகண்ணன் அவர்களுக்குப் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்!!

  2. பயனுள்ள கட்டுரை. இணையத்தின் நன்மை தீமை என்பவற்றை அலசி ஆராய்கின்றது.

  3. இணையமே இப்பொழுதுதான் தொடங்கியது போன்ற உணர்வு, அதற்குள் 12 ஆவது தமிழ் இணைய மாநாடு என்பது தமிழர்களின் ஆர்வத்தைக் குறிப்பது தெளிவாகத் தெரிகிறது.

    விழாவில் பங்கேற்று இணையத்தில் தமிழின் வளர்ச்சி மற்றும் வளர்ச்சிப் பாதையில் உள்ள நிறை குறைகளை அருமையாகத் தொகுத்து கட்டுரையாக வழங்கிய முனைவர் அண்ணாகண்ணன் அவர்களுக்குப் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்!!

  4. இணையதளத்தின் பயன்பாடுகள் பற்றி விளக்கும் அருமையான கட்டுரை. மேலும் மேலும் பல புதிய சிந்தனைகளைக் கொண்ட தமிழ் படைப்பாளிகளைக் காணும் ஆவல் அதிகரித்துள்ளது. நன்றி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.