ரக்ஷா பந்தன்
விசாலம்
எங்கு மேடைப் பேச்சு இருந்தாலும் .சிறு கூட்டமாக இருந்தாலும் “என் அன்பு சகோதர சகோதரிகளே” என்று அழைக்கிறோம். ” India is my country .we r all brothers and sisters “என்று பள்ளி அசெம்பிளியில் சத்தியப் பிரமாணம் எடுக்கிறோம். ஆக சகோதர அன்பு என்பது அளவெடுக்க முடியாத ஒன்று. அப்படிப்பட்ட அன்பை மேலும் வெளிப்படுத்தும் நாளாக வருகிறது, ராக்கி பண்டிகை. வட நாடு முழுவதும் கொண்டாடும் இந்தப் பண்டிகை மிகவும் அர்த்தம் உள்ள பண்டிகை..நான் பலவருடங்களாக அங்கேயே இருந்ததால் நானும் இதைக் கொண்டாடுகிறேன் என் பாசமுள்ள சகோதரர்கள் எல்லோருக்கும் மானசீகமாக ரக்ஷைக் கட்டுகிறேன்.
இந்த ராக்கி என்றால் என்ன? புராணக் கதை என்ன? பார்க்கலாம்…
இது ஒரு அன்பு பந்தம் ..சகோதரன் சகோதரியைப் பாசத்தால் கட்டுப் போடும் ஒரு அன்பு பாலம். இந்தப் பண்டிகை சிராவண பூர்ணிமாவில் வருகிறது இதற்கு, வயதோ, ஜாதி பேதமோ கிடையாது சகோதரன் கையில் அன்பு சகோதரி ராக்கி கட்டி அவனுடைய சுபீட்சத்திற்குப் பிரார்த்தனையும் செய்கிறாள் ,பதிலுக்கு அவளுக்கு நிறைய பரிசுகள் கிடைக்கின்றன முன் காலத்தில் ராஜபுத் வம்சத்தில் போருக்குக் போகும் முன் இரத்த திலகமிட்டு,கையில் ரக்ஷையும் கட்டி “வெற்றியுடன் திரும்பி வா”என்று வழி அனுப்பி வைப்பார்கள்.இவர்களில் சிலர் முஸ்லிம் பெண்ணையும் சகோதரியாக எற்றது உண்டு.மஹாபாரதக் காலத்திலும் ஸ்ரீ கிருஷ்ணர் திருதராஷ்டிரருக்கு வரப் போகும் அபாயத்திலிருந்து காப்பாற்றிக் கொள்ள ரக்ஷை கட்டிக்க சொல்கிறார்
பலி சக்கிரவர்த்தி விஷ்ணுவின் பெரிய பக்தர்.விஷ்ணு பலியின் ராஜ்யத்தைக்காக்க சத்தியம் செய்து கொடுத்ததால் வைக்குண்டத்தை விட்டு மஹாபலியிடம் வருகிறார்.சில நாட்கள் பொறுத்துப்பார்த்த மஹாலட்சுமி அந்தபிரிவைத் தாங்கமுடியாமல் மஹாவிஷ்ணுவிடம் இருக்கப்பிரியப்பட்டு தான் ஒரு சாதாரண பெண்மணிப்போல் வேஷம் தரித்து பலியிடம் வந்தாள் . “மஹாராஜா என் கணவர் வரும் வரை நான் இங்கு தங்க அனுமதி வேண்டும் “என்று கூறியபடி அடைக்கலம் புகுந்தாள் நாட்கள் நகர்ந்தன.
அன்று பௌர்ணமி தினம். அன்று மகாராஜாவிடம் சென்று அவரை சகோதரனாக பாவித்து ராக்கி கட்டி விட்டாள்.ராக்கி கட்டிவிட்டால் அந்தச்சகோதரர் ஏதாவது வெகுமதி தருவது வழக்கம். ” சகோதரி உனக்கு என்ன வேண்டும் சொல் தருகிறேன்” ” நான் என் கணவருடன் சேர்ந்து வாழவேண்டும்.அது உங்கள் கையில் தான் இருக்கிறது என் கணவர் இங்கு தான் இருக்கிறார்” ‘யார் அவர் ? சொல் சகோதரி நான் உனக்கு உதவுகிறேன்.” “அவர்தான் வைகுந்ததிலிருந்து இங்கு வந்திருக்கும் மகாவிஷ்ணு. அவரை விட்டு பிரிந்து இருக்க முடியாமல் நான் இங்கு ஒரு சாதாரண பெண்மணிப்போல் வேஷம் தரித்து இங்கு வந்தேன் .தயவு செய்து அவரை என்னுடன் அனுப்பி வைக்கவும் ” மகாபலியும் இதைக்கேட்டு பரவசமாகி லட்சுமியை விஷ்ணுவுடன் சேர்த்து திரும்பவும் வைகுந்தத்திற்கு அனுப்பி வைத்தார் .அவருக்கு உதவிய திருமாலுக்காக அவர் தனது ராஜ்யத்தையே தியாகம் செய்தார்.லட்சுமி மஞ்சள் கயிறை அவர் கையில் கட்டியதால் “மஞ்சள் ராக்கி” என்ற பெயருடன் இது கொண்டாடப்படுகிறது . இது வடக்கில் நம்பும் புராணக் கதை. ராக்கி இரண்டு ரூபாயிலிருந்து ஆரம்பித்து பல ஆயிரம் ரூபாய்க்கும் மேல் வாங்கமுடியும் சாதாரண வழவழப்பான நூலிலிருந்து ஆரம்பித்து நவரத்தினங்கள் பதித்த ராக்கி வரை விற்கப்படுகின்றன
ஒரு சமயம் முகம்மதிய மன்னனுக்கு ராஜபுத் ராணி ராக்கி அனுப்பித்து வைத்தாள்..
முகமதிய மன்னர் ஹுமாயூனுக்கும் சித்தூர் அரசியான ராணி கர்ணவதி ராக்கி அனுப்பித்து வைத்து அவரை சகோதரராக நினைப்பதாகவும் தனக்கு உதவும்படியும் கூறினாள்.அப்படி என்ன ஆபத்து அவளுக்கு வந்தது?குஜராத் சுல்தான் பஹதூர்ஷா சித்தூர் மேல் படையெடுத்தான்.ராணி விதவை என தெரிந்து அவளால் ஒன்றும் செய்யமுடியாது என்ற தைரியத்தில் போர் தொடுத்தான்.ராணி மனமுடைந்துப்போனதால் அந்தப்போரை எதிர்க்கொள்ளும் சக்தி இல்லாமல் போயிற்று .அதனால் தான் தில்லியில் ஆண்டு வந்த ஹூமாயூனுக்கு ராக்கி அனுப்பித்து தன்னையும் தன் ராஜ்யத்தையும் காக்கும்படி வேண்டிக்கொண்டாள்.சக்கர்வர்த்தி ஹுமாயூனும் ராக்கியைப்பார்த்து மனம் நெகிழ்ந்து அவளுக்கு உதவ சைன்யத்தை அனுப்பி வைத்தான்.அதற்குள் பஹதூர்ஷாவின் சேனை கோட்டைக்குள் நுழைந்து விட்டது.ராணி கர்ணவதி தனக்கும் மற்றும் பல பெண்மணிகளுக்கும் அவமானம் ஏற்படகூடாது என நினைத்து தீயை வளர்த்து அதில் குதித்துவிட்டனர் .இதற்குள் ஹுமாயூன் அனுப்பிய சேனை கோட்டைக்குள் நுழைந்து பஹதூர் ஷாவின் சேனையை முறியடித்து ஷா வின் மேல் பல பெண்மணிகளைக் கொன்ற குற்றத்திற்காக கைது செய்தனர் .பின் ஹுமாயூன் ராணி கர்ணவதியின் மகன் விக்ரமஜித் சிங்கிற்கு சித்தூர் ராஜ்ஜியத்தைக்கொடுத்து அவனை மன்னனாக்கி சகோதரி அனுப்பிய ராக்கிக்கு பரிசு கொடுத்துவிட்டார் .ராணி கர்ண்வதி சுவர்கத்திலிருந்து இதைப்பார்த்து மகிழ்ந்திருப்பாள் யமனின் தங்கை யமுனாவும் யமனுக்கு ராக்கி கட்டி விட்டாள் .யமனும் மன மகிழ்ந்து “யார் யார் சகோதரருக்கு ராக்கி கட்டி அவனது வாழ்க்கை வளத்திற்கு பிரார்த்திக்கிறாரோ அவர்களுக்கு நான் பாதுகாப்பு அளிப்பேன்” என்றானாம் இதுவும் வடக்கில் சொல்லும் கதை . மகாபாரதத்தில் ஒரு கதை . ஒரு தடவை கண்ணனின் கையில் அடிப்பட்டு இரத்தம் கசிந்தது .இதைப்பார்த்த பாஞ்சாலி ஓடி வந்து தன் தலைப்பைக்கிழித்து அடிப்பட்ட மணிக்கட்டில் கட்டிவிட்டாள்.கண்ணனும் மனம் நெகிழ்ந்து இன்று முதல் நீ என் தங்கையும் கூட .நான் எப்போதும் உன் பக்கம் இருப்பேன்.” என்றாராம். அதே போல் பாஞ்சலியும் கண்ணனையே முழுவதும் நம்பினாள்.ராக்கிக்கு அத்தனை சக்தி .அத்தனை நம்பிக்கை . எப்போதும் ராக்கி பண்டிகையும் .பூணல் போட்டுக்கொள்ளும் ஆவணியாவட்டமும் ஒன்றாக வரும் என் இனிய வாழ்த்துகள்.
படத்துக்கு நன்றி: http://astrobix.com/festivals_of_india/raksha_bandhan/default.aspx
அருமையான புராணக்கதைகளுடன் கூடிய அற்புதக் கட்டுரை.
/////இதைப்பார்த்த பாஞ்சாலி ஓடி வந்து தன் தலைப்பைக்கிழித்து அடிப்பட்ட மணிக்கட்டில் கட்டிவிட்டாள்.கண்ணனும் மனம் நெகிழ்ந்து இன்று முதல் நீ என் தங்கையும் கூட .நான் எப்போதும் உன் பக்கம் இருப்பேன்.” என்றாராம்.////
கண்ணன், பாஞ்சாலியிடம், ‘நீ கட்டிய இந்தத் துணியிலிருக்கும் ஒவ்வொரு நூலுக்கும் நான் உனக்குப் பரிசளிப்பேன்’ என்றாராம். அதன்படி, பாஞ்சாலி கவுரவர் சபையில் அவமானப்படுத்தப்பட்டபோது, கண்ணனின் திருக்கரம் புடவைகள் சுரந்ததாகவும் ஒரு புராணக் கதை உண்டு. பகிர்விற்கு மனமார்ந்த நன்றி.
நன்றி பார்வதி ‘ நேரம் எடுத்து படித்து பதில் இட்டதில் மனம் மகிழ்ச்சியடைகிறது