Blog

  • சிரித்தது செங்கட் சீயம்!….

    ஷைலஜா

     

    இன்று(24-5-2013)) சுவாதி நட்சத்திரம் ! நரசிம்ம ஜயந்தி!

    அன்று ஸ்ரீரங்கம் அரங்கன் கோயிலில் ஒரே ஆரவாரம்! ‘ஆதிகவியான வால்மீகியின்  இராமாயண காவியத்தை  தமிழில் செய்து அரங்கேற்றத் துணிந்த இந்தக் கம்பன் என்பவன் யாராம்?” என்று  ஒருவருக்கொருவர் வியப்பும் திகைப்புமாகக் கேட்டுக்கொண்டனர்.

    திருவரங்க  நகரம்  அந்த நாளில் தமிழிலும் வடமொழியிலும் தேர்ந்த பண்டிதர்களைக்கொண்டிருந்தது. அங்கே தங்களது புலமைக்குப்பாராட்டு கிடைப்பதை விரும்பாத புலவர்களே இல்லை.

    இங்கு தனது இராமாயணக்காதை அரங்கேறுவதே தனக்குச்சிறப்பு என்று கம்பன் நினைத்தான்.

    கம்பனின் கதையைக்கேட்டுத்தான் பார்க்கலாமே  என்று சிலர் ஆர்வமுடன் முன்வந்தனர். அவர்களின் முயற்சியில்

    அரங்கன் கோயிலில்  பிராட்டியாரின் சந்நிதி முன்பாக இருக்கும் நாலுகால் கல்மண்டபத்தில்  அரங்கேற்ற ஏற்பாடுகள் ஆயத்தமாயின.

    வால்மீகியான  தெய்வ மாக்கவி மாட்சி தரிக்கவே  இதை நான் புனைந்தேன்  என்றான். கம்பன்.

    பிறகு இராமாயணக்காதையை  தான் இயற்றிய பாடல்களுடன் கூற ஆரம்பிக்கிறான்.

    பல புலவர்களும், கதை கேட்பவர்களும், அமர்ந்திருக்கும் அந்த இடத்தில்  அப்போது, யுத்த காண்டம் அரங்கேற்றம் ஆரம்பிக்கின்றது.

    ”விபீஷணன்  ராவணனுக்கு  எவ்வளவோ அறிவுரைகள்  கூறினான்  காமத்தில் மதி இழந்த இராவணன் அவைகளைப்பொருட்படுத்தாமல் விபீஷணனை இகழத்தொடங்கினான்.

    “விபீஷணா! மானுடர் வலியர் என்றாய்! ஏன்…? அச்சமோ? அவர்பால் அன்புமோ உனக்கு? கூனியின் சூழ்ச்சியால் அரசிழந்து வனம் புகுந்து என் சூழ்ச்சியால் தன் மனைவியை இழந்தும் கழிந்துபோகா உயிரைச் சுமந்து கொண்டிருக்கும் மனிதர்களின் வலைமையை உன்னைத்தவிர யார் மதிப்பர்? அவனோ என்னை வெல்லுவன்?’ என்று  கத்தினான் .

    “மனம் வருந்திய விபீஷணன்,”அண்ணா!! நீர் இராமன் என்னும் நாராயணனைக் கேவலமாய் நினைக்கவேண்டாம். ஒப்புயர்வில்லாத வீரர்கள்  அந்த நாராயணனைப்  பகைத்து அழிந்து போயிருக்கின்றனர் அத்தகையவர்களில் ஒருவன் தான் இரணியன் என்பவன்.” என்று சொல்லி இரணியனின்  வரலாற்றையும் கூறினான்.

    இப்படி  கம்பன் கூறும்போது,  சில பண்டிதர்கள் திகைத்தனர்.

    உமக்கு நரசிம்மாவதாரம் எழுத ஆசையிருந்தால், தனியாக எழுதிவிடலாமே! இங்கு எதற்கு இதைச் சேர்க்க வேண்டும்?” என்று சீறினார்  ஒருவர்.

    மற்றவர்.” ஆமாம்! இதை ஒப்புக் கொள்ள முடியாது! அனைத்தும் தவறு “ என்று பொங்கி எழுந்தார். புலவர்களே! அமைதி! கம்பர் என்ன சொல்கிறார் என்று முதலில் கேட்கலாம்! கம்பரின் ராமாயணம் முடிவதற்குள் இறைவனின் அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றால், இந்த ராமாயணம் காப்பியமாக அனுமதிக்கப் படாது. அதுவரையில் நாம் பொறுமை காக்க வேண்டியது அவசியம். கம்பரே! நீர் தொடரும்!”  என்று அவைத்தலைவர் அனுமதி அளித்தார்.

    பெருமூச்சுடன், கம்பர் தொடர்ந்தார்

    நசை திறந்து இலங்கப் பொங்கி, ‘நன்று நன்றுஎன்ன நக்கு;
    விசை திறந்து உருமு வீழ்ந்தது என்னவே, தூணின் வென்றி
    இசை திறந்து, உயர்ந்த கையால் எற்றினான்; என்றலொடும்;
    திசை திறந்து, அண்டம் கீறிச் சிரித்தது செங்கட் சீயம்
    !

    அவ்வளவுதான்….

    ஒரு புலவர் (வேகமாக எழுந்து,” புலவரே!  பாடலை மீண்டும் படியுங்கள்!” என்றார்

    கம்பர் படிக்க, புலவர் பொருள் கேட்க, கம்பர் பாடலை விளக்கினார்.

    சிரித்தது செங்கட் சீயம்” என்கிறீரே! எங்காவது சிங்கம் சிரிக்குமா? நீர் கேட்டதுண்டா? அவையில் யாராவது இதைப் பார்த்ததுண்டா?”

    அவையில் சிரிப்பு!;

    கம்பர், இந்தச் சிரிப்பையும் கிண்டல் பார்வைகளையும் பொருட்படுத்தாமல் அடுத்த பாடலை  ஆரம்பித்தார்.

    அவைத் தலைவர்  இப்போது,”புலவரே! அவர் கேள்விக்கு விளக்கமளித்து விட்டு, அடுத்த பாடலுக்குச் செல்லுங்கள்!” என்றார்   உத்தரவிடும் குரலில்.

    கம்பர்  திகைத்தார்.தன்னிலை மறந்து காவியம் எழுதும் போது கடவுளின்  ஆணையாக வந்த சொற்களை  கடவுளே அறிவார்! .அபிராமி பட்டருக்கும் இதே நிலைதானே ஏற்பட்டது?

    அவையில் பலத்த சிரிப்பொலி …

    “மாட்டிக்கொண்டான் கம்பன் …அவன் ராமாயணக்காதை  முற்றிலும் அரங்கேற்ற சாத்தியமே இல்லை இனி!  “

    முணுமுணுத்து மகிழ்ந்தது ஒருகூட்டம்.

    திடீரென்று அவர்களின் பலத்த சிரிப்பையும் மீறி, ஒரு சிரிப்பு! அனைவரையும் நடுங்க வைக்கும் சிரிப்பு! எல்லோரும், சிரிப்பு வந்த திசையை நோக்குகின்றனர்)

     கம்ப மண்டபத்தின்  மிக அருகில்  கல்படிக்கட்டுகள் கொண்ட  மேட்டுப் புறத்திலே உள்ள சந்நிதி கோபுரத்திலிருந்து ஒரு அதிர்வு உண்டானது. பூகம்பமோ என மக்கள்  நிமிர்ந்து அச்சத்துடன் பார்த்தனர்.

    ஆ! நரசிம்மர்  திருக்கரம் உயர்த்தி உரக்கச்சிரிக்கிறாரே!

    ஒருக்கணம்தான் எல்லாம்!

    திகைப்பும் பயமுமாய்  கண்டவர்களுக்குக்  காட்சி தந்து மறைகிறார் நரசிம்மப்பெருமான்.

    “கம்பனே!  உன்  கவிதையை  யாம் ஏற்றுக்கொண்டோம்! வால்மீகியின் கவிதையைப்போல  நின் கவிதையும் என்றும் மக்கள் மனத்தில் நிலைத்து வாழட்டும்” என்பதாகக்கையை உயர்த்தி  ஆசி கூறி வாழ்த்தினார். அடுத்த கணம்  உயிர்பெற்ற சிலை மறுபடி சிலையானது.ஆனால்  தூக்கிய திருக்கரம் தூக்கியபடியே இருந்தது.

    அனைவரும் மெய்சிலிர்த்தனர் .  கம்பனைப்போற்றி   வணங்கினர்.

    இன்றும் அரங்கன் கோயிலில் அந்த கம்ப மண்டபம் இருக்கிறது ! அதற்குப் பக்கத்தில் சற்றே எதிரே அந்த மேட்டழகிய சந்நிதியும் இருக்கிறது !தூக்கிய திருக்கரமுடன்    தம்மைக் காணவரும் பக்தர்களுக்கு   இன்றும் அருள்பாலித்துக்கொண்டிருக்கிறார் அன்று  கம்பனைக்காத்த நம் பெருமான் நரசிம்மன்!

    ‘ஆடிஆடி அகம் கரைந்து இசை

    பாடிப்பாடிக் கண்ணீர்மல்கி எங்கும்

    நாடிநாடி, நரசிங்கா என்று

    வாடி வாடும் இவ் வாள்நுதலே. ‘

    படத்திற்கு நன்றி ;

    http://rammesh.kaaninilam.com/tlogs/srirangam/kambarMandap.htm

    Share
  • அழகிய சிங்கர் அருள் மலர்ந்தான்!

     

    சத்தியமணி

     

    (நரசிம்மர் பிறந்ததினம் முன்னிட்டு ஓம் நமோ நாராயணா )

     

    அரக்கனின் மகனாய்        இருந்தாலும்

    அன்புடன்    பக்தியும்       செய்ததனால்

    அவனது      துயர்தனை   துடைத்திடவே

    அழகிய சிங்கர் அருள் மலர்ந்தான்

     

    தூணிலும்     இருப்பது    அவன்வலிமை

    துரும்பிலும்  மறைவது  அவன்மகிமை

    துன்பங்கள்   துடைக்கும்  அவன்பெருமை

    அழகிய சிங்கர் அருள் மலர்ந்தான்

     

    வெம்மையின்  சீற்றமும் தணியும்வரை

    செம்மையின்  குருதியும் குளிரும்வரை

    தம்மையும்       கவசமாய்  உள்ளம்வரை

    அழகிய சிங்கர் அருள் மலர்ந்தான்

     

    அரக்கரின் வரங்களை    மாற்றிடுவான்

    அசுரரின்    வன்மங்கள்   போக்கிடுவான்

    அன்பரின்   சேமங்கள்      அறிந்திடுவான்

    அழகிய சிங்கர் அருள் மலர்ந்தான்

     

    உக்கிர விளம்ப     வீரமுகம்

    குரோத அகோர    கோபமுகம்

    யோக   சுதர்ஸன லஷ்மியென‌

    அழகிய சிங்கர் அருள் மலர்ந்தான்

     

    தூணிலிருந்து         பிளந்த    முகம்

    தானாயிருந்து        வள‌ர்ந்த முகம்

    தவிக்கஅசுரனை     இழுத்த‌ முகம்

    அழகிய சிங்கர் அருள் மலர்ந்தான்

     

    அசுரக்குடல்  தனைஅறுத்த முகம்

    அவனுயிர்     அழித்துகளித்த முகம்

    அன்புடன்       கோபம்தணிந்த முகம்

    அழகிய சிங்கர் அருள் மலர்ந்தான்

     

    தானெனும் இரணியர் உடற்கிழித்து

    கூனெனும் நஞ்சினை உடன்குடித்து

    நானெனும் மமதைத்  தான் அழித்து

    அழகிய சிங்கர் அருள் மலர்ந்தான்

     

    தாயாய்    நம்மைக் காத்திடுவான்

    சேயாம்    நமக்குள்  சேர்ந்திடுவான்

    நோயாம்  பிணிகளைப் போக்கிடுவான்

    அழகிய சிங்கர் அருள் மலர்ந்தான்

    Share
  • அறுமுகநூறு (15)

     

    -சச்சிதானந்தம்

     

    ஊருடன் கூடி இழுக்கும் போது,

    தேருடன் சுழலும் சக்கரம் போல,

    மாருத உயிர்த்தேர் சுழன்றிட முருகன்,

    மானுட யாக்கைச் சக்கரம் செய்தான்!                                                                              71

     

    வாகை மலரென எழிலுரு முருகனை,

    வாழை மலரின் சிறுமடல் போன்ற,

    வடிவுடை தீபம் ஏற்றிப் பணிந்து,

    வாமன வடிவ மனதினை விரிப்போம்!                                                                          72

     

    நோக்கத்தை மறந்து திசைமாறிப் பறக்கும்

    நெஞ்சுக்கு உண்மையைத் திடமாக உணர்த்தி,

    நல்வழிப் பாதையில் தொடர்ந்து நடத்திடும்,

    நித்தியத் தெய்வமே, நாதனே போற்றி!                                                                            73

     

    இடும்பன் சுமந்த மலையில் அமர்ந்து,

    இடும்பை நீக்கி அருளும் கடம்பா,

    நடுங்கும் நெஞ்சின் நரகத் துன்பம்,

    ஒடுங்கும் படியென் உயிரைக் காப்பாய்!                                                                          74

     

    அறுபடை வீடு என்பது உண்மையில்,

    அருள் தரும் குகனின் குறியீடு,

    அகிலம் தோறும் வாழும் மனிதரின்,

    அகமே அவனின் பெரு வீடு!                                                                                              75

     

    Share
  • வெற்றிக் கனியை எட்டிப் பறிப்போமா! (13)

    பவள சங்கரி

     

    “மனிதன் நாற்பது நாட்கள் உணவில்லாமல் உயிர் வாழலாம், மூன்று நாட்கள் நீரில்லாமலும், கிட்டத்தட்ட எட்டு நிமிடங்கள் காற்று இல்லாமலும்கூட வாழலாம். ஆனால் நம்பிக்கை இல்லாமல் ஒரு நொடி மட்டுமே வாழ முடியும்”
    ஹேல் லிண்ட்ஸே

    ‘பதறாத காரியம் சிதறாது’

    இது முதுமொழி. எந்த ஒரு காரியத்தையும் பதற்றம் இல்லாமல் நிதானமாகச் செய்யும்போது தவறுகள் நேராமல், கால விரயமும் தவிர்க்கப்படுகிறது. காலையில் எழுந்தவுடன் நம் முன்னால் பரந்து கிடக்கும் பல வேலைகளில் எதை முதலில் செய்வது, எதற்கு முன்னுரிமைக் கொடுப்பது என்று முடிவு எடுக்க வேண்டிய நேரத்தில் பதற்றம் வந்தால், காரியமே கெட்டுவிடும். எந்த வேலையையும் உருப்படியாக செய்து முடிக்க முடியாமலே போய்விடலாம். அதை விடுத்து நிதானமாக, ஒரு சில நிமிட நேரங்களே அதற்காக ஒதுக்கி தெளிவாகச் சிந்திக்க ஆரம்பித்தாலே, குறிப்பிட்ட அந்த முதலில் செய்ய வேண்டிய வேலையில் ஆரம்பித்து, படிப்படியாக அனைத்தும் ஒழுங்கான முறையில் நடந்தேறும். பதற்றம் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் மன அழுத்தம். நம்மால் ஏற்றுக்கொள்ள இயலாத ஒரு சூழல் உருவாகும்போது அது மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. மீண்டும், மீண்டும் அதைப்பற்றியே சிந்திக்க ஆரம்பிக்கும்போது, மன உளைச்சல் அதிகமாகி, பதற்றத்தை ஏற்படுத்துகிறது. இதனைத் தவிர்க்க நாம் முதலில் செய்யக்கூடியது, பதற்றம் ஏற்படுத்தக்கூடிய அந்தத் தவிர்க்க முடியாத சூழலை ஏற்றுக்கொள்வதுதான்.

    ஒவ்வொருவருக்கும் அவரவர்களுடைய தனிப்பட்ட சுதந்திரம் இருக்கிறது. நம்முடைய கருத்துக்களையோ, அல்லது எண்ணங்களையோ அடுத்தவர் மீது திணிக்க நினைப்பது சரியல்ல. சுழலும் பூமியைக் கட்டுப்படுத்தும் வல்லமை நம்மிடம் இல்லை என்பதே சத்தியம் அல்லவா. அதுபோலவே எந்தச் சூழலாயினும் அதனை ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். அடுத்தவரின் தவறுகளை, ‘மறப்போம், மன்னிப்போம்’ என்ற தாரக மந்திரத்தையும் நினைவில் கொள்ளும்போது அது நம் மன அழுத்தத்தை முற்றிலும் குறைக்கவல்லது. மனதை முழுமையாக நம் பணியில் செலுத்தி , தேவையற்ற சிந்தனைகளை விலக்கி வைப்பது நல்லது. பிரச்சனைக்கான வேரையும், சம்பந்தப்பட்டவர்களின் மன நிலையையும் மற்றும் உணர்வுகளையும் புரிந்து கொண்டு, அதற்கேற்றவாரு அதற்கான தீர்வுகளைக் காண்பது உத்தமம். அடுத்தவர்களின் மன உணர்வுகளை மதித்து, அதற்கேற்றவாரு சூழ்நிலையைக் கையாளத் தெரிந்தவரே, மன அழுத்தம் இல்லாத அமைதியான செயல் திறன் பெற்று ஆக்கப்பூர்வமான முன்னேற்றத்தை அடையக்கூடியவர் ஆகின்றனர். நல்ல நட்போ அன்றி உறவோ பலப்பட வேண்டுமாயின், எத்தகைய பிரச்சனையாயினும், சமாதானத்திற்கு தயாராக இருக்க வேண்டியது அவசியம். பிரச்சனையால் உறவு முறிந்து போவதைக் காட்டிலும், அதற்காக வளைந்து கொடுப்பதே சரியானது. சில பிரச்சனைகளே நமக்கு உந்துசக்தியாக அமைந்துவிடும் வாய்ப்புகளும் அதிகம். அப்படிப்பட்ட பிரச்சனைகளை அடையாளம் கண்டு நம் முன்னேற்றத்திற்கு அதைப் பயன்படுத்திக் கொள்வதும் அறிவார்ந்த செயல். அதேபோல, சில பிரச்சனைகளுக்கு தீர்வே காண முடியாமலும் போகலாம். அது போன்றவற்றை விடாமல் பற்றிக் கொண்டு தீர்வு தேடி கால விரயம் செய்வதைக் காட்டிலும், அதனை அப்படியே உள்ளபடியே ஏற்றுக் கொண்டு, மன உளைச்சலைத் தவிர்க்கக்கூடிய உபாயத்தைக் காண்பது சிறந்தது. குறிப்பிட்ட அந்த பிரச்சனையிலிருந்து தள்ளி நின்று, நம் கவனத்தை வேறு பணிகளில் ஆழ்ந்து திசை திருப்பிவிடுவதே நன்மை பயக்கக் கூடியது.

    ‘பொறுத்தார் பூமியாள்வார்!’

    “பொறுமை கசப்பானதானாலும், அதன் கனி இனிமையானது”
    _ அரிஸ்டாடில்

    பொறுமை கடலினும் பெரிது என்பதும் முதுமொழி. அதனால்தானோ என்னவோ அத்துனை அகன்ற பொறுமையை கடைபிடிப்பதில் பலருக்கு சிரமம் ஏற்படுகிறது. சிக்னலில் நிற்கும் போது மஞ்சள் விளக்கு எரிந்து, அடுத்து பச்சை விளக்கு எரிவதற்குள்ளாகவும், நம் பின்னால் தொடர்ந்து வருகிற அரசுப் பேருந்து விடாமல் வழி கேட்டு ஒலிப்பானை அழுத்தித் தொடரும் வேளையிலும், நம் பொறுமையை எடை போட்டுக்கொள்ளலாம். இந்த பொறுமையற்ற தன்மையால் படபடப்பை ஏற்படுத்திக்கொள்ள வேண்டியதாகிறது. ரயில் நிலைய பயணச்சீட்டு வாங்க நிற்கும் நீண்ட வரிசையிலோ, உணவு விடுதியில் காத்திருக்கும் வேளையிலோ, வங்கியில் காத்திருக்கும்போதோ, மருத்துவமனையில் மருத்துவரை அணுக உள்ளே இருக்கும் நோயாளி வெளியில் வரும் வரையிலோ, கடைத்தெருவில் மற்றும் கடையில் சாமான்களைக் கட்டிக் கொடுக்கும் வரையிலோ இப்படி அன்றாடம் பல இடங்களில் நம் பொறுமையைச் சோதித்துக் கொள்ளலாம். என் நண்பர் ஒருவருடன் ஒரு முறை சிற்றுந்தில் பயணம் செய்து கொண்டிருந்தேன். அவர் சிறந்த ஆன்மீகச் சொற்பொழிவாளர். யோகாசனம், தியானம் என்று ஒரு கட்டுப்பாடான வாழ்க்கை வாழ்பவர். அன்று ஆன்மீகச் சொற்பொழிவு நிகழ்த்துவதற்காக சென்று கொண்டிருக்கும் போது வழியில் போக்குவரத்து நெரிசலில் மாட்டிக் கொண்டதால் ஓட்டுநர், கூட்டத்திற்கு நேரமாகிவிட்டதே, மக்கள் காத்திருப்பார்களே என்று படபடப்பாக பதில் சொன்னபோது, அவர் ரொம்பவும் சாதாரணமாக, ‘நம் பொறுமையை சோதித்துக்கொள்ள இது நல்லதொரு வாய்ப்பு’ என்று சொல்லிவிட்டு அமைதியாக இருக்கிறார். அவரே சொன்ன இன்னொரு சம்பவம், தாங்கள் குடியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில், எதிர்த்த வீட்டில் இருக்கும் ஒருவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட அப்போது அவர் வீட்டில் தனியாக இருந்ததால் தன்னை உதவிக்கு அழைத்த வேளையில் தன்னால் பொறுமையாக அந்தச் சூழலைக் கையாண்டதால் மட்டுமே, மருத்துவ ஊர்தி வந்து சேரும்வரை, அவர்கள் சொன்ன அறிவுரையின்படி அவருக்குத் தேவையான முதலுதவிகளைச் செய்து அவரைக் காப்பாற்ற முடிந்தது என்பதையும் சொன்னார். பல நேரங்களில் குழந்தைகள் ஆர்வமாகத் தொடர்ந்து கேட்கும் கேள்விகளுக்குக்கூட பதில் சொல்ல முடியாமலும், அடுப்பில் வைத்திருக்கும் குக்கர் முழுமையாக சத்தம் வந்த பின்பும், அந்த ஆவி அடங்கி அதைத் திறக்க வேண்டிய காலம் வரை கூட பொறுமையில்லாமலும் தவிக்க வேண்டியும் வந்துவிடுகிறது.

    பொறுமையாக இருப்பதினால் நம்மால் சாதிக்கக்கூடியது அதிகம் என்று நம் அறிவு உணர்த்தினாலும், சில நேரங்களில் நம் உணர்வு அதை மறைத்துவிடுகிறது. அதற்கான பயிற்சியை நம் சூழ்நிலைகள் தானாக நமக்குக் கொடுக்கும்போது அதை ஏற்றுக் கொள்வது மட்டுமே சிறந்த வழி. அன்றாட வாழ்க்கையில் மட்டுமல்லாமல் தொழில் என்று வரும்போது பொறுமை என்ற ஒன்றின் அத்தியாவசியம் நன்றாகவே உணரப்படும். உதாரணமாக சொத்து வாங்கி விற்கும் தொழிலில் (ரியல் எஸ்டேட்) சில மணி நேர பொறுமை காத்தல்கூட கனிசமான வருமானத்தை அதிகரிக்கவோ அல்லது, பெருத்த நட்டம் வராமலோ காக்கக்கூடும். சூழ்நிலையை உணர்ந்து தேவையான நேரத்தில் பரபரப்பாக முடிவெடுக்காமல் பொறுமையாக நிதானத்துடன் செயல்பட்டால் வெற்றிகளை குவிக்க முடியும். இதற்கு நல்ல உதாரணம் விளையாட்டு வீரர்கள். இரசிகர்கள் ஆரவாரம் செய்து உற்சாகப்படுத்தி, உடனே பந்தைப் போடு, சீக்கிரம் என்றெல்லாம் சத்தம் செய்தாலும், சற்றும் அசராமல், பொறுமையுடன் அமைதி காத்து, தக்க தருணம் அறிந்தே விளையாடத் துணிவார்கள். அப்படிப்பட்டவர்களே சிறந்த வீரர்களாகவும் பிரகாசிக்க முடியும்.

    வாழ்க்கையும் ஒரு விளையாட்டு போலத்தானே! சரியாகத் திட்டமிட்டு, நிதானத்துடன் செயல்பட்டு முன்னேறுபவர்களே வெற்றியாளர் ஆகின்றனர் அல்லவா?

    தொடர்வோம்

    படத்திற்கு நன்றி:

    http://inspirational-images.tumblr.com/

    Share
  • சம்ஸார பங்க நிர்மக்ன சமுத்தரண பண்டிதா

    -கவிநயா

     

    உலகத்தில் பிறந்தமைக்காக மகிழ்ச்சி கொண்டு, உலக வாழ்வைத் திருப்திகரமாக அனுபவித்து வாழ்பவர்கள் மிகச் சிலரே. அதற்குக் காரணங்கள் பலவாக இருக்கலாம்.

    அவர்கள் பற்றை விட்டு முற்றும் துறந்தவர்களாக இருக்கலாம். அல்லது உலகம் மாயை என்று இயல்பாகவே புரிந்து கொண்டவர்களாக இருக்கலாம். அல்லது இன்பமும் துன்பமும் பாதிக்காமல் தாமரை இலைத் தண்ணீரைப் போல வாழக் கற்றவர்களாக இருக்கலாம். அல்லது ஆழமான மனக் காயங்களால் பாதிக்கப்படாதவர்களாக, பூர்வ ஜென்ம புண்ணியத்தால் இன்பங்களே மேலோங்கி, இன்பத்தையே அதிகமாக அனுபவிப்பவர்களாகவும் இருக்கலாம்.

    எது எப்படி இருந்தாலும், பலருக்கும், “போதும் இந்த வாழ்க்கை”, என்ற எண்ணம் வாழ்வில் ஓரிரு முறைகளாவது தோன்றி விடுகிறது என்பதே உண்மை. அப்படித் தோன்றினாலும் என்ன பலன்? அந்தக் குறிப்பிட்ட துயரம் தரும் காலம் முடிந்த பின், திரும்பவும் சில இன்பங்களை அனுபவிக்கும் போது, முன்னர் அனுபவித்த துன்பம் எல்லாம் மறந்து விடுகிறது. வாழ்க்கை எவ்வளவு இனிமை என்ற எண்ணம் கூட ஏற்பட்டு விடுகிறது. இந்த மாய விளையாட்டுக்குக் காரணகர்த்தாவும் அன்னைதான்.

    ததியுறு மத்தில் சுழலும் என் ஆவி”, என்பார் பட்டர்.  “மத்தேறு ததிக் கிணை வாழ்வடையேன்”, என்பது லலிதா நவரத்ன மாலை. மத்தினால் தயிரைக் கடையும் போது அந்தத் தயிரானது அதற்குள் அகப்பட்டுக் கொண்டு, எப்படி இப்படியும் அப்படியுமாகச் சுழல்கிறதோ, அப்படி என்னுயிரும் இந்த உலக வாழ்வில் அகப்பட்டுக் கொண்டு உழல்கிறது என்கிறார்கள், இந்த மகான்கள்.

    புனரபி ஜனனம் புனரபி மரணம்
    புனரபி ஜனனி ஜடரே சயனம்
    இஹ சம்சாரே பஹு துஸ்தாரே
    க்ருபயா பாரே பாஹி முராரே

    மீண்டும் பிறப்பு. மீண்டும் இறப்பு. மீண்டும் தாயின் கருப்பையில் உறக்கம். இந்தச் சுழற்சியைக் கடப்பது எவ்வளவு கடினமாக இருக்கிறது. அருள் கூர்ந்து எனைக் காப்பாய் கோவிந்தா என்கிறார், ஆதிசங்கரர்.

    அந்த கோவிந்தனே மனிதனாக அவதாரம் எடுத்த போது எத்தனையெத்தனை துன்பங்களை அனுபவித்தான்! சீதா பிராட்டியோ மாந்தர்களைப் போலவே மனந் தளர்ந்து உயிரை மாய்த்துக் கொள்ளவும் துணிந்து விட்டாள். பிறப்பென்று எடுத்து விட்டால் தெய்வங்களுக்கே விதி விலக்கில்லாத போது நாமெல்லாம் எந்த மூலைக்கு? இதனை எடுத்துக் காட்டத்தான், ஸ்ரீ ராமகிருஷ்ணரும் ஸ்ரீ ரமணரும் போன்ற மகான்களும்  துன்பங்களை மனமுவந்து ஏற்றுக் கொண்டு, அதே சமயம் இறைவனிடம் மனதைச் செலுத்தி, வாழ்ந்து காட்டினார்கள்.

    இன்பம், துன்பம் இரண்டிலும் அகப்பட்டுக் கொண்டு சுற்றிச் சுற்றி வந்தாலும், இந்தப் பிறவிச் சுழற்சிக்கும் முடிவு உண்டு என்பது தெரிய வேண்டுமே… தெரிந்தாலும் அந்த முடிவு எனக்கும் வேண்டும் என்ற ஏக்கம் வேண்டும். அந்த முடிவை அடைய என்னதான் வழி என்று தேட வேண்டும். அந்தத் தேடல்தான் அன்னையின் பாதத்தில் கொண்டு விடும்.

    இப்படிப்பட்ட தேடலுக்கு வழி வகுப்பதுதான் இத்தனை கோடிப் பிறவிகளின் நோக்கமே. ஒவ்வொரு ஜீவனும் இந்த நிலையை ஏதோ ஒரு பிறவியில் அடைந்தே தீரும் என்பது பெரியோர்களின் வாக்கு.

    தெய்வத்தின் குரல்” முதல் பாகத்தில் ஸ்ரீ மஹா பெரியவர் சொல்கிறார்:

    “ஆசைகள் அத்தனை அனர்த்தத்துக்குக் காரணம். ஆசைதான் காமம் என்பது. ஆசைப்பட்டது கிடைக்காவிட்டால் குரோதம், சோகம் எல்லாம் உண்டாகின்றன. காமத்தில் பிறப்பு உண்டாகிறது. குரோதத்தால் நம்மை நாமே கொன்று கொள்கிறோம். எனவே ஜனன மரணத்திலிருந்து விடுபட வேண்டுமானால் நம்மைக் காமமும் குரோதமும் அண்ட விடக்கூடாது. மழை ஜலம் உள்ளே புகவொட்டாமல் நல்ல டஃபேடோ குடைத்துணி காப்பாற்றுகிறது. அதை வாட்டர் ப்ரூஃப் என்கிறோம். இதே மாதிரி நமக்குக் காம ப்ரூஃபாக, க்ரோத ப்ரூஃபாக ஒரு கவசம் இருக்கிறதா என்றால், இருக்கிறது.  அம்பாளின் கிருபைதான் அந்தக் கவசம்.

    அன்னை பராசக்தி, ஒரு பெருங் கருணைக் கடல். அவளைக் கருணா ரஸ சாகரா என்று வர்ணிக்கிறார்கள், வாக் தேவதைகள். அவ்யாஜ கருணா மூர்த்தி அவள். காரணமே இல்லாமல் கருணை செய்பவளுக்கு, நாம் ஒரு காரணத்தையும் கொடுத்து விட்டால், பிறகு கேட்கவா வேண்டும்? “அம்மா”, என்று தன் கன்று அழைத்து விட்டால், ஐந்தறிவுள்ள பசுவே ஓடோடி வரும் என்றால், தன் குழந்தைகளின் கதறலைக் கேட்டு அந்தத் தெய்வத் தாய் வராமல் இருப்பாளா, என்ன?

    பிறப்பு, இறப்பு என்ற சுழற்சிக்குள் சிக்கிக் கொண்டு ஜீவன்கள் படும் அவஸ்தையைச் சுலபத்தில் தீர்ப்பவளாம், அம்பிகை. லலிதா த்ரிசதியும், அவளை “ஏகைச்வர்ய ப்ரதாயினி”, அதாவது உண்மையான ஒரே செல்வமாகிய முக்தியை அளிப்பவள் என்று போற்றுகிறது. சம்சாரம் என்னும் சேற்றுக்குள் மூழ்கித் தத்தளிப்பவர்களைக் கரையேற்றுவதில் மிக்க சாமர்த்தியம் வாய்ந்தவள் அவள் என்கிறது, லலிதா சகஸ்ரநாமம். “சம்ஸார பங்க நிமக்ன சமுத்தரண பண்டிதா”.

    ஆகையால் அவள் பாதங்களை இறுகப் பற்றிக் கொண்டு இந்தச் சம்சாரப் புதை குழிக்குள்ளிருந்து விடுதலை அடைவோம்.

    எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்.

    படத்துக்கு நன்றி: http://blaufraustein.wordpress.com/

    Share
  • வாழ்க்கை நலம் – 10

    குன்றக்குடி அடிகள்

    10. அறிவறிந்த மக்கட்பேறு

    மங்கலமாகியது இல்லற வாழ்க்கை. சிறந்த இல்லற வாழ்க்கையின் பயன் மக்கட்பேறு. இதனைத் திருக்குறள்,

    “பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த
    மக்கட்பேறு அல்ல பிற”

    என்று எடுத்துக்கூறி விளக்குகிறது. இந்த உலகில் பல்வேறு பேறுகள் உள்ளன. அவற்றுள் சில பொன், பொருள், போகம், புகழ், மக்கட்பேறு முதலியன. இவை யாவற்றுள்ளும் சிறந்தது மக்கட்பேறு. ஏன்? முன்னே சொன்ன பொன், பொருள், போகம், புகழ் ஆகியவற்றுள் ஒன்றைப் பெற்றாலும் சரி, பலவற்றைப் பெற்றாலும் சரி, வாழ்க்கை முழுமை ஆகாது. அதோடு மானுட இயக்கத்தின் தொடர்ச்சிக்கு அரண் செய்வதாகவும் ஆகாது.

    ஆதலால் இல்வாழ்வார் பெறக்கூடிய பேறுகளுள் தலையாயது மக்கட்பேறேயாம். மானுட இயக்கத்தின் வளர்ச்சிக்கும் ஆக்கத்திற்கும் துணை செய்வது மக்கட்பேறே. அதோடு தத்துவ இயல்வழி ஒரு உயிர் மானுடப் பிறப்பு எய்தினால்தான் அமர நிலை எய்துகிறது. அதனாலேயே “பெருமவற்றுள் யாமறிவதில்லை” என்று தெளிவாகவும் உறுதியாகவும் கூறுகிறார் திருவள்ளுவர்.

    “அறிவறிந்த மக்கட்பேறல்ல பிற” என்ற பகுதி, கவனமாகப் படிக்க வேண்டிய பகுதி. இந்தப் பகுதிக்கு உரை ஆசிரியர்கள் எழுதியுள்ள உரைகள் அறிவுக்கு இசைந்தனவாக இல்லை. “அறிவறிந்த” என்றதனால் இறந்த காலமாகிறது. எப்படி ஒரு மகன் அல்லது மகள் பிறக்கும் பொழுதே அறிவு அறிந்த குழந்தையாக இருக்க இயலும்? முடியும்? அப்படியானால் ‘அறிவறிந்த’ என்ற சொல்லை யாருக்கு அடையாகச் சேர்ப்பது?  அறிவறிந்த பெற்றோர்களா? அறிவறிந்த மக்களா?  பெற்றோர்களுக்குத்தான் ‘அறிவறிந்த’ என்ற சொல்லை அடையாக்க வேண்டும். அறிவறிந்த பெற்றோர்களுக்கு அறிவறிந்த மக்கள் கிடைப்பார்கள். ஆம்! காதல் தூய்மையானது; அறிவார்ந்தது; உறவின் வழியது; தன்னல மறுப்புப் பண்பின் வழியது. காதல் மனையறம் ஒரு நோன்பு. இந்த நோன்பினை அறிவார்ந்த நிலையில் இயற்றுநர் காதல் வாழ்வில் சிறக்கின்றனர். இத்தகையோரே நன்மக்களைப் பெறுகின்றனர். பெற்ற வண்ணம் வளர்த்து, உயர் நிலைக்குக் கொண்டு வருகின்றனர்.

    ஆதலால் நன்மக்களை விரும்பும் பெற்றோர் “அறிவரிந்தவர்களாக” இருத்தல் வேண்டும்; வீட்டைப் பல்கலைக் கழகமாக்குபவர்களாய் இருத்தல் வேண்டும். கருவுற்ற காலம் முதல் பிறந்து வளர்ந்து தன் நிலை எய்தும் காலம் வரையில் பொறுப்போடு வளர்ப்பவர்கள்.   அறிவறிந்த பெற்றோர்கள் அறிந்த பெற்றோர்களாவர்.

    அண்ணல் காந்தியடிகள், “சிறப்புப் பொருந்திய வீட்டுக்கு இணையான பல்கலைக்கழகம் இல்லை” என்று கூறியதை எண்ணுக. நல்ல பெற்றோர்களே குழந்தைகளுக்கு நல்ல ஆசிரியர்கள். அமெரிக்க குடியரசுத் தலைவர் ஆதம்ஸ், தன்னுடைய கடவுள் பக்தி – அறநெறி பற்று அனைத்துக்கும் தன்னுடைய தாயே காரணம், என்று கூறுகின்றார்.  மக்களாவதும் – மாக்களாவதும் பெற்றோர்களின் பொறுப்பேயாம்.

    ஆதலால், மனையறம் வாழ்வோர் – மகப்பேற்றுக்குரிய வாழ்வு வாழ்வோர் வாழ்வாங்கு வாழ வேண்டும். அறிவறிந்த பெற்றோர்களே அறிவறிந்த மக்களைத் தருகின்றனர் என்பதே வள்ளுவம்.

    _________________________________
    REF: http://www.tamilvu.org/library/nationalized/pdf/47.KUNDRAKUDIADIGALAR/VAZAKAINALAM.pdf
    இது ஒரு நாட்டுடைமையாக்கப்பட்ட  நூல், நாட்டுடைமையாக்கப்பட்டது  நிதியாண்டு 2007-2008 ல்

    மின்பதிப்பாக்க உதவி: தேமொழி


    Share
  • இங்கிலாந்திருந்துஒருமடல்!…..(58)

    சக்தி சக்திதாசன்

    அன்பினியவர்களே !

    இனிய வணக்கங்கள் !

    இதோ அடுத்தொரு மடல் உள்ளத்தின் உதிர்வுகளைப் பகிர்ந்து கொள்வதற்காக உங்கள் முன்னே.

    இன்றைய உலகம் நாகரீக மிக்கதொன்றாக , நவீன விஞ்ஞான வளர்ச்சிகளின் அதியுச்சியை நோக்கி அதி வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது.

    மக்களிடையேயும் , நாடுகளிடையேயும் காணப்பட்ட பொருளாதர சமனற்ற நிலை இவ்விஞ்ஞான வளர்ச்சியினால் வேகமாகக் கரைந்து கொண்டு போகிறது .

    சமுதாயங்களில் காணப்படும் கொடுமையான வறுமை எனும் நிலைக்கு இவ்விஞ்ஞான வளர்ச்சி உதவும் எனும் நம்பிக்கை பலரின் மனதில் வியாபித்திருந்தாலும் அதற்கான வலுவான சான்றுகள் இன்னும் பெரும்பான்மையாகக் காணப்படவில்லை .

    சரி , எதற்காக இந்தப் பீடிகை ? சக்தியின் மடல் எதை நோக்கிய பார்வைக்கு எம்மை அழைத்துச் செல்கிறது எனும் கேள்வி உங்கள் மனதில் எழுவது இயற்கையே !

    மனித சமுதாயத்தின் முன்னேற்றத்தின் அளவுகோல் என்ன ? என்பதே இவ்வாரம் நான் உங்கள் முன்னால் தொடுக்கும் வினா .

    சமுதாய முன்னேற்றம் எனும் போர்வையினால் கலாச்சார அடித்தளத்தை அசைத்துப் பார்ப்பது சரியா ?

    ஒருவர் ஆத்திகராக இருப்பதோ அன்றி நாத்திகராக இருப்பதோ அவர்களின் தனிமனித சுதந்திரம் என்பதை நான் மறுக்கவில்லை .

    அதே சமயம் இத்தனிமனித சுதந்திரம் எனும் கோஷத்திற்கு எல்லையென்பதே கிடையாதா ? என்பதே என்னுள் விளையும் கேள்வி .

    இன்று மேலைத்தேசங்களில் மட்டுமல்ல கீழைத்தேசங்களிலும் இந்த ” ஓரினச் சேர்க்கை ” அல்லது ” தன்னினச் சேர்க்கை ” என்பது அதாவது ஆங்கிலத்தில் ” Gay relationship “ அன்றி ” Homosexual relationship “ எனும் வகையிலான உறவுமுறை சமுதாயத்தின் ஒரு அங்கமாக அங்கீகரிக்கப்பட்டு விட்டது எனலாம் .

    இது சரியா ? தவறா ? என்பதல்ல எனது வாதம் . இங்கேயுள்ள ” தனிமனிதச் சுதந்திரத்தை ” நான் உள்வாங்கிக் கொள்கிறேன்.

    ஆனால் தனிமனிதச் சுதந்திரம் எனும் பெயரில் கால காலங்களாகப் பராமரிக்கப்பட்டு வந்த கலாச்சார மையங்களின் அடிப்படை விதிகளை மாற்றியமைக்க முயல்வது எற்றுக் கொள்ளப்படக் கூடியதல்ல என்பது எனது கருத்து .

    இந்த வாரம் இங்கிலாந்துப் பாராளுமன்றத்தில் ஒரு சர்ச்சைக்குரிய விடயம் சட்டமாக்கப் படுவதற்குரிய நடவடிக்கை அநேகரின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் எடுக்கப்பட்டுள்ளது.

    அது என்ன என்கிறீர்களா ?

    ஒரு ஆணும் மற்றொரு ஆணும் அன்றி ஒரு பெண்ணும் மற்றொரு பெண்ணும் காதல் வயப்பட்டு ஒன்றாக வாழ்வது இயல்பான செயல் என்று அங்கீகரிப்பதற்காக கடந்த லேபர் அரசாங்கத்தினால் ” சமூக ஜோடி (Civil Partnership) “ எனும் சட்டம் அமூலாக்கப்பட்டது . இதன்மூலம் தம்பதியராக வாழும் ஒரு ஆணுக்கும் ,பெண்ணுக்கும் சட்டத்தின் மூலம் என்ன உரிமைகள் இருக்கிறதோ அதே உரிமை இவோரினத் தம்பதியினருக்கும் உண்டு என்று வரையறுக்கப்பட்டது .

    இதைத் தனிமனித உரிமை என்பதை நான் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்கிறேன் .

    ஆனால் இப்போது இத்தகைய ஓரினத் தம்பதியினர் சர்ச்சிலோ அன்றி மற்றைய மதக் கலாச்சார மையங்களிலோ ஆண்-பெண் தம்பதியினரைப் போல திருமணம் செய்து கொள்ளலாம் என்பதைச் சட்டமாக்கும் முயற்சியில் தற்போதைய கூட்டணி அரசாங்கம் இறங்கியுள்ளது .

    இது ஏதோ என் மனதைக் கொஞ்சம் கலக்குகிறது . ஆத்திக நம்பிக்கையினால் கண்மூடித்தனமான கருத்தை நான் கொண்டிருக்கிறேன் என்பது அல்ல இதன் காரணம் .

    சரியோ , தவறோ ஒவ்வொரு மதத்திற்கும் ஒரு கோட்பாடு உண்டு . இவற்றிற்கு அந்தந்த மதத்தில் வலுவான பின்னனிகள் உண்டு. இவற்றில் சிலவற்றை மூட நம்பிக்கை என்று சொல்வதின் பின்னால் உள்ள நியாயங்கள் எனக்குப் புரிகிறது.

    ஆனால் அவற்றின் அதிமுக்கியமான அடிப்படைக் கொள்கைகளை தனிமனிதச் சுதந்திரம் எனும் பெயரில் அசைத்துப் பார்க்க விழைவது அம்மத நம்பிக்கை கொண்டவர்களின் தனிமனித சுதந்திரத்தைத் தாக்காதா ?

    “ ஓரினத் தம்பதியர் ” எனும் வாழ்க்கை முறையை இன்றைய சமூகத்தின் ஒரு அங்கமாக ஏற்றுக் கொள்ளும் அதே சமயம் சமூக முன்னேற்றம் , கால மாற்றம் எனும் பெயரில் சமூகக் கட்டமைப்பின் அத்திவாரத்தை ஆட்டிப்பார்ப்பது பயங்கரமான ஒரு செயல் என்பது என் தனிப்பட்ட கருத்து .

    இன்றைய காலகட்டத்தில் இத்தகைய விவாதங்கள் நடைபெற வேண்டியது காலத்தின் கட்டாயமாகிறது . எத்தகையதோர் சமுதாயக் கட்டமைப்பை எமது சந்ததியினருக்கு நாம் விட்டுச் செல்லப் போகிறோம் எனும் கேள்விக்கு இவ்விவாதங்கள் இன்றியமையாதவையாகின்றன .

    எமக்கு மேலே ஒரு சக்தி இருக்கிறதா ? இல்லையா ? என்பதை அறுதியாக எவராலுமே நிரூபிக்க முடியாது . எவ்வளவுக்கெவ்வளவு விஞ்ஞான வளர்ச்சியியால் இயற்கையின் பல நிகழ்வுகளுக்கு நாம் விளக்கத்தை அளித்தாலும் மற்றொரு பக்கத்தில் எம்மால் விளக்க முடியாத நிகழ்வுகள் நிகழ்ந்து கொண்டுதானிருக்கின்றன.

    விஞ்ஞானம் எனும் பெயரால் , பகுத்தறிவு எனும் விளக்கத்தால் இயற்கையின் அழிவைத் துரிதப்படுத்தும் பல செயல்கள் நிகழ்ந்து கொண்டுதானிருக்கின்றன.

    ஆனால் அதே சமயம் மதங்களின் பெயரால் , ஆத்திகத்தின் போர்வையில் பல மூடத்தனமான செயல்களும் நிகழ்ந்து கொண்டு தானிருக்கின்றன.

    நன்மைக்கும் , தீமைக்கும் , ஆக்கத்திற்கும் , அழிவிற்கும் , ஆத்திகத்திற்கும் ,நாத்திகத்திற்கும் இடையே ஒரு பொதுவான நிலைப்பாட்டில் புரிந்துணர்வை ஏற்படுத்தி கலாச்சாரக் கட்டமைப்பில் முக்கிய அடிப்படை அறிவான காரணிகளைப் பாதுகாத்து வாழ்வது அவசியம்.

    இல்லையெனில் மனித வாழ்க்கைக்கும் விலங்கு வாழ்க்கைக்கும் வித்தியாசம் அற்றுப் போய்விடும்.

    தனிமனிதச் சுததிரம் அவசியம் தான் ஆனால் அதற்கும் ஒரு எல்லை வகுத்துக் கொள்வது அவசியம் இல்லையெனில் தனிமனிதச் சுதந்திரத்தின் பெயரால் கொலைகளும் , கொள்ளைகளும் கூட நியாப்படுத்தப்படத் தொடங்கி விடும் .

    கலிகாலத்தில் இதுவெல்லாம் சகஜமோ ?

    மீண்டும் அடுத்த மடலில்

    அன்புடன்

    சக்தி சக்திதாசன்

    http://www.thamilpoonga.com

    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • சாகும் வரை….

     

    பழமைபேசி

     

    பணம் கொண்டு வாங்கிவிடுவேன் படுக்கை
    எதைக் கொண்டு வாங்குவேன் உறக்கம்?

    பணம் கொண்டு வாங்கிவிடுவேன் புல்லாங்குழல்
    எதைக் கொண்டு வாங்குவேன் இசை?

    பணம் கொண்டு வாங்கிவிடுவேன் நூலகம்
    எதைக் கொண்டு வாங்குவேன் அறிவு?

    பணம் கொண்டு வாங்கிவிடுவேன் எட்டுத்தொகை பத்துப்பாட்டு
    எதைக் கொண்டு வாங்குவேன் தமிழ்?

    பணம் கொண்டு வாங்கிவிடுவேன் திரவியம்
    எதைக் கொண்டு வாங்குவேன் நறுமணம்?

    பணம் கொண்டு வாங்கிவிடுவேன் என்சைக்ளோபீடியா
    எதைக் கொண்டு வாங்குவேன் நினைவாற்றல்?

    பணம் கொண்டு வாங்கிவிடுவேன் பேரழகி
    எதைக் கொண்டு வாங்குவேன் பேரன்பு?

    பணம் கொண்டு வாங்கிவிடுவேன் பட்டம்
    எதைக் கொண்டு வாங்குவேன் படிப்பினை?

    பணம் கொண்டு வாங்கிவிடுவேன் கூத்துப்பட்டறை
    எதைக் கொண்டு வாங்குவேன் களிப்பு?

    பணம் கொண்டு வாங்கிவிடுவேன் களிமாடம்
    எதைக் கொண்டு வாங்குவேன் சிற்றின்பம்?

    பணம் கொண்டு வாங்கிவிடுவேன் கடிகாரம்
    எதைக் கொண்டு வாங்குவேன் நேரம்?

    பணம் கொண்டு வாங்கிவிடுவேன் மனிதர்கள்
    எதைக் கொண்டு வாங்குவேன் நட்பு?

    பணம் கொண்டு வாங்கிவிடுவேன் ஆசிரமம்
    எதைக் கொண்டு வாங்குவேன் மனநலம்?

    பணம் கொண்டு வாங்கிவிடுவேன் குடிசை
    எதைக் கொண்டு வாங்குவேன் எளிமை?

    மனம், மனம், மனம்!
    மனம் பண்பட வாசிப்போம்!!
    சாகும் வரை வாசித்திருப்போம்  நூல்கள் பல!!!

    Share
  • ஏழுமலையான் அந்தாதிப் பதிகம்

    சு.ரவி

     

     

    வெய்யதோர் பாலை வனமாய்க் கிடந்த மனத்தும் உந்தன்

    துய்யமெய்க் காதல் அரும்பக் கவிதை துளிர்க்கவைத்தாய்

    மைம்முகில் வண்ணா! மலையே ழுகந்தமர் மாணிக்கமே!

    உய்யுமா றென்னையும் ஆண்டுகொள் நானுன் அடைக்கலமே!

     

    அடைக்கலம் வந்த அரக்கனின் தம்பிக்(கு) அரசுதந்த!

    புடைத்தெழும் தோள! புலத்தியன் தோன்றல் புழுதிசாய்த்தோய்!

    இடைக்குலம் உய்ய இரவிலே மாறி இடம்பெயர்ந்தோய்

    குடைக்கொரு கோவர்த் தனகிரி தூக்கிய கோவிந்தனே!

     

    கோவித் தெனைநீ புறம்விட லாமோ? குழவியென்றே

    பாவித்  திடுவது பாரமோ? தாயாய்ப்  பரிந்தணைத்தால்

    தாவித் தழுவிடும் சேய்நான் இதுபோல் தவிக்கலாமோ?

    வாவிப் பொழில்சூழ் வடமலை மேவும் வரதுங்கனே!

     

    வரதம் வலமும், அபயம் இடமும் வழிநடத்தும்

    விரதக் கனலில் இருளறும் உள்ளே விழிதிறக்கும்

    சுருதிப் பொருளே, நவில்தொறும் நாமம் சுவைபெருக்கும்

    அரவம் விரித்த அணைமேல் துயிலும் அரவிந்தமே!

     

    அரனும், அரியும், உமையும், குகனும் ஒருவடிவாய்த்

    திரளும் திருமலைத் தெய்வமே, வாசத் துழாயலங்கல்

    புரளும் புஜங்கள் புவனங்க ளேழும் புரந்திருக்க

    இருளும், ஒளியும்  கடந்த வெளியாய் இருப்பவனே!

     

    இருப்பதும், நிற்பதும், பாதங்கள் நீட்டிக் கிடப்பதும் உன்

    விருப்புடைக்  கோலம். பனிபோல் முகில்கள் படர்ந்திருக்கும்

    பருப்பதம்  ஏழும்  பரவும்  பரனே,  பரிந்தெமக்குன்

    திருப்பதம் தந்தாய்; திதிப்பினில் நெஞ்சம் திளைக்கின்றதே!

     

    திளைக்கலாம், தோய்ந்து கிடக்கலாம், கண்களில் முத்திரண்டு

    முளைக்கலாம், வேத முதல்வனைப் போற்றிப் பரவசத்தில்

    களிக்கலாம், இந்தக் கலியுகம் உய்யக் கருணைகொண்டு

    சுளைப்பலா  வேரிற்  பழுத்ததே,  வாரீர்  சுவைக்கலாமே!

     

    சுவைதரும் நாமம் சுகம்தரும் வாழ்வின் சுமைவிலக்கும்

    அவைதொறும் வெற்றி நடைதரும்; மந்திக் குரங்கினங்கள்

    கவைதொறும் தாவும் கவின்வேங் கடத்துறைக் கற்பகக்கா

    எவையெலாம்  வேண்டும் அவையெலாம் அன்பர்க் களித்திடுமே!

     

    அளிமுரல் சோலை அணிதரும் மாமலை வேங்கடத்தே

    ஒளியுறக் கோயில் உகந்தஎம் மானை அணுகுபோதே

    களிவரல், பேச்சறல், நெஞ்சகம் விம்மிக் கசிந்துகண்ணீர்த்

    துளிவரல் என்று பலவா(று) இதயம் துடிக்கின்றதே!

     

    துடியிடை நாயகி துய்யசெந் தாமரை வீற்றிருப்பாள்
    வடிவுடை யாள்,திரு வேங்கடத் தான் திரு மார்பிலென்றும்
    குடியுடை யாள் பது மாவதித் தாயை மணந்துகொண்டு
    நெடிதுயர்ந் தானை நினைந்தவர்க் கென்றும் நிகரில்லையே!


     


    Share
  • அழுகைக்கு காரணம்

     

    -சூர்யா நீலகண்டன்

     

     

    கம்பி நுனியில் நின்று கொண்டு

    எல்லோருடைய வாழ்த்துகளையும்

    ஊக்கங்களையும் புகழ்களையும்

    இகழ்களையும் ஏளனங்களையும்

    காணிக்கைகளையும் ஏற்றுக்கொண்டு

    தெருமுனையில் தன் சாகசங்களைச்

    செய்து கொண்டிருந்தாள் அச்சிறுமி.

     

    சாகசங்களைப் பார்த்து மகிழ்ந்த

    மக்களில் சிலர் குறைவாகவும்

    நிறைவாகவும் அவர்களுடைய

    பணப்பையிலிருந்து சிறுமியுடைய

    பணவலையில் வீசினர்.

     

    அவளுக்குப் போட்டியாக

    அவளது இளைய சகோதரன்

    சாகசம் செய்வது போல்

    அக்கம்பின் நிழலில்

    நடந்து கொண்டிருந்தான்.

     

    நிழல் சுடுகிறது.

    அவனுக்கு அதில்

    நடப்பது

    மிகவும் கடினமாகவே

    இருந்தது. ஆனாலும்

    யாரும் அவனுக்கு

    காசு போடவில்லை.

     

    படத்துக்கு நன்றி: http://annakannan-photos.blogspot.com/2007/09/blog-post_15.html

     

    Share
  • பாரதியின் வேத முகம் – 11

     

    -சு.கோதண்டராமன்

    கற்பக விநாயகக் கடவுளே போற்றி

     

    பாரதி எல்லா இந்து தெய்வங்களையும் அல்லாவையும் ஏசுவையும் போற்றிப் பாடியுள்ளார் என்றாலும் விநாயகர் ஒருவருக்குத் தான் அவர் நான்மணிமாலை பாடிச் சூடியுள்ளார். விநாயகரைக் குறிப்பதாகக் கருதப்படும் “கணானாம் த்வா கணபதிம் ஹவாமஹே” என்ற வேத மந்திரத்தின் பொருளையும் அதில் மறவாமல் குறிப்பிடுகிறார்.

    வேத முனிவர் விரிவாப் புகழ்ந்த

                பிருகஸ்பதியும் பிரமனும் யாவும்

                தானேயாகிய தனி முதற் கடவுள்

    என்று வாழ்த்துகிறார்.

    பிற்காலத்தில் ஏற்பட்டதாயினும் தற்போது அதிகமாகப் பயன்படுத்தப்படும் விநாயகர் துதியாகிய சுக்லாம்பரதரம் விஷ்ணும் என்ற சுலோகத்தையும் அவர் மறக்கவில்லை.

    வெள்ளாடை தரித்த விட்டுணு என்று

                செப்பிய மந்திரத் தேவனை

                முப்பொழுதேத்திப் பணிவது முறையே.

    மேலும் விநாயகரை ஆர்ந்த வேதப் பொருள் காட்டும் தீபன், வேதச் சுடர், வேத காரணன் என்றும் போற்றுகிறார். விநாயகர், ஸத்தெனத் தத்தெனச் சதுர் மறையாளர் நித்தமும் போற்றும் நிர்மலக் கடவுள். எல்லா மதங்களுக்கும் பொதுவான முழுமுதற் கடவுளுக்கு உள்ள பல பெயர்களில் விநாயகர் என்பதும் ஒன்று என்பது தான் பாரதியின் கொள்கை. அவர் விநாயகருக்குச் செய்யும் அர்ச்சனை நாமாவளியைப் பார்த்தால் தொல் பழம் தெய்வங்கள் உள்பட எல்லா தெய்வங்களின் பெயர்களும் அதில் வந்து விடுகின்றன.

    பரம் பொருளேயோ பரம் பொருளேயோ

                ஆதி மூலமே அனைத்தையும் காக்கும்

                தேவ தேவா சிவனே கண்ணா

                வேலா சாத்தா விநாயகா மாடா

                இருளா சூரியா இந்துவே சக்தியே

                வாணீ காளீ மாமகளேயோ

    இன்னொரு பாடலில் இன்னும் ஒரு படி மேலே போய்ப் பிற மத தெய்வங்களின் பெயர்களையும் சூட்டுகிறார்.

     

    விநாயக தேவனாய் வேலுடைக் குமரனாய்

                நாராயணனாய் நதிச் சடை முடியனாய்

                பிறநாட்டிருப்போர் பெயர் பல கூறி

                அல்லா யெஹோவா எனத் தொழுதன்புறும்

                தேவரும் தானாய் திருமகள் பாரதி

                உமையெனும் தேவியர் உகந்த வான் பொருளாய்

                உலகெலாம் காக்கும் ஒருவனைப் போற்றுதல்.

    புராணங்களை ஒட்டி விநாயகரைக் கறையுண்ட கண்டன் மகன், சக்தி மகன், அரங்கத்திலே திருமாதுடன் பள்ளிகொண்டான் மருகன் என்று அழைத்தாலும் அவர் புராணக் கதைகளின்படி விநாயகரைப் பெருவயிறன் (லம்போதரன்) என்றோ, அருணகிரியார் பாடியபடி ‘மிக்க அடிசில் கடலை பட்சணமெனக் கொள் அருள் விக்கின சமர்த்தன்’ என்றோ அக்காலப் பள்ளி மாணவர்களின் தோத்திரப் பாடலின்படி ‘நூறு குடலை மாம்பழம் நொடிக்கும் அளவில் அமுது செய்ய வல்ல பிள்ளாய்’ என்றோ ஓரிடத்திலும் குறிப்பிடவில்லை. ஏன்? எல்லாம் வல்ல கடவுளுக்குப் பெருந் தீனி தின்பது சிறப்புச் சேர்க்கும் ஒரு செயலா? கடவுளை உணவு உண்பதில் சமர்த்தன் என்று குறிப்பிட்டால் வழிபடுவோருக்கும் அதுவே வழக்கமாகி விடும் என்று பாரதி கருதி இருப்பார்.

    மனிதர்கள் எல்லோரும் ஒரே மாதிரியானவர்கள் அல்லர். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான மூர்த்தி மனதுக்கு ஏற்றதாக இருக்கிறது. சிவனின் உக்ர தோற்றத்தில் ஒருவருக்கு ஈடுபாடு ஏற்படுகிறது என்றால் மற்றவருக்கு நாராயணனின் பள்ளி கொண்ட தோற்றம் அமைதி தருகிறது. குறும்பு செய்யும் கண்ணன் ஒருவனுக்கு மகிழ்ச்சி தந்தால் மற்றவனுக்குக் கோபத்துடன் வேலேந்தும் முருகன் ஆறுதல் தருகிறான். சோகமே வடிவான ஏசு ஒருவனுக்கு ஈடுபாடு தருமானால் இன்னொருவனுக்கு ஆனந்தமே வடிவான கணபதி மகிழ்ச்சி தருகிறார். விநாயகரைப் பார்த்து பாரதி பாடுகிறார் கேட்போம்.

    எனக்கு வேண்டும் வரங்களை

                இசைப்பேன் கேளாய் கணபதி       

                மனதிற் சலனம் இல்லாமல்

                மதியில் இருளே தோன்றாமல்

                நினைக்கும்போது நின் மவுன

                நிலை வந்திட நீ அருள் செய்வாய்

                கனக்கும் செல்வம் நூறு வயது

                இவையும் தர நீ கடவாயே

    ‘யத்பாவயஸி தத் பவஸி’ என்ற பழமொழிப்படி எந்த உருவத்தை மனதில் தியானிக்கிறோமோ அந்த உருவத்தின் தன்மைகள் நம்மிடம் படியும். ஆம். அசையாமல் உட்கார்ந்திருக்கும் கணபதியை நாம் வழிபட்டால் நமக்கும் அவருடைய மவுன நிலை சித்திக்கும். மனதில் சலனமோ மதியில் இருளோ தோன்றாது. தலையில் இடி விழுந்தால் சஞ்சலப்படாமல் இருக்க முடியும். ஏது நிகழினும் நமக்கென்ன என்று இருக்க முடியும். சலனமற்ற மனமும் தெளிவான புத்தியும் தானே நாம் பெறக் கூடிய வரங்களுள் மிகச் சிறந்தவை.

    Share
  • இசையும், கோயிலும் – 1

    -விசாலம்

    தமிழ்நாடு என்றாலே நம் கண்முன் நிற்பது கோயில்கள் தான்.கோபுர தரிசனம் கோடி நன்மை என்றும் கோடி புண்ணியம் என்றும் சொல்லக்கேட்டிருக்கிறேன்.அதுவும் சென்னையிலிருந்து திருச்சி செல்லும் பாதையில் ரயில் பிரயாணம் செய்ய  பல புகழ் பெற்ற கோபுரங்கள் வரும்..பிரயாணிகளில் பலர் தன் இருக்கையில் இருந்தபடியே கோபுரத்தைப்பார்த்தபடி கைக்கூப்பி கன்னத்திலும் போட்டுக்கொள்வார்கள். கும்பகோணத்தில் மிகப் பழைய கோயில்கள் அதிகமாகக் காணமுடிகிறது. வட நாட்டில் பல கோயில்கள் இருந்தாலும்  தமிழ் நாட்டைப்போல் இருப்பதில்லை.அங்கு இருக்கும் கோயில் சிலைகள் பளிங்கினால் செதுக்கப்பட்டுள்ளன. அதே போல் தரைகளும் மார்பிள் என்று சொல்லும் பளிங்குக் கற்களால் ஆனவை. இங்கு பல கோயில்களில் கர்ப்பகிரகத்தினுள் செல்ல அனுமதியில்லை.ஆனால் அங்கு அநேக கோயில்களில் பக்தர்கள் தங்கள் கைகளினாலேயே பூக்கள் வைக்கவும் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்யவும் அனுமதி உண்டு.

    இங்கு இருக்கும் கோயில்கள் ஆகம சாஸ்திரப்படி கட்டப்பட்டுள்ளன. ஆகம சாஸ்திரத்தில்   கோயில் கட்டும் விதி, அதில் இருக்கும் சிலைகளின் வடிவங்கள், பிரகாரங்களின் அளவு, வாஸ்து என்று எல்லாமே சொல்லப்பட்டு அதைப் பின்பற்றியே  கட்டப்பட்டுள்ளன .

    கோயிலின் வரைபடத்தில் கர்ப்பகிரகம் எப்படி இருக்க வேண்டும்  என்றும்  கூறப்பட்டிருக்கிறது. பலி பீடம், துவஜஸ்தம்பம், மற்ற சன்னதிகள், வசந்த மண்டபம், வாஹன மண்டபம் எல்லாமே எப்படி அமைக்கப்படவேண்டும் என்ற நியதிகள்  வாஸ்து சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளன. தவிர, அங்கிருக்கும் தெய்வத்தைக் குஷிப்படுத்த தகுந்த சமயத்தில்  இசை, நடனம்,  நாடகம் என்ற கலைகளும் வெளிப்படுத்தப்படுகின்றன. அறுபத்தினான்கு  உபசாரங்களில் இசையும் ஒன்று. நம் வீட்டில் பெரிய அளவில் எதாவது பூஜை நடந்தால் பூஜை முடியும் நேரம் சாம வேதம் ஓதிய பின் வாத்தியார்  பெண்களின்பக்கம் பார்த்து  “யாராவது ஒரு பாட்டு அம்பாளுக்கு பாடுங்கோ” என்பார். நானும் இதில் பங்கு பெற்றுக்கொள்வேன்.

    இசையை  வெளிப்படுத்தும்படி பல சிற்பங்களும் கோயில்களில் காணமுடிகிறது. சரஸ்வதி தேவி வீணையுடன், கண்ணன் புல்லாங்குழலுடன், நடராஜர் கையில் உடுக்குடன், நந்திதேவர் மத்தளத்துடன்  எனப் பலவிதமான சித்திரங்களை நாம் பார்க்கிறோம் .

    அவைகளில் சில கோயில் மண்டபத்தின்  மேல் சுவற்றில் மிக அருமையாக வரையப்பட்டுள்ளன. இந்தச்சித்திரங்களை ஒரு கயிற்றில் தொங்கியபடியே வரைந்திருக்க வேண்டும். சில சித்திரங்கள் ரம்பை ,ஊர்வசி நடனத்தை அழகாக விவரித்துள்ளன. நடராஜர், தில்லைக்காளி நடனம் சிதம்பரத்தில் தில்லைக்காளி கோயிலில் மிக  அழகாக வரையப்பட்டுள்ளது. அந்தக் காலத்தில் உபயோகிக்கப்பட்டுள்ள வர்ணங்களும் இயற்கை  மூலிகையிலிருந்தே தயாரிக்கப்பட்டு வந்தது. ஒவ்வொரு கோயிலிலும் அங்கு அருள்பாலிக்கும் இறைவன், இறைவியைக்கொண்டு புராணங்களிலிருந்து பல கதைகள் சித்திரமாக வரையப்பட்டு நம்மை வியப்படைய வைக்கின்றன .

    ஸ்ரீராம பட்டாபிஷேகம், கஜேந்திர மோட்சம், ஆண்டாள் திருமணம், தசாவதாரங்கள், ஆழ்வார்கள் சரித்திரம், போன்று வைஷ்ணவ கோயில்களிலும், சைவ கோயில்களில் நாயன்மார்களின் சரித்திரங்கள் சிவனின் திருவிளையாடல், மார்கண்டேய புராணம், அப்பர், சுந்தரர் திருநாவுக்கரசர் போன்றவர்களின் சித்திரங்களும் பார்க்க மிக பிரமிப்பாக உள்ளது. அவர்கள் இயற்றிய பாடல்களும்  ஓதுவார் மூலமாகப் பாடப்பட்டு வருகின்றன. முருகன் கோயில்களில் அருணகிரிநாதர் இயற்றிய  திருப்புகழை இன்றும் பக்தர்கள் பாடுகின்றனர். வைணவ கோயில்களில் பாசுரங்கள், திருப்பாவை, நாலாயிர திவ்யபிரபந்தம் போன்றவைகள் இசையுடன் பாடப்படுகின்றன

    கீதம், வாத்யம்,  நிருத்யம் என்ற மூன்று பிரிவுகளும்  கோயிலில் முக்கிய பங்கு வகிக்கின்றன.  முதலில் வருகிறது வேதம். அதில் முதலாக கண்டுப்பிடிக்கப்பட்ட  ஸ்வரம் மூன்று. அவை  ஸ ,ரி, நி,………இவையே  ஸ்வரித்தா, உதத்தா, அனுதத்தா என்ற பெயர் கொண்டவை .

    வேதங்கள் சொல்லும் போது இந்த சுவரங்கள் தான் மேலும் கீழும் பேசும். இதைக்குறிக்க  சம்ஸ்கிருத எழுத்தின் கீழே, அல்லது மேலே  சிறு கோடுகள் இருக்கும். மேலே இரு கோடுகள் இருக்க அங்கு ” நீ” என்ற சுவரம் பேசும்.  பின்  சாம வேதத்தில் மேலும் ஓரிரு சுவரங்கள் சேர்க்கப்பட்டன.  இறைவனின் பூசையின் போது வேத வித்தகர்கள் மூலம் இன்றும் இவை ஓதப்பட்டு  வருகின்றன. வேதங்கள் எல்லாமே ஒரு நியதியுடன் ஸ்வரஸ்தானங்கள் பிசகாமல் சொல்ல வேண்டும். அதனால் எழும்பும் ஒவ்வொரு ஒலிக்கும் மந்திர சக்தி உண்டு. அவை காற்றுடன் கலந்து நல்ல அதிர்வலைகளை உண்டு செய்யும். மழை  பெய்யத்  தவறினால் வருண பகவானை அழைப்பது, வியாதி பரவுவதைத் தடுக்க  தன்வந்திரி பகவானை  அழைப்பது,  படிப்பு வரவில்லை என்றால் ஸரஸ்வதியைப் பிரார்த்திப்பது,  என்றெல்லாம் சூக்தம் என்ற பெயரில் சொல்ல அதன் நற்பலன் கைமேல்  கிடைக்கும்.

    பக்தி வளர்ந்த காலத்தில் {   medieval period  .ல்} இசை,  பஜன் என்ற பெயரில் அதாவது  திவ்ய நாம சங்கீர்த்தனம் பாணியில் ஆரம்பித்தது. இது பாமர  மக்களுக்கு மிகவும் எளிதாக இருந்தமையால் பலரும் இதைப்பின்பற்றினர்  சங்கீத ஞானம் குறைவாக இருந்தவர்களும் கூட்டத்துடன் இதைப் பாட முன் வந்தனர். இந்தக் கோஷ்டி  கானம் பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. மஹராஷ்ட்ராவில்  துகாராம், நாம் தேவ் போன்றவர்களும் பல பஜன் பாடல்களை இயற்றி, பாடி, இறைவனுடன் கலந்தனர். பதினைந்தாம் நூற்றாண்டில் இந்த  பக்தி மார்க்கம்  எல்லா மாகாணங்களிலும் பரவியது.

    அருணகிரிநாதரின் திருப்புகழ்  சைவ சித்தாந்தத்தைத் தழுவி 1367 பாடல்கள் கொண்டு எல்லா முருகன் கோயில்களிலும்  பாடப்பட்டது . இதன் சந்தங்கள் மிகவும்  அருமையாக அமைக்கப்பட்டுள்ளன.

    இதேபோல் இசை பாடியே ஜோதியாகக் கலந்தவர்கள் பலர். பல வருடங்களாக பகுள பஞ்சமியன்று ஸ்ரீதியாகராஜர் சன்னதியில் பஞ்சரத்ன பாடல்களை பல இசைக்கலைஞர்கள் பாடி வருவதைக் காண்கிறோம். இதேபோல்முத்துசுவாமிதீட்சதர், ஸ்யாமாசாஸ்திரி, ஸ்வாதிதிருநாள், புரந்தரதாசர் கிருதிகளையும் கோயில்களில் கேட்கிறோம்.,

    இன்றைய கால கட்டங்களில் கோயில்களில் சினிமாவில் பாடப்பட்ட பல பக்தி பாடல்களும் திருவிழாவில் இடம் பெருவதை நாம் பார்க்கிறோம். இந்த முறை நான் கோயம்பத்தூரில் மாரியம்மன் கோயிலுக்குச் சென்றிருந்தேன். ஏழு நாட்கள் தொடர்ந்து திருவிழா.  “மருதமலை மாமணியே முருகய்யா,”  “பழனியப்பா ஞானப் பழனியப்பா”, “ சிங்கார வேலனே”, என்ற பாடல்களும் திருமதி எல் ஆர் ஈஸ்வரி பாடிய மாரியம்மன் பாடல்களும்  அன்று  சித்திரை திருவிழாவில் பாடுவதை நான் கண்டு களித்தேன் . எல்லாமே திரு கண்ணதாசன் இயற்றிய பாடல்கள். சில பாடல்கள் சினிமாமெட்டில்  பாடுவதையும்  கேட்டேன்.

    படத்துக்கு நன்றி: http://www.panoramio.com/photo/74277719

    Share
  • ‘குருகுலம்’

    செல்வரகு

    (திங்கள் முதல்  வெள்ளி வரை மாலை 5 pm மணிக்கு)

    நம் பாரம்பரியமான வாழ்க்கை முறை மற்றும் புராணம், ஸ்தோத்திரம், வேத 
    மந்திரங்கள் குறித்த அறிவை வளர்த்து கொள்ளும் ஆர்வம் உள்ளவர்களுக்காக ‘குருகுலம்’ என்ற நிகழ்ச்சி சங்கரா டிவியில் ஒளிபரப்பாகிறது.

    ஸ்ரீமத் பகவத்கீதை, அம்பாளின் திவ்ய நாமங்களை கொண்ட லலிதா ஸஹஸ்ரநாமம் போன்றவற்றை மாணவர்கள் உரையாடல் மூலம் கற்றுக்கொள்ளும்  விதத்தில் அமைக்கப்பட்ட அம்ருத பிந்து என்ற நிகழ்ச்சி  வெற்றி பெற்றதை தொடர்ந்து, இதை போன்ற நிகழ்ச்சியின்  தேவை குறித்து அறிந்து கொண்ட  சங்கரா டிவி “குருகுலம்” என்ற நிகழ்ச்சியை வார நாட்களில் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 5pm மணிக்கு ஒளிபரப்புகிறது.

    கிராம மக்கள் உட்பட,இந்தியா  முழுவதும் இருந்து பலர் இதை போன்ற நிகழ்ச்சி  தேவை என்றுவலியுறுத்தியதை  தொடர்ந்து குருகுலம் தொடங்கப்பட்டது.
    நம் தேசத்தில், சிறுவர்களும், சிறுமிகளும் தேவதா ஸ்தோத்திரங்கள்,மந்திரங்கள் போன்றவற்றை கற்று வருவது குறைந்து வருவதற்கான காரணம், தகுதிவாய்ந்த ஒரு குரு மூலம் இவற்றை கற்றுக்கொள்ள ஒரு வாய்ப்பு அமையாததே ஆகும். சிறுவர்களும் கற்றுக்கொள்ளும் விதத்தில் எளிமையான ஸ்லோகங்களில் தொடங்கி படிப்படியாக சற்று சிரமமான ஸ்லோகங்களை கற்று தரும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளதே இந்நிகழ்ச்சியின் வெற்றிக்கு காரணமாகும். வேத பண்டிட் கே. எல். ஸ்ரீநிவாசன் மூலம் கற்றுத்தரப்படும் இந்நிகழ்ச்சி குறித்து பல தரப்பட்டமக்கள் தங்களின் சந்தோஷத்தையும்,
    திருப்தியையும் தெரிவித்துள்ளனர்.

    Share
  • “திரையும் கறையும்”

    செல்வரகு

    (சனிகிழமை தோறும்  இரவு 9 மணிக்கு)

     

    சத்தியம் தொலைக்காட்சியில் சனிகிழமை தோறும்  இரவு 9 மணிக்கு “திரையும் கறையும்” என்ற திரைப்பட விமர்சன நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது .

    நாளுக்கு நாள் அதிகரித்து வரும் திரைப்படங்களின்  சீர் கேடுகளைச் சுட்டிக்காட்டும் விதமாக இந்நிகழ்ச்சி தயாரிக்கப்பட்டுள்ளது .

    வெற்றி பெற்ற திரைப்படங்களில்  கூட இருக்கும் எதிர்மறை சமாச்சாரங்களைக் கண்டு  விமர்ச்சிக்கும் பொறுப்பாக  “திரையும் கறையும்” வெளிவந்து  கொண்டிருக்கிறது .

    காட்சிகளிலும் வசனங்களிலும் ஆடை அலங்காரங்களிலும் இருக்கின்ற உருத்தல்களையும் – முரண்பாடுகளையும் கண்டிக்கும் இந்நிகழ்ச்சியைக் காணத்தவறாதீர்கள் .

    Share
  • தணிக்கை என்றொரு முட்டுக்கட்டை – 31

    இன்னம்பூரான்

    சில நிமிடங்களுக்கு முன் இந்திய நாளிதழ்களில் தணிக்கைத்துறையின் தலைவராக (ஸீ.ஏ.ஜி.) திரு. சஷிகாந்த் சர்மா ஐ.ஏ.எஸ் நியமிக்கப்படப்போவதாக ஹேஷ்யம் வலுத்து வருகிறது. உலக குடியரசுகளில், குறிப்பாக, இங்கிலாந்து, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், கனடா போன்ற நாடுகளில், இந்தப் பொறுப்பேற்க தகுதி பெற்ற நபரை தேர்வு செய்ய ஜனநாயக மரபுகள் உண்டு. இந்தியா மட்டும் விதி விலக்கு. பிரதமர் செய்யும் தேர்வு மட்டும் செல்லும். கிட்டத்தட்ட 40 வருடங்களாக, இந்திய தணிக்கைத்துறையை புறக்கணித்துத்தான், இந்த தேர்வு நடைபெறுகிறது. 150 வருடங்களாக கட்டுக்கோப்புடன் காக்கப்படும் அந்த துறையின் உத்யோகஸ்தர்களின் சுதந்திர/நடுநிலை/அச்சமும் சிபாரிசும் விலக்கிய அணுகுமுறை தான் அதற்குக் காரணம். ஓணான் தான் வேலியை தாங்கும் என்ற மனப்பான்மை மற்றொரு காரணம்.

    எனினும், சில நிமிடங்கள் முன்னால் டைம்ஸ் ஆஃப் இந்தியா கூறியது போல, இது வரை வெளி இடங்களிலிருந்து உள்புகுந்தத் தலைமையை தணிக்கைத்துறை வசீகரித்து விட்டது, தன் வசம் இழுத்துக்கொண்டது என்பதும் வரலாறு மறக்காத உண்மை. அந்த இதழ் கூறுவதை, அதன் வாசகத்திலேயே, இங்கே:

    ‘…But, given the kind of fierce independence that CAG and his officers from the Indian Audit and Accounts Service have enjoyed all these years, it is tough to see the organisation meekly becoming a silent bystander to government’s misdeeds. In fact, it wouldn’t be surprising if Sharma hogs the limelight as the face of an aggressive and fiercely independent CAG…’

    அதாவது, வரப்போகும் தலைமையும் அவ்வாறு ஆகர்ஷிக்கப்பட்டு, இன்றைய தலைவர் திரு.வினோத் ராய் போல, கடைசியாக தணிக்கைத்துறையிலிருந்து வந்த திரு. அர்தேந்து பக் க்ஷி மாதிரி சுதந்திரமாகத் தொண்டு செய்தால், அது வியப்பைத் தராது.

    ததாஸ்து என்று சொல்லி, நாம் திரு.வினோத் ராய் அவர்களை வாழ்த்தி விடை கொடுப்போம். டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் ஆரூடம் பலிக்கட்டும், ஹேஷ்யம் பலித்து விட்டால்.

    இன்னம்பூரான்

    Hindu Update: One hour ago: (8.46 P.M. I.S.D)

    ‘…Defence Secretary Shashi Kant Sharma was on Tuesday named as the new Comptroller and Auditor General of India (CAG). The 1976 Bihar cadre officer will succeed Vinod Rai, who superannuates on Wednesday after five and a half years of eventful tenure as the head of the Constitutional financial watchdog.
    “The President of India has appointed Shashi Kant Sharma, IAS, as the Comptroller and Auditor General of India, in terms of Article 148 (1) of the Constitution of India,” the Finance Ministry said in a statement.
    Mr. Sharma, who holds a masters degree in political science from the University of York, will be taking over charge of the CAG from May 23, 2013, it said. He will be administered the oath of office by President Pranab Mukherjee on Thursday. Like Mr. Rai, Mr. Sharma too has served as Secretary in the Department of Financial Services. The CAG is appointed for a term of six years or till the incumbent attains the age of 65 years, whichever is earlier. CAG audit reports on 2G spectrum and coal block allocations during Rai’s tenure triggered a number of controversies and raised the hackles of the government, besides bringing in the concept of presumptive loss in audit.
    *
    The last sentence is not factually correct. This announcement was unduly delayed, if a robust practice of yesteryears is considered.
    Innamburan
    21 05 13

    Share