-சச்சிதானந்தம்
ஊருடன் கூடி இழுக்கும் போது,
தேருடன் சுழலும் சக்கரம் போல,
மாருத உயிர்த்தேர் சுழன்றிட முருகன்,
மானுட யாக்கைச் சக்கரம் செய்தான்! 71
வாகை மலரென எழிலுரு முருகனை,
வாழை மலரின் சிறுமடல் போன்ற,
வடிவுடை தீபம் ஏற்றிப் பணிந்து,
வாமன வடிவ மனதினை விரிப்போம்! 72
நோக்கத்தை மறந்து திசைமாறிப் பறக்கும்
நெஞ்சுக்கு உண்மையைத் திடமாக உணர்த்தி,
நல்வழிப் பாதையில் தொடர்ந்து நடத்திடும்,
நித்தியத் தெய்வமே, நாதனே போற்றி! 73
இடும்பன் சுமந்த மலையில் அமர்ந்து,
இடும்பை நீக்கி அருளும் கடம்பா,
நடுங்கும் நெஞ்சின் நரகத் துன்பம்,
ஒடுங்கும் படியென் உயிரைக் காப்பாய்! 74
அறுபடை வீடு என்பது உண்மையில்,
அருள் தரும் குகனின் குறியீடு,
அகிலம் தோறும் வாழும் மனிதரின்,
அகமே அவனின் பெரு வீடு! 75

Leave a Reply