அழுகைக்கு காரணம்
-சூர்யா நீலகண்டன்
கம்பி நுனியில் நின்று கொண்டு
எல்லோருடைய வாழ்த்துகளையும்
ஊக்கங்களையும் புகழ்களையும்
இகழ்களையும் ஏளனங்களையும்
காணிக்கைகளையும் ஏற்றுக்கொண்டு
தெருமுனையில் தன் சாகசங்களைச்
செய்து கொண்டிருந்தாள் அச்சிறுமி.
சாகசங்களைப் பார்த்து மகிழ்ந்த
மக்களில் சிலர் குறைவாகவும்
நிறைவாகவும் அவர்களுடைய
பணப்பையிலிருந்து சிறுமியுடைய
பணவலையில் வீசினர்.
அவளுக்குப் போட்டியாக
அவளது இளைய சகோதரன்
சாகசம் செய்வது போல்
அக்கம்பின் நிழலில்
நடந்து கொண்டிருந்தான்.
நிழல் சுடுகிறது.
அவனுக்கு அதில்
நடப்பது
மிகவும் கடினமாகவே
இருந்தது. ஆனாலும்
யாரும் அவனுக்கு
காசு போடவில்லை.
படத்துக்கு நன்றி: http://annakannan-photos.blogspot.com/2007/09/blog-post_15.html