Blog

  • உயிர் வெளி

     

    பா.க. சுப்பிரமணியம்

    உனக்கும்
    எனக்குமான
    புரிதலற்ற
    புரிதலின் மோதலில்
    ஏற்பட்ட
    இடைவெளியென்பது
    சாதிகளுக்கும்
    வர்க்கங்களுக்குமிடையே
    எழுப்பப்பட்ட
    மதில் சுவர்கள் போல்
    என்றும்
    இடிக்க முடியாததல்ல

    உன்
    அன்பை
    உதட்டில்
    ஊற்றி
    உயிரில்
    நிரப்பினாய்
    என்
    இதய வெளியில் (more…)

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 63

     

     

    மலர் சபா

    புகார்க் காண்டம் – 07. கானல் வரி

    [ 29 ]

    “தோழியிற் கூட்டம் கூடி, பின்பு வந்து வரைவல்
    என்ற தலைவனுக்குத் தோழி கூறுதல்”

    வலிமைமிக்க பரதவர் வாழும் பாக்கத்தில்,
    களவில் கூடிய மகளிர்
    தலைவனைப் பிரிந்ததால் நேர்ந்த துயரால்,
    அம்மகளிர்தம்
    செம்மையான முன் கையில் இருந்து
    வளையல்கள் தாமே கழன்று வீழ்ந்து
    தூற்றுவதை, தலைவனே!
    ஏழைகளாகிய நாம் எங்ஙனம் அறிவோம்?

    பூக்களின் அரும்புகளின் சுமையால்
    பாரம் அதிகரித்த
    நீண்ட புன்னைமரத்தின் கொம்பதனில்
    அன்னமொன்று ஏறியிருக்க,
    அந்த அன்னத்தை முழுநிலவு என்றும்
    சுற்றி இருந்த பூக்களை
    நட்சத்திரங்கள் என்றும் எண்ணிய
    அந்தியில் மலரும் ஆம்பல் மலர்
    பகலிலேயே மலர்ந்தது.
    தேன் உண்பதற்காகவென
    அவ்வாம்பல் மலரை
    வண்டுகள் ஊதி நிற்கும்
    புகார் அன்றோ எமது ஊர்?!

    (30)

    தன்னை உண்டவரைத் தம் போதையாலே
    அறிவிழக்கச் செய்து அடிமை செய்யும்
    கள் எனும் ஊண் எம் பாக்கத்துள்
    அழியாது நிற்கும்.
    இங்கு வாழும் மகளிர்க்கு
    எம்மருந்தாலும் தீர்த்திட முடியாத
    காம நோய் அதனை நீ தருகின்றாய் என்று
    தலைவனே!
    நாங்கள் எங்ஙனம் அறிவோம்?

    சிறுமியர் வண்டல் கொண்டு இழைத்திருந்ததை
    கடல் அலைகள் அழித்துச் சென்றிட,
    சிறுமியரின் மதிமுகத்தில் இருந்த,
    பகைவர்கள் புண்ணில் தோய்த்தெடுத்த
    வேல்போன்ற கண்கள் நீரைத்தான் வார்க்கின்றன.
    கோபம் கொண்ட சிறுமிகள்
    கடலைத் தூர்க்க முயன்று
    மணலை வாரி இறைக்கின்ற
    புகார் அன்றோ எமது ஊர்?!

    அடிப்படையாய் அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே:
    http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram21.html

    படத்துக்கு நன்றி:
    http://www.tamilvu.org/courses/degree/a011/a0113/html/a01134l7.htm

    Share
  • தேவன் நூறு – தேவன் ஒரு சகாப்தம் – 14 (இறுதிப்பகுதி)

    திவாகர்

    தேவன் முதல் முதலாக எழுதியது ஆங்கிலத்தில்தான் என்று எழுதுகிறார் ‘மெட்ராஸ் ம்யூசிங்ஸ்’ முத்தையா அவர்கள். அப்போதைய ஆங்கில அறிஞரான பி.ஆர். ராம் ஐயங்காரை ஆசிரியராகக் கொண்ட ‘மை மெகஸின் ஆஃப் இண்டியா’ என்ற இதழில் தேவனின் எழுத்துக்க்கள் சுடர் விட ஆரம்பித்தன என்றும், திரு கல்கி அவர்கள் பார்வையில் பட்டு ஆங்கிலத்துக்கு சமமாக தமிழிலும் தேவன் அதே நகைச்சுவையுடனும் எழுதமுடியும் என்ற முடிவுடன் தேவனை எழுத வைத்தார் என்றும் திரு முத்தையா ஒரு கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். அதேசமயம் இன்னொரு விஷயம், மை மெகஸினுக்கு போட்டியாக எஸ் எஸ் வாஸன் ‘தி மெர்ரி மெகஸின்; எனும் இதழ் கூட அந்தச் சமயத்தில் ஆரம்பித்தார் என்றும் முத்தையா குறிப்பிட்டுள்ளார். தேவன் ஒருவேளை தமிழில் எழுதாவிட்டால் கூட ஆங்கிலத்தில் தொடர்ந்திருப்பார்.. ஆங்கிலத்தில் எழுதுவதால் உலகம் பரந்த புகழ் கூட கிடைத்திருக்கலாம். ஆனால் தமிழ்த்தாயின் கருணை அவரை தமிழிலேயே இருத்தி வைத்து விட்டது எனலாம்.

    தேவன் தன்னுடைய எழுத்துத் தொழிலில் இன்னொரு இடைஞ்சலை கூட சந்தித்திருப்பதாக மூத்த எழுத்தாளர் அசோகமித்திரன் சொல்வதாக அந்தக் கட்டுரை சொல்கிறது. தேவனுக்கு 1940 முதலாண்டு சமயங்களில் விகடனில் சரியான ஸ்தானம் கிடைக்காததால் கல்கி அவர்களின் ஆலோசனைப்படி சென்னை ஆல் இந்தியா ரேடியோவில் உத்தியோகம் கிடைத்து அங்கு சேர இருந்ததாகவும், ஆனால் சரியான சமயத்தில் வெள்ளையனே வெளியேறு போராட்டமும், கல்கி அவர்களின் சிறைவாசமும், அதன் பின் கல்கியும் சதாசிவமும் ஒன்றாகச் சேர்ந்து செயல்பட்டதாலும் அதற்கு எஸ்.எஸ் வாஸனின் எதிர்ப்பு மிகக் கடுமையானதாக இருந்ததாகவும், அதனால் ஏற்பட்டஆனந்த விகடனில் ஆசிரியர் ஸ்தானத்துக்கான வாய்ப்பும், இவ்வாறு எதிர்பாரா நிகழ்ச்சிகள் துரிதகதியில் ஒன்றன் பின்னால் ஒன்றாக ஏற்பட்டதால், தேவன் ஆல் இந்தியா ரேடியோவில் சேரவில்லை.

    மேலும் தேவனுக்கு ஏற்கனவே இருந்த துணை ஆசிரியர் வேலையின் காரணமாக செய்திகள் எழுதுவதும், செய்திகளை அடிப்படையாகக் கொண்டு கிண்டலுடன் செய்திக் கட்டுரைகளையும் நிறைய எழுதுவார்.  காங்கிரஸ் கட்சியின் குழப்பங்கள், ஆங்கிலேயரின் அதிரடி திட்டங்கள், போர்க் காலத்தில் நடந்த நிகழ்வுகள், சமுதாயத்தில் அக்காலத்தே இருந்த சீரழிவுகள் எதுவும் தேவன் எழுத்துக்குத் தப்பியதில்லை. குறிப்பாக யுத்தத்தில்  பங்குகொண்ட நாடுகள் பற்றிய கட்டுரைகள் எழுதி இருக்கிறார். வாரம் ஒருமுறை யுத்தகால நிகழ்ச்சிகளைக் கட்டுரையாக ஆனந்த விகடனில் எழுதினார். உலகத் தலைவர்களின் அன்றையப் போக்கை உன்னிப்பாக கவனித்து எழுதிய கட்டுரைகளும் உண்டு. எனவே ஆல் இந்தியா ரேடியோ’ வில் சேருவதற்கு தேவனுக்கு நிறையவே தகுதிகள் இருந்திருக்கிறது. ஆனாலும் இங்கும் தமிழ்த்தாய்தான் வெற்றி பெற்றிருக்கிறாள். ஒருவேளை ஆல் இந்தியா ரேடியோவில் சேர்ந்திருந்தால் வெளியே, வெளிப்பத்திரிகைகளுக்கு தேவன் எழுதும் வாய்ப்புகள் இராது என்பதை இங்கே கவனிக்க வேண்டும். தேவனின் முக்கியக் கதைகள் சாம்புவிலிருந்து சி ஐ டி சந்துரு வரை, கல்யாணியிலிருந்து ஜஸ்டிஸ் ஜகன்னாதன், தென்னாட்டு செல்வங்கள் எல்லாமே அந்த பிற்காலத்தில், அதுவும் அவர் விகடன் ஆசிரியர் ஸ்தானத்தில் அமர்ந்தவுடன் எழுதப்பட்டவை என்பது இங்கே கவனிக்கத் தக்கதாகும். பிற்காலத்தில் ஆசிரியராக, தேவன் விகடனில் எழுதிய நகைச்சுவை கட்டுரைகளின் கணக்கு எண்ணிக்கையில் அடங்காததாகும். சாதாரண கட்டுரை ஒன்று எழுதுவதைக்கூட ஒரு நகைச்சுவை பாணியில் விளக்குகிறார் பாருங்களேன்..

    ஆசிரியர் கேட்டுக்கொண்ட படியினாலே இந்தக் கட்டுரை எழுதுகிறேன்.” என்று சொல்லிக்கொண்டே ஆரம்பிக்க முடியவில்லை.  ஏனென்றால் ஆசிரியர் என்னைக் கேட்கவே இல்லை.இரண்டாவது, ஆசிரியர் கேட்டுக்கொண்ட வியாஜ்யத்தை வைத்து சர்வ மோசமான விஷயங்களால் இரண்டு பக்கத்தை நிரப்பவும் இஷ்டமில்லை.ஆகையினால் கொஞ்சம் நல்ல விஷயமாய் யோசனை செய்து எழுதலாமென்று ஆரம்பித்தேன். இப்படி வெகு நேரம் யோசித்துக் கொண்டிருக்கும்போது, எங்கள் வீடு கூட்டும் செல்லம்மாள் வந்து சேர்ந்தாள். “காலை தூக்கி நாற்காலி மேலே வெச்சுக்குங்க.. உள்ளைக் கூட்டணும்” என்றாள்.

    “செல்லம்மா! ரொம்ப விந்தையான விஷயமாய் உனக்குஏதாவது தெரிந்தால் சொல்லேன். பத்திரிகைக்கு எழுதலாமென்று பார்க்கிறேன்.” என்றேன்.

    நான் சொன்னதும் விழுந்து விழுந்து சிரித்தாள். நான் சொன்னதில் என்ன ஹாஸ்யம் இருக்கிறது என்று தெரியவில்லை. சிலசமயம் நான் ஹாஸ்யமாக பேசவேண்டுமென்று ஆரம்பித்துப் பேசினால் எவரும் சிரிப்பது கிடையாது.ஒரு சமயம் நாலு நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்கும்போது ‘ஒரு ஹாஸ்ய சம்பவம் ஏற்பட்டது. நான் சொன்னால் நீங்கள் குபீரென்று சிரித்து விடுவீர்கள்” என்று சொன்னேன். அப்படியா! எங்கே அதைச் சொல்லேன்..என்றார்கள் அவர்கள். “ஆஹா! சிரிக்கும் சிரிப்பில் வயிறு புண்ணாகிவிடும்” என்று எச்சரிக்கையும் செய்து விட்டு அந்த ஹாஸ்ய அனுபவத்தைச் சொன்னேன். அவர்கள் முழுவதையும் கேட்டுவிட்டு, “அவ்வளவுதானா, இதில் வேடிக்கை என்ன இருக்கிறது?” என்றார்கள்.

    இதற்கு நேர் எதிரிடையான இன்னொரு விதமான ஆசாமிகளும் இருக்கிறார்கள். இவர்களிடம் எதைச் சொன்னாலும் அவர்கள் சிரிக்க ஆரம்பித்து விடுவார்கள். இந்த ஆசாமிகளிடம் நிஜ விகட துணுக்காகயாரும் ஒன்றைச் சொல்லக்கூடாது, சொன்னால் அந்த இடச்த்திலேயே அவர்கள் சிரித்து உயிரை விட்டு விட்டாலும் விடலாம்!”

    இதற்குப் பிறகு இந்த செல்லம்மாவே ‘ரொம்ப நேரம் ரோசனை செய்து’ ஒரு ஐடியா கொடுத்து மழையைப் பற்றி எழுதச் சொன்ன கட்டுரை அது..மழைக்காக வேண்டி ஒரு குடையை வாங்க அது அவருக்கு வேண்டிய சமயத்தில் மக்கர் செய்யும் நகைச்சுவை கட்டுரை.தேவனது மோட்டார் அகராதி என்றொரு கட்டுரை, (தற்போதைய கார்கள்)  அவர் எப்போது எழுதினாரோ (அவர் காலத்தில் மோட்டார் கார்கள் எண்ணிக்கையில் மிகவும் ,குறைவுதானே) ஆனாலும் இன்றும் கூட அந்த அகராதி காலத்துக்குத் தகுந்தாற்போலத்தான் இருக்கிறது. அந்த அகராதியிலிருந்து ஒரு சில வார்த்தைகளுக்கான அர்த்தங்கள் தேவனின் நகைச்சுவை எழுத்தில் கொடுத்துள்ளேன்.:

    இதன் முன்னுரையே கல கல.

    (ஏற்கனவே மோட்டார் வைத்திருப்பவர்களும், மோட்டார் புதிதாய் வாங்க உத்தேசித்திருப்பவர்களும், மோட்டாரே வாங்குவதில்லை என்று விரதம் செய்திருப்பவரும், மோட்டார் வாங்கப் பணமில்லையே என்று பரிதவிப்பவர்களும், மோட்டாரை வாங்கிவிட்டு ஏனப்பா வாங்கினோம் என்று ’சிந்தாக்கிராந்தரா’யிருப்பவர்களும், மோட்டாரைக் காயப்படுத்தினவர்களும், மோட்டாரால் காயப்படுத்தப்பட்டவர்களும், இன்னும் இதரரும் படித்துத் தெளிந்து கொள்ளலாம். ஏற்கனவே மூளை தெளிந்திருந்தால், இப்போது கலக்கிக் கொள்ளலாம்)

    பிரேக்: மோட்டாரை ஓடும்போது, இப்படி ஒரு சாமான் இருப்பதையே மறந்துவிடலாம்.
    பெட்ரோல்: இது மட்டும் தண்ணீராக இருந்தால் நானும் நீரும் தலைக்கு ஒரு மோட்டார் வைத்துக் கொள்ளலாம்.
    போலீஸ்காரர்: மோட்டார் ஓட்டிகளின் தெய்வம், கையைக் காட்டி, பத்தாயிருந்தாலும் சரி, பதினாயிரமாகவும் இருந்தாலும் சரி, நமஸ்காரம் செய்யாவிட்டாலும் பிரதட்சணமாவது செய்தே தீரவேண்டும்.

    மனிதர்கள்: இவர்களை இரண்டு வகையாக பிரிக்கலாம். 1) மோட்டாரால் கொல்லுபவர் 2) மோட்டாரால் கொல்லப்படுபவர்.
    முட்டாள்கள்: இதர மோட்டார் ஓட்டிகள், பாதசாரிகள், சைக்கிள்காரர்கள்
    முழுச்செவிடர்கள்: பாதசாரிகள்.
    மோட்டார்:  இது இல்லாதவர்கள் அவசியம் வாங்கிப்பார்க்கவேண்டிய பண்டம், இருப்பவர்கள் அவசியம் விற்றுத் தொலைக்கவேண்டிய பண்டம்

    இப்படியே மோட்டாரால் அனுபவிக்கும் அவஸ்தையை நகைச்சுவை சற்றும் குறையாமல் சொல்லுவார் தேவன். அவரும் ‘மோரீஸ் மைனர்’ ’மோட்டாரை’ வாங்கி சென்னை மாநகரத்தில் பவனி வந்தவர்தாம்.

    ’கோபம் வருகிறது’ என்றொரு கட்டுரையை கதையாக எழுதியிருந்தார் தேவன். இந்தக் கோபம் என்கிற உணர்ச்சியை எத்தனை ஆழமாக சீண்டிப் பார்த்திருக்கிறாரோ.. நீங்களும் அதைச் சற்று அனுபவியுங்களேன்..

    மனிதருக்கு மனிதர் கோபம் வித்தியாஸப்படுகிறது. கோபமூட்டக் கூடிய சந்தர்ப்பங்களின் தன்மையும் அதை அடக்கப் பெற்றிருக்கும் சக்தியையும் பொறுத்திருக்கிறது அது. ‘முடவனுக்கு விட்ட இடத்தில் கோபம்’ என்பது பிரசித்தமான வசனம். துர்வாச முனிவருக்குக் கோபம் வர ஒரு காரணமும் தேவை இல்லை. “ஸார்! நீங்கள் கடைசியாக கோபித்துக் கொண்டு எட்டு நிமிஷங்களுக்கு மேல் ஆகிவிட்டது போல் இருக்கிறதே!” என்று ஞாபகமூட்டினால் போதும்: “பிடி சாபம்! இது வரை ஏன் ஞாபகப்படுத்தாமல் இருந்தாய்?” என்று கோபித்துக் கொண்டு விடுவார்.

    எனக்கு கோபம் வரும் விதத்தை பின்னால் நினைத்துப் பார்த்து சிரித்திருக்கிறேன். என்னுடைய கோப வேளையில் எனக்கு யாரைக்கண்டாலும் பிடிக்காது. எனக்குப் பிடித்த டிபனைக் கூட முதலில் தொடமாட்டேன். கோபம் விரக்தியாக வேற்றுருவம் கொண்டு, ‘நான் கண் காணாமல் தொலைந்து போய்விடுகிறேன்.. இந்த வீட்டில் இனிமேல் எதையும் சாப்பிடுவதாய் இல்லை” என்றெல்லாம் பேசி, மெள்ள மெள்ள வழிக்கு வந்து.. “சரி.. சரி.. சீக்கிரம் இலையைப் போடு..நான் ஆபீசுக்குப் போகிறேன்!” என்பேன்.

    ராஜத்துக்குக் கோபம் வருவதுண்டு. எல்லா ஸ்திரீகளையும் போலவே அது எப்போது எதற்காக வரும் என்று சொல்வதற்கில்லை. கடும் மெளனத்தை ஏற்றுக் கொண்ட நிலையில், எனக்கு வேண்டிய சகல உபகரணங்களையும் உரிய காலத்திற்கு முன்னால் அவள் எடுத்து வைப்பதிலிருந்தே அவளுக்கு அது கோப வேளை என்று ஊகித்துக்கொள்வேன்.

    ‘இவ்வளவு நன்றாக சிசுருட்சைகள் நடப்பதென்றால், ராஜம், நீ அடிக்கடி கோபித்துக் கொள்ளேன்’ என்று கூட நான் அவளைக் கேட்டுக்கொள்ளலாமா என்று நினைப்பதுண்டு. ஆனால் கேட்பதில்லை.

    நானும் என் சகோதரியும் சிறுவர்களாக இருந்த போது எங்கள் தகப்பனாரிடமிருந்து ஒதுங்குவோம். முக்கியமாக அவர் ‘சவரம் செய்து கொண்ட தினங்களில்’ அதிக கோபமாக இருப்பது போல் எங்களுக்கு ஒரு பிரமை தோன்றும்.

    கோபத்தினுடைய குணம் ஒன்று உண்டு. யார் மிகவும் அன்புக்கும் விசுவாசத்திற்கும் நம்பிக்கைக்கும் பாத்திரமானவர்களோ, அவர்கள் மீதுதான் அது லகுவில் பாயும். நமக்கு வேண்டியவர்களின் சிறு பிழையையும் நாம் மன்னிக்கத் தயாரில்லை. கருங்கல்லுடன் போட்டி போடும் பொரி விளங்காய் உருண்டையை அஞ்சாமல் கடிப்போம் – அன்னத்துடன் ஒரே ஒரு சிறு கல் இருந்துவிட்டால் அதை பொறுக்கமாட்டோம் அல்ல்வா?

    பெரிய நோய்களைப் போல் இதயத்தில் கோபத்தைத் தங்கவிடவே கூடாது. பாலிலிருந்து வெண்ணெயைக் கடைந்தெடுத்து விட்டாப் போல, அவ்வப்போது அதை நீக்கி விடுவதே நலம்.

    நான் கூர்க்கா சேவகர்களைப் பார்த்திருக்கிறேன். இடையில் ஒரு தோல் பையில் ஒரு கத்தி சதா தொங்கிக் கொண்டிருக்கும். கத்தியின் கைப்பிடி மட்டும் என் கண்ணில் பட்டிருக்கிறதே ஒழிய அதன் இரும்பு பாகத்தை நான் கண்டதே இல்லை. ஆபத்திற்கு கத்தி இருக்கிறது.. ஆனால் உபயோகிக்க வேண்டிய அவசியம் இல்லை. கூடியவரை அதை எடுக்காமலேயே சமாளித்துக் கொள்ளப் பார்க்க வேண்டியதுதான்.

    கோபம்தான் அந்தக் கத்தி.

    இந்தக் கட்டுரைக் கதையில் ஒன்று கவனித்தீர்களா.. ‘சிறுவர்களாக இருந்தபோது தகப்பனார் சவரம் செய்தபின்னர் அதிக கோபத்தால் காணப்படுவாராம். அது பிரமை என்று சொன்னாலும் ஒருவிதத்தில் உண்மைதான். அந்தக் காலகட்டத்தில் ஒருவாரம் பத்து நாள் என முகத்தில் முடி வளரவிட்டு விட்டு முகச்சவரம் மழித்துக் கொள்ளும்போது தற்போதைய கூரான பிளேடுகள் போல இல்லாமல் ஏதோ சுமாராக கூர் செய்யப்பட்டு இருக்கும் கத்தியால் மழித்து விடுவார்கள். நிச்சயமாக அந்த எரிச்சல் ஒருநாளாவது இருக்கும் என்று சொல்லவும் வேண்டுமோ..தேவனின் கூர்ந்து நோக்கும் தன்மை எங்கெல்லாம் பாய்கிறது என்பதற்கு இதுவே சான்று. யாருக்காவது கோபம் வந்தால் இந்தக் கட்டுரையைப் படியுங்கள், அப்படியும் அந்தக் கோபம் போகவில்லையென்றால் அவர் எழுதிய கதைகளைப் படியுங்கள். அதிலும் சாம்புவின் கதைகளைப் படித்தால் காலா காலத்துக்கும் கோபம் வரவே வராது..

    அதே போல தொடர்கதைகளில் ஒவ்வொரு அத்தியாயத்துக்கு வித்தியாஸமான முறையில் ஒரு முன்விவரணை (கொடேஷன்) கொடுத்து அதன் அடிப்படையில் அந்த அத்தியாயத்தை ஆரம்பிப்பது அவர் வழக்கம். இந்த ‘கொடேஷன்களில்’ பல செய்திகள் புராணங்களிலிருந்தும், சாஸ்திரங்களிலிருந்தும், தமிழ்ப் பாடல்களிலிருந்தும் சில சமயம் கோர்ட் ரிகார்டுகளிலிருந்தும் கொடுப்பது உண்டு. இவையாவும் மிகவும் சுவாரஸியமானவை மட்டுமல்ல, ஒவ்வொன்றும் ஒரு புதிய செய்தியை நமக்குத் தெரிவிக்கும்.

    இத்தனை விஷயங்கள் எழுதியவருக்கு நாற்பத்து நான்கே ஆண்டுகள்தான் இவ்வுலக வாசம் என்பது வேதனையான விஷயம்தான். அவர் சுகவீனப்பட்டு மறைந்தவுடன் வருத்தப்படாத நண்பர்கள், எழுத்தாளர்கள் இல்லை. தேவன் மறைந்தவுடன் அந்த மரணத்தை ஒப்புக்கொள்ளாத  வாசகர்கள் பல்லாயிரக்க்கணக்கில் உண்டு. ஏதாவது அதிசயம் நிகழ்ந்து இவர் திரும்பி வந்துவிடமாட்டாரா’ என்று அவரது நினைவஞ்சலி’ கூட்டத்தில் பலர் பேசினார்கள். ’அவர் எழுதிய சிரஞ்சீவி இலக்கியங்கள் நம் கண் முன் இருக்கின்றன. ஆனால் ஸ்ரீ தேவன் மறைந்துவிட்டார். வடபழனி ஆண்டவனைப் பற்றி மனமார எழுதிய பேனா மன்னர், அவர் திருவடியிலேயே இரண்டறக் கலந்துவிட்டார்’ என்று ஒரு பெண் எழுத்தாளர் அழுதுகொண்டே சொன்னதாக ஒரு கட்டுரையில் படித்தது நினைவுக்கு வருகிறது..இருபத்தொன்பது வயதிலேயே ஒரு பிரபல வாரப்பத்திரிகைக்கு ஆசிரியராகி பதினைந்து வருடங்கள் அந்த ஆசிரியர் ஆளுமையுடன் படைத்த எழுத்தோவியங்கள் அவரைப் போலவே என்றும் இளமையாகவே இருக்கின்றன. இன்றைக்கும் கூட ஒரு மிஸ் ஜானகி, கல்யாணி போன்ற கதைகள் முதல் பக்கத்திலிருந்து படிக்க ஆரம்பித்தால் ஏதோ இப்போது எழுதி வெளிவந்ததைப் போல ஒரு பிரமையைக் கொடுக்கும். அதுதான் தேவன்.

    இந்த வருடம் (2013) அவருக்கு ‘சதாப்தி’ வருடம். இது அவரது பூத உடலுக்குதான் கணக்கு. ஆனால் தேவன் எழுத்துக்கு வயதே கிடையாது. ஒரு கதாசிரியனின் படைப்புகளை தேவன் ‘மிஸ் ஜானகியில்’ எழுதும்போது பிரும்மாவின் சிருஷ்டிகளுக்கு ஈடாக ஒப்பிடுகிறார். இதனால் எழுத்தாளரும் பிரம்மதேவனே என்று தேவன் எழுதுவார். பிரம்மதேவனின் சிருஷ்டிகளுக்கு சிரஞ்சீவித்துவம் உண்டோ இல்லையோ என்பதை யாம் அறியோம், ஆனால் தேவன் படைத்த கதாபாத்திரங்கள் அமரத்துவம் படைத்தவைதான். அந்த கதாபாத்திரங்கள் என்றென்றும் தேவன் பெயரை தமிழுலகமெல்லாம் சொல்லிக் கொண்டே இருக்கும்தான். தேவனின் எழுத்துக்கள் அத்தனையும் படித்தவர்கள் என்னோடு இந்தக் கருத்தில் நூற்றுக்கு நூறு ஒத்துப் போவார்கள் என்ற பெரு நம்பிக்கையில் பெருமிதத்தோடு இந்த நூறாவது ஆண்டில் இந்தக் கட்டுரைகள் அனைத்தையும் தேவனின் ஆன்மாவுக்கு சமர்ப்பணம் செய்கின்றேன்..

    (முடிந்தது)

    பின் குறிப்பு: இந்தக் கட்டுரைகளைப் படித்து அவ்வப்போது எனக்கு திருத்தங்களும், நல்வார்த்தையும் எழுதி அனுப்பிய அத்தனை பெரிய மனிதர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. இந்தக் கட்டுரைகள் நம் இளைய சமுதாயம் இப்படி ஒரு எழுத்துக்களைப் படிக்கவேண்டும் என்ற நோக்கில் எழுதப்பட்டவை. “எழுத்தாளன் எழுதிக் கொண்டே இருக்க வேண்டும். பேனாவைச் சற்று ஒதுக்குப் புறமாக வைத்து ஓய்வு கொடுத்து விட்டால் அப்புறம் அதன் அருகில் கையைக் கொண்டு போவது சிரமம். பேனாவும் கனக்கும்’ என்ற தேவனது அரிய அறிவுரையை மனதில் கொண்டு தற்கால இளைஞர்கள் பலர் தமிழில் எழுத முன்வரவேண்டும் நலல நல்ல எழுத்துகளைப் படைக்கவேண்டும். தமிழ்த்தாயின் சிந்தையைக் குளிர்விக்கவேண்டும் என்பதே நம் வேண்டுகோள் கூட. நன்றி!!

    அன்புடன்
    திவாகர்

    Share
  • வார ராசிபலன்!..(18-03-13 – 24-03-13)

    காயத்ரி பாலசுப்ரமணியன்

     

     இந்த வார ராசிபலன்

    மேஷம்: பணியில் இருப்பவர்கள் உங்கள் பணி- வீடு என்றிருந்தால், பிரச்னை ஏதும் இராது. மாணவர்கள் அவ்வப்போது மனதில் எட்டிப்பார்க்கும் சஞ்சலத்தை கட்டுக்குள் வைக்க நல்ல புத்தகங்களை படியுங்கள். சிந்தனை தெளிவாகும்.வியாபாரிகள் பணியாளர்களிடம் அனுசரணையாய் நடந்து கொண்டால், மனக்கசப்பு இன்றி வேலைகளை செய்து முடிக்கலாம். உடன் பிறப்புகளால், கருத்து வேறுபாடு தோன்றி னாலும், தக்க சமயத்தில் உதவ வருபவர்களிடம் பெண்கள் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள் . குடும்பத்தில் அமைதி நிலவும். கலைஞர்கள் முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடுமுன், தகுந்த ஆலோசனையை மேற்கொள்வது நல்லது.

    ரிஷபம்: மாணவர்கள் எட்டாக் கனியான விஷயங்களில் உங்கள் கவனத்தையும், திறமையையும் வீணடிக்காததிருப்பது நல்லது. கலைஞர்கள் போட்டா போட்டியில் வெற்றி பெற,உங்களின் அனுபவ அறிவு கை கொடுக்கும். முக்கியமான பொறுப்புக்களை கையாள்பவர்கள் நம்பிக்கைக்கு உரியவர்களை உங்கள் அருகில் வைத்துக் கொள்வது சிறந்தது. வியாபாரிகள் பழைய பாக்கிகளை வசூலிக்க அலைய நேரிடும். பெண்கள் இரவலாக உங்கள் பொருள்களைத் தருவதை நாசுக்காகத் தவிர்த்துவிடுங்கள். பாதிப் பிரச்னைகள் குறைந்து விடும். தொழிற்சாலைகளில் பணி புரிவோர் இரும்பு உபகர ணங்களை எச்சரிக்கையுடன் கையாள்வது அவசியம் .

    மிதுனம்: சரக்குகள் தேங்காதவாறு வியாபாரத்தை முடுக்கிவிடும் வியாபாரிகளுக்கு லாபத்தோடு புதிய ஒப்பந்தங்களும் உடன் வந்து சேரும். பிறர் செய்யும் தவறுக்கு, நீங்கள் பதில் சொல்லும் சூழல் உருவாகும் நிலை இருப்பதால், மாணவர்கள் கவனத்துடன் செயல்படவும். தந்தை-மகள் உறவு நெருக்கமாகும். இதுவரை இருந்த மனத் தாங்கல் நீங்கி, ஒருவரையொருவர் பாராட்டிக் கொள்வீர்கள். பெண்கள் அவ்வப்போது தோன்றும் சிறிய பிரச்னைகளை, தெளிவுடனும், திறமையுடனும் கையாண்டால் உறவுகளின் ஆதரவு உங்கள் பலமாய் மாறும். ஆன்மீகப் பயணங்களுக்கான அழைப்பு உங்களைத் தேடி வரும்!

    கடகம்: இதுநாள் வரை மந்த கதியில் சென்று கொண்டிருந்த வேலை, புதிய வேகத்துடன் நடைபெறுவதால், சுய தொழில் புரிபவர்கள் உற்சாகத்துடன் திகழ்வார்கள். கல்விப் பணியில் இருப்பவர்க்கு இது ஏற்ற வாரமாகும். அனுசரித்து நடந்து கொள்ளும் கொள்கை உடையவரின் கூட்டு முயற்சி வெற்றியாய் முடியும். வியாபாரிகள் எதிரிகளின் செயல்களை கண்காணிப்பது அவசியம். இது வரை தன் முயற்சிக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லையே என்று வருந்தியவர்க்குபாராட்டு வந்து சேரும். முக்கியமான முடிவு எடுக்கும் தருணங்களில் அவசரப்பட வேண்டாம். சிலர் பழைய நண்பர்களை சந்தித்து பேசி மகிழலாம்.

    சிம்மம்: நீங்கள் மேற்கொள்ளும் வெளிநாட்டுப் பயணங்கள், உங்களின் எதிர்கால முன்னேற்றத்திற்கு அடித்தளமாகும் . இளம் வயதினர் புதிய சூழலில் கவனமாகப் பழகுவதோடு யோசித்து செயல்படுவது அவசியம். தொழிலதிபர்கள் தங்கள் நாவன்மையால் தங்கள் கருத்துக்களை எடுத்துச் சொல்ல ஏற்ற வாரம். வீடு,மனை விற்பனை அவ்வளவு லாபகரமாய் இராது. எனவே பணத்தை அதில் முடக்க வேண்டாம். இல்லச்சூழலோடு பணிச்சுமை மோதாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். கலைஞர்கள்புதிய ஒப்பந்தம், பயணம் என்று மகிழ்ச்சியாய் இருப்பார்கள். பணியில் இருப்போர் தன் திறமைக்குரிய வாய்ப்பு வரும் வரை பொறுமை காப்பது அவசியம்.

    கன்னி: பெண்கள் பேச்சில், படபடப்பைக் குறைத்து இனிமையைக் கூட்டுங்கள். இல்லறம் நல்லறமாய் திகழும். பெற்றோர்கள் பிள்ளைகள் கேட்டவுடன் பணம் கொடுப்பதை விட, அவர்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி வைப்பது நல்லது. பணியில் இருப்பவர்கள் இடம், பொருள், ஏவல் தெரிந்து உங்கள் கோரிக்கைகளை முன் வைப்பது அவசியம். பொருளாதாரத்தில் ஏற்ற இறக்கமிருக்கும். எனவே செலவுப் பட்டியலை குறைவாக்குங்கள். சுய தொழிலில் இருப்பவர்கள் , சிரமங்களுக்கிடையே வெற்றி காண்பர். சில நேரங்களில் நண்பர்கள் உங்களை முழுமையாய் புரிந்து கொள்ளாமல் செயல்படலாம்.

    துலாம்: மாணவர்கள் புது நட்புடன் வளைய வருவார்கள். கணவன் வழி உறவுகளுக்காக பெண்கள் தங்கள் சேமிப்பை கரைப்பர். கலைஞர்களுக்கு வெளிவட்டாரம் மூலம் மகிழ்ச்சி வரும். கூடவே சுற்றியிருப்பவர்களால் வீண் செலவுகளும் வந்து வந்து போகும். சில குழப்பங்கள் உருவாகும் சூழல் இருப்பதால்,வியாபாரிகள் தகுந்த ஆலோசனையுடன் செயல்பட்டு வாருங்கள்.நிலைமை மீண்டும் சகஜமாகிவிடும். வேலை நிமித்தம் அங்கும் இங்கும் அலைபவர்கள் உடல் ஆரோக்கியத்தில் தகுந்த கவனம் செலுத்தி வந்தால், உங்களின் அன்றாட அலுவல்கள் சீராக நடைபெறும். பொருளாதார வரவால்,நீங்கள் மன உற்சாகத்துடன் செயல்படலாம்.

    விருச்சிகம்:இயந்திரங்களை இயக்குபவர்கள், தகுந்த பாதுகாப்புடன் பணியில் ஈடுபடுவது நலம். பொதுவாழ்வில் இருப்பவர்கள் , குடும்ப அமைதிக்கு பங்கம் நேராதவாறு திட்டமிட்டு பணிகளை முடித்துக் கொள்வதில் உறுதியாக இருங்கள்.அமைதியான சூழலில் அநேக பணிகளை முடிக்க முடியும். பெருந்தொகையைக் கையாளுபவர்கள் கவனமாக நடந்துகொண்டால்,உங்களின் நற்பெயருக்கு களங்கம் ஏதும் நேராது. பங்குதாரரிடையே சிறு சலசலப்பு தோன்றி மறையும். பெண்கள் சிலருக்கு வாக்கு கொடுத்துவிட்டு, சங்கடப்படுவதைத் தவிர்க் எதிலும் நிதானமாகசெயல்படுவது அவசியம்.

    தனுசு: கலைஞர்கள் திறமையுடன் செயல்பட்டுவந்தால், திறமைக்குரிய பாராட்டு கிடைக்கும். பெண்கள் அண்டை அயலாரிடம், அளவாகப் பழகி வந்தால், அநாவசியத் தொந்தரவுகள் அருகே வாராது. வியாபாரிகள் வாகனங்களுக்குரிய காப்பீடு முதலியவைகளை உரிய கெடுவுக்குள் செலுத்தி விட்டால், தண்டம் கட்ட வேண்டியதிலிருந்து தப்பிவிடலாம். பெண்கள் மின்சாதனப் பொருட்களை கவனமாகக் கையாளுங்கள். உயர்பதவியில் இருப்போர்கள் அதிக மரியாதை காண்பிப்பவர்களிடம் கவனமாக இருப்பது நல்லது. சுய தொழிலில் மனதுக்கு பிடித்த மாற்றங்களை செய்ய சிறிது காலம் காத்திருக்கும் நிலை நிலவும்

    மகரம்: குடும்ப உறுப்பினர் உங்களின் திட்டங்களுக்கு, வலிமை சேர்க்க முன் வருவார்கள். பங்குச்சந்தை விஷயங்களில் ஏற்றம், ஏமாற்றம் இரண்டும் கலந்திருக்கும். எனவே பணத்தை முதலீடு செய்யும் முன் யோசனை செய்வது நல்லது. பெண்கள் பேச்சில் கடுமை கலவாதவாறு பார்த்துக் கொண்டால், குடும்ப உறவுகள் சுமூகமாக இருக்கும்.வியாபாரிகள் கணக்கு வழக்குகளில் உள்ள குளறுபடிகளை கவனமாக சரிசெய்தால், அபராதம் செலுத்தவதை தவிர்த்துவிடலாம். வெளியூர் பிரயாணங்களில், உணவு விஷயத்தில் மிதமாக இருப்பது நல்லது. பொறுப்புக்களில் உள்ளவர்கள் கோப்பு களை நன்கு படித்தபின், கையெழுத்திடுவது அவசியம்.

    கும்பம்: சில நேரங்களில் கண் மற்றும் பல்சம்பந்தமான உபாதைகள் உங்கள் இயல்பு வாழ்வை பாதிக்கக் கூடும். எனவே சிறு தொந்தரவுகளை உடன் கவனித்து விடுங்கள். கலைஞர்கள் விழா விருந்து போன்றவற்றில், உங்கள் எல்லையை அறிந்து, நடந்து கொள்வது அவசியம். வியாபாரிகள் எழுத்துப் பூர்வமாகவே ஒப்பந்தங்களை முடிப்பது நல்லது. பொருள் விநியோகத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் வேலையாட்களை நம்பி முழு பொறுப்பை அளிக்காமல், உங்கள் கவனமும் அதில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.பணியில் இருப்போர் வரும் இடமாற்றத்தை விரும்பி ஏற்றுக் கொள்வதால், வாழ்க்கையில் உயரும் வாய்ப்பு உங்களை நாடி வரும்.

    மீனம்:நண்பர்களிடையே பணம் கைமாற்றாக கொடுப்பதை தவிர்த்தால், நட்பு கெடாமல் இருக்கும். மாணவர்கள் தெளிவான சிந்தனையுடன் செயலாற்றினால் தடுமாற வேண்டி யிருக்காது. பெண்கள் விலையுயர்ந்த பொருட்களை வாங்கும் முன் அவற்றைப் பற்றி அறிந்து கொள்வது அவசியம். சிலருக்கு புதிய மனை மற்றும் இடம் வாங்கும் வாய்ப்பு கனிந்து வரும். அலுவலக விழா விருந்து ஆகியவற்றிற்கு கணிசமான பணம் செலவழியும். நீங்கள் மேற்கொள்ளும் பயணங்களை நண்பர்கள் இனிமையாய் மாற்றிடு வார்கள். உறவுகளிடையே கருத்து வேறுபாடு தோன்றி மறையும். அவசர கதியில் உணவு உண்ணும் பழக்கத்தை மாற்றிக் கொண்டால், தேக நலன் சீராக இருக்கும்.

    Share
  • பதில்??

    -விசாகை மனோகரன் 

     

    ஏங்க, நாளைக்கு எத்தன மணிக்கு ட்ரெயின்

    பொறப்படும்?

     

    எத்தன தடவ தான் கேட்ப மாலதி? 6மணிக்கு.

     

    காலேலயா சாயிந்தரமா?

     

    சாயிந்தரம்தான். போதும் நீ உன் அம்மா வீட்டுக்கு

    போறதும் போதும், என் உயிர வாங்குறதும் போதும்.

     

    ஏன் சொல்ல மாட்டீங்க? உங்க அம்மா மாதிரி,

    எங்க அம்மாவும் மூணு மாசத்துகொருதரம் வந்து,

    ஆறு மாசமா தங்கறாங்க? உயிர வாங்கறேனாமே

    உயிர. போயி ஒரு மாசம் இருந்தா தெரியும்

    சாப்பாட்டுக்கு திண்டாடறது.

     

    சாப்பாட்டுக்கா, நானா, உன்ன விட பிரமாதமா சமைப்பேன் நான், திண்டாடறதாமே திண்டாடறது.

     

    பாக்கலாம் பாக்கலாம், மூணாவது நாளே போன் பண்ணி வான்னு கூப்பிடுங்க, அப்ப சொல்றேன்.

     

    அடுத்த நாள் ட்ரேயின் ஏத்தி விட்டுவிட்டு வீட்டுக்கு வந்தேன். அடுப்பில் பால் காயிச்சியது இருந்தது. காபி டிக்காக்ஷனும் இருந்தது. சூடா ஒரு காபி கலந்து குடித்தேன். ஒன்பது மணிக்கு அவள் செய்து வைத்து விட்டு போயிருந்த சப்பாத்தியும் கறியும் சாப்பிட்டுவிட்டு, தூங்கினேன்.

     

    காலையில் எழுந்து, காபி கலந்து குடித்துவிட்டு, குளித்தேன். டிபன் என்ன பண்ணலாம் யோசித்து, பிரட்டு ஆம்லேட் பண்ணி சாப்பிட்டேன். லஞ்சு வெளியே. வந்து நைட்டுக்கு சமைச்சுக்கலாம்.

     

    சாப்பாட்டுக்கு திண்டாடறதாமே, அதுவும் நான். பிரவீனா கொக்கா?

     

    மனதிற்குள் எண்ணம் ஓட, மத்தியானம் சரவணபவனில் சாப்பிட்டேன். அமிர்தம். வீட்டுக்கு வரும் போது மணி ஆறு. காபி கலந்து குடித்துவிட்டு, கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகி, என்ன சமைக்கலாம்னு யோசித்தேன்.

     

    கிச்சன்ல என்ன காய் இருக்கிறதென்று தேடினேன். உருளைக்கிழங்கும் வெங்காயமும் தான் கிடைத்தது. சரி நாளைக்கு கறிகாய் வாங்கனும்னு மனதிற்குள் சொல்லிக்கிட்டு, சாதம் வடித்து, வெங்காய சாம்பார் வைத்து, உருளை ஃப்ரய் பண்ணினேன். சாப்பிட்டேன். சரவணபவனைவிட அமிர்தம்.

     

    ‘சூப்பர் பிரவீன்’. சமையல்னா இதுதான் சமையல். சாப்பாட்டுக்கு திண்டாடறதாமே, அதுவும் நான். பிரவீனா கொக்கா?

     

    அவள் ஊருக்கு போய் நான்கு நாட்கள் ஆகிவிட்டது. அன்றைக்கு சனிக்கிழமை. ஜாலியாக நைட் ஷோ சினிமா போயிவிட்டு வந்து படுத்துவிட்டு, காலையில் எழுந்திரிக்கும் போது மணி பத்து. அடடா பாத்திரமெல்லாம் கழுவாம அப்படியே இருந்திச்சு. வேலக்காரிக்கு போன் பண்ணினேன்.

     

    “சார், நேத்து வந்தேன் வீடு பூட்டியிருந்திச்சு, இப்ப காலேல வந்து பெல் அடிச்சேன் அடிச்சேன் யாரும் திறக்கல.  சாயிந்தரம் நான் பேமிலியாட வெளிய போறேன், நாளைக்கு காலையில வரேன்”.

     

    வேலைக்காரியிடம் பேசவா முடியும். எல்லா வேலையும் முடியும் போது மணி ஒன்று. பசி வயிற்றைக் கிள்ளியது. இனிமேல் சமைத்துச் சாப்பிட நேரமில்லை. பக்கத்தில இருக்கிற ஓட்டலுக்கு போய், சிக்கன் பிரியானியும், மட்டன் குருமாவும் சாப்பிட்டேன். சாயிந்தரம் வயிறு கடமுட ஆகி, தொல்லை செய்தது. வலியும் ஆரம்பித்துக் கடைசியில் தாங்க முடியாமல் டாக்டர் கிட்ட ஓடினேன். பிளட் டெஸ்ட், எக்ஸ்ரே, ஸ்க்கேன் எல்லாம் செய்து, புட் பாய்சன்னு சொல்லி, மருந்து மாத்திரை குடுத்தார். மெடிக்கல் ஷாப் பில் நூறு ரூபாய், டாக்டர் பீஸ் 300/=, டெஸ்டிங் பில் 1700/=. இனிமேல் சாப்பாடு வெறும் சாதம் மோர். தண்டம். இந்த மாலதியை யார் ஊருக்குப் போகச் சொன்னது?.

     

    நினைச்சேன் போன் அடிச்சது. அவளே தான்.

     

    என்னங்க எப்படி இருக்கீங்க? போனே பண்ணல.

     

    நான் நல்லாதான் இருக்கேன்.

     

    ஏங்க குரல் ஒரு மாதிரியா இருக்கு, உடம்புக்கு ஒண்ணும் இல்லியே?

     

    அதெல்லாம் ஒண்ணுமில்ல, ஏதோ புட் பாய்சனாம், டாக்டர் மாத்திர கொடுத்தாரு டாக்டர். அவ்வளவுதான்.

     

    என்னங்க ஆச்சு, நான் உடனே புறப்பட்டு வரேங்க.

     

    வேணாம் மாலதி, ஒன்ணுமில்ல, மாத்திர சாப்பிட்டா ஓகேவாயிரும்.

     

    இல்லங்க நான் ஒடனே புறப்படறேன்.

     

    சொன்னா கேட்கமாட்டே, உன் இஷ்டம்.

     

    காலையில்  ஆறு மணிக்கெல்லாம் வந்துவிட்டாள்.

     

    என்னங்க இது, ஒரு வாரத்தில இப்படி ஆயிட்டீங்க. இரண்டு நாள் ஆபீஸிக்கு லீவ் போட்டு, ரெஸ்ட் எடுங்க. நான் கஷாயம் வச்சு தரேன். எல்லாம் சரியாயிரும்.

     

    இரண்டு நாட்களில் உடல்நலம்  சரியாகி, ஆபிஸ் போக ஆரம்பித்தேன்.

     

    ஒரு வாரம் கழித்து மாலதி, எங்க, என்னமோ ‘நானா, சாப்பாட்டுக்கா, திண்டாடறதா’ அப்படின்னு சொன்னீங்க, அப்பறம் ஏங்க டாக்டருக்கு 2000/= செலவு, உடம்பு பிரச்சினை எல்லாம்?

     

    அது, அது, வந்து ஹோட்டல் சாப்பாடு ஒத்துக்கல அவ்வளவுதான்.

     

    ‘என்ன விட நல்லா சமைப்பேன்னுட்டு, ஏங்க ஹோட்டல்ல சாப்பிட்டீங்க’ ?

     

    ‘சமைக்கத் தெரியாம எல்லாம் இல்லை. ஏன்னமோ அந்த ஹோட்டல்ல போய் மாட்டிக்கிட்டேன். அடுத்த தரம் பாரு, ஹோட்டல மாத்திரமாட்டேன்’ .

     

    மாலதி !!!!!!!!!!!!!!!!

    Share
  • கனவுதிர்காலம்

     

    -வருணன்

     

    ஆழ்நித்திரையிலிருந்த

    கனவுகளனைத்தையும் துயிலெழுப்பி

    வரிசைக்கிரமமாய் அடுக்கியாயிற்று

    குறுங்கனவுகள் முன்வரிசையில்

    நீள்கனவுகள் பின்வரிசையில்

    இடைச் செருகலாய் பகற் கனாக்கள் சில

    நாளுக்கு ஒன்றென

    உதிரும் கனவு மரத்தின் இலைகள்

    அதிவிரைவில் காணவிருக்கும்

    இலைகளற்ற கிளைகள் குறித்த

    வெறுங்கனவோடு சேர்ந்து

    நகர்கிறது இந்த இரவும்.

     

    படத்துக்கு நன்றி: http://mermaidartist.wordpress.com/page/9/

    Share
  • எனக்குள் வந்த இன்னுமொரு உயிர்!

     

    -தனுசு

     

    எனக்குள்
    நீ
    எப்படி வந்தாய்?
    என்னை
    நீ
    எப்படிச் சேர்ந்தாய்?
    அது
    எனக்கே தெரியவில்லை!

    நீ வந்ததால்
    என் வாழ்க்கை மாறியது
    நீ சேர்ந்ததால்
    என் செய்கையும் சிந்தனையும்
    உன்னுள் அடங்கியது.

    துள்ளிக்குதித்த இந்த ஜல்லிக்கட்டு காளை
    கடிவாளம் பெற்று
    இன்று
    உன் கைப்பிடியில்.
    சொல்லி அடித்த இந்த வரிப்புலி
    வீரம் மறந்து
    இன்று
    உன் காலடியில்.

    பால்மடி தேடும்
    கன்றுக்குட்டியாகி
    நாளும் பொழுதும்
    உன்னைத் தேடுகிறேன்!
    அந்தத் தேடல்
    ஒவ்வொன்றிலும்
    உன்னைப் பார்க்கிறேன்!
    உன்னிலும்
    ஒவ்வொன்றையும் பார்க்கிறேன்!

    கருவண்டைப் பார்த்தால்
    கண்களின் ஞாபகம்!
    மழைமேகம் பார்த்தால்
    கருங்கூந்தல் ஞாபகம்!

    இன்னும்
    பூவை
    பூங்காற்றை
    நிலவை
    இவைகளைக் காணும் போதெல்லாம்
    உன் ஞாபகம்.

    அந்த ஞாபகம்
    அடி மனதில் அம்மி மிதித்து
    போர்க்களம் வென்ற மன்னன்
    அந்தப்புரம் சென்றால்
    கிடைக்கும் இன்பம் போல் இனிக்கும்!

    என்
    நெஞ்சில் வசிக்க நீ வந்ததால்
    வேறு வஞ்சிக்கு இனி இடமில்லை!
    நான்
    புசிக்க நீ இருப்பதால்
    வேறு பசி எனக்கு தெரிவதில்லை!

    எத்தனை எத்தனை செய்கிறது
    உன் மந்திரம்!
    அதன் முன்
    மற்றதெல்லாம் எம்மாத்திரம்!

    நீ
    என் மனம் விரும்பும்
    மாலை நேரத்து மதுக்கிண்ணம்!
    உன்
    நடை பார்த்து
    நடை பழகும் அன்னம்!

    நீ
    என் சிந்தையில்
    அமர்ந்த சிற்பி
    என் எழுத்தால் உன்னைச் செதுக்க
    இன்னும் எனக்கு கற்பி!

    நீ
    என் மூளைச் செல்கள் அனைத்திலும்
    முளை விடும்
    ஒரே விதை!
    அதுதான்
    இந்த பாமரனை
    பா மகனாக்கிய
    நீ எனும் நான் விரும்பும் தமிழ்கவிதை!

     

    படத்துக்கு நன்றி: http://www.vallamai.com/wp-content/uploads/2012/04/8307785-valentine-s-day-concept-lovebirds-flying-around-love-hearts.jpg

     

    Share
  • அமைதியின் சத்தம்

    இலண்டன் மாநகருக்கு என் குடும்பத்துடன் குடியேறிக் கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால் இப்போது இலண்டன் மாநகரின் அழகை விவரிக்கும் மனநிலையில் எல்லாம் நான் இல்லை. இன்னும் சொல்லப்போனால் திரும்பவும் பெங்களூருக்கே போய்விடலாமா என்று கூட சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்.

    இதற்கான காரணத்தைக் கேட்டால், இதெல்லாம் ஒரு காரணமா என்றும், இதற்குப் போய் இலண்டனை விட்டுவிட்டு எவனாவது திரும்பி வருவானா என்றும், இந்த சத்யா ஒரு பைத்தியக்காரன் என்றும் கூட உங்களுக்குத் தோணலாம்.

    நான், என் மனைவி மற்றும் என்னுடைய இரண்டு மகன்களும்,   ஆறுமாதங்களுக்கு முன்புவரை வெஸ்ட்மின்ஸ்டர் பகுதியில் வசித்து வந்தோம். அதுவரை இலண்டனில் காலம் ஆனந்தமாகக் கழிந்தது.

    ஆனால் அந்த வீட்டிற்கு வாடகை கொஞ்சம் அதிகம் என்பதால், தெற்கு லண்டனிலுள்ள கிராய்டன் பகுதியில் பதினான்கு தளங்களைக் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றின் ஆறாவது தளத்திலிருந்த வீட்டிற்குக் குடிபுகுந்தோம்.

    இந்தச் சிறிய வீட்டிற்கு நான் கொடுக்கும் வாடகையைக் கேட்டால் உங்களுக்கு மாரடைப்பே வந்துவிடும். பெங்களூரில் கூட தற்போது வீட்டு வாடகை எகிறி எங்கோ போய்விட்டதாக என் நண்பர்கள் கூறினார்கள். இருந்தாலும், அங்கெல்லாம் நம்முடைய வருமானத்தில் ஆறில் ஒரு பங்குதான் வீட்டு வாடகைக்குப் போகும் (நான் தகவல் தொழில்நுட்பத்  துறையில் வேலை பார்ப்பவன் என்பதை மனதில் கொள்ளவும்). ஆனால் இங்கு ஐரோப்பாவில் எந்த  நாட்டில் இருந்தாலும் சரி, சம்பளத்தின் மூன்றில் ஒரு பங்கை வீட்டு வாடகைக்காக ஒதுக்கிவிட வேண்டும். அதற்குமேல், மின்சாரம், தண்ணீர், ஹீட்டிங், இத்யாதி இத்யாதிகள் வேறு.

    இருந்தாலும் இவையல்ல என் பிரச்சினைக்குக் காரணங்கள்.

    ஐரோப்பாவில் பெருஞ்செல்வந்தர்களாக வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்று எங்களை நினைத்துப் பொறாமைப்பட்டுக்கொண்டிருக்கும் உறவு நெஞ்சங்களுக்கு இவற்றையெல்லாம் விளக்கினாலும் புரியப்போவதில்லை எனும்போது, எதற்கு விளக்கி நேரத்தை வீணடிக்கவேண்டும்?.

    என் பிரச்சினைக்கு வருவோம்.

    என் குழந்தைகளில் ஒருவனுக்கு ஐந்து வயது, இன்னொருவனுக்கு இரண்டு வயது. இரண்டாவது மகன் இலண்டனில்தான் பிறந்தான்.

    “இது ஒரு பிரச்சினையா?” என்று கேட்க வேண்டாம்.

    நான் பிரச்சினை என்னவென்று சொல்வதற்கு முன்பு, முதலில் நீங்கள் என் கேள்விக்குப் பதில் சொல்லுங்கள்.

    குழந்தைகள் வீட்டில் அங்கும் இங்கும் ஓடுவதும், குதித்து விளையாடுவதும் தவறா?                        

    “நிச்சயமாக இல்லை!” என்று நீங்கள் தலையாட்டுவது தெரிகிறது. ஓடிவிளையாடிக் குதிப்பது என்பது குழந்தைகளின் இயல்பு. ஆனால் அதற்காக அவர்களது தந்தையாகிய நான் காவல் நிலையம் மட்டுமல்ல, கோர்ட் வாசல் வரைச் சென்று வந்தேன் என்றால் உங்களால் நம்பமுடியுமா? நம்பித்தான் ஆகவேண்டும்! நான் சிறைக்குச் செல்லாதது மட்டும்தான் குறை.

    ஒருநாள் நான் என் குழந்தைகளுடன் படுக்கையறையில்  விளையாடிக்கொண்டிருந்தபோது, திடீரென தடதடதடவென்று பூகம்பம் வந்தது போன்று ஒரு சத்தம். என் குழந்தைகள் மிரண்டுபோய் ஓடிவந்து என்னைக் கட்டியணைத்துக் கொண்டனர். யாரோ வேண்டுமென்றே சுவரைத் தட்டிச் சத்தத்தை ஏற்படுத்தியது போல இருந்தது. அந்தச் சத்தம் பக்கத்து வீட்டிலிருந்து வந்ததா, மேல்வீடு அல்லது கீழ்வீட்டிலிருந்து வந்ததா என்று என்னால் யூகிக்க முடியவில்லை.

    ஒருவேளை என் மனைவிதான் சமையலறையில் ஏதாவது செய்து கொண்டிருக்கிறாளோ என்று ஹாலுக்கு வந்தால், அவள் எனக்குமேல் பதைபதைத்துக் கொண்டு ஓடிவந்து, “என்ன சத்தம்?” என்று கேட்டாள்.

    “தெரியல அர்ச்சனா. பக்கத்து வீட்லர்ந்து யாரோ சொவத்த இடிக்கற மாதிரி தெரியுது.” என்றேன்.

    “ஒருவேளை நீங்க மூணுபேரும் ரொம்பச் சத்தம் போட்டு விளையாடினதால வார்ன் பண்றாங்கன்னு நெனெக்கிறேன் சத்யா. கொஞ்சம் நேரம் அமைதியா இருந்து பார்க்கலாம்.” என்றாள் என் மனைவி.

    அதற்குப் பிறகு அன்றைக்கு மீண்டும் அந்தச் சத்தம் கேட்கவே இல்லை.

    அடுத்த நாள் மாலை வீட்டிற்குள் நுழைந்ததுமே என் மனைவி, “இன்னிக்கு மட்டும் நாலுதடவ சத்தம் வந்துச்சு சத்யா. கரெக்டா நோட் பண்ணேன். இவங்க குதிக்கறப்ப, ஒடரப்போதான் யாரோ இடிக்கறாங்க. எனக்கென்னமோ நாய்ஸ் கீழ்வீட்டிலர்ந்து வர்ற மாதிரிதான் தெரியுது. ரொம்ப அன்னாயிங்கா இருக்கு பா.” என்று எரிச்சல் பட்டுக்கொண்டாள்.

    அடுத்தநாள், எனக்குத் தலைவலி அதிகமாக இருந்ததால் வழக்கத்திற்குச் சற்று முன்னதாகவே அலுவலகத்திலிருந்து கிளம்பி, ட்யூபில் வீட்டிற்குச்  சென்று கொண்டிருந்த போது, அர்ச்சனாவிடமிருந்து கைபேசி அழைப்பு வந்தது.

    “சத்யா, போலீஸ் வந்திருக்கு. கொஞ்சம் சீக்கிரம் வர்றியா?” என்று அவள் சொன்னவுடன் எனக்கு ஒன்றுமே புரியவில்லை.

    “வாட்??? போலீசா? எதுக்கு?”

    “அப்புறம் பேசலாம். நீ வர்றதுக்கு இன்னும் எவ்ளோ நேரம் ஆகும்?”

    “அல்மோஸ்ட் ஸ்டேஷன் ரீச் ஆயிட்டேன். இன்னும் டென் மினிட்ஸ்ல அங்க இருப்பேன்.”

    எனக்குத் தலைவலி போய் மாரடைப்பே வந்துவிடும் போலாகிவிட்டது. எதற்கு வந்திருப்பார்கள் என்று என்னால் சிறிதும் யூகிக்கவே முடியவில்லை. இவள் வேறு விஷயத்தைச் சொல்லாமல் புதிர் போடுகிறாள் என்று திட்டிக்கொண்டே என் நண்பனுக்கு உடனே போன் செய்தேன்.

    “ஹே விச்சா, கொஞ்சம் உடனே வீட்டுக்கு வர்றியா?”

    “ஆபீஸ்ல இருக்கேன் மச்சி. ஈவினிங் வரட்டுமா?”

    “கொஞ்சம் அர்ஜன்ட் டா. வீட்டுக்கு பக்கத்துல தானே ஆபீஸ் இருக்கு. கொஞ்ச நேரம் வந்துட்டு போயிடேன்.”

    “என்ன ஆச்சுடா?”

    “நீ வா சொல்றேன்.” என்று என் மனைவி போட்ட அதே புதிரைப் போட்டுவிட்டு கைபேசியை அணைக்கவும் ஸ்டேஷன் வரவும் சரியாக இருந்தது.

    ட்யூப் ரயிலிலிருந்து இறங்கி வீட்டிற்கு ஓட்டமாய் ஓடி எங்கள் குடியிருப்பிற்கு வந்து சேர்ந்தேன். குடியிருப்பு வாசலில் வோல்வோ V70 காவல்துறை வாகனம் ஒன்று நின்று கொண்டிருந்தது.

    அதைக் கண்டவுடன் இன்னமும் வேகமாக ஓடிச்சென்று எலிவேட்டரைப் பிடித்து,  ஒன்று.. இரண்டு.. மூன்று.. என ஒவ்வொரு தளமாகக் கடக்கும்போதும், எனக்கு இரத்த அழுத்தம் 120.. 130.. 140.. என்று பத்தின் மடங்குகளாக ஏறிக்கொண்டிருந்தது.

    ஆறு..

    எலிவேட்டரின் கதவைத் திறந்து எட்டிப் பார்த்தேன். திறந்து கிடந்த என் வீட்டிலிருந்து சிரிப்பொலி கேட்டது.

    உள்ளே நுழைந்த என்னை, “ஹலோ, வெல்கம்!” என்று கம்பீரக் குரலில் வரவேற்றனர் இரண்டு காவல் துறை அதிகாரிகள்.

    “ஹலோ, அம் சத்யா!” என்று அறிமுகப்படுத்திக்கொண்டு அவர்களோடு கைகுலுக்கினேன்.

    “யுவர் பிப்த் ப்ளோர் நெய்பர் ஹேஸ்  லாட்ஜ்ட் எ கம்ப்ளையின்ட்!” என்று கூறிய அவருடன் ஆங்கிலத்தில் உரையாடினேன்.

    “என்ன புகார்?”

    “உங்கள் வீட்டிலிருந்து அதிக சத்தம் வருகிறதாம். ஆனால், இதில் பயப்படுவதற்கு ஒன்றும் இல்லை. சிறுவர்கள் விளையாடிக் கொண்டுதான் இருப்பார்கள். உங்கள் மனைவியை அழைத்துக்கொண்டு அவர்கள் வீட்டிற்குச் சென்று பேசினோம். நீங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் அனுசரித்துப் போகவேண்டும். வேறு வழியில்லை. இதில் நாங்கள் எதுவும் பெரிதாகச் செய்ய முடியாது.” என்று கூறிவிட்டுப் புறப்படத் தயாரானார்கள்.

    வழியனுப்ப வெளியே வந்த எங்களுடன் கைகுலுக்கிவிட்டு, என் மனைவியிடம், “தாங்க்ஸ் பார் த கோலா!” என்று சிரித்துக்கொண்டே கூறிவிட்டுச் சென்றார்கள்.

    அவர்கள் லிப்டுக்குள் சென்ற அதே சமயம், அருகிலிருந்த லிப்டிலிருந்து விச்சா வெளியே வந்தான்.

    “என்னடா ஆச்சு? போலீஸ்லாம் வந்திருக்கு…” என்று பதற்றத்துடன் கேட்டான்.

    நான் உடனே பின்னால் திரும்பி “என்ன அர்ச்சு ஆச்சி?” என்று என் மனைவியைக் கேட்டேன்.

    “நம்ம வீட்டுக்கு கீழ்வீட்ல ஒரு வயசான கபில்ஸ் இருக்காங்க. ஹாலந்து நாட்டுக்காரங்களாம். அந்தப் பாட்டிக்கு ஏதோ ஒடம்பு முடியலையாம். போனவாரம் தான் ஹாஸ்பிடல்லர்ந்து டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வந்திருக்காங்களாம். நம்ம வீட்லர்ந்து ரொம்ப நாய்ஸ் வர்றது தாங்க முடியலைன்னு கம்ப்ளைன்ட் பண்ணியிருக்காங்க.”

    “நாய்ஸ் வந்தா பர்ஸ்ட் நம்ம கிட்ட சொல்ல வேண்டியதுதானே! அதுக்கு போயி போலீஸ் கிட்ட யாரவது போவாங்களா?”

    “இட்ஸ் நாட் எ சர்ப்ரைஸ் பார் மி. நான் ஆம்ஸ்டர்டாம்ல நாலு வருஷம் இருந்திருக்கேன். டச்சுக்காரங்க கொஞ்ச கோவக்காரப் பசங்க டா.”

    “ரெண்டு மூணு நாலா பசங்க விளையாடும்போதெல்லாம் தடதடனு சத்தம் கேட்டது மச்சி. ஆனா இதுக்கெல்லாமா போலீஸ்கிட்ட போவாங்க?”

    “இந்த ஊருக்காரங்கல்லாம் அமைதி விரும்பிகள் டா!”

    “என்ன அமைதியோ? அந்த தாத்தா ஒரு சார்ட் கொடுத்திருக்காரு விச்சாண்ணா” என்றாள் அர்ச்சனா.

    “என்ன சார்ட்?” என்று கேட்டேன்.

    “நைட் 7 மணிலர்ந்து மார்னிங் 7 வரைக்கும் பசங்க தூங்கணுமாம். அதனால அவங்களுக்கு டிஸ்டர்பன்ஸ் இருக்காதாம். மார்னிங் 8 மணிக்கு விகாஷ் ஸ்கூலுக்கு போறதால. ஆகாஷ் மட்டும் தான் வீட்ல இருப்பான். சோ, சத்தம் நிறைய வராதாம். ஈவினிங் போர் டு செவென் மட்டும் அவங்க அட்ஜஸ்ட் பண்ணிப்பாங்களாம்.”

    “என்னக் கொடும சரவணன் இது?” என்று தலையில் அடித்துக்கொண்டான் விச்சா.

    “அப்போ வீக்கென்டுல?” என்று என்னமோ மருத்துவரிடம் தடுப்பூசி அட்டவணையின் பேரில் இருக்கும் சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்வது போன்று ஆர்வத்தோடு அவளிடம் கேட்டேன்.

    “வீக்கென்டுல ரொம்ப சத்தம் வந்தா அவங்க அதே மாதிரி சொவத்துல த்ரீ டைம்ஸ் மட்டும் நாக் பண்ணுவாங்களாம். நாம கிட்ஸ கண்ட்ரோல் பண்ணனுமாம். இல்லைனா எங்கயாவது வெளில கூட்டிட்டு போயிடணுமாம். இந்தக் குளிருல எங்கன்னு வெளில போறது?” என்று கூறிவிட்டு தலைமேல் கைவைத்துக்கொண்டு அமர்ந்தாள் அர்ச்சனா.

    அதற்குப் பிறகு, சுவரைத் தட்டி ஒலி எழுப்புவதே அவர்களுக்கு வேலையாகிவிட்டது. எங்களுக்கும் குழந்தைகளைத் திட்டித்திட்டி வெறுப்பாகிவிட்டது. அதற்கு முன்பு இதுபோன்றெல்லாம் என் குழந்தைகளைத்  திட்டியதே இல்லை. அர்ச்சனா ஒருமுறை மிகவும் எரிச்சலடைந்து விகாஷை நன்றாக அடித்தேவிட்டாள். இப்போதெல்லாம் இங்கு குழந்தைகளைத் கண்டிப்பதற்குக்கூட பயமாய் இருக்கிறது. பெற்றோர்களைச் சிறையில் அடைத்துவிடுகிறார்கள்.

    இப்படியே இரண்டு வாரங்கள் ஓடிவிட்டது.

    “டைரக்டர் பாக்யராஜுக்கு மட்டும் இந்த மேட்டர் தெரிஞ்சா ‘சுவரின் மேல் சத்தங்கள்’ னு ஒரு படமே எடுத்துடுவார் மச்சி.” என்று விச்சா கிண்டல் செய்துவிட்டுச் சிரித்தான்.

    “டேய். நான் டென்ஷன்ல இருக்கேன் உனக்கு நக்கலா?”

    “ஒரு ஐடியா! அவங்க ஒருமுறை போலீஸ்ல கம்ப்ளைன்ட் பண்ணாங்கல்ல. இப்போ நாம ஒருமுறை போய், கீழ்வீட்டுக்காரங்க ரொம்ப நாய்ஸ் பண்ணி மென்டல் டார்ச்சர் பண்றாங்க. என்னோட கிட்ஸ் ஆர் கெட்டிங் வெரி நெர்வஸ்னு கம்ப்ளைன்ட் பண்ணிப் பாக்கலாமா?” என்றான்.

    நானும் அர்ச்சனாவும் யோசித்துக்கொண்டிருந்தபோது அவனே இன்னொரு யோசனையும் வழங்கினான், “பசங்கள விளையாடவிட்டு அவங்க தட்டும்போது வீடியோ எடுக்கலாம். அப்போ தான் அவங்களுக்கு அந்தச் சத்தத்தோட இம்சை புரியும்!”

    எங்களுக்கும் அது சரியெனப் பட்டதால் அவன் கூறியபடியே செய்து, வீடியோ ஆதாரங்களோடு போலீசில் புகார் செய்தோம்.

    அதிகாரிகள் மீண்டும் ஒருமுறை இரண்டு வீட்டிற்கும் வந்து பார்வையிட்டு விட்டு, கோலா குடித்து விட்டு, அதே அறிவுரையை வழங்கி விட்டுச் சென்று விட்டனர்.

    அதற்குப் பிறகுதான் பிரச்சினை பூதாகரமாக உருவெடுத்தது. தாத்தா கிராய்டன் கவுன்சிலுக்குச் சென்று மேல்முறையீடு செய்துவிட்டார். கவுன்சிலின் தடுப்புச் சேவை மையத்தில் (prevention service) எங்கள் பிரச்சினையைத் தீர்த்து வைக்க ஒரு அதிகாரியை நியமித்தார்கள்.

    அவர் முதலில் அவர்களுடன் பேசுவாராம். பின்னர் எங்களிடம் பேசுவாராம். அதற்குப் பிறகு எங்கள் இருவரையும் அழைத்துப் பேசுவாராம். இந்தப் பேச்சுவார்த்தை கிட்டத்தட்ட ஒரு நான்கு கட்டங்களாக நடக்குமாம்.

    முதற்கட்ட பேச்சுவார்த்தைக்கு நானும், கிச்சாவும் சென்றோம். அதிகாரி மிகவும் நல்லவர். நாங்கள் சொன்னதற்கெல்லாம் தலையாட்டினார். நாங்கள் சொல்லுவதுதான் மிகச்சரி என்பது போலப் பேசினார்.

    “இவரு அவுங்களுக்கும் இதே மாதிரிதான் தலையாட்டுவார் போல இருக்குடா. பேசாம ஏன் நாம அந்தத் தாத்தா கிட்டயே போயி பேசக்கூடாது?” என்று மற்றுமொரு யோசனையைக் கொடுத்தான் கிச்சா.

    அன்று மாலையே நானும் கிச்சாவும் ஐந்தாம் தளத்திலிருக்கும் அந்த ஹாலந்து தம்பதியினர் வீட்டிற்குச் சென்று அழைப்பு மணியை அழுத்தினோம்.

    சிறிது நேரம் கழித்துக் கதவைத் திறந்து எட்டிப் பார்த்தது ஒரு வெள்ளைக் கிழ உருவம்.

    எங்களைப் பார்த்த அடுத்த நொடி அவரது முகம் சிவந்தது. எங்கே கதவை மடாரெனச் சாத்திவிட்டு உள்ளே சென்றுவிடுவாரோ என்று நினைத்த அடுத்த கணம், “கம் இன்” என்றார்.

    நாங்கள் இருவரும் சிரித்துக்கொண்டே உள்ளேச் சென்று, கைகுலுக்கி எங்களை அறிமுகப்படுத்திக் கொண்டோம்.

    எங்களை ஹாலுக்கு அழைத்துச் சென்றார். அந்த வீடே கிட்டத்தட்ட ஒரு அருங்காட்சியகம் போலக் காட்சியளித்தது. அவ்வளவு நேர்த்தியாக அத்தனைப் பொருட்களும் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.

    ஒரு மயான அமைதி குடிகொண்டிருந்த அந்த வீட்டில் ஏதோ மெல்லிய சத்தம் வந்து கொண்டிருந்ததை உணர்ந்தோம். என்னவென்று திரும்பிப் பார்த்தால், அந்த வீட்டின் மூலையில் ஒரு பாட்டி சாய்வு நாற்காலியில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தார். அந்த டிவியின் ஓசைக் கூட கேட்கவில்லை. இப்படி ஒரு சூழலில் என் குழந்தைகள் குதித்தால் மட்டும் இல்லை, வாயு பிரித்தால் கூட ராக்கெட் ஏவும் சத்தம் கேட்கும் அந்த வீட்டில்.

    தாத்தா ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்தார்.

    “என் மனைவி சில நாட்களுக்கு முன்னால்தான் சிகிச்சை முடித்துக்கொண்டு மருத்துவமனையிலிருந்து திரும்பி வந்திருக்கிறாள். ஏன் இப்படி எங்களுக்குத் தொல்லை கொடுக்கிறீர்கள்? பேசாமல் நீங்கள் வீட்டை காலி செய்துகொண்டு போய்விடுங்கள். நான் வேண்டுமானால் எல்லா செலவுகளையும் ஏற்றுக்கொள்கிறேன்.” என்று சற்றுச் சூடாகவே வார்த்தைகளை வீசினார்.

    அவர் பேசிய விதம் என்னைச் சினம் கொள்ளவைத்தாலும், அந்தப் பாட்டியின் நிலைமை பார்க்கப் பரிதாபமாக இருந்ததால் என்னை நானே அமைதிப்படுத்திக்கொண்டேன்.

    கிச்சா மட்டும் அவரிடம் பணிவாகப் பேசினான்.

    “யூ ஆர் லைக் அவர் பேரன்ட்ஸ். ஹிஸ் சன்ஸ் ஆர் ஸ்மால் கிட்ஸ். சோ பிளீஸ் அட்ஜஸ்ட்!” என்று அவன் சொன்ன அடுத்த கணம், மேலே என் வீட்டிலிருந்து மெல்லியதாக தட்தட்டென்று சத்தம் கேட்டது.

    அவ்வளவுதான். “டிட் யூ ஹியர்? டிட் யூ ஹியர்?” என்று கத்திக்கொண்டே கிழவர் மேஜையின் மேலிருந்த ஒரு கட்டையை எடுத்து சுவரில் தம்தம்மென்று அடித்தார்.

    எங்களிருவருக்கும் என்னவோ போல் ஆகிவிட்டது. அதற்காகவே அந்தக் கட்டையை வாங்கி வைத்திருக்கிறார் என்று தோன்றியது. எனக்கென்னவோ என் குழந்தைகள் எழுப்பும் சத்தத்தை விட, இந்தச் சத்தம்தான் அந்தப் பாட்டிக்குப் பெருந்தொல்லையாய் இருக்கும் போலத் தோன்றியது.

    அந்தப் பாட்டி உடனே அழ ஆரம்பித்துவிட்டார். அதைப் பார்த்தவுடன் அந்தக் கிழவர் இன்னும் எரிச்சலடைந்து எங்களைப் பார்த்து, “’டாட் பர்டோமெ’. கோ டு யுவர் கன்ட்ரி” என்று கத்தினார்.

    “ஹூ ஆர் யூ டு சே திஸ்? ஐ நோ டச்சு! டேக் பேக் யுவர் வேர்ட்ஸ்! சே சாரி!” என்று நேரம் காலம் புரியாமல் கிச்சா திடீரெனக் கத்திக் குதிக்க ஆரம்பித்து விட்டான்.

    போனை வேறு உயர்த்தி, “நாங்க எல்லாத்தையும் ரெகார்ட் பண்ணி இருக்கோம். கோர்டுக்கு போவோம்” என்று சத்தம் போட்டவனை அப்படியே பிடித்து வெளியே இழுத்து வந்துவிட்டேன்.

    அந்தக் கிழவரும் அவர் தரப்பிற்கு உள்ளே டச்சு மொழியில் விதம்விதமாய் வசவுகளை வீசிக்கொண்டிருந்தார்.

    “ஏண்டா இப்படி பண்ண? பாவன்டா அந்தப் பாட்டி! அழறாங்க!” என்றேன்.

    “உனக்கு ‘டாட் பர்டோமெ’ னா என்னனு தெரியுமாடா? எனக்கு டச்சு தெரியும். இதுல வேற உன் நாட்டுக்கு போங்கறான். நான் எதுக்கு போகணும். நான் இங்க டேக்ஸ் கட்டறேன். அவன் என் டேக்ஸ்ல பென்ஷன் வாங்கிட்டு இருக்கான்.”

    “அதுவாடா இப்போ முக்கியம்? பெங்களூர்ல இருக்கும்போது கூடத்தான் எவ்ளோ ஆட்டோகாரங்க கன்னடத்துல கன்றாவியா திட்டி இருக்காங்க. இந்தியாவிலயே சகிச்சிக்கிட்டு வாழறோம். இது வெளிநாடு. இங்க பொழப்பு தேடி வந்திருக்கோம். இதெல்லாம் அட்ஜஸ்ட் பண்ணிக்கனுண்டா. இது அவங்க எடம். நாளைக்கு பிரச்சினை வந்தா நமக்காக யாரும் வரமாட்டாங்க.”

    “பேசாம நீ வீட்ட காலி பண்ணிடு மச்சான்! என் வீட்டுக்கு வந்துடு. ப்ரவென்ஷன் செர்வீசும் வேணாம், ஒரு மண்ணும் வேணா.”

    “இது கரெக்ட் அப்ரோச். அந்த ஆள் நிலமைய கொஞ்சம் யோசிச்சு பாரு. எல்லா எக்ஸ்பென்சசும் நானே பாத்துக்குறேன். காலி பண்ணுங்கறான். அப்படின்னா அவங்களுக்கு எவ்ளோ கஷ்டம் இருக்குமோ? நான் வேற வீடு தேடறேன். அதுக்கு மட்டும் நீ கொஞ்சம் ஹெல்ப் பண்ணினா போதும்.”

    “ஷூர் டா! இன்னைக்கே தேட ஆரம்பிக்கலாம்” என்று கூறிய அவனை அழைத்துக்கொண்டு வீட்டுக்குச் சென்றேன்.

    இப்படியாக மூன்று வாரம் ஓடிவிட்டது. ஆனால் அந்த ‘சுவர் சத்தம்’ மட்டும் ஓய்ந்தபாடில்லை. அதோடு வாழப் பழகிக் கொண்டோம் என்று கூடச் சொல்லலாம். ஆனால், அர்ச்சனாவை நினைத்தால்தான் சிறிது வேதனையாக  இருந்தது. நானாவது வாரநாட்களில்  அலுவலகத்திற்குச் சென்று விடுவேன். அவளுக்கு இருந்த மன உளைச்சலை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. அவளுக்காகவே தீவிரமாக வீடு தேடினோம் நானும் கிச்சாவும்.

    இப்படியிருக்க, ஒருநாள் கவுன்சிலிலிருந்து எங்களுடைய அதிகாரி தொடர்பு கொண்டு, இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தைக்காக என்னை அழைத்தார். நான் வேறு வீடு பார்த்துக்கொண்டிருப்பதாகக் கூறி இந்தச் சேவை வேண்டாமென்று மறுத்துவிட்டேன். அவரும் எனது முடிவைப் பாராட்டினார். அது ஒன்றுதான் சரியான வழி என்றும், அந்தப் பெரியவருக்கு அதை தானே தெரிவித்துவிடுவதாகவும் கூறினார்.

    ஒரு சனிக்கிழமை.

    குழந்தைகள் எப்போதும் போலக் குதித்து ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தார்கள்.

    அர்ச்சனா, “என்ன இன்னைக்கு காலைலர்ந்து பெருசுங்க சத்தமே காணோம். எங்கயாச்சும் வெளிய போயிட்டாங்களா?” என்றாள்.

    “கரெக்ட். அதிசயமா இருக்கு. இன்னைக்கு மழை பேயும்.” என்று கூறிவிட்டு ஜன்னலினூடே வெளியே பார்த்தேன். அன்றைக்கு கிராய்டன் வட்டாரமே எனக்கு அவ்வளவு அழகாய்த் தெரிந்தது.

    “சத்யா, பாத் டப்ல தண்ணி தேங்குது. கொஞ்சம் சிண்டிகஸ்ல சொல்லிடேன். நாளைக்கு ஹாலிடே. அப்புறம் மன்டே வரைக்கும் கஷ்டம்.” என்றாள்.

    நான் கீழே சென்று, எங்கள் குடியிருப்பு பராமரிப்பு அலுவலகத்தில் புகார் கொடுத்துவிட்டு திரும்பும்போது, ஐந்தாவது தளத்தில் வசிக்கும் தெலுங்கு நண்பர் ஒருவர் எதிர்ப்பட்டார்.

    அவரிடம் அவ்வளவாக நான் பேசியது கிடையாது. ஆனால் அன்றைக்கு அவராகவே என்னருகே வந்து, “விஷயம் தெரியுமா சத்யா?” என்று கேட்ட விதத்திலும், பார்த்த பார்வையிலும், ஏதோ கெட்ட செய்தி கொண்டு வந்திருக்கிறார் என்பது தெளிவாகத் தெரிந்தது.

    “என்ன விஷயம் சதீஷ்” என்று சிறிது குழப்பத்தோடு வினவினேன்.

    “எங்க ப்ளோர்ல இருக்கற பாட்டி இன்னைக்கு விடிகாலைல செத்துப் போச்சாம். இன்னைக்கு மார்னிங் ப்யூனரல் ஹோமுக்கு பாடிய தூக்கிட்டு போனப்பப் பாத்தேன்.”

    சதீஷ் சொன்னதைக் கேட்டவுடன் அதிர்ந்து போனேன். அவனுக்குப் பதில் சொல்ல எனக்கு வாயெழவில்லை. “ஓ. அப்படியா? சாரி டு ஹியர்.” என்று வெறுமனே கூறிவிட்டுத் திரும்பி நடக்க ஆரம்பித்தேன். எனது கைகள் நடுங்க ஆரம்பித்தன; கால்களின் நடை தளர்வடைந்தது. வீட்டிற்குச் செல்வதற்கே சிறிது கலக்கமாக இருந்தது. எங்கள் குடியிருப்பில் இருந்த பூங்காவில் சிறிது நேரம் அமர்ந்து விட்டு, வீட்டிற்குச் சென்று அர்ச்சனாவிடம் கூட எதுவும் சொல்லாமல் அப்படியே நாற்காலியில் சரிந்தேன்.

    குழந்தைகள் இங்குமங்கும் ஓடிக் குதித்து விளையாடி ஒலி எழுப்பிக்கொண்டிருந்ததனர்.

    ஆனால் என் செவிகள் ஐந்தாவது தளத்திலிருந்து வழக்கமாக வரும் சுவரின் சத்தத்தையே தேடிக்கொண்டிருந்தன.  அவைகளுக்கு நிசப்தம் மட்டுமே பதிலாகக் கிடைத்துக்கொண்டிருந்தது. 

    Share
  • வாழ்க்கை நலம் – 2

    குன்றக்குடி அடிகள்

     

    2. மானிடமும் மொழியும்

    உலகியலை எண்ணிப் பார்க்கையில் எல்லாமே முதன்மையுடையவனாகவே தெரியும். அதாவது நாடு, மொழி, சமயம், கலை, பொருள் ஆகியன. இவையெல்லாவற்றுக்கும் அடிப்படையாகவும் ஆதாரமாகவும் அமையும் நாடு மிகமிக இன்றியமையாதது. எல்லா விழுமிய பற்றுக்களிலும் மிகவும் விழுப்பம் உடையது நாட்டுப் பற்றேயாம். விழுப்பம் தரும் நாட்டுப்பற்றிலும் மிக்குயர்ந்தது நாட்டு எல்லைகளைக் கடந்த உலகந்தழீயிய விருப்பம். நாட்டுப்பற்றோடு இணைந்தது, பிணைந்தது நாட்டில் வாழும் மக்களிடத்தே நிலவ வேண்டிய ஒருமைப்பாடு.

    ஒரு நாட்டின் மக்கள் ஒருமைப்பாடுடையவர்காளாயில்லாது போனால் அந்த நாடு சிந்தையில் ஒன்றாக விளங்கும் நாடாக உருப்பெறுதல் அரிது. நாட்டு மக்களிடத்தில் நல்ல வண்ணம் கலந்து பேசிக் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளும்; பழக்கம் மூலம்தான் நம்பிக்கை வளரும்; நல்லெண்ணம் வளரும்; நட்பு கால்கொள்ளும், உறவு தழைக்கும்; ஒருமைப்பாடு நிலவும். இந்த இனிய ஒப்புரவுப் பண்பாட்டுக்குத் துணையாகக் கற்கும் மொழிகள் அமைய வேண்டும். எந்த மொழி ஒருவரைப் பலருக்கு உறவாக்குகிறதோ அந்த மொழியை முயன்று கற்க வேண்டும். ஒன்றுக்கும் மேற்பட்ட பல மொழிகளைக் கற்பது மானிடத்திற்கு நல்லது.

    இந்தியா ஒரு பெரிய நாடு. பல மொழிகள் பேசும் மக்கள் வாழும் நாடு. நமது நாட்டிற்கு உணர்வு பூர்வமான ஒருமைப்பாடு தேவை. இந்த ஒருமைப்பாட்டை அவாவி வாழும் ஒழுக்க உணர்வின் வாயிலாகத்தான் உருவாக்க முடியும்; வளர்க்க முடியும். இதற்கு நாம் கற்கும் மொழிகள் துணை செய்தல் நல்லது.

    ஒரு மனிதன் எந்த மொழியைக் கற்பது என்ற வினா எழுமானால் ஐயத்திற்கிடமின்றிக் கிடைக்கக் கூடிய முதல் விடை அவனுடைய தாய்மொழி என்பதே. தாய்மொழியை ஆரம்பக் கல்வியிலிருந்து பல்கலைக் கழகம் ஈறாக ஆய்வு நிலையில் கூடப் பயிற்று மொழியாகவும் எழுதும் மொழியாகவும் இருக்க வேண்டும். இது மனிதவியல் விஞ்ஞானத்தின் தெளிந்த முடிவு. இந்த வகையில் தமிழகம் பின்தங்கியிருக்கிறது என்பதை நாம் உணர்ந்து, தமிழை துறைதோறும் பயிற்று மொழியாகக் கொண்டுவர வேண்டும்.

    அடுத்து, பிற மொழிகளைக் கற்பது என்பது நல்லது; வரவேற்கத் தக்கது. இங்ஙனம் கற்கும் பல மொழிகள் ஆய்வுக்கும் உறவுக்கும் பயன்படும். ஆனால் எந்த ஒரு மொழியையும் மக்கள் விரும்பிக் கற்குமாறு செய்வதே நல்ல மரபு. தமிழ் மக்கள் இந்த ஒப்புரவைக் காணத்தக்க வகையில் இந்திய மொழிகளையும் உலக உறவுகளையும் வளர்த்துக் கொள்ளும் வகையில் உலக மொழிகளையும் கற்க முன்வர வேண்டும். விரும்பிக் கற்பது என்பது எதிரதாகக் காத்துக்கொள்ளும் சமுதாய விழிப்புணர்வுடையோருக்கே உரியது. சாதாரண மக்கள் எளிதில் விழிப்படைய மாட்டார்கள். அவர்களை விருப்புமுறச் செய்வதும் அதற்குரிய நயத்தக்க மரபுகளைக் கடைப்பிடிப்பதும் தவிர்க்க முடியாதவை. இந்தியாவின் முதல் தேவை ஒருமைப்பாடேயாம். இரண்டாவது இடத்திலேயே மொழி இருக்க வேண்டும். இந்த விழுமிய கோட்பாட்டை நினைவிற் கொள்ள வேண்டும்.

    படம் உதவி: https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcSM2FyJ-n1WJDF8yjwhfox-vfQk31dI9UvvQzoX7Zetu1jpb8Me
    _________________________________
    REF: http://www.tamilvu.org/library/nationalized/pdf/47.KUNDRAKUDIADIGALAR/VAZAKAINALAM.pdf
    இது ஒரு நாட்டுடைமையாக்கப்பட்ட நூல், நாட்டுடைமையாக்கப்பட்டது நிதியாண்டு 2007-2008 ல்

    மின்பதிப்பாக்க உதவி: தேமொழி

    Share
  • தேவன் நூறு – தேவன் ஒரு சகாப்தம் – 13

    திவாகர்

    எத்தனைதான் கல்கி அவர்களால் தேவன் பத்திரிக்கை உலகுக்கு அழைக்கப்பட்டிருந்தாலும், தேவனை சற்று உயர்த்தியே பார்க்கிறார் முதுபெரும் எழுத்தாளர் அசோகமித்திரன். ‘அந்தக் காலகட்டத்திலேயே ‘அடுத்த தலைமுறை’ எழுத்தாளராக வாசகர்களால் பார்க்கப்பட்டு தன் எழுத்தால் அத்தனை பேரையும் கவர்ந்திருக்கிறார்’ என்று புகழ் பாடுகிறார்.. தமிழின் சார்லஸ் டிக்கின்ஸாக புகழ் பெற்றவர் தேவன் என்று எழுத்தாளர் அசோகமித்திரன் அவரை  வர்ணித்திருந்தாலும் என்னைப் பொறுத்தவரை எந்தவொரு எழுத்தாளனும் தன்னுடைய தனித் திறமையாலும் சிந்தனையாலும் மாறுபட்டே இருக்கிறான் என்றே சொல்வேன். ஆகையினால் ’இந்த எழுத்தாளர் அந்த சிறந்த எழுத்தாளரைப் போன்றவர்’ என்ற ஒப்புநோக்குதலுக்கு அப்பாற்பட்டு இருப்பவர்தான் நல்ல எழுத்தாளர். அந்த நல்ல எழுத்தாளர் வரிசையைச் சேர்ந்தவர்தான் தேவன்.

    தேவன் எழுத்தில் மிளிர்ந்த ஒரு முக்கியமான தொடர் ‘அப்பளக்கச்சேரி’. இதைப் படித்தவர்கள் இதை எழுதியது தேவன் எனும் ஆண் எழுத்தாளர்தானா அல்லது யாரேனும் பெண் எழுத்தாளர் தேவன் பெயரில் எழுதி வருகிறாரா என்ற சந்தேகம் நிச்சயம் ஏற்படும். காரணம், இந்த அப்பளக் கச்சேரியில் அலசப்படும் சம்பவங்களும், பெண்களின் மனநிலையையும் அப்படியே வெளிப்படையாகப் படம் பிடித்துக் காட்டியிருக்கும் நேர்த்திதான். இப்போதெல்லாம் அப்பளம் இடுவதென்பது குடும்பங்களில் மிகவும் குறைந்து போயிற்றோ என்னவோ.. ஆனால் அந்தக் காலக் கூட்டுக் குடும்பங்களில் அல்லது குழுமக் குடும்பங்களில் இந்த அப்பளமிடுதல் என்பது ஏறத்தாழ வீட்டுப் பெண்டிருக்கு ஒரு பண்டிகை போல இருக்கும். (என் சின்ன வயதில் எங்கள் கிராமத்தில் எனக்கும் பிடித்த நிகழ்ச்சி இது – காரணம்  இந்த அம்மாக்கள் பாராத சமயத்தில் ருசிகரமான அந்தப் பச்சை அப்பள உருண்டைகள் ஓரிரண்டு அப்படியே ‘அபேஸ்’ செய்து சாப்பிடும்  தருணங்கள் விசேஷமானவைதான்).

    தேவனின் ’அப்பளக் கச்சேரியும்’ இந்த பெண்டிர்களின் கலாட்டா கச்சேரிதான். வயதான பாட்டிகளிலிருந்து இளம் வயது கன்னிப் பெண்கள் வரை கலந்து கொண்டு உலக  அரசியல் விஷயங்களோடு அத்தனை வீட்டு வம்புகளுடன், குடும்பம், நோய்நொடி, ஆன்மீகம், பண்டிகை, லேடிஸ் கிளப் கிண்டல்களோடு அத்தனையும் ஒரு விளாவல் விளாவி கடைசியில் ‘ஒரு ரெஸிபி’ யுடன் செய்முறையும் கலந்துரையாடல்களாக நகைச்சுவையாக விளக்கப்பட்டு ஒவ்வொரு தொடர் கட்டுரையும் முடியும். அப்பளக் கச்சேரியில் தேவனின் எழுத்துகள் அந்தக் கால வாசகர்களிடையே மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றதாக இன்னமும் தேவனின் ரசிகர்கள் சொல்லிப் பெருமைப் படுகின்றனர். பெண்கள் உள்மனதில் ஓடும் எண்ணங்கள், அவர்கள் ஏக்கம், அன்பு, பாசம், குமைச்சல், அக்கறை என அவர்கள் உள்ளத்தில் புகுந்து கொண்டு அத்தனை எண்ணங்களையும் வெளிக்கொணர்ந்தது என்பது ஒரு சாதனைதான். ஆழ்கடலில் ஆழத்தை அளந்தாலும் அளக்கலாம், ஆனால் பெண்களின் உள் மன ஆழத்தை யாராலும் அளக்கமுடியாது என சினிமா வசனங்கள் உண்டு. நாமும் நிறைய கேட்டிருக்கிறோம், இதையெல்லாம் பொய்யாக்கியவர் தேவன்.

    அதே போல கடித இலக்கியம் தேவனால் பெருமைப் படுத்தப்பட்டது. அவர் காலத்தில் தமிழ் எழுத்துலகுக்கு சீரங்கத்து சீதனமாகக் கிடைத்த  எழுத்தாளர் ‘குமுதினி’ இராமாயணத்தில் சீதா பிராட்டி  தனக்கு ஒரு பட்டுச் சேலை வேண்டி தன் அம்மாவுக்குக் கடிதங்கள் நகைச் சுவையாக எழுதுவதாக ஆனந்த விகடனில் ஒரு கற்பனைக்கதை வந்தது. குமுதினியும் தேவனும் ஒரே வகை ரத்தம் போல. தேவன் கடிதம் வாயிலாக பல கதை கட்டுரைகள் எழுதியுள்ளார்.

    ஒரு நகைச்சுவை கடிதம் ஒன்று ‘செக்கு சமாசாரம் என்ற தலைப்பில்  ’பணமில்லாத’ வங்கிக் காசோலைப் பற்றியது. இந்த காசோலை கொடுத்த அந்த கடன்காரர் தம் வங்கியில் அதற்கு தேவையான பணமில்லாமையால் முதலில்  வேண்டுமென்றே தவறுகள் வைத்து எழுதிய ‘செக்’ ஒன்றை (ரூ 37 அணா 8 காசு 7 மதிப்பில்) கடன் கொடுத்தவருக்கு அனுப்புகிறார்.. இதற்கான சம்பந்தப்பட்ட அந்த இருவரிடையே கடிதப் போக்குவரத்து போராட்டம்தான் இந்தக் கதை. ஒவ்வொரு கடிதத்திலும் ஒருவரை ஒருவர் நலம் விசாரித்துக் கொள்வதும் குடும்ப நலன்கள் தெரிவிக்கப்படுவதுமல்லாமல் மறக்காமல் தவறான முறையில் எழுதப்பட்ட செக்கை மறுபடியாக சரியாக எழுதி கையொப்பமிட்டு அனுப்புக என்றும் இவர் கேட்பதும், அந்த கொடாக்கண்டர் அவர் பாணியிலேயே கடிதத்தில் உபயக்குசலோபரிகள் செய்து கொள்வதும் அதே சமயத்தில் ஏதோ சின்னத்தவறால் அந்தக் காசோலை அனுப்பிவிட்டதாகவும் எழுதிக் கடைசியில் அந்தக் கொடாக்கண்டர்  இந்த இடைப்பட்டக் கடிதப் போக்குவரத்துக்கிடையே அவர் சௌகரியத்துக்கு வேண்டிய காலம் எடுத்துக் கொண்டு ஒழுங்கான காசோலையை ஒழுங்காக அனுப்பி வைப்பதாக முடியும். இதோ அந்தக் கடைசிக் கடிதம்

    ஸ்ரீமான கில்லாடி சர்மாவிடமிருந்து சீமான் கிட்டி சுட்டி ஐயருக்கு!

    தங்கள் கடிதம் கிடைத்தது. தங்களுக்கு இதுவரை நம்பிக்கை இல்லாமல் இருந்தது ஒருபுறமிருக்க, என்னுடைய ‘செக்’ நான் முதலில் கொடுத்தவுடன் பாங்கிக்குப் போயிருந்தால், அதில் கண்ட தொகையில் ரூ 37-8-7 குறையத்தான் தங்களுக்குக் கிடைத்திருக்கும். அதனால்தான் இவ்வளவு காலதாமதம் செய்யவேண்டி வந்தது… தங்கள் சம்சாரம் குழந்தைகள் சௌக்கியமா?”

    தங்கள் அன்பார்ந்த

    கில்லாடி சர்மா.

    சரசுவுக்குக் கடிதங்கள், போடாத தபால் போன்றவை கடித இலக்கியங்களில் நிரந்தரமாக இருக்கவேண்டியவை. போடாத தபால் என்பதன் பெயரில் இருந்தே புரியும் அவை எப்படிப்பட்டதாக இருக்குமென்பது. இவை அந்தந்த காலகட்டத்தில் நடக்கும் நாட்டு நடப்புகளைக் கவனித்து எழுதப்படும் கடிதக் கட்டுரைகள்தானென்றாலும், ஒவ்வொரு நிகழ்ச்சியின் பேரில் தேவனின் அபிப்ராயங்கள் கூட நமக்கு விளங்க வைக்கும்.  அப்படிப்பட்ட ஒரு சிறிய கட்டுரை ஒன்று இங்கிலாந்து பாராளுமன்றத்தில் டோரிக் கட்சி தாம்தான் இந்தியாவின் சுதந்திரத்துக்கு பூர்வகாரணம் என்று தங்களை பெருமையோடு பேசிக்கொண்டதை தேவன் தன் பாணியில் கிண்டல் செய்கிறார் ஒரு கடிதம் மூலமாக, இதோ உங்களுக்காக தேவன் எழுத்தில் (நன்றி – பேராசிரியர் பசுபதி அவர்கள்)

    டோரிக்கட்சி அங்கத்தினர் திரு ரிச்சர்ட் பட்லர் அவர்களுக்கு

    ஒரு இந்தியன் எழுதிக் கொண்டது:

    பார்லிமெண்ட் சபையில் நீங்கள் எங்கள் தலைவர் நேருஜியைப் புகழ்ந்து பேசியதற்காக தொழிற்கட்சி அங்கத்தினர் மைக்கேல்புட் உங்களை பரிகாசம் பண்ணியதாக பத்திரிகையில் படித்தேன்.”இந்த டோரிக் கட்சி பதவியில் நீடித்திருந்தால் பிரிட்டிஷ் சர்க்கார் நேருஜியிடம் பேச சந்தர்ப்பமே ஏற்பட்டிராது.  ஏனெனில் அந்தக் கட்சி அவரை சிறையில்தான் வைத்திருக்கும்” என்று மைக்கேல்புட் உங்களை ஏளனம் செய்தாராம். அதற்கு நீங்கள் மைக்கேல்புட் இந்தியாவைப் பற்றி நினைப்பதற்கு முன்பிருந்தே அதன் சுயாட்சிக்காக நீங்கள் பாடுபட்டு வந்ததாகவும், இந்திய அரசியல் சட்டம் 1935 இலேயே நிறைவேற்றப்பட்டதாகவும் குறிப்பிட்டீர்கள் என்று அறிந்து கொண்டேன். இந்தியாவிடம் உள்ள உங்கள் நல்லெண்ணத்தை மதித்திருக்கமுடியுமென்றும், இப்படியெல்லாம் வாக்குவாதம் நடந்தது என்றும் படித்தேன்.

    இந்த விவாதத்திலிருந்து எனக்குப் புரிந்ததெல்லாம் இந்தியாவுக்கு சுயராஜ்ஜியம் அளித்ததில் நீங்கள் பங்கு உரிமை கொண்டாடுகிறீர்கள் என்பது. இதை நான் மறுக்கவே இல்லை. ஆனால் இந்திய சுதந்திரத்துக்கான பங்கு உரிமையை நீங்கள் கோரினால் அது உங்களோடு மட்டும் நின்றுவிடமுடியாது. உங்கள் மூதாதையர்கள் பலருக்கும் அதில் பங்குண்டு. உண்மையில் பிரிட்டிஷ் இந்தியாவை ஸ்தாபித்த ராப்ர்ட் கிளைவ், வாரன் ஹாஸ்டிங்ஸ் போன்றவர்களுக்கே முதல் பங்கு கொடுக்கவேண்டும். ஏனெனில் அவர்கள்தான் இந்தியாவின் சுதந்திரத்துக்கு மூலகாரணம்.

    இந்தியாவை அடக்கி ஒரே அன்னிய தேசக் கொடியின் கீழ்  (அவர்கள்) :வைக்கவில்லை என்றால் இந்த நாட்டில் சுதந்திர இயக்கம் நடந்தே இருக்காது. இந்தியா சிறு சிறு ராஜ்யங்களாக அந்தந்த சமஸ்தான மன்னர்களின் கையில் ஒவ்வொரு பகுதியாக இருந்திருக்கும். அவர்களும் தங்கள் சொந்த தேசத்தினரை இந்த அளவு சுரண்டவோ அடக்குமுறையைக் கையாளவோ செய்திருக்கமாட்டார்களாதலால் விடுதலைக் கிளர்ச்சியும் பெரிய அளவில் நடந்திராது. தேசமும் இப்போதுபோல் ஒன்றுபட்டு குடியரசாகி இருக்காது.

    ஆகையால் இந்தியா சுதந்திரம் பெற நீங்களும் உங்கள் தலைமுறையினர் மட்டுமல்ல காரணஸ்தர்கள். முதன் முதலில் இந்தியாவில் உங்கள் ஆட்சியை ஸ்தாபிக்க முயன்றவர்கள் தொட்டு சர்ச்சில் துரை கூட்டத்தார் அனைவருமே காரணஸ்தர்கள்தான். இந்தத் தொழிற்கட்சிக்கு ஒரு சிறு பங்கு கூட கிடையாது என்று நானே ஒப்புக் கொள்ளத் தயார். மறுபடியும் உங்கள் கட்சி பதவிக்கு வந்தால் ஒருவேளை இந்தியா ஒருபடி மேலும் சுதந்திரம் அடையலாம். அதாவது காமன்வெல்த் தொடர்பிலிருந்து கூட அது விலகவிடக் கூடிய நிர்ப்பந்தம் ஏற்படலாம்.

    ஒரு இந்தியன்.

    மேலே எழுதப்பட்ட கடிதத்தை ஊன்றிப்படித்தால் தேவனின் நகைச்சுவை உணர்வுடன் இன்னொன்றும் புரியும். ஏராளமான சிறு சிறு நாடுகளாகப் பிரிந்து தங்களோடு ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டிருந்த நம் இந்திய நாட்டு ராஜாக்களை, அவர்கள் நாடுகளையெல்லாம் ஒன்று சேர்த்த பெருமை இங்கிலாந்துக்குதான் உண்டு என்கிறார். அது உண்மைதானே. பிரிட்டிஷார் வருமுன்னே நம் பாரதத்தில்தான் எத்தனையெத்தனை நாடுகள் இருந்தன. 1911 ஆம் ஆண்டில் இங்கிலாந்து அரசர் ஜார்ஜ் இந்தியத் தலைநகரில் ’ஏகாதிபத்திய சக்கரவர்த்தி’ என முடிசூட்டிக் கொண்ட போது அவருக்குப் பரிசுகள் கொடுக்க போட்டிப் போட்டுக்கொண்டு வரிசை கட்டிய மன்னர்கள் படத்தை திரு ஏ.கே செட்டியார் திரைப்படமாக எடுத்திருக்கிறார். (இதுதான் இந்தியாவிலேயே இந்தியர் அதுவும் தமிழர் எடுத்த முதல் திரைப்படமாகும்)

    தேவன் இந்தக் கடிதக் கட்டுரையில் இந்தியா எனும் தேசத்தை ஒருமித்த குடியரசாக ஒன்று சேர்த்தது பிரிட்டிஷ்தான் என்று பாராட்டியதோடு மட்டுமல்லாமல் கூடவே பிரிட்டிஷாரின் இந்திய வளச் சுரண்டலையும் அடக்குமுறையும் தேவன் கண்டிக்கத் தவறவில்லை என்பதையும் கவனிக்க வேண்டும்.

    ’போடாத தபாலி’ல் எல்லா அரசியல் நாட்டு நடப்புகளையும் அவர் பாணியில் அலசுவதைத் தவறாமல் ஆனந்த விகடனில் பிரசுரித்து வந்தார் தேவன். இப்போதெல்லாம கடித இலக்கியம் என்ற பகுதியே தமிழில் இல்லை என்பது ஒரு வருத்தத்துக்குரிய செய்திதானே.

    அதே போல பயணக் கட்டுரைகள் முக்கியமாக வெளிநாட்டு பயண அனுபவங்களை சுவையாக எழுத்தில் வடிப்பது என்பது சுவாரசியமான கலைதான். ஒரு வெளிநாட்டைப் பற்றி தெரிந்துகொள்வது இயல்பாகவே நமக்குப் பிடித்த விஷயமாகும். ஆனால் சில எழுத்துகள் நமக்கு மறவாத நினைவுகளைத் தருபவை. இந்த நிறைவைத் தரும் வகையில் தேவனின் ஐந்து நாடுகளில் அறுபது நாட்கள் தொடர் ஆனந்தவிகடனில் ஐம்பதுகளில் வந்தது. தெற்காசிய நாடுகளில் இரண்டு மாதம் பயணம் செய்து அந்த அனுபவங்களைத் தொடராக சுவாரசியமாக எழுதினார் அவ்ர். பயணக் கட்டுரைகள் தமிழில் முதல் முதலாக எழுதியது தமிழகத்தின் அன்றைய சாதனையாளராக திகழ்ந்த ஏ.கே. செட்டியார் என்பார்கள். அடுத்து 1930 களின் கடைசியில் கல்கி இலங்கைக்குப் பயணம் செய்து ஆனந்த விகடனில் ஒரு சிறு தொடராக தன் பயண அனுபவங்களை வெளியிட்டார். தேவனின் பயண எழுத்துகள் இயற்கையாகவே நகைச்சுவை கலந்து எழுதப்பட்டதால் தேன் கலந்த பலாச் சுளை போல வாசகர்களுக்கு இனித்தன என்று சொல்லவும் வேண்டுமோ.

    இத்தனை எழுதிய தேவன் ஏன் சரித்திர நாவல்கள் எழுதவில்லை என்று காரணம் கேட்டால் அவர் அல்பாயுசில் மறைந்து போனது மட்டும்தான் காரணம் என்பேன். தென்னாட்டுச் செல்வங்களில் பல கட்டுரைகளை எழுதியவர், அத்தனையும் சரித்திர சம்பந்தப்பட்டவை, புராணக்கதைகளின் அடிப்படையில் செதுக்கப்பட்ட சிற்பங்கள் என நூற்றுக்கணக்கான விஷயதானங்கள் செய்தவர். இப்படிப்பட்ட கலைஞருக்கு, நல்ல கதையாளருக்கு ஒரு சரித்திர புதினம் எழுதுவது கடினமா என்று கேட்டால் யாருமே இல்லை என்றுதானே சொல்வார்கள். சரித்திர ஆராய்ச்சியும், பாரதத்தின் பண்பாட்டில் மிகுந்த அக்கறை கொண்டவருமான தேவன் மட்டும் 44 வயதில் மரணிக்காமல் இருந்திருந்தால் வாசகர்களுக்கு இருந்த இந்தக் குறையையும் நிவர்த்தித்திருப்பார் என்றே நினைக்கிறேன். ஆனாலும் ஒரு சரித்திர சிறுகதை ஒன்று இமயமலையில் ஒரு சிறு படையொன்று பனிக்காலத்தில் சென்று மாட்டிக்கொண்டதைப் பற்றிய கதை எழுதி இருக்கிறார். ஒருவேளை தேவன் தன் வாழ்நாள் குறைவாகவே இருந்தாலும் ’இவர் பழைய சரித்திரமே தொட்டதில்லை’ என்று எதிர்காலம் சொல்லிவிடக்கூடாதே என்பதற்காக அவசரம் அவசரமாக ஒரு கதை எழுதினாரோ என்னவோ.. அது அவரது சிறுவயதில் வாழ்நாள் முடிந்த சோகக்கதையைப் போலவே இந்த சிறுகதையும் அவரின் இயற்கையான ஹாஸ்யநடை இல்லாமல் சோகத்தில் முடிந்தது.

    (இன்னும் வரும்)

    Share
  • அறுமுகநூறு (5)

     

    -சச்சிதானந்தம்

     

    அச்சமுற்ற நெஞ்சம் அரகரா என்றிடட்டும்,

    அப்பனுற்ற பணிவைப் பணிவோடு கொண்டிடட்டும்,

    அப்பழுக்கு அற்று அன்புமனம் அமைந்திடட்டும்,

    அக்கினிக்கு ளுற்ற அறுமுகனைக் கொஞ்சிடட்டும்!                                                             21

     

    அச்சம் கொடுத்தான், அன்பைக் கொடுத்தான்,

    அத்தன் படைத்த அறிவைக் கொடுத்தான்,

    அல்லல் கொடுத்து, உள்ளத் தெளிவை,

    அள்ளிக் கொடுத்து அகிலம் காத்தான்!                                                                         22

     

     

    வடிவேலன் முகம்காணப் படியேறி வருவோம்,

    நெடியேறும் சந்தனக் காவடிகள் சுமப்போம்,

    கடிவாளம் இல்லாத மனதினைக் காக்க,

    அடியேனுன் னடியினில் அடிமையாய் ஆவோம்!                                                           23

     

    கந்தவேள் கண்களைக் காணு மென்னம்,

    வந்ததால் பூத்திடும் எண்ண மென்னும்,

    சிந்தையைக் குன்றெனக் கண்டு கந்தன்,

    வந்தமர்ந் தருளுவான் உள்ள மெங்கும்!                                                                         24

     

    கந்தனைப் பாடிடும் சந்த மெல்லாம்,

    வந்தெனைக் கூடிடும் சொந்த மென்று,

    பந்தமும் பாசமும் மேவி நின்று,

    விந்தைகள் செய்வது மாய மன்று!                                                                                  25

     

    படத்துக்கு நன்றி: http://www.kaumaram.com/pics/murugan_contents.jpg

     

    Share
  • ஓயாத மாற்றங்கள்

    விஜயன்

    உருட்டும் சத்தம் கேட்டது. தூக்கம் என் கண்களை விட்டுப் பிரிய, அதே வினோத ஒலி வழக்கம் போல் ஒலிக்கத் துவங்கியிருந்தது. கண்களோரம் ஒட்டியிருந்த அழுக்கைத் துடைத்தேன். கொட்டாவி வந்தது. தூக்கம் போதவில்லையோ என்று தோன்றிய சிந்தனை, படுக்கையை விட்டு எழுந்தவுடன் தானாய் மறைந்தது.

    அறைக் கதவை திறந்தேன். சமையல் வாசனை வீட்டை நிறப்பிக் கொண்டிருந்தது. அம்மா சமையல் செய்து கொண்டிருக்கிறார் என்பதன் அடையாளம் அது. உறக்கத்தை விட்டு எழுந்திருக்கவே சிரமப்படுகிறேன், அம்மா எப்படி முன்பே எழுந்து, சமையல் செய்து, அப்பாவிற்கு பணிவிடை செய்து, தானும் வேலைக்கு கிளம்புகிறார்?

    சிந்தனையுடன் வாசல் கதவைத் திறந்தேன். குளிர்காற்று முகத்தை வருடியது. நெஞ்சுக்குள் ஏதோ ஓர் இனம் புரியா உணர்வு மேலிட்டது. காலணி அணிந்து, மெல்ல நடந்தேன். பௌர்ணமியின் ஆதிக்கம் முழுமையாக இருந்தது. அவ்வற்புதக் காட்சியினைக் கண்டு இரசித்தேன். பக்கத்து வீட்டைப் பார்த்தேன். வீட்டு வாசலில் சுப்பையா தாத்தா அமர்ந்தபடியே நிலவை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். அவர் அருகே ஒரு நாயும் அமர்ந்திருந்தது.
    “எப்படி தாத்தா இருக்கிங்க?” நான் வேளியருகே சென்றுக் கொண்டே, நலம் விசாரிக்கும் சாக்கில் அவரோடு உரையாட முயன்றேன். வழக்கம் போல் விடக்கென எழுந்து வீட்டினுள் சென்று தாழிட்டுக் கொண்டார். ஆனால் இம்முறை, என்னைப் பார்த்து ஒரு கனம் முறைத்தார். எனக்கு திக்கென்று இருந்தது.
    சுப்பையா தாத்தாவிற்கு இப்பொழுது ஏறத்தாழ அறுபத்தைந்து வயதிருக்கும். முன்பு ஆசிரியராகப் பணிப்புரிந்தவர். சீரான உடை, சிறந்த பண்பு என்று என்றும் ஒரு ஆசிரியனாக்வே வாழ்ந்தவர். அவருடைய மகனும் மகளும் ரஷ்யாவில் மருத்துவம் பயின்றனர். அவர்களுடைய படிப்பிற்கும் இதர செலவிற்கும் கடன்பட்டு செலவளித்தார். மனைவி முனியம்மாள் இல்லத்தரசி. மென்மையான அகமும் முகமும் கொண்டவர்.
    சுப்பையாவிற்கு மாதந்தோறும் பென்ஷென் வந்தாலும், வீட்டில் தனி வகுப்பு நடத்தி வருமானத்தைப் பெருக்கினார். அப்பொழுதெல்லாம் அவரைக் கண்டாலே எனக்குள் ஒரு வகை பயம் தோன்றும்.

    சில ஆண்டுகளுக்கு முன்பு, சுப்பையா தாத்தாவிற்கு, குடல் நோய் ஏற்பட்டது. வெளிநாட்டில் மருத்துவம் பெற்று சில நாட்களிலே குணமடைந்தார். சில மாதங்கள் கழித்து, ஒரு முறை அவர் என் அப்பாவோடு பேசிக் கொண்டிருக்கையில், திடீரென இறும்பினார். அதில் இரத்தம் கசிந்திருந்தது. இறுமியவர் மயக்கமிட்டு விழுந்தார். இம்முறை மருத்துவம் பலனலிக்காது போனதுமட்டுமல்லாது அவருக்கு ஆயுள் காலத்தையும் கனித்துக் கொடுத்தது. டியூசன், அதிகாலை வாக்கிங் என்று ஒவ்வொன்றாக நிறுத்தினார், சுப்பையா தாத்தா. வீட்டில் சிறைவாசம் அனுபவித்தார். நாளுக்கு நாள், அவர் உடல் மெலிந்து கொண்டே போனது. கணவனின் நிலையை எண்ணி,எண்ணி, முனியம்மாளும் நோய்வாய்ப் பட்டாள். ஒரு நாள் நள்ளிரவில் அழுகைச் சத்தம் பெரிதாய் ஒலித்தது. அது சுப்பையா தாத்தாவின் குரல் தான். நானும் அப்பாவும் சென்று பார்த்தோம். முனியம்மாள் இறந்திருந்தார். மனைவியை மடியில் கிடத்தியபடியே சுப்பையா விம்மி விம்மி அழுதார்.

    முனியம்மாளுக்கு ஈமச் சடங்குகள் முடிந்த பிறகு, சுப்பையாவின் மகனும் மகளும் அவ்விடத்தை விட்டு மறைந்தனர். சுப்பையா நாதியின்றி நின்றார். சில நாட்கள் வீட்டிலேயே இருந்தார். அப்பா மாலையில் அவருக்கு உணவு கொடுத்து ஆறுதலாக சற்று உரையாடிவிட்டு திரும்புவார். ஒருமுறை உணவு கொண்டு சென்றவர், அப்படியே அதை மீண்டும் வீட்டிற்கே கொண்டு வந்தார்.

    “ஏங்க?..என்னாச்சி?..அப்படியே இருக்கு?” அம்மா ஆச்சரியத்தோடு வினாவினார்.

    “தெரியல!…சாப்பாடு கொடுத்தேன்,..வேணாம்னு சொல்லிட்டாரு!…கடையில சாப்புட்டாரம்!..”

    அப்பாவின் முகத்திலே பல விடையறியா கேள்விகள் பிரதிபலித்தன.

    “வேணாம்னா விடுங்க,..நம்ப என்னா செய்ய முடியும்?!..” சலித்துக் கொண்டே, அம்மா சமையலறைக்குச் சென்றார்.

    ஒரு பகலில் மீன் பிடிக்க நண்பர்களோடு சென்று கொண்டிருந்தேன். ஆச்சோங் தோட்டத்தை ஒட்டி ஒரு ஆறு உள்ளது. அதில் விரால் மீன்கள் அதிகம் கிடைக்கும். தோட்டத்தையொட்டியப் படியே நடந்தேன். தோட்டத்தில் சுப்பையா தாத்தா காய்ந்த இலைகளைப் பெருக்கிக் கொண்டிருந்தார். மாலையில், அப்பா வந்ததும் கண்டதைக் கூறினேன்.

    “அதெல்லாம் போய் அவருகிட்ட கேட்காத!..புரியுதா?!” என் விழிகளை நோக்கியபடியே கட்டளையிட்டார்.
    ஏன் என்று கேட்க துணிவில்லாமல் சரியென்று தலையசைத்தேன். சில நாட்களில் அப்பா ஷிஃப்ட் வேலை செய்ய நேரிட்டது. காலை ஆறு மணிக்கு சென்று இரவு ஒன்பது மணியளவில் வீடு திரும்புவார். சுப்பையா தாத்தா பேசவும் ஆளின்றி தனித்துப் போனார்.

    சில நாட்கள், சுப்பையா தாத்தா வீட்டிலேயே இருப்பதைப் பார்த்தேன். வேலை நிறுத்தம் கொண்டார் என்று எண்ணினேன். மாலையில் காற்பந்து விளையாடி முடித்தவுடன், நண்பர்களோடு பேசிக்கொண்டிருந்தேன்.

    “டேய், விஷயம் தெரியுமா?.. அந்த கிழவன அச்சோங் போட்டு உறிச்சிட்டானாம்!!!” மணி கூறியதும் என் மனதில் பகீரென்று இருந்தது.

    “ஏண்டா அடிச்சான்?” முருகன் ஆவலாய் கேட்டான்.

    “காசு திருடிருக்கான்!!..” மணி சிரித்துக் கொண்டே கூறினான்.

    “வாங்கட்டும்! திமிறு டா அந்த கிழவனுக்கு!! எங்கப்பாவையே போடானு சொல்லிருக்கான்!…எங்கம்மா தடுத்துட்டாங்களாம்,..இல்லைனா அப்பவே உழுந்துருக்கும்!” முருகன் பெருமையாய்க் கூறினான்.

    என் மனதில் உறுத்தல் அதிகரித்த வண்ணமாய் இருந்தது. உடனே அவ்விடத்தை விட்டுக் கிளம்பினேன். நாளை இறக்கப் போகும் கிழவனை அடித்து ஆண்மையைக் காட்டும் வீரர்கள். மனதுள் அவர்களை எண்ணி வருந்தினேன்.

    மறுநாள் மாலையில், வீட்டின் முன் புற்கள், தினமும் நீர் ஊற்றாமல், உரமிடாமல், பாதுகாக்காமல் போனாலும் நன்கு செழித்து வளர்ந்திருந்ததால் அவற்றை முடிந்தவரை அழித்துக் கொண்டிருந்தேன். ஓர் மூலையில் யாரோ பார்ப்பது போல விழியோரத்தின் பிம்பம் தோன்றியது. திரும்பிப் பார்த்த போது, அங்கு சுப்பையா தாத்தா என்னை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். எனக்கு சற்று உருத்தலாக இருந்தது. மண்வெட்டியை நிற்க வைத்துவிட்டு, கையுறையை அகற்றிவிட்டு, மெல்ல அவரை நோக்கிச் சென்றேன். நான் நெருங்கி வரும் வரை, என் பட்ட பார்வையிலேயே ஆழ்ந்திருந்தார் போலும் கண்கள் அசையவில்லை.

    “என்ன தாத்தா?…” என்று வேறு என்ன பேசுவது என்று கன நேரத்தில் சிந்தனை செய்து கொண்டிருக்கையில், அவர் ஏதோ கூற முயன்றார். நீண்ட நாள் பசைபட்டு போன அவருடைய உதடுகள் மெல்ல வார்த்தைகளை உதிர முயற்சித்தது. தனக்குள் ஏதோ ஒன்று தடுக்க, திறந்த வாய் மௌனத்தோடு மூடியது.

    “என்னாச்சி தாத்தா?!” அவருடைய தயக்கத்தை உடைக்க முயன்றேன்.
    சுப்பையா தாத்தா ஏதும் பேசவில்லை. ஆனால் என் மேல் விழுந்திருந்த பார்வை மட்டும் அகலாமல் இருந்தது. வேலியின் மேல் இருந்த அவருடைய கையைத் தொட முயன்றேன். என்க்குள் ஏதோ ஒரு கலக்கம் தடுத்தது. என் கை விலகுவதை சுப்பையா தாத்தா பார்த்தார். அவர் கண்களில் கண்ணீர் கசியத் தொடங்கியது. என்னையும் அறியாமல் என் கண்கள் கண்ணீர் உதிர முயன்றது. என் கண்களில் கண்ணீர் பொங்குவதைப் பார்த்ததும், அவ்விடத்தை விட்டுச் சென்றார். வீட்டின் கதவை தாழிடும் முன் மீண்டும் ஒரு முறை என்னைப் பார்த்தார். அவருடைய பார்வையின் அர்த்தம் எனக்குப் புரியவில்லை.
    ஞாயிற்றுக் கிழமை. விடுமுறை என்பதால் மாமா வீட்டிற்கு செல்லத் தயாரானோம். கிளம்புகையில் அப்பா, சுப்பையா தாத்தாவை அழைத்தார்.

    “போடா!..” ஏசியபடியே சுப்பையா தாத்தா வீட்டிற்குள் சென்று தாளிட்டார்.

    “இதுக்கு மேல அந்த ஆளுகிட்ட நீங்க பேசாதிங்க!!!” அம்மா கொதித்தார்.

    அப்பாவின் முகத்தில் வியப்பும் கவலையும் குடி கொண்டிருந்தது. இரண்டு நாட்கள் கழித்து வீடு திரும்பினோம். சுப்பையா தாத்தா வீடு திறந்திருந்தது ஆனால் ஆள் காணவில்லை.

    இன்று காலையில், சுப்பையா தாத்தா உள்ளே சென்று தாளிட்டுக் கொண்டார். “ஏது அந்த நாய்?.. எதற்காக நாய் வளர்க்க ஆரம்பித்து விட்டார்?…” எனக்குள் கேள்விகள் பிறக்கத் தொடங்கின.

    மாலையில், விளையாடிவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். மணியனும் முருகனும் சுப்பையா தாத்தா வீட்டை நோக்கி கல்லெரிந்துக் கொண்டிருந்தனர். உடனே அவர்களை நோக்கி விரைந்தேன்.

    “என்னாடா பன்றீங்க?!!”
    “இல்லடா,…அந்த நாய் எங்கள பார்த்தாலே கொலைக்குது! தோ பாரு!! அத!…” கல்லை மீண்டும் ஓங்கினான். நான் அவன் கையிலிருந்த கல்லைப் பிடுங்கிக் கொண்டேன்.

    “டேய், இப்ப ஒழுங்கா போறீங்களா, இல்ல உங்க அப்பாகிட்ட வந்து சொல்லட்டுமா?..” இருவரையும் மிரட்டினேன்.

    “தோடா!.. வாடா முருகா போலாம்!…அய்யாவுக்கு நாய் மேல ரொம்பதான் பாசம்!…”
    இருவரும் என்னை முறைத்தபடியே சென்றனர். ஏன் அப்படி நடந்தேன் என்று எனக்கேத் தெரியவில்லை. சுப்பையா தாத்தா கதவைத் திறந்து நாயை கட்டியணைத்தபடியே உள்ளே கொண்டு சென்றார்.

    இரவில், சுப்பையா தாத்தாவின் இரும்பல் சத்தம், அமைதியை குலைக்கத் தொடங்கியது. நள்ளிரவிலும் இரும்பல் சத்தம் நின்றபாடில்லை. நான் எவ்வளவோ முயன்றும் என்னால் படிக்க முடியாமல் போனது. புத்தகத்தை மூடியதோடு கண்களையும் மூடிக் கொண்டேன். இன்று தூங்க முடியுமா என்று எனக்குள் ஐயம் முழைத்தது.
    பொழுது புலர்ந்தது. எப்பொழுது தூங்கினேன் என்று சிந்தித்தேன். ஏதும் அகப்படவில்லை. மீண்டும் காலையை இரசித்தேன். சுப்பையா தாத்தாவின் இரும்பல் சத்தம் இல்லாதிருந்தது. பள்ளிக்குக் கிளம்பினேன். பள்ளியில் திடீரென சுப்பையா தாத்தாவின் ஞாபகம் வந்தது.
    மாலையில் வீடு திரும்புகையில், சுப்பையா தாத்தா வீட்டைப் பார்த்தேன். வீட்டுக் கதவு திறக்காமலே இருந்தது. நாயும் காணவில்லை. என் வீட்டினுள் புகுந்தேன். அவ்வப்போது வெளியில் வந்து பார்த்தேன். கதவு திறந்தபாடில்லை. பொழுது சாய்ந்தது. அம்மாவும் அப்பாவும் வீட்டிற்கு வந்தனர்.

    “அப்பா,…” உணர்ச்சிவசப்பட்டதில் அருகே அம்மா இருப்பதை மறந்து, விவரத்தைக் கூற முயன்று, சட்டென நிறுத்தினேன்.

    “என்னாது சொல்லு,..” அப்பா கண்டிப்பாய் கேட்டார்.

    “அப்பா, காலைலேந்து சுப்பையா தாத்தாவ காணும்! வீடு பூட்டியே இருக்கு!!”

    “அது உள்ளையே இருக்கும்!!” என்று அம்மா கூறிவிட்டு சலித்துக் கொண்டே நகர்ந்தார். அப்பா என் தோளை தட்டிக்கொடுத்து அறைக்குச் சென்றார். உணவு உண்டபின் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தோம். அப்பா எழுந்து அறைக்குச் சென்று சட்டை அணிந்து வந்தார்.

    “கைலாம்பு எடு!” அம்மாவிற்கு உத்தரவு பிறப்பித்தார்.

    “இப்ப எதுக்குங்க?…” அம்மா வினாவியபடியே எடுக்கச் சென்றார்.

    “போய் பார்த்துட்டு வந்துர்றேன்!” அப்பா கூறியதற்கு இம்முறை அம்மா மறுப்பு தெரிவிக்கவில்லை.
    நானும் அப்பாவும் சுப்பையா தாத்தா வீட்டின் கதவைத் தட்டினோம். நீண்ட நேரம் அழைத்தும் பதில் இல்லை. அப்பா உரக்க அழைத்தார். சத்தம் கேட்டு எதிர் வீட்டிலுள்ள கோபாலு மாமாவும் அவர் மனைவியும் வந்தனர்.

    “கதவ ஒடைங்க!” என்று கூறியபடியே கதவை எட்டி உதைத்தார், கோபால்.
    படாரென கதவு திறந்தது. வீட்டின் உத்தரத்தில் புடவையில் தூக்கிலிட்டபடியே தொங்கிக் கொண்டிருந்தார் சுப்பையா தாத்தா. தற்கொலை செய்து கொண்டாரா என்று என் மனம் அதிர்ந்தது. அக்காட்சினைக் கண்டதும், கோபாலின் மனைவி ஆவென கதறி ஊரைக் கூட்டினாள். காவல் துறைக்கும் மருத்துவத் துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சுப்பையா தாத்தாவை வெறித்துப் பார்த்தேன். வாய் முதல் வயிறு வரை இரத்தம் வடிந்து காய்ந்திருந்தது. வீட்டில் ஆங்காங்கே இரத்தம் சிந்தியிருந்தது.

    “நேற்றே இறந்திருப்பாரோ?…” எனக்குள் புது சந்தேகம் பிறந்தது.

    காவல் அதிகாரிகள் படம்பிடித்து, தகவல்கள் சேகரித்து முடித்தவுடன், சுப்பையா தாத்தாவின் உடல் மருத்துவமனை வண்டியில் கொண்டு செல்லப்பட்டது. வீட்டை விட்டு வெளியாகுகையில், ஏதோ ஒன்று என் பார்வையை என்னையும் அறியாமல் ஈர்த்தது. என்னவென்று நோக்கினேன். அங்கு, மூலையில் சுப்பையா தாத்தாவின் நாய் வாயில் நுரை தள்ள இறந்திருந்தது.

    ……………………………………………………….முற்றும்…………………………………………………

    Share
  • உச்சத்தில் உழவு

     

    மாதவன் இளங்கோ

     

    உணவு தின்றுக் கருவுக்கு

    குருதி தருவாள் – ‘தாய்!’

    தன்குருதி தந்து உலகோர்க்கு

    உணவு படைப்பான் – உழவன்’!

     

    நிலமென்னும் கருவறையில் விதைவீசி

    உயிர்கொடுத்து உடல்வேர்க்க உழவுசெய்து

    உலகுக்கே உணவு படைத்தவனின்று

    சுருங்கிப் போனத்தன் வயிற்றிற்கே

    ஒருவேளைச் சோறின்றி வாழ்ந்திருக்க,

    எங்கனம் செய்வான் அவன் உழவு?

    அன்றாடம் அவன் வீட்டில் இழவு!

    பொய்த்துப்போன மழை,

    வற்றிப்போன கிணறுகள்,

    பாலையாகக் காட்சிதரும் ஆறுகள் – அந்தப்

    பாலையின்மேல் பதிந்திருந்த ஆறுகளின்

    பாதச் சுவடுகளைச் சுரண்டியதால்

    வெளித்தெரியும் களிமண் என

    இத்தனையும் மீறி

    அறுவடைக்கு எட்டிப்பார்த்த

    பயிர்களையும்

    வனப்புடனே வளர்ந்து நின்ற

    வாழைமரங்களையும்

    காணாமல் செய்துவிட்ட

    கோரப்புயலென்று

    எத்தனைதான் வேதனைகள் அவனுக்கு?

    மலடாகிப்போனது அவன் மண்ணல்ல!

    பாரபட்சம் காட்டும் அந்த

    அகண்ட வானமும்

    நீர்மறுக்கும் அண்டை மாநிலத்தின்

    நெஞ்சமும்தான்!

    கருவறையில் கல்நட்டு

    கட்டங்கட்டி விற்றுவிட்டான்

    வயிற்றுக்காக மட்டும் அன்று!

    வானம் பார்த்த பூமியின் மேலெழுந்து

    வான்தொட்டு நிற்குமந்த

    அடுக்குமாடிக் கட்டிடங்கள் மீதேறிச் சென்று

    மழைவேண்டி யாசிக்கலாமே என்று!

    வேண்டியும் பலனில்லை என்றால்

    வீழ்ந்து மாய்க்கலாமும் என்று!

    இப்படித்தான் நிற்கிறார்கள் –

    உச்சத்தில் உழவனும்,

    மரணத்தின் விளிம்பினில் உழவும்

    இன்று!

    Share
  • நல்வாழ்க்கை வாழ வழிகாட்டிகள் – தொடர்-28

    பெருவை பார்த்தசாரதி

    மனித சமுதாயம் முன்னேறும் விதமாக வாழ்ந்து காட்டிய அறிவாளிகள், சாதனையாளர்கள், ஆன்றோர்கள், சான்றோர்கள், மாமேதைகள் இவர்களின் வெற்றி வழியைப் பின்பற்றிதான், பலர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள், வாழ முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். பல்வேறு துறையில் சிறந்து விளங்கி ஒவ்வொரு நூற்றாண்டிலும், தோன்றி மறைந்த மாமேதைகள் பலர் பின்வரும் சந்ததியினருக்கு அன்புடன் வழிகாட்டினார்கள் என்கிறது வரலாறு. பயணம் தொடர பாதை முக்கியம் என்பதுபோல, வழிகாட்டுதல் இன்றளவும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

    “அன்பில்லாதவர்கள் தமக்காகவே தமது வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறார்கள். பிறரிடத்தில் அன்புடையவர்கள் தமது வாழ்க்கையை பிறருக்காக அர்ப்பணிக்கின்றனர்” என்கிறார் தோழர் விலாடிமிர் லெனின். பிறருக்கு வழிகாட்டுகின்ற பலர், ஒரு வகையில் அன்புக்குக் கட்டுப்பட்டவர்களாக இருந்திருந்திருக்கலாம் என்ற நோக்கில், லெனின் அவர்கள் இதைச் சொல்லி இருப்பார் போலும்….இதைப்பற்றிய சிந்தனையை மேலும் விரிவாக்கும்போது, ஒரு சில கேள்விகளும் நம் மனதில் எழுகின்றது.

    நாம் எவ்வளவோ பேரிடம் அன்றாடம் பழகுகிறோம்.  அவ்வளவு பேரும் நம்மிடம் அன்பு செலுத்துகிறார்களா?…….

    எல்லோரிடத்திலும் நம்முடைய சொந்த விஷயங்களைப் பகிர்ந்து கொள்கிறோமே, உண்மையில் அவர்கள் எந்தக் கண்னோட்டத்தோடு அதைப் பார்க்கிறார்கள்?…….

    சொந்த விஷயங்களை, பிறரிடம் அன்னியோன்யமாகப் பகிர்ந்து கொண்டாலும், அவர்கள் அதைப் பொருட்படுத்துவார்களா?….

    பல மணி நேரங்கள் பொருமையாக நம்முடைய சொந்தக்கதை, சோகக்கதை இவற்றையெல்லாம் கேட்டவரிடமிருந்து, ஒரு சில நிமிடமாவது அன்பான, இரக்கமான ஆறுதல் வார்த்தைகளை எதிர்பார்க்கமுடியுமா?……..

    ஏழையின் கூக்குரலை பணக்காரர்கள் ஏற்றுக்கொள்கிறார்களா?

    அலுவலகத்தில் பொருப்பான உயர் பதவி வகிப்பவர்கள், என்றாவது ஒரு நாளாவது, சக ஊழியர்களுடைய துக்கத்தில் பங்கு கொண்டு, துன்பம் நேருகின்ற சமயத்தில், அன்பு செலுத்தி ஆறுதல் சொல்லி ஊக்கப்படுத்துபவர்கள் எண்ணிக்கையில் ஒரு சிலரே என்பது அனுபவத்தில் காணும் உண்மை.

    இந்நாளில், நண்பர்களோ, உறவினர்களோ, ஒருவருக்கு ஒருவர்  சுகதுக்கங்களில் பங்கெடுத்துக்கொண்டு அவ்வப்போது அறிவுரையோ?……..ஆறுதலோ?……சொல்லிக்கொள்கிறோமா?…..

    இத்தகய கேள்விகளுக்கு, இன்றளவும் பதில் தேடிக்கொண்டுதான் இருக்கிறோம்.

    வெளியூரிலிருக்கும் மிக நெருங்கிய உறவினர் அல்லது நண்பர் இறந்து விட்ட செய்தி அறிந்தும்கூட உடனடியாகச் சென்று துக்கம் விசாரிப்பவர்கள் ஒரு சிலரே எனலாம். உடனடியாகச் சென்று  சோகத்தில் மூழ்கியிருக்கும் அக்குடும்பத்திற்கு ஆறுதல் சொல்லாமல், ‘ ஒரு முக்கியமான வேலை இருந்தது, உடனே போக நேரமில்லை’ என்று காலம் கடந்து வரும் பதிலே அநேகரிடமிருந்து வரும் பதிலாக இருப்பதை நம் அனுபவத்தில் காண்கிறோம்.

    பொதுவாக மேலேழுந்த கேள்விகளுக்கெல்லாம் நம்முடைய உள்மனது என்ன பதில் தரும். ஆறுதல் வார்த்தை என்பது நம்மில் எத்துணை பேருக்கு உதிக்கிறது அல்லது உதவுகிறது. ஆறுதலோ அறிவுரையோ சொல்லி, தக்க சமயத்தில், யாருக்காவது நாம் நல் வழிகாட்டியிருக்கிறோமா?..பிறரால் கடும் துயரத்துக்கும், வேதனைக்கும் ஆளாகியிருக்கும் இருக்கும் ஒருவரது மனம் நொந்து போயிருக்கும் சந்தர்ப்பங்களில், ஆறுதல் சொன்னால், பாதிக்கப்பட்டவருடைய பலவீனமான இதயம் பலப்படும் என்பது மருத்துவத்தில் கண்டறிந்த உண்மை.

    ஆறுதல் சொல்லக்கூடிய மனப்பக்குவத்தைப் பெற்றவனை, உதவும் எண்ணமுள்ளவனை ‘இளகிய நெஞ்சம் படைத்தவன்’ என்று சொல்வதில்லையா.   இதைத்தான் கவியரசு அவர்கள் அர்த்தமுள்ள இந்துமதத்தில் “இதயம் என்று எடுத்துக்கொண்டாலே ‘கனிந்த உள்ளம்’ என்ற பொருள் மறைந்தே இருக்கும். அவற்றில் இரக்க குணமும் இதயத்தை சார்ந்தே சொல்லப்படுகிறது. கல்நெஞ்சக்காரனை “இதயமில்லாதவன்” என்றே கூறுகின்றோம்” மேலும் நிரந்தரமற்ற நம் வாழ்வில் எவரும், எப்போதும் இல்லாமல் போகலாம், இப்படி இருக்கையில், ஒருவர்மேல் ஒருவருக்கு எதற்கு தேவையற்ற ஆதங்கங்கள், கோபங்கள், துவேஷங்கள்?……என்று மிக அருமையாக இதயத்தைப் பற்றி இதமாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

    கடந்த வருடங்களில், ஒரு மூன்று நிமிட நேரத்திற்குள், ஆழிப்பேரலை (tsunami) பல ஆயிரம் பேர்களை அள்ளிக்கொண்டுசென்றபோது, எண்ணற்ற உயிர்கள் பலியாயின. இறந்த உடல்கள் அனைத்தையும் ஒரே இடத்தில்தான் எரியூட்ட முடிந்தது. பெற்றோர்களை இழந்த குழந்தைகள், சகோதரனை இழந்த சகோதரிகள் இப்படி பாதிக்கப்பட்டவர்களையெல்லாம் தூக்கி நிறுத்தி மறுவாழ்வு கொடுத்ததை உலகமே கண்ணுற்றதல்லவா?……ஒவ்வொரு மூலையிலிருந்தும் மற்றவர்கள் ஆறுதல் என்ற பலத்தைக்கொடுத்ததால்தான் இன்றும் பலர் உயிர் வாழ்கிறார்கள்.

    உலகத்தில் நடக்கின்ற பலவிதமான கொடுஞ்செயலுக்கெல்லாம் ஆளாகி வருந்துகின்ற மனிதர்களுக்கு, ஆறுதல் ஒன்றே மறுவாழ்விற்கு உறுதுணையாக அமைகிறது என்பதே உண்மை.

    திடீரென்று நிகழும் ஒரு அசம்பாவிதம், சட்டென்று முடிந்துவிடும் மரணம், எதிர்பாராத பேரதிற்ச்சி போன்றவைகளால் நம்முடைய மூளையில் ஒருவித அமிலம் சுரந்து, மூளையைச் செயலிழக்கச் செய்கிறது என்பது ஆராய்ச்சியாளர்களின் கருத்து. இம்மாதிரி சந்தர்ப்பங்களில், தாங்கமுடியாத துயரத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் மரணத்தைக் கூட சந்திக்க நேரிடுமாம். இதைத் தவிர்ப்பதற்கு ‘ஆறுதல்’ வார்த்தைகளும், சமாதானமும் அருமருந்தாகச் செயல்படும் என்பதும் உண்மை.

    பட்டாசுத்தொழிற்சாலை, பள்ளிகள், திரையரங்குகள், இப்படி பலர் கூடும் இடத்தில் தொடர்ந்து ஏற்படும் தீவிபத்துகள் மற்றும் ரயில் விபத்துக்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, பொதுநலத்தொண்டு புரிபவர்கள், இரக்ககுணம் மிக்கவர்கள், பரிவு காட்டுபவர்கள் அன்றாடம் ஆறுதல் சொல்லிக்கொண்டேயிருக்கிறார்கள். இதிகாசங்களில் இறைவனுக்குக்கூட சில சந்தர்ப்பங்களில், தர்ம சங்கடமான நேரங்களில், ‘ஆறுதல் வார்த்தைகள்’ அவசியமானது என்பதைத் தெரிந்து கொள்வோம்.

    சப்தரிஷிகளில், ப்ருகு மகரிஷிக்கு அக்னிதேவன் சகோதரனாவார். ஒரு சமயம், அவர் மனைவி கருவுற்றிருக்கும்போது, அவளைப் பாதுகாக்க அக்னிதேவனுக்குக் கட்டளையிட்டிருந்தார்.

    ராட்சதன் ஒருவன், அவளை அபகரிக்கத் திட்டமிட்டான். மகரிஷி இல்லாத சமயத்தில், அக்னிதேவனையே தன் பேச்சுத்திறமையால் மடக்கி, அவளை அபகரித்துக் கொண்டான். ராட்சதனின் பிடியிலிருந்த மகரிஷியின் மனைவி, ஒருவாறு பலவந்தமாக தன்னை அவனிடமிருந்து விடுவிக்கும் தருணத்தில், அங்கே ஒரு அற்புதம் நிகழ்ந்தது. அவள் பிரகாசத்துடனும், பேரொளியுடனும் தோன்றிய ஒரு ஆண்மகவைப் பெற்றெடுத்தாள். பேரொளியின் கதிர்வீச்சைத் தாங்கமுடியாத ராட்சதன் சாம்பலானான். பேரொளியையும், பிரகாசத்தையும், சக்தியையும் ஒருங்கே பெற்ற இவனே “ச்யவனன்” என்ற பெயரால் அழைக்கப்பட்டான். இதனால்தானோ என்னவோ, ஆயுர்வேத மூலிகையால் ஆன, உடலைத் தேற்றுகின்ற பல வஸ்துக்களில் ஒன்றாகிய லேகியமும் இப்பெயருடன் இன்று வியாபாரமாகிக் கொண்டிருக்கிறது.

    ஞானதிருஷ்டியினால், நடந்ததை அறிந்த ப்ருகு முனிவருக்கு, தன் மனைவியைப் பாதுகாக்கத் தவறிய அக்கினிதேவன்மீது அளவுகடந்த கோபம் உண்டானது. “அக்னிதேவனே நீ யாகங்களுக்கும், ஹோமங்களுக்கும் நற்தீயாகச் செயல்பட்டாலும்,  இனி நீ தீயசெயல்களுக்கும்  காரணமாகி, இழிந்த நிலையை அடைந்து, உன்னைக்கண்டாலே எல்லொரும் பயந்து ஓடுவார்கள். என்னுடைய மனைவியைக் காக்கத் தவறிய நீ இத்தகய நிலையை அடைவாய். அனைத்து ஜீவராசிகளும் உன்னை வேண்டும்போது மட்டுமே சேர்த்துக்கொள்வார்கள்!…..என்று சாபமிட்டார்.

    பஞ்ச பூதங்களில் ஒன்றாகிய அக்னி இல்லாமல் உலகம் உய்ய முடியுமா?…நிலமையை அறிந்த படைப்புக் கடவுளான ப்ரம்மா, அக்னிதேவனுக்கு ஆறுதல் சொல்ல ஓடோடிவந்தார். அவன் பெற்ற சாபத்தில் திருத்தம் பல செய்து, மனம் வருந்திய அக்னிதேவனுக்கு பின்வருமாறு ப்ரம்மா சமாதானப் படுத்தியதாக மகாபாரத்தில் ஒரு சிறிய சம்பவம் இடம் பெற்றிருக்கிறது.

    “உலகம் இயங்குவதற்கு நீ மூலக்காரணமாதலால், உன்னால் அழியப் போகும் அனைத்துமே, இவ்வுலகத்திற்குத் தேவையானதாக இருக்காது. கர்மவினையால் அவதிப்படுபவர்கள் மட்டுமே தன்னுடைய உடமைகளையும், உயிரையும் உன்னால் இழக்க நேரிடும். மேலும், உலகில் இயங்கும் அனைத்துக்குமே நீ என்றும் உறுதுணையாக இருப்பாய். நீயல்லால் ஒர் அணுவும் இயங்காது. உயிர் இயங்க உயிராகவும், மறியாதைக்கு மறுபெயராகவும் விளங்குவாய்” என்று சொன்னதாக கதையில் வரும் இச்சிறிய சம்பவம் இக்கட்டுரைக்குப் பொருத்தமானதாக இருக்கும்.

    இதிகாச உதரணங்களை சற்று நிறுத்திவிட்டு, இன்றய உலகில் நடந்த ஒரு சில நிகழ்வுகளைப் பார்ப்போம்.  ஒரு குடும்பத்திலே கூட கணவன் மனைவி இருவருமே ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு, இன்பம் வரும்போது பங்கிட்டுக்கொண்டு, துன்பத்தில் உழலும்போது ‘ஆறுதல்’ சொல்லி இன்பமயமான வாழ்க்கை முறையை எடுத்துக் கூறினால்தான் வாழ்க்கைப் பயணம் இனிதே நடக்கும் என்பதை இந்த நூற்றாண்டில் வாழ்ந்த மிகச்சிறந்த எழுத்தாளனின் வாழ்க்கை நமக்கு எடுத்துரைக்கிறது.

    எழுதுவது, எழுதிக்கொண்டே இருப்பது என்பதைத் தவிர இவருக்கு வேறு எதுவும் தெரியாது. வேறு தொழில் தெரியாததால், எழுத்தை நம்பி வருமையிலே கூட வாடினார்.  தினமும் தாம் எழுதுவதை, எல்லாப் பத்திரிகைகளுக்கும் எழுதி எழுதி அலுத்துப் போய், வருமையின் எல்லைக் கோட்டிற்குச் சென்று, வாழ்க்கையை வெறுத்துவிட்ட நிலையில், இனிமேல் எந்தப் பத்திரிகையிலும் தன்னுடைய எழுத்துக்களுக்கு இடமில்லையா?..இனிமேல் குடும்பத்தை எப்படி நடத்துவது?…என்பதுபோல் மனைவியிடம் புலம்பிக் கொண்டிருந்தாராம். ஒரு பெண்ணைப்பற்றி கதை எழுத ஆரம்பித்து, மன சஞ்சலத்தால் அதை பாதியிலேயே நிறுத்தி இருந்தார். எழுதிய படைப்புகளையும் விட்டேறிந்தார், அவரது மனைவி அதைப் பாதுக்காத்து, அவருக்கு ஆறுதல் சொல்லியதோடு, தன்னம்பிக்கை அளித்து, அந்தக் கதையை முடிப்பதற்கு பேருதவி புரிந்தார். பிறகு ஒரு பத்திரிகை அலுவலகத்துக்கு, அவரது படைப்புகளை அங்கு அனுப்பி வைத்தார்.

    சில நாட்கள் கழித்து, பத்திரிகை அலுவலகத்திலிருந்து ஒரு கடிதம் வந்தது, முதல் முறையாக அவரது எழுத்துக்களைப் பிரசுரிக்கப் போவதாகவும் அதற்காக ஒரு சொற்ப சன்மானம் ஒன்றையும் சேர்த்து அனுப்பியிருந்தார்கள். அன்றே அவரது வாழ்வில் துளிர்விட ஆரம்பித்த, அந்த நம்பிக்கைதான், 1976 ல் ஒரு மாபெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது. அவர் எழுதிய “கேரீ ”  (carrie), என்ற நாவல், 1976 ல் சுமார் 50 லட்சம் பிரதிகள் விற்று அவரது வருமையைத் தொலைத்து, வளமையைப் பெருக்கியது.  அதன் பிறகு, கேரீ எடுத்த முடிவு என்ன தெரியுமா?. அனுதினமும் 1500 வரிகளாவது எழுதிவிட்டுத்தான் தூங்குவது என்ற தீர்மானமான முடிவுக்கு வந்தாராம். இதை எழுதும் போது இவ்வரிகள் அனைத்தும் ஒவ்வொரு எழுத்தாளர்களளின் மனதில் நீங்காத இடம் பெற வேண்டும் என்பதே என் விருப்பம். உற்சாகம், அன்பு, இரக்கம் இவை கிடைக்காமல் யாரும் எதுவும் சாதிக்கமுடியாது என்பதுபோல் இவரது வாழ்க்கை பிறருக்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

    திறமையான எழுத்துக்களை திகில் கதை மூலம் வெளிப்படுத்தி, உலகத்தில் அதிக அளவில் வாசகர்களைப் பெற்ற இவர், தன் வாழ்நாளில் சம்பாதித்த செல்வத்தின் பெரும்பகுதியை, பள்ளிக் குழந்தைகளுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் உதவும் வகையில் ஒரு பகுதியை எழுதி வைத்தார். எழுத்துக் கலையை ஊக்கப்படுத்துகின்ற பணிகளுக்கும் பெருந்தொகையை நன்கொடையாக அளித்தார். இவரது சரித்திரத்தைப் படித்து முழுவதுமாக ஆராய்ந்து பார்த்தோமானால், வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் இவருக்குக் கிடைத்த அன்பும், ஆதரவும், ஊக்கமும், உற்சாகமுமே என்பதை அறியமுடியும். அவர்தான் ஸ்டீஃபன் எட்வின் கிங் என்ற புகழ்பெற்ற எழுத்தாளர், அவருக்கு சரியான தருணத்தில் ஊக்கமும், உற்சாகமும், அன்பும், பரிவும் அளித்த பெருமைக்குறிய அவரது மனைவி பெயர் தபிதா கிங்.

    இந்தக் கட்டுரை வெளியாகும் இதேவாரத்தில் வெளியான, இன்னொரு செய்தியும் இக்கட்டுரையின் தலைப்புக்குப் பெருமை சேர்க்கிறது. அடையார் புற்று நோய் மருத்துவ மையத்தின் நிறுவனர் திருமதி டாக்டர் சாந்தா அவர்களுக்கு தமிழக அரசாங்கம் சர்வதேச மகளிர் தினத்தன்று “அவ்வையார்” விருது (2013) வழங்கி கெளரவித்து இருக்கிறது. ‘நாளை என்பதே நிச்சயம் இல்லை’ என்ற நிலையில், அனுதினமும் புற்றுநோயால் அவதியுறும் மக்களிடம், அன்பு, ஆறுதல், பரிவு, இரக்கம், பொதுநலம் மூலம் தம் வாழ்நாளை அற்பணித்தற்காக இந்த உயரிய விருது அவருக்கு பெயரையும், புகழையும் தேடித் தந்திருக்கிறது என்பதையும் இங்கே நினைவு கூறுவோம். ‘ராமன் மெகஸேஸே’ பரிசு பெற்ற இவருக்கு வழிகாட்டி (Rollmodels) என்று யாரையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லையாகிலும், 78 வயது நிரம்பிய இவர் வாழ்வில் உயர்ந்ததற்கு, அகத்தூண்டுகோலாக அமைந்தவர்கள் நோபல் பரிசு பெற்ற சர் சி.வி. ராமனும், டாக்டர் சந்திரசேகர் அவர்களும் என்பது குறிப்பிடத்தக்கது.

     

    மிகச்சிறந்த கவிஞனாக, ஓவியனாக, சிற்பியாக, இலக்கியவாதியாக, எழுத்தாளனாக அமைவது பிறவியிலேயே என்று சொல்வது சம்பிரதாயமாக அமைந்துவிட்டாலும், தக்க சமயத்தில் ஊக்கமும், உற்சாகமும், அன்பும், ஆறுதலும், உழைப்பும், முயற்சியும் ஒன்று சேர்ந்துவிட்டால், ஒரு மனிதனுக்கு சாதனை படைப்பதற்கு உறுதுணையாகும் என்பதையே இக்கட்டுரை எடுத்துரைக்கிறது.

     தொடரும்……….

    Share
  • நம்மில் ஒருவர்….

    பார்வதி இராமச்சந்திரன்

    ஒரு சிறு மளிகைக் கடையின் முன் வைக்கப்பட்டிருந்த வாக்குப் பெட்டி, என் கவனத்தைக் கவர்ந்தது. சில்லறை வியாபாரத்தில் அந்நிய பன்னாட்டு நிறுவனங்கள் நேரடியாக நுழைவதற்கு அனுமதியளிக்கக் கூடாதென்ற கோரிக்கையுடன்,  அதற்கு ஆதரவாக‌ வாக்களிக்க வேண்டி ஒரு பெண்கள் பத்திரிகை வைத்திருந்த வாக்குப் பெட்டி அது.

    நம் குடும்பத்தில் ஒருவராக இருப்பவரின் வியாபாரத்தை முடக்குவதா?’ என்பது போன்ற வாசகங்களுடன், வாக்குப் பெட்டிக்கு அருகில் இருந்த பேனர்கள் என் கருத்தைக் கவர்ந்தது.

    அருகிலிருந்த என் மகள், சிரித்தவாறு, ‘ஒரு கடை வச்சிருக்கிறவர் எப்படி நம் குடும்பத்தில ஒருத்தர் மாதிரி ஆக முடியும்?, காசு கொடுத்து பொருள் வாங்குறோம், அவ்வளவு தானே?’ என்றாள். அவள் கையை அழுத்தியவாறு சொன்னேன்.

    ‘உனக்குப் புரியாதும்மா!!!!’

    அவள் சிறுமி, ஊர் விட்டு ஊர் மாறும் வேலையுடைய என் கணவருடன், நிரந்தரமாக, ஓரிரண்டு வருடத்திற்கு  மேல் ஒரு ஊரிலும் இருந்ததில்லை. ஆகையால், அவளுக்கு அந்த வாசகத்தின் மகத்துவம் புரியவில்லை என நினைத்துக் கொண்டேன்.

    கடையிலேயே ஒரு வாக்குச் சீட்டை வாங்கி, வாக்களிக்கையில், என் மனம்,  கணபதி மாமாவை நினைத்துக் கொண்டது. முகமெல்லாம் சிரிப்பாக, எப்போது பார்த்தாலும் ‘என்னா பாப்பா?’ என்று அன்போடு அரவணைக்கிற, எப்போது கடைப்பக்கம் போனாலும் கை நிறைய ஆரஞ்சு மிட்டாய் தருகிற அந்த முகம், எங்கள் குடும்பத்தோடு மட்டுமல்லாமல், ஊரில் எல்லோருடனும் வைத்திருந்த நல்லுறவு என ஒவ்வொன்றாக நினைவு வந்தது. அவர் கதையை பாதியிலிருந்து மட்டுமே நான் அறிவேன். என் பாட்டி, சித்திப் பாட்டி, மாமா, அப்பா என உறவுகள் சொல்லிக் கேட்டதே நிறைய.

    முதன் முதலில் மாமா எங்கள் வீட்டுக்கு வந்ததை ஒரு ஆச்சரியம் போல் சொல்வாள் பாட்டி.

    ‘ஒரு நா வாசல்ல, ஒரு நடுவயசு மனுஷரும் சின்ன பையனும் நின்னா. ஊருக்குப் புதுசுன்னு பாத்த ஒடனே பளிச்சுன்னு தெரிஞ்சது. உள்ள வரலாமான்னுட்டு யோஜனை பண்ணிண்டு நின்னார் பாவம். ஒன் தாத்தா பாத்துட்டு, ‘வாங்கோ உள்ள’ன்னதும் அப்படி ஒரு ஆச்சரியம் அவர் மொகத்துல.

    ‘வெளியூர்லயிருந்து பொழைக்க வந்துருக்கோம், சின்னதா ஒரு மளிகை வக்கலாம்னு. நீங்க பெரியவங்க ஆதரிக்கணுன்னு’ கேட்டுண்டார். தாத்தா ஒடனே சரின்னுட்டார். பக்கத்துல இருந்த பையனப் பாத்து, ‘ஒம் பேரென்ன?’ன்னார். ‘கணபதி’ன்னு கணீர்னு வந்தது பதில். ‘படிக்கறியா’ன்னார்.’

    அந்தக் கேள்விக்கு பதில் வரவில்லையாம். காரணம் கொஞ்சம் நெருடலானது. கணபதி மாமாவின் கால் விரல்கள் வித்தியாசமாக இருக்கும். வலக்காலில் இரண்டு விரல்கள் இருக்காது. கூடப்படிக்கும் பையன்களின் கேலிக்குப் பயந்து பள்ளிக்கூடம் போவதை நிறுத்தி விட்டிருக்கிறார்.

    தாத்தா, உடனே அறிவுரை கூறியதோடல்லாமல், அப்போது சின்ன பையனாயிருந்த மாமாவை அழைத்து ‘வெங்கி, நாளைக்கு இந்தப் பையனையும் ஒன்னோட அழைச்சுண்டு போய் ஸ்கூல்ல சேத்துடு, செல்லத்துரை வாத்தியார்ட்ட நான் சொன்னேன்னு சொல்லு’ என்று சொல்லியிருக்கிறார். பூஜையறையிலிருந்து பழங்களை எடுத்து, கணபதி மாமாவின் இருகரங்களிலும் கொடுத்திருக்கிறார் பாட்டி.

    ‘மொகத்துல சிரிப்பப் பாக்கணுமே, பொன்னாட்டம் வாங்கிண்டுது கொழந்தை ‘!!.

    அப்போது துவங்கியது. கடையிலும் அப்பாவுக்கு உதவியாக இருந்தாராம் கணபதி மாமா. சிட்டை(லிஸ்ட்) படி மளிகைப் பொருட்களை அவரவர் வீட்டுக்குக் கொண்டு சேர்ப்பது. சின்ன பற்று வரவு புத்தகத்தில் கையெழுத்து வாங்க வருவது என்று எல்லா வேலைகளும் செய்வார். அதனால் கிட்டத்தட்ட எல்லா வீடுகளிலும் அவருக்குப் பழக்கம் ஏற்பட்டது.

    குறிப்பாக எங்கள் இல்லத்தில் ஒரு மகன் போலவே ஆனார். வெங்கி மாமாவுக்கு ‘கணா’, என் அப்பா, சித்தப்பாவுக்கு ‘அண்ணே’, என் தாத்தாவுக்கு ‘கணபதி’, என் சின்னத்தாத்தா(தாத்தாவின் தம்பி) மட்டும் மிக நெருக்கமாக ‘பிள்ளைவாள்’ என்பார். அதென்னமோ மாமாவின் மேல் அலாதி பாசம் அவருக்கு. வயதுக்கு மீறிய தோழமை இருவரின் நடுவேயும். இருவருக்கும் பயணம் செய்வதில் அடக்கமாட்டாத ஆசை. ஏதாவது குடும்ப விசேஷங்கள், திருவிழாக்களுக்காக கணபதி மாமா வெளியூர் செல்ல வேண்டி வந்தால், சின்னத் தாத்தாவும் புறப்பட்டு விடுவார். இருவரும் ஏதாவது ஒரு புள்ளியில் சந்தித்து, அருகில் இருக்கும் எல்லா ஊர்களையும் பார்த்து விட்டுத் திரும்புவது வழக்கம். அதைப் போலவே கணபதி மாமாவும் செய்வார்.

    அதனால் இருவரில்  ஒருவர் வெளியூர் சென்றுவிட்டு, ஊர் திரும்பத் தாமதமானால், பரஸ்பரம் விசாரித்துக் கொண்டு அமைதி காண்பது இருவர் வீட்டு வழக்கமும்.

    கணபதி மாமா, தன் அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால், படிப்பை பள்ளியிறுதியோடு நிறுத்திக் கொண்டார். உடனே திருமணமும் ஆயிற்று. நிறையக் குழந்தைகள் கணபதி மாமாவுக்கு.

    கணபதி மாமாவைப் போலவே அவர் மனைவி மீனாட்சி அக்காவும். கலகல என்று இருப்பார். இருக்கும் இடமே திருவிழாப்போல இருக்கும்.

    ஊரில் யார் வீட்டுக்கு யார் வந்தாலும்  கணபதி மாமாவுக்குத் தெரிந்துவிடும்.

    கடைக்கு வருகிறவர்களிடம், காசு வாங்கினோம், பொருளைக் கொடுத்தோம் என்றிருப்பது அவரால் முடியாது.

    ‘யாரு, அக்காவா, என்னா சேமியா வேணுமா?, தாரேன். பாயாசம் வைக்கிறதுக்கா இல்ல உப்புமாவா?. பாயாசமா? அப்ப சீனி வேணும்ல? இருக்கா?. டே, அந்த சேமியாவ எடு!!, ஆமாக்கா, என்ன விசேசமா?!!, ஆரு வந்திருக்காங்க, நாத்தனாரா?, அதான் பாயாசமா!!, என்னா சும்மாத்தான் ஊரு பாக்கவா இல்ல வேற விசேசம் ஏதாச்சும் உண்டா?, என்னா பொண்ணு கேக்க வந்திருக்காகளா?, என்னா மெல்ல சொல்லுறீக, சட்டுப்புட்டுன்னு பண்ணிறலாம்ல!! வயசும் ஆச்சுல்ல பாப்பாவுக்கு, மாமா என்னா சொல்லுறாரு?,’ என்று கோர்வையாக விசாரிப்பார்.

    அன்று சாயங்காலமோ, மறுநாளோ கடைக்கு வந்த அக்காவின் வீட்டுக்காரரைப் பார்க்க நேர்ந்தால், வாசாலகமாக, ‘வாங்க மாமா, என்னா கடப்பக்கமே ரொம்ப நாளா காணும்?’

    என்று துவங்கி, ஒரு சுற்று பேசி விட்டு, ‘ஆமா, என்னா எப்ப பாப்பா கல்யாணத்துக்கு சமையல் சாமா(ன்) சிட்டை தரப்போறீக?, நேத்தென்னாமோ, ஒறமொறை வந்திருந்தாக போல’ என்று விஷயத்துக்கு வருவார்.

    மாப்பிள்ளை பிடித்தம் இல்லை என்றால் தலையிடமாட்டார். மாறாக, பண விஷயத்துக்காக தவங்குகிறது என்றால் ‘கிடுகிடுவென’ உதவியில் இறங்குவார்.

    ‘நீங்க கவலப்படாதீங்க, நக நட்டுக்கு, துணிமணிக்கெல்லாம் எவ்வளவு தேவப்படுது?, மண்டபச்செலவு பத்தி பெரச்சனையில்ல, “அங்கயற்கண்ணி” ல சொல்லிரலாம். சமயல் பாத்திரத்துலருந்து, கூட்டிப் பெருக்குற ஆள் வரக்கும் இருக்கு, பாத்துக்கிரலாம். நம்ம ஒறமொறைதான் மண்டபம் வச்சிருக்கிறவ‌ரு. நாஞ்சொன்னா செரிம்பாரு. சமயலுக்கு ஆள மட்டும் பாருங்க, சாமா(ன்) செட்டு அத்தனையும்,  மஞ்சப்பொடிலருந்து, வெத்தல பாக்கு வரக்கும் நாங்கொணாந்து போடுறேன், பெறகு மொள்ளமா கொடுங்க, இப்ப என்னா?, வேற என்னா செலவு?’ என்று அலச ஆரம்பிப்பார். செட்டியார் கடையில், தவணை முறைக் கடனுக்கு ஏற்பாடு செய்வதிலிருந்து எல்லாவற்றிற்கும் உதவிக்கு நிற்பார். கண்டிப்பாய், ஏதேனும் ஒரு சிறிய செலவேனும் தன் பொறுப்பில் ஏற்பார். அநேகமாக, அது பூவாகத்தானிருக்கும். கல்யாணத்திற்கு வேண்டிய பூச்சரம், மாலைகள், உதிரிப்பூ எல்லாவற்றையும் தன் செலவில் வாங்கித் தருவார். திருமணம் முடிந்து, மணமக்களை வண்டி ஏற்றி அனுப்புவது வரை அந்த‌ வீட்டு மனுஷனாக உடனிருப்பார்.

    ஒரு முறை பாட்டி சொன்னாள் என்று ஹார்லிக்ஸ் பாட்டில் வாங்கப் போனது நன்றாக நினைவிருக்கிறது. சொன்னதும் உடனே எடுத்துக் கொடுக்கவில்லை.

    ‘என்னா பாப்பா வந்திருக்கீக, அண்ணன் இல்லையா, வள்ளி எங்க போனா?’

    ‘அண்ணா மாமா வீட்டுக்குப் போயிருக்கார். வள்ளி மார்க்கட்டுக்கு!!’

    ‘அதானா, செரி இந்தாங்க‌ ஆரஞ்சு மிட்டாயி, எப்பவாச்சும் தானே ஹார்லிக்ஸூ வாங்குறது நம்ம வீட்டுல, ஆமா, ஆராச்சும் விருந்து வந்திருக்காங்களா?’

    ‘இல்லல்ல… பக்கத்தாத்து சுந்தரம் மாமா இல்ல, அவர ஆஸ்பத்திரில சேத்துருக்கா… தாத்தா பாக்கப் போறா.. அங்க குடுத்து விடத்தான்’

    ‘அப்டியா, செரி நீங்க போயி பாட்டிக்கிட்ட நா(ன்) கொண்டாரேன்னு சொல்லுங்க!’

    நேரே வீட்டுக்கு வந்து, என்ன ஏது என்று விசாரிப்பதோடு நிற்க மாட்டார். சுந்தரம் மாமாவின் வீட்டுக்குப் போய் என்ன உதவி வேண்டும் என்று கேட்டுச் செய்வதோடு, சுந்தரம் மாமா ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பும் வரை, எப்போது டவுன் பக்கம் போனாலும், தன் சைக்கிளில், அவர் வீட்டிலிருந்து,  சாப்பாடு மற்ற சாமான்கள் எடுத்துப் போய், ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போய்க் கொடுப்பார்.

    தன் கல்யாணமும் அவரால் தான் நடந்தது என்பாள் அம்மா. எங்கே பிள்ளைக்கு கல்யாணமானால், மருமகள் வந்து பிரித்து விடுவாளோ என்ற காரணமற்ற பயத்தினால், அப்பாவின் கல்யாணத்தை ஏதேனும் சாக்கு சொல்லி தள்ளிப் போட்டுக்கொண்டே போனாளாம் பாட்டி. பெண் பார்க்கும் வரை வந்தால் கூட ஏதாவது காரணம் கண்டுபிடித்து ‘வேண்டாம்’ என்று சொல்லிவிடுவாளாம். தாத்தா எவ்வளவு சொல்லியும் பாட்டிக்கு உறைக்கவில்லை. அப்பா,  த‌ன்  அம்மாவுக்கு அடங்கிய பிள்ளை.

    இராமநாதபுரத்தில், அம்மாவைப் பெண்பார்த்து வந்ததும், வழக்கம் போல் பாட்டி காரணம் தேட ஆரம்பிக்க, அப்போது, சாமான் கொண்டு வந்து கொடுக்க வந்த கணபதி மாமா,

    ‘என்னங்கப்பா, பொண்ணு பாக்கப் போனீங்கல்ல, நல்ல விசயம்தான?’ என்று தாத்தாவிடம் ஆரம்பித்தாராம்.,

    ‘இல்லடா கணபதி,  பொண்ணு கொஞ்சம் குள்ளமாட்டமா இருக்கு!!  ..பாட்டி.

    ‘அதனால என்னா… ரவியும்  ஒயரங் கம்மிதான‌.. செரியா இருக்கும்ல’.

    பாட்டி பதில் பேசாமல் இருக்க, ‘இந்தா பாருங்க அம்மா, ரவி வயசுல, எனக்கு கலா சடங்காயிருச்சு… இன்னம் கலியாணமுடிக்காம இருந்தீங்கன்னா, அது பிள்ளைகள வளத்தி நிமுத்த வயசு வேணாமா… இன்னம் சின்னப் புள்ளையா…. ஒங்களுக்கு பேரம்பேத்தி வேணுங்குற ஆச இருக்குதா இல்லையா?, என்ன மாதிரி சின்னவங்க, ஒங்ககிட்ட செரி, தப்பு எடுத்துச்  சொன்னா நல்லாவா இருக்கு?.. ஏம்ப்பா… ரவிக்கு பொண்ணு புடிச்சுருக்குல்ல… அப்ப ஆக வேணுங்குறத பாக்கலாம்ல… அம்மா ஒண்ணுஞ் சொல்ல மாட்டாங்க‌. நீங்க ஒண்ணு பண்ணுங்க… போயி, பொண்ணு புடிச்சுருக்குன்னு ஒரு தந்தி குடுத்துருங்க…. இப்பமே நிச்சயம் பண்ணினாத்தான் செரி வரும். இல்லன்னா மார்கழி வந்துரும். வர ஞாயித்துக்கெழம முகூர்த்த நாளுன்னு பாத்ததா ஞாபகம். அத செரிபாருங்க. செரியா இருந்துச்சுன்னா, அன்னைக்கே நிச்சியம் பண்ணிரலாமான்னும் ஒரு வரி சேருங்க…. நாம் போயி, ‘அங்கயற்கண்ணி’ல ஒரு வார்த்த சொல்லிர்றேன். அங்கயே  வச்சிரலாம் நிச்சியம். என்னா?’  என்று அடுக்க…

    அப்பா, சின்னதாய்த் தலையசைக்க, பாட்டியின் மௌனத்தை சம்மதமாக எடுத்துக் கொண்டு, தாத்தா, ‘அப்படியே செய்துடுவோம், நான் உங்கூடவே வரேன். என்ன தந்தி ஆபீசுல இறக்கி விட்டுடு…’ என்று கணபதி மாமாவின் சைக்கிளில் ஏறிச் சென்று தந்தி அடித்து விட்டு வந்தாராம்.

    ‘அவர் மட்டும் பூனைக்கு மணி கட்டலைன்னா… அறுபதாம் கல்யாணம்தான் உங்கப்பாவுக்கு’ என்று சிரிப்பாள் அம்மா.

    இது போல், கணபதி மாமா வீட்டுக் கல்யாணம் தாத்தாவால் நிச்சயம் செய்யப்பட்டதும் நடந்ததுண்டு.

    கணபதி மாமா, தன் மக்கள் எல்லாரையும் உறவிலேயே மணமுடித்துக் கொடுத்து வந்தார். . கிட்டத்தட்ட எல்லா அக்கா தங்கை உறவிலேயும் கொள்வினை கொடுப்பினை உண்டு. மீனாட்சி அக்காவுக்கு, தன் ஐந்தாவது பிள்ளையை, தன் அண்ணன் மகளுக்கு மணமுடிக்க வேண்டும் என ஆசை. ஆனால், எதனாலேயோ ‘ஒன் ஒறவுல சம்மந்தம் வேணாம்’ என்று சொல்லிவிட்டார் என கண்ணைக் கசக்கிக் கொண்டு தாத்தாவிடம் வந்து நின்றார் மீனாட்சி அக்கா.

    ‘ஏண்டா, அவ சொல்றதும் ஞாயந்தானே!!’

    ‘அப்பா, அது சும்மா சொல்லுது… எத்தன பெரச்சன வந்துச்சு அவுங்களாலன்னு ஒங்களுக்கும் தெரியுந்தான…’

    ‘ஆமா, அதுக்கென்ன பண்றது.. அவங்கப்பா செஞ்சதுக்கு புள்ளை என்ன பண்ணுவான் சொல்லு..  நீரடிச்சு நீர் விலகாது. நாளக்கு அவ சொந்தத்துலயும் ஒருத்தர் வேணுன்னு நெனைக்கறா…’

    ‘அதுக்காக, இவங்கண்ணன்ட்ட நாம் போயி என்னா பேசுரது…’

    ‘அது ஒண்ணும் பெருசுல்லா.. சொல்லிவுட்டா அவங்களே வருவாங்க…’ என்றார் அக்கா.

    ‘எல்லாந் திட்டம் போட்டு வச்சாச்சா?’

    ‘ கணபதி… நீ கொஞ்சம் இறங்கி வா.. இத்தன நாள் ஒங்கூட சம்சாரம் பண்ணி இருக்கா.. இந்த ஒண்ணுல விட்டுக்குடுத்துடேன்..’

    ‘ நாளப்பின்ன, அண்ணன் வீட்டுல‌ அத செய்யல,  இத செய்யலன்னு இவளே பேசுவாப்பா..’

    ‘அதொண்ணுமில்ல… எங்க பொறந்தவூட்டுல யான மேல அம்பாரிகட்டி சீர் செய்வாங்க’

    ‘ஆத்தி!!!, அப்ப  ஒன்னோட வந்த  யானய முழுங்கிட்டுதா நீ இத்தத்தண்டிக்கு ஆனியா!’

    இறுதியாக தாத்தாவின்  வார்த்தைக்காக, சம்மந்தத்துக்கு ஒத்துக் கொண்டாராம் கணபதி மாமா.

    இப்படி, ஊரில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் முக்கியமான நபராக, நல்லது கெட்டதுகளில் பங்களிப்புச் செய்து கொண்டு, ஊரே தன் குடும்பமாக வாழ்ந்தார். அவரை வேற்றாளாக நினைத்துப் பார்க்க முடியாது யாராலும். ‘உபகாரம்னா, கணபதி’ என்று பேரெடுத்திருந்தார்.

    ஆயிரம் இருந்தாலும், கணபதி மாமாவுக்குத் தான் கால் விரல்கள் பற்றிக் குறையான குறை உண்டாம். தனிமையில், சின்னத் தாத்தாவிடம், நிறைய வருத்தப்பட்டிருக்கிறாராம்.

    ‘விடுடா.. எல்லாத்துக்கும் ஏதாவது காரணமிருக்கும்.. இதனால, ஒனக்கு என்ன கொறைஞ்சு போச்சு?’ என்பாராம் சின்னத் தாத்தா.

    ஆனால், காரணம் எவ்வளவு கொடூரமானது என்பதை விதியைத் தவிர யாரும் அறிந்திருக்கவில்லை.

    ஒரு கல்யாணத்துக்குப் போய்விட்டு இரவு திரும்ப வேண்டிய கணபதி மாமா, மறுநாள் ஆகியும் வராததால், மீனாட்சி அக்கா, எங்கள் வீட்டுக்கு விசாரிக்க வந்தார்.

    ‘சித்தியம்மா, சித்தப்பா ஊருக்கா?’.

    ‘இல்லடி..இங்கதான்  ஏன்?’.

    ‘இல்ல, அவரு திருச்சிக்கு ஒரு கல்யாணத்துக்குப் போயிட்டு வரக்காணும், சித்தப்பா கூட ஊரப்பாக்கப் போயிட்டாராக்கும்னு வந்தேன்’.

    சித்திப்பாட்டி திகைத்தாள். இப்படி நடந்ததே இல்லை. ‘வந்துருவான்டி, வேற ஏதாவது வேலையாயிருக்கும்’  சொல்லிக் கொண்டு இருக்கும் போதே சின்னத்தாத்தா வந்துவிட்டார்.

    விஷயம் தெரிந்து அவரும் யோசித்தார். ‘சரி, நீ போயிட்டு வா, மீனாட்சி,   வந்துடுவான்னே நினைக்கிறேன். இல்லன்னா நா சாயரட்சை கிளம்பிப் போய் விசாரிக்கிறேன்.

    அக்கா, போனதும், ‘பருவதம், எனக்கு என்னமோ பண்றது. ஒண்ணும் மனசுக்கு சரியாப்படலை. நான் சரவணப் பொய்கைப் பக்கம் போய்ட்டு வரேன்’ என்று சொல்லிவிட்டு கலங்கிய முகத்துடன்  தெருவில் இறங்கினார்.

    அதே நேரத்தில், ஒரு தெரு நாய்,  வீதியின் கோடியில் இருந்த‌ பதினாறு கால் மண்டபத்தில் உட்கார்ந்து  பேசிக்கொண்டிருந்த தெருக்காரர்களின் முன்பாக, இரைக்க, இரைக்க ஓடிவந்து ஒரு பொருளைக் கொண்டு போட்டு விட்டு ஓடியது. அது ஒரு மனிதக் கால். வலது கால். வித்தியாசமான விரல் அமைப்புகளோடு இருந்த அதில் இரு விரல்கள் இல்லை.

    கொஞ்ச நேரத்தில் தெருவே அலறியது. தாத்தா உட்பட தெருவாசிகளுக்குத் தகவல் பறந்தது. அப்பாவும், சித்தப்பாவும், மாமாவும், கண்ணீருடன் தெருவில் பதறி ஓடியது நினைவிருக்கிறது. நாய் சென்ற வழியை உத்தேசமாகத் தொடர்ந்து கொண்டு, ஒரு ஊகத்தில் ஊர் எல்லையில் இருந்த இரயில்வே லைனை அடைந்த போது அத்தனை பேருக்கும் ஒரு கணம் இதயம் நின்று தான் விட்டது. ஊருக்குப் போய்த் திரும்பிய கணபதி மாமா, இரவில், ஆளில்லா இரயில்வே லைனைக் கடக்க முற்பட்ட போது, இரயில் வந்து தூக்கியடித்திருக்கிறது.  அவர் உடலின் முன் பாகம் சிதையாமல் இரயில்வே லைனுக்குப் பக்கத்தில் கிடந்ததைத் தூக்கி வந்தார்கள்.

    பாட்டி, அம்மா, சித்தி எல்லாரும் கணபதி மாமா வீட்டுக்கு ஓடினார்கள். ஊரே கதறி அழுதது. சின்னத் தாத்தாவின் துயரம் சொல்லில் அடங்குவதாயில்லை. மீனாட்சி அக்கா..?, அதிர்ச்சியில் மயங்கி விழுந்தவர் எழவே இரண்டு நாட்கள் ஆயிற்று.  தாத்தா, கணபதி மாமாவின் மூத்த மகன் ராமுவின் பக்கத்திலேயே இருந்து எல்லாம் செய்ய வைத்தார்.

    அதன் பின், மீனாட்சி அக்கா, தன்னை ஆச்சரியப்படும் விதத்தில் தேற்றிக் கொண்டு சோகத்தில் இருந்து மீண்டது, கடைப்பொறுப்பை ஏற்றுக் கொண்டது, திருமணமாகாமல் இருந்த   ஒரு மகள் மற்றும் இரு மகன்களுக்கு ஊர்க்காரர்கள் அனைவரும் முன்னிற்க,  திருமணம் செய்து வைத்தது,  எல்லாவற்றிற்கும் மேலாக, எங்கள் வீட்டில், ஊரில் கணபதி மாமாவின் இடத்தை நிரப்பியது என எல்லாமுமே மிகச் சாதாரண வாக்கியங்களால் சொல்லிவிடுகிற விஷயமில்லை. ஒவ்வொன்றும் சரித்திரம்.

    சமீபத்தில் ஊருக்குச் சென்றிருந்த போது, அம்மா சொன்னாள் என்று கணபதி மாமாவின் கடையில் வெல்லம் வாங்கச் சென்றேன். அது இப்போது பல்பொருள் அங்காடியாகியிருந்தது. ராமு அண்ணா கல்லாவில் இருந்தார். நான் போனதும், நிமிர்ந்து பார்த்தவர், ‘ஆத்தி, ஆரு ரவி சித்தப்பா மகளா, என்னா ஊர மறந்து போயிட்டீக, வரப்போக இருக்க வேணாமா வீட்டுப் பொண்ணுக?’ என்று அன்பாகவும் உரிமையாகவும் விசாரித்தவர், புறப்படும் போது, வெல்லத்தோடு இரு பிஸ்கட் பாக்கெட்டுக்களையும் சேர்த்துக் கொடுத்தார்.

    ‘எதுக்குண்ணே?’ என்ற போது, ‘வச்சுக்க பாப்பா, வீட்டுல புள்ளைங்களுக்குக் கொடு, மறுக்கா எப்ப வரியோ? வாங்கிக்க!!!’ என்ற போது, என் கையில் இருந்த பிஸ்கட், க்ஷண நேரத்திற்கு ஆரஞ்சு மிட்டாயாகத் தெரிந்தது. நிமிர்ந்து பார்க்கையில், கடைச் சுவரில், சீரியல் செட்டுக்களால் சட்டமிடப்பட்ட படங்களில் கணபதி மாமாவும் மீனாட்சி அக்காவும் சிரித்தார்கள்.

     

    .

    Share