Blog

  • காதல் ஃபீனிக்ஸ்

     

     

    எஸ்.வி. வேணுகோபாலன்

     

    காதலைப் பறவையாக்கி
    நெஞ்சோடு அணைத்துக் கொள்ளப் பார்க்கையில்
    அதன் இறக்கை துடிப்பு
    சுதந்திரத்தைக் கோரியது

    காதலை பனிக்கட்டியாக்கி என்
    உள்ளங்கையில் வைத்துச்
    சில்லென்று ரசிக்கையில்
    உருகி ஓடி வெளியேறிவிட்டது

    காதலே கனவுகளாய்
    மூச்சு முட்ட என்னுள் நிறையட்டும் என
    ஆசை ஆசையாய்ப்
    படுக்கை விரித்த இரவுகளில்
    உறக்கம் எட்டியே பார்க்காதிருந்தது

    பின்னர்
    காதல் பூக்களில்
    முட்களால் குத்தப் பட்ட கதையும்
    காதல் நெருப்பில் என்
    இதயம் வெந்த கவிதையும்
    இருக்கின்றன அழுக்கேறிய
    பழைய டயரி பக்கங்கள் நெடுக

    நேற்று இரவு படுக்குமுன்
    சாம்பலாகப் பூசிக் கொண்டேன்
    பொசுக்கிய காதல் நினைவுகளை

    இன்றைய நாள் என்னைத் தொட்டு எழுப்பி
    சீண்டியவாறு தெரிவிக்கிறது
    காதலர் தின வாழ்த்துக்களை –
    அருகே புன்னகை பூத்தவாறு சிறகடிக்கிறது
    சாம்பலில் இருந்து பறக்கும் காதல் பறவை !

    Share
  • ஆயிரம் நிலவே வா…

    கவிஞர் காவிரி மைந்தன்

    ஒரு முறை இலக்கியக் கூட்டமொன்றில் புலவர் உரையாற்றிக் கொண்டிருக்கும்போது.. கவிஞர் கண்ணதாசனைவிட ஆயிரம் மடங்கு நான் படித்தவன் என்று சொல்ல.. ஜனங்களின் சலசலப்பு அடங்கும் முன்பாக.. என்னைவிட ஆயிரம் மடங்கு அவன் படைத்தவன் என்று சொன்னதும் கைத்தட்டல் அடங்கிட சில நிமிடங்கள் ஆனது என்றார்.

    திரைப்பாடல்கள் இலக்கியமாகுமா என்கிற வினாவிற்கு இந்த ஒரு பாடல் போதுமே எடுத்துக்காட்ட என்றே சொல்லலாம்!  புலவர் பெருமகனாரின் பூங்கவிதை இது!  பொங்கிடும் தமிழ்நதி புறப்பட்டு வந்தது காண் என்று சொல்வதே சரியாகும்!  பெண்ணை உவமைப்படுத்த ‘நிலா’வை இழுக்காத கவிஞர்களே இல்லை!  அட.. இவரென்ன.. ஆயிரம் நிலவே வா’ என ஒரு ஆனந்தப் பல்லவி தருகிறார்.  அகத்துறை பாடலென்பதால் மனசுக்குள் ஒரு மகரந்த மழை பொழிய வைக்கிறார்.  தலைவனும் தலைவியும் தழுவிடும் கோலங்களில் கிட்டிடும் சுகமத்தனையும் மொத்தமாய் அள்ளித்தருகிறார்.  கற்பனையில் கன்னித்தமிழைக் கட்டி ஆளத் தெரிந்தவர் என்பதால் சொற்சுகம், பொருட்சுகம் என சுகங்களின் ராஜபவனியில் நம்மையும் கலந்திடச் செய்கிறார்.

    AdimaiPenn

    ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா
    இதழோரம் சுவை தேட புதுப்பாடல் விழி பாடப் பாட
    ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா
    இதழோரம் சுவை தேட புதுப்பாடல் விழி பாடப் பாட
    ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா

    நள்ளிரவு துணையிருக்க நாமிருவர் தனியிருக்க
    நாணமென்ன பாவமென்ன நடை தளர்ந்து போனதென்ன
    இல்லை உறக்கம் ஓரே மனம் என்னாசை பாராயோ?
    என்னுயிரிலே உன்னை எழுத பொன்மேனி தாராயோ?

    மன்னவனின் தோளிரண்டை மங்கை என்தன் கை தழுவ
    கார் குழலும் பாய் விரிக்கும் கண் சிவந்து வாய் வெளுக்கும்
    இந்த மயக்கம் எழில் முகம் முத்தாக வேர்க்காதோ
    அந்த நினைவில் வந்து விழுந்தேன் கொத்தான பூவாக

    பொய்கை எனும் நீர்மகளும் பாவாடை போர்த்திருந்தாள்
    தென்றலெனும் காதலனின் கைவிலக்க வேர்த்து நின்றாள்
    என்ன துடிப்போ அவள் நிலை நீ உணரமாட்டாயோ?
    அந்த நிலையில் அந்த சுகத்தை நானுணரக் காட்டாயோ?

    மக்கள் திலகத்திற்காக முதன் முறையாக எஸ்பி. பாலசுப்பிரமணியம் பாடிய பாடல் என்கிற வரலாறும் இதற்கு உண்டு! எனினும் அதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டபின் உடல்நிலைக் குறைவால் ஒலிப்பதிவு தள்ளிப்போடப்பட்டு வந்தது. இவருக்கு பதிலாக இன்னொருவரை பாட வைக்கலாம் என்கிற யோசனை முன்வைக்கப்பட்ட போது,பொன்மனச்செம்மல்.. புதிய பாடகன்.. எம்.ஜி.ஆருக்காக பாடுகிறேன் என்று தன் நண்பர்களிடமும் உறவினிர்களிடமும் சொல்லியிருப்பான்.  அவனுக்கு ஏமாற்றம் தர வேண்டாம்.. இன்னும் காத்திருக்கலாம் என்றாராம்.  திரையுலகில் புதிதாக நுழைகின்ற கலைஞனையும் அவன் மனப்பாங்குவரை யோசித்து ஆதரித்த புரட்சித்தலைவரைப் போல் இன்னொருவர் இனி வருவாரோ?

    எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான சரித்திரப் பின்னணி கொண்ட படம்!  ஜெய்ப்பூர் அரண்மனையின் கதவுகள் புரட்சித்தலைவருக்காகவே திறக்கப்பட்டு காட்சிகள் படமாக்கப்பட்டன என்பதையும் மறக்க முடியுமா?

    http://www.youtube.com/watch?v=JYcCIiVEMr8

    http://www.youtube.com/watch?v=JYcCIiVEMr8

     

    பாடல்: ஆயிரம் நிலவே வா

    திரைப்படம்: அடிமைப்பெண்

    பாடியவர்: எஸ்.பி. பாலசுப்பிரமணியம், பி. சுசீலா

    இசை: கே.வி. மஹாதேவன்

    ஆண்டு: 1969

    Share
  • காதல் கும்மி!

    மேகலா இராமமூர்த்தி

    Tamil-Daily-News-Paper_36939203740

     

    ஆதியும் அந்தமும் இல்லாத – அந்த

    ஆண்டவன் போலவே எந்நாளும்

    காதலும் காலத்தை வென்றதடி – வளைக்

    கைகொட்டிக் கும்மி கொட்டுங்கடி!

     

    தேசம் இதற்குக் கிடையாதடி – ஒரு

    பாஷையும் தேவை யில்லையடி!

    தோசமு மில்லாத் தூயதடி – உண்மை

    நேசத்தில் தோன்றி மலருமடி!

     

    கண்க ளெனும்வாசல் நுழைந்திடுமே – மனக்

    கோயிலில் என்றும் நிலைத்திடுமே!

    எண்ணிட இன்பம் தந்திடுமே – காதல்

    வாழ்வினில் வண்ணம் கூட்டிடுமே!

     

    ஆண்டியும் காதலில் ஆழ்ந்திடுவான் – அடி

    அரசனும் காதலில் வீழ்ந்திடுவான்!

    ஆண்டாண்டு காலமாய் நாம்தேடும் – நல்ல

    பொதுவுடை மைப்பொருள் காதலடி!

     

    சாதி ஒழிந்திடும் காதலிலே – மதச்

    சண்டை அழிந்திடும் காதலிலே!

    வீதியில் நின்று சொல்லுங்கடி – இந்தக்

    காதலுக் கீடு இல்லையென்றே!!

     

    படத்துக்கு நன்றி

     

    http://www.dinakaran.com/News_Detail.asp?nid=1833

    Share
  • வாழ்க்கை நலம் – 48

    குன்றக்குடி அடிகள்

    48. கோபமா? வேண்டாம்!

    வெகுளி, சினம், கோபம் ஆகியன ஒரு பொருட்சொற்கள். எல்லா அறநூல்களுமே வெகுளியை அறவே விலக்குகின்றன. வெகுளி, பல தீய செயல்களுக்கு வழி வகுத்து விடுகிறது. சினந்து எழுவதற்குரிய சூழ்நிலைகளை வாழ்க்கையில் சந்திக்காமல் வாழ இயலாது.

    ஆனால், எந்தச் சூழ்நிலையிலும் வெகுளாமல் இருப்பதே நல்லது. அதுவே நன்னெறி சார்ந்த வாழ்வு. கோபம் ஏன் வருகிறது? எதிர்பார்க்கும் லாபம் கிடைக்காது போனால் கோபம் வரும்; பேராசையின் காரணமாக கோபம் வரும். வேறு சிலருக்கு இயலாமை ஏற்படும் பொழுதும் கோபம் தோன்றும். கோபம் வெறும் உணர்ச்சி மட்டுமே. கோபத்திற்கு வலிமை கிடையாது.

    இந்த இலகில் அனைவருமே தங்கள் மீது அதிக அசை காட்டுகிறவர்கள். அவரவர்களும் அவரவர்களுடைய வாழ்க்கை மீது தனிக் கவனம் செலுத்துவது இயற்கை! பெருவழக்கும்கூட! உங்கள் மீது உங்களுக்குப் பெருவிருப்பம் உண்டா? தற்காப்புணர்வு இருக்கிறதா? அப்படியானால் கோபப்படாதீர்கள்!

    ஆம்! நீண்டநாட்கள் வாழ வேண்டுமா? அறிவில் சிறந்து விளங்க வேண்டுமா? ஆம் எனில் கோபப்படாதீர்கள்! கோபம் மரணத்தின் வாயில்! அதனால் இதயத் துடிப்பு கூடும்! குருதி கொதிப்பேறும்; இதயம் பாதிக்கும்! மரணம் வந்து சேரும்!

    ஆதலால் மரணத்தைத் தவிர்க்கவும், நீண்டநாள் வாழவும் வேண்டுமானால் கோபப்படாதீர்கள்! கோபம் நிதானத்தை இழக்கச் செய்யும்! அவ்வழி சிந்தனைப் புலன் சிதறும். அறிவு கையிகந்து போகும்! கோபத்தின் விளைவால், மனிதன் மிருகமாகிறான். ஏன் இந்த அவலம்? கோபம் வேண்டாம்! வேண்டவே வேண்டாம்!

    மனித சக்தி அளப்பரிய ஆற்றல் உடையது. படைப்பாற்றல் மிக்கது. இத்தகு அற்புதமான மனித ஆற்றலை ஒன்றுக்கும் பயன்படாத கோபத்தில் பாழாக்கலாமா?  அடக்கி வைத்த உஷ்ணம் சக்தியாக மாறுகிறது. அது போலக் கோபம் வரும்போது அக்கோபத்தை உள்ளடக்கி ஆற்றலாக்குக! அந்த ஆற்றல் ஆக்கநிலையில் அற்புதங்கள் செய்யும்! யார்மீது உங்களுக்குக் கோபம்? அவர்களையே நட்பாக்கிக் கொள்ளலாம். தீமை நன்மையாக வளரும்!

    “எது நடந்தாலும் எப்படி நடந்தாலும் அமைதி இழக்காதவர்கள் பொறுமைசாலிகள்” என்றார் லூயிஸ்டீவென்சன்! அவர் மேலும் விளக்குகிறார். கடிகாரம் எந்தச் சூழ்நிலையிலும் டிக்டிக் என்று ஒரே மாதிரி அடிப்பதைப் போல எந்தச் சூழ்நிலையிலும் ஒரேமாதிரி இதயத்துடிப்பு உடையவராக விளங்க வேண்டும் என்று கூறுகிறார்.

    ஆதலால், நற்பண்புகளுக்கு எதிரிடையான கோபம் வேண்டாம்! வேண்டாம்! கோழைகளின் இயல்பே கோபம்! ஆண்மையும் தைரியமும் உடையவர்கள் கோபப்பட மாட்டார்கள்! கோபத்துடன் தொடர்பு கொண்டு இழப்பை அடைவதில் என்ன பயன்?

    _________________________________
    REF: http://www.tamilvu.org/library/nationalized/pdf/47.KUNDRAKUDIADIGALAR/VAZAKAINALAM.pdf
    இது ஒரு நாட்டுடைமையாக்கப்பட்ட  நூல், நாட்டுடைமையாக்கப்பட்டது  நிதியாண்டு 2007-2008 ல்

    மின்பதிப்பாக்க உதவி: தேமொழி

    Share
  • மறைந்திருந்தே கேட்கும் மர்மமென்ன?

    (மெட்டு : மறைந்திருந்தே பார்க்கும் மர்மமென்ன )

    மறைந்திருந்தே கேட்கும் மர்மமென்ன?

    இவள் கவி அழகா இல்லை தமிழ் அழகா வென்று ()

     

    கவிரசமும்

    கருத்தில்  கவிரசமும்

    கவி         தரும்   கருத்தில்    கவிரசமும் – காதல்

    மொழி    வரும்  விதத்தின்   மதுரசமும்   கேட்டு ()

     

    எங்கிருந்தாலும் உன்னை நான் அடைவேன் – உன்னை

    என்னையல்லால் வேறு யார் அடைவார்

    முத்தமிழ் சதிராட  மோகமா இதழ்

    மொத்தமும் உனக்கென்றேன் போதுமா

    மாதவா மாயவா ஸ்ரீதரா கோவிந்தா ()

     

    மயக்கிடும் முரளி இசைக் கேட்டேன் – அதன்

    வசியத்திலே யமுனையில் நான் மிதந்தேன்

    காதலிலே என்னைத் தவிக்கவிட்டு   ஒரு

    பாவமும்  செய்யாப் பிள்ளையைப் போல்

    மாதவா மாயவா ஸ்ரீதரா கோவிந்தா ()

     

    சொல்ஆட  பொருளாட அணியாட  சந்தமாட,  சந்தமுடன் சிந்துமாட‌

    எழுத்தாட   அசையாட  சீராட   தளையாட,  அடியோடு  தொடையுமாட‌

    (நேராட நிறையாட நிறைவோடு நாவுமாட , புணர்ச்சியின் உணர்ச்சியாட‌)

    இடையாட நடையாட சுரமாட நடமாடி நீயும் வாராய்
    மாயனே மாதவா கண்ணனே கேசவா எனையாளும் வேங்கடா வா!

    Share
  • குறளின் கதிர்களாய்… (21)

     

    செண்பக ஜெகதீசன்

     

    அரம்போலும் கூர்மைய ரேனு மரம்போல்வர்

    மக்கட்பண் பில்லா தவர்.

    -திருக்குறள்- 997 (பண்புடைமை)

     

    புதுக் கவிதையில்…

     

    அதிகக் கூர்மையான

    அரம் போன்றது

    அவன் அறிவு..

     

    ஆனாலும் அவன்

    நெடுமரம் போன்றவன்தான்,

    அவனிடம்

    நற்பண்பு ஏதும் இல்லாதபோது…!

     

    குறும்பாவில்…

     

    அறிவு அரம்போலிருந்தாலும்,

    நற்பண்பில்லாதவன்

    நெடுமரம்தான்…!

     

     மரபுக் கவிதையில்…

     

    இரும்பையும் அறுத்திடும் கூர்மையையே

    இயல்பாய்க் கொண்ட அரமதுவாய்,

    உருவினில் உயர்ந்த மனிதனிடம்

    உள்ள அறிவது இருந்தாலும்,

    அருகினில் உள்ள மாந்தரையும்

    அணைத்தே செல்லும் பண்புடனே

    கருணை கொஞ்சமும் இல்லாதவன்,

    காட்டு மரத்திற் கொப்பாமே…!

     

    லிமரைக்கூ…

     

    அதிகமாய்க் கூர்மையுள்ளது அரம்,

    அதுபோல் அறிவுடையோனும்

    நற்பண்பில்லாதபோது அவனுமொரு மரம்…!

     

    கிராமியப் பாணியில்…

     

    அரம்பாரு அரம்பாரு

    கூர்மயான அரம்பாரு,

    இரும்பறுக்கும் அரம்பாரு..

     

    இதுபோல் கூர்மயா

    அறிவுதான் இருந்தாலும்,

    கொணந்தான் அவுனுக்கு

    நல்லதா இல்லயிண்ணா

    அவனொரு மரம்பாரு

    காட்டு மரம்பாரு..

     

    மரம்பாரு மரம்பாரு

    அறிவிருந்தும் அவனொரு

    மரம்பாரு மரம்பாரு…!

     

           -செண்பக ஜெகதீசன்…

     

    Share
  • திருமால் திருப்புகழ்….(3)

    கிரேசி மோகன்

    101-0105_IMG

    தான தானன தனன தனத்த
    தான தானன தனன தனத்த
    தான தானன தனன தனத்த -தனதான

    “மாலை நாடகம் மதியம் உறக்கம்
    காலை ராவினில் கவிதை வழக்கம்
    நாளும் வாழ்ந்திடும் நிறைவை எனக்கு -அருள்வாயே
    கோல வாகன மயிலில் குறத்தி
    தேவ யானையும் அருகில் இருக்க
    வான வீதியில் விரையும் குகற்கு -முறைமாம

    சேலை மோகமும் சினமும் செருக்கும்
    ஆசை ஆர்வமும் அறிவு மயக்கம்
    மோச மாகுமுன் முளையில் எடுக்க -வருவாயே
    ஊறும் ஆணவம் உதியும் இடத்தில்
    நானை யாரென நினைவு படுத்தி
    பேசி டாதுயர் பிரம நினைப்பில் -ரமணேசர்

    கோலம் கோவணம் கடமை இருப்பு
    பாறை யாசனம் பதவி ப்ரபத்தி
    சோணை ஈசனின் சரண முனைப்பு -எனவாழும்
    வாழ்வு நானுற வழியை வகுத்து
    கோழை யானவில் விஜயர் தமக்கு
    கீதை யாலுரம் அளியும் சமர்த்த -தருவாயே

    காலில் பூமகள் களைய சொடுக்கை
    பாலி னாழியில் படவி டமெத்தை
    சாயும் யோகசு கமதை விடுத்து -எழுவாயே
    ஏறு வாகனம் வினதை பிறப்பில்
    சேரு மோகனென் அகம தில்நிற்க
    சீனு வாசம ழைமுகில் நிறத்து -பெருமாளே”….

     

    படத்திற்கு நன்றி : 

    https://www.google.co.in

    Share
  • தற்கொலை செய்துகொண்ட சிறுமியின் கதை

    எம். ரிஷான் ஷெரீப்

                இலங்கையில் கடந்த வாரம் (05.02.2014) Facebook கின் காரணமாக தற்கொலை செய்துகொண்டாள் எனச் சொல்லப்பட்டு வரும் சிறுமி வெனுஷா இமந்தியின் புகைப்படங்கள் இவை. Facebook கின் காரணமாகத்தான் தற்கொலை செய்து கொண்டாளா என்பதனை, உண்மையில் என்ன நடந்ததென்பதை வைத்து நீங்களே தீர்மானியுங்கள்.

     ilan

                10 ஆம் வகுப்பில் கல்வி கற்றுவந்த வெனுஷா இமந்தியின் Facebook கணக்கின் Wall இல், அவரது நண்பனாக இணைந்துகொண்ட ஒருவன், காதல் ஜோடியொன்றின் புகைப்படத்தை Tag செய்துவிடுகிறான். அதனை வெனுஷாவின் பாடசாலை ஆசிரியை ஒருவர் கண்டு, அதிபரிடம் போய் முறையிடுகிறார். அதிபர், 5000 மாணவர்கள், ஆசிரியர்கள் முன்னிலையில் அந்தச் சிறுமியை மேடைக்கு அழைத்து ‘வேசி’ எனத் திட்டுகிறார். மறுதினம் பெற்றோரை பாடசாலைக்கு அழைத்துவரும்படி கட்டளையிடுகிறார்.

                தான் செய்யாத ஒரு தவறுக்காக அவப் பெயர் கேட்க நேர்ந்ததையிட்டு பெரும் மன உளைச்சலுக்குள்ளான சிறுமி, தனது தந்தைக்கு 3 பக்கங்களில் ஒரு கடிதம் எழுதி வைத்து விட்டு, தாயின் சேலையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொள்கிறாள்.

    கீழேயுள்ளதுதான் சிறுமி தற்கொலை செய்துகொள்ள முன்பு எழுதி வைத்த கடிதம் – மரண வாக்குமூலம்

    2014 -02-05

     ilan1

    அப்பாவுக்கு..

     

                இப்படி ஒரு முடிவெடுத்ததற்காக என்னை மன்னியுங்கள். நான் குற்றமெதுவும் செய்யாமல் எனது அப்பாவை, அதிபர் முன் நிற்க வைக்க என்னால் முடியாது. தவறு என்று நான் செய்ததென்றால் 7 ஆம் ஆண்டில் ஃபோட்டோ எடுத்ததுதான். நான் செய்த அந்தத் தவறை மட்டும் ஏற்றுக் கொள்கிறேன். ஃபோட்டோ ஒன்றை FB யில் இட்டவரையும், அந்த ஃபோட்டோவை எனக்கு டேக் செய்தவரையும் விட்டுவிட்டு ஏன் என்னை நோக்கியே விரலை நீட்டுகிறார்கள்? இன்று நான் என்னுடைய ஒன்றுமறியாத அப்பாவை பாடசாலைக்குக் கூட்டிச் சென்றிருந்தால் அதிபருடைய ஏச்சுப் பேச்சுக்களை எவ்வளவு கேட்டிருக்க வேண்டியிருந்திருக்கும்? என்னுடைய அப்பா அவ்வாறான ஏச்சுப் பேச்சுக்கு ஆளாகக் கூடாது. எவ்வளவு பிரச்சினைகளை அப்பா தலையில் வைத்திருக்கிறீர்கள் என இந்த வீட்டில் யாருக்குமே புரிவதில்லை. அதற்கிடையில் எங்கேயோ போகும் ஒன்றுக்காக எனது அப்பாவை அவமானப்படுத்த வேண்டிய தேவை எனக்கில்லை. இதற்கெல்லாம் காரணம் எமது அதிபர். அவர் எதுவுமே தெரியாமல் என்னை நோக்கி மாத்திரம் விரலை நீட்டுவது ஏன் என எனக்குத் தெரியவில்லை. 5000 பிள்ளைகள் முன்பு, கூட்டத்தில் வைத்து மேடைக்கு அழைத்துத் திட்டினார். ஒரு பையனோடு படம் பார்க்கப் போனாய் எனச் சத்தமிட்டார். நான் போகவில்லை என்பதை எனது தங்கையும், அக்காவும் அறிவார்கள். இவ்வளவு அநீதங்களெல்லாம் நடந்த போதும் கூட நான் மிகவும் பொறுமையாக இருந்தேன். இனிமேலும் என்னால் இயலாது.

     ilan2

                எனது வகுப்பாசிரியர் பண்டார, வகுப்பைப் பொறுப்பேற்கும் அன்று எனது எல்லா வேலைகளையும் விட்டுவிட்டு ஆசிரியருக்கு உதவினேன். அப்படியெல்லாம் செய்த என் மீது வீண் பழி சுமத்துகிறார்கள். இந்தப் பாடசாலைக்காக பாடுபடுவதுதான் எனது மிகப் பெரும் தவறு. பாடசாலையில் ஏதேனும் போட்டிகள், விழாக்களின் போது நான் நடனமாடாமல் இருந்தால்தான் ஆச்சரியமாக இருக்கும். ஜயசுந்தர ஆசிரியை, ரஞ்சனி ஆசிரியை ஆகியோருக்கு இது தெரியும். எனது அப்பாவுக்கும், பண்டார ஆசிரியருக்கும் இனியும் கவலைகள் தர என்னால் முடியாது. நான் இன்று செய்யப் போகும் காரியத்தால் ஏனைய பிள்ளைகளுக்கு இம் மாதிரியான கீழ்த்தரமான வேலைகள் நடக்காமலிருக்கும் என எனக்குத் தோன்றுகிறது.

     

                சில ஆசிரியர்கள் பிரச்சினையொன்று வரும்போது எனது குடும்பத்தை இழுக்கிறார்கள். நான் இங்கு சொல்வது யார் குறித்து என்பது என் அப்பாவுக்குத் தெரியும். நான் இன்னும் உயிருடன் இருந்து, இந்தப் பாடசாலையில் ‘வேசி’ எனப் பேச்சுக் கேட்டுக் கேட்டு O/L பரீட்சையைக் கூட என்னால் ஒழுங்காக எழுத முடியாது. அப்பாவிப் பிள்ளைகள் சிறியதொரு தவறைச் செய்தால் அப் பிள்ளைகளை ‘வேசி’ எனக் கூப்பிடுவதை நிறுத்துங்கள். பிள்ளைகள் பற்றி முறைப்பாடுகள் வரும்போது யார் சரி, யார் தவறு என்பதைத் தேடிப் பாருங்கள். எல்லா அவப் பெயர்களையும் எனக்கும், என் தங்கைக்குமே கூறுகிறார்கள். எனது பாடசாலையில் 50%மானவர்களுக்கு நண்பர்கள் இருக்கிறார்கள். அவையெல்லாம் அதிபருக்குத் தெரியாது. நாங்கள் சொல்வதும் இல்லை. அதனால்தான் எம்மையே குற்றம் சாட்டுகிறார்கள்.

     

     ilan3           நான் எனது அப்பாவை மிகவும் நேசிக்கிறேன். எவருடைய முன்பும் நின்று ‘எனது மகள் செய்த தவறுகளுக்கு மன்னித்துக் கொள்ளுங்கள்’ என அவர் மன்றாடுவதை நான் விரும்பவில்லை. என்னை பாடசாலையிலிருந்து விலக்கிவிடும்படி அதிபர் கூறவிருக்கிறார். நாங்கள் நல்லதை மாத்திரமே செய்தபோதும், போட்டிகளிலெல்லாம் வென்றபோதும் எமக்கு நற்பெயரெதுவும் சூடவில்லை. ஆனால் தவறொன்று செய்தவிடத்து முழுப் பாடசாலைக்கும் கேட்கும் வண்ணம் சத்தமிடத்தான் அவருக்குத் தெரியும். பாடசாலைக்கே நான் ஒரு இழுக்கு என அவர் கூறுகிறார். இவ்வாறெல்லாம் ஏச்சுக் கேட்டுக் கேட்டு என்னால் பாடசாலைக்குப் போக முடியாது. கமகே ஆசிரியரும் கூட நான் நடத்தை கெட்ட பிள்ளை எனக் கூறினார். நான் அப்பொழுதெல்லாம் கூட எனது O/L பரீட்சைப் பெறுபேறுகளின் மூலம் எனது நல்ல நடத்தையை அவர்களுக்குக் காட்டத் தீர்மானித்துக் காத்திருந்தேன். எனினும் இப்பொழுது அதிகம் தாமதமாகி விட்டது. இனி செய்ய ஏதுமில்லை.

     

                பண்டார ஆசிரியர், நடன ஆசிரியைகள் இருவர், பிரபா ஆசிரியை ஆகியோர் மாத்திரமே இந்தப் பாடசாலையில் எனது திறமைகளைப் பற்றிக் கூறிப் பாராட்டியவர்கள். பிரபா ஆசிரியையிடம் சென்று எனது பிரச்சினைகளைக் கூறி ஆறுதல் தேடியபோது, நான் நன்றாக பரீட்சையில் சித்தியெய்த வேண்டுமென எண்ணியிருந்தேன். ஆனால் என் கனவுகள் எல்லாம் அழிந்து போயின. என்னால் இப்பொழுது O/L பரீட்சை தவிர்த்து அடுத்த ஜென்மத்தில் எந்த இடம் கிடைக்குமெனக் கூட எண்ணிப் பார்க்க இயலவில்லை.

     

                அப்பா, நீங்கள் என்னுடைய பேரில் இருக்கும் காணியை உங்கள் பெயருக்கு மாற்றிக் கொள்ளுங்கள். நானில்லாமல் போனால் உங்களைக் கவனித்துக் கொள்ள ஆளிருந்தால் அது ஆச்சரியம்தான். உங்களிடம் பணம் இருப்பதால்தான் உங்களுடன் இருப்பவர்களெல்லாம் கூட இருக்கிறார்கள். பணம் இல்லாமல் போன நாளில் உங்களுடன் யாரும் இருக்க மாட்டார்கள். அவ்வாறு நடக்க இடமளிக்கக் கூடாது. இறுதியான, இறுதியான இந்தக் கணத்திலும் கூட எனக்குத் தென்படுவதெல்லாம் எனது அப்பாவின் கண்களிரண்டும் மாத்திரமே. எனக்கு உங்களை விட்டுப் போவது மிகுந்த கவலையைத் தருகிறது. முடியுமென்றால் தங்கையையும் அந்தப் பாடசாலையிலிருந்து நீக்கி விடுங்கள். அந்த அதிபர் இருக்கும்வரை தங்கைக்கும் பாரபட்சம் காட்டுவார்.

     

                அம்மா, நான் உங்களையும் மிகவும் நேசிக்கிறேன். அம்மா என்னுடன் இன்று இன்னும் கதைக்காததற்குப் பரவாயில்லை. சந்தோஷமாக இருங்கள். என்னுடைய அக்காவைத்தான் இந்த இறுதி நேரத்திலும் பார்த்துக் கொள்ள முடியவில்லை. நீங்களும் இருக்கும் இடத்தில் சந்தோஷமாக இருங்கள். என்னுடைய அப்பாவை கவனித்துக் கொள்ளுங்கள். தங்கையே அவர் பாரிய நெருப்புக்கிடையே வெந்துகொண்டிருக்கிறார்.

     

                நானில்லாமல் போனால் உங்களுடைய பிரச்சினைகளை யாரிடம் கூறுவீர்கள் அப்பா? எழுத எழுத எனக்கு எனது இதயத்தில் கவலை அதிகரித்துக் கொண்டே வருகிறது. அடுத்த ஜென்மத்திலும் கூட ஆறுதல் கிடைக்காமல் போகும்.

     

                என்னைப் போல தவறிழைக்காத பிள்ளைகள் இன்னும் இருப்பார்கள். அவர்களையும் பாடசாலையிலிருந்து விலக்கி விடப் பார்ப்பார்கள். அவர்களுக்காகவே நான் இத் தீர்மானத்தை எடுத்தேன்.

     

                I love my family

     

                நான் எனது குடும்பத்தை நேசிக்கிறேன்.

     

                இங்கு என்னைப் பார்த்தவுடன், பண்டார ஆசிரியருக்கு முதலில் தெரிவியுங்கள்.

                தற்காலத்தில் வயதில் பெரியவர்கள் பலர் சமூக மாற்றங்களை ஏற்றுக் கொள்ளவோ, கற்றுக் கொள்ளவோ மறுக்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரையில் Facebook உட்பட, சமூக வலைத்தளங்கள் எல்லாமே தீயவை, வழிகெடுப்பவை மாத்திரமே. எனவே அவற்றைப் பாவிப்பவர்களும் கூட மோசமானவர்கள் என்பதுதான் அவர்களின் எண்ணமாக இருக்கிறது.

                உண்மையில் அவளது தற்கொலைக்கு யார் காரணம்? என்னைக் கேட்டால் ‘அதிபர்’ என்றுதான் சொல்வேன். இந்த விடயத்தைப் பொறுத்தவரையில் பல வருடங்கள் சேவையாற்றியவரும், இராணுவப் பயிற்சி பெற்றவருமான ஒரு பொறுப்புள்ள அதிபர் எதையெல்லாம் செய்யக் கூடாதோ அதைத்தான் செய்திருக்கிறார்.

                # உண்மையில் என்ன நடந்தது என சிறுமியிடம் விசாரிக்கவில்லை.

                # எந்தப் பெண்ணையும் குற்றம் சாட்டக் கூடாத ஒரு பட்டப் பெயரை பகிரங்கமாகக் கூறி, அவள் மீது முத்திரை குத்தியமை.

                # 5000 பேர் முன்னிலையில் அவமானப்படுத்தியமை.

                # பதின்ம வயது என்பது எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடிய வயது என்பது குறித்து கவனமெடுக்காமை.

                சிறுமியின் கடிதத்தில் அவள் குறிப்பிட்டிருக்கிறாள்.

                “எனக்கு நேர்ந்தது, இனி எனது பாடசாலையில் எந்த மாணவிக்கும் நிகழக் கூடாது”

                இனி நேராது என்பதற்கு எந்த உத்தரவாதமுமில்லை. எனினும் இப்பொழுது அந்த அதிபரை என்ன செய்யலாம்? அதிபரை அந்தப் பாடசாலையை விட்டு விலக்கி விட வேண்டும் என்பதுவும், சிறுமியின் மேற்படி கடிதத்தை அவளது மரண வாக்குமூலமாகக் கொண்டு, தற்கொலைக்குத் தூண்டியதற்காக அதிபரைக் கைது செய்து தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதுமே பொதுமக்களின் தீர்ப்பாக இருக்கிறது. ஆனால் ஏற்கெனவே இலங்கையில் ஃபேஸ்புக் எனப்படும் சமூக வலைத்தளத்தைத் தடை செய்ய வேண்டுமெனக் கூறி வரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆதரவாளர்களுக்கு இம் மரணம் ஒரு ஆதாயமாக அமைந்துவிட்டது. எனவே அரச தரப்பு அமைச்சர்கள் சிலரும், இலங்கைக் காவல்துறையும் அதிபரின் சார்பாக இருப்பதனால் அதிபர் இன்றுவரை விசாரணைகளுக்குக் கூட ஆளாகாமல் தனது பதவியில் தொடர்ந்தும் இயங்கி வருகிறார். அரசை எதிர்க்கப் பயந்து சிறுவர் அமைப்புக்களும், பெண்ணிய ஆதரவாளர்களும் கூட மௌனமாக இருப்பதனால் பொதுமக்கள் கொந்தளித்து அதிபருக்கு ஏதும் தீங்கிழைத்து விடக் கூடாதென்று, காவல்துறையினர் அதிபருக்கு தினமும் பாதுகாப்பு வழங்கி வருகின்றனர்.

                இந்தச் சம்பவம் இன்னும் சொற்ப நாட்களில் பொருட்களின் விலையேற்றத் தகவல்களினாலும், மாகாண சபைத் தேர்தல் செய்திகளாலும் மறக்கடிக்கப்பட்டு விடக் கூடும். ஆனால் பேரிழப்பென்பது, பாதிக்கப்பட்ட அப்பாவிப் பெற்றோருக்கும், சகோதரிகளுக்கும் மாத்திரமே.

    – எம்.ரிஷான் ஷெரீப்,

    இலங்கை

    Share
  • திருமால் திருப்புகழ்…. (2)

     

     

    கிரேசி மோகன்

    DD-001-01
    ‘’தனனா தனத்த தனனா தனத்த
    தனனா தனத்த -தனதான’’
    “சிவனார் கொடுத்த சிலைநா ணிழுத்துTN_174656000000
    சிலைஜா னகிக்கு -மணமாலை
    இடுரா மபத்ர ரகுவீ ரகத்ய
    மறைதே சிகர்க்கு -பரிவான,
    அவமா னமுற்று அரியே யெனக்கை
    அணிசே லைவிட்டு-அவள்கூவ
    சரணா கதிக்கு பதிலாய் உடுத்த
    வளர்சே லைகொட்டி -அருள்வோனே
    கவணால் விரட்ட பரண்மேல் இருக்கும்
    குறமா தணைக்க -மயலேறி
    கிழவே டமுற்று வருவே லவர்க்கு
    முறைமா மசக்தி -அபிராமி
    சிவகா மிசுத்த பரிபூ ரணிக்கு
    வெகுநே சமுற்ற -முதியோனே
    அலைபாற் கடற்குள் விடசே டமெத்தை
    வளர்யோ கநித்ரை -பெருமாளே”….
    ————————————————————-

    பெருமாள் திருப்புகழ்….
    ‘’நாத விந்துக லாதி நமோ நம’’ மெட்டில்….

    “ஏழு கொண்டல வாடா நமோ நமnarasimha-16-mayapur
    ஏளும் நஞ்சணை சேடா நமோ நம
    ஏறும் அன்பர்கள் தோழா நமோ நம -குருபீஷ்மர்
    ஆயி ரம்புகழ் நாமா நமோ நாம
    தேச மெங்கிலும் ஆழ்வார் கள்பாடிய
    ஆயி ரம்தொழு மாலே நமோ நம -கலிலேறி

    வாழும் பண்டரி நாதா நமோ நம
    ஏழை சங்கட தீர்வே நமோ நம
    ஏழ்சு ரங்களின் ராகா நமோ -மஹனீயர்
    ராயர் கும்பிடு மூலா நமோ நம
    வாயு அஞ்சனை சேயார் சிநேகித
    ராம சந்திர ராஜா நமோ நம -கலிதோறும்
    ஊழில் உண்டுமிழ் சேயே நமோ நம
    ஆதி யந்தமி லாதோய் நமோ நம
    கேர ளம்குரு வாயூர் துலாபளு -சமனாகி
    தீர அன்பர்கள் பாடா னபாடது
    ஏறும் அம்பல கோபா லகோகுல
    கேளி சம்பவ லீலா நமோ நம -இரணீயன்

    வீழ கம்பமு லாநா ரகேசரி
    மீன மந்தர மாமே ருகூர்மவ
    ராக அந்தண மூணா னராமமு -ரளியூதி
    பூமி மங்கையின் தாளா தபாரமும்
    பாத கம்புரி கீழோர் கள்மேலுற
    நேமி சங்குவில் வாளோ டுகோலணி -பெருமாளே”….
    —————————————————————————————–

    பெருமாள் திருப்புகழ்….

    Tamil-Daily-News-Paper_43825495244
    ‘’தத்தன தனத்ததன தத்தன தனத்ததன
    தத்தன தனத்ததன -தனதான….’’

    “கற்பனை யுதிப்பதுவும் ,அற்புதம் அளிப்பதுவும்
    சிற்றலை சமுத்திரம -தனிலாடும்
    நச்சர வமெத்தைவளர் பச்சைநி றவெற்பனைய
    அச்சுத மயக்கமதின் -அசைவாலே

    நிர்குண சலிப்பிலுற முக்குணம் படைத்துலகில்
    தற்பரம் தனக்குவமை -தனில்மூழ்க
    பற்பல வுயிர்த்தொகைகள் நிற்பதும் நடப்பதுவும்
    பத்தென வுதித்தவனின் -பரலீலை

    அற்பம னவச்சமட புத்திநி லைபெற்றுவுயர்
    சத்திய வழிக்குவர -அருள்வாயே
    இத்தனை எதற்கிறைவ, இப்பொழு தெனக்கருள
    சத்குரு முறைப்படி -வருவாயே

    விற்கலை விரக்தியுற வித்தகம் உரைத்தவனை
    வெற்றியில் செலுத்தரதம்-விடுவோனே
    திட்டிட இடைச்சிமணல் அப்புயி தழுக்குள்அவள்
    சொக்கிட விசித்ரமருள் -பெருமாளே”….
    ———————————————————————————————————————-

     படங்களுக்கு நன்றி:

    https://www.google.co.in/search?q=%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D&espv=210&es_sm=93&tbm=isch&imgil=_S51SGfmBBPqkM%253A%253Bhttps%253A%252F%252Fencrypted-tbn1.gstatic.com%252Fimages%253Fq%253Dtbn%253AANd9GcQBJ4TT-xNhMdfVLJwgv5gYEwKTmY8mmG1KBSqXiUk0J95EPxrc%253B300%253B225%253BG4uy-9V0wf28-M%253Bhttp%25253A%25252F%25252Fwww.maalaimalar.com%25252F2012%25252F08%25252F17150048%25252Fthree-benefits-give-perumal-vr.html&source=iu&usg=__9owwvIA-U4o8U6-TL53SkpG_Nuc%3D&sa=X&ei=J776UvSlBc2hiQfp4YHADw&ved=0CDcQ9QEwAQ&biw=1366&bih=624#facrc=_&imgdii=_&imgrc=_S51SGfmBBPqkM%253A%3BG4uy-9V0wf28-M%3Bhttp%253A%252F%252Fmmimages.maalaimalar.com%252FArticles%252F2012%252FAug%252Fc8fcb411-c1d7-4797-907f-640c38763e43_S_secvpf.gif%3Bhttp%253A%252F%252Fwww.maalaimalar.com%252F2012%252F08%252F17150048%252Fthree-benefits-give-perumal-vr.html%3B300%3B225

    Share
  • மெலட்டூர் பாகவத மேளா!…

    தஞ்சை வெ.கோபாலன்

     

    தமிழகத்தில் தோன்றிய பல அரிய கலைகளுடன், இங்கு ஆட்சி புரிய வந்த பிறமொழி பேசும் மக்களால் நமக்களிக்கப்பட்ட கொடை பல புதிய கலைகள். அப்படி இங்கு புகுந்த பல கலைகளில் ஹரிகதா, லாவணி, பாகவத மேளா, நடன வகைகளில் குச்சிபுடி, மோகினியாட்டம், யக்ஷகானம், ஒடிசி, கதக் போன்றவற்றையும் குறிப்பிடலாம். நம் நாட்டில் காலம் காலமாய் வளர்ந்து வந்த தெருக்கூத்து இந்த கலைகளுக்கெல்லாம் முன்னோடியாக இங்கே திகழ்ந்திருக்கிறது.

    தஞ்சை மாவட்டத்தில் சில கிராமங்களில் அந்தந்த ஊரில் பிரபலமான மாரியம்மன் கோயில்களில் திருவிழாக்களுக்காகக் காப்பு கட்டுதல் என்றொரு நிகழ்ச்சி உண்டு. அப்படி காப்பு கட்டி திருவிழா முடிந்து கொடியிறக்கம் ஆகும் வரை அந்த ஊர்க்காரர்கள் வெளியூர்களுக்குச் செல்வதில்லை. அப்படி வெளியூர் போக வேண்டுமென்று இருப்பவர்கள் காப்பு கட்டும் தினத்தில் கிராமத்தை விட்டு வெளியேறி வேறு எங்காவது இருந்துவிட்டு மறுநாள் வருவார்கள். அப்படி எங்கும் போக முடியாதவர்கள் அவ்வூர் எல்லைக்கு அப்பால் ஏதாவதொரு திடலிலோ, அல்லது ஆற்றின் மணல் பரப்பிலோ தெருக்கூத்து ஏற்பாடு செய்துவிட்டு விடியவிடிய கூத்து பார்த்துவிட்டு ஊர் திரும்புவார்கள். அப்படிப்பட்ட நிகழ்ச்சி தஞ்சை ஜில்லா குத்தாலம், தேரழந்தூர் அருகிலுள்ள கோமல் எனும் கிராமத்தில் அந்த நாட்களில் நடப்பது வழக்கம். கோமல் மாரியம்மன் ஆலயத்துக்கு அண்டை அயல் கிராமங்களிலிருந்து பதினெட்டு தேர்கள் வரும். ஊரே அல்லோலப் படும். மாரியம்மனுக்குக் காப்பு கட்டும் நாளன்று அங்கு ஓடும் வீரசோழன் நதி வரண்டு கிடக்கும் மணற்பரப்பில் தெருக்கூத்து இரவு தொடங்கி மறுநாள் விடியும் வரை நடக்கும். கோமல் எல்லை அந்த ஆற்றின் கரையோடு முடிவடைந்துவிடுவதால், மணற்பரப்பு தேரழந்தூர் பகுதியாகிவிடும். அதனால் அங்கு இருந்தால் காப்புக் கட்டுக்குள் இருப்பதிலிருந்து விலக்கு கிடைக்குமென்பது எண்ணம்.

    தமிழ் தாத்தா டாக்டர் உ.வே.சாமிநாதய்யரின் சுயசரிதமான “என் சரித்திரம்” நூலில் இந்தத் தெருக்கூத்து பற்றி விவரிக்கிறார். இரவு படுக்கைக்குப் போகும்போது தெருக்கூத்து நடக்கும் சத்தம் காதில் விழுமாம். அப்போது அங்கு பாடுபவன் “டிங்கினானே…..” என்ற சொல்லை தொடர்ந்து பல மணி நேரம் ஸ்வரம் மாற்றி மாற்றி பாடிக் கொண்டிருப்பானாம். இவர் ஒரு தூக்கம் போட்டு எழுந்தால் அந்தப் பாட்டு சற்று விரிவடைந்து “புடிங்கினானே…..” என்று பாடிக் கொண்டிருப்பானாம். விடியும்போது அந்த பாடல் வரி ஒரு முழு வடிவைப் பெறுமாம். எப்படி? “மரத்தைப் புடிங்கினானே….” “பீமசேன மகாராஜா மரத்தைப் புடிங்கினானே…..” என்று. இப்படி ஒரு பாட்டை நாட்கணக்கில்கூட பாட வசதியுள்ளது தெருக்கூத்து.

    தெருக்கூத்தில் கதா பாத்திரங்கள் முதலில் தங்களை அறிமுகம் செய்து கொள்ளும் பாங்கே சிறப்பாக இருக்கும். முதலில் விதூஷகன் எனும் கோமாளி வந்து அன்று என்ன கூத்து என்பதை ஆடிப் பாடி விளக்குவான். ஜனங்கள் அவனை உள்ளே போகச்சொல்லி கூச்சலிடுவார்கள். பின்னர் கதாபாத்திரங்கள் ஆடிக்கொண்டும் பாடிக்கொண்டும் தங்களை அறிமுகம் செய்து கொண்டபின் கதை ஆரம்பமாகும். புராணத்தில் வரும் ஒரு சிறிய கதை எடுத்துக் கொள்ளப்பட்டு நடிக்கப்படும். ஏராளமான ஒப்பனையுடன் பாத்திரங்கள் அபஸ்வரத்தில் பாடி ஆடி நடிப்பது கண்கொள்ளா காட்சி. போதாதற்கு ஒரு ஆண் பெண் வேடம் போட்டுக்கொண்டு முடிந்தவரை பெண்மை சாயலைக் கொண்டுவர முயற்சித்தாலும், அவனுடைய கரகரத்த ஆண் குரல் காட்டிக் கொடுத்துவிடும். இப்படிப்பட்ட தெருக்கூத்துதான் நமது நாடகங்களுக்கும் திரைப்படங்களுக்கும் முன்னோடியாக இருந்திருக்கிறது.

    இப்படி தெருக்கூத்தில் ஊறியிருந்த தமிழகத்துக்கு விஜயநகர சாம்ராஜ்யம் உச்சத்தில் இருந்த சமயம் நாயக்க மன்னர்கள் தென் தமிழ்நாடு முழுவதையும் ஆங்காங்கே தங்கள் ராஜாங்கத்தை ஸ்தாபித்து அரசாட்சி செய்யத் தொடங்கினார்கள். அப்படி தஞ்சையை ஆண்டு நாயக்க மன்னர்கள் சேவப்ப நாயக்கர், அச்சுதப்ப நாயக்கர், ரகுநாத நாயக்கர், விஜயராகவ நாயக்கர் ஆகிய நால்வர் இங்கு ஆட்சி புரிந்திருக்கிறார்கள். இவர்கள் காலத்தில் சேவப்ப நாயக்கர் ஆட்சியின் கடைசி காலகட்டம் தொடங்கி ரகுநாத நாயக்கர் காலம் வரையிலான பொற்காலத்தில் இங்கு கோவிந்த தீக்ஷதர் என்பவர் அமைச்சராக இருந்தார். இவர் நான்கு வேதங்களையும் விஜயநகர சாம்ராஜ்யத்தில் படித்துப் பாண்டித்யம் பெற்றவர். இவரது காலத்தில் இவர் செய்த அரிய பணிகள் இன்றும் போற்றிப் பாராட்டப் படுகிறது.

    காவிரி நதியில் பல ஊர்களில் படித்துறை அமைத்தது, வேத பாடசாலைகள் அமைத்தது, கலைகளுக்கு முதன்மைத் தகுதி அளித்து கலைஞர்களைப் போற்றியது. கல்விச்சாலைகளை அமைத்தது, நிர்வாகத்தை ஒழுங்கு படுத்தி அரசாங்கத்தின் வருமானத்தை அதிகப்படுத்தியது, ஆலயங்களைப் புனரமைத்தும் புதிய ஆலயங்களை எழுப்பியும் இவர் செய்த தொண்டு போற்றத் தக்கது. திருவரங்கம் ஆலயத்துக்குப் பல கோபுரங்களையும் பிரகாரங்களையும் அமைத்த அச்சுதப்ப நாயக்கருக்கு ஊக்கசக்தியாக விளங்கியவர் இந்த கோவிந்த தீக்ஷதர். இவர்கள் காலத்தில் ஆந்திர தேசத்திலிருந்து இங்கு வந்ததுதான் பாகவத மேளா எனும் அரிய கலை. இது நரசிம்ஹ ஜெயந்தி எனும் விழாவையொட்டி நாட்டிய நாடகமாக நடிப்பார்கள். ஆண்களே பெண் வேடம் அணிந்து முழுக்க முழுக்க தெலுங்கில் பேசியும் பாடியும் நடிப்பது பாகவத மேளா. இந்த அரிய கலையைப் பற்றிய சில விவரங்களை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

    நாயக்க மன்னர்கள் தஞ்சைக்குக் கொணர்ந்த இந்த அரிய கலை இப்போதும் தஞ்சையிலிருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் திட்டை எனும் ஊருக்குத் திரும்பும் சாலையிலிருந்து சுமார் ஐந்து கல் தொலைவில் அமைந்துள்ள மெலட்டூர் எனும் ஊரில் உயிர்ப்போடு நடைபெற்று வருகிறது. மெலட்டூர் எனும் வளமான கிராமத்துக்கு திட்டையைத் தாண்டி செல்ல வேண்டும் மெலட்டூரில் வரதராஜ சுவாமி எனும் பெருமாள் ஆலயத்தில் நரசிம்ஹ ஜெயந்தியை யொட்டி இவ்விழா நடைபெறுகிறது.

    பக்தர்களுக்கு, குறிப்பாக வைணவர்களுக்கு நரசிம்ஹ ஜெயந்தி சிறப்பான பண்டிகை. அந்த நரசிம்ஹ ஜெயந்தியன்று மெலட்டூர் கிராமமே களைகட்டிவிடும். காரணம் அன்றிரவுதான் அலங்கரிக்கப்பட்ட பந்தலில் “பிரஹலாத சரித்திரமு” எனும் தெலுங்கு மொழியிலான இசை நாடகம் நடத்தப்பெறும். மகாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களில் நான்காவது அவதாரம் நரசிம்ஹாவதாரம். உடல் மனித வடிவிலும் தலை சிம்ஹ வடிவிலும் இருக்கும். கிருஷ்ண பரமாத்மாவின் வாழ்வை சித்தரிக்கும் ஸ்ரீமத் பாகவதத்திலிருந்து மேலும் சில பகுதிகள் நாடகங்களாக நடத்துவார்கள்.

    இந்த விசேஷத்துக்காக இவ்வூரிலிருந்து வெளியூர்களுக்கும் வெளிநாடுகளுக்கும் பணி நிமித்தமாகக் குடிபெயர்ந்த பலரும் நரசிம்ஹ ஜெயந்தி சமயத்தில் ஊர் திரும்பிவிடுவார்கள். அப்படி ஊர் திரும்புவர்களில் பலர் இந்த பாகவத மேளா நாடகங்களில் வேடமிட்டு நடிப்பவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு முன்பு இவர்களுடைய அப்பா, பாட்டனார் என்று வழிவழியாக நடிப்பவர்கள் அந்தந்த பாத்திரங்களைத் தாங்களே ஏற்று தொடர்ந்து இன்று வரை நடித்துக் கொண்டிருக்கிறார்கள். இதை ஏதோ பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக அல்லது தங்கள் திறமையைக் காட்டுவதற்கு என்றுமட்டுமில்லாமல் ஆத்மார்த்தமாக ஈடுபாட்டோடு பக்தி சிரத்தையாக செய்து கொண்டிருக்கிறார்கள். அதற்காக விரதமிருந்து தன்னை அந்தந்த பாத்திரங்களுக்கு அருகதையாக்கிக் கொள்ளும் அந்த ஈடுபாடு பாராட்டுப் போற்றத்தக்கதாக இருக்கும்.

    ஊர் வந்து சேர்ந்த விநாடி முதல் தங்கள் வேடத்துக்கான வசனம் பாடல்களை ஒத்திகைகளைப் பலமுறை பார்த்து எந்த தவறும் ஏற்பட்டுவிடாதபடி கவனத்தோடு மேற்கொள்வார்கள். இந்த அற்புதக் கலையை பல தலைமுறைகளுக்கு முன்பாக இங்கு கொண்டு வந்து இன்று வரை நடைபெறும்படியான பலமான அஸ்திவாரத்தை அமைத்துத் தந்த பிரம்மஸ்ரீ வேங்கட்டராம சாஸ்திரி என்பவரை இவர்கள் இன்றளவும் மனத்தில் நிறுத்தி போற்றி வழிபட்டு வருகிறார்கள். இவருடைய படைப்புகள் பல கதைகள் இருந்தாலும் இந்த நரசிம்ஹ ஜெயந்தியை யொட்டி நடைபெறும் பிரஹலாத சரித்திரம் ஒரு முக்கியத்துவம் வாய்ந்தது. நாடக பாத்திரங்கள் அந்த பாத்திரமாகவே மாறிவிட முடியுமா. உணர்வால் அப்படி ஆகிவிடுகிறார்கள் நரசிம்ஹம் இரணியனை மடியில் வைத்துக் கிழிக்கும் கட்டத்தில். அந்த நேரத்தில் ஏற்படும் உக்கிரத்தைத் தணிக்க அடடா, நிர்வாகிகள் என்ன பாடு படுகிறார்கள். நரசிம்ஹமாக வேடமிட்டவர் நிஜத்தில் நரசிம்ஹமாக ஆகிவிடும் காட்சி அற்புதம். காண வேண்டிய காட்சி.

    இந்த மெலட்டூரோ, அல்லது இங்கு நடக்கும் பாகவத மேளாவோ, தமிழ்நாடு சுற்றுலாத் துறையினரால் விளம்பரப்படுத்தப்பட்டு அதற்காக இங்கு ஆர்வலர்களை சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறார்களா என்று தெரியவில்லை. ஆனால் நாட்டியக் கலையில் ஆர்வமுடைய கலைஞர்கள் பலரும் இங்கு நடைபெறும் பாகவதமேளாவை கவனிக்கிறார்கள். ஆண்டுக்கு ஆண்டு இந்நிகழ்ச்சி பெற்று வரும் முக்கியத்துவம் மக்களால் உணரப்படுகிறது. இந்தக் கலை எத்தனை காலத்துக்கு முந்தையது, யார் இந்தக் கலையை வளர்த்தது, அல்லது இங்கு அறிமுகம் செய்தது போன்ற ஆராச்சியில் யாரும் ஈடுபடுவதில்லை. இங்கு மக்களோடு ஒருங்கிணைந்து இந்த மண்ணின் கலையாக இன்றும் பிரகாசித்துக் கொண்டிருப்பது பாகவத மேளா.

    14ஆம் நூற்றாண்டில் விஜயநகர சாம்ராஜ்யம் விரிவு படுத்தப்பட்டு தென்னாடு முழுவதும் நாயக்க மன்னர்கள் ஆட்சியில் வந்தபோது பழைய சோழ சாம்ராஜ்யத்தின் பகுதிகளும் அவர்களது ஆளுமையின் கீழ் வந்தது. விஜயநகர சாம்ராஜ்யம் ஹிந்து சாம்ராஜ்யம் என்று புகழ் பெற்றதற்கிணங்க இந்து கோயில்கள் புத்துணர்வு பெற்றன. இடிபாடுகள் சரிசெய்யப்பட்டு புனருத்தாரணம் செய்யப்பட்டன. அழிந்தவை பலவாக இருந்தால் ஒன்றையாவது சரி செய்து மீண்டும் தலையெடுக்கச் செய்தனர் நாயக்க மன்னர்கள். அப்படி பல சைவ வைணவ ஆலய இடிபாடுகளிலிருந்து மீட்டெடுப்பு செய்யப்பட்ட பல கோயில்களில் திருக்காட்டுப்பள்ளி அருகேயுள்ள செந்தலையும் ஒன்று என்று ஆய்வறிஞர் குடவாயில் பாலசுப்பிரமணியம் எழுதுகிறார்.

    இப்படி புகழ் பரப்பி உருவான விஜயநகர சாம்ராஜ்யத்தை தக்ஷிண சுல்தான்கள் விட்டு வைப்பார்களா? அவர்கள் மீது போர் நடத்தி 1565இல் தலைக்கோட்டை யுத்தத்தில் வென்று விஜயநகர சாம்ராஜ்யத்தின் அழிவினைத் தொடங்கி வைத்தார்கள். விஜயநகரத்தின் ஆட்சியில் பெருமைக்குரியவர்களாக விளங்கிய பல பண்டிதர்கள், கவிஞர்கள், வேத விற்பன்னர்கள், கலைஞர்கள் என்று பலரும் அங்கிருந்து புறப்பட்டு தஞ்சாவூர் ராஜ்யத்தில் வந்து குடியேறினார்கள். இங்கு அப்போது (1560 முதல் 1600) வரையிலான நாற்பதாண்டு கால ஆட்சியில் அப்போதைய தஞ்சாவூர் நாயக்க மன்னரான அச்சுதப்ப நாயக்கர் அப்படி ஓடிவந்த கலைஞர்களுக்கு அடைக்கலம் கொடுத்து இங்கு குடி அமர்த்தினார். எந்தவொரு சாம்ராஜ்யத்தின் தலைநகர் ஒரு ஆற்றங்கரையில்தான் அமைந்திருக்கும். ஆனால் தஞ்சாவூர் காவிரி ஆற்றிலிருந்து பல கல் தொலைவில் இருந்ததால் இங்கு வந்தேறிய கலைஞர்கள் தஞ்சையைச் சுற்றி ஆற்றங்கரை உள்ள ஊர்களில் குடியேறி வசிக்கத் தொடங்கினார்கள்.

    1125 முதல் 1150 வரை சோழ நாட்டை ஆண்ட விக்கிரம சோழன் என்பான் பூமியில் புதையுண்டிருந்த ஒரு பெரிய லிங்கத்தை தோண்டியெடுத்து அங்கு ஒரு ஆலயத்தை நிறுவி அந்த இடத்துக்கு உன்னதபுரி என்றும், அங்கு குடிகொண்டி ஈசருக்கு ‘உன்னதபுரீஸ்வரர்’ என்றும் பெயர் சூட்டியிருந்தான். ஆக 12ஆம் நூற்றாண்டில் உருவாகியிருந்த இந்த உன்னதபுரியில்தான் இப்போது குடிபெயர்ந்து வந்த கலைஞர்களை நாயக்க மன்னரின் அமைச்சராக விளங்கிய கோவிந்த தீக்ஷிதரின் ஆலோசனையின் பேரில் குடியேறினார்கள். அப்படி இங்கு குடியேறிய குடும்பங்கள் 510 என்கிறது ஆதாரங்கள். இங்கு குடி அமர்த்தப்பட்ட ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு வீடு, அந்த வீட்டுக்குத் தனியாக ஒரு கிணறு, விவசாயம் செய்ய நிலம், கன்றோடு கூடிய ஒரு கறவை பசு ஆகியவை கொடுக்கப்பட்டன. இவர்கள் தவிர கைத்தொழில்களில் திறமை படைத்தவர்கள் பலரும் இவர்களைப் போலவே இங்கு குடியமர்த்தப்பட்டனர்.

    அரசர் அச்சுதப்ப நாயக்கர் தன்னுடைய அமைச்சர் கோவிந்த தீக்ஷிதர் சொல்லை வேதவாக்காக எடுத்துக் கொண்டு செயல்படுபவர். நாயக்க மன்னருடைய பல பெருமைகளுக்கு இந்த அமைச்சரே காரணமாக இருந்தார் என்றால் மிகையல்ல. இப்படி தெலுங்கு நாட்டிலிருந்து வந்த பிராமணர்களை அவ்வூரில் இருந்த உன்னதபுரீஸ்வரர் ஆலயத்தைச் சுற்றி குடியமர்த்தி அக்ரகாரத்தை உருவாக்கினார். கோயிலை மேலும் விரிவுபடுத்திக் கட்டி அதற்கு குடமுழுக்கையும் செய்வித்தார். ஆலயத்துக்கு முன்புறமாகஒரு திருக்குளத்தையும் தென்மேற்கில் ஒரு குளத்தையும் அமைத்துக் கொடுத்தார். கோயிலுக்கு முன்புள்ள குளம் “சிவகங்கை தீர்த்தம்” எனவும், மற்றது அமைச்சர் தீக்ஷிதர் பெயரால் “ஐயன் குளம்” என்றும் வழங்கப்படுகிறது. இங்கு குடியேறிய பிராமணர்கள் அனைவரும் தெலுங்கு மொழி பேசுபவர்கள் என்பது சொல்லாமலேயே விளங்கும் அல்லவா?

    இப்படி நாயக்க மன்னருடைய ஆதரவும், அமைச்சர் கோவிந்த தீக்ஷிதரின் ஒத்துழைப்போடும் குடியேறியவர்கள் உன்னதபுரத்தை கலைகளில் சிறந்து விளங்கும் உன்னதமான புரமாக ஆக்கிவிட்டனர். நாயக்க மன்னர்கள் வைணவர்கள் எனும் முறையில் இங்கு வைணவத்தோடு அவர்கள் சுமந்து வந்த கலைகளும் வைணவ புராணங்களைச் சொல்பவைகளாகவும், இசை, நாட்டியம் ஆகிய கலைகளையும் இங்கு வளம்பெற செய்து வந்தார்கள். ஆக, இவர்களால் தெலுங்கு பிரதேசத்துக் கலைகளை இவர்கள் இங்கு கொண்டு வந்து கண்ணும் கருத்துமாக வளர்க்கத் தொடங்கினார்கள்.

    இப்படி உன்னதபுரியாக இருந்த சோழ நாட்டு ஊர் அச்சுதப்ப நாயக்கரின் கருணையால் பற்பல கலைகளும் தழைத்தோங்கிய காரணத்தால் இவ்வூரை அச்சுதபுரம், அச்சுதபுரி, அச்சுதாப்தி என்றெல்லாம் மக்கள் அழைக்கத் தொடங்கினர். அச்சுதப்ப நாயக்கர் காலத்தில் இவ்வூர் பெயர் மாற்றம் பெற்றது. இந்த அச்சுதபுரியே இன்றைய மெலட்டூர் கிராமம்.

    இங்கு குடியேறியவர்கள் மூச்சிலும் பேச்சிலும் இசையும் நடனமும் இருந்த காரணத்தால் இவர்களில் பலர் இசைக் கலைஞர்களாகவும், பாடல்களை இயற்றியும் பாடவும் கூடிய வாக்யேயக் காரர்களாய், நடன மணிகளாய் விளங்கினர். இப்படி அச்சுதபுரி எனும் மெலட்டூர் கலைகட்கு புகலிடமாக இருப்பதறிந்து தெலுங்கு பேசும் நாட்டிலிருந்து குடிபெயர்ந்து வேறு சில இடங்களில் குறிப்பாக பரவாக்கரை, மாணாங்கோரை, பள்ளியகரம் ஆகிய ஊர்களிலிருந்தும் கலைஞர்கள் இவ்வூருக்குக் குடிபெயர்ந்தார்கள். இப்படி நாளுக்கு நாள் கலைகளில் ஆர்வமுடையோர் வந்து குவியவும் இவ்வூர் ஜனத்தொகை மிக்கதோர் கலைநகர் ஆகியது.

    இப்படி இருந்து வரும் போது, அச்சுதப்பருக்குப் பிறகு ரகுநாத நாயக்கர், அதன்பின் அவர் மகன் விஜயராகவ நாயக்கர் ஆகியோர் காலத்தில் இங்கு குடியேறிய வம்சங்கள் மேலும் பெருகித் தழைத்தன. தஞ்சையின் கடைசி நாயக்க அரசர் விஜயராகவ நாயக்கரும் அவர் மகன் மன்னாருவும் போர்க்களத்தில் மதுரை சொக்கநாத நாயக்கரால் விஜயராகவரின் முதுமைப் பருவத்தில் கொல்லப்பட்டு விட்டதால், மராத்தியர்கள் ஆட்சி தஞ்சையில் மலர்ந்தது. ஏகோஜி எனும் சத்ரபதி சிவாஜியின் சகோதரர்தான் தஞ்சையின் முதல் மராத்திய மன்னர். பின்னர் அவர்கள் வம்சம் தஞ்சையை ஆண்டு கொண்டு வந்த நேரத்தில் 18ஆம் நூற்றாண்டில் தஞ்சையை துளஜேந்திர ராஜா (1728 முதல் 1735வரை) ஆண்டு கொண்டிருந்த நேரத்தில் காஞ்சிபுரம் பக்கத்திலிருந்து ஒரு பெரும் கூட்டம் குடிபெயர்ந்து மெலட்டூர் வந்து குடியேறினர். இவர்கள் மன்னர் துளஜாவின் ஆதரவைப் பெற்றிருந்த காரணத்தால், இங்கு ஊரின் வடமேற்கில் வரதராஜ பெருமாளுக்கு ஒரு கோயிலை எழுப்பினர். அங்கு பிரதிஷ்டை செய்யப்பட்ட பெருமாள் சிலையை அவர்கல் காஞ்சியிலிருந்து கொண்டு வந்திருந்தனர். அப்போது காஞ்சி மீது படையெடுத்து வந்த முஸ்லீம் படையெடுப்பாளர்களிடமிருந்து காப்பாற்ற இந்த தெய்வ மூர்த்தம் இங்கு கொண்டு வரப்பட்டதாக வரலாறு உண்டு.

    இப்படி ஊர் வளர்ச்சியடைய அடைய வசதிகளும் தேவைப்பட்டன. இதன் பொருட்டு ஊரின் மேற்கி ஒன்றும், வட மேற்கில் ஒன்றுமாக இரண்டு குளங்கள் வெட்டப்பட்டன. இவை நாராயண தீர்த்தம் என்றும் மற்றொன்று கருட தீர்த்தம் என்றும் பெயர் பெற்றன. துளஜாவுக்குப் பிறகு பட்டத்துக்கு வந்த பிரதாபசிம்ஹ மகாராஜா காலத்தில் ஒரு யோக நரசிம்ஹர் பிம்பம் நாராயண தீர்த்தக் கரையில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இவர் காலத்தில்தான் விருத்த காவேரி என வழங்கப்பட்ட வெட்டாற்றங்கரையில் ஒரு நந்தவனமும் ஒரு படித்துறையும் அமைக்கப்பட்டது.

    மெலட்டூரில் பரதம் காசினாதையா எனும் சிறந்த கலைஞர் தோன்றினார். இங்கு நாயக்க மராத்திய மன்னர்களான விஜயராகவ நாயக்கர், ஷாஜி மகாராஜா ஆகியோர் இயற்றிய நாட்டிய நாடகங்களையொட்டி நிருத்திய நாடகங்கள் உருவக்கப்பட்டன. கோபாலகிருஷ்ண சாஸ்திரி என்பவர் இந்தக் காலத்தில் மிகச் சிறந்த கலைஞராகப் போற்றப்பட்டிருக்கிறார். இந்த கோபாலகிருஷ்ண சாஸ்திரி என்பவரின் புதல்வர்தான் வெங்கட்டராம சாஸ்திரி என்பார். இவர்தான் பாகவத மேளா நாடகங்களை ஆக்கித் தந்தவர். இவரது காலம் 1743 முதல் 1809).

    இவருடைய தந்தையிடமிருந்து வெங்கட்டராம சாஸ்திரி வேத உபநிஷதங்களைப் பயின்றார். புராணங்களைக் கற்றார். இவருடைய குரு மெலட்டூர் லக்ஷ்மணையா என்பவர். இவர் வீரபத்ரையா என்பவரின் சீடராவார். இவர் காவ்யம், நாடகம் அலங்காரம் ஆகிய துறைகளில் விற்பன்னராகத் திகழ்ந்தார். தெலுங்கு, சம்ஸ்கிருதம், இசை, நாட்டியம், நாடகம் ஆகியவற்றில் சிறந்து விளங்கிய வெங்கட்டராம சாஸ்திரி மெலட்டூர் பாகவத மேளாவுக்கு சிறந்த அறிமுகத்தைக் கொடுத்தார்.

    பனிரெண்டு புதிய நாட்டிய நாடகங்கள் உருவக்கப்பட்டன. இங்கு இயற்றப்பட்ட அனைத்து நாடகங்களையும் இவ்வூரில் கோயில் கொண்டுள்ள வரதராஜ பெருமாளுக்கு அர்ப்பணிக்கப்பட்டன. இவர் தன்னுடைய நாட்டிய நாடகங்களில் நடிக்க அவ்வூர் அக்ரகாரத்தைச் சேர்ந்த இளைஞர்களைத் தேர்ந்தெடுத்து, வரதராஜ பெருமாள் சந்நிதியில் அரங்கேற்றி வந்தார். அப்படி நாடகங்கள் நடக்கும் தினங்களில் உத்சவ விக்கிரகம் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்படும். இவருடைய நாட்டிய மேளா குழுமத்தில் ஆண்களுக்கு மட்டுமே இடம் உண்டு. பெண்கள் பாத்திரங்களையும் ஆண்களே ஏற்று நடிப்பார்கள். இந்த முறை இந்நாள் மட்டும் கண்டிப்பாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

    இதற்கு ஏன் “பாகவத மேளா” என்று பெயர் வந்தது? தெரிந்து கொள்ள வேண்டுமல்லவா? ஆம், அதற்கு விடை: “இதனை நடத்துபவர்கள், நடிப்பவர்கள், பாடுபவர்கள் அனைவருமே பாகவதர்கள், இங்கு நடிக்கப்படும் கதைகள் அனைத்தும் ஸ்ரீமத் பாகவத புராணத்திலிருந்து எடுக்கப்பட்டவை, எனவே இதற்கு பாகவத மேளா என்று பெயர் ஏற்பட்டது.” இந்த பாகவத மேளாவில் நடிக்கப்படும் அத்தனை பாகவத கதைகளிலும் நரசிம்ஹ ஜெயந்தி அன்று நடிக்கப்படும் “பிரஹலாத சரித்திரமு” கதைதான் மிக உயர்வானது, பலராலும் பார்த்துப் பாராட்டப்படுவது, உணர்ச்சி பூர்வமானது, நரசிம்ஹ ஜெயந்தியன்று நடிக்கப்படுவதாலும், இதில் நரசிம்ஹரின் உக்ரம் யதார்த்தமாக இருப்பதாலும் இதுவே மிகச் சிறந்ததாகக் கருதப்படுகிறது.

    வெங்கட்டராம சாஸ்திரி தன்னுடைய நாடகங்களைத் தஞ்சை மராத்திய மன்னர் அவைகளில் நடத்திக் காட்டியிருக்கிறார். இவரது நாட்டிய நாடகங்களைப் பார்த்து ரசித்த பல்லாயிரக் கணக்கானவர்களில் சற்குரு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளும் ஒருவர். இந்தக் கலை மெலட்டூரிலிருந்து மெல்ல நகர்ந்து அருகிலுள்ள ஊர்களுக்கும் செல்லலாயிற்று. அப்படிச் சென்ற ஊர்களில் ஊத்துக்காடு, சூலமங்கலம், தேப்பெருமாநல்லூர் ஆகியவைகளாகும்.

    தஞ்சையிலிருந்து திருவாரூர் மார்க்கத்தில் உள்ள சாலியமங்கலத்திலும் ‘பாகவத மேளா’ நடத்தப்படுகின்றது. இங்கு மெலட்டூருக்கும் முந்தைய காலகட்டத்திலேயே இந்தக் கலை வந்துவிட்டதாகச் சொல்கிறார்கள். இதை பஞ்சநத பாகவதர் என்பார் அறிமுகம் செய்ததாகச் சொல்வர். ஆக இந்த பாகவத மேளா, முழுவதும் தஞ்சை ஜில்லாவின் ஒரு சில கிராமங்களில் இன்றளவும் நடத்தப்பட்டு வருகிறது.

    ஒரு காலகட்டத்தில் தொய்வு ஏற்பட்ட நிலையில் இதனை மீண்டும் தூக்கி நிறுத்திய பெருமை பரதம் நடேச ஐயர் என்பவரைச் சாரும். இவர் மெலட்டூரில் 1865 1935 காலகட்டத்தில் வாழ்ந்தவர். இன்று இந்த பாகவத மேளாவைப் பற்றிய செய்தி கடல் கடந்த நாடுகளுக்கும் சென்றதன் விளைவாக அங்கிருந்தெல்லாம் பலர் தங்களுடைய ஆராய்ச்சிப் படிப்புக்காக இங்கு வந்து பாக்வத மேளா பற்றி ஆய்வுக் கட்டுரைகளை எழுதி முனைவர் பட்டம் பெறுகிறார்கள். அப்படியொரு பெண்மணி ஜப்பான் டோக்யோ நகரிலிருந்து இங்கு வந்து குடியிருந்து இந்தக் கலை பற்றிய அரிய செய்திகளைக் கொடுத்து முனைவர் பட்டம் பெற்றார். அவர் பெயர் மேடம் தகாதா. இவர் போன்ற பல அயல் நாட்டாரையும் கவர்ந்திழுக்கக் கூடிய கலையாக இந்த அரிய கலை விளங்குகிறது. மன்னர்கள் காலம் போய் இப்போது மக்கள் நாயகம் மலர்ந்துவிட்டதால் இனி இந்தக் கலையை ஆதரிக்க வேண்டிய கடமை மக்களுக்குத்தான் இருக்கிறது. வாழ்க பாகவத மேளா. வாழ்க கலைகள்.

    Share
  • உருப்பட…

     


     -செண்பக ஜெகதீசன்

     

    உருக்கிய தங்கம்தான்

    உருப்பெறுகிறது

    விலையுயர் அணிகலனாய்..

     

    அடித்து நீட்டிய செம்புதான்

    எடுக்கிறது வடிவு,

    மின்கம்பியாக..

     

    உளியால்

    உடைபடும் கல்தான்

    உருவமாகிறது சிலையாக..

     

    சிந்தித்திடு மனிதா,

    சிறிதும் பெரிதுமாய்த் துன்பந்தான்

    வாழ்வில்

    சிறப்பைத் தருகிறது…!

     

             

     

    Share
  • அத்திக்காய் காய் காய்..

    கவிஞர் காவிரி மைந்தன்

    கண்ணதாசன் என்கிற திரையுலகக் கம்பன் – தன் முன்னோர்கள் – தமிழ்ச் சான்றோர்கள் – புலவர் பெருமக்கள்தம் படைப்புகளில் ஆழ்ந்து உணர்ந்து, அப்பாடல்களின் பொருளுணர்ந்து, புளகாங்கிதம் அடைந்தது மட்டுமின்றி, பலரும் புரியும்வண்ணம் அச் செய்திகளை உள்வாங்கி, தமக்கே உரிய பாணியில் திரைப்பாடல்களில் வழங்கியிருக்கும் பல பாடல்கள் கவிஞரின் திறமைக்கு சான்று பகர்கின்றன.

    காய் என்கிற சொல்லை அடுக்கடுக்காய்வைத்து பல்வேறு காய்களைச் சுட்டிக்காட்டி தன் அத்தை மகள் சமைத்த சமையலைப் பாடும் காளமேகப் புலவரின் பாடல் ஒன்று..

    ‘கரிக்காய் பொரித்தாள் கன்னிக்காயை தீர்த்தாள்

    பரிக்காயைப் பச்சடியாய்ப் பண்ணாள்’ என்று காய் அடுக்கு நான்கு முறை கூறப்பட்டு நயமுற அமைக்கப்பட்டுள்ளது.

    இதில் வியந்த கண்ணதாசன், 25 முறை காய் என்னும் சொல்லை வைத்து விளையாடுகிறார். அத்திக்காய் காய் காய் காய் ..ஆலங்காய் வெண்ணிலவே.. என்கிற பாடலில் கேட்பவர் நெஞ்சம் மகிழும்படி பாடுகிறார்..

    காளமேகப் புலவரின் இருபொருள் நயங்களில் மயங்கி இலை மறை காயாகப் பலமுறை இவரும் வார்த்தைகளை வடித்தெடுத்துத் தருகிறார்.

    பலே பாண்டியா என்கிற திரைப்படத்தில் இடம்பெற்ற இப்பாட்டு,எழுதப்பட்ட போது இசையமைப்பாளர் மெல்லிசை மன்னர் ‘என்னய்யா? கொத்தவால் சாவடியையே பாடலில்கொண்டு வந்திருக்கீரே.. என்று சொல்ல.. கண்ணதாசன் அவரிடம் எவ்வளவோ பாடல்கள் நீங்க கேட்கிறமாதிரி எழுதித் தருகிறேன்.. இதுமாதிரி ஒருசில பாடல்கள் எனக்காக இருக்கட்டும் என்று சொல்லி இடம்பிடித்த பாட்டு இது..

    அந்த திக்காய் காய்.. என்று வெண்ணிலவை கவியரசர் இருபொருள்பட .. ஒவ்வொரு வரியிலும் வார்த்தை விளையாட்டு நடத்தியிருக்கிறார்.

    தமிழின் அழகு கொட்டிக்கிடக்கும் திரைப்பாடலைக் காணுங்கள்! பொருளின் சுவையும் அறிந்தபடி இசையில் கொஞ்சம் மயங்குங்கள்!!

    அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே
    இத்திக்காய் காயாதே என்னைப்போல் பெண்ணல்லவோ
    நீ என்னைப்போல் பெண்ணல்லவோ

    அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே
    இத்திக்காய் காயாதே என்னுயிரும் நீயல்லவோ
    என்னுயிரும் நீயல்லவோ
    (அத்திக்காய்..)

    கன்னிக்காய் ஆசைக்காய் காதல்கொண்ட பாவைக்காய்
    அங்கே காய் அவரைக்காய் மங்கை எந்தன் கோவைக் காய்
    (கன்னிக்காய்..)
    மாதுளங்காய் ஆனாலும் என்னுள்ளங்காய் ஆகுமோ
    என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ
    இத்திக்காய் காயாதே என்னைப்போல் பெண்ணல்லவோ

    இரவுக்காய் உறவுக்காய் எங்கும் இந்த ஏலக்காய்
    நீயும் காய் நிதமும் காய் நேரில் நிற்கும் இவளைக்காய்
    (இரவுக்காய்..)
    உருவம் காய் ஆனாலும் பருவம் காய் ஆகுமோ
    என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ
    (அத்திக்காய்..)

    ஏலக்காய் வாசனைப்போல் எங்கள் உள்ளம் வாழக்காய்
    ஜாதிக்காய் பெட்டகம் போல் தனிமை இன்பம் கனியக்காய்
    (ஏலக்காய்..)
    சொன்னதெல்லாம் விளங்காயோ தூதுவிளங்காய் வெண்ணிலா
    என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ
    (அத்திக்காய்..)

     
    http://www.youtube.com/watch?v=2yjVzhSK_t8
    http://www.youtube.com/watch?v=2yjVzhSK_t8

     

    காவிரிமைந்தன்

    நிறுவனர் மற்றும் பொதுச்செயலாளர்

    கவியரசு கண்ணதாசன் தமிழ்ச்சங்கம் (பம்மல்)

    சென்னை 600 075.

    தற்போது – அபுதாபி  (அமீரகம்)

    00971 50 2519693

    kaviri2012@gmail.com

     

    Website: thamizhnadhi.com

    அத்திக்காய் காய் காய் – Athikkaai kaai kaai aalankaai vennilave
    Share
  • மதிய உணவின் முன்னோடி!

    பவள சங்கரி

    தலையங்கம்

    singaravelar 01‘சிந்தனைச் சிற்பி’ சிங்காரவேலனாரின் பிறந்த நாள் இன்று. பொதுவுடமைவாதியும், சுதந்திரப் போராட்ட வீரர் மற்றும் தொழிற்சங்கவாதியுமான இவர், வியர்வை சிந்தி உழைக்கும் உழைப்பாளர்களுக்கென்று ஒரு சிறப்பு தினம் கொண்டாடப்பட வேண்டும் என்ற நல்ல சிந்தையை முன்னெடுத்தவர். அத்தோடு கர்மவீரர் காமராசர் வெற்றிகரமாக செயல்படுத்தி இலட்சக் கணக்கான குழந்தைகள் கல்வியறிவு பெற வழியமைத்துக் கொடுத்த மதிய உணவுத் திட்டத்தின் முன்னோடியாக இருந்தவரும் திரு சிங்காரவேலனார் அவர்களே. நூற்றுக்கணக்கான இவருடைய நூல்கள் அரசுடமையாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    சமீபத்தில் மேற்கொண்ட ஒரு கருத்துக் கணிப்பில் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களில், 8ம் வகுப்பு பயிலும் 74 சதவிகித மாணவர்களுக்கு சாதாரண கூட்டல், கழித்தல் கணக்கு கூட தெரியவில்லை என்றும், 40 சதவிகித சிறார்களுக்கு வகுத்தல் என்பதும் புரியவில்லை என்ற அதிர்ச்சித் தகவலை அளிக்கின்றனர். அப்பள்ளிகளில் குழந்தைகளுக்கு சுத்தமான குடிநீரோ அல்லது கழிவறை வசதிகளோ கூட இல்லை என்ற தகவலும் அதிர்ச்சியளிக்கக் கூடியது. 2011இல் உச்ச நீதி மன்றத் தீர்ப்பின்படி அனைத்துப் பள்ளிகளிலும் பெண் குழந்தைகளுக்கென்று தனி கழிவறை இருக்க வேண்டும் என்ற தீர்ப்பு வழங்கப்பட்டும், சென்ற வாரம் ஆசர் எடுத்த கருத்துக் கணிப்பின்படி, 54 சதவிகித பள்ளிகளில் மட்டுமே பெண் குழந்தைகளுக்கான தனி கழிவறை இருப்பதாகத் தெரிகிறது. தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களைக் காட்டிலும் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மிகவும் பின்தங்கியிருப்பதைக் காண முடிகிறது. கிராமப் புறங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 20 சதவிகிதம் உயர்ந்துள்ளது. ஆயினும் கிராமப்புறங்களில் உள்ள பெரும்பாலான பள்ளிகளில் தேவையான ஆசிரியர்கள் இல்லை என்பதும் வேதனைக்குரிய விசயம்.

    பாராளுமன்றத் தேர்தல் திருவிழா வருகிறது. செலவழிக்க பணமூட்டைகள் தயார். எந்தப் பெயரில் கொடுத்தாலும் வாங்குவதற்குத் தயாராகவும் ஒரு கூட்டம். தொலைக்காட்சிப் பெட்டியா, மாவரைக்கும் இயந்திரமா, குளுகுளு மின்விசிறியா, மடிக் கணினியா, இல்லை காந்திப்படம் போட்ட நோட்டா.. எதைக் கொடுத்தாலும் வாங்கத் தயார். வாக்களிக்க சத்தியங்களும் அள்ளி வழங்கப்படும்!

    இந்திய ஜனநாயகமும், வாக்குச் சுதந்திரமும் படும்பாடுதான் இது. மக்களுக்கு நல்லாட்சி வழங்க வேண்டியது ஆட்சியாளரின் கடமை . இவ்வளவு நாள் ஆட்சியில் இருந்துவிட்டு நாங்கள் அதைச் செய்தோம், இதைச் செய்தோம் என்று பட்டியல் போட்டு பல ஆயிரம் கோடி செலவு செய்து விளம்பரம் செய்து மக்களுக்கு நினைவூட்ட வேண்டிய நிலையிலேயே இன்றைய ஆட்சியாளர்கள் இருப்பது கண்கூடு. ஒன்றுபட்ட இந்தியாவிற்குரிய இரும்பு மனிதர் என்று பேசப்பட்ட வல்லபபாய் பட்டேலுக்கு இரண்டு கட்சியினரும் போட்டியிடும் கேலிக்கூத்தும் அரங்கேறுகிறது. அவர் செய்த செயல்கள் மற்றும் அவருடைய கொள்கைகளை மட்டுமே நாங்கள் பின்பற்றுகிறோம் என்று கூற ஏதேனும் உதாரணம் காட்டியோ அல்லது நல்ல செயல்களைச் செய்து அதன் மூலம் அவருடைய பெயரை நிலைநாட்ட முனைந்தாலோ அவர்களுக்கு வாக்களிக்க வாக்காளர்களுக்கு தயக்கம் இல்லாமல் போகலாம். தொட்டிலையும் ஆட்டி விட்டு பிள்ளையையும் கிள்ளிவிடுவது போல டாஸ்மாக் கடைகளைத் திறந்துவிட்டு, உழைப்பவர்களின் வருமானங்களை உறிஞ்சிய பிறகு அவர்களின் இல்லங்களுக்கு எதற்கு இலவசங்கள். அப்பனிடமிருந்து பணத்தை பிடுங்கிக்கொண்டு பிள்ளைகளுக்கு விலையில்லா மடிக்கணினி எதற்கு? ஆளும் கட்சியினர், எதிர்க் கட்சியினர் மற்றும் அரசியல்வாதிகள் என அனைவருக்குமே இந்தத் தேர்தல் திருவிழாவின்போது மட்டும்தான் மக்களைச் சந்திக்க முடிகிறது. மாறி வரும் இளைய சமுதாயம் இதையெல்லாம் கவனத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறது. அவர்களுக்கு சரியான வழிகாட்டும் விதமாக வல்லபபாய் பட்டேலாகவும், லோக மானிய திலகராகவும், ஜெயப்பிரகாஷ் நாராயணனாகவும் மாறி வழி நடத்தினால் பின்வருபவருக்குத் தயக்கம் ஏது என்பதையும் உணர எவரும் முனைவதாகவும் இல்லை.

    டாஸ்மாக் கடைகளையும், மணல் குத்தகையையும் அரசு எடுத்துக் கொண்டு வருமானம் பார்ப்பதைக்கூடப் பொறுத்துக் கொள்ளலாம். அனைத்துப் பள்ளிகளையும் தேசியமயமாக்கி, குழந்தைகளுக்கு விலையில்லா கல்வியைக் கொடுக்கும்பட்சத்தில்! விலையில்லா இலவசங்களை விடுத்து விலையில்லாத கல்வியை மட்டும் கொடுத்து இளைய சமுதாயத்தை வளரவிட்டால் போதும். பாடத்திட்டம் எதுவாக இருப்பினும் அனைத்துக் குழந்தைகளுக்கும் கொடுங்கள் விலையில்லாக் கல்வியை!

    Share
  • ஷீரடி பாபா வெண்பாக்கள்

    கிரேசி மோகன்

     

    தாயி தகப்பன் ஒறவுமுற எல்லாமே

    ஓவியம் : கிரேசி மோகன்
    ஓவியம் : கிரேசி மோகன்

    சாயி பகவானே நீதான்யா -சேயெனக்
    காப்பாத்த வேண்டிக் கனிவோடு அன்னைக்கு
    நீபாத்த தொன்றே நிசம்….(நண்பன் ”சு.இரவி” எழுதியது)….

    அக்கல்கோட் ராஜன் அவதார மானவா
    சிக்கல்கட் டாமிந்த சம்சாரம் -வெக்கங்கெட்
    டீரடியும் சேற்றினில் வைத்திங்கு சீரழிந்தோம்
    ஷீரடி ஆற்றில் செலுத்து….(1)

    சுகவாணி சாயி கமலவாசி சாயி
    மகமாயி சாயி அயனரியரன் -சாயி
    முகமதுவும் சாயி முனியேசு சாயி
    அகமதை ஷீரடியாய் ஆக்கு….(2)….

    மோதக மூக்கனே சாதக வாக்கனே
    தீதற போக்கிடும் போக்கனே -மாதவா
    சாயி மஹராஜா தாயின் அருள்சொரியும்
    ஆயி மகமாயி ஆவ்….(3)….

    தாயினால் மண்தோன்றி நோயினால் மண்மூடும்
    காயமிது பொய்யென்று காணுவாய் -மாயமாய்
    ஆயிரம் ஒன்றாகும் ஒன்றா யிரமாகும்
    சாயிராம் சேவடியில் சேர்….(4)

    விண்டுரைக்க வொண்ணா விளையாட்டுப் பிள்ளையை
    பண்டரிக்குள் வாழும் பகவானாய் -கண்டறிவாய்
    ஷீரடி சாயியவன் சேவிப் பவர்க்கருள
    வேரடி பாயும் விழுது….(5)

    உதியெடுத்(து) உந்தன் நுதலிலே பூசி
    கதியென்று சாயி கமலப் -பதமிரெண்டை
    பற்றிவாழ பாவங்கள் பற்றாது, பாபாவை
    சற்றுநேரம் சிந்திக்க சித்து….(6)

    நட்டநடு கானகம் நாற்புரமும் சாகரம்
    எட்டுவித கோணலாய் இவ்வாழ்க்கை -விட்டுவிட
    புத்தியில்லை, வெற்றிபெற சக்தியில்லை சத்குருவே
    பித்தனிவன் பேதமையைப் போக்கு….(7)

    தாயி தகப்பன் தெய்வமே ஷீரடி
    சாயி மகராஜா சத்குரு -சேய்நான்
    படித்த உமது சரித்திரம் பாடி
    முடிக்க அருள்வீர் மகிழ்ந்து….(8)

    சாதுவாய் ஷீரடி சொந்தங்கள் காத்திட
    கோதுமை மாவை அரைத்தது -தீதுரு
    காலரா நோயை வாலறுத்(து) ஓட்டிடும்
    போலோராம் சாயிநாதன் போக்கு….(9)

    வாயினால் பேசி வசனத்தை உச்சரிக்க
    சாயிராம் வாக்கை சரியாக்கு -தூயவா
    ஷீரடி வந்துன்னை சேவிக்கும் நாளன்று
    கூறிடுவேன் நன்றிக் கடன்….(10)

    சகிப்பு, வினயம், சகோதர பாவம்
    உகக்கும் அனைத்தையும் ஒன்றாய் -அகத்தும்
    புறத்தும் சமரச சன்மார்கம் காண
    சிரத்தினில் ஷீரடி சூடு….(11)

    கெட்டபுத்தி செய்கைகள் விட்டகன்(று) ஓடிட
    புட்டபர்த்தி பாதம் பணிந்திடு -பட்டுமலர்
    நித்தியமும் நெஞ்சில் நிறுத்த நிறுத்திடும்
    சத்யம் சிவசுந் தரத்து….(12)

    பத்திரம் பாதுகாப்பு பாபாவின் ஷீரடி
    சத்திரச் சாவடியில் சாஸ்வதம் -நித்திரை
    சொப்பனம் மற்றும் சகஜத்தில், சாயிராம்
    எப்பவும் காப்பு எமக்கு….(13)

     

    பன்றிக் காய்ச்சல் ஊரில் பரவிய போது….
    ——————————————————
    வந்திருக்கும் பன்றி வியாதி வெகுண்டோட
    எந்திரத்தில் முன்போல இட்டரைப்பாய் -உன்திறத்தைக்
    காட்டருள் பாபா கலங்குகிறோம், நீயல்லால்
    கூட்டெமெக்கு வேறிங்கார் கூறு….(14)

    பேட்டி எடுக்க லஷ்மி நரசிம்மனும் & க்ளிக் ரவி
    வந்தபோது எழுதியது….
    ————————————————————–
    ஆறடி மண்ணில் அடங்கும் உடலோடு
    மாரடித்துப் பார்த்தேன் முடியவில்லை -ஷீரடி
    நாதா சரண்புகுந்தேன் நின்னை, எனக்கருள்
    ஏதே னுமனுபூதி யை….(15)

    ஆள்காட் டிவிரல் அடுத்தவிரல் வாயிலாய்
    தாள்காட்டும் கட்டைவிரல் தீண்டிட -மால்கட்டின்
    வேரடிக்குப் பாய்ந்து வினைமரம் சாய்த்திடும்
    ஷீரடி பாபா செயல்….(16)

    மாபாவம் செய்தும் மகனீயர் ஷீரடி
    பாபா சரணம் புகுந்தோரை -ஆபாச
    இச்சைகள் அண்டாது என்றென்றும் காத்திடும்
    உச்சியில் இட்ட உதி….(17)….07-09-2011

    வேப்ப மரத்தடியில் வீற்று மருந்தாக
    காப்பிடும் சாயி கசப்பாக -சாப்பிடத்
    தந்தாலும் நோய்க்கு தருகற் பகமாகி
    வந்தோர்க்கு வாழ்வில் வலுவு….(18)

    காம துனியெரித்து நாம உதியெடுத்து
    தாமசம் தீர்ப்பாய் தகப்பன்சாய் -ராமனே
    வேம்பாமென் நெஞ்சில் விளைந்த குருஸ்தானில்
    ஆம்பிளை அம்மா அமர்….(19)

    கந்தலா னாலுமதைக் கொண்டுத் திரம்கட்டி
    மந்திரமாய்த் தொங்கும் மரவணையில் -அந்தரத்தில்
    எங்கணம் ஏறினீர், அங்கணம் பாபாவே
    இங்கெனக்கோர் உச்சி இடு….(20)

    தீர்த்தங்கள் ஏழும் தளும்பிடும் ஷீரடி
    மூர்த்தியின் பாதத்தில் MunNiiraai -ஆர்த்தி
    எடுபுத்தி, அன்பாம் எரியூட்டி, ஆர்வத்
    துடன்பக்தி நூலே திரி….(21)

    அச்சுதன் சம்பு அயனுரு ஆனவா
    சச்சிதா னந்தகுரு சாயிராம் -இச்சிறை
    ஆறடிப் பொந்தில் அடைபட்(டு) உழல்கிறேன்
    ஷீரடியில் சேர்ப்பாய் சரண்….(22)

    ஆயிரம் அம்மாக்கள் ஆகுமோ ஈடாக
    சாயிராம் தாய்க்குச் சமானமாய் -நோயினால்
    ஆறடி ஓய்ந்தாலும் ஆன்ம சுகம்தரும்பார்
    ஷீரடி மாயி சிரிப்பு….(23)

    ஆடை கபினி அணிந்தடி யார்களின்
    பாடை அதற்குள் பதுக்கிடும் -வீடை,
    அறம்பொருள் இன்பம் அளித்திடும் வேப்ப
    மரம்நிழல் சாயி மகான்….(24)

    ஆரத்தி நேரத்தில் ஆலயம் சென்றுனது
    பாரத்தை பாபாவின் பாதத்தில், -ஈரத்தில்
    கண்கள் பளபளக்க கைகூப்பி சேர்க்கமனப்
    புண்கள் மலராய் பிறப்பு….(25)

     

     

    Share
  • திருமால் திருப்புகழ் (1)

     

    கிரேசி மோகன்

    Tamil-Daily-News-Paper_52750360966
    தனதன தனான தனதன தனான
    தனதன தனான-தனதான

    “இறகும யிலாடி இலகுசு ருள்கேச
    இடையர்ம கனான -பெருமாள்காண்
    விரைகள பகோபி நடுவில்க ஸுதூரி
    திலகநு தல் பூணும் – பெருமாள்காண்
    கரியவி ழிபாசம் பொழியவ ருராம
    கவுசலை குமார -பெருமாள்காண்
    குமிழழ குவேத மொழிநில வுஸ்வாஸம்
    உமிழள வுநாசி -பெருமாள்காண்
    கறவையி னம்மேய குழலமு தகானம்
    பொழிஅத ரராக – பெருமாள்காண்
    ஜனகம கள்சாய சவுகரி யமான
    விரியுநெ டிமார்பு -பெருமாள்காண்
    விரையவி ரிவானம் ,உலகள வுகாணும்,
    தொழுமுள ரிபாத -பெருமாள்காண்
    அருணகிரி நாதர் வருணனை யிலேளும்
    மருகன்மு றைமாம -பெருமாளே”….
    —————————————————————

     
    தனதன தனான தனதன தனான
    தனதன தனான-தனதான

    “திரைகட லுளோடி திரவிய வியாச TN_145110000000
    மறைகொண ருமீன -பெருமாள்காண்
    வரைவழு விடாது வலியமு துகாள
    உருவில்க டலாமை -பெருமாள்காண்
    சிறையவ னிமீள விரையும வதார
    வடிவுரு வராக -பெருமாள்காண்
    இரணிய விரோதம் ஒழி,பிர கலாத
    அழையவ ருசீய -பெருமாள்காண்
    வரமரு ளமாவ வலிமுடி யிலேறி
    உலகள வுகாணு -பெருமாள் காண்
    மழுபர சுராம,உழவுப லராம
    பழகுகு கராம -பெருமாள்காண்
    இறையென உலாவி பறவையே னவேடன்
    இரையுறு முராரி -பெருமாள்காண்
    தருமம துவாழ தரணிஅ வதார
    தசமுக புராண -பெருமாளே”….
    —————————————–

    படத்திற்கு நன்றி : http://www.tamilthottam.in/t35761-topic

     

    Share