காதல் கும்மி!
மேகலா இராமமூர்த்தி
ஆதியும் அந்தமும் இல்லாத – அந்த
ஆண்டவன் போலவே எந்நாளும்
காதலும் காலத்தை வென்றதடி – வளைக்
கைகொட்டிக் கும்மி கொட்டுங்கடி!
தேசம் இதற்குக் கிடையாதடி – ஒரு
பாஷையும் தேவை யில்லையடி!
தோசமு மில்லாத் தூயதடி – உண்மை
நேசத்தில் தோன்றி மலருமடி!
கண்க ளெனும்வாசல் நுழைந்திடுமே – மனக்
கோயிலில் என்றும் நிலைத்திடுமே!
எண்ணிட இன்பம் தந்திடுமே – காதல்
வாழ்வினில் வண்ணம் கூட்டிடுமே!
ஆண்டியும் காதலில் ஆழ்ந்திடுவான் – அடி
அரசனும் காதலில் வீழ்ந்திடுவான்!
ஆண்டாண்டு காலமாய் நாம்தேடும் – நல்ல
பொதுவுடை மைப்பொருள் காதலடி!
சாதி ஒழிந்திடும் காதலிலே – மதச்
சண்டை அழிந்திடும் காதலிலே!
வீதியில் நின்று சொல்லுங்கடி – இந்தக்
காதலுக் கீடு இல்லையென்றே!!
படத்துக்கு நன்றி
http://www.dinakaran.com/News_Detail.asp?nid=1833
பொதுவுடைமைப் பொருளா காதல்!!!! இக்கருத்து சிரிப்பினை வரவழைத்தது மேகலா. அருமையான கும்மிப் பாடல், நன்று.
அருமை. எளிமையான வரிகள் மனத்தைக் கவருகின்றன. வாழ்த்துக்கள் சகோதரி!