மதிய உணவின் முன்னோடி!

0

பவள சங்கரி

தலையங்கம்

singaravelar 01‘சிந்தனைச் சிற்பி’ சிங்காரவேலனாரின் பிறந்த நாள் இன்று. பொதுவுடமைவாதியும், சுதந்திரப் போராட்ட வீரர் மற்றும் தொழிற்சங்கவாதியுமான இவர், வியர்வை சிந்தி உழைக்கும் உழைப்பாளர்களுக்கென்று ஒரு சிறப்பு தினம் கொண்டாடப்பட வேண்டும் என்ற நல்ல சிந்தையை முன்னெடுத்தவர். அத்தோடு கர்மவீரர் காமராசர் வெற்றிகரமாக செயல்படுத்தி இலட்சக் கணக்கான குழந்தைகள் கல்வியறிவு பெற வழியமைத்துக் கொடுத்த மதிய உணவுத் திட்டத்தின் முன்னோடியாக இருந்தவரும் திரு சிங்காரவேலனார் அவர்களே. நூற்றுக்கணக்கான இவருடைய நூல்கள் அரசுடமையாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் மேற்கொண்ட ஒரு கருத்துக் கணிப்பில் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களில், 8ம் வகுப்பு பயிலும் 74 சதவிகித மாணவர்களுக்கு சாதாரண கூட்டல், கழித்தல் கணக்கு கூட தெரியவில்லை என்றும், 40 சதவிகித சிறார்களுக்கு வகுத்தல் என்பதும் புரியவில்லை என்ற அதிர்ச்சித் தகவலை அளிக்கின்றனர். அப்பள்ளிகளில் குழந்தைகளுக்கு சுத்தமான குடிநீரோ அல்லது கழிவறை வசதிகளோ கூட இல்லை என்ற தகவலும் அதிர்ச்சியளிக்கக் கூடியது. 2011இல் உச்ச நீதி மன்றத் தீர்ப்பின்படி அனைத்துப் பள்ளிகளிலும் பெண் குழந்தைகளுக்கென்று தனி கழிவறை இருக்க வேண்டும் என்ற தீர்ப்பு வழங்கப்பட்டும், சென்ற வாரம் ஆசர் எடுத்த கருத்துக் கணிப்பின்படி, 54 சதவிகித பள்ளிகளில் மட்டுமே பெண் குழந்தைகளுக்கான தனி கழிவறை இருப்பதாகத் தெரிகிறது. தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களைக் காட்டிலும் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மிகவும் பின்தங்கியிருப்பதைக் காண முடிகிறது. கிராமப் புறங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 20 சதவிகிதம் உயர்ந்துள்ளது. ஆயினும் கிராமப்புறங்களில் உள்ள பெரும்பாலான பள்ளிகளில் தேவையான ஆசிரியர்கள் இல்லை என்பதும் வேதனைக்குரிய விசயம்.

பாராளுமன்றத் தேர்தல் திருவிழா வருகிறது. செலவழிக்க பணமூட்டைகள் தயார். எந்தப் பெயரில் கொடுத்தாலும் வாங்குவதற்குத் தயாராகவும் ஒரு கூட்டம். தொலைக்காட்சிப் பெட்டியா, மாவரைக்கும் இயந்திரமா, குளுகுளு மின்விசிறியா, மடிக் கணினியா, இல்லை காந்திப்படம் போட்ட நோட்டா.. எதைக் கொடுத்தாலும் வாங்கத் தயார். வாக்களிக்க சத்தியங்களும் அள்ளி வழங்கப்படும்!

இந்திய ஜனநாயகமும், வாக்குச் சுதந்திரமும் படும்பாடுதான் இது. மக்களுக்கு நல்லாட்சி வழங்க வேண்டியது ஆட்சியாளரின் கடமை . இவ்வளவு நாள் ஆட்சியில் இருந்துவிட்டு நாங்கள் அதைச் செய்தோம், இதைச் செய்தோம் என்று பட்டியல் போட்டு பல ஆயிரம் கோடி செலவு செய்து விளம்பரம் செய்து மக்களுக்கு நினைவூட்ட வேண்டிய நிலையிலேயே இன்றைய ஆட்சியாளர்கள் இருப்பது கண்கூடு. ஒன்றுபட்ட இந்தியாவிற்குரிய இரும்பு மனிதர் என்று பேசப்பட்ட வல்லபபாய் பட்டேலுக்கு இரண்டு கட்சியினரும் போட்டியிடும் கேலிக்கூத்தும் அரங்கேறுகிறது. அவர் செய்த செயல்கள் மற்றும் அவருடைய கொள்கைகளை மட்டுமே நாங்கள் பின்பற்றுகிறோம் என்று கூற ஏதேனும் உதாரணம் காட்டியோ அல்லது நல்ல செயல்களைச் செய்து அதன் மூலம் அவருடைய பெயரை நிலைநாட்ட முனைந்தாலோ அவர்களுக்கு வாக்களிக்க வாக்காளர்களுக்கு தயக்கம் இல்லாமல் போகலாம். தொட்டிலையும் ஆட்டி விட்டு பிள்ளையையும் கிள்ளிவிடுவது போல டாஸ்மாக் கடைகளைத் திறந்துவிட்டு, உழைப்பவர்களின் வருமானங்களை உறிஞ்சிய பிறகு அவர்களின் இல்லங்களுக்கு எதற்கு இலவசங்கள். அப்பனிடமிருந்து பணத்தை பிடுங்கிக்கொண்டு பிள்ளைகளுக்கு விலையில்லா மடிக்கணினி எதற்கு? ஆளும் கட்சியினர், எதிர்க் கட்சியினர் மற்றும் அரசியல்வாதிகள் என அனைவருக்குமே இந்தத் தேர்தல் திருவிழாவின்போது மட்டும்தான் மக்களைச் சந்திக்க முடிகிறது. மாறி வரும் இளைய சமுதாயம் இதையெல்லாம் கவனத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறது. அவர்களுக்கு சரியான வழிகாட்டும் விதமாக வல்லபபாய் பட்டேலாகவும், லோக மானிய திலகராகவும், ஜெயப்பிரகாஷ் நாராயணனாகவும் மாறி வழி நடத்தினால் பின்வருபவருக்குத் தயக்கம் ஏது என்பதையும் உணர எவரும் முனைவதாகவும் இல்லை.

டாஸ்மாக் கடைகளையும், மணல் குத்தகையையும் அரசு எடுத்துக் கொண்டு வருமானம் பார்ப்பதைக்கூடப் பொறுத்துக் கொள்ளலாம். அனைத்துப் பள்ளிகளையும் தேசியமயமாக்கி, குழந்தைகளுக்கு விலையில்லா கல்வியைக் கொடுக்கும்பட்சத்தில்! விலையில்லா இலவசங்களை விடுத்து விலையில்லாத கல்வியை மட்டும் கொடுத்து இளைய சமுதாயத்தை வளரவிட்டால் போதும். பாடத்திட்டம் எதுவாக இருப்பினும் அனைத்துக் குழந்தைகளுக்கும் கொடுங்கள் விலையில்லாக் கல்வியை!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.