Blog

  • நீராவி இஸ்திரிப் பெட்டி

    நீராவி இஸ்திரிப் பெட்டி

    கரி இஸ்திரிப் பெட்டி, மின்சார இஸ்திரிப் பெட்டி பார்த்திருப்பீர்கள். நீராவி இஸ்திரிப் பெட்டி பார்த்திருக்கிறீர்களா? இதன் பயன்கள் என்னென்ன தெரியுமா? இந்தப் பதிவைப் பாருங்கள். சிட்லப்பாக்கத்தில் உள்ள நியூ ஸ்டைல் அயர்னிங் சென்டரின் உரிமையாளர் முத்து சொல்வதைக் கேளுங்கள். இஸ்திரி கடை வைத்திருக்கும் உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • பொதுநபர் நால்வரை முதன்முதல் விண்வெளி நிலையத்தில் இறக்கிய ஸ்பேஸ் X

    பொதுநபர் நால்வரை முதன்முதல் விண்வெளி நிலையத்தில் இறக்கிய ஸ்பேஸ் X

    சி. ஜெயபாரதன், கனடா

    NASA’s SpaceX Crew-4 Astronauts Launch to International Space Station

    SpaceX lifts off on historic space mission to ISS l GMA

    The Crew-4 mission includes 33-year-old NASA astronaut Jessica Watkins, who will be the first Black woman to live on the International Space Station for a long-term mission.

    முதன்முதல் ஸ்பேஸ் X உள்ளூக்கி -4 விண்சிமிழ் நான்கு பொது ஆய்வாளரை அகில நாட்டு விண்வெளி நிலையத்தில் இறக்கியது.

    2022 ஏப்ரல் 27 இல் அமெரிக்கா பிளாரிடா நாசா கென்னடி ஏவு தளத்திலிருந்து ஸ்பேஸ் X மீள்பயன்பாடு ஃபால்கன் [REUSABLE] ராக்கெட் நான்கு பொதுநபரை உள்ளூக்கி-4 [INSPIRATION -4] விண்சிமிழ் தூக்கிச் சென்று, முதன்முதலாக அகில நாட்டு விண்வெளி நிலையத்தில் இறக்கியது. விண்வெளி நிலையம் பூமிக்கு 250 மைல் உயரத்தில் பூமியைச் சுற்றி வருகிறது. விண்சிமிழ் 350 மைல் உயரத்தில் பூமியை மூன்று நாட்கள் சுற்றி முதன்முதல் சுற்றுலாப் பயணம் செய்து, கீழிறங்கி நிலையத்துடன் இணைந்தது. அந்த மூன்று நாட்கள் பயணம் செய்த நான்கு விஞ்ஞானிகள் உடல்நிலை சோதிப்பு செய்வார். அந்த பொது விஞ்ஞானிகள் 38 வயது ஜார்டு ஐஸாக்மன், 29 வயது ஹேலி ஆர்செனா, 41 வயது கிரிஸ் செம்பிராக்ஸி, டாக்டர் சியான் பிராக்டர். அவர்கள் யாவரும் விண்வெளிப் பயிற்சி பெற்றவர். ஒவ்வொரும் இதற்கு 55 மில்லியன் டாலர் கட்டணம் செலுத்தியுள்ளார். .

    தகவல்

    1. https://www.nasa.gov/press-release/nasa-s-spacex-crew-4-astronauts-launch-to-international-space-station
    2. https://www.space.com/spacex-crew-4-nasa-astronaut-launch-webcast
    3. SpaceX takes 4 astronauts to the International Space Station | CBC News 

    4. https://youtu.be/okzFagWtW64
    5. https://youtu.be/21X5lGlDOfg

    Share
  • (Peer Reviewed) கழுகுமலைச் சமணப்பள்ளியில் பெண்கல்வியும் இருபாலர்  கல்விமுறையும்

    (Peer Reviewed) கழுகுமலைச் சமணப்பள்ளியில் பெண்கல்வியும் இருபாலர் கல்விமுறையும்

    முனைவர் இரா.இலக்குவன்
    உதவிப் பேராசிரியர்
    வெ..சு. தமிழியல் ஆய்வு மையம்
    .தி.தா.இந்துக்கல்லூரி, திருநெல்வேலி.

    இந்தியாவின் பழமையான மதங்களுள் ஒன்றாகக் கருதப்படுவது சமணசமயம் ஆகும். அது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்நாட்டில் பரவியிருந்ததுஎன்பதற்குப் பல்வேறு கல்வெட்டுச்சான்றுகள் துணைநிற்கின்றன. (1983))

    மேலும் சமணம்  தமிழ்நாடு முழுமையும் குறிப்பாக  பாண்டிநாடு, தொண்டை நாடுகளில் வலுவாகப் பலநூற்றாண்டுக்காலம் கோலோச்சியிருந்ததை அறியமுடிகிறது. தமிழ்நாடு முழுமையும் பரவியிருந்த சமணஆலயங்கள் (ஜினாலயங்கள்) என்றும் பள்ளிகள் என்றும் சமணத்துறவிகள் தங்கியிருந்த இடங்கள் பள்ளி பாழி அதிட்டானம் தேவாரம் பஸ்தி என்றும் அழைக்கப்பட்டன. (2005,ப.14  )

    கல்வெட்டுகள் பெரும்பான்மையும் சமணத்துறவிகள்  இருப்பிடங்களையும் கோயில்களையும் பள்ளி என்றே குறிப்பிடுகிறது.

    ஜினகிரிபெரும்பளளி –ஆனந்தமங்கலம்
    சிறுவாக்கம் – ஸ்ரீஹரணபெரும்பள்ளி
    குன்னத்தூர் –பெரியநாட்டுப்பெரும்பள்ளி
    தொண்டூர் – வழுவாமொழிபெரும்பள்ளி
    திருநறும்கொண்டை – நாற்பத்தெண்ணாயிரம்பெரும்பள்ளி
    வீரசேகரபெரும்பள்ளி – சளுக்கி
    பெருமண்டூர் – ரவிகுலசுந்தரபெரும்பள்ளி
    பள்ளிச்சந்தல் – வாலையூர்நாட்டுப்பெரும்பள்ளி
    அன்பில் – அமுதமொழிபெரும்பள்ளி
    மருத்துவக்குடி – சேதிகுலமாணிக்கம்பெரும்பள்ளி, கங்கருளசுந்தரபெரும்பள்ளி
    இருப்பைகுடி – பெரும்பள்ளி
    பெருங்குளம் – நிகராகரப்பெரும்பள்ளி) (1954,ப.104-200)

    மதுரையில் சமணப்பள்ளிகள் இருந்ததை “அறத்துறை விளங்கிய அறவோர் பள்ளி என்று (15:107) சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது. கல்வெட்டுகளிலும் இலக்கியங்களிலும் பள்ளி என்ற பெயரே பெருவழக்காக இருந்துள்ளது.

    பண்டைகாலத்திலே சாதிபேதம் பாராட்டாத தமிழ்நாட்டிலே, சாதிபேதம் பாராட்டாத சமணசமயம் பரவியதில் வியப்பில்லை. மேலும், உணவு, அடைக்கலம், மருந்து, கல்வி என்னும் நான்கு தானங்களைச் செய்வதைச் சமணர் தமது பேரறமாகக் கொண்டிருந்தார்கள்.இந்த நான்கினையும் அன்னதானம், அபயதானம், ஔடததானம், சாத்திரதானம் என்று கூறுவர். (1954,ப.41)

    சமணர்கள் மக்கள் அனைவருக்கும் பொதுக்கல்வி வழங்கிய அவர்கள் வாழும் இடமான பள்ளி என்பதால்தான் இன்று கல்விக்கூடங்களுக்குப் பள்ளிக்கூடம் என்று பெயர் வந்தது என்று மயிலை.சீனி.வேங்கடசாமி, தொ.பரமசிவன் உள்ளிட்ட அறிஞர்கள் அரிதியிட்டு உரைக்கின்றனர். சமணர்கள் சமணக்கோயிலான பள்ளிகளிலும் சமண முனிவர்கள் தங்கியிருக்கும் பள்ளிகளிலும் ஆண், பெண் இருபாலருக்கும் கல்வி கற்பித்தனர். சமண மதம் தமிழகத்திற்குப் புறத்தே இருந்து வந்த மதமெனினும் அவர்கள் தமிழ்மொழிக்கு முதலிடம் கொடுத்தனர். அவர்களது நூல்கள் அனைத்தையும் தமிழில் எழுதினர், தமிழ் இலக்கண நூலாம் தொல்காப்பியத்தைப் பழுதறக் கற்று உரை வரைந்தனர். மேலும் தமிழில் பல இலக்கண நூல்களையும் எழுதினர். அவ்விலக்கண நூல்கள் சமணப்பள்ளிகளில் கற்பிக்கப்பட்டன. மேலும் பற்பல இலக்கியங்களும் படைக்கப்பட்டு சமணப்பள்ளிகளில் கற்பிக்கப்பட்டன. எனவே சமணப்பள்ளிகள் சமணத் தத்துவநூல்களை மட்டும் கற்பிக்கும் இடமாக அல்லாமல் அடிப்படை மொழி வகுப்புகளை நடத்தும் இடமாகவும் தமிழில் புலமைபெற்று யாப்பியற்றும் பட்டறையாகவும் தமிழ் இலக்கண இலக்கியங்களை உரைகளோடு விவாதிக்கும் களனாகவும் இருந்தன என்பதை அறிய முடிகிறது. சான்றாக சமணரான இளம்பூரணது தொல்காப்பிய உரை ஆசிரியர் மாணாக்கர் ஐயங்களுக்கு விடையிறுக்கும் வகையாக அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. பெருவழக்காக சமணசமய இடங்கள் கல்விக்கூடங்களாக இருந்ததால் பள்ளி என்ற பெயர் தற்காலப்பள்ளிக்கூடங்களுக்கும் ஆகிவந்த பெயராக வழங்குகிறது. சமணர்கள் தமிழ்நாடு முழுவதும் ஔடத தானமாகிய கல்வியை மக்களுக்கு தமது இடங்களில் வழங்கிய வழக்கம் பலநூற்றாண்டு காலம் தொடர்ந்திருப்பதால் மக்கள் பிற்கால திண்ணைப்பள்ளி முதலான பொதுக்கல்வி அளிக்கப்படும் இடங்களையும் பள்ளி என்ற சொல்லால் நினைவுகூர்ந்தனர் என அறியமுடிகிறது.

    சமணர்களிடம் சாத்திரதானம் பிள்ளைகளுக்குக் கல்வி கற்பிப்பதோடு மட்டும் நின்றுவிடவில்லை.செல்வம் படைத்த சமணர்கள், தம் இல்லங்களில் நடைபெறும் திருமண நாட்களிலும் இறந்தோருக்குச்செய்யும் இறுதிக்கடன் நாட்களிலும் தம் சமயநூல்களைப் பலபிரதிகள் எழுதுவித்து அவற்றைத் தக்கவர்க்குத் தானம் செய்தார்கள். அச்சுப்புத்தகம் இல்லாத அந்தகாலத்தில் பனை ஏடுகளில் நூல்களை எழுதி வந்தார்கள். ஒரு சுவடி எழுதுவதற்குப் பலநாட்கள் செல்லும். பொருட்செலவும் (எழுத்துக்கூலி) அதிகம்..ஆகவே, பொருள் உடையவர் மட்டும் புத்தகம் பெறுவது முடியாது. ஆகவே, செல்வம் படைத்த சமணர் தமது சமயநூலைப் பல பிரதிகள் எழுதுவித்து அவற்றைத் தானம் செய்தார்கள் (1954, ப.44) என்பதையும் அறியமுடிகிறது. சமணர்கள் தமிழ்நாடு முழுமையும் சமணப்பள்ளிகளில் கற்றல் கற்பித்தல் நிகழ்ந்தாலும் கழுகுமலையில் பல்கலைக்கழகம் எனும் அளவில் நடந்தது என்பதை சி.சிவராமமூர்த்தி (1983) கு.அருணாசல கவுண்டர் (2005, ப.122), செ.மா.கணபதி (2007) போன்ற ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அங்கு இருபாலரும் மாணவர்களாகவும் இருபால் ஆசிரியர்களும் பேரளவில் இருந்ததாகவும் கல்வெட்டுகள் சிற்பங்கள் மூலம் தெரிய வருகிறது.

    கழுகுமலை பற்றிய கட்டுரையில் ராவ்சாகிப் கு. அருணாசலக்கவுண்டர் (2005,ப.124)

    “சமணத்துறவிகளிடையே ஆண் பெண் இருபாலர் சேர்ந்து கல்வி பயில்வது என்ற கூட்டுக்கல்விமுறை இருந்ததா? இருந்தது என்று சொல்வதற்கில்லை என்ற முடிவுக்கு வருகிறார். இக்கட்டுரை கழுகுமலையில் இருபாலர் கல்வி இருந்ததா என்பதையும் சமணப்பள்ளிகளில் பெண்கள் பங்கு பற்றியும் ஆய்வு செய்கிறது.

    இரு பாலர் ஒரே இடத்தில் அமர்ந்து ஒரு ஆசிரியரிடம் கற்கும் கல்விமுறையை இரு பாலர் கல்வி என்று அழைக்கலாம்.

    கலப்புபாலினகல்வி , இணைகல்வி அல்லது கூட்டுறவு (கோஎட் என்றும் அழைக்கப்படுகிறது, இதுஆண்களும்பெண்களும்ஒன்றாக கல்வி கற்கும்கல்விமுறையாகும். (https://mimirbook.com/ta/33cfb8b4fc2)

    இந்தியாவில் பெண் கல்வி இடைக்காலங்களில் இல்லாமல் இருந்தது. ஆனால் வேத காலத்திலும் தமிழகத்தில் சங்ககாலத்திலும் பெண் கல்வி வழக்கில் இருந்தது என்றும் பிற்காலங்களில் அது தேய்வழக்கானது என்றும் சிலர் வலியுறுத்துவார்கள்.எனினும் பெண்களும் ஆண்களும் சேர்ந்து ஒரே இடத்தில் கல்வி பயின்றதற்கு நமக்கு வலிமையான சான்றுகள் கிடைக்கவில்லை.  பிற்காலத்தில் தமிழகத்தில் இருந்த பல வைதிக மதம் சார்ந்த மடங்கள் ஆண்களுக்கு மட்டுமே கல்வி அளித்தன.  அவை பெரும்பாலும் அங்கு பெண்கள் நுழைவதற்கே அனுமதிக்கவில்லை.

    தென்தமிழகத்தில்தூத்துக்குடிமாவட்டம்கோவில்பட்டிவட்டத்தில்கோவில்பட்டி – சங்கரன்கோவில் சாலையில் கழுகுமலைஎன்ற ஊர் உள்ளது. இவ்வூரிலுள்ள குன்றுஎன்றஅளவில்உள்ளஒருசிறுமலையின் வடபகுதியில் நூற்றுக்கணக்கான சமணத் தீர்த்தங்கரர்கள், சமண தெய்வங்களின் சிலைகளும் அதன்அடிப்பகுதியில் வட்டெழுத்துக்கல்வெட்டுகளும் காணப்படுகின்றன. இங்கு சமண முனிவர்கள் தங்கியிருந்து சமணச்சித்தாங்களைக் கற்பித்துவந்தனர். கி.பி 8,9, 10ஆம் நூற்றாண்டுகளில் சமண சமயம் இவ்வூரில் செழிப்புற்று விளங்கியது. (1961) இவ்வூர் பண்டைகாலத்தில் நெற்சுரம் என்றும் இவ்வூரின் பகுதிகள் இளநெற்சுரம், பெருநெற்சுரம், குழுவாணை நல்லூர் என்றும் வழங்கப்பட்டன. (2007,ப 107)

    புத்தமதக் கொள்கையைப் பரப்புவதற்காக வடக்கேயிருந்து தெற்கு நோக்கி வந்த கௌதமபுத்தர் இலங்கைக்குச் செல்லும் வழியில் கழுகுமலைக்கும் வந்து சென்றதாக தொல்லியல் அறிஞர் டி.ஏ.கோபிநாதராவ் குறிப்பிடுகிறார். இதேபோல இலங்கைக்குப் பௌத்த சமயததைப் பரப்பச் சென்ற வழியில் சங்கமித்திரை கழுகுமலை வந்து சென்றதாகவும் ஒரு செவிவழிச் செய்தி பேசப்பட்டுவருகிறது. (2005,ப.17)

    கழுகுமலைக் கல்வெட்டுகளில் காணப்படும் ஆசிரிய மாணாக்கர் பரம்பரை விளக்கம்

    கனகநந்திப் பட்டாரகர் மாணாக்கர் ஆதித்த படாரர் (SIIV No 341) குணசாகரப்படார் சீடன் பேரெயிற்குடிச்சாத்தன்தேவன் (SIIV No 310)
    குணசாகரப்படாரர் சட்டன் பேரெயிற்குடிச்சாத்தன்தேவன் (SIIV No 347)
    குணசாகரப்படாரர் மாணாக்கி (SIIV No 334}
    குறண்டி தீர்த்தபடார் மாணாக்கர் கனகநந்திப் பெரியார் (SIIV No.345)
    குறண்டி தீர்த்தபடாரர் மாணாக்கிகள் இளநெற்சுரத்துக் குரத்திகள்(SIIV No.369)
    குறண்டி கனகநந்திப்படாரர் மாணாக்கன் பூர்ணசந்திரன் (SIIV No.359)
    குறண்டி…. தோரிபடாரர் மாணாக்கர் சிறு படாரர் (SIIV No.323)
    நல்கூர் அலநேமிப்படார் மாணாக்கிகள் நால்கூர்க்குரத்திகள் (SIVN6356)
    பட்டினிப்படாரர் மாணாக்கிகள் திருப்பருத்திக்குரத்திகள் (SiIV No. 372)
    படிக்கமணப்படாரர் மாணாக்கர் பவணந்திப் பெரியார் (SIIV No.381)
    திருமலையர் மோனிபடாரர் மாணாக்கர் தயாபாலப் பெரியார்
    புட்பநந்திப்படாரர் மாணாக்கர் பேறாநந்திப்படாரர் (SIIV No.391)
    திருமலை அரட்ட நேமிப்படாரர் மாணாக்கர்…. படாரர் (SIIV No.397)
    வேளற்குடி மூத்த அரட்டநேமிப்படாரர் மாணாக்கர் குணநந்திப் பெரியார் (SIIV No.398)
    சேந்தன் கி… காடன் திருபடாரர் மாணாக்கர் சீமாங்கிக் குரவடிகள் (SIIV No.399)
    திருநறுங்கொண்டை பலதேவக்குரவடிகள் மாணாக்கர் கனகவீரஅடிகள்(SIIV No.317)
    திருக்கோட்டாற்று விமள சந்திரக்குரவடிகள் மாணாக்கர் சாந்திசேன அடிகள் (SIIV No.333-390)
    திருநாட்டூர் விமள சந்திரக் குரவடிகள் மாணாக்கர் குண்ணூர் யோகியார் (SIIV No.384)

    பெருங்காடி…. தேவர் குரவடிகள் மாணாக்கர்….
    ஆணனூர் சிங்கநந்திக் குரவடிகள் மாணாக்கர், நாகநந்திக் குரவடிகள்

    உத்தநந்திக்குரவிகள் மாணாக்கர் சாந்திதேசனப் பெரியார் (SIIV No.316) பழயிறைக் காணிக்குரத்தி மாணாக்கியார் சிரிகுரத்தியார் (SIIV No.320)
    மிழலூர்க் குரத்தியார் மாணாக்கியார் திருச்சாரணுத்துப்பட்டாரிகள் (SIIV No.321)
    வெண்பைக்குடி தச்சன் சங்கக்குரத்திகள் (யார்) மாணாக்கியார்
    ஸ்ரீ(சிரி) விசயக்குரத்தியார் (SiIIV No.332 )
    நால்கூர்க்குரத்திகள் மாணாக்கி நாட்டிகப்படாரர் (SIIV No.355)
    பேரூர்க்குரத்தியார் மாணாக்கியார் மிழலூர்க் குரத்திகள் (SIIV No.394)
    சித்தாந்தம் உரைக்கும் படாரர் உள்ளிட்ட பதின்மர் வயிராக்கியர் (SIVNo.405)
    சித்தாந்தம் உரைக்கும் படாரர் உள்ளிட்ட ஐவர் வயிராக்கியர் (SIV No.406)
    திருமலைக்குரத்திகள் மாணாக்கன் ஏனாதிக் கூத்தன் (SIIV No.370) மம்மைக்குரத்திகள் மாணாக்கிகள் அட்டநேமிக்குரத்திகள் (SIIV No.371) (2007,ப.170)

    இக்கல்வெட்டுகளில் ஒவ்வொரு ஆசிரியரையும் குறிக்கும்போது அவரது ஆசிரியர் பெயரையும் இணைத்துக்குறிப்பிடும் மரபு இருப்பதை அறியமுடிகிறது. இன்று அந்த மரபு வழக்கொழிந்துவிட்டது எனினும் தற்போது சிலம்பம், வளரி போன்ற போர்க்கலைகளைக் கற்போர் தமது மரபை ஆசிரியர்களுடன் தொடர்புப்படுத்தும்போக்கு காணப்படுகிறது.

    கல்வெட்டுகளில் காணப்படும் ஆண்பால் ஆசிரியர்கள்

    1. கனகநந்திப் பட்டாரகர்
    2. குணசாகரப்படார்
    3. குறண்டி தீர்த்தபடார்
    4. குறண்டி கனகநந்திப்படாரர்
    5. குறண்டி தீர்த்தபடாரர்
    6. நல்கூர் அலநேமிப்படார்
    7. பட்டினிப்படாரர்
    8. படிக்கமணப்படாரர்
    9. திருமலையர் மோனிபடாரர்
    10. புட்பநந்திப்படாரர்
    11. திருமலை அரட்ட நேமிப்படாரர்
    12. சேந்தன் கி… காடன் திருபடாரர்
    13. திருநறுங்கொண்டை பலதேவக்குரவடிகள்
    14. திருக்கோட்டாற்று விமள சந்திரக்குரவடிகள்
    15. திருநாட்டூர் விமள சந்திரக் குரவடிகள்
    16. பெருங்காடி…. தேவர் குரவடிகள்
    17. ஆணனூர் சிங்கநந்திக் குரவடிகள்
    18. வேளற்குடி மூத்த அரட்டநேமிப்படாரர்

    பெண்பால் ஆசிரியர்கள்

    குரவர் என்பது சமண சமய ஆசிரியர்களையும் குரத்தி என்பது ஆசிரியைகளையும் குறிக்கப்பயன்படுகிறது. சில கல்வெட்டுகளில் குரவி என்ற பெண்பால் பெயரும் சமண சமயத்துறவிகளைக்குறிக்க வழங்குகிறது. உழவன் என்பதற்குப் பெண்பால் பெயர் உழத்தி ஆகும். நெல்லை வட்டார வழக்கில் உழத்தி, உழவி என இருபெயர்களும் வழங்கப்படுகிறது. குறவன் என்ற சொல்லின் பெண்பாலாக குறவி என்ற சொல்லையும் தமிழ்ப்பேரகராதி குறிப்பிடுகிறது. அதுபோல குரத்தி, குரவி என இரு பெண்பால் பெயர்கள் கல்வெட்டில் வருகின்றன.

    சமண சமயப்பெண்பால் துறவிகளைச் சமணர் இயக்கியர் (யட்சி) என்றும் ஆர்யாங்கனை என்றும் கந்தியார் என்றும் கூறுவர். கந்தியார் என்பது கவுந்தி என்றும் வழங்கப்படும் என்கிறார் மயிலை. குரத்தி, பட்டாரி, பட்டாரர், சாரணி, ஆரியை ஆகிய பெயர்களும் பெண்பால் துறவிகளை அழைக்கின்றனர்

    1. உத்தநந்திக்குரவிகள்
    2. பழயிறைக் காணிக்குரத்தி
    3. மிழலூர்க் குரத்தியார்
    4. வெண்பைக்குடி தச்சன் சங்கக்குரத்திகள்
    5. ஸ்ரீ(சிரி) விசயக்குரத்தியார்
    6. நால்கூர்க்குரத்திகள்
    7. பேரூர்க்குரத்தியார்
    8. திருமலைக்குரத்திகள்
    9. மம்மைக்குரத்திகள்

    குழுவாணை நல்லூர் என்று அழைக்கப்பட்ட கழுகுமலை சமணப்பள்ளியில் ஆண் ஆசிரியர்கள் பதினெழுவர் பெயர்களும் பெண் ஆசிரியர்கள் ஒன்பது பேர் பெயர்களும் கல்வெட்டுகள் மூலம் அறியப்படுகின்றன. இனி மாணவ மாணவியர் பற்றிக்காண்போம்.

    மாணவர்கள்.

    1. பேரெயிற்குடிச்சாத்தன்தேவன்
    2. ஆதித்த படாரர்
    3. கனகநந்திப் பெரியார்
    4. பூர்ணசந்திரன்
    5. சிறு படாரர்
    6. பவணந்திப் பெரியார்
    7. தயாபாலப் பெரியார்
    8. பேறாநந்திப்படாரர்
    9. குணநந்திப் பெரியார்
    10. சீமாங்கிக் குரவடிகள்
    11. கனகவீரஅடிகள்
    12. சாந்திசேன அடிகள்
    13. குண்ணூர் யோகியார்
    14. நாகநந்திக் குரவடிகள்
    15. சாந்திதேசனப் பெரியார்
    16. ஏனாதிக் கூத்தன்

    மாணவிகள்

    1. இளநெற்சுரத்துக் குரத்திகள்
    2. நால்கூர்க்குரத்திகள்
    3. திருப்பருத்திக்குரத்திகள்
    4. சிரிகுரத்தியார்
    5. திருச்சாரணுத்துப்பட்டாரிகள்
    6. ஸ்ரீ(சிரி) விசயக்குரத்தியார்
    7. மிழலூர்க் குரத்திகள்
    8. அட்டநேமிக்குரத்திகள்
    9. நாட்டிகப்படாரர்

    கழுகுமலைக்கல்வெட்டுகள் மூலமாக 16 மாணவர்கள் பெயர்களும் 9 மாணவிகளின் பெயர்களும் அறியவருகின்றன. மேலும் இதில் மாணவர்கள் பலர் பெண்பால் ஆசிரியர்களிடம் பயின்றதையும் மாணவிகள் ஆண்பால் துறவிகளிடம் பாடம் பயின்றதையும் கல்வெட்டு வழி அறியமுடிகிறது. இங்கு பல துறைகளில் வல்ல இருபால் ஆசிரியர்களிடம் மாணவர்களும் மாணவிகளும் ஒரே கூரையின் கீழ் கல்வி பயின்றுள்ளனர். வெளிப்பகுதிகளில் இருந்து வந்து பாடம் எடுத்துச் செல்லும் ஆசிரியர்களும் வெளியூர்களில் இருந்து கழுகுமலைக்கு வந்து தங்கி குறிப்பிட்ட பாடங்களைப் பயிலும் மாணவர்களும் இருந்துள்ளனர்.

    திருச்சாரணத்து மலையிலுள்ள வரகுண மன்னனது கல்வெட்டு பேரெயக்குடியை (கழுகுமலை)ச் சார்ந்த அரட்டநேமிபட்டாரகரின் சிஷ்யை குணந்தாங்கி குரத்தியைக் குறிப்பிடுகிறது. (2005,ப.116) அரட்டநேமிப்பட்டாரகர் ஆண் பால் முனிவரிடம் பெண்பால் துறவி பாடம் பயின்றிருப்பதை அறியமுடிகிறது.

    கழுகுமலைச் சமணச்சிற்பங்களில் உள்ள அச்சநந்தி பெயர் ஏர்வாடிக் கல்வெட்டிலும் இடம்பெறுகிறது. நாகர்கோவில் அருகிலுள்ள கோட்டாறு, காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள திருநறுங்கொன்றை,திருமலை, குமரி மாவட்டத்தில் உள்ள திருச்சாரணத்து மலை, நீலகிரி மாவட்டத்திலுள்ள குண்ணூர்  தென்பாண்டி நாட்டுப்பகுதிகளான கோட்டூர்,களக்குடி, வேளற்குடி, வெண்பைக்குடி முதுகுடி நாடு ஆகிய பகுதிகளில் இருந்தும் ஆசிரியர்களும் மாணவர்களும் கழுகுமலைச் சமணப்பல்க்லைக்கழகத்திற்கு வந்து கற்றல் கற்பித்தல செயல்களில் ஈடுபட்டுள்ளனர் என்பதைக் கல்வெட்டுகள் காட்டுகின்றன. கழுகுமலையில் உள்ள குழுவாணைநல்லூர் என்ற சமண சர்வகலாசாலையை நிறுவியவர் யாப்பருங்கலக்காரிகை என்ற இலக்கண நூலுக்கு உரை எழுதிய குணசாகரர் என்ற சமணத்துறவி ஆவார் (2007,ப.123) எனவே இங்கு சமண மத சித்தாந்தங்கள், நூல்கள் மட்டுமல்லாது தமிழ் இலக்கண இலக்கியங்களும் கற்பிக்கப்பட்டன என உய்த்துணர இயலுகிறது. இங்கு கணிதமும் வானியலும் கற்பிக்கப்பட்டன என்றும் கூறப்படுகிறது. (2007,ப172-175) குழுவாணைநல்லூர் என அழைக்கப்படும் சமணப்பள்ளிக்கு ஏரி, அணைக்கட்டு, விளைநிலங்கள் இருந்தன என்பதும் கல்வெட்டுகள் மூலம் தெரியவருகிறது. (2007,ப.176) கழுகுமலை சமணப்பல்கலைக்கழகம் என்ற அளவில் விளங்கிய பல் துறைகளில் வல்ல இருபால் ஆசிரியர்களைக் கொண்டு நடத்தப்பட்ட சமணப்பள்ளியில் ஆண்களும் பெண்களும் சம அளவில் மாணாக்கர்களாக கல்வி கற்றனர் என்பதும் இத்தலம் மாணவர்களும் மாணவிகளும் தங்கியிருந்து பயிலும் உண்டு உறை கல்விக்கூடமாகவும் இருந்துள்ளது என்பதை அறியமுடிகிறது.

    சான்றாதாரங்கள்.

    1. வேங்கடசாமி,மயிலை.சீனி.,(1954). சமணமும் தமிழும். சென்னை:கழக வெளியீடு.
    2. Sivaramamurthy,C., (1961). Kalugumalai and Early Pandyan Rock-cut shirnes. Bombay: N.M.Tripathi Private Ltd.
    3. Sivaramamurthy,C., (1983) Panorama of Jain Art-South India. New Delhi : The Times of India
    4. காசிநாதன்,நடன.,சந்திரமூர்த்தி,மா.,(ப.ஆ). (2005) சமணத்தடயம். சென்னை: மணிவாசகர் பதிப்பகம்.
    5. கணபதி,செ.மா., (2005).கழுகுமலை வெட்டுவான்கோயில். திருநெல்வேலி : சங்கத்தமிழ்ப்பதிப்பகம்.
    6. கணபதி,செ.மா., (2007).கழுகுமலையும் சமணமும். கழுகுமலை : சங்கத்தமிழ்ப்பதிப்பகம்.

    ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):

    கட்டுரை நன்று. கட்டுரையில் வேடல் என்ற சமண பெண்டிர்க்கான பல்கலைக்கழகம் பற்றிய குறிப்பைச் சேர்த்திருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.


    Share
  • குறளின் கதிர்களாய்…(399)

    குறளின் கதிர்களாய்…(399)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்…(399)

    அழுக்கற் றகன்றாரு மில்லையஃ தில்லார்
    பெருக்கத்தில் தீர்ந்தாரு மில்.

    -திருக்குறள் – 170 (அழுக்காறாமை)

    புதுக் கவிதையில்…

    பிற மாந்தர் மீது
    பொறாமை கொண்டவர்
    பெறுவதில்லை வாழ்வில்
    பெருமைகள் என்றும்..

    பொறாமைக் குணமில்லார்
    பெற்றிடும் பேறாம்
    பெருஞ் செல்வப்பெருக்கு
    போவதுமில்லை…!

    குறும்பாவில்…

    அடுத்தவர் மீது கொண்ட
    அழுக்காறு அளிப்பதில்லை பெருமைகள் எதையும்,
    அழுக்காறிலாரை அகலாது செல்வப்பெருக்கு…!

    மரபுக் கவிதையில்…

    மண்ணில் தமக்குள் பொறாமைகொண்டே
    மற்றவர்க் கிடரே செய்வதென
    எண்ணம் கொண்ட மனிதரெலாம்
    என்றுமே பெருமை பெறுவதில்லை,
    புண்ணாம் பொறாமை மனதினிலே
    புகுந்திட விடாத தூயரையே
    திண்ண மாக விலகிடாதே
    திரண்டிடும் செல்வப் பெருக்கெலாமே…!

    லிமரைக்கூ…

    பெருமை எதுவுமே சேராதே
    பொறாமை கொண்டோர் வாழ்வினிலே, அழுக்காறற்றோர்க்கு
    அருஞ்செல்வம் அகலும்நிலை வாராதே…!

    கிராமிய பாணியில்…

    கொள்ளாத கொள்ளாத
    பொறம கொள்ளாத,
    அடுத்தவன் வாழுறதப் பாத்து
    பொறாம கொள்ளாத..

    அடுத்தவனப் பாத்து
    பொறாம கொள்ளுறவனுக்கு
    வாழ்க்கயில
    எந்தப் பெருமயும்
    வந்து சேராதே..
    பொறம கொணம் இல்லாத
    நல்லவங்கிட்ட
    சேருற செல்வமெல்லாம்
    ஒருநாளும்
    அவனவுட்டுப் போவாதே..

    அதால,
    கொள்ளாத கொள்ளாத
    பொறம கொள்ளாத,
    அடுத்தவன் வாழுறதப் பாத்து
    பொறாம கொள்ளாத…!

    Share
  • தவம்

    தவம்

    பாஸ்கர் சேஷாத்ரி

    எப்போதோ ஓடின ரயில் தடக்கென இன்றோடும்
    எந்நாளோ ரணமான காயங்கள் சட்டென வலிக்கும்
    தேய்ந்து போய் நின்ற பாடல்கள் செவியில் அலைபாயும்
    கொள்ளி வைத்த உடல்களின் அனல் உடலில் அறையும்
    கூர்ப்பான மனத்தில் உடல் ரோமம் உயிர்ப்பெடுக்கும்
    கனவுகளைத் தின்று விட்டு கட்டில் இருளுக்கு நிற்கிறது .
    மரங்களும் செடிகளும் பார்த்தே வளர்ந்துவிட்டன
    சுவரில் செருகி நின்ற அட்டைப் பூச்சியும் இடம் மாறியது
    எந்த இயக்கமும் எதற்காகவும் செயலைத் தள்ளவில்லை
    நானும் நேரமும் சேர்ந்தே நிற்கிறோம் என்றென்றும்
    ஆனாலும் அது நகர்வது போல நான் நகர முடியவில்லை
    இருளில் கொண்டாட்டம், பகலில் கடிகார முள்ளில் கண்
    எந்தக் கூட்டத்திலும் நான் மட்டும் தனியனாக நிற்கிறேன்
    நெருங்க முயல முடியாமல் தோற்றுப் போகிறேன்
    இழப்பில்லை எனக்கு ஓர் உலகம் எப்போதும் இருக்கிறது
    தனித்திருப்பது தவமெனப் புரிந்து,எனக்குள் இருப்பது சுகம்

    Share
  • மே தினம் – உழைப்பாளியின் குரல்

    மே தினம் – உழைப்பாளியின் குரல்

    உணவகங்களில் உணவு பரிமாறுபவராக 35 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றியவர், ஆனந்த ராவ். பிரபலமான திரைப்பாடல் மெட்டுகளில் தாமே பாடல் இயற்றி, இனிய குரலில் பாடும் ஆற்றல் கொண்டவர். உழைக்கும் வர்க்கப் பாடகர் என்பதில் பெருமை கொள்ளும் இவர், மிக முக்கியமான கோரிக்கையை இந்த மே தினத்தில் எழுப்பியுள்ளார். இந்த உழைப்பாளியின் குரலைக் கேளுங்கள். உரியவர் செவிகளுக்கு இதைக் கொண்டு சேருங்கள். உழைக்கும் தோழர்கள் அனைவருக்கும் மே தின வாழ்த்துகள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • உழைப்பவர் நலத்தினை உயர்த்தியே போற்றுவோம்!

    உழைப்பவர் நலத்தினை உயர்த்தியே போற்றுவோம்!

    மகாதேவ ஐயர்  ஜெயராமசர்மா 
    மேனாள் தமிழ் மொழிக்கல்வி இயக்குநர் 
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    ஊசிமுதல் உணவுவரை உழைப்பாலே வருகிறது
    உழைக்கின்றார் வாழ்வெல்லாம் உயர்வுபெற மறுக்கிறது
    காசுள்ளார் கைகளிலே உழைப்பெல்லாம் போகிறது
    கவலையுறும் உழைப்பாளி கண்ணீரில் மிதக்கின்றான் !

    சமத்துவங்கள் பேசுகிறார் சங்கங்கள் அமைக்கின்றார்
    நினைத்தவுடன் மாநாடு நிறையவே வைக்கின்றார்
    அனைத்துமே உழைக்கின்றார் அனுசரணை என்கின்றார்
    ஆனாலும் உழைக்கின்றார் அல்லலிலே இருக்கின்றார் !

    வியர்வையிலே தொழிலாளி வேதனையில் தொழிலாளி
    நலமிழந்து கிடக்கின்றான் நயமெதுவும் காணவில்லை
    முதலீட்டும் முதலாளி தலைநிமிர்ந்து நிற்கின்றான்
    முழுதுழைக்கும் தொழிலாளி நிலையிழந்து தவிக்கின்றான் !

    பணமெண்ணும் மனமகன்று மனமெண்ணும் நிலைவேண்டும்
    உழைப்பதனை உயர்வென்று உணர்த்தியே விடவேண்டும்
    உழைத்திடுவார் இருப்பிடங்கள் உயரவெண்ணும் உளம்வேண்டும்
    உழைப்பாளி முதலாளி ஓரணியாய் வரவேண்டும் !

    வளமாக வாழ்வதற்கு வழிசமைக்கும் தொழிலாளி
    நிலமீது நிம்மதியாய் தலைநிமிர வழிவேண்டும்
    வளமீட்டும் முதலாளி மனமகிழ வைத்துவிடும்
    வாழ்வளிக்கும் தொழிலாளி வாழும்நாள் வரவேண்டும் !

    உழைத்திடும் கைகளென்றும் உயர்வினைப் பெறவேண்டும்
    உழைப்பினை மதித்திடும் உளமது எழவேண்டும்
    உழைப்பினால் உலகமே உயர்ந்திடும் தன்மையால்
    உழைப்பவர் நலத்தினை உயர்த்தியே போற்றுவோம் !

    உழைப்பை மதிக்கும்நாள் உன்னதமே உலகினுக்கு
    உழைப்பை மதிக்கும்நாள் உயர்வினையே உணர்த்திவிடும்
    உழைப்பை மதிக்கும்நாள் உழைப்பாளர் மகிழ்ந்திடுவார்
    உழைப்பை மதித்திடுவோம்ஓரணியாய் வாருங்கள் !

    Share
  • ஆளி விதைப் பொடி

    ஆளி விதைப் பொடி

    அருமருந்தான ஆளி விதை (Flax Seeds), எடை குறைக்கும், முடி வளர்க்கும், மார்பகப் புற்றுநோயைத் தடுக்கும், மாதவிடாய்க் கோளாறுகளைச் சரியாக்கும். ஆளி விதைப் பொடியைச் சாதத்துடன் கலந்து சாப்பிடலாம். இட்லி, தோசை, அடை ஆகியவற்றுக்கும் தொட்டுக்கொள்ளலாம். அற்புதச் சக்தி வாய்ந்த ஆளி விதைப் பொடியைத் தயாரிப்பது எப்படி? இதோ செய்து காட்டுகிறார் சுதா மாதவன். பார்த்துப் பயன் பெறுங்கள். உங்கள் வீட்டிலும் செய்து பாருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • நேந்திரம் வறுவல் தயாரிப்பது எப்படி?

    நேந்திரம் வறுவல் தயாரிப்பது எப்படி?

    கேரளா ஹாட் சிப்ஸ் கடையில் (தாம்பரத்தில் மட்டும்) தினமும் 200 கிலோ நேந்திரம் வறுவல் சுடச்சுட விற்பனை ஆகிறது. அசல் சுவையும் மொறுமொறுப்பும் கொண்ட நேந்திரம் சிப்ஸ் தயாரிப்பது எப்படி? இங்கே பாருங்கள்.

    இதைப் பார்த்துக் கற்றுக்கொண்டு, நீங்களும் கடை போட்டு விற்பனை செய்யலாம். தொழில்முனைவோர் ஆகலாம். தரமான பொருளுக்கு நிறையத் தேவை இருக்கிறது.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • நாமார்க்கும் குடியல்லோம் எனவுரைத்த தமிழடியார்!

    நாமார்க்கும் குடியல்லோம் எனவுரைத்த தமிழடியார்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், அவுஸ்திரேலியா

    தமிழ்மொழி மற்றைய மொழிகளிலும் சிறப்பான மொழியாக விளங்குவதற்குக் காரணம், மற்றைய மொழிகளில் இல்லாத ஒரு சிறப்பு தமிழ் மொழியில் இருப்பதேயாகும் என்பது அறிஞர்கள் கருத்தாக இருக்கிறது. அந்தத் தனிச்சிறப்பு எது தெரியுமா அதுதான் “பக்தி இலக்கியம்” ஆகும். உலகின் எந்த மொழியிலும் பக்தி என்பது இலக்கியமாகக் கொள்ளப்படவே இல்லை. ஆனால் தமிழ் மட்டும் தனக்கெனப் பக்தியை இலக்கியம் ஆக்கியே இருக்கிறது. இதனால் தமிழ் பக்தியை அரவணைத்தபடியே பயணப்படுகிறது என்பதை கருத்திருத்தல் அவசியமாகும். பக்தியை இலக்கியம் ஆக்கும் வகையில் தமிழுக்கு வந்து வாய்த்தவர்கள்தான் ஆண்டவனது அடியார்கள் ஆவர். அந்த அடியார்களில் முன்னுக்கு வந்து நிற்பவர் களில் மூத்தவர் காரைக்கால் அம்மையார். அவரின் பின் பக்திப் பெருவெளியில் பயணப்பட இம்மாநிலத்தில் வந்தவர்களாய் அப்பரும் சம்பந்தரும் விளங்குகிறார் எனலாம். இவர்கள் இருவரும் ஒரே காலத்த வராக இருக்கின்ற பொழுதும் – அப்பர் மூத்தவராகவும், சம்பந்தர் இவரின் இளையவராகவும் ஆகி நிற்கிறார்கள்.

    அப்பரும் சம்பந்தரும் கி.பி ஏழாம் நூற்றைண்டைச் சேர்ந்தவர்களாய் இருந்தாலும், இருவர் வாழ்வும்,  அவர்களுக்குக் கிடைத்த அனுபவங்களும் வேறுபட்டனவாகவே அமைந்திருந்தன என்பதும் நோக்கத் தக்கது, அப்பர் குடும்பச் சூழல் வேறாயும் சம்பந்தர் குடும்பச் சூழல் வேறாயும் அமைந்தே காணப்பட்டது. ஆனால் பக்தி என்னும் நிலையில் இருவரும் ஒருமித்தே பயணப்பட்டார்கள். அப்படிப் பயணப்பட்ட நிலையிலும் அப்பரின் சிந்தனை, செயற்பாடுகள், சம்பந்தரிலும் வேறுபட்டதாகவே அமைகின்ற ஒரு நிலை தோற்றம் பெற்றது. அதற்கு உரிய காரணம் தான் என்ன என்பதை அறிவது மிகவும் முக்கியமாகும்.

    மருள் நீக்கியார் சைவத்தில் பிறந்து சைவத்தைத்துறந்து சமணம் என்னும் சமயத்தைத் தழுவுகின்றார். மருள் நீக்கியாரின் இளம் மனத்தில் சமணத்தின் கொள்கைகள் சிறந்தனவாகப்பதிகின்றன. சமணரும் இவரை அணைக்கின்றனர். சமண மடத்தின் தலைவராய் ஆகும் அளவுக்கு மருள் நீக்கியார் ஆளுமை வளர்கிறது. மருள் நீக்கியார் என்னும் பெயர் மறைந்து சமண மடத்தின் தலைவராய் “தருமசேனர்” என்னும் புதுப் பெயர் வாய்க்கிறது. நாட்டில் சமணமே அரசபீடத்தாலும் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. மருள் நீக்கியாரின் மனம் மாறுகிறது. சமணத்தின் தலைமயைத் தூக்கி எறிந்துவிட்டு தான் பிறந்த சைவத்தில் அவர் சங்கமம் ஆகிறார். சங்கமம் ஆகும் நிலையில் அவர் நெஞ்சம் தமிழைக் கொட்டுகிறது. அதுவும் கவியாய், பக்தியாய், இசையாய் கொட்டுகிறது. எம்பெருமான் சிவனே வியந்து “நாவுக்கரசு” என்று விளிக்கும் அளவுக்கு தமிழ் ஆக்கி நிற்கிறது. மருள் நீங்கியதால் அருள் கிடைக்கிடைக்கிறது. தருமசேனர் சைவம் தளைக்க, தொண்டுகள் சிறக்க, நாவுக்கக்கரசாய் வலம் வருகிறார். வலம் வருகின்ற நாவுக்கரசரை இளையவரான சம்பந்தப் பெருமான் கண்டவுடன் “அப்பரே” என்று அழைக்கின்றார். இறைவன் அழைத்த நாவுக்கரசர் என்னும் பெயரும் சம்பந்தப் பெருமான் அழைத்த அப்பரே என்னும் பெயரும் – சைவத் தமிழ் உலகில் நிலையான, உறுதியான பெயராக நிலைத்தே விட்டது என்பது மனங்கொள்ளத்தக்கது.

    அப்பர் பெருமான் வரலாற்றை நோக்கும் பொழுது – அவர் சமயத்தின் வழியிலும் பயணப்பட்டிருக்கிறார். சமூகநீதியின் வழியிலும்  பயணப்பட்டி ருக்கிறார் என்றுதான் மனங்கொள்ள வைக்கிறது. சம்பந்தப் பெருமானின் சமகாலத்தவராக இருந்த பொழுதும், அப்பரின் வாழ்வியல் அனுபங்களும், அவரின் வயதின் முதிர்ச்சியும் அவருக்கென்று தனியான ஒரு இடத்தினையே வழங்கி இருக்கிறது எனலாம்.

    சமணமதத் தலைவராய் இருந்த காரணத்தால் அவரின் புலமை நலம் – ஆளுமை உடையதாகவே அமைந் தது,வடமொழியிலும், தமிழ் மொழியிலும் புலமை உடையவராகவும் இருந்திருக்கிறார். சமண மதத்தாரால் மதிக்கப்படும் நிலையில் அவர் இருந்திருக்கிறார் என்பதும் நோக்கத்தக்கது. அப்படி மதிக்கப்பட்டவர் அந்த மதத்தை விட்டு வெளியில் வருவதும், சைவத்தில் இணைவதும் சம்பந்தருக்குக் கிடைக்காத நிலை எனலாம்.  மதம் விட்டு விடு மதம்மாறியவர் என்று எடுக்துக் கொண்டால் அதில் அப்பர்தான் முன்னிற்கிறார். அப்படி அவர் மனம் மாறியமையமையால் சைவம் மிகச்சிறந்த ஒரு அடியவரை, பேராளுமையை, சிந்தனையாளரைப் பெற்றுக்கொள்ளும் நிலை வாய்த்தது என்பதை கருத்திருத்தல் அவசியமானதாகும். ஏழாம் நூற்றாண்டின் சமய சமூக சூழலில் சம்பந்தருடன் அப்பரின் இணைப்பு அளப்பரும் இணைப்பாகவே அமைந்தது. அப்பரும் சம்பந்தரும் அப்பாவும், பிள்ளையும் போல இணைந்து ஆலயங்கள் தோறும் சென்று அடியார்கள் மனத்தில் பக்தியென்னும் விதையினை ஆழமாக விதைத்திட்டார்கள் என்பதும் நோக்கத்தக்கதாகும். இளமையும் முதுமையும் இணைந்த நிலை சைவ பக்தியுலகுக்கு பெரும் உந்து சக்தியாக அமைந்தது என்ப தைக் கருத்திருத்தல் வேண்டும்.

    அப்பர் மதம்மாறிய நிலையில், அவரின் கூட இருந்த சமணர்கள் ஆத்திரம் கொண்டு வெகுண்டெழுந்தார்கள். ஏழாம் நூற்றாண்டில் அரசுகட்டிலில் பாண்டியனும் , பல்லவனும் இருந்தார்கள். அவர்களும் சமணத்தைத் தழுவி அதற்கே ஆதரவும் காட்டி நின்றார்கள். சமணம் என்பது அரசமதமாகவே காணப்பட்டது எனலாம். வெகுண்ட சமணர்கள் அரசனை நாடி , மதம்மாறிய துரோகத்துக்கு உரிய தண்டனையினை அப்பருக்கு வழங்கிட வழி வகுத்தனர். அரசனுடைய அழைப்பாணை அப்பரிடம் போனது. அப்பர் மனம் முழுவதும் எம் பெருமான் சிவனின் நினைப்பே நிறைந்திருந்த காரணத்தால், அரசாணையினை அவர் ஒரு பொருட்டாக எடுக்கவேயில்லை. அரனுக்கு அடியவராய் ஆகிவிட்ட காரணத்தால் அரசினையே எதிர்த்து ;

    நாமார்க்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம்
    நரகத்தி லிடர்ப்படோம் நடலை யில்லோம்
    ஏமாப்போம் பிணியறியோம் பணிவோ மல்லோம்
    இன்பமே யெந்நாளுந் துன்ப மில்லை
    தாமார்க்குங் குடியல்லாத் தன்மை யான
    சங்கரன்நற் சங்கவெண் குழையோர் காதிற்
    கோமாற்கே நாமென்றும் மீளா ஆளாய்க்
    கொய்ம்மலர்ச்சே வடிஇணையே குறுகி னோமே

    என்று அஞ்சாமல் ஏழாம் நூற்றாண்டில் எடுத்துரைத்த தமிழ் அடியவராய் அப்பர் பிரகாசித்து நிற்கிறார். அரசனையே எதிர்த்து தனது அஞ்சாமையை உரைத்த அப்பரின் துணிச்சல் ஒரு சமய, சமூகப் புரட்சியாய் அமைகிற தல்லவா! பிற்காலத்தில் பாரதி “அச்சமில்லை அச்சமில்லை” என்று கர்ஜிப்பதற்கும்  வழி வகுத்தவர் அப்பர் என்றும் எடுத்துக் கொள்ளலாம் அல்லவா!

    சம்பந்தருக்கு இவ்வாறான சந்தர்பம் வாழ்க்கையில் வாய்க்கவில்லை. அது மட்டு மல்ல அப்பரின் பின் வந்த எந்த அடியவர்களுக்கும் இப்படியான சந்தர்ப்பம் வரவேயில்லை. இதனால் அப்பரினால் மட்டுமே “நாமா ர்க்கும் குடியல்லோம்” என்று சொல்லும் நிலை வாய்த்துவிட்டது. சமயத்தை மாற்றி வந்த நிலையிலும் அப்பர் உயர்நிலையிலே யாவராலும் பார்க்கப்பட்டார். இதுவும் அப்பரை மற்றவர்களிருந்தும் வேறுபடுத்தியே காட்டி நிற்கிறது.

    தமங்குத் தீங்கு வந்தால் யாவருமே நொந்து போவார்கள். வந்த தீங்கினை வைதே நிற்பார்கள். ஆனால் அப்பர் வித்தியாசமானவராக விளங்குகிறார். அவருக்கு சூலை நோய் வந்தது. பெருந்துன்பப் பட்டார். அப்படிப் பெருந் துன்பத்தை தந்த சூலைநோயினை வையாமல் அதற்கு நன்றியினைச் சொல்லுகிறாரென்றால் அப்பரின் சிந்தனை வித்தியாசாமானதுதானே !

    பொய்வாய்மை பெருக்கிய புன்சமயப் பொறிஇல் சமண்நீசர் புறத்துறையும்
    அவ் ஆழ்குழியின் கண்விழுந்து எழும் ஆறு அறியாது மயங்கி அவம்புரிவேன்
    மைவாச நறுக்குழல் மாலையாள் மணவாளன் மலர்க்கழல் வந்தடையும்
    இவ்வாழ்வு பெறத்தரு சூலையினுக்கு எதிர்செய் குறை என்கொல்

    இப்படிச் சொல்லுவதற்கு யாரால் முடியும்? அப்பர் ஒருவரால்த்தான் முடியும். அதனால் அவர் உயர்ந்தே நிற்கிறார். சூலை வந்த படியால்த்தான், புன்சமயத்தை விட்டு வெளிவரவும். அறிவானது தெளிவுற்று, நற்பாதை வழி காணவும், உயர்பொருளான அந்தப் பரம்பொருளின் பாதங்களைப் பற்றவும் முடிந்தது என்னும் மனத்தெளிவும் ஏற்பட்டது என்று சொல்லும் அளவுக்கு அப்பர் இருந்திருக்கிறார் என்பது அடியவர்கள் அனைவருக்கும் ஏன் சமூகத்துக்குமே காட்டப்படும் புதுக் கருத்தாய் மலர்கிறதல்லவா!

    சமயத்தில் புரட்சி, சமூகத்தில் புரட்சி என்று அப்பரின் புரட்சிகள் வளர்ந்து கொண்டே போவதைக் காணமுடிகிறது. அரசை எதிர்த்தார். பெரிய அமைப்பாய் அக்காலத்தில் இருந்த சமணத்தையே எதிர்த்து துணிவுடன் உண்ணா நோன்பினைக் கைக்கொண்டு உறுதியுடன் தனது எண்ணத்தை நிலை நாட்டுகிறார். பிற்காலத்தில் அண்ணல் காந்தி உண்ணா நோன்பினைக் கைக் கொள்ளவும், அவரைத் தொடர்ந்து பலரும் பல சந்தர்ப்பங்களில் உண்ணா நோன்பினைக் கைக்கொள்ளவும் முன்னோடியாக அப்பர் விளங்குகிறார் என்பதும் மனங் கொள்ளத்தக்கது.

    துணிவான எணண்ணங்களை மனத்திலே நிறைத்து வைத்தவராய் அப்பர் பெருமான் இருந்திருக்கிறார் என்பதைக் கட்டாயம் சொல்லியே ஆக வேண்டும். அந்தவகையில் அவரின் எண்ணமாய் மலரும் இக்கருத்து யாவரையும் சற்று திகைப்புடன் திரும்பிப் பார்க்க வைத்திடும் கருத்தாகவே அமைகிறது எனலாம். ஆண்டவன் அடியார்களுக்கு அவர் கொடுக்கும் உயரிய நிலை இங்கே காட்டப்படுகிறது.

    சங்கநிதி பதுமநிதி யிரண்டுந் தந்து
    தரணியொடு வானாளத் தருவ ரேனும்
    மங்குவார் அவர்செல்வம் மதிப்போ மல்லோம்
    மாதேவர்க் கேகாந்த ரல்லா ராகில்
    அங்கமெலாங் குறைந்தழுகு தொழுநோ யராய்
    ஆவுரித்துத் தின்றுழலும் புலைய ரேனும்
    கங்கைவார் சடைக்கரந்தார்க் கன்ப ராகில்
    அவர்கண்டீர் நாம்வணங்கும் கடவு ளாரே

    என்னதான் செல்வமும், செல்வாக்கும், உயர்நிலையும் வாய்த்தாலும் ஆண்டவன் அடியவராய் இல்லார் எதுவுமே இல்லார்தான் என்று கூறி – எந்த ஒரு நிலையில் இருந்தாலும் அவர்கள் ஆண்டவனின் அன்புக்கு உரிய வரானால் அவர்களே வணங்கத் தக்கவர்கள் என்று சொல்லும் அப்பரின் சிந்தனை சமயத்தில் தோற்றுவிக்கப்பட்ட புதிய சமூகச் சிந்த னையாக எழுகிறதல்லவா!

    சமணத்தில் பல தத்துவங்கள் இருக்கின்றன. அறநூல்கள் பலவற்றின் ஆசிரியர்களாக சமண ஆளுமைகள் பலர் இருக்கின்றார்கள் என்பதை எவரும் மறுத்துரைத்துவிடல் முடியாது. ஆனால் உலகியல் வாழ்வில் இசையினையும், இல்லறத்தினையும், பெண்களையும், கலைகளையும், அழகினையும், சமணம் ஒதுக்கியது மட்டுமல்ல வெறுப்புடனுமே பார்த்தது. இந்த நிலை அப்பருக்கு உடன்பாடாக அமைவதாக இல்லை. இவை அனைத்தையும் சைவம் அணைத்தே நின்றது. அப்பரும் அவற்றை அகமிருத்தி தன்னுடைய சிந்தனைகளை மலர்ந்திடச் செய்து நின்றார். அதன் ஒரு நிலைதான் இசையோடு உகந்த திருமுறைப்பாடல்களாகும். ஏழாம் நூற்றாண்டில் தமிழ் இசையினைக் காத்திட வந்த பேராளுமையாகவே அப்பர் எழுகின்றார். அவரினால் பக்தி இலக்கியப் பரப்பில் “திருத்தாண்டகம்” என்பது புதுவரவாய் வருகிறது. தமிழ் இலக்கியப் பரப்பில் தாண்டகத்தை அறிமுகப்படுத்தியவராய் அப்பர் பெருமானே முன்னிற்கிறார். இவரின் இந்த புதிய அறிமுகத்தால் அமைந்த தமிழ் பக்திப் பாடல்கள் இசையுடன் பாடுவதற்கு இயைந்ததாகவே அமைகிறது. அடியவர்கள் இறைவனை ஆராக்காதலுடன் பாடிப் பரவிட இந்த இசையுடன் அமைந்த தாண்டகப் பாடல்கள் கைகொடித்தே நிற்கின்றன. இது அப்பரினால் ஏற்பட்ட மிகப்பெரிய மாற்றம் எனலாம். அப்பரின் இப்புது முயற்சியால் அவர் “தாண்டக வேந்தர்” என்று யாவராலும் அழைக்கும் நிலைக்கு ஆளாகியும் விட்டார். அப்பரினால் தமிழ் இசை வெள்ளம் தமிழ்ச் சமூ கத்தில் பெருக்கெடுக்கத் தொடங்கியது எனலாம். இந்தத் தொடக்கமே பின்னாளில் அண்ணாமலைச் செட்டியாருக்கு தமிழிசையில் ஊக்கத்தையும் ஆக்கத்தையும் ஊட்டியிருக்கிறது என்பதும் நோக்கத்தக்கது.

    கையிலே ஆயுதம் ஏந்தி சமயவழி நின்றவரும் அப்பர்தான். அவரின் கையில் உழவாரம் என்னும் ஆயுதம் இருந்தது. இது கொல்லும் ஆயுதம் அல்ல. அருள் தன்னைக் கொள்ளும் ஆயுதமாகவே அமைந்திருந்தது. தொண்டின் மகிமையினை உணர்த்தும் ஆயுதமாக இருந்தது. உழைப்பின் மகிமையினை உணர்த்தும் அடையாளமாகவும் இருந்தது எனலாம். அடியார்கள் வாழ்வில் அப்பரின் உழவாரம் அசையாத ஆன்மீகச் சொத்தாக அமைந்தது எனலாம். என்கடன் பணி செய்துகிடப்பதே என்பதை உணர்த்தி நின்றது என்றும் எடுத்துக் கொள்ளலாம்.

    “ஆலயம் தொழுவது சாலவும் நன்று” என்பதை மிகவும் சிறப்பாக அப்பர் காட்டி, அங்கு சென்று என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று யாவருக்கும் நல்ல பாடத்தைப் போதிக்கும் நல்லாசி ரியனாகவும் விளங்கி நிற்கிறார்.

    “நிலைபெறுமாறு எண்ணுதியேல் நெஞ்சே நீவா
    நித்தலும் எம்பிரானுடைய கோயில் புக்குப்
    புலர்வதன்முன் அலகிட்டு மெழுக்கு மிட்டுப்
    பூமாலை புனைந்து ஏத்திப் புகழ்ந்து பாடித்
    தலையாரக் கும்பிட்டுக் கூத்தும் ஆடிச்
    சங்கரா சயபோற்றி போற்றி யென்றும்
    அலைபுனல்சேர் செஞ்சடையெம் ஆதீயென்றும்
    ஆரூரா என்றென்றே அலறா நில்லே.”

    நிலை பெறுவதற்கு அப்பர் காட்டும் இந்த வழி ஆன்மீகத்தில் மிகவும் முக்கிய வழியாகும் என்பதைக் கருத்திருத்தல் வேண்டும்.

    திருவங்கமாலை என்னும் ஒரு புதிய சிந்தனையை அப்பர் எமக்கெல்லாம் தருகிறார். கோவில் வழிபாட்டின் எங்கள் உடலின் முக்கியத்துவத்தை இங்கே அட்டவணைப்படுத்தி கிளிப்பிள்ளைக்குப் பாடம் கற்பிப்பதுபோல் பக்குவமாய் அருமையான பாடல்களாய் தந்து அடியார்களில் முன்னிற் பவராய் அப்பர் ஆகி நிற்கிறார்.மற்றைய அடியார்கள் காட்டாத புது முயற்சி இது எனலாம்.

    தலையே நீ வணங்காய்
    கண்காள் காண்மின்களே
    செவிகாள் கேண்மிங்களோ
    மூக்கே நீ முரலாய்
    வாயே வாழ்த்துகண்டாய்
    நெஞ்சே நீ நினையாய்
    கைகாள் கூப்பித்தொழீர்
    ஆக்கை யாற்பயனென்
    கால் களாற்பயனென்
    உற்றார் ராருளரோ
    உற்றார் ராருளரோ
    உற்றார் ராருளரோ
    உயிர் கொண்டு போம்பொழுது
    குற்றாலத்துறை கூத்தனல்லால்
    நமக்குற்றார் ஆருளரோ

    இவ்வாறு வழிபட வழிகாட்டுவது அப்பருக்குரித்தான புதுக்கருத்தாக பார்க்க வேண்டி இருக்கிறது.

    இனிப்பிறவியே வேண்டாம் என்றுதான் அடியார்கள் பலரின் நிலையாக இருந் தது. ஆனால் அப்பர்மட்டும்  தனக்கு மனிதப் பிறவி வேண்டும் என்று ஆண்டவனிடம் வேண்டும் வித்தியாசமான சிந்தனையுடைய அடியவராய் விளங்குகின்றார்.

    குனித்த புருவமும், கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும்,
    பனித்த சடையும், பவளம் போல் மேனியில் பால் வெண் நீறும்,
    இனித்தம் உடைய எடுத்த பொன்பாதமும் காணப் பெற்றால்
    மனி(த்)தப் பிறவியும் வேண்டுவதே, இந்த மா நிலத்தே!

    ஆண்டவனின் அழகான தோற்றப் பொலிவினைக் காட்டி அதனைக் காண் பதற்காகவே இந்த மாநிலத்தில் மனிதப் பிறவி வேண்டும் என்னும் சிந்த னை புதுமையாய் மலர்கிறதல்லவா!

    நமச்சிவாய வாழ்க என்று பிற்காலத்தில் மணிவாசகர் மொழிவதற்கும் அப்பர் வழிகாட்டி இருப்பாரோ என்றும் எண்ணக்கிடக்கிறது.

    சொற்றுணை வேதியன் சோதி வானவன்
    பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
    கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
    நற்றுணை யாவது நமச்சி வாயவே

    இல்லக விளக்கது விருள்கெ டுப்பது
    சொல்லக விளக்கது சோதி யுள்ளது
    பல்லக விளக்கது பலரும் காண்பது
    நல்லக விளக்கது நமச்சி வாயவே

    நமச்சிவாய என்று சொல்லும் பொழுது என்னதான் இடைஞ்சல்கள் வந் தாலும் அத்தனையும் வந்த இடந்தெரியாமல் மறைந்தே விடும் என்னும் நம்பிக்கையை அப்பர் அகமிருந்து காட்டி நிற்பதும் நல்ல சிந்தனையாக அமைகிறது அல்லவா!

    அடியார்கள் பலர் தமக்கு அதுவேண்டும் இது வேண்டும் என்ற கேட்ட இடத்தில் எந்தப் பொருளுமே கேட்கா நின்றவர் அப்பர் பெருமான் மட்டுமே. அவர் கேட்டது மனிதப் பிறவி ஒன்றை மட்டுமே. அதுவும் அந்தப் பெருமா னைக் கண்களால் காண்பதற்காகவே. ஓடும் செம்பொன்னும் ஓக்க நோக்கு பவராய் அப்பர் இருந்தார். அடியார்கள் பலர் அனுபவிக்காத பல தண்டனைகளுக்கு ஆளானவரும் அப்பரே. சமணர்களால் தூண்டப்பட்ட அரசனின் பல தண்டனைகளைக் கண்ட அடியவராகவும் அப்பரே இருக்கிறார். வாழ்க்கைத் தத்துவங்களை அதாவது நிலையாமை பற்றிய பல கருத்துக்களை எடுத்து மொழிந்த நிலையிலும் அப்பர் முன்னிற்கிறார் எனலாம். அதற்குக் காரணம் அவருக்கு கிடைத்த வாழ்வியல் அனுபவங்களே ஆகும். இன்று அல்ல ல்பட்டு ஆற்றா நிற்கும் பலருக்கும் உகந்த ஆறுதலை, தேறுதலை அளிக்கும் அர்த்தநிறை சிந்தனைகளை அப்பர் தன்னுடைய பாடல்களில் காட்டுகிறார் என்பதை மறுத்துரைத்திடல் இயலாது. அப்பர் என்றால் அனுபவம் என்றுதான் சொல்ல வேண்டும். பற்றற்ற அடியார். ஆனால் பரமனைப் பற்றி நின்ற அடியார். புரட்சியை விதைத்த அடியார். புதுமையைப் புகுத்திய அடியார். “எல்லா உலகமும் ஆனாய்  நீயே” என்று விழித்துரைத்த அடியார். அப்பர் என்பவர் தமிழராய் விளங்கி தமிழையே அகமிருத்தி தமிழினால் இறை புகழைப் பரப்பி தமிழ்ப் பக்தி இயக்கத்தில் தலைநிமிர்ந்து நிற்கிறார் என்பதை யாவரும் மனமிருத்துவது அவசியமாகும்.

    விண்ணுளார் தொழுதேத்தும் விளக்கினை
    மண்ணுளார் வினை தீர்க்கும் மருந்தினைப்
    பண்ணுளார் பயிலுந் திருக்கோளிலி
    அண்ணலாரடி தொழுதுய்மினே

    சலம்பூவொடு தூபம் மறந்தறியேன் தமிழோடிசை பாடல் மறந்தறியேன்
    நலந்தீங்கிலும் உன்னை மறந்தறியேன் உன்னாமம்என் னாவில் மறந்தறியேன்
    உலந்தார்தலை யிற்பலி கொண்டுழல்வாய் உடலுள்ளுறு சூலை தவிர்த்தருளாய்
    அலந்தேன்அடி யேன்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே  .

    Share
  • புதுவைப் புயல்!

    புதுவைப் புயல்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண்,  ஆஸ்திரேலியா

    பாட்டுக்கொரு புலவன் பாரதியடா” என்று போற்றப்பட்டவர்தான் எட்டயபுரம் தந்த எங்கள் தமிழின் சொத்து பாரதியார். அவரின் கருத்துக்களை மனமிருத்தி அவரின் பாதையில் பல கவிஞர்கள் பயணப் பட்டிருக்கிறார்கள். ஒவ்வொரு கவிஞரும் பாரதியைப் பார்த்த பார்வைகள் அவரவர் சிந்த னைகளாக மலர்ந்திருக்கின்றன. பாரதியாரின் காலத்தில் கவிமணி தேசிக விநாகம் பிள்ளை இருந்திருக்கிறார். நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை இருந்திருக்கிறார். பாரதிதாசனும் இருந்திருக்கிறார். கவிமணியின் சிந்தனை வேறாயும்நாமக்கல்லார் சிந்தனைவேறாயும்பாரதிதாசன் சிந்தனை வேறாகாவுமே அமைந்திருக்கிறது. இவர்கள் மூவருமே பாரதியைப் போற்றியாவர்களாகவே இருந்திருக்கிறார்கள். எட்டய புரத்துத்துப் பாரதிக்கு எட்டவே போகாமல் கிட்டவே நிற்கும் வாய்ப்பு புதுவையில் கால்பதித்த கனகசுப்பு ரத்தினத்துக்கே வாய்த்திருக்கிறது. கனகசுப்புரத்தினத்துக்குத்தான் எட்டயபுரத்து மகாகவி பாரதியின் ஆசீர்வாதம் கிடைத்திருக்கிறது. அந்த ஆசீர்வாதம்தான் “பாரதிதாசன்” என்று இன்றுவரை அவரை சமூகத்தில் பார்த்திடக், கொண்டாட, வைத்திருக்கிறது என்பதைக் கருத்திருத்தல் அவசியமாகும்.

    பாரதியையும் புரட்சிக்கவி என்று அழைக்கின்றோம். அவரின் வாரிசாக வாய்த்திருக்கும் பாரதிதாசனையும் அழைக்கின்றோம். இருவரையும் புரட் சியின் வடிவமாகவே பார்ப்பதையே சமூகமும் விரும்பி நிற்கிறது என்பதும் மனங் கொள்ளத்தக்கதாகும். பாரதி வாழ்ந்த காலமோ முப்பத்தொன்பது ஆண்டுகளேயாகும். ஆனால் பாரதிதாசன் அவரைவிட இருமடங்கு காலம் வாழ்ந்திருக்கிறார். பாரதியின் தாசனாகவே வாழ்ந்திடவே பாரதி தாசன் ஆசைப்பட்டார். அதுவே தனக்கும்தனது வாழ்வுக்கும் மிகவும் பெருமையானது என்றும் கூட அவர் எண்ணியே இருந்தார். பாரதியைப் போலவே அவரும் புதிதாய்புரட்சியாய். சிந்தித்தார். சிந்தித்தவற்றைத் தன்னுடைய படைப்புகள் வாயிலாகச் சமூகத்தில் இடம் பெறவும் செய்தார். பாரதியின் தாசனாய் அவரின் வாரிசாக வாய்த்த பாரதிதாசன் தன்னுடைய காலத்துக்கு ஏற்ப தன்னுடைய சிந்தனைகளை புதிதாய் வெளிப்படுத்தினார் என்பதை மறுத்துரைத்துவிடல் முடியாது. பாரதியார் வாழ்ந்த காலம் பாரததேசம் அன்னியத்துக்கு அடிமைப்பட்டிருந்த காலம். அவரின் வாரிசாய் வாய்த்த பாரதிதாசன் காலமே சுதந்திரக் காற்றினைப் பாரததேசம் சுவாசித்த காலமாகிவிட்டது. அதனால் தன்னுடைய குருவின் சிந்தனைகளை விட வித்தியாசமாய் சிந்திக்கும் அவசியம் பாரதிதாசனுக்கு அவசியமாய் ஆகிவிட்டது. அதனால் பாரதியின் சிந்தனைப் பாதையில் பயணித்தாலும் தனக்கென வித்தியாசமான சிந்தனைகளை பாரதிதாசன் வெளிப்படுத்தி நிற்கிறார் என்பதுதான் உண்மை நிலையாகும்.

    தம்முடைய குருவான பாரதியின் பிரிவை முன்னிட்டு பாரதிதாசன்

    நீடு துயில் நீக்கப் பாடிவந்த நிலா
    காடு கமழும் கற்பூரச் சொற்கோ ……
    திறம் பாட வந்த மறவன்புதிய
    அறம் பாட வந்த அறிஞன்

    இவ்வாறு உளமார உரைத்து நின்றாலும் அவரின் சிந்தனையானது மட்டும் பல நிலைகளில் வித்தி யாசமாய் அமைகின்றது என்பதுதான் உண்மையாகும். பாரதி தமிழைப் போற்றுகின்றார். அவரின் வாரிசான பாரதிதாசனும் போற்று கின்றார். பாரதி…

    யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
    இனிதாவது எங்கும் காணோம்”

    என்று உலகத்துக்கு உரத்துத் துணிவுடன் சொன்னவர் என்றவகையில் பாரதி முன்னிற்கிறார் என்பதை எவருமே மறுத்திடல் இயலாது. ஆனால் அவரின் வாரிசாய் வாய்த்த பாரதிதாசனோ வித்தியாசமாய் தனது சிந்த னையை முன் வைக்கிறார்.

    தமிழுக்கும் அமுதென்று பேர் – அந்தத்
    தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்”

    உலகமொழிகளில் இனிமையானது தமிழென்று குருவானவர் மொழிகின்றார். அவரின் மொழிதல் புதுமை யானதுதான். ஆனால் வித்தியாசமாய் சிந்தித்து தமிழினை உயிர் என்று காட்டுவதும்இன்பத் தமிழ், அமுதம் என்று காட்டுவதும் பாரதிதாசனின் வித்தியாசமான சிந்தனையாய் வெளி ப்பட்டு நிற்கிறதல்லவா! அமுதம் என்பது நிரந்தராமாய் உயிருடன் வாழப் பண்ணுவதாகும். தமிழும் எம்மையெல்லாம் நிரந்தரமாய் வாழப் பண்ணும் என்னும் சிந்தனைவியப்பாய் மலர்கிறதல்லவாபாரதியின் மொழிப்பற்றானது போற்றப் படவேண்டியதே. அன்னிய மொழியான ஆங்கிலத்தை அறவே வெறுத்தார். அன்னை மொழியான தமிழினையே அகத்தில் இருத்தினார். அரியாசனத்தில் அமர்த்தியே பார்த்தார். பாரதி வட மொழியிலும் வல்லமை பெற்று விளங்கினார். அவருக்கு வடமொழியிலும் பற்றிருந்தது. ஆனால் அவரின் வழியில் பயணத்தை ஆரம்பித்த பாரதிதாசனோ முழுக்க முழுக்க தமிழ்மொழிப் பற்றாளராகவே தன் வாழ் நாளெல்லாம் விளங்கினார். வடமொழியினை அவர் ஒதுக்கியே நின்றார். திராவிடமே அவரின் சிந்தையில் நிறைந்து காணப்பட்டது. இது அவரின் வித்தியாசமான சிந்தனை என்றும் சொல்லலாம் அல்லவா!

    குருவான பாரதியின் தமிழ்மொழி பற்றிய சிந்தனையிலிருந்து வித்தியாசமாய் சிந்தனையினைத் தருவ தோடு அதற்காக அவர் பயன்படுத்தும் சொற் கோவைகளும் வித்தியாசமானதாகவே வருகிறது. மரபு யாப் பினைப் பயன் படுத்தினாலும் இங்கு வித்தியாசமாய் சிந்தித்து கூழைக்கூத்தரின் ஆட்டத்தை மனமிருத்தி அதனை ஆட்டத்தோடு கூடிய விதமாய் இசையுடன் பாட க்கூடியவகையில் தமிழையும், தமிழ் சமூகத்தையும் சிந்தித்திந்து அவரால் வழங்கப்பட்ட வித்தியாசமான சிந்தனையாய் இப்பாடல் அமைகிறது.

    திடுகிடும் திடுகிடும் திடுகிடும் திடுகிடும்
    …………………………………………………………………………
    அஃகஃக கும்பிட்றேன் அல்லா ருக்கும்
    அஃகஃக வரிஞ்சலா அமைந்திருங்க
    மக்களெ பெத்த மகரா சருங்க …..

    என்னடா தம்பி?
    ஏண்டா அண்ணா?
    இதோபார் தம்பி எலும்புக்கூடு
    சதையும் இல்லே சத்தும் இல்லை
    ஆமாம் திடுகிடும் அதுக்குப் பேர்என்னா? …
    இந்த மருந்துக்கு என்னா பேரு?
    உள்ளெ தொட்டா உசிரில் இனிக்கும்;
    தெள்ளுதமிழ் தம்பி தெள்ளுதமிழ் இதுதான்!
    இந்த மருந்தே எலும்புக் கூட்டில்
    தடவுறேன் தம்பி அடிமோ ளத்தை!
    திடுதிடும் திடுதிடும் திடுதிடும் திடுதிடும்

    சிரித்தது பாரடா செந்தமிழ்க் கூடு!
    விரிந்தது பாரடா அழிந்தநம் நாடு!
    பாடுது பாரடா பைந்தமிழ் நாடு ….
    தாயி மாரே தக்கப்ப மாரே!
    மாயம் இல்லே மந்திரம் இல்லே
    கருத்து வேணும் நம்ப
    வருத்தம் நீங்க தேடணும் வழியே!

    தமிழினமானது எலும்புக்கூடாய் இருக்கிறதாம். அதில் சதையும் இல் லையாம்! சத்துமே இல்லையாம்! அதற்குச் சதையும் சத்தும் தந்து புத்துயிர் ஊட்டவேண்டும் என்னும் வித்தியாசமான சிந்தனையினைக் காட்டும் பாரதிதாசனை வியக்காமல் இருந்திட முடியுமா!

    பாரதி வாழ்ந்த காலம் அடிமையிருள் சூழ்ந்திருந்த காலம். பாரதியின் பார்வை பாரததேசத்தின் அடங்கிலும் பரவியே இருந்தது.பாரதத்தாயை மீட்டிடும் பாங்கில் பாரதியின் சிந்தனை அமைந்திருந்தது. ஆனால் அவரின் வாரிசான  பாரதிதாசன் காலம் அவரின் சிந்தனையினை வேறு விதமாக்கி விட்டது. பாரதியின் வழியில் பயணித்தாலும் அத்தனையையும் ஏற்று நிற்க அவர் விரும்பாதவராய் வித்தியாசமாய் ஒவ்வொ ன்றையும் வெளிப் படுத்துகிறார். அந்த வகையில் ஒட்டு மொத்த இந்தியாவைவிட்டு அவரின் சிந்தனையானது திராவிட மீட்பாய் மாறுகிறது. பாரதி தமிழைதமிழினத்தைப் போற்றினார். அதற்காக பலவற்றை உரக்கவே சொன்னார். ஆனால் பாரதிதாசனோ திராவிடச் சிந்தனையாளராய்தமிழ்மொழியின் அடையா ளமாய் தனது வித்தியாசமான சிந்தனைகளால் எழுந்து நிற்கிறார்.

    சமய நம்பிக்கையினைதெய்வ நம்பிக்கையினைப் பாரதி கைவிட விரும்பவேயில்லை. மூட நம்பிக்கை களை எதிர்த்தார். வெறுத்தார். ஆனால் தெய்வம் இருக்கிறது என்பதில் ஆணித்தரமாய் பாரதி வாழ் வெல்லாம் இருந்தார். இந்த இடத்தில் அவரின் வாரிசான பாரதிதாசன் வித்தியாசமாய் சிந்திக்கிறறார். ஆரம்ப த்தில் சக்தியைப் பாடியே பாரதியின் ஆசீர்வாதத்தைப் பெற்றவர் பிற்பாடு தெய்வீக சக்தியை விட்டு விட்டு மனித சக்தியையே பாடும் நிலைக்குள் வந்து விடுகிறார். பாரதி நாத்திகர் அல்ல. அவருள் ஆத்தீகம் அமர் ந்தே இருந்தது. ஆனால் வித்தியாசமாய் சிந்தித்த காரணத்தால் பாரதிதாசன் முழுதுமே நாத்திகராய் மாறி அதன் வழியில் பயணப்பட்டுஅது சார்ந்த அரசியலிலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளுகின்றவராய ஆகியேவிடுகிறார். இதனால் அவரின் சிந்தனைகள் தன்னுடைய குருவின் சிந்தனைகளிலிருந்து வித்தியா சமாய் புதிய பார்வையினையே காட்டுவதாகவே ஆகியும் விடுகிறது எனலாம்.

    கல்விபற்றிய பாரதியின் சிந்தனையிலும்கூட பாரதிதாசன் வித்தியாசமாகவே தன்னுடைய சிந்தனை களை விதைக்கின்றார். பாரதியின் கல்வி பற்றிய சிந்தனையினை நோக்கும் பொழுது –

    வயிற்றுச் சோறிட வேண்டும் – இங்கு
    வாழும் மனிதருக்கு எல்லாம்
    பயிற்றிப் பல கல்வி தந்து – இந்தப்
    பாரை உயர்த்திட வேண்டும்

    அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
    ஆலயம் பதினாயிரம் நாட்டல்
    பின்னருள்ள தருமங்கள் யாவும்
    பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல்
    அன்னயாவினும் புண்ணியம் கோடி
    ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்

    வீடுதோறும் கலையின் விளக்கம்
    வீதிதோறும் இரண்டொரு பள்ளி
    நாடுமுற்றிலும் உள்ளவூர்கள்
    நகர்களெங்கும் பலபலபள்ளி
    தேடு கல்வியிலாத தொருவூரைத்
    தீயினுக்கு இரையாக மடுத்தல்

    என்று தன்னுடைய கல்விபற்றிய சிந்தனையைப் பாரதி இப்படிக் காட்டி நிற்கிறார். பெண்களைக் கண்க ளாய் காணும் பாரதி பெண்கள் வீட்டுக்குள் முடங்கிக்கிடக்காமல் வெளியில் வந்து கற்று தேர்ந்திட கல்விச் சிந்தினையினை விதைத்தும் நிற்கிறார். புதுமைப் பெண்களாய் பெண்கள் வரவும் அழைப்பினை விடுக் கிறார்.

    பாரதிவழியில் கல்வி பற்றிச் சிந்தித்தாலும் தனக்கே உரித்தான வித்தியாசமான சிந்தனைகளையும் அவர் முன்வைக்கிறார் என்பதுதான் கருத்திருத்த வேண்டிய விடயமாகும். பாரதிபோல் பெண்கல்வியை வலியுறு த்துகின்றார். பாரதியின் பார்வை வேறு . பாரதிதாசனின் பார்வையோ வேறு.

    கல்வியில்லை உரிமையில்லை பெண்களுக்குக்
    கடைத்தேற வழியின்றி விழிக்கின்றார்கள்”

    மகளிரெலாம் கல்வியறி வொழுக்கமுள ராயின்
    மருத்துவமே வேண்டாவாம் பிணிமூப்பு வாரா”

    கல்வியறிவுடைய பெண்கள்
    திருந்திய கழனி அங்கே
    நல்லறி வுடைய மக்கள்
    விளைவது நவில வேநான்”

    கல்வியில்லாத பெண்கள்
    களர்நிலம் அந்நிலத்தில்
    புல்விளைந் திடலாம் நல்ல
    புதல்வர்கள் விளைதல் இல்லை”

    கற்பது பெண்களுக்கா பரணம் – கெம்புக்
    கல்வைத்த நகை தீராத ரணம்”

    பெற்றநல் தந்தைதாய் மாரே – நும்
    பெண்களைக் கற்கவைப் பீரே
    இற்றைநாள் பெண் கல்வி யாலே – முன்
    நேறவேண் டும்வைய மேலே”

    பெண்கள் கல்வியின் சிந்தனையினைப் பாரதிதாசன் வித்தியாசமாய் வெளிப்படுத்துகிறார். சிறுவர்க்குக் கல்விஆடவர்க்குக் கல்விமுதியோர்க்குக் கல்வி உடல் ஊனமுற்றவர்க்குக் கல்வி என்று பாரதிதாசனின் புதிய சிந்தனைகள் எழுந்து நிற்கின்றன.

    பொதுவுடமை பற்றிய வகையிலும் பாரதிதாசன் வித்தியாசமாய் சிந்திக்கிக்கிறார்.

    சித்திரச் சோலைகளே – உமை நன்கு
    திருத்தஇப் பாரினிலே – முன்னர்
    எத்தனை தோழர்கள் ரத்தம் சொரிந்தனர்
    ஓஉங்கள் வேரினிலே

    நித்தம் திருத்திய நேர்மையி னால்மிகு
    நெல்விளை நன்னிலமே – உனக்கு
    எத்தனை மாந்தர்கள் நெற்றி வியர்வை
    இறைத்தனர் காண் கிலமே

    தாமரை பூத்த தடாகங் களே உமைத்
    தந்த அக் காலத்திலே – எங்கள்
    தூய்மைச் சகோதரர் தூர்ந்து மறைந்ததைச்
    சொல்லலோ ஞாலத்திலே

    சோலைகளைப் பார்க்கிறார். வயல்களைப் பார்க்கிறார். தாமரைத் தடாகங்களைப் பார்க்கிறார். அந்தப் பார்வையையினூடாக அதற்காக உழைத்துப் பாடுபட்ட  உழைப்பாளிகளை அவர் மனம் எண்ணுகிறது. இப்படி எண்ணும் எண்ணமேதான் பாரதிதாசனின் புதிய சிந்தனையாக, வித்தியாசமான சிந்தனையாக  இங்கே வந்து நிற்கிறது அல்லவா !

    ஓடப்பராயிருக்கும் ஏழையப்பர்
    உடையப்ப ராகிவிட்டால் ஓர்நொடிக்குள்
    ஓடப்பர் உயரப்பர் எல்லாம் மாறி
    ஒப்பப்பர் ஆய்விடுவார் உணரப்பா நீ

    சமத்துவத்தை இப்படியாய் சிந்திந்து வித்தியாசமாய் பாரதிதாசனால்த்தான் பார்த்திட முடியும்.

    மூடத்தனத்தின் முடைநாற்றம் வீசுகின்ற
    காடு மணக்கவரும் கற்பூரப் பெட்டகமே

    வேண்டாத சாதி இருட்டு வெளுப்பதற்குத்
    தூண்டா விளக்காய்த் துலங்கும் பெருமாட்டி

    என்று சமூக சிந்தினையினை சீர்திருத்த நோக்கில் பார்த்து வித்தியாசமான சிந்தனையாக தாலாட்டுப் பாடியவர் என்ற வகையில் பாரதிதாசனை வியந்து பாராட்டியே ஆகவேண்டும்.

    கவித்துவம் மிக்கவர் பாரதிதாசன். கவிதை எழுதினார். நாடகம் எழுதினார். கட்டுரைகள் எழுதினார். நூல்கள் பல எழுதினார். திரையிலும் ஜொலித்து நின்றார். எங்கு சென்றாலும் பாரதிதாசன் என்னும் முத்திரையினைப் பதித்தே நின்றார். மகாகவி பாரதியார் தமிழனினத்துக்கு விட்டுப்போன மகத்தான மூன்று சொத்துக்களானவை குயில்பாட்டுகண்ணன் பாட்டு, “பாரதிதாசன்” என்று எழுத்துலக ஜாம்பவான் கல்கி அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார். இவ்வாறு பாரதிதாசன் பார்க்கப்படுவதற்கு முக்கியமான காரணம் எது தெரியுமா அவரிடம் காணப்பட்ட வித்தியாசமான சிந்தனைகளே.

    Share
  • பாவேந்தர் நூலகம் – 45 ஆயிரம் நூல்கள்

    பாவேந்தர் நூலகம் – 45 ஆயிரம் நூல்கள்

    பாரதிதாசன் பிறந்த நாளான இன்று, பாவேந்தர் நூலகத்தைக் காண்போம். செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் அமைந்துள்ள இந்த நூலகத்தில் 45 ஆயிரம் நூல்கள் உள்ளன. தொல்காப்பியருக்கும் திருவள்ளுவருக்கும் சிலைகள் உள்ளன. இந்த அரிய நூலகத்தினுள் ஓர் உலா.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • மூங்கில் கண்ணாடி காட்டும் காலம்

    மூங்கில் கண்ணாடி காட்டும் காலம்

    முனைவர் சொ. அருணன்,
    உதவிப் பயிற்றுநர், தமிழ்த்துறை,,
    அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி – 3.

    (கவிஞர் இரா. மீனாட்சியின் மூங்கில் கண்ணாடி – புதுக்கவிதை நூலை முன்வைத்து…)

    அறிமுகம்

    கவிஞர் இரா. மீனாட்சி சி.சு.செல்லப்பாவின் ‘எழுத்து’ காலத்திலிருந்து தொடர்ந்து எழுதி வரும் தமிழின் மூத்த பெண் கவிஞர் ஆவார். கவியரசு கண்ணதாசன், கவிஞர் மீரா. கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் ஆகிய ஆளுமைகளோடு எழுதத் தொடங்கியவர். எழுத்துப் பணி மட்டுமின்றி, சமூகப் பணியிலும் தன் வாழ்வை அர்ப்பணித்துக் கொண்டவர். கவிஞர் சிற்பி அறக்கட்டளை விருது, கவிக்கோ அப்துல் ரகுமான் விருது, திருப்பூர்த் தமிழ்ச் சங்க விருது உள்ளிட்ட விருதுகளோடு இரண்டு முறை தமிழக அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசினையும் வென்றவர். தொடர்ந்து எழுத்துக் களத்தில் இடைவிடாது இயங்கிக் கொண்டிருப்பவர். அவருடைய 2020ஆம் ஆண்டிற்கான படைப்பாகிய மூங்கில் கண்ணாடி என்னும் நூலிலிருந்து இக்கட்டுரை எழுகிறது.

    கவிதையும் வரையறையும்

    மொழியின் மிகவும் மூத்த குழந்தையாகிய கவிதைக்கு இன்னும் வரையறையை முழுமையாக யாராலும் வடிக்க இயலவில்லை. காலந்தோறும் புதிய புதிய இலக்கண வரையறைகள் கவிதைக்கு வழங்கப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன. காரணம், கவிதை காலத்தின் சாட்சியாக நின்று தன்னை வெளிப்படுத்திக் கொள்வதனாலேயாகும்.

    ‘கவிதை (Poiesis) என்பது அழகியல் உணர்ச்சியுடைய, ஓசை சந்தத்துடன் கூடிய அல்லது ஒத்திசை பண்புச் சொற்களால் கோர்க்கப்பட்ட ஓர் எழுத்து இலக்கியக் கலை வடிவம்’ (Poetry. Oxford Dictionaries. Oxford University Press (2013) என்று ஆக்ஸ்போர்ட் அகராதி உலகக் கவிதை குறித்து விளக்கம் தருகிறது.

    ‘உள்ளத்தின் அடியிலிருந்து வெளிப்படுகிற வேண்டுதலுக்கு ‘மந்திரம்’ என்று பெயர். அது பலிக்கும். ஆனால், அங்கிருந்து பிரார்த்தனை கொண்டு வருதல் எளிதன்று. அது பெரிய ஆழம். உள்ளத்தின். கடலடியை மானுடர் அளந்து பார்த்திருக்கிறார்கள். உள்ளத்தின் அடி காண்பது அதனினும் பலமடங்கு கஷடம். இருந்தாலும் சோர்வு பெற வேண்டா. ஒவ்வொருவனும் உள்ளக் கடலில் இயன்றவரை மூழ்கி அதிலிருந்து பொருள் கொண்டு வரலாம். எத்தனைக் கெத்தனை ஆழத்திலே போகிறாயோ, அத்தனைக்கத்தனை நல்ல முத்துக் கிடைக்கும்’ என்று கவிதைக்கான வரையறையை மற்றொரு முறையில் விளக்குகிறார் மகாகவி பாரதியார். (ஸ்ரீ, சி., சுப்பிரமணிய பாரதி, வேதரிஷிகளின் கவிதை, முன்னுரை.) மேலும்,

    உள்ளத்தில் உண்மைஒளி உண்டாயின்
    வாக்கினிலே ஒளியுண் டாகும்
    வெள்ளத்தின் பெருக்கைப்போல் கலைப்பெருக்கும் –
    கவிப்பெருக்கும் மேவு மாயின்
    பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம்
    விழிபெற்றுப் பதவி கொள்வார்
    தெள்ளுற்ற தமிழமுதின் சுவைகண்டார்
    இங்கமரர் சிறப்புக் கண்டார் (பாரதியார், தமிழ்)

    என்று கவிதையிலேயே கவிதைக்கு வரையறையும் செய்துள்ளார். அதைப் போலவே புதுக்கவிதையைப் பற்றி,

    “சுவை புதிது, பொருள் புதிது, வளம் புதிது
    சொல் புதிது, சோதி மிக்க
    நவகவிதை, எந்நாளும் அழியாத மஹாகவிதை” (பாரதியார், பாரதியார் கவிதைகள், ஓலைத்தூக்கு)

    புதுமையான விளக்கமும் தருகிறார். இந்த வரையறைகளைப் பின்பற்றியே பின்வந்த கவிஞர்களும் புதுக்கவிதைக்கான இலக்கணத்தை யாக்கத் தொடங்கினர்.       கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை,

    “உள்ளத்து உள்ளது கவிதை – இன்பம்
    உருவெடுப்பது கவிதை;
    தெள்ளத் தெளிந்த தமிழில் – உண்மை
    தெரிந்து உரைப்பது கவிதை” (கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை, எது கவிதை)

    என்று புதுக்கவிதைக்கான விளக்கத்தை எளிய கவிதையாகவே முன்வைக்கிறார். இதுபோன்று பலரும் பலவிதங்களில் கவிதைக்கான வரையறையைச் செதுக்க முற்பட்டுள்ளனர். என்றாலும் அவை காலந்தோறும் புதுமை பெற்றே வந்திருக்கிறது என்பதை இதன்வாயிலாக அறிய முடிகிறது.

    கவிஞர் இரா. மீனாட்சியும் கவிதையும்

    கவிதையின் அடிப்படையாக விளங்குவது கனவு. அந்தக் கனவு, ‘மனித குலத்திற்கு வாய்த்த நல்அமுதம்,’ என்பதனால், ‘அறிவை மத்தாக்கி, மொழியை வாசுகியாக்கி வாழ்க்கைப் பாற்கடலைக் கடைந்தெடுத்து’க் கவிதையை ‘அமுதாய்’ ஆக்க முயன்றேன்’ என்று கவிஞர் இரா. மீனாட்சி தனது கவிதை முயற்சியைக் குறித்துத் தெளிவுபடுத்துகிறார். இந்த முயற்சியில் ஒரு பாற்கடல் கடையும் தொன்மம் தென்படுவதை நாம் உணர்ந்து கொள்ளலாம்..

    மேலும், கவிதை கவிஞருக்கு உணர்வின் ஓவியமாகக் கனவுக் காட்சி தருகிறது. கவிதையை ‘நல்மொழி’ எனவும், ‘யாவர்க்கும் பொதுவான எதிர்காலம்’ எனவும், கவிதையைச் ‘சாவாக்கலை’ எனவும் இவரால் கொண்டாட முடிகிறது.

    கவிஞரும் கால இயற்கையும்

    இயற்கையை மிக இயல்பாய் ஏற்றுக் கொள்வது சாதாரண மனிதர்களின் இயல்பு எனில், இயற்கையைப் பேரதிசயமாய் ஏற்றுப் போற்றுவது கவிஞர்களின் இயல்பு. தான் வாழ்கிற சூழலை அதிலும் தன்னை மட்டும் காணிக்கிற அறிவாளிகளின் மத்தியில் தன்னை மறந்து இயற்கையைக் கவனிக்கிற உணர்வாளர்களின் கவனிப்பு கவிதையாகி விடுகிறது. இதற்குக் கவிதையே நல்ல சாட்சி.

    தன்னுடைய காட்சிகளில் தென்படும் மரம், மரவட்டை, செடி, கொண்டலாத்திப் பறவை, அணில், புல், பூ என யாவுடனும் உறவு கொள்ளும் பெரும்பேறு அந்த உணர்வாளர்களுக்கே கிட்டுகிறது என்றாலும், அதைக் கவிதையாய் மொழிந்து விடுகிறவர்களுக்கே அது வசப்பட்டு விடுவது அதிசயம்தான். கவிஞர் இரா. மீனாட்சியின் கவிதைகளில் அத்தகைய கவிதை இலாகவம் தெற்றெனப் புலப்படுகிறது.

    கவிஞர் இரா. மீனாட்சியைக் குறித்தும் அவர்தம் கவிதைப் பயணம் குறித்தும் கவிஞர் மீரா இப்படி அறிமுகப்படுத்துகிறார்.

    “ஆரோவில் எனும் சர்வதேச நகரில் தம் கணவர் த்வான் வான்மேகனுடன் இணைந்து புதிய மனித சமுதாய அமைப்புப் பரிசோதனையில் ஈடுபட்டுள்ள இலட்சிய நங்கை இரா.மீனாட்சி. பணம், புகழ், பதவி- இவற்றை விட்டு விலகி சுதந்திரமான சுகாதாரமான சூழலில் வாழும் இவருக்கு வாழ்வின் ரகசியங்களையும் அனுபவங்களையும் பரிந்து கொள்ளக் கிடைத்த ஒரு நல்ல தோழி – கவிதை. நெருஞ்சி, சுடுபூக்கள் என்னும் இருதொகுதிகளுக்குப் பிறகு வெளிவரும் இக்கவிதைகள் ஆத்மாவின் காயங்களுக்கு மருந்தாக அமைபவை.” எத்தனை அருமையான கவிதைப்பிடிப்பு இது.

    மூங்கில் கண்ணாடியும் காலமும்

    கவிதை இயற்கையின் கருவியாக விளங்குவதைப் போலவே  போராட்டத்திற்கான ஆயுதமாகவும் விளங்குகிறது. தாழ்வுற்று வறுமைமிஞ்சி விடுதலை தவறிக் கெட்டுப் பாழ்பட்டு நிற்கும் பாமரர்களின் வாழ்வினில் புதிய வெளிச்சத்தையும் நம்பிக்கையையும் ஏற்றுவது கவிதைதான். கவிஞர் இரா. மீனாட்சி தனக்கான கவிதையையும் இவ்வாறே வரித்துக் கொள்கிறார் என்பதை,

    எங்கெல்லாம்
    யுத்தக் கைகள்
    எம்மக்களின் குருதியைக் குழைத்துப்
    பூசிக் கொள்கின்றனவோ
    எங்கெல்லாம்
    பெண்களின் எல்லா வயதினரும்
    குழந்தைகளும் ஏலாதவர்களும்
    இரும்பு முள்வேலிகளுக்குள்
    வாழ்க்கையைச் சொட்டுச் சொட்டாக
    இழந்து கொண்டிருக்கிறார்களோ
    எங்கெல்லாம்
    எளிய எம் ஆதிமக்கள்
    கொள்கையற்ற ஆதாயக்காரர்களால்
    வேட்டையாடப்பட்டுக் கொண்டிருக்கிறார்களோ
    அங்கெல்லாம்
    நம் தாய்மொழிக்கவிதைகள்
    அவர்களுக்கான
    நிழலாகட்டும் நீராகட்டும்
    உணவாகட்டும் உடையாகட்டும்
    உணர்வாகட்டும்
    விட்டுவிடுதலையாகிட
    செம்மொழிச் சிறகுகளாகட்டும் (கவிஞர் இரா.மீனாட்சி, மூங்கில் கண்ணாடி, காணிக்கை)

    என்று முன்மொழிந்து கொள்வதன் மூலம் உணர்ந்து கொள்ளலாம். எல்லாக் காலத்திலும் அழுத்தப்படும் ஆதிக்கத்தின் கொடிய பாதங்களிலிருந்து அப்பாவி மக்களை மீட்டெடுக்கக் கவிதையே சிறந்த காலசாசனம் என்பதனை இந்தக் கவிதை உணர்த்துகிறது.

    அதைப்போலவே மரத்தின் முதுகில் தெரியும் விரிசல் கோடுகள் அதன் வயதினை உணர்த்தும் என்பது அனுபவ வாக்கு. ஆனால், மரத்தை நாற்காலியாகச் செய்த தச்சனின் வயதும் சேர்த்து அந்த நாற்காலியில் புலப்படுவது கவிதை படிவிக்கும் காலம் அல்லவா?

    ஒவ்வொருவரும் இந்த மேசை நாற்காலி
    இணைபற்றிய
    அவரவர் கதைகளைச் சொன்னார்கள்
    எந்தக் காட்டிலிருந்து
    யாரால் மரம்
    வாள்கொண்டு அறுத்துக்கட்டப்பட்டதென
    தாத்தா கூறிச்சென்ற
    தலைமுறை வரலாறு
    முதற்கோட்டிற்கான துவக்கப்புள்ளி
    செய்துகொடுத்த உள்ளூர்த் தச்சனுக்கு
    சிறுகச்சிறுகவே
    கூலிகொடுத்துக் கழித்ததாக
    சித்தப்பா சொன்னபோது
    சுருக்கென தைத்தது என் வர்க்கஉணர்வு (இரா. மீனாட்சி, மூங்கில் கண்ணாடி, மேலும் தலைமுறைகள்)

    என்று தலைமுறைகளின் காலத்தைத் துல்லியமாக அளவிடும் கவிதையையும் அவர் வடித்திருக்கிறார். அதே காலத்தை அவர் வண்ணச் சாயலாகவும் கவிதை வழியாக வடித்தெடுத்திருக்கிறார்.

    சர்ச் மணி அழைத்தபோது
    எனது காலம் வெண்கலமானது
    வானத்து வெள்ளை மேகங்கள்
    மெதுவே நகர்ந்தபோது வெள்ளி ஊற்றானது
    செங்கல் தரையில் காலணிகள்
    சப்தித்துச் சென்றபோது மத்தளலயமானது.
    நீங்கள் கதவு திறந்து
    மகிழ்ச்சியைக் கொணர்ந்தபோது
    எனது காலம்
    இளஞ்சிவப்பு ரோஜாவிலிருந்து
    பொன்வண்ண சூரியகாந்திக்குத்
    தாவி அணைத்துக்கொண்டது (இரா.மீனாட்சி, மூங்கில் கண்ணாடி, காலச் சாயல்கள்)
    என்னும்போது கவிதையின் காலம் மிகச் சுலபமாகக் கவிஞருக்கு வசப்பட்டு விட்டது புரிகிறது.

    கடவுளும் கவிதையும் காலமும்

    வழிபாட்டின் பலநிலைகளில் இறைவன் தீர்த்தமாடுவதற்காக நீர்நிலைகளை நோக்கிச் செல்லும் மாசிமகத் திருவிழாவினைக் குறித்துப் பல கவிஞர்கள் தங்கள் கவிதைகளில் பதிவு செய்துள்ளனர். ஒவ்வொரு காலத்திற்கும் ஏற்ற வகையில் இந்தத் தீர்த்தவாரித் திருவிழா நடைபெறும். முந்தைய காலங்களில் கட்டை வண்டிகளில் ஊர்வலமாகப் புறப்பட்ட தெய்வத் திருவுருவங்கள் தற்போது கனரக வாகனங்களில் அலங்கார மினனொளி விளக்குகளோடு மிகவும் ஆர்ப்பாட்டமாக ஊர்வலம் போகப் பழகி விட்டன. இதுவும் தீர்த்தவாரியின் ஒரு மாற்றம்தான் என்றாலும், கவிஞர் இரா.மீனாட்சியின் பார்வையில் தீர்த்தவாரி வேறாக அமைவது குறிப்பிடத்தக்கது. அவர்தம் கவிதையில் கடவுளும் கவிதையும் காலமும் ஒருசேரக் கைகோர்த்துத் தீர்த்தவாரி பண்பாட்டுச் சீரழிவாக மாறிவிட்டதை எள்ளி நகையாடத் தவறவில்லை.

    மாசிமகம்
    பௌர்ணமிப் பகலில்
    பல்லக்குகளைக் காணோம்
    யானை குதிரை மிகக்குறைவே
    மாட்டுவண்டிச் சப்பரங்களும்
    அருகிப் போய்விட்டன
    டிராக்டர்களில் அமரவைத்து
    குரலெழுப்பி அழைத்து வந்த
    ஜெனரேட்டர் தெய்வங்கள்
    அவரவர் ஜனங்களுக்குப்
    படியளக்கத் தவறவில்லை
    இரசாயனக் கற்பூரப் புகையயினூடே
    இரசனையுடன் கடைக்கண்ணால்
    ஆசிவழங்கவே செய்தார்கள்.

    அழகழகாய் அலங்கரித்திருந்த
    சாமி மூர்த்தங்களை
    வீதி உலா வரச்செய்த
    வாரிசுதாரர்கள் வீடு வீடாய் வந்து
    மறக்காமல்
    ஆசிவரி வசூலித்துப் போனார்கள்
    நீர்மோரும் பானகமும்
    பகிர்ந்துகொண்டார்கள்.
    விசேஷமாய் எண்ணெய் மணத்தது
    அண்டாக்களில்
    சுண்டல் பிரசாதம்.
    ஆறும் கடலும்
    சாமியும் பக்தர்களும்
    ஒன்றாகக் குளித்தெழுந்த
    சமத்துவ நாள் இதில்
    எங்கள் சந்தோஷங்களை
    வண்ண வண்ண பலூன்களில்
    அடைத்தெடுத்து
    மண் உண்டியல் பரிசு வாங்கி
    மூங்கில் குழல் ஊதி
    ஊருக்கு எடுத்துப்போகிறோம்
    பெரிய ஆண்கள் மட்டும்
    பின்தங்கிவிட்டார்கள்
    அது வேறு தீர்த்தவாரியாம் (கவிஞர் இரா.மீனாட்சி, மூங்கில் கண்ணாடி, தீர்த்தவாரியும் குழந்தைகள் நாங்களும்) என்று குழந்தைகளைக் கபளீகரம் செய்து விட்ட மது அரக்கன் உலாவுகிற தீர்த்தவாரியைக் காண்கிறபோது காலத்தின் கோலம் சற்றெனப் புலப்படுகிறது.

    நிறைவாக

    இவ்வாறு கவிதையின் ஒவ்வொரு முடிச்சிலும் காலத்தின் இழையை ஊடுபாவாக இணைத்துப் பின்னியிருக்கும் கவிஞர் இரா. மீனாட்சியின் கவிதையில் பெரும்பாலும் இயற்கை வந்து இயல்பாகத் தழுவிக் கொள்கிறது. ‘என்காலத்துப் பாரதி நான்’ என்று கவிமுண்டாசு கட்டிக் கொண்ட பெண்பாரதியாகவே உலாவரும் அவர், ‘சூடமுடியாத சூரியப் பூவே’ என்று பாரதியை அடையாளம் காட்டுகிறார். அதுமட்டுமின்றி, காலந்தோறும் அடிமைப்படுத்தப்படும் பெண்ணிய வாழ்வினைத் தனது சிறு கவிதையில் வலியோடு படம்பிடித்துக் காட்டுகிற பாங்கு அவருக்கே உரியது. ‘காலுக்குச் செருப்புத்தான் கேட்டேன் – இலாடமடிக்காதீர்கள். சொல்வதற்கு மன்னியுங்கள் வலிக்கிறது’ என்று தனது கவித்தடத்தில் இதுபோன்ற காலத்தடங்களையும் சேர்த்துப் பதிவிட்டிருக்கிற கவிஞர் இரா. மீனாட்சி இன்னும் தொடர்ந்து எழுதிக் கொண்டேயிருக்கிறார். ஔவையார், ஆண்டாள் நாச்சியார், காரைக்காலம்மையார் என்னும் வரிசையில் தன்னையும் ஒரு பெண்கவிஞராக இணைத்துக் கொண்டு அவர் படைக்கும் அற்புதக் கவிதைகள் காலத்தின் சாட்சியாக என்றும் நின்று உலாவட்டும்.

    துணைநூற்பட்டியல்

    1. சுப்பிரமணிய பாரதி, ஸ்ரீ, சி., வேதரிஷிகளின் கவிதை, பாரதி பிரசுராலயம், திருவல்லிக்கேணி, சென்னை, மூ.ப. 1939.
    2. கவிமணி தேசிகவிநாயகம்பிள்ளை, கவிமணி கவிதைகள், முழுத்தொகுப்பு, ஸ்ரீசெண்பகா பதிப்பகம், தி.நகர். சென்னை – 17, மு.ப. 2003.
    3. கவிஞர் இரா.மீனாட்சி, மூங்கில் கண்ணாடி, கபிலன் பதிப்பகம், புதுச்சேரி, மு.ப. 2020.
    4. அ.மு.பரமசிவானந்தம், கவிதை உள்ளம், வள்ளியம்மாள் கல்வி அறம், சென்னை, மூ.ப.1978.
    5. மீரா – பாலா, கவிதை ஒரு கலந்துரையாடல், அன்னம் வெளியீடு, தஞ்சாவூர், இ.ப.2006.

    Share
  • 58 வயதில் புதிய வேலை | ஜெயந்தி சங்கர் அனுபவங்கள்

    58 வயதில் புதிய வேலை | ஜெயந்தி சங்கர் அனுபவங்கள்

    சிங்கப்பூரில் வாழும் எழுத்தாளர் ஜெயந்தி சங்கர், தமது 58 வயதில் புதிய துறையைத் தேர்ந்தெடுத்துள்ளார். சிங்கப்பூர் அரசின் சுகாதாரத் துறை வழங்கும் மருத்துவப் பயிற்சியைப் பெற்றுள்ளார். ஓய்வு பெறும் வயதில் புதிய பணியில் ஈடுபட முன்வந்தது எதற்காக? மருத்துவத் துறையைத் தேர்ந்தெடுத்தது ஏன்? உடல் தானம் செய்ய உறுதிமொழி அளித்தது எதனால்? இதோ அவருடன் ஓர் உரையாடல்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • ராஜிவ்காந்தி சாலையில் ஓர் உலா

    ராஜிவ்காந்தி சாலையில் ஓர் உலா

    பழைய மகாபலிபுரம் சாலை (OMR) என அழைக்கப்பெற்ற இப்போதைய ராஜிவ்காந்தி சாலை, ஐ.டி. எக்ஸ்பிரஸ்வே (IT Expressway) என்றும் அழைக்கப்பெறுகிறது. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் வணிக நிறுவனங்களும் அணிவகுத்து நிற்கும் இந்தச் சாலை, பொன்விளையும் பூமியாகத் திகழ்கிறது. ஓங்கி உயர்ந்து நிற்கும் கட்டடங்களும் வணிக வளாகங்களும் குடியிருப்புகளுமாக ஜொலிக்கிறது. தமிழ்நாடு பெற்றுவரும் வளர்ச்சியின் அடையாளங்களுள் இதுவும் ஒன்று. இந்தச் சாலையில் உலக வர்த்தக மையம் (World Trade Center), ஒய்யார அழகுடன் ஒளிவீசி நிற்கிறது. இரவில் மின்னொளியில் தகதகக்கும் இந்தச் சாலையின் ஊடே ஒரு பயணம்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share