Blog

  • ஆடிப்பூரம்: ஆண்டாள் அருளிய திருப்பாவை

    ஆடிப்பூரம்: ஆண்டாள் அருளிய திருப்பாவை

    அருட்செல்வி ஆண்டாள் அவதரித்த நாள், ஆடி மாதத்தில் வரும் பூரம் நட்சத்திர நாள். இத்திருநாளில் ஆண்டாள் அருளிய திருப்பாவையின் முதலிரண்டு பாடல்களை ‘கான பிரம்மம்’ கிருஷ்ணகுமாரும் அவர் மகள் ஷ்ரேயா கிருஷ்ணகுமாரும் பாடக் கேளுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • நாகேஸ்வரி அம்மன் தீமிதி உற்சவம்

    நாகேஸ்வரி அம்மன் தீமிதி உற்சவம்

    சென்னை, தாம்பரம், அருள்மிகு நாகேஸ்வரி அம்மன் ஆலயத்தின் ஆடித் திருவிழா, மிக விமரிசையாக நடைபெற்றது. நேற்று இரவு நடைபெற்ற தீமிதி உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் பூ மிதித்தனர். அந்த அனல் பறக்கும் காட்சிகள் இதோ.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • அமெரிக்காவின் கென்டக்கி மாநிலத்தில் பேய்மழை, பெருவெள்ளம், பேரிடர்

    அமெரிக்காவின் கென்டக்கி மாநிலத்தில் பேய்மழை, பெருவெள்ளம், பேரிடர்

    Kentucky flood death toll now over 2 dozen people; rescues surpass 1,200 amid break in rain

    சி. ஜெயபாரதன்

    வட அமெரிக்க நகரங்கள் பேய்மழையால் படும் பேரிடர், பேரிழப்பு, மரணங்கள்.

    2022 ஜூலை 30இல் பெய்த பேய்மழையால் அமெரிக்காவின் கென்டக்கி மாநிலப் பகுதிகளில் 25 பேர் மரணம் அடைந்துள்ளதாகவும், 1200 பேர் காப்பாற்றப் பட்டதாகவும் தெரிய வருகிறது. இறந்தவரில் ஆறு பேர் குழந்தைகள் என்பது வேதனைக்குரிய செய்தி. வானூர்திகள் [ஹெலிகாப்டர்கள்] மூலமும், படகுகள் மூலமும் பலர் தூக்கிச் செல்ல நேர்ந்தனர். இறந்தவர் எண்ணிக்கை ஏறும் என்பது எதிர்பார்க்கப்பட்டது. கென்டக்கி ஆற்றில் நீர் வெள்ளம் மிஞ்சியது. மேலும் மழை அடிப்பு தொடரும் என்பது காலநிலை அறிவிப்பு. பருவ காலப் பெருமழை வெள்ளத்தை எதிர்நோக்கி நகரங்களில் என்ன என்ன முன்னேற்பாடுகள் செய்வது என்பது இப்போது பெருஞ்சவால் ஆகி விட்டது. நகரில் பல இடங்கள் மின்சக்தி இல்லாமை, குடிநீர் இல்லாமை, உணவு வசதிகள் இல்லாமை, போக்குவரத்து வாகனங்கள் இல்லாமை, அத்துடன் பொது மக்கள் புலப் பெயர்ச்சி- சீர்கேடுகளுக்கு வரம்பில்லை. சுமார் 12 நகர வட்டாரங்களில் 18,000 பேருக்கு மின்சாரத் தட்டுப்பாடு. 26,000 வீடுகளுக்கு நீர்வசதி தடைப்பாடு..

    வெக்கை அலை அடிப்புகளால் ஸ்பெயின், போர்ச்சுகல், பிரான்ன்ஸ், பிரிட்டன், கிரீஸ் ஆகிய ஐரோப்பிய நாடுகளில் காடுகளும், வீடுகளும் தீப்பற்றி எரிந்து புகை மண்டலம் எழுவது வரலாற்று முதன்மைபான கோரக் காட்சியாகும்.

    Share
  • அறிவிப்பு: 11 ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு, சிங்கப்பூர்

    அறிவிப்பு: 11 ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு, சிங்கப்பூர்

    மதிப்பிற்குரிய தமிழறிஞருக்கு,

    வணக்கம். அனைவரும் நலமுடன் இருப்பீர்கள் என நம்புகிறோம். இரண்டாண்டுகளுக்குப் பிறகு தங்களை மின்னஞ்சல் வழியாக தொடர்பு கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். இந்த மின்னஞ்சல் வழியாக சில முக்கிய அறிவிப்புகளைப் பகிர்ந்து கொள்கிறோம்.

    1. பத்தாம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் படைத்த ஆய்வுக்கட்டுரைகள் அடங்கிய முதல் தொகுப்பு சூலை 26, 2022 அன்று சென்னையில் வெளியிடப்பட்டது. எளிமையாக மற்றும் சீரிய முறையில் நடைபெற்ற இந்த வெளியீட்டு விழாவில் உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் தலைவர் திரு. முனைவர் பொன்னவைக்கோ அவர்கள் தலைமையில், மன்றத்தின் துணைத்தலைவர் திரு. முனைவர். சுந்தரமூர்த்தி மற்றும் நிர்வாக அலுவலர்கள் முன்னிலையில் சிறப்பு விருந்தினர்கள் திரு.கோ.விசுவநாதன் (வேந்தர், VIT, பல்கலைக்கழகம்) ,தொழிலதிபர் திரு. வி.ஜி. சந்தோசம் ஆகியோர் வெளியிடச் சிங்கப்பூரைச் சார்ந்த ‘தி மில்லினியல் தமிழ்’ அமைப்பின் தலைவர் திரு. மணியம் அவர்கள் பெற்றுக் கொண்டார்.

    2. பதினோராம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டிற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இந்த நிகழ்வில் வெளியிடப்பட்டது. இந்த மாநாடு சிங்கப்பூர் நகரில் வரும் ஆண்டு 2023, மே மாதம் 26 முதல் 28 வரை நடைபெறும். உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்துடன் சிங்கப்பூரைச் சார்ந்த ‘தி மில்லினியல் தமிழ்’ அமைப்பு இணைந்து இந்த மாநாட்டை நடத்தவுள்ளது. இந்த மாநாட்டில் தாங்கள் அனைவரும் பங்கேற்க அன்புடன் அழைக்கின்றோம். இந்த மடலில் விரிவான செய்திக்குறிப்பு அளிக்கப்பட்டுள்ளது.

    நன்றி.

    நிர்வாகக்குழு
    உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம்

    ஆய்வுக்குழு
    11-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு
    சிங்கப்பூர்

    Announcement: 11th International Conference – Seminar on Tamil Studies

    Dear Scholar,

    Greetings.

    Hope you all are doing well and have come out of the pandemic safe and healthy. At this time we want to provide you with few updates.

    1. The 10th International Conference- Seminar on Tamil Studies proceedings was released in Chennai on July 26, 2022.

    2. The next 11th International Conference- Seminar on Tamil Studies to be held on May 26-28, 2023 in Singapore has been announced.

    We look forward to your participation.

    We will soon share more details about the Conference theme and topics through this email and also on the 11th Conference website https://icsts11.org and http://iatrofficial.org.

    Nanri,

    Executive Committee
    International Association of Tamil Research (IATR)

    Academic Committee
    11th International Conference- Seminar on Tamil Studies

    Share
  • படித்தேன்! சுவைத்தேன்! பகிர்ந்தேன்! -19

    படித்தேன்! சுவைத்தேன்! பகிர்ந்தேன்! -19

    முனைவர் ச.சுப்பிரமணியன்

    பண்ணைக் கவிக்கோ துரை.வசந்தராசன் எழுதிய ‘குற்றங்களே தீர்ப்பு எழுதினால்’ என்னும் கவிதை நூல் பற்றிய செங்கோணப் பார்வை

    முன்னுரை

    ‘விளையும் பயிர் முளையிலே’ என்பர். தம்பி வசந்தராசன் விளைந்த பயிர்தான். இதன் முளை அன்று வெளியான இந்த நூலில் தெரிந்ததுதான். விளைந்த பயிரின் மகத்துவம் உணரப்பட்டதா என்பதுதான் என்னுள் எழுந்த வினா. ஆற்றல் மிக்க கவிதைப் படைப்பாளர்கள் அரியர். அந்த அரியருள்ளும் அரியர் இவர். நாற்பதாண்டுகளுக்கு முன் அதாவது இவருக்கு முப்பது வயது கூட எட்டாத காலத்தில் இன்னும் தெளிவாகச் சொன்னால் வாழ்க்கைச் செலவுக்கே வரும்படி இல்லாத சூழலில் தன்னைப் பற்றியும் தன் எதிர்காலத்தைப் பற்றியும் கவலையும் பதைப்பும் கொண்டிருக்க வேண்டிய ஒரு காலக்கட்டத்தில் சமுதாயத்தைப் பற்றி எண்ணியிருக்கிறார். எழுதியிருக்கிறார். படித்திருக்கிறார். பாடியிருக்கிறார். அவற்றையெல்லாம் பொறுப்புடன் தொகுத்து ஒரு நூலாகவும் வடிவமைத்திருக்கிறார். எத்தனைப் பேர் இப்படிச் செயல்பட்டிருக்கிறார்கள் என்று கணக்கெடுத்தால் தம்பி வசந்தனின் கொள்கை உரம் புரியும். கோட்பாட்டின் நெறி தெரியும். இன்றைக்குக்கூட எழுதுபவர்கள் தங்கள் படைப்புக்களை நகல் எடுத்து வைத்துக் கொள்வதில்லை. அவர்கள் மீதே அவர்களுக்கு நம்பிக்கையில்லை. அனைத்துச் சிந்தனைகளும் ஆவணப்படுத்தப்படல் வேண்டும். அப்படி ஆவணப்படுத்திய காரணத்தால்தான் இன்றைக்கு நூல் வெளிவந்து நாற்பது ஆண்டுகளுக்குப் பின்பும் அதனைப் படிக்கிறோம். சிந்திக்கிறோம். விவாதிக்கிறோம். சிந்தனை ஒரு கருவூலம்!. அது பொதுவெளிக்கு வந்தபின் பொதுச்சொத்தாகி விடுகிறது. கருவூலமாகிய பொதுச்சொத்தைக் காக்க வேண்டியது நம் கடமையல்லவா? இந்தப் பின்புலத்தில் தம்பி வசந்தராசனின் ‘குற்றங்களே தீர்ப்பெழுதினால்’ என்னும் கவிதைத் தொகுப்பு மதிப்பீடு செய்யப்படுகிறது.

    தமிழ்த்தாய் வாழ்த்து

    பெற்ற தாயை வணங்குகிறார்களோ இல்லையோ தமிழ்க்கவிஞர்கள் பெரும்பாலோர் தமிழ்த்தாயை உச்சி குளிர வாழ்த்தி வணங்கிவிடுவார்கள். வசந்தனின் தமிழ்த்தாய் வாழ்த்து மரபார்ந்த உணர்ச்சித் துடிப்போடு அமைந்திருக்கிறது இந்நூலில். முன்னிலையில் வைத்துத் தமிழ்த்தாயைப் பரவாமல் படர்க்கையில் வைத்து வணங்கியிருக்கிறார். தமிழோடு வாழ்ந்திருக்கிறார் வசந்தராசன்!

    “வானூற்றும் கார்மேகச் சொல்வி ரிப்பில்
    வளச்சீரும் அடிதொடையும் தானடக்கி
    நானூற்றும் தமிழ்க்கவிதை மிளிர்வ தாலே
    நான்காணு கின்றேனே காதல் இன்பம்”

    சீரினால் அடி. அடிக்குள் தொடை. இவற்றையெல்லாம் கலந்துதரும் தன்னுடைய கவிதைகளில் காதலின்பத்தைக் காணுகிறாராம். என்னதான் புதுக்கவிதை எழுதினாலும் எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை, பா, இனம் பற்றிய தனது புலமை ஐயத்திற்கிடமாகிவிடக் கூடாது என்னும் கவலை இல்லாத கவிஞர் எவருமிலர். பொதுவாக மரபுக்கவிதை எழுதுபவர்கள் பாடலுக்கு முன்பே வாய்பாடுகளைக் குறிக்கிற வழக்கத்தை இன்றும் காணலாம். அதற்குக் காரணம் ‘தனக்கும் யாப்பு தெரியும்’ என்பதை விளம்பரப்படுத்துவதற்காக அல்ல. பிறர் தனக்கு யாப்பு தெரியாதோ என்று நினைத்துவிடக் கூடாதே என்னும் அச்சமே! எனவேதான் நான் ஊற்றும் தமிழ்க்கவிதை என வாளா கூறாமல் ‘சீரும் அடி தொடையும் தானடக்கி’ என்று நிமிர்ந்து கூவுகிறார்.

    “விரல் வெண்டை எனைத்தழுவ நெளியும் போது
    வெளிர்தங்க நகக்கூர்கள் பேசும் போது
    குரல் கம்பி, ‘உம்’ கூட்டி விடைபகன்று
    குதித்தோடும் என்மொழிகள் ராணி நெஞ்சில்
    பரலொலியாய் பசுமொழியாய் பரவும் போது
    குரலெழுப்பிப் பறக்கின்ற எதுகை மோனை
    குன்றொளியாய் மிளிர்கின்ற கவிதை ஊற்று!”

    எந்தப் பொழுதிலும் என் தமிழை நான் மறக்கமாட்டேன் என்று சொல்ல வருகிறார். விரல்கள் தழுவும்போதும், நகங்கள் பேசும்போதும், குறிப்பு மொழிகளால் காதலியோடு பரிமாறிக் கொள்ளும் போதும் தமிழ் மறப்பதில்லையாம்!. எந்தத் தமிழை? ‘எதுகை மோனை குன்றொளியாய் மிளிர்கின்ற கவிதை ஊற்றையாம்!” முந்தைய வரிகளில் கவிதை உறுப்புக்களைச் சொன்னவர் இந்தப் பாட்டில் தொடை விகற்பங்களால் தனது கவிதை சிறப்படைவதைக் கூறுகிறார்.

    “வாய்வைத்து ஊதுகையில் கழுத்துச் சங்கு
    வளைத்திட்டு இதழுக்கு ஊட்டி விட்டுப்
    போய்விட்ட தேனொலியும் கட்ட விழ்த்த
    புதுத்தென்றல் வாசமென இதய வீட்டின்
    பாய்விரித்துப் பழமங்கை படுத்து விட்டுப்
    பக்கத்தில் எனையழைத்துப் பேசும் சொற்கள்
    நோய்காதல் தீர்க்கின்ற மூச்சு எல்லாம்
    நடமாடும் தமிழ்க்கவிதை காதல் இன்பம்”

    (வ)சந்த’ராசன் ‘சிந்து’ ராசன்’ ஆன கதை

    பொதுவாக மரபுக்கவிதை எழுதத் தொடங்குபவர்கள் அசை, சீர், தளை என்னும் இலக்கணக்கூறுகளில் கவனம் செலுத்துவார்கள். அவர்கள் அவற்றையே மரபுக்கூறுகள் என எண்ணிவிடுவதுதான் இதற்குக் காரணம். மரபு மக்கட்சமுதாயத்தைச் சார்ந்தது, தழுவியது என்பதை அவர்கள் மறந்து போனதன் இலக்கிய வெளிப்பாடுதான் வாய்பாடுகளை முன்னிறுத்திக் கவிதைகளைப் புனைய முற்படுவது. மக்கட்சமுதாயத்தை எண்ணி நூல் செய்ததால்தான் தொல்காப்பியர் இலக்கியத்தில் விருந்து, புலன் முதலியவற்றையும் சிந்திக்க முடிந்திருக்கிறது. அந்த வகையில் சிந்து என்பதற்கு இலக்கணம் இல்லை.. சான்றாக வெண்பா என்பது குறள் வெண்பா மட்டுமே. மற்ற வெண்பாக்கள் ஒன்று குறள் வெண்பாவின் விரிவாக இருக்க வேண்டும். அல்லது அந்த விரிவின் சிதைவுகளில் ஒன்றாக இருக்க வேண்டும். ஆனால் சிந்து முதலிய மக்களிசைப் பாடல்கள் ஒவ்வொரு முழுமையான தாளக்கட்டை அடிப்படையாகக் கொண்டவை. எத்தனை வகைச் சிந்து என்பது கணக்கில் அடங்காது. படைப்பவனின் உள்ள அசைவுகளுக்கு ஏற்பச் சொற்கள் இடமாறி நடமாடும். சந்தம் சதிராடும். ஒவ்வொரு சிந்தும் ஒவ்வொரு வகையானவை. காவடிச்சிந்து, வளையல் சிந்து, நொண்டிச்சிந்து, வழிநடைச்சிந்து, ஆனந்தக் களிப்பு, இலாவணி, கிளிக்கண்ணிகள், வண்டிக்காரன் பாட்டு என்னும் பெயர்களே சிந்துப்பாடல்களின் களங்களைக் காட்டிவிடும். இத்தகைய சிந்துப்பாடல்களைக் காய் காய் என்றோ மா மா என்றோ அடக்கிவிட இயலாது, அளந்துவிடவும் முடியாது. அப்படிச் செய்வது அபத்தத்தின் உச்சம். அண்ணாமலை ரெட்டியார் அவர்களே சிந்துக்குத் தந்தை என்றாலும் மகாகவி பாரதியை அவ்வாறு பாவேந்தர் அழைத்ததற்கு வலிமையான காரணம் உண்டு. ரெட்டியாரின் காவடிச்சிந்தில் ஒருசில வகைமாதிரிகளையே காண முடியும். ஆனால் மகாகவி தன் பாடல்களில் அத்தனை வகைகளையும் கையாண்டிருப்பார். குறிப்பதற்கு ஒன்று உண்டு, சிந்துக்குத் தந்தையான பாரதி எழுதிய சிந்துக்களில் காவடிச் சிந்து என்பது ஒரே பாட்டுதான் இருப்பதாகத் தெரிகிறது.

    “வில்லினை யொத்த புருவம் வளைத்தனை;

    வேலவா! – அங்கோர்
    வெற்பு நொறுங்கிப் பொடிப்பொடி
    யானது, வேலவா!

    சொல்லினைத் தேனிற் குழைத்துரைப் பாள்சிறு

    வள்ளியைக் – கண்டு
    சொக்கி மரமென நின்றனை
    தென்மலைக் காட்டிலே

    கல்லினை யொத்த வலிய மனங்கொண்ட
    பாதகன் – சிங்கன்
    கண்ணிரண் டாயிரங் காக்கைக்
    கிரையிட்ட வேலவா!
    பல்லினைக் காட்டிவெண் முத்தைப் பழித்திடும்
    வள்ளியை – ஒரு
    பார்ப்பனக் கோலந் தரித்துக்
    கரந்தொட்ட வேலவா!”

    என்பது மட்டுமே மகாகவியால் பாடப்பட்ட காவடிச் சிந்தென்று தெரிகிறது. திரையிசைப்பாடல்களில் தோல்வியே அடையாத பாடல்கள் சிந்துக்களே! பல்வகைச் சந்தங்களில் பலவகைப் பாடல்களைத் திரைப்படப் பாடலாசிரியர்கள் எழுதியிருக்கிறார்கள். பாடகர்கள் தங்களது இனிமையான குரலில் அவற்றைப் பாடுகிறபோது உள்ளம் சிலிர்க்கிறது. உயிர் சிணுங்குகிறது.

    “கட்டான சிட்டுப் பொண்ணு
    கிட்டத்தில ஒட்டி நின்னு
    தொட்டு உன்னைக் கட்டிக் கொள்ள
    துணிஞ்சு இங்கே வந்தேன் இந்த
    வேளை!  —  உன்
    தொல்லையெல்லாம் தீர்ந்து போகும்
    நாளை!!”

    என்னும் ஆலங்குடி சோமுவின் புகழ்பெற்ற பாடல் நினைவிற் கொள்ளத்தகும். பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின்,

    “ஆடைகட்டி வந்த நிலவோ? கண்ணில்
    மேடை கட்டி ஆடும் எழிலோ? குளிர்
    ஓடையில் மிதக்கும் மலர்
    ஜாடையில் குளிக்கு மிவள்
    காடுவிட்டு வந்த மயிலோ? நெஞ்சில்
    கூடுகட்டி வாழும் குயிலோ?”

    என்ற பாடலை மகாலிங்கம் பாடுகிறபோது துள்ளாத மனமும் துள்ளுமல்லவா?

    “முள்ளை விலக்கி மலரை விரித்ததில்
    கள்ளைச் சுவைக்க வந்தேன் – ரசம்
    அள்ளிக் குடிக்க வந்தேன் – அந்தக்
    கொள்ளை இறைவனின் சம்மதத்தோ டென்று
    கூறத் துணிவு கொண்டேன்!  — துயர்
    ஓடக்கனவு கண்டேன்!”

    என்ற சிந்துக்கண்ணியை வசந்தமாளிகையில் சௌந்தரராசன் குரலில் கேட்டும் மயங்காதவர் உளரா?

    “நீலக்கடலலை மோதி வருவதில்
    நெஞ்சம் பறிகொடுத்தேன் – இன்று
    கோடி அலைகள் என் நெஞ்சில் எழுவதை
    யாரிடம் போய்உரைப்பேன்?”

    என்னும் பாடியிருக்கிறார் கண்ணதாசன். அந்த மரபிலே வந்தவர் தம்பி வசந்தராசன். இந்த நூலிலே பலவகையான சிந்துக்களைப் பாடியிருக்கிறார்.

    “பெண்ணை மலரென்று சொல்லித் திரிந்து நாம்
    கிள்ளிக் கசக்குவதா? தட்சிணைத்
    தீயில் பொசுக்குவதா?
    மண்ணில் பிறந்தவர் தன்னை உணராமல்
    இன்னும் இருப்பதுவா? ஐயகோ
    இன்னும் இருப்பதுவா?

    கொட்டும் இருளிலும் பட்டப்பகலிலும்
    ஒட்டி இருப்பதற்கும் குழந்தை
    பெத்துக் கொடுப்பதற்கும் – கணவன்
    செத்த பின்னரவள் பொட்டு தாலியெனும்
    சொத்தை இழப்பதற்கும் – வருவது
    சொத்துக்காய் சாவதற்கா?”

    20ஆம் நூற்றாண்டில் தமிழாசிரியர் பலர் சிந்துக்கு இலக்கணம் செய்வதாய்ச் சொல்லிக் கொண்டு புலவனுடைய வடிவக் கற்பனைக்கு வாய்பாடு தர முயன்றிருக்கிறார்கள். ஆனால் பாடுகிற கவிஞனின் காட்டாற்று வெள்ளத்திற்கு வெற்று வாய்பாடுகள் அணைபோட முடியாது தடுமாறி நிற்கின்றன. யார் வேண்டுமானாலும் சிந்து எழுதலாம். சிந்து என்பது உள்ளத்தின் துள்ளல்! அந்தத் துள்ளல் எந்த வகையிலும் அமையலாம். எந்த வாய்பாட்டிலும் அமையலாம். அதற்கெல்லாம் வரையறை கிடையாது. வரையறுக்கவும் முடியாது. எழுதிய சிந்துக்கு வேண்டுமானால் இவர்கள் இலக்கணம் சொல்லிக் கொள்ளலாம். அப்படிச் சொல்லப் புகுந்தால் எத்தனை ஆயிரம் கவிஞர்கள்? எத்தனை ஆயிரம் உள்ளங்கள்? எத்தனை ஆயிரம் துள்ளல்கள்? எத்தனை ஆயிரம் சிந்துகள்? எண்ணிப் பாருங்கள். அதனால்தான் சிந்துக்கு வடிவ வரையறை இல்லை! இயலாது. கூடாது. யாப்பிலக்கணம் கற்பிப்பதாய் ஒருவர் தாம் எழுதிய 600 பக்க நூலில் சமநிலைச் சிந்து, வியனிலைச் சிந்து என இருவகைக் கூறுகிறார். வியனிலைச் சிந்துக்கு இருசீர் இரட்டை முதலாக ஆறு வகைகளைக் கூறுகிறார். காவடிச் சிந்து, நொண்டிச் சிந்து, வழிநடைச் சிந்து என்று முன்னெடுத்து ஆனந்தக் களிப்பு, தெம்மாங்கு முதலியவற்றையும் சிந்தொடு இணைத்துக் கொள்கிறார். தாலாட்டு, ஒப்பாரி, கண்ணிகளையும் சிந்துக்குள் அடக்குகிறார். புலவர் குழந்தை, புலவர் சரவணத்தமிழன் சொல்லியிருக்கும் சிந்துக்கள் தனி. இதிலிருந்து என்ன தெரிகிறது. சிந்துக்கு இலக்கண வரையறை செய்வது வீண்முயற்சி என்பதுதான். நேரிசை வெண்பாவையும் சிந்தொலியில் பாடியிருக்கிறார்கள். விரிப்பின் பெருகும்.

    “கேடு ஒழிந்திட கேள்வி பிறக்கணும்
    கேட்டுக் கொண்டாயா தோழனே! – நம்
    நாடு நலம்பெற நம்முடைச் செய்கைகள்
    நன்மை விளைக்கணும் தோழனே!”

    என்பது வசந்தராசன் எழுதியிருக்கும் மற்றொரு சிந்து வடிவம்.

    “ஆடிவரும் அழகுறுப்புக் கூடம் — நெஞ்சம்
    அவளுருவைச் செய்துவிடும் பாடம்! உள்ளம்
    நாடிவிடும் ராணிமுன்னே
    நாட்டியமாய் இசையுமுன்னே
    ஆடும் – பின் ஓடும்!”

    இந்தத் தொடக்கநிலைச் சந்தங்களைக் கொண்ட சிந்துக்கள் பின்னாளில் எடுத்த விஸ்வரூபத்தையும் நம்மால் காண முடிகிறது.

    “போதை அணை உடைத்துப் பேதை இதழ்கொடுத்தாள்!
    பேச மறந்து நின்றேன் தோழி!-அந்த
    வாதை தினம்கடுக்க வாசல் மொழிதிறந்து
    வந்து கவிபெயர்த்தேன் தோழி!”

    “மொண்டு பருகும் மது! மொத்தக் கவிதையவள் !
    முத்தக் கவிதையினில் சொல்வேன்!–நீ
    கண்டு பிடித்துக்கொடு காலம் இருக்கும்வரைக்
    கவிதை வடித்துத் தமிழ் வெல்வேன்!”

    “‍‍‍‍‍அம்பு மலர்க்குறும்பு!ஆசை மனக்கரும்பு!
    அன்பு ஊஞ்சல்பிடித் தாடும்!–அதில்
    வம்பு விளையாடிக் கொம்புத் தேன்கூடி
    வசந்த நதிப்படகும் ஓடும்!”

    “வானை விரலிடுக்கில் வாரி வழியவிட
    நாண விழியிரண்டே போதும்!-அவள்
    மோனை இமையிரண்டில் மோகம் முந்திவர
    மூன்று தமிழ்ச்சுவையும் மோதும்!”

    “காதல் எழுதுகிற காலின் விரல்முனையில்
    கன்னி மண்ணுமது பூக்கும்!–களி
    நாதம் சுமந்துவர நாடு கிறங்கியெழ
    நாளும் மூச்சுவழி சாய்க்கும்!”

    “ஆன மட்டுமவள் வானைக் குட்டுகிற
    அண்டப் பெருவளியின் அழகு! –ஒரு
    மோன மொழிவழியில் மொத்த அழகெழுதி
    மூடி வைத்தபடி பழகும்!”

    “காதல் இணையவளைக் காணும் விழியிரண்டில்
    காலம் கவியெழுதிக் கடக்கும்!–அவள்
    பாத இணையடியில் பட்ட பூமிக்கொரு
    பாப விமோசனமும் கிடைக்கும்!”

    சொல்லிப்பாருங்கள்! சந்தத்தின் சுகம் தெரியும்! கவிதை இருக்கிற இடம் இலக்கணம் அல்ல. கவிதையில் இருப்பதுதான் இலக்கணம். ஆயிரம் சந்தங்களில் சிந்து பயின்றவர் கண்ணதாசன். அவரைத் தொடர்ந்து வென்றவர் வசந்தராசன். அவர் கவிதைகளைப் படிப்பதில் கவலை மறக்கிறேன். கண்டு வியக்கிறேன்!

    பெண்விடுதலையில் பரத்தைமையொழுக்கம்

    பொதுவாகப் பெண்விடுதலை பேசும் படைப்பாளர்களாகட்டும் கவிஞர்களாகட்டும் ஆண்கள் திட்டமிட்டே பெண்களை நாசமாக்குகிறார்கள் என்பது போலவும் வறுமையின் காரணமாகவே விலைமகளிர் என்னும் பிரிவு சமுதாயத்தில் கிளைத்து வந்தது எனவும் பெண்தொடர்பான பாலியல் வக்கிரங்கள் அனைத்திற்கும் ஆண்களே காரணம் என்பதுபோல எழுதிவருகிறார்கள். இந்தக் கருத்தியல் பரத்தமையொழுக்கம் பற்றிய முழுமையான புரிதலைக் காட்டுமா என்பது தெரியவில்லை. முழுமையானதா என்றும் புரியவில்லை. பசி போனால் பரத்தமை போய்விடும் என்பது பத்தாம்பசலித்தனமான வாதம்.

    பரத்தமை என்பது ஒழுக்கத்திரிபாகத்தான் சங்கக் காலத்தில் கருதப்பட்டிருந்தது. பின்னாலே மூவேந்தர் ஆட்சியிலும் அதனைத் தடைசெய்ததாகவோ கண்டிக்கப்பட்டதாகவே குறிப்பில்லை. அதற்குப் பின்னாலே மராட்டியர் ஆட்சியிலும் அவரைத் தொடர்ந்த ஆங்கிலேயர் ஆட்சியிலும் இது குறித்த மாற்றுச் சிந்தனை இருந்ததற்கான வலிமையான தரவுகள் இல்லை. இதற்குப் பின்னாலேதான் மேட்டிமை கனவான்களின் உதவியோடு ஒரு மாற்றுத் திட்டம் நடைமுறைக்கு வந்தது. அதாவது சட்டப்படி பரத்தமையை ஒழிப்பது. அந்தரங்கத்தில் அதனை வளர்ப்பது. இல்லாவிட்டால் சட்டமியற்றி நூறாண்டுகள் ஆகியும் அதனை ஒழிக்க முடியாதது மட்டுமன்று மும்பை முதலிய இடங்களில் அத்தொழில் வரன்முறை செய்யப்பட்டுள்ளது.

    “பாற்கடல் அமுதத்தைத்
    தேவர்கள் சுவைத்துவிட்டதால்தான்
    எங்கள் இதழ் அமுதத்தை
    அரக்கர்களுக்கு வழங்குகிறோம்
    எங்களுடைய நீதிமன்றத்தில்தான்
    ஒழுக்கம் தண்டிக்கப்படுகிறது
    நாங்கள் நிர்வாணத்தை விற்பனை செய்கிறோம்
    ஆடை வாங்குவதற்காக”

    என்னும் கவிதை 1971இல் எழுதப்பட்டது. ஆனால் சொர்க்க பூமியாக அன்றைக்குத் திகழ்ந்த சோவியத் ஒன்றியத்தில் 1917இல் புரட்சி வெடித்து 1991 இல் அது தாழ்ச்சியுறும் வரை 75 ஆண்டுகள் முக்கால் நூற்றாண்டு சோசலிசத்தின் பெயரால் ஆட்சி நடைபெற்றது. மக்கள் சீனத்தில் 1956இல் புரட்சி வெடித்து 2009 வரை 53 ஆண்டுகள் அரை நூற்றாண்டுக்குமேல் சோசலிசத்தின் பெயரால் ஆட்சி நடைபெற்றது. இந்த நாடுகள் எல்லாம் வறுமையுள்ள நாடுகளா? பரத்தமை ஒழியவில்லையே!. பாலியல் குற்றங்கள், நீலப்படத் தயாரிப்புகள் மற்றும் வெளியீடுகள் மறையவில்லையே! குறையவில்லையே! காரணம் என்ன? கண்ணதாசன் தாம் எழுதிய திரையிசைப் பாடல் ஒன்றில்,

    “ஒவ்வொரு பெண்ணும் கண்ணகிதான்
    ஒவ்வொரு நதியும் காவிரிதான்
    சமுதாயம் ஜாடை செய்தால்
    கலைமகள் கூட விலைமகள்தான்!

    தாயாகிக் குழந்தைக்குப் பால் தேடினேன்
    பால்வாங்க வழியின்றிப் பணம் தேடினேன்
    பணந்தேடும் அதற்காக விலைபேசினேன்
    பகவானும் என்மீது வலை வீசினான்”

    என்று பரத்தமையின் பன்முகப் பரிமாணங்களை உள்வாங்கியே எழுதியிருக்கிறார். எனவே, பரத்தமைக்கும், பசி பஞ்சம் பட்டினிக்கும் நேரடியாகத் தொடர்புபடுத்திப், பசி ஒழிந்தால் பரத்தமை ஒழியும் என்கிற வாய்பாடு பொருளற்றது என்பதைச் தொடர்புடையவர்கள் புரிந்து கொள்ளுதல் வேண்டும். பரத்தமைக்கு வயிற்றுப் பசியைத் தாண்டி வேறுபல காரணங்களும், ஏதோ ஒரு வகையில் பாலுறவுப் பசியும் காரணமாக அமைகின்றன என்பதை நாம் உணரவேண்டும். ஒப்புக் கொள்ள வேண்டும்.

    வயிற்றுப் பசி எப்படி விதம் விதமான உணவுகளை நாடுகிறதோ, அதேபோலப் பாலுறவுப் பசியும் விதம் விதமான உறவுகளை வழிமுறைகளை நாடுகிறது. வயிற்றுப் பசியுள்ள ஒருவன் அனைத்து வகை உணவுகளையும் வீட்டிலேயே சமைத்துச் சாப்பிடலாம். வெளியிலும் வாங்கிச் சாப்பிடலாம். அதேபோலப் பாலுறவுப் பசிக்காரனும் அவன் விரும்பியவாறான உறவுகளை வீட்டிலும் பெறலாம். இயலாதபோது வெளியிலும் பெறலாம். இது அவரவர் வாழ்நிலை, சமூக இருப்பு, சுற்றி நிலவும் கட்டுப்பாடு அல்லது கட்டுப்பாடின்மை அல்லது பழகும் வாய்ப்பு, வாய்ப்பின்மை இவற்றைப் பொறுத்தே அமைகிறது. இதனாலேயே இது இயல்பாகவும் நிகழ்ந்து விடுகிறது.

    தற்போது புழல் சிறையில் அடைப்பட்டிருக்கும் அபிராமி என்ற பெண் தன் கள்ளக்காதலன் வேண்டுகோளின்படி தன் கணவனையும் குழந்தைகள் இருவரையும் கொல்ல முயன்றார். கணவனைக் கொல்லும் சூழல் வாய்க்காத நிலையில் தன் கணவனுக்குப் பிறந்த இரண்டு குழந்தைகளையும் தாயென்றும் நினையாமல் அவர்களைக் குழந்தைகளென்றும் பாராமல் கொன்ற செய்தி சில நாள் ஒளிபரப்புக்குப் பயன்பட்டதை நாம் அறிவோம். அப்போது அந்தப் பெண் சொன்னார் “என் கணவனைவிடப் பிரியாணிக் கடை சுந்தரத்தை நான் அதிகமாக விரும்பினேன்”

    கவிஞர்கள் என்ன சொல்கிறார்கள்? சுந்தரத்தின் செயலை ஆணாதிக்கம் என்கிறார்களா? அபிராமியின் செயலுக்கு வறுமை காரணம் என்கிறார்களா? மகளிர் அமைப்பினர் என்ன சமாதானம் கூறுவார்கள்? வறுமையில் வாடும் பெண்களெல்லாம் பரத்தமையொழுக்கம் பூணுகிறார்களா என்ன? அது என்றைக்கும் ஒழுக்கக் கேடு. தெளிவாகச் சொன்னால் தமிழகத்தைப் பொருத்தவரை எந்த அரசாலும் கண்டிக்கவோ தடைசெய்யவோ விரும்பாத ஒழுகலாறு. இப்படித்தான் இந்த மண்ணின் வரலாறு அமைந்திருக்கிறது.

    எனவே பரத்தமை ஒழுக்கம் நிலவிய ஒழுக்கம். ஆனால் சமுதாய ஏற்பளிப்பு கிடையாது. விலைமகளிர் சமுதாயப் பிரிவு. அது வறுமையின் காரணமாகத்தான் அமைந்திருந்தது என்பதற்கான வலுவான சான்றுகள் வரலாற்றில் இருப்பதாகத் தெரியவில்லை. உலகில் எந்தக் காலத்திலும் எந்த ஒரு சமுதாயமும் முழுமையும் புனிதப்பட்டு இருந்துவிட இயலாது. தமிழ்ச் சமுதாயத்திலும் இது ஊடுருவியிருந்தது என்பதே உண்மை வரலாறு. நடப்பியல். கவிஞர் ஈரோடு தமிழன்பன் எழுதிய ‘வணக்கம் வள்ளுவ’ என்னும் நூலில் விலைமாதர்கள் வள்ளுவரிடம் கேட்ட வினாக்கள்’ என்னும் தலைப்பில் எழுதியிருக்கும் கவிதை வரிகளில் சொல்லப்பட்டிருக்கும் கருத்துக்கள் அனைத்தையும் சமுதாயத்தின் உண்மையான நிலைப்பாட்டை உரைத்ததாகக் கொள்ளுதற்கு இயலாது.

    “எந்த விலை மாது
    தன் மகளுக்குக் குபேரன் வீட்டில்
    சம்பந்தம் பேசினாள் என்று?”

    என வினவும் தமிழன்பனின் வினா பொருளுடையதா? என்பதைச் சிந்திக்க வேண்டும். இந்தச் சிந்தனைகளையெல்லாம் உள்ளடக்கி எழுதுகிறார் வசந்தராசன்.

    “வறுமைகளும் ஏழ்மைகளும் வாழு மட்டும்
    வரதட்ச ணைக்கொடுமை நீங்கு மட்டும்
    கருமையிலே கன்னிசுகம் தேடு கின்ற
    காமுகர்கள் திருந்தி மனம் வாழும் மட்டும்
    வெறுமுடலைக் காட்டுகிற விபச்சாரந்தான்
    வேர்விட்ட ஆல்போல வளருமென்பேன்!”

    “எல்லாரும் இராமர்களாய் இருந்துவிட்டால்
    எதற்கிங்கே விபச்சாரம்? கரும்பு கண்ட
    வெல்லமெனில் ஈக்கூட்டம் இருக்குந் தானே?
    வெட்கமென்ன இதையிங்கே வெளியில் சொல்ல?
    இல்லையொரு நாதியிங்கே என்பதால்தான்
    இடையவிழித்தோம்!”

    என்னும் விருத்தத்தில் வசந்தராசன் கண்ணதாசன் பின்பற்றிய பரத்தமை ஒழுக்கத்திற்கான காரணத்தை வழிமொழிந்திருக்கிறார். கவிதைக்காக மட்டுமன்றி இவருடைய கன்னித் தொகுப்பில் இடம் பெற்ற சமுதாயத்தின் அவலக்குரலைச் சுருதிபேதம் இல்லாமல் இவர் வாசித்ததற்காகவும் இது இங்கே சுட்டப்படுகிறது.

    கருத்துக்களின் கொள்கலன்

    கவிதைத் தொடர்பான கட்டுரைகளில் அது பற்றிய கூடுதல் வரலாற்றுச் செய்திகளையோ புனைவுச் செய்திகளையோ அறிந்து கொள்வதும் அவற்றோடு தொடர்புபடுத்திக் கவிதையை உணர்ந்து சுவைப்பதும் கவிதைப்பயனைப் பெருக்கக்கூடும். நான் சொல்லப் போவது வள்ளற் பெருமான் வாழ்க்கையில் நடந்ததாகக் கூறப்படும் நிகழ்வு. அனைவருக்கும் தெரிந்ததுதான். இந்த நிகழ்வின் அடையாளமும் சூழலும்  மாறலாம். அடிப்படை உண்மை உயர்ந்தது, சிறந்தது. மிக உயர்ந்த கற்பித்தல் கோட்பாட்டை உள்ளடக்கியது. பெருமானின் அண்ணனின் பெயர் சபாபதி. தம்பி இராமலிங்கத்தைக் குருகுலக் கல்வியில் சேர்க்க எண்ணிய அவர் காஞ்சி மகாவித்வான் சபாபதி முதலியாரிடம் அழைத்துச் சென்றார். தன் ஆவலைத் தெரிவித்தார். முதலியாரும் விருப்பத்தோடு ஏற்றுக் கொண்டார். அன்றே வகுப்பு தொடங்கியது. வகுப்பில் இருந்த மாணவர்கள் இறைவணக்கம் பாடினர். அவர்கள் பாடிய இறைவணக்கம்,

    “ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்
    ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்
    மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம்
    வஞ்சனையைச் செய்வாரோடு இணங்க வேண்டாம்
    போகாத இடந்தனிலே போகவேண்டாம்
    போகவிட்டுப் புறஞ்சொல்லித் திரிய வேண்டாம்!
    வாகாரும் குறவருடை வள்ளி பங்கன்
    மயிலேறும் பெருமானை வாழ்த்தாய் நெஞ்சே”

    உலகநாதர் எழுதிய உலகநீதி!. பெருமானின் முகத்தில் மகிழ்ச்சியும் இல்லை! வருத்தமும் இல்லை. சமநிலை! ஐயாவின் வாட்டத்திற்குக் காரணம் கேட்டார் ஆசிரியர். சிறார்களிடம் வேண்டாம் என்னும் எதிர்மறைச் சொல்லைவிட வேண்டும் என்னும் உடன்பாட்டுச் சொல்தான் மனத்தில் பதியும். எனவே இந்தப் பாடலை என் மனம் ஒப்பவில்லை என்றார். “பாட்டின் எல்லா வரிகளையும் ‘வேண்டும் என்று முடியுமாறு’ பாட முடியுமா? உன்னால் சொல்ல முடியுமா?” என்றும் வினவினார். அப்போது வள்ளலார் பாடிய பாடல்தான்,

    “ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற
    உத்தமர்தம் உறவு வேண்டும்
    உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார்
    உறவு கலவாமை வேண்டும்

    பெருமை பெறும் நினது புகழ் பேசவேண்டும்!
    பொய்ம்மை பேசாதிருக்க வேண்டும்!
    பெருநெறி பிடித்தொழுக வேண்டும்!
    மதமான பேய் பிடியாமை வேண்டும்!”

    இந்தப் பாடல் தொடங்கி அமைந்திருக்கும் திருத்தணிகைமாலை பின்னாளில் செப்பம் செய்யப்பட்டதாகக் கொள்ளலாம். காரணம் அச்சிறிய வயதில் வள்ளலாருக்குக் கந்தகோட்டம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.  இந்தப் பாடலில் ‘வேண்டும்’ என ஐயா முடித்திருந்தாலும் எழுவாயையும் எச்சத்தையும் எதிர்மறையாக்கி வினைமுடிப்பினை மட்டும் உடன்பாடாக்கிக் காட்டும் சதுரப்பாடு உணர்க. இரண்டு எதிர்மறைகள் ஒரு உடன்பாடாகுமல்லவா? அவன் ‘கெட்டவன் அல்லன்’ என்றால் ‘நல்லவன்’ என்று பொருள்படுவதுபோல!

    “சூழுதல் வேண்டுந் தாள்கள்
    தொழுதிடல் வேண்டும் அங்கை
    தாழுதல் வேண்டுஞ் சென்னி
    துதித்திடல் வேண்டுந் தாலு
    ஆழுதல் வேண்டுந் தீமை
    அகன்றுநான் இவற்கா ளாகி
    வாழுதல் வேண்டும் நெஞ்சம்
    தடுத்தது மானம் ஒன்றே!”

    என்னும் கந்தபுராணச் செய்யுளிலும் இந்நெறி பின்பற்றப்பட்டிருப்பது காண்க. இந்த முன்னோர் நெறியில் மூழ்கிப் போயிருந்த நான் தம்பி வசந்தராசனின் இந்த நூலில் காணப்படும் கவிதையொன்றினைப் படித்தபோது எனக்குத் தோன்றிய சிந்தனைகளை இங்கே பதிவு செய்கிறேன்.

    “பிறப்புக்கு அணைபோட்டுப் பிள்ளைக்கு அறிவூட்டிப்
    பிழையின்றி வளர்க்க வேண்டும்! – சோம்பி
    இரைப்பைக்கு உரம்போட்டு இரவுக்குத் துணைதேடும்
    இழிநிலைகள் ஒழிக்க வேண்டும்!

    அடுத்தவன் நல்வாழ்வின் அடிக்கல்லைப் பறிக்கின்ற
    அவலங்கள் மாற வேண்டும்! – பணம்
    படைத்தவன் இறையென்ற பகல்வேடச் செய்கைகள்
    பலியாகி ஒழிய வேண்டும்!

    இறையென்னும் பெயராலே இருக்கின்ற மூடங்கள்
    இல்லாமல் போகவேண்டும்! – ஒரு
    வரைக்குள்ளே நாமிருந்து வளர்க்கின்ற பண்பாடு
    வளமைதனை ஆள வேண்டும்!

    இரவுக்கும் பகலுக்கும் இடைவெளியே இல்லாமல்
    எப்போதும் உழைக்க வேண்டும்! – வந்த
    வரவுக்குள் செலவடக்கும் வாழ்க்கையின் தத்துவத்தை
    வழியெங்கும் பொறிக்க வேண்டும்!

    சீர்கேட்டுப் பெண் கேட்கும் சீர் கெட்ட திருமணங்கள்
    சிந்தனைகள் மாற வேண்டும்! — காதல்
    வேர்பாய்ச்சித் திருமணத்தில் வேற்றுமைகள் வெறுத்தொதுக்கி
    வேதனையை ஓட்ட வேண்டும்!

    உள்ளத்தின் கனவுக்கும் உறைகின்ற நனவுக்கும்
    உறவென்ற பாலம் வேண்டும்!  — அதில்
    கள்ளங்கள் கபடுகள் கண்ணீரின் மூலங்கள்
    கண்டிப்பாய் மாற வேண்டும்!

    எட்டாத மாளிகையை எட்டியுள குடிசையுடன்
    இணைக்கின்ற உருவம் வேண்டும்! – அதில்
    கட்டாயம் சமதர்மம் கச்சிதமாய்க் குடியிருக்க
    காலத்தின் துணையும் வேண்டும்!”

    என்ற பாடலில் ஒவ்வொரு அடியையும் வேண்டும் என்ற வினைமுடிபு கொண்டு நிறைவு செய்திருக்கிறார். இது எதிர்மறைக்கு எதிரான உடன்பாடு அன்று. இயல்பாகவே அமைந்த உடன்பாடு. இந்தப் பாடலைப் பாவேந்தர் எழுதிய,

    “வீழ்ச்சியுறு தமிழகத்தில் எழுச்சி வேண்டும்!
    விசைஒடிந்த தேகத்தில் வன்மை வேண்டும்!
    சூழ்ச்சிதனை வஞ்சகத்தைப் பொறாமை தன்னைத்
    தொகையாக எதிர்நிறுத்தித் தூள்தூ ளாக்கும்
    காழ்ச்சிந்தை, மறச்செயல்கள் மிகவும் வேண்டும்!
    கடல்போலச் செந்தமிழைப் பெருக்க வேண்டும்!
    கீழ்ச்செயல்கள் விடவேண்டும்!………”

    என்ற பாடலோடு ஒப்பிட்டுச் சுவைக்க முடியும். ‘வேண்டும்’ என்ற வினைமுடிபில் மயங்கிய கண்ணதாசன்,

    “நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்!
    நாளோடும் பொழுதோடும் உறவாட வேண்டும்!
    பாலோடு பழம் யாவும் உனக்காக வேண்டும்
    பாவை உன் முகம் பார்த்துப் பசியாற வேண்டும்
    மனதாலும் நினைவாலும் தாயாக வேண்டும்
    மடிமீது விளையாடும் சேயாக வேண்டும்”

    என்றெழுதினார். கவிதையில் மரபு படிவது என்பது இதுதான். ஒரு கவிதை மரபுக்கவிதை என வழங்கப்படுவதற்கான தகுதிகளில் இதுதான் தலையாயது. பாடலின் வடிவத்தில் மரபு என்பதும் இதுதான். காய் காய் மா மா என அரைகுறை வாய்பாடுகளையெல்லாம் மரபென்று எண்ணிக் கொண்டு ‘மாபாதகம்’ செய்வார் கொஞ்சம் நின்று நிதானித்துச் செல்ல வேண்டும். மற்றவர்கள் விருத்தத்தில் செய்த வித்தையைத் தம்பி வசந்தராசன் சிந்தில் செய்து காட்டியிருக்கிறார் என்பதுதான் சொல்ல வந்த கருத்து.

    குருத்தில் வடியும் குருதி வெள்ளம்

    மகாகவியின் முதற் கவிதை எதுவென்று நானறியேன் ‘எங்கெங்கு காணினும் சக்தியடா’ என்பதைப் பாவேந்தரின் முதற்பாடலாகச் சொல்லுகிறார்கள். எது எப்படி இருந்தாலும் முதற்பாடல் எழுதுகிறவர்களும் முதல் தொகுப்பினை வெளியிடுகிறவர்களும் பெரும்பாலும் அஃறிணைகளைப் பற்றியும் கந்பனை கலந்தும், காதல் பற்றியும் கவியளப்பார்கள். அதனால் கதையளப்பார்கள். தம்பி வசந்தராசனின் இந்தத் தொகுப்பில் காதல் கவிதையே பெரும்பாலும் இல்லை என்பது வியப்புக்குரியது. தனது படைப்புக் குறிக்கோளை வெளிப்படுத்தும் இராசன்,

    “கஞ்சிக் கலயங்கள்
    நெஞ்சின் அடிகளில்
    அஞ்சி நடுங்கிடும் தீயை – ஏழ்மை
    அழுத்திக் கிடந்திடும் வாயை
    கொஞ்ச கொஞ்சமாய் என்
    கொள்கைக் கவிகளால்
    நெஞ்சுவாய் நீக்கி வைப்பேன்”

    என்று பதிவு செய்திருக்கிறார். இந்தக் கொள்கைப் பிரகடனத்தை இந்த நூல் முழுவதும் இவர் கொண்டு செலுத்தியிருக்கிறார்.

    “சேற்றுச் செருப்பணிந்து
    செவ்வயலில் சிற்றிடைகள்
    நாற்று நடுமழகை
    நயமாகப் பாடியநீ
    சோற்றுக்கு வழியின்றி
    சோர்ந்து ஒண்ட நிழலின்றி
    மாற்றுத் துணிக்கேங்கும்
    மக்களை ஏன் பாடவில்லை?”

    இந்தக் கவிதையைப் பிறரை நோக்கியதாகக் கருதாமல் இராசன் தன்னை நோக்கி வினவியதாகவே கருதினால் பாட்டின் சாரம் கூடுதலாகும். கெட்டியான களிமண் சேற்றில் காலை ஊன்றி அடுத்த அடிக்காகத் தூக்கி வைக்கிறபோது ஒட்டிய சேறே காலணியாகத் தொடரும். இந்த அவலக்  காட்சியின் அரிய கலைநுட்பத்தைச் “சேற்றுச் செருப்பணிந்து” எனக் கவிதையில் காட்டியிருக்கும் பாங்கு கண்டேன்! பரவசம் கொண்டேன்!

    ‘வேதனைத் துளிர்ப்புக்கள்’ என்னுந் தலைப்பில் சேரிவீட்டு மழலைகளைக் காட்சிப்படுத்தியிருக்கிறார்.

    “எச்சில் படுக்கைச்
    சாணச் சகதியில்
    குச்சியாய்க் கிடந்து
    குளிரில் ஒடுங்கும் இவர்
    சோற்றுக்கு அலைவதே
    சொந்த வாழ்வெனில்
    சாதனைப் பட்டியல்
    சாதிப்ப தென்ன?”

    நூறாண்டு பேசும் ஓராண்டுச் சாதனையைப் பேசியவர்கள் எல்லாம் அடுத்த தேர்தலில் கூட்டுவதற்குக் குப்பையாகக் கூட இருக்க மாட்டார்கள் என்பதைத் தொடர்ந்து ஆராய்கிறார்.

    “உழைத்துக் கொடுப்பவர்
    வீதியில் கிடக்கையில்
    உண்டு கொழுத்தவர்
    மாடியில் படுக்கையில்

    பிழைக்க வழிதராக்
    கொள்கைத் துணிகளைப்
    பிய்த்து எறிந்திடப்
    புதுயுகம் பிறந்திட
    புறப்படு தோழா புறப்படு!”

    என ஆற்றுப்படுத்துகிறார். அணி திரட்டுகிறார் கவிதையில். முப்பது வயதில் வாழ்க்கைச் சிக்கல்களில் மொத்துண்டு கிடந்த இளைஞன் ஒருவன் எழுதிய கவிதை இது என்பதை நம்ப வேண்டும். எண்பது வயதில் ‘கன்னம் சிவந்த பொன்னம்மா’வைப் பாடுகிற வயோதிகக் கவிஞர்கள் இதனைக் கொஞ்சம் மனசாட்சியோடு சிந்திக்க வேண்டும். கவிஞன் தன்னைப் பாதிக்கிற விஷயங்களில் மிகக் கவனமாகவும் எச்சரிக்கையாவும் இருக்க வேண்டும். ‘தன்னை நெருப்புக் கவிஞன்’ என்று முன்னுரையில் சொல்லிக்கொண்டு “நாயிடு ஹால்” கவிதைகளை எழுதிக் கொண்டிருந்தால் நினைவு கொதிக்காதா? கொதிக்கும் நெஞ்சு நடுங்காதா?

    “உப்பு நீரு உலகத்திலே ஓட்டைப் படகு பயணத்திலே
    அப்பன் பாட்டன் எல்லோருக்கும் ஐலசா! வலை
    அடங்கு மீனே வாயும் வயிறும் ஐலசா!”

    பார்த்தீர்களா கவிஞன் பார்வையை? தூண்டில்காரன் பார்வை தூண்டிலின் முள் மீது. வலைவீசுகிறவன் மனம் வலையில் விழும் மீன்கள் மீது. பரந்த கடல் பயணம் வெறும் பயணம் ஆகிவிடக் கூடாது என்னும் வேதனை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மீனவனுக்கும் உண்டு. படகு ஓட்டை. படகு நீரால் நிரம்பிக் கவிழுமானால் வலையில் எப்படி மீன் விழும்? படகு நீரால் நிரம்பக் கூடாது. வலை மீனால் நிரம்ப வேண்டும். வலை நிரம்பினால் வயிறு நிரம்பும்! இவருடைய கவிதை வலையில் விழுவன எல்லாம் கண்ணீர் மீன்களே!

    பாட்டரங்க முழக்கம்

    ஓரளவு வளர்ந்த நிலையில் பாட்டரங்கங்கள் பலவற்றில் பங்கு கொள்கிற வசந்தராசன் இந்த நூலில் ஒரு பாட்டரங்கக் கவிதையை எழுதியிருக்கிறார். இது உண்மையில் பாட்டரங்கத்திற்காக எழுதிப் பதிப்பிக்கப் பெற்றதா? இந்த நூலுக்காகவே எழுதியதா என்பதற்கான குறிப்பு ஏதுமில்லை. எவ்வாறாயினும் எண்சீர் விருத்தங்களால் எழுதப்பட்டிருக்கும் அந்தப் பாடல் இந்த நூலின் ஒட்டுமொத்த பாடுபொருளையும் ஒருசில வரிகளில் முழங்குவதாகவே அமைந்திருக்கிறது. எண்ணிக்கையில் ஐந்து எண்சீர் விருத்தங்களைக் கொண்டிருக்கும் அந்தப் பாடலின் தலைப்பு ‘ஏழ்மைக்கு விடிவில்லை’. இந்தக் கவிதை நூலின் தலைப்பு ‘குற்றங்களே தீர்ப்பெழுதினால்’ என்பதாக அமைய உள்ளடக்கத் தலைப்புக்கள் எல்லாம் “வியர்வை தெய்வங்கள்”, “சேறு”, “முடங்கள்”, “தண்டிக்க வந்திடும் சட்டங்களே!”, “மயான வெளிகள்” என்னுமாறு அமைந்து கவிஞனின் சமுதாய நோக்கினைப் புலப்படுத்துவதாய் அமைந்திருக்கின்றன.

    “இடுகாட்டு விறகானோம்! இடிம ழையின்
    இனங்காட்டும் மண்ணானோம்! இரக்கம் நெஞ்சில்
    அடைகாக்கும் புள்ளானோம்! அரசாங் கத்தின்
    அடியேறும் படியானோம்! அவல வாழ்வின்
    விடையில்லாக் கணக்கானோம்! வறுமைப் போதின்
    விடியாத இரவானோம்! கார ணந்தான்
    படையாகத் திரண்டெழுந்து உரிமைப் போரை
    படைக்காமல் போனதுதான்! வேறு என்ன?
    மூட்டுங்கள் புரட்சித்தீ! முடுக்கும் மூலை
    முடங்கட்டும் வெற்றுவாதம்! தீவ ளர்க்க
    பாட்டரங்கம் உதவட்டும்!…”

    கவிதையிலக்கணத்தைக் கற்றுக்கொண்டு பாடுபொருளை ஒவ்வொன்றாகக் கருத்தில் கொண்டு பாடுவது ஒருவகை. அது பெரும்பாலும் பொதுவானது. இளைஞன் ஒருவன் தன்னைச் சுற்றியுள்ள சமுதாயத்தை உற்று நோக்கி அதன் எதிர்மறை வாழ்வியல் நிலையைப் படைப்பிலக்கியத்தில் கொண்டுவருவது அரிது. ‘சமுதாயப் பார்வைகளே இந்த நூலில்’ என்று இதனை நான் இந்தக் கட்டுரையில் பல இடங்களில் குறிப்பிட்டிருக்கிறேன்.

    “நீரில்லாப் பாலைநிலம்! நெஞ்ச வீட்டின்
    நினைவேக்கக் கானல் நீர்! தறிபுகுந்த
    தாரில்லா நாடாக்கள்! தலைமையில்லாத்
    தனிமையோடு துயரங்கள்! இன்ப மென்னும்
    வேரில்லாச் செடிகொடிகள்! பகல் தூக்கத்தே
    வெளியாகும் கனவிதழ்கள்! ஏழ்மை யென்னும்
    எரிமலைக்கு எருவாகி எலும்புக் கூடாய்
    அழுகி வரும் நடைப்பிணமாய் ஏழை நாங்கள்!”

    “கரைவீழ்ந்த கரையானோம்! கரையோ ரத்துக்
    காய்ந்தகொடிச் சருகானோம்! கடலின் வெள்ளைத்
    திரையொதுக்கும் அழுக்கானோம்! வெட்டப் பட்ட
    திரைப்படத்துச் சுருளானோம்! வாழ்க்கை யென்னும்
    வரைபடத்துக் குறையானோம்! சமுதா யத்தின்
    வழித்தடத்தின் கல்லானோம்! வயிற்றுக் கேங்கி
    அரசியலின் உணவானோம்! வஞ்ச கத்தின்
    அரிச்சுவடி அறியாத அகதி யானோம்!”

    என்னுமாறு அமைந்த உருவகச் சங்கிலிகள், உடைந்து உருக்குலைந்து போன சமுதாயத்தின் உண்மை வடிவத்தை உணர்த்துவனவாம். வெற்றசைகளால் நிரம்பி வழியும் எண்சீர் விருத்த உலகில், செறிவும் ஆழமும் கொண்ட சீர்களால் நெய்யப்பட்ட கவிதைகளைத் தந்திருக்கிறார் இராசன்.

    வாழ்வியல் திட்டம்

    இந்த நூலைப் பற்றி எவ்வளவோ எழுதலாம். கருத்தில் கட்டுரையின் அளவு. ‘வாடும் பயிருக்கு வசந்தம் காட்டவே’ என்னும் தலைப்பில் எழுதியிருக்கும் சிந்து நெஞ்சைக் கொள்ளை கொள்ளுவதற்குப் பதிலாகப் பதைக்க வைக்கிறது. சமுதாய அவலங்களைக் கவிதைச் சுவை குறையாமல் நிரலாகப் பதிவு செய்திருக்கும் பாங்கு!

    “புதியதோர் பாரதம் பிறந்திட வேணும்
    புறப்படு! புறப்படு தோழனே! அதில்
    புதுமைகள் பூக்கணும் புதுத்தேன் சுரக்கணும்
    புன்மைகள் போக்கணும் தோழனே!”

    என்று குறிக்கோளை முன்னெடுக்கும் கவிஞன் இருக்கிற சமுதாயத்தின் இரங்கத்தக்க நிலையை நிரல்படுத்துகிறான்.

    “திறமையின் ஊற்று தூங்கிக் கிடக்குது
    தட்டி எழுப்பு தோழனே”

    “கைகளில் ஆயிரம் வீமனின் வலிமை
    காத்துக் கிடக்குது தோழனே!”

    “கருத்தினில் பளிங்கெனத் தெளிவுமிருக் கையில்
    காலம் கடப்பதேன் தோழனே!”

    எனப் பட்டியலிட்டு ஒவ்வொரு தனிமனிதனும் விடியலைக் காண விரையச் சொல்கிறார். இவற்றையெல்லாம் தனிமனிதனை நோக்கிக் கூறப்பட்டவையாகக் கருதினாலும்,

    “மூட வழக்கங்களை முற்றிலும் அழிக்கணும்’’

    “வாடும் பயிருக்கு வசந்தம் காட்டணும்’

    ‘வெட்ட வெளிகளும் பட்டு விரிக்கணும்’

    ‘புள்ளிகள் வைத்துநீ கோலம் போடணும்’

    என்பன போன்றவற்றைச் சமுதாய அழுக்குகளாகக் கருதி அவற்றைக் களையும் முயற்சியை முன்னெடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறார்.

    களிம்பில்லாத செம்பா?

    இந்தக் கன்னித் தொகுப்பில் எல்லாமே சுவைத்தக்க கவிதைகளா? குறைகளே இல்லையா? எனச் சிலர் வினவக்கூடும். அது உண்மையே. அவை அறியாமையாலும் அவசரத்தாலும் அமைந்தவை. திட்டமிட்ட முரண்பாடுகள் அல்ல. சான்றாகப் புதுக்கவிதை என்ற பெயரில் எழுதப்பட்டிருக்கும் சில சொல் எம்பல்களை உரைநடையாகக் கூடக் கருத முடியாது. புதுக்கவிதைப் பரிமாணம்  பற்றிய தெளிவின்மையே இதற்குக் காரணம். மரபுக்கவிதைக்கு வடிவம் வெளியிலிருந்து வருவது. இலக்கணத்தை வைத்துக் கொண்டு எழுதுவது. அதனையே நெறியன்று என்பவன் நான். எழுதப்படுவதையே தனக்கான வடிவமாக ஆக்கிக் கொள்வது புதுக்கவிதை. புதுக்கவிதைக்கான வடிவம் உள்ளேயே அமைவது. மரபுக்கான உணர்ச்சிகள் வேறு. புதுக்கவிதைக்கான உணர்ச்சிகள் வேறு. பொருண்மைகளும் வேறு. புதுக்கவிதையில் தம்பி வசந்தராசனின் இன்றைய வளர்ச்சி இதனின் வேறுபட்டது. இன்றைக்கு இவற்றை அவர் எழுதியிருந்தால் இந்தப் பத்திக்கு வேலையிருந்திருக்காது. ஆனால் இதுவும் சேர்ந்துதான் அவர். அம்மணத்தோடு சேர்ந்ததுதானே ஆடை வாழ்வு?

    நிறைவுரை

    தம்பி வசந்தராசன் முகநூலில் எழுதி வரும் கவிதைகளைப் படித்துச் சுவைத்து அச்சுவையைப் பரிமாறி வருகிறேன். அவருடைய கவி மூலத்தை அறிதல் வேண்டும் என்னும் துடிப்பால் அவர் எழுதிய இந்தக் கன்னித் தொகுப்பை நான் கண்டேன். எனக்குத் தெரிந்தவரை கன்னித் தொகுப்பில் காதல் பற்றிப் பாடாத அல்லது மிகக் குறைந்த அளவில் பாடிய கவிஞர்களுள் தம்பி வசந்தராசனுக்கு இடம் உண்டு. இலக்கியத்திற்கும் வாழ்க்கைக்கும் தொடர்பு உண்டு. அன்றைக்கு வாழ்க்கையில் காதல் நிலைத்ததால் இலக்கியத்தில் காதல் மணந்தது. இன்றைக்கு நிலைமை தலைகீழ். காதல் ஒரு செயற்கையாகிவிட்டது. செயற்கையைப் பாடி என்ன பயன்? அலங்கோல வாழ்க்கையில் அகம் எடுபடாது, படைப்பில் குறையிருப்பது போலவே பார்வையிலும் குறையிருக்கலாம்.  அதிலும் என்னுடையது வயோதிகப் பார்வை. சமுதாயத்தின் மீது தான் கொண்ட அக்கறையைத் தனக்குத் தெரிந்த கவிதைத் தொழிலால்  வெளிப்படுத்தியிருக்கிறார். செய்யும் தொழிலே தெய்வம்!.

    (தொடரும்….)

    Share
  • குறளின் கதிர்களாய்…(412)

    குறளின் கதிர்களாய்…(412)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்…(412)

    பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்
    கறனொன்றோ வான்ற வொழுக்கு.

    -திருக்குறள் -148(பிறனில் விழையாமை)

    புதுக் கவிதையில்…

    மற்றவர் மனைவியை
    மனதாலும் விரும்பாத
    மாண்பே ஆடவர்க்கு
    மதிப்புறு பேராண்மை..

    அதுவே
    ஆன்றோர்க்குரிய
    அறமாம் சிறப்பே,
    அவர்க்கு நல்லொழுக்கமும்
    அதுவே…!

    குறும்பாவில்…

    அடுத்தவர் மனைவி மீது
    ஆசைப்படாததே பேராண்மை, ஆன்றோர்கதுவே அறம்
    அதுவே யவர்க்கு நல்லொழுக்கமுமாம்…!

    மரபுக் கவிதையில்…

    மற்றவர் மனைவியை அடைந்திடவே
    மனதிலும் நினைத்திடா மாண்புடையோர்
    பெற்றிடும் பேரதே பேராண்மை
    பெருமையா லுயர்ந்த பேருண்மை,
    மற்றிதைப் பெற்றிடும் சான்றோர்க்கே
    மாண்புடைப் பேரற மிதுவாமே,
    பெற்றவர் தமக்கது நல்லொழுக்கப்
    பேறது தன்னையும் தந்திடுமே…!

    லிமரைக்கூ…

    பிறர்மனையாளை விரும்பா மனமே
    பேராண்மை, இதையுடைய சான்றோர்க் கிதுவே
    நல்லற நல்லொழுக்க இனமே…!

    கிராமிய பாணியில்…

    ஆசப்படாத ஆசப்படாத
    மனசால கூட ஆசப்படாத,
    அடுத்தவன் மனைவிமீது
    ஆசப்படாத ஆசப்படாத..

    ஆண்மயெல்லாம் ஆண்மயில்ல
    அடுத்தவன் மனைவிமீது
    ஆசப்படாததே
    ஆண்மயிலெல்லாம் பேராண்ம,
    அது இருக்கிற நல்லவங்களுக்கு
    அதுவே
    நல்லறம் மட்டுமில்ல
    நல்லொழுக்கமும் ஆவுமே..

    அதால
    ஆசப்படாத ஆசப்படாத
    மனசால கூட ஆசப்படாத,
    அடுத்தவன் மனைவிமீது
    ஆசப்படாத ஆசப்படாத…!

    Share
  • முருங்கை நூடுல்ஸ்

    முருங்கை நூடுல்ஸ்

    இன்று நம் வீட்டில், முருங்கை நூடுல்ஸ். ஹேமமாலினி வழங்கும் செய்முறை இதோ.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • மாடு மேய்க்கும் கண்ணே | ஊத்துக்காடு வேங்கட சுப்பையர்

    மாடு மேய்க்கும் கண்ணே | ஊத்துக்காடு வேங்கட சுப்பையர்

    ஊத்துக்காடு வேங்கட சுப்பையர் இயற்றிய ‘மாடு மேய்க்கும் கண்ணே’ என்ற புகழ்பெற்ற பாடலை ஸ்ரீ நவநீத கிருஷ்ண பக்த பஜனை சபைக் குழுவினர் பாடக் கேளுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • (Peer Reviewed) தொல்காப்பிய அகனைந்திணையில் முதற்பொருளும் கருப்பொருளும்

    (Peer Reviewed) தொல்காப்பிய அகனைந்திணையில் முதற்பொருளும் கருப்பொருளும்

    புலவர் முனைவர் கோ.சுந்தராம்பாள் 
    உதவிப்பேராசிரியர், மொழிகள் துறை 
    பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம்
    பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழகம்,
    வல்லம், தஞ்சை மாவட்டம் – 613403.                                                                                             
    மின்னஞ்சல் முகவரி egowrisss@gmail.com

    முன்னுரை

    தமிழின் தலையிலக்கணமாகிய தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள் என்னும் மூன்று அதிகாரங்களையும் அதிகாரத்திற்கு ஒன்பது இயல்களையும் கொண்டு விளங்குகிறது. மொழியின் எழுத்திலக்கணத்தை எழுத்ததிகாரத்திலும், சொல் அமையும் பாங்கினைச் சொல்லதிகாரத்திலும் விளக்கிக் காட்டிய தொல்காப்பியம், சொற்களால் அமையும் இலக்கியம் பற்றிய கருத்துக்களைப் பொருளதிகாரத்தில் ஆராய்கிறது. இப்பொருளதிகாரத்தைத் தமிழர்தம் வாழ்வியலோடு தொடர்புபடுத்திச் சிந்திக்கும் அறிஞர்களும் உளர். இலக்கணமாயினும் இலக்கியமாயினும் தாம் தோன்றுகின்ற சமுதாயத்தின் தாக்கம் இல்லாது அமைதல் அரிது என்பது உண்மையாயினும் தொல்காப்பியப் பொருளதிகாரத்தைக் கிரேக்க அறிஞர் அரிஸ்டாட்டிலின் ‘கவிதையியல்’(Poetics) என்னும் நூலோடு ஒப்புவைத்து ஆராய்வதே பொருத்தமானதாகும்.

    பொருளதிகார அமைப்பு

    தொல்காப்பியப் பொருளதிகாரம் அகத்திணையியல், புறத்திணையியல், களவியல், கற்பியல், பொருளியல், மெய்ப்பாட்டியல், உவமவியல், செய்யுளியல், மரபியல் என்னும் ஒன்பது இயல்களைத் தனது உள்ளடக்கமாகக் கொண்டு திகழ்கிறது. அகத்திணை மாந்தர்களின் கூற்றுப்பகுதியில் அமையும் உவமப்பாங்கை ஆராய்வதே உவமவியல் என்னும் கருதுகோள் ஏற்கப்படின், அகத்திணையியல், களவியல், கற்பியல், பொருளியல், உவமவியல் ஆகிய ஐந்தும் அகப்பொருள் பற்றியும், புறத்திணையியல் புறம் பற்றியும் ஏனைய மூன்றும்  இருதிணைக்கண் செய்யுள் முறைமை பற்றியும் ஆராய்வதாகக் கொள்ள முடியும். அகத்திணைக்கண் சுட்டப்பட்டுள்ள முதற்பொருள், கருப்பொருள் ஆகியன பற்றி இக்கட்டுரை சுருக்கமாக ஆராய்கிறது.

    அகத்திணை உள்ளடக்கம்

    பொருளதிகாரத்தின் முதல் இயலான அகத்திணையியல் அகத்திணைகள் ஏழு என்னும் வரையறையோடு தொடங்குகிறது. அகவொழுக்க மரபும், தாயர், தோழி, கண்டோர், தலைவன் முதலியோர்தம் கூற்றுப்பகுதிகளும் நடுவண் ஐந்திணைகளின் உரிப்பொருள் அமைதியும் கூறப்படுகின்றன. உள்ளுறை உவமம், ஏனை உவமம், தமக்கென நிலம், பொழுது இல்லாத கைக்கிளை, பெருந்திணை முதலியவற்றின் இயல்புகளும் சுட்டப்படுகின்றன. இதனைத் தொடர்ந்து அகப்பொருள் இலக்கியங்கள் கலிப்பா, பரிபாடல் ஆகிய இருவகைப்பாக்களில் மட்டும் பாடப்பெறும் என்பதும் கூறப்படுகிறது. அகத்துறைப் பாடல்களில் தலைமக்களின் இயற்பெயர் சுட்டுவது மரபன்று என்னும் உயரிய இலக்கியக் கொள்கை வற்புறுத்தப்படுகிறது. இத்தனைச் சிறப்புக்களும் கொண்ட இந்த அகத்திணையியல், தலைவியின் கூற்றுப்பகுதியைக் கூறாதது சிந்தனைக்குரியது.

    திணைக்குத் துணையாகும் முதலும், கருவும்

    ‘திணை’என்னும் சொல் முதற்கண் ஒழுக்கத்தைக் குறித்துப் பின் ஆகுபெயராய் அவ்வொழுக்கம் நிகழும் நிலத்தினைக் குறித்தது. ‘நெய்தற்கண் குறிஞ்சி மயங்கியது’என்பதில் ‘குறிஞ்சி’என்பது ஒழுக்கம். ‘காட்டுக்கோழி குறிஞ்சிக்குரியது’ என்பதில் ‘குறிஞ்சி’என்பது நிலம். திணையாகிய ஒழுக்கத்தைப் பாடுவதே புலனெறி வழக்கம். இப்புலனெறி வழக்கம் சிறக்க வேண்டுமாயின் முதற்பொருளின் பின்புல அமைதி மிகவும் வேண்டப்படுவதாகும். அப்பின்புலம் முதற்பொருளாலும் கருப்பொருளாலும் அமையும். சான்றாகப், பாலையாகிய பிரிவைப் பாடும் ஒருசூழலில், அப்பிரிவொழுக்கத்தின் பின்புலம் மனத்துன்பத்தை மிகுவிப்பதாக இருத்தல் வேண்டும். காலையிலோ, மாலையிலோ, இரவிலோ பாடுவதாக அமைந்தால் அப்பாடல் சிறக்காது., மேலும் தலைவனைப் பிரிந்து வாடும் தலைவியின் வேதனையை அருவி, சாரல், மயில், குயில் என்னும் பின்புலத்திலும் விளக்க முடியாது., விளக்கினால் செய்யுள் சிறக்காது. பட்டமரம்,, சுடுமணல், பறக்கும் பருந்து என்னும் பின்புலத்தில் நண்பகல் பொழுதில் விளக்கினால் பாட்டின் சிறப்பும், தலைவிபடும் பிரிவுத்துன்பமும் கற்பார் உள்ளத்தில் ஆழப்பதியும். எனவே முதற்பொருள் என்பதும் கருப்பொருள் என்பதும் ஒழுக்கமாகிய திணை பற்றிய பாடல் சிறக்க தொல்காப்பியம் அமைத்துத் தந்த ‘அமைப்பு’(Settings) என்பதை நினைவில் இருத்துதல் வேண்டும். இன்றைய திரைப்படம் வரை இந்த மரபு பின்பற்றப்படுகிறது என்பதும் ஈண்டுச் சுட்டத்தகுந்தது.

    முதற்பொருள் அமைப்பில் தொல்காப்பியத்தின் அறிவியல் பார்வை

    இயங்குதிணையும் நிலைத்திணையுமாகிய உலகத்துப் பொருள்கள் தோன்றுவதற்குக் காரணமும் அவற்றிற்கு ஆதாரமுமாக விளங்குவது புவியும் அப்புவியின் சுழற்சியால் நிகழும் கூறுபாடுகளுமாகும். புவியின் இயற்கையமைப்பை ஒட்டி மலை சார்ந்த நிலம், காடு சார்ந்த நிலம், ஆறுகள் பரந்து செல்லும் சமநிலம், கடற்கரையைச் சார்ந்த மணற் பரப்புடைய நிலம் எனப் பிரித்து நிலத்தை நானிலம் என வழங்குவர். இதனைத் தொல்காப்பியம் ‘காடுறை உலகம், மைவரை உலகம், தீம்புனல் உலகம், பெருமணல் உலகம்’ என வழங்கும். புவி ஞாயிற்றினின்றும் தோன்றியது. அப்புவி கதிரவனின் ஈர்ப்பாற்றலுக்கு உட்பட்டு, அதன் ஒளியையும் ஏனைய நாள்மீன்களின் ஒளியையும் பெற்றுச் சுழன்று வருவதுடன், தனக்குத் தானே சுழன்று வரும் இயல்பினை உடையது. புவியின் இருவேறு சுழற்சிகளால் ஏற்படுவனவே பெரும்பொழுதும் சிறுபொழுதும் ஆகும். பெரும்பொழுதினை வழக்கில் ‘பருவம்’என்பர். இவ்வாறு ஞாயிற்றினால் அமைந்த புவியையும் அப்புவியின் சுழற்சியினால் தோன்றும் இருவகைப் பொழுதுகளையும்  ‘முதற்பொருள்’எனச் சுட்டுவது நேரியதே ஆகும்.

    “முதல் எனப்படுவ நிலம்பொழு திரண்டின்
    இயல்பென மொழிப இயல்புணர்ந் தோரே” 1

    என்பது தொல்காப்பியம்.

    ஐந்திணைகளும் முதற்பொருள்களும்

    கைக்கிளை முதலாகப் பெருந்திணை இறுதியாகச் சொல்லப்பட்ட அகத்திணைகள் ஏழனுள் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய ஐந்திணைகளுக்கு நிலம் வகுக்க வேண்டிய தொல்காப்பியம் பாலை தவிர்த்த ஏனைய நான்கு திணைகளுக்கு மட்டுமே நிலத்தை வரையறை செய்திருக்கிறது.  முதற்பொருள்கள் இரண்டனுள் தலையாயதான நிலத்தினை,

    “மாயோன் மேய காடுறை உலகமும்
    சேயோன் மேய மைவரை உலகமும்
    வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
    வருணன் மேய பெருமணல் உலகமும்
    முல்லை, குறிஞ்சி, மருதம்,நெய்தல்எனச்
    சொல்லிய முறையால் சொல்லவும் படுமே”2

    என்னும் நூற்பாவில் சுட்டிச்செல்கிறார் தொல்காப்பியர். ‘காடுறை உலகம்’ முல்லை எனவும், ‘மைவரை உலகம்’குறிஞ்சி எனவும், ‘தீம்புனல் உலகம்’மருதம் எனவும், ‘பெருமணல் உலகம்’நெய்தல் எனவும் பெயர்பெறும். இந்நூற்பாவில் அகன் ஐந்திணைகளில் ஒன்றாகிய பாலைக்குத் தனித்த நிலம் ஒதுக்கப்படவில்லை. தட்பவெப்பநிலை காரணமாக அமையும் நானிலங்களின் திரிபே பாலையாகும் என்பதே இதற்குக் காரணம்.

    ஐந்திணைப் பிரிவும் இருவகைப் பொழுதுகளும்

    ஏனைய கோள்களைப் புவி சுற்றுவதாலும், புவி தன்னைத்தானே சுற்றிக்கொள்வதாலும் உண்டாகும் பருவ மாறுதல்களும் பொழுது மாறுதல்களும் முறையே பெரும்பொழுது, சிறுபொழுது எனத் தொல்காப்பியத்தால் வகுத்துரைக்கப்படுகின்றன. இதில் ஆண்டின் உட்பகுதியைப் பெரும்பொழுது என்றும் நாளின் உட்பகுதியைச் சிறுபொழுது என்றும் கூறலாம்.முல்லையாகிய இருத்தல் ஒழுக்கத்திற்குக் கார்காலமாகிய பெரும்பொழுதையும் அக்கார்காலத்துள் மாலையைச் சிறுபொழுதாகவும் தொல்காப்பியம் உரித்தாக்குகிறது.  இதனைக்,

    “காரும் மாலையும் முல்லை”3

    என்னும் நூற்பாவில் கூறும் தொல்காப்பியம், குறிஞ்சியாகிய புணர்தல் ஒழுக்கத்திற்குப் பெரும்பொழுதில் கார்காலமும் முன்பனிக்காலமும், சிறுபொழுதில் மாலைக்காலமும் உரித்தாகக் கூறுகிறது. இதனைக்,

    “குறிஞ்சி கூதிர் யாமம் என்மனார் புலவர்”4

    “பனியெதிர் பருவமும் உரித்தென மொழிப”5

    என்னும் நூற்பாவில் சுட்டுகிறார்.

    “வைகறை விடியல் மருதம்”6

    என்னும் நூற்பாவினால், மருதமாகிய ஊடல் ஒழுக்கத்திற்கு ஆறு பெரும்பொழுதுகளையும் குறிப்பாக உரிமையாக்கி,, அப்பெரும்பொழுதுகளில் அமையும் வைகறை, விடியல் ஆகிய இருவகைச் சிறுபொழுதுகளையும் உரிமையாக்கினார். நெய்தல் திணைக்கு,

    “எற்பாடு நெய்தலாதல் மெய்பெறத் தோன்றும்”7

    என விதி செய்த தொல்காப்பியர், மருதத்தைப் போலவே அறுவகைப் பெரும்பொழுதுகளையும் நெய்தலுக்கு உரிமையாக்கிச்,  சிறுபொழுதுகளில்  ‘எற்பாடு’என்பதையும் உரிமையாக்கினார்.

    நடுவுநிலைத் திணையும் முதற்பொருள் அமைதியும்

    பாலையை ‘நடுவுநிலைத் திணை’ என்பார் தொல்காப்பியர். நடுவுநிலைத் திணை என்றால் ‘ஏனைய திணைகளுக்கு நடுவே இருக்கும் திணை’என்பது பொருளன்று. ஏனைய திணைகளின் நிலங்கள் திரிந்த நிலையையே தனக்கு நிலமாகப் பயன்படுத்திக் கொள்வதாலும், ஏனைய நால்வகை ஒழுக்கங்களுக்கிடையே தனக்குரிய பிரிவை நிகழ்த்திக் கொள்வதுமாகிய சிறப்பு நிலையே ‘நடுவுநிலை’எனப்படும். எதனையும் சாராது இருப்பது பற்றற்ற நிலை. எல்லாவற்றோடும் சார்ந்திருப்பதே நடுவு நிலை. எனவே தான் தொல்காப்பியம் ‘நடுத்திணை’என்னாது ‘நடுவுநிலைத் திணை’எனச் சுட்டுகிறது. நான்கு திணைகளோடும் பிரிவால் உறவு பாராட்டுவது பாலைத் திணையாதலின் அது நடுவுநிலைத் திணையே. நிலமாகிய முதற்பொருள் இல்லையாயினும் பாலைக்கென பிரிவாகிய உரிப்பொருள் உண்டு. அப்பிரிவொழுக்கம் நிகழ வேண்டுமாயின் பொழுது கூறியே ஆதல் வேண்டும். எனவேதான் தொல்காப்பியம்,

    “நடுவுநிலைத் திணையே நண்பகல் வேனிலோடு
    முடிவுநிலை மருங்கின் முன்னிய நெறித்தே”8

    “பின்பனி தானும் உரித்தென மொழிப”9

    என்னும் நூற்பாக்களினால் பெரும்பொழுதுகளில் இளவேனில், முதுவேனில் ஆகிய இருவகை வேனிற்காலத்தையும், பின்பனிக் காலத்தையும், சிறுபொழுதுகளில் நண்பகலையும் அதற்கு உரிமையாக்குகிறது. பாலையொழுக்கம் ஏனைய நான்கு திணைகளுள் நிகழ்ந்தாலும், அவ்வொழுக்கம் பாடுபொருளாகிற பொழுது, பாலையின் பின்புலத்தையே கொண்டிருக்க வேண்டும் என்பதே இந்நூற்பாவின் சாரமாகும். குறிஞ்சியில் நிகழும் பாலையொழுக்கத்தைக் குறிஞ்சிப் பின்புலம் கொண்டு அமைத்தல் கூடாது என்பது கருத்து.

    இருபொழுதும் மயங்கினால் தான் திணையா?

    திணைகளுக்குரிய பொழுதுகளை வரையறுக்கும் பொழுது பெரும்பொழுது, சிறுபொழுது ஆகிய இரண்டனையும் இணைத்தே தொல்காப்பியம் கூறுவதைக் காணலாம். ‘காரும் மாலையும் முல்லைக்குரிய’என்பது போலத் திணை பற்றிய புலனெறி வழக்கத்தில் இவ்விருபொழுதுகளும் இவ்வாறு இணைந்துதான் கூறப்பட வேண்டுமா? என்னும் ஐயம் நிகழ்கிறது. ஏதேனும் ஒருபொழுது மட்டும் இருந்தால் வழுவாய் விடுமோ? என்னும் ஐயத்தைத் தொல்காப்பியம் பின்வரும் நூற்பாவினால் அகற்றுகிறது.

    “இருவகைப் பிரிவும் நிலைபெறத் தோன்றலும்
    உரிய தாகும் என்மனார் புலவர்”10

    என்பது தொல்காப்பியம். இதில், ‘இருவகைப் பொழுதும் தோன்றலும் உரியதாகும்’என்பதனால் ‘தோன்றாமையும் உண்டு’என்பது பெறப்படும். ‘தோன்றலும்’என்பதில் உம்மை எதிர்மறைப் பொருளதாகும்.

    அகத்திணை மயக்கம்

    குறிப்பிட்ட நிலத்தில் குறிப்பிட்ட ஒழுக்கந்தான் நிகழும் என்பது நடைமுறையாகாது. குறிஞ்சியில் புணர்தல் மட்டுமே நிகழும் என்பது பொருத்தமாகாது., நெய்தலில் இரங்கலைத் தவிர ஏனைய ஒழுக்கங்கங்கள் நிகழாது என்பது கற்பனை. எல்லா ஒழுக்கங்களும் எல்லா நிலத்திலும் நிகழும். அதாவது ஒருநிலத்துக்கென்று ஓதப்பட்ட ஒழுக்கம் மற்றொரு நிலத்திலும் நிகழ வாய்ப்புண்டு. இதனைத் தான் ‘மயக்கம்’என்னும் சொல்லால் பொருளதிகாரம் குறிக்கிறது. சொல்லதிகாரத்தில் சுட்டப்படும் வேற்றுமை மயக்கம் போன்றது இது. தொல்காப்பியம்,

    “திணைமயக் குறுதலும் கடிநிலை இலவே
    நிலனொருங்கு மயங்குதல் இல்லென மொழிப
    புலன்நன்கு உணர்ந்த புலமை யோரே”11

    என்னும் நூற்பாவில் இது பற்றி ஆராய்கிறது. ஒருநிலத்துக்குரிய ஒழுக்கம் மற்றொரு நிலத்தில் மயங்குவது உண்டு., அவ்வாறு மயங்குதல் கூடாது என்னும் வரையறை இல்லை., ஆனால் ஒருநிலம் இன்னொரு நிலத்தில் மயங்குதல் கூடாது. ‘ஒருநிலத்திற்குரிய மாந்தர் மற்றொரு நிலத்துக்குச் செல்லுங்கால், தத்தமக்குரிய ஒழுக்கத்தைப் பின்பற்றுவதால் ஒழுக்கமாகிய திணை மயங்கலாம் எனவும், ஒருநிலம் அசைந்து மற்றொரு நிலத்துக்குள் செல்லாதாதலால் நிலம் மயக்கம் ஏற்படையது அன்று’எனவும் தொல்காப்பியம் கூறியிருப்பது நுண்ணிய சிந்தனையாகும். நிலம், பொழுது, அவற்றின் மயக்கம் என்னும் முதற்பொருள் பற்றிய கருத்துக்களை அகத்திணையியலில் பதினெட்டு நூற்பாக்களில் விரித்துரைத்த தொல்காப்பியம்,’ முதலெனப் படுவது ஆயிரு வகைத்தே’என மீண்டும் எடுத்துரைத்து முதற்பொருள் ‘நிலம், பொழுது என இரண்டே’என வரையறுப்பதையும் ஈண்டுச் சுட்டலாம்.

    ஐந்திணைகளும் கருப்பொருள்களும்

    முதல், கரு, உரி என்பதே முறையாயினும் தொல்காப்பியப் பொருளதிகாரத்தில் இந்த நெறி பின்பற்றப்பட்டிருப்பதாகத் தெரியவில்லை. முதல், உரி, கரு என்றே அது இலக்கணம் கூறிச் செல்கிறது. அந்த வகையில் கருப்பொருள் என்பது ஒருதிணைக்குரிய தெய்வம், திணைமக்களுக்குரிய உணவு, அந்நிலத்தில் திரியும் விலங்கு, அந்நிலத்தில் விளையும் மரம், பறக்கின்ற பறவை, மக்களுடைய தொழில், அந்நில மக்கள் அடிக்கின்ற பறை, இசைக்கின்ற யாழ் இவற்றின் விரிவு ஆகியவற்றைக் குறிக்கும் என விளக்குகிறது.

    “தெய்வம் உணாவே மாமரம் புள்பறை
    செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ
    அவ்வகை பிறவும் கருவென மொழிப”12

    என்பது கருப்பொருள் பற்றிய தொல்காப்பிய நூற்பாவாகும். இந்த நூற்பாவில் ‘பிற’என்னும் பயன்பாட்டால், ஒருநிலத்துக்குரிய பூவும், ஊரும், நீரும் கருப்பொருளாகத் தழுவிக் கொள்ளப்படும். கருப்பொருள்களில் ஒன்றாகிய தெய்வத்தோடு சேர்த்தே தொல்காப்பியம் முதற்பொருளாகிய நிலத்தை அறிமுகம் செய்கிறது என்பதும் பொதுவாக இன்னின்னவை கருப்பொருள் என்றுதான் இந்நூற்பா உரைக்கிறதேயன்றி, இந்த நிலத்துக்கு இன்னவை கருப்பொருள் என விதந்தோதவில்லை என்பதும் அவை சான்றோர் நெறியும் மரபும் பற்றிக் கொள்ளப்படும் என்பதும் ஈண்டுச் சுட்டப்படுகின்றன.

    திணைகளும் கருப்பொருள்களும்

    குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என வகுக்கப்பட்ட நிலங்களும் அவற்றிற்குரிய கருப்பொருள்களும் சான்றோர் நெறி பற்றிப் பின்வருமாறு பட்டியலிடப்படுகின்றன.

    குறிஞ்சித் திணையின் கருப்பொருள்கள்

    தெய்வம்                            –              சேயோன் (முருகன்)
    உயர்ந்தோர்                       –              சிலம்பன்
    தாழ்ந்தோர்                   –              குறவன்
    பூ                                            –              குறிஞ்சிப்பூ
    மரம்                                     –              வேங்கை
    பறவை                                               –              மயில்
    விலங்கு                             –              புலி, யானை
    உணவு                                –              மூங்கில் அரிசி
    பறை                                    –              தொண்டகப் பறை
    யாழ்                                     –              குறிஞ்சி யாழ்
    பண்                                      –              குறிஞ்சிப் பண்
    ஊர்                                  –              சிறுகுடி
    நீர்                                   –              அருவிநீர், சுனைநீர்
    தொழில்                             –              வேட்டையாடுதல்

    முல்லைத் திணையின் கருப்பொருள்கள்

    தெய்வம்                     –              மாயோன் (திருமால்)
    உயர்ந்தோர்                       –              நாடன்
    தாழ்ந்தோர்                   –              இடையர்
    பூ                                            –              முல்லைப்பூ
    மரம்                                     –              பிடவம்
    பறவை                                               –              காட்டுக்கோழி
    விலங்கு                             –              முயல்
    உணவு                                 –              சாமை
    பறை                                    –              ஏறுகோட்பறை
    யாழ்                                     –              முல்லை யாழ்
    பண்                                      –              முல்லைப் பண்
    ஊர்                                        –              பாடி
    நீர்                                   –              காட்டாறு
    தொழில்                             –              ஆனிரை மேய்த்தல்

    மருதத் திணையின் கருப்பொருள்கள்

    தெய்வம்                            –              வேந்தன்
    உயர்ந்தோர்                       –              ஊரன்
    தாழ்ந்தோர்                   –              உழவன்
    பூ                                    –              தாமரைப்பூ
    மரம்                                     –              மருதமரம்
    பறவை                                               –              அன்னம்
    விலங்கு                             –              எருமை
    உணவு                                –              செந்நெல்
    பறை                                    –              மணமுழவு
    யாழ்                                     –              மருத யாழ்
    பண்                                      –              மருதப் பண்
    ஊர்                                        –              ஊர்
    நீர்                                          –              ஆற்றுநீர்
    தொழில்                             –              விதைத்தல்

    நெய்தல் திணையின் கருப்பொருள்கள்

    தெய்வம்                            –              வருணன்
    உயர்ந்தோர்                       –              புலம்பன்
    தாழ்ந்தோர்                        –              பரதவர்
    பூ                                    –              தாழம்பூ
    மரம்                                     –              விளரியாழ்
    பறவை                                               –              அன்றில்
    விலங்கு                             –              பகடு, சுறா
    உணவு                                –              மீன்
    பறை                                    –              மீன்கோட்பறை
    யாழ்                                     –              நெய்தல் யாழ்
    பண்                                      –              நெய்தற் பண்
    ஊர்                                        –              பாக்கம்
    நீர்                                   –              கடல்நீர்
    தொழில்                             –              உப்பு விளைத்தல்

    பாலைத் திணையின் கருப்பொருள்கள்

    தெய்வம்                            –              கொற்றவை
    உயர்ந்தோர்                       –              விடலை
    தாழ்ந்தோர்                        –              எயினர்
    பூ                                            –              குராஅம்பூ
    மரம்                                     –              ஓமை
    பறவை                                               –              கழுகு, பருந்து
    விலங்கு                             –              வலியிழந்த யானை
    உணவு                                –              கொள்ளையடிப்பன
    பறை                                    –              சூறைகோட்பறை
    யாழ்                                     –              பாலை யாழ்
    பண்                                      –              பாலைப் பண்
    ஊர்                                        –              பறந்தலை
    நீர்                                   –              அறுநீர்க் கூவல்
    தொழில்                             –              கொள்ளையடிப்பன

    முடிவுரை

    மேற்கண்ட கட்டுரைப் பகுதியில் இதுகாறும் சுட்டப்பட்டிருக்கும் கருத்துக்களின் அடிப்படையில், தொல்காப்பியத்தின் முதற்பொருள் பாகுபாடு அறிவியலுக்கு இசைந்ததே என்பதும், ஒருதிணைக்குரிய நிலமும் அந்நிலத்திற்குரிய பெரும்பொழுதும் சிறுபொழுதும் முதற்பொருள் என்பதும், பாலைக்கெனத் தனித்த நிலத்தைத் தொல்காப்பியம் சுட்டவில்லை என்பதும் ஆனால் பாலைத்திணையாகிய ஒழுக்கத்திற்குரிய இருவகைப் பொழுதுகளையும் தொல்காப்பியம் சுட்டத் தவறவில்லை என்பதும் புலனெறி வழக்கத்தில் இருவகைப் பொழுதுகளுள் ஒன்றிருந்தாலும் இழுக்கில்லை என்பதும், திணையாகிய ஒழுக்கம் மயங்கலாம் என்பதும், எந்நிலையிலும் நிலங்கள் இரண்டு தம்முள் மயங்கல் கூடா என்பதும், கருப்பொருளாகிய தெய்வத்தை முன்னிறுத்தியே முதற்பொருளாகிய நிலத்தைத் தொல்காப்பியம் அறிமுகம் செய்கிறது என்பதும் பொதுவாகக் கருப்பொருள்களைச் சுட்டிச்செல்கிறதேயன்றிக் குறிப்பிட்டு இன்ன திணைக்கு இன்னின்னவை கருப்பொருள் எனக் கூறவில்லை என்பதும் கருப்பொருள்கள் மரபுவழியாகவே கூறப்பட்டு வருகின்றன என்பதும் ஓரளவு விளக்கப்பட்டன.

    சான்றெண் விளக்கம்

    1. தொல்காப்பியர் தொல்காப்பியம் (பொருள்)   நூற்பா எண். 4
    2. மேலது                                                நூற்பா எண். 5
    3. மேலது நூற்பா எண். 6
    4. மேலது நூற்பா எண். 7
    5. மேலது நூற்பா எண். 8
    6. மேலது நூற்பா எண். 9
    7. மேலது நூற்பா எண். 10
    8. மேலது நூற்பா எண். 11
    9. மேலது நூற்பா எண். 12
    10. மேலது நூற்பா எண். 13
    11. மேலது நூற்பா எண். 14
    12. மேலது நூற்பா எண். 20

    துணை நூற்பட்டியல்

    தொல்காப்பியர், தொல்காப்பியம்
    திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்
    சென்னை – 600001. முதற்பதிப்பு – 1940


    ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):

    தொல்காப்பிய அகனைந்திணையில் முதற்பொருளும் கருப்பொருளும் என்னும் தலைப்பில் அமைந்த இக்கட்டுரையைப் பலமுறை பயின்று கட்டுரையின் அனைத்துக் கூறுகளையும் உள்வாங்கி ‘வல்லமை’ முன்மதிப்பீட்டு விதிகளைக் முழுமையாகக் கருத்திற்கொண்டு செய்யப்படும் முன் மதிப்பீடு

    1. பொருளுணர் அச்சம் பொறுமையின்மை முதலியன காரணமாக  இன்றைக்கும் பெறவேண்டிய கவனத்தைப் பெறாமல் இருக்கும் நமது தமிழின் தலைச்செல்வம் தொல்காப்பியத்தை மீளாய்வு செய்து அறிமுகக் கட்டுரை செய்திருக்கும் கட்டுரையாளருக்குப் பாராட்டு!
    1. கட்டுரையின் உள்ளடக்கத்தை முன்னுரையில் அளவாகவும் செறிவாகவும் கூறியிருப்பது ஆய்வாளரின் கட்டுரை வன்மையைக் காட்டுகிறது. .
    1. அகத்திணை உள்ளடக்கத்தை ஆய்வுக் கண்ணோட்டத்தோடு பதிவு செய்திருக்கும் ஆய்வாளர். இத்தனைச் சிறப்புக்களும் கொண்ட இந்த அகத்திணையியல், தலைவியின் கூற்றுப்பகுதியைக் கூறாதது சிந்தனைக்குரியது.’ என துணிந்து கூறுவது அவர்தம் ஆய்வில் அவர் கொண்டிருக்கும் உறுதியையும் நம்பிக்கையையும்  பறைசாற்றுகிறது.
    1. “முதற்பொருள் என்பதும் கருப்பொருள் என்பதும் ஒழுக்கமாகிய திணை பற்றிய பாடல் சிறக்க தொல்காப்பியம் அமைத்துத் தந்த‘அமைப்பு’(Settings) என்பதை நினைவில் இருத்துதல் வேண்டும்.” என்னும் கருத்தியல் தொல்காப்பியத்தை இலக்கியத்திற்கான இலக்கண நூல் என்பதை உரக்கச் சொல்கிறது.
    1. நிலம் பொழுதாகிய இரண்டின் பகுப்பிலும் அறிவியல் உணர்வு மேலோங்கி நிற்கிறது என்பதை ஆய்வாளர் தகுந்த சான்றுகளுடனும் எடுத்துக்காட்டுகளுடனும் தந்திருப்பது போற்றுதற்குரிய்து.
    1. பாலையை நடுவுநிலைத் திணை என்பதற்கான காரணத்தை விளக்க வந்த கட்டுரையாளர் எதனையும் சாராது இருப்பது பற்றற்ற நிலை. எல்லாவற்றோடும் சார்ந்திருப்பதே நடுவு நிலை. என வரையறை செய்து எல்லாத் திணைகளிலும் தனது பிரிவொழுக்கத்தை நிகழ்த்திக் ;கொள்ளும் பேராற்றல் வாய்ந்த திணை பாலைத்திணை என்பதை அழகுற விளக்கியிருக்கிறார்.
    1. ‘குறிஞ்சியில் நிகழும் பாலையொழுக்கத்தைக் குறிஞ்சிப் பின்புலம் கொண்டு அமைத்தல் கூடாது’ என்றும் பாலைநிலப் பின்புலத்தைக் கொண்டே அமைக்க வேண்டும் என்றும் கட்டுரையாளர் எச்சரிப்பது தொல்காப்பியத்தைச் சரியான தளத்தில் வைத்துப் புரிந்து கொண்டிருக்கும் அவர்தம் புலமைச் சதுரப்பாட்டை உணர்த்துகிறது.
    1. இருபொழுதும் அமைந்தால்தான் திணையா? ஒரு பொழுது மட்டும் சுட்டினால் திணையாகாதா? என்னும் சிந்தனையை முன்னெடுக்கும் ஆய்வாளர்  “இருவகைப் பிரிவும் நிலைபெறத் தோன்றலும் உரிய தாகும் என்மனார் புலவர்”10 என்னும் நூற்பாவில் அமைந்த உம்மையை எதிர்மறை உம்மையாக் கொள்ளும் நச்சினார்க்கினியர் கருத்தினை வழிமொழிந்து தனது கருத்துக்கு வலிமையூட்டுவது பொருத்தமான ஆய்வு நெறியே!
    1. முதற்பொருள் கருப்பொருள் பட்டியலைத் தந்திருக்கும் கட்டுரையாளர், முன்னுரை மற்றும் முடிவுரை ஆகியவற்றை மாட்டேற்றாக அமைத்து ஒரு சிறிய அரிய ஆய்வுக் கட்டுரையையும் செம்மையாக வடிவமைக்க இயலும் என்பதை உறுதி செய்திருக்கிறார்.


     

    Share
  • ஈழம் தந்த பிள்ளைத்தமிழ் நூல்கள் – 1

    ஈழம் தந்த பிள்ளைத்தமிழ் நூல்கள் – 1

    மீனாட்சி பாலகணேஷ்

    அமுதத் தமிழ்மொழியில் சிற்றிலக்கிய வகைகள் நாள்தோறும் வளர்ந்து பெருகிக் கொண்டிருக்கின்றன. பிரபந்தங்கள் எனப்படும் இவை 96 என்று கூறப்பட்டாலும், பல நிகண்டுகளையும் பிரபந்தங்களையும் இணைத்துப் பார்க்கும்பொழுதில் கிட்டத்தட்ட 196 இலக்கிய வகைகள் காணப்படுவதாக பேராசிரியர் ச. வே. சுப்பிரமணியம் ஆராய்ந்து வெளியிட்டுள்ளார்.

    கலம்பகம், உலா, பிள்ளைத்தமிழ், மாலை இவற்றோடு அம்மானை, ஊசல், வள்ளை, பந்தடி, கும்மி, சாழல், அலங்காரம், வண்ணம், தாலாட்டு, திருவுந்தியார் என இன்னும் பலவற்றையும் குறிப்பிடலாம்.

    ‘குழவி மருங்கினும் கிழவதாகும்’ எனத் தொல்காப்பியம் கூறுவதற்கிணங்க ‘சிறுபிள்ளைகளும் பாட்டுடைத்தலைவர்களாகக் கொள்ளப்படுவர்’ என்பதனால், பிள்ளைத்தமிழ் எனப்படும் பெருமை வாய்ந்த இலக்கியம் மட்டும் நெஞ்சையள்ளும் வகையில் விரிந்து பரந்து எண்களில் பலவாகப் பல்கிப் பெருகி வளர்ந்தும், இன்னும் வளர்ந்து கொண்டும் உள்ளது. காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, எனப் பொதுவான பருவங்களையும், ஆண்பாலுக்கு சிற்றில், சிறுபறை, சிறுதேர் எனும் பருவங்களையும், பெண்பாலுக்கு அம்மானை, நீராடல், ஊசல் எனும் பருவங்களையும் கொண்டு பத்துப் பருவங்களால் அமைவது பிள்ளைத்தமிழ். பிள்ளையின் (குழந்தையின்) வளர்ச்சியைப் பத்து அல்லது அதற்கும் மேற்பட்ட பருவங்களால் போற்றுவது இந்தப் பிரபந்தம்.

    இவ்வகை இலக்கியம் வேறு எந்த மொழியிலும் இல்லாததனால் இது பிள்ளைத்தமிழ் எனும் அருமையான பெயர்கொண்டு, தமிழ் எனும் பொதுப்பெயரே அடையெடுத்துச் சிறப்புப் பெயராயிற்று என்று கதிரகாம பிள்ளைத்தமிழை இயற்றிய சிவன் கருணாலய பாண்டியப்புலவர் கூறுவார்.

    தமிழகத்தைப்போல் ஈழத்திலும் 17, 18ம் பொது நூற்றாண்டுகளில் பல பிள்ளைத்தமிழ் நூல்கள் எழுந்தன. ஈழநாடும் பிள்ளைத்தமிழ் இலக்கியத்திற்குக் குறிப்பிடத்தக்க பங்களிப்புச் செய்துள்ளது. ஈழத்தில் ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்தில் வாழ்ந்த இணுவில் சி. சின்னத்தம்பிப் புலவர் பாடிய இணுவில் சிவகாமியம்மை பிள்ளைத்தமிழ் எனும் நூலே காலத்தால் பழமையானதென அறியப்படுகிறது. ஆனால் இந்நூல் இன்னும் பார்வைக்குக் கிடைக்கவில்லை.

    ஈழத்தில் விநாயகர், முருகன், அம்பிகை ஆகிய தெய்வங்கள் பேரில் பல பிள்ளைத்தமிழ் நூல்கள் இயற்றப்பட்டுள்ளன. இவை யாவும் தமிழின் பலவிதமான நயங்களிலும் சிறந்து விளங்குவன. இக்கட்டுரையின் நோக்கம் இவற்றைப்பற்றி அறிந்து மகிழ்வதற்காகவே!

    விநாயகர் மீது மட்டும் நான்கு பிள்ளைத்தமிழ் நூல்கள் பார்க்கக் கிடைத்துள்ளன. தமிழ்நாட்டில் இயற்றப்பெற்று நாமறிந்த விநாயகர் மீதான பிள்ளைத்தமிழ் நூல்கள் அரும்பாத்தை வேதவிநாயகர்  பிள்ளைத்தமிழ் (இயற்றியவர் பெயர் அறியவில்லை),  கலைசைச் செங்கழுநீர் விநாயகர் பிள்ளைத்தமிழ் (சிவஞான யோகிகள்) ஆகிய இரண்டாகும். இவ்விரண்டும் எவ்வாறு கவிநயமும் பொருள் நயமும் மிகுந்து சிறந்து விளங்குகின்றவோ அவ்வாறே நாம் காணப்போகும் ஈழத்துப் பிள்ளைத்தமிழ் நூல்களும் இனிய, எளிய தமிழில் கற்பனைவளம் செறிந்து காணப்படுகின்றன.

    எந்தவொரு செயலைத் தொடங்கும்போதும் அது இடையூறுகளின்றி நிறைவேற வேண்டி சிவபிரானின் மூத்த மகனான விநாயகப்பெருமானை முதலில் வணங்கிவிட்டே தொடங்குவது வழக்கம். ஆகவே நமது வழிபாடுகளிலும்  அனைத்துச் செயல்களிலும் விநாயகர் முதலிடம் வகிக்கிறார். விநாயகரைப் பற்றி, அவர் தோன்றிய வரலாறு, கதைகள் பற்றி விரிவான விநாயகர் புராணம் உள்ளது. அவ்வையாரும் விநாயகர் அகவல் பாடியுள்ளார். தமிழில் எழுந்த எந்தச் சைவசமய நூலும் விநாயகர் வழிபாட்டுடன்தான் ஆரம்பிக்கின்றது. விநாயகர் எனும் பிள்ளையாருக்குப் பல சிறப்புகள் உள்ளன.

    இத்தகைய சிறப்பு வாய்ந்த பிள்ளையார் மீது ஈழத்திலிருந்து நான்கு பிள்ளைத்தமிழ் நூல்கள் காணக் கிடைத்துள்ளன. இன்னும் கூட இருக்கலாம். காலங்கனிந்து வரும்போது கிடைக்கலாம். இப்போது கிடைத்தவற்றைப் பற்றிப் பார்க்கலாம்.

                                       ——————————————

    1. மட்டுவில் மருதடி தான்தோன்றி வீரகத்தி விநாயகர் பிள்ளைத்தமிழ்

    இப்பிள்ளைத்தமிழ் நூல் மட்டுவில் நா. நல்லதம்பி அவர்களால் இயற்றப்பட்டது. 2014-ல் முதல்பதிப்பு வெளியிடப்பட்டது. கோயில் வரலாற்றைப் பார்த்துவிட்டுப் பின் நூலைப் பார்ப்போம்.

    நாவாலியூர் சோமசுந்தரப்புலவர் என்பவர் மருதடி  விநாயகர் பதிகம் எனும் நூலை இயற்றியுள்ளர். இதனைப் பதிப்பித்த அவர்களின் திருமகளாம் திருமதி வை. மங்கையர்க்கரசி என்பவர் இவ்விநாயகர் கோவிலின் வரலாற்றை எனது பேராசிரியர் முனைவர் திரு. கோ. ந. முத்துக்குமாரசுவாமி அவர்களிடம் கூறியுள்ளார். இதனை முனைவர் ஐயாவின் அருட்சொற்களிலேயே காண்போமா?

    விநாயகக் கடவுள் “அருவமு முருவுமாகி யனாதியாய்ப் பலவா யொன்றாய்ப் பிரமமாய் நின்றசோதிப் பிழம்பு” ஆய் இருப்பார். ஆயினும், அடியார்களுக்கு அருள் சுரக்கும்படி பூமியிலே பல இடங்களிலும் தமது அருட்டிரு மேனியைக் காட்டி வெளிப்படுவார். அங்ஙனம் வெளிப்பட்டருளிய விடங்களில் அன்பர்கள் அவருடைய அருண்மேனித் திருக்குறியை நிறுத்தித் திருக்கோவில் சமைத்து வழிபட்டுவருவர். அங்ஙனம் வழிபட்டுவரும் திருக்கோவில்களில் மருதடியும் ஒன்று.

    இஃது இலங்கைக்கு மணிமுடியாக விளங்கும் யாழ்ப்பாண நாட்டிலே வண்டுபடு தாமரைக் குண்டுநீர்க் குளமும், கொண்டல் கண்படுக்கும் தண்டலை வளனும், காய்குலைத் தெங்கும் தீஞ்சுலைப் பலவும், நெடுஞ்சினை மாவும் தீஞ்சுலைக் கதலியும், கன்னலுஞ் செந்நெற் கழனியும் நிறைந்த அருந்தமிழ் மருதச் செழுந்திணை நலனுமுள, வானினனம் மாறாத மானியம்பதியிலே யாழ்ப்பாணத்துக்குப் போகும் தெருவின் முடக்கில் உள்ள முக்கோணத்திடர் என்னும் இடத்தில் தேனினம் முரலச் செழுந்தேன் பிலிற்ற வானளவோங்கும் ஒரு மருதமரத்தின்கீழ் அமைந்துள்ளது. இது மிகவும் பழையது. யாழ்ப்பாண நாட்டை ஆண்ட தமிழரசர் காலத்திற்கு முன் தோன்றியது என்று பெரியோர் கூறுகின்றனர்; அது எப்போது தோன்றியதென்று அறுதியிட்டுக் கூற முடியாது.

    ஆதியில் அது அடியார் பொங்கல் செய்து பூசிக்கும் இடமாகவே இருந்தது. பின்பு வேளாள மரபில் உதித்த சிவபூசையாளரால் பூசிக்கப்பட்டு வந்தது. இப்பொழுது அந்தணரால் பூசை செய்யப்பட்டு வருகின்றது. இதற்குத் தென்மேற்குப் புறமாகப் பிள்ளையார் குளம் என்னும் பெயருடைய ஓர் திருக்குளமுண்டு. இங்கே ஒருநாளும் குறையாது பொங்கல் வணக்கம் நடைபெற்று வருகின்றது. திருக்கோவில் கிழக்கும் மேற்கும் வாசலும் கோபுரமுமுடையது. வாயில் மேற்கு வாயில். சுவாமிக்கு வீரகத்தி விநாயகர் என்ற பெயருண்டு. தாடொழு மடியவர் நாடொறுங் குழுமி, இங்கிதமொடுபுரி பொங்கல் மண்டபமும், வாய்த்திடு பங்குனி வருநாள் விழவினிற் தீர்த்த நின்றாடும் தீர்த்த மண்டபமும், அணித்தேர் நிறுத்து மணித்தேர் நிலையமும், விழுமிய சிறப்பிற் கழுநீர்க் கூவலும், உண்ணீருதவும் நன்னீர்க்கிணறும், அடியவவர் குழுமும் தெளிபுனற் குளனும், மாவும் மருதும் வன்னி மந்தாரையும் பாமலி செந்நெற் பழன நற்பரப்பும் வீதியிலுடையதாய் இப்பொழுது விளங்குகின்றது. நாட்பூசையும் திருவிழாக்களும் சிறப்பாக நடைபெறுகின்றன.

    விழாக்காலங்களில் அடியவர்கள் திருவீதியில் உடம்பினாலுருளுதல், காவடி எடுத்தல் முதலாகிய தொண்டுகளைச் செய்து விரதமிருந்து வழிபாடாற்றி வருவர். ஆண்டுதோறும் பங்குனித் திங்கள் பதினைந்தாநாள் கொடி ஏறிச் சித்திரைத்திங்கள் முதலாம் நாளில் தேர்த்திருவிழாவும், இரண்டாநாள் தீர்த்தத் திருவிழாவும் நடந்து வருகின்றன. இவையிரண்டின் காட்சி வெகுமாட்சியானது. ஆதிநாட்டொடங்கி அடியார்கள் வேண்டியதை வேண்டிய வண்ணங் கொடுக்கும் அற்புதமான தலமிது வென்று அன்பர்கள் கூறுகின்றார்கள்.‘ (மருதடி விநாயகர் பதிகம்- தாரகை மின்னிதழ்)

    இந்தப் பிள்ளையார் மீதான பிள்ளைத்தமிழ் நூலும் அருமையாகத் தொடங்குகிறது. பிள்ளைத்தமிழ் இலக்கணப்படி காப்புப் பருவத்து முதற்பாடல் திருமால் மீதே அமையும். பின்பு, சிவபிரான், உமையம்மை, ஏனைய தெய்வங்கள் என விளித்துப் பாடப்படுவர். அப்போது அவர்களின் சிறப்புகளும் பெருமைகளும் கூறப்படும். இந்த பிள்ளைத்தமிழ் நூலிலோ வினாயகப் பெருமானின் பெருமைகளைக் கூறி, அத்தகைய பெரியோனைப் பாடுதற்கு விக்கினங்கள் வராமல் காத்தருள் எனப் புலவர் வேண்டுவது ஒரு மாறுபாடான உத்தி. இந்நூலின் காப்புப் பருவத்துப் பாடல்கள் அனைத்துமே பெரும்பாலும் இவ்வண்ணமாகவே உள்ளன.

    செங்கீரைப்பருவத்தின் முதற்பாடல் அழகானது.

                            அம்மையும் அப்பனும் உலகென உணர்ந்து
                                அங்கவர்க் காணாது, அங்கம்புரண்டு
                       வெம்பியும் விசும்பிற் தேடியுங் காணார்
                                விம்மியும் கண்ணீர் மல்கியும்
                       தம்பியோ மயிலேறித் தாவிப் பறந்தான்
                                தாயும் தந்தையும் உலகென
                       நம்பிய மட்டுவில் மருதடி விநாயகன்
                                நலமுடன் செங்கீரை யாடியருளே.

    என ஒரு இனிய தத்துவத்தை உள்ளடக்கிய பாடலிது.

    பின்னும் ‘கைத்தல நிறைகனி’ எனும் திருப்புகழ் வரியையும், அவ்வையாரின் ‘பாலும் தெளிதேனும்’ என்ற பாடல் வரியையும் உள்ளடக்கி யாத்த செய்யுட்களையும் இப்பருவத்தே காணலாம்.

    தாலப்பருவத்துப் பாடலொன்று:

                            தலைபத்தோ னிராவணன் தாய்வணங்க இமயகிரி
                                தனையசைக்க உமையாள் கரம்பற்றுந்
                       தலைமகனே!….. ” எனத் தொடங்குகிறது.

    இராவணன் கயிலையைப் பெயர்க்க அதனை அசைத்தபோது உமையம்மை அஞ்சினாள். சிவபிரானைத் தழுவிக் கொண்டாள். தாய்க்குத் தலைமகனான விநாயகப் பெருமானும் அவளுடைய கரத்தைப் பற்றி ஆறுதலளித்தார் என்பது இனிய கற்பனை! விநாயகப்பெருமான் ஒரு கொம்பன், இரு கையன், மும்மதத்தன், நால்வாயன், ஐங்கரத்தன், ஆனைமுகன் என விளங்குகிறான் என்கிறார் சப்பணிப் பருவப் பாடலொன்றில்.

    வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம்,’ எனவும், திருவாக்கும் செய்கருமம் கைகூடும் செஞ்சொற் பெருவாக்கும் பீடும் பெருக்கும் என்ற பழம் தோத்திரப் பாடல்களின் வரிகளையும் தம் கவிதையில் எடுத்தாண்டுள்ளார் இப்புலவனார்.

    அம்புலிப்பருவத்தை இப்புலவர் எடுத்தாண்டுள்ளது பிள்ளைத்தமிழ் நூல்களினின்றும் வேறுபட்டுள்ளது. வழக்கமாக சாம, தான, பேத, தண்டம் ஆகிய் உபாயங்களால் அம்புலியை குழந்தையோடு விளையாட அழைப்பர். “காசினியிற் பிள்ளைக்கவிக் கம்புலி புலியாம்,” என்ற சொற்றொடரே இதனாற்றான் எழுந்தது எனலாம். இந்நூலில் பிள்ளையாரின் பெருமைகளைக் கூறி, அத்தகைய விநாயகனுடன் ஆடவா அம்புலியே! எனக் கூறுவதாகவே பத்துப் பாடல்களும் அமைந்துள்ளன. எடுத்துக்காட்டாக,

                            கண்டவர் வியப்புறும் வகைஅருணன் ஒளியால்
                                கவினார் ஒளியைப் பெற்றிடும்
                       பண்பினால் நின்னி யொத்திடும் வேழமுகன்
                                மட்டுவிற் பதியினில் மருதமர நிழலமர்
    வெண்டரளக் கொம்பன், வேழமுகத் தெம்பிரான்
                                விநாயகனோ டம்புலீ! ஆடவாவே
                       அண்டரும் பழமறையும் ஓலமிட நின்றஎம்
    ஆனைமுக னொடம்புலீ! ஆடவாவே,‘ என ஒரு பாடல்.

    அடுத்துக் காணும் சிற்றிற்பருவத்திலும், மிகுந்த விருப்பினில் முயன்று கட்டிய அச்சிறு மங்கையர் சிற்றில் சிதையேலே,’ என்றும், தேனிகர் மொழிபகர் அழகியர் செய்சிறு சீர்பெறு சிற்றில் சிதையேலே,’ எனவும், வேண்டுவதாகவே அமைந்துள்ளன.

    சிறுபறை, சிறுதேர்ப் பருவங்களின் பாடல்களும் இவ்வாறே விநாயகர் புகழையே முன்னிலைப்படுத்தி இய்ற்றப்பட்டுள்ளன.

    2. இணுவில் செகராச பிள்ளையார் பிள்ளைத்தமிழ்

    இணுவில் பரராச சேகரப் பிள்ளையார் கோயில் ஈழத்தில் ஜாஃப்னா விலிருந்து 4 மைல்கள் தள்ளி இருக்கும் இணுவில் எனும் இடத்தில் உள்ளது. சுமார் 600- 700 ஆண்டுகள் பழமையான இக்கோயில் ஜாஃப்னா அரசுடன் தொடர்பு வாய்ந்ததாகும். முக்கிய தெய்வம் பரராச சேகரப் பிள்ளையார். 14-15 பொது நூற்றாண்டுகளில் ஜாஃப்னாவை ஆண்ட அரசனான சிங்கைப் பரராஜசேகரனால் இக்கோவில் கட்டப்பட்டது. தான் எக்காரியத்தைத் தொடங்கு முன்பும் இக்கோவிலில் வழிபட்டுச் செல்வது அவனுடைய வழக்கம். இதனை மடத்து வாசல் பிள்ளையார் கோவில் எனவும் அழைப்பார்கள்.

    இந்தப் பிள்ளையார் மீதான பிள்ளைத்தமிழ் நூலானது ச. வே. பஞ்சாட்சரம் எனும் புலவரால் 1988ல் இயற்றப்பெற்றதாகும். இந்தப் பிள்ளையார் இவருடைய குலதெய்வமாவார். தன்மீது பிள்ளைத்தமிழ் பாடுமாறு பிள்ளையாரே இவருடைய கனவில் வந்து ஆணையிட்டார்; அதனால் இதனைப் பாடினார் என அறிகிறோம்.

    காப்புப் பருவத்தில் வழக்கம்போலப் பல கடவுளர்களையும் அழைத்துக் குழந்தையைக் காக்க என வேண்டுகிறார் புலவர்.

    செங்கீரைப் பருவத்துப் பாடல்களுள் ஒன்று  ஈழத்துக் கோயில் விசேடங்களின்போது நடக்கும் பலவகையான காவடியாட்டங்களையும், பிரதட்சிணம், தீமிதிப்பு ஆகிய வேண்டுதல்களை விளக்குகிறது. இப்படிப் பலவகையான வேண்டுதல்களை நிறைவேற்றி பக்தர்கள் கொண்டாடும் தந்தமுகனே! தம் தலையிற் குட்டிக்கொண்டு உன்னை வழிபடுவதல்லது உன் தலையிலேயே குட்ட வரும் (கோவில் சொத்தைக் கொள்ளையடிப்பவர்கள் எனப் பொருள் கொள்ளலாமா?) மனிதர்களும், மண், பெண், பொன் ஆகியவற்றால் மதிகெட்டவருமாகியோரின் ஆட்டத்தைக் கண்டு அவர்களை நெறிப்படுத்துபவனே! செங்கீரையாடுக! என வேண்டுவதாக அமைந்த பாடல். பொதுவாக அனைத்துப் பாடல்களுமே இத்தொனியிலேயே அமைந்து இயற்றியவரின் மனக்கிலேசத்தையும் தாபத்தையும் வெளிப்படுத்துகின்றன. அதைத் தணிவித்து அருள்பவன் செகராசப்பிள்ளையார் எனுங்கருத்து வெளிப்படுகின்றது.

    பறக்குங் காவடி, துள்ளாட்டம்
                                பல்குங் காவடி, பாலமுதம்
                       நிறைக்குங் காவடி, பிரதட்டை
                                நிகழ்த்துங் காவடி தணல்பொங்கும்
                       தெறுந்தீ மிதிப்பு முதற்பத்தி
                                சிறக்கும் வைராக் கியர்ஏத்தும்
                       கறந்த பால்வெண் தந்தமுகா!
                                கையால் தம்தலை தமில்குட்ட
                       மறந்துன் தலையிற் குட்டவரும்
                                மண்,பெண், பொன்னில் குலைந்தவர்கள்
                        திறங்காண் செகரா சக்குருவே!
                                சிறுதளி இணுவை மாமன்னா!
                       முறம்பயில் செவிகள் மொய்த்தலைய
                                முக்கண்! ஆடாய் செங்கீரை!
                       வறங்கெட மாரி வான்பொழிய
                                மகிழ்ந்தெழுந் தாடாய் செங்கீரை!

    இன்னும் ஒரு பாடலைக் காண்போம். சொன்னயமும் கவிதை நயமும் மிகுந்த ஒரு தாலப் பருவப்பாடல்:

    முப்புரமெரிக்கச் சென்ற சிவபிரான் பிள்ளையாரின் அருளை முதலில் பெற்றே சென்றான்; செகராசப் பெருமானே! பிரணவமாகிய உன்னையீன்ற பிடிபோலும் உமையன்னை உன்னைப் பூந்தொட்டிலில் வளர்த்தித் தாலாட்ட நீ கேட்டுச் சிரித்தபடி உறங்குவாயாக எனும் அழகான பாடல்:

                            மூன்று புரமெரிக்க முக்கண்ணன் போங்காலை
                                ஆன்ற மகனாமுன் அருள்பெற்றான் என்பார்கள்!
                       ஊன்றி உனையெண்ணும் உத்தமர்நெஞ் செல்லாமே
                                தோன்றி இனிமைபல தூண்டச் செகராசக்
                       கோன்றன் கோவில் குடிகொண் டமர்வோனே!
                                ஈன்றாள் பிரண் வமென்னும் பிடியானை
                       போன்றாள்- உமையாள்- பூந்தொட்டி லாட்டவெழுந்
                                தேன்பா யிசைகேட்டிச் சிரித்துறங்கு தாலேலோ!

    (வளரும்) 

    Share
  • இலங்கையில் பாரதிய ஜனதா கட்சி

    இலங்கையில் பாரதிய ஜனதா கட்சி

    இந்தியாவின் ஆளும் கட்சியாக, மாபெரும் சக்தியுடன் திகழ்கிறது, பாரதிய ஜனதா கட்சி. இந்நிலையில் இலங்கையிலும் பாரதிய ஜனதா கட்சி தொடங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் சிவசேனா என்ற பெயரில் கட்சி இருக்க, அதே பெயரில் இலங்கையில் சிவசேனை என்ற பெயரில் ஒரு கட்சியை மறவன்புலவு சச்சிதானந்தன் தொடங்கியுள்ளார். இலங்கை பா.ஜ.க. குறித்தும் சங்கி என்ற வசை குறித்தும் அவருடன் ஓர் உரையாடல்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • திருவல்லிக்கேணி கண்டேனே | திருமங்கை ஆழ்வார்

    திருவல்லிக்கேணி கண்டேனே | திருமங்கை ஆழ்வார்

    திருமங்கை ஆழ்வார் அருளிய ‘திருவல்லிக்கேணிக் கண்டேனே!’ என்ற பாடலை ஸ்ரீ நவநீத கிருஷ்ண பக்த பஜனை சபைக் குழுவினர் பாடக் கேளுங்கள். நாலாயிர திவ்யப் பிரபந்தத்தின் அமுதத் தமிழில் திளையுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • பங்குச் சந்தைகள் மேலும் சரியுமா?

    பங்குச் சந்தைகள் மேலும் சரியுமா?

    பங்குச் சந்தைகள் இறங்குமுகமாக உள்ளன. அந்நிய முதலீடுகள் பெரிய அளவில் வெளியேறியுள்ளன. பணவீக்கமோ உச்சத்தில் உள்ளது. பொருளாதார மந்தநிலை வருமோ என்ற அச்சம் உள்ளது. இந்தப் பின்னணியில் பங்குச் சந்தைகள் மேலும் சரியுமா? இத்தகைய சூழலில் முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்? அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர் ராமகிருஷ்ணன் நாயக் வழங்கும் ஆலோசனைகள் இதோ. பார்த்துப் பயன்பெறுங்கள். நண்பர்களுடன் பகிருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • கிளாசிக் கொசுவலை – ஒரு மதிப்பாய்வு

    கிளாசிக் கொசுவலை – ஒரு மதிப்பாய்வு

    அண்மையில் நாங்கள் வாங்கிய கொசுவலை, இரண்டு சிக்கல்களைத் தீர்க்கிறது. இது குறித்து எங்கள் அனுபவத்துடன் கூடிய மதிப்பாய்வு.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share