Blog

  • என்னத்தைச் சொல்ல! – 2

    இன்னம்பூரான்

    images (2)
    இன்றைய செய்தி: பாரதியார் பல்கலைக்கழகத்தில் விதி மீறி 108 கல்லூரிகளுக்குக் கொடுக்கப்பட்ட சலுகைகளை ஆடிட்டர் ஜெனரல் குறை கண்ட அறிக்கை ஆகஸ்ட் 12, 2014 அன்று தமிழ்நாட்டு சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டதை பற்றி. ‘ஸ்டடி செண்டர்’ என்ற அமைப்புகளை பல்கலைக்கழகம் ஆய்வுக்கு உட்படுத்தவேயில்லை என்று அங்கு தகவல். மேதகு துணைவேந்தர் திரு.ஜான் பிச்சை அவர்களோ எழுத்து மூலம் அறிக்கை வரட்டும் என்று காத்திருப்பதாக சொல்கிறார் என்றும் இதழ்களில் செய்தி. இது விந்தையிலும் விந்தை அல்லவோ! 150 வருடங்களுக்கு மேலாக ஆடிட் நடைமுறை ஒரே மாதிரி தான். முதலில் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு வினா எழுப்பி விடை நாடுவார்கள். அவற்றை எல்லாம் சீர்தூக்கி அலசியபிறகு ஆடிட் அறிக்கையின் தீர்வுகளை துணைவேந்தரிடம் சமர்ப்பிவித்து, பேச்சு நடத்தியபின் தான், அது எடிட் செய்யப்படும். பதில்களும், விளக்கங்களும் அதில் அடக்கம். ஏற்புடையவைகளை ஒத்துக்கொள்வார்கள். சம்மதமில்லையெனில் காரணம் கூறுவார்கள். இது இப்படியிருக்க, அறிக்கை தாக்கல் செய்தபின் மேதகு துணைவேந்தர் எதை எதிர்பார்க்கிறார்? நடந்த விதிமீறல்களை அவர் அறியாதது உண்டோ?

    இதில் என்ன விந்தை என்றா கேட்கிறீர்கள்? ஒரு உதாரணம். மன்னன் அமைச்சரிடம் ‘மாதம் மும்மாரி பெய்கிறதா?’ என்று வினவ அமைச்சரும் ‘ஆமாஞ்சாமி’ என்று சத்தியபிரமாணம் செய்தாராம். மன்னனுக்குப் பாவம் அந்தப்புரத்திலிருந்து வானம் தென்படவில்லை போல் இருக்கிறது, துணை வேந்தர் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையை கண்டு கொள்ளாமல், வரப்போகாத எழுத்து ஆவணம் கேட்பது. ஆகமொத்தம் ;‘என்னத்தை சொல்ல?’

    -#-
    சித்திரத்துக்கு நன்றி:
    https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcT6T2IeJUQdoeUvaaqChH1jqEoNZgJ8yOHtHOJWxnj6eLUfeqSI

    Share
  • பாஞ்சாலியின் புலம்பல்!

    ஒரு அரிசோனன்

    நான்தான் பாஞ்சால நாட்டின் இளவரசியான பாஞ்சாலி; துருபத மன்னனின் மகளான திரௌபதி; கருப்பாக இருப்பதாலும், கார்மேக வண்ணனான கண்ணன் உடன்பிறப்பாக ஏற்றுக்கொண்டதாலும், கிருஷ்ணை என்றும் அழைக்கப்பட்டவள்.

    பெண்மையைப் போற்றும் பெருந்தகையாளர்களே! நீங்கள் ஏன் என்பக்கம் பேசுவதில்லை?

    ஆணுக்கொரு நீதி, பெண்ணுக்கொரு நீதியா என்று பேசும் உங்கள் கூற்றைப் பல்லாயிரம்ஆண்டுகளுக்கு முன்னரே ஏற்று, ஐந்து கணவர்களைக் கொண்டேனே, அதை ஏன் நீங்கள் பாராட்டிப் பேசுவதில்லை? ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை மணந்த பல மாமன்னர்களைப் புகழும் நீங்கள், என்னை மட்டும் விலைமகளைப் போல ஏன் பார்க்கிறீர்கள்?

    பல்லாயிரக்கான வீரர்களைப் போரில் புறம்கண்டு, அவர்தம் தலைகளை ஒருவன் சீவிஎறிந்தால் பாராட்டும் நீங்கள், அதே மாவீரன் காரணமின்றி ஒருவர் தலையைச் சீவினால், அதைக் கொலை என்றுதானே கூறுவீர்கள்! ஆக, அங்கு வெவ்வேறு அளவுகோலைத்தானே எடுக்கிறீர்கள்!

    ஆனால், சிலபோதுமட்டும் — புலி பசுவைத்தின்னும், ஆனால் பசு ஒருபோதும் புலியைத் தின்னாது என்னும் இயற்கைச் சுபாவத்தைக் காணாது – புலியா, பசுவா என்று பார்க்காது, ஒரே தராசில் ஏற்றுகிறீர்களே!

    பெண்ணடிமை செய்தான் இராமன் என்று  அவனைத் தூற்றுகிறீர்களே, “கற்பென்று வைத்தால் அதை ஆணுக்கும் முன்பு வைப்போம்!” என்ற கொள்கையுடன், சீதை ஒருத்தியை மட்டும் மனதில் நினைத்து வாழ்ந்தானே — மக்களின் கருத்துக்காக, மன்னனின் முதற்கடமை மக்களுக்கே என்று, தன்மனைவியைத் துறந்து, தன் மகிழ்ச்சியைத் துறந்தானே – அவனது அந்தப் பேராண்மையை ஏன் பாராட்ட மறுக்கிறீர்கள்? பிறன்மனைவியை மயக்கி, அவளைத் தன் கணவனிடமிருந்து பிரித்து, அவளுக்காக நாட்டையே துறப்பவன் சிறந்தவன், நாட்டுக்காக, மனைவியைத் துறக்கும் மாவீரன் பெண்ணடிமை செய்பவனா?  சொந்த நலனுக்காக நாட்டை விடவேண்டும் என்றால் நாடுநலம் பெறுவது எப்படி?

    ஆண் மட்டும் தான் பிடிக்காத பெண்ணை விலக்கி வைக்க வேண்டுமா, பிடிக்காவிட்டால் பெண்ணும் அவ்வாறு செய்வதில் என்னதவறு என்று பெண்ணுக்குத் திருமணமுறிவில் முதலிடம் வைக்க முயலுகிறீர்களே – ஒருபெண், ஒருவர்பின் ஒருவராக, ஒன்றுக்கு மேற்பட்ட கணவருடன் வாழலாம் என்ற கருத்தை ஆதரிக்கிறீர்களே, ஐவரோடு வாழ்ந்தாலும் அவர்களுக்கு மட்டுமே என் மனதில் இடம் கொடுத்திருந்தேனே, யாரையும் தூக்கி எறியவில்லையே, அதை ஏன் போற்றமாட்டேன் என்கிறீர்கள்?

    ஏன் என் விஷயத்தில் மட்டும் இருபத்திஒன்றாம் நூற்றாண்டின் அளவுகோலைக்கூடத் தூக்கி எறிந்துவிடுகிறீர்கள்?

    ஆண் ஆதிக்கத்தையே, அவர்களின் அதிகாரத்தையே ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே புரட்டிப்போட்ட புதுமைப்பெண்ணாக உங்கள் கண்களுக்கு நான் தெரியாமல்போனது ஏனோ?

    மகாபாரதத்தையே மாற்றி எழுதும் முயற்சியில் — என் கணவன் குடாகேசி (அருச்சுனன்) யிடம் நான்கு முறை தோற்று ஓடியவனும், போர்க்களத்தைவிட்டுப் பதினான்கு முறை ஓடியவனுமான கர்ணனை உயர்த்தியும், என்னவர் அருச்சுனனைத் தாழ்த்தியும் பேசுகிறீர்களே, பலவாறு ஊடகங்களிலும், தொலைக்காட்சிகளும் காட்டுகிறீர்களே, இதுதான் சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் கோடாமல் இருக்கவேண்டிய சான்றோர்களான உங்களுக்கு அணியா(கலனா)?

    எவருக்கும் தன்பக்கத்துவாதத்தை எடுத்துச்சொல்ல அனுமதிஉண்டு. என்னைப் பொருத்தமட்டில் என்வாதத்தையே காதுறாமல், நீங்கள் நடுவராகவும், நீதியாளராகவும் ஆகிவிடுவது ஏனோ?

    என் தரப்பு வாதத்தைத்தான் கேளுங்களேன்! என் புலம்பலைச் சற்றுதான் செவிமடுங்களேன்…

    எந்தையும் தாயும் கூடிக் குலவி, மகிழ்ந்து இருந்து பிறந்த பிறப்பல்ல என் பிறப்பு. தான் அவமதித்தனால் தன்னைஅவமதித்த துரோணாச்சாரியாரை வஞ்சம்தீர்க்க – தன்னைத் தேர்க்காலில் கட்டி இழுத்துவந்த அருச்சுனனுக்கே தன் மகளை மனைவியாக்கி, அவனின் உதவியுடன், தன் மகனால் மரணம் வரவேண்டும் என்று – கடும் தவமிருந்து, எரியும் நெருப்பில் பிறந்த பிறப்பு என் பிறப்பு!

    paanjaliPicture1வஞ்சம் தீர்க்கும் வனிதையாகத் தானே இப்பூவுலகுக்கு நான் வரவழைக்கப்பட்டேன்! வளர்க்கப்பட்டேன்! ஆசைக்கொரு பெண் வேண்டும், அவளது அழகைக் கண்டு உள்ளம் பூரிக்கவேண்டும், அவள் பூங்கொடியாக வளர்ந்து பூப்பெய்துவதைக் கொண்டாட வேண்டும், அவளைப் பொன்னாலும், மணியாலும் அலங்கரித்து, மனதுக்கேற்ற மணாளனுக்கு மணமுடிக்க வேண்டும் என்று என்னை என் தாய் ஈன்றெடுக்கவில்லையே! தீக்கடவுளல்லவா பாஞ்சாலப் பேரரசனின் (துருபத மன்னனின்) தவத்தை மெச்சி என்னைப் பரிசாக அளித்தான்! இதில் பாசமேது? அன்பேது?

    என்தந்தை தன் பழியைத் தீர்க்கத் தீக்கடவுளிடமிருந்து பெற்ற கருவியல்லவாநான்!

    “அருச்சுனனே உன் மணாளன் ஆவான், அவனுக்காவே பிறந்தவள்நீ!” என்று சொல்லிச்சொல்லி வளர்த்துவிட்டு, சிவனாரின் வில்லெடுத்து, நாண்பூட்டி, கீழே இருக்கும் நீரில் தெரியும் எதிரொளியில், மேலே சுழலும் ஒரு மீன்பொறியின் (மச்சயந்திரம்) கண்ணில் அம்பெய்ய வேண்டும், அதில் வெல்பவருக்கே என் மகளைக் கொடுப்பேன் என்று அறிவித்தாரே என் தந்தை, அது எனக்குஅவர் நல்கிய பெண்ணுரிமையா? இதில் தன்வரிப்பு (சுயம்வரம்) என்ற தம்பட்டம் வேறு!

    என்னடா இது, ஒருவனைச் சொல்லி இவள் மனதில் காதலை வளர்த்துவிட்டோமே, இப்பொழுது கதையை மாற்றுகிறோமே என்றுநினைத்தாரா என் தந்தை? இல்லையே!

    “அருச்சுனனைத் தவிர, வேறு யாராலும் மீன்பொறியை அடிக்க இயலாது. எனவே, நீ கவலை கொள்ள வேண்டாம், என் கண்ணே!” என்று என்னிடம் பகர்ந்தார். அந்தப்பாவி கர்ணன் அங்கு வருவான், தன் நண்பனுக்காக என்னை வெல்ல முயல்வான் என்று  யார் எதிர்பார்த்தார்கள்?

    “தேரோட்டியின் மகனான உன்னை நான் மணக்கமாட்டேன்! நீ paanjaliPicture2இந்தப்போட்டியில் கலந்துகொள்வதை நான் அனுமதிக்கமாட்டேன்!” என்று என்உரிமையைத் தானே நான் நிலைநாட்ட முயன்றேன்! வேறெப்படி நான் அவனைத் தடுக்க இயலும்? இதைக்காட்டி நான் சாதி வெறிபிடித்தவள் என்று என்னைத் தூற்றுகிறீர்களே, ஏன் நான் என் பெண்ணுரிமையை நிலைநாட்டிக் கொள்கிறேன் என்று யாரும் எண்ணிப்பார்க்க மறுக்கிறீர்கள்?

    கடைசியில் நான் மணக்க விரும்பியஅருச்சுனனே, அந்தணன் ஒருவன் வேடத்தில் வந்து என்னை வெற்றிகொண்டான். வெள்ளாடை உடுத்தி இருந்த நானும் அவன் கழுத்தில் மாலையிட்டேன். அதை எதிர்த்த அத்தனை மன்னர்களையும் – துரியன் (துர்யோதனன்), கர்ணன் உள்பட அத்தனை மன்னர்களையும் – அந்தண வேடதாரிகளானஅருச்சுனனும், பீமனும் புறங்கண்டனர்.

    “அந்தணா! உன் வீரத்திற்கு நான் தலைசாய்க்கிறேன்!” என்று கர்ணன் – கவச-குண்டலங்களை இன்னும் இழக்காத அக்கர்ணன் – அருச்சுனனை வணங்கி நீங்கினான். இத்தனை மாமன்னர்களை மண்ணில் வீழ்த்திய மாவீரன் அந்தணனாய் இருந்தால் என்ன, குறையில்லை என்று மனமகிழ்ச்சியுடன்தான் அவனைப் பின்தொடர்ந்தேன்.

    அவன், “ அன்னையே, பிச்சைபெற்றுவந்திருக்கிறோம்!” என்று பூடகமாகப் பேசியது என்தலையெழுத்தையே மாற்றிப்போட்டது.

    “பகிர்ந்து கொள்ளுங்கள், பாலகர்களே!” என்று, என்னைப் பார்க்காமலையே பதிலளித்தாள் என் மாமியார் குந்தி ( பாரை வென்ற பாண்டுவின் பெண்ணரசி.)

    பகீரென்றது என் நெஞ்சம். ஒருஉறையில் ஐந்துவாள்களா, இது என்ன நீதி! என்று துடித்தேன். தவறை உணர்ந்ததாயும், அறநெறியின் மறுவடிவமான மூத்தவன் யுதிட்டிரனின் கருத்தைக் கேட்டாள்.

    தாயின் வாக்கைப் பொய் ஆக்குவதா என்று தவித்த இருதலைக் கொள்ளி எறும்பான அவர், “தவறாகப் பேசிய சொற்கள்தானே!  அருச்சுனனே வென்றான், இக்கன்னியை! அவனே மணக்கட்டும்!” என்றார்.

    அதைக் கேட்ட நான் கொண்ட என் மனநிம்மதி, மறுகணமே கலைந்தது.

    “தாய்சொல்லைத் தட்டலாமா? பாவம் வந்து சேராதா?” என்று அண்ணனின் மனத்தைக் குழப்பி, அவர் சம்மதத்தையும் பெற்றான் அருச்சுனன். பாவம் வந்து சேர்ந்தாலும் சேரட்டும், நெறிமுறைகளை மீறவேண்டாம்  என்று இயம்பிய தருமரும் தலைஅசைக்க நேர்ந்தது.

    தாயா, தாரமா? என்னும் கேள்விக்கு அக்காலத்தில் தாய்சொல்லைத் தட்டாதே என்னும் பதில்தான் தலை சிறந்ததாக இருந்தது!

    துடித்தேன் நான்! அதைக்கேட்ட என் தந்தையும் துடித்தார்.

    “வேதங்களும், மரபுகளும் ஆதரிக்காதஒன்றைச் செய்து நரகப் படுகுழியில் நான் விழமாட்டேன். பாண்டவர்களே! உங்களில் யார் ஒருவர் வேண்டுமானும் என்மகளை மணந்து கொள்ளுங்கள்! ஒருவனுக்கு ஐந்து கன்னிகள் மண வாழ்க்கைப்படலாம். ஆயினும், ஒரு கன்னியை ஐவர் மணப்பதா?” என்று பொங்கிஎழுந்து, “கன்னியின் அண்ணனும், கன்னியின் மாமியும் இதை முடிவுசெய்யட்டும்!” என்று தனது பொறுப்பிலிருந்து நழுவினார்.

    அப்பொழுதும் என் விருப்பத்தை யாரும் கேட்கவில்லை.

    அப்பொழுது அங்கு வந்துசேர்ந்த வியாச மாமுனிவரிடம் — வேதங்களைத் தொகுத்து இவ்வுலகுக்கு வழங்கிய அந்த உத்தமரிடம் – அந்தணருக்கும், மீனவப்பெண்ணுக்கும் பிறந்த பேரறிவாளரிடம் – பாண்டுவின் தந்தையிடம் – அருச்சுனனின் பாட்டனிடம் — இந்த வேதனையைப் பகிர்ந்துகொண்டான் என் அண்ணன்.

    “மாமுனிவரே! நீங்களே சொல்லுங்கள்! அண்ணனின் மனைவி அன்னையாவாள்! தம்பியின் மனைவி தனது மகளுக்குஇணையாவாள். அப்படியிருக்க, அண்ணன் தம்பிகளான ஐவருக்கு ஒரு கன்னியைப் பகிர்வது பாவம் ஆகாதா? நெறிமுறைகளுக்கு உகந்ததா?  வேதங்களைத் தொகுத்தவரே! நீரே இதற்கு விடைஅறிவீர்!” என்று அவரிடம் அறிவுரை வேண்டினான்.

    முக்காலமும் உணர்ந்த அம்முனிவர் முன்னர் நடந்தவற்றை மொழிந்தார்.

    “இக்கன்னி பாஞ்சாலி, முன்பிறப்பில் கணவனை வேண்டி, இறைவன் சிவபெருமான் நோக்கித் தவமியற்றினாள். ஐந்து குணங்கள் நிரம்பிய ஒருகணவன் வேண்டும் என்று இறைஞ்சாமல், அறநெறிஅறிந்த கணவன் வேண்டும், காற்றைப்போல வலிமை மிக்க கணவன் வேண்டும், இந்திரனைப் போன்று வீரமிக்க கணவன் வேண்டும், அழகுமிக்க கணவன் வேண்டும், சாத்திரம் பயின்ற கணவன் வேண்டும் என்று தனித்தனியாக வேண்டினாள்.

    “வேண்டுவோருக்கு விரும்புவதை வரமாகஅளிக்கும் முக்கண்ணனும், ”பெண்ணே, நீவேண்டியபடி ஐந்து கணவர்களைஅளித்தேன்!” என்று அருளினான்.

    “இறைவா!  இது என்ன சோதனை? நான் ஒருகணவனை வேண்டினால், ஐந்து கொழுநன்களை அளிக்கிறீர்களே! இவ்வுலகு என்னைக் கற்பிழந்த காரிகை என்று தூற்றாதா?” என்று கதறிஅழுதாள்.

    இறைவனும், ”பெண்ணே! உன்னுள் ஐந்து பூதங்களையும் அடக்கி ஆளும் தெய்வப் பெண்கள் உட்புகுந்து ஒன்றாகச் சங்கமிப்பர்! உனது பிறப்பும் பூவுலகமாதர் மூலம்நிகழாது, நெருப்பின் மூலமாகவே நிகழும். ஐந்துதேவர்களின் அம்சமான மனிதர்களை நீ மணப்பாய்! பொன்னையே பரிசுத்தமாக்கும் தீயில் நீ பிறப்பதனால், மாசற்றவளாக விளங்குவாய்! உலகப்பெண்களுக்கு விதிக்கப்படும் நியதி உன்னைக் கட்டுப்படுத்தாது!” என்று வரமளித்து அருளினான்.

    “எனவே, அனைத்துக்கும் விதிவிலக்கு இருப்பதுபோல, இதுவும் ஒரு விதிவிலக்கேயாகும்! வருந்தற்க! நியதிக்கு அப்பாற்பட்ட இத்திருமணம் நடக்கட்டும்.   ஒருவரின் மனைவியாக அவள் விளங்கும்போது, உலகநெறிகளை மற்றவர் பின்பற்றவேண்டும். ஒருவரை நீங்கி மற்றவரிடம் அவள் புகும்போது மீண்டும் கன்னித் தன்மையைஅடைவாள்!” என்று அறிவுரை நல்கினார்.

    இறைவனே விதித்தபடி நடக்கட்டும் என்றுதான் விட்டுவிட்டேன். ஐவருக்கும் மனைவியானேன். ஆனால் நான்செய்தது புதுமைஅல்ல. எனக்குமுன் இப்படிப் பலகணவன் மணம் நடந்திருக்கிறது என்றும் உரைக்கப்பட்டது. இறைவனே வேதங்களைப் படைக்கிறான் என்று அனைத்து சமயங்களும் பகருகின்றன. வேதமுதல்வனே விதித்தது எப்படி முறைஅற்றது ஆகும்?

    இதுமட்டும் தானா நான்அனுபவித்த இக்கட்டானநிலை? எந்தப் பெண்ணுக்கும் வரக்கூடாத இழிவல்லவா எனக்கு வந்துசேர்ந்தது!

    வஞ்சகச் சகுனியிடம் – சூதாட்டத்தின் மீதுகொண்டஈர்ப்பால் – செல்வம், வேலையாட்கள், அரசு, உடன்பிறப்புகள் மட்டுமன்றித் தன்னையும் இழந்த என்முதற்கணவர் யுதிட்டிரர், என்னையும் பணயம்வைத்து இழந்தார் – தன்னை இழந்த பின்னர் தாரத்தைப் பணயம் வைக்கும் உரிமை தனக்கு இல்லை என்பதை அந்த நீதிமான்அறியாது போனது ஏனோ?

    paanjaliPicture3இப்படிப்பட்ட ஒருநிகழ்சிக்குத்தானே காத்திருந்தான் துரியன்!

    “எமக்கு அடிமையான பாஞ்சாலியை இங்கு வரும்படி ஆணையிட்டதாகச் சொல்லி, இங்குவரச்சொல்லு!” என்று தனது தேரோட்டியைஅனுப்பினான் அந்தச் சண்டாளன்.

    மாதவிடாய்க் காலம் ஆனதால், ஒற்றை ஆடை உடுத்தி, நெகிழ்வான நிலையில் இருக்கிறாள்பாஞ்சாலி. இந்நிலையில் இருக்கும் அவளைப் பலர் வீற்றிருக்கும் இக்கொலுமண்டபத்திற்குக் கொணர்வது முறையில்லை!” என்று என்னவர் எடுத்துச்சொன்னது எக்காளமிட்ட அவன் செவிகளில் ஏறவில்லை.

    எனக்குச்சேதி வந்ததும், “குரு வம்சத்து அரசியை ஆணையிடத் துரியனுக்கு உரிமை இல்லை!” என்று மறுமொழி அனுப்பினேன்.

    “உன்னைப் பணயம் வைத்துத் தோற்றுவிட்டார் உன் கணவர். எனவே, உன்மீது உரிமை எனக்கு இருக்கிறது!” என்றுசொல்லிஅனுப்பினான்.

    “தான்தோற்ற பிறகு, என்னைப் பணயம் வைக்க அவருக்கு உரிமை இல்லை!” என்று மறுத்தேன் நான்.

    “இப்படிச் சொன்னால் அவள் வரமாட்டாள். அவளைப்பற்றி இழுத்துவா!” என்று தம்பி துச்சாதனனை அனுப்பினான் துரியன்.

    அவன் பிடியிலிருந்து தப்பிஓட முயன்ற என் நீண்ட கருநீலக் கூந்தலைப்பற்றி, என்னைத் தரையில் புரட்டி இழுத்துக்கொண்டல்லவா வந்தான் அந்தப்பாவி துச்சாதனன். அவனது தீச்செயலை யார் கண்டித்தார்கள்? இந்த முறையற்றசெயலைக் கண்டித்து எழுத ஒருவர் கூடவா இல்லாது போய்விட்டார்கள், இந்தப் புண்ணிய பூமியில்?!

    “மாதவிடாய்க் காலத்தில் இருக்கும் என்னை இந்தக் குருவீரர்கள் முன்னிலையில் இழுத்துவருகிறாய். உண்மையில் இது தகாத காரியம். ஆனால் இங்கிருக்கும் ஒருவரும் இதைக் கண்டிக்கவில்லை. நிச்சயமாக இவர்களும் உன்னைப் போன்ற மனம் கொண்டவர்களே! சீ… உண்மையில் பாரதர்களிடம் அறம் மறைந்துவிட்டதா? உண்மையில் க்ஷத்திரிய ஒழுக்கமும் மறைந்துவிட்டதா? அல்லது ஒழுக்கத்தின் எல்லைகளைக் கடக்கும் இந்தச் செயலை, இந்தச் சபையில் இருக்கும் ஆசான்கள் அனைவரும் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்களே!“ என்று அழுதேன், அரற்றினேன்.

    அந்த அத்தினாபுரத்து அரசவையில் யாரும் என்பக்கம் பேசவில்லையே, வாய்மூடி அமைதிதானே காத்தார்கள்!?

    “ஓ, துரோணரும், பீஷ்மரும், விதுரரும், இந்த மன்னரும் {திருதராஷ்டிரரும்} தங்கள் சக்தியைஇழந்துவிட்டனரே. அல்லது, குரு வம்சத்தவர்களில் முதன்மையான இந்த மூத்தவர்கள் ஏன் இக்குற்றத்தைக் கண்டும் அமைதியாகப் பார்க்கின்றனர்?” என்று கதறினேனே, யாராவது எனக்காகத் தமது சுண்டு விரலைக்கூட அசைத்தார்களா?

    “நீங்கள் தோற்றபின் என்னை வைத்துச் சூதாட உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? அடிமைக்கு மனைவி, மக்கள் என்ற உறவேது?” என்று இடித்துரைத்தும், இடித்த புளியாகத்தானே சமைத்திருந்தார் தருமபுத்திரர்! கடைசிவரை ஒரு சொல்கூட அவர் வாயிலிருந்து உதிரவில்லையே!

    நீங்களும் அந்த அவையினரைப் போலத்தானே அமைதிகாக்கிறீர்கள்! கேட்டால், நான் துரியன் தடுக்கி விழுந்ததைப் பார்த்துச் சிரித்தேன், கர்ணனை அவையோர்முன்னர் அவமானப்படுத்தினேன் என்று எனக்கு எதிராகவே வழக்காடுகிறீர்கள்!

    தடுக்கி விழுந்தால் தாயும் நகைப்பள் என்ற பழமொழிப்படி தானே நான் நடந்து கொண்டேன்!

    என்னைத் “தாசியே!” என்று ஏசினானே துச்சாதனன், அந்த வார்த்தைகளைக் கேட்ட கர்ணன் மிகவும் மகிழ்ந்து அந்தப் பேச்சை அங்கீகரித்து, சத்தமாகச் சிரித்தானே, அவனைக் கடிந்து நீங்கள் ஏன் ஒருசொல்கூடச் சொல்லத் தயங்குகிறீர்கள்?

    ஒரு பெண்ணை எப்படியெல்லாம் அவமானப்படுத்த முடியுமோ, அப்படி அவமானப்படுத்துவதுதான், நான் என் தன்னுரிமையை நிலைநாட்டிக் கொண்டதற்கும், தடுக்கி விழுந்தவனைக் கண்டு சிரித்ததற்கும் கொடுக்கப்படும் தண்டனையா? இதை எப்படி உங்களால், பெண்மையைப் போற்றிப் பேசும் உங்களால் நியாயப்படுத்த முடிகிறது?

    அச்சபையில் எனக்குப் பரிந்துபேசிய இருவர் என் கணவர்களில் ஒருவரான பீமனும், துரியனின் இளையோனான சத்திரிய மனைவிஅல்லது வேறோருத்திக்கும், திருதிராட்டிரனுக்கும் பிறந்தவி கர்ணனும்தானே!

    “சகாதேவா, நன்னெறியற்ற இச்செயலைச் செய்தஅண்ணனின் கரத்தை எரிக்கிறேன்!” என்றல்லவா பீமன் பொங்கி எழுந்தார்! உங்களால்போற்றப்படும் மகாகவி பாரதியும், என் பீமனின் சொற்களைக் கவிதை மழையாய்ப் பாஞ்சாலி சபதத்தில் பொழிந்ததும் தாங்கள் அறிந்ததுதானே!

    ‘சூதர் மனைகளிலே — அண்ணே!
    தொண்டு மகளிருண்டு.
    சூதிற் பணயமென்றே — அங்கோர்
    தொண்டச்சி போவதில்லை.     69
    ‘ஏது கருதிவைத்தாய்? — அண்ணே,
    யாரைப் பணயம்வைத்தாய்?
    மாதர் குலவிளக்கை — அன்பே
    வாய்ந்த வடிவழகை.     70
    ‘அவன் சுடர்மகளை, — அண்ணே,
    ஆடியிழந்து விட்டாய்.
    தவறு செய்துவிட்டாய்; — அண்ணே,
    தருமங் கொன்றுவிட்டாய்.     72
    ‘துருபதன் மகளைத் — திட்டத்
    துய்ந னுடற்பிறப்பை, —
    இருபகடை யென்றாய், — ஐயோ!
    இவர்க்கடிமை யென்றாய்!     76
    ‘இது பொறுப்பதில்லை, — தம்பி!
    எரிதழல் கொண்டுவா.
    கதிரை வைத்திழந்தான் — அண்ணன்
    கையை எரித்திடுவோம்.’     77

    அதுமட்டுமா? துரியனின் இளையோன் விகர்ணன்தான் எப்படி எனக்காக வாதாடினான்!

    “மன்னர்களே, பாஞ்சாலி கேட்கும் கேள்விக்கு பதிலளியுங்கள். நாம் நீதியைப் பகராமல் இருப்போமானால், நாம் நரகத்திற்கே செல்வோம். பிதாமகரான பீஷ்மரும், தந்தையும், அரசருமான திருதராஷ்டிரரும், உயர் ஆன்ம விதுரரும் ஒன்றும் சொல்லாமல் இருப்பது எவ்வாறு?

    “எங்களுக்கெல்லாம் குருவான, மறுபிறப்பாளர்களில் சிறந்தவர்களான துரோணரும், கிருபரும் ஏன் இங்கு பதிலளிக்கவில்லை? இந்தப் பந்தயத்தில் விருப்பம்கொண்ட சகுனியே, யுதிட்டிரனைத் தன் மனைவி பாஞ்சாலியைப் பந்தயமாக வைக்கத் தூண்டினான். இதைக் கருத்தில் கொண்டு பார்த்தால், பாஞ்சாலி வெல்லப்படவில்லை என்று துணிகிறேன்” என்று எடுத்துரைத்தானே விகர்ணன்!

    அப்படி விகர்ணன் எடுத்துச் சொல்லியும் – தன்னை இழந்தபின், என்னை வைத்துச் சூதாடும் உரிமையை என்னவர் யுதிட்டிரர் இழந்துவிட்டார் என்று நன்னெறியை எடுத்துச் சொல்லியபோதும் — உங்களால் அறநெறித் தேவனின் மறுஅவதாரம் எனப் புகழப்படும் கர்ணன் என்ன சொன்னான் என்பது பெருந்தகையாளர்களான நீங்கள்அறியாததா!

    “பாஞ்சாலி ஒற்றையாடையுடன் இங்கு கொண்டுவரப்பட்டது சரியில்லாத நடவடிக்கையாக நீ கருதினால், அதற்கு நான் சொல்லும் மறுமொழியைக் கேள், விகர்ணா! ஒரு பெண்ணுக்கு ஒருகணவன் என்றே விண்ணவர்கள் வழங்கி இருக்கின்றனர்;  இருந்தபோதிலும், இந்தப் பாஞ்சாலி பலகணவர்களைக் கொண்டிருக்கிறாள். ஆகையால், இவள் கற்பற்ற பெண் என்பது உறுதி. ஆகையால், இவளை இந்தச்சபையின் முன்பு ஒற்றையாடையில் கொண்டுவருவதோஅல்லது அவளது ஆடைகளைக் களைவதோ வியப்படைய வேண்டிய செயல்அல்ல. “ என்றல்லவா இழித்துரைத்தான்! அவன் கூறிய சொற்களைக் கொண்டு என் கற்பறத்தைக் கூறுபோட முயல்வோர்களுக்கு நான்ஒன்று சொல்ல விரும்புகிறேன்.

    paanjaliPicture4பொன்னைப் புடம்போட்டுப் புனிதமாக்குவது நெருப்பில்தான்! தன் கற்பை இவ்வுலகுக்கு நிரூபிக்க, கற்புக்கரசியாம் சீதை புகுந்து மீண்டதும் நெருப்பிலிருந்துதான்!

    அந்த நெருப்பில் பிறந்தவள் நான்! நான் நெருப்பானவள்! என்னிடம் மாசு இருந்தால் நான் நெருப்பிலிருந்து தோன்றி இருக்க முடியுமா? எந்த மாசையும் எரிப்பது தீ! அத் தீயின் வடிவானவள் நான்! என்னிடம் மாசு இருக்கமுடியுமா? கர்ணனின் கூற்றை — கதிரவனின் மைந்தனின் கூற்று என்று நீங்கள் மதிக்கும்போது, கதிரவனே ஒருபகுதியான அந்த அக்கினிப் பிழம்பிலிருந்து தோன்றிய என்கூற்றை ஏற்க மறுப்பதும் ஏனோ?

    அந்த வஞ்சகக் கர்ணன் என்னைப் பழிதீர்க்கஅவ்வாறு கூறாதிருந்தால், என் துகில்அவையோர்முன் உரியப்பட்டிருக்காது, நான் சூளுரைத்திருக்கமாட்டேன். துரியனின் தொடை பிளக்கப்பட்டு, அவன் மரித்திருக்கமாட்டான். கர்ணன் அருச்சுனால் கொல்லப்பட்டிருக்கமாட்டான்.

    பாரதப் போரே நிகழ்ந்திருக்காது!

    ஒருபெண்ணின் — மாதவிடாய்க் காலத்தில் குருதி ஒழுகும் நிலையில் உள்ள ஒருபெண்ணின் — ஆடையைக் களைந்து, அவளது அவல நிலையை மாபெரும் சபையினர் கண்டு எள்ள வேண்டும் என்று கொக்கரித்த கர்ணனை — தாயென நினைக்க வேண்டிய பெண்ணினத்தையே இழிவுக்கு உள்ளாகச் செய்த அந்தப் பண்பற்றவனை – பெண்மையைப் போற்றும் பெருந்தகையாளர்கள் பெருமை பேசுவது எங்ஙனம்?

    என் மீது நீங்கள் மதிப்பு வைத்திருக்கிறீர்களோ இல்லையோ, அது வேறுவிஷயம். ஒருபெண்ணை, அவள் எப்படிப்பட்டவளாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும் – அவளைப் பலவந்தப்படுத்தி, அவள் துகிலை உரிக்கச் சொன்னாலும், அப்படி உரிந்தாலும் — உங்கள் காலத்தில்அப்படி யார் செய்தாலும், செய்யத் தூண்டினாலும், அவர்களுக்குக் கொடிய தண்டனை கொடுக்கவேண்டும் என்று நீங்கள் கொடிபிடிப்பீர்களா, அல்லது   அந்தக் கயவர்களுக்கு நீங்கள் ஆலவட்டம் தூக்குவீர்களா — சொல்லுங்கள்!

    தீநெறியின் முன்பு செய்வதறியாது திகைத்து அனைவரும் நின்றபோது, என் துகிலைத் தீயவன் துச்சாதனன் உரிய முற்பட்டபோது, என் மானத்தைக் காத்து அருளிய கண்ணன்போன்று உங்களில் ஒருவராவது இருக்கத்தானே செய்வீர்கள்!

    தனது இழிசெயல் நிறைவேறாது நின்றபோது, துச்சாதனன் களைத்து வீழ்ந்தபோது பேச்சற்று நின்றஅவையோரைப் பார்த்து விதுரன் சொன்னதையே நானும் உங்களுக்குச் சொல்லுகிறேன்.

    “அறநெறிகளின் விதிகளை அறிந்து, ஒருசபையில் கலந்துகொண்டு, ஒருகேள்விக்குப் பதில்அளிக்காமல் இருப்பது என்பது பாதி பொய்க்குச் சமமாகும். மறுபுறம், அறநெறிகளின் விதிகளைஅறிந்த ஒருவர் ஒன்றுகூடி, பொய்யான பதிலைச் சொன்னால், நிச்சயமாகப் பொய்சொன்ன பாவம் அவரைச்சாரும்.”

    எக்காலத்திற்கும் ஒரேநெறி, ஒரேநியாயம், ஒரேஅளவுகோல் என்று சொல்லும் நீதிமான்களே, சொல்லுங்கள்! இக்கால நெறிமுறையைக் கொண்டு என்னை நீங்கள் போற்றவேண்டாம், குறைந்தபட்சம், என்னைக் கொடுமைப்படுத்திய – பெண்ணடிமை செய்த பேடிகளுக்கு — உங்கள் காலப்படி என்ன தண்டனை வழங்குவீர்களோ, எப்படி ஈனர்களை எதிர்த்துப் போராட்டம் நடத்துவீர்களோ, அப்படி நடத்தாவிட்டாலும் போகிறது…

    இதுவரைப் பொறுமையாக என் புலம்பலைக் கேட்டதற்கு நன்றி!

    பாஞ்சாலி ஒரு பாவப்பட்டவள் என்று எனக்காக ஒரு துளி கண்ணீர்கூடச் சிந்தமாட்டீர்களா?

    Share
  • பாட்டியின் அரண்மனை

    — மாதவ. பூவராக மூர்த்தி.

    சமீபத்தில் மைசூரில் தேசிய நாடக விழாவில் எங்கள் குருகுலம் குழுவின் நாடகம் ஒன்றை அரங்கேற்றினோம். பன்மொழி நாடகங்கள் பங்கு பெற்ற அந்த விழாவில் நாங்கள் அளித்த நாடகம், நான் எழுதி இயக்கிய நாடகம் “அம்மாவின் அரண்மணை.” இது நமது சொந்த ஊரின் பெருமை பேசும் நாடகம்.

    பாட்டி வீடு1இந்த நாடகம் நான்கைந்து வருடங்களுக்கு முன் உருவானது. அதில் வரும் செட் என் பாட்டி வீட்டை நினைவு படுத்தும் வகையில் அமைய வேண்டும் என்று நான் விரும்பினேன். வரைந்து கொடுத்தேன். செட் குமாரும் அவரது மகன் ஷண்முகமும் அதில் அக்கறை கொண்டு உருவாக்கினார்கள்.

    இன்று ஏனோ என் பாட்டி வீடு என் நெஞ்சில் நிழலாடுகிறது. என் பாட்டி வீடு என்று அல்ல கிராமத்து வீடுகள் ஒன்று போலத்தான் இருக்கும். விடுமுறைக்கு பாட்டி வீட்டிற்கு கிராமத்திற்கு போகும் பழக்கம் என்று ஒன்று நம்மிடத்தில் ஒரு காலத்தில் இருந்தது.

    இன்று அதற்கெல்லாம் நமக்குப் பொருள் தெரியாது. நம் குழந்தைகளுக்கு விடுமுறையும் கிடையாது, உறவுகளும் இல்லை. கிராமங்களில் வாழும் பாட்டியும் இல்லை.கிராமத்தில் வீடும் இல்லை.

    ஒவ்வொரு  வருடமும் கோடை விடுமுறைக்கு கிராமத்திற்குப் போவோம். ஊரில் நடக்கும் திருவிழாவிற்கு ஒரு முறை அழைத்துப் போவார்கள். இது தவிர வீட்டின் விஷேஷங்களுக்கும் மறைவுக்கும் போயிருக்கிறோம்.

    பாட்டி வீடு01அது ஒரு வசந்த காலம். பாட்டியின் சாம்ராஜ்யம் பெரியது. வீடும் பெரியது. பாட்டி வீடு தெருவின் மத்தியில் ஊருக்கு நுழையும் சின்ன ரோடின் வலது புறம் திரும்பும் போது முதல் வீடாக இருக்கும். வாசலில் இரண்டு புறமும் திண்ணை. நடுவில் உள் வழி. முதல் இரண்டு திண்ணை வெட்ட வெளியில் இருக்கும். அதை ஒரு வராண்டா இணைக்கும். தெற்கு பார்த்த வீடு. கிழக்கு கோடியில் முன் வாசல். படியேறினால் ஓட்டு சார்வில் இரண்டு பெரிய திண்ணை. இடது பக்கத் திண்ணை சிறியது. வலது பக்கத் திண்ணை மூன்று கம்பங்களின் இடைவெளியில் காம்ரா உள்ளின் வெளிச்சுவர் வரை நீண்டிருக்கும்.  தாராளமாக ஐந்தாறு பேர் படுக்கலாம். வெளித்திண்ணை ஒருவர் படுக்க இருவர் இருக்க மட்டுமே போதும். அதன் ஒரு மூலையில் சிமெண்ட் சரிவு இருக்கும். அதில் சாய்ந்து கொண்டு இரவு வேளைகளில் வானம் பார்க்கும் சுகமே தனிதான்.

    பாட்டி வீடு0நினைவுகளில் மூழ்கி உங்களை ரொம்ப நேரம் வாசலில் நிற்க வைத்து விட்டேன். வாருங்கள் உள்ளே போகலாம். திண்ணையை ஒட்டிய பெரிய வாசலில் வேலைப் பாடுகள் கொண்ட வாசல் நிலை. அதில் பெரிய கைப் பிடியுடன் கூடிய மரக்கதவு. தடிமனானது உறுதியானது. சின்ன வயதில் அலிபாபாவும் நாற்பது திருடர்களும் பார்த்து விட்டுப் பாட்டி வீட்டுக் கதவு முன் ஒருவர் நின்று ‘அண்டா காகசம், அபூ காகசும் திறந்திடுக சிசேம்’ என்று சொல்ல கதவுக்குப் பின்னால் நிற்பவன் மெதுவாகத் திறப்பான். அவன் உள்ளே நுழைந்ததும் குகையின் கதவுகள் மூடப்படும்.

    நீங்களும் அண்டா காகசம் சொல்லுங்கள் மனக்கதவு திறக்கும். அடுத்த பகுதி ரேழி. அது வெளி வாசலுக்கும் உள் வாசலுக்கும் இடைப்பட்ட பகுதி. அங்கு ஒரு திண்ணை உண்டு. அந்த பகுதி கொஞ்சம் வெளிச்சக் குறைவாக இருக்கும். அதன் வெளிச்சம் வாசற்கதவின் நிலைக்கேற்ப மாறுபடும். கதவு முழுவதும் திறக்கும் போது வெளிச்சம் நிறைந்திருக்கும்.

    வீட்டின் மிக வயதானவர்கள், முதுமக்கள் தாழியில் வைக்க வேண்டியவர்கள், போவதற்கு முன் அங்கு நிலை கொள்வார்கள். இடது புறம் சின்ன வராண்டாவும் வலது புறம் பெரிய வராண்டாவும் இருக்கும். அதன் அருகே முற்றம் இருக்கும். முற்றம் ஒரு திறந்த சதுர அல்லது செவ்வகப் பகுதி.  அதன் நடுவில் வாசலில் இருந்து கொல்லை வரை விரியும் நேர்க்கோட்டின் மையப் பகுதியில் ஒரு அழகான துளசி மாடம் இருக்கும். கூடம் துவங்கி தாழ்வாரம் வரை நீண்ட ஓட்டுச் சரிவு தாழ்வார விளிம்புகளில் நின்று கொண்டிருக்கும் மரத்தூண்களில் வந்து தங்கி முற்றத்தில் கொஞ்சம் முகம் காட்டும். முற்றத்தின் நான்கு விளிம்புகளிலும் கூழாமூலை இருக்கும். மழைக்காலத்தில் ஓடு வரிசைகளுக்கு நடுவில் வரும் பாதை வழியாக வரும் மழை நீர் முற்றத்தில் விழும் அழகும் ஓசையும் இன்னும் என் மனதில் வழிகிறது.

    முற்றத்தின் கிழக்குச் சுவர் பக்கம் ஒரு ஜலதாரை கொல்லை நோக்கிப் போகும். கம்பி கட்டி துணி காயும். வத்தல் மிளகாய் , மஞ்சள் உளுந்து பயறு இவை பருவத்திற்கு ஏற்ப காயும். பின் தாழ்வாரத்தில் ஒரு பெரிய பித்தளைப் பாத்திரம் அல்லது  அலுமினியக் கூடையில் தண்ணீர் இருக்கும். பக்கத்தில் ஒரு சொம்பு இருக்கும். வெளியே போய் வந்தால் கால் கழுவவும், சாப்பிட்டு கை அலும்பவும் அது பயன்படும்.

    கூடம் மிக அழகாக காற்றோட்டமாக இருக்கும். சுவரையும் கூடத்துக் கம்பங்களையும் இணைக்கும் உத்திரங்கள் வலுவாக இருக்கும். ஓட்டுப் பகுதியில் இடையில் கண்ணாடி பதித்து கூடம் வெளிச்சம் பெறும். முற்றத்தில் வரும் வெளிச்சமும் காற்றும் போதுமானதாக இருக்கும்.

    பாட்டி வீடுபட்டா சாலை என்றழைக்கப் படும் கூடத்தில் நடுவில் உத்திரத்தில் ஊஞ்சல் தொங்கும். ஊஞ்சல் கம்பிகளுக்கு மத்தியில் நெற்கதிர் அறுவடையின் போது ஒரு கதிர் குஞ்சம் கட்டி விட்டிருப்பார்கள். குருவிகள் சகஜமாகப் பறந்து வந்து கொத்திக் கொண்டும் தாழ்வாரத்தில் நடந்து கொண்டிருக்கும்.

    அதற்கு அடுத்த உத்திரத்தில் ஒரு கயறு தொங்கும் அதன் முனை ஊஞ்சலில் உட்கார்ந்தால் எட்டும்படியாக வைத்திருப்பார்கள். ஊஞ்சலில் உட்கார்ந்து கயிறை இழுத்தால் கிரீச் என்று ஒலியெழுப்பி ஊஞ்சல் அசைந்தாடும். கூடச்சுவரில் ஒரு மாடம் ஒரு அலமாரி சுவர் முழுவதும் காலண்டர்கள், பல்வேறு கருப்பு வெள்ளைப் படங்கள் தொங்கும். நடுவில் ஒரு கடிகாரம் பிரதானமாக இருந்து மணி காட்டும் மணிக்கொருதரம் இனிய ஓசை எழுப்பும்.

    கூடத்தில் ஒரு மூலையில் மூங்கில் கட்டி பாய் தலைகாணி இருக்கும்.

    ஒரு கம்பத்தில் பஞ்சாங்கம் தொங்கிக் கொண்டிருக்கும். ஒரு மூலையில் பெரிய மேஜையும் கைவைத்த நாற்காலியும் அலங்கரிக்கும். இன்னொரு பக்கம் ஒரு சாய்வு நாற்காலி இருக்கும். மேஜையில் பெரிய ரேடியோ அதற்கான ஏரியல் முற்றத்தில் உயரக்கட்டி தாழ்வாரம் வழியாக வந்து கொண்டிருக்கும்.

    காம்ரா உள் பெரியதாக இருட்டாக இருக்கும். அதன் வடக்கு மூலையில் உள்ள ஜன்னல் திறக்கும் பொழுது வெளிச்சம் எட்டிப் பார்க்கும். கூடத்தில் இந்தப் பக்கம் ஸ்வாமி அறையும் அதை அடுத்து பெரிய சமையல் அறையும் இருக்கும்.

    பாட்டி வீடு2பின் தாழ்வாரத்தின் வராண்டா வழியாக கொல்லைக்கதவை தாண்டினால் கொல்லைத்தாழ்வாரம். அதை அடுத்து கிணற்றங்கரை அதை ஒட்டி தண்ணீர் நிரப்பும் தொட்டி துவைக்கும் கல். அதைத்தாண்டி கழிவறை. இடைப்பட்ட இடங்களில் பூச்செடிகள், வாழை தென்னை மரங்கள், நீண்ட கொல்லைப்பகுதியின் முடிவில் கிராமத்து சிறிய வாய்க்கால் ஓடிக்கொண்டிருக்கும்.

    அந்த வீட்டின் ஒவ்வொரு பகுதியிலும் என் இளமைக்காலத்துடன் தொடர்பு கொண்ட ஒரு நினைவு உண்டு. வாசல் திண்ணையில் கழித்த இரவுகள், பாண்டி விளையாடிய வாசல். விளக்கெண்ணெய் குடித்து குதித்து குதித்து களைத்துப் போன முற்றம்.

    மழைக்காலத்தில் ஜலதாரையில் கல் வைத்து அடைத்து  தெப்பக்குளமாக  தண்ணீர் தேங்க வைத்த முற்றம் அதில் கால் நனைத்து கப்பல் விட்ட காலம். வேகமாக ஊஞ்சல் ஆடிய கூடம். உத்திரத்தில் கட்டிய தூளியில் தங்கையை அம்மா தாலாட்டுப் பாடி தூங்க வைத்தது. பாட்டி கையால் உருண்டை வாங்கி கட்டை விரலால் குழி பண்ணி குழம்பு ஊற்றி சாப்பிட்ட தாவாரம், மருதாணி இட்டுக் கொண்டு படுத்த கூடம், அவல் இடிக்கிற கொல்லைத்தாவரம்.

    கிணற்றடியில் வாளியில் தண்ணீர் இழுத்து ஜில்லென்று தலையில் விட்டுக் குளித்த காலம். இறைந்து கிடக்கும் பவழமல்லியை பொறுக்கிய காலை. கவணையில் கட்டிய பசுமாட்டின் கழுத்தைத் தடவிய பொழுதுகள்.

    துள்ளிக்குதிக்கும் கன்றுகுட்டியைப் பின் தொடர்ந்து பொழுதுகள். இளநீர் குடித்த வெயிற்காலம், ஏறிக்குதித்த வைக்கல் போர், எட்டிப் பறித்து பூவரசம் இலையைச் சுருட்டி ஊதிய நாதஸ்வரம். சின்ன வாய்க்காலில் குதித்த காலை நேரம்.

    அந்த அரண்மணை எனக்கு கொடுத்த இனிய சுகங்கள் இன்னும் என் நெஞ்சில் சுரந்து கொண்டிருக்கிறது. உங்களுடன் அதை பகிர்ந்து கொள்வதில் எனக்கு சந்தோஷமே.

     

     

     

     

     

     

    படம் உதவி:
    மாதவ. பூவராக மூர்த்தி
    &
    http://www.tamilnaduhotel.net/nagapattanam/mangala_heritage_home/

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 134

    -மலர் சபா

    மதுரைக் காண்டம் – 02. வேட்டுவ வரி

    துறைப்பாட்டு மடை

    அவிப்பலி

    கதிரவனின் வெப்பம் உயிர்களை
    வருத்தாத வண்ணம்
    அவனுடனேயே வானில் சுழன்று திரியும்
    முனிவர்கள் அமரர்கள் ஆகியோருடைய
    துன்பம் தீரும்வண்ணம் அருள்புரியும்படி
    உன் திருவடிகள் இரண்டையும் வணங்கிநின்றோம்.

    பகைவர்களை வெற்றிகொள்ளும்             Kali
    வீர மறவர்களாகிய நாங்கள்
    எங்களது வெற்றிக்கு விலையாக
    எம்கழுத்தில் இருந்து வழியும்
    இரத்தத்தைத் தானமாகத் தருவதாக
    முன்பு சூளுரைத்தோமே…
    அதை இப்போதுதருகிறோம்.
    ஏற்றுக் கொள்வாயாக!

    அழகிய முடிசூடிய தேவர்கள்
    தம் அரசனாகிய இந்திரனுடன்
    வந்து வணங்குகின்ற
    நீலநிறம் உடைய
    உன் திருவடிகளைக் கண்டு வணங்கிநின்றோம்.

    திரண்ட பசுக்கூட்டங்களைக் கவர்ந்துவந்த
    மறவர்களாகிய நாங்கள்
    எம் வெற்றிக்கு விலையாக
    நிணத்துடன் கலந்து சிந்துகின்ற
    குருதிப் பலியைத் தந்தோம்.
    ஏற்றுக் கொள்வாயாக!

    துடியுடன் பறையும் கொம்பும் சேர்த்து,
    செவிகள் பிளந்து செவிடாகும் வண்ணம்
    உரக்க ஒலிக்கச் செய்பவர்கள் மறவர்கள்.
    நடு இரவில் எதிரில் வருபவர்களைத்
    தாக்கிக் கொல்கின்ற புலிபோல் வலிமையுடைய
    மறவர்களாகிய நாங்கள்
    குமரியாகிய நின்திருவடிகள் வணங்கிநின்றோம்.

    அங்ஙனம் யாம் பெற்ற வெற்றிக்கு
    ஈடாகத் தரும் நேர்த்திக்கடனே
    எம்கழுத்தில் இருந்து யாம் சிந்துகின்ற குருதியாகும்
    ஏற்றுக் கொள்வாயாக! 

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் பாடல்கள் இங்கே:  17 – 19
    http://www.chennailibrary.com/**iymperumkappiangal/**silapathikaram6.html

    படத்துக்கு நன்றி:
    http://www.maalaimalar.com/2012/11/21143028/saptha-kannigal-worship-benefi.html

    Share
  • அகிலவியல் ஈர்ப்பு விசையைக் கண்டுபிடித்த ஆங்கில மேதை ஐஸக் நியூட்டன்

    சி. ஜெயபாரதன்.

     

    cover-image-isaac-newton

    (1642-1727)

    சி. ஜெயபாரதன் B.E. (Hons), P.Eng. (Nuclear) கனடா

     


    “உலகின் கண்களுக்கு நான் எப்படி தோன்றுகிறேன் என்பது எனக்குத் தெரியாது ! கடல் கரையில் விளையாடும் ஒரு சிறுவன், இன்றோ நாளையோ ஏதோ ஓர் அபூர்வக் கூழாங்கல் அல்லது எழிற் சிப்பியைக் கண்டெடுப்பது போல எனக்குத் தெரிகிறது! ஆனால் கண்டுபிடிக்க முடியாதபடி மாபெரும் மெய்ப்பாட்டுக் கடல் என் கண்முன்னே பரந்து கிடக்கிறது !”

    ஐஸக் நியூட்டன்

    “எந்த ஓர் உயிரினமும் விண்வெளியை ஏதோ ஓர் முறையில் சார்ந்திருக்க முடியாமல் தனித்திருக்க இயலாது.  கடவுள் எங்கும் உள்ளது.  படைக்கப் பட்ட மனித உள்ளங்கள் எங்கோ இருக்கின்றன.  அதை ஆட்கொண்ட உடல் விண்வெளியில் உள்ளது.”

    “பேரெழில் கொண்ட இந்தப் (பிரபஞ்ச) ஏற்பாடு பேரறிவும், பேராற்றலும் உள்ள ஓர் உயிர்ப்பு அரங்கிலிருந்துதான் தோன்றி இருக்க முடியும்.”

    ஐஸக் நியூட்டன்

    “நாம் போதுமான பாலங்களைக் கட்டாமல், பல்வேறு மதில் சுவர்களைத்தான் எழுப்புகிறோம்.”

    ஐஸக் நியூட்டன்

    “இயற்கை ஒரு திறந்த புத்தகம் போன்றது. நியூட்டனுக்கு அதில் உள்ள மெய்ப்பாடுகள் சிரமமின்றி எளிதாகப் புரிந்தன,”

    ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்

    “டாலமி [Ptolemy] ஒரு பிரபஞ்சத்தை உருவாக்கினார்!  அது ஈராயிரம் ஆண்டுகள் நீடித்தன!  நியூட்டன் ஒரு பிரபஞ்சத்தைக் கண்டுபிடித்தார்!  அது இரு நூறாண்டுகள் நீடித்தன!  இப்போது டாக்டர் ஐன்ஸ்டைன் ஒரு புதிய பிரபஞ்சத்தைக் கண்டுபிடித்திருக்கிறார்!  அது எத்தனை ஆண்டுகளுக்கு நீடிக்கும் என்று யாருக்கும் தெரியாது!”

    ஜார்ஜ் பெர்னாட் ஷா (1856-1950)

    கோபுரத்தில் நின்று கோள்களை நோக்கிய நியூட்டன் !

    ‘மற்றவரை விடத் தீர்க்கமாக நான் எதையும் காண முடிவதற்குப் பல மாமேதைகளின் தோள் மீது நின்று கொண்டு நான் நோக்குவதுதான் காரணம்’ என்று ஐஸக் நியூட்டன் ஒருமுறை கூறியிருக்கிறார்! அவருக்குத் தோள் கொடுத்துத் தூணைப்போல் தாங்கிக் கொண்டிருப்பவரில் தலையாய மேதைகள் இருவர்! முப்பெரும் அண்டக் கோள்களின் சுற்று விதிகளைப் படைத்த ஜொஹானஸ் கெப்ளர், ஒருவர்! அடுத்து ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் ‘பெளதிக விஞ்ஞானத்தின் பிதா’ என்று போற்றிய காலிலியோ! பெளதிக விஞ்ஞானத்திற்கு விதையிட்டு நீர் ஊற்றிச் செடி யாக்கியவர் காலிலியோ என்று சொன்னால், அதை விருத்தி செய்துப் படரும் ஆல விழுதுகளாகப் பெருகச் செய்தவர், ஐஸக் நியூட்டன்!  முதன் முதல் விஞ்ஞானத் துறையில் நிறை [Mass], பளு [Weight], விசை [Force], முடத்துவம் [Inertia], வளர்வேகம் [Acceleration], தளர்வேகம் [Deceleration], ஈர்ப்பியல் [Gravity], அசைப்பியல் [Dynamics], ஓளிப்பட்டை [Light Spectrum], பகுப்பியல் கால்குலஸ் [Differential Calculus], தொகுப்பியல் கால்குலஸ் [Integral Calculus] ஆகிய கணித விஞ்ஞானப் பதங்களைத் தெளிவாக விளக்கி, அவற்றைக் கணிதச் சார்பியல் சமன்பாடுகளில் இணைத்தவர், ஐஸக் நியூட்டன் !

    பிரபஞ்சக் கோள் நகர்ச்சிக்குச் சீரான கணித அமைப்பாட்டை ஆக்கிய கெப்ளரின் ஒப்பற்ற விதிகளைப் பற்றிப் பரவசப் பட்டு, 1605 இல் நியூட்டன் கூறினார்: ‘பிரபஞ்சத்தின் அண்டகோள யந்திரம், வெறும் தெய்வீக ஆக்கம் என்று இல்லாது, ஒரு கடிகார வேலைப்பாடு என்று கெப்ளரால் அறியப்படுவது இனிமை தருகிறது ! கடவுள் சாவி கொடுத்துத் துவங்கிய பிரம்மாண்டமான கடிகார இரும்புச் சுருள் [Watch Spring] கொண்டது இந்தப் பிரபஞ்சம்’ என்று காண நியூட்டன் விரும்புகிறார்! பிரபஞ்ச அண்டங்களின் நகர்ச்சிகளில் [Celestial Mechanics of the Universe] மாறாத கணித விதிகளால் ஆளப் படுகின்றது என்று நியூட்டன் உறுதியாய் நம்பிடக் கெப்ளரின் அண்டகோள் விதிகள் உதவி செய்தன! புரியாத பிரபஞ்ச மர்மங்களைப் பூர்த்தி செய்ய இறுதியில், நியூட்டனே அண்டங்களின் இயக்கத்திற்குப் புதிய நியதிகள் ஆக்கவும், அவற்றின் நகர்ச்சிகளுக்கு ஓர் ‘கட்டமைப்பு அரங்கம்’ [Frame Work] அமைக்கவும் வேண்டிய தாயிற்று!

    காலிலியோ, கெப்ளர் பாதையைத் தொடர்ந்த கணித மேதை

    ஜெர்மன் வானியல் மேதை கெப்ளர் தனது முப்பெரும் அண்டக் கோள் விதிகளை ஆக்கிய பிறகு, அவை ஒன்றை ஒன்று ஓர் ஒழுங்கு நியதியில் ஏன் சுற்றி வருகின்றன என்ற வினா அவர் சிந்தையில் எழுந்தது! 1596 இல் கெப்ளர் எழுதிய ‘பிரபஞ்ச வரைவமைப்பின் மர்மம்’ [Cosmographic Mystery] என்னும் நூலில், சூரியன் பூத விசையைக் [Giant Force] கொண்டுள்ள தென்றும், அந்த விசையே மற்ற அண்ட கோளங்கள் தன்னைச் சுற்றி வர ஆளுகிற தென்றும் கூறுகிறார்! தூரம் அதிகமானால், பரிதியின் விசை எதிர் வீதத்தில் [Force inversely diminishes with distance] குறைகிறது என்றும் எடுத்துரைத்தார்!

    1600 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் விஞ்ஞானி வில்லியம் கில்பர்ட் [William Gilbert (1544-1603)] பூமி ஒரு பிரமாண்டமான காந்தம் [Giant Magnet] என்று கண்டுபிடித்ததை எடுத்துக் கொண்டு, சூரியனிலிருந்து எழும் காந்த விசையே மற்ற அண்ட கோளங்களைத் தள்ளித் தன்னைச் சுற்றி வரச் செய்கிறது என்று கெப்ளர் அறிவித்தார்!  அதே போன்று அண்ட கோளங்களில் காந்த விசை உள்ளதென்றும், அவ்விசைகளே அவற்றை ஒருங்கே இணைத்துக் கொண்டு ஒழுங்கு முறையில் பரிதியைச் சுற்றிவர உதவுகின்றன என்றும் கூறினார். மேலும் நியூட்டன் கால்குலஸ் [Calculus] என்னும் கணிதத்தை ஆக்குவதற்கு முன்னோடியாக உதவியவர் கெப்ளரே! தொலைநோக்கிக் கருவி தோன்ற ஒளியியல் [Optics] விஞ்ஞானத்திற்கு விதை யிட்டவரும் கெப்ளரே!

    பைஸா கோபுரத்தின் மேலிருந்து வேறுபட்ட பளுக் குண்டுகள் இரண்டை விழச் செய்து, ஒரே நேரத்தில் அவை தரையில் விழுந்ததைக் காட்டியவர், காலிலியோ! அதன்பின் 1604 இல் ‘விழும் அண்டங்களின் விதியை’ ஆக்கினார். ‘விழும் அண்டத்தின் உயரம், அது கடக்கும் நேரத்தின் ஈரடுக்கிற்கு நேர் விகிதத்தில் உள்ளது’ [The falling height by a body is proportional to the square of the elapsed time] என்பதே அந்த விதி! எறியப்படும் கணைகள் [Projectiles] சீர்வளைவு பாதையில் [Parabolic Path] செல்வதை கணித முறையில் காட்டினார்!

    ‘வெளிப்புற விசை பாதிக்காத ஓர் அண்டம் திசை மாறாமல், வேகம் திரியாமல் சீராகச் செல்கிறது’ என்று ஐஸக் நியூட்டனின் நகர்ச்சி விதிகளுக்கு [Newton ‘s Laws of Motion] அடியெடுத்துக் கொடுத்த பெளதிக விஞ்ஞானி, காலிலியோ! ஐஸக் நியூட்டன் கெப்ளரின் விதிகள், காலிலியோவின் சோதனைகள், கண்ணோக்குகள் [Observations] ஆகியவற்றை முழுமையாகப் பின்பற்றித் தனது உன்னத ‘ஈர்ப்பியல் நியதியை’ [Theory of Gravitation] உருவாக்கினார்!

    பெளதிகத்தில் ஐஸக் நியூட்டனின் அற்புதப் படைப்புகள்

    ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் ஒருவரைத் தவிர, உலக மாந்தர் கருதி யிருந்த பிரபஞ்சத்தின் அமைப்பாடை மாபெரும் அளவில் மாற்றிக் காட்டியவர், ஐஸக் நியூட்டன்! கெப்ளரின் ஒப்பற்ற அண்டக்கோள் சுற்று விதிகளையும் [Laws of Planetary Motion], காலிலியோவின் யந்திரவியலையும் [Galileo ‘s Mechanics] ஒருங்கிணைத்து, பிரபஞ்ச கோளங்களின் ‘அகிலமய ஈர்ப்பியல் விதியை’ [Universal Law of Gravitation] ஆக்கினார். நியூட்டனின் எதிரிகளும் அவரது ஈர்ப்பியல் தத்துவத்தை மனதுக்குள் ஆதரித்து வரவேற்றனர்!

    மூன்று யந்திரவியல் விதிகளையும், ஒப்பற்ற ஈர்ப்பியல் நியதியையும் படைத்ததாக நியூட்டன் நினைவுக்கு வந்தாலும், அவர் அணுவியலைப் [Atomism] பற்றி எழுதி யிருப்பதைப் பலர் அறிந்திருக்க மாட்டார்கள்! அவர் 1704 இல் ஆக்கிய ‘ஒளியியல்’ [Opticks] என்னும் நூலில் ‘அணுவியல் நியதிக்கு’ [Atomic Theory] வேண்டிய அரிய பல விஞ்ஞானக் கருத்துக்களை வழங்கி யுள்ளார்! ‘சோதனை அணுவியல் ரசாயனத்திற்கு’ [Experimental Atomic Chemistry] மூல கர்த்தாவான பிரிட்டிஷ் மேதை ஜான் டால்டன் [John Dalton (1766-1844)], நியூட்டனின் அணுவியல் கூற்றைப் பின்பற்றித் தனது புகழ் பெற்ற அணுவியல் நியதியை பிறப்பித்தார்!


    நியூட்டன் மனித இனத்துக்குப் பரிசாக அளித்த ‘இயற்கை வேதாந்தத்தின் கணிதக் கோட்பாடுகள்’ [‘Principia’ The Mathematical Principles of Natural Philosophy (1687)] விஞ்ஞான உலகில் புரட்சி செய்த முதல் கணிதப் படைப்பு. பதினெட்டு மாதங்களில் உதயமாகி வடிவம் பெற்ற அந்நூல், நியூட்டனின் தனித்துவ ஆராய்ச்சிகளில்தான் உருவானது. அது சிறப்பாக அண்ட கோளங்களின் நகர்ச்சி, அவற்றிடையே ஒன்றை ஒன்று கவர்ந்து ஆட்சி புரியும் ஈர்ப்பியல்பு ஆகியவற்றைக் கணித வடிவில் விளக்குகிறது. வெளிவந்த உடனே விஞ்ஞான வரலாற்றில் உலகின் மாபெரும் மகத்தான கணிதக் காவியமாக அது இடம் பெற்றது! அந்நூல் பிரபஞ்சத்தில் நிகழும் மர்மமான, புதிரான, மாயமான பல நிகழ்ச்சிகளுக்கு ‘அகிலமய ஈர்ப்பியல்பு’ [Universal Gravitation] மூலக் காரணம் என்று காட்டுகிறது! கடல் அலைகளின் உச்ச, நீச்ச எழுச்சிகள் [High, Low Tides] எழுவதற்குக் காரணம் காட்டியது! நிலவின் ஒழுங்கற்ற நகர்ச்சி [Irregular Motion] எவ்வாறு உண்டகிறது என்பதை விளக்குகிறது. ஆட்டமிடும் பிரபஞ்ச அரங்கை, அந்நூல் கணிதக் கோட்பாடுகள் மூலம் அறிவிக்கிறது!

    நியூட்டனின் அற்புதப் படைப்பு ‘கோட்பாடுகள்’ [Principia] என்னும் நூலின் கணிதச் சிறப்பை ஒப்பிட்டால், அது கணித மேதை யூக்ளிட் [Euclid] ஆக்கிய ‘அடிப்படைகள்’ [Elements] என்னும் நூலுக்கு இணையாகும்! அதன் பெளதிக நுணுக்கத்தையும், விளைவுகளையும் ஒப்பிட்டால், சார்லஸ் டார்வின் படைத்த ‘உயிர்ப்பிறவிகளின் மூல அடிப்படைகள்’ [Darwin ‘s Origins of Species] என்னும் நூலுக்குச் சமமாகும் !

    ஐஸக் நியூட்டனின் அரிய வாழ்க்கை வரலாறு

    இத்தாலிய மேதை காலிலியோ காலமான அதே ஆண்டு [1642], ஏசு மகான் பிறந்த நாள் டிசம்பர் 25 இல் உலக மெல்லாம் கொண்டாட, மாமேதை ஐஸக் நியூட்டன் இங்கிலாந்து லிங்கன்ஷயர், உல்ஸ்தோர்ப்பில் [Woolsthorpe, Lincolnshire] ஒரே பிள்ளையாகப் பிறந்தார். வானியல் மேதை கெப்ளர் பிறந்தது போல், குழந்தை முழு முதிர்ச்சிக்கு முன்னே [Premature Baby] வெளிவந்து, உயிரோடு வாழுமா என்று ஐயுறும்படி நலிந்து, மெலிந்து சிறிய வடிவில் இருந்தது! ஆனால் நியூட்டன் 84 வயது வரை வாழ்ந்து, வரலாற்றில் இதுவரை யாரும் சாதிக்க முடியாத மகத்தான விஞ்ஞான மெய்ப்பாடுகளை ஆக்கினார்! வேளாண்மையில் ஈடுபட்ட அவரது தந்தை, பிள்ளை பிறப்பதற்கு முன்பே இறந்து விட்டார். இரண்டு வருடங்களில் மறு முறைத் திருமணம் செய்து கொண்ட தாயும், புதுத் தந்தையும், ஐஸக் நியூட்டனைப் பாட்டியிடம் விட்டுவிட்டு, அருகில் இருந்த கிராமத்தில் வாழச் சென்றனர்! இரண்டு வயது பச்சிளம் குழந்தை நியூட்டன், தாய் தந்தையரின் அன்பும், அணைப்பும், ஆதரவும் இன்றி ஒன்பது ஆண்டுகள் தனித்து வாழ வேண்டிய தாயிற்று! சிறுவன் நியூட்டன் தந்தையை வெறுத்துத் தாயோடு அவரையும் எரித்து, வீட்டைக் கொளுத்தி அவர்கள் மீது தள்ளப் போவதாய் ஒரு சமயம் பயமுறுத்தினான்! பிற்கால மனநோயில் அவர் பாதிக்கப் பட்டதற்குப் பால்ய வயதில் இல்லறப் பாதுகாப்பு இல்லாது, பயங்கரத் தனி வாழ்வில் அவதி யுற்றதே காரணம், என்று பின்னால் கூறினார் நியூட்டன்!


    இரண்டாம் முறையாக விதவை ஆனதும், தாய் பத்து வயது நியூட்டனை அழைத்துக் கொண்டு போய் விவசாயத்தில் நுழைக்க முயன்றாள். அது தவறு என்று உணரப் பட்டு, பாட்டி நியூட்டனைக் கிரந்தம் இலக்கணப் பள்ளியில் [Grammar School in Grantham] சேர்த்தாள்! அங்கே அமைதியாக நடந்து கொண்ட நியூட்டன் படு மோசமாய்ப் படித்தான்! பிறகு பிரமிக்கத் தக்க அளவில் நியூட்டனின் அறிவு வெள்ளம் மடை திறந்தது! அவர் தங்கி யிருந்த இல்லம் ஒரு மருந்தியல் பட்டதாரிக்குச் [Pharmacist] சொந்த மானது. நியூட்டனின் பிற்கால ரசாயன வேட்கைக்கு, அவரே அடிகோலியவர்! சிறு வயதிலே சூரிய கடிகாரம் [Sun Dials], காற்றாடி மாடல் யந்திரம் [Model Windmill], நீர்க் கடிகாரம் [Water Clock], யந்திர வாகனம் [Mechanical Carriage], விளக்குக் கட்டிய பட்டம் [Kite with Lanterns at the Tail] ஆகியவற்றை சிறுவன் நியூட்டன் செய்தான். கிரந்தப் பள்ளி ஆசிரியர் ஒருவர், நியூட்டனின் அபார அறிவை வியந்து, நியூட்டன் கல்லூரிக்குப் போகத் தாயை உடன்பட வைத்தார்!

    1661 இல் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தின் டிரினிடி கல்லூரியில், நியூட்டன் சேர்ந்தார். அங்கே கணிதம், ஜியாமெட்ரி, டிரிகொனாமெட்ரி [Trignometry], வானியல் [Astronomy], ஒளியியல் [Optics] ஆகியவற்றைப் படித்தார். அவரது 23 ஆவது வயதில் அங்கே B.A. பட்டம் வாங்கினார். 1665 ஆம் ஆண்டு நியூட்டனின் பொற்காலம் என்று கூறலாம்! அப்போது பிளேக் நோய் பரவி, கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகம் இரண்டு ஆண்டுகள் தற்காலியமாக மூடப் பட்டது! அந்த சமயத்தில் ஈரிலக்கக் கூட்டின் nth அடுக்கு எனப்படும் ‘பைனாமியல் நியதி’ [Binomial Theorem (X + Y) to power n], பகுப்பியல் கால்குலஸ், தொகுப்பியல் கால்குலஸ் [Differential Calculus & Integral Calculus] ஆகியவற்றின் அடிப்படைகள், ஈர்ப்பியல்பின் [Gravitation] துவக்கக் கருத்துக்கள் நியூட்டனுக்கு உதயம் ஆகின!


    கால்குலஸ் என்று இப்போது அழைக்கப் படுவதை, நியூட்டன் ·பிளக்ஸியான்ஸ் [Fluxions] என்று அப்போது பெயரிட்டி ருந்தார். அடுத்து முப்பட்டைப் பளிங்கில் [Prism] சூரிய ஒளியைச் செலுத்தி நிறப்பட்டை [Light Spectrum] விரியும் விந்தையைக் கண்டு பிடித்தார்!  இதுவரை யாரும் ஓராண்டுக்குள் இவ்வாறு அரிய புதிய விஞ்ஞானக் கணிதப் படைப்புக்களை ஆக்கிய தில்லை!

    1668 இல் M.A. பட்டத்தைப் பெற்று, டிரினிடியில் சிறப்புநராகி [Fellow of Trinity], தனது 26 ஆம் வயதில் புகழ்மிக்க லுகாஸியன் கணிதப் பேராசிரியர் [Lucasian Professor of Mathematics] உயர் பதவி கிடைத்தது! முப்பது ஆண்டுகள் நியூட்டன் கேம்பிரிட்ஜிலே தங்கி, ஏறக் குறைய முழு நேரமும் தனியாகப் படித்துக் கொண்டும், மற்ற விஞ்ஞானிகளுக்குக் கடிதம் எழுதிக் கொண்டும் காலம் தள்ளினார்! 1672 இல் நியூட்டன் 30 வயதாகும் போது லண்டன் ராயல் குழுவினரின் சிறப்புநர் [Fellow of Royal Society, London] விருதைப் பெற்றார்!

    1687 இல் நியூட்டனின் முதல் பதிப்பு ‘பிரின்ஸிபியா’ வானியல் வல்லுநர், செல்வந்த நண்பர் எட்மண்டு ஹாலியின் [Edmund Halley (1656-1742)] நிதி உதவியில் அச்சாகி வெளிவந்தது. அப்போது லண்டனுக்கு வருகை தந்த உன்னத டச் விஞ்ஞானி கிரிஸ்டியன் ஹியூஜென்ஸ் [Christiaan Huygens (1629-1695)] நியூட்டனைக் கண்டு பேசினார். ‘பிரின்ஸிபியா’ 1713 ஆம் ஆண்டுக்குப் பிறகு இரண்டு முறை திருத்தப் பெற்றது.  ஓய்வின்றி இரவும் பகலும் உழைத்ததால், நியூட்டன் மிகவும் சோர்வுற்று, 1692 இல் தீவிர மனமுடக்கம் [Severe Mental Depression] அடைந்து, அவரது சீரான சிந்தனா சக்தி சிதைந்தது! அதற்குப் பிறகு நியூட்டனின் விஞ்ஞானப் படைப்புகள் பெருமளவில் குறைந்தன!

    நியூட்டன் கண்டுபிடித்த நகர்ச்சி விதிகள்

    1665 இல் பிளேக் நோய் பரவி அடைபட்டுப் போன அந்த இரண்டு ஆண்டுகளில் நியூட்டனின் ‘அசைப்பியல்’ [Dynamics] பெளதிகச் சிந்தனை ஆரம்ப மானது. அதற்கு முன்பே அவர் ‘வட்ட நகர்ச்சி’ [Circular Motion], ‘மோதும் அண்டங்கள்’ [Colliding Bodies] ஆகியவற்றைப் பற்றி சிந்தித்திருந்தார். விசை [Force], முடத்துவம் [Inertia], நகர்ச்சி [Motion], சுழல்வீச்சு விசை [Centrifugal Force] ஆகியவை அண்டங்களை எவ்வாறு பாதிக்கின்றன என்றும் அவர் அறிந்திருந்தார். அவற்றைப் பயன் படுத்தி அவர் புதிய நகர்ச்சி விதிகளை [Laws of Motion] ஆக்கினார்!

    முதல் விதி: ஓர் அண்டத்தைப் புற விசை எதுவும் தள்ளாத போது, அது நிற்கும்; அல்லது நேர் கோட்டில் சீரான வேகத்தில் செல்லும். இவ்விதியே இப்போது ‘முடத்துவக் கோட்பாடு’ [Principle of Inertia] என்று அழைக்கப்படுவது.  எந்த ஒரு பண்டத்தையும் நகர்த்த, ஒரு விசை தேவைப்படும் என்பது அரிஸ்டாடில் காலம் முதலே கூறப் பட்டது! இவ்விதி விசைக்குத் தெளிவான விளக்கத்தைத் தருகிறது.

    இரண்டாம் விதி: ஓர் அண்டத்தின் நகர்ச்சி வேக மாறுபாடு அதன் நிறைக்கு எதிர் விகிதத்திலும், தள்ளும் விசைக்கு, செல்லும் திசைக்கு நேர் விகிதத்திலும் உள்ளது. இவ்விதி வளர்வேகக் கோட்பாடு [Principle of Acceleration] என்று குறிப்பிடப் படுகிறது. [விசை = நிறை x வளர்வேகம்], [Force = Mass x Acceleration]. அதாவது விசை ஓர் அண்டத்தின் நிறைக்கு [Mass] ஏற்றபடி நேர் விகிதத்தில் வேக வளர்ச்சியை அதனில் உண்டாக்குகிறது.

    மூன்றாம் விதி: ஒவ்வொரு நேர் உந்தலுக்கும் எதிரே அதற்குச் சமமான எதிர் உந்தல் உண்டாகுகிறது. நியூட்டன் ஆறு உபரி விதிகளை [Corollaries], மூன்றாவது விதிக்கு எழுதினார். எப்படி ஓர் அண்டம் நகர்த்தப் படுகிறது என்பதை, மூன்றாம் விதி விளக்குகிறது.

    ஆப்பிள் பழ வீழ்ச்சி, ஈர்ப்பியல் நியதிக்கு அடிகோலியது!

    நியூட்டன் தனது ஈர்ப்பியல் நியதியை 23 ஆவது வயதில் யூகித்தார்! ஆப்பிள் மரத்திலிருந்து ஆப்பிள் பழம் பூமியை நோக்கி விழுந்து சிந்தனையைக் கிளரியது,  ஐஸக் நியூட்டனின் கூற்றுப்படி மெய்யாக நடந்த ஒரு நிகழ்ச்சி! ஆப்பிளைத் தன்னகத்தே இழுக்கும் பூமி, மாபெரும் நிலவையும் அதே போன்று தன்வசம் இழுத்துப் பாதையில் சுற்ற வைக்க வேண்டும் என்று நியூட்டன் அனுமானித்தார்! ஆனால் அந்தக் கருத்து முழுமை பெறும் வரைத் தாமதம் செய்துக் கவனமோடுப் பல்லாண்டுகள் கழித்தே அதை வெளியிட்டார்! அவரது ஈர்ப்பியல் நியதி அண்டக் கோள்கள் நீள்வட்ட வீதியில் சுற்றுவதற்குக் காரணத்தை விளக்கியது. பூமியை நோக்கி அண்டங்கள் விழுவதை எடுத்துக் காட்டியது. கை தவறிக் கீழே விழுந்துடையும் பண்டத்துக்கும் காரணி ஈர்ப்பியல் விசையே! அண்ட கோளங்களைச் சீராகப் பரிதியைச் சுற்றி வரச் செய்வதும் ஈர்ப்பியல் விசையே என்று நியூட்டன் கருதினார்.

    அவர் ஆக்கிய ‘அகிலமய ஈர்ப்பியல் நியதி’ [Universal Gravitational Theory] இதுதான்: ‘இரு அண்டங்களுக்கு இடையே ஏற்படும் ஈர்ப்பு எனப்படும் கவர்ச்சி விசை அவற்றின் நிறைகளின் பெருக்கலுக்கு [Product of two Masses] நேர் விகிதத்திலும், இடைத் தூரத்தின் ஈரடுக்கிற்குத் தலைகீழ் விகிதத்திலும் [Inversely Proportional] உள்ளது’.  பூமியின் மேலே எறியப்படும், அல்லது கீழே விழும் ஓர் அண்டத்தின் பளு [Weight], அந்த அண்டத்தின் ஈர்ப்பியல் விசையின் அளவைக் காட்டுகிறது. ஆனால் ஐன்ஸ்டைனின் ‘ஒப்பியல் நியதி’ [Theory of Relativity] ஈர்ப்பியலை, வரைவடிவில் [Geometrically] காண்கிறது. அதாவது ‘ஓர் அண்டத்தின் பிண்டம் [Matter] அதன் அருகே உள்ள பிரதேசத்தில், நாற்புற அங்களவு கொண்ட கால-வெளித் தொடர்ச்சி வளைவை [Curvature of the Four Dimensional Space-Time Continuum] உண்டாக்குகிறது’. அவ்வாறு ஐன்ஸ்டைன் ஈர்ப்பியலை இருபதாம் நூற்றாண்டில் விளக்கினார்!

    நியூட்டன் ஆக்கிய ஒளியியல் (Optics) நியதி

    நியூட்டனின் படைப்புப் பொற்காலம் எனப்படும் [1665-1666] இரண்டு ஆண்டுகளில் ஒருசமயம், சூரிய ஒளியை முப்பட்டைப் பளிங்கில் [Prism] கடந்து செல்ல விட்டு, ஒளி பல்நிறப் பட்டையாய்ப் [Light Spectrum] பிரிவு படுவதைக் காட்டினார். அந்நிறங்கள் ஏழு: [(VIBGYOR) Violet, Indigo, Blue, Green, Yellow, Orange & Red]. அச்சோதனை மூலம் நிறப் பிரிவுகள் ஒளியின் உடன்பிறந்த குணாதிசயம் என்றும், நிறங்கள் முப்பட்டைப் பளிங்கின் தன்மைகள் இல்லை என்றும் விளக்கம் தந்தார்! அந்தச் சோதனையின் துணை விளைவு நியூட்டன் எதிரொளி தொலை நோக்கியை [Reflecting Telescope] மேம்படுத்தி விருத்தி செய்தது!

    1704 ஆம் ஆண்டில் நியூட்டன் எழுதிய ஒளியியல் [Optics] நியதி என்ன கூறுகிறது ? ‘கதிர் வீசும் அண்டங்களின் ஒளியானது நுண்ணிய துகள்களைக் [Particles] கொண்டது’. பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை அக்கோட்பாடு நீடித்தது. அதன் பின்பு ‘ஒளியின் அலைக் கோட்பாடு’ [Wave Theory of Light] ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தது.  பிறகு 20 ஆம் நூற்றாண்டில் மைகேல்ஸன் ஐன்ஸ்டைன் [Michelson, Einstein] ‘ஒளியின் மின்காந்தக் கோட்பாடு’ [Electro-magnetic Theory of Light] மற்ற கோட்பாடுகளைக் கீழே தள்ளி, அதன் கை ஓங்கியது!

    நியூட்டன், லைப்னிஸ் படைத்த கால்குலஸ் கணிதம்

    நியூட்டன் விஞ்ஞான ஆராய்ச்சிகளை செய்து கொண்டு வந்த போது, 1665 இல் அவர் கண்டு பிடித்து விருத்தி செய்தது, சிற்றிலக்கங்களைக் கையாளும் ‘பகுப்பியல் கால்குலஸ்’ [Differential Calculus].  பலவித யந்திரவியல், நீரழுத்த அசைப்பியல் பிரச்சனைகளைத் [Mechanical, Hydrodynamic Problems] தீர்வு செய்ய கால்குலஸ் கணித முறையை உபயோகிக்கலாம். விஞ்ஞானப் பொறியியல் பிரச்சனைகளையும் தீர்வு செய்யப் பயன்படுத்தலாம். ‘ஃபிளக்ஸியான் கோட்பாடு’ [Theory of Fluxions] என்று பகுப்பியல் கால்குலஸ் கணிதத்திற்குப் பெயர் கொடுத்த நியூட்டன், அதை 38 வருடங்கள் தாண்டி 1704 ஆம் ஆண்டில்தான் அவர் எழுதிய ‘பிரின்ஸிபியா’ [Principia] என்னும் நூலில் வெளியிட்டார்! ஆனால் அந்நூலில் கூறப்படும் கோட்பாடுகளுக்குக் கால்குலஸை நியூட்டன் பயன் படுத்தவில்லை!

    கால்குலஸை முதலில் கண்டு பிடித்தது யாரென்று ஒரு முரண்பாடுக் கேள்வி நியூட்டன் காலத்திலே வாய்ப் போராய் மூண்டது! சிலர் நியூட்டன் என்று எண்ணுகிறார்! வேறு சிலர் ஜெர்மன் கணித மேதை லைப்னிஸ் [Leibniz] என்று கருதுகிறார்! நியூட்டன்தான் முதலில் கண்டு பிடித்தாலும், அவர் முப்பத்தி யெட்டு ஆண்டுகள் வரை அதை வெளியிடவே யில்லை! ஒரே சமயத்தில் தனியாகச் சற்றுத் தாமதமாக விருத்தி செய்த லைப்னிஸ் முதலாகக் கால்குலஸை வெளி உலகுக்கு அறிவித்தார்! அத்துடன் லைப்னிஸியன் கால்குலஸ் நியூட்டனின் ஃபிளக்ஸியான்ஸை விடச் சீரானதாகவும், செம்மைப்பாடு உள்ளதாகவும், முழுமைப்பாடு பெற்றதாலும் அதுவே இப்போது யாவராலும் கையாளப் படுகிறது.

    நியூட்டன் கால்குலஸைப் பயன்படுத்தி, சூரியன், பூமி உள்படச் சூரிய குடும்பத்தின் ஒவ்வோர் அண்டத்தின் நிறையைக் கணித்தார்! பூமியின் திணிவு [Density] நீரின் திணிவைப் போல் ஐந்து, ஆறு மடங்குகளுக்கு இடைப்பட்ட தென்று [மெய்யாக 5.5] மதிப்பீடு செய்தார். வாழையடி வாழையாய் வாழ்ந்து மறைந்த பல்வேறு மேதைகள், நியூட்டனின் விஞ்ஞான சாதனைகளைக் கண்டு பிரமித்து, ‘அவை மானிட ஆற்றலுக்கும், அனுபவத்திற்கும் அப்பாற்பட்ட ஒரு மாமேதையின் ஆக்கமென்று’ வியந்தனர்!

    கடவுளைப் பற்றி ஐஸக் நியூட்டன் கருத்துக்கள்.

    நியூட்டனுக்கு ரசவாதம் [Alchemy], மதவியல் [Theology], சரித்திரம் [History], மாய விஞ்ஞானம் [Occult Science] ஆகியவற்றில் ஆர்வமும் மிக்க நம்பிக்கையும் உண்டாயினும், அவர் வெளியே அதைக் காட்டிக் கொள்வதில்லை! தனது ஆழ்ந்த கருத்துக்கள், சிந்தனைகள், கண்டு பிடிப்புகள், நம்பிக்கைகள் எதையும் மற்ற மாந்தரிடம் பகிர்ந்து கொள்ள விருப்பம் இன்றித், தனிமையின் இனிமையில் எப்போதும் ஆராய்ச்சியில் காலம் தள்ளுவதே, நியூட்டனுக்குப் பிடித்தமானது! தான் செய்யும் ஆராய்ச்சியில் மனம் ஊன்றி நியூட்டன் ஆழமாய் மூழ்கிப் போவதுண்டு! அல்லாவிடில் அவரது மூளை மதச் சிந்தனையில் சிதறிப் போய்விடும்!

    நியூட்டன் ஒரு மூர்த்தியை நம்புபவர், மும்மூர்த்தி அன்று [Unitarian not a Trinitarian] ! அதாவது கடவுள் ஒன்றே !  அது மூவடிவம் அற்றது! [Trinity means Father, Son & Holy Spirit]. நியூட்டனுக்குக் கடவுள் நம்பிக்கை உண்டு!  ஆனால் அவருக்கு ஏசுக் கிறிஸ்து மீதும், புனித ஆவி [Holy Spirit] மீதும் நம்பிக்கை இல்லை! நியூட்டன் காலத்தில் அவரைப்போல் மத நம்பிக்கை கொண்டவர், பிரிட்டனில் தண்டிக்கப் பட்டனர்! 1696 ஆம் ஆண்டில் மும்மூர்த்தி மீது நம்பிக்கையற்ற ஒருவர் தூக்கிலிடப் பட்டார்!  மூவடிவத்தில் நம்பிக்கையற்ற ஐஸக் நியூட்டன் தண்டனையிலிருந்து எப்படியோ தப்பிக் கொண்டார்!  1689, 1701 ஆண்டுகளில் பிரிட்டிஷ் பாராளு மன்றத்தில், நியூட்டன் பணி செய்தார். 1696 முதல் 1727 வரை பண அச்சகத்தில் அதிபதியாகப் [Master of Mint] பணி யாற்றினார். ராயல் சொஸடியின் [Royal Society] அதிபதியாக 1703 இல் தேர்ந்தெடுக்கப் பட்டார். 1705 ஆம் ஆண்டு அன்னி ராணியால் [Queen Anne] பிரிட்டிஷ் தீரராக [Knight] ஆக்கப் பட்டார்!

    நியூட்டனின் குண மாறுபாடு, இறுதிக் கால வாழ்வு

    முப்பது வயதிலே தலை நரைத்துப் போனாலும், 84 வயது வரைக் கிழவராய் வாழ்ந்த நியூட்டன், கடைசிவரை கண்ணாடி போட்டுக் கொள்ள வில்லை! அத்தோடு திடகாத்திரமாயும் இருந்தார்! எல்லாப் பற்களும் ஒருவிதப் பழுதின்றி அத்தனையும் சீராக இருந்தன வென்று அறியப் படுகிறது!  நியூட்டனுக்கு ஞாபக மறதி மிகுதி! பெளதிகச் சிந்தனையில் ஆய்வுக் கடலில் மூழ்கி யிருக்கும் போதெல்லாம், தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது, தன்னைச் சுற்றி யாருள்ளார் என்பது நியூட்டனுக்குத் தெரியாது! ஒன்றையே ஆழ்ந்து எண்ணிக் கொண்டு உலகையே மறந்து விடுபவர், நியூட்டன்! படுக்கை மெத்தை மேல் அரை நிர்வாணத்தில் மணிக் கணக்காக அமர்ந்திருப்பார் என்று சொல்லப் படுகிறது! அடிக்கடி தான் உணவு அருந்தி விட்டோமா, இல்லையா என்பது கூட அவருக்கு நினைவிருக்காது!

    நியூட்டன் ஒரு பேராசைக்காரர்! புகழ்ச்சிகள் மீது அவருக்கு வேட்கை மிகுதி! எதையும் சந்தேகப்பட்டு, அவரது கோட்பாடுகளை எதிர்ப்போரிடம் போரிடத் தாவும் சண்டைக்காரர்! கால்குலஸை யார் முதலில் படைத்தவர் என்ற வாதப் போரில், தனியாகப் படைத்த ஜெர்மன் கணித மேதை லைப்னிஸ் [Leibniz] கூட நியூட்டன் போட்ட சண்டை ஓர் உதாரணம்! கால்குலஸை முதலில் கண்டு பிடித்த நியூட்டன், வெளி யிடாமலே பல்லாண்டுகள் வைத்திருந்தவர்! ஆனால் லைப்னிஸ் அவருக்குப் பின்னால் கண்டு பிடித்து, உலகுக்கு முதலாக அறிவித்தவர்!


    நியூட்டன் பதினேழாம் நூற்றாண்டில் ஆக்கிய ‘பிரின்ஸிபியா’ கணித நூல், ஐன்ஸ்டைன் ஒப்பியல் நியதி [Relativity Theory], குவாண்டம் யந்திரவியல் [Quantum Mechanics] தோன்றிய இருபதாம் நூற்றாண்டின் புதிய விஞ்ஞான முற்போக்கு நிலைக்கு மாற்றப்பட வேண்டிய தாகிறது! ஆயினும் ஒளிவேகத்திற்கு நிகரற்ற வேகமுடைய அண்டங்கள், நாமறிந்த முப்புற அமைப்பாடுகளில் [X,Y,Z Three Dimensional Systems] நகரும் அண்டங்கள் ஆகியவற்றுக்கு மட்டுமே நியூட்டனின் நியதிகள் ஏற்றவை.

    லண்டன் மாநகரில் இனிதாக வாழ்ந்து, தன் அழகிய மருமாள் [Niece] இல்லத்தைக் கண்காணித்துக் கொள்ள, நியூட்டன் இறுதி ஆண்டுகளில் படிப்புகளைத் தொடர்ந்தார்! இல்லத்தில் அவரது ஆராய்ச்சிகளுக்குத் தேவையான எல்லாக் கருவிகளும், சாதனங்களும் வசதியாக எப்போதும் அமைக்கப் பட்டிருந்தன. 1725 ஆம் ஆண்டு நியூட்டனுடைய புப்புசங்களில் பழுதேற்பட்டு, தூய காற்றுள்ள இடத்திற்குக் கொண்டு செல்லப் பட்டார்! அதன் பின்பு படிப்படியாக வலுவிழந்து, ஐஸக் நியூட்டன் தனது 84 ஆவது வயதில் 1727 ஆம் ஆண்டு மார்ச் 20 ஆம் தேதி காலமானார். பிரிட்டனின் மகா மேதைகள் புதைக்கப்படும் வெஸ்ட்மின்ஸ்டர் ஆபேயில் [Westminster Abbey], அரச மரியாதையோடு அவரது உடல் அடக்கம் செய்யப் பட்டது!

    நியூட்டன் திருமணம் செய்து கொள்ளவில்லை! வாலிப வயதில் அண்டை வீட்டுப் பெண்ணொருத்தி மீது லிங்கன்ஷயரில் [Lincolnshire] அவருக்கு அன்பு உண்டானது! ஆனால் தனது விஞ்ஞானப் பணிக்கு தடையாக இருக்கும் என்று நியூட்டன் அந்த உறவைத் தொடரவில்லை! அதற்குப் பிறகு எந்தப் பெண்ணின் மீதும் அவருக்குக் காதல் மலராமலே போனது! நியூட்டனின் காம இச்சையைப் பற்றி அவரது சரிதையில் எதுவும் அறிய முடிவதற்கு இல்லை!

    “இயற்கை ஒரு திறந்த புத்தகம் போன்றது. நியூட்டனுக்கு அதில் உள்ள மெய்ப்பாடுகள் சிரமமின்றி எளிதாகப் புரிந்தன,” என்று ஐஸக் நியூட்டனைப் பற்றி ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் கூறியிருக்கிறார்!

    *****************************
    தகவல்:

    1.  Men of The Stars -Sir Isaac Newton By Patrick Moore (1986)

    2  Isaac Newton’s Life By Alfred Rupert Hall (Microsoft Encarta) (1998)

    3.  Philosophy 100 Essential Thinkers -Sir Isaac Newton By Philips Stokes (2002)

    4.  The Story of Astronomy “The Clockwork Universe” By Peter Auguston (2008)

    5.  Wikipedia – Sir Isaac Newton (December 15, 2010)

    **************

    S. Jayabarathan (jayabarat@tnt21.com) December 17, 2010

    Share
  • முக்கோணக் கிளிகள் படக்கதை – 19

    –சி. ஜெயபாரதன்.

     

    முக்கோணக் கிளிகள்
    (பெரிதாக்கப்பட்ட​ நெடுங்கதை​)

    படக்கதை – 19

    மூலப் பெருங்கதை : சி. ஜெயபாரதன், கனடா
    வசனம், வடிவமைப்பு : வையவன்
    ஓவியர் : தமிழ்

    ​______________

    Mukkonakkilikal - 73

    Mukkonakkilikal - 74

    Mukkonakkilikal - 75

    Mukkonakkilikal - 76

     

    தொடரும்…

    ***********************************************************************************************************************

    வசன கர்த்தா திரு. வையவன்:

    mukonakkiligal 1வையவன் என்ற பெயரில் அறியப்படும் எம்.எஸ்.பி. முருகேசன், தமிழ் நாட்டில்  வேலூர் மாவட்டத்தில் வாணியம்பாடிக்கு  அடுத்த வெள்ளக்குட்டை கிராமத்தில் பிறந்தவர். 33 ஆண்டுகள் ஆசிரியப்பணி புரிந்து, ஓய்வு பெற்று சென்னையில் புகழ்பெற்ற யுராலாஜி  மருத்துவரான டாக்டர் எம்.ஜீவகன் என்ற தம் மகனுடன் அடையாரில் வசித்து வருகிறார். 58 ஆண்டுகளாக ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதி வரும் இவர் இணையவெளி என்ற வலையிதழை நான்கு ஆண்டுகளாக வெளியிட்டு வருகிறார்.அது அச்சுப் பதிப்பாகவும் வருகிறது. தவிர சொந்தமாக பதிப்பகத் தொழில் புரியும் வையவன் ஆங்கிலத்திலும் தமிழிலும் நூல் வெளியீடு விற்பனை செய்கிறார். ஒரு மகன், ஒரு மகள். 1000 சிறுகதைகள், 10 குறுநாவல்கள், 10 நாவல்கள் மற்றும் எண்ணற்ற கவிதைகள் எழுதி வெளியிட்டவர்.
    http://innaiyaveli.blogspot.in/2014/06/blog-post_3024.html ,  http://innaiyaveli.blogspot.in/

    ஓவியக் கலைஞர் தமிழ்:

    tamizhselvanஓவியர் தமிழ் என்று அழைக்கப்படும் திரு. செந்தமிழ்ச் செல்வன் தமிழ் இதழ்களில் [மங்களம் வார வெளியீடு, சந்தா மாமா குழுவைச் சேர்ந்த பொம்மை, கேளிக்கைப் புத்தகப் [காமிக்ஸ்] படங்கள் பிறமொழி நூல் வெளியீடுகள்] 1990 ஆண்டு முதல் படங்கள் வரைந்து வருகிறார். கணபதி போன்ற தெய்வப் படங்கள், மகாத்மா காந்தி போன்ற உலக மேதைகளின் படங்களையும் வரைந்துள்ளார். அவரைத் தமிழ் இதழ்களிலும், நூல்களிலும் ஓவியங்கள் வரைய ஆதிமுதல் ஊக்குவித்தவர் திரு. வையவன். ஓவியக் கலைஞர் தமிழ்த் திரைப் படங்களுக்கும், தொலைக் காட்சித் தொடர்களுக்கும் வசனம் எழுதி வருகிறார்.

    ***********************************************************************************************************************

     

     

     

     

     
    Share
  • ஆண்டவன் ஒரு நாள் கடைவிரித்தான் …

    கவிஞர் காவிரிமைந்தன்.
    ஆண்டவன் ஒரு நாள்

    ஆண்டவன் ஒரு நாள் கடைவிரித்தான் …

    அன்பை வாங்கிட எவரும் இல்லை!!!????

    ஜீவராசிகள் முதல் மானுடவர்க்கம்வரை வகை வகையான உயிரினங்கள், இயற்கை வளங்கள் முதல் விண்மீன்களென பால்வீதியையும் படைத்தவன்.. விநோதமாக இருக்குமிடம் தெரியாமல் தானிருந்து ஆட்டுவிக்கும் நாடகமே இவ்வாழ்க்கை!  இதில் ஏற்றுள்ள பாத்திரங்களை இயல்பாக நடிப்பதைத் தவிர வேறு வழியில்லாமல் மர்ம முடிச்சுக்கள் இடப்பட்டிருக்கின்றன!  மேலும் இதயத்தையும் மூளையையும் சம்பந்தப்படுத்தி – மனம் என்கிற கடலையும் மனிதனுக்குள் படைத்துவிட்டான்!  ஆசையெனும் அலைகளில் தனக்குள்தானே சிக்கி எவன் ஒருவர் மீள்கிறானோ எங்கே பார்க்கலாம்.. எனும் விசித்திர விளையாட்டை தினசரி நடத்துவிக்கும் சூத்திரதாரி இறைவன்!

    அவன் படைத்த உலகமிது என்பதை அழகழகாய் வரியமைத்து வாலி தந்த பாடலிது!  அவரவர் ஆசை என்னவென்று ஆங்கோர் பட்டியலிட்டு அன்பினை வாங்கிட எவருமில்லை எனும் அவலத்தைப் படம் பிடித்துக் காட்டுகின்றார்! எண்ணரதமேறி.. எழுத்துப் படை நடத்தி ஈட்டிடும் வெற்றிகளில்தான் இதுபோன்ற தத்துவ தரிசனங்கள் தாமாக வந்து விழும்! அத்தகைய பாடலிது! சுட்டிக்காட்டிய நண்பர் ஷேக் சிந்தா மதார் அவர்களுக்கு சிறப்பு நன்றிகள் உரித்தாக்குகின்றேன்!

                    vaali(1)     K.V.M.     t.m.s.

    திரையிசைத் திலகம் கே.வி.மகாதேவன் இசையமைப்பில் வாலியின் வைர வரிகள்.. திரைப் படம் ‘டில்லி மாப்பிள்ளை’ பாடியவர் டி.எம்.சௌந்தரராஜன் அவர்கள்!!.

    http://youtu.be/lN_4hTXIG9A

    காணொளி: http://youtu.be/lN_4hTXIG9A

     

    படம்: டில்லி மாப்பிள்ளை
    பாடல்: வாலி
    இசை: கே.வி.மகாதேவன்
    குரல்: டி. எம். எஸ்.

    ஆண்டவன் ஒருநாள் கடை விரித்தான்
    அதில் ஆயிரம் ஆயிரம் பொருள் குவித்தான்
    அவரவர் நிலைமைக்கு விலையைச் சொன்னான்
    அவரவர் தேவைக்கு வாங்கச் சொன்னான்

    ஆண்டவன் ஒருநாள் கடை விரித்தான்
    அதில் ஆயிரம் ஆயிரம் பொருள் குவித்தான்
    அவரவர் நிலைமைக்கு விலையைச் சொன்னான்
    அவரவர் தேவைக்கு வாங்கச் சொன்னான்

    பெண்களோ அழகை வாங்க வந்தார்
    ஆண்களோ ஆசையை வாங்க வந்தார்
    தலைவர்கள் புகழை வாங்கிக் கொண்டார்
    புலவர்கள் பொய்களை வாங்கிக் கொண்டார்

    ஆண்டவன் ஒருநாள் கடை விரித்தான்
    அதில் ஆயிரம் ஆயிரம் பொருள் குவித்தான்
    அவரவர் நிலைமைக்கு விலையைச் சொன்னான்
    அவரவர் தேவைக்கு வாங்கச் சொன்னான்

    குருடர்கள் பார்த்திட விழி கேட்டார்
    ஊமைகள் பேசிட மொழி கேட்டார்
    உறவினர் மாண்டவர் உயிர் கேட்டார்
    ஒருசிலர் மேலுக்கு விலை கேட்டார்

    எதையும் வாங்கிட மனிதர் வந்தார்
    விலை என்னவென்றாலும் அவர் தந்தார்
    இதயம் என்பதை விலையாய்த் தந்து
    அன்பை வாங்கிட எவரும் இல்லை

    Share
  • ஒரு வசன நடை…

    இசைக்கவி ரமணன்

     

     

    நடையாய் நடக்கிறேன், எந்த

    நாட்டமுமே இல்லாமல்; நான்

    நடக்கத்தான் வேண்டும் என்பதாக, யாரோ

    நாட்டியிருக்கிறார்கள் ஒரு சாத்திரத்தை

    என்பது போல

    நடையாய் நடக்கிறேன், எந்த

    நாட்டமுமே இல்லாமல்

     

    எனக்கென்னவோ நடை என்பது….

     

    ஏழ்மையின் ஏற்றங்களில் ஒன்றாகவும்

     

    வறுமையின் வெற்றிச் சின்னமாகவும்

     

    எந்தக் கூட்டத்திலும் எதிலும் படாமல்

    தனித்திருக்கக் கற்றுத்தரும்

    ஏகாந்தமாகவும்

     

    அந்தக் கிளையில் இந்தக் கணத்தில்

    ஒரு

    பறவை வந்து அமரக்கூடும் என்பதுபோல்

    ஏதோ ஒரு பாட்டு எனக்கு நேர்ந்துவிடத் தோதான

    ஏற்பாடு போலவும்

     

    உடலை வசக்கவும், உணவுண்ணத் தகுதியை

    அடைவதற்கான அழகான ஏற்பாடாகவும்

     

    கடலாய்ப் பரந்த சமூகக் கோலங்களைக்

    கடுகாய் இருந்து கணக்கெடுக்கும் வசதியாகவும்

     

    இன்னும் பலப்பல அழகுகளாகவும்

    இருக்கிறதே எனக்கு! உங்களுக்கு?

     

    நேரே நடந்தும் வளைந்து நடந்தும்

    தூரே பார்வையைத் தொலைத்து நடந்தும்

    நம்மோடு நாமிருக்கும் நலம்தினமும் நல்குகின்ற

    நடையல்லால் வேறுதவம் நமக்குச் சாத்தியமா?

     

    நடந்துகொண்டே இருக்கின்றேன்; எதையோ

    கடந்துகொண்டே இருப்பது போலவும், எதுவுமே

    நடக்காமல் ஏதோ ஒற்றைத்

    தடத்திலேயே நின்றுகொண்டிருப்பதைப் போலவும்

    அடிக்கடி தோன்றுகிறது, பம்பர

    அசைவு மயக்கத்தில் அசையாத தோற்றம் போல

     

    எத்தனை தெருக்களை

    இத்தனை நடைநடந்து விழுங்கினாலும்

    களைத்த கால்களும்

    களைக்காத தெருக்களும்

    மிஞ்சத்தான் செய்கின்றன

     

    தெருக்களும் தங்கள் களைப்புகளைத்

    திருட்டுத் தனமாக மறைத்துக்கொள்வதைச்

    சருகுகள் எனக்குச் சொல்லியிருக்கின்றன

     

    நடை என்பது

    எனக்கு நான் அன்றாடம்

    செய்துகொள்ள வேண்டிய மரியாதை

     

    நடை என்பது

    உறவு பிரிவுகளுக்கு வாய்ப்பில்லாத

    ஆகாசம் போன்ற நேசம்

     

    அதெல்லாம் இருக்கட்டும்

    அத்தனை பேர் முன்னிலையிலும்

    ஆருக்கும் தெரியாமல், உன்னை

    முத்தமிட்டுக் கொண்டு

    முழுதாகக் காதலிக்கும்

    முறிவற்ற சுகத்தையும்

    என்னுள்ளே வைத்தபடி

    ஏதேதோ பேசிக்கொண்டு

    கற்பனை என்னும்

    கட்டற்ற நிஜத்தில் நான்

    உயிரைப் புதைத்தபடி, இந்த

    உடல் வளையவர

     

    இந்த

    நடையை விட்டால், வேறு

    நாதிதான் எமக்குண்டோ!!

     

    31.08.2014 / ஞாயிறு / 16.21

    Share
  • திண்ணையின் கோரிக்கை

    இசைக்கவி ரமணன்

     

    உனக்கே உனக்காக  (37)

    திண்ணையின் கோரிக்கை

     

    [mixcloud]http://www.mixcloud.com/Vallamai/%E0%AE%A4%E0%AE%A3%E0%AE%A3/[/mixcloud]

     

    ஓவியம் : மாருதி
    ஓவியம் : மாருதி

     

     

    இந்த மரத்தடியில்
    இந்தத் திண்ணையைப் போல்தான்
    இருந்து வந்திருக்கிறேன்
    இத்தனை நாளும்

    மழை…வெய்யில்…புழுதிக் காற்று..
    மத்தியான வெப்பங்கள்
    எப்போதேனும் சற்று
    யாரோ நிலவுக்கு இட்ட முத்தங்கள்
    கோணம் தவறி உதிர்ந்தது போலக்
    கொட்டிய பனித்துளிகள்

    பறவைகளின் எச்சம்
    பசுவின் சாணம்
    சின்னக் குழந்தையின்
    சிறுவாய் உதிர்த்த மிச்சம்
    சிரித்தபடிப் பறக்கும் காலத்தின்
    சிறகுகளால் பதறிச்
    சிந்திவிட்ட காதலர்களின் கண்ணீர்

    யாரோ வீச
    எந்தக் காற்றிலும்
    ஏனோ அசையாமல்
    வீழ்ந்து கிடக்கின்ற கந்தைத் துணி

    ஊத ஊதப் பெருகிக்கொண்டேயிருக்கும்
    தூசு

    ஒட்டாமல் உறவாடாமல்
    புரளக் காத்திருக்கும் சருகு
    இன்னும் எத்தனை எத்தனையோ!
    மல்லாந்த குடிகாரன் போலத்தான்
    தன்வயமின்றிக் கிடக்கிறேன்
    தலை கிறுக்காத தெளிவுடன்

    உட்கார்ந்து சென்றவர்கள்
    ஒருக்களித்துப் படுத்தவர்கள்
    ஒன்றுமில்லாமல் வந்து
    ஒரு கவிதை வாய்க்கப்பெற்று
    உயிர்சிலிர்க்கச் சென்றவர்கள்…

    வந்தவண்ணம் சென்றவண்ணம்
    மாறிக்கொண்டே இருக்கும் இவற்றில்
    எனக்கென்ன வாழ்க்கை?
    ஏது அடையாளம்?

    தாமரை இலையில், யாரோ
    தவறவிட்ட ஒரு வைரக்கல் போல
    ஒரு முறை
    ஒரே ஒரு முறை
    உட்காராமல் உட்கார்ந்தாய் நீ

    மரத்துப்போய்க் கிடந்த என்
    மார்பைப் பிளந்துகொண்டு
    இத்தனை காலம் நான்
    சகித்த
    சாட்சியாய்ப் பார்த்த
    ஊரின் உணர்ச்சிகள் அத்தனையும்
    இயற்கையின் மாற்றங்கள் எல்லாமும்
    விழித்துக்கொண்டு
    விஸ்வரூபம் எடுத்துவிட்டன

    ஏதோ அமைதியை,
    தேடாமல் இங்கு வந்த
    உன்னெதிரே

    அதுவரை
    அமைதிமயமாய் இருந்த திண்ணை
    ஆரவாரப் பேய்க்கூட்டமாயிற்றே!

    சந்நிதிக்கு வாய்த்த தெய்வம்
    திண்ணையில் நேரலாமா?

    உனக்கொன்றும் இல்லை
    என்
    உளமார்ந்த மண்டியிடுதலும்
    உனக்குச் சங்கடம்தான்
    குட்டக்கைப் பிச்சையின்
    கும்பிடு போலே…

    சடமாகக் கிடந்து,, ஒரு
    சவமாகும் தறுவாயில் இருந்து
    சகத்தின் உணர்ச்சிக் கலகங்கள் அனைத்தும்
    உள்ளே புகுந்து
    உயிராகிக் கூத்தடிக்கும் நான்
    என்ன ஆவேன்?
    எங்கே போவேன்?

    என்னைப் பொருட்படுத்தும் கட்டாயம்
    இல்லைதான் உனக்கு

    ஆயினும்
    என் கதையைக் கேட்டதனால்
    என் கதியைப் பார்த்ததனால்
    சின்னக் கணத்தில், என் காதலின்
    சிலிரிப்பை ஏற்றதனால்
    வீழ்ந்து கிடந்தபடியே
    விண்ணப்பித்துக் கொள்கிறேன்…

    இன்னும் ஒருமுறை
    ஒரே ஒரு முறை
    உட்கார்ந்து
    செல்ல முடியுமா?

    நான்
    சடமாகாமல்
    எனக்கு விடுதலை இல்லை

    நான்
    சவமாகாமல்
    உனக்கு விமோசனம் இல்லை

     

    ஓவியத்திற்கு நன்றி : மாருதி

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    கிரேசி மோகன்

    crazy

    “சோவெனக் கொட்ட, சுகரவி* பாமாரி,
    கோவினம் நின்று குளிர்காய, -பூவிரலால்,
    கோவர்த் தனமேந்தும் கண்ணனை, கேசவிசை,
    ஆவர்த் தனமாய் அளிப்பு”….கிரேசி மோகன்….

    *-சுகரவி-எழுத்தறிவித்த சு.ரவி, க.ரவிகள்
    ‘’சொல்லித் தெரிவதில்லை ரவிகளின் கவித்வம்’’….

    Share
  • ஒரு கேள்வி கேட்கும் கேள்வி

    இசைக்கவி ரமணன்

     

     10606109_333216606854072_7032261539889036622_n

    எங்கிருந்தேன் எனத் தெரியாமல்

    எங்கோ தானே நானிருந்தேன்?

    எதுவோவாகத் தானே இருந்தேன்?

    எந்தக் கவலையும் இன்றித்தானே கிடந்தேன்?

     

    எவனுக்கோ என்ன ஆனதோ

    ஏன்? எதற்கு? எப்படி? என்றான்

    எதிரில் வந்து நின்றுவிட்டேன்

    எவனோ அதற்கு விடைசொன்னான்

    இவன் அதை வாங்கிச் சென்றுவிட்டான்

     

    எவனுக்குள் நான் எழுந்தேனோ

    அவனுக்குள் நான் தீர்ந்துபோயிருக்கலாம்

    எழுந்த எனக்கு மரணமேது?

    எழுதலைத் தவிர வாழ்வுதான் ஏது?

    எனக்கிந்த உலகில் தீர்வுதான் ஏது?

    சிரஞ்சீவியைப் போலச் சித்திரவதை ஏது?

     

    வினாக்குறியோடுதான்

    விதையும் முளைக்கிறது

    வியந்து நின்றுதான்

    விழுகிறது மழைத்துளி

     

    ஆர்வத்திற்கும் ஆச்சரியங்களுக்கும் நடுவே

    அறிவானால் அல்லாட்டம்

    அன்பானால் பொன்னூஞ்சல்

     

    கிளியாய் விடையைத் தடவிக்கொண்டு

    களிப்புடன் செல்கின்றானே!

    கிளைக்கப் போகிறது இன்னொரு கேள்வி

    களைக்கப் போகிறது காளைத் தோள்

    விடைபெற்று ஒரு போதும்

    வினா தீர்ந்து போய்விடாது

     

    எனக்கு விடை கொடு! இல்லை

    என்னிடம் விடைபெற்றுக்கொள்!

     

    நீ என்னில் கரையாமல்

    நான் உன்னுள் ஒடுங்காமல்

    நீயோ நானோ

    நிம்மதியைக் காண முடியுமா என்ன?

    எப்படி?

    எதற்கு?.

     

    30.08.2014 / சனி / 14.04

     

     

     

     

     

    Share
  • பிரதமரின் மனிதாபிமானமிக்க புதிய நிதித் திட்டம்!!

    பவள சங்கரி

    தலையங்கம்

     ‘ஜன் தன் யோஜனா’ என்கிற அனைவருக்கும் வங்கிக் கணக்கு என்ற திட்டம் மூலமாக நம் இந்தியப் பிரதமர் மோடி அவர்கள் தம் சுதந்திர தினச் செய்தியை நடைமுறைப்படுத்தியுள்ளார். புதிய சேமிப்புத் திட்டங்களின் மூலமாக எளிமையான முறையில் சேமிப்பு வங்கிக் கணக்குகள் துவக்கப்படும் என்றும் முதல் நாளிலேயே சுமாராக ஒரு கோடி வங்கிக் கணக்குகள் துவக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதைப்பற்றி மிகப்பெரிய அளவில் விளம்பரங்களும் செய்யப்பட்டுள்ளன. நம் நாட்டில் பெரும்பாலான மக்களுக்கு வங்கிக் கணக்கு என்பதே சிம்ம சொப்பனமாக இருந்து வந்திருக்கிறது. அதனாலேயே மக்கள் தங்கள் சேமிப்புப் பணத்தை நகைச் சீட்டுத் திட்டங்கள், பொய்யான விளம்பரங்கள் மூலமாக அதிக வட்டி தருவதாகக் கூறி கொள்ளையடிக்கப்படும் பல்வேறு திட்டங்கள், தேக்கு மரத் திட்டம், ஈமு கோழி வளர்ப்புத் திட்டம் போன்ற பல திட்டங்கள் மூலமாக ஏமாந்து வருவது வாடிக்கையாக நடந்து கொண்டிருப்பதை நாமும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். விவசாயிகளின் தற்கொலை, கந்துவட்டிக்காரர்களின் அராஜகம் இப்படி பல கொடுமைகளுக்கு நம் பிரதமரின், மனிதாபிமானம் நிறைந்த இத்திட்டம் தீர்வு சொல்லியிருக்கிறது என்றே கொள்ளலாம். ஆனாலும் நடைமுறையில் இதனை அமல்படுத்துவதில் பெரும் சிக்கல் ஏற்படலாம். வங்கிப் பணியாளர்களின் எண்ணிக்கை பன்மடங்கு உயர்த்தப்பட வேண்டியதும் அவசியமாகிறது.

    தற்போது சி.பி.ஐ. விசாரணையில் இருக்கும், சாரதா சிட்பண்ட் நிறுவனம். கவர்ச்சிகரமான சேமிப்புத் திட்டங்களை அறிவித்து, மக்களிடையே கோடிக்கணக்கில் நிதி திரட்டி பின் முறைகேடுகளில் ஈடுபட்டதை அடுத்து, அந்நிறுவனம் மூடப்பட்டதால் மக்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளானதுதான் கண்ட பலன். உழைத்து சம்பாதித்த பணம் கொள்ளையடிக்கப்படுவதும் பின்னாட்களில் மக்கள் அலறுவதும் வாடிக்கையாகிவிட்ட சமயத்தில் பிரதமரின் இத்திட்டம் ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். இதற்கு, ஒரு சில திட்டங்கள் அறிவித்த கொஞ்ச நாட்களிலேயே நீர்த்துப் போனதை மனதில் கொண்டு செயல்பட வேண்டுமென்றால், மக்கள் வங்கிகளில் சேமிப்பதை தங்கள் வழக்கமாகக் கொள்ள வேண்டும். இத்திட்டம் நன்முறையில் வெற்றி பெற வேண்டுமென்றால் சேமிப்புக் கணக்குகளுடன் ஆதர்ச அட்டையை இணைக்க வேண்டியது அவசியமாகிறது. கல்விக்கடன் திட்டங்கள், விவசாய மானியங்கள் போன்ற அனைத்து அரசு மானியங்களும், இந்த சேமிப்பு கணக்குகளுடன் இணைக்கப்பட வேண்டியதும் அவசியமாகிறது. உயிரில்லாத கணக்குடையவர்களின் அனைத்து மானியங்களும், அரசு சலுகைகளும் நிறுத்தப்பட அறிவிக்க வேண்டும். சற்று சிரமமான காரியம் என்றாலும் இதைச் சரியான முறையில் செயல்படுத்துவதன் மூலம் காலப்போக்கில் இத்திட்டம் செயலிழந்துவிடாமல் காக்கவும் முடியும். இந்தச் சேமிப்புகள் மூலமாக குறைந்தபட்சம் ரூ. 10,000 கோடி சேமிப்பாக வங்கிகளுக்குக் கிடைக்கும் வாய்ப்புள்ளது. இந்த சேமிப்புகளுக்கான வட்டி விகிதங்களை மேலும் சற்று கூட்டி அறிவிப்பதன் மூலமாக அதிக வட்டிக்காக ஏமாறுபவர்களின் எண்ணிக்கையும் குறையும் என்பதும் நிதர்சனம்.

    Share
  • 6 அடி உயரமுள்ள ஸ்ரீ யக்ஞ ரூபிணி மகா ஐஸ்வர்ய ப்ரத்யங்கிரா தேவி தமிழகம் முழுவதும் கரிக்கோல பவனி தன்வந்திரி பீடத்தில் ஸ்ரீ ப்ரத்யங்கிரா தேவி

    நோயற்று வாழட்டும் உலகு’

    ஓம் ஸ்ரீ மகா பீடம் ஸ்ரீ ஓம் மகா பீடம் ஹரி ஓம் மகா பீடம்

    வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் விரைவில் பிரதிஷ்டை செய்யப்படவுள்ள 6 அடி உயரமுள்ள ஸ்ரீ யக்ஞ ரூபிணி மகா ஐஸ்வர்ய ப்ரத்யங்கிரா தேவி தமிழகம் முழுவதும் கரிக்கோல பவனி தன்வந்திரி பீடத்தில் ஸ்ரீ ப்ரத்யங்கிரா தேவி

    Pratyangira Karikolam

    இந்தக் கலியுகத்தில் மனிதர்களுக்கு இருக்கிற மிகப் பெரிய சவால் & எப்படி நிம்மதியைப் பெறுவது என்பதில்தான் இருக்கிறது. எத்தனைதான் அனுசரணையாக நடந்து கொண்டாலும், எத்தனைதான் சம்பாதித்தாலும், எத்தனைதான் பரிகாரங்களைச் செய்து வந்தாலும் மன நிம்மதி என்பது ஒருவர் எதிர்பார்ப்பது மாதிரி அமைய மாட்டேன் என்கிறது.

    இறை பக்தியின் மூலமும், சிரத்தையான வழிபாட்டின் மூலமும்தான் நிம்மதியை ஒருவர் பெற முடியும். வாழ்க்கையில் மென்மேலும் ஒருவர் உயர உயரத்தான் அவருக்குப் பல விதமான சங்கடங்கள் வருகின்றன. அதாவது போட்டி, பொறாமை போன்றவற்றால் பலவிதமான அவஸ்தைகள் வந்து சேர்கின்றன. இவற்றைக் களையத்தான் வழிபாடுகளும், பரிகார பூஜைகளும் உதவுகின்றன.

    குறிப்பிட்ட ஒரு தெய்வத்தைக் குறித்தோ, குறிப்பிட்ட ஒரு மகானின் அதிஷ்டானத்தைத் தரிசித்தோ ஒருவர் நிச்சயமாக மன நிம்மதியைப் பெற முடியும். உள்ளார்ந்த பக்தி சிந்தனையுடன் வழிபடும் அன்பர்களுக்கு தெய்வங்களும் மகான்களும் வேண்டுவனவற்றை அருளி வருகிறார்கள்.

    வாலாஜா ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தின் ஸ்தாபகரும், நிறுவனருமான டாக்டர் ஸ்ரீமுரளிதர ஸ்வாமிகள் சொல்கிறார்.
    ”இன்றைக்கு மனிதர்களுக்கு வருகின்ற வியாதிகள் இன்னதுதான் என்று சொல்வதற்கில்லை. பிறந்த குழந்தைக்கும்கூட வியாதிகள் வருவதாக மருத்துவர்கள் சொல்கிறார்கள். ஒவ்வொரு வகையான வியாதிக்கும் அதற்கென்று தேர்ந்த டாக்டர்கள் அதாவது ஸ்பெஷலிஸ்ட்டுகள் இருக்கிறார்கள்.

    அதுபோல் மனிதர்களுக்கு எந்த நேரத்தில் எது தேவையோ அவற்றை வழங்குவதற்குப் பல தெய்வங்கள் இருந்து வருகின்றன. பல மகான்கள் சூட்சும தேகத்துடன் மனிதர்களின் பிணிகளை விரட்ட நடமாடி வருகிறார்கள்.

    மனிதர்களின் அனைத்து பிணிகளையும் போக்குவதற்குத்தான் எண்ணற்ற தெய்வ சந்நிதிகளும், மகான்கள் சந்நிதிகளும் வாலாஜாபேட்டை ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் அமைந்துள்ளன. இந்த உலகில் வசிக்கின்ற அனைவரும் தங்களுக்குத் தேவையான பிரார்த்தனையை முன்வைத்து இந்த பீடம் வந்து செல்கின்றனர்.

    விதிவசத்தால் நமக்குள்ள குறைகளை அறவே போக்குவதற்கும், குறைகளின் வீர்யத்தைக் குறைப்பதற்கும் ஹோமங்கள் நடத்துகிறோம். எனவேதான், இந்த தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஹோமங்கள் பிரதான இடத்தை வகிக்கின்றன. தற்போது ஸ்ரீபிரத்யங்கிரா தேவியின் கல் விக்கிரகம் தமிழகம் முழுதும் கரிகோல பவனி துவங்கி உள்ளது. உலகில் உள்ள அனைத்து ஜீவ ராசிகளின் நலன் வேண்டியும், மனிதர்களின் மனதில் உள்ள துன்பங்களும் துயரங்களும் நீங்கி அவர்களின் முகத்தில் என்றென்றும் மகிழ்ச்சி பரவவும், போதுமான மழை பெய்து நீர்நிலைகள் பெருகி விவசாயிகள் மகிழ்ச்சி பெற வேண்டியும், என்னென்ன வியாதியால் அன்பர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்களோ, அவர்களுக்கெல்லாம் அந்த நோய்கள் நீங்கவும், வாழ்வில் சகல விதமான ஐஸ்வர்யம் பெருகவும் வேண்டி இந்த கரிகோல யாத்திரை அன்னையின் அருளாசியோடு அமர்க்களமாகத் துவங்கி உள்ளது.

    தெய்வம் உலா வருகிறது என்றால், பலரது மன வேதனைகளையும், உடல் பிணிகளையும் தீர்த்து அவர்களுக்கு நல்லருள் புரிவதற்காகத்தான் இப்படிப்பட்ட வலம் நடக்கிறது. அதனால்தான் தெய்வம் நமது இல்லம், நகரம், கிராமம் மற்றும் பொது இடங்களில் தேடி விரும்பி வரும்போது உரிய முறையில் அந்த தெய்வத்தை வரவேற்று, மரியாதைகளை செய்ய வேண்டும். விக்ரகமானது ப்ரதிஷ்டையாகி விட்டால் அந்த பாக்யம் நமக்கு கிடைக்காதல்லவா!
    இந்த யாத்திரையின்போது பக்தர்கள் வேண்டிக் கொள்ளும் இடங்களுக்கோ, அலுவலகங்களுக்கோ, கல்வி சாலைகளுக்கோ, பொது இடங்களுக்கோ, திரளான பக்தர்கள் வசிக்கும் காலனிகளுக்கோ, அல்லது உங்கள் வீடுகளுக்கோ ஸ்ரீபிரத்யங்கிரா தேவியை வரவழைத்து சிறப்பு யாகம் செய்ய வேண்டுமானால், நடத்திக் கொள்ளலாம். எனது பீடத்தின் சேவகர்களுடன் நானே நேரில் வந்து உங்கள் வாழ்க்கை வளம் பெற யாகம் நடத்தித் தருகிறேன். தேவைப்படுபவர்கள் வாலாஜாபேட்டை ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தைத் தொடர்பு கொள்ளவும்.

    இந்த கரிகோல யாத்திரையின்போது ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தின் பிரசாதங்கள் அனைத்தும் பக்தர்களுக்குக் கிடைக்கும் விதத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீதன்வந்திரி பகவானின் பிரசாதங்களான ரக்ஷை, தேன், சூரணம் உள்ளிட்ட அனைத்து பிரசாதங்களும் கிடைக்கும். மகா பீடம் பிரதிஷ்டைக்குத் தேவைப்படும் மந்திரங்கள் எழுத வேண்டிய நோட்டுகளும் பக்தர்களுக்கு விநியோகிக்கப்படும்.

    கரிகோல யாத்திரை பூர்த்தி ஆன பின் அர்த்த மேருவுடன் இந்த பிரத்யங்கிரா தேவி மகா பீடத்தில் அமர்ந்து, தன்னைத் தேடி வருவோரை ஆசிர்வதிக்க உள்ளாள். கோபம் உள்ள இடத்தில்தான் குணம் இருக்கும் என்பார்கள். அதுபோல் இந்த பிரத்யங்கிரா தேவி பார்ப்பதற்கு ஆயுதங்கள் தரித்திருந்தாலும், புன்னகை ததும்பும் முகத்துடன் காணப்படுகிறாள். இந்த தேவியின் திருமுகத்தை ஒரு முறை நாம் தரிசித்தால் அவள் நம்மை ஆட்கொண்டு விடுவாள்.

    மடியில் ஐஸ்வர்ய கலசத்தை ஏந்தியும் இந்த பிரத்யங்கிரா தேவி மகாபலிபுரம் பிரகாஷ் சிற்ப கலைக்கூடம் ஸ்தபதி திரு.லோகநாதன் அவர்கள் மூலமாக 6அடி உயரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளாள். பிரத்யங்கிரா தேவிக்கு நடக்கும் வழிபாடுகள் ஆதார பீடத்தில் உள்ள அர்த்த மேருவையும் சென்றடையும். ஒரே நேரத்தில் அன்னையையும், அர்த்த மேருவையும் ஆராதித்த பலன் பக்தர்களுக்குக் கிட்டும்.

    மன அமைதி, பகைவர் தொல்லைகளை விரட்டுதல், தோஷங்களை நிவர்த்தி செய்தல், தீவினைகளை விரட்டுதல் போன்ற பிரார்த்தனைகளுக்கு இந்த தேவியை பிரார்த்தித்தால் நல்லது.

    அன்னை பிரதிஷ்டை ஆன பின் ஒவ்வொரு அமாவாசை மற்றும் பௌர்ணமி போன்ற தினங்களில் விசேஷமான மிளகாய் யாகம் நடைபெறும். யாகத்தில் கலந்து கொள்வதும், இவளுக்கு மிகவும் ப்ரீதியான மிளகாயுடன் தரிசிப்பதும் மிகுந்த நன்மை தரும். அவளை அண்டினால், நாம் கேட்கும் சகல வரங்களையும் அவள் அருள்வாள்” என்று பூர்த்தி செய்தார் டாக்டர் ஸ்ரீமுரளிதர ஸ்வாமிகள்.

    குறிப்பு : உடல் நலம், மன நலம் காக்கும் விதத்தில் வாலாஜா, ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் உள்ள ஸ்ரீதன்வந்திரி, ஸ்ரீசுதர்சனர், ஸ்ரீஆரோக்ய லக்ஷ்மி உத்ஸவர் விக்ரகங்களைக் கொண்டு தமிழகத்தில் ஆங்காங்கே தன்வந்திரி ஹோமங்கள் நடத்தி வருகிறார் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்.
    மேலும் தொடர்புக்கு :

    ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்

    தன்வந்திரி நகர், கீழ்புதுப்பேட்டை, அனந்தலை மதுரா,

    வாலாஜாபேட்டை : 632 513. வேலூர் மாவட்டம், தமிழ்நாடு

    தொலைபேசி: 04172 : 230033 | மொபைல்: 94433 30203

    www.dhanvantripeedam.com | e-Mail : danvantripeedam@gmail.com

    Share
  • உள்ளமெங்கும்…..

    இசைக்கவி ரமணன்

     

    உனக்கே உனக்காக   (36)

    [mixcloud]http://www.mixcloud.com/Vallamai/%E0%AE%89%E0%AE%B3%E0%AE%B3%E0%AE%AE-%E0%AE%8E%E0%AE%99%E0%AE%95%E0%AE%AE/[/mixcloud]

     

    உள்ளமெங்கும் இங்குமங்கும்
    (பாடல்)

    Paintings of rural indian women - Oil painting (12)

    உள்ளமெங்கும் இங்குமங்கும் துள்ளும் மானே!
    பள்ளமெங்கும் வந்துபொங்கும் வெள்ளத் தேனே!

    உயிரில் இரவில் கண் சிமிட்டும் வானே
    உன்னிலே மின்னிமின்னிக் கரைந்தேனே
    உன் பந்துக்கன்ன வாசனை எனக்குத்தானே! (உள்ள)

    நெஞ்சில்
    தட்டுப்பட்ட காதலினைத் தொட்டுப்பார்த்தபோது ஒரு
    தோற்றம் எழுந்தது – எந்தக்
    கட்டுக்குள்ளும் சிக்கிடாத கடலொன்று கண்முன்பு
    விரிந்து வளர்ந்தது! நான்
    தொட்டெடுத்த ஒன்று, எந்தன் தோளைக்கொஞ்சும் போது, கரை
    தொட்டுக்கொள்ள உந்தன் தோளைப் பற்றிக்கொண்டு நின்றதென்ன தவறா? உன்
    பாதங்களைப் பற்றிக்கொண்டு பட்டுமுத்தம் இட்டுக்கொண்டு
    பாட்டுச் சொன்ன வேகமெந்தன் தவமா? (உள்ள)

    கையிரண்டில் அள்ளிக்கொள்ளக் கண்ணிரண்டும் பின்னிக்கொள்ளக்
    காலம் இருந்தது
    ஒன்றும் ஒன்றும் சேர்ந்தும் அது ஒன்று என்று நின்ற புதுக்
    கோலம் எழுந்தது! அடி
    என்ன இன்னும் சொல்ல? நீ இன்னும் நெஞ்சைக் கிள்ள, நான்
    முன்னும் பின்னும் இன்றியொரு புத்தம்புது விதையென
    மண்ணில் விழுந்தேன்! நீ
    முத்தமிடும் நேரத்தினில் சத்தமின்றிச் சோலையாக
    எழுவேன்!

     

    படத்திற்கு நன்றி : இளையராஜா

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    கிரேசி மோகன்

    crazy

    “கண்ணம்மா பாரதியார், கண்டாற்போல் சித்திரத்தில்,
    வண்ணமாய் கேசவ் வடித்தளித்தாய், -இன்னுமோர்,
    நூற்றாண்(டு) இருந்து, நவநீத ஆழ்வானாய்,
    சாற்றுன் பிரஷ்பா சுரம்”….கிரேசி மோகன்….

    Share