ஒரு கேள்வி கேட்கும் கேள்வி
இசைக்கவி ரமணன்
எங்கிருந்தேன் எனத் தெரியாமல்
எங்கோ தானே நானிருந்தேன்?
எதுவோவாகத் தானே இருந்தேன்?
எந்தக் கவலையும் இன்றித்தானே கிடந்தேன்?
எவனுக்கோ என்ன ஆனதோ
ஏன்? எதற்கு? எப்படி? என்றான்
எதிரில் வந்து நின்றுவிட்டேன்
எவனோ அதற்கு விடைசொன்னான்
இவன் அதை வாங்கிச் சென்றுவிட்டான்
எவனுக்குள் நான் எழுந்தேனோ
அவனுக்குள் நான் தீர்ந்துபோயிருக்கலாம்
எழுந்த எனக்கு மரணமேது?
எழுதலைத் தவிர வாழ்வுதான் ஏது?
எனக்கிந்த உலகில் தீர்வுதான் ஏது?
சிரஞ்சீவியைப் போலச் சித்திரவதை ஏது?
வினாக்குறியோடுதான்
விதையும் முளைக்கிறது
வியந்து நின்றுதான்
விழுகிறது மழைத்துளி
ஆர்வத்திற்கும் ஆச்சரியங்களுக்கும் நடுவே
அறிவானால் அல்லாட்டம்
அன்பானால் பொன்னூஞ்சல்
கிளியாய் விடையைத் தடவிக்கொண்டு
களிப்புடன் செல்கின்றானே!
கிளைக்கப் போகிறது இன்னொரு கேள்வி
களைக்கப் போகிறது காளைத் தோள்
விடைபெற்று ஒரு போதும்
வினா தீர்ந்து போய்விடாது
எனக்கு விடை கொடு! இல்லை
என்னிடம் விடைபெற்றுக்கொள்!
நீ என்னில் கரையாமல்
நான் உன்னுள் ஒடுங்காமல்
நீயோ நானோ
நிம்மதியைக் காண முடியுமா என்ன?
எப்படி?
எதற்கு?.
30.08.2014 / சனி / 14.04

