Blog

  • வால்மீனை முதன்முதல் நெருங்கிய ஐரோப்பிய விண்ணுளவி ரோஸட்டாவின் தளவுளவி வால்மீனில் இறங்கப் போகிறது.

     

    Rosetta near comet

     

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

     

    http://www.esa.int/spaceinvideos/Videos/2013/10/Rosetta_s_twelve-year_journey_in_space

    http://www.dailymail.co.uk/sciencetech/article-2715387/Rosettas-best-view-Esa-releases-incredible-images-comet-just-620-miles-away-spacecraft-closes-in.html

    http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=swNXPxqgW_w

    பரிதிக் கருகில் சுற்றும் வால்மீனை
    நெருங்கி ஈசா விண்ணுளவி
    முதன்முதல் தளவுளவி ஒன்றை
    இறக்கப் போகுது  !
    வால்மீன் உற்பத்தி செய்யும்
    வளையத் தட்டை
    சில்லி விண்ணோக்கி கண்டுபிடித்தது !
    முந்திரிப் பருப்பு போல்
    தோற்றம்  !
    வளையத் தட்டில் வடை போல்
    மையத்தில் துளை !
    அழகு முகம் காட்டி, வால்மீன்
    வழிபடும் பரிதியை,
    வாலைப் பின்னே தள்ளி !
    வயிற்றுக் குள்ளே உறைந்து விட்ட
    உயிரின வளர்ச்சிக்
    கல்லறைகள் !
    தூரத்தில் பரிதி  ஒளிக்கனல் குன்ற
    வால்மீன் ஒளி வாலும்
    பாம்பு போல்
    அடங்கும்
    பனிப் பேழைக்குள் !

    +++++++++++++

     

    Mission details

     

    சுமார் பத்தரை ஆண்டுகள்  சூரியனை ஐந்து முறை சுற்றி  6.4 பில்லியன் கி.மீ. [ 3.8 பில்லியன் மைல்] தூரம்  ஒரு வால்மீனை நெருங்கும் குறிப்பயணம் நோக்கிக் கடந்த பிறகு, இப்போது [ஆகஸ்டு 6, 2014] அதை அடைந்து விட்டோம் என்று அறிவிப்பதில் நாங்கள், பேருவப்பு அடைகிறோம்.  ஐரோப்பாவின் ரோஸட்டா விண்ணுளவியே முதன்முதல் ஒரு வால்மீனைச் சந்தித்து, விண்வெளித் தேடலில் பெருஞ் சாதனையாக ஒளியூட்டி ஒரு வரலாற்று முக்கியத்துவம் பெற்றது.

    ஜான் ஜேக்கஸ் டோர்டைன் [ESA Director General]

    இன்றைய மகத்தான வெற்றி [ஆகஸ்டு 6, 2014]  பேரளவு உலக நாடுகளின் கூட்டுறவு முயற்சியால் பல பத்தாண்டுகள் நீடித்துழைத்துப் பெற்றதாகும்.  1970 இல் குறித்திட்டம் தோன்றி 1993 இல் அங்கீகாரம் பெற்று நீண்ட கால முயற்சிக்குப் பிறகு ஒரு வால்மீன் விஞ்ஞானப் பொக்கிசம் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.   அப்புதிய தகவல் வான்மீன் பாடப் புத்தகத்தைத் திருத்தி எழுதப் போகிறது.

    அல்வாரோ  கிமெனெஸ்  [ESA Director of Science & Robotic Exploration]

     

    ajay

    ரோஸட்டா முதன்முதல் அனுப்பிய வால்மீன் வடிவமே பேரளவு சிந்தனை எழ வைத்தது.   இரட்டை வடை அமைப்பில் [Double-Lobed Structure]  சூரிய மண்டல் வரலாற்றில் இந்த வால்மீன் இரண்டு தனித்த வால்மீன்கள் இணைப்புபோல் தெரிந்தது.   அல்லது நீண்ட காலம் பயணம் செய்து தேய்ந்து சுருங்கிய தோற்றமாக இருக்கலாம். இம்மாதிரி தனித்துவ மர்ம அண்டங்களைச் சோதிப்பதற்கு ஏற்றது ஈசாவின் ரோஸட்டா விண்ணுளவி.

    அடுத்த வரலாற்றுச் சாதனை ஈசாவின் பிலே தளவுளவி வால்மீன் தளத்தில் தடம் வைத்து முதன்முதல் ஆராயப் போவது.  இன்னும் சில மாதங்களில் விண்ணுளவி வால்மீனின் தலையை ஆராய்ந்து விடும்.  ரோஸட்டாவின் தளவுளவி வால்மீனில் இறங்கத் தகுதி பெற்ற ஐந்து தளங்களை ஈசா விஞ்ஞானிகள். தேர்ந்தெடுத்துள்ளார்.   2014 அக்டோபர் மாத நடுவில் இறங்குவது எந்தத் தளமென்று உறுதி செய்யப்பட்டும்.  நவம்பர் 11 இல் தளவுளவி அடுத்து இறங்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

    மாத்தியூ டெய்லர் [Rosetta Project Scientist] 

     

    Philae Lander

    ஈசா ஏவிய ரோஸட்டா விண்ணுளவி முதன்முதல் ஒரு வால்மீனை நெருங்கிப் படமெடுத்தது

    2004 ஆண்டில் ஈசா ஏவிய ரோஸட்டா விண்ணுளவி சுமார் பத்தரை ஆண்டுகள் தொடர்ந்து மூன்று பில்லியன் மைல்  பயணம் செய்து, வால்மீன் ஒன்றை [Comet : 67P /Churyumov- Gerasimenko] நெருங்கிக் கொண்டிருக்கிறது. அது பூமியிலிருந்து 405 மில்லியன் கி.மீ. [240 மில்லியன் மைல்] தூரத்தில் உள்ளது.   வால்மீன் தற்போது சூரிய உள் மண்டலத்தில் சுமார் மணிக்கு 55,000 கி.மீ.  [33,000 mph] வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது.  2004 ஆண்டில் பயணம் துவங்கி இதுவரைச் சூரியனை 6.5 ஆண்டு நீள்வட்டச் சுற்றில் சுற்றி பூமிக்கும், செவ்வாய்க் கோளுக்கும் இடைப்பட்ட அரங்கில் செல்கிறது.   திட்டமிட்டபடி ரோஸட்டா விண்ணுளவி வால்மீனை ஓராண்டுக்கும் மேலாக நெருங்கி ஆராய்ந்து வரும்.

    சூரிய மண்டலத்தின் பூர்வீகத் தோற்ற அண்டங்களாய் வால்மீன்கள் கருதப் படுகின்றன.   பூமியில் நீர்வளத்தையும், உயிரின வர்க்கத்தையும் தோன்ற வைக்க, வால்மீன்களின் தாக்குதல்கள் உதவி இருக்கலாம் என்பது விஞ்ஞானிகளின் முடிவுகளில் ஒன்று.   ரோஸட்டா விண்ணுளவித் திட்டத்தின் குறிக்கோள் : வால்மீன்களின் அமைப்பை அறிவதும், அவற்றின் புதிரான இயக்கத்தைப் புரிய வைப்பதும் ஆகும்.

     

    ESA control room

     

    முதன்முதல் வால்மீனை 100 கி.மீடர் தூரத்தில் [60 மைல்] நெருங்கிய ரோஸட்டா விண்ணுளவி, மேலும் நெருங்கிச் சென்று 30 கி.மீ. [20 மைல்] தூரத்தில் ஆராயும்படி திட்டமிடப் பட்டுள்ளது.  ரோஸட்டா முதன்முதல் அனுப்பிய வால்மீன் வடிவமே பேரளவு சிந்தனை எழ வைத்தது.   இரட்டை வடை அமைப்பில் [Double-Lobed Structure]  சூரிய மண்டல் வரலாற்றில் இந்த வால்மீன் இரண்டு தனித்த வால்மீன்கள் இணைப்புபோல் தெரிந்தது.   அல்லது நீண்ட காலம் பயணம் செய்து தேய்ந்து சுருங்கிய தோற்றமாக இருக்கலாம். இம்மாதிரி தனித்துவ மர்ம அண்டங்களைச் சோதிப்பதற்கு ஏற்றது ஈசாவின் ரோஸட்டா விண்ணுளவி.

    அடுத்த வரலாற்றுச் சாதனை ஈசாவின் பிலே தளவுளவி வால்மீன் தளத்தில் தடம் வைத்து முதன்முதல் ஆராயப் போவது.  இன்னும் சில மாதங்களில் விண்ணுளவி வால்மீனின் தலையை ஆராய்ந்து விடும்.  ரோஸட்டாவின் தளவுளவி வால்மீனில் இறங்கத் தகுதி பெற்ற ஐந்து தளங்களை ஈசா விஞ்ஞானிகள். தேர்ந்தெடுத்துள்ளார்.   2014 அக்டோபர் மாத நடுவில் இறங்குவது எந்தத் தளமென்று உறுதி செய்யப்பட்டும்.  நவம்பர் 11 இல் தளவுளவி அடுத்து இறங்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

     

    Rosetta mission

     

    முதன்முறை தூசித் துகள்களைச் சில்லியின் “ஆல்மா” மின்னலை விண்ணோக்கிகள் மூலம் [ALMA Radio Telescopes in Chille]   நோக்கிய போது கிடைத்த இலக்கத் தகவல் [Data Transfer]   பிழையென்று நினைத்தோம்.   ஆனால் சமிக்கை மிகத் தெளிவாய் இருந்ததால், தவறென்று தவிர்க்க இயலவில்லை. முதன்முதல் தோன்றிய தூசிப் பிடிப் பொறிக்கு  [Dust Trap] விளக்கம் கிடைக்கும் ஒரு வழியைத் தேடினோம்.   இந்த மாதிரி தூசிப் பிடிப் பொறிக் கட்டி, தட்டில் இருக்கும் இடத் தகுதியற்று  அண்டக் கோள்களைப் படைப்ப தில்லை !   ஆனால் அது ஒருவேளை ஆறு மைல் குறுக்கு வெட்டுள்ள ஒரு வால்மீனை உற்பத்தி செய்யும் கூடமாக [Comet Factory]  இருக்க முடியும் என்பது என் கருத்து.

    நியன்கே வான்டர் மரேல் [லெய்டன் விண்ணோக்ககம், நெதர்லாந்து]

    “கண்டுபிடிக்கப்பட்ட புதிய சிறுகோள் செட்னாவை (Sedna) (800-1000 மைல் விட்டம்) விட மிகச் சிறியது. அதன் அகலம் 30 முதல் 60 மைல் இருக்கலாம்.  சொல்லப் போனால் புதிய சிறுகோள் உண்மையாக ஒரு வால்மீன் !  ஆனால் அச்சிறு வால்மீன் பரிதியை நெருங்கி வாயுத் தூசிகளை நீண்ட வாலாக வெளியேற்ற இயலாத நிலையில் உள்ளது.”

    ஆன்டிரூ பெக்கர், வானியல் நிபுணர், வாஷிங்டன் பல்கலைக் கழகம்

     

    Chart -1

     

    “(விண்வெளியில்) வெடிக்கும் பிண்டங்களைக் காண முடிந்தால் அந்த வெளியில் நகரும் கோள்களைக் காண முடியும்.  ஆனால் அவற்றைக் காண வேறுபட்ட உளவுக் கருவிகள் தேவைப்படும்.  அருகில் உள்ள அண்டங்கள் மட்டும் ஓரிரவிலிருந்து அடுத்த நாள் இரவில் இடம் மாற்றம் செய்வது சூரிய மண்டலத்திலே நிகழக் கூடிய சம்பவங்கள்.”

    லின் ஜோன்ஸ் வானியல் நிபுணர், வாஷிங்டன் பல்கலைக் கழகம்

    “புதிய வால்மீன் ஓர்ட் முகில் மந்தையின் (Oort Cloud Region) உட்புற விளிம்பிலிருந்து வந்திருக்கலாம் என்று நாங்கள் கருதுகிறோம்.  நெப்டியூன் கோளுக்கு அப்பால் உள்ள பனித்தூசி வளைய அரங்கில் புளூடோ கோளின் நீள்வட்ட வீதிபோல் பெற்றிருக்கலாம்.  அதன் பின் ஆதிகால யுரேனஸ்-நெப்டியூன் ஈர்ப்பு விசை இடைப்பாட்டு ஆற்றலில் தூக்கி எறியப் பட்டிருக்கலாம்.”

    “எங்களுடைய குறிக்கோள்களில் ஒன்று பிரமிக்கத் தக்க காட்சி கொண்ட வால்மீன்களின் மூலப் படைப்பை அறிவது.”

    நாதன் கைப் (Nathan Kaib) மாணவர், வாஷிங்டன் பல்கலைக் கழகம்

     

    Oort Cloud location

    பேரளவு வடிவுள்ள வால்மீன் உற்பத்தி விண்மீன் ஏற்பாடு கண்டுபிடிப்பு

    வானியல் விஞ்ஞானிகள் சில்லி விண்ணோக்கிகள் மூலமாக புதிய ஆல்மா கருவியைப் பயன்படுத்தி  [ALMA -Atacama Large Millimeter Array]  ஓரிள வயது விண்மீன் அரங்கை நோக்கி அங்கே தூசித் துகள்கள் பெரிதாக வளர்வதையும், அவை பின்னிப் பிணைந்து கட்டி ஆவதையும் [Clumping togetherர்] முதன்முதல் கண்டுபிடித்தார்கள்.  இதுதான் முதன் முறை ஒருதூசிப் பிடிப் பொறியின்  [Dust Trap] தோற்றம் கண்டு அதற்குக் கணனி மாடல் [Computer Model ] செய்ய முடிந்தது.   அந்தக் கண்டுபிடிப்பு, எப்படி தூசித் துகள்கள் பெரிதாய் வளர்ந்து, முடிவில் அண்டக் கோள் ஆகவோ அல்லது வால்மீன்கள் ஆகவோ அல்லது முரண்கோளாகவோ உருவாகுமா என்ற  நீண்ட நாளைய புதிரை விடுவித்தது.    அந்த தகவல் 2013 ஜூன் மாதம் 7 ஆம் தேதி விஞ்ஞான இதழில் [Science Magazine] வெளியிடப் பட்டது.

    இந்த விஞ்ஞானத் தகவலைச் சில்லி விண்ணோக்கிகள் மூலம் ஆயந்து சேகரித்து எழுதிய பெண்மணி : நெதர்லாந்து லெய்டன் விண்ணோகத்தைச் [Leiden Observatory]  சேர்ந்த டாக்டர் பட்டப் படிப்பு மாணவி,நியன்கே வான்டர் மரேல்.   இவர் ஆல்மா கருவியைப் பயன்படுத்தி, பூமியிலிருந்து 400 ஒளியாண்டு தூரத்தில் இருக்கும், புதிய விண்மீன்  [Oph -IRS 48 Ophiuchus Constellation, called the Serpent Bearer]  ஏற்பாட்டு அரங்கில் உள்ள தட்டு வடிவத்தை ஆராய்ந்தார்.  அதில் மேல் பாதியும், கீழ்ப்பாதியும் முந்திரிப் பருப்பு போல் இருந்தன.  நடுவில் ஒரு துளை காணப் பட்டது.

     

    Rosetta Orbital Path

     

    முதலில் அந்த வளைய வடிவத்தை மெய்யென நம்பவில்லை.   பிறகு அந்த தகவல் சமிக்கை தெளிவாகப் பதிவாயிற்று.   வளையத்தில் உள்ள துகள்கள் மாறுபட்டிருந்தன.  அந்த அரங்கில் தூசித் துகள்கள் அடைபட்டுப் போய் ஒன்றோடு ஒன்று மோதி ஒட்டிக் கொண்டன !   புதிய பரிதியிலிருந்து வளையம் இருந்த தூரம் அண்டக் கோள் உண்டாக ஏற்றதில்லை.   அது ஒருவித வால்மீன்கள் உற்பத்திக்கு ஏற்ற இடமெனக் கூறுகிறார்  நியன்கே வான்டர் மரேல் .  இந்த அரங்கில் அவர் ஒரே ஒரு மாறுதல், தூசித் துகள்கள் பெரிதாய் வளர்ந்து, முட்டி போதிக் கட்டியாகி அண்டக் கோள் ஆகவோ, வால்மீன் ஆகவோ வளர முடியும் என்று விளக்கம் தந்தார். 

    1950 இல் டச் வானியல் நிபுணர் ஜான் ஓர்ட் (Jan Oort) கூறிய சித்தாந்தம் இது : “பெரும் பான்மையான வால்மீன்கள் பனித்தளச் சேமிப்பு அரங்கிலிருந்து விண்கற்கள் போன்ற பிண்டங்களை வியாழன், சனி ஆகிய பூதக்கோள்கள் தூக்கி எறிந்து தோன்றியவை !

    Trajectory -1

    வால்மீன்களின் போக்கை ஆராய்ந்த விஞ்ஞானி

    முதலில் நியூட்டன்தான் வால்மீன்கள், அண்டக் கோள்களைப் போல் நீள்வட்ட வீதியில் செல்கின்றன என்று கணித்துக் காட்டியவர்! சில வால்மீன்களின் பாதை வளைநீட்சி [Ellipticity] நீண்டு பிறைவளைவு வீதியை [Parabolic Orbit] நெருங்குகிறது என்று கூறினார்! வால்மீனின் மூன்று நகர்ச்சி இடங்களை நோக்கிக் குறித்து, அதன் சுற்று வீதியைக் கணித்திட நியூட்டனே முதலில் வழி வகுத்தார்!

    ஆனால் எட்மன்ட் ஹாலியே வால்மீன்களின் போக்கை வரையறுத்து, விபரங்களைச் சேமித்து நூல் எழுதி வெற்றி பெற்றவர்!  ஹாலி நியூட்டனின் தத்துவங்களைப் பயன்படுத்தி, மெய்வருந்தி உழைத்து 24 வால்மீன்களின் நகர்ச்சிகளை ஒப்பிட்டுக் கணித்து சுற்று வீதிகளைத் தீர்மானித்தார்! அவற்றில் மூன்று வால்மீன்கள் ஒரே மாதிரியானவை எனக் கண்டு மூன்றும் ஒன்றே என்று முடிவு செய்தார்! மூன்றில் முதலான வால்மீனை 1531 இல் ஜெர்மன் விஞ்ஞானி பீட்டர் அப்பையன் நோக்கினார்! இரண்டாவது ஒன்றை 1607 இல் ஜொஹானஸ் கெப்ளர் [Kepler] கண்டார்! மூன்றாவது ஒன்றை ஹாலியே 1682 ஆம் ஆண்டில் கண்டார்! அதுவே ஹாலின் பெயரைப் பெற்றது! ஹாலி கண்டு பிடித்ததால் அந்த வால்மீன், அவரது பெயரை அடைய வில்லை! மீண்டும் 1758 இல் அது வரும் என்று ஹாலி உறுதியாகக் கூறி, அது மெய்யாக 1758 இல் திரும்பியதால், அந்த வால்மீனுக்கு ஹாலியின் பெயர் இடப் பட்டது! 1758 ஆண்டில் ஐந்து மாதங்களுக்கு வால்மீன் பலரது கண்ணில் தென்பட்டது!

     

    Rosetta travel details

     

    நீள்வட்ட வீதியில் பரிதியை மையமாகக் கொண்டு பெரும்பான்மை யான வால்மீன்கள், குறிமையத்திலிருந்து [Focus] பல மில்லியன் மைல் தூர நீள் ஆரத்தில் [Aphelion] சுற்றி மீண்டும் பூமியை நோக்கி வருகின்றன! ஆனால் அவை சுற்றி வரும் பாதைகள், பரிதிக்குச் சீரான முறையில் இல்லாது, முரணாகவே அமைகின்றன! விண்வெளிச் [Interstellar] சேர்ந்த வால்மீன்களாக இருந்தால், அவை இணையும் நீள்வட்டத்தில் [Closed Ellipse] சுற்றாமல், பிறைவளைவு [Parabola] அல்லது விரிவளைவு [Hyperbolic Orbits] வீதிகளில் பயணம் செய்து, பரிதியை ஒரு முறை வலம் வந்த பின், மீண்டும் அவை வரமாட்டா! மேலும் விண்வெளியைச் சேர்ந்த வால்மீன்கள், பரிதி நகரும் அதே திசையில்தான் அவையும் பயணம் செய்து, சூரிய மண்டலத்தில் நுழைகின்றன! சூரியனின் சுழலீர்ப்பு விசையால் [Centripetal Force] தூரத்தில் பயணம் செய்யும் அன்னிய வால்மீன்கள், பரிதியை நோக்கி இழுக்கப் படுகின்றன! பூதக்கோள் வியாழன் மூட்டும் சனிக்கோளின் ஒழுங்கற்ற நகர்ச்சியால், அருகே நீள்வட்டத்தில் செல்லும் ஓர் வால்மீனின் நகர்ச்சி தடுமாறி, வேகம் மாறுபட்டு, பாதை வேறுபட்டு பிறைவளைவாகிறது.

     

     

    வால்மீன்களின் பிறப்பும், அவற்றின் அமைப்பும்!

    வானியல் வல்லுநர் ·பிரெட் விப்பிள் [Fred Whipple], வால்மீன்கள் விண்கற்களும், தூசிப் பனிக்கட்டிகளும் [Rocks & Dusty Ice] மண்டிய ‘குப்பைப் பனிப்பந்துகள் ‘ [Dirty Snowballs] என்று கூறுகிறார்! புதிராகவும், மர்மமாகவும் காணப்படும் வால்மீன்கள் எப்படித் தோன்றுகின்றன ? விண்வெளியில் புற்றீசல்கள் போலக் கிளம்பும் வால்மீன்கள் எங்கிருந்து எழும்புகின்றன ? வால்மீன் உடம்பில் என்ன பொருட்கள் இருக்கின்றன ? கண்கவரும் ஒளி அதற்கு எப்படி உண்டாகிறது ? வால்மீன்களை வயிற்றில் சுமந்து கொண்டிருக்கும் ஒரு பெரும் சேமிப்புக் கோளம் பரிதிக்குப் பல பில்லியன் மைல்களுக்கு அப்பால், புளுடோவைத் [Pluto] தாண்டி இருப்பதாக யூகிக்கப் படுகிறது! அந்த சேமிப்புக் கோளம் ‘ஓர்ட் மேகம்’ [Oort Cloud] என்று அழைக்கப் படுகிறது! அதை யூகித்த ஜான் ஓர்ட் [Jan H. Oort] வானியல் வல்லுநரின் பெயரில் அது குறிப்பிடப் பட்டது. தேனீக்களின் கூடு போன்ற அந்த கூண்டில் சுமார் 100 பில்லியன் வால்மீன்கள் அடங்கி இருக்கலாம் என்று ஓர்ட் கருதினார்! அடுத்து நெப்டியூன் கோளைத் தாண்டி ‘கியூப்பர் வளையம் ‘ [Kuiper] ஒன்று இருப்பதாக யூகிக்கப் பட்டது! சுற்றுக் காலம் [Period] 200 ஆண்டுகளுக்கு மேலான வால்மீன்கள் ஓர்ட் மேகத்திலிருந்து வருவதாகவும், சுற்றுக் காலம் 200 ஆண்டுகளுக்குக் குறைந்தவை கியூப்பர் வளையத்திலிருந்து கிளம்புவதாகவும் அனுமானிக்கப் படுகிறது!

     

     

    ஓர்ட் மேகக் கூண்டுக்கு அருகிலோ, அல்லது கியூப்பர் வளையத் திற்கு அண்டையிலோ போகும் விண்மீன்கள் வால்மீன் ஒன்றை இழுத்து வீசி எறியும் போது, சூரிய மண்டலத்துள் விழுந்தால், அதன் ஈர்ப்பியல் பிடியில் மாட்டிக் கொண்டு, அது நீள்வட்ட வீதியில் சுற்ற ஆரம்பிக்கிறது! வீசி எறியும் வேகம் அதிகமானால், வால்மீனின் சுற்று வீதி பிறைவளைவிலோ, அல்லது விரிவளைவிலோ மாறிச் பரிதியைச் சுற்றிச் செல்கிறது!

    வால்மீன் தலையின் நடுவே திடவமான ‘உட்கரு’ [Nucleus] உள்ளது. ஹாலி வால்மீனின் உட்கரு சுமார் 9 மைல் அகண்டது! அட்டக் கரியான உட்கருவில் கரி [Carbon] மிகுதியாக உள்ளது! கரியை மூடிய பனித் தோல் மீது, கற்தூசிகள் படிந்துள்ளது போல் தோன்று கிறது! அதன் வாலின் நீளம் 1910 இல் வந்த போது 37 மில்லியன் மைல் நீண்டிருந்தது! ஹாலி வால்மீனின் முழு நிறை 25 மில்லியன் டன் என்று அமெரிக்க வானியல் நிபுணர் ஹென்ரி ரஸ்ஸெல் [Henry N. Russell (1877-1957)] விஞ்ஞானி மதிப்பீடு செய்தார்! வால்மீனின் தலைப் பரிதியை நெருங்கும் போது, அதன் உஷ்ணம் 330 டிகிரி கெல்வின் [330 K] ஏறியதாக அறியப்படுகிறது! பரியின் ஒளியை எதிர்ப்படுத்தியே வால்மீன் ஒளி வீசுகிறது! அதற்குச் சுய ஒளி கிடையாது! 400 மைல் அகண்ட உட்கரு கொண்ட விண்மீன்களும்  விண்வெளியில் உள்ளன! துணைக் கோள் [Satellite] மூலம் நோக்கியதில் உட்கருவைச் சுற்றிலும் ஹைடிரஜன் வாயுக் கோளம் பேரளவில் சூழ்ந்துள்ளது என்று அறியப்பட்டது!

     

    உட்கருவைச் சுற்றியுள்ள வாயுக் கோமா [Gaseous Coma] 80,000 மைல் விட்டமுள்ளது! வாயுக் கோமாவில் மீதேன் [CH4], கார்பன் மொனாக்ஸைடு [CO], சையனஜென் [C2N2 Cyanogen] போன்ற வாயுக்கள் அடங்கி யுள்ளன! வாலின் நீளம் 200 மில்லியன் மைல் கூட விண்வெளியில் நீண்டிருக்கும்! பரிதியை நெருங்க நெருங்க வாலின் நீளம் அதிகமாகி, அதை விட்டு விலக விலக வாலின் நீளம் குன்றிப் பரிதிக்கு வெகு தொலைவில் வால்மீன் செல்லும் போது, வால் முழுவதும் இல்லாமல் போகிறது! அத்துடன் சூரிய ஒளி மங்குவதால், வால்மீன் ஒளியிழந்து சுற்றுகிறது. அப்போது மிகக் குளிர்ந்து போகும் வால்மீன், தானாகச் சுய ஒளி வீசும் திறனற்றுப் போகிறது!

    சூரியன் அருகே வரும் போது சூரியக் காற்றும், கதிர்வீச்சு அழுத்தமும் [Radiation Pressure] வால்மீனின் வாயுக்களைச் சூடாக்கி, அப்பால் தள்ளுகிறது. அதுவே எதிரே வாலாய்ச் சிறிது சிறிதாய் நீள்கிறது! பரிதியின் ஒளிக் கதிர்கள், வால்மீனின் வாயுக்களையும், தூசியையும் வெண்ணிற ஒளியாய் மாற்றுகின்றன! வாயுக்களும் மின்கொடை [Electrically charged] பெற்று, தாமாய்ச் சுடரொளி வீசுகின்றன.  மெதுவாய் ஊர்ந்து வரும் வால்மீன், பரிதிக்கு அருகே வருகையில் வேகம் அதிகரிக்கப் பட்டு, உச்சமாகி பரிதிக்கு அப்பால் போகும் போது, வேகம் சிறிது சிறிதாய்க் குறைகிறது! வால்மீன் வாலும் பரிதியை நெருங்க நெருங்க நீண்டும், பரிதியை விட்டு விலக விலகச் சுருங்கியும் போகிறது! அதாவது பரிதியின் அருகே வாலின் நீட்சிக்கும், வால்மீனின் வேகத்திற்கும் ஓர் தொடர்பு உள்ளது! சூரியக் கதிரழுத்தம் வாலை அப்பால்  தள்ளுவதால், வால்மீனுக்கு முன்னோக்கி உந்து விசை உண்டாகி, ஏவுகணை [Rocket] போல் விரைவாகச் செல்கிறது!

     

    மீண்டும் மீண்டும் வரும் வால்மீனைக் கண்ட விஞ்ஞானி

    1700 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் விஞ்ஞானி எட்மன்ட் ஹாலி (Edmond Halley) 1531, 1607, 1682 ஆகிய மூன்று வருடங்களில் பூமியின் அருகே மாந்தரால் காணப் பட்ட வால்மீன்கள் மூன்றும் வேறானவை அல்ல! மூன்றும் ஒரே வால்மீன்தான் என்று ஆணித்தரமாகக் கூறினார்! மேலும் அதே வால்மீன் மீண்டும் 1758 ஆம் ஆண்டில் பூமிக்கு விஜயம் செய்யும் என்றும் முன்னறிவித்தார்! அது பரிதியைச் சுற்றுக் காலம் [Period] சுமார் 76 ஆண்டுகள்! அதன் சுற்றுக் காலங்கள் 15 மாதங்கள் கூடியோ அன்றிக் குறைந்தோ குறிக்கப் பட்டுள்ளன! இதுவரை 30 முறை கண்டு பதிவான அதே வாரியல் மீனை, இப்போது ஹாலியின் பெயரைச் சூட்டி, ‘ஹாலியின் வால்மீன்’ [Halley’s Comet] என்று உலகம் என்மன்ட் ஹாலியைக் கெளரவித்தது! இருபதாம் நூற்றாண்டில் இருமுறை அது வருகை தந்தது! ஹாலி வால்மீனின் ஒளிமிக்க உருவையும், கவினுள்ள வாலையும் 1910 ஆண்டில் பலர் கண்டு வியந்துள்ளார்கள்! சமீபத்தில் 1986 இல் ஹாலி வால்மீன் வந்து போனது! அடுத்து அது பூமிக்கு அருகே 2061 ஆம் ஆண்டில்தான் மீண்டும் வரும்!

    1682 இல் அந்த வால்மீனைக் கண்ட ஹாலி, ஐஸக் நியூட்டனுடன் பலமுறை விவாதித்து அவருடன் கணித்து, அடுத்து 1758 இல் அது மீண்டும் வரும் என்று முன்னறிவித்தார்! அவர் கூறியபடி வால்மீன் பூமிக்கு விஜயம் செய்தது! ஆனால் ஹாலி அதைக் காணாது, 16 ஆண்டுகளுக்கு முன்பே காலமாகி விட்டார்!

     

    Rosetta Spacecraft

     

    (தொடரும்)

    ++++++++++++++++++++++++++

    தகவல்:

    Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine, Discovery, Scientific American & Astronomy Magazines.

    1. Our Universe – National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986)
    2. 50 Greatest Mysteries of the Universe – How Many Asteroids are Locked up in the Kuiper Belt ? (Aug 21, 2007)
    3. Astronomy Facts File Dictionary (1986)
    4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990)
    5. Sky & Telescope – Why Did Venus Lose Water ? [April 2008]
    6. Cosmos By Carl Sagan (1980)
    7. Dictionary of Science – Webster’s New world [1998]
    8. The Universe Story By : Brian Swimme & Thomas Berry (1992)
    9. Atlas of the Skies – An Astronomy Reference Book (2005)
    10 Hyperspace By : Michio kaku (1994)
    11 Universe Sixth Edition By: Roger Freedman & William Kaufmann III (2002)
    12 Physics for the Rest of Us By : Roger Jones (1992)
    13 National Geographic – Frontiers of Scince – The Family of the Sun (1982)
    14 National Geographic – Living with a Stormy Star – The Sun (July 2004)
    15 The World Book of Atlas : Anatomy of Earth & Atmosphere (1984)
    16 Earth Science & Environment By : Dr. Graham Thompson & Dr. Jonathan Turk (1993)
    17 The Geographical Atlas of the World, University of London (1993).
    18 Hutchinson Encyclopedia of Earth Edited By : Peter Smith (1985)
    19 A Pocket Guide to the Stars & Planets By: Duncan John (2006)
    20 Astronomy Magazine – What Secrets Lurk in the Brightest Galaxies ? By Bruce Dorminey (March 2007)
    21 National Geographic Magazine – Dicovering the First Galaxies By : Ron Cowen (Feb 2003)
    22 Astronomy Magazine Cosmos – The First Planet By : Ray Villard & Adolf Schaller & Searching for Other Earths By : Ray Jayawardhana [Jan 2007]
    23 Discover Magazine – Unseen Universe Solar System Confidential [Jan 2007]
    24 A Discover Special – Unseen Universe – Comets Captured By : Jack McClintock (Jan 31, 2007)
    25 Universe Today – Astronomers Find a New “Minor Planet” near Neptune By ; Nancy Atkinson [Aug 18, 2008]
    26 Daily Galaxy – Massive New Object Discovered at Edge of the Solar Sysytem [Aug 19, 2008]
    27. Space Daily – Unusual Denizen (Inhabitant) of the Solar System [Aug 15, 2008]
    28. http://www.thinnai.com/?module=displaystory&story_id=40805151&format=html (What Came to Earth from Comets)
    29 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40301043&format=html [Edmond Halley on Comets]
    30 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40207071&format=html [Comets]
    31. http://www.thinnai.com/?module=displaystory&story_id=40507151&format=html [Deep Impact-1]
    32 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40507071&format=html [Deep Impact-2]
    33. http://www.thinnai.com/?module=displaystory&story_id=40601202&format=html [Stardust Probe-1]
    34 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40601272&format=html [Stardust Probe-2]
    35 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40703151&format=html (Rosetta Probe)

    36  http://articles.latimes.com/print/2013/jun/06/science/la-sci-sn-comet-factory-dust-trap-20130606 [June 6, 2013]

    37  http://www.dailygalaxy.com/my_weblog/2013/06/image-of-the-day-comet-factory-discovered-.html  [June 6, 2013]

    38  http://www.dailymail.co.uk/sciencetech/article-2337597/The-comet-factory-planets-form-particles-clumped-dust-trap.html  [June 7, 1934]

    39  http://earthsky.org/space/astronomers-discover-comet-factory-in-distant-system-oph-irs-48 [June 7, 2013]

    39[a]  http://www.dailymail.co.uk/sciencetech/article-2540715/European-Space-Agency-releases-astonishing-video-showing-Rosetta-probe-touch-down.html  [January 16, 2014]

    40.  http://www.theguardian.com/science/2014/aug/06/rosetta-spacecraft-rendezvous-rubber-duck-comet-67pcg  [Aug 6, 2014]

    41.http://www.spacedaily.com/reports/Rosetta_arrives_at_comet_destination_999.html  [August 6, 2014]

    42.http://www.spacedaily.com/reports/As_Seen_by_Rosetta_Comet_Surface_Variations_999.html  [Aug 18, 2014]

    43.  http://www.jpl.nasa.gov/news/news.php?release=2014-289&utm_source=iContact&utm_medium=email&utm_campaign=NASAJPL&utm_content=rosetta20140825 [Aug 25, 2014]

    44.  http://en.wikipedia.org/wiki/Rosetta_(spacecraft)  [August 29, 2014]

    ******************
    S. Jayabarathan (jayabarathans@gmail.com)  [August 29, 2014]

    Oph-IRS 48
    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    கிரேசி மோகன்

    crazy

    மந்தியொரு காலிலும் மாடொரு காலிலும்,
    பந்திக்கு முந்துதல் போதாதென்(று), -அந்தரி,
    அண்ணனுக்கு கல்யாணம் ஆண்டா ளுடனாக,
    கண்ணனுக்கு காலெல்லாம் கட்டு”
    ————————————–

    Share
  • சமரசம்

    இசைக்கவி ரமணன்

     

    உனக்கே உனக்காக   (35)

    சமரசம்

     

    [mixcloud]http://www.mixcloud.com/Vallamai/samarasam/[/mixcloud]

    10592800_716061665108146_5329376393953249671_n
    சமர்முடிந்து விட்டது
    சமரசம் செய்துகொண்டேன்
    சரணாகதி அடைந்துவிட்டேன்

    என்னுள் இருக்கும்
    உன்னிடம்

    பிரிவென்ற முள்ளிலே பட்டுத் திகைத்து
    நினைவென்னும் முகையைத் தொட்டு முகர்ந்து
    வடுவேதும் இல்லாமல் வளையவரும்
    வாசமிகு தென்றலைக் கண்டேன்

    நான்
    தேம்பி அழுததும்
    தெருவில் திசையின்றித் திகைத்து நின்றதும்
    தேய்ந்து மெலிந்ததெல்லாம், இப்படித்
    தென்றலாகத்தான்

    பாறைகள் கூறுபோட்டாலும்
    கோர முதலைகள் அசிங்கமாய்ப் புரண்டு குழப்பினாலும்
    ஈரமென்னும் இனியமொழி
    மாறாத நீராக

    கழுத்தைத் திருகினாலும்
    கானத்தின் ராகமல்லால், வேறுவிதமாய்க்
    கத்தத் தெரியாத வன்னப் பறவையாக

    ஆத்திரத்தில் அம்மா
    அடித்துப் போட்டாலும்
    அம்மாவைத் தவிர வேறு
    புகலிடம் இல்லாத சின்னக் குழந்தையாக

    சமரசம் செய்துகொண்டேன்
    சரணாகதி அடைந்துவிட்டேன்

    என்னுள் இருக்கும் உன்னிடம்
    எட்டி உதைத்தாலும்
    கட்டித் தழுவினாலும்
    பல்காட்டிப் பயன்படுத்திப்
    பாதையிலே எறிந்தாலும்

    உதறிவிட முடியாத நிழலாக
    ஒன்றும்செய்ய முடியாத சுவாசமாக
    சற்றும் விலகாமல்
    எதுவும் கோராமல்
    சாவகாசமாய் உன்னோடிருப்பேன்

    இனி நீ என்னை –
    எப்படி வேண்டுமானாலும் முயன்றுபார் –
    எதுவும் செய்ய முடியாது

    வெட்ட வெளியை வெட்டமுடியாது
    வீழ்ந்த சாம்பலை எரிக்க முடியாது
    சரணமடைந்தவனுக்கு
    மரணம் கிடையாது
    அவன்
    வாழ்வைக் கொடுத்துவிட்டுத்தான்
    வாசலில் நிற்கின்றான்
    வாஞ்சையோடு
    கொடுத்த நினைப்பு துளியும் இன்றி

    ஆம் நான்
    சமரசம் செய்துகொண்டேன்
    சரணாகதி அடைந்துவிட்டேன்

    என்னுள் இருக்கும்
    உன்னிடம்

    அதுசரி
    என்ன செய்யப் போகிறாய்
    உன்னுள் இருக்கும்
    என்னிடம்

    இருக்கிறேனா என்ன?!

    படத்திற்கு நன்றி

    Share
  • பிள்ளையார் வெண்பாக்கள்

    கிரேசி மோகன்

     

    பிள்ளையார் வெண்பாக்கள்
    ———————————————

    ஓவியம் : கேஷவ்
    ஓவியம் : கேஷவ்

    சோமன்த னைச்சென்னி சூடும் சிவகுடும்ப
    சீமந்த மைந்தன் சதுர்த்தியின்று -மாமன்தன்
    சக்கரத்தை உண்டுமிழ்ந்த சித்தி வினாயகனை
    வக்கிர துண்டனை வாழ்த்து….(1)

    தம்பிக்கு காதல் துணைசென்ற தந்தியே
    தும்பிக்கை வேழமே, தேவர்கள் -ஸ்தம்பிக்க
    ஆட்சி கயிலாயத்தை அவ்வைக்(கு) அளித்தவா
    காட்சிக்(கு) இனியபிள்ளாய் காப்பு….(2)

    தொந்தி குலுங்கிட தந்தி ஜொலித்திட
    முந்தி முழுமுதல் மோதகன்முச் -சந்தி
    அரசடியில் வீற்று அருள்பாலிக் கின்றான்
    முரசடித்தேன் தந்திக்கு முந்து….(3)

     
    ஆனைக்கா அம்மையும் ஊனைக்கொள் ஊர்த்தவர்க்கும்
    சேனைக்கா வேலன் சகோதரனாய்-தீனர்க்காய்
    தோன்றிய பிள்ளாய், தமிழாக அவ்வைக்கோல்
    ஊன்றிய வேழா உதவு….(4)
    அக்கினிக்கு முப்புரத்தை ஆட்படுத்த தேரேறி
    உக்கிரமாய் சென்ற உருத்திரர்க்கே -விக்கினமாய்
    அச்சொடித்து உன்னிருப்பை எச்சரிக்கை செய்தவரை
    உச்சரிக்க வைத்தாய் ஒழுங்கு….(5)

    கணபதி ராயா மனிதச காயா
    பனிபதி கைலாசப் பையா -தனபதி
    மாலின் மருகோனே மயிலோனின் மூத்தோனே
    கோல வினாயகனே காப்பு….(6)

    கயிலாய சீதனம் கற்பகச் செல்லம்
    மயிலாப்பூர் தோழன் மகோதரன் -பயிலோரும்
    பள்ளிப் பரிட்சையில் பெற்றிட வெற்றியை
    அள்ளித் தருவான் அவன்….(7)
    அருகம்புல் தேங்காய் எருக்கம்பூ, மாலின்
    மருகன்பால் வைக்க மகிழ்ந்து -ஒருகொம்பால்
    நான்முகன் நம்தலையில் நட்ட விதையினை
    ஆனைமுகம் ஆக்கும் அரசு….(8)

    cowசுகள் பேணிடும் கண்ணன் மருகோனே
    mouseயிக வாகனா மோதகா -houseனுள்
    வாராய் வினாயகா வேளை சதுர்த்தியில்
    தாராய் அறிவில் தெளிவு….(9)

    மூஷிக வாகனனை தோஷ விநாசகனை
    பாஷைகள் போற்றும் ப்ரணவனை –வேஷமாய்
    வேழத்தோல் போர்த்திய தோழக் கடவுளை
    ஏழைகள் ஈசனை ஏத்து….(10)
    அரச மரத்தடியில் ஆகாசம் பார்த்து
    உரசும் எலியோடு ஒண்டி -பெருசாய்
    எதிர்பார்ப்பு ஏதுமின்றி ஏழெட்டு தேங்காய்
    சதிராக யாதுமருள் வான்….(11)
    கமர்கட் கடலையுண்டை குச்சிஐஸ் மூன்றும்
    சமர்பிப்பேன் நானுக்கு என்றும் -அமர்ந்திட்டு
    செங்கழுநீர் பிள்ளையாரே சாப்பிட்டு த்ருப்தியாய்
    சங்கத் தமிழ்மூன்றும் தா….(12)….

    ————————————————————–

     

    Share
  • பிள்ளையார்!

    -செண்பக ஜெகதீசன்

    முக்கண்ணனின் மூத்த பிள்ளை                            Lord Ganesa
         முக்கனியும் விரும்பும் பிள்ளை,
    திக்கெங்கும் நிறைந்த பிள்ளை
         தீதெல்லாம் அகற்றும் பிள்ளை,
    எக்கணமும் அருளும் பிள்ளை
         எளியவர்க்கும் ஏற்ற பிள்ளை,
    அக்கறையாய் அவனைப் பணிவாய்
       ஆனைமுகன் அருள்வான் இனிதே…!

    Share
  • பிள்ளையார் பதினாறு

     
    கிரேசி மோகன்
    —————————-

    காஞ்சி மஹாபெரியவா “அருள் வாக்கில்” எழுதியதைப் படித்து விட்டு எழுதிய வெண்பாக்கள்…. அடியேன் ஆதிநாளில் வரைந்த “சித்தி புத்தி வினாயகர்”, ரவிவர்மாவைப் பார்த்து வரைந்த, வாட்டர் கலர் ஓவியம்.

     

    crazy
    ஷோடஸ நாயகர்
    ———————-

    பிள்ளையார் பிறப்பு
    ———————–

    நீராடும் வேளை நிலைவாசல் காவலுக்கு
    ஓராளைத் தேடினாள் ஓங்காரி -சேறாக
    மேனியில் பூசிய மஞ்சளால் செய்தனள்
    ஞானி வினாயக னை….

    ஆதியே ஆனாலும் அன்னை குளிக்கையில்
    பாதியில் வந்த பரம்பொருளை -வீதியில்
    தள்ளிய பிள்ளை தலையைத் தகப்பனரன்
    கிள்ளியங்கு வைத்தான் கஜம்….

     

    ஸுமுகர்
    ———–
    சிரித்த வதன ஸுமுகரைப் போற்ற
    விரித்த வலைவெவ் வினையை -அறுத்து
    இழைத்திடுவான் அத்தச்சன் எண்ணென் கலையாய்
    அழைத்திடுவாய் அவ்வை அளவு….(1)

     

    ஏகதந்தர்
    ———–
    சோகம் களைந்து ஸுமுகம் குவித்திடும்
    யோகம் விரும்பிட ஏற்றிவிடும் -ஏகதந்தன்
    காப்பிருக்க கற்பூரம் கூடவேண்டாம், காரியக்கை
    பூப்பறிக்கும் உன்வீட்டில் பார்….(2)

     

    கபிலர்
    ——–
    சிந்தூர வண்ணனை சித்தி அருளேக
    தந்தன் கபிலனைத் தோத்தரிக்க -வந்த
    கருத்ததெல்லாம் பாலாக, கண்முன் விலகும்
    வருத்தமெலாம் சாயம் வெளுத்து….(3)

     

    கஜகர்ணகர்
    —————
    கஜகர்ணம் மற்ற கடவுளர்க்கு போட
    நிஜவர்ணம் காட்டும் நெகிழ்ந்து -கஜகர்
    ணகர்கபிலர் காதினில் நாத்திக பூசை
    பகர்அப லைக்கும் பலன்….(4)

     

    லம்போதரர்
    ————–
    சம்போ மகாதேவர் செய்த தலைப்பிள்ளை
    லம்போ தரனால் லகுவாக -வம்போடு
    தும்பும் விலகும் துதிக்கை விரட்டிடும்;
    நம்பாள் கஜகர் ணகர்….(5)

     

    விகடர்
    ———–
    மகுடம் தரித்தரன் முப்புரம் ஏக
    சகடத்தின் அச்சை சிதைத்த -விகடன்
    லலிதாங்கி மைந்தனை லம்போ தரனை
    எலிதாங்கும் ஆனையை ஏத்து….(6)

     

    விக்கினராஜர்
    —————-
    சுக்கிரன் பார்க்க சுரர்கள் பணிந்திட
    இக்கிரக பூமியில் இந்திரனாய், -விக்கின
    ராஜன் விகடனை ராப்பகலாய் வேண்டிட
    பூஜா பலனாய் பவிஷு….(7)

     

    வினாயகர்
    ————
    வினாஅகம் கேட்க விசாரணை செய்யும்
    மனோமுக மார்கம் முனிக்கே -வினாயகன்
    விக்கின ராஜனை வேண்டித் துயில்வோர்க்கு
    சொக்கிடும் போதேமோட் ஷம்….(8)

     

    தூமகேது
    ———–
    சோமதேவன் சீமந்தன் மாமன்மால் அம்சமாய்
    தூமரூப துஷ்டனைத் தீர்த்திட -தூமகேது
    வாக அவதரித்து வெற்றியை சூடிய
    வாகை வினாயகனை வாழ்த்து….(9)

     

    கணாத்யஷர்
    —————
    அனாதியாதி அச்சன் அரசவை பூத
    கணாதி களின்சேனைக் காவல் -ஜனாதிபதி
    தூமகேது முன்புநின்று தோப்புக் கரணமிட
    சாமகீதம் சம்சார சிந்து….(10)

     

    பாலசந்த்ரர்
    ————–
    நாலுமுகன் செய்த நடிகர் களையியக்கும்
    பாலமுக பாலசந்த்ர பிள்ளையார் -ஞால
    கணாத்யஷன் காலில் கிடப்போர்க்கு நாளும்
    தனாக்ஷர தீரம் தரும்….(11)

     

    கஜானனர்
    ————-
    அஜாதசத்ரு ஆனை அரக்கனுக்(கு) அன்று
    கஜேந்திர மோட்ஷம் கொடுத்த -கஜானனன்
    கோலசந்த்ரன் கொண்டமகா கர்வம் அடக்கிய
    பாலசந்த்ரன் பாதம் புகு….(12)

     

    வக்ரதுண்டர்
    —————
    வக்ரதுண்ட சேயின் விடைபெறாமல், முப்புர
    நிக்ரகம் செய்ய நினைத்தூர்ந்த -உக்ரகண்டர்
    சக்ரதுண்டம் செய்த சதுர்த்தி கஜானனர்
    விக்னகண்டம் தீர்ப்பார் விரைந்து….(13)

    சூர்ப்பகர்ணர்
    —————-
    வரம்தரும் போதே முறம்போல தீதை
    புரம்தள்ளி நையப் புடைத்து -அறம்பொருள்
    ஆர்ப்புகங்கை போலின்பம், அவ்வீடு சேர்த்திடும்
    சூர்ப்பகர்ண வக்ரதுண்ட சேய்….(14)
    ஹேரம்பர்
    ————-
    பேரம்பார் பண்ணிப்பார் பூவெருக்கம் புல்லருகம்
    பேரன்பாய் பாதத்தில் போட்டுவிட்டு -ஆரம்பம்
    ஹேரம்பா என்றழைக்க எப்படியும் வெற்றிதான்
    நேரும்பார் சூர்ப்பகர்ண னால்….(15)

    ஸ்கந்தபூர்வஜர்
    —————–
    சீரும்பர் கோன்மகள் சேனை கரம்பிடித்த
    சூரன்பால் வேலெறிந்த ஸ்கந்தனுக்கு -ஹேரம்பர்
    முன்வந்த பூர்வஜர் ,பெண்ணாக வெற்றியாய்நம்
    பின்வந்து நிற்கும் பிடி….(16)….
    பலஸ்ருதி
    ————-

    பதினாறும் பெற்று பெருவாழ்வு காண
    பதினாறு பேர்களைப் பெற்ற -அதிகாரி
    அக்கணேச ஆனைமுன் விக்கினங்கள் வைத்திட
    மக்கிடுமே மண்புழுவாய் மாய்ந்து….
    ———————————————————————————————————————–

     

    Share
  • என்னதான் இருக்கிறது வேதத்தில்?– 20

    –சு.கோதண்டராமன்.

     

    ஸவிதா

     

    Savitr Vedic Deity

    பரமாத்ம சைதந்யத்தின் மஹிமையையே பூர்வ யோகிகள் அனந்த கோடானு கோடானு கோடானு கோடி ஸூர்ய ஜ்யோதியாக வர்ணித்திருக்கிறார்கள். உபமித்திருக்கிறார்கள். எல்லாம் என்பது ஸர்வத்தின் பெயர். எல் என்பது தமிழில் ஸூர்யனுக்குப் பெயர்.  ஸர்வமென்ற மனக் கொள்கைக்குப் ப்ரதிநிதியாக நம்முடைய முன்னோர் ஸூர்யனை ஆராதனை செய்தது யுக்தமேயாகும். – பாரதி

    எல்லோரும் தேவர்கள் எனப்பட்டாலும் சூரியனுக்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு. வானத்தில் பிரகாசமாக ஜ்வலிக்கும் சூரியன் மனிதனது கவனத்தைக் கவர்வதில் வியப்பு இல்லை. தினம் தோறும் சூரியன் உதிப்பதையும் மறைவதையும் அவன் கவனிக்கிறான். இரவில் உலகமே அசைவற்று உயிரற்றது போலக் கிடக்கிறது. காலையில் சூரியன் உதித்ததும் மனிதன் மட்டுமன்றி மிருகங்களும் பறவைகளும் கூட புத்துயிர் பெற்றது போல உற்சாகத்துடன் தத்தம் வேலையில் ஈடுபடுகிறார்கள். இதனால் சூரியன் உயிர்ப்புத் தருபவர் என்ற பொருளில் ஸவிதா என்று அழைக்கப்படுகிறார்.

    ஸவிதா என்ற பெயர் எங்கு வந்தாலும் அங்கு பெரும்பாலும் தேவ என்ற அடை மொழி கூடவே வரும். “தேவோ வஸ் ஸவிதா ப்ரார்பயது ச்ரேஷ்டதமாய கர்மணே” என்பது யஜுர் வேதத்தின் முதல் மந்திரத்தின் பகுதி. காயத்ரி மந்திரத்தில் “ஸவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி” என்று வருகிறது. எனவே முதன்மையான தேவன் ஸவிதா தான். ஸவிதாவைப் போற்றும் இந்த மந்திரம் தான் இன்றளவும் வைதிக சம்பிரதாயத்தின் பிரதான மந்திரமாக உள்ளது.

    ஸவிதா தேவர்களுக்கே செல்வத்தை அள்ளிக் கொடுப்பவர். அவருடைய விரதத்தை வருணன், மித்ரன், அர்யமா, ருத்ரன் ஆகிய எந்தத் தேவர்களும் மீறுவது இல்லை. ஏன், எதிரிகள் கூட, ஸவிதாவின் விரதத்துக்குக் கட்டுப்பட்டுத் தான் போக வேண்டும். தண்ணீரும் காற்றும் ஸவிதாவின் ஏவலுக்குக் கட்டுப்பட்டுச் செயல்படுகின்றன.

    வெற்றி பெறும் நோக்கத்துடன் போர்க் களத்தில் நிற்கிறான் வீரன் ஒருவன். சூரியன் மறைந்ததும் அவன் வீடு நோக்கித் திரும்புகிறான். துணி நெய்து கொண்டிருக்கும் பெண், வேலைசெய்து கொண்டிருக்கும் தொழிலாளி எல்லோருமே சூரியன் மறைந்ததும் வேலையைப் பாதியில் விட்டு விட்டுப் போகிறார்கள். மறுநாள் சூரிய உதயம் ஆனதும் தங்கள் வேலையை மீண்டும் தொடங்குகிறார்கள். பறவைகள் மிருகங்கள் கூட தத்தம் இடத்தில் அடங்குமாறு செய்பவர் ஸவிதா.

    நாங்கள் விரும்பியதும் நீ கொடுத்ததுமான செல்வங்கள் விண்ணிலிருந்தும், மண்ணிலிருந்தும், நீரிலிருந்தும்  எங்களை வந்து அடையட்டும் என்று வேண்டுகிறார் ரிஷி.

    தோன்றும்போது ஸவிதா எனப்பட்டாலும் தோன்றி மேலே எழும்பும்போது அவருக்கு சூரியன் என்று பெயர். தர்மத்தைக் காப்பதால் அவர் மித்ரன் எனப்படுகிறார். தன் பயணங்களால் பூஷன் எனப்படுகிறார்[1]. சூரியன் ஏழு குதிரைகளால் அழைத்துச் செல்லப்படுபவராகவும், மனிதர்களின் நல்ல கெட்ட செயல்களை எல்லாம் பார்த்துக் கொண்டிருப்பவராகவும், ருதத்தின் (தர்மத்தின்) அழகிய முகமாகவும் கூறப்படுகிறார். அவரே மித்ர வருணர்களின் மற்றும் அக்னியின் கண்[2 ].நிற்கும் அசையும் பொருள்களின் பாதுகாவலர்.

    வஸுக்களைத் தூண்டுகிறார். ரயி எனப்படும் ஆனந்தமாகிய செல்வத்தைக் கொடுக்கிறார். அறிஞர் எனப் பொருள்படும் விப்ர, விபச்சித, வயுனாவித். கவி, ஆகிய அடைமொழிகளுக்கு உரியவர் ஸவிதா. மற்ற தேவர்கள் இவரைப் பின்பற்றுகிறார்கள். இந்திரனுக்கும் மற்ற தேவர்களுக்கும் மேகங்களுக்கு அப்பால் இடம் தந்ததும் இவரே. அவர்கள் எங்கு பறந்து சென்றாலும் ஸவிதாவிற்குக் கட்டுப்பட்டே நிற்கிறார்கள்[3]. நீரும் காற்றையும் இயக்குவது இவரே. ஸ்வதாவான் (தனித்து இயங்க வல்லவர்). இவர் பூமியைச் சுற்றி வருவது போல் தோன்றுவதைப் பூமியை அளந்தார் எனச் சொல்கிறது வேதம். தேவர்களுக்கு அமரத்துவம் அளிப்பதும்  மானிடர்களுக்கு வாழ்வைத் தொடரச் செய்வதும் அவரே[4].

    சுத்தனான சூரியனிடம் கட்டப்பட்ட மனம் நடுங்குவதில்லை[5].

    குறிப்புகள்:

    1     5.81.4
    2    1.115.1
    3    4.54.5
    4    4.54.2
    5    5.44.9

    படம் உதவிக்கு நன்றி: http://www.indianetzone.com/55/savitr.htm

    Share
  • வாழ்வெல்லாம் நினைத்திருப்போம்!

         -எம். ஜெயராம சர்மா – மெல்பேண்

          நீறு கொண்ட நெற்றியுடன்
          நிமிர்ந்த நெடுந் தோற்றத்துடன்           vaariyar
         ஆறு படை முருகனையே
         அனுதினமும் தொழு தெழுவார்!

         சேறு கொண்ட மனமுடையோர்
         நீறணிந்து நின்று விடின்
         மாறு பட்ட குணமெல்லாம்
         மாண்டுவிடும் எனச் சொன்னார்!

         தாறுமாறாய்ச் சண்டை செய்த
         சராசரி மக்கள் எல்லாம்
         வாரியாரின் உரை கேட்டு
         வாழ்வை வளம் ஆக்கினரே!

         வேதத்தின் விழுப் பொருளை
         விளங்கும்படிச் சொல்லி அவர்
         போதனைகள் பல ஆற்றி
         பொறுப்புடனே செயல் பட்டார்!

          புராணக் கதைகள் எல்லாம்
          புளுகு எனச் சொன்னவர்க்குப்
          புத்துணர்வு அவை என்று
          புரியும்படி அவர் சொன்னார்!

         தமிழ் கொண்டு சமயத்தைத்
         தரணியெங்கும் பரவச் செய்தார்
         தனி ஒருவராய் இருந்து
         தலையாய தொண்டு செய்தார்!

         வாரி எனும் பெயருக்கு
         வாரிவாரித் தமிழ் கொடுத்தார்
         வற்றாமல் அவர் நாவில்
         வளர்ந்ததே தமிழ் நாளும்!

         நாத்திகர் மத்தியிலும் நல்ல தமிழ் பேசினார்
        ஆத்திகர் மத்தியிலும் அழகு தமிழ் பேசினார்
        அவர் தமிழைக் கேட்டவர்கள் அவர்வசமே யானார்கள்
        ஆண்டவனின் அருளாலே அவர் தமிழுமுயர்வாச்சே!

         புராணக் கருத்தை எல்லாம் புதுவிதமாய்ச் சொன்னாரே
         புதுமைக்குப் புதுமையாய் பழைமையைச் சொன்னாரே
         தெரு எங்கும் திருநாமம் செப்பிநின்ற வாரியார்
         சிவநாமம் பரவி நிற்கத் தேசமெங்கும் சென்றாரே!

         பேசுவார் எழுதமாட்டார் பிறவேலை செய்து நிற்பார்
         கூசும்படி நின்றவர்கள் குறைகளுடன் நிற்பார்கள்
         வாரியார் சுவாமிகளோ வம்பெதுக்கும் போகாமல்
         பேசினார் எழுதினார் பெரும்பணிகள் ஆற்றிநின்றார்!

         வாரியார் இடத்துக்கு வந்திடுவார் யாருமிலை
         வாரியார் செய்தபணி வையத்தில் ஈடுஇலை
         வாரியார் வாழ்வெமக்கு நல்லவழி சமைத்திருக்கு
         வாரியார் சுவாமிகளை வாழ்வெல்லாம் நினைத்திருப்போம்!

    Share
  • காதலுக்குப் பச்சைக்கொடி

    — விசாலம்.

     

     

    titwala ganesh2
    சாதாரணமாகக் காதலர்கள் சந்திக்கும் இடம் ஒரு பார்க்கோ, பீச்சோ அல்லது  மாலோ  என்று இருக்க,  ஒரு வித்தியாசமான  இடத்தில் சந்திப்பை  மும்பையில் நான் பல தடவைகள் கண்டிருக்கிறேன்.

    ஒரு பிள்ளையார் ஆலயம் … எப்போதும் அங்கு  சில இள வட்டங்களின் கூட்டம்.  ஆண்கள்,  பெண்களின் கூட்டம். அதுவும் எல்லோரும் காலேஜ் போகும்  நேரம் புஸ்தகமும் கையுமாய்   காலையிலும், மாலையிலும்  தங்கள்  காதலனுடன்  இந்தக்கோயிலுக்கு வந்து வணங்குகிறார்கள்.  கோயிலில் இருந்து அருள் புரிபவர் யாரென்றால்  அட ! நம்ம பிள்ளையார்தான். இதிலிருந்தே தெரிகிறது காதலுக்கும் அந்தப் பிள்ளையாருக்கும் ஏதோ சம்பந்தம் இருக்கிறது என்று, நானும் அங்கு போயிருந்தேன். அட, எனக்கும் ஏதாவது காதலா என்ன? இந்த வயதில் காதல் கேட்கிறதா என்றக் குரல் கேட்கிறது. அதெல்லாம் ஒன்றும் இல்லை. நான் மும்பைவாசி. பிறந்ததிலிருந்து திருமணம் ஆகும் வரை ஆணி அடித்தாற்போல் அந்த இடத்தை விட்டு நகர்ந்ததில்லை. என் வீடும் இந்தப்பிள்ளையார் கோயில் அருகில் தான் இருந்தது. ஆகையால் எப்போது மும்பய்க்கு  விஜயம் செய்தாலும் இந்த கணபதி பப்பா  என்னை அழைத்துவிடுவார். அவரைப்பார்க்காமல் இருக்க மாட்டேன். இவருக்கும் காதலுக்கும் ஒரு புராண சம்பந்தம் இருப்பதைப் பற்றிச் செவி வழியாகக்  கேட்ட செய்தி இது. சகுந்தலையும் துஷ்யந்தனும் தங்கள்  திருமணத்தை இந்தப் பிள்ளையார் சன்னதியில் தான் செய்து கொண்டனராம்.  கண்வ முனிவர் ஆசிரமத்தில் முதலில் அவர்கள் காந்தர்வ விவாகம் செய்து கொண்டார்கள்.  ஆனால் துர்வாசரின் சாபத்தினால் அரசன் துஷ்யந்தன்  சகுந்தலையை  மறந்து போனான். சகுந்தலையும் இந்தக்கணபதியை சதா சர்வகாலமும்  நினைந்து நினைந்து உருகி வேண்டிக்கொள்வாள்.

    “அப்பா தும்பிக்கை கணபதியே, என் கணவர் துஷ்யந்தன்  என்னை  காந்தர்வ்  மணம்  புரிந்துக்கொண்ட பின்  தனது ராஜ்ஜியத்திற்குப் போய் உடனே தகுந்த மரியாதைகளுடன்  என்னை அழைத்துப்போவதாகச்சொல்லிவிட்டு  போனாரே. ஆனால் இன்னும் வரவில்லையே! அவரை எப்படியாவது என்னை வந்து அழைத்துப்போக அருள் செய் கணேசா.” என்று வேண்டிக்கொள்வாள்.

    இது ஒரு நாள், இரண்டு நாள் செய்த வேண்டுதல் இல்லை. தினமும் மனமுருகி கண்கள் கலங்கி நின்ற வேண்டுதல். ‘சோக வினாச காரணம்’ என்றும்  ‘விக்ன ஹரண வினாயகா’ என்றும் பெயர் பெற்ற அந்தக் கருணாமூர்த்தி இவளுடைய வேண்டுகோளை தனது பெரிய முறம் போன்ற காதில் போட்டுக்கொண்டார்.  சகுந்தலையை அவளது கணவருடன் சேர்க்க வேலைகள் செய்ய ஆரம்பித்தார்.  சகுந்தலையை தான் மணந்துக்கொண்ட  செயலை  முற்றிலும் மறந்திருந்த துஷ்யந்தனுக்கு   இந்தக்கணபதி   பழைய ஞாபகத்தை வரவழைக்க   காரணமாயிருந்தார்.  பின் துஷ்யந்தன் தன் தவறுக்கு வருந்தி சகுந்தலையைப்பார்க்க ஓடோடி வந்தார். சகுந்தலையின் மகன் பரத் இருக்க    சகுந்தலையைத் திரும்ப இந்தப்பிள்ளையார் கோயிலில்   மணந்தார்  என்று இந்த ஆலயத்தில் கூறப்படுகிறது. அதனால் இவர் காதலுக்கு வெற்றி தரும் கணபதி ஆனார்.

    titwala ganesh1மும்பையில்  தாதர் ஸ்டேஷன் அருகில்   இருக்கும்  இந்த ‘டிட்வாலா கணபதி’  ஒரு  வரப்பிரசாதி, கேட்டதை வழங்குவார். நான்கு கைகள் கொண்டவர்.  மேல் இரண்டிலும் பாசமும்   அங்குசமும் கீழ் இரண்டில் ஜபமாலையும்  மோதகமும்  கொண்டுள்ளார்,  பாம்பு பூணலாகிறது. கண்கள் அப்படியே மின்னி பளபளக்கின்றன.  ஏன் என்றால் கண்களில் வைரக்கற்கள். பதிக்கப்பட்டிருக்கின்றன. அதே போல் நாபியிலும் வைரக்கற்கள், பார்க்கப் பார்க்க பரவசம்தான்,  நம்முடன் பேசுவது போலவே  இருக்கிறார். அவர் அமர்ந்திருக்கும் பீடம் நாகபந்தனத்திலான பீடம்.  அங்கு எல்லா பூஜை பாத்திரங்களும் தங்கமும் வெள்ளியுமாக  காணமுடிகிறது.

    மும்பையில்   பலர் வீட்டில் இந்த  டிட்வாலா  கணபதியின் படம் இருக்கும். நிஜ  குடுமியுடன்  இருக்கும் தேங்காய் ஓட்டின்  நடுவில் இந்த  கணபதியின் சிலையை வைத்து   வியாபாரம் செய்கின்றனர்.

    அதற்கு நல்ல டிமேண்ட்! என்னிடம் ஒன்று அதுபோல் இருக்கிறது. செவ்வாய்கிழமை அன்று வரும் அங்காரக சதுர்த்திக்கு இங்கு ஒரு கியூ வரிசை நிற்கும் பாருங்கள்!!! திருப்பதியை ஞாபகப்படுத்திவிடும்.

    தவிர கணேச சதுர்த்தி அன்று இங்கு பெரிய விழாவே நடக்கும். கூட்டம் தாங்காது. எங்கும் டெலிவிஷன் அமைக்கப்பட்டு மக்களுக்காக அங்கு நடக்கும் அபிஷேகம் ஆராதனைகள் காட்டப்படும். மக்கள்  இங்கும் மட்டைத்தேங்காய் வாங்கி தங்கள் கோரிக்கைகளை வேண்டிக்கொண்டு பூஜாரியிடம் கொடுக்க, அவர் அதை கணபதி பாதங்களில் வைத்து  அதை அவர்களிடமே திருப்பிக்கொடுப்பார். அதை ஒரு இடத்தில் கட்டிவைக்க வேண்டும். ஒவ்வொரு வாரமும் செவ்வாய் அன்று அங்குப்போய் பூஜை செய்து வரவேண்டும். இது போல் ஐந்து செவ்வாய் செய்ய வேண்டும். ஐந்து வாரம் முடிவதற்குள் நினைத்தது நடந்து விடுவதை நான் பலரிடம் பார்த்திருக்கிறேன்.

    வினாயகருக்கு  வழிபட 21 பச்சிலைகள் உண்டு எனப் புஷ்ப சாஸ்திரம்  சொல்லுகிறது……..

    அருகு, நொச்சி, மாசி, கையாந்தரை, வில்வம், ஊமத்தை, கத்திரி, நாயுருவி, தேவதாரு, வன்னி, நெல்லி, மருவு, அலரி, சிறுசெண்பகம், எருக்கு, மருதம், விஷ்ணுக்ரந்தை, மாவிலை, பாதிரி, செந்தாழை, காட்டகத்தி.

    கணேச சதுர்த்திக்கு என் நல்வாழ்த்துகள்… ஒரு பாடல்  அவர்மேல் பாடி அருளை வேண்டுகிறேன்…

    ராகம்: கல்யாணி   
    தாளம்: ஆதி

    பல்லவி
    ஆதி முதல்வனே ஓம்கார ரூபனே
    அனைத்து வினைகளும் தீர்ப்பவனே
    {ஆதி முதல்வனே}

    அநுபல்லவி:
    வேழ முகத்தோனே ஞானம் தருபவனே
    சிவனின் மைந்தனே அழகனின் சோதரனே
    உந்தன் நாமம்  சொல்லச்சொல்ல
    கிடைக்கும்  ஒரு   பரமானந்தம்
    {ஆதி முதல்வனே}

    சரணம்:
    தாய் தந்தையே உலகம் என்றாய்
    தரமான மாம்பழம்  வெற்றி பெற்றாய்
    பற்பல தலங்ளில் பற்பல வடிவங்கள்
    பற்பல பெயருடன் பற்பல கதைகள்
    அருகம்புல்லில் குளிர்ப்பவனே
    அனைத்து பூஜைக்கும் தலைவனே
    மூஷிக வாஹனனே  மோதகப்பிரியனே
    மதி எங்குச் சென்றாலும் மனம் உன்னை நாட
    அருள் புரிவாய் பார்வதி பாலகனே
    {ஆதி முதல்வனே}

    படம் உதவிக்கு நன்றி:
    https://abhishekkisla.wordpress.com/tag/titwala-ganesh-mandir/
    http://blessingsonthenet.com/indian-temple/photo-gallery/261/titwala-temple-photos

    Share
  • என்னத்தைச் சொல்ல! – 1

    இன்னம்பூரான்

     innam

    ‘The Devil quoting the Bible’ என்ற ஆங்கில சொலவடை இப்போது நினைவில் வருகிறது. என்னத்தைச் சொல்ல! பங்கு சந்தையில் புகுந்து கன்னா பின்னா அழுகுணி ஆட்டம் ஆடி ரூ.5600 கோடியை ஸ்வாஹா செய்த வினை NSEL & MCX-SX என்ற அபூர்வ சகோதர கில்லாடிகளை சார்ந்தது. அவற்றின் பிதாமஹராகிய ஜிக்னேஷ் ஷா சிறையில் அடைக்கப்பட்டார். நடந்ததை மறந்து எங்களுக்கு புதிய அவதாரத்துக்கு நாமகரணம் செய்ய வேண்டும் என்று அனுமதி வேறு கேட்டிருக்கிறது, MCX-SX. ‘அதெல்லாம் சும்மா உளவாங்காட்டிக்கு. ஆனாலும், அவர்களுக்கு தனியார் துறை ஆடிட்டர் கொடுத்த சான்றிதழ் மீது ஆனானப்பட்ட ஆடிட்டர் ஜெனெரல் கமெண்ட் அடிக்கவில்லை; எனவே நாங்கள் தவறிழைக்கவில்லை என்பது உறுதியாச்சு என்று தம்பட்டம் அடித்து ஒரு செய்தி! அரசு முதலீடு பொருட்டு, ஆடிட்டர் ஜெனெரல் செய்யும் இந்த அடுத்தக்கட்ட ஆடிட், அந்த தனியார் துறை ஆடிட்டர், சட்டரீதியான ஆடிட் செய்துள்ளனர் என்று தான் எதிர்வினை கருத்துத் தெரிவிக்கவில்லை. அதைப் போய் எங்கள் பரிசுத்தத்துக்கு அதுவே சான்று என்பது, ‘The Devil quoting the Bible’. அதாவது, ‘வசிஷ்டர் வாயாலெ பிரம்மரிஷி’ என்பதாகும். இதெல்லாம் ‘இடம்’ தகர்த்து, ‘பொருள்’ பேதம் செய்து, ‘ஏவலை’ திசை திருப்பும் சால்ஜாப்பே.

    ‘வல்லமையில்’ தணிக்கைத்துறை பற்றி எழுதிய கட்டுரைகளை, கடந்த காலம், நிகழ்காலம், வருங்காலம் ஆகியவற்றை இணைத்து, அரசியல் விழிப்புணர்ச்சி பொருட்டு ஒரு தொடராக எழுதலாமா/வேண்டாமா என்பதை வாசகர்கள் தான் தீர்மானம் செய்ய வேண்டும். இல்லை, இம்மாதிரியான ‘நறுக்’ போதுமா?

    Share
  • இளையோர் கூட்டம் தலைமை தாங்கும் பூமியே புதிய பூமி

    –கவிஞர் காவிரிமைந்தன்.

     

     

    Puthiyaboomi
    புரட்சி நடிகர் என்கிற அடைமொழியோடு எம்.ஜி.ஆர் திரைத்துறையில் அரசாட்சி நடத்தியபோது அவர்தம் திரைப்படங்களில் இடம்பெற்ற கொள்கைப் பாடல்கள் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு உரம் ஊட்டியதை எவரும் மறுக்க முடியாது.

    ஏழைகளின் தோழனாய், எல்லோருக்கும் நண்பனாய், ஏற்ற பாத்திரங்களில் எல்லாம் முத்திரை பதித்து, எம்.ஜி.ஆர். என்கிற மூன்றெழுத்து மந்திரத்தை உச்சரிக்காத உதடுகளே இல்லை என்கிற நிலையை ஏற்படுத்திய அற்புதம் தமிழகத்தில் மட்டுமே நடந்துகொண்டிருந்தது.

    அந்தச் சரித்திரத்தில் பங்கேற்ற திரைப்பாடலாசிரியர்கள் ஒவ்வொருவரும் அவருக்கேற்ற பாடலை உருவாக்குவதில் பெரும் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.  இன்னும் சொல்லப்போனால், அக்கவிஞர்களின் வரலாற்றிலேயே இத்தகு பாடல்கள் தலைசிறந்த பாடல்களாக விளங்குகின்றன.

    நான் உங்கள் வீட்டுப்பிள்ளை
    இது ஊர் அறிந்த உண்மை
    நான் செல்லுகின்ற பாதை
    பேரறிஞர் காட்டும் பாதை

    கவிஞர் பூவை செங்குட்டுவன் பலநூறு பாடல்கள் எழுதியிருந்தாலும்…எம்.ஜி.ஆருக்காக எழுதிய இந்தப் பாடலில் அவர் பெற்ற புகழ் உச்சமானது.

    கவிஞர் பூவை செங்குட்டுவன்puthiya boomi group

    திராவிட முன்னேற்றக்கழகத்திற்கு அச்சாணியாய் விளங்கிய  அன்புத்தலைவரை பேரறிஞர் என்றழைத்து மகிழ்ந்த தொண்டர்கள்  எம்.ஜி.ஆர். தனது திரைப்பாடல் வரியில் அவரை நேரடியாக சுட்டிக்காட்டும் பதிவைக் கண்டு குதூகலம் அடைந்தனர்.

    இளையோர் கூட்டம் தலைமை தாங்கும் பூமியே புதிய பூமி என்கிற இவ்வரிகள் இளைஞர்களுக்கு தந்த ஊட்டம் கொஞ்சமல்லவே!

    http://youtu.be/L4HX839IVuA
    காணொளி: http://youtu.be/L4HX839IVuA

    திரைப்படம்: புதிய பூமி (1968)
    பாடல்: பூவை செங்குட்டுவன்
    இசை: எம். எஸ். விஸ்வநாதன்
    குரல்: டி. எம். சவுந்தராஜன்

    நான் உங்கள் வீட்டுப்பிள்ளை
    இது ஊர் அறிந்த உண்மை
    நான் செல்லுகின்ற பாதை
    பேரறிஞர் காட்டும் பாதை

    காலம்தோறும் பாடம் கூறும்
    மாறுதல் இங்கே தேவை
    ஏழை எளியோர் துயரம் போக்கும்
    செயலே எந்தன் சேவை
    இதயம் என்பது ரோஜாவானால்
    நினைவே நறுமணமாகும்
    எங்கே இதயம் அங்கே வாழும்
    அன்பே என்னை ஆளும்
    (நான்உங்கள்வீட்டுப்பிள்ளை)

    கோவில் என்றால் கோபுரம் காட்டும்
    தெய்வம் உண்டு அங்கே
    உள்ளம் என்றால் உயர்ந்து காட்டும்
    எண்ணம் வேண்டும் இங்கே
    பிறந்த நாடே சிறந்த கோவில்
    பேசும் மொழியே தெய்வம்
    இதை மறந்திடாமல் வாழ்ந்து வந்தால்
    கோபுரமாகும் கொள்கை
    (நான்உங்கள்வீட்டுப்பிள்ளை)

    உனக்கொரு பங்கும் எனக்கொரு பங்கும்
    உலகில் நிச்சயம் உண்டு
    ஒவ்வொரு மனிதன் உழைப்பினாலும்
    உலகம் செழிப்பதுண்டு
    எது வந்தாலும் ஏற்றுக்கொண்டால்
    துணிவே துணையாய் மாறும்
    இளையோர் கூட்டம் தலைமை தாங்கும்
    பூமியே புதிய பூமி
    (நான்உங்கள்வீட்டுப்பிள்ளை )

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்…..(121)

    –சக்தி சக்திதாசன்.

    அன்பினியவர்களே !

    இனிய வணக்கங்கள்.

    கல்வியின் மகத்துவத்தை, அதன் இன்றியமையாத அவசியத்தை உலகின் எந்த மூலையில் அமைந்துள்ள நாடுகளும், அவற்றின் அடித்தளமாக, உயிரோட்டமாக அமைந்திருக்கும் சமுதாயங்களும் மிகவும் தெளிவாக உணர்ந்திருக்கும் ஒரு கால கட்டத்திலே நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதுவே யதார்த்தமான உண்மையாகும்.

    நாடுகளுக்கிடையே இருக்கும் தூரம் குறைந்து வருகிறது. பிரயாணிக்கும் வேகம் அதிகரிப்பதனால் அதற்காகச் செலவு செய்யும் நேரமும் குறைந்து கொண்டே வருகிறது.

    விஞ்ஞான அறிவு அதிகரித்து அதன்மூலம் நமது அன்றாட வேலைப்பளுக்களைக் குறைப்பதற்கான சாதனங்களின் கண்டுபிடிப்புகள் அதிகரிப்பதனால் அத்தகைய பொருட்களின் மீது மக்கள் கொண்டிருக்கும் சார்பு நிலையும் அதிகரிக்கிறது. அதன்மூலம் இத்தகைய பொருட்களின் உற்பத்தியின் பெருக்கம் அவசியமாகிறது.

    பொருளாதார முன்னேற்றத்துக்கான வழிமுறைகள் இத்தகைய வியாபரங்களுக்குள் தேடிக்கொள்ளும் உத்தியோகங்களிலேயே தங்கியுள்ளது.

    இது கல்வியின் அவசியத்தை ஒவ்வொரு மனிதனுக்கும் வலியுறுத்தி நிற்கிறது.

    எனது இவ்வார மடலின் மூலம் நான் உங்களோடு பகிர்ந்து கொள்ளப்போகும் விடயம் எதுவாகவிருக்கும் எனும் எண்ணம் உங்களுக்குத் தலைதூக்குவது இயற்கையே.

    இன்றைய அறிக்கை ஒன்றின்படி இங்கிலாந்தின் அதியுயர் பதவிகள் பிரத்தியேகப் பாடசாலைகளில் கல்வி பயின்றவர்களிடமே தங்கியுள்ளதாகத் தேரிவிக்கிறது.

    அது சரி ! அதற்கென்ன என்று கேட்கிறீர்களா ?

    பிரத்தியேகப் பாடசாலைகளில் கல்வி பயில்வதற்கு மிகுந்த செலவு ஏற்படும். அதாவது இங்கிலாந்தில் பிரத்தியேகப் பாடசாலைக் கட்டணம் மிகவும் அதிகம். எனவே இத்தகைய பாடசாலைகளில் கல்வி பயில்வோர் மிகவும் செல்வமிக்க குடும்பங்களைச் சேர்ந்தவர்களாகவே இருப்பார்கள்.

    இந்த அறிக்கையில் அவர்கள் ஏறத்தாழ 4000 வியாபாரங்கள் மற்றும் அரசியல் துறைகளில் ஆய்வு நடத்தியதில்;

    71% வீதமான உயர் நீதிபதிகள்
    62% வீதமான உயர் இராணுவ அதிகாரிகள்
    55% வீதமான உயர் அரச அதிகாரிகள்
    36% வீதமான அமைச்சரவை பதவிகள்
    43% வீதமான பத்திரிக்கை ஆசிரியர்கள்
    ஆகியோர் மிகவும் பிரபலமிக்க பிரத்தியேகப் பாடசாலைகளில் பயின்று, மிகவும் பெயர் பெற்ற சர்வகலாசாலைகளில் பட்டம் பெற்றவர்களாவார்கள் எனவும், இவர்களின் குடும்பப் பின்னணியின் படி இவர்கள் செல்வமிக்க குடும்பத்திலிருந்து வந்தவர்கள் எனவும் இவ்வறிக்கை கூறுகிறது.

    இப்படிப்பட்ட ஒரு சூழலில் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மாணவன் அன்றி மாணவி எப்படி இத்தகைய உயர் பதவிகளை எய்தலாம்? எனும் கேள்வி சில அரசியல் எதிர்தரப்புகளில் இருந்து எழுகிறது.

    educationஇன்றைய இங்கிலாந்து அனைத்து மக்களுக்கும் சமமான தளத்தை அமைத்துக் கொடுக்கிறதா? எனும் கேள்வியும் மிகவும் ஓங்காரமாக ஒலிக்கிறது.

    ஆனால் இத்தகைய ஒரு நிலையை மாற்ற உகந்த வழி என்ன? குற்றம் சாட்டும் உங்களிடம் இதற்கு மாற்று வழி இருக்கிறதா? வசதி மிக்க குடும்பத்தைச் சேர்ந்த மாணவனோ அன்றி மாணவியோ அதிகக் கட்டணம் செலுத்தி பிரத்தியேகப் பாடாசாலைகளுக்குச் செல்வதைத் தடுப்பது தனிமனித சுதந்திரத்திற்கு எதிராக விடுக்கப்படும் சவாலாக இருக்காதா ? என்று அரசாங்கத் தரப்பிலிருந்து சத்தமாகக் கேட்கிறது.

    இதற்கு ஒருவகையிலான தராதரப்படுத்துதல் முறையை அறிமுகப்படுத்தலாமே என்கிறார்கள் ஒரு சாரார்.

    சமுதாயத்தின் ஒரு பிரிவினருக்கு எதிராக தராதரப்படுத்துதல் முறையைக் கொண்டுவருதல் சட்டத்திற்கு முரணானது எனும் வாதம் சட்டத்தரப்பினில் இருந்து வருகிறது.

    எந்தக் கல்லூரியில் படித்து, எந்தச் சர்வகலாசாலையில் பட்டம் பெற்றிருந்தாலும் அதைத் தொடர்ந்து அவர்களுக்குப் பயிற்சிக்ககா ஒதுக்கப்படும் இடங்கள் தகமை பெற்ற மாணவர்களின் குடும்பப் பின்னணியையும் கருத்திற் கொண்டு எடுக்கப்பட வேண்டிய அவசியத்தை தனியார் தரப்பு வியாபாரங்களுக்கு அறிவுறுத்த வேண்டும். இது இந்த நிலையை ஒருவகையில் மாற்றியமைக்க உதவும் என்கிறார்கள் சிலர்.

    எது எப்படி இருப்பினும் கல்வியும், வேலை வாய்ப்புகளும் நாட்டின் அனைத்துத் தரப்பினருக்கும் அடையக்கூடியவகையில் அமைந்திருக்க வேண்டியது அவசியம் .

    இதற்கு சட்டம் அவசியமா? அன்றி பெற்றோரின் கடமையின் வலிமை உணரப்பட வேண்டியது அவசியமா? மிகவும் சிக்கலான கேள்வி இல்லையா ?

    மீண்டும் அடுத்த மடலில்

    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    படம் உதவிக்கு நன்றி: http://whyworkineducation.com/about/

    Share
  • உயர்ந்த இடம்

    –பொன்.ராம்.

    என்ன காமெராவைப் பாத்துட்டு ஓடி வந்துட்ட ………….!

    பசிக்குதுன்னு சொன்னியே! அதான் கூட்டிட்டு வந்தேன் பாப்பா….என்கிட்டயும் காசில்ல…..அப்பா கொடுத்த காசுக்கு பெட்ரோல் போட்டாச்சு……….

    ‘ப்ச்’….எத்தனையோமுறை அப்பாட்டயும், அம்மாட்டயும் சொல்லியாச்சு……ஊரைச்சுத்திக்கடன்….வித்துட்டு இருக்கறதை வச்சு சந்தோஷமா இருங்கன்னு……. ஊரு உலகத்துக்காக பயந்து வாழுற என் அப்பா அம்மாவுக்காக பாக்குறேன். பெரிய பிசினஸ் புள்ளி.  ஆனா நான் எங்க நிக்குறேன்….பாத்தீங்களா! ரமேஷ் அண்ணா…..நான் காருக்குள்ளயே இருக்கேன்………..அம்மா உணவகத்துல என்ன இருக்கோ அத வாங்கிட்டு வாங்க……………….!

    அதெல்லாம் அங்க வச்சே சாப்பிடணும்……….,

    இல்ல……என் ஃப்ரெண்ட் அப்பாவுக்கு உடம்பு ரொம்ப முடியாதவரு….வயசு ரொம்ப ஆயிட்டதால அவரால சமைக்கமுடியாது. அதனால அவ போய் அவங்கப்பாவுக்கு கேக்கறப்ப கொடுத்தாங்க………

    டிஃபன்பாக்ஸ் எதுவும் வச்சிருக்கியா!

    வேலைக்காரிகிட்ட அம்மா பாத்திரம் சரியா கழுவுலன்னு சண்டை போட்டுட்டு,  இன்னைக்கு வரலை…..அதான் நானே கழுவி கொண்டுவந்திருக்கேன்.

    உனக்கேன் பாப்பா இந்தவேலை…… அம்மா உன்னை திட்டலையா!

    அம்மா அப்பாவோட சேந்து தண்ணியடிச்சுட்டு காலைலவரைக்கும் எந்திரிக்கலை……….! சமையல்காரியும் வரலை……..நாலுமணிக்குமேல எனக்கு எழுத வேண்டியிருந்தது…அதான் அடுப்படிக்கு போகலை……இல்லைன்னா சாதமாவது வச்சிருப்பேன்………….,  போகும்போது எனக்கு சமையல் புக் ஒண்ணு வாங்கி வக்கிறியாண்ணா………,  வெளில வந்து சாப்பாட்டுக்கு நிக்கறது அசிங்கமா இருக்கு…….யாராவது பாத்தா அப்பாட்ட சொல்லிடுவாங்க………….

    கண்ணில் எழுந்த கண்ணீரை அவள் பார்க்காதபடி தூசி விழுந்ததுபோல லேசாகத் துடைத்தபடி ஏன் பாப்பா! உங்க ஸ்கூல்லயே காண்டீன் இருக்குல்ல!

    அங்க போறதுக்கும் கைல காசு வேணும்ல……..ரெண்டுபேருக்கும் குடிக்கறதுக்கும், கார்ல அடுத்தவங்க பாக்கறதுக்கும் கடன்வாங்கி செலவு செய்யறாங்க….ஃபாரீன் மாதிரி படிச்சுக்கிட்டே வேலைன்னு இந்தியாவுல வந்தா நல்லாருக்கும்…..பத்துகூட முடிக்காத எனக்கு யார் வேலை தருவா இப்ப………..? காரு ஏன் மாறிப்போவுது அண்ணா?

    நான் உன்னை எல்கேஜில இருந்து வண்டில இந்த ஸ்கூலுக்கு கொண்டுவந்து விட்டுட்டு இருக்கறேன் பாப்பா! என்னைக்கும் நீ பசின்னு சொன்னதில்ல……..அதான் மனசு கேக்கல….என் வீட்டுல சாப்பிட்டு போகலாம்.

    ஆமா! இதுவரை நீங்க தனியால்ல இருக்கேன்னு நினைச்சிட்டு இருக்கேன்.

    இல்ல பாப்பா! எனக்குன்னு ஒரு சின்ன குடும்பம் இருக்கு…வா! வீடு வந்திருச்சு…இறங்கு………

    சுஜின்னு கூப்பிடு….எனக்கும் வயசாகுதுல்ல……….!

    இல்லை பாப்பா…..எனக்கு அப்படியே கூப்புட்டு பழகிடுச்சு……………..நீ கல்யாணமாகி புள்ளை பெத்தாலும் நீ எனக்கு பாப்பாதான்.

    கௌரி யார் வந்திருக்கான்னு பாரு………………!

    எட்டிப்பார்த்த கௌரி சுஜியை வாம்மா! வந்து உட்காரு என்றாள்.

    வீட்டைச்சுற்றிப் பார்த்த சுஜி அலமாரியில் இருந்த மதர் தெரசாவை வைத்த கண் வாங்காமல் பார்த்தாள்.

    அலமாரி முழுவதும் ஷீல்டுகளால் நிறைந்தபடி இருந்ததை வியந்து பார்த்தாள். நடுவில் ஒரு தேவதை டிரஸ் போட்ட எட்டுவயதுப்பெண் பாப்தலையுடன் சிரித்துக்கொண்டிருந்தாள்.

    அண்ணா இது யாரு………..?

    இது என் பொண்ணு……..!

    இப்ப எங்க……………….?

    கடவுளுக்கு அந்த பொண்ணை ரொம்ப பிடிச்சுப்போச்சாம்….அதான் பூமில ப்ரைஸ் நிறைய வாங்கிட்ட………….., என்கூடவந்து இருந்துக்கோன்னு கூட்டிக்கிட்டார்.  உன்ஸ்கூலுதான் பாப்பா…. உன்னோட ஒரு வயசு கம்மி………இருந்தா உன்னோட பேசிட்டு இருந்திருப்பால்ல………..சுவரில் தொங்கிய ஃபோட்டோவை வெறித்தான்.

    வா பாப்பா! டைனிங்டேபிள்ல உட்காருன்னு சொன்ன கௌரியை முதன்முதலாகப் பார்த்தாள்.

    வீட்டில் பரப்பி வைத்திருக்கும் ஹாட்பாக்ஸ், ஆடம்பர கண்ணாடி டம்ளர்,வெள்ளி பழத்தட்டு எனப் பார்த்துப் பழகிய கண்களுக்கு பரப்பிய வாழைஇலை சாப்பாடு அவளுக்குப் புதிதாகத் தெரிந்தது. அதைவிட கௌரி பரிமாறக் காத்திருந்தது  புதிதாகத் தெரிந்தது.

    சுஜி…எனக்கு ப்யூட்டிபார்லர்ல வேலை இருக்கு. நீ போய் வேலைக்காரிட்ட சொல்லி சாப்பிட்டுக்க…….! என்ற குரல் மனதில் ஒலித்தது.

    நான் உங்க பொண்ணு மாதிரின்னு நினைச்சுதானே வீட்டுக்கு கூட்டிட்டு வந்தீங்க….. தரையிலயே உக்காந்துக்கறேன்.

    வாஷ்பேசின் எங்க! ஓ சாரி! கொல்லைப்பக்கம் எங்கிருக்கு?

    ஓடிச் சென்று கையைக் கழுவித் துடைத்தபடி ஸ்கர்டை இழுத்துக்கொண்டு அமர்ந்த பெண்ணை பாசத்துடன் பார்த்தாள் கௌரி.

    இன்னைக்கு நீ வருவேன்னு தெரியாது…….டிஃபன் செய்யல……….அதுதான் உருளைக்கிழங்கு பொரியலும், முருங்கைக்காய்கூட்டும், தக்காளிக்குழம்பும், அப்பளமும் வச்சிருக்கேன். சாப்பிடுறியா……………….

    போடுங்க பசி உயிர் போகுது…..

    ரசித்துச் சாப்பிட்டாள் சுஜி.

    Swamiஅண்ணா! எனக்கொரு உதவி செய்வியா? சாப்பிட்டுக்கொண்டே பேசினாள் சுஜி.

    நான் டெய்லி இங்க வந்து சாப்புட்டுபோறதுக்கு எதாவது ஐடியா இருக்கா? படுத்துத் தூங்கக்கூடப் பிடிக்கல….எங்கயாவது போய் செத்துடலாம்னு தோணுது……….

    கௌரி தன் கணவனை ஆச்சர்யத்துடன் பார்த்தாள்.

    நீ சாப்பிட்டு கிளம்பு பாப்பா! ஸ்கூலுக்கு நேரமாய்டும்…..

    கதவருகில் யாரோ வந்து நிற்பதுபோல நிழலாட………! சிலையாய் நின்றாள் சுஜி. அப்பா என்று உச்சரித்த சொல் தொண்டைக்குள் பயத்தால் குழறியது.

    நான் அப்பவே நினைச்சேன். இவளைப்போய் இங்க கூட்டிட்டு வந்திருக்காரே…..அவங்க குடிச்சா உங்களுக்கென்ன? உங்களுக்கு இனி வேலை வெளில தேட வேண்டியதுதான். அலுத்துக்கொண்டாள் கௌரி.

    இரவுநேரத் தூக்கமின்மையாலா, அல்லது குடித்துச் சிவந்திருந்ததாலா எனத் தெரியாத அதிகாரக்கண்களில் என்றுமே கண்ணீரைப் பார்த்தறியாத சுஜி அன்று கண்ணீரைப் பார்த்தாள்.

    உனக்காகத்தானடா விழுந்து விழுந்து சம்பாதிக்கறேன். நம்ம கார் ஒண்ணை இங்க வொர்க்ஷாப்ல விட்டிருந்தேன். எடுக்கலாம்னு வந்தேன். வர்ற வழில உன் கார் இங்க நிக்குது…. என்னவோ டிரைவர் உன்னைச் என்ன செஞ்சிடுவானோன்னு பயத்துல மறைஞ்சு வந்தேன்.

    பாத்தா இங்க நீ இப்பிடி பேசுற…….ரமேஷ்! இனி இது உன் வீட்டுப்பொண்ணு மாதிரி நினைச்சுக்கோ! அது எப்ப சாப்பாடு கேக்குதோ போடுங்க…..  சுஜி முன்னாலேயே சொன்னமாதிரி கடனையெல்லாம் அடைச்சிடுறேன். மூட்டை தூக்கியாவது எம் பொண்ணைக் காப்பாத்துறேன்..  போதுமாம்மா..இனி நாங்க ரெண்டுபேரும் குடிக்கவும் மாட்டோம். அப்பாவோட ஸ்கூல் முடிஞ்சு வீட்டுக்கு வந்துடுறியாம்மா………!

    பன்னீர்ரோஜாக்களை யாரோ தனது தலைமேல் கொட்டியதுபோல உணர்ந்தாள் சுஜி. இதோ! சாப்பிட்டு வர்றம்பா…….ஆண்ட்டி நல்லா வச்சிருக்காங்க…………..

    நீங்களும் சாப்பிடுறீங்களாய்யா?

    சும்மாயிருங்க..! அவரு எவ்வளவோ ஒசந்த இடத்துல இருந்து வந்தவரு……அவர்கிட்டபோய்……..

    உசந்த இடம்கிறது பங்களாவுலயோ….போற கார்லயோ இல்லைம்மா…..பசிக்குதுன்னா…ஒருவேளை சாப்பிட சாப்பாடு கொடுக்கறாங்கபாருங்க …! அவங்கதான் உயர்ந்தவங்க……..கொண்டுவாங்க சாப்பாடை…….‘கீழேயே உக்காந்துக்கறேன்னு உயர்நதவன் என்ன! தாழ்ந்தவன் என்ன‘ எனப் பாடிய  அப்பாவைச் சிரித்தபடி பார்த்தாள் சுஜி. ‘சாதி இரண்டொழிய வேறில்லை‘ எனப் பக்கத்துவீட்டுகுடிசையில் யாரோ படிப்பதைக் கேட்ட சுஜி  அலமாரியில் ஒட்டியிருந்த விவேகானந்தர் படத்தின்கீழ்  ‘உன்னால் எதையும் சாதிக்க முடியும்‘ என்ற வாசகத்தை மனதுக்குள் மௌனமாகப் படித்தாள். அவளுக்கு வாழ்க்கையின் பொருள் புரிந்ததுபோல இருந்தது.

    Share
  • மூங்கில் தோட்டம்… புல்லாங்குழலிசை

    ஸ்ரீநிவாசன்

     

    [mixcloud]http://www.mixcloud.com/shrini-vasan/moongil-thottal-flute/[/mixcloud]

     

     

    படம் : கடல் (2013)
    இசை: A.R.ரஹ்மான்
    பாடியவர்கள்: அப்ஹாய் ஜோத்பூர்கர், ஹரிணி
    பாடல் வரிகள் : வைரமுத்து

    மூங்கில் தோட்டம் மூலிகை வாசம்
    நெறஞ்ச மௌனம் நீ பாடும் கீதம்
    பௌர்ணமி இரவு பனிவிழும் காடு
    ஒத்தையடி பாதை உன்கூட பொடி நட
    இது போதும் எனக்கு இது போதுமே
    வேறென்ன வேணும் நீ போதுமே

    இது போதும் எனக்கு இது போதுமே
    வேறென்ன வேணும் நீ போதுமே

    மூங்கில் தோட்டம் மூலிகை வாசம்
    நெறஞ்ச மௌனம் நீ பாடும் கீதம்

    குளத்தாங்கரையில குளிக்கும் பறவைக
    சிறகு உலத்துமே துளிக தெறிக்குமே

    முன்கோபம் விடுத்து முந்தானை எடுத்து
    நீ மெல்ல துடைக்க நா உன்ன அணைக்க

    இது போதும் எனக்கு இது போதுமே
    வேறென்ன வேணும் நீ போதுமே
    இது போதும் எனக்கு இது போதுமே
    வேறென்ன வேணும் நீ போதுமே

    மரங்கள் நடுங்கும் மார்கழி இருக்க
    ரத்தம் உறையும் குளிரும் இருக்க

    உஷ்ணம் யாசிக்கும் உடலும் இருக்க
    ஒத்தப் போர்வையில இருவரும் இருக்க
    இது போதும் எனக்கு இது போதுமே
    வேறென்ன வேணும் நீ போதுமே

    இது போதும் எனக்கு இது போதுமே
    வேறென்ன வேணும் நீ போதுமே

    மூங்கில் தோட்டம்… மூங்கில் தோட்டம்
    மூலிகை வாசம்… மூலிகை வாசம்
    நெறஞ்ச மௌனம்… நெறஞ்ச மௌனம்
    நீ பாடும் கீதம்… நீ பாடும் கீதம்
    பௌர்ணமி இரவு… பௌர்ணமி இரவு
    பனிவிழும் காடு…பனிவிழும் காடு
    ஒத்தையடி பாதை… ஒத்தையடி பாதை
    உன்கூட பொடி நட… உன்கூட பொடி நட

    இது போதும் எனக்கு இது போதுமே

    வேறென்ன வேணும் நீ போதுமே

    Share
  • மன்னிப்பாயா?

    இசைக்கவி ரமணன்

     

    உனக்கே உனக்காக  (34)

    மன்னிப்பாயா?

    (கேட்டு மகிழ)

    10532382_660585207366288_3852778901113805194_n

    ஊட்டிவிட்ட கைகளை நான் கடித்துவிட்டேனா? என்
    உயிரே! உனைத்துன்புறுத்தி உயிர் வளர்த்தேனா!
    காட்டுத் தீயில் மானைப்போலக் கலங்குகின்றாயே! இந்தக்
    கரிமுகத்தைக் கண்டேனோ மயங்கி நின்றாயே!

    வீதியிலும் மறைவினிலும் சின்னப் பிள்ளைபோல், நாம்
    விதியைமீறி அச்சமின்றி விளையாடியதும்
    பாதியிலே சொர்க்கமெல்லாம் பறிகொடுத்ததாய், நித்தம்
    பரிதவித்துப் பரிதவித்துப் பாசம் வளர்த்ததும், உன்

    சோதிமுகம் கண்டுகண்டு சுமைகள் தீர்ந்ததும், நீ
    சொல்லிச் சொல்லி ஏழையென்றன் உயிர்வளர்ந்ததும்
    சோதனைபோல் மாறியதேன் சொக்கத் தங்கமே! இதைச்
    சொல்லியழ யாருமில்லை தின்னும் வெட்கமே…

    உயிரைக்கண்ட பரபரப்பில் உளறிவிட்டேனா? இந்த
    ஊமைக்குமொழி வந்தவுடன் ஊளையிட்டேனா?
    தயிர்க்குடத்தை மத்தெடுத்து உடைத்துவிட்டேனா? என்
    தாயே! உன்நெஞ்சைக் காலால் உதைத்துவிட்டேனா?

    ஒருமுறை ஒரேமுறை மன்னிப்பாயா? என்
    உயிரையுன்றன் காலில்வைக்க அனுமதிப்பாயா?
    மரணமொரு பொருட்டில்லை மையலின் மகளே! நீ
    மறுத்துவிட்டால் மரணமற்ற நரகே புகலே!

    உன்குழந்தை என்னை நீ உதைத்துவிடாதே! என்
    உள்ளில்வேறு யாருமில்லை மறந்துவிடாதே!
    நின்றுநின்று உன்முகத்தை ஏங்கிப் பார்க்கிறேன், உன்
    நெஞ்சில்நான் இல்லையென்றால் நீங்கப் பார்க்கிறேன்…..

    உன்னைவிட்டு எங்கு செல்ல? எங்கும் நீதானே! இந்த
    உலகைவிட்டு எங்கு செல்ல என் உலகம் நீதானே! என்
    கண்ணா! உன் காலில் எந்தன் முகம் புதைக்கிறேன், நீ
    கருணை காட்டினால் கொஞ்சம் வாழ்ந்து பார்க்கிறேன்….

     

    படத்திற்கு நன்றி : இளையராஜா

    Share