கிரேசி மோகன்

 

பிள்ளையார் வெண்பாக்கள்
———————————————

ஓவியம் : கேஷவ்
ஓவியம் : கேஷவ்

சோமன்த னைச்சென்னி சூடும் சிவகுடும்ப
சீமந்த மைந்தன் சதுர்த்தியின்று -மாமன்தன்
சக்கரத்தை உண்டுமிழ்ந்த சித்தி வினாயகனை
வக்கிர துண்டனை வாழ்த்து….(1)

தம்பிக்கு காதல் துணைசென்ற தந்தியே
தும்பிக்கை வேழமே, தேவர்கள் -ஸ்தம்பிக்க
ஆட்சி கயிலாயத்தை அவ்வைக்(கு) அளித்தவா
காட்சிக்(கு) இனியபிள்ளாய் காப்பு….(2)

தொந்தி குலுங்கிட தந்தி ஜொலித்திட
முந்தி முழுமுதல் மோதகன்முச் -சந்தி
அரசடியில் வீற்று அருள்பாலிக் கின்றான்
முரசடித்தேன் தந்திக்கு முந்து….(3)

 
ஆனைக்கா அம்மையும் ஊனைக்கொள் ஊர்த்தவர்க்கும்
சேனைக்கா வேலன் சகோதரனாய்-தீனர்க்காய்
தோன்றிய பிள்ளாய், தமிழாக அவ்வைக்கோல்
ஊன்றிய வேழா உதவு….(4)
அக்கினிக்கு முப்புரத்தை ஆட்படுத்த தேரேறி
உக்கிரமாய் சென்ற உருத்திரர்க்கே -விக்கினமாய்
அச்சொடித்து உன்னிருப்பை எச்சரிக்கை செய்தவரை
உச்சரிக்க வைத்தாய் ஒழுங்கு….(5)

கணபதி ராயா மனிதச காயா
பனிபதி கைலாசப் பையா -தனபதி
மாலின் மருகோனே மயிலோனின் மூத்தோனே
கோல வினாயகனே காப்பு….(6)

கயிலாய சீதனம் கற்பகச் செல்லம்
மயிலாப்பூர் தோழன் மகோதரன் -பயிலோரும்
பள்ளிப் பரிட்சையில் பெற்றிட வெற்றியை
அள்ளித் தருவான் அவன்….(7)
அருகம்புல் தேங்காய் எருக்கம்பூ, மாலின்
மருகன்பால் வைக்க மகிழ்ந்து -ஒருகொம்பால்
நான்முகன் நம்தலையில் நட்ட விதையினை
ஆனைமுகம் ஆக்கும் அரசு….(8)

cowசுகள் பேணிடும் கண்ணன் மருகோனே
mouseயிக வாகனா மோதகா -houseனுள்
வாராய் வினாயகா வேளை சதுர்த்தியில்
தாராய் அறிவில் தெளிவு….(9)

மூஷிக வாகனனை தோஷ விநாசகனை
பாஷைகள் போற்றும் ப்ரணவனை –வேஷமாய்
வேழத்தோல் போர்த்திய தோழக் கடவுளை
ஏழைகள் ஈசனை ஏத்து….(10)
அரச மரத்தடியில் ஆகாசம் பார்த்து
உரசும் எலியோடு ஒண்டி -பெருசாய்
எதிர்பார்ப்பு ஏதுமின்றி ஏழெட்டு தேங்காய்
சதிராக யாதுமருள் வான்….(11)
கமர்கட் கடலையுண்டை குச்சிஐஸ் மூன்றும்
சமர்பிப்பேன் நானுக்கு என்றும் -அமர்ந்திட்டு
செங்கழுநீர் பிள்ளையாரே சாப்பிட்டு த்ருப்தியாய்
சங்கத் தமிழ்மூன்றும் தா….(12)….

————————————————————–

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *