இசைக்கவி ரமணன்

 

உனக்கே உனக்காக   (35)

சமரசம்

 

[mixcloud]http://www.mixcloud.com/Vallamai/samarasam/[/mixcloud]

10592800_716061665108146_5329376393953249671_n
சமர்முடிந்து விட்டது
சமரசம் செய்துகொண்டேன்
சரணாகதி அடைந்துவிட்டேன்

என்னுள் இருக்கும்
உன்னிடம்

பிரிவென்ற முள்ளிலே பட்டுத் திகைத்து
நினைவென்னும் முகையைத் தொட்டு முகர்ந்து
வடுவேதும் இல்லாமல் வளையவரும்
வாசமிகு தென்றலைக் கண்டேன்

நான்
தேம்பி அழுததும்
தெருவில் திசையின்றித் திகைத்து நின்றதும்
தேய்ந்து மெலிந்ததெல்லாம், இப்படித்
தென்றலாகத்தான்

பாறைகள் கூறுபோட்டாலும்
கோர முதலைகள் அசிங்கமாய்ப் புரண்டு குழப்பினாலும்
ஈரமென்னும் இனியமொழி
மாறாத நீராக

கழுத்தைத் திருகினாலும்
கானத்தின் ராகமல்லால், வேறுவிதமாய்க்
கத்தத் தெரியாத வன்னப் பறவையாக

ஆத்திரத்தில் அம்மா
அடித்துப் போட்டாலும்
அம்மாவைத் தவிர வேறு
புகலிடம் இல்லாத சின்னக் குழந்தையாக

சமரசம் செய்துகொண்டேன்
சரணாகதி அடைந்துவிட்டேன்

என்னுள் இருக்கும் உன்னிடம்
எட்டி உதைத்தாலும்
கட்டித் தழுவினாலும்
பல்காட்டிப் பயன்படுத்திப்
பாதையிலே எறிந்தாலும்

உதறிவிட முடியாத நிழலாக
ஒன்றும்செய்ய முடியாத சுவாசமாக
சற்றும் விலகாமல்
எதுவும் கோராமல்
சாவகாசமாய் உன்னோடிருப்பேன்

இனி நீ என்னை –
எப்படி வேண்டுமானாலும் முயன்றுபார் –
எதுவும் செய்ய முடியாது

வெட்ட வெளியை வெட்டமுடியாது
வீழ்ந்த சாம்பலை எரிக்க முடியாது
சரணமடைந்தவனுக்கு
மரணம் கிடையாது
அவன்
வாழ்வைக் கொடுத்துவிட்டுத்தான்
வாசலில் நிற்கின்றான்
வாஞ்சையோடு
கொடுத்த நினைப்பு துளியும் இன்றி

ஆம் நான்
சமரசம் செய்துகொண்டேன்
சரணாகதி அடைந்துவிட்டேன்

என்னுள் இருக்கும்
உன்னிடம்

அதுசரி
என்ன செய்யப் போகிறாய்
உன்னுள் இருக்கும்
என்னிடம்

இருக்கிறேனா என்ன?!

படத்திற்கு நன்றி

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.