–சு.கோதண்டராமன்.

 

ஸவிதா

 

Savitr Vedic Deity

பரமாத்ம சைதந்யத்தின் மஹிமையையே பூர்வ யோகிகள் அனந்த கோடானு கோடானு கோடானு கோடி ஸூர்ய ஜ்யோதியாக வர்ணித்திருக்கிறார்கள். உபமித்திருக்கிறார்கள். எல்லாம் என்பது ஸர்வத்தின் பெயர். எல் என்பது தமிழில் ஸூர்யனுக்குப் பெயர்.  ஸர்வமென்ற மனக் கொள்கைக்குப் ப்ரதிநிதியாக நம்முடைய முன்னோர் ஸூர்யனை ஆராதனை செய்தது யுக்தமேயாகும். – பாரதி

எல்லோரும் தேவர்கள் எனப்பட்டாலும் சூரியனுக்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு. வானத்தில் பிரகாசமாக ஜ்வலிக்கும் சூரியன் மனிதனது கவனத்தைக் கவர்வதில் வியப்பு இல்லை. தினம் தோறும் சூரியன் உதிப்பதையும் மறைவதையும் அவன் கவனிக்கிறான். இரவில் உலகமே அசைவற்று உயிரற்றது போலக் கிடக்கிறது. காலையில் சூரியன் உதித்ததும் மனிதன் மட்டுமன்றி மிருகங்களும் பறவைகளும் கூட புத்துயிர் பெற்றது போல உற்சாகத்துடன் தத்தம் வேலையில் ஈடுபடுகிறார்கள். இதனால் சூரியன் உயிர்ப்புத் தருபவர் என்ற பொருளில் ஸவிதா என்று அழைக்கப்படுகிறார்.

ஸவிதா என்ற பெயர் எங்கு வந்தாலும் அங்கு பெரும்பாலும் தேவ என்ற அடை மொழி கூடவே வரும். “தேவோ வஸ் ஸவிதா ப்ரார்பயது ச்ரேஷ்டதமாய கர்மணே” என்பது யஜுர் வேதத்தின் முதல் மந்திரத்தின் பகுதி. காயத்ரி மந்திரத்தில் “ஸவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி” என்று வருகிறது. எனவே முதன்மையான தேவன் ஸவிதா தான். ஸவிதாவைப் போற்றும் இந்த மந்திரம் தான் இன்றளவும் வைதிக சம்பிரதாயத்தின் பிரதான மந்திரமாக உள்ளது.

ஸவிதா தேவர்களுக்கே செல்வத்தை அள்ளிக் கொடுப்பவர். அவருடைய விரதத்தை வருணன், மித்ரன், அர்யமா, ருத்ரன் ஆகிய எந்தத் தேவர்களும் மீறுவது இல்லை. ஏன், எதிரிகள் கூட, ஸவிதாவின் விரதத்துக்குக் கட்டுப்பட்டுத் தான் போக வேண்டும். தண்ணீரும் காற்றும் ஸவிதாவின் ஏவலுக்குக் கட்டுப்பட்டுச் செயல்படுகின்றன.

வெற்றி பெறும் நோக்கத்துடன் போர்க் களத்தில் நிற்கிறான் வீரன் ஒருவன். சூரியன் மறைந்ததும் அவன் வீடு நோக்கித் திரும்புகிறான். துணி நெய்து கொண்டிருக்கும் பெண், வேலைசெய்து கொண்டிருக்கும் தொழிலாளி எல்லோருமே சூரியன் மறைந்ததும் வேலையைப் பாதியில் விட்டு விட்டுப் போகிறார்கள். மறுநாள் சூரிய உதயம் ஆனதும் தங்கள் வேலையை மீண்டும் தொடங்குகிறார்கள். பறவைகள் மிருகங்கள் கூட தத்தம் இடத்தில் அடங்குமாறு செய்பவர் ஸவிதா.

நாங்கள் விரும்பியதும் நீ கொடுத்ததுமான செல்வங்கள் விண்ணிலிருந்தும், மண்ணிலிருந்தும், நீரிலிருந்தும்  எங்களை வந்து அடையட்டும் என்று வேண்டுகிறார் ரிஷி.

தோன்றும்போது ஸவிதா எனப்பட்டாலும் தோன்றி மேலே எழும்பும்போது அவருக்கு சூரியன் என்று பெயர். தர்மத்தைக் காப்பதால் அவர் மித்ரன் எனப்படுகிறார். தன் பயணங்களால் பூஷன் எனப்படுகிறார்[1]. சூரியன் ஏழு குதிரைகளால் அழைத்துச் செல்லப்படுபவராகவும், மனிதர்களின் நல்ல கெட்ட செயல்களை எல்லாம் பார்த்துக் கொண்டிருப்பவராகவும், ருதத்தின் (தர்மத்தின்) அழகிய முகமாகவும் கூறப்படுகிறார். அவரே மித்ர வருணர்களின் மற்றும் அக்னியின் கண்[2 ].நிற்கும் அசையும் பொருள்களின் பாதுகாவலர்.

வஸுக்களைத் தூண்டுகிறார். ரயி எனப்படும் ஆனந்தமாகிய செல்வத்தைக் கொடுக்கிறார். அறிஞர் எனப் பொருள்படும் விப்ர, விபச்சித, வயுனாவித். கவி, ஆகிய அடைமொழிகளுக்கு உரியவர் ஸவிதா. மற்ற தேவர்கள் இவரைப் பின்பற்றுகிறார்கள். இந்திரனுக்கும் மற்ற தேவர்களுக்கும் மேகங்களுக்கு அப்பால் இடம் தந்ததும் இவரே. அவர்கள் எங்கு பறந்து சென்றாலும் ஸவிதாவிற்குக் கட்டுப்பட்டே நிற்கிறார்கள்[3]. நீரும் காற்றையும் இயக்குவது இவரே. ஸ்வதாவான் (தனித்து இயங்க வல்லவர்). இவர் பூமியைச் சுற்றி வருவது போல் தோன்றுவதைப் பூமியை அளந்தார் எனச் சொல்கிறது வேதம். தேவர்களுக்கு அமரத்துவம் அளிப்பதும்  மானிடர்களுக்கு வாழ்வைத் தொடரச் செய்வதும் அவரே[4].

சுத்தனான சூரியனிடம் கட்டப்பட்ட மனம் நடுங்குவதில்லை[5].

குறிப்புகள்:

1     5.81.4
2    1.115.1
3    4.54.5
4    4.54.2
5    5.44.9

படம் உதவிக்கு நன்றி: http://www.indianetzone.com/55/savitr.htm

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “என்னதான் இருக்கிறது வேதத்தில்?– 20

  1. ஐயா!

    உங்கள் கட்டுரைகள் மிகவும் பயனுள்ளவை. மிகவும் ஆழமான சேதிகளை இவ்வளவு எளிய நடையில் வழங்கும் உங்கள் திறன் வியக்க வைக்கிறது. என்னுடைய வணக்கங்களை ஏற்றுக் கொள்ளவும்.

    அன்புடன்,
    ரமணன்

  2. சூரியன் குற்த்த மந்திரத்த்திற்க்கு காயத்ரி மந்திரம் என்ற பெயர் ஏன்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.