Blog

  • ‘பொய் வாழ்க்கை’

    பெருவை பார்த்தசாரதி

    “அய்யா, வெளிய கூட்டம் காத்திருக்குது”!……….வழக்கம்போல உங்க தீர்ப்புக்காக காத்திருக்காங்க அய்யா!…முதுகை வில்லாக வளைத்து பயபக்தியுடன் முதலாளியிடம் சொல்கிறான் கருப்பன்.

    “கொஞ்சம் பொறுமையா இருக்கச் சொல்லு”, ஆமா, வந்திருக்கிறவங்க என்ன ப்ரச்சினயா கொண்டுவந்திருக்காங்க” …….சங்கரய்யா கட்டைக்குரலில் வினவுகிறார்.

    “வழக்கமா வர கேசுதாங்கய்யா, ‘அய்யாவு மகனுக்கும், மேட்டுத் தெரு பழனிக்கும் வரப்புத் தகராரு’!…

    “இதுவரையிலும் நிறய தீர்ப்பு சொல்லியாச்சு, இன்னக்கி ஏம்மனசு செரியில்ல, ரண்டு தரப்புக்காரர்களையும் நாளைக்கு வரச்சொல்லு” சங்கரய்யாவிடமிருந்து கட்டளையாக வருகிறது பதில்

    “இல்லங்க அய்யா!..ரொம்ப நேரமா வராந்தவிலே குந்தியிருக்காங்க”….

    இப்படி தினமும் வேலிச்சண்டை, குடும்பத்தகறாரு, கள்ளக்காதல், சொத்துத்தகறாரு போன்ற ஏதாவதொரு பிரச்சினைக்குத் தீர்ப்புச் சொல்லிக்கொண்டிருந்த சங்கரய்யா, ஊர்ப்பஞ்சாயத்தில் கோர்ட்டு, போலீஸ் தலையீடுக்கு இடங்கொடாமல் நீதிக்கு மட்டுமே தலைவணங்குவார். தனிநபர், கட்டை பிரம்மச்சாரி. கெளரவம் மிகுந்தவர், தயாள குணம் நிரம்பியவர், பண்ணையார் என்ற மிடுக்கு இல்லாமல் சகஜமாக எல்லோரிடத்திலும் பழகினாலும் கெளரவத்தை எப்போதும் தக்க வைத்துக்கொள்வார். அதற்கொரு கேடு வந்தால் கவரிமானாகிவிடும் பண்பு. ஒரு முடிவு எடுத்துவிட்டால் அதை நிறைவேற்றும் மன உறுதி கொண்டவர் “சங்கரய்யா”.

    சங்கரய்யாவின் சொத்துக்களுக்கு கணக்காளராகவும், அந்தரங்க காரியதரிசியும் கூட, யாரிடமும் அதிகம் பேசமாட்டார், முதலாளியிடம் மிகுந்த விசுவாசம் உள்ளவர். அதிகம் படிக்காத இவருக்கும் குடும்பம், குட்டி, உறவினர் என்று யாருமில்லாத பிரம்மச்சாரி. எந்த காரியமானாலும் முதலாளியிடம் தெரிவிக்காமல் செய்யமாட்டார். கட்டளையை மீறமாட்டார், அவர்தான் கருப்பன்.

    சங்கரய்யாவும், கருப்பனும் ‘தலைஞாயிறு” என்ற அந்தக் கிராமத்தைத் தத்து எடுத்துக் கொண்டிருந்தனர்.

    கஷ்டம் என்றால் என்னவென்றே தெரியாத சங்கரய்யாவுக்கு, கடந்த ஒன்றிரண்டு மாதமாக தீவிர மன உளைச்சல். திடீரென்று ‘இந்த ஊரைவிட்டு, வேறு எங்காவது யாரும் கண் காணாத இடத்திற்கு சென்றுவிடவேண்டும்’ என்று மனதுக்குள் ஒரு இருக்கம், மனம் மாறுவதற்கு முன் உடனே முடிவுக்கு வருகிறார். பண்ணைத் தொழிலாளிகளின் கேள்விக்கு இடம் கொடாமல், அவசர அவசரமாக ஒரு வாரத்திற்குள், சொத்து, பத்து எல்லாவற்றையும் பைசல் செய்து விட்டு பட்டணத்தில் செட்டில் ஆகப்போகிறேன் என்று சொல்லிவிட்டு ஊரைக் காலிசெய்து விடுகிறார்.

    இது நடந்தது 45 வருடத்திற்கு முன்னால்………..

    சங்கரய்யாவுக்கு அம்மாவும் அப்பாவும் இறந்த பிறகு உறவினர் என்று சொல்லிக்கொள்ள யாருமில்லை. காலையில் வீட்டைவிட்டு கிளம்பி தோட்டம் துறவு எல்லாவற்றையும் சுற்றிவிட்டு மதியம் 2 மணிக்கு வீடுதிரும்புவார். கருப்பனின் மேற்பார்வையில் சாப்பாடு எல்லாம் தயாராக இருக்கும். குளித்து சாப்பிட்டுவிட்டு ஒரு குட்டி தூக்கம் போட்டுவிட்டு மறுபடி தமது வேலைகளை கவனிக்கத் தொடங்கிவிடுவார். அவ்வப்போது கோவில்களில் நடக்கும் விழாவிற்குத் தலைமை தாங்குவார். அன்னதானம் செய்வார். அனாதை ஆசிரமத்திற்குச் சென்று குழந்தைகளுடன் தங்குவார். ‘அய்யாவுக்கு இன்னும் கல்யாணமே ஆகல, ஆனா குழந்தைகள் மேல் எவ்வளவு பிரியம்’ ஊர்மக்கள் மூக்கில் விரலை வைத்து பிரமிப்பார்கள். இவர்களெல்லாம் தவிர மற்ற நேரங்களில் கூப்பிட்ட குரலுக்கு ஓடிவர கருப்பனும் சமையல் காரனும் இருந்தார்கள். பக்கத்து கிராமங்களில் உள்ள நிலங்களை மேற்பார்வை இடும்போது மட்டும் விசுவாசம் மிகுந்த ஒரிரு பண்ணைத்தொழிலாளி வீட்டில் சில மணிநேரம் ஓய்வெடுப்பதுண்டு. அதில் பரம்பரையாக பண்ணையாருக்குச் சேவகம் செய்த குடும்பத்தின் வழிவந்த ஒரு மீனவப் பெண் சித்ராவின் வீட்டு திண்ணையில் சற்று நேரம் இளைப்பாறுவார் என்று சிலருக்குத் தெரியும். மற்றபடி கிராமத்தில் சங்கரய்யா என்றால் தனி மரியாதை, அவருடைய தீர்ப்புக்கு அப்பீல் கிடையாது.

    அய்யா ஊர விட்டுப் போகப்போறாகளாம், திடுதிப்பினு அய்யாவுக்கு ஏன் இந்த பட்டணப் பிரவேச ஆசை, கூட்டம் கூட்டமாக சேர்ந்து ஊர்மக்களின் கேள்விக் கணைகளுக்கு யாருக்குமே விடை தெரியவில்லை. கருப்பனும் முயன்று பார்த்தான் முடியவில்லை. ‘அய்யாவுக்கு ஊர்ப்பஞ்சாயத்து தீர்ப்பு சொல்லி அலுத்துப் போச்சாம், பட்டணத்தில் வாழவேண்டும் என்று சின்னக் குழந்தைமுதலே ஆசையாம் அதுதான்’ என்று கடைசியில் பண்ணையாருக்குப் பதில் தானாகவே ஏதோ ஒரு பதிலைச் சொல்லி எல்லொருக்கும், சமாதானம் சொல்லி அனுப்பி வைத்தான் கருப்பன்.

    கிராமத்தை விட்டு கிளம்பும் கடைசி நாள், கருப்பனை சீக்கிரம் வருமாறு தகவல் அனுப்புகிறார் சங்கரய்யா. என்னமோ!.., ஏதோ!..என்று அலரிஅடித்துக்கொண்டு ஓடிவருகிறான் கருப்பன்.

    ‘சொல்லுங்க அய்யா’ எதுக்குக் கூப்பிடிங்க?

    ‘ஒண்ணுமில்லே கருப்பா’ நம்ம பண்ணய கவனிச்சிகிட்டவங்க, ஊர் சனங்க எல்லாருக்கும் என்னன்ன தேவையோ வேண்டுமளவு கொடுத்து விட்டேன். வழி வழியாக் குத்தகை பாத்தவங்க நிலத்த அவங்களயே வச்சுங்கங்கன்னு சொல்லிட்டேன். ஆனா, வாழ்நாள் பூரா என்னோட கூட இருந்த உனக்கு மட்டும், கண்ணனாறு கரையோரத் தென்னந்தோப்பும், கொளத்துமேட்டுக் கழனியும் உனக்கு எழுதிவைத்திருக்கிறேன்!…போதுமா?

    ‘வாயெல்லாம் பல்லாக கருப்பன் பயத்துடன் ‘எனக்கு எதுக்குங்கய்யா!..இவ்வளவு சொத்து, எனக்குன்னு யார் இருக்கா!…நானும் உங்ககோட வந்துர்ரேங்கய்யா, இல்லன்னா நீங்க அன்பா நேசிக்கிற அனாத ஆஸ்ரமத்துக்கு……..என்று இழுக்கிறான்.

    இடைமறித்த சங்கரய்யா, ஆமாமா!….ஆஸ்ரமுன்னு சொன்னோன்ன, முக்கியமா ஒண்ணு சொல்ல மறந்திட்டென், பக்கத்து ஊர் ராஜாமடம் கிராமத்திலிருக்கிற அனாத ஆஸ்ரமக் குழந்தைகளை வாரம் தவராம நீ நேரில போய் கவனிச்சுக்க. அங்க என்னோட மனசுக்குப் பிடிச்ச, நா அதிகமா நேசிக்கிற “தங்கம்”னு சொல்ர குழந்தைய நீ கண்ணுங்கருத்துமா பாத்துக்கணும். அதமட்டும் நல்லா கவனிச்சுகிறதுக்குன்னு தனியா உனக்குப் பணம் எடுத்து வைச்சுருக்கேன். ‘உண்மையிலேயே ஏ மேல பாசம் இருக்குன்னா’ நா சொன்னத நீ தவறாம செய்வியா?….

    என்னங்க அய்யா உங்க உப்பத் தின்னு வளந்தவன், நா கொடுத்த வாக்க காப்பாத்தாம இருப்பேனா?. ஆனா ‘எதுக்கு அய்யா திடுதிப்பினு ஊர உட்டு காலி பண்றாகன்னு ஊரு சனம் கேட்டா எப்படி பதில் சொல்றதுன்னுதா தெரியலீங்கய்யா!….

    அதெல்லாம் கடக்கட்டும் நீ இப்ப சொன்னத செய்வியா? மாட்டியா?..சங்கரய்யாவின் முகத்தில் லேசாக கோபக்கனல்.

    இப்படித்தான், சரிங்க அய்யான்னு சொல்லி, அய்யாவும் பட்டணம் போயி ஒரு வருடம் ஓடிவிட்டது…..பழய நினைவுகள் அலைபோல் புரண்டுவர, கருப்பன் திண்ணையில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டு ஏதோ யோசனையில் ஆழ்ந்திருக்கும்போது……….‘சார் போஸ்ட்’ போஸ்ட்மேன் ஒரு லெட்டரைக் கொடுத்து விட்டுச் செல்கிறான். ‘பொருளாதார நெருக்கடி காரணமாக அனாத ஆஸ்ரமத்த நாங்க மூடப்போறோம் அதனால நீங்க உடனடியாக இங்கு வரவும்’ கடிதத்தைப் படித்து முடிக்கிறான் கருப்பன்.

    அங்கு சென்றதும் ஆஸ்ரம நிர்வாகிகள், ‘உங்க முதலாளி எங்க ஆஸ்ரமத்துக்கு நிறைய நன்கொடை அளித்து ‘தங்கம்’ என்கிற குழந்தையையும் எங்களிடம் ஒப்படைத்து இருக்கிறார். இப்ப எங்களால ஆஸ்ரமத்த நடத்த முடியல, அதனால, குழந்தையையும், அக்குழந்தைக்காக சங்கரய்யா கொடுத்த காசோலையையும் சேர்த்து அவனிடம் ஒப்படைக்கிறார்கள். கருப்பனுக்கு எதுவும் விளங்காமல் தலைஞாயிறு வருகிறான். நடந்த விஷயத்தை அய்யாவிடம் சொல்ல்லாம் என்றால், அவரைத் தேடுவதற்காக எடுத்த முயற்சிகள் எல்லாம் தோல்வியில் முடியவே, வேறு வழியில்லாமல் இரண்டு ஆண்டுகள் கழித்து தங்கத்தின் படிப்பிற்காக, கிராமத்தைக் காலி செய்துவிட்டு தஞ்சாவூரில் செட்டில் ஆகிவிடுகிறான். தங்கத்தை ஒரு நல்ல கான்வெண்டில் படிக்க வைத்து, காலேஜ் முடிச்சு, இப்ப சொந்தமாக ஒரு கம்பெனியையும் நிர்வகிக்ற அளவுக்கு அவன் தரத்தை உயர்த்துகிறான். ‘ஏ அப்பா’, வருஷமெல்லாம் எப்படி நிமிஷமா ஓடிருச்சு’ நினைத்து பெருமூச்சு விட்ட கருப்பனுக்கு தஞ்சாவூரில் பங்களாவுடன் கார், டிரைவர் என்று ஏகப்பட்ட வசதி. ஏழ்மை அகன்றுவிட்டது ஆனால் மனதில் இருந்த நெருடல் அகலவில்லை. சங்கரய்யா எங்கே போனார்?…, எப்படி இருக்கார்?….என்ற விவரம் மட்டும் இன்று வரை தெரியவில்லை. நம்ம வாழ்க்கைத் தரத்த இந்த அளவுக்கு உசத்துனது சங்கரய்யாவோட கருணைதான்னு அடிக்கடி தங்கத்துகிட்டே மட்டும் சொல்வான். ‘யார் இந்த சங்கரய்யா?…’ என்று தங்கம் கேட்டால், ‘நாம இப்படி வசதியா வாழரத்துக் காரணமானவர்” திடீர்னு சன்னியாசம் வாங்கிட்டு எங்கேயோ போய்விட்டார் யாருக்கும் அவரது இருப்பிடம் தெரியவில்லை என்று ஒரு பொய்யைச் சொல்லி வைப்பான். அவன் ஒரு ராஜாமடத்து அனாதை என்பது மட்டும் தங்கத்துக்கு இன்று வரை தெரியாதபடி அவனை வளர்த்து ஆளாக்கி அந்த ரகசியத்தை இன்றுவரை கட்டிக்காத்து வருகிறான். காலம்தான் எப்படி ஓடிப்போச்சு, ஒரு நாள் உண்மையைச் சொல்லிவிடலாம் என்றால் முடியவில்லை.

    பட்டணம் போன சங்கரய்யாவுக்கு கடந்த 45 வருடமாக நெஞ்சில் நெருஞ்சி முள்ளாய்குத்திக் கொண்டிருக்கிற அந்த நெருடலுக்கு விடை காண முடியவில்லை. எதற்காக இப்படி அவசரப்பட்டு ஊரைக் காலிசெய்தோம்!….பட்டணம் போனபிறகு சொந்த கிராமத்துக்கு ஒரு தடவைகூட நான் திரும்ப வில்லையே, கருப்பனும், ஊர்மக்களும் என்னவானார்கள். ஊர்மக்களின் ப்ரச்சினைக்குத் நீதி வழுவாமல் தீர்ப்பு சொன்னோமே, ஒருவருக்குக் கூட நான் என்ன ஆனேன் என்ற கவலையில்லையா?…ஒன்றுக்கும் பதில் தெரியாமல் ஏதோ மனநிலை பாதிக்கப் பட்டவன் போல தாடிமீசை மழிக்கப்படாமல், மன அமைதிவேண்டி தலயாத்திரை சென்று கொண்டிருந்தார் சங்கரய்யா. எல்லா ஊர்களுக்கும் சென்று விட்டு தள்ளாத 80 வயதில், ‘தலைஞாயிறு தலைவர்’ என்ற பேரெடுத்த சங்கரய்யா கடைசியாக 48 வருடம் கழித்து தஞ்சாவூருக்கு அருகே வந்தடைந்தார். இங்கே சில காலம் தங்க முடிவு செய்தார். இங்கிருந்து 7 கிலேமீட்டர் தூரத்தில்தான் கடந்த கால வாழ்வில் கூட இருந்த கருப்பன், தற்போது வசதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறான் என்று கேள்விப்பட்டார்.

    அன்று இரவு முழுவதும் புரண்டு,புரண்டு படுத்ததுதான் மிச்சம் தூக்கம் வரவில்லை.

    அப்பப்பா, போதுமடா இந்த நெருடல், இந்த அந்திம காலத்தில் எப்படியாவது கருப்பனைப் பார்த்து நம் விஷயத்தை அவனிடம் சொல்லி விட்டு ஒரு புது வாழ்வை இனிமேலாவது தொடங்கவேண்டும் என்கிற வைராக்கியம் காலம் கடந்து இந்த வயாதான காலத்தில் சங்கரய்யாவின் மனதுக்குள் அனலாய்ப் பொங்கியது. மீண்டும் மீண்டும் மனதில் அதே நெருஞ்சிமுள் நெருடல்.

    அடுத்த நாள் காலை,

    தள்ளாத வயதில் அடையாளம் தெரியாத சங்கரய்யா வீறுநடைபோட்டு கருப்பனைச் சந்திக்கச் சென்றார். பெரிய பங்களாவின் கேட்டில் பொருத்தியிருக்கும் காலிங்பெல்லை அழுத்த, வாட்ச்மென் ‘யாரப்பா அங்கே’ ஒன்றும் பதிலில்லை. டாபர்மென் நாய் கட்டுக்கடங்காமல் குரைத்துக் கொண்டேயிருக்கிறது. கிட்டேவந்து அதட்டலுடன் ‘இங்கே பிச்சைபோட யாருமில்லை போப்பா போ வேறேஇடம் பார்’.

    ஈனமான குரலில் ‘ஏம் பேரு சங்கரய்யா’ நான் கருப்பண்ணணைப் (கருப்பன்) பார்க்க வேண்டும்.

    ‘அண்ணன இப்ப பாக்கமுடியாதுப்பா நீ போய்ட்டு அப்புரமா வா’, வேறு வழியில்லாமல், சில நிமிட போராட்டத்துக்கு பிறகு உள்ளெ சென்ற வாட்ச்மென் ‘யாரோ சங்கரய்யாவாம்!…’ உங்களப் பார்க்க பிடிவாதமா பிச்சக்காரன் மாதிரி கேட்டருகில தவங்கிடக்கிறாரு. நானும் வெரட்டிப் பார்த்தேன், இங்கிருந்து நகர்றதா மாதிரி தெரியல!….

    பெயரைக்கேட்ட அதிர்ச்சியில் கருப்பன் தலைதெரிக்க கேட்டருகே ஒடுகிறான். புரிந்து கொள்வதற்கு சில நொடிகள் ஆனாலும், தடாலென்று அவர் காலில் நெடுசான்கிடையாக விழுந்து ‘அய்யா உள்ள வாங்க, எங்கய்யா போனீங்க இவ்வளவு வருஷமா?…, உங்களுக்காகத் தானெ இந்த உசிரு ஓடிக்கிட்டிருக்கு’ படபடன்னு கேள்விய அடுக்கிகிட்டே, அவரை மெதுவாக கைத்தாங்கலாக உள்ளே அழைத்துச் சென்று சோபாவில் உட்கார வைக்கிறான் கருப்பன்.

    அன்றிரவு முழுவதும் கடந்த கால வாழ்க்கைப் பயணங்களை இருவரும் அசைபோடுகிறார்கள். ‘அய்யா நீங்க இனிமே எங்கேயும் போகவேண்டாம், நீங்க ஊர விட்டுப் போகும்போது சொன்னது நினைவிருக்காங்கய்யா!…நீங்க அன்பா நேசிச்ச ராஜாமடம் அனாதப்பையன் ‘தங்கம்’ இப்ப என்னோட பையனாயிட்டான். நீங்க கொடுத்த பணத்த வெச்சு, அவன் மெத்தப் படிச்சு சுயமா தொழில் செய்யறான். உங்களப் பத்தி அவங்கிட்ட நிரய சொல்லியிருக்கேங்கய்யா, நீங்கதான் என்ன வளர்த்து ஆளாக்கிய தெய்வம்னு சொல்லி வச்சிருக்கேன், தொழில் விஷயமா சென்னப்பட்டிணம் போயிருக்கான், நீங்க வந்த விஷயத்த அவன் காதில போட்டிருக்கேன், உடனே கிளம்பி வர்ரதா சொல்லியிருக்கான்’ அவன் வரட்டும் மிச்சதை பேசிக்கலாம். நீங்க போய் அந்த ஏசி ரூம்ல ரெஸ்ட் எடுத்துக்கங்க, விடிஞ்சதும் பேசிக்குவோம்.

    இரவு முழுதும், ஏசி ரூம் இதமா இருந்தாலும், நெஞ்சில் இருந்த நெருப்பின் கனப்பு அடங்கவில்லை, மன உளைச்சலில் சங்கரய்யா கண்ணயரவில்லை. விடிந்தவுடன் கருப்பனும், தங்கமும் ஒண்ணா இருக்கும்போதே விஷயத்த சொல்லலாமா? வேண்டாமா? மீண்டும் அந்த நெருசிமுள் நெசில் கடப்பாரையாக குத்துகிறது.

    விடிந்ததும் சங்கரய்யாவுக்கு இருப்புக் கொள்ளவில்லை. வெளிகேட்டிற்கும் உள்வாசலுக்கும் உலாத்திக்கொண்டே தங்கத்தின் வரவுக்காக பரபரப்பாயிருந்தார்.

    ஏர்போர்ட்டிலிருந்து தங்கத்தின் காரை டிரைவர் சாமிக்கண்ணு வேகமாக வீடு நோக்கி ஓட்டி வந்து கொண்டிருக்கிறான்.

    டிரைவர் தம்பி!.., ஊர்ல என்னப்பா விஷேஷம்!…..

    சொல்ரத்துக்கு ஒண்ணுமில்லீங்கய்யா, ஏதோ ஓடுதுங்கய்யா!… ‘ஆமா நீங்க ஊருக்குப்போகும்போது வரதுக்கு ஒருவாரம் ஆகும்னு சொன்னீங்க, இப்ப அவசரமா திரும்பீட்டீங்க, ஏதாவது மறந்து வீட்ல வெச்சுட்டீங்களாய்யா?…டிரைவர்

    அது ஒண்ணுமில்லப்பா….அப்பாவோட பால்ய சினேகிதன் வந்திருக்காராம், உடனே நான் அவர பாக்கணுமாம், அவசரமா வரச்சொல்லி, அப்பா உத்தரவு போட்டுருக்காங்க, அதான்…பாதில திரும்பிட்டேன்.

    சங்கரய்யா இருப்புக் கொள்ளாமல் அங்குமிங்கும் அலைவதைப் பார்த்த வாட்ச்மேன் ‘இன்னும் கொஞ்ச நேரத்துல அய்யா வந்துருவாரு’, அய்யாவோட கார் தெருமுனைக்கு வரும்போதே எங்க டாபர்மெனுக்குத் தெரிந்துவிடும், சங்கிலியைப் பிய்த்துக்கொண்டு கத்த ஆரம்பிச்சுடுவான்…வாட்ச்மென் பெருமைப்பட்டுக்கொள்கிறான்.

    ‘அவன் சொல்லி அரைமணி ஆகியும், நாய் இன்னும் குரைக்கவில்லையே…..மீண்டும் சங்கரய்யாவுக்குப் பதற்றம்.

    சட்டென்று மூன்று அடிஉயரம் பாய்கிறது டாபர்மென், ‘வாவ்’ ‘வாவ்’ அடிவயிற்றிலிருந்து வரும் அதிரடிக்கும் காட்டுக் கூச்சல், வாட்ச்மேன் ஓடிவந்து வாசல் கேட் திறந்ததும், வேகமாகப் உள்ளே நுழையும் கப்பல் போன்ற ‘கண்டெஸ்ஸா’ காரின் சப்தம்.

    பத்தடி தூரத்தில், வாட்ச்மேன் காரின் கதவைத் திறந்ததும், தங்கத்தின் முகத்தைப் பார்த்த சங்கரய்யாவின் உயிர்நாடிகள் கொதித்து எழும்புகின்றன, தள்ளாத வயதில் கட்டுக்கடங்காத உணர்ச்சிப் பெருக்கில், ரத்தம் சூடேறி இடிதாக்கிய தென்னைமரம் போல் பொத்தென்று சாய்கிறார்.

    ‘அய்யா என்னாச்சுங்கய்யா’ கருப்பன் பதறியடித்துக்கொண்டு, சங்கரய்யாவின் சட்டையைப் பிடித்து உலுக்கிறான்.

    சங்கரய்யாவின் விழிகள் இரண்டும் செருகிக் கொள்ளுகிற நேரம், அவரின் உள்ளம் 48 வருடத்திற்கு முன்னால் தாவிச் செல்கிறது.

    அவர் வாய் திறந்து…………

    ‘ஏ ‘தங்கம்’ நீ தான்டா!…., நீ தாண்டா!……என்னோட வாரிசு எனக்கும் சித்ராவுக்கும் பிறந்தவன்’ என்று வேகமாக உரக்கக் கத்த நினைத்ததை…………சட்டென்று ஸ்ட்ரோக் (Stroke) எடுத்துக்கொண்டு சங்கரய்யாவின் வாயைக் கோணச்செய்து இவ்வுலகை விட்டு வழியனுப்பியது. கருப்பனின் மடியில் தலைவைத்து கண்குத்திய நிலையில் மூன்று நிமிடத்துமுன் சங்கரய்யா செத்துப்போயிருந்தார். பிணமாக இருந்த சங்கரய்யாவின் முகத்தில் அவிழ்க்க முடியாத புதிர் நிறைந்த முகத்துடன் ரத்தம் உறைந்து கொண்டிருந்தது. இளவயதில் மீனவப் பெண் சித்ராவிடம் தன் மனதைப் பரிகொடுத்து, அதற்குப் பரிசாக அவள் தங்கத்தைப் பெற்றுக்கொடுத்துவிட்டு அவளும் இறந்து போன சம்பவம் சங்கரய்யா மட்டுமே அறிந்த ரகசியம்.

    தகப்பனின் பூத உடலை தன் தோளிலே சுமக்கிறோம் என்றறியாத மகன் தங்கத்தும், அவனை வளர்த்து ஆளாக்கிய கருப்பனுக்கும் ‘சங்கரய்யாவின் வாழ்க்கை ரகசியமும், பொய்யான வாழ்க்கையும் அவர்களுக்கு மட்டுமல்ல, வேறு யாருக்குமே புரியாமல், எல்லாம் நடந்து முடிந்துவிட்டது. கெளரவத்துடன் கவரிமானாக இருந்து ஊர் மக்களுக்குத் தீர்ப்புச் சொன்ன சங்கரய்யாவின் வாழ்க்கைச் சிக்கலுக்குத் தீர்ப்பு சொல்ல உண்மை அறிந்தவர் யாருமில்லை. சங்கரய்யாவின் வாழ்க்கை ரகசியம் அவரின் ‘பொய் வாழ்க்கைக்கு’ முற்றுப் புள்ளி வைத்துவிட்டது.

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 56 (28.01.13)

    மலர் சபா

    புகார்க் காண்டம் – 07. கானல் வரி

    (12)

    கரையினில் அலைகள்
    எறிந்திடும் சங்குகளின்
    முழக்கத்துக்கு அஞ்சி,
    குருதிக்கறை இருபுறமும் படிந்த
    செவ்வரி படர்ந்த
    வேல் போலும்
    கண்களையுடைய இவள்தான்
    கொடிய கூற்றமோ?!

    கடல்வளம் பொருந்திநிற்கும்
    சிறிய இவ்வூர்தன்னில்
    அழகு பொருந்திய
    மென்சாயல் பெண்ணுருவில்
    அக்கூற்றந்தான் வந்துள்ளதோ!

    (13)

    புலால் நாறும் மீன்களின்
    வெள்ளிய வற்றலைக்
    கவரவரும் பறவைகளை விரட்டி,
    தன்னைக் காண்போரை எல்லாம்
    மனம் தடுமாறச் செய்து,
    காமநோய் வசப்படுத்தி
    வருத்திநிற்கும் அணங்கு இவள்தானோ?!

    அடும்ப மலர்கள்
    நிறைந்து நிற்கும்
    குளிர்ந்த கானலிலே
    செறிந்த மெல்லிய கூந்தலையுடைய
    பெண்வடிவம் கொண்டுதான்
    ஓர் அணங்கு வந்துள்ளதோ?!

    அடிப்படையான சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே:
    http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram19.html

    படத்துக்கு நன்றி:
    http://my.opera.com/heisenberg16/albums/showpic.dml?album=8923052&picture=125081982

    Share
  • தொல்லை காட்சி: சிவகார்த்திகேயன்- சூப்பர் சிங்கர் T -20-பைனல்

    மோகன் குமார்

    சிவகார்த்திகேயன் பேட்டி

    சன்  டிவியில் திடீர்னு ஒரு வார நாள் காலையில் பார்த்தா – சூரிய வணக்கத்தில்  சிவ கார்த்திகேயன் பேசிட்டு இருக்கார். என்னடா இது லீவு நாள் கூட இல்லை; இன்னிக்கு இவரை மாதிரி ஒரு பிரபலத்தை கூட்டி வந்திருக்காங்களே என வியப்போடே பார்த்தேன்

    சிவகார்த்திகேயன் நிச்சயமா ஒரு செம என்ட்டர்டேயினர். தொகுத்து வழங்கினாலும் சரி, பேட்டி தந்தாலும் சரி சிரிக்க வச்சிடுறார் (நடிக்கும் போது தான் அந்தளவு  Flow  வர மாட்டேங்குது )

    பள்ளியில் படிக்கும் போது தினம் நெற்றியில் 3 பட்டை  போட்டு கொண்டு போனதும், கல்லூரி வந்ததும் செய்த அலம்பல்களும், அஜீத்துடன் முதல் படத்தில் (ஏகன்) நடித்த போது அவர் எப்படி பேசினார் என பேசி காட்டியதும், விஜய் உள்ளிட்ட பலரை   மிமிக்ரி செய்ததும் அட்டகாசம் !  ஹீரோவாக இல்லாமல், சந்தானம் போல  காமெடியன் ஆனால் செமையாய் கலக்குவார் என தோன்றுகிறது.

    சீரியல் பக்கம் : ராஜ குமாரி

    சன் டிவி யில் இன்று முதல் தொடங்குகிறது ” ராஜ குமாரி” சீரியல். காசியில் மிக பெரும் பகுதி படமாக்கப்பட்டது இந்த சீரியலில்  தான் என்கிறார்கள். ரம்யா கிருஷ்ணன் தனக்கு பேர் வாங்கி தந்த நீலாம்பரி என்கிற பெயரில் நடிக்கிறார். தினம் இரவு 8.30 க்கு ஒளிபரப்பாகும் இந்த சீரியலில் நம்ம தோஸ்த் ஒருத்தர் பணி புரிந்துள்ளார்.

    பிளாஷ்பேக் : லொள்ளு சபா

    இன்றைய சந்தானத்தின் விசிட்டிங் கார்ட் இந்த சீரியல் தான். ஒவ்வொரு ஹிட் படத்தையும் எடுத்து கொண்டு அநியாயத்துக்கு கலாய்ப்பார்கள். பாஷா, சின்ன கவுண்டர்  போன்ற  உல்ட்டாக்கள் இன்றும் நினைவில் இருக்கிறது. நடித்த சந்தானத்தின் டைமிங் காமெடி மற்றும் இயக்கிய ராம்பாலாவின் புத்தி சாலித்தனம் இரண்டும் சேர்ந்து, தொடர்ந்து பார்க்க வைத்தது. சினிமாவை கலாய்த்த சந்தானத்தை சினிமா துறையினர் வெறுக்காமல், வாரி அணைத்து கொண்டனர். திறமைக்கு சில நேரங்களில் உரிய மரியாதை கிடைத்து விடுகிறது !

    ஆமாம் இந்த வகை காமெடி + உல்ட்டா தொடருக்கு இன்னும் கூட நிறைய Viewers  இருப்பார்களே.. ஏன் மறுபடி அவர்களோ வேறு டீமோ தொடங்க கூடாது?

    கிரிக்கெட் கார்னர்

    ஆண்டர்சன், சுவான் போன்ற நல்ல பவுலர்கள் இல்லாததாலோ என்னவோ இந்தியா இங்கிலாந்தை ஒரு நாள் தொடரில் எளிதில் வென்றது. இந்த கம்பீரை கட்டி கொண்டு ஏன் தான் அழுகிறார்களோ தெரியலை. ஓட்டை பீல்டிங் எனினும் எப்படியோ இந்தியா வீடு வந்து சேர்ந்தது. துவக்க ஆட்டக்கார்கள் பார்ம், வீக் ஆன வேக பந்து வீச்சாளர்கள், யுவராஜ் பேட்டிங், வாரி வழங்கும் அஷ்வின் என பல பிரச்சனைகள் – வெற்றிக்கு முன்  தெரியாமல் போய் விட்டது. ஜடேஜா இந்திய மண் என்பதாலோ என்னவோ அசத்தி விட்டார்.

    தோனி விரைவில் டெஸ்ட்டில் இருந்து ஓய்வு பெற்று விடுவார் என்கிறார்கள் பார்க்கலாம்

    சூப்பர் சிங்கர் T -20-பைனல்

    சாய் சரண் அணியும்,  பூஜா அணியும் பைனலில் மோதிக்கொண்டன. மொத்தம் 9 ஜட்ஜுகள் !   T -20- முழுவதுமே, ஒவ்வொரு மேட்சிலும்  இரு டீமுக்கும் இடையில் அதிக வித்யாசம் இருக்க கூடாது; அப்போது தான் கடைசி பாட்டு வரை பார்ப்பார்கள் என மார்க்குகள் இரண்டு அணிக்கும் ஒரே மாதிரி போட்டு வந்தனர். இதுவே அவர்களின் நம்பக   தன்மையை குறைத்து விட்டது. இதனை பார்க்கும் ரசிகர்கள் எப்படி கண்டுபிடிக்காமல் போவார்கள் என underestimate  செய்தனரோ தெரியலை. உதாரணமாய் எதிர் எதிரே பாடும் இருவரில் ஒருவர் Outstanding  ஆக பாடுவார். இன்னொருவர் மிக சுமாராக பாடுவார். நன்கு பாடியவருக்கு 10 மதிப்பெண்ணும், சுமாராய் பாடியவருக்கு 9 மார்க்கும் தருவார்கள். பார்க்கும் நமக்கு காண்டாகும்

    பைனலில் பொத்தி வச்ச மல்லிகை மொட்டு பாட்டை ஷ்ரவன்- பிரியங்கா  ஜோடி பாடியது அட்டகாசமாய் இருந்தது. இதே பாட்டை எஸ் பி. பி மேடையில் பாடினால் கூட இஷ்டத்துக்கு மாற்றி பாடுவார். கேட்கும் நமக்கு கஷ்டமாகிடும். ஆனால் ஷ்ரவன் அப்படியே நிஜ பாட்டை கேட்கும் விதத்தில் பாடியது அருமை. பிரியங்கா குரல் தேன் போல் இனிக்கிறது.  நமக்கு தெரிந்து பிரியங்காவின் பாடல் வளர்ச்சி பிரமிக்க வைக்கிறது. தமிழகத்தின் அட்டகாசமான பாடகியாக பிரியங்கா வருவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

    Share
  • வாழ்க பாரதம்!

    திரும்பிப் பார்க்கிறோம்

    பவள சங்கரி

    தலையங்கம்

    இந்தியாவின் 64வது  குடியரசு தினம் கொண்டாடும் இந்த வேளையில் நம் நாட்டைச் சுற்றி வளைத்திருக்கும் சிக்கல்களை எப்படி, எப்போது விடுவித்து நம் பாரத மாதாவை மகிழ்ச்சியுறச் செய்யப்போகிறோம்?

    பருவ மழை பொய்த்ததால் விவசாயம் பாதிப்பு, மின்வெட்டு பிரச்சனையால் தொழில்கள் பாதிப்பு, அன்னிய முதலீட்டை அனுமதிப்பதால் சிறுதொழில் பாதிப்பு, ஊட்டச் சத்து குறைபாட்டினால் இரண்டில் ஒரு குழந்தை பாதிக்கப்பட்டுள்ள அபாயம், கடுமையான விலைவாசி ஏற்றம், இவையனைத்திற்கும் மேலாக பெண்களின் மீது பாலியல் வன்கொடுமை. வேலியே பயிரை மேய்வது போல பள்ளி மாணவிகளுக்கு ஆசியர்களால் தொல்லை, அனைத்திற்கும் மேலாக பெண்கள் வெளியே தலையே காட்ட முடியாதவாறு பாலியல் வன்கொடுமைகள், கொலை, கொள்ளை என அமைதியற்ற சூழலே நிலவுகிறது.

    டாஸ்மாக் உபயத்தினால் இன்று தமிழ்நாட்டில் 16 சதவீதம் பேர் மதுவுக்கு அடிமையாகியிருப்பதாக, ‘குளோபல் சர்வே’ என்ற ஆய்வு நிறுவனம் கண்டறிந்து கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. மதுவிற்கு அடிமையான இவர்களாலேயே பாலியல் வன்கொடுமை, போக்குவரத்து விபத்து, கொலை, கொள்ளை போன்ற பலவிதமான பிரச்சனைகளின் அதிகரிப்பு.  இதைவிட மேலும் அதிர்ச்சியூட்டும் தகவலாக,  தற்போது தமிழ்நாட்டில் சராசரியாக 13 வயதிலேயே  மது குடிக்க ஆரம்பித்துள்ளார்கள் என்பதுதான்.  இந்தியாவில் மக்கள் தொகை அதிகம் கொண்ட உத்திரப்பிரதேசத்தில் அதிகமானோர் மதுவிற்கு அடிமையாகியுள்ளனர் என்கிறது அந்த ஆய்வறிக்கை. தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 6900 டாஸ்மாக் மதுபானக் கடைகள் இயங்கிவரும் சூழலில் சிறுவர்களும் அதற்கு அடிமையாவதில் எந்த ஆச்சரியமும் இல்லை. பாலியல் வன்கொடுமைகள் நடைபெறுவதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாகிறது.

    இந்தியாவில் முதல் மாநிலமாக தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் பாலியல் கொடுமை வழக்குகள் குறித்து விசாரிக்க விரைவு நீதிமன்றம் அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்து, அதற்கான 13 உத்தரவுகளையும் பிறப்பித்தது பாராட்டிற்குரியது.

    நீதிபதி ஜே.எஸ். வர்மா தலைமையில் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக உள்ள சட்டங்களைக் கடுமையாக்க ஒரு குழு அமைக்கப்பட்டு, பரிந்துரைகள், வரவேற்கப்பட்ட நிலையில் கிட்டத்தட்ட 60,000 பரிந்துரைகள், நம் நாட்டிலிருந்து மட்டுமல்லாமல், உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் வந்துள்ளதும் அதனை அரசு கவனத்தில் கொள்வதும், பாலியல் வழக்குகளை பெண் வழக்கறிஞர்களும், பெண் நீதிபதிகளுமே விசாரணை செய்ய வேண்டும் என்ற ஆணை பிறப்பித்திருப்பதும் வரவேற்பிற்குரியது. மகளிர் காவல் நிலையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் திட்டமும் பயனுள்ள வகையில் அமையலாம். பாலியல் வன்முறைகள் புரியும் குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளதும் ஆறுதலான விசயம். மருததுவச் செலவையும் அரசே ஏற்பதும் பேருதவியாக இருக்கும். வணிக வளாகம், கல்லூரி, போன்ற பொது இடங்களில் இரகசியக் கண்காணிப்பு புகைப்படக்கருவி பொருத்துவதால் பிரச்சனை முழுவதுமாக தீரப்போவதில்லை என்றாலும் அத்து மீறல்களைத் தடுக்க ஓரளவிற்குப் பயனுள்ளதாகலாம்.

    பல ஆண்டுகள் கழித்து தீர்ப்பு கிடைத்தும் மேல்முறையீடு நடந்துகொண்டிருக்கும், வாச்சாத்தி சம்பவம் மறந்திருக்க முடியாது.  பாலியல் அத்துமீறலுக்கு ஆளாகும் பெண்களில் வெகு சிலரே அதுபற்றிப் பேச முன்வருகிறார்கள். மற்றவர்கள் அதைப்பற்றி தூண்டித்துருவிக் கேட்டு மேலும் அசிங்கப்படுத்தும் சில காவல் நிலையங்கள் மற்றும் காவலர்களைக் கண்டு வெட்கித் தலைகுனிந்து, அவமானத்தால் தற்கொலை செய்து கொள்ளவும் செய்கிறார்கள். அவர்கள் குடும்பத்தாரும் அதை வெளியில் சொல்லத் தயங்கி மறைக்கவே முற்படுவதும், குற்றவாளிகளுக்கு சாதகமாக அமைந்து விடுகிறது.
    பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில், இது போன்று ஒரு சம்பவத்தில், பாலியல் வன்கொடுமைக்கு ஆளான ஒரு பெண், புகார் கொடுக்கப்போன இடத்தில் காவல்துறையினர் மேலும் கொடுத்த தொந்தரவுகளால் மனம் நொந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

    பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகி, வல்லுறவுக்கு ஆட்படுத்தப்பட்டப் பெண், சம்பவம் நடந்தவுடன், தன் உடலில் தங்கிய தடயங்கள் அழியும் முன்பாக, ஒரு மாவட்ட ஆட்சியரோ அல்லது மாவட்ட நீதிபதி போன்ற முக்கிய பதவி வகிப்பவர் முன்பாகவோ புகார் கொடுத்து, மருத்துவப் பரிசோதனை, தடய அறிவியல் ஆய்வு, போன்றவற்றை உடனடியாக செயல்படச் செய்வதன் மூலம்  சமபந்தப்பட்ட பெண்களுக்கு நியாயம் கிடைக்க வழிவ்குக்கலாம். ஆனால் பெரும் அதிர்ச்சியில் இருந்து மீளமுடியாத சூழலில் அப்பெண்களுக்கு உதவிட மகளிர் அமைப்புகளும், சேவை மையங்களும், தொண்டு நிறுவனங்களும் தயங்காமல் உதவி செய்ய வேண்டும். 18 வயதிற்குக் குறைந்தவர்களும் கூட இது போன்று குற்றங்களை இழைப்பதால் அதையும் கவனத்தில் கொண்டு, அதற்கான ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியம்.

    சமீபத்தில் தில்லியில் பிசியோதெரபி மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமைக்கு பலியான சம்பவத்தின் கொந்தளிப்பு அடங்காத நிலையிலும் மேலும் பல சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. வல்லுறவில் ஈடுபடுவோர் மட்டுமே அல்லாமல், அலுவலகங்களில் பணிபுரியும் பெண்களிடம் தகாத் முறையில் நடந்து கொள்ளும் உயரதிகாரிகள், உடன் பணிபுரியும் சகாக்கள், ஆகியவர்களும் கண்காணிக்கப்படவேண்டும். பேச்சிலோ, செயலிலோ பெண்களை  பாலியல் ரீதியாக மன உளைச்சலுக்கு ஆளாகச் செய்பவர்கள் குறித்த விழிப்புணர்வும், அதற்கான சட்டங்கள், பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் காவல் நிலையங்கள் மற்றும் பொது இடங்களிலும் அறிவிப்புப் பலகைகள் வைக்கப்பட வேண்டும். பாதுகாப்பான, போக்குவரத்து வசதி, இரவு நேரத்தில் சாலைகளில் உருப்படியாக எரியும் விளக்குகள்,  இரவு நேர போலீஸ் ரோந்துப்பணி. இவையெல்லாம் தடங்கலில்லாமல் இருக்க வேண்டும். அப்போதுதான் உள்ளுக்குள்ளேயே குமுறி, குமைந்துப் போகும் பெண்களுக்கு தங்கள் உரிமையும், அதனைப் பெறும் துணிச்சலும் குறித்த விழிப்புணர்வும் ஏற்படும்.

    இப்பொழுதெல்லாம் கணினித் துறையில் பணிபுரியும் பெண்கள் அதிகமாக இரவு நேரப் பணிக்குச் செல்ல வேண்டிய தேவையும் ஏற்படுகிறது. அந்த நேரங்களில்,அலுவலகத்தினுள்ளும், செல்லும் வழியிலும் பிரச்சனை ஏற்படாத வகையில் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டியது காவல் துறையின் தலையாய கடமையாகும்.

    ஊடகங்களும் விளம்பரங்கள் செய்வதில் ஒரு வரையறை நிர்ணயிக்க வேண்டும். ஆண்கள் பயன்படுத்தும் சில வாசனை திரவியங்களுக்கான விளம்பரங்கள் படு மோசமாக இளைஞர்களின் பாலுணர்வைத் தூண்டும் வகையில் இருப்பது எப்படி தணிக்கைத் துறையின் கண்களில் படாமல் போகிறது என்பதும் ஆச்சரியமாக இருக்கிறது. இது போன்ற விளம்பர நிறுவனத்தாருக்கும் ஒரு கட்டுப்பாடு வேண்டும். பணம் சம்பாதிப்பது மட்டுமே குறியாக இராமல் சமுதாய நல்லுணர்வும் கொள்ள வேண்டும். கொலை,கொள்ளைகளை தூண்டக்கூடிய வகையில் பல விளம்பரங்கள் அமைந்துள்ளதும் நாம் அனைவரும் அறிந்ததே. இதற்கு உடனடியான தீர்வு காண வேண்டியது அவசியம்.

    அனைத்திற்கும் மேலாக பெண்கள் தங்களுக்கென்று ஒரு எல்லைக்கோட்டை நிர்ணயம் செய்து கொள்ள வேண்டும். உடை உடுத்துவதில் ஆகட்டும், சக மாணவர்களிடமோ, உடன் பணியாற்றுபவர்களிடமோ ஒரு எல்லைக்குள் பழகும் வழமை வேண்டும். ஒரு பெண் தனக்குத்தானே அமைத்துக் கொள்ளும் பாதுகாப்பு வளையம் மற்றனைத்தையும்விட மிக உறுதியானது என்பதில் ஐயமில்லை. அதற்கான தற்காப்புக கலைகளைக் கற்றுக் கொள்வதிலும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். பள்ளிகள், கல்லூரிகள் அனைத்திலும் ஏதோவொரு தற்காப்புக்கலை கட்டாயமாக்கப்பட வேண்டும். பெற்றோர் தம் குழந்தைகளின் மீது முழுமையான கவனம் செலுத்த வேண்டியது முக்கியம். தங்கள் குழந்தைகளின் மனமாற்றங்களோ, செயல் மாற்றங்களோ குறித்த ஆழ்ந்த கவனம் கொண்டிருத்தல் இந்த காலகட்டத்தில் மிக அவசியமாகிறது. நம் கடமைகளை உணர்ந்து நாம் அனைவரும் செயல்பட்டாலே நம் நாடு முழுமையான குடியரசு நாடாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

    Share
  • ஒரு பனை வளைகிறது .. !

    சி. ஜெயபாரதன்

    பள்ளிக்கூடத்திலிருந்து வந்த இந்துவுக்குத் தாகம் பொறுக்க முடியவில்லை. நேராக சமையல் அறைக்குள் ஓடினாள். தரையில் கிடந்த சிரட்டையை எடுத்துக் குடத்தினுள்ளே விட்டு நீரை மொண்டு கடகட வெனக் குடித்தாள். அப்படியும் அவள் தாகம் தணியவில்லை. இரண்டாம் தடவை உள்ளே விடும்போது, அங்கு வந்த ஜானகி அதைப் பார்த்து விட்டாள்.

    “அடி கழுதை! சிரட்டையிலேயா தண்ணீர் எடுத்துக் குடிக்கிறே!”, இந்து முதுகில் இரண்டு அடி விழுந்தது.

    “அப்புறம் வாய் வச்சுக் குடிச்சி, அந்த அழுக்குச் சிரட்டையை மறுபடியும் குடத்துக்குள்ளேயா விடுவது?” என்று சிரட்டையைப் பிடுங்கி, ஜன்னல் வெளியே விட்டெறிந்தாள், ஜானகி. இந்து அழுது கொண்டு உள்ளே ஓடினாள்.

    உச்சிப் பொழுதில், நெற்றிக் கண்ணைத் திறந்து, தீப்பிழம்பைக் கக்கி உயிரினங்களைச் சுட்டுப் பொசுக்கிக் கொண்டிருந்தான், சூரியன்! வியர்வை சொட்டச் சொட்ட வேலையில் மூழ்கி இருந்த ஜானகி, முகத்தைத் துண்டில் துடைத்துக் கொண்டு நாற்காலியில் உட்கார்ந்தாள்.
    அவள் மாதர் குலத்தின் தனித்துவ மடந்தை! கோடியில் ஒருத்தி! நிரம்ப சுத்தம் பார்ப்பவள். ஆசார குல மாது! கணவன் வாய் வைத்துக் குடித்த தம்ளரில்கூடத் தான் நீர் அருந்த மாட்டாள்! வீட்டில் ஒவ்வொருவருக்கும் தனித்தனி தம்ளர்! பெயர்கூட எழுதப் பட்டிருக்கும்! அவ்வளவு சுத்தக்காரி ஜானகி!
    மனிதர்களின் பிறப்பையும், தரத்தையும் நிறுத்துப் பார்த்துப் பழகுபவள், ஜானகி!. படைப்பிலே ஏற்றத் தாழ்வுகள் உண்டு என்பவள். ‘எல்லாரும் ஓர்குலம், எல்லாரும் ஓரினம், எல்லாரும் ஓர்நிலை’, என்றால் அவள் ஒப்புக்கொள்ள மாட்டள். அதுஅது அந்தஅந்த இடத்தில்தான் இருக்க வேண்டும், என்று சொல்பவள், ஜானகி! கடவுளே பல இனங்களையும் பல நிறங்களையும் பல வடிவங்களையும் காரணமாகத்தான் படைத்திருக்கிறது! என்று நியாயம் பேசுவாள்.
    ஒரே ஒரு பெண் குழந்தைதான் ஜானகிக்கு. ஆறு வயது வந்த செல்லப் பிள்ளை இந்திரா. அந்த அறியாச் சிறுமிகூட அவளது சுத்த இலக்கண விதிகளுக்கு அடங்கித்தான் நடக்க வேண்டும்!
    மொம்பையிலிருந்து வேலை மாற்றலாகி, அவர்கள் சென்னை கல்பாக்கத்திற்கு வந்து இரண்டு வாரம்தான் ஆகிறது. இருபது ஆண்டுகள் கழித்து, மீண்டும் தமிழ் நாட்டுக்கு விஜயம்! பிறந்த மாநிலமானாலும் சொல்லில், செயலில், முறையில் பல மாற்றங்கள் முளைத்து, ஆல விழுதுகளாய்த் தொங்குவதை அவர்கள் கண்டார்கள்.
    இந்துவை அங்குள்ள ஓர் ஆரம்பப் பள்ளியில் இரண்டாம் வகுப்பில் சேர்த்து மூன்று நாளாகிறது. அன்று மாலை பள்ளியிருந்து திரும்பிய இந்து,“அம்மா…அம்மா…! என்று ஆசையோடு ஜானகியின் கால்களைக் கட்டிக் கொண்டாள். பகலில் தாயிடம் வாங்கி அடிகளை எல்லாம் எப்போதே மறந்து விட்டாள், இந்துக்குட்டி!
    சுட்டும் விழிச் சுடர்களைக் சுழற்றிக் கொண்டு, “அம்மா, இன்னைக்கு அஞ்சாம் கிளாஸ் மஞ்சு என்னைப் பார்த்து, நீ என்ன சாப்பிடுவே? மாமிசமா? அல்லது மரக்கறியா? என்னு கேட்டாள். ஏம்மா! மரக்கறின்னா என்ன? மாமிசமென்னா என்ன?”
    “மஞ்சு! அது எந்த நாய்? உன்னைப் பார்த்து, ‘என்ன சாப்பிடறே’ ன்னு கேட்டது?”
    “அப்புறம், ‘இந்து! நீங்க என்ன குலம்?’ என்னு இன்னொரு பிள்ளை கேட்டது. தெரியாதுன்னு சொன்னேன். அம்மா! நாமெல்லாம் என்ன குலம்? குலமுன்னா என்ன?”
    “அது எந்தக் கழுதை? சின்னப் பிள்ளையைப் பார்த்து குலம், கோத்திரம் கேட்குது! இரு! நாளைக்கு உன்னோடு ஸ்கூலுக்கு நானும் வர்றேன். வந்து உன் டீச்சரிடம், ‘ஒன்னும் தெரியாத சின்னஞ் சிறிசிடம், பிள்ளைகள் இப்படியா கேட்பது?’ என்னு புகார் பண்ணுறேன்”, என்று ஆத்திரத்தில் பேசினாள்.
    இதை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த ரவி, மாடியிலிருந்து கீழிறங்கி வந்தான். “ஜானகி! நானும் ஸ்கூல் பிரின்ஸ்பாலிடம் இதைப் பற்றிக் கேட்கிறேன். என்ன குப்பை ஸ்கூல் இது? மிகவும் பிற்போக்கான சுற்றுப்புறம் இது! பம்பாயை விட்டு நாம் சென்னைக்கு வந்ததே தப்புன்னு இப்போ தெரியுது. அங்கே இந்த மாதிரி யாரும் குலம் கேட்கலே! சாப்பிடுற ஆகாரத்தைக் கேட்கலே! இது புது அனுபவம் நமக்கு! நம்ம தலையெழுத்து!” என்று தலையில் அடித்துக் கொண்டான், ரவி.
    மறுநாள் பள்ளியிலிருந்து வந்த இந்து இன்னொரு அருவருப்பான கதையைச் சொன்னாள்.
    “அம்மா! இன்னைக்கு என் கிளாஸ் டீச்சர் என்னைத் தனியாகக் கூப்பிட்டு, ‘உன் அப்பா பேரு என்னான்னு’ கேட்டாங்க. ‘ரவிச்சந்திரன்’ ன்னு சொன்னேன். அப்புறம் அம்மா பேரைக் கேட்டாங்க. நான் ‘ஜானகி’ ன்னு சொன்னேன். நான் போகத் திரும்பும் போது, மெதுவா …. ‘நீங்க என்ன ஜாதி’ ன்னு கேட்டாங்க…. நான் ‘தெரியாது’ ன்னு முழிச்சேன்…. அம்மா! நாம என்ன ஜாதி? ஏம்மா! ஜாதின்னா என்ன?” என்று ஆர்வமாய்க் கேட்டாள், இந்துக்குட்டி.
    ஜானகிக்கு கோபம் சீறிக் கொண்டு வந்தது. “இங்கே கொஞ்சம் கூட கூச்ச மில்லாமல் டீச்சர் கூட சின்னப் பிள்ளையிடம் இப்படி பச்சையாய் கேட்டிருக்காளே! வெட்கக் கேடு! படிச்சுப் பட்டம் வாங்கின டீச்சரே இப்படி ஜாதி கேட்பாளா?….சீ! சீ! …’பிள்ளைகளைப் பத்தி புகார் செய்யலாம்’ என்றால், இப்போ டீச்சரே அசிங்கமா கேட்கிறா…… பிரின்ஸ்பாலும் இப்படித்தான் இருப்பார்”.
    ரவி எதுவும் சொல்லாது சற்று யோசித்தான். “பழைய தலைமுறைப் பாரதியார், ‘ஜாதிகள் இல்லையடி பாப்பா’ என்று பாடினார்! இப்போ புதிய காளான்கள் முளைத்த உடனே, ‘ஜாதிகள் உள்ளதடிப் பாப்பா’ என்று தேடுதுகள்!” என்று வருந்திக் கொண்டு வெளியே சென்றான் ரவி.
    “ஏம்மா! நாமெல்லாம் என்ன ஜாதி? சொல்லம்மா!” என்று ஜானகியின் கண்களை நோக்கினாள், இந்து.
    ஜானகிக்கு பற்றிக் கொண்டு வந்தது. “சீ! போடி!” என்று மறுத்து, சமையல் அறைக்குள் போய் புகுந்து கொண்டாள். இந்து விடுவதாய் இல்லை. அவளைப் பின் தொடர்ந்தாள்.
    “ஏம்மா! ஜாதின்னா உங்களுக்கும் தெரியாதா?”
    “போடீ மண்டு! இதை எல்லாம் நீ தெரிஞ்சிக்கப்படாது, இந்த வயசிலே!”
    “அப்புறம் ஏம்மா டீச்சர் என்கிட்ட ஜாதி கேட்டாங்க?” என்று அம்மாவை மடக்கினாள், இந்து. ஜானகிக்கு எப்படி, என்ன பதில் சொல்வதென்று தெரிய வில்லை. ரவி போய்விட்டானா என்று வெளியே பார்த்துக் கொண்டு, அங்கும் இங்கும் எதையோ தேடினாள். அடுக்கியுள்ள அலமாரிப் பாத்திரங்கள் அவள் கண்ணில் பட்டன. பளிச்சென்று அவளுக்கு உதய மானது!
    “அதோ பார் அலமாரியில். அது என்ன சொல், இந்து?”
    “அது எனக்கு தெரியுமே. எவர்சில்வர் தம்ளர்”
    “இது என்னவென்று சொல் பார்க்கலாம்?”
    “இதுவா, இது கிளாஸ் தம்ளர்”
    “கறை படிஞ்சிருக்கே அதோ, அது என்ன?”
    “பித்தளைத் தம்ளர், அம்மா!”
    பின்பு ஜானகி குனிந்து குப்பைக் கூடையில் ஒன்றைத் தேடினாள். “இதுதான் உனக்கு நல்லா தெரியுமே!”
    “எது? ஓ! அதுவா? ….அது கொட்டங்கச்சி” என்றாள் இந்துக்குட்டி.
    ஜானகியின் முகம் பொங்கியெழும் முழு நிலவாகி, புன்னகையை மின்னியது! இந்து எதுவும் புரியாது விழித்தாள். “ஏம்மா இந்த தம்ளர் பேரை எல்லாம் கேட்கிறீங்க?” என்றாள்.
    “இந்துக்கண்ணு! ஜாதி நான்கு! நாமெல்லாம் எவர்சில்வர் மாதிரி நினைச்சுக்கோ……!”
    “எவர்சில்வருன்னா, நாமெல்லாம் பளபளன்னு இருக்கோமா…….?”
    “அதெல்லாம் இல்லே. எவர்சில்வருன்னா ஸ்டெயின்லஸ் ஸ்டீலுன்னு அர்த்தம். அதாவது கறை பிடிக்காத வெள்ளி!” என்றாள் ஜானகி, சிரித்துக் கொண்டே.
    “ஏம்மா! அப்போ கிளாஸ் தம்ளருன்னா யாரு? பித்தளைன்னா யாரு? கொட்டங்கச்சின்னா யாரு?” என்று ஆர்வமோடு கேட்டாள், இந்து.
    “இதை எல்லாம் நானுனக்குச் சொல்ல மாட்டேன். நீயே தெரிஞ்சுக்குவே….! பள்ளிக் கூடத்திலே டீச்சரும் பிள்ளைகளுமே சொல்லிக் கொடுப்பாங்க! போ! போயி வெளியே விளையாடு!”
    இந்து விளையாடப் போக வில்லை. முற்றத்தில் நின்று சிந்தித்தாள். மற்ற மூன்று தம்ளர்களும் யாருன்னு இப்பவே தெரிஞ்சாக வேணும்! யாரிடம் கேட்கலாம்?…… இருக்கவே இருக்கார் அப்பா. நேரே மாடிக்கு ஏறினாள்.
    மாடி அறையில் சோபாவில் அமர்ந்து கொண்டு பத்திரிக்கையை வாசித்துக் கொண்டிருந்தான், ரவி.
    “அப்பா!” என்று கூவி ஓடிப்போய், பேப்பரைப் பிய்த்துக் கொண்டு ரவியின் மடியில் பொத்தென விழுந்தாள், இந்துக்குட்டி. வந்த கோபத்தை விழுங்கிக் கொண்டான், ரவி.
    “ஜாதி எத்தனைன்னு சொல்லுங்க பார்க்கலாம்?…. எனக்குத் தெரியும், அப்பா! அம்மா சொல்லிக் கொடுத்தாங்க!….”
    “அடி சக்கை! இப்போ அம்மாவே உனக்கு அந்தப் பாடங்களை எல்லாம் சொல்லிக் கொடுக்கிறாளா, வீட்டிலே! பலே ஜோர்! …. இந்து! ஜாதிப் பிரிவுகள் சொல்லி குலத், தாழ்த்தி உயர்ச்சி சொல்லல் பாவம்!” என்கிறார், பாரதியார்.
    “அப்பா! எனக்கு பாரதியாரைத் தெரியாது. இதுதான் தெரியும். ஜாதி நான்கு!” என்று வெகு அழுத்தமாகச் சொன்னாள், இந்து. “நாலையும் சொல்லட்டா? இப்போ!”
    “கேள் இந்து! ஜாதி இரண்டு! அம்மா நாலுன்னு சொன்னது தப்பு! தப்பு! தப்பு!” என்று கனிவாகச் சொன்னான், ரவி.
    “இல்லை! இல்லை! இல்லை! ஜாதி நான்கு! இரண்டுன்னு சொல்ற நீங்கதான் தப்பு! தப்பு! தப்பு!” நாலையும் நான் சொல்றேன்; கேளுங்க! முதல்லே எவர்சில்வர் தம்ளர்! ரெண்டாவது கிளாஸ் தம்ளர்! மூன்றாவது பித்தளை தம்ளர்! நாலாவது கொட்டாங்கச்சி! ஆக ஜாதி நாலு!” என்று நான்கு விரல்களைக் காட்டினாள்.
    ரவி தன்னையும் அறியாது சிரித்து விட்டான். இந்துவை அணைத்துக் கொண்டு அவளது மாம்பழக் கன்னத்திலே இரண்டு முத்தமிட்டான். இந்து திணறிக் கொண்டே, “நாமெல்லாம் எவர்சில்வர்! அப்படின்னா, கறை பிடிக்காத வெள்ளி”.
    “அடி மண்டு! ஜாதி இரண்டொழிய வேறில்லை! ஒன்னு ஆண் ஜாதி! இன்னொன்னு பெண் ஜாதி. கடவுள் படைச்சது இந்த இரண்டு ஜாதியைத்தான்! ஆணும் பெண்ணும்தான் ஆண்டவன் உண்டாக்கிய மாறுபாடான ஜீவன்கள்! மனுசன்தான் அதை நாலாக்கி. பின் நாற்பதாக்கி, அப்புறம் அதை நானூறாக்கி, இப்போ நாலாயிரத்துக்கும் மேல் போயிருச்சி!”
    கால வெள்ளத்தில் கரை புரண்டு, மக்களை எல்லாம் அடித்துக் கொண்டு போய் மூழ்க்கிய, இந்த ஜாதிப் பெருக்கத்தை, இந்துவுக்கு புரிய வைப்பது எப்படி?
    அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டு, “அப்பா ஜாதின்னா என்ன?” என்று மறுபடியும் அவனைக் குடைந்தாள், இந்து.
    ரவிக்கு கோபம் வந்து விட்டது. “இந்து! ஜாதி ஒரு தொத்துநோய்! இந்த நாட்டு மக்களைப் பல நூறு ஆண்டுகளாகப் பற்றிக் கொண்டு ஆட்டிப் படைக்கும், ஒரு புற்றுநோய்! அதை ஒழிக்க இங்கு மருந்தே இல்லை! அந்த நோயால் துன்பப்படாத மானிடரே இல்லை! புனிதமான உன் இள மனதைக் கெடுத்து விட்டாள் உன் அம்மா! அத்தனையும் ஒரே அபத்தம்”.
    இந்துவுக்கு தொத்துநோய், புற்றுநோய், மருந்து இதெல்லாம் எதுவும் புரியவில்லை! “அப்பா! இதைச் சொல்லுங்க, யாரு கிளாஸ் தம்ளர்? யாரு பித்தளை? யாரு கொட்டங்கச்சி?”
    “அசடு மாதிரி கேட்காதே! எனக்கு இதெல்லாம் பேசப் பிடிக்காது. நீயும் இந்த வயசிலே இதைத் தெரிஞ்சு கொள்ளக் கூடாது”.
    இந்து மெதுவாகப் படியில் இறங்கினாள். அவள் மூளை வேலை செய்யத் தொடங்கியது! சட்டென ஒன்று நினைவில் வந்தது. மீண்டும் படியேறி ரவியிடம் வந்தாள்.
    “அப்பா! எதிர்வீட்டு மாமா போன வாரம் நம்ம வீட்டுக்கு வந்து உங்களோடு ரொம்ப நேரம் பேசிக் கொண்டிருந்தார். அவர்தான் கிளாஸ் தம்ளர்! ஏன்னா? அம்மா கிளாஸ் தம்ளரில்தான் அவருக்கு காஃபி கொடுத்தாங்க!” என்று சொல்லிக் கொண்டே கீழே ஓடினாள், இந்து.
    இரண்டு நாட்கள் கழிந்தன. பகல் பனிரண்டு மணி இருக்கும். மதிய உணவு சாப்பிட இந்து வீடு நோக்கி வரும்போது, வாசலில் ஜானகி கூடைக்காரியிடம் காய்கறி வாங்கிக் கொண்டி ருந்தாள். பணத்தைப் பெற்றுக் கொண்டு எழுந்த கூடைக்காரி, குடிக்கத் தண்ணீர் கேட்கவே, ஜானகி உள்ளே சென்று ஒரு பாத்திரத்தில் நீர் கொண்டு வந்தாள். தவ்வித் தவ்வி வந்த இந்து, சட்டென பொம்மைபோல் சிலையானாள்.
    பித்தளைத் தம்ளரில் நீரைக் குடித்துக் கொண்டிருந்த கூடைக்காரியைப் பார்த்து, “ஓகோ! இவள்தான் பித்தளையா?” என்று மனதில் பதித்துக் கொண்டாள், இந்து.
    சிறிது நாட்களாக வீட்டில் வேலைக்காரிப் பிரச்சனை இருந்து, ஜானகிக்குச் சிரமத்தைக் கொடுத்தது. வேலை பார்த்து வந்தவள், திடீரென்று விலகி நின்று விட்டாள். பைத்தியம் பிடித்ததுபோல், ஜானகி திணறியபோதுதான், எதிபாராத விதமாக பார்வதி வந்து சேர்ந்தாள், வேலைக்கு.
    பார்வதி காக்கை நிறம்! பத்துப் பதினொரு வயதிருக்கும். மெலிந்த உடல்கட்டு. கிழிந்த பாவாடை. காற்றோட்டம் மிகுதியான மேல்சட்டை. எண்ணை தோயாத தலை மயிர். வறுமைக் கோலத்திலும் முகத்தில் தோன்றியது ஒரு லட்சணம்! ஜானகி பார்வதியை வேலைக்கு வைத்துக் கொண்டாள்.
    முதல் நாள் துள்ளி குதித்து, ஒரு சினிமாப் பாட்டை முணுமுணுத்துக் கொண்டு பம்பரமாய் வேலை செய்தாள், பார்வதி. வீட்டை துப்புரவாய்த் துடைத்தாள். பளிச்சென வாசலைக் கழுவினாள். முகம் தெரியும்படி பளபளவென பாத்திரங்களைத் தேய்த்தாள். சுத்தமாய்த் துணிகளை எல்லாம் துவைத்தாள். ஜானகிக்கு அவளை மிகவும் பிடித்து விட்டது.
    அன்று, அவள் டீ தயார் செய்து, பார்வதியை கனிவாகக் கூப்பிட்டாள்.
    “வா! பார்வதி! வா! இதைத் தின்னு, டீயைக் குடி! அலுமினியத் தட்டில் நாலு இட்லியும் சிறிது சாம்பாரும் இருக்கு. சாப்பிடு! நான் போய் டீ கொண்டு வர்ரேன்”.
    பார்வதியின் முகம் மலர்ந்தது. தயங்கித் தயங்கி வந்து, வாசற் படியில் உட்கார்ந்தாள். ஈரக் கையைப் பாவாடையில் துடைத்துக் கொண்டு, அவக் அவக்கென்று ஒரு நொடியில் தின்று முடித்தாள். இட்லியும் சாம்பாரும் ருசியாய் இருந்தது. ஜானகி எவர்சில்வர் பாத்திரத்தில் டீயைக் கொண்டு வந்தாள்.
    “பார்வதி! அந்த கொட்டாங்கச்சியை எடு! அதிலே டீயை வாங்கிக்கோ! சூடாக இருக்கு”.
    பூரித்துப் போனாள், பார்வதி. இதுபோல் யார் அவளை உபசரித்தார்கள்? டீயை ஊதி ஊதிக் குடித்தாள். சிரட்டையில் இருந்த டீ தேனாய் இனித்தது!
    சிட்டுக் குருவிபோல் பாய்ந்து வந்த இந்து, பார்வதி சிரட்டையில் டீக் குடிப்பதைப் பார்த்து, கண்ணிமைக்காது நின்றாள். அவளது நாலாவது புதிரும் தீர்ந்தது!
    “ஓ! இவள்தான் கொட்டாங்கச்சியா?” இந்துவின் மீன்விழிகள் இரண்டும் விரிந்தன. இந்தப் புதிய கண்டுபிடிப்பை உடனே அப்பாவுக்குச் சொல்லியாக வேண்டுமே, என்று மாடிக்கு ஓடினாள்!
    ரவி காலையில் குளித்துவிட்டு தலை வாரிக் கொண்டிருந்தான். மூச்சு இழைக்க ஏறிவந்த இந்து, “அப்பா! கொட்டாங்கச்சின்னா யாரு தெரியுமா?….பார்வதி!…புதுசா வேலைக்கு நம்ம வீட்டுக்கு வந்திருக்காளே, அவள்தான்” என்றாள்.
    “ஏய் இந்து! நீ என்ன சொல்றே?”
    “இன்னைக்கு அம்மா பார்வதிக்கு சிரட்டையிலே டீ கொடுத்தாங்க……!”
    கேட்டவுடன் சிலையாய் நின்றான், ரவி.
    “என்ன கேவலம்? பார்வதிக்கு, சிரட்டையிலேயா டீயைக் கொடுத்தாள், உன் அம்மா?” ரவி கோபத்தோடு கீழே விரைந்தான். இந்துவும் புரியாமல் அவனைத் தொடர்ந்தாள்.
    ஜானகி சமையல் அறையில் தன் பின்னழகைக் காட்டிக் கொண்டு தோசை சுடுவதில் ஈடுபட்டிருந்தாள்.
    “ஜானகி! என்ன கீழான புத்தி உனக்கு! பார்வதிக்கு சிரட்டையிலேயா டீ கொடுத்தே? இது அநாகரீகச் செயல்!” என்று கத்தினான், ரவி.
    “பின்னே என்ன, வெள்ளித் தம்ளரிலா அவளுக்கு டீ தருவாங்க”, என்று வெடுக்கென வெடித்துப் பேசினாள், ஜானகி.
    “இது தகாத செயல், ஜானகி! ஒரு மனிதப் பிறவிக்குச் செய்யும் அவமானம் இது! நீ இப்படிச் செய்தது எனக்கு அசிங்கமாகத் தெரியுது!”
    “டீ கொடுப்பதா தகாத செயல்? யார் இட்லியும், சுடச்சுட டீயும் தர்ராங்க? எது அவமானம்? வயிறு நிறைய அன்னம் தருவதா? இது தர்மம்! இது சன்மானம்!” என்று விளக்கம் தந்தாள், ஜானகி.
    “சுடச்சுட டீ தருவது மனிதாபிமானச் செயல்தான்! சந்தேகமில்லே. ஆனால் அதைச் சிரட்டையிலே நீ கொடுத்ததால், அந்த தர்மம் அழிஞ்சி போச்சு! உன் சன்மானம் அவமானமாச்சு!”
    “பார்வதியே சந்தோஷமாக சிரட்டையிலே குடிக்கும் போது, உங்களுக்கு ஏன் அது அநாகரீகமாகத் தோணுது? அவமானமாகத் தோணுது? அதுதான் எனக்குப் புரியலை!”
    “ஜானகி! பசி கண்ணை அடைக்கும் என்று சொல்வாங்க. பார்வதி பசியில், நீ தந்த டீயைத் தான் கண்டாள்! சிரட்டை அவள் கண்ணுக்குத் தெரியலை! என் கண்ணுக்கு நீ தந்த சூடான டீ தெரியலை! நார்நாராகத் தொங்கும் அந்த கீழான சிரட்டைதான் தெரியுது!”
    “கொட்டாங்கச்சின்னா கேவலமா? நாமெல்லாம் இளநீர் குடிக்கிற தில்லையா?”
    “ஜானகி! தேங்காய்லே நாம் இளநீர் குடிப்பது வேறு. நல்ல தம்ளர் இருக்க சிரட்டையிலே டீயைக் கொடுப்பது வேறு. சிரட்டை ஒரு கீழ்மையின் சின்னமாகத் தெரியுது, எனக்கு! நாய், கோழிகளுக்குத்தான் அதிலே தீனி வைப்பாங்க!”
    “இதோ பாருங்க! இது என் ஏற்பாடு! சமையல் துறை என் ஆட்சிக்குக் கீழ்பட்டது! அதில் நீங்க தலையிட வேண்டாம்! தர்மம், அதர்மம் என்னவென்று எனக்குத் தெரியும்!” என்று வெடித்துவிட்டு வீட்டினுள்ளே மறைந்தாள், ஜானகி.
    இந்த தர்ம யுத்தத்தைப் பார்த்துக் கொண்டிருந்த இந்து மேலும் குழப்ப மடைந்தாள். நாலாவது புதிருக்குள் ஏதோ சிக்கல் இருப்பதை அவள் உணர்ந்தாள். அப்பாவும் அம்மாவும் ஏன் சிரட்டை வைத்துச் சண்டை போடுகிறார்கள்? அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. பள்ளிக்குச் செல்லும் நேரம் நெருங்கவே, அவள் புத்தகப் பையைத் தூக்கிக் கொண்டு ஓடிவிட்டாள்.
    அன்று ஆபீஸில் இந்த நிகழ்ச்சி, ரவியின் மனதில் உறுத்திக் கொண்டே இருந்தது. ‘ஏதோ ஒரு பாபத்தைச் செய்துவிட்டோம்’, என்ற குற்றம் அவனை வாட்டியது. இரவில் தூங்கிய போதுகூட அவனால் அதை மறக்க முடியவில்லை.
    பொழுது விடிந்தது. தூங்கி எழும்போது அவனுக்கு உடம்பெல்லாம் வலித்தது. காலைக் கடன்களை முடித்துக் கொண்டு, ரவி ஆபீஸ் போகத் தயாரானான்.
    அப்போது ‘தடதடவென’ யாரோ மாடிப் படியில் ஏறி வரும் அரவம் கேட்டது. இந்துக்குட்டி மூச்சுவாங்க மாடி நோக்கி வந்து கொண்டிருந்தாள்.
    “அப்பா! கீழே வந்து பாருங்கோ! மறுபடியும் அம்மா சிரட்டையிலே பார்வதிக்கு, டீ தர்ராங்க!” என்று ஒரே மூச்சில் சொல்லி முடித்தாள்.
    ரவியின் உதிரம் கொதித்தது! அவனது இரத்த அழுத்தம் ஏறியது! நேற்று உபதேசித்த தெல்லாம் வீண்தானா? ஜானகியின் மண்டை ஓட்டில் அறிவுரை எதுவுமே நுழையாதா? பார்வதியை மனுச ஜென்மமாய்க் கருதாமல், ஒரு நாயைப்போல் நடத்துவதை, எப்படிப் பார்த்து சகித்துக் கொண்டிருப்பது?….மாடிப் படிகளை எல்லாம் மின்னல் வேகத்தில் கடந்து, ரவி பின்புறத் தோட்டத்தை அடைந்தான்.
    பார்வதி பல்லெல்லாம் தெரிய மகிழ்ந்து, சிரட்டையில் டீயை வாங்கிக் கொண்டிருந்தாள். அவள் குடிப்பதற்குள், ரவி பாய்ந்து சென்று சிரட்டையைக் கையிலிருந்து பிடுங்கி, தூர வீசினான். கீழே கொட்டிய டீயை மண்தரை உறிஞ்சிக் குடித்தது! ரவி சட்டென உள்ளே சென்றான்.
    அப்பாவித்தனமாக ஓடிப்போய், பார்வதி கீழே விழுந்த சிரட்டையை மீண்டும் எடுத்து, மண்ணைத் தட்டி விட்டு, ஜானகியிடம் மறுபடியும் நீட்டினாள். ஆவி பறக்க இன்னமும் டீ பாத்திரத்தில் இருந்தது.
    வெளியே வந்த ரவி. “பார்வதி! சிரட்டையிலே டீ குடிக்காதே!” என்று தடுத்தான். வெடுக்கென அதைப் பிடுங்கி, தரையிலே போட்டு பூட்ஸ் காலால் மிதித்து உடைத்தான். தான் எடுத்து வந்த எவர்சில்வர் தம்ளரிலே டீயை ஊற்றி பார்வதியின் கையில் கொடுத்தான், ரவி.
    அதிர்ச்சி அடைந்த ஜானகி பிரமித்து நின்றாள். பார்வதி நடுங்கிக் கொண்டே டீயை குடித்தாள்.
    “இதைக் கேட்டுக்கோ, ஜானகி! இனி பார்வதிக்கு நீ சிரட்டையிலே டீ கொடுத்தால், நானும் தினமும் காஃபியை சிரட்டையிலேதான் குடிப்பேன், தெரிகிறதா?” என்று காதில் அறைந்தால் போல் சொல்லிவிட்டு ஆபீஸ் நோக்கிக் கிளம்பினான், ரவி.
    முதன்முதலாக ரவியின் சொற்கள் அவள் நெஞ்சிலே ஈட்டிபோல் பாய்ந்தன! நின்று சிந்தித்தாள்.
    மறுநாள் பொழுது புலர்ந்தது! புள்ளினம் ஆர்த்தன! பார்வதிக்கு டீ தரும் நேரமும் வந்தது! ஒரு கிளாஸ் தம்ளரில் டீயை ஊற்றிக் கொண்டு வந்தாள், ஜானகி! … இதைப் பார்த்த இந்து, ஓடிப்போய் ரவியிடம் சொல்லவில்லை!
    “இந்து! பார்வதி இப்போ பார்வர்டு கிளாஸ், தெரியுமா?” என்றாள் ஜானகி, சிரித்துக் கொண்டே!
    இந்துக்குட்டிக்கு இந்தப் புதிர் புரியவில்லை!

    *********************
    (1980 ஆம் ஆண்டில் ஆனந்த விகடன் வார இதழ் நடத்திய சிறுகதைப் போட்டியில் புறக்கணிக்கப்பட்டது.)

    Share
  • ‘குடியரசு தின நினைவுகள்’

    விசாலம்

    என் தந்தையின் டைரியிலிருந்து

    குடியரசு தினம் ஜனவரி 26 — 1950

    என் தந்தையின் டைரியில் முதல் குடியரசு தினம் கொண்டாடிய குறிப்பு இருந்தது தில்லியில் நடந்த நிகழ்வும் சென்னையில் நடந்த நிகழ்வும் இருந்தன , சென்னையில் நடந்ததை எழுதுகிறேன் குடியரசுதினத்தை முன்னிட்டு 8000 கைதிகள் விடுதலைச் செய்யப்பட்டனர் மாலை ஐந்து மணிக்கு சென்னை கார்ப்பரேஷன் ஸ்டேடியத்தில் விழா நடக்க இருந்தது பகல் 2 மணியிலிருந்தே கூட்டம் சேர ஆரம்பித்து விட்டது சுமார் இரண்டு இலட்சம் இருக்கலாம்.திடீரென்று நிசப்தம் ,,,, கோச்சு வண்டியின் சப்தம் ஆம் கவர்னர் தம்பதி கோச்சில் ஸ்டேடியத்தை நோக்கி வந்து கொண்டிருந்தனர் நெருக்கமாக இரு குதிரைகள் ராஜ நடைப் போட்டு அவரது கோச்சுடன் வந்துக்கொண்டிருந்தன அதில் ஒருவர் போலீஸ் உதவி கமிஷனர் திரு ஆர் எம் மகாதேவன் மற்றொருவர் சார்ஜெண்ட் மேஜர் லூயிஸ் ,,,,

    கவர்னரின் வரவேற்பு மிகப்பிரமாதமாக இருந்தது சென்னையின் முதன் மந்திரி பி எல் குமாரசாமி ராஜா ஓடி வந்து வரவேற்றார், போலீஸ் படையும் மரியாதைச் செலுத்தினர் அங்கு ஒரு மேடையில் தேசியக்கொடி தயாராக வைக்கப்பட்டிருந்தது கவர்னர் அங்குச் சென்று தேசியக்கொடியைப் பறக்கச் செய்தார் பின் அதற்கு மரியாதை அளித்தார். உடனே இராணுவப்படைகளும் மரியாதைச் செலுத்தின ,மாலையிலிருந்து இரவு வரை மெரினா கடற்கரையில் வாண வேடிக்கை கண்களுக்கும் மனதுக்கும் விருந்தாக இருந்தது வனொலியில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது காலையில் வந்தேமாதரம் பாடல் டீஅர் விஸ்வநாத சாஸ்திரிதொகுத்தது பின்மதுரை சோமசுந்தரம் கச்சேரி ,பின் டில்லியில் நடந்த குடியரசு விழாவின் நேர் முக வர்ணனை ,மாலை திருவெண்காடுபி சுப்பிரமண்யப்பிள்ளை நாதஸ்வரம் பின் குமாரசுவாமி ராஜாவின் குடியாட்சி சிறப்புறை , என் எஸ் கிருஷ்ணன ,டிஏ மதுரம் அவர்களின் “விந்தை மனிதன் ” இரவு திருமதி எம்.எஸ் சுப்பலட்சுமி அவர்களின் கச்சேரி ,,,,, இத்துடன் வானொலி நிகழ்ச்சியும் முடிவடைந்தது ,,,,,,,, ஆஹா பழையகால என் தந்தை நினவுகளை நானும் மனதில் கொண்டுவந்து பார்க்கிறேன் இப்போது டிவியில் பல சானலகள் அதில் கச்சேரி என்பது மிக மிக குறைவு ,பல சினிமா கதாநாயகர்கள் நாயகிகள் வந்து தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கின்றனர் யாராவது தேசத்திற்கு உழைத்து எங்கேயோ ஒரு சின்ன வீட்டில் வாழ்ந்து வரும் சுதந்திர தியாகிகளைக் கண்டு பேட்டி எடுத்து டிவி முன் அழைத்து கௌரவிக்கலாமே ,இதே போல் அந்தக்காலத்தில் இருந்த கவிஞர் எழுத்தாளர் ,தியாகிகள் வீரர்கள் போன்றவர்களை அழைத்து அவர்கள் அனுபவங்களைப் பகிர்ந்துக்கொள்ளச்சொல்லாமே !…..                                                                                                                    என் இனிய ‘குடியரசு வாழ்த்துக்கள்’

    Share
  • குடியரசு தின வாழ்த்துக்கள்

     

    பாரத சமுதாயம் வாழ்கவே!-வாழ்க வாழ்க!
    பாரத சமுதாயம் வாழ்கவே!-ஜய ஜய ஜய              (பாரத)

    முப்பது கோடி ஜனங்களின் சங்கம்
    முழுமைக்கும் பொது உடைமை
    ஒப்பி லாத சமுதாயம்
    உலகத் துக்கொரு புதுமை-வாழ்க                              (பாரத)

    மனித ருணவை மனிதர் பறிக்கம்
    வழக்கம் இனியுண்டோ?
    மனிதர் நோக மனிதர் பார்க்கும்
    வாழ்க்கை இனியுண்டோ-புலனில்
    வாழ்க்கை இனியுண்டோ?-நம்மி லந்த
    வாழ்க்கை இனியுண்டோ?
    இனிய பொழில்கள் நெடிய வயல்கள்
    எண்ணரும் பெருநாடு;
    கனியும் கிழங்கும் தானி யங்களும்
    கணக்கின் றித்தரு நாடு-இது
    கணக்கின் றித்தரு நாடு-நித்த நித்தம்
    கணக்கின் றித்தரு நாடு-வாழ்க!                                   (பாரத)

    இனியொரு விதிசெய் வோம்-அதை
    எந்த நாளும் காப்போம்;
    தனியொருவனுக் குணவிலை யெனில்
    ஜகத்தினை அழித்திடு வோம்-வாழ்க!                      (பாரத)

    “எல்லா உயிர்களிலும் நானே யிருக்கிறேன்”
    என்றுரைத்தான் கண்ண பெருமான்;

    எல்லாரும் அமரநிலை எய்தும்நன் முறையை
    இந்தியா உலகிற் களிக்கும்-ஆம்
    இந்தியா உலகிற் களிக்கும்-ஆம் ஆம்,
    இந்தியா உலகிற் களிக்கும்-வாழ்க!                          (பாரத)

    எல்லாரும் ஓர் குலம் எல்லாரும் ஓரினம்
    எல்லாரும் இந்தியா மக்கள்,

    எல்லாரும் ஓர்நிறை எல்லாரும் ஓர் விலை
    எல்லாரும் இந்நாட்டு மன்னர்-நாம்
    எல்லாரும் இந்நாட்டு மன்னர்-ஆம்
    எல்லாரும் இந்நாட்டு மன்னர்-வாழ்க

    Share
  • குடியரசு தினம்

     

    தமிழ்த்தேனீ

    ‘மாம்பழத்து வண்டு’ 

    மாமரத்தில் பூக்கள் பூக்கும் போது வண்டுகள்

    தேனை உறிஞ்ஜ பூக்களின் உள்ளே நுழையுமாம்

    அது பூக்கள் காயாக மாறும் காலமாயிருந்தால்

    பூக்கள் மூடிக் கொள்ளுமாம், அப்போது

    அந்த வண்டு அந்த மாங்காயின் உள்ளே

    மாட்டிக் கொண்டு,மாங்காயின் கடினமான

    ஓட்டைப் பிளந்து கொண்டு வெளியே வரமுடியாமல்

    உள்ளேயே இருந்து கொண்டு,

    அந்த மாங்காய் பழுக்கும்வரை காத்திருந்து, யாராவது மாம்பழம் உண்ணும்போது மாங்கொட்டையிலிருந்து பெருமுயற்சியினால் வெளியே வருமாம் ,

    ஆனால் அப்படி வண்டு துளைத்த பழம்

    மிகவும் இனிப்பாக இருக்கும் என்று சொல்லுவார்கள்

    அது போன்ற சுவையான சுதந்திரத்தை,

    குடியரசு தினத்தை நாம் அடைய நாம் பட்ட பாடுகள்

    அப்பப்பா சொல்லி முடியாது…..

    அது போல முடியாட்சியிலிருந்து அதாவது

    மன்னராட்சியிலிருந்து,வியாபாரம் என்னும் பெயரிலே

    நம் நாட்டுக்குள் நுழைந்த அன்னியர் ,அதாவது பிரிட்டிஷார்

    நம் நாட்டையே ஏகபோகமாக ,தங்கள் வசப்படுத்திக் கொண்டு

    நம்மைப் படுத்திய பாடு இருக்கிறதே..அப்பப்பா

    நம் மன்னர்கள் ஆண்ட காலங்களில் கூட ஒருசில

    கொடுங்கோல் மன்னர்களின் அட்சியைத் தவிற மற்ற

    காலங்களில் நாம் சுபிக்க்ஷமாய்த்தான் வாழ்ந்திருக்கிறோம்

     ஆனால் பிரிட்டிஷார் ஆண்ட காலங்களில் மாங்காய்

    ஓட்டின் உள்ளே மாட்டிக் கொண்ட வண்டு போல்

    சிறைப்பட்டு பறக்க முடியாமல் முடங்கிக் கிடந்தோம் ,

    மீண்டும் சுதந்திரம் என்னும் மாங்கனி பழுத்தபின்தான்

    நாம் பறக்கத் துவங்கினோம்,சுதந்திரம் என்னும் மாங்கனி

    பழுப்பதற்கு எத்துணை காலமாற்றங்கள்,

    எத்துணை இயற்கை மாற்றங்கள்,எத்துணை மனமாற்றங்கள்,

    எத்துணை ஏமாற்றங்கள் ,எத்துணை இழப்புகள்,

    அத்தனையையும் சந்தித்திருக்கிறோம்

     தேன் என்று நினைத்து உண்ணும் ஆசையினால்

    நாம் வியாபாரம் என்னும் வலையை மகரந்தம் என்று

    நினைத்து , பூக்கள் என்று நினைத்து அன்னியர் வலையின்

    உள்ளே நுழைந்து அடிமைத்தளையில் மாட்டிக் கொண்ட

    வண்டு போல்,அன்னியர் விரித்த வியாபார வலையில்

    மாட்டிக் கொண்டு ,அன்னியர் ஆட்சியில் அனுபவித்த

    கொடுமைகள் ஏராளம் ,அந்த அடிமைத்தளையிலிருந்து,

    விடுபட விழிப்புணர்வு ஏற்படுத்தி,மக்களுக்கு அறிவுறை கூறி

    தங்கள் இளமை வளமை போன்றவற்றை,

    தாங்களாகவே விட்டுக் கொடுத்து ,அனேக தியாகங்கள் செய்து ,

    தம் சொந்த வாழ்வைத் துறந்து ,மக்களுக்காகவே தாய்நாட்டு

    சுதந்திரத்துக்காகவே பாடுபட்ட பெரியோர்கள்

    பாடுபட்டு ,மிகவும் பாடுபட்டு தங்கள் இன்னுயிரையும்

    அளித்து பாடுபட்டு வாங்கிய சுதந்திரம் நம் நாட்டு

    சுதந்திரம்,அப்படிப்பட்ட சுதந்திர உணர்வை ஊட்ட

    மஹாத்மா காந்தியடிகள் 1930ம் ஆண்டு ஜனவரி மாதம்

    போட்ட விதைதான் குடியரசு தினம் ,

    “ குடியரசு நாள் என்பதன் அர்த்தமே

    “பூரண சுயராச்சியமே நமது உடனடியான லட்ஷியமென்பதுதானே “

    அதாவது மக்களே தங்களை ஆள தாங்களே

    தங்கள் ப்ரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் உரிமையை

    வலியுறுத்தும் நாள், அதற்குப் பிறகு 17 ஆண்டுகள் கழித்து ,

    நாம் சுதந்திரமடைந்தோம்,1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15 ம் நாள்

    இந்தப் பதினேழு ஆண்டுகளும்,அதற்கு முன்னும் நம்மை

    அடிமைப் படுத்தி வைத்திருந்த பிரிட்டிஷார் ஆண்ட காலங்களிலும் எத்துணை
    கொடுமையான கடுமையான

    அடிமைத் தனத்தை நாம் அனுபவித்திருக்கிறோம்

    கொஞ்ஜம் நினைத்துப் பார்ப்போம்

    அதற்குப் பிறகு நம் இந்திய வரலாற்றிலே

    எத்துணையோ மாற்றங்கள்,தியாகங்கள்,

    மக்களின் விழிப்புணர்ச்சி, நம்முடைய முன்னோர்கள்

    வீரமுழக்கமிட்டு பல தியாகங்கள் செய்து ஏற்படுத்திய

    சுதந்திர பாரதம்,மஹாத்மா காந்தி விதைத்த

    அந்த 1930ம் ஆண்டுஜனவரி மாதம் 26ம் தேதி ,

    அதுதானே சுதந்திர வேட்கையை இன்னும் அதிகரித்தது

    நம் மனதில் அதனால்தான் இன்றும் எல்லா

    நாட்டிலும் சுதந்திர தினத்தை மட்டும் கொண்டாடும்

    வழக்கம் இருந்தாலும் ,நம் தாய்த்திரு நாட்டில்

    பாரத தேசத்தில் மட்டும் இன்றும்

     குடியரசு தினத்தை ஜனவரி 26ம் தேதியும்

    சுதந்திர தினத்தை ஆகஸ்ட் 15ம் நாளும்

    கொண்டாடும் வழக்கம் ஏற்படுத்தி இருக்கிறோம்

     “ ஓராயிரம் வருடம் ஓய்ந்து கிடந்த பின்னும்

    வாராது போல வந்த மாமணியைத் தோற்போமோ “

     என்று பாரதி மஹா காளியிடம் கதறியது நம் நினைவில்

    என்றுமே இருக்க வேண்டுமே, கப்பலோட்டிய தமிழன்

    வ வு சிதம்பரம் பிள்ளை நம் தாய் நாட்டின் சுதந்திரத்துக்காக

    செக்கிழுத்து பட்ட இன்னல்கள் நாம் அறியோமா

    வாஞ்ஜினாதன் ஆஷ் துரையைக் கொன்று விட்டு

    தானும் சுட்டுக் கொண்டு மடிந்ததை நாம் அறியோமா

    சுப்ரமணிய சிவா சிறையில் வாடி சீக்கு வசப்பட்டது

    நாம் அறியோமா ,ஜவஹர்லால் நேரு அவ்ர்கள் தன்னுடைய

    சொத்துக்களை நம் நாட்டின் வளர்ச்சிக்காக தானமாக

    அளித்தது நாம் அறியோமா, மூதறிஞ்ஜர் ராஜாஜி,

    கக்கன் ,காமராஜர் , போன்றோர் நமக்காகப் பட்ட துன்பங்கள்

    நாமறியோமா ,கடைசீ சொட்டு குறுதி இருக்கும் வரை

    கையில் பிடித்த நம் தேசக் கொடியைக் கைவிடாது

    தன் இன்னுயிர் நீத்த கொடி காத்த குமரன் ,

    இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்,

    நமக்காகப் பாடு பட்டு ,சுதந்திரம் வாங்கிக்

    கொடுத்த அத்துணைபேரையும் பட்டியலிடவேண்டுமானால்

    நம் ஆயுசுக்கும் பட்டியலிடலாம்

     அப்படியெல்லாம் பாடு பட்டு நம் முன்னோர்கள்

    வாங்கிக் கொடுத்த சுதந்திரத்தை சுதந்திர நாளிலும்,

    குடியரசு நாளிலும் நாம் கொண்டாடுவோம்

    தன்னைப் பழித்தாலும் பொறுப்போம்

    ஆனால் தாயைப் பழித்தவனை

    தாயே தடுத்தாலும் விடோம் என்னும்

    கொள்கையை மக்கள் மனதிலே,ஊறச்செய்யும்

    ஒரு புனித நாளாக, நம் தாய் நாட்டுக்கு பாதகம்

    செய்பவரை அவர் யாராயிருந்தாலும் மன்னிக்க மாட்டோம்

    என்னும் உறுதி மொழி எடுக்கும் நாளாக குடியரசு தினத்தை

    கொண்டாடுவோமே,

    82 வயதான குடியரசு நாளை நம் தேசத்துக்காகப் பாடுபட்ட

    ஒரு முதியவரின் நிலையில் வைத்து நன்றி சொல்லி

    இனியாவது குடிமகனாய் நம் கடமை என்னவென்றுணர்ந்து

     நம் நாட்டை வளமான நாடாக மாற்றும்

    முயற்சியாக,பல நல்ல ப்ரதிக்யைகளை

    மனதில் கொண்டு சத்தியப் ப்ரமாணம் எடுத்துக் கொண்டு

    கொடி வணக்கம் செய்து ,நம் பாரத தாயை வணங்கி ,

    நம் நாட்டின் கொடியை மனமகிழ்ச்சியுடன் ஏற்றி

    நம் தேசக் கொடி பட்டொளி வீசிப் பறப்பதைக் கண்டு

    மனம் முழுவதும் சந்தோஷமாக அனைவருக்கும்

    இனிப்புகள் வழங்கி நலிவுற்றோருக்கு நன்மைகள்

    செய்து,ஜாதி மத இன, மொழி பேதமில்லாது

    அனைவரும் ஒற்றுமையாக ஒரு

    நல்ல நாளாக கொண்டாடுவோமே,சுதந்திரம் ,

    குடியரசு என்னும் இனிய கனிகளை நாம் அனைவரும்

    சேர்ந்து சுவைப்போமே,மனிதம் மலரட்டும் உலக அரங்கிலே

    நம் தேசம் இந்தியா சர்வ வல்லமை பொருந்திய

    நல்ல நாடாக செழித்தோங்கட்டும்

    ” தாயின் மணிக்கொடி பாரீர்

    அதைத் தாழ்ந்து பணிந்து

    புகழ்ந்திட வாரீர் “

    Share
  • வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 3

    தேமொழி

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

    கை வீசம்மா கை வீசு…

    அன்றும்:
    கை வீசம்மா கை வீசு…
    கடைக்குப் போகலாம் கை வீசு…
    மிட்டாய் வாங்கலாம் கை வீசு…
    மெதுவாய் திங்கலாம் கை வீசு…

    சொக்காய் வாங்கலாம் கை வீசு…
    சொகுசாய் போடலாம் கை வீசு…
    கோயிலுக்குப் போகலாம் கை வீசு…
    கும்பிட்டு வரலாம் கை வீசு…

    இன்றும்:
    கை வீசம்மா கை வீசு…
    கோட்டைக்குப் போகலாம் கை வீசு…
    கொடியை ஏற்றலாம் கை வீசு…
    நாட்டை ஆளலாம் கை வீசு…

    படையில் சேரலாம் கை வீசு…
    பகைவரை அழிக்கலாம் கை வீசு…
    நாட்டைக் காக்கலாம் கை வீசு…
    நல்லோர்வழி நடக்கலாம் கை வீசு…

    – தேமொழி
    (இன்றைய வரிகள் மட்டும்)

     

    குடியரசு தின வாழ்த்துக்கள்…

     

     

    << வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 4                                                          வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 2>>

    Share
  • ‘உப்பு’…..கவிதை

    முகில் தினகரன்

    கடல் காடு பூத்த கசப்பு மலர்!
    காலங்கள் கரைக்காத கண்ணீர்ச்சுவை!

    தூத்துக்குடி மக்களின்
    சோத்துப் பசி தீர்க்க
    சமுத்திரக் கன்னி வழங்கிய
    சாத்துக்குடி சாறு!

    நீரில் பிறந்து நீரில் சாகும்
    சர்க்கரையின் சக்களத்தி!

    இது குறைந்து விட்டால் எப்பண்டமும்
    குப்பைத் தொட்டிக்கு உறவு!

    இது எகிறி விட்டால் எம்மனிதனும்
    சவப்பெட்டிக்கு உறவு!

    ரத்த அழுத்த ரவுடிக்கும்
    கிட்னி ஃபெயிலியர் கில்லாடிக்கும்
    வெண்சாமரம் வீசும் சைவ சண்டியர்!

    வாலிப வயதில் உன்னுடன்
    வரைமுறையின்றி உறவு கொண்டோர்க்கு
    முதுமை இரவில்
    சப்பை உணவையே
    சிம்னியாக்கி விடுகின்றாய்!

    சாவுக்கு சம்மன் அனுப்பும்
    சாகரத்தின் விழுதே!..நீ
    கம்யூனிசத்தில் கரிசனம் கொண்டவனோ?

    பணங்கொழுத்த முதலைகளின்
    பாவ உடம்பில் உப்புச் சத்தாய்
    ஒட்டிக் கொள்கிறாய்!
    உறவாடி உயிர் கொல்ல!
    அனால்
    உழைக்கும் ஏழையின்
    ஊதுபத்தி மேனியிலிருந்து
    வியர்வையாய் வெளியேறிவிடுகிறாயே!

    இலவசங்களில் இளைப்பாற
    ஓட்டுப் போட்டு…ஓட்டுப் போட்டு
    ஒட்டுக் கோவணம் இழந்தும்
    உணர்ச்சியற்று நிற்கும்
    மனித ஒட்டடைகள் நாங்கள்!
    எங்களுக்கு ரோஷ நகம் வளர
    உப்புப் போட்டு உண்ணணுமாம்!
    அடப் போங்கய்யா!
    மொத்தக் கடலையே குடித்தாலும்
    ரோஷம் வெடிக்காது!…
    சூடு பிறக்காது!
    சொரணை இருக்காது!
    நாங்கள்தான் மலட்டுக் கொசுக்களின்
    மழுங்கிய ஊசிகளாச்சே!

    இறுதியாய்
    உப்பிட்டவரை உள்ளளவும்
    நினைத்தல் வேண்டுமாம்!
    முன்னோர் சொன்னார்…
    ஒரு சந்தேகம்..
    எது உள்ளவரை?
    உப்பா?…உயிரா?

    Share
  • நல்வாழ்க்கை வாழ ‘வழிகாட்டிகள்’:: தொடர்-25

    பெருவை பார்த்தசாரதி

    நமது அன்றாட வாழ்க்கையில் எவ்வளவு மாற்றங்களை சந்திக்கின்றோம்?…….ஒன்றா இரண்டா எளிதில் எண்ணி விடமுடியுமா? வாழ்வில் நாம் சந்திக்கின்ற ஒவ்வொரு மாற்றங்களையும் நினைத்துப் பார்க்கக் கூட இங்கே நேரம் கிடைக்கவில்லை, ஒரு நொடி யோசிப்பதற்குள் ஒரு மாற்றம் நிகழ்ந்து விடுகிறது என்பதே உண்மை. அன்றாடப் பணிகளில், உணவில், உடையில், வீட்டில், அலுவலகத்தில் இன்னும் எவ்வளவோ நிகழ்ச்சிகளில் தினமும் மாற்றம் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. ஆக மனிதன் விரும்புகின்ற ஒவ்வொரு விஷயத்திலும், ஒவ்வொரு நொடியிலும் ஏதாவதொரு மாற்றத்தை எதிர்நோக்கியே சென்றுகொண்டிருக்கிறான் என்று சொன்னால் யாரும் மறுக்க முடியாது.

    நமது வீட்டில் இருக்கும் வயது முதிர்ந்த பெரியோர்களைக் கேளுங்கள், ஒரு காலத்தில் அவர்கள் தரையில் உட்கார்ந்து சாப்பிடுவதையே விரும்புவார்கள். உணவை இலையில் பரிமாரிய பிறகு, அவசரப்படாமல் நிம்மதியாக, மெதுவாக மென்று நிதானித்துச் சாப்பிடுவார்கள். ஆனால் இப்போது தரையில் உட்கார்ந்து சாப்பிட்ட காலமெல்லாம் மலையேறி, நேரமின்மை காரணமாக நின்று கொண்டே சாப்பிடும் மாறுதல். கால அவசரத்தின் கட்டாயத்தால், சாதாரண உணவகமெல்லாம் துரித உணவகமாக (Fast Food) மாறிவிட்டது, அங்கே உட்க்கார நினைத்தாலும் நாற்காலி கிடைக்காது. தோசை மாறி இப்போது பிசாவாகிவிட்டது(pizza), இட்லிக்கு பதில் பர்கர். நவீன உடைகள் நுழைந்து, பாரம்பரிய உடைகளான பாவாடைதாவணிகள், வேட்டிகள் எல்லாம் பரண் ஏறிவிட்டன. வீட்டில் உள்ள பொருட்களில்தான் எத்தனை மாற்றம், ஒரு காலத்தில் ரேடியோ, பிறகு இடத்தை அடைக்கக்கூடிய மிகப்பெரிய தொலைக்காட்சிப் பெட்டி, இவையெல்லாம் மாறி, காலண்டர் போல சுவற்றில் மாட்டகூடிய TV, கையடக்கக் கணிணி மற்றும் கைபேசி எல்லாம் வந்து விட்டது. இந்த மாற்றங்கள் பின்வரும் நட்களில் எப்படி இருக்கும் என்பதையும் நம்மால் ஊகிக்கமுடியாது. உதாரணமாக, 20 வருடங்களுக்கு முன்னால் கைபேசி மற்றும் SMS பற்றி பேசியிருந்தால் ‘முட்டாள்’ என்ற அடைமொழிதான் நமக்குக் கிடைத்திருக்கும்.

    நியூமராலஜி என்ற ஒன்று நம்மை ஆட்கொண்டபிறகு மனிதர்களின் பெயரிலேதான் எவ்வளவு மாற்றங்கள். முன்பு ஒருவரது பெயரை கேட்டமாத்திரத்திலேயே எழுதிவிடலாம், தற்போது சரியான எழுத்துக்களைத் (spelling) தெரிந்துகொண்டபிறகுதான் எழுதமுடியும். இப்பொழுதெல்லாம் ‘அங்காடி’, ‘கடை’ என்ற பெயர்களெல்லாம் அநாகரீகமாகி, “அகம்” என்ற வார்த்தை அந்த இடத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருப்பதைப் பார்க்கிறோம். நூலகம், படிப்பகம் என்பதுபோல், அனைத்துப் பெயர்களையும் மாற்றி பாலகம், முடிதிருத்தகம், தேநீரகம், செய்தித்தாளகம், மருந்தகம், நகலகம், இப்படியெல்லாம் மாற்றம். நல்ல வேளையாக பஞ்சர் ஒட்டும் கடைக்கு “ஒட்டகம்’’ என்று பெயரிடாமல் இருப்பது சந்தோஷமளிக்கிறது. நல்லதோ, தீயதோ ஒரே அரசாங்கத்தை மக்கள் விரும்புவதில்லை, மக்கள் மனதில் மாற்றம் நிகழும்போது அரசியலையும் விட்டுவைப்பதில்லை, அவ்வப்போது அரசாங்கம் மக்களின் மனதுக்கு ஏற்ப மாற்றப்படுகிறது.

    இயற்கை என்றுமே மாறுவதில்லை, நாம்தான் இயற்கையோடு மாறுபட்டு நிற்கிறோம். இயற்கையில் ஏற்படும் மாற்றத்தைத் வெளியுலகுக்கு கொண்டு வருபவர்தான் விஞ்ஞானி என்று புகழப்படுகிறார். சாதாரண மனிதரிலிருந்து சற்று வேறுபட்டு மாற்றுச் சிந்தனையோடு திகழ்பவர்களைத்தான் ‘ஞானி’, ‘மேதை’, ‘அறிஞன்’, ‘கவிஞன்’, ‘ஓவியன்’, ‘கலைச்சிற்பி’, ‘சிந்தனைச் சிற்பி’ என்றெல்லாம் வரலாறு போற்றுகின்றது. ஒவ்வொரு நொடிக்கும் இன்றைய உலகில் அறிவியலில் வியக்கத்தக்க மாற்றம் நிகழ்ந்து கொண்டேஇருக்கிறது. இங்கே நமக்குக் கிடைக்கின்ற பொன்னான நேரமெல்லாம், வீணே கழிந்து கொண்டிருக்கின்ற நிலையில், உலகின் ஒரு மூலையில் ஒருவர் செவ்வாய்க் கிரகத்தைப் பற்றி ஆராய்ந்து கொண்டிருக்கிறார். ஒரு நூற்றாண்டுக்கு முன் அங்கே புயல் அடித்தது என்றும் உயிரினங்கள் வாழ்ந்திருக்கக்கூடும் என்றும் ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கிறார். இதற்கு அடிப்படையாக அமைவது மனிதனுக்குக் கிடைத்த அற்புத “சிந்தனை”. இப்படிப்பட்ட மாற்றுச் சிந்தனை என்பது லட்சத்தில் ஒருவருக்கே உதிக்கின்றது. நாம் உபயோகப்படுத்தும் எத்துணையோ பொருட்கள் எளிதில் கெட்டுப் போகின்றன, ஏன் இவை கெட்டுப் போகின்றன என்று யாராவது சிந்தித்துப் பார்த்திருக்கிறார்களா?…இடைவிடாது இந்தச் சாதாரண கேள்வியைத் தனக்குள் கேட்டுக்கொண்டே இருந்த ஒருவன் உலக அளவில் அறியப்பட்டான். அவன்தான் லூயிஸ் பாஸ்டர். இதேபோல இயற்கையை ரசிப்பது கூட மற்ற யாவரும் போல் சாதாரணமாக சிந்திக்காமல், மாற்றுச் சிந்தனையோடு, ஏன்?..எதற்கு?…எப்படி?…என்ற வினாவோடு வானத்தில் தோன்றும் மாற்றங்களை ஒரு இளைஞன் சிந்திக்கிறான். பஞ்ச பூதங்களின் தோற்றங்கள் அவனுக்கு வித்தியாசமாகத் தெரிகின்றன. குறிப்பாக ஒளியைப் பற்றியே அவனது சிந்தனை வட்டமிட்டுக்கொண்டேயிருந்தது. சூரிய ஒளியில் ஏற்படும் மாற்றத்தை ஒவ்வொரு நொடியும் சிந்தித்துக் கொண்டே இருந்தான். மாற்றுச் சிந்தனை மூலம் ஏழு ஆண்டுகள் கடின ஆராய்ச்சி செய்து யாரும் அறிந்திராத புதிய கண்டுபிடிப்பின் மூலம் ‘நோபல் பரிசு’ பெறுகிறான். ஒவ்வொரு வருடமும் ஒரு வயது பூர்த்தியாவது போல், தம்முள், தம்மனதுள் வித்தியாசமாக எழும் கேள்விகளுக்கு விடையாக “இராமன் விளைவு” என்ற பதிலை உலகம் அறியச்செய்தான். ஒரு சாதாரண அரசாங்க ஊழியனாக இருந்த இராமன் என்வரை அறிவியல் விஞ்ஞானியாக உலகமறியச்செய்து, பாரதத்தின் மிக உயரிய விருதான ‘பாரத்ரத்னா’ விருதையும், ‘சர்’ பட்டத்தையும் பெற்றுத்தந்தது. இந்திய அரசின் முன்னாள் குடியரசுத்தலைவரும், விஞ்ஞானியுமான மேதகு அப்துல் கலாமின் “இந்தியா 2020” என்ற கனவை நனவாக்க, தற்போதிருக்கும் இந்தியாவின் சூழ்நிலையை ஒட்டுமத்தமாக மாற்றவேண்டும் என்று அனுதினமும் அறைகூவல் விடுக்கிறார். இத்தகய வலுவான மாற்றத்திற்கு, மாற்றுச் சிந்தனா சக்தி உள்ள இளைஞர்கள் முன் வரவேண்டும் என்கிறார்.

    இப்படி ஒவ்வொன்றிலும் மாற்றத்தை விரும்புகின்ற மனிதர்கள் தம்முடைய வாழ்க்கையில் கடைபிடிக்கின்ற தவறுகளையோ, பிறருக்கு ஒவ்வாத பழக்கவழக்கத்தையோ மாற்றிக்கொள்ள மட்டும் விரும்புவதில்லை. அப்படி யாராவது ஒருவர் நம்முடைய குறைகளைச் சுட்டிக்காட்டினாலும் நட்பு முறிந்து போகுமே தவிர பழக்கம் மாறாது. தவறு என்று தெரியும் போது அதைத் திருத்திக்கொண்டால் வாழ்க்கை ஒளிமயமாகிறது என்பதற்கு இதிகாசத்திலிருந்து இதற்கு ஒரு உதாரணமொன்றைச் சொன்னால் பொருத்தமாக என்று நினைக்கிறேன்.

    ஒரு இளைஞன் காலத்தின் கட்டாயத்தால், பிறரை இம்சித்து கொள்ளை அடித்து, அவர்களிடம் இருக்கும் பொருட்களை கவர்ந்து சென்று தனது குடும்பத்தை மகிழ்வித்து வாழ்ந்து வருகிறான். ஒரு நாள் கொள்ளை அடிப்பதற்கு ஒன்றும் கிடைக்காததால், வழியில் சன்னியாசைப்போல நடந்து வரும் ஒருவரை வழிமறித்து அதட்டலாக அவரிடம் ‘உபயோகமான பொருள் ஏதேனும் உன்னிடம் உள்ளதா?..’ என்று கேட்கிறான்.

    அதற்கு அவர் நானோ சன்னியாசி, என்னிடம் எதுவும் இல்லை, ஆனால் ஒரு உபதேசம் ஒன்று இருக்கிறது, அதைத் தரட்டுமா?…என்று சொல்கிறார்.

    கொள்ளையனும் ‘சரி சொல்லும்’ என்கிறான்

    சன்னியாசி அவரிடம் “நீ கொள்ளை அடிக்கும் பொருட்களை உமது குடும்பத்தார் ஏற்றுக் கொள்கிறார்களா?..

    மகிழ்ச்சியாக ஏற்கின்றனர்….என்கிறான் கொள்ளைக்காரன்.

    இந்த மகிழ்ச்சியையும், சந்தோஷத்தையும், உன்னோடு பங்கிட்டுக்கொள்ளும் உனது குடும்பத்தார், உனக்கு நேர்கின்ற துன்பத்திலும், பாபத்திலும் சரிபாதியை அவர்கள் ஏற்றுக்கொள்வார்களா?…என்று கேட்டு வந்து என்னிடம் சொல் என்கிறார் சன்னியாசி.

    மறுநாள் சன்னியாசியைத் தேடிவந்த கொள்ளைக்காரன், ஒரு மாறுதலான முகத்துடன், முனிவரே நீங்கள் சொல்வது சரிதான், குடும்பத்தார் யாவரும் இதற்கு உடன்பாடில்லை. ஒருவரும் எனக்கு நேர்கின்ற துன்பத்திலோ, பாபத்திலோ பங்கெடுக்க விரும்பவில்லை என்று கூறுகிறான்.

    பிறகு அந்த முனிவர் (நாரதமுனி) அவனுக்கு மந்திரோபதேசம் செய்து அவனை மாமுனிவராக்கிய கதை எல்லோருக்கும் தெரியும். கொள்ளைக்காரனாக இருந்த ரத்னாகரன், தன் மனதை மாற்றிக்கொண்டு, தவமகிமையால் வால்மீகி என்ற பெயர்பெற்று, ‘இராமாயணம்’ என்ற அழியாக் காப்பியத்தைப் படைத்தான்.

    ஒவ்வொரு செயலிலும், நிகழ்ச்சியிலும் அவ்வப்போது மாற்றத்தை விரும்பும் சாதாரண மனிதர்கள், வாழ்க்கையில் கடைபிடிக்கும் ஒழுக்க நெறிகளில், பண்புகளில் தம்மை மாற்றிக் கொள்ள முன்வருவதில்லை. தற்கால சூழ்நிலைக்கேற்றவாறு, தமது பிள்ளைகளை வளர்க்கும் முறைகளிலும் பெரிய அளவில் மாற்றத்தையும் கொண்டுவர விரும்புவதில்லை. இன்றய வாலிபர்களிடம் காணும் தகாத பழக்கவழக்கங்களுக்கெல்லாம் முழு முதற்காரணம் அவர்கள் இளம்பிராயத்தில் வளர்க்கப்படுகின்ற முறைகளில் காணும் முரண்பாடுகள் என்பது பெரியோர்களின் வாதம். ஒரு மனிதனின் சுபாவத்தைத் தீர்மானிப்பது, அவனுடனை ஜீன் என்பது இப்போது பழய கதையாகிவிட்டது. மனிதனுடைய பிறப்பும், வளர்ப்பும் ஒன்றோடென்று பின்னிப் பிணைந்தது என்பது தற்போதைய கண்டுபிடிப்பு. நம் ஜீன்களில் சுவிட்ச் ஒன்று உள்ளது என்றும், அதனை ப்ரமோட்டர் என்று அழைக்கிறார்கள். இதனுடன் என்ஹான்சர் என்ற ஒன்றும் சேர்ந்தும் ஊக்கப்படுத்தப்படுகிறது. இந்த சுவிட்ச் எப்போது போடப்படுகிறது, அணைக்கப்படுகிறது என்பதைப் பொருத்தே பிறப்பின் ரகசியம் வெளிப்படுகிறது. வெறும் பிறப்பினால் மட்டும் மனிதன் உருவாவதில்லை, மற்ற விஷங்களை அனைத்தையும் தீர்மானிப்பது வளர்ப்பினால் ஏற்படும் சூழ்நிலையேதான் என்று ஒரு ஆய்வரிக்கை கூறுவதாக தினத்தந்தியில் வெளியாகியிருந்த செய்திக்குறிப்பொன்று தெரிவிக்கிறது. நாகரீகம் என்ற பெயரில் மனம் போன போக்கில் வாழ்ந்து கொண்டிருப்பது நல்வாழ்க்கைக்கு உதவாது. ஒரு காலத்தில் ஒற்றுமையுடனும், ஒழுக்கத்துடனும், மனித நேயத்துடனும் வாழ்ந்த கிராமிய வாழ்க்கை கூட இன்றைக்கு மாறி நாகரீகத்தால் சுற்றுப்புறச் சூழலும், மனதும் கூட மாசுபடத் தொடங்கிவிட்டது. அனைத்துத் துறைகளிலும் நிகழ்ந்த அபரிமிதமான வளர்ச்சியினால் குக்கிராமம் கூட காலமாற்றத்தில் சிக்கி உருக்குலைந்து வருகின்றன. குளங்கள், ஆலயங்கள், பூங்காக்கள், பசுமை நிறைந்த வயல் வெளிகள் இவைகள் தரும் சுகத்தினால் இன்புற்று இருந்த காலம் மாறி இயற்கை நமக்கு அளித்த கொடைகளை மற்ற உயிரிடத்திலிருந்து பிடுங்கி நாம் மட்டுமே அனுபவிக்க வேண்டும் என்ற குறுகிய நோக்கத்தால் மனிதர்கள் மன அமைதியின்றி வாழ்கின்றனர் என்பதை சமூக ஆர்வலர்கள் அவ்வப்போது எடுத்துச் சொல்கிறார்கள். ஆன்றோர்களும், சான்றோர்களும், மாமனிதர்கள் என்று போற்றப்படுகின்ற மகான்களும், நல்வாழ்க்கைக்கு வேண்டிய மாற்றத்தையும், அவசியத்தையும் காலம் தவறாது நமக்கு உணர்த்திக்கொண்டே இருக்கிறார்கள்.

    காலச்சக்கரத்தோடு, வாழ்க்கைச் சக்கரமும் விடாமல் சுழன்று கொண்டிருக்கும் போது, அதனோடு மாற்றங்களும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும் என்ற உலக நியதியை, எல்லொரது வீட்டிலும் அழகுக்காக சுவற்றிலே தொங்கவிடப்பட்டிருக்கும் “கீதாச்சாரம்’’ தெளிவுபட ‘மாற்றத்தின் நியதியை’ என்றென்றும் நினைவு படுத்திக்கொண்டே இருக்கும். வாழ்க்கை முறையில் மாற்றம் என்பது வரவேற்கத்தக்கதே, ஆனால் அந்த மாற்றம் நம் வாழ்க்கைக்கு வழிகாட்டும் விதமாகமும், வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றுவதாகவும் அமைந்திருக்க வேண்டும்.

    தொடரும்…………

    Share
  • இப்படியானால் இதயம்…கவிதை

    செண்பக ஜெகதீசன்

    இப்படியானால் இதயம்…

    இதயம் குளிர்கையில்
    இயல்பாய் வருவது நன்றி..

    இதயம் இரும்பானால்
    இருப்பதைப் புதைக்கும் கொன்று..

    இதயம் கனிவானால்
    இறைவன் அருள்வான் நின்று..

    இதயம் மலரானால்
    இருக்கலாம் உலகை வென்று…!

     

    Share
  • காற்றின் ஒலி இசையா?…….

    ஷைலஜா

    இசைக்கு மனது கட்டுப்படுகிறது. இசைக்கு மனிதர்கள் மட்டுமின்றி பறவைகளும் விலங்குகளும் கூட மயங்குகின்றன.

    மனிதன் ஏற்படுத்தும் ஒலிகளைப்போலவே சில நேரங்களில் இயற்கையும் ஓசையை அதாவது ஒலியை உண்டாக்கும்.

    காட்டில் விளாம்பழ ஓடு ஒன்று கிடக்கிறது யானை ஒன்றுஅதனைத்தின்று போட்டதில் அதன்மீது துளை ஒன்று எப்படியோ வந்துவிட அதனுள் காற்று புகுந்து புறப்படுகிறதாம். அது குழல் ஊதுவதைப்போல ஒலிக்கிறதாம்!இந்தச்செய்தியை அகநானூறு தெரிவிக்கிறது.

    பொரியரை விளவின் புண்புற விளைபுழல்
    அழலெறி கோடை தூக்கலின் கோவலர்குழலென…(பாடல்219)

    கோடைவெய்யிலில் மூங்கில்கள் உலர்ந்துவிட்டன. மேல்கற்றுவீசும்போது நெல் உதிர்ந்து பொறிகிறது. அப்போது நகம் நெறிவதுப்பொல ஓசைவருகிறது இதையும் அகப்பாடல் ஒன்றுதெரிவிக்கிறது.

    குன்றின்மீது சுனை நீர்வற்றிவிட்டது காற்று சுனைக்கு உள்ளே மோதிச்செல்கிறது அப்பொழுது பறைமுழங்குவதைபோல ஓசைகேட்கிறது.

    இவை நம்நாட்டு ஒலிகள்.

    இதைப்போன்ற வினோத சில மேல்நாட்டு ஒலிகளைக்கேட்கலாமா?

    பாலைவனங்களில்பயணம் செய்தவர்கள் இனிமையான இசையொலிகளைக்கேட்டதாகக் கூறுவார்கள்.

    மணி ஒலிப்பதைப்போலவும் வேறு சில ஒலிகள் கேட்பதாயும் சொல்வார்கள். எந்தக்கருவியிலிருந்து எந்ததிசையிலிருந்து என சொல்லமுடியவில்லை என்பார்கள்விலங்குகளோ பறவைகளோ அலலது வண்டுகளோ இந்த ஒலியை உண்டாக்குவதில்லை. பாலைவனத்தில் ஆள்நடமாட்டமே இலலாத இடத்தினிலிருந்து இத்தகைய ஒலிகள் வருவது பற்றி டாக்டர் எமிலி சோரேல் என்னும் பௌதீகப் பேராசிரியருக்கு வியப்பாகி, இதனைக்குறித்து சில பரிசோதனைகள் செய்ய முன்வந்தார்.

    டாக்டர் எமிலி தனது துப்பாக்கியை பாலைவன காற்று வேகமாக வந்து மோதும் திசைக்கு எதிராக 45டிகிரி கோணத்தில் நிற்கவைத்தார். என்ன ஆச்சர்யம்? உலோகக்கம்பி அதிர்வதுபோல ஓசை கேட்டது. பிறகு துப்பாக்கியை அப்படியும் இப்படியும் மாற்றிவைத்து பாலைவனத்தில் வழக்கமாய் கேட்கும் கம்பிச்சுருள் அதிர்வதைப்போன்ற ஒலி வரும்படிச் செய்தார் . பிறகு இந்த அமைப்பை மற்றவர் பார்வையில் படாமல் மறைத்துவிட்டு ஒரு விவசாயியை அழைத்து வந்து அந்த ஒலியைக் கேட்கச்செய்தார்.

    பாலைவன இசையைக்கூர்ந்து கேட்ட விவசாயி மணியோசைமிகவும் இனிமையாக இருக்கிறது என்றார்.

    டாக்டர் எமிலி இந்தப்பரிசோத்னையின்படி கூறும் கருத்து…

    ‘அந்த விவசாய நண்பர் என் துப்பாக்கியின்மீது பட்டு ஆற்றலுடன் வெளிப்பட்ட ஒலியை மணியோசை போல இருப்பதாகக் கூறினார். அந்த ஒலி எந்தத் துப்பாக்கியிலிருந்து தோன்றுவது என்பதை நான் அவருக்குக்காண்பித்தேன் அவர் ஆச்சரியம் அடைந்தார்
    அந்த இனியஒலி அருகிலிருந்து கேட்காமல் எங்கொ தொலைவிலிருந்து வருவது போல அவர் கூறியது முற்றிலும் உண்மை .ஏனென்றால் அந்த ஒலிஅப்படித்தான் கேட்டது.

    இந்த சோதனையில் நான் அறிந்த உண்மை இதுதான் பாலைவனத்தில் சுழன்று அடிக்கும் காற்று உயரத்தில் இருக்கும்போது ஏதோ ஒருபொருளின் வழியாக ஊடுருவிச்செல்லும்போது அந்தப்பொருளை அதிரச்செய்கிறது. அப்போதுதான் இந்த விசித்திரமான ஒலிகேட்கிறது.

    காற்றால் அதிரும் அந்தப்பொருள் குன்றின் உச்சியாகவோ பள்ளத்தாக்கை நோக்கி நீட்டிக்கொண்டிருக்கும் பாறையின் கூர்மையானமுனையாகவோ அல்லது தனது நிலையிலிருந்து சற்றே நெகிழ்ந்து அதிர்வுகளை ஏற்படுத்தும் ஏதேனும் ஒன்றாகவோ இருக்கலாம் .அதிர்வுகளை ஏற்பத்தும் சாதனம் ஈரத்துடன் இருக்கும்போது ஒலிகள் கேட்பதில்லை ‘என்றும் டாக்டர் எமிலிகூறுகிறார்.

    மலைச்சாரலில் வளர்ந்துள்ள மூங்கில்களில் வண்டுகள் துளை ஏற்படுத்தி இருப்பது இயற்கை அந்ததுளைகளில் காற்று புகுந்து செல்லும்போது இனிய இசை ஏற்படும் என்று இலக்கியங்க்ள் கூறுகின்றன.

    கில்பர்ட் என்பவர் நேச்சர் இதழுக்கு ஒருகடிதம் எழுதி உள்ளார்.

    அந்தக்கடிதத்தில் தனது பண்ணைக்கும் சிறிது தொலைவில் உள்ள வீட்டுமுன்வாயிலுக்கும் உள்ள இடைபட்ட தொலைவில் பூச்சிகள் இறகடித்துப்பறப்பதால் உண்டாகும் ரீங்கார ஓசை கோடைக்கால மதியம் மற்றும் மாலை வேளைகளில் தொடர்ந்து கேட்பதாகக்
    கூறுகிறார்

    சாகத்தை ஏற்படுத்தும் ஆயிரக்கணக்கான தேனிகள் பறப்பது போல ஓசை உண்டானபோதிலும் ஒரு பூச்சிகூட கண்ணுக்குத் தெரியாததுவியப்பு!’ என்கிறார் அவர்

    சில ஓசைகள் எங்கிருந்துவருகின்றன என இதுநாள் வரையிலும் அறிய இயலவில்லை.
    உலகத்தில் தோன்றும் எல்லா ஒலிகளுக்கும் ஏதேனும் ஒருஅடிப்படைக் காரணம் இருக்கும் .

    காரணம் கண்டுபிடிக்கும்வரை அவை விசித்திரமான் ஒலிகள் என்றேஅழைக்கப்படும்!

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் – (42)

    சக்தி சக்திதாசன்

    அன்பினியவர்களே !

    அரசியல் என்பது இன்று பல  கோணங்களில் இருந்து பலவகையான கண்ணோட்டத்திற்கு உள்ளாக்கப்படுகின்றது. ஆனால் தெரிந்தோ, தெரியாமலோ அன்றி சரியாகவோ , தவறாகவோ இவ்வரசியலே மனிதர்களுடைய அன்றாட வாழ்க்கையைத் தீர்மானிக்கும் காரணியாகிறது.

    வெளிப்படையாக இது தெரியாவிட்டாலும் பலருடைய மனங்களில் அரசியலும், தம்முடைய வாழ்க்கையும் வேறுபட்டன எனும் எண்ணம் இருந்தாலும் இரண்டும் ஒன்றோடொன்று பின்னப்பட்டிருப்பது தவிர்க்கப்படமுடியாத உண்மையாகும்.

    ஆனால் ஒவ்வொருவரும் இவ்வரசியலில் எத்துனை தூரம் பங்குபெறுகிறார்கள் என்பது ஒருவருக்கொருவர் வித்தியாசப்படுகிறது. சிலர் “ராமன் ஆண்டாலென்ன ? இராவணன் ஆண்டாலென்ன ? தட்டிலே சோறும், பையிலே பணமும் இருந்தால் சரி ” எனும் வகையில் நடந்து கொள்வார்கள். வேறு சிலரோ தன்னுடைய வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும் அரசியலே நிர்ணயிக்கிறது எனவே அதைப்பற்றிய தனது கருத்து முக்கியத்துவம் வாய்ந்தது என்று நூறு சதவிகிதம் அரசியலோடு தம்மைப் பிணைத்துக் கொள்வார்கள்.

    மற்றும் சிலரோ இவை இரண்டுக்கும் இடைப்பட்ட ஒரு நிலையை எடுத்துக் கொள்வார்கள்.

    தான் வாழும் நாட்டினதும், தனது மக்களினதும் வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவதில் தமக்கு முக்கிய பங்கு இருக்க வேண்டும், தான் சார்ந்த சமூகத்தின் அபிலாஷைகளை உரக்க உச்சரிக்கும் உரிமை தனக்கு வேண்டும் என்னும் மனிதர்கள் தமது வாழ்வாதாரத்தையே அரசியலில் தங்க வைத்து அரசியல் கட்சிகளில் தம்மை இணைத்துக் கொண்டு பணியாற்றுவார்கள்.

    மனிதர்கள் அனைவரும் மனிதர்களாக வாழ்கிறார்கள் என்பது யதார்த்தமாகாது. மனிதர்களின் மனதை பேராசை ஆட்டிப்படைக்கிறது. ஆனால் அது ஒவ்வொருவருடைய மனங்களிலும் வித்தியாசமான விகிதங்களில் வித்தியாசமான வடிவங்களை எடுக்கிறது.

    அத்தகைய வடிவங்களில் ஒன்றாக சில சந்தர்ப்பங்களில் அரசியலைத் தமது பேராசைகளுக்கு சாதகமான ஒரு கருவியாகப் உபயோகிக்கும் சில அரசியல்வாதிகளைப் பார்க்கிறோம் அதற்காக அனைத்து அரசியல்வாதிகளும் அத்தகைய மனப்பான்மை கொண்டவர்கள் எனும் கருத்தை உள்வாங்கிக் கொள்வது சரியாகாது.

    என்ன சக்தியின் இக்கருத்து எதற்கு நம்மை அழைத்துச் செல்கிறது என்று எண்ணுகிறீர்களா ?

    இன்று அதாவது 10ம் திகதி ஜனவரி மாதம் 2013 இலிருந்து ஒவ்வொரு வியாழக்கிழமைகளிலும் இங்கிலாந்தின் பிரபல்யமான கருத்தாடல் வானொலியான எல்.பி.சி (L.B.C) எனும் வானொலியில் காலை ஒன்பது மணிக்கு இங்கிலாந்தின் கூட்டரசாங்கத்தில் அங்கத்துவம் வகிக்கும் கட்சிகளில் ஒன்றான லிபரல் டெமகிரட்ஸ் கட்சியின் தலைவரும். இங்கிலாந்தின் உதவிப் பிரதருமான திரு.நிக் கிளெக் (Nick Clegg) அவர்கள் மக்களுடனான நேரடி வானொலிக்கூடான கருத்தாடல் ஒன்றில் ஈடுபடத் தொடங்கியுள்ளார்.

    இவ்வானொலியின் புகழ் பெற்ற பல விருதுகளைப் பெற்ற அறிவிப்பாளரான நிக் வெராரி (Nick Ferrari) அவர்கள் நடத்தும் காலை நிகழ்ச்சியிலே இவரது கருத்தாடல் நிகழ்கிறது.

    மிகவும் பிரபல்யம் இழந்த நிலையிலுள்ள கூட்டரசாங்கத்தின் தலைவர்களில் ஒருவர், தனது கட்சியின் செல்வாக்கு நிறைந்த ஒரு காலப்பகுதியில் இத்தகைய துணிச்சல் மிக்க ஒரு நடவடிக்கையில் இறங்கியதன் பின்னனியில் இரு காரணங்கள் இருக்கலாம்.

    முதலாவதாக தான் கொண்ட கொள்கையில், தான் மேற்கொண்ட நடவடிக்கையில், தான் தனது கட்சியை இட்டுச் சென்ற பாதையில் தனக்கிருக்கும் அசைக்கமுடியாத நம்பிக்கையின் அடித்தளத்தில் இருந்து எழுந்த ஒரு உத்வேகமான நடவடிக்கையாக இருக்கலாம்.

    இரண்டாவதாக தனது கட்சியோ செல்வாக்கு இழந்து விட்டது. இக்கூட்டரசாங்கத்தின் செயல்பாடுகளின் விளைவுகள் எதிர்மறையாகத்தான் இருக்கப் போகிறது, இன்னும் இரண்டரை வருடங்களில் பொதுத்தேர்தலை எதிர்கொள்ள‌ வேண்டிய நிலையில் இனி இழப்பதற்கு எதும் இல்லை எனும் “தலைக்கு மேலே வெள்ளம் போனால் சாணென்ன ? முழமென்ன ? ” என்பது போன்ற ஒரு தத்துவத்தின் அடிப்படையில் அமைந்த நடவடிக்கையாக இருக்கலாம்.

    நாம் இப்போது வாழ்ந்து கொண்டிருப்பது ஒரு வித்தியாசமான யுகம். இங்கு  தர்மத்தின் வழி நடந்தால் வெற்றி நிச்சயம் என்று நம்பும் தலைமுறை குறுகிக் கொண்டே செல்கிறது. காந்தி, காமராஜர், மொரார்ஜி தேசாய், அறிஞர் அண்ணா போன்ற அரசியல் தலைவர்கள் அருகிக் கொண்டு வருகிற காலம்.

    இன்றைய அரசியல் களம் வெறும் பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி போன்ற ஊடகங்கள் மட்டுமல்ல சமூகவலைத்தளங்கள் இன்றைய அரசியலில் பெரும் பங்களிக்கிறது.

    இது எவ்வாறாயிருப்பினும் இன்றைய காலகட்டத்தில் இங்கிலாந்தின் உதவிப் பிரதமர் இக்கருத்தாடலில் பங்கு கொள்ள முன்வந்திருப்பது மிகவும் ஒரு துணிச்சலானதும், வரவேரற்கப்படக் கூடிய ஒரு விடயமாகும்.

    உலகமெங்கிலும் ஜனநாயக அரசியல் ஒரு ஆட்டம் கண்டு தளர்ந்த நிலையிலுள்ளது. இளைய தலைமுறையினர் அரசியலிலும், ஜனநாயகத் தேர்தல்களிலும் சலிப்படைந்து கொண்டு வருகிறார்களோ என்று எண்ணத்தோன்றும் வகையில் சமீபத்திய தேர்தல்களில் மக்களின் பங்கெடுப்பின் விழுக்காடு அச்சமடைய வைத்திருக்கிறது.

    இப்போது எமக்குத் தெவையானது எமது அரசியல்வாதிகள் தாம் நடத்தும் அரசியல் நேர்மையானதும் சமூகத்தின் வளர்ச்சியிலும், நல்வாழ்வினிலும் அக்கறை கொண்டுள்ளது எனவும் மக்களுக்கு உணர்த்தும் வகையில் முன்னெடுக்கும் நேர்மையான அரசியலே ஆகும்.

    ஒவ்வொரு அரசியல் கட்சியும் அதில் போட்டியிடும் வேட்பாளர்கள், தலைவர்கள் வெவ்வேறு அபிப்பிராயங்களைக் கொண்டிருப்பதே யதார்த்தம். ஆனால் தமது கொள்கைகளில் அவர்களுக்கு உண்மையான பிடிப்பும், அதன் அடிப்படையில் தாம் எடுக்கும் நடவடிக்கைகளை நியாயப்படுத்தக்கூடிய வலுவும் இருந்தால் மக்களுடன் எத்தகைய கருத்தரங்குகளிலும் ஈடுபடுவதில் தயக்கம் காட்ட வேண்டிய தேவையிருக்காது.

    இன்று காலை நடைபெற்ற கருத்தரங்கிலே திரு.நிக் கிலெக் அவர்களிடம் மிகவும் சிக்கலான கேள்விகள் தொடுக்கப்பட்டன. அவரது கட்சித்தொண்டர் ஒருவர் அவரிடமன் தமது கட்சி செல்லும் பாதையைக் கண்டு தான் வெட்கப்படுவதாகக் கூறி தனது கட்சி அங்கத்துவ அட்டையைக் கிழித்தெறிவதாகக் கூறினார்.

    தான் எதிர் நோக்கிய சிக்கலான வினாக்களுக்கு அவர் அளித்த விடைகள் எத்தனை துல்லியமானவை என்பதோ அன்றி கட்சியின் செயற்பாடுகளில் அதிருப்தி அடைந்த அங்கத்தவர்களை அவர் சமாளித்த விதத்தையோ ஆதரிப்பதோ அன்றி எதிர்ப்பதோ அல்ல எனது நோக்கம்.

    இவரது இம்மாதிரியான ஒரு வழிகாட்டுதல் இங்கிலாந்தில் மட்டுமல்ல உலகெங்கிலும் ஒரு திடகாத்திரமான அரசியல் கருத்தாடலுக்கு வழிவகுக்கும் என்பதைச் சுட்டிக் காட்டுவதே எனது நோக்கமாகும்.

    இவரது இந்நடவடிக்கை சரிந்து போயிருக்கும் இவரது செல்வாக்கையும், இவரது கட்சியின் செல்வாக்கையும் தூக்கி நிறுத்துமா ? அன்றி இன்னும் சரித்து விடுமா? பொறுத்திருந்து பார்ப்போம்.

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    Share
  • வால்ட் விட்மன் வசன கவிதை -8

     

    என்னைப் பற்றிய பாடல்

    (Song of Myself)

    (1819-1892)

    (
    புல்லின் இலைகள் -1)

    மூலம் : வால்ட் விட்மன்

    தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா

     

    என்னைப் பாராட்டிக் கொள்கிறேன்

    என்னைப் பற்றிப் பாடுகிறேன்

    எதனை நான் ஊகிப் பேனோ

    அதனை நீயும் செய்ய வேண்டும் !

    காரணம் :

    எனக்குள் இருக்கும் ஒவ்வோர் அணுவும்

    உனக்குள் இருப்பதை ஒத்திருப் பதே !

    ஊர் சுற்றி நான்

    என் ஆத்மாவை ஈடுபட அழைப்பேன்

    கண்ட நேர மெல்லாம் திரிந்து

    களைத்துச் சாய்வேன்

    வேனிற் காலத்துக்

    கானகப் புல்லின் முட்களைக்

    கண்ணோக்கி !

     

    என் நாக்கும், குருதியில் உள்ள

    ஓவ்வோர் அணுவும்,

    இந்த மண்ணிலும்,

    இந்தக் காற்றிலும் உருவானவை !

    இங்கு பிறந்த பெற்றோருக்கு

    இங்கு பிறந்தவன் நான் !

    என் பெற்றோரும் அவ்விதமே !

    அவரது பெற்றோரும் அப்படியே !

    முப்பத்தி ஏழு வயதான எனக்கு

    பூரண உடல் நலம்

    ஆரம்பம் !

    மாறாமல் சீரிய நலமிருக்கும் நான்

    மரிக்கும் வரை !

     

    மத நெறிகள், கல்விக் கூடங்கள்

    இவற்றை நான்

    ஒதுக்கி வைத்தேன் !

    ஓய்வெடுத்துச் சிறிது காலம்

    போது மென இருந்தேன்.

    ஒருபோதும்

    மறக்க வில்லை நான் அவற்றை !

    நல்லதோ, தீயதோ துறைமுகத்தில்

    நன்கூரம் பாச்சுகிறேன்.

    ஒவ்வோர்

    அபாயம் நேரும் போது முன்வந்து பேச

    அனுமதி உள்ள தெனக்கு !

    இயற்கை தனைத் தடை யின்றி

    ஏற்கும் என் உள்ளம்

    எந்தன் மூல ஆற்ற லோடு !

     

    +++++++++++++

    தகவல்:

    1. The Complete Poems of Walt Whitman , Notes By : Stephen Matterson [2006]

    2. Penguin Classics : Walt Whitman Leaves of Grass Edited By : Malcolm Cowley [First 1855 Edition] [ 1986]

    3. Britannica Concise Encyclopedia [2003]

    4. Encyclopedia Britannica [1978]

    5. http://en.wikipedia.org/wiki/Walt_Whitman [November 19, 2012]

    6. http://jayabarathan.wordpress.com/abraham-lincoln/

    [ஆப்ரஹாம் லிங்கன் நாடகம்]

    ********************

    jayabarat@tnt21.com [S. Jayabarathan] (January 23, 2013)

    http://jayabarathan.wordpress.com/

    Share