பெருவை பார்த்தசாரதி

“அய்யா, வெளிய கூட்டம் காத்திருக்குது”!……….வழக்கம்போல உங்க தீர்ப்புக்காக காத்திருக்காங்க அய்யா!…முதுகை வில்லாக வளைத்து பயபக்தியுடன் முதலாளியிடம் சொல்கிறான் கருப்பன்.

“கொஞ்சம் பொறுமையா இருக்கச் சொல்லு”, ஆமா, வந்திருக்கிறவங்க என்ன ப்ரச்சினயா கொண்டுவந்திருக்காங்க” …….சங்கரய்யா கட்டைக்குரலில் வினவுகிறார்.

“வழக்கமா வர கேசுதாங்கய்யா, ‘அய்யாவு மகனுக்கும், மேட்டுத் தெரு பழனிக்கும் வரப்புத் தகராரு’!…

“இதுவரையிலும் நிறய தீர்ப்பு சொல்லியாச்சு, இன்னக்கி ஏம்மனசு செரியில்ல, ரண்டு தரப்புக்காரர்களையும் நாளைக்கு வரச்சொல்லு” சங்கரய்யாவிடமிருந்து கட்டளையாக வருகிறது பதில்

“இல்லங்க அய்யா!..ரொம்ப நேரமா வராந்தவிலே குந்தியிருக்காங்க”….

இப்படி தினமும் வேலிச்சண்டை, குடும்பத்தகறாரு, கள்ளக்காதல், சொத்துத்தகறாரு போன்ற ஏதாவதொரு பிரச்சினைக்குத் தீர்ப்புச் சொல்லிக்கொண்டிருந்த சங்கரய்யா, ஊர்ப்பஞ்சாயத்தில் கோர்ட்டு, போலீஸ் தலையீடுக்கு இடங்கொடாமல் நீதிக்கு மட்டுமே தலைவணங்குவார். தனிநபர், கட்டை பிரம்மச்சாரி. கெளரவம் மிகுந்தவர், தயாள குணம் நிரம்பியவர், பண்ணையார் என்ற மிடுக்கு இல்லாமல் சகஜமாக எல்லோரிடத்திலும் பழகினாலும் கெளரவத்தை எப்போதும் தக்க வைத்துக்கொள்வார். அதற்கொரு கேடு வந்தால் கவரிமானாகிவிடும் பண்பு. ஒரு முடிவு எடுத்துவிட்டால் அதை நிறைவேற்றும் மன உறுதி கொண்டவர் “சங்கரய்யா”.

சங்கரய்யாவின் சொத்துக்களுக்கு கணக்காளராகவும், அந்தரங்க காரியதரிசியும் கூட, யாரிடமும் அதிகம் பேசமாட்டார், முதலாளியிடம் மிகுந்த விசுவாசம் உள்ளவர். அதிகம் படிக்காத இவருக்கும் குடும்பம், குட்டி, உறவினர் என்று யாருமில்லாத பிரம்மச்சாரி. எந்த காரியமானாலும் முதலாளியிடம் தெரிவிக்காமல் செய்யமாட்டார். கட்டளையை மீறமாட்டார், அவர்தான் கருப்பன்.

சங்கரய்யாவும், கருப்பனும் ‘தலைஞாயிறு” என்ற அந்தக் கிராமத்தைத் தத்து எடுத்துக் கொண்டிருந்தனர்.

கஷ்டம் என்றால் என்னவென்றே தெரியாத சங்கரய்யாவுக்கு, கடந்த ஒன்றிரண்டு மாதமாக தீவிர மன உளைச்சல். திடீரென்று ‘இந்த ஊரைவிட்டு, வேறு எங்காவது யாரும் கண் காணாத இடத்திற்கு சென்றுவிடவேண்டும்’ என்று மனதுக்குள் ஒரு இருக்கம், மனம் மாறுவதற்கு முன் உடனே முடிவுக்கு வருகிறார். பண்ணைத் தொழிலாளிகளின் கேள்விக்கு இடம் கொடாமல், அவசர அவசரமாக ஒரு வாரத்திற்குள், சொத்து, பத்து எல்லாவற்றையும் பைசல் செய்து விட்டு பட்டணத்தில் செட்டில் ஆகப்போகிறேன் என்று சொல்லிவிட்டு ஊரைக் காலிசெய்து விடுகிறார்.

இது நடந்தது 45 வருடத்திற்கு முன்னால்………..

சங்கரய்யாவுக்கு அம்மாவும் அப்பாவும் இறந்த பிறகு உறவினர் என்று சொல்லிக்கொள்ள யாருமில்லை. காலையில் வீட்டைவிட்டு கிளம்பி தோட்டம் துறவு எல்லாவற்றையும் சுற்றிவிட்டு மதியம் 2 மணிக்கு வீடுதிரும்புவார். கருப்பனின் மேற்பார்வையில் சாப்பாடு எல்லாம் தயாராக இருக்கும். குளித்து சாப்பிட்டுவிட்டு ஒரு குட்டி தூக்கம் போட்டுவிட்டு மறுபடி தமது வேலைகளை கவனிக்கத் தொடங்கிவிடுவார். அவ்வப்போது கோவில்களில் நடக்கும் விழாவிற்குத் தலைமை தாங்குவார். அன்னதானம் செய்வார். அனாதை ஆசிரமத்திற்குச் சென்று குழந்தைகளுடன் தங்குவார். ‘அய்யாவுக்கு இன்னும் கல்யாணமே ஆகல, ஆனா குழந்தைகள் மேல் எவ்வளவு பிரியம்’ ஊர்மக்கள் மூக்கில் விரலை வைத்து பிரமிப்பார்கள். இவர்களெல்லாம் தவிர மற்ற நேரங்களில் கூப்பிட்ட குரலுக்கு ஓடிவர கருப்பனும் சமையல் காரனும் இருந்தார்கள். பக்கத்து கிராமங்களில் உள்ள நிலங்களை மேற்பார்வை இடும்போது மட்டும் விசுவாசம் மிகுந்த ஒரிரு பண்ணைத்தொழிலாளி வீட்டில் சில மணிநேரம் ஓய்வெடுப்பதுண்டு. அதில் பரம்பரையாக பண்ணையாருக்குச் சேவகம் செய்த குடும்பத்தின் வழிவந்த ஒரு மீனவப் பெண் சித்ராவின் வீட்டு திண்ணையில் சற்று நேரம் இளைப்பாறுவார் என்று சிலருக்குத் தெரியும். மற்றபடி கிராமத்தில் சங்கரய்யா என்றால் தனி மரியாதை, அவருடைய தீர்ப்புக்கு அப்பீல் கிடையாது.

அய்யா ஊர விட்டுப் போகப்போறாகளாம், திடுதிப்பினு அய்யாவுக்கு ஏன் இந்த பட்டணப் பிரவேச ஆசை, கூட்டம் கூட்டமாக சேர்ந்து ஊர்மக்களின் கேள்விக் கணைகளுக்கு யாருக்குமே விடை தெரியவில்லை. கருப்பனும் முயன்று பார்த்தான் முடியவில்லை. ‘அய்யாவுக்கு ஊர்ப்பஞ்சாயத்து தீர்ப்பு சொல்லி அலுத்துப் போச்சாம், பட்டணத்தில் வாழவேண்டும் என்று சின்னக் குழந்தைமுதலே ஆசையாம் அதுதான்’ என்று கடைசியில் பண்ணையாருக்குப் பதில் தானாகவே ஏதோ ஒரு பதிலைச் சொல்லி எல்லொருக்கும், சமாதானம் சொல்லி அனுப்பி வைத்தான் கருப்பன்.

கிராமத்தை விட்டு கிளம்பும் கடைசி நாள், கருப்பனை சீக்கிரம் வருமாறு தகவல் அனுப்புகிறார் சங்கரய்யா. என்னமோ!.., ஏதோ!..என்று அலரிஅடித்துக்கொண்டு ஓடிவருகிறான் கருப்பன்.

‘சொல்லுங்க அய்யா’ எதுக்குக் கூப்பிடிங்க?

‘ஒண்ணுமில்லே கருப்பா’ நம்ம பண்ணய கவனிச்சிகிட்டவங்க, ஊர் சனங்க எல்லாருக்கும் என்னன்ன தேவையோ வேண்டுமளவு கொடுத்து விட்டேன். வழி வழியாக் குத்தகை பாத்தவங்க நிலத்த அவங்களயே வச்சுங்கங்கன்னு சொல்லிட்டேன். ஆனா, வாழ்நாள் பூரா என்னோட கூட இருந்த உனக்கு மட்டும், கண்ணனாறு கரையோரத் தென்னந்தோப்பும், கொளத்துமேட்டுக் கழனியும் உனக்கு எழுதிவைத்திருக்கிறேன்!…போதுமா?

‘வாயெல்லாம் பல்லாக கருப்பன் பயத்துடன் ‘எனக்கு எதுக்குங்கய்யா!..இவ்வளவு சொத்து, எனக்குன்னு யார் இருக்கா!…நானும் உங்ககோட வந்துர்ரேங்கய்யா, இல்லன்னா நீங்க அன்பா நேசிக்கிற அனாத ஆஸ்ரமத்துக்கு……..என்று இழுக்கிறான்.

இடைமறித்த சங்கரய்யா, ஆமாமா!….ஆஸ்ரமுன்னு சொன்னோன்ன, முக்கியமா ஒண்ணு சொல்ல மறந்திட்டென், பக்கத்து ஊர் ராஜாமடம் கிராமத்திலிருக்கிற அனாத ஆஸ்ரமக் குழந்தைகளை வாரம் தவராம நீ நேரில போய் கவனிச்சுக்க. அங்க என்னோட மனசுக்குப் பிடிச்ச, நா அதிகமா நேசிக்கிற “தங்கம்”னு சொல்ர குழந்தைய நீ கண்ணுங்கருத்துமா பாத்துக்கணும். அதமட்டும் நல்லா கவனிச்சுகிறதுக்குன்னு தனியா உனக்குப் பணம் எடுத்து வைச்சுருக்கேன். ‘உண்மையிலேயே ஏ மேல பாசம் இருக்குன்னா’ நா சொன்னத நீ தவறாம செய்வியா?….

என்னங்க அய்யா உங்க உப்பத் தின்னு வளந்தவன், நா கொடுத்த வாக்க காப்பாத்தாம இருப்பேனா?. ஆனா ‘எதுக்கு அய்யா திடுதிப்பினு ஊர உட்டு காலி பண்றாகன்னு ஊரு சனம் கேட்டா எப்படி பதில் சொல்றதுன்னுதா தெரியலீங்கய்யா!….

அதெல்லாம் கடக்கட்டும் நீ இப்ப சொன்னத செய்வியா? மாட்டியா?..சங்கரய்யாவின் முகத்தில் லேசாக கோபக்கனல்.

இப்படித்தான், சரிங்க அய்யான்னு சொல்லி, அய்யாவும் பட்டணம் போயி ஒரு வருடம் ஓடிவிட்டது…..பழய நினைவுகள் அலைபோல் புரண்டுவர, கருப்பன் திண்ணையில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டு ஏதோ யோசனையில் ஆழ்ந்திருக்கும்போது……….‘சார் போஸ்ட்’ போஸ்ட்மேன் ஒரு லெட்டரைக் கொடுத்து விட்டுச் செல்கிறான். ‘பொருளாதார நெருக்கடி காரணமாக அனாத ஆஸ்ரமத்த நாங்க மூடப்போறோம் அதனால நீங்க உடனடியாக இங்கு வரவும்’ கடிதத்தைப் படித்து முடிக்கிறான் கருப்பன்.

அங்கு சென்றதும் ஆஸ்ரம நிர்வாகிகள், ‘உங்க முதலாளி எங்க ஆஸ்ரமத்துக்கு நிறைய நன்கொடை அளித்து ‘தங்கம்’ என்கிற குழந்தையையும் எங்களிடம் ஒப்படைத்து இருக்கிறார். இப்ப எங்களால ஆஸ்ரமத்த நடத்த முடியல, அதனால, குழந்தையையும், அக்குழந்தைக்காக சங்கரய்யா கொடுத்த காசோலையையும் சேர்த்து அவனிடம் ஒப்படைக்கிறார்கள். கருப்பனுக்கு எதுவும் விளங்காமல் தலைஞாயிறு வருகிறான். நடந்த விஷயத்தை அய்யாவிடம் சொல்ல்லாம் என்றால், அவரைத் தேடுவதற்காக எடுத்த முயற்சிகள் எல்லாம் தோல்வியில் முடியவே, வேறு வழியில்லாமல் இரண்டு ஆண்டுகள் கழித்து தங்கத்தின் படிப்பிற்காக, கிராமத்தைக் காலி செய்துவிட்டு தஞ்சாவூரில் செட்டில் ஆகிவிடுகிறான். தங்கத்தை ஒரு நல்ல கான்வெண்டில் படிக்க வைத்து, காலேஜ் முடிச்சு, இப்ப சொந்தமாக ஒரு கம்பெனியையும் நிர்வகிக்ற அளவுக்கு அவன் தரத்தை உயர்த்துகிறான். ‘ஏ அப்பா’, வருஷமெல்லாம் எப்படி நிமிஷமா ஓடிருச்சு’ நினைத்து பெருமூச்சு விட்ட கருப்பனுக்கு தஞ்சாவூரில் பங்களாவுடன் கார், டிரைவர் என்று ஏகப்பட்ட வசதி. ஏழ்மை அகன்றுவிட்டது ஆனால் மனதில் இருந்த நெருடல் அகலவில்லை. சங்கரய்யா எங்கே போனார்?…, எப்படி இருக்கார்?….என்ற விவரம் மட்டும் இன்று வரை தெரியவில்லை. நம்ம வாழ்க்கைத் தரத்த இந்த அளவுக்கு உசத்துனது சங்கரய்யாவோட கருணைதான்னு அடிக்கடி தங்கத்துகிட்டே மட்டும் சொல்வான். ‘யார் இந்த சங்கரய்யா?…’ என்று தங்கம் கேட்டால், ‘நாம இப்படி வசதியா வாழரத்துக் காரணமானவர்” திடீர்னு சன்னியாசம் வாங்கிட்டு எங்கேயோ போய்விட்டார் யாருக்கும் அவரது இருப்பிடம் தெரியவில்லை என்று ஒரு பொய்யைச் சொல்லி வைப்பான். அவன் ஒரு ராஜாமடத்து அனாதை என்பது மட்டும் தங்கத்துக்கு இன்று வரை தெரியாதபடி அவனை வளர்த்து ஆளாக்கி அந்த ரகசியத்தை இன்றுவரை கட்டிக்காத்து வருகிறான். காலம்தான் எப்படி ஓடிப்போச்சு, ஒரு நாள் உண்மையைச் சொல்லிவிடலாம் என்றால் முடியவில்லை.

பட்டணம் போன சங்கரய்யாவுக்கு கடந்த 45 வருடமாக நெஞ்சில் நெருஞ்சி முள்ளாய்குத்திக் கொண்டிருக்கிற அந்த நெருடலுக்கு விடை காண முடியவில்லை. எதற்காக இப்படி அவசரப்பட்டு ஊரைக் காலிசெய்தோம்!….பட்டணம் போனபிறகு சொந்த கிராமத்துக்கு ஒரு தடவைகூட நான் திரும்ப வில்லையே, கருப்பனும், ஊர்மக்களும் என்னவானார்கள். ஊர்மக்களின் ப்ரச்சினைக்குத் நீதி வழுவாமல் தீர்ப்பு சொன்னோமே, ஒருவருக்குக் கூட நான் என்ன ஆனேன் என்ற கவலையில்லையா?…ஒன்றுக்கும் பதில் தெரியாமல் ஏதோ மனநிலை பாதிக்கப் பட்டவன் போல தாடிமீசை மழிக்கப்படாமல், மன அமைதிவேண்டி தலயாத்திரை சென்று கொண்டிருந்தார் சங்கரய்யா. எல்லா ஊர்களுக்கும் சென்று விட்டு தள்ளாத 80 வயதில், ‘தலைஞாயிறு தலைவர்’ என்ற பேரெடுத்த சங்கரய்யா கடைசியாக 48 வருடம் கழித்து தஞ்சாவூருக்கு அருகே வந்தடைந்தார். இங்கே சில காலம் தங்க முடிவு செய்தார். இங்கிருந்து 7 கிலேமீட்டர் தூரத்தில்தான் கடந்த கால வாழ்வில் கூட இருந்த கருப்பன், தற்போது வசதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறான் என்று கேள்விப்பட்டார்.

அன்று இரவு முழுவதும் புரண்டு,புரண்டு படுத்ததுதான் மிச்சம் தூக்கம் வரவில்லை.

அப்பப்பா, போதுமடா இந்த நெருடல், இந்த அந்திம காலத்தில் எப்படியாவது கருப்பனைப் பார்த்து நம் விஷயத்தை அவனிடம் சொல்லி விட்டு ஒரு புது வாழ்வை இனிமேலாவது தொடங்கவேண்டும் என்கிற வைராக்கியம் காலம் கடந்து இந்த வயாதான காலத்தில் சங்கரய்யாவின் மனதுக்குள் அனலாய்ப் பொங்கியது. மீண்டும் மீண்டும் மனதில் அதே நெருஞ்சிமுள் நெருடல்.

அடுத்த நாள் காலை,

தள்ளாத வயதில் அடையாளம் தெரியாத சங்கரய்யா வீறுநடைபோட்டு கருப்பனைச் சந்திக்கச் சென்றார். பெரிய பங்களாவின் கேட்டில் பொருத்தியிருக்கும் காலிங்பெல்லை அழுத்த, வாட்ச்மென் ‘யாரப்பா அங்கே’ ஒன்றும் பதிலில்லை. டாபர்மென் நாய் கட்டுக்கடங்காமல் குரைத்துக் கொண்டேயிருக்கிறது. கிட்டேவந்து அதட்டலுடன் ‘இங்கே பிச்சைபோட யாருமில்லை போப்பா போ வேறேஇடம் பார்’.

ஈனமான குரலில் ‘ஏம் பேரு சங்கரய்யா’ நான் கருப்பண்ணணைப் (கருப்பன்) பார்க்க வேண்டும்.

‘அண்ணன இப்ப பாக்கமுடியாதுப்பா நீ போய்ட்டு அப்புரமா வா’, வேறு வழியில்லாமல், சில நிமிட போராட்டத்துக்கு பிறகு உள்ளெ சென்ற வாட்ச்மென் ‘யாரோ சங்கரய்யாவாம்!…’ உங்களப் பார்க்க பிடிவாதமா பிச்சக்காரன் மாதிரி கேட்டருகில தவங்கிடக்கிறாரு. நானும் வெரட்டிப் பார்த்தேன், இங்கிருந்து நகர்றதா மாதிரி தெரியல!….

பெயரைக்கேட்ட அதிர்ச்சியில் கருப்பன் தலைதெரிக்க கேட்டருகே ஒடுகிறான். புரிந்து கொள்வதற்கு சில நொடிகள் ஆனாலும், தடாலென்று அவர் காலில் நெடுசான்கிடையாக விழுந்து ‘அய்யா உள்ள வாங்க, எங்கய்யா போனீங்க இவ்வளவு வருஷமா?…, உங்களுக்காகத் தானெ இந்த உசிரு ஓடிக்கிட்டிருக்கு’ படபடன்னு கேள்விய அடுக்கிகிட்டே, அவரை மெதுவாக கைத்தாங்கலாக உள்ளே அழைத்துச் சென்று சோபாவில் உட்கார வைக்கிறான் கருப்பன்.

அன்றிரவு முழுவதும் கடந்த கால வாழ்க்கைப் பயணங்களை இருவரும் அசைபோடுகிறார்கள். ‘அய்யா நீங்க இனிமே எங்கேயும் போகவேண்டாம், நீங்க ஊர விட்டுப் போகும்போது சொன்னது நினைவிருக்காங்கய்யா!…நீங்க அன்பா நேசிச்ச ராஜாமடம் அனாதப்பையன் ‘தங்கம்’ இப்ப என்னோட பையனாயிட்டான். நீங்க கொடுத்த பணத்த வெச்சு, அவன் மெத்தப் படிச்சு சுயமா தொழில் செய்யறான். உங்களப் பத்தி அவங்கிட்ட நிரய சொல்லியிருக்கேங்கய்யா, நீங்கதான் என்ன வளர்த்து ஆளாக்கிய தெய்வம்னு சொல்லி வச்சிருக்கேன், தொழில் விஷயமா சென்னப்பட்டிணம் போயிருக்கான், நீங்க வந்த விஷயத்த அவன் காதில போட்டிருக்கேன், உடனே கிளம்பி வர்ரதா சொல்லியிருக்கான்’ அவன் வரட்டும் மிச்சதை பேசிக்கலாம். நீங்க போய் அந்த ஏசி ரூம்ல ரெஸ்ட் எடுத்துக்கங்க, விடிஞ்சதும் பேசிக்குவோம்.

இரவு முழுதும், ஏசி ரூம் இதமா இருந்தாலும், நெஞ்சில் இருந்த நெருப்பின் கனப்பு அடங்கவில்லை, மன உளைச்சலில் சங்கரய்யா கண்ணயரவில்லை. விடிந்தவுடன் கருப்பனும், தங்கமும் ஒண்ணா இருக்கும்போதே விஷயத்த சொல்லலாமா? வேண்டாமா? மீண்டும் அந்த நெருசிமுள் நெசில் கடப்பாரையாக குத்துகிறது.

விடிந்ததும் சங்கரய்யாவுக்கு இருப்புக் கொள்ளவில்லை. வெளிகேட்டிற்கும் உள்வாசலுக்கும் உலாத்திக்கொண்டே தங்கத்தின் வரவுக்காக பரபரப்பாயிருந்தார்.

ஏர்போர்ட்டிலிருந்து தங்கத்தின் காரை டிரைவர் சாமிக்கண்ணு வேகமாக வீடு நோக்கி ஓட்டி வந்து கொண்டிருக்கிறான்.

டிரைவர் தம்பி!.., ஊர்ல என்னப்பா விஷேஷம்!…..

சொல்ரத்துக்கு ஒண்ணுமில்லீங்கய்யா, ஏதோ ஓடுதுங்கய்யா!… ‘ஆமா நீங்க ஊருக்குப்போகும்போது வரதுக்கு ஒருவாரம் ஆகும்னு சொன்னீங்க, இப்ப அவசரமா திரும்பீட்டீங்க, ஏதாவது மறந்து வீட்ல வெச்சுட்டீங்களாய்யா?…டிரைவர்

அது ஒண்ணுமில்லப்பா….அப்பாவோட பால்ய சினேகிதன் வந்திருக்காராம், உடனே நான் அவர பாக்கணுமாம், அவசரமா வரச்சொல்லி, அப்பா உத்தரவு போட்டுருக்காங்க, அதான்…பாதில திரும்பிட்டேன்.

சங்கரய்யா இருப்புக் கொள்ளாமல் அங்குமிங்கும் அலைவதைப் பார்த்த வாட்ச்மேன் ‘இன்னும் கொஞ்ச நேரத்துல அய்யா வந்துருவாரு’, அய்யாவோட கார் தெருமுனைக்கு வரும்போதே எங்க டாபர்மெனுக்குத் தெரிந்துவிடும், சங்கிலியைப் பிய்த்துக்கொண்டு கத்த ஆரம்பிச்சுடுவான்…வாட்ச்மென் பெருமைப்பட்டுக்கொள்கிறான்.

‘அவன் சொல்லி அரைமணி ஆகியும், நாய் இன்னும் குரைக்கவில்லையே…..மீண்டும் சங்கரய்யாவுக்குப் பதற்றம்.

சட்டென்று மூன்று அடிஉயரம் பாய்கிறது டாபர்மென், ‘வாவ்’ ‘வாவ்’ அடிவயிற்றிலிருந்து வரும் அதிரடிக்கும் காட்டுக் கூச்சல், வாட்ச்மேன் ஓடிவந்து வாசல் கேட் திறந்ததும், வேகமாகப் உள்ளே நுழையும் கப்பல் போன்ற ‘கண்டெஸ்ஸா’ காரின் சப்தம்.

பத்தடி தூரத்தில், வாட்ச்மேன் காரின் கதவைத் திறந்ததும், தங்கத்தின் முகத்தைப் பார்த்த சங்கரய்யாவின் உயிர்நாடிகள் கொதித்து எழும்புகின்றன, தள்ளாத வயதில் கட்டுக்கடங்காத உணர்ச்சிப் பெருக்கில், ரத்தம் சூடேறி இடிதாக்கிய தென்னைமரம் போல் பொத்தென்று சாய்கிறார்.

‘அய்யா என்னாச்சுங்கய்யா’ கருப்பன் பதறியடித்துக்கொண்டு, சங்கரய்யாவின் சட்டையைப் பிடித்து உலுக்கிறான்.

சங்கரய்யாவின் விழிகள் இரண்டும் செருகிக் கொள்ளுகிற நேரம், அவரின் உள்ளம் 48 வருடத்திற்கு முன்னால் தாவிச் செல்கிறது.

அவர் வாய் திறந்து…………

‘ஏ ‘தங்கம்’ நீ தான்டா!…., நீ தாண்டா!……என்னோட வாரிசு எனக்கும் சித்ராவுக்கும் பிறந்தவன்’ என்று வேகமாக உரக்கக் கத்த நினைத்ததை…………சட்டென்று ஸ்ட்ரோக் (Stroke) எடுத்துக்கொண்டு சங்கரய்யாவின் வாயைக் கோணச்செய்து இவ்வுலகை விட்டு வழியனுப்பியது. கருப்பனின் மடியில் தலைவைத்து கண்குத்திய நிலையில் மூன்று நிமிடத்துமுன் சங்கரய்யா செத்துப்போயிருந்தார். பிணமாக இருந்த சங்கரய்யாவின் முகத்தில் அவிழ்க்க முடியாத புதிர் நிறைந்த முகத்துடன் ரத்தம் உறைந்து கொண்டிருந்தது. இளவயதில் மீனவப் பெண் சித்ராவிடம் தன் மனதைப் பரிகொடுத்து, அதற்குப் பரிசாக அவள் தங்கத்தைப் பெற்றுக்கொடுத்துவிட்டு அவளும் இறந்து போன சம்பவம் சங்கரய்யா மட்டுமே அறிந்த ரகசியம்.

தகப்பனின் பூத உடலை தன் தோளிலே சுமக்கிறோம் என்றறியாத மகன் தங்கத்தும், அவனை வளர்த்து ஆளாக்கிய கருப்பனுக்கும் ‘சங்கரய்யாவின் வாழ்க்கை ரகசியமும், பொய்யான வாழ்க்கையும் அவர்களுக்கு மட்டுமல்ல, வேறு யாருக்குமே புரியாமல், எல்லாம் நடந்து முடிந்துவிட்டது. கெளரவத்துடன் கவரிமானாக இருந்து ஊர் மக்களுக்குத் தீர்ப்புச் சொன்ன சங்கரய்யாவின் வாழ்க்கைச் சிக்கலுக்குத் தீர்ப்பு சொல்ல உண்மை அறிந்தவர் யாருமில்லை. சங்கரய்யாவின் வாழ்க்கை ரகசியம் அவரின் ‘பொய் வாழ்க்கைக்கு’ முற்றுப் புள்ளி வைத்துவிட்டது.

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “‘பொய் வாழ்க்கை’

  1. மெய்யில் வாழ்க்கையை மெய்யெனக் கொள்ளும் *
    இவ்வையம் தன்னொடும் கூடுவதில்லை யான் *
    ஐயனே! அரங்கா! என்று  அழைக்கின்றேன்*
    மையல் கொண்டு ஒழிந்தேன் எந்தன் மாலுக்கே!

  2. Congratulation Sarathi.  Your maiden short story is very interesting.  It took me to our childhood days.  Awaiting  many more such work from you.
    kannan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.