Blog

  • எமிலி டிக்கின்ஸன் கவிதைகள்

    எமிலி டிக்கின்ஸன் கவிதைகள்

    எமிலி டிக்கின்ஸன் கவிதைகள் -5
    நெஞ்சே  நாம் அவனை மறப்போம்

    ஆங்கில மூலம் : எமிலி டிக்கின்சன்
    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

    நெஞ்சே ! நாமினி அவனை மறப்போம் !
    நீயும் நானும் இன்று இரவு !
    அவன் அளித்த கணப்பை நீ மற,
    நான் மறப்பேன் ஒளியை !

    மறந்த பிறகு எனக்குச் சொல் நீ
    நேரே நான்  மறக்க ஆரம்பிக் கலாம் !
    சீக்கிரம் சொல் !  நீ பின் தங்கினால்,
    மீண்டும் அவன் நினைவு வந்திடும்.

    **************

    Heart ! We Will Forget Him

    Heart! We will forget him!
    You and I—tonight!
    You may forget the warmth he gave—
    I will forget the light!

    When you have done, pray tell me
    That I may straight begin!
    Haste! lest while you’re lagging
    I remember him!

    *****************

    எமிலி டிக்கின்ஸன் கவிதைகள் -6
    ஓர் இதயம் முறிவதை நிறுத்து

    ஆங்கில மூலம் : எமிலி டிக்கின்சன்
    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

    ஓர்  இதயம் பிளப்பதை நிறுத்த முடிந்தால்,
    நான் வாழ்ந்தது வீணாக வில்லை;
    ஒருவர்  ஏக்கத்தை குறைக்க முடிந்தால்
    அல்லது வேதனை தீர்க்க முடிந்தால்,
    அல்லது மயக்க முற்ற ஒரு குருவி
    கூட்டை அடைய உதவி செய்தால்
    என் வாழ்க்கை வீணாக வில்லை.

    *******************

    Stop one heart from breaking,

    If I can stop one heart from breaking,
    I shall not live in vain;
    If I can ease one life the aching,
    Or cool one pain,
    Or help one fainting robin
    Unto his nest again,
    I shall not live in vain.

    *************************

    எமிலி டிக்கின்ஸன் கவிதைகள் -7
    கனிவோடு என்னை  மதிப்பிடுவீர்

    ஆங்கில மூலம் : எமிலி டிக்கின்சன்
    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

    இதுதான் உலகுக்கு நான் எழுதும் கடிதம்
    அது ஒருபோதும் எனக்கு எழுதாது
    எனக்கு இயற்கை உரைத்த எளிய செய்தி
    கனிவு நிறைந்து மகத்துவ மானது.

    இயற்கை போதனை  கட்டுப் படுத்தும்
    நான் காண இயலாத கரங்களை.
    இனிய நாட்டாரே ! இயற்கையை நேசித்தால்
    கனிவோடு என்னை மதிப்பிடுவீர் !

    *****************

    Judge tenderly of me

    This is my letter to the world
    That never wrote to me.
    The simple news that Nature told
    With tender majesty.

    Her message is committed
    To hands  I cannot see;
    For love of her, sweet countryman,
    Judge tenderly of me.

    *******************

    Share
  • கோதுமை பக்கோடா செய்வது எப்படி?

    கோதுமை பக்கோடா செய்வது எப்படி?

    கோதுமை பக்கோடா செய்வது எப்படி? விளக்குகிறார் கோவையிலிருந்து ஜெயஸ்ரீ.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • சர் ஜகதீஸ் சந்திர போஸ் விருது பெறும் நா.கணேசன், பிரியா ஆபிரகாம்

    சர் ஜகதீஸ் சந்திர போஸ் விருது பெறும் நா.கணேசன், பிரியா ஆபிரகாம்

    வணக்கம்,

    எனக்கும், பிரியா ஆப்ரகாம் (Director, National Institute of Virology, Pune), Dr. A. Ramachandra, D.Sc – இந்த ஆண்டு சர் ஜகதீஸ் சந்திர போஸ் அவார்ட் ஜனவரி 6, 2022 – 10:30 AM Bharatiyar University Campus – இந்தியா ஸயன்ஸ் மானிட்டர் குழுமம் வழங்க உள்ளது. என் பேரா. ராடம் நரஸிம்ஹா (Aeronautics) போன்றோர் பெற்ற விருது ஆகையால் எனக்குப் பெருமை.

    தாங்கள் நிகழ்ச்சிக்கு வந்திருந்து வாழ்த்த வேண்டுகிறேன்.

    அன்புடன்,
    நா. கணேசன்
    http://nganesan.blogspot.com
    துச்சில்: பொழில்வாய்ச்சி, தமிழ்நாடு, இந்தியா

    இந்தியாவின் முதல் விஞ்ஞானி:
    இவரை ஆதரித்தவர் சகோதரி நிவேதிதை. போஸ் பிரசங்கத்தை அச்சிட்டு (பழனியப்பா பிரதர்ஸ்) வழங்க உள்ளேன்.

    Share
  • 8 வடிவ நடைப்பயிற்சி

    8 வடிவ நடைப்பயிற்சி

    ஒரு எட்டு நட, ஒரு எட்டு போயிட்டு வா என முன்னோர் சொல்லக் கேட்டிருப்போம். அதற்கு 8 என்றும் பொருள் கொள்ளலாம். 8 வடிவத்தில் நடப்பது உடல் முழுவதற்கும் நன்மை பயக்கும். கோவையில் இன்று காலையில் நானும் என் மச்சினர் சத்தியநாராயணனும் 8 வடிவத்தில் நடைப்பயிற்சி மேற்கொண்டோம். நீங்களும் நடந்து பாருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 41

    கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 41

    -மேகலா இராமமூர்த்தி

    அனுமனை எதிர்த்துவெல்ல இயலாமல் சம்புமாலியைத் தொடர்ந்து தன் சேனைத் தலைவர்களும் மாண்டதை அறிந்து பெருஞ்சினமுற்ற இராவணன், தானே போருக்குப் புறப்பட எத்தனித்த வேளையில் அவனைத் தடுத்துத் தன்னைப் போருக்கு அனுப்ப இறைஞ்சினான் வீரன் ஒருவன்! அவன் வேறு யாருமல்லன்; இராவணனின் அருமை மைந்தன் அக்ககுமாரன்!

    ”தந்தையே! விலங்குகளை எதிர்த்துப் போர்புரிவது உமக்கு இழுக்கு! அதிலும் அற்பக் குரங்கோடு நீர் பொருவதை நான் பொறுப்பதற்கில்லை. ஆதலால், அப்பணியை நானே செய்து அக்குரங்கினைப் பிணித்துவருவேன்” என்று சூளுரைத்துத் தந்தையின் அனுமதிபெற்றுத் தேரேறிப் புறப்பட்டான் அவன்.

    சேனைகள் சூழ கணக்கிலா ஆயுதங்களோடு தன்னைநோக்கி வந்த அக்ககுமாரனைக் கண்ட அனுமன், ”நீலமலைபோல் தோன்றும் குற்றமற்ற உருவுடைய இவன், பத்துத் தலைகள் உடைய இராவணன் அல்லன்; விழிகள் ஆயிரங்கொண்ட இந்திரனை வென்ற இந்திரசித்தனும் அல்லன்; அவர்களினும் மேம்பட்டவனாய்த் தோன்றுகின்றான்; போர்த்தொழிலில் வல்லானான முருகக் கடவுளும் அல்லன்; கேடில்லா வீரமிகு இக்குமரன் யாரோ?” என்று சிந்திக்கலானான்.

    பழி இலதுஉரு என்றாலும்
    பல்தலை அரக்கன் அல்லன்
    விழிகள் ஆயிரமும் கொண்ட
    வேந்தை வென்றானும் அல்லன்
    மொழியின் மற்றுஅவர்க்கு மேலான்
    முரண்தொழில் முருகன் அல்லன்
    அழிவுஇல் ஒண்குமரன் யாரோ
    அஞ்சனக் குன்றம்
      அன்னான்.  (கம்ப: அக்ககுமாரன் வதைப் படலம் – 5687)

    ஏற்கனவே இராவணன் இந்திரசித்தன் ஆகியோரை அவர்கள் உறங்கிக்கொண்டிருந்தபோது கண்டவன் அனுமன் என்பதால் அக்ககுமாரன் இராவணனோ இந்திரசித்தனோ அல்லன் என்பதை எளிதில் கண்டுபிடித்துவிட்டான். அறநெறியில் செல்லாத இவ் அரக்கர் சார்பில் முருகன் வாரான் என்பதால் அக்ககுமாரன் முருகன் அல்லன் என்பதையும் தீர்மானித்தவன், இராவணன் இந்திரசித்தன் ஆகியோரின் மேம்பட்ட வீரனிவன் என்பதையும் பார்த்த மாத்திரத்தில் கணித்துவிட்டான்.

    அக்ககுமாரன் அனுமனைப் பார்த்து, அரக்கர் குழாத்தைக் கொன்றது இக்குரங்குதானா?” என்று எள்ளி நகையாடிய வேளையில் அதனைத் தடுத்த அவனுடைய தேர்ப்பாகன், ”ஐய! நான் சொல்வதைக் கேள்! உலகில் நடைபெறும் செயல்கள் இத்தன்மையானவை என்று நாம் துணிந்துரைக்க இயலுமா? உன்னெதிரில் நிற்பவனைக் குரங்கு என இகழல் வேண்டா! நம் அரசனாகிய இராவணனை எதிர்த்துநின்று வென்ற வாலி ஒரு குரங்கு எனும்போது மேலும் நாம் சொல்வதற்கு வேறு ஏதாவது உள்ளதா? எனவே நான் சொன்னதை மனத்தில்கொண்டு வெற்றிபெற வேண்டும் எனும் எண்ணத்தோடு செல்வாயாக!” என்றான் அக்ககுமாரனிடம்.

    அன்னதாம் அச்சொல் கேட்ட சாரதிஐய கேண்மோ
    இன்னதாம் என்னல் ஆமோ உலகியல் இகழல்அம்மா
    மன்னனோடு எதிர்ந்தவாலி குரங்குஎன்றால் மற்றும் உண்டோ
    சொன்னது துணிவில்கொண்டு சேறிஎன்று உணரச் சொன்னான்.
    (கம்ப: அக்ககுமாரன் வதைப் படலம் – 5689)

    இராவணன் வாலியின் வாலில் சிறைப்பட்டதைக் குறிப்பாலுணர்த்திக் குரங்கு ஏளனத்துக்கு உரியதன்று என்பதை அக்ககுமாரனுக்கு உணர்த்திய தேர்ப்பாகனின் நுண்ணறிவு பாராட்டுதற்குரியது.

    சாரதியின் சொற்களால் சீண்டப்பெற்ற அக்ககுமாரன், மூவுலகிலுள்ள குரக்கினத்தையும் பூண்டோடு அழிப்பதாய்ச் சூளுரைத்துப் போரில் இறங்கினான்.

    அனுமனுக்கும் அக்ககுமாரனின் படைகளுக்கும் கடும்போர் நடந்தது. ஆயிரக்கணக்கான வீரர்களை மறலிக்கு விருந்தாக்கிய மாருதி, அக்ககுமாரனோடு நேரடிப் போரில் இறங்கினான். அவர்களின் போரைக் காணும் ஆவலில் தேவர்களும் வானில்வந்து கூடினர். கண்டவர் மருளும் வண்ணம் நிகழ்ந்த அப்போரின் முடிவில் அக்ககுமாரனைத் தன் வாலில் கட்டிய அனுமன், அவ் அரக்கனின் பற்கள் உதிரும்படிக் கன்னத்தில் அறைந்து, மேகத்திடமிருந்து புறப்படும் மின்னல்கூட்டங்கள் கீழே விழுவதுபோல் அவன் காதிலுள்ள குண்டலங்களிலிருந்த இரத்தினங்கள் அழிந்துசிந்த, குகையினிடத்துப் பாம்பு தொங்குவதுபோல் அவனுடைய குடல்கள் வெளியே தொங்க, வயிரம்போன்ற உறுதியான தன் கையால் அவனைக் குத்தி ஒருபுறத்தே குதித்தான். குருதிவெள்ளம் தரையில் ஓட அதில் அக்ககுமாரனை வீழ்த்தி, அவனைத் தன்னிரு கைகளாலும் தேய்த்து உருத்தெரியாமல் ஆக்கி அனுமன் அழித்ததைக் கண்டு எஞ்சியிருந்த அரக்கர்படை அஞ்சி ஓடியது.  

    இராவணனிடம் காவல்வீரர்களாய்ப் பணிபுரிந்த விண்ணவர்கள் அக்ககுமாரனின் மரணத்தை அவனிடம் தெரிவித்தனர். அதனை இராவணனின் அருகிருந்து கேட்ட அக்ககுமாரனின் தாயும் மயன் எனும் அசுரச் சிற்பியின் மகளுமான மண்டோதரி, கயல்மீன் போன்று மதர்த்திருக்கும் தன் கண்கள் இரண்டும் நீர் சிந்தவும், காளமேகத்தை ஒத்த முறுக்கிவிட்ட கூந்தல் மண்ணிலுள்ள புழுதியில் புரளவும், பிரமதேவன் மகனாகிய புலத்திய முனிவரின் மகனாகிய விச்ரவஸ் என்பவரது மகனாகிய இராவணனின் பாதங்களில் வீழ்ந்து வயிற்றில் அடித்துக்கொண்டு கதறிப் புலம்பினாள். 

    கயல்மகிழ் கண்இணை கலுழி கான்றுஉக
    புயல்மகிழ் புரிகுழல் பொடி அளாவுற
    அயன்மகன் மகன்மகன் அடியின் வீழ்ந்தனள்

    மயன்மகள் வயிறுஅலைத்து அலறி மாழ்கினாள். (கம்ப: அக்ககுமாரன் வதைப் படலம் – 5715)

    அக்ககுமாரனைப் பெற்றவள் அல்லவா? அதனால்தான் அவனைப் பெற்ற வயிற்றில் அடித்துக்கொண்டு அந்தப் பெருந்துயரத்தைத் தாங்கமாட்டாமல் அழுதாள் அந்த அபலை.

    தன் இளவல் இறந்த செய்தி அறிந்த மேகநாதன் (இந்திரசித்து), போருக்கு ஆயத்தமானான். தம்பியை நினைக்குந்தொறும் அவன் கண்கள் நீரைப் பொழிந்தன. கோபத்தோடு தன் வில்லைப் பார்த்து, ”கொம்புகளில் தாவும் ஒரு குரங்கால் என் தம்பியா அழிந்தான்? இல்லை…இராவணனின் புகழன்றோ அழிந்தது!” என்றுகூறி வருந்தியவன் இராவணனைக் காண அவன் அரண்மனைக்கு விரைந்து வந்தான்.

    அழுத கண்களோடு தந்தையின் இணையடி தொழுதவன், ”தந்தையே! நீ ஆலோசனை இல்லாமல் செயலாற்றுகின்றாய்; பின்பு அதற்காக வருந்துகின்றாய். கிங்கரர்கள், சம்புமாலி, பஞ்சசேனாபதிகள் என்று போருக்குச் சென்ற வீரர்களும் அவர்களோடு சென்ற சேனையும் திரும்பவில்லை எனும்போது அவர்களை வென்றது வெறும் குரங்கு என்று நாம் சொல்லலாமா? சிவன் பிரமன் திருமால் எனப்படும் மும்மூர்த்திகளின் வடிவே அக்குரங்கு என்று நாம் கருதவேண்டும்.” என்றான் இராவணனிடம்.

    கிங்கரர் சம்புமாலி கேடுஇலா ஐவர்என்று இப்
    பைங்கழல் அரக்கரோடும் உடன்சென்ற பகுதிச்சேனை
    இங்குஒரு பேரும்மீண்டார் இல்லையேல் குரங்குஅது எந்தாய்
    சங்கரன் அயன்மால் என்பார்தாம் எனும் தகையதுஆமே.
    (கம்ப: பாசப் படலம் – 5726)

    ”ஆயினும் எந்தையே கவலைப்பட வேண்டாம்! ஆற்றல்மிகு அக்குரங்கை நான் பற்றிவருவேன்” என்றுரைத்துப் போருக்குப் புறப்பட்டான் இந்திரசித்து. அவனோடு சென்று அனுமனை எதிர்த்த அலகிலா அரக்கர்கள் பிணங்களாய்க் குவிந்தனர்; குருதி, கடலாய் ஓடியது. போரில் வருத்தமென்பதே அறியாத மேகநாதன், ”ஆற்றலாளர்களான அரக்கர்கள் அனைவரும் போரில் மாய்ந்தனர். இவர்களை எதிர்த்துவென்றதோ ஒரே ஒரு குரங்கு” என்றெண்ணி ஏக்கம் கொண்டவனாய், ”இனி, இராமன் மற்றுமுள்ள வானரப் படைகளோடு வந்து எதிர்த்தால் எப்படை கொண்டு அவனை வெல்வது?” என்று சிந்தித்தான்.

    தேரில்வரும் இந்திரசித்தை நோக்கிய அனுமன், ”இவன் இந்திரசித்தனே” எனத் தெளிந்தான். அடுத்து அனுமனுக்கும் இந்திரசித்துக்கும் கடும்போர் தொடங்கிற்று. போரில் தேரினை இழந்த இந்திரசித்து, மின்னல் வேகத்தில் வானத்தை அடைந்து அங்கிருந்து அயன்படையாகிய பிரம்மாத்திரத்தை மனத்தால் பூசித்து, அதனைத் தன் தடக்கையில் ஏந்தி அனுமன் தோள்களைக் குறிவைத்து எய்தான். பாய்ந்துசென்ற அவ் அத்திரம் அனுமனின் தோள்களை இறுகப் பிணிக்கவே அவன் கீழே சாய்ந்தான்.

    தன்னைப் பிணித்திருப்பது பிரம்மாத்திரம் என்றறிந்த அனுமன் அதனை அவமதித்தல் அழகன்று என்றெண்ணிக் கண்ணை மூடிக்கொண்டு அதற்குக் கட்டுப்பட்டவன் போலிருந்தான். அனுமனின் வலிமை அடங்கியது என்று கருதிய இந்திரசித்து அவனருகில் வந்தான்.

    வர பலத்தால் பிரம்மாத்திரத்தை வீழ்த்தும் ஆற்றல் அனுமனுக்கிருந்தும் பிரம்மதேவனைப் பெருமைப்படுத்தவேண்டும் எனும் நோக்கில் அதற்குக் கட்டுப்பட்டிருந்தான் அவன். அத்தோடு இராவணனிடம் நேரடியாகத் தான் கூறவிரும்பும் கருத்துக்களைத் தெரிவிக்க இவ்வாறு பிணிப்புண்டு செல்வது உதவியாய் இருக்கும் என்ற எண்ணமும் அதற்குக் காரணம்.

    இதுவரை அனுமனுக்கு அஞ்சி ஒளிந்துநின்ற அரக்கர்கள் அவன் பிரம்மாத்திரத்தால் கட்டப்பட்டிருக்கின்றான் என்பதைக் கண்டதும் துணிவுகொண்டு அவனருகில் வந்து, அவன் உடலைப் பிணித்திருந்த அவ் அத்திரத்தைப் பற்றியிழுத்து ஆரவாரித்தனர்.

    அனுமனைக் கட்டியிழுத்துக்கொண்டு இலங்கை வீதிகளில் சென்றனர் அரக்கர்கள். இந்திரசித்து அனுப்பிய தூதர்கள் இராவணனிடம் சென்று, ”நும் மகன் இந்திரசித்து ஏவிய அயன்படையால் வானரம் கட்டுண்டது” என்ற நற்செய்தியைத் தெரிவித்தனர்.

    அதேநேரத்தில் அனுமன் பிணிப்புண்ட செய்தியைத் திரிசடை வாயிலாய் அறிந்து கலங்கிய சீதை, “இராமனது திருவாழியைக் காட்டிப் போகவிருந்த என்னுயிரை அழியாது காத்தாய்; என் அரிய உயிரை அழியாது காத்த உன்னை ஊழிக் காலம் வாழ்வாய் என ஆசியுரைத்தேன். அது பொய்க்காது உன் வாழ்நாளை நீட்டிக்கும். உன் மலைபோன்ற தோள்களின் வலிமையைப் போரில் காட்டிய நீ, முடிவில் சிறைப்பட்டு அரும்பழியை உண்டாக்கிக் கொண்டாயே!” என்று வருந்திப் புலம்பினாள்.

    ஆழிகாட்டி என் ஆர்உயிர் காட்டினாய்க்கு
    ஊழிகாட்டுவென் என்று உரைத்தேன் அது
    வாழி காட்டும்என்று உண்டு உன்வரைப் புயப்
    பாழிகாட்டி அரும் பழி காட்டினாய்.
    (கம்ப: பிணிவீட்டுப் படலம் – 5838)

    ”இராமன் என்னை மீட்டுச் செல்ல வருவான் என்று நம்பிக்கை ஊட்டினாயே; இப்போது அதனை நீயே அழித்துவிட்டாயே!” என்றுரைத்து மூர்ச்சையானாள்  சீதை.

    பிணிப்புண்ட அனுமனை இழுத்துச் சென்ற அரக்கர் குழாம், இராவணன் அரண்மனையை அடைந்தது. அங்கே சிவப்புநிறம் செறிந்த ஆடை அரைக் கச்சுடன் விளங்க, வரிசையாய்க் கோக்கப்பெற்ற முத்துக்களாலான மாலை முதலிய அணிகள் முழுநிலவினது ஒளியைப் பரப்ப வீற்றிருந்த இராவணனின் ஓலக்கத் தோற்றமானது, இருளானது செவ்வானத்தை ஆடையாய் உடுத்திக்கொண்டு, உடுக்களை அணிகலன்களாய் அணிந்துகொண்டு சந்திரனாகிய வெண்கொற்றக் குடையின்கீழ் கொலுவீற்றிருந்தது போலிருந்தது என்று வருணிக்கின்றார் கற்பனை வல்லாரான கம்பர்.

    சிந்துராகத்தின் செறிதுகில் கச்சொடு செறிய
    பந்தி வெண்முத்தின் அணிகலன் முழுநிலாப் பரப்ப
    இந்து வெண்குடை நீழலில் தாரகைஇனம் பூண்டு
    அந்தி வான்உடுத்து அல்லு வீற்றிருந்ததாம் என்ன.
    (கம்ப: பிணிவீட்டுப் படலம் – 5847)

    கொலுவீற்றிருந்த இராவணனைக் கண்டான் அனுமன். அவனுள் சினம் பொங்கிற்று. இவன் காதல் மகளிர் அஞ்சி ஓடும்படி, இவனோடு போரிட்டு, இவன் தலைகளைத் திசைக்கொன்றாய் உருட்டித் தள்ளினால் என்ன? எனும் எண்ணம் அனுமனுள் கிளர்ந்தது. மீண்டும் சிந்தித்தவன், ”இந்த இராவணனை அவ்வளவு எளிதில் வெல்ல இயலாது! இவனோடு போர்புரிந்து காலத்தைக் கழித்துக்கொண்டிருந்தேனானால் இன்னும் ஒரு மாதமே பிழைத்திருப்பேன் என்றுரைத்த சீதைக்கு நானே அழிவைத் தேடுபவன் ஆவேன்; எனவே தூதனாய் இருப்பதே நன்று” என்று முடிவுசெய்து இராவணன் அருகில் சென்று நின்றான். 

    இராவணனை வணங்கிய இந்திரசித்து, ”குரங்கு வடிவிலுள்ள ஆண்மையாளனான இவன், சிவனைப் போலவும் திருமாலைப் போலவும் போர்செய்த சிறந்த வீரன்” என்று அனுமனை அவன் தகுதிக்கேற்ற வகையில் சிறப்புற இராவணனுக்கு அறிமுகப்படுத்தினான். அனுமனைத் தன் வீரமகன் புகழ்கின்றானே என்று சினமுறவில்லை இராவணன்; ஏனெனில், அவனே அனுமனின் பெருவலியை இதுவரை நடந்த போர்நிகழ்வுகளால் நன்கு அறிந்துகொண்டிருந்தான்.

    இந்திரசித்தின் மொழிகளைக் கேட்டபின்பு அனுமனைச் சீற்றத்தோடு நோக்கிய இராவணன், “சக்கராயுதம் ஏந்திய திருமாலோ? வச்சிராயுதம் ஏந்திய இந்திரனோ? நீண்ட சூலாயுதத்தை உடைய சிவபெருமானோ? தாமரையில் தோன்றிய பிரம்மதேவனோ? அஞ்சாமையும் பல தலைகளும் உடையவனாய் பூமியைத் தாங்கிக்கொண்டிருக்கும் ஆதிசேடனோ? யார் நீ? இலங்கையைப் பொருதழிக்கும் பொருட்டு உன் இயற்கை வடிவை மறைத்துக்கொண்டு வந்திருக்கின்றாய். உன்னை இங்கே ஏவியவர் யார்? உண்மையைச் சொல்!” என்று அதட்டிக் கேட்கவும்,
    ”முதலும் நடுவும் முடிவுமில்லாது, இறப்பு நிகழ்வு எதிர்வு எனும் காலக் கணக்குகளுக்கு அப்பாற்பட்டு, சூலம் சக்கரம் சங்கு கரகம் ஆகியவற்றை விட்டு, ஆலிலை தாமரை கயிலாயம் ஆகிய தொன்மையான இடங்களையும்விட்டு அயோத்தியில் சக்கரவர்த்தித் திருமகனாய்த் தோன்றிய இராமனுக்கு அடிமைத்தொழில் செய்பவன் நான்; அனுமன் என் பெயர். நன்னுதலாள் சீதையைத் தேடிக்கொண்டு நாற்பெரும் திசைகளிலும் சென்ற தலைவர்களுள் தென்திசையில் வந்த சேனைத் தலைவனான வாலி மகன் அங்கதனின் தூதனாக நான் ஒருவன் இங்கு வந்தேன்” என்று தன்னைப் பற்றியும் தான் வந்ததன் நோக்கத்தைப் பற்றியும் தெளிவாய் இராவணனுக்குத் தெரிவித்தான் அனுமன்.

    [தொடரும்]

    *****

    கட்டுரைக்குத் துணைசெய்தவை:

    1.கம்பராமாயணம் – கோவை கம்பன் அறநிலை விளக்க உரைக்குழு.

    2.கம்பரும் வால்மீகியும் – பேரா. அ. பாண்டுரங்கன், எம்.ஏ., பிஎச்.டி., டிப் (மொழி), தமிழரங்கம் பதிப்பு, புதுவை – 605 008.

    3.கம்பர் கருவூலம் – தொகுப்பாசிரியர், பேரா. மு. சாயபு மரைக்காயர், கங்கை புத்தக நிலையம், சென்னை – 600 017.

    4.கம்பனில் மக்கள்குரல் – பேரா. ந. சுப்புரெட்டியார், வானதி பதிப்பகம், சென்னை – 17.

     

    Share
  • படித்தேன்! சுவைத்தேன்! பகிர்ந்தேன்! – 8

    படித்தேன்! சுவைத்தேன்! பகிர்ந்தேன்! – 8

    முனைவர். ச.சுப்பிரமணியன்

    ‘வெற்றிப் பேரொளி’ பாவலனுக்கும் உண்டு ஓர் பாடாண் திணை! 

    முன்னுரை

    பொதுவாகப் பாடாண்திணைப் பாடல்களும் கையறுநிலைப் பாடல்களும் மன்னனை நோக்கியனவாகவே அமையும்.! மிகச் சிறிய அளவில் கையறு நிலைப்பாடல்கள் பாவலரை நோக்கி அமைவதுண்டு. மன்னனையே பாடிய புலவர்கள் தம்மையொத்த புலவர்களையும் பாடுவது அரிது. அவர்கள் மறைவுக்குப் பின் கவிஞன் ஒருவனுக்காக மற்றொரு கவிஞன் பாடும் கையறுநிலையும் மிக அரிதான நிகழ்வாகவே கருதப்படுகிறது.  கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்து உயிர்துறந்த காலை, கண்ணகனார், பொன்முடியார் ஆகிய சான்றோர்கள் பிசிராந்தையாரின் பெருமையை அவர்தம் இறுதி நொடியில் பாடியிருக்கிறார்கள். அதற்குப் கவிமணி சிலருக்குச் சில கையறுநிலைகளைப் பாடியிருக்கிறார். பின்னாலே பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்திற்காகக் கண்ணதாசன் கையறுநிலை பாடினார். ஆனால் கண்ணதாசன் மறைவுக்காக யாரும் கையறுநிலை பாடியதாகத் தெரியவில்லை. பாடியிருந்தாலும் அது மக்களிடையே செல்வாக்கு பெற்றிருந்ததா என்பது ஐயமே. ‘‘தமிழாற்றுப்படை’ என்னும் நூலில் திரு வைரமுத்து, கூறியுள்ள கருத்துக்களும் புதுக்கவிதை வடிவத்தில் திரு வாலி எழுதிய அஞ்சலிக் கவிதை வரிகளையும் கையறுநிலை அடர்த்தி கொண்டவையெனக் கருதுதற்குத் தயக்கம் ஏற்படுகிறது.   கவிஞன் கண் மூடியபின் பாடப்படும் கையறு நிலைக்கே இந்தக் கதி என்றால் பாடாண் திணை பற்றிச் சொல்லவேண்டியதே இலலை.

    இந்தக் கட்டுரையில் பாடாண்திணை

    பாடுதலாகிய தொழிலையும் பாடப்படும் ஆண் மகனையும் குறிக்காது அவனுடைய பெருமைக்குரிய ஒழுக்கமே பாடுபொருளாவதால் இதற்குப் பாடாண்திணை எனப்பெயராயிற்று.. திணையாகிய இந்த ஒழுக்கம் இந்தக் கட்டுரையில் கவித்திறன் என்ற பொருளில் பயன்படுத்தப்படுகிறது. அதாவது வாழுகின்ற படைப்பாளன் ஒருவனின் கவித்திறத்தையும் பண்பாட்டுக் கூறுகளையும் மற்றொரு பாவலன் பாடுகிற பாடாண் திணயாகக் கொள்ளப்படுகிறது. கவிஞன் ஒருவனை மற்றொரு கவிஞன் பண்பாடு கருதிப் பாராட்டுவதே அரிதானதொரு சமுதாயச் சூழலில் அவனுடைய கவித்திறத்தையே பாடுபொருளாக்குவது  அரிதினும் அரிதல்லவா? ஒரு முகநூல் பதிவில் நான் கண்ட கவிதை பற்றிய திறனாய்வாக இது அமைகிறது.

    கவிதையைத் தேடும் கண்கள்

    கலம்பகம் பார்த்து ஒரு கலம்பகமும் அந்தாதி பார்த்து ஒரு அந்தாதியும் பிள்ளைத்தமிழ் பார்த்து ஒரு பிள்ளைத்தமிழும் எழுதினார்கள் எழுதியதற்குக் காரணம் கவித்துவம் பொங்கியது என்றார்கள். என்னவாயிற்று?.  எத்தனைக் கலம்பகம் நிற்கின்றன?  எத்தனை அந்தாதி நிற்கின்றன? எத்தனைப் பிள்ளைத்தமிழ் நிற்கின்றன? ஒரு நந்திக்கலம்பகம்! ஒரு அபிராமி அந்தாதி! ஒரு மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்! மற்றவை என்ன ஆயின? எனவே கவித்துவம் என்பது ஒரு முழு இலக்கியத்தில்தான அமைந்திருக்கும் என்று எண்ணுவதே சிந்தனைப் பிழை! நான் அடிக்கடி எழுதி வருகிறேன். சில வெற்றசைகளில் கூட கவித்துவம் அதாவது கவிஞனின் உணர்ச்சி வெளிப்பட வாய்ப்புண்டு. உணர்ச்சி ஆழமாக இருந்தால் போதும்! கவிதை ஆழமாகவே பதிவாகும்! அதன் வெளிபபாடும் உறுதியாக இருக்கும்.

    பாடுபொருளா? படைப்பாற்றலா?

    பாடுபொருளால் படைபபாளன் சிறக்கிறானா? படைப்புத் திறமையால் பாடுபொருள் சிறககிறதா? இது ஒரு பட்டிமன்ற வினா! இரண்டும் சிறக்கிற நேர்வுகள் மிகக் குறைவு. திருக்குறளால் திருவள்ளுவர் சிறக்கிறார். திருவள்ளுவரால் திருக்குறள் சிறக்கிறது. ஆனால் இராமகாதையால் கம்பன் சிறக்கிறானா? கம்பனால் இராமகாதை சிறக்கிறதா என்றால் கம்பனால்தான் இராமகாதை சிறக்கிறது என்பது அனைவரும் அறிந்த உண்மை. காரணம் இராமகாதையை யார் யாரோ எழுதியிருக்கிறார்கள். ஆழ்வார்கள் பாடியிருக்கிறார்கள். இந்தியத் துணைக்கண்டத்தில் பெரும்பாலும் அனைத்து மொழிகளிலும் இராமாயணம் பாடப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது கம்போடியா உள்ளிட்ட நாடுகளிலும் இராமகாதையின சாரம் உணரப்படுவதாக அறிகிறோம். ஆனால் நம்முடைய தமிழில் கம்பனின் கவியாளுமைக்குமுன் மற்ற படைப்புக்கள் மங்கி ஒளியிழந்துவிடுகின்றன என்பதே  அறிஞர் கருத்தாக உள்ளது. பாரதியின் பாஞ்சாலி சபதம் பாரதக் கதைக்குள் புத்தொளி பாய்ச்சுவதை உணர வேண்டும். வெற்றிப் பேரொளியின் கவிதையில் திணையும் சிறக்கிறது. பாடியவரும் சிறக்கிறார்!

    படைப்பாளன் நிலைப்பது எப்படி?

    பாடுபொருள்களும் படைப்பாளர்களும் எண்ணிக்கை முரணில் அமைந்திருக்கிறார்கள். அதாவது படைப்பாளர்களைவிட பாடுபொருள் எண்ணிக்கையில் குறைவு. சான்றாகக் கறபு என்னும் பாடுபொருள் கபிலரால் பாடப்ட்டுள்ளது. இளங்கோவால் பாடப்பட்டுள்ளது. கம்பனால் பாடப்பட்டுள்ளது. பாரதியால் பாடப்பட்டுள்ளது. மயூரம் வேதநாயகராலும் பாடப்பட்டுள்ளது. ஆனால் அது யாருடைய படைப்பில் சிறந்து விளங்குகிற்து? இந்த வினாவிற்கு விடை நுகர்வோருக்கு ஏற்ற வகையில் மாறுபடலாம். பொதுவான கருத்துநிலையில் இளங்கோ முதலிடத்தைப் பெறுகிறார். இது கவிஞர்களின் ஒப்புமையால் வந்ததன்று. கவிதைகளின் தாக்கத்தால் ஏற்பட்ட அனுபவ விளைவு!.

    கவிஞனைப் பாடுபொருளாக்கிய கவிஞன்

    ‘கம்பன் என்றொரு மானுடன் வாழ்ந்ததும்’ என்பார் பாரதி! ஆனால் இளங்கோவைச் சொல்லுகிறபோது ‘சேரன் தம்பி சிலம்பை இசைத்ததும்’ என்பார். .இறைவனை மனிதனாக்கிப் பாடியதால் வந்த பெருமை முந்தையது. பத்தினிப் பெருமையைப் பாட்டில் சொன்னதால் வந்த பெருமை பிந்தையது. முன்னதில் படைப்பாளனும் பின்னதில் பாடுபொருளும் சிறந்து நிற்பதை உணரலாம்.  கவிஞர் வசந்தராசன் சென்னை மாதவரத்தில் பால்பண்ணைக்கு இணையாகக் கவிப்பண்ணை நடத்திக் கொண்டுவரும் கவிஞர். கவிஞர் வெற்றிப்போரொளி தஞ்சை சீனிவாசநகரில் பேரன் பேத்தியரைக் கவிதைகளோடும் கொஞ்சி விளையாடும் எழுபது வயது இளைஞர். முன்னவர் உரத்தொழிற்சாலையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். பின்னவர் தொடக்கப்பள்ளித் தலைமையாசிரியராகப் பணியாற்றி அந்தப் பணியில் இருந்து மட்டும் ஓய்வு பெற்றவர். முகநூல் எழுத்துக்களால் எனக்கு இனிப்பான இவர்களை. நான் நேரில் கண்டதே இல்லை என்பது உண்மை. தங்கத் துண்டுகளைச் செம்பினால் பற்றாசிட்டு இணைப்பதைப் போல இந்தக் கட்டுரையில் இவர்களை நான் இணைக்க முயன்றிருக்கிறேன்.

    கவிக்கோவின் செங்கோல் 

    தமிழ்நாட்டுக் கவிஞர்கள் தங்கள் பெயர்களுக்கு முன்னால் வைத்துக் கொள்ளும் அல்லது போட்டுக் கொள்ளும பட்டங்களில் மன்னராட்சி ‘வாடை’ அடிப்பதை அனைவரும் உணரலாம். இது மக்களாட்சிக் காலம்! மன்னராட்சிக் காலத்தில் கூட வெண்பாவிற் புகழேந்தி என்றுதான் சொன்னார்கள். தற்காலத்தில் ஒருவர் ‘வெண்பாப்புலி’ என்று பயமுறுத்துகிறார். ஒருவர் ‘கவிப்பேரரசு’ என்கிறார். மற்றொருவர் அடக்கமாகச் சொல்வதாக நினைத்துக் கொண்டு ‘கவியரசு’ என்கிறார். இன்னொருவர் ‘அரிமாப் பாவலர்’ என்கிறார். வேறொருவர் ‘கவிக்கோ’ என்கிறார். அன்பின் காரணமாகச் சமுதாய மக்கள் தருகின்ற பட்டங்களை விமர்சிப்பது நமது நோக்கமன்று. இதுபற்றிய ஒரு விழிப்புணர்வைத் தூண்டுவதுதான் நோக்கம். எனக்குத் தெரிநதவரை பாரதியாருக்கு மகாகவி என்ற பட்டமும் பாரதிதாசனுக்குப புரட்சிக்கவிஞர் என்ற பட்டமும் சுரதாவிற்கு உவமைக் கவிஞர் என்ற பட்டமும் பொருந்திவருவதற்கு அவர்தம் படைப்புக்களே காரணம். ஒரு படைப்பைக் கூட முழுப்படைப்பாய்த் தரவியலாதவர்கள் போட்டுக் கொள்ளும் பட்டங்கள் பட்டங்களாகவே பறக்கின்றன.  இந்தப் பாடாண் திணைப் பாட்டின நாயகனாக இருப்பவர் கவிக்கோ என்ற பட்டத்துக்கு உரியவர் தம்பி வசநதராசன் அவர்கள். அவருக்கு அன்பர்கள் தந்த பட்டம் அது. அவருடைய படைப்புக்களை நான் ஆழ்ந்து நோக்கிப் பயின்று வருகிறேன். அந்தப் பட்டத்தைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்ற முனைப்பில் அவர் தொடர்ந்து எழுதிவருவது நெஞ்சிற்கு இனிமையையும் அமைதியையும் தருகிறது, இப்படித்தான் கவிஞர்கள் இருக்க வேண்டும். யாப்பினைப் பொருத்தவரையில் வசந்தராசன் விருத்தங்களில் ஒன்றிரண்டு வகைகள், வெண்பாக்களில் நேரிசை வெண்பாக்கள், எனத் தம்  வடிவ எல்லையை வரையறுத்துக் கொண்டிருக்கிறார். எண்ணங்களைப் பதிவு செய்வதில் சீர்பிரிப்பு மிக முக்கியமானது. சொற்களை அறுத்துக் கட்டத் தெரிந்திருக்க வேண்டும். அவர்தான் திணை நாயகர். தம் நாயகரைப் பற்றிய தமது பாடலில் பேரொளி இப்படி எழுதுகிறார்.

    “இனிக்கின்ற செங்கரும்பின் சாறு! “

    கவிதையின்பத்தைச் செங்கரும்புச் சாறாக உருவகம் செய்வதில் சில நுண்ணியங்களைக் காணுகிறேன்.  சாறு பருகினால்தான் சுவை தெரியும். கண்ணால் பார்ப்பதாலோ பிறர் அருந்துவதைக் காண்பதாலோ அதன் இனிப்புச் சுவையை உணர  முடியாது. ‘கொங்கு நாட்டுச் செங்கரும்பு’ என்பது செங்கரும்பின் விளைநிலம் பற்றிய சொல்லாடல். இந்தத் தொடரில் இருக்கின்ற இனிக்கின்ற என்னும் பெயரெச்சத்தைக் ‘கரும்பு’ என்பதோடும் ‘சாறு’ என்பதோடும் பொருத்தி ‘இனிககின்ற கரும்பு’ ‘இனிக்கின்ற சாறு’ எனப் பொருளுணர வேண்டும். ஒரே பொருளில் இருவகை உவமங்களைப் பொருத்திகாட்டும் நுண்ணியம் பாவேந்தருக்கு வெகு இயல்பு!

    “உணவுண்ணச் சென்றாள் அப்பம்
    உண்டனள் சீனி யோடு
    தணல் நிற மாம்பழத்தில்
    தமிழ்நிகர் சுவையைக் கண்டாள்
    மணவாளன் அருமை பற்றி
    மனம் ஒரு கேள்வி கேட்க
    இணையில்லா அவன் அன்புக்கு
    ஈடாமோ இவைகள் என்றாள்”

    என்று தலைவி உணவுண்ணச் சென்ற காட்சியைச் சித்திரிக்கிறார். தலைவி உண்டது மாம்பழம்.  மாம்பழத்தைக்  கண்ணால் நிறத்தைக் காணுகிறாள். உண்டு சுவையை உணர்கிறாள். தணல் நிற மாம்பழம் என்றதால் உரு உவமை. தமிழ் நிகர் சுவை என்றதால் பண்புவமை. இத்துடன் இன்னொரு உவமத்தையும் வெகுநுட்பமாகக் கையாள்கிறார். கணவன் கண்ணுக்கு அழகானவன். மனத்திற்கு இனிமையானவன். அந்த அழகும் இனிமையும் இந்த மாம்பழத்திற்குக் கிடையாதாம். அணி வேற்றுமையாக இருந்தாலும் மாம்பழத்தின் உருவும் பண்பும் கணவனுக்கும் பொருந்துமாறு உவமம் புணர்த்தியிருக்கும் நுண்ணியத்தைப் பேரொளியின் படைப்பிலும் பொருததிச் சுவைக்கலாம். ‘செங்கரும்பு’ என்பது கவிதையின் புறக்கூறுகளுக்கும் ‘சாறு’ என்பது கவிதைச் சுவையாகிய  அகக்கூறுக்குமான உவமம் என்பதை உணர்ந்து அனுபவிக்க இயலும். இனி கரும்புக்குக் கொடுக்கப்பட்டுள்ள ‘செம்மை’ என்னும் அடைமொழி ‘செவ்விளநீர்’ ‘செங்காந்தள்’ என்பதுபோல நிறம்பற்றியதாக இருப்பினும் அது இனிமையை உணர்த்தியதாகவும் கொள்ளலாம்,.  ‘செந்நா’ என்றவழி நிறத்தைக் குறிக்காது பொய்கூறாப் பண்பைக் குறிப்பது போல. கரும்பு பற்களால் நூறுகிறபோதும் சாறாக அருந்துகிறபோதும் இனிமை என்பது கருத்து. வசநதராசன் பாடல்களைச் சொல்லிச் சுவைக்கிறபோதும், எண்ணி மகிழ்கிறபோதும இனிக்கின்றன என்பது மையக்கருத்து!

    யாப்புத் தோப்பு!

    கவிதையில் ஒருவரைக் கவர்வது இதுதான் என்று வரையறுக்க இயலாது. யாப்பினைக் கண்டு மலைப்பார் உண்டு. கற்பனையை வியப்பார் உண்டு. கருத்துக்களை நயப்பார் உண்டு. உணர்ச்சி கண்டு உருகுவார்  உண்டு. வசந்தராசன் கவிதைகளின் யாப்பினாலும் கவரப் பெற்றிருக்கிறார் வெற்றிப் பேரொளி

    “யாப்பில்
    கனிச்சுளைகள் பந்தி வைக்கும் தோப்பு !

    தமிழ்க்கவிதைகள் எந்த யாப்பில் அமைந்திருந்தாலும் பெரும்பாலும் அவை  காய்ச்சீர் கனிச்சீர் விரவப்பெற்றே அமைந்துள்ளன.  வாய்பாட்டில் சொற்களை அமைத்துத் திணறுவார் நடுவே சீர்களில் வாய்பாட்டைக் காணும் நுண்ணியம் தெரிந்தவர் வசந்தராசன் ‘யாப்பில் வந்தடங்கும வார்த்தைகளே கவிதையாகும்’ என்பார் சுரதா. சொற்களை அடக்கியாள்பவனுடைய கவிதை  வாழா வெடடியாகிவிடும். சீர்களோடு உறவாடுபவனை விட்டுக் கவிதைக் காதலி பிரியமாட்டாள். தான் சரியாகக் கையாளப்படுகிறோமா என்னுங் கவலை ஒவ்வொரு சீர்களுக்கும் இருப்பதைக் கவிதைக் கணவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். வசந்தராசன் புரிந்து கொண்டார் என்பதைத் தானும் புரிந்து கொண்டு நமக்கும் புரிய வைத்திருக்கிறார் வெற்றிப் பேரொளி.

    பழந்தமிழார் கவிக்கோ

    இந்தத் தொடரில் பழந்தமிழர் என்பதே ‘பழந்தமிழார்’ என்று பிசகியிருக்மோ என்னும் ஐயம் சிலருக்கு வரக்கூடும். வசந்தராசன் மரபு தழுவிய கவிஞர். அவரைப் போலவே வெற்றிப் பேரொளியும் மரபு தழுவிய கவிஞர். சில நேர்வுகளில் நடைமேடைக்காகத் தண்டவாளம் மாறினாலும் மீண்டும் தலைவழிக்கே (MAIN LINE) வந்து விடுவார். ஆர்தல் – நிறைதல் தமிழார் கவிக்கோ என்றால் தமிழ்க்கூறுகளால் நிறையப்பெற்றவர் கவிக்கோ என்று பொருள்.

    1. ‘‘நெஞ்சில் இளநீரைச் சுமக்கின்ற அன்பு’
    2. “ஈரக் கால்வாய்கள் கண்ணிரண்டும்”
    3. ‘வாழத்தும் போது தலைமடையின் பெருக்கெடுப்பு’
    4. நனைந்தோரெல்லாம் பனிக்காலை பரங்கிப்பூக்கோல வீதி!

    என்றெல்லாம பாட்டுடைத் தலைவனைப் பாடுகிறார் பேரொளியார். “பாடாண்” என்பது பாடுதல் வினையையும் பாடப்படும்  ஆண்மகனையும் நோக்காது அவனது ஒழுகலாறாகிய திணையுணரத்தினமையின் வினைத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை’ என விளக்கம் தருவார் நச்சினார்க்கினியர்.  பாட்டுடைத் தலைவனின் பன்முகப் பண்பு நலன்களையும் தொகுத்துக் கூறி நச்சினார்க்கினியரின் விளக்கத்துக்கு இலக்கியம் செய்திருக்கிறார் பேரொளியார்.  இநத விருத்தத்தைக் ‘கவிக்கோவின் செங்கோல்’ என்று நிறைவு செய்திருக்கிறார்.  வேந்தர்கள் கையில் செங்கோல் இருக்கும். முறை செய்து மக்களைக் காப்பாற்றினால்தான் அது செங்கோல்!. இல்லாவிடின் அது கொடுங்கோல். வசந்தராசன் பாடல்களின் கவிதைக்குரிய அத்தனைப் பண்புகளும் நிறைந்து வழிவதால் அவர் கையில் இருப்பது செங்கோல் எனச் சொல்வதன் மூலம் கவிக்கோ என்பதை நியாயப்படுத்துகிறார்.  உண்மையை உரக்கச் சொல்லும் உரம் இது!.

    இனத்தோட்டக் காவல்காரன்

    பாடுபொருளில் ஒன்றிய மனம் மூளையிலிருந்து விலகித் தனித்துவமிக்க படைப்புலகில் சஞ்சாரம் செய்யப் புறப்பட்டுவிடும். கவியெழுதுகிற காலங்களில் கவிஞர் அனைவருக்குமான பொது நியதி. அனுபவம் இது. “நீல நெருக்கடியில் நெஞ்சு செலுததி நேரம் கழிவதினும் நினைப்பின்றியே சாலப் பலப்பல நற்பகற்கனவில் தன்னை மறந்த லயம் தன்னில் இருந்தேன்” என்று பாரதி பாடுவார். பேரொளியார் அடைந்த அத்தகைய மனநிலையைப் பின்வரும் வரிகள் உணர்த்துகின்றன. ஒரே சொல்லை வைத்துக் கொண்டு சில பேர் வித்தை காட்டுவார்கள். அந்த வித்தை காண்பார்தாம் புருவத்தை உயர்த்தக்கூடும். இதயத்தை அந்நியப்படுத்திவிடும்

    “தேரோட்டத் திருவிழாதான் கவிதை மன்றில்!
    தேனோட்டப் பெருவெள்ளம் புலமை யாற்றில்!

    வசந்தராசனின் கவித்ததிறனையும் புலமைத் திறனையும் இவ்வாறு சுட்டிச் செல்லும் பேரொளி, சோம்பல் முரிக்கும் கவிதைகளில் தீப்பாய்ச்ச வந்தவன் என்கிறார். பகுத்தறிவுச் சிந்தனையில் வளர்ந்த வசந்தராசன் தாய்மொழி தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் தமிழ் இனத்திற்கும் எத்தகைய பணிகளைச் செய்து வருகிறார் என்பதைக்

    குளிரோட்டக் கவியோட்ட வசந்த ராசன் !
    ஈரோட்டுப் படைவீட்டுக் களத்து வீரன் !
    இனத்தோட்ட வாசலிலே காவல் காரன்!

    என்னும் வரிகளால் எடுத்துக் காட்டுகிறார்  சங்க இலககியப் பாடாண்திணைப் பாடல்கள் மனனர்களைப் பற்றியே அமைந்து போனதால் வீரத்தினையும் பாராண்ட மன்னர்களின் பண்பு  நலன்களையுமே திணை என்னும் சொல்லால குறித்தனர். மக்களாட்சி மாண்புகள் மலிநதுள்ள தற்காலத்தில் அத்தகைய பாடுபொருள் கிட்டாது. கிடைக்காது. கிடைத்தாலும் மணக்காது! இன்றைக்கு ஒரு மாநிலத்து முதலமைச்சர் அடுத்த மாநிலத்தில் படையெடுக்க முடியாது. மன்னர்களின் கொடைப்பண்பு கூட அவர்கள் போரில் பெற்ற வெற்றியைச் சார்ந்தும் அதில் கொண்டு வரும் பொருளைக் கொண்டுமே அமைந்திருந்த காலம் அது. எனவே பாடாண் திணை என்பதன் பொருண்மை முற்றிலும் மாறுபட்டு நிற்கின்ற தற்காலத்தில் ஒப்பற்ற தனித்திறனும் அரிய ஒழுகலாறுகளும் பண்புநலன்களுமே பாடுபொருளாகக் கூடியன. பதவிகளுக்காகக் கட்சி மாறுபவர்களைப் பாடுவது பாடாண்திணை ஆகாது!. ஒழுக்கச் சிதைவோடு கூடிய எந்த மன்னனையும் தமிழ்க்கவிதை பாடியதில்லை!. மொழி, நாடு, இனம் என்னும் பாடுபொருள்களைத் தனித்துவமான கவிதைகளில் பாடும் வசந்தனுடைய தனித்திறனும் உயர் பண்புகளுமே பேரொளியின் பாடாண்திணை பாடலுக்கான உள்ளடக்கமாகத் திகழ்கின்றன.

    நிலைக்கின்ற மின்சொற்கள்

    ‘புறப்பொருள் வெண்பா மாலை’ என்று ஓர் இலக்கியம் தமிழில் உண்டு. வெண்பாக்களால் ;ஆன அந்த நூலில் ;அமைந்த வெணபாக்களுக்கு மின்னல் வெண்பாக்கள் என்றே பெயர். காரணம் அளவுக்கு அதிகமான  இனிப்பு. சுவையோ சுவை! புறப்பொருளுக்கான இலக்கணம் கூறும் நூலெனினும் முழுமையும் கற்பனையையே உள்ளடக்கமாகக் கொண்ட வெண்பாக்கள். இது பற்றிப் பேரொளி அறிந்திருப்பாரா என்பது நமக்குத் தெரியாது.

    காலத்தை வென்ற சொற்களும் தொடர்களும்

    கவிதைகளில் எலலாச் சொற்களும் நிலைதது விடாது என்பதும் சில சொற்களைக் காலம் நினைத்தாலும் அழிகக முடியாது என்பதும் பேரொளிக்கு நன்றாகத் தெரியும். காரணம் அவர் ஒரு கவிஞர். படைப்பாளி.  யாதும் ஊரே யாவரும் கேளிர் என்றவுடன் புறநானூற்றுப் பூங்குன்றன் நினைவில் வருவார். ‘நம்மை மறந்தாரை நாம் மறக்க மாடடோம்’ என்றவுடன் இலக்கியச் சுவைஞர்கள் அத்தனைப் பேரும் பூம்புகார் கடற்கரைக்குச் சென்றுவிடுவார்கள். ‘அண்ணலும் நோக்கினாள் அவளும் நோக்கினாள்’ என்றவுடன் முந்தைய வரிகள் தெரியாதவர்கூட சனகன் அரசவைக்குச் சென்றுவிடுவார்கள்! தருமததின் வாழ்வதனைச் சூது  கவ்வும்., தருமம் மறுபடி வெல்லும் என்றவுடன் பாரதி நினைவுக்கு வருவார்.. ‘தன்னைப் பழித்தவனைத் தாய்தடுத்தால் விட்டுவிடு தமிழைப் பழித்தவனைத் தாய்தடுத்தாலும் விடாதே!; என்றவுடன் இருமிப் படுத்தவனும் எழுந்துவிடுவான். ‘பார்ப்புகட்குக் குடைபிடிக்கும் பறவைத்தாய்’ என்றவுடன் வசந்தன் நினைவுக்கு வருவார்.

    1. ‘சீராட்ட மறந்ததனால் சிதறி விட்டோம்!’
    2. ‘போதிமர வேர் நெய்த தாடி வானம்’
    3. ‘உனைத்தொட்ட விரல் நுனியில் சூரியன்கள்’
    4. ‘ஞானச் செருக்குகளின் நாற்றங்கால்’
    5. ‘கோபுரங்கள் வயதுக்கு விதிவிலக்கு’

    என்பன போன்ற தொடர்களால் எதிர்காலத் தமிழக்கவிதைத் திறனாய்வுலகைத் தன் படைப்பு வலையில் சிக்கவைத்திருக்கிறார வசந்தராசன். தம்பி பேரொளி அதனைப் படம் பிடித்துக் காட்டுகிறார்

    “மின்னலுக்கு நிலையான வடிவ மில்லை!
    மின்சொற்கள் உன்சொற்கள் நிலைக்கும் !”

    வசந்தனின் கவிதைச் சொற்களில் பேரொளியே தம் வசம் இழந்த தருணம். முகநூல் படிக்கும் தமிழாசிரியப் பெருமக்கள் வேற்றுமையணியை விளக்கப் பேரொளியின் இந்த வரிகளைப் பயன்படுத்திக் கொணடால் வகுப்பில் பிள்ளைகள் குறட்டை விடும் நேரத்தைக் கொஞ்சம் குறைக்கலாம்.  ஒரே படத்துடன் நடிப்பிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றவர்கள் உண்டு. பணியிலிருந்து நீக்கப்பட்டவரும் உண்டு.

    “பாட்டுப் பொன்னளக்கும் அடியாழத் தமிழ்ச்சு ரங்கம்!

    என்று பாடுகிறார் பேரொளி கவிஞர்களில் பலர் கன்னி கழியாமலேயே மூப்பெய்தி விடுகிறார்கள். எழுதி வெளிவந்த முதல் நூலையே வாழ்நாள் சாதனையாக்கி விருது பெறும் வீர்க்கவிஞர்கள் நிறைந்த நாடு இது. திருமண அழைப்பிதழ் எழுதியவுடனேயே திவ்வியப் பிரபந்தம் எழுதிவிட்டதாக நினைத்துக் கொள்கிறவர்கள் இங்கு ஏராளம்! தம்பி வசந்தராசன் வற்றாத கவிதைச் சுரங்கம். “பாட்டுப் பொன்னளக்கும் அடியாழத் தமிழ்ச்சுரங்கம்! என்னும் தொடர் உருவகங்களினால் மட்டுமன்று உள்ளடக்கத்தாலும் சிறக்கச் செய்கிறார் அவரும் உயர்ந்து நிற்கிறார். கட்டுரையாளர், வசந்தராசனுடைய கவிதைகளைக் கண்டது சில திங்களுக்கு முன்புதான். இமயத்தில் இருந்திருக்க வேண்டியவர் இப்போதுதான் வீட்டு வாசலின் இறுதிப்படிக்கட்டிலிருந்து இறங்கி வருகிறார். கட்டுரையாளரோ பாடாண் பாடிய பேரொளியோ வசந்தராசனுக்குக் கைகொடுக்கவில்லை.! சிவப்புக் கம்பளத்தை விரிக்கிறோம்! கட்டுரையாளருக்கும் கவிதைக்கும் ஏழாம் பொருத்தம்! பேரொளிக்கு அது பெருமாள் கோவில் பிரசாதம்!

    யாப்பில் கனிச்சுளைகள் பந்திவைக்கும் தோப்பு

    பாட்டுடைத் தலைவனை அறிமுகம் செய்யும் பேரொளி அவனுடைய பாத்திறத்தின் அடையாளமாக யாப்பினைத்தான் முன்னுறுத்துகிறார். பாக்களில் வெண்பா, ஆசிரியப்பா சிந்து ஆகியவற்றையும் இனங்களில் விருத்தத்தையும் வசந்தராசன் கையாளுகின்ற திறனைப் பலபடப் பாடியிருக்கிறார். அப்படிப் பாடிப் பெருமைப்படுத்தக் கூடிய வசந்தராசனின் திறமைகளைப் பினவரும் சில எடுத்துக்காட்டுக்களால் அறியலாம்  இதனால் ஒரு கவிஞனைப் பற்றிய இன்னொரு கவிஞனின் புகழ்மொழி பொய்மொழியாக இல்லாமல் பொருள்சேர் புகழ்மொழியாகவே அமைந்திருக்கிறது என்பதைப் புரிநது கொள்ள இயலும்.

    “ஆடையல்ல எழுத்தெனக்குக் கழற்றி மாட்ட!
    அணிந்திருக்கும் நகையல்ல அழகு பார்க்க!
    கூடவந்த உடலின்தோல்! எலும்பைப் போர்த்திக்
    கொண்டிருக்கும் என்னுயிரை! உடலைக் காட்ட
    மேடைதரும்விழிவெளிச்சப் பாதைதன்னில்
    மெருகேறி வருவதுதான்! மீண்டும் சொல்வேன்!
    ஏடடைந்த சொல்வேறு நான்வே றல்ல!
    எனைப்பிரியா என்தோல்தான் என் னெழுத்து!”

    என்னும் எண்சீர் விருத்தம் வசந்தராசன் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் கொள்கைப் பிரகடனம்! இன்றைக்கு மரபுக்கவிதை என்னும் மயக்கத்தில் உளறிக்கொட்டும் அத்தனைப் பேருக்கும் ஓரளவு தெரிந்த யாப்பு இந்த எண்சீர் விருத்தம்தான். இதில் பல்வகையான பிரிவுகள் உண்டு. அவற்றையெல்லாம் இவர்கள் கண்டு கொள்வதே இல்லை. மரபு என்பதை யாப்பு என்று கருதுகிறவரைத் தமிழ் மரபுக்கவிதைக்கு எதிர்காலம் இல்லை. என்பது பாகற்காய் இனிக்காது என்பது போல உண்மை.  இத்தகைய எண்சீர் விருத்தங்களில் சொற்களை அறுத்துக் ;கட்டுகிற தொழில்நுட்பம் தெரிந்தாலேயொழிய வெற்றி பெற முடியாது. வசந்தராசனுக்கு அது கைவந்த கலை.

    “தரையில் நடந்த தாடிச்சூரியன்
    தத்துவம் முளைக்கும் புத்தக வயல்வெளி!
    தடியால் பூமியைத் தட்டி எழுப்பி
    விடியலைக காட்டிய சூரிய் விழிகள்!”

    என்னும் ஆசிரியப்பாவில் தன் முத்திரையைப் பதிக்கும் வசந்தராசன்

    “புத்திப் புரட்சியின்
    வித்து வளர்ந்திட
    சத்து மழைப்பாடல் நெய்வேன்! வரும்
    சங்கடங்கள் நான் கொய்வேன்!- அதில்
    கொத்து கொத்தாய் தினம்
    பூத்துக் குலுங்கிடும்
    சொத்தைப் பொதுவினில் வைப்பேன் – தனிச்
    சொநதம் கொண்டாடினால் வாய் தைப்பேன் – நான்

    நான் புத்தம் புதுக் கவிஞன் – புரட்சி
    வித்து தரும் கவிஞன்

    என்று சிந்தினில் கொஞ்சுவதைக் காணலாம்.

    “குத்தா நொடிமுள்நீ! குற்றாலச் சாரல்நீ !
    முத்துவேல் மைந்தர்க்கு மொத்தமும்நீ ! — சொத்தாய்
    உனைவைத்துச் சொக்கட்டான் ஆடிவென்றார்! நீதான்
    நினைத்தாலே நீட்டும் நிழல்!”

    இந்தக் கையறுநிலைப் பாட்டு அணமையில் மறைந்த கலைஞரின் நேர்முக உதவியாளர் திரு சண்முகநாதனின் மறைவுக்கு வசந்தராசனால் பாடப்பட்ட நேரிசை வெண்பாக்களில் ஒன்று. தெய்வத்தைக் கண்ட கண்களுக்குக் கல் தெரியாததுபோலக் கவிதையோடு கலந்து விடுகிறபோது யாப்பு மறைந்துவிட வேண்டும். யாப்பினையும் வாய்பாடுகளையும் முன்னிறுத்தி முக்கித் திணறும் பலர் நடுவே வசந்தராசனின் கவிதைகள் சிலைகளாய் உருப்பெறுகின்றன.  இத்தனைச் செய்திகளையும் அடக்கிக் காட்டுகிறார் வெற்றிப் பேரொளி.

    “நீநடந்தால் உடன்நடக்கும் விருத்தக் கூட்டம்!
    நிறைநிலவுப் பூப்பூக்கும் வெண்பாத் தோட்டம் !
    தீநடந்து கண்டதில்லை! உன்னைக் கண்டேன்!
    தித்திப்புச் சிந்துகளாம் கள்ளும் உண்டேன் !
    பூநடந்து பார்த்ததில்லை உன்சி ரிப்புப்
    பூக்காட்டு வெளிச்சநடை அழகின் உச்சம் !
    மாநகரின் மாதவரம் தமிழின் பண்ணை !
    மழைத்தமிழில் நானிசைத்தேன் வாழ்த்துப் பண்ணை “

    ‘பௌர்ணமி’ என்னும் வடசொல்லுக்குத் தமிழில் ‘முழுமதி’ என்றார்கள். ‘நிறைமதி’ என்றார்கள்.  எல்லாருக்கும் புரிநத இலக்கியத் தமிழில் இவர் ‘நிறைநிலவு’ என்கிறார். ஒரு புதிய சொல்லாடசி தமிழுக்கு வரவுதானே! ‘விருத்தத்தில் வெற்றி பெற்றான் கம்பன் அந்த வெற்றியினை இவர்பெற்றார் என்னைப் போல’ என்று கவிஞர் சுரதா தமக்கேயுரிய புலமைச் செருக்குடன் பாவேந்தரைப் பாடியிருக்கிறார். இந்த வெளிப்பாடடு உத்தியைத் தம்பி வெற்றிப் பேரோளி

    “நீ நடந்தால் உடன் நடக்கும் விருத்தக் கூட்டம்”

    என்ற தொடரில் வைத்துக் காடடுகிறார். விருத்தம் வசந்தராசனுக்குப் பின்னால் வராதாம். கையைப் பிடித்துக் கொண்டு உடன் நடைபழகுமாம். இது அழகியல். வசந்தனின் நடைவேகத்திற்கு விருத்தம் ஈடுகொடுக்காது என்பது நுண்ணியம்!. தொடைவிகற்பங்களில் எதுகை மோனை ஆகியவற்றுக்கு அடுததபடியாகக் கவிதைக்கு மெருகேற்றுவதும் அதனைப் பெருமிதத்துடன் நிமிர்ந்து நிற்கச்செய்வதும் முரண்தொடையே! ஒரு கவிஞன் பாரதியை  இப்படிப் பாடுகிறான்!

    நீ நொண்டி சிந்து எழுதினாய்! தமிழ் எழுந்து நடந்தது’

    என்று! நொண்டுதலும் நடத்தலுமாகிய முரண்கள் கவிஞனின் பார்வையையும் நோக்கத்தையும் தெளிவுபடுத்திக் கவிதைப் பொருண்மையைக் கடல் ஆழத்திற்குக் கொண்டு செலுத்துவது முரணே என்பதைப் புரிந்து கொள்ளலாம். பேரொளி

    தீ நடந்து பாரத்ததில்லை! உன்னைக் கண்டேன்
    தித்திப்பு சிந்துகளாம் கள்ளும் உண்டேன்!

    என்று பாடுகிறார். தீயினுக்கு நீர்தான் முரண் என்பதன்று. மாறுபட்ட இரு தன்மை கொண்ட எவையும் முரணே உண்மையில் வசந்தனுக்கு அவரெழுதிய பாடாண் திணைப் பாடலுக்கு இந்தக் கட்டுரை ஓர் அழகியல் உரையாகத்தான அமைய முடியுமேயன்றிப் புதிய வெளிச்சம் எதனையும் பாய்சசவதாக நான் கருதவில்லை. ஒரு கவிஞன் மற்றொரு கவிஞனின் படைப்பில் தன்னை மூழ்கடித்துக் கொள்வது என்பது அசாதாரண நிகழ்வு. அதில் முத்துக்களைக் காண்பது அரிதினும் அரிது. அதனைக் கோத்து ஆரமாக்குவது அதனினும் அரிது. அரியனவற்றையே நாட்கடமையாகக் கொண்டிருக்கும் பேரொளிக்கு இது கையறி மடைமை. கவிஞர்கள் படைப்பதற்கு மட்டுமல்ல. படிப்பதற்கும் கூட என்னும் படைப்புண்மையை அவர் புரிந்து வைத்திருக்கிறார். அதனால்தான் இலக்கியத்தின பன்முகப் ;பரிமாணங்களில் அவரால் பயணிக்க முடிகிறது. அதற்காகப் பல நூல்களையும் படிக்கத் தூண்டுகிறது

    நிறைவுரை

    கவிதை ஓர் அழகியல் வெளிபபாடு மட்டுமன்று.  சிநதனைகளின் வெளிப்பாடும் ஆகும். அழகியல் உணர்ச்சி சார்ந்தது, சிந்தனை அறிவு சார்ந்தது. ஒரு கவிதையில் இவ்விரண்டும் கூறுகளும் இருந்தால்தான் அது கவிதை. அழகியலைச் சுவைக்க ;இதயம் வேண்டும். சிநதனையைப் புரிநது கொள்ள மூளை வேண்டும். இரண்டில் ஒன்று குறைந்தாலும் படைப்பு பாழாகும். திறனாய்வு திசைமாறும்.  கருத்தியல் சார்ந்த சிந்தனைகள் தங்குதடையின்றிப் பொங்கிவரும்போது அவ்வுணர்ச்சிகளைக் கற்பனைத் தேன்கலந்து வடிவ வரையறைக்குள் கொண்டு வந்து பரிமாறுவது எல்லாருக்கும் இயலாது. பாடாண்திணை நாயகர் வசந்தராசனுக்கு அது கைவரப் பெற்றிருப்பது போலவே பாடிய பேரொளிக்கும் கைவரப் பெற்றிருக்கிறது. பலவற்றைப் பாடியிருக்கிறார் வசந்தராசன்! பாடியவரைப் பாடியிருக்கிறார் பேரொளி மன்னர்களைப் புலவர்கள் பாடிய  காலம் சங்கக் காலம்! ஒரு கவிஞனை மற்றொரு கவிஞன் பாடும் இந்தக் காலம் தங்கக் காலம்! தமிழ்க்கவிதைக்குப் பொற்காலம்!

    இனிக்கின்ற செங்கரும்பின் சாறு! நெஞ்சில்
    இளநீரைச் சுமக்கின்ற அன்பு! யாப்பில்
    கனிச்சுளைகள் பந்தி வைக்கும் தோப்பு ! ஈரக்
    கால்வாய்கள் கண்ணிரண்டும் ! அவைகள் ஆண்டு
    தனித்தியங்கும் கவிமுழக்கம்! வாழ்த்தும் போது
    தலைமடையின் பெருக்கெடுப்பு! நனைந்தோ ரெல்லாம்
    பனிக்காலை பரங்கிப்பூக் கோல வீதி !
    பழத்தமிழார் கவிக்கோவின் செங்கோல் வாழ்க!

    தேரோட்டத் திருவிழாதான் கவிதை மன்றில்!
    தேனோட்டப் பெருவெள்ளம் புலமை யாற்றில்!
    கூரோட்டக் கணைதொடுக்கும் வில்லின் தோள்கள்!
    குளிரோட்டக் கவியோட்டும் வசந்த ராசன் !
    ஈரோட்டுப் படைவீட்டுக் களத்து வீரன் !
    இனத்தோட்ட வாசலிலே காவல் காரன்!
    நேரோட்ட நெஞ்சத்துக் கவிதை வாழ்வன்!
    நீடுவளர் வரம்பெற்ற வாணாள் சேர்க!

    மின்னலுக்கு நிலையான வடிவ மில்லை!
    மின்சொற்கள் உன்சொற்கள் நிலைக்கும் ! காதல்
    கன்னலினை மொழிக்குவளை ஏந்தும்! பொங்கும்
    கடலழைத்துக் கமண்டலத்துள் புதைக்கும்! பாட்டுப்
    பொன்னளக்கும் அடியாழத் தமிழ்ச்சு ரங்கம்!
    புகழளக்கும் வரலாற்றின் சொந்தம்! சொந்தம்!
    தென்றலுக்கு மறுபெயர்தான் உன்றன் பேரா?
    திசையெட்டும் உச்சரிக்கும் கம்பன் பேரா!

    நீநடந்தால் உடன்நடக்கும் விருத்தக் கூட்டம்!
    நிறைநிலவுப் பூப்பூக்கும் வெண்பாத் தோட்டம் !
    தீநடந்து கண்டதில்லை உன்னைக் கண்டேன்!
    தித்திப்புச் சிந்துகளாம் கள்ளும் உண்டேன் !
    பூநடந்து பார்த்ததில்லை உன்சி ரிப்புப்
    பூக்காட்டு வெளிச்சநடை அழகின் உச்சம் !
    மாநகரின் மாதவரம் தமிழின் பண்ணை !
    மழைத்தமிழில் நானிசைத்தேன் வாழ்த்துப் பண்ணை

    திணை:  பாடாண்

    துறை விளக்கம்!

    ஏனைய புறத்திணைகளுக்குத் ‘திணை’ தனியாகவும் அவை ஒவ்வொன்றுக்குமான துறைகள் தனித்தனியாகவும் இயங்கும். ஆனால் பாடாண்திணை தனக்குரிய துறைகளோடு ஏனைய ஏழுதிணைப் பொருட்களையும் தனக்குரிய துறைகளாகக் கொள்ளும். கொள்ளவே பாடாண்திணை என்பதும் புறத்திணை என்பதும் ஒன்றென்பதும் தெளியப்படும்.  தெளியவே அத்தனைப் புறத்திணைக் கூறுகளும பாடாண் திணைக்குள் அடங்கும். .இதனை

    “பாடாண் பகுதி கைக்கிளைப் புறனே
    நாலிரண் டாகும் பாலுமா ருண்டே” (தொல்.புற.80)

    என்னும் நூற்பாவானும்

    “நாலிரண்டாவன (பாடாண் திணை எட்டுப் பிரிவுகளாவது) இப்பாடாண் திணைக்கு ஓதுகின்ற பொருட்பகுதி பலவும் கூட்டி ஒன்றும், (1) இருவகை வெட்சியும் (2) பொதுவியலும் (3) வஞ்சியும (4) உழிஞையும் (5) தும்பையும் (6) வாகையும் (7) காஞ்சியும் (8) ஆகிய பொருள்கள் ஏழுமாகிய எட்டுமாம்”

    என்னும் ஆசிரியர் ;நச்சினார்க்கினியர் உரைப்பகுதியானும் உணர்க!

    (தொடரும்)

    Share
  • சேக்கிழார் பாடல் நயம் – 154 (விண்ணவர்கள்)

    சேக்கிழார் பாடல் நயம் – 154 (விண்ணவர்கள்)

    திருச்சி புலவர் இராமமூர்த்தி

    வரலாறு

    மெய்யன்பராகிய ஆனாயரின் குழலிசை கேட்டருளிய சிவபிரான், கருணை நிறைந்த உள்ளத்துடன்,  அவரைப்போன்ற  திருவுள்ளம்  படைத்த தவமுடைய பார்வதி தேவியுடன் இடப வாகனத்திலேறி, பிறைச்சடை முடியுடன் வான்வழியே வந்து சேர்ந்தார். எல்லாத்திசையிலும் புடை சூழ்ந்து பிரானின் பூதகணங்கள் கலந்து வருகின்ற பொழுதில் அவர்களில் பல்வேறு வகைப்பட்ட  ஒலிகள் கலவாமல், நாயனாரின் குழலிலிருந்து எழுந்த ஐந்தெழுத்திசை மட்டுமே விளங்கியது.  அதனைக் கேட்டவாறே, அவர் முன் எழுந்தருளினார்.   

    அப்போது தம் முன் நின்ற சிவபிரான் ஆனாய நாயனாரின் குழலோசை கேட்டு மகிழ்ந்தார். அவர் நாயனாரை, ‘’இப்படியே, குழலிசைத்தவாறே நாம் இருக்கும் கைலாயத்திற்கு வருக!’’   என்றழைத்தார். அவ்வாறே அடியாரும் தம் நிலை பெயராமல் சிவலோகத்துக்கு  வந்து சேர்ந்தார். அதனைச் சேக்கிழார்,

    விண்ணவர்கண் மலர்மாரி மிடைந்துலக மிசைவிளங்க,
    எண்ணிலரு முனிவர்குழா மிருக்குமொழி யெடுத்தேத்த,
    அண்ணலார் குழற்கருவி யருகிசைத்தங் குடன்செல்லப்,
    புண்ணியனா ரெழுந்தருளிப் பொற்பொதுவினிடைப்புக்கார்.

    என்று பாடினார்.

    இதன் பொருள்

    தேவர்கள் பொழியும் கற்பகப் பூமழை நெருங்கி உலகின்மேல் விளங்கவும், அளவில்லாத அருமுனிவர் கூட்டங்கள் மறைமொழிகளாலே எடுத்துத் துதிக்கவும், பெருமையுடைய ஆனாயர் குழலிசையை வாசித்துப் பக்கத்தில் உடன்செல்லவும், புண்ணியப் பொருளாயுள்ள சிவபெருமான் அங்குநின்றும் எழுந்தருளிப் பொன்னம் பலத்தினிடைப் புகுந்தருளினர்.

    விளக்கம்

    விண்ணவர்கண் மலர்மாரி  என்ற தொடர்,  தேவர்கள் பொழியும் பூமழையைக்  குறித்தது. . மலர் – கற்பகமலர். இவ்வுலகில் தெய்வ அற்புதங்கள் நிகழும்போது தேவர்கள் பூமழை பொழிவர்.  தேவருலகத்தில் இவ்வகைத் திருவருள் வெளிப்பாடான நிகழ்ச்சிகள் நிகழ்தற்கிடமில்லை யாதலின், அவர்கள் பூவுலகின் இவை நிகழக் கண்டபோது இவ்வாறு பாராட்டிப் பூமழை பொழிவர் , என்பதைக்  குறித்தது! இருக்குமொழி-  வேதமந்திரங்கள். இருக்கு  என்பது  நால்வேதங்களையும்  பொதுவாகக்  குறித்தது. இறைவன் திருவாக்கில் இருக்கும்மொழி என்பதும், என்றும் இருக்கும் நித்தியமான மொழி என்பதையும் குறிக்கும்.  மொழிகளால் ஏத்த என்க.

    அண்ணலார் – பெருமையுடையவர். உலகில் அவரது பெருமை விளங்கிய இடமாதலின் இப்பெயராற் கூறினார்.

    குழற்கருவி இசைத்து அங்கு உடன்செல்ல – குழல் வாசிப்பினைக் கேட்க, “நம்பால் அணைவாய்” என்று அருள்செய்யப் பெற்றாராதலின், அவ் வாணையின்படியே இறைவனருகில் குழல் இசைத்துச் சென்றார். அன்றுபோலவே இன்றும் என்றும் குழல் வாசித்து ஐயரின் அருகு ஆனாயர் எழுந்தருளி யிருக்கின்றார் என்க.

    “நான் மகிழ்ந்து பாடி
    அறவாநீ ஆடும் போதுன் னடியின்கீ ழிருக்க” வேண்டும்

    என்று அம்மையார் தாம் வேண்டிக்கொண்டபடி ஐயரது “எடுத்தருளும் சேவடிக்கீழ் என்றுமிருக் கின்றார்” என்ற சரிதம் இங்கு நினைவு கூர்தற்பாலது. மேலும் அடியார்களை ,

    “இடையறாமற் கும்பிடும் கொள்கை யீந்தார்” ,

    “தம்முன் தொழுதிருக்கும் அழிவில் வான்பதங் கொடுத்து”,

    “கணத்தின் முன்னாங்கோ முதற்றலைமை பெற்றார்”,

    “என்வலத்தில் மாறிலாய் நிற்க”,

    “துணையடிகள் தொழுதிருக்க” ,

    “நம் மன்னுலகு  பிரியாது வைகுவாய்”,

    “அரனார் மகனாராயினார்”

    “சிவலோகத்திற் பழவடிமைப் பாங்கருளி” ,

    “என்றும் பிரியா தேயிறைஞ்சியிருக்க” ,

    “வன்றொண்ட ராலால சுந்தர ராகித்தாம் வழுவாத, முன்னை நல்வினைத் தொழிற்றலை நின்றனர்;
    முதற்சேரர் பெருமானு நன்மை சேர்கண நாதரா யவர்செயு நயப்புறு தொழில்பூண்டார்” ,

    “கமலினி யாருட னனிந்திதை யாராகி, மலைத் தனிப்பெரு மான்மகள்
    கோயிலிற் றந்தொழில் வழிநின்றார்”

    என்றெல்லாம் கூறிய சிறப்பை அறிந்து கொள்ளுதல், வேண்டும்!

    புண்ணியனார் – புண்ணியங்களுக்கெல்லாம் பொருளாயும், பிறப்பிடமாயும், இருப்பிடமாயும், சேர்விடமாயும் உள்ளவர். சிவபெருமான்.

    இப்பாடலில்  ஆனாய  நாயனாரின் சிவபத்தித்திறம், அவர்தம் குழலிசையாகவே  வெளிப்பட்டதையும், அதன் சிறப்பை  நிலவுலகினரும், தேவருலகினரும் அதனைக்  கேட்டுப் போற்றிய சிறப்பையும்  விளக்கியது. இறைவன் திருவருளைப்பெற நாம், நாமறிந்தவற்றைச் செய்தாலே போதும் என்பதைக் குறித்து, இப்பாடல் நமக்கு வழிகாட்டுகிறது.

    Share
  • இன்னும் இருக்கிறது

    இன்னும் இருக்கிறது

    பாஸ்கர்

    இன்னும் இருக்கிறது இந்த வாழ்க்கை
    ஓட வேண்டிய தூரம் மேலும் உண்டு
    வசை பாட இன்னும் பலர் வரிசையில்
    பற்களை கடிக்க சந்தர்ப்பம் பல உண்டு
    தனித்து நின்று பேச வேண்டியதும் உண்டு
    பழிக்க வேண்டிய பட்டியல் பெரிதாய் போய் விட்டது
    அந்த காலத்தில் என புலம்பும் நேரம் அருகில் நிற்கிறது
    பெருசு என்றால் மரியாதை போய் கோபம் வருகிறது
    எதையும் மறுக்கவே பிறந்தது போலவே வாழ்க்கை
    சந்தேகங்கள் பெரிதாகி கேள்வியே மறந்து விட்டது
    ஆனாலும் என்ன, தூக்கமும் மயக்கமும் உடன் உண்டு
    இடையிடையே வாழ்ந்து கொண்டும் இருக்கிறேன்.
    மூச்சு விட மறக்காமல்.

    Share
  • 62 வயதில் ஓலா ஓட்டுநரான நகைப் பட்டறை முதலாளி

    62 வயதில் ஓலா ஓட்டுநரான நகைப் பட்டறை முதலாளி

    கோவையில் நேற்று இரவு நாங்கள் பயணித்த ஓலா டாக்சியை ஓட்டியவர், 62 வயதுடைய செல்வராஜ். நகைப் பட்டறை முதலாளியாக இருந்த அவர், ஓலா ஓட்டுநரானது ஏன்? அவரே சொல்கிறார், கேளுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • லேசர் விளக்கொளியில் ஆதியோகி

    லேசர் விளக்கொளியில் ஆதியோகி

    கோவை ஈஷா யோகா வளாகத்திற்கு நேற்று சென்றோம். முன்னிரவு நேரத்தில் அங்கு லேசர் ஒளிக்காட்சி நடைபெற்றது. லேசர் விளக்கொளியில் ஆதியோகி சிவன் உயிர்பெற்று எழுந்தார். விதவிதமான தோற்றங்களில், ஒளிக் கோலங்களில், இப்படியெல்லாம் கூடக் காட்ட முடியுமா என வியக்கும் வகையில் ஒரு வர்ண ஜாலத்தை நிகழ்த்திக் காட்டினார்கள். இதோ அந்தக் காட்சிகள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • சாக்லேட் பிரவுனி ஐஸ்கிரீம்

    சாக்லேட் பிரவுனி ஐஸ்கிரீம்

    கோவையின் யாரி உணவகத்தில் நேற்று இரவு சாக்லேட் பிரவுனி ஐஸ்கிரீம் சுவைத்தோம். குளிர்ச்சியான ஐஸ்கிரீம் எப்படி ஆவி பறக்க வருகிறது என்று பாருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 46

    தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 46

    புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் 
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    விளார் புறவழிச்சாலை, 
    தஞ்சை மாவட்டம் – 613006.
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    ஒரே நாளில் ஓராயிரம் உவமங்கள்

    முன்னுரை

    ‘நாலு பேர் நாலு விதமாகப் பேசுவார்கள்’ என்னும் உலகியல் வழக்கில் உள்ள ‘நாலுவிதம்’ என்பது நான்கை வரையறுக்காது ‘பலரும் பலவகையாகப் பேசுவார்கள்’ என்பதைக் குறிக்குமல்லவா? அதுபோல ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்தைச் சித்திரிக்கும் ஓர் இலக்கியப் பதிவில் காணப்படும் எண்ணற்ற பொருத்தமான உவமங்களைக் குறிக்கவே ‘ஒரே நாளில் ஓராயிரம் உவமங்கள்’ எனத் தலைப்பிடப்பட்டது. ‘ஆயிரம் நிலவே வா!’, ‘ஆயிரம் பெண்மை மலரட்டுமே’, ‘ஆயிரம் வாசல் இதயம்’ என்பன போல. பாவேந்தர் பாரதிதாசனுக்கு நிலைத்த புகழைக் கொடுத்தவை இரண்டு. ஒன்று, அவர் தன் புனைபெயரைத் தன் வழிகாட்டியான பாரதியுடன் இணைத்து அமைத்துக் கொண்டது. இரண்டு அவருடைய புதுமையான சிந்தனைகளும் கற்பனைகளும் அடங்கிய கவிதை இலக்கியங்கள். பின்னவற்றுள் குறிப்பிடத்தக்கதும் தமிழ்க்கவிதை இலக்கிய நெறியில் புதுமையாகவும் அமைந்தது ‘குடும்ப’ விளக்கு. குடும்ப விளக்கின் முதற்பகுதியாகிய ஒருநாள் நிகழ்ச்சியில் பயன்படுத்தப்பட்டிருக்கும் உவமச்சிறப்பையே இக்கட்டுரை சுருக்கமாக ஆராய முற்படுகிறது.

    குடும்ப விளக்கின் கட்டமைப்பு

    ‘நல்ல குடும்பம் பல்கலைக்கழகம்’ என்பது பொருளாழமுடைய ஒரு தொடர். நாட்டில் பல்கலைக்கழகங்கள் பெருகிய அளவுக்கு நல்ல குடும்பங்கள் தழைத்திருக்கின்றனவா என்பது எளிதில் விடை காணமுடியாத வினா. ‘குடும்ப விளக்கு’ என்பது நடப்பியல் சார்ந்த கற்பனை கலவாத ஒரு காவியம். ஒருநாள் நிகழ்ச்சி, விருந்தோம்பல், திருமணம், மக்கட்பேறு, முதியோர் காதல் என்னும் அவ்வைந்து  பிரிவுகளில் ‘ஒருநாள் நிகழ்ச்சி’ என்பது ‘ஓர் இரவு’ என்பதுபோல ஒரு நாள் ஒரு குடும்பத்து இயல்பான நிகழ்வுகளைச் சித்திரிக்கும் பகுதியாகும்.

    ஒருநாள் நிகழ்ச்சி

    குடும்பத்தலைவி விடியற்காலையில் படுக்கையை விட்டு எழுந்திருப்பது, குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புவது, கணவனைப் பணிக்கு அனுப்புவது, மாமனார் மாமியாருக்குரிய பணிவிடைகளை மகிழ்ச்சியுடன் செய்வது, குடும்ப உறுப்பினர்களுக்குப் பிடித்தமான உணவுகளைத் தயாரிப்பது, பள்ளி சென்று திரும்பிய குழந்தைகளை வரவேற்பது, அவர்களுக்குப் பாடம் கற்பிப்பது, அவர்களை உறங்க வைப்பது, கணவனோடு பொதுநலம் குறித்துப் பேசுவது, உறங்கச் செல்வது என நிரல்படக் கோத்த அருமணி ஆரமாகத் திகழ்வது ஒருநாள் நிகழ்ச்சியாகும். நாட்டுப்படலம், நகரப்படலம் எனத் தொடங்கிய  தமிழ்க்காப்பிய உலகில் வாசலில் கோலமிடும் வைகறைத்  தலைவியிலிருந்து தொடங்கிச் சித்திரித்துக் காட்டலாம் என்ற எண்ணமே காப்பியப் புரட்சியாகும். கவிதைப் புரட்சியாகும்.

    மடமையிருள் கலைந்தது

    கவிதையில் உவமத்தின் ஆற்றலை நன்குணர்ந்திருந்த பாவேந்தர் தன் காப்பியத்தை உவமங்களிலேயே தொடங்குகிறார். இது ஒருவகையில் தமிழ்க்கவிதை மரபினைச் சார்ந்தது எனலாம். ‘அகர முதல’ எனத் தொடங்கிய திருவள்ளுவரும், ‘உலகம் உவப்ப வலனேர்பு திரிதரு பலர்புகழ் ஞாயிறு கடல் கண்டாங்கு’ என்னும் நக்கீரரும் இவர்க்கு முன்னோடியாகலாம். குடும்பப் பெண்கள் விடியற்காலத்திலேயே படுக்கையிலிருந்து எழுந்து வாசல் தெளித்துக் கோலமிடுதல் ஒரு பண்பாட்டு மரபு. பகுத்தறிவுச் சிந்தனைகளைப் பலபடப் பேசியிருந்தாலும் குடும்ப விளக்குக் காப்பியம் முழுமையும் பண்பாட்டுக் கூறுகளே நிறைந்துள்ளன. கதிரவன் கீழ்த்திசையில் உதிக்காத போதும், அதனால் விலகவேண்டிய இருளாகிய போர்வை நீங்காதபோதும் நள்ளிரவு மென்மையாய் நடந்து கொண்டிருந்ததாம்.

    “இளங்கதிர் கிழக்கில் இன்னும் எழவில்லை
    இரவு போர்த்த இருள் நீங்கவில்லை!
    ஆயினும் கேள்வியால் அகலும் மடமைபோல்
    நள்ளிரவு மெதுவாய் நடந்து கொண்டிருந்தது”

    என்று வண்ணனை செய்து அறிதோறும் அறியாமை கண்டற்றால்’ என்னும் திருக்குறள் உவமக் கருத்தினை உள்ளீடாக்குகிறார். தொடர்ந்து மலர்கின்ற காலைப் பொழுதினைத்,

    “தொட்டி நீலத்தில் சுண்ணாம்பு கலந்த
    கலப்பென இருள் தன் கட்டுக்குலைந்தது”

    என்று எழுதுகிற பாவேந்தர், நூலின் முதல் உவமத்தில் அறிவை முன்னிறுத்தியிருப்பது நோக்கத்தக்கது. நல்ல குடும்பம் பல்கலைக்கழகம் என்பதே நூலின் நோக்கமாதலின் அதனைக் குறிப்பாய் உணர்த்தினார் என்பதாகவும் கொள்ளலாம். கற்றலும் கேட்டலும் இணைந்ததே அறிவெனினும் இந்த உவமத்தில் கேள்விக்கு முதன்மை கொடுத்திருப்பது  நூலறிவு பெற இயலாதவரையும் மனத்துட் கொண்டே நூலின் முன்னுரையில்,

    “குடும்ப விளக்கைப் பெறும் தோழர்கள் தாமேயன்றி மறந்து போகாமல் தம் துணைவியர்க்கும் படிக்கக் கொடுக்க. துணைவியர் எழுத்தறிவு இல்லாராயின் படித்துக்காட்டுக! துணைவர்க்கு எழுத்தறிவு இழுப்பாய் இருந்தால் துணைவியார் சொல்லிக் காட்ட மறவாதிருக்க வேண்டுகிறேன்”

    என்னும் பகுதி ‘கேள்வியால் அகலும் மடமைபோல்’ என்னும் உவமத்தின் ஆழத்தை ஓரளவு தெளிவாக்கக் கூடும். படிக்க இயலாத காலையில் கேட்டலுக்கு முதன்மை தந்தவர் மாலை நிகழ்வில் கற்றலுக்கு முதன்மை தருவதைக் காணலாம்.

    குளத்து நீரில் குதிக்கும் கெண்டை மீன்

    தமிழிலக்கியத்தில் பெண்களின் கண்களுக்கு வேல், கெண்டைமீன் முதலியவை உவமமாக்கப்படினும் அதன் வினைபடுபொருள்களாகக் கண்ணீரைத்தான் காட்டினார்கள் தமிழ்க்கவிஞர்கள். சீதையின் கண்களும்  கண்ணகி மற்றும் மாதவியின் கண்களும் மீன்களாக உருவகம் செய்யப்பட்டிருப்பினும் காப்பியங்கள் அவர்களுடைய கண்ணீரைத்தான் காட்டின. ஆனால் பாவேந்தர் விழித்த தலைவியின் கண்களைத்,

    “தெளிவிலாக் கருக்கலில் ஒளிபடும் அவள்விழி
    குளத்து நீரில் குதிக்கும் கெண்டை மீன்”

    எனக் களிப்பு மேலிடத் தாவிக் குதிக்கும் கெண்டைமீன்களாகச் சித்திரித்தார். ‘கருக்கலில் ஒளிபடும் அவள் விழி’ என்னும் பொருளை விளக்கக் ‘குளத்துநீரில் குதிக்கும் கெண்டைமீன்’ என்னும் உவமத்தால் விளக்கினார். ‘தெளிவிலாக் கருக்கல்’ என்னும் பொருளுக்குத்  ‘தெளிவிலாக் குளத்து நீரையும்’ கருக்கலில் அலைபாயும் அவள் ‘விழிக்குக்’, குதிக்கும் கெண்டைமீனையும் உவமித்ததில் கவிஞரின் உவம ஆற்றல் புலப்படுவதைக் காணலாம்.

    பொடிமுத்துச் சுடர்

    சொல்லப்படுகிற உவமம் எந்த வகைமையில் பொருளுக்கு உவமமாக்கப்படுகிறதோ அந்த வகையில் முழுமையான விளக்கத்தைத் தரவேண்டும். அதுதான் உவமத்தின் பணி. ஆனால் அந்த விளக்கத்திற்காகத் தெரிவுசெய்யப்படும் துல்லியமான பொருத்தமான உவமம் படைப்பாளனின் துல்லிய நோக்கையும் பரந்த பார்வையையும் வெளிப்படுத்தும். அவ்வாறு பொருள் விளக்கத்திற்கான துல்லியமான ஆழமான உவமங்கள் கிட்டாதபோது படைப்பாளனே சில உவமங்களைப் படைத்தும் பொருள் விளக்கத்தைச் செய்துவிடுவான். சான்றாகப் ‘பசுத்தோல் போர்த்திய புலி’ என்பதுதான் உலக வழக்கு. திருவள்ளுவர் புலித்தோல் போர்த்திய பசுவைக் காட்டுகிறார். புலித்தோல் போர்த்திய பசு என்பது யாரும் காணாதது. துறவறத்திற்குச் சென்றவர்கள் அந்தத் துறவற வேடத்தைப் பயன்படுத்திக் கொண்டு கூடாவொழுக்கத்தில் ஈடுபடுவதை விளக்குதற்காகத் திருவள்ளுவர் இந்த உவமத்தை இட்டுக்கட்டியிருக்கிறார்.

    பாவேந்தர் பாரதிதாசன் நுண்மாண் நுழைபுலமும் உற்று நோக்கும் இயல்பும் கொண்டவர். கருத்துக்களில் புதுமை தேக்கினும் பண்பாட்டில் பழந்தமிழ்ப் பண்பாட்டையே முன்னெடுப்பவர். அதனால் மூக்குத்தி அணிந்த பெண்களையே பாடுபொருளாக்கியிருக்கிறார். அவர்களுடைய மூக்குத்தியையும் பாடுபொருளாக்கியிருக்கிறார். அதில் தொங்கும் முத்தையும் உவமமாக்கியிருக்கிறார். காதில் தோட்டோடு தொங்குவதுபோல மூக்குத்தியிலிருந்தும் முத்து தொங்கும். அது அளவால் மிகச் சிறியது. இதனை எங்கோ கண்ணால் நோக்கி மனத்துள் பதிய வைத்திருந்த பாரதிதாசன் குடும்ப விளக்கில் அகல்விளக்கின் சோர்ந்து போன சுடருக்கு உவமமாக்கியிருக்கிறார்.

    “சின்ன மூக்குத் திருகொடு தொங்கும்
    பொன்னாற் செய்த பொடிமுத்தைப் போல்
    துளி ஒளி விளக்கின் தூண்டுகோலைச்
    செங்காந்தள் நிரல் மங்கை விரலால்
    பெரிது செய்து விரிமலர்க் கையில்
    ஏந்திச்”

    செல்கிறாளாம். சுடரின் சோர்வைத் தூண்டுகோலால் அடிப்பகுதி நூலைத் தூக்கிவிடுவதன் மூலம் ஒளிவிடச் செய்கிறாளாம். விளக்கைத் துடைப்பதும், விளக்கேற்றுவதும், எண்ணெய் குறைந்தால் ஊற்றுவதும், குறைந்த சுடரைப் பெருக்கிக்காட்டுவதும் பெண்களின் இல்லறக் கடமைகளில் ஒன்று. ஆனால் பாரதிதாசன் இதனை உற்று நோக்கியிருக்கிறார். பண்பாடு சார்ந்த விளக்குச் சுடரேற்றும் நிகழ்வை மற்றொரு பண்பாடு சார்ந்த மூக்குத்தியின் பொடிமுத்தை உவமமாக்கி உரைத்ததன் மூலம் தான் ஒரு மரபுக்கவிஞர் என்பதை மீண்டும் உறுதி செய்கிறார்.

    உணவுக் கூடமா? உவம மண்டபமா?

    காலை உணவு, நண்பகல் உணவு என்றெல்லாம் அடுக்களையில் சமையல் செய்யச் செல்கிறாள் தலைவி. அடுக்களையில் ஒருநாள் சமையற்கான பொருளைத் தேர்ந்தெடுப்பதிலும் குடும்பத்தில் உள்ள யார் யார் என்னென்ன விரும்புவார்கள் என்பதிலும் மிக நுண்ணிய பார்வையைப் பாரதிதாசன் செலுத்தியிருக்கிறார்.

    “பொரியலோ பூனைக் கண் போல்
    பொலிந்திடும்!”

    பொரியலை உண்ணாதார் இலர். பூனையைக் காணாதார் இலர். ஆனால் பாரதிதாசனால் மட்டுமே பூனைக் கண்ணையும் பொரியலையும் ஒப்பிட்டுக் காண முடிந்திருக்கிறது. தேங்காய்த் துருவல், கடுகு முதலியன இட்டு வதக்கி வறுத்துச் செய்யப்படும் பொரியல் பூனைக் கண் போலவே இருப்பதைப் பாரதிதாசன் கவிதையைப் படித்த பிறகுதான் தெரிகிறது. பள்ளி செல்லும் பிள்ளைகளுக்குக் காலில் செருப்பணிவிக்கிறாள். அந்தச் செருப்புக்கும் உவமம் சொல்கிறார்.

    “புன்னைஇலைபோல் புதையடிச் செருப்புகள்
    சின்னவ காலிற் செருகி”

    என்று. குழந்தைகளின் அதாவது பெண் குழந்தைகளின் காலடிகளுக்குப் புன்னையிலையை உவமம் கூறுவது எவ்வளவு பொருத்தம் என்பதை புன்னையிலையைப் பார்த்தவர்களுக்குப் புரியும். பாரதிதாசன்,

    “காலுக்குப் புன்னையிலை போலும் செருப்பணிந்து
    கையில் விரித்த குடை தூக்கி”

    என்று பிறிதொரு இடத்திலும் பாடுவார். செயல்களின் மாற்றமே ஓய்வு. இந்த நுண்ணியத்தைப் பாவேந்தர் எப்படிக் காட்சிப்படுத்துகிறார் தெரியுமா? பள்ளிக்குச் செல்லும் பிள்ளைகள் கையில் விரித்த குடையைக் கொடுத்துத் தெருவரை அவருடன் நடந்து மற்ற பிள்ளைகளோடு அவர்களையும் அனுப்பிவிட்டு வீட்டுக்கு வருகிறாளாம். எப்படி?

    ‘கிளைமாறும் பசுங்கிளிபோல ஓடி
    ஆளனோடு அளவளாவினாள்”

    வேன்களில் குழந்தைகளை அனுப்பும் வழக்கத்தையே வாடிக்கையாகக் கொண்டிருக்கும் தற்காலத் தாய்மார்களுக்கு இந்த அனுபவமும் கிட்டாது. பாவேந்தரின் இந்தப் பாட்டும் கிட்டாது.

    பாண்டியனும் பாவேந்தரும்

    சேர, சோழ, பாண்டியர்களில் பாவேந்தரின் படைப்புக்களில் பெரிதும் நிறைந்திருப்பவர் பாண்டியரே. காரணம் பாவேந்தரின் அளப்பரிய தமிழ்ப்பற்று. பாண்டியர்கள் தமிழை வளர்த்தார்கள். சோழ நாட்டிலும் சேரநாட்டிலும் பயனை அனுபவித்தார்கள். என்ன பயன் பாண்டியர் காத்த தமிழில் கவிதைகளையும் காப்பியங்களையும் யாத்தனர். முத்தொழில்களிலும் காத்தல்தானே தலைசிறந்தது? அதனால் பாண்டியரை அவர் முன்னெடுப்பதில் வியப்பேதும் இல்லை!. குடும்பத்தலைவன் மணவழகர் உடுத்த வேண்டிய ஆடை கிழிந்திருக்கிறது. அதனைத் தைத்து அவனை அணியச் செய்து அவன் அழகைப் பருகுகிறாளாம் அவள். எப்படித் தெரியுமா?

    “பொத்தலும் கிழிசலும் பூவை கண்டாள்!
    தைத்தாள் தையல் சடுகுடு பொறியால்!
    ஆண்டநாள் ஆண்டு மாண்ட செந்தமிழ்ப்
    பாண்டிய மன்னன் மீண்டது போல”

    என்று எழுதுகிறார். காப்பியம் புதுமை தேக்கியது. உவமம் மரபு சான்றது. ‘செந்தமிழ்ப்பாண்டியன்’ என்றதாலே அவர் பாண்டியனை முன்னெடுத்ததற்குத் தமிழே காரணம் என்பதும் பெறப்படும்.

    “கூண்டுவண்டி கட்டி நாம்
    கூடலூர் அடைந்தால்
    பாண்டியன் குடும்பம் என்று
    பார்த்து மகிழ்வார்கள்”

    என்று பிறிதொரு இடத்திலும் பாண்டியனை உவமமாக்கியிருப்பார் பாவேந்தர். எண்சீர் விருத்தங்களால் ஆன தமது காப்பியத்திற்குப் ‘பாண்டியன் பரிசு’ என்றுதான் அவர் பெயர் வைத்திருக்கிறார். குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பிய அந்தத்தாய், அடுத்துத் தன் கணவனைக் கடைப்பணிக்கு அனுப்புகிறாள். அவன் உணவருந்தியபின் தமிழ் மரபுப்படி வெற்றிலைப் பாக்கு உண்ண விரும்புகிறான். வெற்றிலைப் பாக்கு போட்டுக் கொள்வதில் பலவகை உண்டு. தானே எடுத்துத் தானே கிள்ளித், தானே தடவித் தன்னுடைய வாயில் தானே போட்டுத் தானே மென்று தானே துப்புவது. வெற்றிலை முதலானவற்றை மனைவி எடுத்துச் சுண்ணாம்பு தடவி மடித்துக் கணவனிடம் கொடுத்துப் போட்டுக் கொள்ளச் சொல்வது. அப்படி மடித்த சுருளைக் கணவன் கையில் கொடுக்காமல் கணவன் வாயிலேயே கொடுப்பது. இன்னொன்றும் உண்டு. தாம்பூலத்தை முதலில் தலைவி தரித்து மென்று உமிழ்நீரோடு கணவனோடு பரிமாறிக் கொள்வது. பெரும்பாலும் இலக்கியங்களில் பேசப்படாத நிகழ்வு இது. ஆனால் துணிச்சல் மிக்க திருவள்ளுவர் இதனைக் குறிப்பாகக் காட்டியிருக்கிறார்.

    “பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
    வாலெயிறு ஊறிய நீர்”

    என்ற தலைவனின் பட்டறிவு பகர்வில் நீர் பாலும் தேனும் கலந்த சுவையினைப் பெற்றது காண்க.

    “எயிறூறிய என்றவிடத்து இடத்து நிகழ்பொருளின் தொழில் இடத்தின் மேல் நின்றது. வேறுவேறு அறியப்பட்ட சவையவாய பாலும் தேனும் கலந்துழி அக்கலவை இன்னதென்று அறியலாகா இன்சுவைத்தாம் ஆதலின் அது பொருளாகிய நீர்க்கும் எய்துவிக்க”

    என்னும் அழகர் உரைகொண்டு இக்காட்சியை நோக்கலாம்.  தலைவனின் அந்த நிகழ்ச்சி களவியல் வெளிப்பாடு. பாவேந்தரின் இந்த வெளிப்பாடு வேறுமாதிரியாக அமைந்திருக்கிறது. காரணம் இது கற்பியல்.

    “வெற்றிலைச் சுருளைப் பற்றி ஏந்தினாள்
    கணவன் கைமுன் காட்டி அவன் மலர்
    வாயில் தரத்தன் மனத்தில் நினைத்தாள்!
    தூயவன் அப்போது சொன்னது என்னெனில்
    சுருளுக்கு விலை என்ன சொல்லுவாய் என்றான்
    பொருளுக்குத் தக்கது போதும் என்றாள்.
    கையில் கொடுப்பதைக் காட்டிலும் சுருளை
    வாயிற் கொடுத்திடு மங்கையே! என்றான்.
    சேயிழை அன்பால் செங்கை நீட்டினாள்!
    குடித்தனப் பாங்கைக் கூட்டி எடுத்து
    வடித்த சுவையினை வஞ்சிக்கு அளித்தல்போல்
    தளிர்க்கைக்கு முத்தம் தந்து
    குளிர்வாய் வெற்றிலை குழைய ஏகினனே!”

    பாங்கோடு குடும்பம் நடத்தியவள் தலைவி. அனுபவித்தது குடும்பம். குடும்பத் தலைவன் அனுபவித்த அந்தச் சுவையை உவமமாக்குகிறார் பாவேந்தர். விரைவுச் சாப்பாட்டில் வாழ்க்கையை முடித்துக்  கொள்வாருக்கு இந்தக் கவிதையும் புரியாது. உவமமும் புரியாது.

    “உணவுண்ணச் சென்றாள் அப்பம்
    உண்டனள் சீனி யோடு
    தணல் நிற மாம்பழத்தில்
    தமிழ்நிகர் சுவையைக் கண்டாள்
    மணவாளன் அருமை பற்றி
    மனம் ஒரு கேள்வி கேட்க
    இணையில்லா அவன் அன்புக்கு
    ஈடாமோ இவைகள் என்றாள்”

    என்று குடும்பத்தலைவி உணவுண்ணச் சென்ற காட்சியைச் சித்திரிக்கிறார் பாவேந்தர். அப்பம் உண்பது ஒரு சிறிய வினை. அந்த வினையை உவமத் தோரணத்தால் அணிசெய்துவிடுகிறார். மாம்பழத்தைக் கண்ணால் கண்டு நிறத்தை அறிகிறாள். உண்டு சுவையை உணர்கிறாள். தணல் நிற மாம்பழம் என்றதால் உரு உவமை. தமிழ் நிகர் சுவை என்றதால் பண்புவமை. இத்துடன் இன்னொரு உவமத்தையும் வெகுநுட்பமாகக் கையாள்கிறார். கணவன் கண்ணுக்கு அழகானவன். மனத்திற்கு இனிமையானவன். அந்த அழகும் அவ்வினிமையும் இந்த மாம்பழத்திற்குக் கிடையாதாம். அணி வேற்றுமையாக இருந்தாலும் மாம்பழத்தின் உருவும் பண்பும் கணவனுக்கும் பொருந்துமாறு உவமம் புணர்த்தியிருக்கும் நுண்ணியம் உணரத்தக்கது.

    “குழந்தைகள் பள்ளி விட்டு
    வந்தார்கள் குருவிக் கூட்டம்
    இழந்தநல் உரிமை தன்னை
    எய்தியே மகிழ்வதைப் போல்”

    என்பது ‘சிட்டுக்குருவி போலே விட்டு விடுதலையாகி’ என்னும் பாரதியின் தொடரோடு ஒப்பு நோக்கத்தக்கது.

    பழைமையைப் பழுதுபார்க்கும் பண்டிதர்கள்

    உவமங்கள் அழகியல் சார்ந்தவை என்பது அவற்றின் இலக்கிய  நோக்கம். பொருள் விளக்கம் என்பது அவற்றின் உயிர் நோக்கம். அரசுக்குக் கொள்கைமுடிவு என்பதுபோலப் படைப்பாளனின் கொள்கை அடையாளங்களின் குறிப்பு என்பது கூடுதல் சிறப்பு. இந்தக் கொள்கை அடையாளத்தைப் பெரும்பாலான கவிஞர்கள் வெளிப்படச் சொல்ல மாட்டார்கள். இலைமறை காய்மறையாகத்தான் சொல்வார்கள். சுவைப்பார் அல்லது திறனாய்வார் கண்டறிந்து பந்தி வைக்க வேண்டும். பாரதி பழைமைக்கு எதிரி. அதாவது பயனற்ற பழைமைக்கு எதிரி. இந்தப் பழைமை எதிர்ப்பை அவன் தனது எல்லாப் படைப்புக்களிலும் பதிவு செய்திருக்கிறான். இந்த மூடநம்பிக்கை, பொருளற்ற பழைமை இவற்றில் பாரதிக்கு இருந்த உறுதியும் தெளிவும் கனகசுப்புரத்தினம் பாரதிதாசன் ஆவதற்கான காரணங்களுள் தலையாயது.

    “பழமை பழமை என்று பாவனை பேசலன்றிப்
    பழமை இருந்தநிலை கிளியே
    பாமரர் ஏதறிவார்?”

    என்னும் பாரதியத்தை உள்வாங்கிய பாரதிதாசன் அந்தக் கருத்தினோடு தமக்கிருக்கும் ஒத்திசைவைக் குடும்பத்தின் ஒருநாள் நிகழ்ச்சியில் வைத்துக் காட்டுகிறார். காலைமுதல் அனைத்துக் கடமைகளையும் முடித்த தலைவி இறுதியாகப் பசுவுக்கும் கன்றுக்கும் வைக்கோல் வைப்பதற்கு முன்னால் இந்த உவமத்தைப் பயன்படுத்துகிறார். எப்படி?

    “கண்டு, படுக்கை திருத்தி, உடை திருத்திக்
    காற்றில்லாப் போதினிலே விசிறி வீசி,
    வண்டுவிழி திறக்குமொரு குழந்தை தண்ணீர்
    வையென்னும் ஒன்றுதலை தூக்கிப் பார்க்கும்!
    பண்டிதரின் பழங்கதையின் ஓட்டைக் கெல்லாம்
    பணிக்கையிடல் போல்அனைத்தும் தணிக்கை செய்தே!”

    படுக்கை திருத்துவது முதலாகத் தொடங்கிக் குடி தண்ணீரைத் தலைமாட்டில் வைப்பதுவரை தலைவி செய்யும் செயல்களுக்கெல்லாம் பழைமையைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றும் பண்டிதர்களின் செயல்களை உவமமாக்கியுரைக்கிறார் பாரதிதாசன்.

    பாகற்காய் கசக்கும்! பாடல் இனிக்கும்

    ‘குடும்ப விளக்கு’ பலவகைகளில் தமிழ்க்கவிதைகளிலும் காப்பியங்களிலும் புதுமை தேக்கி நிற்கும் சிறப்புடையது. கணவன், மனைவி இரவில் படுக்கையில் சந்திக்கின்ற காட்சியைப் பண்பாட்டுடன் முதன்முதலில் சித்திரித்துக் காட்டிய பெருமை பாவேந்தருக்கு உண்டு. தனிமனிதன் குடும்பமாகிறான். குடும்பம் தெருவாகிறது. தெரு ஊராகிறது. ஊர் நாடாகிறது. நாடு உலகம் ஆகிறது என்பதுதான் மகாகவி பாரதி, பாரதிதாசன் ஆகியோர்தம் சமுதாயக் கட்டுமானக் கொள்கையாகும். இந்தக் கருத்தியலைப் பாவேந்தர் படுக்கையறையில் வைத்துக் காட்டுகிறார். பகலெல்லாம் தலைவி வீட்டிலும் தலைவன் கடையிலும் உழைத்து வந்து படுக்கையில் விழுகின்ற நேரத்திலும் சுயநலம் நோக்காத அவர்தம் மனநிலையைப் பதிவு செய்கிறார்.

    “கண்டான் கண்டாள் உவப்பின் நடுவிலே ஓர்
    கசப்பான சேதியுண்டு கேட்பிர் என்றாள்”

    மனைவி இதனைச் சொன்னவுடன் கணவன் சொல்லுகிற சொல்தான் காப்பியத்தை நினைக்க வைக்கிறது. கணவன் சொல்லுகிறான்,

    “மிதிபாகற்காய் கசக்கும் எனினும் அந்த
    மேற்கசப்பின் உள்ளேயும் சுவையிருக்கும்”
    அதுபோலத் தானேடி? அதனால் என்ன
    அறிவிப்பாய் இளமானே! என்றான் அன்பன்”

    மிதிபாகற்காயை அறிந்தாலேயொழிய இந்த உவமத்தை உள்வாங்க முடியாது. பாகற்காயில் பலவகை உண்டு. இவற்றுள் மிதிபாகற்காய் என்பது படியில் அளந்து கொடுப்பார்கள். மேற்புறம் இருக்கும் கசப்பு குறைவாகவும் உள்ளிருக்கும் இனிப்பு அதிகமாகவும் இருக்கும். பாகற்காய் கசக்கும் என்பது இதற்கு அவ்வளவாகப் பொருந்தாது. பக்குவப் பெண்கள் சமைத்தால் இனிப்பு இருமடங்காகும். இந்தப் பாகற்காயை மனைவியின் பேச்சுக்கு உவமித்ததன் மூலம் தலைவி சொல்லவரும் கருத்து இனிப்பானதே என்ற சிந்தனையோடு அணுகுகிறான் தலைவன். தலைவி அப்படி என்ன பேசுகிறாள் படுக்கையறையில்?

    “அதிகாலை தொடங்கி நாம்இரவு மட்டும்
    அடுக்கடுக்காய் நமது நலம் சேர்ப்பதல்லால்
    இதுவரைக்கும் பொதுநலத்துக்கென்ன செய்தோம்
    என்பதைநாம் நினைத்துப்பார்ப் பதுவும் இல்லை”

    இவைதான் அவள் பேசிய கசப்பான சேதி!. உள்ளே இருக்கும் சுவை என்ன? மனைவி இரவில் சொல்ல வந்ததைக் கணவன் பகலிலேயே செய்து முடித்துத் தமிழினத்தின் உயர்வுக்கான சிந்தனையோடு வீடு வருகிறான். அவனுடைய பேச்சைக் கேட்டு மனைவி முடிக்கிறாள் இப்படி!

    “பழம் இடுவேன்! சர்க்கரைப்பால் வார்ப்பேன்! உங்கள்
    பண்பாடும் வாய்திறப்பீர், அத்தான்! என்றாள்!”

    உள்ளத்தால் இணைந்த கணவன் மனைவியர்தம் இல்லறத்தின் நோக்கம் பொதுநலம். விடுகதை போடலாம் என்று மனைவி எண்ணியிருந்தாள். கணவன் விடையோடுதான் வந்திருக்கிறான் என்பதை அவள் அறியாள். மனைவி சொல்லிக் கணவன் செய்வதைவிடக் கணவன் சிந்திப்பதையே மனைவி எண்ணுவது சிறந்தது. சொல் கசப்பாயிருக்கலாம். பொருளும் பயனும் இனிப்பானவை என்பது கருத்து.

    நிறைவுரை

    வைகறையில் தொடங்கி முன்னிரவில் நிறைவு செய்து காட்டியிருக்கும் ஒருநாள் நிகழ்ச்சியில் பாவேந்தர், குடும்பப் பாங்கான உவமங்களையே கையாண்டிருக்கிறார். ‘வண்டுவிழி’, ‘அன்றிலடி நாமிருவர்’, ‘குன்றத்தில் படர்ந்த மலர்க்கொடி’, ‘செங்காந்தள் நிகர் விரல்’, ‘பூவிதழ் மேல் பனிதூவிய துளிபோல்’ என்றெல்லாம் ‘தொட்ட இடமெல்லாம் தட்டுப்படும்’ உவமங்களால் நிறைந்தது ஒருநாள் நிகழ்ச்சி!  ஒருநாள் சித்திரிப்பில் ஓராயிரம் உவமங்கள். ஆனால் அவை அழகு பெற்றதும் அழியா வாழ்வு பெற்றதும் தமிழிலக்கியத்தில் புதுத் தடம் கண்டதும் காட்டியதும் பயன்படுத்தப்பட்ட உவமங்களால் என்பது அவ்வுவமங்களில் மனங் கரைந்தார்க்கே புலனாம்.

    (தொடரும்…)

    Share
  • குறளின் கதிர்களாய்…(382)

    குறளின் கதிர்களாய்…(382)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்…(382)

    எண்ணியா ரெண்ண மிழப்ப ரிடனறிந்து
    துன்னியார் துன்னிச் செயின்.

    – திருக்குறள் – 494 (இடனறிதல்)

    புதுக் கவிதையில்

    தான் வினையாற்றத்
    தக்க இடத்தினை ஆய்ந்தறிந்து
    அங்கே
    தகுந்த பாதுகாப்புடன் செயலை
    மன்னர் செய்வாராயின்,
    அவரை வெல்ல
    எண்ணிவரும் பகைவரும்
    எண்ணமதை இழப்பரே…!

    குறும்பாவில்

    தகுமிட மறிந்தே யதற்குத்
    தக்கவாறு பொருந்திச் செயல்படின், பகையுடன்
    தாக்கவரும் வயவரும் செயலழிவர்…!

    மரபுக் கவிதையில்

    தம்செயல் தன்னைச் செயல்படுத்தத்
    தக்க இடமதை நன்கறிந்தே
    செம்மையாய்த் தேர்ந்தே யெடுத்திடுவர்
    செயலின் திறனறி மன்னரெலாம்,
    நம்பியே தேர்ந்த இடத்தினையே
    நாடும் திறனுடை மன்னவனை
    வம்பிலே வெல்ல வரும்பகைவர்
    வாடித் திரும்புவர் கருத்தழிந்தே…!

    லிமரைக்கூ

    நன்கறிந்தே செயலுக்கேற்ற இடத்தை,
    பாதுகாப்புடன் செயல்படின், பகைவரையும் எண்ணமழியச்
    செய்துவிடும் மன்னரின் நடத்தை…!

    கிராமிய பாணியில்

    எடமறியணும் எடமறியணும்
    தகுந்த எடமறியணும்,
    எதிரி வந்தாலும்
    தாக்க முடியாத
    எடமறிஞ்சி செயல்படணும்..

    தான் செயல்பட
    தகுந்த எடத்த நல்லாத்
    தெரிஞ்சிவச்சிக்கிட்டு
    தக்க பாதுகாப்போட
    ராசா செயல்பட்டா,
    அவரச் செயிச்சிரலாமுண்ண
    எண்ணத்தில வாற
    எதிராளி கூட
    எண்ணமழிஞ்சி போவானே..

    அதால,
    எடமறியணும் எடமறியணும்
    தகுந்த எடமறியணும்,
    எதிரி வந்தாலும்
    தாக்க முடியாத
    எடமறிஞ்சி செயல்படணும்…!

    Share
  • Kamakshi Paatti

    Kamakshi Paatti

    Baskar Seshadri

    It was a wonderful Evening. It was too chill and i was almost near the Beach Front. But my Visit was not to be in the Seashore. It was a Visit and a meeting i have been longing for long Years and it happened few days back. Yes, it was a meeting with Kamakshi Paatti of Besant Nagar. People who live in adayar and Besant nagar Belt will surely know who she is.

    She is a fighter and stands first when it comes to a civic Issue. Stake holders of the Governments are all well aware how she is straight forward and strong in handling an issue. Whether it’s the Besant Nagar Karl Schmidt Memorial or a storm water drain erection she stands in the Forefront to talk to officials over phone and handles effectively to get the issue redressed. She was on High Praise of the top officials like Rajesh Lakhoni, Vijay Pingle, Bedi of GC , Iraiyanbu and few more.

    Years ago the officials of GCC were in a Process of axing few trees on Avenue road which was not called for. The purpose was enlarging the pavement. Since it was felt that Trees would be affected she went to the spot and protested against the act of the Officials. People realized her concern and the officials stopped the action immediately

    Sample one More – She found a Policeman near her House some time back sipping a tea and discarding the cup on the road. She went straight to him and told to take it and drop it in the Dust bin. And he did it immediately, it’s just because of not a civic sense alone but the boldness and the age matters too. She has a lot of stories to share as she has been doing for almost three decades since she came to Chennai from New Delhi. She says she loves to do what she is meant for. If i don’t act i will die. This was exactly what she told during the one hour tete e tete . When our society has little care of the environment and civic sense her courage and determination is a classic example of how a Social Activist should be. She was of a Great praise on Vincent D Souza of Mylapore Times and Sridhar Venkatraman of Mylapore.

    When i feel too tired to handle an issue i get dejected sooner but Kamakshi Patti is never tired and she is an energizer and a role model to everyone. Our salutes to Paatti, Atthai Pattti, Old Lady as being called by the officials and the residents of that area.

    Thanks to Sridhar Venkatraman to make her reach me and i was glad that i could make it make it to her after long months of Conversation.

    Thank you Paatti for the Lovely Hot coffee and Biscuits which added my energy further more after the meeting. And she was active, brisk to do everything on her own and was communicating perfectly with no Aid .

    You should believe this to see her and she is ninety Four Years Young.

    My Respects and Namaskaram to you. You are an asset to this Community and i Bow my head to what all you do to one and all around us.

    Share