படித்தேன்! சுவைத்தேன்! பகிர்ந்தேன்! – 8

0

முனைவர். ச.சுப்பிரமணியன்

‘வெற்றிப் பேரொளி’ பாவலனுக்கும் உண்டு ஓர் பாடாண் திணை! 

முன்னுரை

பொதுவாகப் பாடாண்திணைப் பாடல்களும் கையறுநிலைப் பாடல்களும் மன்னனை நோக்கியனவாகவே அமையும்.! மிகச் சிறிய அளவில் கையறு நிலைப்பாடல்கள் பாவலரை நோக்கி அமைவதுண்டு. மன்னனையே பாடிய புலவர்கள் தம்மையொத்த புலவர்களையும் பாடுவது அரிது. அவர்கள் மறைவுக்குப் பின் கவிஞன் ஒருவனுக்காக மற்றொரு கவிஞன் பாடும் கையறுநிலையும் மிக அரிதான நிகழ்வாகவே கருதப்படுகிறது.  கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்து உயிர்துறந்த காலை, கண்ணகனார், பொன்முடியார் ஆகிய சான்றோர்கள் பிசிராந்தையாரின் பெருமையை அவர்தம் இறுதி நொடியில் பாடியிருக்கிறார்கள். அதற்குப் கவிமணி சிலருக்குச் சில கையறுநிலைகளைப் பாடியிருக்கிறார். பின்னாலே பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்திற்காகக் கண்ணதாசன் கையறுநிலை பாடினார். ஆனால் கண்ணதாசன் மறைவுக்காக யாரும் கையறுநிலை பாடியதாகத் தெரியவில்லை. பாடியிருந்தாலும் அது மக்களிடையே செல்வாக்கு பெற்றிருந்ததா என்பது ஐயமே. ‘‘தமிழாற்றுப்படை’ என்னும் நூலில் திரு வைரமுத்து, கூறியுள்ள கருத்துக்களும் புதுக்கவிதை வடிவத்தில் திரு வாலி எழுதிய அஞ்சலிக் கவிதை வரிகளையும் கையறுநிலை அடர்த்தி கொண்டவையெனக் கருதுதற்குத் தயக்கம் ஏற்படுகிறது.   கவிஞன் கண் மூடியபின் பாடப்படும் கையறு நிலைக்கே இந்தக் கதி என்றால் பாடாண் திணை பற்றிச் சொல்லவேண்டியதே இலலை.

இந்தக் கட்டுரையில் பாடாண்திணை

பாடுதலாகிய தொழிலையும் பாடப்படும் ஆண் மகனையும் குறிக்காது அவனுடைய பெருமைக்குரிய ஒழுக்கமே பாடுபொருளாவதால் இதற்குப் பாடாண்திணை எனப்பெயராயிற்று.. திணையாகிய இந்த ஒழுக்கம் இந்தக் கட்டுரையில் கவித்திறன் என்ற பொருளில் பயன்படுத்தப்படுகிறது. அதாவது வாழுகின்ற படைப்பாளன் ஒருவனின் கவித்திறத்தையும் பண்பாட்டுக் கூறுகளையும் மற்றொரு பாவலன் பாடுகிற பாடாண் திணயாகக் கொள்ளப்படுகிறது. கவிஞன் ஒருவனை மற்றொரு கவிஞன் பண்பாடு கருதிப் பாராட்டுவதே அரிதானதொரு சமுதாயச் சூழலில் அவனுடைய கவித்திறத்தையே பாடுபொருளாக்குவது  அரிதினும் அரிதல்லவா? ஒரு முகநூல் பதிவில் நான் கண்ட கவிதை பற்றிய திறனாய்வாக இது அமைகிறது.

கவிதையைத் தேடும் கண்கள்

கலம்பகம் பார்த்து ஒரு கலம்பகமும் அந்தாதி பார்த்து ஒரு அந்தாதியும் பிள்ளைத்தமிழ் பார்த்து ஒரு பிள்ளைத்தமிழும் எழுதினார்கள் எழுதியதற்குக் காரணம் கவித்துவம் பொங்கியது என்றார்கள். என்னவாயிற்று?.  எத்தனைக் கலம்பகம் நிற்கின்றன?  எத்தனை அந்தாதி நிற்கின்றன? எத்தனைப் பிள்ளைத்தமிழ் நிற்கின்றன? ஒரு நந்திக்கலம்பகம்! ஒரு அபிராமி அந்தாதி! ஒரு மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்! மற்றவை என்ன ஆயின? எனவே கவித்துவம் என்பது ஒரு முழு இலக்கியத்தில்தான அமைந்திருக்கும் என்று எண்ணுவதே சிந்தனைப் பிழை! நான் அடிக்கடி எழுதி வருகிறேன். சில வெற்றசைகளில் கூட கவித்துவம் அதாவது கவிஞனின் உணர்ச்சி வெளிப்பட வாய்ப்புண்டு. உணர்ச்சி ஆழமாக இருந்தால் போதும்! கவிதை ஆழமாகவே பதிவாகும்! அதன் வெளிபபாடும் உறுதியாக இருக்கும்.

பாடுபொருளா? படைப்பாற்றலா?

பாடுபொருளால் படைபபாளன் சிறக்கிறானா? படைப்புத் திறமையால் பாடுபொருள் சிறககிறதா? இது ஒரு பட்டிமன்ற வினா! இரண்டும் சிறக்கிற நேர்வுகள் மிகக் குறைவு. திருக்குறளால் திருவள்ளுவர் சிறக்கிறார். திருவள்ளுவரால் திருக்குறள் சிறக்கிறது. ஆனால் இராமகாதையால் கம்பன் சிறக்கிறானா? கம்பனால் இராமகாதை சிறக்கிறதா என்றால் கம்பனால்தான் இராமகாதை சிறக்கிறது என்பது அனைவரும் அறிந்த உண்மை. காரணம் இராமகாதையை யார் யாரோ எழுதியிருக்கிறார்கள். ஆழ்வார்கள் பாடியிருக்கிறார்கள். இந்தியத் துணைக்கண்டத்தில் பெரும்பாலும் அனைத்து மொழிகளிலும் இராமாயணம் பாடப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது கம்போடியா உள்ளிட்ட நாடுகளிலும் இராமகாதையின சாரம் உணரப்படுவதாக அறிகிறோம். ஆனால் நம்முடைய தமிழில் கம்பனின் கவியாளுமைக்குமுன் மற்ற படைப்புக்கள் மங்கி ஒளியிழந்துவிடுகின்றன என்பதே  அறிஞர் கருத்தாக உள்ளது. பாரதியின் பாஞ்சாலி சபதம் பாரதக் கதைக்குள் புத்தொளி பாய்ச்சுவதை உணர வேண்டும். வெற்றிப் பேரொளியின் கவிதையில் திணையும் சிறக்கிறது. பாடியவரும் சிறக்கிறார்!

படைப்பாளன் நிலைப்பது எப்படி?

பாடுபொருள்களும் படைப்பாளர்களும் எண்ணிக்கை முரணில் அமைந்திருக்கிறார்கள். அதாவது படைப்பாளர்களைவிட பாடுபொருள் எண்ணிக்கையில் குறைவு. சான்றாகக் கறபு என்னும் பாடுபொருள் கபிலரால் பாடப்ட்டுள்ளது. இளங்கோவால் பாடப்பட்டுள்ளது. கம்பனால் பாடப்பட்டுள்ளது. பாரதியால் பாடப்பட்டுள்ளது. மயூரம் வேதநாயகராலும் பாடப்பட்டுள்ளது. ஆனால் அது யாருடைய படைப்பில் சிறந்து விளங்குகிற்து? இந்த வினாவிற்கு விடை நுகர்வோருக்கு ஏற்ற வகையில் மாறுபடலாம். பொதுவான கருத்துநிலையில் இளங்கோ முதலிடத்தைப் பெறுகிறார். இது கவிஞர்களின் ஒப்புமையால் வந்ததன்று. கவிதைகளின் தாக்கத்தால் ஏற்பட்ட அனுபவ விளைவு!.

கவிஞனைப் பாடுபொருளாக்கிய கவிஞன்

‘கம்பன் என்றொரு மானுடன் வாழ்ந்ததும்’ என்பார் பாரதி! ஆனால் இளங்கோவைச் சொல்லுகிறபோது ‘சேரன் தம்பி சிலம்பை இசைத்ததும்’ என்பார். .இறைவனை மனிதனாக்கிப் பாடியதால் வந்த பெருமை முந்தையது. பத்தினிப் பெருமையைப் பாட்டில் சொன்னதால் வந்த பெருமை பிந்தையது. முன்னதில் படைப்பாளனும் பின்னதில் பாடுபொருளும் சிறந்து நிற்பதை உணரலாம்.  கவிஞர் வசந்தராசன் சென்னை மாதவரத்தில் பால்பண்ணைக்கு இணையாகக் கவிப்பண்ணை நடத்திக் கொண்டுவரும் கவிஞர். கவிஞர் வெற்றிப்போரொளி தஞ்சை சீனிவாசநகரில் பேரன் பேத்தியரைக் கவிதைகளோடும் கொஞ்சி விளையாடும் எழுபது வயது இளைஞர். முன்னவர் உரத்தொழிற்சாலையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். பின்னவர் தொடக்கப்பள்ளித் தலைமையாசிரியராகப் பணியாற்றி அந்தப் பணியில் இருந்து மட்டும் ஓய்வு பெற்றவர். முகநூல் எழுத்துக்களால் எனக்கு இனிப்பான இவர்களை. நான் நேரில் கண்டதே இல்லை என்பது உண்மை. தங்கத் துண்டுகளைச் செம்பினால் பற்றாசிட்டு இணைப்பதைப் போல இந்தக் கட்டுரையில் இவர்களை நான் இணைக்க முயன்றிருக்கிறேன்.

கவிக்கோவின் செங்கோல் 

தமிழ்நாட்டுக் கவிஞர்கள் தங்கள் பெயர்களுக்கு முன்னால் வைத்துக் கொள்ளும் அல்லது போட்டுக் கொள்ளும பட்டங்களில் மன்னராட்சி ‘வாடை’ அடிப்பதை அனைவரும் உணரலாம். இது மக்களாட்சிக் காலம்! மன்னராட்சிக் காலத்தில் கூட வெண்பாவிற் புகழேந்தி என்றுதான் சொன்னார்கள். தற்காலத்தில் ஒருவர் ‘வெண்பாப்புலி’ என்று பயமுறுத்துகிறார். ஒருவர் ‘கவிப்பேரரசு’ என்கிறார். மற்றொருவர் அடக்கமாகச் சொல்வதாக நினைத்துக் கொண்டு ‘கவியரசு’ என்கிறார். இன்னொருவர் ‘அரிமாப் பாவலர்’ என்கிறார். வேறொருவர் ‘கவிக்கோ’ என்கிறார். அன்பின் காரணமாகச் சமுதாய மக்கள் தருகின்ற பட்டங்களை விமர்சிப்பது நமது நோக்கமன்று. இதுபற்றிய ஒரு விழிப்புணர்வைத் தூண்டுவதுதான் நோக்கம். எனக்குத் தெரிநதவரை பாரதியாருக்கு மகாகவி என்ற பட்டமும் பாரதிதாசனுக்குப புரட்சிக்கவிஞர் என்ற பட்டமும் சுரதாவிற்கு உவமைக் கவிஞர் என்ற பட்டமும் பொருந்திவருவதற்கு அவர்தம் படைப்புக்களே காரணம். ஒரு படைப்பைக் கூட முழுப்படைப்பாய்த் தரவியலாதவர்கள் போட்டுக் கொள்ளும் பட்டங்கள் பட்டங்களாகவே பறக்கின்றன.  இந்தப் பாடாண் திணைப் பாட்டின நாயகனாக இருப்பவர் கவிக்கோ என்ற பட்டத்துக்கு உரியவர் தம்பி வசநதராசன் அவர்கள். அவருக்கு அன்பர்கள் தந்த பட்டம் அது. அவருடைய படைப்புக்களை நான் ஆழ்ந்து நோக்கிப் பயின்று வருகிறேன். அந்தப் பட்டத்தைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்ற முனைப்பில் அவர் தொடர்ந்து எழுதிவருவது நெஞ்சிற்கு இனிமையையும் அமைதியையும் தருகிறது, இப்படித்தான் கவிஞர்கள் இருக்க வேண்டும். யாப்பினைப் பொருத்தவரையில் வசந்தராசன் விருத்தங்களில் ஒன்றிரண்டு வகைகள், வெண்பாக்களில் நேரிசை வெண்பாக்கள், எனத் தம்  வடிவ எல்லையை வரையறுத்துக் கொண்டிருக்கிறார். எண்ணங்களைப் பதிவு செய்வதில் சீர்பிரிப்பு மிக முக்கியமானது. சொற்களை அறுத்துக் கட்டத் தெரிந்திருக்க வேண்டும். அவர்தான் திணை நாயகர். தம் நாயகரைப் பற்றிய தமது பாடலில் பேரொளி இப்படி எழுதுகிறார்.

“இனிக்கின்ற செங்கரும்பின் சாறு! “

கவிதையின்பத்தைச் செங்கரும்புச் சாறாக உருவகம் செய்வதில் சில நுண்ணியங்களைக் காணுகிறேன்.  சாறு பருகினால்தான் சுவை தெரியும். கண்ணால் பார்ப்பதாலோ பிறர் அருந்துவதைக் காண்பதாலோ அதன் இனிப்புச் சுவையை உணர  முடியாது. ‘கொங்கு நாட்டுச் செங்கரும்பு’ என்பது செங்கரும்பின் விளைநிலம் பற்றிய சொல்லாடல். இந்தத் தொடரில் இருக்கின்ற இனிக்கின்ற என்னும் பெயரெச்சத்தைக் ‘கரும்பு’ என்பதோடும் ‘சாறு’ என்பதோடும் பொருத்தி ‘இனிககின்ற கரும்பு’ ‘இனிக்கின்ற சாறு’ எனப் பொருளுணர வேண்டும். ஒரே பொருளில் இருவகை உவமங்களைப் பொருத்திகாட்டும் நுண்ணியம் பாவேந்தருக்கு வெகு இயல்பு!

“உணவுண்ணச் சென்றாள் அப்பம்
உண்டனள் சீனி யோடு
தணல் நிற மாம்பழத்தில்
தமிழ்நிகர் சுவையைக் கண்டாள்
மணவாளன் அருமை பற்றி
மனம் ஒரு கேள்வி கேட்க
இணையில்லா அவன் அன்புக்கு
ஈடாமோ இவைகள் என்றாள்”

என்று தலைவி உணவுண்ணச் சென்ற காட்சியைச் சித்திரிக்கிறார். தலைவி உண்டது மாம்பழம்.  மாம்பழத்தைக்  கண்ணால் நிறத்தைக் காணுகிறாள். உண்டு சுவையை உணர்கிறாள். தணல் நிற மாம்பழம் என்றதால் உரு உவமை. தமிழ் நிகர் சுவை என்றதால் பண்புவமை. இத்துடன் இன்னொரு உவமத்தையும் வெகுநுட்பமாகக் கையாள்கிறார். கணவன் கண்ணுக்கு அழகானவன். மனத்திற்கு இனிமையானவன். அந்த அழகும் இனிமையும் இந்த மாம்பழத்திற்குக் கிடையாதாம். அணி வேற்றுமையாக இருந்தாலும் மாம்பழத்தின் உருவும் பண்பும் கணவனுக்கும் பொருந்துமாறு உவமம் புணர்த்தியிருக்கும் நுண்ணியத்தைப் பேரொளியின் படைப்பிலும் பொருததிச் சுவைக்கலாம். ‘செங்கரும்பு’ என்பது கவிதையின் புறக்கூறுகளுக்கும் ‘சாறு’ என்பது கவிதைச் சுவையாகிய  அகக்கூறுக்குமான உவமம் என்பதை உணர்ந்து அனுபவிக்க இயலும். இனி கரும்புக்குக் கொடுக்கப்பட்டுள்ள ‘செம்மை’ என்னும் அடைமொழி ‘செவ்விளநீர்’ ‘செங்காந்தள்’ என்பதுபோல நிறம்பற்றியதாக இருப்பினும் அது இனிமையை உணர்த்தியதாகவும் கொள்ளலாம்,.  ‘செந்நா’ என்றவழி நிறத்தைக் குறிக்காது பொய்கூறாப் பண்பைக் குறிப்பது போல. கரும்பு பற்களால் நூறுகிறபோதும் சாறாக அருந்துகிறபோதும் இனிமை என்பது கருத்து. வசநதராசன் பாடல்களைச் சொல்லிச் சுவைக்கிறபோதும், எண்ணி மகிழ்கிறபோதும இனிக்கின்றன என்பது மையக்கருத்து!

யாப்புத் தோப்பு!

கவிதையில் ஒருவரைக் கவர்வது இதுதான் என்று வரையறுக்க இயலாது. யாப்பினைக் கண்டு மலைப்பார் உண்டு. கற்பனையை வியப்பார் உண்டு. கருத்துக்களை நயப்பார் உண்டு. உணர்ச்சி கண்டு உருகுவார்  உண்டு. வசந்தராசன் கவிதைகளின் யாப்பினாலும் கவரப் பெற்றிருக்கிறார் வெற்றிப் பேரொளி

“யாப்பில்
கனிச்சுளைகள் பந்தி வைக்கும் தோப்பு !

தமிழ்க்கவிதைகள் எந்த யாப்பில் அமைந்திருந்தாலும் பெரும்பாலும் அவை  காய்ச்சீர் கனிச்சீர் விரவப்பெற்றே அமைந்துள்ளன.  வாய்பாட்டில் சொற்களை அமைத்துத் திணறுவார் நடுவே சீர்களில் வாய்பாட்டைக் காணும் நுண்ணியம் தெரிந்தவர் வசந்தராசன் ‘யாப்பில் வந்தடங்கும வார்த்தைகளே கவிதையாகும்’ என்பார் சுரதா. சொற்களை அடக்கியாள்பவனுடைய கவிதை  வாழா வெடடியாகிவிடும். சீர்களோடு உறவாடுபவனை விட்டுக் கவிதைக் காதலி பிரியமாட்டாள். தான் சரியாகக் கையாளப்படுகிறோமா என்னுங் கவலை ஒவ்வொரு சீர்களுக்கும் இருப்பதைக் கவிதைக் கணவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். வசந்தராசன் புரிந்து கொண்டார் என்பதைத் தானும் புரிந்து கொண்டு நமக்கும் புரிய வைத்திருக்கிறார் வெற்றிப் பேரொளி.

பழந்தமிழார் கவிக்கோ

இந்தத் தொடரில் பழந்தமிழர் என்பதே ‘பழந்தமிழார்’ என்று பிசகியிருக்மோ என்னும் ஐயம் சிலருக்கு வரக்கூடும். வசந்தராசன் மரபு தழுவிய கவிஞர். அவரைப் போலவே வெற்றிப் பேரொளியும் மரபு தழுவிய கவிஞர். சில நேர்வுகளில் நடைமேடைக்காகத் தண்டவாளம் மாறினாலும் மீண்டும் தலைவழிக்கே (MAIN LINE) வந்து விடுவார். ஆர்தல் – நிறைதல் தமிழார் கவிக்கோ என்றால் தமிழ்க்கூறுகளால் நிறையப்பெற்றவர் கவிக்கோ என்று பொருள்.

  1. ‘‘நெஞ்சில் இளநீரைச் சுமக்கின்ற அன்பு’
  2. “ஈரக் கால்வாய்கள் கண்ணிரண்டும்”
  3. ‘வாழத்தும் போது தலைமடையின் பெருக்கெடுப்பு’
  4. நனைந்தோரெல்லாம் பனிக்காலை பரங்கிப்பூக்கோல வீதி!

என்றெல்லாம பாட்டுடைத் தலைவனைப் பாடுகிறார் பேரொளியார். “பாடாண்” என்பது பாடுதல் வினையையும் பாடப்படும்  ஆண்மகனையும் நோக்காது அவனது ஒழுகலாறாகிய திணையுணரத்தினமையின் வினைத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை’ என விளக்கம் தருவார் நச்சினார்க்கினியர்.  பாட்டுடைத் தலைவனின் பன்முகப் பண்பு நலன்களையும் தொகுத்துக் கூறி நச்சினார்க்கினியரின் விளக்கத்துக்கு இலக்கியம் செய்திருக்கிறார் பேரொளியார்.  இநத விருத்தத்தைக் ‘கவிக்கோவின் செங்கோல்’ என்று நிறைவு செய்திருக்கிறார்.  வேந்தர்கள் கையில் செங்கோல் இருக்கும். முறை செய்து மக்களைக் காப்பாற்றினால்தான் அது செங்கோல்!. இல்லாவிடின் அது கொடுங்கோல். வசந்தராசன் பாடல்களின் கவிதைக்குரிய அத்தனைப் பண்புகளும் நிறைந்து வழிவதால் அவர் கையில் இருப்பது செங்கோல் எனச் சொல்வதன் மூலம் கவிக்கோ என்பதை நியாயப்படுத்துகிறார்.  உண்மையை உரக்கச் சொல்லும் உரம் இது!.

இனத்தோட்டக் காவல்காரன்

பாடுபொருளில் ஒன்றிய மனம் மூளையிலிருந்து விலகித் தனித்துவமிக்க படைப்புலகில் சஞ்சாரம் செய்யப் புறப்பட்டுவிடும். கவியெழுதுகிற காலங்களில் கவிஞர் அனைவருக்குமான பொது நியதி. அனுபவம் இது. “நீல நெருக்கடியில் நெஞ்சு செலுததி நேரம் கழிவதினும் நினைப்பின்றியே சாலப் பலப்பல நற்பகற்கனவில் தன்னை மறந்த லயம் தன்னில் இருந்தேன்” என்று பாரதி பாடுவார். பேரொளியார் அடைந்த அத்தகைய மனநிலையைப் பின்வரும் வரிகள் உணர்த்துகின்றன. ஒரே சொல்லை வைத்துக் கொண்டு சில பேர் வித்தை காட்டுவார்கள். அந்த வித்தை காண்பார்தாம் புருவத்தை உயர்த்தக்கூடும். இதயத்தை அந்நியப்படுத்திவிடும்

“தேரோட்டத் திருவிழாதான் கவிதை மன்றில்!
தேனோட்டப் பெருவெள்ளம் புலமை யாற்றில்!

வசந்தராசனின் கவித்ததிறனையும் புலமைத் திறனையும் இவ்வாறு சுட்டிச் செல்லும் பேரொளி, சோம்பல் முரிக்கும் கவிதைகளில் தீப்பாய்ச்ச வந்தவன் என்கிறார். பகுத்தறிவுச் சிந்தனையில் வளர்ந்த வசந்தராசன் தாய்மொழி தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் தமிழ் இனத்திற்கும் எத்தகைய பணிகளைச் செய்து வருகிறார் என்பதைக்

குளிரோட்டக் கவியோட்ட வசந்த ராசன் !
ஈரோட்டுப் படைவீட்டுக் களத்து வீரன் !
இனத்தோட்ட வாசலிலே காவல் காரன்!

என்னும் வரிகளால் எடுத்துக் காட்டுகிறார்  சங்க இலககியப் பாடாண்திணைப் பாடல்கள் மனனர்களைப் பற்றியே அமைந்து போனதால் வீரத்தினையும் பாராண்ட மன்னர்களின் பண்பு  நலன்களையுமே திணை என்னும் சொல்லால குறித்தனர். மக்களாட்சி மாண்புகள் மலிநதுள்ள தற்காலத்தில் அத்தகைய பாடுபொருள் கிட்டாது. கிடைக்காது. கிடைத்தாலும் மணக்காது! இன்றைக்கு ஒரு மாநிலத்து முதலமைச்சர் அடுத்த மாநிலத்தில் படையெடுக்க முடியாது. மன்னர்களின் கொடைப்பண்பு கூட அவர்கள் போரில் பெற்ற வெற்றியைச் சார்ந்தும் அதில் கொண்டு வரும் பொருளைக் கொண்டுமே அமைந்திருந்த காலம் அது. எனவே பாடாண் திணை என்பதன் பொருண்மை முற்றிலும் மாறுபட்டு நிற்கின்ற தற்காலத்தில் ஒப்பற்ற தனித்திறனும் அரிய ஒழுகலாறுகளும் பண்புநலன்களுமே பாடுபொருளாகக் கூடியன. பதவிகளுக்காகக் கட்சி மாறுபவர்களைப் பாடுவது பாடாண்திணை ஆகாது!. ஒழுக்கச் சிதைவோடு கூடிய எந்த மன்னனையும் தமிழ்க்கவிதை பாடியதில்லை!. மொழி, நாடு, இனம் என்னும் பாடுபொருள்களைத் தனித்துவமான கவிதைகளில் பாடும் வசந்தனுடைய தனித்திறனும் உயர் பண்புகளுமே பேரொளியின் பாடாண்திணை பாடலுக்கான உள்ளடக்கமாகத் திகழ்கின்றன.

நிலைக்கின்ற மின்சொற்கள்

‘புறப்பொருள் வெண்பா மாலை’ என்று ஓர் இலக்கியம் தமிழில் உண்டு. வெண்பாக்களால் ;ஆன அந்த நூலில் ;அமைந்த வெணபாக்களுக்கு மின்னல் வெண்பாக்கள் என்றே பெயர். காரணம் அளவுக்கு அதிகமான  இனிப்பு. சுவையோ சுவை! புறப்பொருளுக்கான இலக்கணம் கூறும் நூலெனினும் முழுமையும் கற்பனையையே உள்ளடக்கமாகக் கொண்ட வெண்பாக்கள். இது பற்றிப் பேரொளி அறிந்திருப்பாரா என்பது நமக்குத் தெரியாது.

காலத்தை வென்ற சொற்களும் தொடர்களும்

கவிதைகளில் எலலாச் சொற்களும் நிலைதது விடாது என்பதும் சில சொற்களைக் காலம் நினைத்தாலும் அழிகக முடியாது என்பதும் பேரொளிக்கு நன்றாகத் தெரியும். காரணம் அவர் ஒரு கவிஞர். படைப்பாளி.  யாதும் ஊரே யாவரும் கேளிர் என்றவுடன் புறநானூற்றுப் பூங்குன்றன் நினைவில் வருவார். ‘நம்மை மறந்தாரை நாம் மறக்க மாடடோம்’ என்றவுடன் இலக்கியச் சுவைஞர்கள் அத்தனைப் பேரும் பூம்புகார் கடற்கரைக்குச் சென்றுவிடுவார்கள். ‘அண்ணலும் நோக்கினாள் அவளும் நோக்கினாள்’ என்றவுடன் முந்தைய வரிகள் தெரியாதவர்கூட சனகன் அரசவைக்குச் சென்றுவிடுவார்கள்! தருமததின் வாழ்வதனைச் சூது  கவ்வும்., தருமம் மறுபடி வெல்லும் என்றவுடன் பாரதி நினைவுக்கு வருவார்.. ‘தன்னைப் பழித்தவனைத் தாய்தடுத்தால் விட்டுவிடு தமிழைப் பழித்தவனைத் தாய்தடுத்தாலும் விடாதே!; என்றவுடன் இருமிப் படுத்தவனும் எழுந்துவிடுவான். ‘பார்ப்புகட்குக் குடைபிடிக்கும் பறவைத்தாய்’ என்றவுடன் வசந்தன் நினைவுக்கு வருவார்.

  1. ‘சீராட்ட மறந்ததனால் சிதறி விட்டோம்!’
  2. ‘போதிமர வேர் நெய்த தாடி வானம்’
  3. ‘உனைத்தொட்ட விரல் நுனியில் சூரியன்கள்’
  4. ‘ஞானச் செருக்குகளின் நாற்றங்கால்’
  5. ‘கோபுரங்கள் வயதுக்கு விதிவிலக்கு’

என்பன போன்ற தொடர்களால் எதிர்காலத் தமிழக்கவிதைத் திறனாய்வுலகைத் தன் படைப்பு வலையில் சிக்கவைத்திருக்கிறார வசந்தராசன். தம்பி பேரொளி அதனைப் படம் பிடித்துக் காட்டுகிறார்

“மின்னலுக்கு நிலையான வடிவ மில்லை!
மின்சொற்கள் உன்சொற்கள் நிலைக்கும் !”

வசந்தனின் கவிதைச் சொற்களில் பேரொளியே தம் வசம் இழந்த தருணம். முகநூல் படிக்கும் தமிழாசிரியப் பெருமக்கள் வேற்றுமையணியை விளக்கப் பேரொளியின் இந்த வரிகளைப் பயன்படுத்திக் கொணடால் வகுப்பில் பிள்ளைகள் குறட்டை விடும் நேரத்தைக் கொஞ்சம் குறைக்கலாம்.  ஒரே படத்துடன் நடிப்பிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றவர்கள் உண்டு. பணியிலிருந்து நீக்கப்பட்டவரும் உண்டு.

“பாட்டுப் பொன்னளக்கும் அடியாழத் தமிழ்ச்சு ரங்கம்!

என்று பாடுகிறார் பேரொளி கவிஞர்களில் பலர் கன்னி கழியாமலேயே மூப்பெய்தி விடுகிறார்கள். எழுதி வெளிவந்த முதல் நூலையே வாழ்நாள் சாதனையாக்கி விருது பெறும் வீர்க்கவிஞர்கள் நிறைந்த நாடு இது. திருமண அழைப்பிதழ் எழுதியவுடனேயே திவ்வியப் பிரபந்தம் எழுதிவிட்டதாக நினைத்துக் கொள்கிறவர்கள் இங்கு ஏராளம்! தம்பி வசந்தராசன் வற்றாத கவிதைச் சுரங்கம். “பாட்டுப் பொன்னளக்கும் அடியாழத் தமிழ்ச்சுரங்கம்! என்னும் தொடர் உருவகங்களினால் மட்டுமன்று உள்ளடக்கத்தாலும் சிறக்கச் செய்கிறார் அவரும் உயர்ந்து நிற்கிறார். கட்டுரையாளர், வசந்தராசனுடைய கவிதைகளைக் கண்டது சில திங்களுக்கு முன்புதான். இமயத்தில் இருந்திருக்க வேண்டியவர் இப்போதுதான் வீட்டு வாசலின் இறுதிப்படிக்கட்டிலிருந்து இறங்கி வருகிறார். கட்டுரையாளரோ பாடாண் பாடிய பேரொளியோ வசந்தராசனுக்குக் கைகொடுக்கவில்லை.! சிவப்புக் கம்பளத்தை விரிக்கிறோம்! கட்டுரையாளருக்கும் கவிதைக்கும் ஏழாம் பொருத்தம்! பேரொளிக்கு அது பெருமாள் கோவில் பிரசாதம்!

யாப்பில் கனிச்சுளைகள் பந்திவைக்கும் தோப்பு

பாட்டுடைத் தலைவனை அறிமுகம் செய்யும் பேரொளி அவனுடைய பாத்திறத்தின் அடையாளமாக யாப்பினைத்தான் முன்னுறுத்துகிறார். பாக்களில் வெண்பா, ஆசிரியப்பா சிந்து ஆகியவற்றையும் இனங்களில் விருத்தத்தையும் வசந்தராசன் கையாளுகின்ற திறனைப் பலபடப் பாடியிருக்கிறார். அப்படிப் பாடிப் பெருமைப்படுத்தக் கூடிய வசந்தராசனின் திறமைகளைப் பினவரும் சில எடுத்துக்காட்டுக்களால் அறியலாம்  இதனால் ஒரு கவிஞனைப் பற்றிய இன்னொரு கவிஞனின் புகழ்மொழி பொய்மொழியாக இல்லாமல் பொருள்சேர் புகழ்மொழியாகவே அமைந்திருக்கிறது என்பதைப் புரிநது கொள்ள இயலும்.

“ஆடையல்ல எழுத்தெனக்குக் கழற்றி மாட்ட!
அணிந்திருக்கும் நகையல்ல அழகு பார்க்க!
கூடவந்த உடலின்தோல்! எலும்பைப் போர்த்திக்
கொண்டிருக்கும் என்னுயிரை! உடலைக் காட்ட
மேடைதரும்விழிவெளிச்சப் பாதைதன்னில்
மெருகேறி வருவதுதான்! மீண்டும் சொல்வேன்!
ஏடடைந்த சொல்வேறு நான்வே றல்ல!
எனைப்பிரியா என்தோல்தான் என் னெழுத்து!”

என்னும் எண்சீர் விருத்தம் வசந்தராசன் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் கொள்கைப் பிரகடனம்! இன்றைக்கு மரபுக்கவிதை என்னும் மயக்கத்தில் உளறிக்கொட்டும் அத்தனைப் பேருக்கும் ஓரளவு தெரிந்த யாப்பு இந்த எண்சீர் விருத்தம்தான். இதில் பல்வகையான பிரிவுகள் உண்டு. அவற்றையெல்லாம் இவர்கள் கண்டு கொள்வதே இல்லை. மரபு என்பதை யாப்பு என்று கருதுகிறவரைத் தமிழ் மரபுக்கவிதைக்கு எதிர்காலம் இல்லை. என்பது பாகற்காய் இனிக்காது என்பது போல உண்மை.  இத்தகைய எண்சீர் விருத்தங்களில் சொற்களை அறுத்துக் ;கட்டுகிற தொழில்நுட்பம் தெரிந்தாலேயொழிய வெற்றி பெற முடியாது. வசந்தராசனுக்கு அது கைவந்த கலை.

“தரையில் நடந்த தாடிச்சூரியன்
தத்துவம் முளைக்கும் புத்தக வயல்வெளி!
தடியால் பூமியைத் தட்டி எழுப்பி
விடியலைக காட்டிய சூரிய் விழிகள்!”

என்னும் ஆசிரியப்பாவில் தன் முத்திரையைப் பதிக்கும் வசந்தராசன்

“புத்திப் புரட்சியின்
வித்து வளர்ந்திட
சத்து மழைப்பாடல் நெய்வேன்! வரும்
சங்கடங்கள் நான் கொய்வேன்!- அதில்
கொத்து கொத்தாய் தினம்
பூத்துக் குலுங்கிடும்
சொத்தைப் பொதுவினில் வைப்பேன் – தனிச்
சொநதம் கொண்டாடினால் வாய் தைப்பேன் – நான்

நான் புத்தம் புதுக் கவிஞன் – புரட்சி
வித்து தரும் கவிஞன்

என்று சிந்தினில் கொஞ்சுவதைக் காணலாம்.

“குத்தா நொடிமுள்நீ! குற்றாலச் சாரல்நீ !
முத்துவேல் மைந்தர்க்கு மொத்தமும்நீ ! — சொத்தாய்
உனைவைத்துச் சொக்கட்டான் ஆடிவென்றார்! நீதான்
நினைத்தாலே நீட்டும் நிழல்!”

இந்தக் கையறுநிலைப் பாட்டு அணமையில் மறைந்த கலைஞரின் நேர்முக உதவியாளர் திரு சண்முகநாதனின் மறைவுக்கு வசந்தராசனால் பாடப்பட்ட நேரிசை வெண்பாக்களில் ஒன்று. தெய்வத்தைக் கண்ட கண்களுக்குக் கல் தெரியாததுபோலக் கவிதையோடு கலந்து விடுகிறபோது யாப்பு மறைந்துவிட வேண்டும். யாப்பினையும் வாய்பாடுகளையும் முன்னிறுத்தி முக்கித் திணறும் பலர் நடுவே வசந்தராசனின் கவிதைகள் சிலைகளாய் உருப்பெறுகின்றன.  இத்தனைச் செய்திகளையும் அடக்கிக் காட்டுகிறார் வெற்றிப் பேரொளி.

“நீநடந்தால் உடன்நடக்கும் விருத்தக் கூட்டம்!
நிறைநிலவுப் பூப்பூக்கும் வெண்பாத் தோட்டம் !
தீநடந்து கண்டதில்லை! உன்னைக் கண்டேன்!
தித்திப்புச் சிந்துகளாம் கள்ளும் உண்டேன் !
பூநடந்து பார்த்ததில்லை உன்சி ரிப்புப்
பூக்காட்டு வெளிச்சநடை அழகின் உச்சம் !
மாநகரின் மாதவரம் தமிழின் பண்ணை !
மழைத்தமிழில் நானிசைத்தேன் வாழ்த்துப் பண்ணை “

‘பௌர்ணமி’ என்னும் வடசொல்லுக்குத் தமிழில் ‘முழுமதி’ என்றார்கள். ‘நிறைமதி’ என்றார்கள்.  எல்லாருக்கும் புரிநத இலக்கியத் தமிழில் இவர் ‘நிறைநிலவு’ என்கிறார். ஒரு புதிய சொல்லாடசி தமிழுக்கு வரவுதானே! ‘விருத்தத்தில் வெற்றி பெற்றான் கம்பன் அந்த வெற்றியினை இவர்பெற்றார் என்னைப் போல’ என்று கவிஞர் சுரதா தமக்கேயுரிய புலமைச் செருக்குடன் பாவேந்தரைப் பாடியிருக்கிறார். இந்த வெளிப்பாடடு உத்தியைத் தம்பி வெற்றிப் பேரோளி

“நீ நடந்தால் உடன் நடக்கும் விருத்தக் கூட்டம்”

என்ற தொடரில் வைத்துக் காடடுகிறார். விருத்தம் வசந்தராசனுக்குப் பின்னால் வராதாம். கையைப் பிடித்துக் கொண்டு உடன் நடைபழகுமாம். இது அழகியல். வசந்தனின் நடைவேகத்திற்கு விருத்தம் ஈடுகொடுக்காது என்பது நுண்ணியம்!. தொடைவிகற்பங்களில் எதுகை மோனை ஆகியவற்றுக்கு அடுததபடியாகக் கவிதைக்கு மெருகேற்றுவதும் அதனைப் பெருமிதத்துடன் நிமிர்ந்து நிற்கச்செய்வதும் முரண்தொடையே! ஒரு கவிஞன் பாரதியை  இப்படிப் பாடுகிறான்!

நீ நொண்டி சிந்து எழுதினாய்! தமிழ் எழுந்து நடந்தது’

என்று! நொண்டுதலும் நடத்தலுமாகிய முரண்கள் கவிஞனின் பார்வையையும் நோக்கத்தையும் தெளிவுபடுத்திக் கவிதைப் பொருண்மையைக் கடல் ஆழத்திற்குக் கொண்டு செலுத்துவது முரணே என்பதைப் புரிந்து கொள்ளலாம். பேரொளி

தீ நடந்து பாரத்ததில்லை! உன்னைக் கண்டேன்
தித்திப்பு சிந்துகளாம் கள்ளும் உண்டேன்!

என்று பாடுகிறார். தீயினுக்கு நீர்தான் முரண் என்பதன்று. மாறுபட்ட இரு தன்மை கொண்ட எவையும் முரணே உண்மையில் வசந்தனுக்கு அவரெழுதிய பாடாண் திணைப் பாடலுக்கு இந்தக் கட்டுரை ஓர் அழகியல் உரையாகத்தான அமைய முடியுமேயன்றிப் புதிய வெளிச்சம் எதனையும் பாய்சசவதாக நான் கருதவில்லை. ஒரு கவிஞன் மற்றொரு கவிஞனின் படைப்பில் தன்னை மூழ்கடித்துக் கொள்வது என்பது அசாதாரண நிகழ்வு. அதில் முத்துக்களைக் காண்பது அரிதினும் அரிது. அதனைக் கோத்து ஆரமாக்குவது அதனினும் அரிது. அரியனவற்றையே நாட்கடமையாகக் கொண்டிருக்கும் பேரொளிக்கு இது கையறி மடைமை. கவிஞர்கள் படைப்பதற்கு மட்டுமல்ல. படிப்பதற்கும் கூட என்னும் படைப்புண்மையை அவர் புரிந்து வைத்திருக்கிறார். அதனால்தான் இலக்கியத்தின பன்முகப் ;பரிமாணங்களில் அவரால் பயணிக்க முடிகிறது. அதற்காகப் பல நூல்களையும் படிக்கத் தூண்டுகிறது

நிறைவுரை

கவிதை ஓர் அழகியல் வெளிபபாடு மட்டுமன்று.  சிநதனைகளின் வெளிப்பாடும் ஆகும். அழகியல் உணர்ச்சி சார்ந்தது, சிந்தனை அறிவு சார்ந்தது. ஒரு கவிதையில் இவ்விரண்டும் கூறுகளும் இருந்தால்தான் அது கவிதை. அழகியலைச் சுவைக்க ;இதயம் வேண்டும். சிநதனையைப் புரிநது கொள்ள மூளை வேண்டும். இரண்டில் ஒன்று குறைந்தாலும் படைப்பு பாழாகும். திறனாய்வு திசைமாறும்.  கருத்தியல் சார்ந்த சிந்தனைகள் தங்குதடையின்றிப் பொங்கிவரும்போது அவ்வுணர்ச்சிகளைக் கற்பனைத் தேன்கலந்து வடிவ வரையறைக்குள் கொண்டு வந்து பரிமாறுவது எல்லாருக்கும் இயலாது. பாடாண்திணை நாயகர் வசந்தராசனுக்கு அது கைவரப் பெற்றிருப்பது போலவே பாடிய பேரொளிக்கும் கைவரப் பெற்றிருக்கிறது. பலவற்றைப் பாடியிருக்கிறார் வசந்தராசன்! பாடியவரைப் பாடியிருக்கிறார் பேரொளி மன்னர்களைப் புலவர்கள் பாடிய  காலம் சங்கக் காலம்! ஒரு கவிஞனை மற்றொரு கவிஞன் பாடும் இந்தக் காலம் தங்கக் காலம்! தமிழ்க்கவிதைக்குப் பொற்காலம்!

இனிக்கின்ற செங்கரும்பின் சாறு! நெஞ்சில்
இளநீரைச் சுமக்கின்ற அன்பு! யாப்பில்
கனிச்சுளைகள் பந்தி வைக்கும் தோப்பு ! ஈரக்
கால்வாய்கள் கண்ணிரண்டும் ! அவைகள் ஆண்டு
தனித்தியங்கும் கவிமுழக்கம்! வாழ்த்தும் போது
தலைமடையின் பெருக்கெடுப்பு! நனைந்தோ ரெல்லாம்
பனிக்காலை பரங்கிப்பூக் கோல வீதி !
பழத்தமிழார் கவிக்கோவின் செங்கோல் வாழ்க!

தேரோட்டத் திருவிழாதான் கவிதை மன்றில்!
தேனோட்டப் பெருவெள்ளம் புலமை யாற்றில்!
கூரோட்டக் கணைதொடுக்கும் வில்லின் தோள்கள்!
குளிரோட்டக் கவியோட்டும் வசந்த ராசன் !
ஈரோட்டுப் படைவீட்டுக் களத்து வீரன் !
இனத்தோட்ட வாசலிலே காவல் காரன்!
நேரோட்ட நெஞ்சத்துக் கவிதை வாழ்வன்!
நீடுவளர் வரம்பெற்ற வாணாள் சேர்க!

மின்னலுக்கு நிலையான வடிவ மில்லை!
மின்சொற்கள் உன்சொற்கள் நிலைக்கும் ! காதல்
கன்னலினை மொழிக்குவளை ஏந்தும்! பொங்கும்
கடலழைத்துக் கமண்டலத்துள் புதைக்கும்! பாட்டுப்
பொன்னளக்கும் அடியாழத் தமிழ்ச்சு ரங்கம்!
புகழளக்கும் வரலாற்றின் சொந்தம்! சொந்தம்!
தென்றலுக்கு மறுபெயர்தான் உன்றன் பேரா?
திசையெட்டும் உச்சரிக்கும் கம்பன் பேரா!

நீநடந்தால் உடன்நடக்கும் விருத்தக் கூட்டம்!
நிறைநிலவுப் பூப்பூக்கும் வெண்பாத் தோட்டம் !
தீநடந்து கண்டதில்லை உன்னைக் கண்டேன்!
தித்திப்புச் சிந்துகளாம் கள்ளும் உண்டேன் !
பூநடந்து பார்த்ததில்லை உன்சி ரிப்புப்
பூக்காட்டு வெளிச்சநடை அழகின் உச்சம் !
மாநகரின் மாதவரம் தமிழின் பண்ணை !
மழைத்தமிழில் நானிசைத்தேன் வாழ்த்துப் பண்ணை

திணை:  பாடாண்

துறை விளக்கம்!

ஏனைய புறத்திணைகளுக்குத் ‘திணை’ தனியாகவும் அவை ஒவ்வொன்றுக்குமான துறைகள் தனித்தனியாகவும் இயங்கும். ஆனால் பாடாண்திணை தனக்குரிய துறைகளோடு ஏனைய ஏழுதிணைப் பொருட்களையும் தனக்குரிய துறைகளாகக் கொள்ளும். கொள்ளவே பாடாண்திணை என்பதும் புறத்திணை என்பதும் ஒன்றென்பதும் தெளியப்படும்.  தெளியவே அத்தனைப் புறத்திணைக் கூறுகளும பாடாண் திணைக்குள் அடங்கும். .இதனை

“பாடாண் பகுதி கைக்கிளைப் புறனே
நாலிரண் டாகும் பாலுமா ருண்டே” (தொல்.புற.80)

என்னும் நூற்பாவானும்

“நாலிரண்டாவன (பாடாண் திணை எட்டுப் பிரிவுகளாவது) இப்பாடாண் திணைக்கு ஓதுகின்ற பொருட்பகுதி பலவும் கூட்டி ஒன்றும், (1) இருவகை வெட்சியும் (2) பொதுவியலும் (3) வஞ்சியும (4) உழிஞையும் (5) தும்பையும் (6) வாகையும் (7) காஞ்சியும் (8) ஆகிய பொருள்கள் ஏழுமாகிய எட்டுமாம்”

என்னும் ஆசிரியர் ;நச்சினார்க்கினியர் உரைப்பகுதியானும் உணர்க!

(தொடரும்)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.