Blog

  • நியூட்டன் காலத்தில் வாழ்ந்த வானியல் விஞ்ஞானி கியோவன்னி காஸ்ஸினி

     

    [Giovanni Cassini]

    (1625-1712)

    சி. ஜெயபாரதன் B.E. (Hons), P.Eng. (Nuclear) கனடா

    “காஸ்ஸினி அறிவுத் தேடல் பயிற்சியில் வேட்கை மிக்கவர்.  குறிப்பாகக் கவிதை, கணிதம், வானியலில் ஈடுபாடு மிக்கவர்.  அவர் வெறும் விஞ்ஞானக் கோட்பாட்டில் மட்டும் விரும்பம் உள்ளவர் அல்லர்.  தொலைநோக்கிகள் மூலம் உளவும் கூர்மை யான விண்ணோக்காளர். மறுக்க முடியாத அவரது கண்டு பிடிப்புகள் மட்டுமே நியூட்டனுக்கு முன் தோன்றிய வானியல் விஞ்ஞானிகள் வரிசையில் அவருக்கு ஓர் உன்னத இடத்தை அளிக்கப் போதுமானவை.”

    டேடன் (Taton)

    “உலகின் கண்களுக்கு நான் எப்படி தோன்றுகிறேன் என்பது எனக்குத் தெரியாது ! கடல் கரையில் விளையாடும் ஒரு சிறுவன், இன்றோ நாளையோ ஏதோ ஓர் அபூர்வக் கூழாங்கல் அல்லது எழிற் சிப்பியைக் கண்டெடுப்பது போல எனக்குத் தெரிகிறது! ஆனால் கண்டுபிடிக்க முடியாதபடி மாபெரும் மெய்ப்பாட்டுக் கடல் என் கண்முன்னே பரந்து கிடக்கிறது !”

    ஐஸக் நியூட்டன்

    “கடந்த நூற்றாண்டுகளில் மறைந்திருந்த மகத்தான சில வானியல் காட்சிகளை, நான் மட்டும் முதலில் காணும்படி வாய்ப்பளித்த கடவுளின் பேரருளுக்கு எனது அளவு கடந்த நன்றியைத் தெரிவிக்கிறேன்”.

    காலிலியோ (1564-1642)

    முன்னுரை:    உலகின் முதல் பெளதிக விஞ்ஞானி என்று அழைக்கப் படும் இத்தாலியில் தோன்றிய காலிலியோ, அடுத்து பிரிட்டிஷ் கணித விஞ்ஞானி ஐஸக் நியூட்டன், டச் விஞ்ஞானி கிரிஸ்டியான் ஹியூஜென்ஸ், இத்தாலிய பிரென்ச் விஞ்ஞானி கியோவன்னி காஸ்ஸினி ஆகிய நால்வரும் ஐரோப்பாவில் வானியலைக் கணித வடிவில் விஞ்ஞானம் ஆக்கிய முக்கிய மேதைகள் ஆவார். அவர்கள் யாவரும் காபர்னிக்கஸ் கூறிய பரிதி மைய நியதியை [Sun-centered System] மெய்யாகக் கருதிப், பண்டைக் காலப் புவி மையக் கோட்பாடைப் [Earth-centered System] புறக்கணித்தவர் !

    காலிலியோ முதன் முதலில் வெள்ளியின் பிறை வளர்ச்சி, பிறைத் தளர்ச்சியைத் தனது தொலை நோக்கியில் கண்டு பரிதி மைய நியதியை நிரூபித்துக் காட்டினார். பிற்போக்கான தொலை நோக்கியில் காலிலியோ முதலில் தவறாகப் புரிந்து கொண்டு கூறிய ‘நீள்கோளச் சனியைத்’ [Ellipsoidal Saturn], திருத்தி ஹியூஜென்ஸ் செம்மையான தனது தொலைநோக்கியில் சனிக் கோளைக் கண்டு, அதைச் சுற்றித் திடமான வளையங்கள் இருப்பதை முதலில் உலகுக்கு அறிவித்தார்!  அவருக்குப் பிறகு, காஸ்ஸினி அந்தக் கருத்தை மீண்டும் விருத்தி செய்து, சனியின் வளையங்கள் திடமானவை [Solid Rings] அல்ல வென்றும், அவற்றிடையே எண்ணற்ற இடை வெளிகள் உள்ளன வென்றும் எடுத்துக் கூறினார்.

    சூரிய மண்டலக் கோள்களில் நீர்வளம், நிலவளம், உள்நெருப்பு, காற்றுச் சூழ்வெளி யாவும் படைக்கப்பட்டு, அவற்றில் புல்லினம், உயிரினம், மானிடம் ஆகிய அனைத்தும் வளர்ச்சி பெறத் தகுதியுள்ள அண்டம் பூமி ஒன்றுதான்! ஆனால் எல்லாக் கோள்களிலும் எழில் மிகுந்த விந்தையாக, ஒளிமயமாக அநேக வளையல்கள் அணிந்தது சனிக்கோள் ஒன்று மட்டுமே!  பூமியின் விஞ்ஞான மேதைகள் அவ்வரிய சனிக்கோளை 400 ஆண்டு களுக்கும் மேலாக தொலை நோக்கி மூலமாகவும், விண்கப்பலை அண்ட வெளியில் ஏவியும் ஆராய்ந்து வருகிறார்கள்!  காஸ்ஸினியின் பெயரால் 1997 இல் ஏவப்பட்டுப் பயணம் செய்யும் காஸ்ஸினி விண்வெளிக் கப்பல் ஆகஸ்டு 2004 முதல் சனிக் கோளை அடைந்து அரிய தகவல் சேமித்து வருவதுடன் திட்ட மிட்ட ஆறு ஆண்டுகளைக் கடந்து  பத்தாண்டுகளுக்கு மேலாக உளவித் தகவல் அனுப்பிக் கொண்டு வருகிறது !

     

     

    காலிலியோ விண்வெளியில் கண்டுபிடித்தவை

    கடந்த ஐந்து நூற்றாண்டுகளில் வாழ்ந்த விஞ்ஞானிகளின் வரிசையில் முன்னணியில் நிற்கும் உன்னத மேதையாகக் கருதப் படுபவர், காலிலியோ! முதன் முதலில் தன் கையால் அமைத்த தொலை நோக்கியில் அண்ட கோளங்களை ஆய்ந்து, விண்வெளியின் முகத்திரையைத் திறந்து வைத்தவர், காலிலியோ! பிறை வெள்ளியைக் கண்டு, அது சூரியனைச் சுற்றி வருவதைத் தொடர்ந்து நோக்கி, காபர்னிகஸின் ‘பரிதி மைய நியதி’ மெய்யான தென்று நிரூபித்துக் காட்டியவர், காலிலியோ! பூமியைச் சுற்றி வரும் நிலவுக்குப் பிறை வளர்ச்சி, பிறைத் தளர்ச்சி உண்டாகி முழுநிலவு, கருநிலவு தோன்றுவதுபோல், பரிதியைச் சுற்றி வருவதால்தான் வெள்ளிக் கோளுக்கும் பிறைத்தோற்றம் [Phase] ஏற்படுகிறது என்று எடுத்துக் காட்டியவர், காலிலியோ.

    அடுத்து நிலவை நோக்கி அதன் குழிகளையும் மலைகளையும் வரைந்து காட்டினார்! பரிதியின் சிவப்புத் தேமல்களை [Sun Spots] முதன் முதலில் கண்டு பிடித்தவரும் காலிலியோவே! பூதக்கோள் வியாழனைச் சுற்றும் நான்கு சந்திரன்களைக் கண்டு பிடித்து உலகை வியக்க வைத்தவர், காலிலியோ! சூரிய மண்டலத்தின் எட்டாவது கோளான ‘நெப்டியூனை’ [Neptune] முதலில் கண்டு, அதன் ஆமைவேக நகர்ச்சியைக் குறித்து வைத்து, தான் ஒரு புதுக்கோளைக் கண்டதைக் கூட அறியாமல் போனவர், காலிலியோ! பிறகு 230 ஆண்டுகள் கடந்து நெப்டியூன் 1846 இல் ஜொஹான் கல்லே [Johann Galle] என்பவரால் கண்டு பிடிக்கப் பட்டது!

     

     

    சனிக்கோளை முதலில் தொலைநோக்கியில் பார்த்து, அது முட்டை வடிவத்தில் இருப்பதாகக் கருதினார். ஆனால் அவருக்குப் பின் வந்த கிரிஸ்டியான் ஹியூஜன்ஸ் [Christiaan Huygens], தானமைத்த முற்போக்கு தொலைநோக்கியில் உற்று நோக்கி, அக்கருத்தைத் திருத்திச் சனியைச் சுற்றி வளையங்கள் இருப்பதாக விளக்கினார்! காலிலியோவின் கண்களுக்கு வளையங்கள்தான் சனியை முட்டை வடிவத்தில் காட்டி யிருக்க வேண்டும்!

    காலிலியோதான் தனது தொலைநோக்கியில் அண்டக் கோள்களின் நகர்ச்சியை தொடர்ந்து நோக்கி முதன் முதல் ‘நோக்காய்வு வானியலை’ [Observational Astronomy] ஆரம்பித்து வைத்தவர்! அவர் எழுதிய ‘விண்மீனின் தூதர்’ [The Starry Messenger] என்னும் நூல் வானியல் விஞ்ஞானத் துறை வளர வழி வகுத்தது! பால்மய வீதிகள் [Milky Way] கோடான கோடி விண்மீன்கள் கொண்டுள்ளதைக் கண்டார்! உலக விஞ்ஞான மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் காலிலியோவை ‘நவீன பெளதிகத்தின் பிதா’ [Father of Modern Physics] என்று புகழ் மாலை சூடியிருக்கிறார்!

     

    கிரிஸ்டியான்†ஹியூஜென்ஸ் வானியல் கண்டுபிடிப்புகள்

    கிரிஸ்டியான் ஹியூஜென்ஸ் (1629-1695) காலிலியோ, நியூட்டன் காலத்தில் வாழ்ந்த ஒரு டச் விஞ்ஞானி. இத்தாலிய விஞ்ஞான மேதை காலிலியோ (1564-1642) இறந்த ஆண்டும், பிரிட்டிஷ் விஞ்ஞான மேதை ஐஸக் நியூட்டன் (1642-1727) பிறந்த ஆண்டும் ஒன்றுதான்! அப்போது வாழ்ந்து வந்த கிரிஸ்டியான் ஹியூஜென்ஸின் வயது பதிமூன்று! ஐரோப்பாவின் இரு பெரும் முன்னோடி விஞ்ஞானிகள் [காலிலியோ, நியூட்டன்] படைத்த பல பெளதிகக் [Physics] கோட்பாடுகளைச் செம்மைப் படுத்தியும், மேன்மைப் படுத்தியும் பெரும் புகழ் பெற்றவர், ஹியூஜென்ஸ்! காலிலியோ ஆக்கிய தொலை நோக்கியை விருத்தி செய்தவரும், முற்போக்கான தொலை நோக்கியின் மூலம் முதலில், சனியின் வளையத்தை முதலில் கண்டுபிடித்தவரும் ஹியூஜென்ஸ் ஒருவரே!  ஆனால் அவரும் சனிக்கோளின் வளையங்கள் திடப் பிண்டத்தால் (Solid Rings) ஆனவை என்று தவறாகக் கூறினார்.

    1656 இல் அவர் தயாரித்த முற்போக்கான தொலைநோக்கியில் முதலாக ஓரியன் நிபுளாவைக் [Orion Nebula] கண்டு பிடித்தார்! அடுத்து 50 மடங்கு பெருக்கம் தரும் மாபெரும் தொலை நோக்கியைத் தயாரித்துச் சனிக்கோளைச் சுற்றி வரும் ஒரு பெரிய துணைக் கோளைக் [Satellite] கண்டு பிடித்தார்! அது சனியைச் சுற்றி வரும் காலம் 16 நாட்கள் என்றும் கணக்கிட்டார்! அது டிடான் [Titan] என்னும் கிரேக்க இதிகாசப் பூதத்தின் குடும்பப் [Family of Giants] பெயரைப் பெற்றது! தொலைநோக்கி மூலம் செவ்வாய்க் கோளின் [Mars] தளத்தில் முதல் முதலாக மேடு பள்ளங்கள் இருக்கக் கண்டார்!

    சனிக்கோளின் அற்புத வளையங்கள் கண்டுபிடிப்பு

    காலிலியோவின் தொலைநோக்கி காட்டாத சனியின் வளையத்தை, 50 மடங்கு பெரிது படுத்தும் முற்போக்கான தொலைநோக்கியைத் தயாரித்து 45 ஆண்டுகள் கழித்து 1655 இல், கிரிஸ்டியான் ஹியூஜென்ஸ் முதலில் கண்டு பிடித்தார்! வளையம் மெலிந்தது என்றும், சனி சுற்றிவரும் தளத்துக்கு 20 டிகிரி சாய்ந்த ‘திடவத் தட்டு ‘ [Solid Plate] என்றும், சனிக்கோளைத் தொடாமல் சுற்றி யிருக்கும், ‘துளைத் தட்டு’ [Donut Shape] என்றும் கூறினார்!  பின்னால் 1669 ஆம் ஆண்டில் சனியின் உட்புற, வெளிப்புற வளையங்கள் [Inner & Outer Rings], வளைங்களின் இடைவெளிகள், சனியின் நான்கு துணைக் கோள்கள் ஆகிய வற்றை இத்தாலிய பிரென்ச் விஞ்ஞானி கியோவன்னி காஸ்ஸினி [Giovanni Cassini] கண்டு பிடித்தார். அதன் பின் சனியின் வளையம் ‘திடவத் தட்டு’ என்னும் கருத்து மாறி, இடை வெளிகள் கொண்ட வளையங்களாக எடுத்துக் கொள்ளப் பட்டன!

    வானியல் விஞ்ஞானி காஸ்ஸினி கண்டுபிடித்தவை

    காஸ்ஸினி ஒரு கணித ஞானி. மேலும் அண்டக் கோள்களைக் கூர்ந்து உளவு செய்யும் வானோக்காளர் [Planet Observer]. பூமிக்கும் சூரியனுக்கும் உள்ள தூரத்தைத் துல்லியமாகக் கணிக்க, காஸ்ஸினி 1672 இல் சேகரித்த தகவல்கள் பயன்படுத்தப்பட்டன.  அண்டக் கோள்களான வியாழன், வெள்ளி, செவ்வாய் ஆகியவைத் தன்னைத் தானே சுற்றிவரும் காலத்தைக் கோள்களில் உள்ள நிரந்தரப் புள்ளிகளைத் தொடர்ந்து பல்லாண்டுகள் தொலைநோக்கி மூலம் பார்த்துப் பதிவு செய்தவர். அவர் கணித்த அண்டங்களின் சுற்றுக் காலங்கள், அவரது வாழ்நாளில் முரண்பாடுடைய புவிமைய நகர்ச்சிக்கு எதிராக எண்ணிக்கை நாட்களை அளித்தன.

     

    கிரிஸ்டியான் ஹியூஜென்ஸ் தனது தொலைநோக்கியில் சனியின் மிகப் பெரும் சந்திரன், டிடானை [Titan] முதலில் கண்டுபிடித்த பின், காஸ்ஸினி மற்றும் நான்கு சந்திரன்கள் சனியைச் சுற்றி வருவதை எடுத்துக் காட்டினார்.  1652-1653 இல் காஸ்ஸினி முதன்முதல் ஒரு வால்மீனைக் கண்டு ஆராய்ந்தார். பூமியின் நிலவு பொழியும் வெளிச்சம், பரிதி மறைந்துள்ள சமயம் காலைக் கீழ்வானில், மாலை மேல் வானில் தெரியும் வெளிச்சம் ஆகியவற்றை ஆய்வு செய்து, அவற்றைப் பயன்படுத்தி வால்மீனின் [Comets] நகர்ச்சிக் கோட்பாடுகளை அறிவித்தார்!

    பொலோனா செயின்ட் பெட்ரோனியஸ் கோயிலில் [St. Petronius Church, Pologna] இஞ்னேஸியோ தாந்தே [Ignazio Dante] 1576 இல் பயன்படுத்திய ‘பரிதிக் கடிகாரத்தைச்’ [Gnomon or Sun Dial] 1653 இல் செப்பணிட்டுப் பெரிது படுத்தி, ஆண்டுக் காலண்டரைத் [Yearly Calendar] திருத்தம் செய்தார். பரிதியைப் பற்றி ஆழ்ந்து ஆராய்ச்சிகள் செய்து, சில அட்டவணைகளை 1662 இல் வெளியிட்டார். 1664 இல் வால்மீன் ஒன்றைக் கண்டு அதன் நகர்ச்சிப் பின்பற்றி, அது பரிதியைச் சுற்றி வட்ட வீதியில் வருகிறது என்று அறிவித்தார். அதே ஆண்டு மிக நுணுக்கமான சக்தி வாய்ந்த தொலைநோக்கி மூலம், வியாழன் தன்னச்சில் சுற்றும் நாட்களைக் கணித்தார். அத்துடன் வியாழன் துருவப் பகுதிகளில் தட்டையாக இருப்பதாகவும் கூறினார்.  பூதக்கோள் வியாழனுடைய பட்டைகளையும், புள்ளி களையும் கண்டறிந்து பதிவு செய்தார். செவ்வாய்க் கோளின் சுய சுற்றைக் கணக்கிட்டு மூன்று நிமிடத் துல்லிமையில் பதிந்தார். 1668 இல் வியாழக் கோளின் சந்திரன்களைக் கண்டு பல விபரங்களைப் பதிவு செய்தார்.

    ஒளியின் வேகத்தை அறிய விபரங்கள் சேகரித்தார். ஏழு ஆண்டுகள் கழித்து ரோமர் [Romer] அவரது தகவல்களைப் பயன்படுத்தி ஒளிவேகத்தைக் கணித்தார். சனியின் நான்கு சந்திரன்களைக் கண்டு பிடித்தபின், 1975 இல் வளையங்களை தொலை நோக்கியில் ஆராய்ந்தார். சனியின் வளையங்கள் தனித்தனியானவை என்றும், தொடர்ந்த வட்டமல்ல என்றும், இடைவெளி உள்ளவை என்றும், அவை கோடான கோடி சிறு, சிறு துணைக் கோள்கள் போல் சுற்றி வருகின்றன வென்றும் அறிவித்தார். 1679 இல் பூமியின் நிலவை நோக்கிப் பெரிய வரைப்படமாய் வரைந்து ‘விஞ்ஞானப் பேரவைக்குச் ‘ [Academy of Sciences] சமர்ப்பித்தார். காமிரா நிழற் படங்கள் [Photography] தோன்றிய காலம்வரை, காஸ்ஸினியின் படமே ஓர் உதவும் நிலவுப் படமாக இருந்து வந்தது. 1680 இல் பூமிக்கும், பரிதிக்கும் உள்ள ஒப்புமை நகர்ச்சி வேகங்களை ஆராய்ந்து, அண்டக் கோள்களின் சுற்றுவீதிகளைக் கணித்தார். அவை ‘காஸ்ஸினி யின் வளைகோடுகள்’ [Cassini Curves] என்று அழைக்கப் பட்டன. ஆனால் அக்கோடுகள் கெப்ளர் [Kepler] அனுமானித்த நீள்வட்ட வீதிகளை [Elliptical Orbits] ஒத்திருக்க வில்லை!

    வானியலில் தேர்ச்சி பெற்ற காஸ்ஸினி அத்துடன் ‘நோக்கியல் விஞ்ஞானம்’ [Optics], ‘திரவழுத்தவியல்’ [Hydraulics], ‘வரைப்படவியல்’ [Cartography], சிவில், ராணுவ எஞ்சினியரிங் [Civil Engineering & Military Engineering] ஆகிய துறைகளிலும் நுணுக்க அறிவு உள்ளவராய் இருந்தார். அவரது திரவழுத்தவியல், பொறியியல் [Hydraulics, Engineering] திறமையைப் பாராட்டிப், போப்பாண்டவர் 1665 இல் ரோமானியக் கோயில்களின் மாநில நீர்நிலை வாரியங்களின் மேற்பார்வை அதிபராக நியமித்தார்.  ரோமாபுரியில் இருந்த போது, காஸ்ஸினி டைபர் நதியின் பாலத்தை உறுதிப் படுத்தியதாகத் தெரிகிறது.

    கியோவன்னி காஸ்ஸினியின் வாழ்க்கை வரலாறு.

    1625 ஆம் ஆண்டு இத்தாலியைச் சேர்ந்த ஜெனோவா [Genoa, Italy] என்னும் நகரில் ஜேகப் காஸ்ஸினி, ஜூலியா குரோவேஸி [Jacopo Cassini, Julia Crovesi] ஆகிய இருவருக்கும் பிறந்தார். பள்ளிப் படிப்பை அவர் வல்லெபோன் என்னும் ஊரில் முடித்த பின், கல்லூரிப் படிப்புக்கு ஜெனோவா நகருக்குச் சென்றார். கல்லூரியில் கவிதை, கணிதம், வானியல் துறைகளில் மிக்க ஆர்வம் காட்டித் தனது மேதமையை வெளிப்படுத்தினார், காஸ்ஸினி.


    முதலில் காஸ்ஸினி வானியலில் [Astronomy] மனது ஊன்றாமல் ஜோதிடத்தில் [Astrology] ஈடுபாடு மிகுந்து தேர்ச்சி பெற்றார்! ஆனால் ஜோதிட முன்னறிவிப்பில் [Predictions] அவருக்கு நம்பிக்கை யில்லை! அவரது ஜோதிட வல்லமையை மெச்சி, 1644 இல் பொலோனா நகரின் மேலவை உறுப்பாளி [Senator] மார்க்குவிஸ் மல்வாஸியா காஸ்ஸினியை அழைத்து, பொலோனாவில் கட்டப்படும் பன்ஸானோ வானோக்க கத்தில் [Panzano Observatory] பணி செய்யும்படி வேண்டினார். அப்போது காஸ்ஸினிக்கு வயது பத்தொன்பது! ஆனால் கல்லூரியில் அடுத்து நான்கு ஆண்டுகள் படித்து, ஒருவிதப் பட்டமும் பெறாமல் 1948 முதல் பன்ஸானோ நோக்ககத்தில் சேர்ந்து பணியாற்றினார்! காஸ்ஸினி நோக்ககத்திற்கு வேண்டிய ஆய்வுச் சாதனங்கள், கருவிகள் ஆகியவற்றை வாங்கி அதை இயக்கத் துவங்கினார். இரண்டாண்டில் நோக்ககத்தை விருத்தி செய்து, செனட்டரின் பெரும் பாராட்டையும் மதிப்பையும் பெற்றார்.

    அப்போது புகழ் பெற்ற விஞ்ஞானிகளான பட்டிஸ்டா ரிக்கியோலி [Battista Riccioli], பிரான்ஸெஸ்கோ கிரிமால்டி [Francesco Grimaldi] போன்றோரிடம் தனிப்பட்ட முறையில், காஸ்ஸினி நிறையக் கற்றுக் கொண்டார். அவர்கள் இருவரும்தான் பின்னால் ‘ஒளித்திரிபைக்’ [Diffraction] கண்டு பிடித்தார்கள். செனட்டர் மல்வாஸியாவின் ஆதரவில் 1650 இல் பொலோனா பல்கலைக் கழகத்தில் வானியல், கணிதத் துறைகளின் பேராசிரியராகப் பதவி பெற்று, காஸ்ஸினி ஆசிரியராகவும் பணி செய்தார்.

    பிரென்ச் நாட்டுக் குடிநபரான விஞ்ஞானி காஸ்ஸினி

    பொலோனா நோக்ககத்தில் காஸ்ஸினி 1652 ஆண்டில் ஒரு வால்மீனைக் கண்டு அதன் நகர்ச்சியை ஓராண்டு காலம் பதிவு செய்து வெளியிட்டார். அக்காலங்களில் அவர் டைகோ பிராஹோ [Tycho Brahe] 1659 இல் பிறப்பித்த புவி மைய ஏற்பாடை [Earth-centered System] நம்பினார்! அதாவது நிலாவும், பரிதியும் பூமியைச் சுற்றிவர, மற்ற கோள்கள் [செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி] சூரியனைச் சுற்றுவதாகக் கூறிய டைகோ பிராஹோவின் கருத்தை ஏற்றுக் கொண்டார்! பிறகு அக்கருத்து பிழையான தென்று உணர்ந்து, காஸ்ஸினி காபர்னிகஸ்ஸின் [Copernicus] பரிதி மையக் கோட்பாடை ஒப்புக் கொள்ளும்படி நேரிட்டது!

    காஸ்ஸினியின் அண்டக்கோள் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் ஐரோப்பிய நாடுகளில் பாராட்டப் பட்டன. 1668 இல் பிரான்ஸின் அரசர் பதினான்காம் லூயி [Louis XIV] அவர்களிடமிருந்து அரண்மனை விருந்தில் கலந்து கொள்ள, காஸ்ஸினிக்கு அழைப்பிதழ் வந்தது. பாரிஸில் வானோக்ககம் ஒன்று கட்டப்பட்டு அதன் தலைமைப் பதவி பெரும் வருவாயுடன் அவருக்காகக் காத்திருந்தது! பதினான்காம் லூயி 1671 இல் அளித்த பாரிஸ் வானோக்ககத்தின் தலைமைப் பதவியை ஏற்றுக் கொண்டு, காஸ்ஸினி பிரென்ச் நாட்டின் குடிமகனாய் ஆனார். 1974 இல் ஜெனிவி டி லைஸ்டர் [Genevieve de Laistre] என்னும் ஓர் எழில்மாதை மணந்து பாரிஸில் நிரந்தரமாகக் குடியேறினார். 1677 இல் ஜேக்ஸ் காஸ்ஸினி [Jacques Cassini] என்னும் புதல்வன் அவருக்குப் பிறந்தான். தந்தையின் தடத்தில் நடந்து வானியல் விஞ்ஞானியாய்த் தேர்ச்சி பெற்றுத் தந்தை முதுமை அடைந்ததும், ஜேக்ஸ் காஸ்ஸினியே, பின்னால் பாரிஸ் வானோக்ககத்தின் தலைவர் பதவியைப் பெற்றார்!

    1789 இல் பிரென்ச் விஞ்ஞானி பியர் ஸைமன் லாப்பிளாஸ் [Pierre Simon Laplace (1749-1827)] சனிக்கோளின் வளையங்கள் மிகச் சிறிய துணுக்குகள் கொண்டவை என்றும், அவையே சூரிய ஒளியைப் பிரதிபலித்துச் சுடரொளி வீசுகின்றன என்று விளக்கினார்! பிரிட்டிஷ் விஞ்ஞானி ஜேம்ஸ் மாக்ஸ்வெல் [James Maxwell (1831-1879)] கோடான கோடித் துணுக்குகள் தூரத்துக்கு ஏற்ப வெவ்வேறு வேகங்களில் சுற்றிக் கொண்டிருப்பதால்தான் வளையங்கள் நீடித்துச் சனிக்கோளைச் சுற்றி நிலை பெற முடிகிறது என்று கணித மூலம் 1857 ஆம் ஆண்டில், நிரூபித்துக் காட்டினார்! சனியைச் சுற்றித் திடவ வடிவு வளையமோ [Solid Ring], திரவ வாயு வளையமோ [Fluid Ring] இருந்தால் அவை சனியின் கவர்ச்சி விசையால் இழுக்கப் பட்டுத் தளத்தில் மோதி நொறுங்கி விடலாம் என்றும் ஜேம்ஸ் மாக்ஸ்வெல் கூறினார்!


    காஸ்ஸினியின் இறுதிக்கால வாழ்க்கை

    1695 இல் பதினெட்டு வயது மகன் ஜேக்ஸ¤டன் காஸ்ஸினி இத்தாலிக்குச் சென்றார். அங்கே உள்ள பல புவித்தள ஆய்வு நோக்குகளை [Geodesic Observations] இருவரும் பார்வை யிட்டனர். பொலோனாவுக்குச் சென்று தான் முப்பது ஆண்டு களுக்கு முன்பு ஆக்கிய சூரியக் கடிகாரத்தைக் காஸ்ஸினி செப்பணிட்டார். 1709 இல் மகன் ஜேக்ஸ் காஸ்ஸினி பாரிஸ் நோக்ககத்தில் சிறுகச் சிறுகத் தந்தையின் பணிகளை மேற்கொண்டார். தந்தையின் உடல்நிலை குன்ற ஆரம்பித்தது. குறிப்பாக கியோவன்னி காஸ்ஸினியின் கண்ணொளி மங்கிப் போய்க் கொண்டிருந்தது! இல்லச் சிறையில் [House Arrest] தள்ளப்பட்ட முதிய காலிலியோ பல்லாண்டுகள் விண்வெளி அண்டங்களையே பார்த்துப் பார்த்து ஒளியிழந்தது போல், காஸ்ஸினியின் கண்களும் அண்டக் கோள்களைக் கூர்ந்து பார்த்து ஒளி மங்கி 1711 இல் குருடாகிப் போயின! 1712 ஆம் ஆண்டு பாரிஸில் கியோவன்னி காஸ்ஸினி தனது 87 ஆம் வயதில் காலமானார்.

    கியோவன்னி காஸ்ஸினி பல்கலைக் கழகத்தில் எந்தப் பட்டமும் பெறாத வானியல் விஞ்ஞானி! அவர் ஒரு நியதிவாதி [Theoretician] அல்லர்! மேதமை மிக்க கூரிய வானோக்காளர் [Gifted Astronomical Observer]! காஸ்ஸினி 1667 இல் பிரான்ஸின் விஞ்ஞானப் பேரவை உறுப்பினர் [Member, Academie Royale des Sciences] ஆனார். 1672 ஆம் ஆண்டு பிரிட்டன் கியோவன்னி காஸ்ஸினியின் கணித விஞ்ஞானச் சாதனைகளைப் பாராட்டி, அவரை ராஜீயக் குழுவின் மதிப்பாளியாகக் [Fellow of Royal Society] கெளரவித்தது. முரண்பாடில்லாத அவரது உறுதியான, மெய்யான விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள், நியூட்டனுக்கு முந்தி வாழ்ந்த வானியல் விஞ்ஞான மேதைகளுக்குள் உச்ச இடத்தை அவருக்கு நிச்சயம் அளிக்கின்றன!

    படங்கள் : நாசா

    தகவல்:

    1. Giovanni Domenico Cassini, Catholic Encyclopedia

    2. Giovanni Casinni, U.K. History of Mathematicians By: E.F. Robertson, J.J. O ‘Connor.

    3. Cassini, Giovanni Domenico, Astronomical Institutions

    4. Cassini I Gian Domenicao, Catalog of the Scientific Community

    5 Giovanni Cassini By : J. J. O’Connor & E. F. Robertson

    6. http://www-groups.dcs.st-and.ac.uk/~history/Biographies/Cassini.html (Cassini Biography

    7. http://en.wikipedia.org/wiki/Giovanni_Domenico_Cassini (Wikipedia On Cassini) (Nov 21, 2010)

    **************

    S. Jayabarathan (jayabarathans@gmail.com) January 11, 2014

    http://jayabarathan.wordpress.com/

    Share
  • நான் கடவுளைக் கண்டேன்..

    கல்லும் கனியாகும் என்கிற திரைப்படத்தில் இடம்பெறும் இப்பாடலைக் கேட்டுப் பாருங்கள்! உணர்ச்சியில் உள்ளம் உணர்த்திடும் வார்த்தைகள் வரிகளாய் வந்துவிழ.. கவிஞர் வாலியின் எண்ணச் சிறகுகள் கதையின் களத்தில் விரிகின்றன. சொற்கள் கூட சுகம்தரும் என்னும் சூத்திரம் அறிந்தவர் கவிஞர் என்பதால் வேதனையைக்கூட தன் கற்பனையால் திறம்பட தருகின்ற அழகினைப் பாருங்கள்!

    உனக்கொரு தாய்போல்

    தனக்கில்லையே என்று இறைவன் கேட்டானோ

    எனக்கென உன்னைக் கொடுத்து உன் அன்னை அங்கே போனாளோ?

    பொருத்தமான இசையால் இந்தப் பொன்னான வரிகளை நம் உள்ளத்தில் ஆழமாய் பதிக்கின்றார் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்! பாசத்தில் விளையும் உறவுகள் தாய் தந்தை மகன்.. இவற்றுள் ஒன்றை இழந்து தவிக்கும் இன்னொரு உறவு.. என்பதன் கொடுமை .. இருக்கின்ற உறவை பாராட்டி..சீராட்டி.. தாலாட்டும் தந்தை.. தன் மகன் நாளை வளரும் நாளை நோக்கி காத்திருக்கும் காட்சி..

    தன் வெண்கலக்குரலால் ஜீவனைத்தருகின்ற டி.எம்.செளந்திரராஜன் இப்பாடலை பாடியிருக்கிறார் என்பது தகவல்! கூடுதல் தகவல் என்ன தெரியுமா.. இந்தப்படத்தில் அவரே கதாநாயகனாக நடித்திருக்கிறார் என்பதே! வித்தியாசமான தோற்றத்தோடு ஏழிசை வேந்தர் திரையில் தோன்றி பாடியிருக்கும் தாலாட்டுப் பாடல் இது எனலாமா? வரிகளில் எல்லாம் ஸ்வரங்களை நிரப்பி நம் உள்ளம் தொடும் பாடல் தந்த மெல்லிசை மன்னரைப் பாராட்டலாமா? இந்தக் கருத்தை எழுத்தில் கொடுக்க.. இதுதான் உகந்ததென்று சொற்களை எல்லாம் பூக்களாக்கித் தந்தவரைப் புகழலாமா?

    நல்லதோர் பாடல் இது என்பதில் இருவேறு கருத்தில்லை! நாளும் தனது குரலால் நம் வாழ்வில் இணைந்த டி.எம்.எஸ். திரையில் தோன்றிப் பாடிய பாடல் என்கிற பெருமையால் இந்தப் பாடலும் நினைவில் நிழலாடுகிறதே!!

    நான் கடவுளைக் கண்டேன் என்
    குழந்தை வடிவிலே..
    அவன் கருணையைக் கண்டேன்
    கொஞ்சும் மழலை மொழியிலே..
    பால்வடியும் உன் முகத்தில்
    ஆயிரம் கனவு கண்டேன்
    நாளைவரும் நல்ல வாழ்வு எனும்
    அந்த நினைவில் வாழ்கின்றேன்
    உனக்கொரு தாய்போல்
    தனக்கில்லையே என்று இறைவன் கேட்டானோ
    எனக்கென உன்னைக் கொடுத்து உன் அன்னை அங்கே போனாளோ?
    ஆலமரம் என நீ வளரும் நாள்தான் வரவேண்டும்
    கலைமகள் அருளும் அலைமகள் பொருளும்
    நிறைந்தேபெறவேண்டும்.. அறிவுடன் திகழும் திருமகன் புகழும்
    கடல்போல் பெருகாதோ
    பார்த்ததும் கேட்டதும் ஈன்றவர் நெஞ்சம் பனிபோல் உருகாதோ..

    மற்றுமொரு தகவல் இத் திரைப்படத்தில் டி.எம்.சௌந்தரராஜன் அவர்களுடன்
    ஏ எல். ராகவன் அவர்களும் நடித்திருப்பதோடு இருவரின் கூட்டுத் தயாரிப்பில் உருவான படம் என்பது நண்பர் ராகப்ரவாகம் சுந்தர் தரும் செய்தியாகும்.

    http://www.youtube.com/watch?v=pbqQHFzDUOE

    கவிஞர் வாலி……..!

    கவிஞர் வாலி அவர்கள் கிருஷ்ண விஜயம் எழுதத் தொடங்கியபோது -கவியரசு கண்ணதாசன் பற்றி நன்றியுடன் தனது முன்னுரையில் குறிப்பிட்ட வரிகள் கண்டு மெய்சிலிர்த்து – கவியரசு கண்ணதாசன் தமிழ்ச் சங்கம் சார்பில் வரைந்த நன்றிமடல்!

    பெறுகை
    காவியக் கவிஞர் வாலி
    சென்னை

    கட்டி வெல்லப் பாடல்களை மெட்டுக்குள் கட்டிவைக்கும்
    வித்தகம் தெரிந்த கவிஞர் வாலி – நீவிர்
    கண்ணதாசன் தமிழ் போல் வாழி!

    கவியரங்கமானாலும் கலையரங்கமானாலும்
    நின் தமிழ் நாட்டியத்தில் நித்தில சுகமுண்டு!
    தொட்டால் பூ மலரும் என்கிற பல்லவியின் சுகம்
    தொடாதார் யாரிங்கே? உணராதார் எவரிங்கே?

    காதலின் லயஸ்வரத்தில் நுனிவிரல் படுகின்றபோது
    முதன் முதலில் உடலுக்குள் பாய்கிறதே மின்சாரம்!
    காவியமாய் திரைப்பாடலைச் செதுக்கி வைத்தவனே..
    நெஞ்சில் ஓவியமாய் நின் கை வண்ணங்கள் ஆயிரமே!

    ஆன்மீக நெறியில் வந்த அத்தனைக் குணங்களையும்
    அடம் பிடிப்பதுபோல் நீ பிடித்த காரணத்தால்
    ஆசிர்வாதங்கள் அனுகூலங்கள் அத்தனையும்
    ஆண்டவன் சந்நிதானத்தில் உனக்கும் நித்தமும் படி..

    எனவேதான் .. அவதாரபுருஷன் முதல் பாண்டவர் பூமியென்றும்
    ராமானுஜர் காவியமும் .. உன் பேனா முனையில்
    பூக்களைப்போல் பாகல் விரித்து பவனி வந்தன!

    ஆனந்த ஸ்வரங்களென அவதரித்த கவிநடையில்
    ஆனந்த விகடன் வாரஇதழ் வாய் மலர்ந்தது!
    அடுத்து ஒரு அறிவிப்பு.. கிருஷ்ண விஜயம்
    அடடா .. முதல் இதழ் நுகர்ந்தோம்!

    தேனெனத் தித்திக்கும் செந்தமிழ் மா புலவா – நீ

    யாரெனக் கூறியிருக்கும் நற்றமிழ் மரபு கண்டோம் !

    கண்ணனின் அவதாரம் பற்றிய – நின்

    கருத்துக் குவிப்பில் மின்னிடும் புண்ணியன் தோற்றம் !

    எடுத்து கொடுப்பவன் அவன்! எழுத வைப்பவன் அவன்
    என்னுள் இருப்பவன் அவன் ! இயங்க வைப்பவன் அவன்!
    என்று கண்ணனைச் சரணடைந்தே – நற்
    காவியம் துவங்கியுள்ளாய்! நன்று! நன்று!!

    தன்னிலே கண்ணன் வைத்து தன்னையே தாசெனன்று – இம்
    மண்ணிலே வாழ்ந்து மறைந்த மானுடக் கவிஞர்தம்மை
    எண்ணியே வரிகள் பலவும் வரைந்திட்ட வாலியே!
    இன்னமும் இம்மண்ணிலே ஈரம் இருப்பதற்கு சாட்சியென்போம்!

    மாமுனியின் தோற்ற்றம் உன்னில் வந்தமைக்கு காரணங்கள்
    பாபுனையும் ஆற்றல் உன்னில் சரணடையும் ரகசியங்கள்..
    தேன்மதுரக் கவிநயங்கள் நின் தெள்ளுத் தமிழின் துள்ளல்கள்
    பருகி மகிழக் காத்திருக்கும் பலகோடி நெஞ்சங்களுள்..
    நேரிலே உம்மோடு உரையாடி உறவாடும்
    உரிமை பெற்ற உள்ளங்கள் ..
    யாரென இன்னுமா தெரியவில்லை?
    கண்ணதாசன் தமிழ்ச் சங்க நண்பர்கள் (பம்மல்) நின்
    கைவிரல்களில் கண்கள் பதித்து முத்தமிட்டு நன்றி பகர்கிறோம்!

    அன்புடன்..
    காவிரிமைந்தன்

    Share
  • வார ராசி பலன் 13-01-2014-19-01-2014

    காயத்ரி பாலசுப்ரமணியன்
    மேஷம்: இந்த வாரம் வெளியூரிலிருந்து வரும் உறவுகள் சந்தோஷத்தோடு, சிறு செலவுகளையும் சேர்த்தழைத்து வருவார்கள். முதியவர்கள் உணவு வேளைகளை தவற விடாமலிருப்பதோடு அதிகம் வெளியில் அலைவதையும் தவிர்த்து விடுதல் அவசியம். பொறுப்பில் இருப்பவர்கள் தேவையில்லாமல் உணர்ச்சி வசப்படுவதை குறைத்துக் கொள்ளுங்கள். வேலைகள் சீராக நடந்து கொண்டிருக்கும். பாராட்டை பெறக்கூடிய அளவிற்கு கலை நிகழ்ச்சிகள் கச்சி தமாய் நடந்தேறுவதால், கலைஞர்கள் உற்சாகத்துடன் திகழ்வார்கள். .யோசித்து நிதானமா கச் செயல்படுத்தக் கூடிய எல்லா விஷயங்களும் விரும்பிய பலனைத் தரும் என்பதை பெண்கள் நினைவில் கொண்டால், குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

    ரிஷபம்: கலைஞர்கள் தொழிலில் முழு கவனம் செலுத்தி வர, தங்களுக்கென்று ஓர் இடத்தைத் தக்க வைத்துக் கொள்ளலாம். பங்குதாரர்களுடன் ஆலோசித்து முடிவெடுக் கும் பழக்கத்தை கடைபிடித்தால், புதிய ஒப்பந்தங்கள் உங்கள் வசமாகும். இந்த வாரம் ஏதாவது ஒரு வழியில் பணம் செலவழியும் வாய்ப்பிருப்பதால், பெண்கள் சேமிப்புக்கு என ஒரு தொகை ஒதுக்கிவைத்தால் அவசர செலவுக்கு கை கொடுக்கும். மாணவர்கள் வேகம், வேகம் என்று செல்லும் போது விவேகத்தையும் உடன் சேர்த்துக் கொள்ளுங்கள். அனைத்திலும் வெற்றிதான். பணியில் இருப்பவர்களுக்கு தேடி வரும் புதுப்பொறுப்புகள் மூலம் உங்கள் அந்தஸ்தும், கௌரவமும் உயரும்.

    மிதுனம்: வியாபாரிகள் காலில் சக்கரம் கட்டிக் கொண்டு பறந்தாலும், அதன் மூலம் வரும் லாபம் மனதுக்கு மகிழ்ச்சியைத் தரும்.மாணவர்கள் வெளி வட்டார பழக்கங்களை ஓர் எல்லைக்குள் வைப்பது நல்லது. பெண்கள் வீணான சஞ்சலத்தையும், மனக்குழப்பத்தையும் மனதில் குடியேற விடாமலிருந்தால், திறமைகள் உங்கள் உயர்வுக்குக் கை கொடுக்கும். பணியில் இருப்போர் அலுவலக வட்டத்தில் அளவோடு பேசி வந்தால், வீண் தொந்தரவுகளை எளிதில் விலக்கலாம். பொது வாழ்வில் இருப்பவர்கள் பணியின் ஊடே அதிக அலைச்சல், எரிச்சல் ஆகியவற்றை எதிர்கொள்ள நேரிடும்.எனவே நிதானமாக செயல்படுவது நல்லது.

    கடகம்: வியாபாரிகள் புதியவர்களை நம்பி பெரிய முதலீடுகளில் அகலக்கால் வைக்கா மலிருந்தால், நஷ்டம் என்பதிராது. இருந்த இடத்தில் இருந்து வேலை வாங்கிக் கொண் டிருந்தவர்கள் இந்த வாரம் ஓடியாடி உழைக்கும் நிலைக்குத் தள்ளப்படுவர். வாழ் வில் இனிமையும், பெருமையும் தங்க வேண்டுமா? வாழ்க்கைத்துணை சொல்லும் ஆலோச னையை ஏற்றுச் செயல்படுங்கள். கல்வியின் மீது கல்வியின் மாணவர்களின் நாட்டம் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் இருந்த நலிவுகள் நீங்குவதால், பெண்கள் புதுத் தெம்புடன் வளைய வருவதோடு, விடுபட்ட வேலைகளை முடிக்கும் திறமும் கூடும். சகோதரர் வழியில் எதிர்பார்த்த உதவியும், ஆதரவும் கிடைக்கும்.

    சிம்மம்: பொது வாழ்வில் இருப்பவர்கள் இந்த வாரம் நெருக்கமான நபரை சந்தித்து அவர் மூலம் முக்கியமான காரியம் ஒன்றை சாதித்துக் கொள்வீர்கள்.பெண்கள் காரிய ங்களில், கவனமாக இருந்தாலும், சில எதிர்பாராத தொல்லைகளை சமாளிக்க வேண் டியிருக்கும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு, கிடைக்கும் வாய்ப்புகள் மூலம் எதிர்பார்த்த லாபமும், நல்ல பெயரும் கிட்டும். முதியவர்கள் உணவுப் பழக்க வழக்கம், தேவையான தூக்கம் இரண்டிலும் கவனமாக இருந்தால், உங்கள் ஆரோக்கியம் சீராக இருக்கும். வியாபாரிகளுக்கு கடிதம் மூலம் வரும் செய்திகள் சந்தோஷத்தை சுமந்து கொண்டு வரும். பெற்றோர்கள் கல்விக்கடன் பெற எடுக்கும் முயற்சி பலிதமாகும் .

    கன்னி: பெற்றோர்கள் எந்த ஒரு செயலையும், திறம்பட செய்யும் பிள்ளைகளை தக்க சமயத்தில் பாராட்டுங்கள். அது அவர்களுக்கு புதிய உத்வேகத்தை அளிக்கும். வியாபாரிகள் புதிய திட்டங்களில் இறங்கும் முன் கடன் நிலவரத்தையும் கவனத்தில் கொண்டு திட்டமிட்டால், காரியங்கள் நஷ்டமாகாது.பெண்கள் தெளிவான சிந்தனையோடும், தீர்க்கமான யோசனையோடும் செயல்படுவார்கள். மாணவர்கள் வரவு செலவுகளை வரைமுறைக்குள் வைத்தால், பிறரிடம் கைமாற்றாய் பணம் பெற வேண்டிய அவசியமிராது. மழைக் காலங்களில் முதியவர்கள் தங்கள் ஆரோக்கியத்தில் தகுந்த கவனம் செலுத்துவது அவசியம்.

    துலாம்: முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள் மற்றவர்களை முழுமையாக நம்பி எந்த வேலைகளையும் ஒப்படைக்க வேண்டாம். பொது வாழ்வில் இருப்பவர்கள் பாராட்டை எதிர்பாராமல், உறுதியாக உழைத்தால், அந்த உழைப்பே கௌரவமான பதவியில் உங்களை அமர வைத்து விடும். பெண்கள் குடும்பத்தில் பிறர் செய்யும் தவறுகளை இதமாகச் சுட்டிக் காட்டுங்கள். உறவுகளின் இனிமை மாறாமலிருக்கும்.மாணவர்கள் மனதில் இருந்த தாழ்வு மனப்பான்மை விலகி, தன்னம்பிக்கை அதிகரிப்பதால், சவாலான பணிகளில் ஈடுபாடு காட்டுவார்கள். இந்த வாரம் உறவினர் வருகையால் மகிழ்ச்சியும், அதற்கேற்ற செலவுகளும் கூடும்.

    விருச்சிகம்:இந்த வாரம் கலைஞர்கள் வாழ்வில் திருப்பங்களுக்கும், விறுவிறுப்புக்கும் நிறைய இடமிருக்கும். பெண்கள் மனம் விரும்பும் போல் வீட்டை அழகு படுத்துதல் மற்றும் விரிவுபடுத்தல் ஆகியவற்றில் முனைப்புடன் இறங்குவீர்கள். மாணவர்கள் சில சிரமங்களைத் தாண்டி வேலைகளை முடிப்பார்கள். வேலை செய்யும் சூழல், அதிகாரிகளின் போக்கு ஆகிய வை சாதகமாக இருப்பதால், பணியில் இருப்பவர்கள் உற்சாகத்துடன் செயல்படலாம். பொது வாழ்வில் இருப்பவர்கள் நாவடக்கத்தை மேற்கொண்டால், கருத்து வேற்றுமை ,கசப்பான அனுபவம் ஆகியவை தலைகாட்டாமல் இருக்கும். சுய தொழில் புரிபவர்கள் ஏற்றமான நிலை காண்பர்.

    தனுசு:மாணவர்கள் தங்கள் பொறுப்புணர்ந்தும், திட்டமிட்டும் செயல்பட்டால் எதிலும் வெற்றிதான்! போட்டிகள் மற்றும் பொறாமைகளின் நடுவே எதிர்நீச்சல் போட்டு கலை ஞர்கள் தங்கள் வய்ப்புக்களைத் தக்கவைத்துக் கொள்வர். இந்த வாரம் குடியிருக் கும் வீட்டை மாற்ற வேண்டிய நெருக்கடிக்கு சிலர் ஆளாகலாம். பெற்றோர்கள் பிள்ளைக ளைப் பற்றிய வீணான கவலை நீங்கும் வண்ணம், அவர்களின் செயல்பாட்டில் தெளிவு காணப்படும். பெண்கள் எந்த சமயத் தில் எதை செய்ய வேண்டும், எங்கு எப்படி பேச வேண்டும் என்பதை உணர்ந்தாலே குடும்பத்தில் கலகலப்புக்கு குறைவிராது. பணியில் உள்ளவர்கள் மறதியால் சிலவற்றிற்கு வீண் தண்டம் கட்ட வேண்டி யிருக்கும்

    மகரம்: நீடித்த கடன்கள் விலகுவதால் பெண்கள் மனதில் நிம்மதியும், முகத்தில் மகிழ்ச்சியும் மலரும். கலைஞர்கள் புதிய முயற்சியில் ஈடுபடும் போது, எழும் தடை களைத் தவிர்க்க தீவிர முயற்சி, இதமான அணுகு முறை இரண்டையும் கடைப்பிடி த்தல் அவசியம். மாணவர்கள் ஈடுபாடோடு எந்த செயலைச் செய்தாலும் அதில் வெற்றி காண முடியும் என்பதை நினைவில் கொண்டால், பாடங்கள் சுமையாய்த் தோன்றாது. வியாபாரிகள் நிதி நிலவரத்தை கவனத்தில் கொண்டபின், காசோலைக ளை பிறர்க்கு வழங்குவது நல்லது. இந்த வாரம் வழிப் பயணங்களில் சிறு விரயங்களும் அதனால் மன வருத்தமும் உருவாகலாம்.

    கும்பம்: வியாபாரிகள் சிறிது பொறுமை காத்தால், புதிய ஒப்பந்தங்களால் வரும் முழுமையான லாபத்தை பெறலாம். தினசரி பணிகளில் குழப்பங்கள் உருவாகாமலிருக்க பெண்கள் கவனமாகவும், நிதானமாகவும் செயல்படுவது நல்லது. இந்த வாரம் உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்க்கும் பல சலுகைகளில் சிலவை மட்டுமே நிறைவேறுவதால், மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடலாம். முதியவர்கள் சின்ன விஷயங் களுக்காக பிறர் மேல் சீறிப் பாய்வதைக் குறைத்துக் கொள்ளுங்கள். குடும்ப அமைதி குலையாது. வேலையின் பொருட்டு அடிக்கடி வெளியூர்களுக்கு செல்பவர்கள் ஒவ்வாமை தரும் உணவு வகைகளை ஒதுக்குவது நல்லது.

    மீனம்: மாணவர்கள் மனக் குழப்பத்திற்கு இடம் தராமலிருந்தால் சிந்தனை வளம் வற்றா மலிருக்கும் பெற்றோர்கள் செலவுக்கு போதிய பணம் தந்தாலும், பிள்ளைகள் பணம் செலவழிக்கும் வழியின் மீது கவனம் வைப்பது நல்லது.  வெளிவட்டாரத் தொடர்புகள் தங்கள் எதிர்பார்ப்பிற்கு ஏற்ற வகையில் அவ்வளவு லாபகரமாய் இராதென்பதால், வியாபாரிகள் ஆடம்பரச் செலவு களைக் குறைத்துக் கொள்வது நல்லது. சளி, காய்ச்சல் ஆகியவைகளின் பாதிப் பில்லா மலிருக்க, பெண்கள் சுகாதாரமான குடி நீரை பயன்படுத்துதல் நலம். சுய தொழில் புரிபவர்கள் பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருந்தால் வருகின்ற லாபம் குறையாமலிருக்கும்.

    Share
  • சீதாயணம் நாடகப் படக்கதை – 15

     

    சீதாயணம் நாடகப் படக்கதை – 15

    சி. ஜெயபாரதன், கனடா

    [சென்ற வாரத் தொடர்ச்சி]

     

    நாடகம் : சி. ஜெயபாரதன், கனடா

    வடிவமைப்பு : வையவன்

    ஓவியம் : ஓவித்தமிழ்

    jeya1

    jeya2

     

    தகவல்

    1. Bharathiya Vidhya Bhavan Ramayana By C. Rajagopalachari [1958]

    2. Valmiki ’s Ramayana, Dreamland Publications, By: Ved Prakash [2001] and Picture Credit to Kishan Lal Verma

    3. Mahabharatha By: Rosetta William [2000]

    4. The Wonder that was India By: A.L. Basham [1959]

    5. The Ramayana & The Mahabharata By: Romesh C. Dutt [1969]

    6. Ramayana [Torchlight Publishing] By: Krishna Dharma [2004]

    7. http://jayabarathan.wordpress.com/seethayanam/ [நெஞ்சின் அலைகள்]​

    8. ​http://www.vallamai.com/?p=21424 [வல்லமை வலைப் பக்கம்]

    **************

    S. Jayabarathan [jayabarathans@gmail.com ] (October 2, 2013) [R-2]

    http://jayabarathan.wordpress.com/

     

    Share
  • சொர்க்க வாசல் ?!

    வாசலில் செம்மண் கோலமிட்டால் வருபவர்க்கு சொர்க்க வாசல்
    ஓசையில் மணியுடன் கதவுகள் திறந்தால் வந்த‌வர்க்கு சொர்க்க வாசல்
    வாவென் றழைக்க அன்பர்கள் இருந்தால் திறப்பவர்க்கு சொர்க்க வாசல்
    புன்னகை புரிந்து வந்தனங்கிடைத்தால் விருந்தினர்க்கு சொர்க்க வாசல்

    அன்புடன் வார்த்தை அருவிடப் பகிரும் வாயுமேயொரு சொர்க்க வாசல்
    பண்புடன் விருந்து பகிர்வுடன் அன்புச் சமைத்திடும் உள்ளம் சொர்க்க வாசல்
    அருசுவை யேற்று தொந்தியில் செரிமன் ஆகிடும் இல்லற சொர்க்க வாசல்
    அருமை உங்களின் சமையல் என்ற ஆசிகள் காதினில்! சொர்க்க வாசல்

    அழுதிடும் குழவியின் அரவங் கேட்டு சுரபிகள் திறப்பதும் சொர்க்க வாசல்
    தொழுதிடும் அடியார் குறைகளை கேட்டு வரங்கள் வருவது சொர்க்க வாசல்
    பழுதுடன் பிணிதனை நீக்கும் இலவச மருத்துவர் இல்லம் சொர்க்க வாசல்
    படிப்புடன் பண்புகள் கற்றுகொடுத்திடும் பள்ளிவாசலும் சொர்க்க வாசல்

    தாயகம் காப்போம் என்றே சேவைகள் தந்தவர் வாசல் சொர்க்க வாசல்
    ஆயுதம் யேந்தி கடும்பனி குளிரினில் ஆள்பவர் அடிகள் சொர்க்க வாசல்
    பாதகம் செய்வோர் திருந்திட சிறையின் வாசலும் அவர்க்கே சொர்க்க வாசல்
    சாதனைப் புரிவோர் மகத்துவந் தன்னைச் சாற்றும் காற்றும் சொர்க்க வாசல்

    ஏகாதசிதமில் ஆழ்வார் சுரங்களைப் பாடிமால் தரிசனம் சொர்க்க வாசல்
    தீராபசியினில் தீந்தமிழ்க்கவிதை ஆக்கும் கணினியில் சொர்க்க வாசல்
    தேன்மொழி யானதும் செம்மொழிசங்க மேடையுந்தானே சொர்க்க வாசல்
    மின்மொழி யாகிட வல்லமைத் தளத்தில் நுழைவதும் தானே சொர்க்க வாசல்

    Share
  • சிதையா நெஞ்சு கொள்!

    பவள சங்கரி

    சென்ற புதன் கிழமை 08.01.2014 அன்று மாலை ஈரோடு சித்தார்த்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 28 ஆம் ஆண்டு விழாவும், மாணவர்களுக்கு, ஆசிரியர்களுக்கு மற்றும் பெற்றோர்களுக்கென மூன்று நூல்களின் வெளியீட்டு விழாவும் மிகச் சிறப்பாக நடைபெற்றது. சித்தார்த்தா பள்ளி தன் 28 ஆண்டு கால கல்வி அனுபவத்தை இப்பள்ளியின் தாளாளர் திருமதி ஜெ.ஜெயபாரதி அவர்கள் மூலமாக மிக அழகாகத் தொகுத்து மூன்று நூல்களாக வழங்கியுள்ளது.

    bharathy 1

    பெற்றோர்களின் தூரக் கனவை நனவாக்க உதவும் நூல் – பாதை
    மாணாக்கர்களின் தடைகளைத் தாண்டி வர வழிகாட்டும் நூல் – பயணம்
    ஆசிரியர்கள் வெற்றியில் தேங்கிவிடாமல் செயலாற்ற ஊக்குவிக்கும் நூல் – சுவடு

    பள்ளியின் தாளாளர் திருமதி ஜெ. ஜெயபாரதி விழாவிற்கு தலைமையேற்க, பள்ளி முதல்வர் திருமதி ஞானம் ஆண்டறிக்கை சமர்பிக்க, துணை முதல்வர் கண்ணகி வரவேற்புரை ஆற்றினார்.

    bharathy3

    சிறப்பு விருந்தினர்களாக எழுத்தாளர், கவிஞர் அ. வெண்ணிலா அவர்களும், தனி மனித மேம்பாட்டு பயிற்சியாளர் திரு. கிருஷ்ண. வரதராஜன் அவர்களும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். நாட்டு நலப் பணித் திட்டங்களுக்குப் பெருமளவில் ஈடுபாடு காட்டும் வகையில் பயிற்சி அளிக்கப்படும் இப்பள்ளியின் தனிப்பட்ட சிறப்பம்சமாக, சிறப்புக் குழந்தைகள் என்று சொல்லப்படும் மனவளர்ச்சிக் குறைபாடு, கற்றல் குறைபாடு, கவனம் சிதறல், நினைவாற்றல் குறைபாடு, ஹைபர் ஆக்டிவ் போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகள் சிலரை மற்ற குழந்தைகளுடன் சேர்ந்து பயிலும் வகையில், அவர்களுக்குத் தனிப்பட்ட கவனம் செலுத்துவதற்காக சிறப்புப் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் மூலமாக பயிற்சி அளிப்பது குறிப்பிடத்தக்கது. நல்ல நிலையில் இருக்கும் மற்ற குழந்தைகளுடன் சேர்ந்து படிக்கும் இக்குழந்தைகளின் முன்னேற்றம் குறிப்பிடும்படி இருப்பது சிந்திக்க வைக்கக் கூடியதாக இருந்தது. மற்ற பள்ளிகளும் இது போன்ற பரிட்சார்த்த முறையை தொடர்வதால் கேள்விக்குறியாக இருக்கும் இப்படிப்பட்ட குழந்தைகளின் முன்னேற்றத்திற்கு வாய்ப்பு ஏற்படுத்துவதாக அமையலாம்.

    bharathy4

    குழந்தைகள் தங்களுடைய அருமையான நிகழ்ச்சிகள் மூலம் அழகாக அலங்கரித்த மேடையில் தாம் அதிகம் பேசி அவர்களின் மகிழ்ச்சியான நேரத்தைக் களவாட விரும்பவில்லை என்று கவிஞர் வெண்ணிலா ஆரம்பித்தாலும், மிக எளிதாக குழந்தைகள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் என அனைவரையும் தம் கட்டுக்குள் வைத்திருந்தார் என்றே சொல்ல வேண்டும்! தாம் குழந்தைகளின் நிகழ்ச்சிகளைக் கண்டு, குறிப்பாக சிறப்புக் குழந்தைகளின் நிகழ்ச்சி மூலம் உள்ளம் நெக்குருகி நிற்பதாக உணர்வு பொங்கக் கூறினார். அதற்காகப் பயிற்சியளித்த ஆசிரியை மற்றும் தாளாளர் ஜெயபாரதி அவர்களுக்கு வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொண்டார். பாரம்பரியம் மாறா நடவடிக்கைகளை விடாமல் கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயத்தையும் சவாலாக ஏற்றுச் சாதிக்க வேண்டுமென்பதை வலியுறுத்திச் சிறப்புரையாற்றினார்.

    ”பெற்றோர்களே உங்கள் கனவை குழந்தைகளின் மீது திணிக்காதீர்கள். அவன் டாகடர் ஆவதும், என்ஜீனீயர் ஆவதும் அவன் கைகளில் விட்டுவிடுங்கள். குழந்தைகளை நம் எதிர்பார்ப்புகள் அனைத்திற்கும் கட்டுப்பட்டவர்கள் என்று எண்ணும் வழக்கத்தை மாற்றுங்கள். அவர்கள் விருப்பத்தை அறிந்து அதற்கேற்றார் போல அவர்கள் வாழ வழிகாட்டுங்கள்” என்று பெற்றோருக்கு வேண்டுகோள் விடுத்தார்.

    பெண் குழந்தைகளை தவறான எண்ணத்தில் தொடும் ஆசிரியர்கள் குறித்த விழிப்புணர்வை அவர்களுக்கு ஏற்படுத்தும் வகையில் பாடத்திட்டத்தில் அது குறித்த பாடங்களை சேர்க்க வேண்டியதன் அவசியம் பற்றிய ஆக்கப்பூர்வமான தன்னுடைய எண்ணத்தைப் பகிர்ந்து கொண்டார்.

    ”குழந்தைகளே ஆம், இல்லை, வேண்டும், வேண்டாம் என்பதை தெளிவாகச் சொல்லிப் பழகுங்கள். அதுவே உங்கள் வாழ்க்கையின் வெற்றி. யாருக்காகவும் உங்களுடைய இலக்கில் சமரசம் செய்துகொள்ள வேண்டியதில்லை. பாதையில் தெளிவு இருந்தால் பயணத்தில் குழப்பம் இல்லாமல் முன்னேறலாம்” என்ற பொருள்படும்படியாக மிக உற்சாகமாக உரையாடினார்.

    bharathy 2

    “ஒரு மணி நேரத்தில் உங்கள் வாழ்வில் நிகழப்போகிறது மேஜிக்” என்று ‘மாயப் புத்தகம்’
    ஒன்றை அனு ராஜன் என்பவருடன் இணைந்து எழுதி சிறுவர் உலகை உற்சாகமூட்டிக் கொண்டிருக்கும் , தனி மனித மேம்பாட்டு பயிற்சியாளருமான திரு. கிருஷ்ண வரதராஜன் அவர்கள் மிகச் சுவையாக, குழந்தைகளுக்கு தன்னம்பிக்கையும், கல்வியில் ஆர்வமும் ஏற்படும் வகையில் மிகச் சிறப்பாகவும் சொற்பொழிவாற்றினார்.

    ’மாயப் புத்தகத்தில்’ , ’இரண்டு ஓநாய்கள்’ என்ற குட்டிக் கதை.

    ஆசிரியர் மாணவர்களுக்கு பாடம் நடத்திக் கொண்டிருந்தார்

    “ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இரண்டு ஓநாய்கள் இருக்கின்றன. ஒரு ஓநாய், அன்பு, நம்பிக்கை, உற்சாகம் போன்ற நல்ல குணங்களை கொண்டிருக்கிறது. மற்றொன்று கோபம், அவநம்பிக்கை, வெறுப்பு போன்ற தீய குணங்களைக் கொண்டிருக்கிறது.

    மனிதனுக்குள் உள்ள இந்த இரண்டு ஓநாய்களும் எப்பொழுதும் சண்டையிட்டபடியே இருக்கின்றன” என்றவர் மாணவர்கள் ஆர்வமாகக் கவனிப்பதைப் பார்த்துவிட்டு, “உங்களுக்குள்ளும் இந்த இரண்டு ஓநாய்களும் இருக்கின்றன?” என்றார்.

    சட்டென்று ஒரு மாணவன் கேட்டான், “சார் இரண்டில் எந்த ஓநாய் ஜெயிக்கும்?”

    ஆசிரியர் புன்னகையுடன் சொன்னார், “எந்த ஓநாய்க்கு அதிகம் உணவு கொடுக்கிறாயோ அந்த ஓநாய்தான் ஜெயிக்கும்”

    pavala 2

    இராமருக்கு பாலம் கட்ட உதவிய சிறு அணில் போன்று, நூல்களின் உருவாக்கத்தின் என்னுடைய  உதவிக்காக எனக்கும் பரிசு கொடுத்து கௌரவித்த சித்தார்த்தா பள்ளி தாளாளர் ஜெ.ஜெயபாரதி அவர்களுக்கு நன்றி. இந்த மூன்று நூல்களும் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு சிறந்த முறையில் பலனளிக்க வல்லமையின் மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    bharat

    bharath 12

    Share
  • மார்கழிப் பூவும் வைகுந்த வாசற்படியும்

    தமிழ்த்தேனீ

    மாதங்களில்  சிறந்தது  மார்கழி படிகளில் சிறந்தது  வைகுண்ட வாசற்படி

    “படியாய்க் கிடந்து உன் பவள வாய்க் காண்பேனோ”  என்று பாடிய

    குலசேகர ஆழ்வார்  இவரது பெருமை பேசும்போதெல்லாம்

    ‘குஷ்யதே யஸ்ய நகரே ரங்க யாத்ரா தினே தினே, நமஹம் சிரஸா நமாமி ராஜானம் குலசேகரம்’’ என்ற வடமொழி ஸ்லோகம் வர்ணிக்கிறது.

    ஆண்டாளை அரங்கனுக்கு மணமுடித்துக் கொடுத்த பெரியாழ்வாரைப் போல, குலசேகராழ்வாரும் தன் பெண்ணை கொடுத்து, அரங்கனுக்கே மாமனார் ஆனார்! ‘‘ஸ்வசுரம் அமரவர்த்யம் ரங்கராதஸ்ய ஸாட்சார்’’ என்று பெரியாழ்வாரை சொல்வார்கள். அதாவது, ‘‘தேவர்களால் வணங்கப் பெற்ற, சாட்சாத் அரங்கனுடைய மாமனாரான பெரியாழ்வாரை வணங்குகிறேன்’’

    அரங்கனையே நாடவேண்டும் என்று கூறும்படியாக ‘இருளிரிய’ என்கிற 10 பாட்டுக்களால் வழங்கினார். எம்பெருமானை கண்ணனாக அனுபவித்து ‘படியாய்க் கிடந்து உன் பவளவாய் காண்பேனே’ என்று அருளிச் செய்ததன் மூலம் 5 ம் லட்சணத்தை வெளியிட்டார்.

     மாதங்களில் நான் மார்கழியாக இருப்பேன் என்று பகவத் கீதையில் கண்ணன் அருளியிருக்கிறார். மார்கழி மாதம் சனிக்கிழமை பிறக்கிறது.  தட்சிணாயனத்தின் கடைசி மாதமாக விளங்கும் மார்கழி மாதத்தின் பெருமைகளையும் வைகுண்ட ஏகாதசியின் பெருமைகளையும் தெரிந்து கொள்வோம்.

    சூரியனுடைய சுற்று வட்டப் பாதையை  இரண்டு விதமாக பிரித்திருக்கிறார்கள்,  ஒன்று ஆடி மாதம் முதற்கொண்டு    ஆவணி ,புரட்டாசி  ,ஐப்பசி, கார்த்திகை  மார்கழி  மாதங்கள் சூரியனுடைய  சுற்று  தெற்கு  திசையாக  கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி  சஞ்சரிக்கும் காலம்  ,இதை தக்ஷிணாயணம்  என்று கூறுவர்.

    அதேபோல் தைமாதம் முதல் ,  மாசி, பங்குனி,சித்திரை, வைகாசி, ஆனிவரை  சூரியனின் சுற்று  வடக்கு திசையாக  கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி சஞ்ஜரிக்கும்  காலம்

    ைபமுற்ற் ,உத்திராயணம் என்று சொல்வர்.   இப்படிப் பார்க்கும் போது ஆடி , புரட்டாசி ஆவணி ,  ஐப்பசியின் ,கார்த்திகை,  மார்கழி

     மார்கழி மாதம் 1ம் தேதி முதல்  10ம் தேதி வரை  பகல் பத்து , 11ம் தேதி முதல் 20 ம் தேதி வரை ராப்பத்து சுக்லபக்‌ஷ ஏகாதசியான 11ம் தேதி மார்கழி மாத சுக்ல பட்ச ஏகாதசியை வைகுண்ட ஏகாதசி என்று போற்றுவர். இந்நாளில் வைணவத் திருத்தலங்களில் பரமபதவாசல்  (சொர்க்க வாசல்) திறப்பு வைபவம் மிகச் சிறப்பாக நடைபெறும். பெருமாள், பரமபத வாசல் சந்நதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்புரிவார். பெருமாள் கோயில்களில் வைகுண்ட ஏகாதசி விழா, பகல் பத்து, இராபத்து உற்சவமாக வெகு சிறப்பாக நடைபெறும். இராப்பத்தின் முதல் நாள் பரமபத வாசல் சந்நதி திறப்பு விழா நடைபெறும்.

    இந்த வைகுண்ட வாசல்  வழியாக பரமபத பெருமான் காட்சி கொடுப்பதும்  அப்போது  அவனை சேவித்து அந்த வைகுண்ட வாசற்படி வழியாக நாமும் வந்தால் பரம்பதமான ,வைகுண்டத்தை சொர்கத்தை நாமும் அடைவோம்.

     வைகுண்டத்தின் துவாரபாலகர்களாகிய  ஜெய விஜய  என்னும் இருவரும் வைகுந்த வாசலை  மூடினர். இதனைக் கண்ட பெருமாள் காவலர்களிடம் ‘‘வைகுண்ட வாசலின் கதவை ஏன் மூடினீர்கள்?’’ என்று கேட்டார். அதற்கு கலியுகத்தில் கலையுகத்திலே பாவங்கள் பெருகும் யாருமே வைகுந்த வாசலை அடையப் போவதில்லை ஆகவே மூடினோம் என்று பதிலுரைத்தார்கள்.

    ஶ்ரீமன் நாராயணன்  அப்படி இல்லை கலியுகத்திலே பாவங்கள் பெருகினாலும்  பக்தியும் ஆத்திகமும் புண்ணியங்களும்  பெருகும் அதனால் திறந்து வையுங்கள் வைகுண்ட வாயிலை என்று .இப்படி ஶ்ரீமன் நாராயணன்  அருளிய தினம் , மார்கழி மாத  சுக்லபட்ச ஏகாதசி  என்பது புராண வரலாறு ,ஆகவே  வைணவ ஏகாதசி அன்று சாஸ்திர சம்பிரதாயப்படி விரதம் கடைப்பிடித்து பெருமானை வழிபடும் பக்தர்களுக்கு நிச்சயம் வைகுண்டத்தில் இடம் உண்டு .

     அப்படி இருந்த நிலையில் கலியுகத்திலே முதன் முதலாக வைகுந்தம் ஏகியவர் நம்மாழ்வார்.   நம்மாழ்வார் முக்தி அடைந்த அன்று, அது திறக்கப்பட்டது. இதனை அறிந்த நம்மாழ்வார், பெருமாளிடம் ‘எனக்கு மட்டும் வைகுண்ட வாசலைத் திறந்தால் போதாது.  என்னைத் தொடர்ந்து  தங்கள் மீது பக்தி செலுத்தும் அனைத்து பக்தர்களுக்காகவும் வைகுண்டவாசல் திறக்கப்பட வேண்டும்’ என்று வேண்டவே, பெருமாள், நம்மாழ்வாரின் வேண்டுகோளை ஏற்று மார்கழி மாத சுக்லபட்ச ஏகாதசியில்  சொர்க்க வாசல் திறக்க வழி செய்தார். அந்த நாள்தான் வைகுண்ட ஏகாதசியாக, சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சியாக அனுசரிக்கப்படுகிறது.

    திருமங்கை ஆழ்வாரின் திருப்பணியிலே மனம் மகிழ்ந்த அரங்கன்  அவர்முன்  தோன்றி  என்ன வரம் வேண்டும் என்று கேட்கவே  திருமங்கை ஆழ்வார்  நம்மாழ்வார் பரமபதம் அடைந்த  நாளான  மார்கழி வளர்பிறை ஏகாதசியை பெருநாளாகக் கொண்டாடவேண்டும் என்று வேண்டிக் கொண்டாராம் .நம்மாழ்வாரின் திருவாய்மொழிக்காக திருவிழா  நடைபெற  அருள வேண்டும்  என்று வேண்டிக் கொண்டாராம்  அதை ரங்கநாதர் அருளினார். அதன்படித்தான்  ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி விழா நடைபெறுகிறது.

    பூலோக வைகுந்தம் என்னும் பேறு பெற்ற ஶ்ரீரங்கத்தில் இந்த வைகுண்ட ஏகாதசி மிகச் சிறப்பாக நடைபெறும்,அது போல திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமானின் கோயிலிலும் இன்னும் பல வைணவத் திவ்ய தேசங்களிலும் வைகுண்ட ஏகாதசி மிகச் சிறப்பாக்க் கொண்டாடப் படுகிறது

    வைணவக் கோயில்களில் பரமபதவாசல் என்று ஒரு சந்நதி இருக்கும். இந்த வாசல், வடக்கு நோக்கி இருப்பதைக் காணலாம்.  இது மூடப்பட்டே இருக்கும். ஆண்டுக்கு ஒருமுறை வைகுண்ட ஏகாதசி  அன்று மட்டும் இந்தக் கதவுகள் திறக்கப்படும். இந்த வாசல் வழியாக அன்று பெருமாள் பிரவேசிக்கும்போது, பக்தர்கள் பின்தொடர்ந்து செல்வார்கள். இதனால் சொர்க்கத்தில் இடம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இந்த நிகழ்ச்சியில் பங்குபெற ஸ்ரீரங்கத்துக்கு வெளியூர்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் குவிவார்கள்.

    புதுக்கோட்டையிலிருந்து இருபது கி.மீ. தூரத்தில் இருக்கும் திருமயம் திருத்தலத்தில் ஏகாதசி திதியையொட்டி வரும் பரணி நட்சத்திரத்தன்றுதான் சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது. புகழ் பெற்ற திருமலை திருப்பதியில் சொர்க்க வாசல் சந்நதி என்று தனியே கிடையாது. அதற்கு பதில் வைகுண்ட ஏகாதசி திதியை முன்னிட்டு ‘முக்கோடி பிரதட்சண வாசல்’ திறப்பு விழா நடைபெறும். திருமலையில் எழுந்தருளியிருக்கும் வேங்கடவனைத்  தரிசித்த பின்னர் வெளியில் வந்தால் காணப்படும் பிராகாரத்தை விமான பிரதட்சண பிராகாரம்’ என்பார்கள்.

    இந்த பிராகாரத்துக்கும் வேங்கடவன் அருள்புரியும் மூலஸ்தானத்துக்கும் நடுவில் ஒரு பிராகாரம் உள்ளது. இது திருமலையில் மட்டுமே உள்ள அபூர்வமான பிராகாரம். இப்பிராகாரத்தை  வலம் வந்தால் மகா புண்ணியம் கிட்டும். வேங்கடவனைத் தரிசித்து, வாயிலைக் கடந்ததும் இருப்பது ஸ்நபன மண்டபம். இதையடுத்து ராமர் மேடை உள்ளது. இதற்கு இடப்பக்கம்  ஆரம்பித்து, மூலவரான வேங்கடாசலபதியை வலம் வந்து உண்டியல் இருக்கும் இடத்தை அடைகிறோம். இப்பகுதி, ‘முக்கோடி பிரதட்சண  பிராகாரம்’ ஆகும்.

    இந்தப் பிராகாரம் வருடத்தில் மூன்று நாட்கள் அதாவது, மார்கழி மாத வைகுண்ட ஏகாதசிக்கு முதல் நாளான தசமித் திருநாள் முதல் துவாதசித் திருநாள்வரை திறந்திருக்கும். திருமலையில் முக்கோடி பிரதட்சணம், சொர்க்க வாசலுக்குச் சமமாகக் கருதப்படுகிறது. கேரளாவில் வைகுண்ட ஏகாதசியை ‘விருச்சிக ஏகாதசி’ என்று போற்றுவர். குருவாயூர் கோயிலில் இந்த விழாவை பதினெட்டு நாட்கள்  கொண்டாடுவர். இதையொட்டி தீபஸ்தம்பங்களில் விளக்குகள் ஏற்றப்பட்டு, சொர்க்க லோகம்போல் கோயில் காட்சி தரும். மேலும் ஏகாதசியன்று அதிகாலை 3-30 மணி முதல் மறுநாள் துவாதசி வரை கோயில் திறந்தே இருக்கும்.

    விருச்சிக ஏகாதசியையொட்டி,  அதிகாலையில் குருவாயூரப்பனை தரிசிப்பது சொர்க்கவாசல் வைபவத்துக்குச் சமமாகக் கருதப்படுகிறது. பெரும்பாலான வைணவத் திருத்தலங்களில் வைகுண்ட ஏகாதசி அன்று விடியற்காலையில் 4-15 மணிக்கு சொர்க்க வாசல் நிகழ்ச்சி நடைபெறும். ஆனால், சில கோயில்களில் சொர்க்க வாசல் கிடையாது; ஆனால், வைகுண்ட ஏகாதசி வைபவம் நடைபெறும். கும்பகோணம் சார்ங்கபாணி திருக்கோயில், திருவெள்ளறை ஸ்ரீபுண்டரீ காட்ச பெருமாள் கோயில்களில் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி கிடையாது. அங்கு தட்சிணாயனம், உத்தராயணம் என்று இரண்டு வாசல்கள் உள்ளன.

    ஒன்று ஆடி முதல் மார்கழி வரை திறந்திருக்கும்; மற்றொன்று தை முதல் ஆனி வரை திறந்திருக்கும். எனவே, இங்கு சொர்க்க வாசல் நிகழ்ச்சி கிடையாது. ஆதிசேஷன் அவதாரமாகக் கருதப்படும் ராமானுஜர் அவதரித்ததால், ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவப் பெருமாள் கோயில், நித்ய சொர்க்க வாசல் திருத்தலமாகக் கருதப்படுகிறது. அதனால் இங்கும் சொர்க்கவாசல் நிகழ்ச்சி இல்லை. இங்கு வைகுண்ட ஏகாதசி அன்று ஆதிகேசவர், ராமானுஜர் இருவரும் பூதக்கால் மண்டபத்தில் எழுந்தருள் வார்கள்.

    அவ்வேளையில் சொர்க்க வாசல் திறப்பதுபோல் இங்குள்ள மணிக்கதவை (சந்நதிக் கதவை) திறப்பர். கர்நாடக மாநிலம் ஸ்ரீரங்கப் பட்டணம் ரங்கநாதர் கோயிலில் தைப் பொங்கல் அன்று தான் சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது. சாஸ்திர சம்பிரதாயப்படி வைகுண்ட ஏகாதசி அன்று விரதம் கடைப்பிடித்து பெருமாளைத் தரிசித்தால் வைகுண்டத்தில் நிச்சயம் இடம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    வைகறைப் பொழுதான மார்கழி, தேவர்களை வழிபடுவதற்கு மிகப் பொருத்தமான மாதம் என்பது இந்த மாதத்தின் சிறப்பாகும். மனிதர்களுக்கு ஒரு ஆண்டு என்பது தேவர்களுக்கு ஒருநாள் ஆகும். இந்த ஒருநாளின் வைகறைப் பொழுதாக மார்கழி அமைகிறது. உடல் சுறுசுறுப்பும், உள்ளத் தெளிவும் நிறைந்த வைகறைக் காலை வழிபாடு எப்போதும் சிறந்தது.

    பிரம்ம முகூர்த்தம்  அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரை உள்ள காலம் பிரம்ம முகூர்த்தம் எனப்படுகிறது. வழிபாட்டுக்கு ஏற்ற காலமும் இதுவே. இந்த நேரத்தில் ஓசோன் வாயு நில உலகத்தில் மென்மையாகப் படர்ந்து பரவுகிறது. இது உடலுக்கு நலம் தரும்; புத்துணர்ச்சி தரும். உள்ளத்துக்கு இதம் தரும்; புதுக் கிளர்ச்சி தரும். மார்கழி விடியற்காலையில், ஓசோன் வாயு நிலவுலகத்தில் சற்று அதிகமாகப் பரவுகிறது. இதன் காரணமாகவே பண்டைய தமிழர்கள் மார்கழி விடியற் காலையில் நோன்பிருந்து இறைவனை வணங்கினர்.

    சரணாகதி தத்துவம் :-

    மார்கழி மாதத்திற்கு சூன்ய மாதம் என்ற பெயரும் உண்டு சூன்யம் என்றால், ஒன்றுமில்லாதது எனப் பொருள். நம் வாழ்க்கை ஒன்றுமில்லாதது, நிலையற்றது. இந்த வாழ்வை அர்த்தமுள்ளதாக்கி கொள்ள வேண்டுமானால், சரணாகதி எனும் உயர் தத்துவத்தை கடைபிடிக்க வேண்டும்.

    மார்கழி மாதத்தை, “மார்கசீர்ஷம்’ என்று வடமொழியில் சொல்வர். ‘மார்கம்” என்றால், வழி – “சீர்ஷம்’ என்றால், உயர்ந்த – “வழிகளுக்குள் தலைசிறந்தது’ என்பது இதன் பொருள். இறைவனை அடையும் வழிக்கு இது உயர்ந்த மாதமாக உள்ளது. இறைவனை அடையும் உயர்வழியே சரணாகதி. “உன்னைத் தவிர யாரையும் திருமணம் செய்து கொள்ள மாட்டேன்; நீ வந்து என்னை ஆட்கொள்…’ என, இந்தப் பூமியில் பிறந்த ஆண்டாள், திருமாலைச் சரணடைந்தாள்.

    மருத்துவ நூல்களில் மார்கழியைப் பீடை மாதம் என்று குறிப்பிடுகின்றன.மார்கழியின் பனிக்குளிர்ச்சி சிலருக்கு நோய்த் துன்பங்களைத் தரலாம். எனவே, இது பீடை மாதமாகலாம். பீடு-பெருமை. பன்னிரு மாதங்களில் மிக்க பெருமையை உடையது பீடை மாதம் என்று மற்றொரு பொருளும் கூறலாம். பல காரணங்களால் மார்கழி பெருமையுடைய மாதம்.

    மார்கழிப் பாடல்கள் :-

    திருப்பாவை ஆண்டாள் இயற்றியது வைணவத் தொடர்புடையது. திருவெம்பாவை மாணிக்கவாசகர் இயற்றியது; சைவத் தொடர்புடையது. இந்த  இரண்டும் பாவை நோன்பு அல்லது மார்கழி நோன்பினைப் பாடுகின்றன.

    மார்கழியில், திருப்பாவை, திருவெம்பாவை, தொண்டரடிப்பொடி ஆழ்வார் அருளிய திருப்பள்ளி எழுச்சி, மாணிக்கவாசகர் அருளிய திருப்பள்ளி எழுச்சி ஆகிய நான்கு நூற்பாடல்களை வீடுகளிலும், கோயில்களிலும் பாராயணம் செய்கின்றனர். மார்கழியில், சிறப்பாக பாராயணம் செய்ய வேண்டும் என்ற பெருமை இந்த நான்கு நூல்களுக்கே உண்டு.இவை தவிர வைணவக் கோயில்கள் சிலவற்றில் மார்கழியில் ராப்பத்து, பகல் பத்து என்ற முறையில் நாலாயிர திவ்ய பிரபந்தம் முழுவதையும் பாராயணம் செய்கின்றனர்.

    நல்ல வாழ்க்கைத்துணை :-

    மார்கழி நோன்பு முழுக்க முழுக்க கன்னிப்பெண்களுக்கே உரியது. விடியலுக்கு முன் எழுந்து ஆற்றில் நீராடி நல்ல கணவன் கிடைக்க பாவை நோன்பு நோற்கின்றனர். பாவையை, வைணவக் கன்னியர்கள் கவுரி தேவியாகவும், சைவக் கன்னியர்கள் பார்வதி தேவியாகவும் போற்றி வழிபடுகின்றனர். பாவைப் பாடல்களைப் பாடி வணங்குகின்றனர்.

    வாசல் நிறையும் கோலங்கள்.  மார்கழி மாதம் வந்து விட்டாலே இளம் பெண்கள் வாசலை அடைத்து தெருவெங்கும் கோலமிடுகின்றனர். செம்மண்ணைப் பூசி அலங்கரித்து கோலத்தின் நடுவே ஒருபிடி சாணத்தை வைத்து அதில் பூசணிப் பூ அல்லது அருகம்புல்லைச் சூட்டுகின்றனர். விளக்கேற்றுகின்றனர்.

    பூசணிப் பூவின் மஞ்சள் நிறம், மங்கலத்தின் சின்னம். கோலத்தின் வெண்மை-பிரம்மன்; சாணத்தின் பசுமை-விஷ்ணு; செம்மண்ணின் செம்மை-சிவன். முற்றத்திலுள்ள வண்ணங்கள் மூன்றும் மும்மூர்த்திகளை நினைவுபடுத்துகின்றன. மார்கழி மாதத்தில் எங்கும் பக்தி; எதிலும் தெய்வீகம் இவை அனைத்தும் இந்த மாதத்தின் சிறப்புகளாகும்.

    திருவாடிப் பூரத்தில் உதித்து மார்கழியில்  திருப்பாவை பாடிய எங்கள் ஆழ்வார் ஆண்டாளைப்பற்றி நினைக்காமல் இருக்க முடியுமா இந்த  மார்கழி மாதத்தில் . அதுவும் வைகுந்த ஏகாதசித் திருநாளில் .

    நல்ல வாக்கைத் துணை அரங்கனே என்றுணர்ந்து   அரங்க தோளில் சார்த்தும்போது அரங்கனுக்கு  எந்த உறுத்தலும் இருக்கக் கூடாதே என்று கவலைப்பட்டு ஒரு முறை தான் அந்த மாலையை அணிந்து தோஷமில்லாமல் இருக்கிறது என்று உணர்ந்து  அதன் பின்னே  அரங்கனுக்கு  மாலை சாற்றிய ஆண்டாள் போற்றிய மாதமல்லாவா மார்கழி மாதம்.

    ஆகவே இந்த மார்கழி மாதம் வைகுந்த ஏகாதசித் திருநாளில் விடியற்காலையில் எழுந்து குளித்து  திருக்கோயிலை  அடைந்து பரமபத வாசல் வழியே  நமக்கு அருளும் அவனைச் சேவித்து  பரமன் துதி பாடி  நாமும் அந்த வைகுந்தம் அடையும் நற்பேற்றைப் பெறலாமே.

    அன்புடன்

    தமிழ்த்தேனீ

    Share
  • குறவன் பாட்டு-25

    குறத்தி நகரப்பெண் உரையாடல் (சென்ற வாரத் தொடர்ச்சி)

    குறத்தி:

    நெல்லிக் கனியை முழுதாய் நானும்,

    அள்ளிக் கைகளில் அன்புடன் தருகிறேன்!

     

    மாங்கனி களையும் உங்கள் மனம்படி,

    பாங்குடன் பிரித்து எடுத்துத் தருகிறேன்!

     

    எட்டுக் கட்டுக் கீரை எதற்கு?

    வீணாய் வாடிப் போகுமம்மா!                                                                                                     203

     

    நகரப்பெண்:

    எட்டுக் கட்டுக் கீரைகளை,

    எத்தனை நாட்கள் ஆனாலும்,

    கெட்டுப் போக விட்டிடாமல்,

    காக்கும் கருவுயில் வைத்திடுவேன்!                                                                                                            204

     

    குறத்தி:

    காக்கும் கடவுளை நானறிவேன்,

    காக்கும் கருவியை அறியேனே!

    அப்படி என்ன கருவியது?                                                                                                                                   205

     

    நகரப்பெண்:

    வந்ததும் கொடுத்த மோரினை நான்,

    அதிலே வைத்துத் தந்ததால் தான்,

    உந்தன் தாகம் தீர்ந்தது பெண்ணே!                                                                                                               206

     

    குறத்தி:

    காக்கும் கருவி என் தாகம்,

    தீர்த்ததை எண்ணி வியக்கின்றேன்,

    காக்கும் கருவி இல்லையம்மா, தாகம்

    தீர்த்தது உங்கள் கருணை அம்மா!                                                                                                               207

     

    நகரப்பெண்:

    சரிசரி நீயும் பேச்சு வாக்கில்,

    மலர்களைப் பற்றி மறந்த தேனோ?

    மலர் என்ன மலரைக் கொண்டுவந்தாய்?

    இப்போதாவது சொல் பெண்ணே!                                                                                                                  208

     

    குறத்தி:

    மறந்ததை, மறந்து மன்னித் திடுங்கள்,

    மலர்களில் சிறந்த மலர்களை எடுத்து,

    பாதியை மட்டும் சரமாய்த் தொடுத்து,

    மீதியை உதிரியாய்க் கொண்டு வந்தேன்!

     

    பவள மல்லிப் பூக்களை,

    உதிரியாகக் கொண்டு வந்தேன்!

     

    படர்ந்து நின்ற கொடியில் பூத்த,

    பச்சைக் கம்பு மல்லிகையை,

    சரஞ் சரமாய்த் தொடுத்து நானும்,

    சிரம மின்றி எடுத்து வந்தேன்!

     

    மகேசன் மார்பில் சூடிட,

    மலர்ந்து நின்ற அரளியை,

    வணங்கி நின்று கொய்துவந்தேன்!

     

    என் கணவன் எனக்காக,

    எடுத்து வந்த மலர்களிலே,

    எழில் மிகுந்த கமலத்தில்,

    இரண்டெடுத்துச் சூடிமீதி மலர்களை,

    எல்லோர்க்குமாய் எடுத்து வந்தேன்!                                                                                                            209

     

    நகரப்பெண்:

    நான் சூடிட மல்லிகையும், என்

    மணவாளன் மார்பில் சூடத் தாமரையும்,

    மகேசனின் மார்பில் சூடிட அரளியையும்,

    மங்கலமாய்த் தந்து செல் குறத்தி!                                                                                                               210

     

    குறத்தி:

    மல்லிகை சூடிய குழலும்,

    சந்தனம் சூடிய நுதலும்,

    புன்னகை சூடிய இதழும்,

    உங்களின் எழிலைப் பன்மடங் காக்கும்,

    அன்புடன் சென்று வருகிறேன் அம்மா!                                                                                                     211

    Share
  • மெளனத்தின் பாடல்

    இப்னு ஹம்துன்
    silenceimages

    சொற்கூச்சல் பொழுதுகளில்
    உன் மகத்தான பேரழகு வெளிப்படுகிறது.
    நேசத் தென்றல் வீசும் இதயங்களை
    வார்த்தைகளற்று வசீகரிக்கிறாய்.
    காலக் காற்று
    தலைமுடி கலைக்கையில்
    சற்றே சங்கடமாகவும் உணர்கிறாய்
    வார்த்தைகள் புதைந்த
    வெட்கத்தில் சம்மதம் கொள்கிறாய்
    முகிழ்க்கும் மோனப் பொழுதுகளில்
    ஒரு தவம் போல் நீள்கிறாய்
    வெளிப்படாத உன் குரலில் எப்போதும்
    ஒளி(ர்)ந்தபடியிருக்கிறது ஒரு கவிதை.

     

    அறியாமையின் நர்த்தனத்தை
    ஏளனப் பார்வையால் வீழ்த்தி
    மடிகறக்க எண்ணும் கரங்களுக்கு
    புறக்கணிப்பைப் பரிசளிக்கிறாய்.
    குறுமனப் பேய்கள் குதித்தாடுகையில்
    நீயே ஆயுதமாகி விரட்டி அடிக்கிறாய்.
    அவ்வப்போது நாற்றமெடுக்கும்
    ஆணவ நோய்க்கு மருந்துமாகி..
    பேசாப் பொருளின் ப்ரிய பொழுதுகளில்
    வாழ்வாங்கு வாழ்கிறாய்.

     

    பின்
    பேச்சுகள் வெடித்தெழும் ஒரு தருணம்
    ‘அமைதி’யாய் வாய்க்கும் ஒரு மரணம்.

    படத்துக்கு நன்றி

    http://forevernocturne.wordpress.com/volume-ii-issue-i-october-2011/silence/

    Share
  • கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்..கவிஞர் மருதகாசி

    கவிஞர் மருதகாசி

     

    கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்..

    நினைத்ததை முடிப்பவன் என்கிற திரைப்படத்தில் இரட்டை வேடங்களில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். கிராமத்திலிருந்து நகரத்திற்கு வந்து சேர்ந்த நாயகனாய் ஒரு தோற்றம்! கொள்ளையடிப்பதில் தேர்ந்தவனாய் மறு தோற்றம்! காட்சியமைப்பில் இரு கதா பாத்திரங்களும் நம் கண் முன்னே தோன்ற – மாறுவேடங்களில் காவலர்கள் கூடுகின்ற சபையில்.. கதையின் நாயகன் தான் பாடும் பாடலாக இடம் பெறும் பாடல்!

    கவிஞர் மருதகாசியின் கைவண்ணத்தில் – உதித்த எண்ணங்களிவை! சொல்ல வேண்டிய கருத்தை நச்சென்று பல்லவியிலே சொல்வதென்பது அத்தனை எளிதன்று! தொட்டுக்காட்ட வேண்டிய பாத்திரப் படைப்புகளையும் பாடலில் பளிச்சென்று இடம்பெறச் செய்வது மக்கள் திலகத்திற்காகவே வரையப்பட்ட திரைப்பாடலிது!
    சமுதாயத்தில் நடக்கும் அவலங்களைத் தோலுரித்து – வேடதாரிகளை இனம்கண்டு சரியான சாட்டையடி கொடுக்கும் சத்திய வரிகள்!

    எத்தனைக் காலமானாலும் இவ்வுலகில் நல்லவர்களும் கெட்டவர்களும் கலந்தே இருப்பர் என்பது உண்மையென்றால் – காலங்களைக் கடந்து அவர்களின் நிறம் காட்டும் இப்பாடலும் சென்றே தீரும் என்பதும் உண்மை!

    ஒவ்வொரு திரைப்பாடல் வரியிலும்கூட புரட்சித்தலைவர் கவனம் செலுத்திடுவார் என்பதற்கு இந்தப்பாடல் இன்னொரு சாட்சியாகும்!

    பாடல் ஒலிப்பதிவு முடிந்தபின்பு தனது இராமாபுரம் தோட்டத்திற்கு அனுப்பப்படுவதும் அன்றிரவே தனிமையில் கேட்பதும் எம்.ஜி.ஆரின் வாடிக்கை! அப்படி இப்பாடல் எம்.ஜி.ஆரிடம் அனுப்பப்படுகிறது!

    பொன் பொருளைக் கண்டவுடன் வந்த வழி மறந்துவிட்டு
    கண்மூடிப் போகிறவர் போகட்டுமே!

    என்கிற வரியில் உள்ள கண்மூடிப் போகிறவர் என்னும் வார்த்தைகளை நீக்கிவிட்டு தன்வழியே போகிறவர் போகட்டுமே என்று மாற்றச் சொன்னார் என்றால் கவிஞர்தம் சொற்களில் அறச்சொற்கள் வந்துவிடக்கூடாது என்பதில்கூட எம்.ஜி.ஆர் எத்தனை கவனம் கொண்டிருந்தார் என்பது புலனாகிறது!

    திரைப்படம் – நினைத்ததை முடிப்பவன்
    பாடியவர் – டி.எம்.செளந்திரராஜன்
    இசையமைப்பு – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்
    பாடலாசிரியர் – மருதகாசி

    கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்
    உன்னை ஏமாற்றும் நீ காணும் தோற்றம்
    உண்மையில்லாதது.. உண்மையில்லாதது
    அறிவை நீ நம்பு உள்ளம் தெளிவாகும் அடையாளம் காட்டும் பொய்யே சொல்லாதது..
    காவலரே வேஷமிட்டால் கள்வர்களும் வேற்றுருவில்
    கண்முன்னே தோன்றுவது சாத்தியமே
    காத்திருந்து கள்வருக்கு கைவிலங்கு பூட்டிவிடும்
    கண்ணுக்கு தோணாத சத்தியமே (…)
    போடும் பொய்த்திரையைக் கிழித்துவிடும் காலம்
    புரியும் அப்போது மெய்யான கோலம்..

    ஓம் முருகா என்று சொல்லி உச்சரிக்கும் சாமிகளே
    உருத்திராட்சப் பூனைகளாய் வாழுறீங்க
    சீமான்கள் போர்வையிலே சாமான்ய மக்களையே
    ஏமாற்றிக் கொண்டாட்டம் போடுறீங்க..
    பொய்மை எப்போதும் ஓங்குவதுமில்லை
    உண்மை எப்போதும் தூங்குவதுமில்லை..
    பொன் பொருளைக் கண்டவுடன் வந்தவழி
    மறந்துவிட்டு கண்மூடிப் போகிறவர் போகட்டுமே..
    என்மனதை நான் அறிவேன்..என் உறவை நான் மறவேன்
    எதுவானபோதிலும் ஆகட்டுமே.. நன்றி மறவாத நல்ல மனம் போதும்.. என்றம் அதுவே என் மூலதனமாகும்

    http://www.youtube.com/watch?v=Y4uvAc9QKnE

     

    NEENAITHATHAI MUDIPAVAN****KANNAI NAMBATHE UNNAI**** M.G.R. & MANJULA

    Share
  • ஐயப்பன் திருப்புகழ்- எருமேலி கிராத சாஸ்தா

    சு.ரவி

    வணக்கம், வாழியநலம்,

    ஐயனை மகரவிளக்கு ஜோதியாகக் காணப் பயணப்படும் பெருவழியின் நுழைவாயில் தலம் எருமேலி. இங்கு  வாவரைத் தொழுது, மேளதாள முழக்கங்களோடு ‘திந்தக்கத் தோம்’ என்ற ஜதியோடு அடியவர் நடனமாடி வர, கிராத (வேடன்) சாஸ்தாவாக அருள்பாலிக்கும் ஐயன் மீது எழுந்த திருப்புகழ். (நண்பர் வி.கே.நாராயணன் இதனைக் கல்யாணிராகத்தில் பாடுவார்)

    படிக்க, ரசிக்க..       

                               ஐயப்பன் திருப்புகழ்

    தனனதன  தனனதன தனதான  தானதன

     தனனதன  தனனதன தனதான  தானதன    

    தனனதன  தனனதன தனதான  தானதன         தனதான

    இரவுபகல் பகலிரவு எனமாறி மாறிஇரு

      பொழுதுசுழ லமிழுவதை உணராது போகநிலை

      புலனவிழ உடலமிக வயதாகி ரோகமுற             உழல்வேனை

    இருளனைய மறலியென துயிர்சோர மேவுகையில்

      அபயமென மரணபய மணுகாம லேநினது

      சரணமலர் நிழலருள புலிவாஹ னாவருகை        தரவேணும்!

    அரவு,மதி, பெருகுநதி முடிசூடி ஆடுமிறை

       அமுதநதி அனையஎழில் உருவான மோஹினியை

       அணையசுரர் உளமகிழ அவதார மானதிரு         மணிமார்பா!

    அரசரொடு பொருதவர்தம் குலகால னாகி,அரி

       சிலைவளைய கருவமழி படவாடி நாணிவரு

       பரசுமுனி அருளும்வளர் மலையாள தேசமதில் உறைவோனே!

    விரதநெறி பரவியிரு வினைதீர நாடியுனை

       அணுகுமுன தடியவரின் இடர்தீர மாமலையில்

       கருணைபொழி முகிலெனநி லாவுமழ கா,இளைய      சிவபாலா!

    விழியசைவில் நில(வு)இரவி புவிகோள்கள் மீன்களிவை

        உலவிவர், ஒளியுமிழ, விதிவேத மாக, மலர்

        நறையவிழ, நதிபெருக, நவகோடி நாதமெழ         அருள்வோனே!

    அரசு,மரு தகில்,கதலி  கமுகால் பலாவளர

       அரவமொடு புலிகரடி மதயானை தாமுலவும்

       அடவிபடர் பெருவழியின் நுழைவாயி லானதலம்;    ஜதிகூறும்

    அதிருமிடி எனமுழவின் ஒலிசேர, வாவரடி

       தொழுதடியர் நடனமுடன் வரவேகி ராதனென

       எழில்மலியு மினியபுரி எருமேலி மேவிவளர்         பெருமாளே!

    Share
  • ராமன் வரும் வ​ரை காத்திரு… (6)

    ராமஸ்வாமி ஸம்பத்

    சபரி கூறியதுபோல் ரிச்யமுகத்தில் நல்மனம் படைத்த வானர வீரன் அனுமன் ராமன் வருகைக்காகக் காத்திருந்தான். அனுமன் வாயு புத்திரன். பதினொரு ருத்திரர்களில் ஒருவன். ராமாவதாரம் எடுக்கும் முன் திருமால் எல்லா தேவர்களையும் தன் காரியத்திற்கு உதவும் பொருட்டு பூமியில் பிறக்குமாறு பணித்தார். இதைக்கேட்ட பரமேஸ்வரன் வைகுண்டத்திற்கு ஏகி நாரணனிடம் “நானும் உங்களுக்கு உதவ விரும்புகிறேன் பரமாத்மா” என்றார். பரமபதநாதன் மலர்ந்த முகத்தோடு, “பரம்பொருளே! உங்கள் ஆசி ஒன்றே போதும்” என்றார்.

    “இல்லை இல்லை. நான் கட்டாயம் உங்களுக்கு உதவுவதற்கு பதினோராவது ருத்திரனாக அவதரிக்கப் போகிறேன்” என்று கூறி விடை பெற்றுக்கொண்டார். அப்பரமனே அனுமனாக. வானர குலத்தைச் சேர்ந்த அஞ்சனாதேவிக்கு வாயு புத்திரனாக உதித்தார். பிறந்தவுடனே சூரியனை ஒரு பழமாகக் கருதி அதனை விழுங்கும் பொருட்டு அனுமன் வான்நோக்கித் தாவினான். சூரியனுக்கு ஆபத்தென இந்திரன் தன் வஜ்ராயுதத்தால் அனுமனைத் தாக்கினான். நிலைகுலைந்து கீழே வீழ்ந்த அனுமனைக்கண்டு வாயு சினம் மேலோங்க மூவுலகிலும் காற்று இல்லாமல் செய்தான். இதனால் ஏற்பட்ட சீரழிவை நீக்க, பிரமன் உள்ளிட்ட அனைத்து தேவர்களும் வாயுவை நாடினர். “என் மகனுக்கு உங்கள் சக்தியை அளித்தால்தான் என் கோபம் தணியும்” என்று வாயுதேவன் கூற அனைவரும் அவ்வாறே செய்ய அனுமன் மிக்க பலசாலியும் அறிவாளியுமானான். அவனுக்கு சூரியன்  ஆசானாகி வேதநெறிகளையும், ஏனைய சாஸ்திரங்களையும், நவவியாகரணங்களையும் கற்பித்தான். குருதக்ஷிணை அளிக்க முற்பட்ட அனுமனை நோக்கி, “நீ என் மகன் கிஷ்கிந்தை இளவரசன் சுக்ரீவனுக்கு அமைச்சனாகி சேவை புரி.  பின்னர் ஸ்ரீமந்நாராயணனின் அவதாரமான ராமன் வரும் வரை காத்திருந்து அவருக்கு துணையாகப் பணியாற்று” என்று ஆதவன் ஆணையிட்டான். அப்போதிலிருந்து ராமன் வருகையை எதிர்நோக்கியவாறே சுக்ரீவனின் அந்தரங்க அமைச்சனாகக் திகழ்ந்தான் அனுமன்.

    ரிச்யமுகத்தின் எல்லையை நெருங்கிய ராம லக்ஷ்மணர்களை  வானர இளவரசன் சுக்ரீவன் சாரணர்கள் மூலம் அறிந்து, ‘அவர்கள் வாலியின் கையாட்களாக இருப்பார்களோ’ என பயந்து அனுமனை அழைத்து, ”யாரோ வில்லேந்திய இருவர் நமது மலை நோக்கி வருகிறார்களாம். அவர்களைப் பற்றிய தகவல் எனக்கு வேண்டும். ஒருவேளை அவர்கள் வாலியின் ஆட்களாக இருந்தால் அவர்களை இங்கு வராமல் தடுக்க வேண்டும்” என்று ஆணையிட்டான்.

    சுக்ரீவனை வணங்கி அனுமன் ஒரு அந்தணவேடம் பூண்டு ராம லக்ஷ்மணர் அருகே சென்றான். அவர்களது ஆக்ருதி அவனை வெகுவாகக் கவர்ந்தது. ‘இவர்களைப் பார்த்தால் வாலியின் ஆட்களாகத் தென்படவில்லை. இவர்கள் யாராக இருக்கும்?’ என சிந்தித்தவாறு,  அவர்களை நோக்கித் தன் இனிய குரலில் “கவ்வை இன்றாக நுங்கள் வரவு!” என்று முகமன் கூறி, மேலும் பேசலுற்றான்: ”வில்லேந்திய நீங்கள் ஒரு அரசகுலத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கவேண்டும். அதே சமயத்தில் உங்கள் சடைமுடிகளைப் பார்த்தால் துறவிகளோ என்றும் தோன்றுகிறது. ஒருவேளை நீங்கள் ராஜரிஷிகளா … இல்லை தேவரிஷிகளா…? உங்கள் கனிவான பார்வையும் பொலிவு பொங்கும் முகங்களும் என்னைக் கிறங்க வைக்கின்றன. என்னைப் போலவே இந்த மலையில் உலாவும் விலங்குகளும் பறவைகளும் உங்களை வரவேற்பது போல ஆர்ப்பரிக்கின்றன. இப்பர்வதப் பொழில்களும் திடீரெனப் பூத்துக் குலுங்குகின்றன. அதே நேரத்தில், அவ்வப்போது துயர் இழையோடும் உங்கள் வதனங்கள் என் மனத்தைக் கலக்குகின்றன. நீங்கள் யார்? இக்குறிஞ்சிப் பகுதியில் எதற்காக அடியெடுத்து வைத்திருக்கிறீர்கள்?

    “மகாபலம் பொருந்திய கிஷ்கிந்தை வானர அரசன் வாலி தன் இளவலான சுக்ரிவனைத் தவறாகப் புரிந்துகொண்டு நாடு கடத்தியதோடல்லாமல் அவன் மனைவி ருமையையும் தன்வயமாக்கிக் கொண்டுவிட்டான். அச்சம் கொண்டு சுக்ரீவன் இங்கு தஞ்சம் புகுந்துள்ளான். ஏனெனில் மதங்க முனிவரின் சாபத்தால் வாலி இப்பகுதிக்கு வரமுடியாது; வந்தால் உயிர் இழப்பான். நான் வாயு பகவானின் புத்திரன். என் பெயர் அனுமன். சுக்ரீவனின் அமைச்சன். நீங்கள் யாரென்று இப்போது தெரிந்துகொள்ளலாமா?.”

    இவ்வாறு தன்னை அறிமுகப் படுத்திக்கொண்டு அனுமன் தன் உரையை முடித்தான்.

    உள்ளத்தை அள்ளும் இவ்வினிய சொற்களைக் கேட்ட ராமன் தன் இளவலிடம் “தம்பி, நாம் யார் உதவியைக் கேட்க விழைகிறோமோ, இறை அருளால் அவன் அமைச்சனே நம் முன் வந்திருக்கிறான். இப்படிப்பட்ட அமைச்சனைப் பெறுவதற்கு சுக்ரீவன் பெருந்தவம் செய்திருக்க வேண்டும். இவன் சாதாரணமானவன் அல்லன். ரிக், யஜுர், ஸாம வேதங்களையும் மற்றும் பிற சாஸ்திரங்களையும் கசடறக் கற்றவனாகத் திகழும் இந்த சொல்லின் செல்வன் ஒரு நவவியாகரண பண்டிதனாகவும் இருக்கவேண்டும். ஆகவே மிகவும் ஜாக்கிரதையாக வார்த்தைகளை அளந்து நம் நிலையை இவனுக்கு உணர்த்தி நாம் சுக்ரீவனின் நட்பை நாடி வந்திருக்கிறோம் என்று சொல்” என்றான்.

    லக்ஷ்மணனும் தாங்கள் அயோத்தியை விட்டு நீங்கியது, நீண்ட வனவாசத்தில் ஸீதையைப் பறிகொடுத்தது, கபந்தன் மற்றும் சபரியின் அறிவுரைப்படி சுக்ரீவன் நட்பைக்கோரி வந்திருப்பது பற்றி விவரித்து, “இதோ இவர் தான் ராஜ்ய பட்டத்தைத் துறந்த ராமன். நான் அவர் தம்பி லக்ஷ்மணன்” என்று கூறினான்.

    ’ராமன்’ என்ற சொல்லை கேட்ட அனுமன் புளகாங்கிதம் அடைந்து, ‘தான் யாருக்காகக் இத்தனைக் காலம் காத்திருந்தோமோ அந்த தெய்வம் எதிர்பட்டுவிட்டது’ என மகிழ்ந்து, தன் அந்தண உருவை நீத்து சுயரூபத்தை அடைந்தான்.

    பின்னர் ராமன் அடிபணிந்து, “ஐயன்மீர், இம்முட்புதர் அடர்ந்த மலையில் தாங்கள் பயணிப்பது கடினம். ஆகவே, நீவிர் என் புஜங்களில் அமருங்கள். நான் உங்களை எம்மன்னன் சுக்ரீவனிடம் அழைத்து செல்கிறேன்” என்றான் அனுமன்.

    (​தொடரும்)

    Share
  • அருள்மிகு அகிலாண்டேஸ்வரி ஓவியம்

    சு.ரவி

    அகிலாண்டேஸ்வரி எண்ணெய் வண்ண ஓவியம்… பார்க்க, ரசிக்க

    AKILANDESWARI FINISHED 2

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்!…91

    சக்தி சக்திதாசன்

    அன்பினியவர்களே !

    இனிய வணக்கங்கள்

    அடுத்தொரு வாரம், அடுத்தொரு மடல். ஒரு புத்தகத்தில் ஒவ்வொரு பக்கமாக புரட்டுவதை விட விரைவாக வாரங்கள் புரட்டப் படுகின்றனவோ எனும் வகையில் காலதேவன் தனது சக்கரங்களை விரைவாக உருட்டிக் கொண்டிருக்கிறான்.

    எந்த ஒரு வீடோ? அன்றி எந்த ஒரு நாடோ? என்றுமே பொருளார ரீதியாகவோ அன்றி வசதிகளின் தரத்திலே உயர்ந்து கொண்டே செல்வது என்பது நடைமுறையில் நடக்காத ஒன்று.

    அப்படி எதிர்பார்ப்பதுவும் யதார்த்தமாகாது.

    அதே சமயம் முன்னேற்றத்தை எதிர்பார்த்து அதற்காக உழைப்பதன் அடிப்படையில் தான் ஒரு நாட்டின் முதுகெலும்பான அன்றாட நிர்வாகம் இயங்கிக் கொண்டிருக்கிறது.

    எதிர்பார்ப்புகள் இல்லாவிட்டால் உத்வேகம் இருக்காது. முன்னேற்றத்திற்கான புதுவகையான கண்டு பிடிப்புகளுக்கான உந்துதல் இருக்காது.

    ஒரு நாட்டின் துருத வளர்ச்சிக்கும், இயற்கையான இயங்குதலுக்கும் அடிமட்டத் தொழிலாளியும் அவசியம் அதே போல அதியுயர் செல்வந்தனும் தேவை.

    என்ன எத்திசையை நோக்கிச் செல்கிறது இம்மடல் எனும் எண்ணம் எழுவது இயற்கை.

    ஓரிரு தினங்களுக்கு முன்னால் இங்கிலாந்துப் பிரதமர் திரு டேவிட் கமரன் அவர்கள் ஒரு தொலைக்காட்ச்சியில் பங்கு பற்றி தனட்ய்ஹு கருத்துக்கள் சிலவற்றை முன்வைத்தார்.

    அவற்றைச் செவிமடுத்துக் கொண்டிருக்கையில் அரசியல்வாதிகளிஅப் பற்றி எனது சிந்தனை படர ஆரம்பித்தது.

    அரசியல் எனும் அந்தக் குட்டைக்குள் குதிப்பவர்கள் அதைத் தமது தொழிலாகச் செய்கிறார்களா? இல்லை மக்களுக்கான சேவையாகச் செய்கிறார்களா? எனும் கேள்வி ஆழமாக என்னுள்ளத்தை ஊடுருவியது.

    மக்கள் சேவையே மகேசன் சேவை என்பார்கள் ஆனால் அம்மக்கள் சேவைக்கும் ஊதியம் கொடுத்தும் நிலைதானெர் உலகெங்கும் நடைமுறையில் இருக்கிறது.

    அது ஒரு தொழில் எனும் ரீதியில் பார்த்தால் கூட ஒரு மனிதனை அரசியலை நோக்கித் தள்ளிச் செல்வது என்ன ?

    மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் எனும் தூய்மையான எண்ணமா? அன்றி அப்பதவியால் அவர்களுக்கு கிடைக்கும் அனுகூலங்களா ?

    மிகவும் சிக்கலான கேள்வி ? இல்லையா !

    மகாத்மா காந்தி எனும் அந்த மாமனிதர் ஈடுப்பட்ட ரசியல் நிலைக்கும், இன்றைய அரசியல்வாதிகள் ஈடுபடும் அரசியல் நிலைக்கும் பலவிதமான வேறுபாடுகள் உண்டு.

    தனது நாடு தன் மக்களாளாலேயே ஆளப்பட வேண்டும் எனும் நியாமான உரிமைக்குரலை முன்னெடுத்து காந்தி தனது அர்சியலை நடத்தினார் அது முற்றுமுழுதாக அமக்கள் சேவையையே மனதில் கொண்ட நிலைப்பாடகா இருந்தது.

    ஆனால் இன்ரைய நிலையிஅல் மக்கள் தம்மைத் தாமே அளும் நிலையில் அவர்களுடைய வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் அரசியலில் ஈடிபடும் அரசியல்வாதிகளின் மனதில் மக்கள் சேவை எத்தகிய இடைத்தை வகிக்கிறது என்பது கேள்விக்குறியே.

    எமது பின்புல நாடுகளை விட்டு நாம் வாழும் புலம்பெயர் நாடுகளின் அரசியலைக் கண்ணோட்டம் விடும் போது அங்குகூட சந்தேகமே வலுப்பெறுகிறது.

    சில வருடங்களுக்கு முன்பாக இங்கிலாந்து அரசியல்வாதிகள் மத்தியில் அடித்த சூறாவளியைப் பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

    பாரளுமன்ற உறுப்பினராக அவர்களுக்கு கிடைக்கும் ஊதியத்திற்கு மேலாக அவர்களுக்கு அளிக்கப்படும் செலவீனச் சலூகைகளை பலர் தவராகப் பயன்படுத்து நியாயமற்ற வகையில் பணத்தைப் பெற்றிருப்பது தெரிய வந்ததும் அதைத் தொடர்ந்து இங்கிலாந்து மக்கள் மனதில் அரசியல்வாதிகளின் மீதிருந்த மதிப்பு கரைந்து போனதையும் நீங்கள் அறிந்திருப்பீர்கள்..

    சரி இவற்றிற்கும் பிரித்தானியப் பிரதமரின் தொலைக்காட்சிக் கருத்தாடலுக்கும் என்ன தொடர்பு? இதோ வருகிறேன். . . .

    இங்கிலாந்தி ஜரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்க வேண்டுமா? வேண்டாமா? எனும் சர்ச்சை தொடர்ந்து கொண்டிருக்கிறது,

    சமீபத்திய கருத்துக் கணிப்பின் படி ஜரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற வேண்டும் என்பவர்களது விகிதம் கூடிக் கொண்டிருப்பது போலத் தோன்றுகிறது.

    இங்கேதான் பிரித்தானியப் பிரதமரின் பிரகடனம் மக்கள் நலனைச் சார்ந்ததா? இல்லை இன்னும் 15 மாதங்களில் வரவிருக்கும் பொதுத்தேர்தலில் தமது கட்ச்சி அரசைமைத்துக் கொள்வதற்குச் சாதகமாக இருக்கும் ஒரு பிரகடனமா ? எனும் சந்தேகம் உள்ளத்தை உலுப்புகிறது.

    சரி ஒரு அரசியல் கட்சியின் தலைவரின் முக்கிய கடமை தனது பதவியை அர்ர்ர்ரசில் தக்க வைத்துக் கொள்வதே இதிலென்ன இடக்கு எனும் எண்ணம் சிலரின் மனதிலே எழலாம்.

    ஆனால் இங்கிலாந்துப் பிரதமர் தனது கட்சி 2015 இல் பதவிக்கு வந்தால் தான் பிரதமராக வந்தால் ஒருவருக்கு ஒரு வாக்கு எனும் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை ஜரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேற வேண்டுமா என்பதற்காக நடத்துவேன் என்று உறுதியளித்துள்ளார்,

    ஜரோப்பிய ஒன்றியத்தினுள் அங்கம் வகிப்பதை பல முன்னனி தனியார் நிறுவனங்கள் வலியுறுத்தி வரும் வேளையில் இத்தகையதோர் அறிவித்தல் எந்த நோக்கத்தை முன்வைத்து செய்யப்பட்டிருக்கிறது ?

    மக்கள் சேவையா ?  மகேசன் சேவையா?  காலம் தான் விடையளிக்கும்

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • கோயில்கள்!…

    விசாலம்

    இந்தியா  முழுவதும்  நூற்றுக்கணக்கான கோயில்கள் பல வருடங்கள் முன்பாகவே கட்டப்பட்டு மிகவும்  புகழ் பெற்ற கோயில்களாக இன்றும்  திகழுகின்றன. ஒவ்வொரு கோயிலிலும் மிகநுட்பமான கலை வேலைப்பாடுகள் சிறந்திருக்க, கோயிலுள்ளே நுழைந்தாலே ஆன்மீகச்சூழ்நிலையுடன் நற்றலைகள் உருவாவது நமக்குத் தெரிய  வருகிறது. சில கோயில்களில் அந்தக்கோயிலைப்பற்றி கல்வெட்டுகள் காணப்படுவதால் அந்தக்கோயிலைப்பற்றிய  பல விவரங்கள் தெரியவருகின்றன.

    கும்பகோணம் ராமஸ்வாமி கோயில்,  அழகர் கோயில்  இவைகளில் நான் நாயக்கர் காலத்து  சிற்பங்களைக் கண்டிருக்கிறேன்.

    குகைகளைக்குடைந்து  உள்ளே கருங்கல் பாறையில்  சித்திரங்களை வடித்தவர்கள் பல்லவர்கள் .   மஹாபலிபுரம் , சித்தண்ண வாசல், நாமக்கல்  ,திருப்பரங்குன்றம்  போன்ற இடங்களில் இதைப்போல் காணலாம்

    பத்ரிநாத், கேதார்நாத், அமர்நாத், பசுபதிநாத் போன்ற கோயில்களின் அமைப்பு கிட்டத்தட்ட  கேரள கோயில்களின் அமைப்பை ஒத்து இருக்கிறது .

    கர்நாடகத்தில்  ஹம்பி என்ற இடத்திற்குப்போனால் மிகச்சிறிய சிற்பங்களைக்காணலாம். வடநாட்டில்  புஷ்கர்,  ஓம்காரேஷ்வர் மந்திர்  கர்நாடகக்கோயிலை ஒத்து  இருக்கின்றன. கர்நாடகச்சிற்பிகள் அங்குப்போய்  இந்தக்கோயில்களை அமைக்கும் வாய்ப்பு பெற்றிருக்க  வேண்டும் .

    கிபி பன்னிரண்டாம் நூற்றாண்டில்  டங்கணாசர்யன் என்ற சில்பி  ஆதிகேசவப்பெருமாள் கோயிலைக்கட்டினார் . பேளூர் என்ற இடத்தில் இந்தகோயில் இருக்கிறது .இதன் நுண்ணிய சிற்பங்களின் அழகை வர்ணிக்க முடியாது ,

    போஜ வம்சத்து மன்னர்கள்,   ஹோஸலே மன்னர்கள் என்றும்  அழைக்கப்பட்டு வந்தார்கள் இவர்கள் கர்நாடகத்தை ஆண்டுவந்தார்கள் மைசூரைத் தலைநகராகக்கொண்டு ஆட்சி புரிந்தார்கள்  ஆதிகேசபப்பெருமாள் கோயிலைக்கட்டியவர்,  இந்த ஆட்சியில் இருந்த சிற்பிதான்

    சென்னையில்  திருவல்லிக்கேணி ஶ்ரீபார்த்தசாரதி கோயிலைக்கட்டியவர் திரு தொண்டைமான் என்ற  மன்னன் திருவரங்கம் பெரிய கோயில் முதலில்  அகளங்க சோழனாலும்   பின்  ராஜமஹேந்த்ரசோழனாலும்  பின்  திருமங்கை மன்னனாலும் திருப்பணிகள்  செய்யப்பட்டு கோபுரம் மிக உயர்ந்து யாவரையும்  ஈர்த்தன .

     சுசீந்தரம், ஸ்ரீவில்லிப்புத்தூர் ,திருப்புல்லாணி போன்ற  கோயில்கள்  நமக்கு மிகவும் வியப்பை ஏற்படுத்துகின்றன.   பாண்டிய மன்னர்கள் இவைகளைச் சிறந்த கலை நுணுக்கத்துடன்  கட்டியிருப்பது நமக்கு  மிகப்பெருமையளிக்கிறது.

    வடநாட்டில் மதுரா மிகச் சிறந்த புண்ணியஸ்தலமாகி கூட்டம் எப்போதும் அலை மோதுகிறது . ஶ்ரீவல்லபாசார்யா சம்பிரதாயத்து வைஷ்ணவர்கள் கட்டிய துவாரகாநாத் மந்திர் மிகவும்  பழமை வாய்ந்தது

    பல தடவைகள் முஸ்லீம்களால்   தகர்க்கப்பட்ட கோயில் சோம்நாத்மந்திர் ,ஔரங்கசீப்பினால் உடைக்கப்பட்ட  கண்ணன் பிறந்த ஊரிலிலுள்ள  ஆதிகேசவ மந்திர்  போன்றவைகள் அழிய இருந்தன. அந்த இடத்தில்  மசூதியும் கட்டப்பட்டது .

    ஆனாலும் பின்னால் பிர்லா என்ற செல்வந்தர் உதவியினாலும்  மதன் மோஹன் மாலவியாவின்  பிரேரணையினாலும்   அழகான கிருஷ்ணன் கோயிலை நாம் இன்று காணமுடிகிறது .

    ராஜஸ்தானில்  பிரதாப்சிம்ஹ ராணா கட்டிய  சாரதா தேவி மந்திர் பர்சானா என்ற இடத்தில்  மிகவும்  பெயர் பெற்றது

    வடநாட்டில் பல கோயில்கள் மஹாபாரதத்தைச்  சேர்ந்ததாகவும்  சில  ராமாயணத்தைச்சேர்ந்ததாகவும்   இருக்கின்றன. ஒவ்வொரு கோயிலும் ஒவ்வோரு பெருமைப்பெற்று விளங்குகிறது இதையெல்லாம் பார்த்தால் நாம்   இந்தப்பாரதத்தில்  ஜன்மம் எடுக்க  எத்தனை பாக்கியம் செய்திருக்க வேண்டும் இல்லையா?

    Share