ஐயப்பன் திருப்புகழ்- எருமேலி கிராத சாஸ்தா

0

சு.ரவி

வணக்கம், வாழியநலம்,

ஐயனை மகரவிளக்கு ஜோதியாகக் காணப் பயணப்படும் பெருவழியின் நுழைவாயில் தலம் எருமேலி. இங்கு  வாவரைத் தொழுது, மேளதாள முழக்கங்களோடு ‘திந்தக்கத் தோம்’ என்ற ஜதியோடு அடியவர் நடனமாடி வர, கிராத (வேடன்) சாஸ்தாவாக அருள்பாலிக்கும் ஐயன் மீது எழுந்த திருப்புகழ். (நண்பர் வி.கே.நாராயணன் இதனைக் கல்யாணிராகத்தில் பாடுவார்)

படிக்க, ரசிக்க..       

                           ஐயப்பன் திருப்புகழ்

தனனதன  தனனதன தனதான  தானதன

 தனனதன  தனனதன தனதான  தானதன    

தனனதன  தனனதன தனதான  தானதன         தனதான

இரவுபகல் பகலிரவு எனமாறி மாறிஇரு

  பொழுதுசுழ லமிழுவதை உணராது போகநிலை

  புலனவிழ உடலமிக வயதாகி ரோகமுற             உழல்வேனை

இருளனைய மறலியென துயிர்சோர மேவுகையில்

  அபயமென மரணபய மணுகாம லேநினது

  சரணமலர் நிழலருள புலிவாஹ னாவருகை        தரவேணும்!

அரவு,மதி, பெருகுநதி முடிசூடி ஆடுமிறை

   அமுதநதி அனையஎழில் உருவான மோஹினியை

   அணையசுரர் உளமகிழ அவதார மானதிரு         மணிமார்பா!

அரசரொடு பொருதவர்தம் குலகால னாகி,அரி

   சிலைவளைய கருவமழி படவாடி நாணிவரு

   பரசுமுனி அருளும்வளர் மலையாள தேசமதில் உறைவோனே!

விரதநெறி பரவியிரு வினைதீர நாடியுனை

   அணுகுமுன தடியவரின் இடர்தீர மாமலையில்

   கருணைபொழி முகிலெனநி லாவுமழ கா,இளைய      சிவபாலா!

விழியசைவில் நில(வு)இரவி புவிகோள்கள் மீன்களிவை

    உலவிவர், ஒளியுமிழ, விதிவேத மாக, மலர்

    நறையவிழ, நதிபெருக, நவகோடி நாதமெழ         அருள்வோனே!

அரசு,மரு தகில்,கதலி  கமுகால் பலாவளர

   அரவமொடு புலிகரடி மதயானை தாமுலவும்

   அடவிபடர் பெருவழியின் நுழைவாயி லானதலம்;    ஜதிகூறும்

அதிருமிடி எனமுழவின் ஒலிசேர, வாவரடி

   தொழுதடியர் நடனமுடன் வரவேகி ராதனென

   எழில்மலியு மினியபுரி எருமேலி மேவிவளர்         பெருமாளே!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *