கோயில்கள்!…
விசாலம்
இந்தியா முழுவதும் நூற்றுக்கணக்கான கோயில்கள் பல வருடங்கள் முன்பாகவே கட்டப்பட்டு மிகவும் புகழ் பெற்ற கோயில்களாக இன்றும் திகழுகின்றன. ஒவ்வொரு கோயிலிலும் மிகநுட்பமான கலை வேலைப்பாடுகள் சிறந்திருக்க, கோயிலுள்ளே நுழைந்தாலே ஆன்மீகச்சூழ்நிலையுடன் நற்றலைகள் உருவாவது நமக்குத் தெரிய வருகிறது. சில கோயில்களில் அந்தக்கோயிலைப்பற்றி கல்வெட்டுகள் காணப்படுவதால் அந்தக்கோயிலைப்பற்றிய பல விவரங்கள் தெரியவருகின்றன.
கும்பகோணம் ராமஸ்வாமி கோயில், அழகர் கோயில் இவைகளில் நான் நாயக்கர் காலத்து சிற்பங்களைக் கண்டிருக்கிறேன்.
குகைகளைக்குடைந்து உள்ளே கருங்கல் பாறையில் சித்திரங்களை வடித்தவர்கள் பல்லவர்கள் . மஹாபலிபுரம் , சித்தண்ண வாசல், நாமக்கல் ,திருப்பரங்குன்றம் போன்ற இடங்களில் இதைப்போல் காணலாம்
பத்ரிநாத், கேதார்நாத், அமர்நாத், பசுபதிநாத் போன்ற கோயில்களின் அமைப்பு கிட்டத்தட்ட கேரள கோயில்களின் அமைப்பை ஒத்து இருக்கிறது .
கர்நாடகத்தில் ஹம்பி என்ற இடத்திற்குப்போனால் மிகச்சிறிய சிற்பங்களைக்காணலாம். வடநாட்டில் புஷ்கர், ஓம்காரேஷ்வர் மந்திர் கர்நாடகக்கோயிலை ஒத்து இருக்கின்றன. கர்நாடகச்சிற்பிகள் அங்குப்போய் இந்தக்கோயில்களை அமைக்கும் வாய்ப்பு பெற்றிருக்க வேண்டும் .
கிபி பன்னிரண்டாம் நூற்றாண்டில் டங்கணாசர்யன் என்ற சில்பி ஆதிகேசவப்பெருமாள் கோயிலைக்கட்டினார் . பேளூர் என்ற இடத்தில் இந்தகோயில் இருக்கிறது .இதன் நுண்ணிய சிற்பங்களின் அழகை வர்ணிக்க முடியாது ,
போஜ வம்சத்து மன்னர்கள், ஹோஸலே மன்னர்கள் என்றும் அழைக்கப்பட்டு வந்தார்கள் இவர்கள் கர்நாடகத்தை ஆண்டுவந்தார்கள் மைசூரைத் தலைநகராகக்கொண்டு ஆட்சி புரிந்தார்கள் ஆதிகேசபப்பெருமாள் கோயிலைக்கட்டியவர், இந்த ஆட்சியில் இருந்த சிற்பிதான்
சென்னையில் திருவல்லிக்கேணி ஶ்ரீபார்த்தசாரதி கோயிலைக்கட்டியவர் திரு தொண்டைமான் என்ற மன்னன் திருவரங்கம் பெரிய கோயில் முதலில் அகளங்க சோழனாலும் பின் ராஜமஹேந்த்ரசோழனாலும் பின் திருமங்கை மன்னனாலும் திருப்பணிகள் செய்யப்பட்டு கோபுரம் மிக உயர்ந்து யாவரையும் ஈர்த்தன .
சுசீந்தரம், ஸ்ரீவில்லிப்புத்தூர் ,திருப்புல்லாணி போன்ற கோயில்கள் நமக்கு மிகவும் வியப்பை ஏற்படுத்துகின்றன. பாண்டிய மன்னர்கள் இவைகளைச் சிறந்த கலை நுணுக்கத்துடன் கட்டியிருப்பது நமக்கு மிகப்பெருமையளிக்கிறது.
வடநாட்டில் மதுரா மிகச் சிறந்த புண்ணியஸ்தலமாகி கூட்டம் எப்போதும் அலை மோதுகிறது . ஶ்ரீவல்லபாசார்யா சம்பிரதாயத்து வைஷ்ணவர்கள் கட்டிய துவாரகாநாத் மந்திர் மிகவும் பழமை வாய்ந்தது
பல தடவைகள் முஸ்லீம்களால் தகர்க்கப்பட்ட கோயில் சோம்நாத்மந்திர் ,ஔரங்கசீப்பினால் உடைக்கப்பட்ட கண்ணன் பிறந்த ஊரிலிலுள்ள ஆதிகேசவ மந்திர் போன்றவைகள் அழிய இருந்தன. அந்த இடத்தில் மசூதியும் கட்டப்பட்டது .
ஆனாலும் பின்னால் பிர்லா என்ற செல்வந்தர் உதவியினாலும் மதன் மோஹன் மாலவியாவின் பிரேரணையினாலும் அழகான கிருஷ்ணன் கோயிலை நாம் இன்று காணமுடிகிறது .
ராஜஸ்தானில் பிரதாப்சிம்ஹ ராணா கட்டிய சாரதா தேவி மந்திர் பர்சானா என்ற இடத்தில் மிகவும் பெயர் பெற்றது
வடநாட்டில் பல கோயில்கள் மஹாபாரதத்தைச் சேர்ந்ததாகவும் சில ராமாயணத்தைச்சேர்ந்ததாகவும் இருக்கின்றன. ஒவ்வொரு கோயிலும் ஒவ்வோரு பெருமைப்பெற்று விளங்குகிறது இதையெல்லாம் பார்த்தால் நாம் இந்தப்பாரதத்தில் ஜன்மம் எடுக்க எத்தனை பாக்கியம் செய்திருக்க வேண்டும் இல்லையா?